காரைக்காலம்மையார் - மூத்த திருப்பதிகம்


பண் :நட்டபாடை

பாடல் எண் : 1

கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து
குண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப்
பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு
பரடுயர் நீள்கணைக் காலோர் வெண்பேய்
தங்கி யலறி யுலறு காட்டில்
தாழ்சடை எட்டுத் திசையும் வீசி
அங்கங் குளிர்ந்தன லாடும் எங்கள்
அப்ப னிடந்திரு ஆலங் காடே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

திரங்கி - வற்றி. குண்டு - ஆழம். குழி வயிறு - ஓட்டிய வயிறு. பங்கி - தலை மயிர். பரடு - புறங்கால். உலறுதல் - பசியால் உடல்மெலிதல். சில வேளைகளில் மற்றைப் பேய்கள் எங்கேனும் போய்விட ஒரு பெண் பேய் தனித்து நின்று அலறுதலும் உண்டு என்க. அங்கம் - திருமேனி. அனல் ஆடுதல் - சுற்றிலும் நெருப்பு எரிய நடுவே நின்று ஆடுதல். `இவ்வாறு ஆடுபவன் அங்கம் குளிர்ந்திருத்தல் வியப்பு` என்றபடி.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 2

கள்ளிக் கவட்டிடைக் காலை நீட்டிக்
கடைக்கொள்ளி வாங்கி மசித்து மையை
விள்ள எழுதி வெடுவெ டென்ன
நக்கு வெருண்டு விலங்கு பார்த்துத்
துள்ளிச் சுடலைச் சுடுபி ணத்தீச்
சுட்டிய முற்றும் சுளிந்து பூழ்தி
அள்ளி அவிக்கநின் றாடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங்காடே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கள்ளிக் கவடு - கள்ளி மரத்தின் கிளைகள். கடைக்கொள்ளி - எரிந்து முடிந்த கொள்ளிக் கட்டை. வாங்குதல் - எடுத்தல். மசித்தல் - மசிய அரைத்தல். `பேய்கள் கண்ணில் எழுதுகின்ற மை கரியே` என்றபடி. எனவே, `இவ்வாறு செய்வனவும் பெண் பேய்களே` என்பது விளங்கும். விள்ள - கண்ணினின்றும் வேறு தோன்ற. `வெடு, வெடு` என்பது சினக் குறிப்பு. எனவே, நகுதல் கோபச் சிரிப்பாயிற்று. (வெருளுதல், தம்மை வெருட்டும் பேய்கள் கடுந்தெய்வங்கள் முதலினவற்றை நினைத்து.) `விளக்காக` என ஆக்கம் வருவிக்க. விலங்காகப் பார்த்தல், நேரே பாராமல் வலமாகவும், இடமாகவும் திரும்பித் திரும்பிப் பார்த்தல். `பிணஞ்சுடு தீச் சுட்டிட` என்றபடி. சுளித்தல் - கோபித்தல். பூழ்தி - புழுதி. இது `பூழி` என்றும் வரும். அவித்தல், தன்னைச் சுட்ட தீயை.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 3

வாகை விரிந்துவெள் நெற்றொ லிப்ப
மயங்கிருள் கூர்நடு நாளை ஆங்கே
கூகையொ டாண்டலை பாட ஆந்தை
கோடதன் மேற்குதித் தோட வீசி
ஈகை படர்தொடர் கள்ளி நீழல்
ஈமம் இடுசுடு காட்ட கத்தே
ஆகம் குளிர்ந்தன லாடும் எங்கள்
அப்ப னிடம் திரு ஆலங் காடே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வகை - காட்டு வாகை மரம். விரிந்து (விரிய) - தழைத்திருக்க. நெற்று வெண்மையாயது காய்ந்து போனமையால். மயங்கு இருள் - மாலைக் காலத்தில். பகலோடு வந்து பொருந்திய இருள். அது பின் மிகுதலின், `கூர்` என்றார். நடு நாள் - நள்ளிரவு. `நடு நாள் யாமத்தும் பகலும் துஞ்சான்`* எனப் புறப்பாட்டிலும் வந்தது. ஐ, சாரியை, ஆண்டலை, மனிதன் தலைபோலும் தலையை யுடைய ஒருவகைப் பறவை. கோடு - மரக்கிளை. கூகையும், ஆண்டலையும் கூவக் கேட்டு ஆந்தை மரக் கிளையின் மேல் இடம் பெயர்ந்து ஓடுகின்றது. வீசுதல் - எழுச்சியுறுதல். ஈகை - இண்டங் கொடி - `ஈகை வீசிப் படர்கின்ற, தொடர் கள்ளியின் நீழலையுடைய சுடுகாடு` என்க. மற்றும், `ஈமம் இடு சுடுகாடு` என்வும் கொள்க. ஈமம்- பிணஞ்சுடும் விறகு. `கூகை முதலிய பறவைகளின் செயல் ஒருபாலாக, ஈமம் ஒருபால் இடப்படுகின்றது` எனக் கொள்க. `ஆகம் குளிரந்து` என்பதற்கு, மேல், `அரங்கம் குளிர்ந்து` என்றதற்கு உரைத்தது உரைக்க. ஆகம் - உடம்பு. `நடு நாள் சுடுகாட்டகத்தே, பாட, ஓட ஆடும் எங்கள் அப்பன்` என இயைத்துக் கொள்க.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 4

