திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணம்


பண் :

பாடல் எண் : 1

வேதநெறி தழைத் தோங்க
மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம்ப ரைபொலியப்
புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற்புகலித்
திருஞான சம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு
திருத்தொண்டு பரவுவாம்.

பொழிப்புரை :

: இவ்வுலகில் நான்மறைகளின் நெறிகள் தழைத்து ஓங்கவும், அவற்றுள் மேலாய சைவத் துறைகள் நிலைபெற்று விளங் கவும், உலகுயிர்கள் வழிவழியாகத் தழைத்துச் செழித்து விளங்கவும், தூய திருவாய் மலர்ந்து அழுதவரான, குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த சீகாழிப் பதியில் தோன்றியருளிய திருஞானசம்பந்தரின் திருவடித் தாமரைகளைத் தலைமேற் கொண்டு போற்றி, அம்மலரடிகளின் துணையால் அப்பெருமான் செய்த திருத்தொண்டின் இயல்புகளை எடுத்துச் சொல்லுவோம்.

குறிப்புரை :

நான்மறைகள் என்பன அறம் முதலிய நாற்பொருள் களையும் பொதுப்படக் கூறுவன. சைவநெறி என்பது வீட்டு நெறியை அடைதற்குரிய புற (சரியை), அக (கிரியை), ஒன்றிய (யோக) வழிபாடுகளால் அடையத்தகும் ஞான நெறியைச் சிறப்பாக எடுத்துக் கூறுவது. ஆதலின் மறைகளைப் பொது என்றும், சைவ நெறியைச் சிறப்பு என்றும் கூறுவர். இனி, நான்மறைகள் உலகர்க்கும், சைவ நெறியை விளக்கிக் கூறும் ஆகமங்கள் அருள் பதிவுடையார்க்கும் (சத்திநிபாதர்) அருளப்பட்டன என்றும் கூறுவர். `வேதமொ டாகமம் மெய்யாம் இறைவன்நூல், ஓதும் பொதுவும் சிறப்பும்என் றுள்ளன\' (தி.10 பா.2362) `வேதம் பசுஅதன்பால் மெய்யா கமம்\' (தனிப் பாடல்) எனவரும் திருவாக்குகளும் காண்க.
மறைகள் இறைவனை இன்ன தன்மையன் என்றறியவொண் ணாதவன் என்றே கூற, சைவநெறி அப்பெருமானை இன்னதன்மை யன் என்றும், இவ்வகையில் அறிந்து உணர்தற்குரியவன் என்றும் கூறும் உயர்நெறியாக விளங்குவதென்றும் கூறுவர். அது பற்றியே `மிகுசைவத் துறை\' என்றார். பூதம் - உயிர்க் கூட்டம்.

பண் :

பாடல் எண் : 2

சென்னிவளர் மதியணிந்த
சிலம்பணிசே வடியார்தம்
மன்னியசை வத்துறையின்
வழிவந்த குடிவளவர்
பொன்னிவளந் தருநாடு
பொலிவெய்த நிலவியதால்
கன்னிமதில் மருங்குமுகில்
நெருங்குகழு மலமூதூர்.

பொழிப்புரை :

வளருந் தன்மை வாய்ந்த பிறைச் சந்திரனைத் தலையிலும், சிலம்பைத் திருவடிகளிலும் சூடிய சிவபெருமானின் நிலைபெற்ற சைவத் துறையில், வழிவழியாய் வந்த குடியான சோழரின் காவிரியாறு வளம் செய்கின்ற நாடு பொலிவு பெறும்படி நிலை பெற்றுள்ள பதியே, அழியாத மதிலின் அருகே மேகங்கள் வந்து நெருங்கும் திருக்கழுமலம் என்னும் சீகாழிப் பதியாகும்.

குறிப்புரை :

கழுமலம் என்பது சீகாழியின் பன்னிரண்டு பெயர் களுள் ஒன்று.

பண் :

பாடல் எண் : 3

அப்பதிதான் அந்தணர்தம்
கிடைகள்அரு மறைமுறையே
செப்பும்ஒலி வளர்பூகச்
செழுஞ்சோலை புறஞ்சூழ
ஒப்பில்நகர் ஓங்குதலால்
உகக்கடைநாள் அன்றியே
எப்பொழுதுங் கடல்மேலே
மிதப்பதென இசைந்துளதால்.

பொழிப்புரை :

மறைகளை ஓதிவரும் சிறுவர்கள், அரிய மறை களை ஓதுகின்ற ஒலியுடன் வளர்கின்ற பாக்கு மரங்களின் செழுமை யான சோலைகள் புறத்தே சூழ, ஒப்பில்லாமல் ஓங்குதலால், அப் பதிதான், ஊழிக்காலத்தில் மிதப்பது மட்டுமன்றி எக்காலத்துமே கடலில் மிதப்பதாகும் என்ற தோற்றத்தைப் பொருந்தியுள்ளதாகும்.

குறிப்புரை :

சூழ்ந்துள்ள சோலைகளின் நிறத்தாலும், மறைகளின் முழக்காலும், கடலை ஒத்தலின், காழிப்பதி கடலில் மிதப்பது போல்வ தாயிற்று.

பண் :

பாடல் எண் : 4

அரிஅயனே முதல்அமரர்
அடங்கஎழும் வெள்ளங்கள்
விரிசுடர்மா மணிப்பதணம்
மீதெறிந்த திரைவரைகள்
புரிசைமுதல் புறஞ்சூழ்வ
பொங்கோதம் கடைநாளில்
விரிஅரவ மந்தரஞ்சூழ்
வடம்போல வயங்குமால்.

பொழிப்புரை :

திருமாலும், நான்முகனும் முதலிய தேவர்கள் அடங்குமாறு மேலே எழும் பல நீர்ப் பெருக்குகள், விரிந்த கதிர்களை யுடைய பெரிய மணிகள் அழுந்திய மேடைகளின் மீது வீசும் அலைகளால் உண்டான கீற்றுகள், புறமதிலின் மருங்கினில் நிரல்பட அமைந்திருப்பவை, பொங்கும் பாற்கடலைக் கடைந்த காலத்தில் மந்தர மலையை வரிவரியாகச் சுற்றிய வாசுகி என்ற பாம்பின் வடத்தைப் போல விளங்கும்.

குறிப்புரை :

காழி நகரிலுள்ள மதில்மேடைகள் மந்தர மலையை யும், அவற்றில் படிந்து நிற்கும் நீர்ப்பெருக்காலாய கீற்றுக்கள் அம் மலையைச் சுற்றிய பாம்பினையும் போன்றன. பதணம் - மதிலின் மேலிடமான மேடைகள்.

