சேந்தனார்

படம்



சிவமயம்

நாயன்மார் வரலாறுn

ஒன்பதாம் திருமுறைn

சேந்தனார்n

திருவெண்காட்டிற்கு அருகில் உள்ள நாங்கூர் என்ற ஊரில் தோன்றியவர் சேந்தனார். இவர் பட்டினத்து அடிகளின் தலைமைக் கணக்கராக விளங்கினார். பட்டினத்தாரின் கட்டளைப்படி அவரது கருவூலத்தைத் திறந்து எல்லோரும் அவரவர் விரும்பிய வண்ணம், அதில் உள்ள பொருள்களை அள்ளிக்கொள்ளுமாறு செய்தார். அது பொழுது பட்டினத்தாரின் சுற்றத்தார்கள் சோழ வேந்தனிடம் சென்று முறையிட்டனர். சோழமன்னன் சேந்தனாரைச் சிறையிலிடும்படி ஆணை பிறப்பித்தான்.

மத்தளை தயிருண் டானும் மலர்மிசை மன்னினானும்n
நித்தமும் தேடிக் காணா நிமலனே அமல மூர்த்திn
செய்த்தலைக் கயல்பாய் நாங்கூர்ச் சேந்தனை வேந்தனிட்டn
கைத்தளை நீக்கி என்முன் காட்டுவெண் காட்டுளானே.n
-தனிப்பாடல்n
எனப் பட்டினத்தார் இறைவனை வேண்டினார்.

சேந்தனார் பட்டினத்தாரின் அருளால் சிறையினின்றும் விடுதலை பெற்றார். மனைவி மக்களுடன் தில்லையம்பதி சென்று, விறகு வெட்டி விற்று வாழ்வு நடத்திவந்தார். நாள்தோறும் விறகுவிற்ற பொருளிலிருந்து ஒரு சிவனடியார்க்கு உணவு அருத்தும் திருத் தொண்டாற்றி வந்தார்.

ஒருநாள் நடராசப்பெருமானே சிவனடியாராக அவர் வீட் டிற்கு எழுந்தருளினார். சேந்தனார் அளித்த களியாகிய உணவினை ஏற்று அதன் ஒரு பகுதியைத் தம் திருமேனியில் காட்டிச் சேந்தனாரின் சிறந்த சிவபக்தியை உலகம் உணரும்படி செய்தருளினார். இதனை,

``செம்பொன் அம்பலத்து வேந்தன் தனக்கு ..... ஆகியதே`` என வரும் கோயில் திருப்பண்ணியர் விருத்தத்தால் (தி.11 ப.33 பா.26) நாம் அறியலாம்.

சேந்தனார் நடராசப் பெருமானுக்குத் தவிட்டை அமுதாக நிவேதனம் செய்தார் என்னும் செய்தியை,

``வரையேற விட்டமுதம் சேந்தனிட உண்டனை``

என்னும் சிவஞான சுவாமிகளின் பாடலால் அறியலாம்.

ஒருசமயம் சேந்தனார் சிதம்பரத்தில் இருக்கும்பொழுது மார்கழித் திருவாதிரைத் திருவிழா வந்தது. நடராசப்பெருமான் எழுந்தருளி வரும் திருத்தேர் ஓடாது தடைப்பட்டு நின்றிருந்தது. அது கண்ட சேந்தனார் இறையருளால் திருப்பல்லாண்டு பாடி, தானே அத் தேர் ஓடி நிலைக்கு வருமாறு செய்தார். சேந்தனார் திருக்கடவூருக்கு அண்மையில் உள்ள திரு விடைக்கழி என்னும் தலத்தை அடைந்து, கந்தவேளை வழிபட்டுக் கொண்டு, அங்கேயே ஒரு திருமடம் அமைத்து வாழ்ந்து வந்தார். சேந்தனார் திருமடத்துக்கு அக்காலத்து மன்னன் நிலமளித்து உதவினன். அந்நிலப்பகுதி உள்ள இடம் சேந்தன்மங்கலம் என்று வழங்கப்பட்டது. இச்செய்தி திருவிடைக்கழி புராணத்தில் கூறப் பட்டுள்ளது. இவ்வூர் திருவிடைக்கழிக்கு அருகில் இன்றும் இப் பெயருடன் இருக்கின்றது.