குண்டில்ஓ மக்குழிச் சோற்றை வாங்கிக்
குறுநரி தின்ன அதனை முன்னே
கண்டிலோம் என்று கனன்று பேய்கள்
கையடித் தொ டிடு காட ரங்கா
மண்டலம் நின்றங் குளாளம் இட்டு,
வாதித்து, வீசி எடுத்த பாதம்
அண்டம் உறநிமிர்ந் தாடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங் காடே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குண்டில் ஓமக் குழி - ஆழத்தை உடைய ஓம குண்டம். இது சுடுகாட்டில் இறுதிக் கடனுக்காகச் செய்யப்படுவது. `வாங்கி` என்றது, `யாவரும் போகட விட்டுப் போனபின்பு எடுத்து` என்றதாம். முன்பு கண்டிலோம் - முன்பே பார்க்கவில்லையே. (பார்த்திருந்தால் நரிகளை வெருட்டித் தின்றிருக்கலாமே என்று) மண்டபம் - வட்டமாகச் சென்று ஆடுதல். உள்ளாலம், `ஆளத்தி` எனப்படும். அஃதாவது குரலால் இசை கூட்டுதல். வாதித்து - காளியோடும் வாதம் புரிந்து `எடுத்த பாதம்` என்க. எடுத்த பாதத்தை அண்டம் உற நிமிர்த்து ஆடினமையால், காளி நாணம் அடைந்து தோற்றாள். `நிமிர்ந்து` என்பதும் பாடம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 5

விழுது நிணத்தை விழுங்கி யிட்டு,
வெண்தலை மாலை விரவப் பூட்டிக்
கழுதுதன் பிள்ளையைக் காளி யென்று
பேரிட்டுச் சீருடைத் தாவளர்த்துப்
புழதி துடைத்து, முலைகொ டுத்துப்
போயின தாயை வரவு காணா
தழுதுறங் கும்புறங் காட்டில் ஆடும்
அப்ப னிடம்திரு ஆலங் கா டே

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கழுது - பேய். விழுது நிணம் - திரட்டி எடுத்த உருண்டையாகிய கொழுப்பு. `கழுது தன் பிள்ளையை, நிணத்தை விழுங்க நிணம் - திரட்டி எடுத்து உருண்டையாகிய கொழுப்பு.
`கழுது தன் பிள்ளையை, நிறத்தை விழுங்க இட்டு, வெண் தலை மாலை பூட்டி, புழதி துடைத்து, முலைகொடுத்து, - காளி - என்று பேர் இட்டுச் சீருடைத்தா வளர்த்து, (சிறிது நேரம் விட்டுப்) போயினதாக, அத்தாயை வரவிற் காணாது, பிள்ளைப் பேய் அழுது, பின் உறங்கும் புறங் காடு` என இயைத்துக்கொள்க. `போயினதாக` எனவும், `அத்தாய்` எனச் சுட்டும் வருவித்துக்கொள்க. `விழுங்கியிட்டு` என்பது பாடம் அன்று.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 6

பட்டடி நெட்டுகிர்ப் பாறு காற்பேய்
பருந்தொடு, கூகை, பகண்டை , ஆந்தை
குட்டி யிட, முட்டை, கூகைப் பேய்கள்
குறுநரி சென்றணங் காடு காட்டில்
பிட்டடித் துப்புறங் காட்டில் இட்ட
பிணத்தினைப் பேரப் புரட்டி ஆங்கே
அட்டமே பாயநின் றாடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங் காடே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`அணங்கு ஆடு காட்டில் கூகைப் பேய்களும், குறு நரிகளும், குட்டியை ஈன, பருந்தும், கூகையும், பகண்டையும், ஆந்தையும் முட்டையிட, பாறுகாற் பேய்கள் சென்று அவைகளைப் பிட்டு வீசிப் பின் புறங்காட்டில் இடப்பட்ட பிணத்தைப் புரளப் புரட்டி, நெடுக்கும், குறுக்குமாகப் பாயமந்து ஓட ஆடும் எங்கள் அப்பன்` என இயைக்க.
பட்ட அடி - பரந்துபட்ட பாதம். அகரம் தொகுத்தல். நெட்டுகிர் - நீண்ட நகம். பாறுதல் - வற்றுதல். பகண்டை ஒருவகைப் பறவை. கூகைப் பேய்கள், பேய்களில் கூகையாய் உள்ள பேய்கள் அணங்கு, தாக்கணங்குகள் (தீத்தெய்வங்கள்) அட்டம் - குறுக்கு.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 7