பண் :

பாடல் எண் : 5

வளம்பயிலும் புறம்பணைப்பால்
வாசப்பா சடைமிடைந்த
தளம்பொலியும் புனற்செந்தா
மரைச்செவ்வித் தடமலரால்
களம்பயில்நீர்க் கடன்மலர்வ
தொருபரிதி யெனக்கருதி
இளம்பரிதி பலமலர்ந்தாற்
போல்பஉள இலஞ்சிபல.

பொழிப்புரை :

: கரிய நீர் நிறைந்த கடலில் மலர்கின்ற ஒரு கதிரவன் என எண்ணி, வளம் மிக்க மணம் கொண்ட மருத நிலத்தின் புறத்தே, மணம் கமழும் பசிய இலைகளிடையே, நெருங்கிய இதழ்களுடன் விளங்கும் நீர்ப் பூவான செந்தாமரை மலர்கள் மலர்ந்ததால், இள ஞாயிறு பல தோன்றினாற் போன்ற தோற்றம் கொண்டனவான பல நல்ல நீர்நிலைகள் அங்கு எங்கும் விளங்கின.

குறிப்புரை :

புறம்பணை - மருத நிலத்தில் வெளிப்பக்கம். தளம் - இதழ். இலஞ்சி - பொய்கை. இலஞ்சி கடல் எனவும், செந்தாமரை பரிதி எனவும் விளங்குகின்றன.

பண் :

பாடல் எண் : 6

உளங்கொள்மறை வேதியர்தம்
ஓமதூ மத்திரவும்
கிளர்ந்ததிரு நீற்றொளியில்
கெழுமியநண் பகலுமலர்ந்
தளந்தறியாப் பல்லூழி
யாற்றுதலால் அகலிடத்து
விளங்கியஅம் மூதூர்க்கு
வேறிரவும் பகலும்மிகை.

பொழிப்புரை :

: மனத்தில் கொண்ட மறை ஒழுக்கத்தை உடைய மறையவர் செய்யும் ஓமப் புகைகளின் படலங்களால் இரவும், கிளர்ச்சி பெற்ற திருநீற்றின் ஒளியால் பொருந்திய நண்பகலுமாய் எக்காலத்தும் மிக்கு விளங்கி, எல்லை அளந்தறியப்படாத பல ஊழிகளிலும் நிலைபெற்றிருப்பதால், அகன்ற உலகில் பெருமை பொருந்த விளங்கிவரும் அப்பழம்பதிக்கு, வேறு இரவும் பகலும் வேண்டப்படாத மிகையாகும்.

குறிப்புரை :

இரவும் பகலுமாய காலநிலை உலகியல் வழிப்பட்டது. மாயையின் விளைவாயது. காழிப் பதியோ அருள் வழிப்பட்டதாகும். ஆதலின் அந்நகருக்கு அருள் வயத்ததாய ஓமப் புகையும், திருநீற்று ஒளியுமே இரவையும் பகலையும் விளைவிக்கத் தக்கன; ஆதலின் நாம் காணும் இரவும் பகலும் மிகை என்றார்.

பண் :

பாடல் எண் : 7

பரந்தவிளை வயற்செய்ய
பங்கயமாம் பொங்கெரியில்
வரம்பில்வளர் தேமாவின்
கனிகிழிந்த மதுநறுநெய்
நிரந்தரம்நீள் இலைக்கடையால்
ஒழுகுதலால் நெடிதவ்வூர்
மரங்களும்ஆ குதிவேட்கும்
தகையவென மணந்துளதால்.

பொழிப்புரை :

பரந்த விளைவுடன் கூடிய வயல்களில் தோன்றிய சிவந்த தாமரை மலராய பெருகிய தீயில், அவ்வயல் வரம்பில் வளர்ந்த தேமா மரத்தின் பழம் விண்டதால் வெளிப்படும் சாறான நறு நெய்யா னது, நீண்ட இலைநுனியின் மூலம் இடையீடின்றி ஒழுகுதலால், அங்குள்ள மக்களே அன்றி, மரங்களும் வேள்வியைச் செய்யும் இயல்புடையன என எண்ணுமாறு அத்திருப்பதி விளங்கியது.

குறிப்புரை :

விளைவயல் - வேள்வி செய்யும் இடம். தாமரை - வேள்வித் தீ. மரங்களில் சாறு - ஓமநெய். மாவிலையின் நுனி - ஓமத் துடுப்பு.

பண் :

பாடல் எண் : 8

வேலையழற் கதிர்படிந்த
வியன்கங்குல் வெண்மதியம்
சோலைதொறும் நுழைந்துபுறப்
படும்பொழுது துதைந்தமலர்ப்
பாலணைந்து மதுத்தோய்ந்து
தாதளைந்து பயின்றந்தி
மாலையெழுஞ் செவ்வொளிய
மதியம்போல் வதியுமால்.

பொழிப்புரை :

கதிரவன் கடலில் மறைந்த பின்பு, இரவில் தோன்றி விளங்கும் வெண்மையான மதியம், சோலைகள் தோறும் புகுந்து வெளிப்பட்டுத் தோன்றும் பொழுது, அடர்ந்த மரங்களினிடையே சேர்ந்து, அவற்றின் தேனில் தோய்ந்தும், மகரந்தங்களை அளாவியும் இங்ஙனம் நெடுநேரம் பயின்றதால், மாலையில் தோன்றும் சிவந்த ஒளியையுடைய சந்திரனைப்போல் தோன்றி விளங்கும்.

குறிப்புரை :

சந்திரன் மாலையில் தோன்றும் பொழுது சிவந்தும், பின் வெள்ளிதாயும் விளங்கும். ஆனால் இப்பதியில் தோன்றும் சந்தி ரனோ சோலைக்கண்ணுள்ள தேனையும் மகரந்தப் பொடிகளையும் அளாவி வருதலால், எஞ்ஞான்றும் சிவந்து விளங்குகின்றது.

பண் :

பாடல் எண் : 9

காமர்திருப் பதியதன்கண்
வேதியர்போற் கடிகமழும்
தாமரையும் புல்லிதழும்
தயங்கியநூ லுந்தாங்கித்
தூமருநுண் துகளணிந்து
துளிவருகண் ணீர்ததும்பித்
தேமருமென் சுரும்பிசையால்
செழுஞ்சாமம் பாடுமால்.

