சுவாமிகள் , திருவாரூர் தொழநினைந்து நல்லூரில் நம்பர் அருள் பெற்றுப் பழையாறை முதலாகப் பல தலங்களைப் பணிந்து திருவலஞ்சுழிதொழுது கொட்டையூர்க் கோடீச்சரத்தை யும் இணைத்துப் பாடியருளியது இத் திருப்பதிகம் . ( தி .12 திருநாவு . புரா . 215) குறிப்பு : இத் திருப்பதிகமும் , மேல் வந்த சில திருப்பதிகங்கள் போல ` கண்டாய் ` என்னும் முடிபுடைய தொடர்களால் இறைவன் இயல்பினை வகுத்தருளிச் செய்தது . இது ` திருவலஞ்சுழி திருக்கொட்டையூர்க் கோடீச்சரம் ` என்னும் இரு தலங்கட்கு உரியதாகவும் , திருக்கொட்டையூர்க் கோடீச்சரம் ஒன்றற்கே உரியதாகவும் பதிப்புக்களிற் காணப்படுகின்றது . எல்லாத் திருத்தாண்ட கங்களிலும் திருவலஞ்சுழித் தலம் ஒன்றே தவறாது உடன் குறிக்கப்படுதலின் , அவ்விருதலங்கட்கும் உரியதாகக் கொள்ளுதலே பொருந்துவதாகும் . இவ்விரு தலங்களும் தொடர்புடையன என்பது புராணத்தார்க்கும் கொள்கை ; அஃதாவது , ` பிலத்துட் சென்று மறைந்த காவிரியாறு , கொட்டையூரில் தவம் செய்திருந்த , ` ஏரண்டர் ` என்னும் முனிவராலே வலஞ்சுழியில் மேலெழுந்து பெருகிற்று ` என்பது .