கழலும் அழல்விழிக் கொள்ளி வாய்ப்பேய்
சூழ்ந்து துணங்கையிட் டோடி, ஆடித்
தழலுள் எரியும் பிணத்தை வாங்கித்
தான் தடி தின்றணங் காடு காட்டில்
கழலொலி, ஓசைச் சிலம்பொ லிப்பக்
காலுயர் வட்டணை யிட்டு நட்டம்
அழலுமிழ்ந் தோரி கதிக்க ஆடும்
அப்ப னிடம்திரு ஆலங் காடே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

துணங்கை - இரு கைகளையும் மடக்கி இரு விலாக்களிலும் அடித்துக் கொண்டு ஆடும் கூத்து. இது பெரு மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்ற ஒன்று. தடி - தசை. அணங்கு ஆடுதல் - தெய்வம் வந்ததுபோல ஆடுதல். `காட்டில், ஓரி கதிக்க, கால் வட்டணையிட்டு நட்டம் ஆடும் அப்பன்` என்க. ஓரி - நரி. கதிக்க - குதிக்க (நட்டம்) அழல் உமிழ்தல், வெப்பத்தை வீசுதல். `உமிழ்ந்து` என்பதை, `உமிழ` எனத் திரித்துக் கொள்க.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 8

நாடும், நகரும் திரிந்து சென்று,
நன்னெறி நாடி நயந்தவரை
மூடி முதுபிணத் திட்ட மாடே,
முன்னிய பேய்க்கணம் சூழச் சூழக்
காடும், கடலும், மலையும், மண்ணும்,
விண்ணும் சுழல அனல்கையேந்தி
ஆடும் அரவப் புயங்கன் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங் காடே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நயத்தல் - விரும்புதல். `பிணம்` என்றது, பிணமான நிலையை, `பிணத்து மூடி` என மாற்றி, `பிணமாய்விட்ட நிலையில் அவர்களைத் துணியால் மூடி மறைத்து` என உரைக்க. மாடு - பக்கம்; இடம் `பிணத்தை இட்ட இடம்` என்றதனால் அது, `முதுகாடு` என்றதாயிற்று. `இட்ட மாடே ஆடும் `புயங்கன்` என இயைக்க, முன்னிய - பலவற்றைக் கருதிய. அரவப் புயங்கன் - பாம்பையணிந்த கூத்தன். `புயங்கம்` என்பது ஒருவகைக் கூத்தா யினும், அஃது இங்குப் பொதுப் பொருளே தந்தது; என்னை? இறைவன் காட்டில் ஆடுவது எல்லா நடனங்களையும் ஆதலின், `காடு, கடல், மலை, மண்` என்பன, `முல்லை, நெய்தல், குறிஞ்சி, மருதம்` என்பவற்றைச் சுட்டியவாறு `நன்னெறி நாடி நயந்த வரை இட்டம் இடம்` என்றது, `தீயோர் மட்டுமன்று; நல்லோருந்தாம் அடையும் இடம் அது` என்றபடி. எனவே, `எங்கள் அப்பன் ஆடும் இடத்தை அடையாதார் எவரும் இல்லை` என்பது உணர்த்தும் முகத்தால், `அவனே அனைத்துயிர்க்கும் புகலிடம் என்பதைக் குறிப்பால் உணர்த்தியதாம். தொல்காப்பியரும், `பலர் செலச் செல்லாக் காடு` -* என்பதனான் இப்பொருளை இங்ஙனமே குறிப்பாற் சுட்டினார்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 9