பொழிப்புரை :

அழகிய அத்திருப்பதியில், மணம் கமழும் தாமரை யும், அந்தணர்களைப் போல், புற இதழ்களையும், நூலையும் தாங்கிக் கொண்டு, தூய்மையுடைய நுண்மையான துகள்களை அணிந்து, துளித்து வருகின்ற நீர் ததும்பி, தேன் பொருந்த வரும் வண்டின் இசை யால் இனிய சாமவேத கீதத்தைப் பாடும்.

குறிப்புரை :

அந்தணர்களுக்கு உரிய அடையாள மாலை தாமரை மாலையாகும். அந்தணர்க்காகுங்கால்:- புல்லிதழ் - கருமை இதழ்களாலாய பவித்திரம்; நூல் - பூணூல்; நுண்துகள் - திருநீறு; கண்ணீர் - அன்பினால் இன்பமார்ந்திருப்பதால் வரும் கண்ணீர்; சாமம் பாடுதல் - சாம கீதத்தைப் பாடுதல். தாமரைக்காகுங்கால்:- புல்லிதழ் - புறவிதழ்; நூல் - அதன் தண்டின் நூல்; நுண்துகள் - மகரந்தம்; கண்ணீர்- (கள் + நீர்) தேனாகிய நீர்; சாமம் பாடுதல் - வண்டு இசைத்தல்.

பண் :

பாடல் எண் : 10

புனைவார்பொற் குழையசையப்
பூந்தானை பின்போக்கி
வினைவாய்ந்த தழல்வேதி
மெழுக்குறவெண் சுதையொழுக்கும்
கனைவான முகிற்கூந்தல்
கதிர்செய்வட மீன்கற்பின்
மனைவாழ்க்கைக் குலமகளிர்
வளம்பொலிவ மாடங்கள்.

பொழிப்புரை :

அணிந்த நீண்ட பொன்னால் ஆய குழைகள் காதில் அசைய, அழகிய பட்டுடையின் தானையினைப் பின் பக்க மாய்ச் செருகி, அந்தணர்கள் தமக்குரிய தொழிலாய தீ வளர்க்கும் வேதிகையினை மெழுகியும், வெண்மை நிறமுடைய பொடியைக் கொண்டு கோலம் இட்டும், ஒலி பொருந்திய வானில் எழும் மேகம் போன்ற கூந்தலையுடைய, ஒளி பொருந்திய அருந்ததியின் கற்பு வாய்க்கப் பெற்ற வாழ்க்கைத் துணைவியாராகிய குலமகளிர் நிரம்பிய நல்வளத்தால் மாளிகைகள் விளக்கம் பெற்று விளங்கின.

குறிப்புரை :

மனைக்கு விளக்கம் மடவார் ஆவர். அவர் தாமும் கண வரின் கருத்தின் வழி நின்றொழுகும் கற்பினராயின், அவ்வில்வாழ்க் கையின் நலமும் வளமும் சொல்லப் போமோ? இவ்வரிய விளக் கத்தை அப்பதி பெற்று நிற்கின்றது.

பண் :

பாடல் எண் : 11

வேள்விபுரி சடங்கதனை
விளையாட்டுப் பண்ணைதொறும்
பூழியுற வகுத்தமைத்துப்
பொன்புனைகிண் கிணியொலிப்ப
ஆழிமணிச் சிறுதேரூர்ந்து
அவ்விரதப் பொடியாடும்
வாழிவளர் மறைச்சிறார்
நெருங்கியுள மணிமறுகு.

பொழிப்புரை :

அப்பதியிலுள்ள தெருக்கள் தொறும், வேள்வி வேட்குங்கால், தத்தம் பெற்றோர்கள் செயத்தகும் செயற்பாடுகளைத் தாம் விளையாடும் இடங்களில் எல்லாம் மண்ணாகிய புழுதி பொருந்தச் செய்து, பொன்னால் ஆன கிண்கிணிகள் ஒலிக்க, உருள் (சக்கரம்) பூட்டிய அழகிய சிறு தேர்களை ஊர்ந்து, அதனால் எழும் பிய மண் தூசி படிய விளையாடும் சிறுவர்கள் நெருங்கியுள்ளனர்.

குறிப்புரை :

பண்ணை - விளையாடும் இடம். பூழி - புழுதி : மண்.

பண் :

பாடல் எண் : 12

விடுசுடர்நீள் மணிமறுகின்
வெண்சுதைமா ளிகைமேகம்
தொடுகுடுமி நாசிதொறும்
தொடுத்தகொடி சூழ்கங்குல்
உடுஎனும்நாண் மலர்அலர
உறுபகலிற் பலநிறத்தால்
நெடுவிசும்பு தளிர்ப்பதென
நெருங்கியுள மருங்கெல்லாம்.

பொழிப்புரை :

ஒளி பொருந்திய நீண்ட மணிகள் பதித்த தெருக்களின் வெண்ணிறச் சுண்ணச் சாந்தால் இயன்ற மாளிகைகள், மேக மண்டலத்தைத் தொடுமாறு நீண்ட நாசிகள் தோறும் கட்டிய கொடிகளால் இருள் பரவியுள்ள இரவில், விண்மீன்கள் என்னும் புதிய பூக்கள் பூப்பதற்குப் பொருந்திய பகற் பொழுதில் பல நிறங்களுடன் நீண்ட வானத்தில் தளிர்ப்பதைப் போன்று பக்கங்களில் எல்லாம் நெருங்கியுள்ளன.

குறிப்புரை :

நாசி - மாளிகையின் உச்சியில் கொடிகள் கட்டுதற்கென அமைந்த உறுப்பு. மாளிகைகள் வெண்சுதையால் இயன்றவை. அவற் றில் மணிகள் பதிக்கப்பட்டுள்ளன. அம்மாளிகைகளின் உச்சியில் பல் வேறு நிறமுடைய கொடிகள் கட்டப்பெற்றுள்ளன. இவையே இப் பாடற் கருவாம். மாளிகைகளின் வெண்ணிறச் சாந்து பகல் செய்கின் றது. அதன் கண் பதிக்கப்பட்டிருக்கும் மணிகள் விண்மீன்களென உள்ளன. இவை இரவிலேயே காண்பதற்குரியன. இவ்விண்மீன் களாய மலர்கள் பலவும் இரவில் மலர்தற்கு ஏதுவாக அக்கொடிகள் விசும்பில் தளிர்த்துள்ளன என்கின்றார் ஆசிரியர்.