இவ்வூரில் இருந்த சேந்தனார் வழிபட்ட திருக்கோயில் அண்மைக் காலத்தில் அழிந்துவிட்டது. அங்குக் கிடைத்த சிவலிங்கத் திருவுருவத்தை மட்டிலும் அவ்வூரின் அருகில் உள்ள விசலூரில், சிறுகோயில் எடுத்து எழுந்தருளச் செய்துள்ளனர். சேந்தன் மங்கலம் இன்று முகமதியர்களின் உறைவிடமாக உள்ளது.

கருத்து வேற்றுமைகள்:

சேந்தனார் செப்புரை என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்றும் திருவீழிமிழலை என்னும் ஊரில் தோன்றியவர் என்றும் கூறுவாரும் உளர். திருவிசைப்பாப் பாடிய சேந்தனார் திருவீழிமிழலையைச் சேர்ந்தவர் எனவும், திருப்பல்லாண்டு பாடிய சேந்தனார் நாங்கூரைச் சேர்ந்தவர் எனவும் துடிசைக் கிழார் கூறுவர். முதல் இராஜராஜசோழன் (கி.பி. 985 -1014) ஆட்சியில் திருவீழிமிழலைக் கோயிலில் திருநந்தாவிளக்கு வைத்த ஜயந்தன் என்பவரைச் சிவஞானி என்றும், திருமாளிகைத்தேவர் என்றும் கல் வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளார். ஜெயந்தன் என்ற பெயரின் திரிபே சேந்தன் என மருவிற்று என்றும், சேந்தனாரும் திருமாளிகைத் தேவ ரும் ஒருவரே என்றும் மு. இராகவஅய்யங்கார் அவர்கள் கூறுவர். இவ்வாறு கருதுவதற்குக் காரணம், திருவிசைப்பாவில் திருமாளிகைத் தேவர் அருளிய நான்கு பதிகங்களை அடுத்து, சேந்தனார் பாடிய திருவிசைப்பாப் பதிகங்கள் மூன்றும் அமைந்திருத்தலாலும், கடைசித் திருப்பதிகத்தின் இறுதிப் பாடலில் சேந்தன் என்ற பெயர் குறிக்கப் பெற்றிருப்பதாலும் இப்பதிகங்கள் அனைத்தையும் ஒருவரே பாடியிருத்தல் கூடும் எனக் கருதுவர். இக்கருத்து பலராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சேந்தனார், திருவீழிமிழலை, திருவாவடுதுறை, திருவிடைக் கழி ஆகிய முத்தலங்களுக்கு, மூன்று திருவிசைப்பாப் பதிகங்களை யும், தில்லையம்பதிக்குத் திருப்பல்லாண்டு என்ற திருப்பதிகத்தையும் அருளிச் செய்துள்ளார்.

காலம்:

கண்டராதித்த சோழ மன்னரின் (கி.பி. 947-957) ஆட்சிக் காலத்தில் தோன்றிய கல்வெட்டில், `கலி விசயன் தருணேந்து சேகரன்` என்ற தொடர்கள் காணப்படுகின்றன. `தருணேந்து சேகரன்` என்ற தொடர் சேந்தனார் பாடிய இரண்டாம் பதிகத்து மூன்றாம் பாடலில் உள்ளது. ஆகவே சேந்தனார் கண்டராதித்த சோழரின் காலத்துக்கு முற்பட்டவராதல் வேண்டும். பட்டினத்து அடிகளின் கணக்கர் என்பதால் இவரது காலம் ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியும், பத்தாம் நூற்றாண்டின் தொடக்கமும் ஆகும் எனலாம்.