துத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம்,
உழை, இளி ஓசைபண் கெழுமப் பாடிச்
சச்சரி, கொக்கரை, தக்கை யோடு,
தகுணிதம் துந்துபி தாளம் வீணை
மத்தளம் கரடிகை வன்கை மென்தோல்
தமருகம், குடமுழா, மொந்தை வாசித்
தத்தனை விரவினோ டாடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங் காடே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஓசை` என்றதனை, `குரல்` எனக் கூறியதாகக் கொண்டு, `துத்தம்` முதலிய ஏழும் ஏழிசைகளின் பெயர் என உணர். இந்த ஏழிசைகளையும் தக்கபடி கூட்டுமாற்றால் பண்கள் பிறக்கும் ஆதலின், இவைகளை, `பண் கெழுமப் பாடி` என்றார். கெழும - பொருந்த. சச்சரி முதல் மொந்தை ஈறாகக் கூறப்பட்டவை வாத்திய வகைகள். `கைக்கிளை` என்பது விரித்தல் விகாரம் பெற்றது.
வன் கை மென்தோல் தமருகம் - வலிய இரு பக்கங்களிலும் மெல்லிய தோலையுடைய உடுக்கை. அத்தனை விரவினோடு, `அத்தனை வாத்தியங்களின் ஒத்திசையோடு ஓத்து நிகழ ஆடும் எங்கள் அப்பன்` என்க. `சச்சரி` இன எதுகை `வாசித்து` என்பதனை, `வாசிக்க` எனத்திரிக்க. இதன்கண் அம்மையார் இசைக் கலையின் சிறப்புக்களைப் புலப்படுத்தினமை காண்க. `புயங்கன்` முதலிய சொற்களால் பரதக் கலையைப் புலப்படுத்தி, `அனைத்துப் பரதங்களை யும் ஆடும் பெருமானே வல்லவன்` என்பதனைப் புலப்படுத்தலும் அம்மையாரது திருவுள்ளம் என்க.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 10

புந்தி கலங்கி, மதிம யங்கி
இறந்தவ ரைப்புறங் காட்டில் இட்டுச்
சந்தியில் வைத்துக் கடமை செய்து
தக்கவர் இட்டசெந் தீவி ளக்கா
முந்தி அமரர் முழவி னோசை
திசைகது வச்சிலம் பார்க்க ஆர்க்க,
அந்தியின் மாநடம் ஆடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங் காடே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

புந்தி - புத்தி, மதி - அறிவு. `கலங்கி, மயங்கி` என்றது, இறப்பு வருங்காலத்து நிகழ்வனவற்றைக் கூறியவாறு. சந்தி, உறவினர் நண்பர்களது கூட்டம். கடமை, ஈமக் கடன், தக்கவர், செய்ய உரிமையுடையவர்; புதல்வர் முதலானோர். தீ, பிணத்திற்கு இட்ட தீ. `அதுவே விறகாய் இருக்க ஆடுகின்றான்` என்க. அவ்வாட்டத்தை மக்கள் காணார் ஆகலான், அதற்கு அமரர்களே வாத்தியம் வாசிப்பா ராவர். முழவு - மத்தளம், திசை கதுவ - திசைகளை உள்ளடக்கி நிகழ. அந்தி, மாலைக் காலம், மா நடம், நெடிது நிகழும் நடனம்.