பண் :

பாடல் எண் : 13

மடையெங்கும் மணிக்குப்பை
வயலெங்கும் கயல்வெள்ளம்
புடையெங்கும் மலர்ப்பிறங்கல்
புறமெங்கும் மகப்பொலிவு
கிடையெங்கும் கலைச்சூழல்
கிளர்வெங்கும் முரலளிகள்
இடையெங்கும் முனிவர்குழாம்
எயிலெங்கும் பயிலெழிலி.

பொழிப்புரை :

அப்பதியின் நீர் மடைகள் எங்கும், மணிகளின் குவியல்கள் உள்ளன. வயல்களில் எங்கும் நீர் வெள்ளத்துடன் கயல் மீன்களின் கூட்டங்கள் உள்ளன. அங்குள்ள வயல்களின் அருகி லுள்ள இடங்களில் பூக்குவியல்கள் உள்ளன. அவற்றின் வெளியில் எங்கும் வேள்விகளின் பொலிவுகள் நிரம்பியுள்ளன. சிறுவர்க்கு மறை பயிற்றும் பள்ளிகள் எங்கும், கலைகளின் சூழல்கள் விளங்கியுள்ளன. எழுச்சிமிக்க சோலைகள் எங்கும், ஒலிக்கும் வண்டுகளின் கூட்டங்கள் உள்ளன. இச்சோலைகளின் இடம் எங்கும், மறை முனிவர்களின் கூட் டங்கள் உள்ளன. மதில்கள் எங்கும், தவழ்கின்ற மேகங்கள் உள்ளன.

குறிப்புரை :

மடை - வயல்களிலுள்ள நீர் பாய்தற்கும் வடிதற்கும் உரிய மடைகள்.

பண் :

பாடல் எண் : 14

பிரமபுரம் வேணுபுரம்
புகலிபெரு வெங்குருநீர்ப்
பொருவில்திருத் தோணிபுரம்
பூந்தராய் சிரபுரமுன்
வருபுறவஞ் சண்பைநகர்
வளர்காழி கொச்சைவயம்
பரவுதிருக் கழுமலமாம்
பன்னிரண்டு திருப்பெயர்த்தால்.

பொழிப்புரை :

அத்திருப்பதியானது, பிரமபுரம், வேணுபுரம், பெரியபுகலி, வெங்குரு, நீரினுள் ஒப்பில்லாது விளங்கும் திருத் தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், முன்வரும் புறவம், சண்பை நகர், வளரும் காழி, கொச்சை வயம், போற்றுகின்ற திருக்கழுமலம் என்னும் பன்னிரண்டு திருப்பெயர்களைக் கொண்டதாகும்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 15

அப்பதியின் அந்தணர்தங்
குடிமுதல்வர் ஆசில்மறை
கைப்படுத்த சீலத்துக்
கவுணியர்கோத் திரம்விளங்கச்
செப்புநெறி வழிவந்தார்
சிவபாத விருதயர்என்று
இப்புவிவா ழத்தவஞ்செய்
இயல்பினார் உளரானார்.

பொழிப்புரை :

அப்பதியில் அந்தணர்களின் குடியில் வந்த முதன்மை உடையவரும், குற்றம் தீர்ந்த மறைகள் கூறியவாறு ஒழுகும் ஒழுக்கத்தை உடையவரும், கவுணியர் கோத்திரமும் அதன் உள் நெறி வகைகளாகக் கூறப் பெறுவனவும் மேன்மை அடையுமாறு தோன்றிய வருமான `சிவபாத இருதயர்\' என்பார். அவர் இவ்வுலகம் வாழும் பொருட்டுத் தவம் செய்யும் இயல்புடையவராய் வாழ்ந்து வந்தார்.

குறிப்புரை :

அந்தணர் - குடி மரபு. கவுணியர் கோத்திரம் - அதன் உட்பிரிவு. செப்புநெறி - அதன் உட்பிரிவுகளாகக் கூறப்பெறும் சூத்திரம், பிரவரம் முதலியன.

பண் :

பாடல் எண் : 16

மற்றவர்தந் திருமனையார்
வாய்ந்தமறை மரபின்வரு
பெற்றியினார் எவ்வுலகும்
பெறற்கரிய பெருமையினார்
பொற்புடைய பகவதியார்
எனப்போற்றும் பெயருடையார்
கற்புமேம் படுசிறப்பால்
கணவனார் கருத்தமைந்தார்.

பொழிப்புரை :

அவருடைய மனைவியார், அவருக்குப் பொருந் திய அந்தணர் மரபில் வந்தவர். எல்லாவுலகமும் பெறுதற்கு அரிய பெருமையையுடையவர். அழகுடைய `பகவதியார்\' என்று போற்றப் படுகின்ற பெயரையுடையவர். கற்பால் மேன்மையுறும் சிறப்பால் தம் கணவரின் கருத்துக்கு ஏற்ப அமைந்து ஒழுகுபவர்.

குறிப்புரை :

`வாய்ந்த மறைமரபு\' என்றார், சிவபாத இருதயரின் குலம், குணம் முதலானவற்றுக்கெல்லாம் பொருந்தியிருத்தல் பற்றி. கணவர் கருத்தமைதல் - கணவனார்தம் திருவுள்ளத்திற்கு ஏற்ப அமைந்து ஒழுகும் வாழ்க்கையராய் வாழ்தல்.

பண் :

பாடல் எண் : 17

மரபிரண்டும் சைவநெறி
வழிவந்த கேண்மையினார்
அரவணிந்த சடைமுடியார்
அடியலால் அறியாது
பரவுதிரு நீற்றன்பு
பாலிக்குந் தன்மையராய்
விரவுமறை மனைவாழ்க்கை
வியப்பெய்த மேவுநாள்.

பொழிப்புரை :

தாய்வழி தந்தைவழி ஆகிய இருமரபுகளும் சைவ நெறிவந்த உரிமையுடைமையின், அவ்விருவரும், பாம்பை அணிந்த சடையையுடைய சிவபெருமானின் திருவடிகளை அன்றி மற்றொன் றையும் பொருள் என்று உணராதவராய், மறை நெறிப்படி மனை வாழ்க்கைத் திறத்தில் யாவரும் வியக்குமாறு வாழ்ந்து வரும் நாள்களில்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 18

மேதினிமேற் சமண்கையர்
சாக்கியர்தம் பொய்ம்மிகுத்தே
ஆதியரு மறைவழக்கம்
அருகிஅர னடியார்பால்
பூதிசா தனவிளக்கம்
போற்றல்பெறா தொழியக்கண்
டேதமில்சீர்ச் சிவபாத
இருதயர்தாம் இடருழந்தார்.

