நான் மறை வாழவந்தவராகிய புகலிவேந்தர் பஞ்சவன் நாட்டுளோர்க்கு நன்னெறி காட்ட வந்தவர் ஆதலின் சின்னங்கள் ஒலிக்க வையையாற்றின் கரையை மருவினார் . பருவ மகளிர் உள்ளம் தம் பதியிடத்தில் விரைந்து செல்லும் ஆறுபோல , அவ்வாறும் தன் பதியான கடலை நோக்கி விரைந்து ஓடுகின்றது . அரசன் , ஆளுடைய பிள்ளையாரையும் அமணரையும் ` ஆற்றில் அவரவர் ஏட்டை விடுக ` என்றான் . அமணர் விட்ட ஏடு ` அத்திநாத்தி ` என்பதைக் கொண்டது . அது இரண்டாவதாயுள்ள நாத்தியை வெள்ளத்தில் காட்டிற்று . அமணர் வெட்கத்துடன் பிள்ளையாரது திருஞானப் பாடலை விடச்சொல்லினர் . தேசுடைப் பிள்ளையார் பாசுரம் பாடலுற்றார் . அதுவே இத்திருப்பதிகம் . இப்பதிகத்துக்குச் சேக்கிழார் பெருமான் விளக்கியருளிய உரைக்குறிப்பே போற்றப்பெறுகிறது .