பண் :நட்டபாடை

பாடல் எண் : 11

ஒப்பினை யில்லவன் பேய்கள் கூடி,
ஒன்றினை ஒன்றடித் தொக்க லித்து,
பப்பினை யிட்டுப் பகண்டை பாட,
பாடிருந் தந்நரி யாழ மைப்ப,
அப்பனை அணிதிரு ஆலங் காட்டெம்
அடிகளைச் செடிதலைக் காரைக் காற்பேய்
செப்பிய செந்தமிழ் பத்தும் வல்லார்
சிவகதி சேர்ந்தின்பம் எய்து வாரே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`ஒப்பினை` என்பதில் ஐ, இரண்டாம் வேற்றுமை யுருபு. `இல்லாதனவாகிய வலி பேய்கள்` என்க. `ஒக்கக் கலித்து` என்பது, `ஒக்கலித்து` எனக் குறைந்து நின்றது. ஒரு சேரக் கூச்சலிட்டு` என்பதாம். `பகண்டை` மேலேயும் (பாட்டு -6) கூறப்பட்டது. பாடு - பக்கம். `அந்நரி` என்பதில் அகரம் பண்டறி சுட்டு. `காரைக்காலில் தோன்றியதாகிய இந்தப் பேய், மற்றைப் பேய்கள் ஒன்றை ஒன்று அடித்துக் கொண்டு ஆரவாரிக்கின்ற ஆரவாரத்தின் இடையே, நரியின் குரலையே யாழிசையாகக் கொண்டு பகண்டைகள் பாட, அந்தப் பாட்டோடு ஆலங்காட்டுள் அடிகளைச் செப்பிய செந்தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் முறையாகப் பாட வல்லவர்கள் சிவகதி சேர்ந்து இன்பம் எய்துவார்` என முடிக்க.
அம்மையார் தாம் உலக வாழ்வில் வாழ்ந்த காலத்திலும், `சிவபெருமானே யாவர்க்கும் உண்மை அப்பன்` என்று உணர்ந்து, `அப்பா! அப்பா!` என்று சொல்லி வந்து, கயிலையிலும் பெருமான் `அம்மையே` என்று அழைக்க, தாம், `அப்பா` என்று அழைத்தபடியே, இத்திருப்பதிகத்திலும், \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\"எங்கள் அப்பன், எங்கள் அப்பன்\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\" எனப் பலமுறை சொல்லி இன்புற்றமையைக் காணலாம்.
உலக மக்கள் எளிதில் உணரத் தக்கதாக, `சிவன் இங்குள்ள சுடுகாடுகளிலே அங்குள்ள பேய்கள் சூழ அனலிடை. ஆடுகின்றான்` எனப் பெரியோர் பலரும் ஒரு படித்தாகக் கூறிவந்த போதிலும் அதன் உண்மைப் பொருள், ஊழியிறுதிக்கண் உலகெலாம் ஓடுங்கியுள்ள பொழுது, உடம்பும், கருவிகரணங்களும் ஆகியவற்றுள் ஒன்றும் இன்றி இருளிற் கிடக்கும் உயிர்களை மீள உடம்போடும், கருவி கரணங்களோடும் கூடப் படைத்துக் காக்க வேண்டி யவற்றிற்கு ஆவன வற்றைச் செய்தலாகிய சூக்கும நடனத்தைச் செய்கின்றான்` என்பதே யாகலின், `அந்த உண்மையை உணர்ந்து இப்பதிகத்தினைப் பாட வல்லவர்கள் சிவகதி சேர்ந்து இன்பம் எய்துவார்கள்` என்பதாம். இவ் வுண்மையை உணராதவர்கள் எல்லாம், `சிவன் சுடுகாட்டில் ஆடுபவன்` எனச் சொல்லி இகழ்வார்கள் என்பதை அம்மையார் தமது அற்புதத் திருவந்தாதியில்,
`இவரைப் பொருளுணர மாட்டாதா ரெல்லாம்
இவரை யிகழ்வதே கண்டீர்`*
என அருளிச் செய்வார். பதிகந்தோறும் திருக்கடைக்காப்புச் செய்யும் ஞானசம்பந்தர்க்கு முன்பே அம்மையார் அது செய்தமையை அவரது திருமொழிகள் பலவற்றிலும் காணலாம்.
b

பண் :இந்தளம்

பாடல் எண் : 12

எட்டி இலவம் ஈகை
சூரை காரை படர்ந்தெங்கும்
சுட்ட சுடலை சூழ்ந்த
கள்ளி சோர்ந்த குடர்கௌவப்
பட்ட பிணங்கள் பரந்த
காட்டிற் பறைபோல் விழிகட்பேய்
கொட்ட முழவங் கூளி
பாடக் குழகன் ஆடுமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

எட்டியும், இலவமும் மர வகைகள். ஈகையும் சூரையும் கொடி வகைகள். காரை, செடி. `படர்ந்து` என்றது இரட்டுற மொழிதலாய், `பரவி` என்னும் பொருளையும் தந்தது. சுட்ட - பிணங்களைச் சுட்ட. `சுட்ட சுடலை எங்கும் எட்டி முதலியன பரவி, சூழ்ந்த கள்ளிகள் கழுகு முதலியவற்றின் வாயினின்றும் வீழ்ந்த குடர்களைப் பற்றி நிற்கும்படி கிடந்த பிணங்கள்` என்க. பறைபோல் விழி - அகன்ற கண்கள். `காட்டில் பேய் முழவங் கொட்ட, கூளி பாடக் குழகன் ஆடும்` என வினை முடிக்க. கூளி - பூதம். குழகன் - அழகன்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 13

நிணந்தான் உருகி நிலந்தான்
நனைப்ப நெடும்பற் குழிகட்பேய்
துணங்கை யெறிந்து சூழும்
நோக்கிச்சுடலை நவிழ்த் தெங்கும்
கணங்கள் கூடிப் பிணங்கள்
மாந்திக் களித்த மனத்தவாய்
அணங்கு காட்டில் அனல்கை
யேந்தி அழகன் ஆடுமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நிணம், துணங்கை இவை மேலே கூறப்பட்டன.* நிணம் உருகுதல் பிணம்சுடு தீயால், சூழும் நோக்கி - சுற்றிலும் பார்த்து. நவிழ்த்து - விரும்பி. கணங்கள் - பேய்க் கூட்டம். மாந்தி - உண்டு. களித்தல் - மயங்குதல். அணங்கு - துன்பம் தருகின்ற. `தான் இரண்டும் அசைகள்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 14