பொழிப்புரை :

உலகில் கீழ்மக்களான சமணர், புத்தர் என்ற இவர்களின் பொய்ச் சமயங்கள் மிகுதியாய் வளர, அதனால் பழைய அரிய மறை வழக்கங்கள் சுருங்கி, அடியார்களிடத்து, திருநீற்றுச் சாதனத்தின் விளக்கமானது போற்றப்பெறாது மறையக் கண்டு, குற்றம் இல்லாத சிறப்புடைய சிவபாத இருதயர் பெரிதும் வருத்தம் அடைந்தார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒரு முடிபுடையன. பல்லவன் ஒரு புறமும், பாண்டியன் ஒரு புறமுமாக இருந்து, சமண சமயச் சார்பினால் தாக்குண்டு, தம்மையும், தம் நாட்டையும் கீழ்ப்படுத்தி யிருந்தமை சம்பந்தர், நாவரசர் ஆகியோர்தம் வரலாற்றால் அறிய முடிகின்றது. புத்தச் சார்பும் இருந்தமை புத்த நந்தியால் அறிய முடிகின்றது. இவ்வகையிலேயே சிவபாத இருதயர் பெரிதும் வருந்த லாயினர்.

பண் :

பாடல் எண் : 19

மனையறத்தில் இன்பமுறு
மகப்பெறுவான் விரும்புவார்
அனையநிலை தலைநின்றே
ஆடியசே வடிக்கமலம்
நினைவுறமுன் பரசமயம்
நிராகரித்து நீறாக்கும்
புனைமணிப்பூண் காதலனைப்
பெறப்போற்றுந் தவம்புரிந்தார்.

பொழிப்புரை :

இல்வாழ்க்கையில் இன்பம் அளிக்கும் மகவைப் பெறும் விருப்பத்தைக் கொண்ட சிவபாத இருதயர் அந்நிலையில் ஊன்றி நின்று, சிவபெருமானின் ஆடும் திருவடிப்போதுகளை நினைந்து, முன்னர்ப் பரசமயங்களின் தீமையைப் போக்கித் திருநீற் றின் விளக்கத்தை மிகுதிப் படுத்தும் அழகிய அணிகளை அணியும் திருமகனைப் பெறும் பொருட்டுத் தவத்தைச் செய்தார்.

குறிப்புரை :

: `இட்டுந் தொட்டும் கவ்வியும் துழந்தும், நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும், மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறையில்லைத் தாம் வாழுநாளே\' (புறநா.188) என்பதால் தமக்கும் உலகுயிர்க்கும் பேரின்பம் கிட்ட மகவு இருத்தல் இன்றி யமையாததாயிற்று.

பண் :

பாடல் எண் : 20

பெருத்தெழும்அன் பாற்பெரிய
நாச்சியா ருடன்புகலித்
திருத்தோணி வீற்றிருந்தார்
சேவடிக்கீழ் வழிபட்டுக்
கருத்துமுடிந் திடப்பரவும்
காதலியார் மணிவயிற்றில்
உருத்தெரிய வரும்பெரும்பே
றுலகுய்ய உளதாக.

பொழிப்புரை :

பெருகி எழும் அன்பால், திருநிலை நாயகி அம் மையாருடன் திருத்தோணியில் வீற்றிருந்தருளுபவரான தோணியப் பரின் சேவடிகளின் கீழ் வணங்கி, கணவரின் கருத்து முற்றுப் பெறும்படி பரவும் பகவதியாரின் மணிவயிற்றில், உருவம் தெரிய வரும் கருப்பமான பெரும் பிள்ளைப் பேறு உலகம் உய்ய உளதாக,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 21

ஆளுடையா ளுடன்தோணி
அமர்ந்தபிரான் அருள்போற்றி
மூளுமகிழ்ச் சியில்தங்கள்
முதன்மறைநூல் முறைச்சடங்கு
நாளுடைய ஈரைந்து
திங்களினும் நலஞ்சிறப்பக்
கேளிருடன் செயல்புரிந்து
பெரிதின்பங் கிளர்வுறுநாள்.

பொழிப்புரை :

ஆளும் தன்மையுடைய திருநிலை நாயகியா ருடன் தோணியப்பரின் திருவருளையும் போற்றிக் கருக்கொண்ட காரணத்தினால் மனத்தில் பெருகும் மகிழ்ச்சியுடன், தங்களுக்குரிய மறையின் முறைப்படி செய்யும் செயற்பாடுகளையெல்லாம், நாளினை முதன்மையாகக் கொண்ட பத்துத் திங்களிலும் நன்மை உண்டாகுமாறு உறவினர் மகிழ்ந்து செய்ய, இன்பம் உண்டாகும் அத்தகைய நாள் களில்,

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 22

அருக்கன்முதற் கோளனைத்தும்
அழகியஉச் சங்களிலே
பெருக்கவலி யுடன்நிற்கப்
பேணியநல் லோரையெழத்
திருக்கிளரும் ஆதிரைநாள்
திசைவிளங்கப் பரசமயத்
தருக்கொழியச் சைவமுதல்
வைதிகமுந் தழைத்தோங்க.

பொழிப்புரை :

கதிரவன் முதலான கோள்கள் எல்லாம் தத்தமக் குரிய வலிமை மிகும் இராசிகளில் நிற்கவும், சோதிட நூலார் விரும்பும் நல்ல வேளை வரவும், செம்மை மிக்க திருவாதிரை நாள் எண்திசையும் விளக்கம் அடையவும், மற்ற சமயங்களின் தருக்கிய நிலை ஒழியவும், முதன்மையான சைவத் துறையும் வைதிகத் துறையும் தழைத்து ஓங்கவும்,

குறிப்புரை :

அருக்கன் - கதிரவன். ஓரை பொழுது: இரண்டரை நாழிகையைக் கொண்டது. திரு - சிவம். கிளரும் - உவந்தருளும்: `ஆதிரை நாள் உகந்தான்\' (தி.4. ப. 4 பா.6) எனச் சிவபெருமானைக் குறிப்பதும் காண்க. திசைவிளங்க - பிள்ளையார் அந்நாளில் தோன்றி இருத்தலின் அவர் புகழ் எண் திசைகளிலும் விளக்கம் பெறுவதாயிற்று.