புட்கள் பொதுத்த புலால்வெண்
தலையைப் புறமே நரிகவ்வ
அட்கென் றழைப்ப ஆந்தை
வீச அருகே சிறுகூகை
உட்க விழிக்க ஊமன்
வெருட்ட ஓரி கதித்தெங்கும்
பிட்க நட்டம் பேணும்
இறைவன் பெயரும் பெருங்காடே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

புட்கள் - பின்னர்க் கூறப்படுவன தவிர ஏனைய காக்கை, பருந்து முதலியன. பொதுக்கல் - குத்துதல். `அட்கு` என்பது ஒலிக்குறிப்பாதலை, அதனை அடுக்கிக் கூறியறிக. அழைத்தல், தன் இனத்தை. `சிறகை வீசை` என ஒரு சொல் வருவிக்க.
உட்க - அஞ்சும் படி. ஊமன் - பெரிய கூகை. ஓரி, நரி வகைகளில் ஒன்று. கதித்தல் - ஓடுதல். பிட்க - பிளவு செய்ய. `நட்டம் பெயரும்` என இயைக்க. பேணும் - யாவராலும் வழிபடப்படும். இறைவன் - சிவன். பெயர்தல், அடி பெயர்த்து ஆடுதல். `பெயரும் பெருங்காட்டில்` என ஏழனுருபு இறுதிக்கண் தொக்கது. `வெண் தலையை நரி கௌவுதற் பொருட்டுத் தன் இனத்தை `அட்கு` என்று கூச்சல் இட்டு அழைக்கக் கண்டு, ஆந்தை சிறிய சிறகை வீச கூகை, அச்சம் உண்டாகும்படி கண்களை விழித்துப் பார்க்க, பெரிய கூகை தனது குரலால் வெருட்ட, இந்நிலையிலும் ஓரிகள் ஓடித் தசையைப் பிட்டுத் தின்னல் நிகழுகையில் இறைவன் பெருங்காட்டில் ஆடுகின்றான்` என்றபடி.

பண் :இந்தளம்

பாடல் எண் : 15

செத்த பிணத்தைத் தெளியா
தொருபேய் சென்று விரல்சுட்டிக்
கத்தி உறுமிக் கனல்விட்
டெறிந்து கடக்கப் பாய்ந்துபோய்ப்
பத்தல் வயிற்றைப் பதைக்க
மோதிப் பலபேய் இரிந்தோடப்
பித்த வேடங் கொண்டு
நட்டம் பெருமான் ஆடுமே.

பொழிப்புரை :

உயிர் நீங்கியதனால் பிணமாம் நிலையை அடைந்த உடம்பை அதன் உண்மையை அறியாமல் `படுத்துக் கிடக்கின்ற ஆள்` என்று நினைத்து ஒரு பேய் அதன் அருகிற் சென்று தனது சுட்டுவிரலைக் காட்டி, உரக்கக்கத்தி, உறுமி, கொள்ளி ஒன்றை எடுத்து வீசி அப்பாற் செல்ல, அதன் கருத்தையே `மெய்` என்று நினைத்து மற்றைப் பேய்களும் அந்த ஆளுக்கு அஞ்சித் தங்கள் பெரிய வயிற்றில் அடித்துக் கொண்டு அவ்விடத்தைவிட்டு ஓட, (இத் தன்மையதாய் இருக்கின்ற காட்டில்) பெருமான்தானும் ஒரு பித்தன் போல வேடம் பூண்டு நடனம் ஆடுகின்றான்.
`பிணம்` என்றது, `உடம்பு` என்னும் அளவாய் நின்றது. விரலைக் காட்டிக் கத்தி உறுமியது கிடக்கின்ற ஆளை அச்சுறுத்தற்கு, பத்தல், வீணைத் தண்டு பொருத்தப்பட்டுள்ள குண்டுப் பகுதி `அது போலும் வயிறு` என்க. `ஒரு பேய், தெரியாது சென்று, சுட்டி, கத்தி, உறுமி, எறிந்து கடக்க, பல பேய் பாய்ந்து போய் வயிற்றை மோதி இரிந்து ஓட பெருமான் ஆடும்` என வினை முடிக்க.