பண் :

பாடல் எண் : 23

தொண்டர்மனங் களிசிறப்பத்
தூயதிரு நீற்றுநெறி
எண்டிசையுந் தனிநடப்ப
ஏழுலகுங் களிதூங்க
அண்டர்குலம் அதிசயிப்ப
அந்தணர்ஆ குதிபெருக
வண்டமிழ்செய் தவம்நிரம்ப
மாதவத்தோர் செயல்வாய்ப்ப.

பொழிப்புரை :

அடியவர்களின் உள்ளம் களிப்படையவும், தூய திருநீற்றின் நெறியானது எண்திசைகளிலும் இணையின்றி நடக்கவும், ஏழ் உலகங்களில் உள்ள உயிர்கள் எல்லாம் மகிழ்ச்சியில் திளைக் கவும், தேவரினத்தவர் மிகுவியப்புடன் நோக்கவும், அந்தணர்களின் வேள்விகள் பெருகவும், வண்மையுடைய தமிழ்செய்த தவம் முற்றுப் பெறவும், பெரிய தவத்தைச் செய்பவர்களின் செயல் முற்றுப் பெறவும்,

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 24

திசையனைத்தின் பெருமையெலாம்
தென்றிசையே வென்றேற
மிசையுலகும் பிறவுலகும்
மேதினியே தனிவெல்ல
அசைவில்செழுந் தமிழ்வழக்கே
அயல்வழக்கின் துறைவெல்ல
இசைமுழுதும் மெய்யறிவும்
இடங்கொள்ளும் நிலைபெருக.

பொழிப்புரை :

எண்திசைகளின் பெருமைகள் எல்லாவற்றிலும், தென்திசையின் பெருமையே வெற்றி பெற்று மேன்மை அடையவும், மேல் உலகம், கீழ் உலகம் என்பனவற்றில், இம்மண்ணுலகமே சிறப் படைந்து வெல்லவும், அசைதல் இல்லாத செழுந்தமிழே மற்ற மொழித் துறைகளின் வழக்குகளை வெல்லவும், இசையறிவும் மெய்யறிவும் பொருந்தும் நிலை பெருகவும்,

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 25

தாளுடைய படைப்பென்னுந்
தொழில்தன்மை தலைமைபெற
நாளுடைய நிகழ்காலம்
எதிர்கால நவைநீங்க
வாளுடைய மணிவீதி
வளர்காழிப் பதிவாழ
ஆளுடைய திருத்தோணி
அமர்ந்தபிரான் அருள்பெருக.

பொழிப்புரை :

உயிர்கள் உய்தி பெறுதற்கென இறைவன் செய்யும் ஐந்தொழில்களில் அடிநிலையான படைப்புத் தொழில் தலைமையும் தகவும் பெறவும், காலக் கூறுபாட்டில் நிகழ்விலும் எதிர்விலும் வருகின்ற குற்றங்கள் நீங்கவும், ஒளிபொருந்திய மணிகளையுடைய வீதிகள் சிறந்தோங்கும் சீகாழிப் பதி வாழவும், உயிர்களை அடிமை யாகக் கொண்டு திருத்தோணிபுரத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெரு மானின் அருளானது மேன்மேலும் தழையவும்,

குறிப்புரை :

அடி; முதல். இறைவன் செய்யும் ஐந்தொழில்க ளில் அடிநிலையான படைப்பு, உயிர்களின் வினை வயத்தாலேயாம். ஆனால் பிள்ளையார் தோன்றியது அருள் வயத்தாலேயாம். அவர்தம் வாழ்வின் நிறைவில் ஈனமாம் பிறவி தீர யாவரும் புகுக! என்றருளித் தம்மோடு பிறரையும் சிவச் சார்பு பெற அழைத்துச் சென்றமையால் அப்பிறப்புத் தலைமையும் தகவும் பெறுவதாயிற்று.

பண் :

பாடல் எண் : 26

அவம்பெருக்கும் புல்லறிவின்
அமண்முதலாம் பரசமயப்
பவம்பெருக்கும் புரைநெறிகள்
பாழ்படநல் லூழிதொறும்
தவம்பெருக்குஞ் சண்பையிலே
தாவில்சரா சரங்கள்எலாம்
சிவம்பெருக்கும் பிள்ளையார்
திருஅவதா ரஞ்செய்தார்.

பொழிப்புரை :

பயனில் செயல்களையே செய்து வரும் புல்ல றிவை உடைய சமண் சமயம் முதலிய பிற சமயங்களானவை எல்லாம் பிறப்பதற்கே தொழிலாக்கும் தீயநெறிகள் பலவும் பாழ்படவும், நல்ல ஊழிக்காலந் தோறும் தான் அழியாமல் மிதந்து நின்று தவநெறியைப் பெருகச் செய்கின்ற சண்பைத் திருநகரில், குற்றம் அற்ற இயங்கும் பொருள், இயங்காப் பொருள் என்ற வகையில் நிலவுகின்ற உயிர்கள் எல்லாம் சிவத்தன்மை பெருகச் செய்யும் ஆளுடைய பிள்ளையாரான ஞானசம்பந்தர் தோன்றியருளினார்.

குறிப்புரை :

இயங்கும் பொருள், இயங்காப் பொருள்களில் எல் லாம் பிள்ளையார் சிவம்பெருக்கி வாழ்ந்தமை `ஞாலம் நின் புகழே மிகவேண்டுந் தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே\' ( தி.3 ப.108) `எங்கும் அரன் நாமமே சூழ்க\' (தி.3 ப.54. பா.1) எனவரும் அவர்தம் திருவாக்குகளானும், திருவோத்தூரில் இருந்த ஆண்பனை, பெண்பனை களெல்லாம் நிறைவாகச் சிவமே கூடிய பெற்றியினாலும் அறியலாம். காழிப் பிள்ளையார் தோன்றியருளியதால் இன்ன இன்ன வளங்கள் வாய்ந்தன எனப் போற்றும் சேக்கிழார், இவ்வைந்து பாடல்களிலும் இருபத்தொரு வளங்களைக் குறித்தருளுகின்றார். இவற்றால் பிள்ளை யார் யாண்டும் சிவம்பெருக்கி வாழ்ந்தமை அறியலாம். இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 27

அப்பொழுது பொற்புறு திருக்கழு மலத்தோர்
எப்பெயரி னோரும்அயல் எய்தும்இடை யின்றி
மெய்ப்படு மயிர்ப்புளகம் மேவியறி யாமே
ஒப்பில்களி கூர்வதொர் உவப்புற உரைப்பார்.