குறிப்புரை :

குறிப்புரையை எழுதவில்லை

பண் :இந்தளம்

பாடல் எண் : 16

முள்ளி தீந்து முளரி
கருகி மூளை சொரிந்துக்குக்
கள்ளி வற்றி வெள்ளில்
பிறங்கு கடுவெங் காட்டுள்ளே
புள்ளி உழைமான் தோலொன்
றுடுத்துப் புலித்தோல் பியற்கிட்டுப்
பள்ளி யிடமும் அதுவே
ஆகப் பரமன் ஆடுமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

முள்ளி - முள்ளையுடைய செடிகள். முளரி - தீ. அஃது இங்கு அதனையுடைய விறகைக் குறித்தது. வெள்ளில் - விளா மரம். பிறங்குதல் - விளங்குதல். முள்ளிகள் தீந்து போயதும், கள்ளி பால் வற்றியதும் பிணங்களைச் சுடுகின்ற தீயால். எரிகின்ற விறகு கரிந்து போயது, பிணங்களின் முளை சொரிதலால். உகுதல் - சிந்துதல். விளா மரம் மட்டுமே விளங்கியிருந்தது` என்க. உழை, ஒருவகை மான். உழை மான், இருபெயர் ஒட்டு.
பியல் - தோள். பியற்கு. பியலின்கண்; உருபு, மயக்கம். பள்ளி இடம் - நிலையாக இருக்கும் இடம். அதுவே - அந்தக் காடே. உம்மை, சிறப்பு. எண்ணின் கண் வந்த செய்தென் எச்சங்கள், `பிறங்கு` என்னும் ஒருவினை கொண்டு முடிந்தன.

பண் :இந்தளம்

பாடல் எண் : 17

வாளைக் கிளர வளைவாள்
எயிற்று வண்ணச் சிறுகூகை
மூளைத் தலையும் பிணமும்
விழுங்கி முரலும் முதுகாட்டில்
தாளிப் பனையின் இலைபோல்
மயிர்க்கட் டழல்வாய் அழல்கட்பேய்
கூளிக் கணங்கள் குழலோ
டியம்பக் குழகன் ஆடுமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`வாளை` என்பதில் ஐ - சாரியை. வாள், அதன் வடிவைக் குறித்தது. கிளர்தல் - விளங்குதல். `எயிறு` என்றது அலகினை. வளை - வளைந்த. வாள் - ஒளி. வாளின் வடிவு விளங்கு கின்ற, வளைந்த, ஒளி பொருந்திய அலகு` என்க. முரலுதல் - மூக்கால் ஒலித்தல். தாளிப்பனை, விரிந்த மடல்களையுடைய ஒருவகைப் பனை. ஓலையை, `இலை` என்றது மரபு வழுவமைதி. கட்டு அழல் மிகுந்த நெருப்பு. அழல் வாய்ப் பேய் - கொள்ளி வாய்ப் பேய். அழல் கண் பேய் - கொள்ளிக் கண் பேய். கூளி - பூதம். குழலோடு இயம்புதல் - குழலை ஊதித் தாமும் இசைத்தல். `குழகன்` மேலே சொல்லப்பட்டது.*

பண் :இந்தளம்

பாடல் எண் : 18

நொந்திக் கிடந்த சுடலை
தடவி நுகரும் புழுக்கின்றிச்
சிந்தித் திருந்தங் குறங்குஞ்
சிறுபேய் சிரமப் படுகாட்டின்
முந்தி அமரர் முழவின்
ஒசை முறைமை வழுவாமே
அந்தி நிருத்தம் அனல்கை
யேந்தி அழகன் ஆடுமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

நொந்திக் கிடந்த - சில நாள் ஏமம் இன்றிக் கிடந்த. தடவி - துழாவி. புழுக்கு - புழுக்கல்; சோறு. சிந்தித்து - கவலை யடைந்து. சிரமம் - துன்பம். `அந்தியில்` என ஏழாவது விரிக்க.

பண் :இந்தளம்

பாடல் எண் : 19

வேய்கள் ஓங்கி வெண்முத்
துதிர வெடிகொள் சுடலையுள்
ஒயும் உருவில் உலறு
கூந்தல் அலறு பகுவாய
பேய்கள் கூடிப் பிணங்கள்
மாந்தி அணங்கும் பெருங்காட்டில்
மாயன் ஆட மலையான்
மகளும் மருண்டு நோக்குமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

வேய்கள் - மூங்கில்கள். `ஓங்கி வெடிகொள், உதிர வெடிகொள் சுடலை` என்க. ஓய்தல் - இளைத்தல். உலறுதல் - காய்தல். பகுவாய் - பிளந்த வாய் அணங்கும் - வருந்தும் `பேய்களின் வாழ்க்கை துன்ப வாழ்க்கை` என்றபடி. மாயம் - கள்ளத் தன்மை; வேட மாத்திரத்தில் பல பெற்றியனாகத் தோன்றுதல். அப்பன் நடனத்தை அம்மை காணுதலை இத்திருப்பாட்டில் குறித்தருளினார். மருட்சி - வியப்பு.