பொழிப்புரை :

அதுபொழுது அழகிய அக்கழுமலத்தில் எந்நெறி யிலிருப்பவர்களும் பக்கங்களில் பொருந்தும் வேறு இடம் இன்றி உடல் முழுதும் மயிர்க் கூச்செறியத் தம்மை அறியாமல் ஒப்பற்ற மகிழ்ச்சி மிகுவதாய ஓர் உவகை தோன்றக் கூறுவாராய்,

குறிப்புரை :

: எப்பெயரினோரும் - அறுவகைச் சமயத்தைச் சார்ந்த வர்களும் பிற இனத்தவர்களும்.

பண் :

பாடல் எண் : 28

சிவனருள் எனப்பெருகு சித்தமகிழ் தன்மை
இவண்இது நமக்குவர எய்தியதென் என்பார்
கவுணியர் குலத்திலொரு காதலன் உதித்தான்
அவன்வரு நிமித்தம்இது என்றதி சயித்தார்.

பொழிப்புரை :

: சிவபெருமானின் திருவருளெனப் பெருகும் மனம் மகிழ்கின்ற தன்மை இங்கு இவ்வாறு நமக்கு வருவதற்குக் காரணம் யாது? என வினவுவார், கவுணியர் கோத்திரத்தில் ஒரு மகன் தோன்றினான், அங்ஙனம் அவன் அவதரித்ததன் நன்னிமித்தம் இது வாகும் என்று மனம் தெளிந்து அதிசயித்தார்.

குறிப்புரை :

முன், மனமகிழ்ச்சி பெருகுதற்குக் காரணம் என்ன? எனத் தமக்குள் வினவியவர்கள், பின் அதன் உண்மை தெரிந்து அதிசயித்தார்கள். இவ்விரண்டு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 29

பூமுகை அவிழ்ந்துமணம் மேவுபொழில் எங்கும்
தேமருவு தாதொடு துதைந்ததிசை யெல்லாம்
தூமருவு சோதிவிரி யத்துகள் அடக்கி
மாமலய மாருதமும் வந்தசையு மன்றே.

பொழிப்புரை :

: பூக்களின் மொட்டு அலர்வதால் தோன்றிய மணம் நிரம்பிய சோலைகள் எங்கும் தேன் பொருந்திய மகரந்தம் பரவுதலால் நெருங்கிய திசைகளிலெல்லாம் தூய்மையுடைய ஒளி விரியுமாறு அத்துகளை அடக்கிப் பெருமை பொருந்திய பொதிய மலையினின்றும் வருகின்ற தென்றல் காற்றும் அதுபொழுதே வந்து மென்மையாக வீசும்.

குறிப்புரை :

மகரந்தத்தால் ஒளிகுன்றிய சோலையில் தென்றல் வீசி, அம்மகரந்தத் துகளை யடக்கி ஒளிமிகச் செய்தது.

பண் :

பாடல் எண் : 30

மேலையிமை யோர்களும் விருப்பொடு கரப்பில்
சோலைமலர் போலமலர் மாமழை சொரிந்தே
ஞாலமிசை வந்துவளர் காழிநகர் மேவும்
சீலமறை யோர்களுடன் ஓமவினை செய்தார்.

பொழிப்புரை :

விண்ணுலகத்தவர்களும் மிகு விருப்புடன் ஒழி வில்லாது, பூஞ்சோலைகள் பூக்களைச் சொரிவதைப் போல மலர் மழையைப் பொழிந்து, நிலவுலகத்தில் வந்து, சீலம் வளரும் சீகாழிப் பதியில், பொருந்திய ஒழுக்கமுடைய அந்தணருடன் கூடி வேள்விச் செயல்களைச் செய்தனர்.

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 31

பூதகண நாதர்புவி வாழஅருள் செய்த
நாதனரு ளின்பெருமை கண்டுநலம் உய்ப்பார்
ஓதுமறை யோர்பிறி துரைத்திடினும் ஓவா
வேதமொழி யால்ஒளி விளங்கியெழு மெங்கும்.

பொழிப்புரை :

சிவகணத் தலைவர்கள் உலகு உய்தற்கென ஞானசம்பந்தரைத் தோன்றச் செய்த சிவபெருமானின் திருவருளின் பெருமையைக் கண்டு, அதற்கு ஏற்ப நலங்கள் பலவற்றையும் செய்வாராயினர். மறை ஓதுபவர்கள், பிற பிற சொற்களைச் சொல்வா ராயினும், இடைவிடாது தாமே பெருகி எழும் மறை ஒலிகள் அவற் றின் மிக்கு எழும்.

குறிப்புரை :

*********************

பண் :

பாடல் எண் : 32

பயன்தருவ பஃறருவும் வல்லிகளும் மல்கித்
தயங்குபுன லுந்தெளிவு தண்மையுடன் நண்ணும்
வயங்கொளி விசும்புமலி னங்கழியு மாறா
நயம்புரிவ புள்ளொலிகள் நல்லதிசை யெல்லாம்.

பொழிப்புரை :

எல்லாத் திசைகளிலும் பலவகையான மரங்களும் கொடிகளும் பெருகித் தத்தம் பயன்களைத் தரலாயின. கலக்கமுடைய நீர்நிலையங்களும் தெளிவுடனும் குளிர்ச்சியுடனும் விளங்கின. விளங்கும் ஒளிகளையுடைய வானமும் களங்கம் நீங்கினது. மாறுபாடில்லாத பெரிய திசைகளில் எல்லாம் பறவைகளின் ஒலியே மிக்கிருப்பன. இங்ஙனம் எல்லாம் நன்மை பெருக விளங்கின.

குறிப்புரை :

*********************

பண் :

பாடல் எண் : 33

அங்கண்விழ விற்பெருகு சண்பையகல் மூதூர்ச்
சங்கபட கங்கருவி தாரைமுத லான
எங்கணும் இயற்றுபவர் இன்றியும் இயம்பும்
மங்கல முழக்கொலி மலிந்தமறு கெல்லாம்.

பொழிப்புரை :

அழகிய இடங்கள் தோறும் இவ்வாறான விழாவின் மங்கலங்களால் பெருகும் சீகாழிப் பதியில், சங்குகள், ஒருமுகப் பறை, இருமுகப் பறை, வேறு பிற நரம்புக் கருவிகள், தாரை, சின்னம் முதலாய இசைக் கருவிகள், எங்கும் இயக்குபவர் இல்லாம லேயே ஒலித்தன. தெருக்களில் எல்லாம் நிறைந்த மங்கல ஒலிகளே ஒலிப்பனவாயின.

குறிப்புரை :

படகம் - பேரி முதலிய ஒருமுகப் பறைகளும், முழவு முதலிய இருமுகப் பறைகளும்.