பண் :இந்தளம்

பாடல் எண் : 20

கடுவன் உகளுங் கழைசூழ்
பொதும்பிற் கழுகும் பேயுமாய்
இடுவெண் டலையும் ஈமப்
புகையும் எழுந்த பெருங்காட்டில்
கொடுவெண் மழுவும் பிறையுந்
ததும்பக் கொள்ளென் றிசைபாடப்
படுவெண் துடியும் பறையுங்
கறங்கப் பரமன் ஆடுமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

கடுவன் - ஆண் குரங்கு. உகளும் - கிளைகளில் பாய்கின்ற. கழை - மூங்கில், பொதும்பு - புதர். இடுதல் - புதைத்தல். `புதைத்ததனால் உண்டான வெண்டலை` என்க. ஈமம் - பிணஞ் சுடும் விறகு. வெண்டலையை `எழுந்த` என்றது, `குழியினின்றும் வெளிப் போந்த` என்றபடி. மழுவுக்கு வெண்மை கூர்மையாலும், துடிக்கு வெண்மை அதன் தோலினாலும் ஆகும். ததும்ப - ஒளிவீச. கொள்ளெனல், ஒலிக் குறிப்பு. எனவே, `அங்ஙனம் பாடுவன பூதங்கள்` என்பது பெறப்பட்டது. படுதல் - ஒலித்தல். துடி - உடுக்கை. கறங்குதல் - ஒலித்தல். தடி, இறைவனது. பறை, தேவர்களது.

பண் :இந்தளம்

பாடல் எண் : 21

குண்டை வயிற்றுக் குறிய
சிறிய நெடிய பிறங்கற்பேய்
இண்டு படர்ந்த இருள்சூழ்
மயானத் தெரிவாய் எயிற்றுப்பேய்
கொண்டு குழவி தடவி
வெருட்டிக் கொள்ளென் றிசைபாட
மிண்டி மிளிர்ந்த சடைகள்
தாழ விமலன் ஆடுமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

குண்டு - ஆழம், ஐ, சாரியை. `குறியனவாயும், சிறியனவாயும், நெடியனவாயும் பிறங்குதலையுடைய பேய்` என்க. பிறங்குதல் - விளங்குதல். இண்டு இண்டை; இண்டங் கொடி. வெருட்டுதல் - அச்சுறுத்தல். `பேய்` இரண்டையும் பன்மையாகக் கொள்க. பிள்ளைப் பேய்களைத் தாய்ப் பேய்கள் இருட்காலத்தில் தடவிக் கொடுத்து, ஆயினும் அச்சுறுத்தி, அவை குறும்பு அடங்கி அமைதியுற்றிருக்க இசை பாடின என்க. முதலில் உள்ள `பேய்` என்பதில் இரண்டன் உருபு விரிக்க.
எரிவாய்ப் பேய் - கொள்ளி வாய்ப் பேய். கொள்ளென்று இசைபாடுதல் முன் பாட்டிலும் வந்தது. `குழவியாக` என ஆக்கம் வருவிக்க. மிண்டுதல் - நெருங்குதல்.

பண் :இந்தளம்

பாடல் எண் : 22

சூடும் மதியம் சடைமேல்
உடையார் சுழல்வார் திருநட்டம்
ஆடும் அரவம் அரையில்
ஆர்த்த அடிகள் அருளாலே
காடு மலிந்த கனல்வாய்
எயிற்றுக் காரைக் காற்பேய்தன்
பாடல் பத்தும் பாடி
யாடப் பாவம் நாசமே.

பொழிப்புரை :

பொழிப்புரையை எழுதவில்லை

குறிப்புரை :

`திருநட்டமாகச் சுழல்வார்` என ஆக்கம் விரித்து, மாறிக் கூட்டுக. `அருளாலே பாடிய` என ஒரு சொல் வருவிக்க. இதனால் அம்மையார் பாடல்கள் அருள்வழி நின்று அருளிச் செய்தனவாதல் அறிந்துகொள்ளப்படும். காடு மலிந்த - காட்டை மகிழ்ந்து அங்கு வாழ்கின்ற. அம்மையார் தமது பணிவு தோன்ற மற்றைப் பேய்களைப் போலவே தம்மை வருணித்துக் கொண்டார். ஆடுதல், பாடற் பொருள் விளங்கச் செய்கை காட்டி நடித்தல்.
சிற்பி