பண் :

பாடல் எண் : 34

இரும்புவனம் இத்தகைமை எய்தஅவர் தம்மைத்
தருங்குல மறைத்தலைவர் தம்பவன முன்றில்
பெருங்களி வியப்பொடு பிரான்அருளி னாலே
அருந்திரு மகப்பெற வணைந்தஅணி செய்வார்.

பொழிப்புரை :

இப்பேருலகானது இத்தகைய பெருமகிழ்வை அடைய, அப்பிள்ளையாரைப் பெற்ற அந்தணரின் தலைவரான சிவபாத இருதயர், தம் இல்லத்தின் முன் பெருங்களிப்பும் வியப்பும், பொருந்த, இறைவர் அருளால் அரிய அழகிய மகனாரைப் பெற்றமை யால் பொருந்திய அணிகளைச் செய்வார் ஆயினார்.

குறிப்புரை :

*********************

பண் :

பாடல் எண் : 35

காதல்புரி சிந்தைமகி ழக்களி சிறப்பார்
மீதணியும் நெய்யணி விழாவொடு திளைப்பார்
சூதநிகழ் மங்கல வினைத்துழனி பொங்கச்
சாதக முறைப்பல சடங்குவினை செய்வார்.

பொழிப்புரை :

விருப்பம் மிக்க தம் மன மகிழ்ச்சியால் களிப்பு அடைவார். மேலே பூசப்படுகின்ற நெய்யாட்டு விழாச் செய்து மகிழ்ச்சி அடைவார். மகன் தோன்றியதன் காரணமாகச் செய்யத் தகும் மங்கலச் செயல்களின் ஒலிகளோடு, அவற்றிற்குரிய செயல்கள் பல வற்றையும் செய்வார்.

குறிப்புரை :

மகப்பேற்றின் பின் அத்தொடக்கு நீங்க நெய் அணி வித்து நீராடச் செய்வர். `புதல்வர்ப் பயந்த புனிறுசேர் பொழுதின் நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி, ஐயர் பாங்கினும் அமரர் சுட்டியும், செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண்ணும்\' (தொல். கற்பி யல். 5); `கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி\' (தொல். கற்பியல். 6); `கரும்புடைக் கடுஞ்சூல் நம்குடிக்கு உதவி, நெய்யோடு இமைக்கும் ஐயவித் திரள்காழ், விளங்குநகர் விளங்கக் கிடந்தோள்\' (நற்றிணை 370); `ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப் பசு நெய் கூர்ந்த மென்மை யாக்கை\' (நற்றிணை 40) என வருங் கூற்றுக்களால் இச் செயல் முறை, பண்டு தொட்டே இருந்தமை புலனாகும். இதுவன்றி இறைவனிடத்தும் முனிவர் தேவர் முதலானோரிடத்தும் தாயும் சேயும் நலம் பெற்று வாழ வழிபாடு நிகழ்த்துதலும் அக்கால வழக்கமாகும். புதல்வன் முகங்காண்டல், ஐம்படைத் தாலி சூட்டல், பெயரிடுதல் போல்வனவும் அக்காலத்துச் செய்து வந்தமை தொல்காப்பியம் இளம்பூரணர்உரையால் அறிய முடிகின்றது. சாதக முறைப் பல சடங்கு - ஆண் மகவுக்குரிய 16 சடங்குகளுள் ஒன்று. சாத கன்மம் என்பர். அத்திர மந்திரத்தால் நூறு முறை ஓமம் செய்து, வாம மந்திரத்தால் மகவை முகமெதிர் நோக்கிப் பஞ்சப் பிரம மந்திரத்தால் உச்சி மோந்து, தற்புருடத்தினை வலக்காதிற் செலுத்துதல் இச்செயல் முறையாகும்.

பண் :

பாடல் எண் : 36

மாமறை விழுக்குல மடந்தையர்கள் தம்மில்
தாமுறு மகிழ்ச்சியொடு சாயல்மயி லென்னத்
தூமணி விளக்கொடு சுடர்க்குழைகள் மின்னக்
காமர்திரு மாளிகை கவின்பொலிவு செய்வார்.

பொழிப்புரை :

சிறந்த அந்தணர் குல மங்கையர்கள் தம்மில் கலந்த பெருமகிழ்ச்சியுடன் சாயலையுடைய மயிலைப் போல, தூய அழகு டைய விளக்குகளால் ஒளியுடைய குழை முதலிய அணிகள் மின்ன, அழகான தம் மாளிகையை அழகுபெறச் செய்வார்கள்.

குறிப்புரை :

*********************

பண் :

பாடல் எண் : 37

சுண்ணமொடு தண்மலர் துதைந்ததுகள் வீசி
உண்ணிறை விருப்பினுடன் ஓகையுரை செய்வார்
வெண்முளைய பாலிகைகள் வேதிதொறும் வைப்பார்
புண்ணிய நறும்புனல்கொள் பொற்குடம் நிரைப்பார்.

பொழிப்புரை :

நறுமணப் பொடிகளுடன் குளிர்ந்த மலர்த் தாதுக்களை வீசி உள்ளத்தில் நிறைந்த விருப்பத்துடன் பிள்ளையார் இந்நிலவுலகில் தோன்றியமையை மகிழ்வுடன் எங்கும் உரைப்பர். வெண்மையான முளைப் பாலிகைகளை மேடைதோறும் வைப்பார் கள். மணமுடைய புண்ணியப் புதுநீர் கொண்ட புதுக்குடங்களை நிரல்பட வைப்பர்.

குறிப்புரை :

*********************

பண் :

பாடல் எண் : 38

செம்பொன்முத லானபல தானவினை செய்வார்
நம்பர்அடி யார்அமுது செய்யநலம் உய்ப்பார்
வம்பலர் நறுந்தொடையல் வண்டொடு தொடுப்பார்
நிம்பமுத லானகடி நீடுவினை செய்வார்.

பொழிப்புரை :

செம்பொன் முதலியவற்றை ஈந்து உவப்பார்கள். சிவனடியார்கள் அமுது செய்தற்கு வேண்டும் நலங்கள் பலவற்றை நாடிச் செய்வார்கள். புதிதாய் மலர்ந்த மணமலர் மாலைகளை அவற்றில் மொய்க்கும் வண்டுகளுடன் சேர்த்துக் கட்டுவார்கள். வேம் பின் தழை செருகுதல் முதலான காப்புத் தொழிலைச் செய்வார்கள்.

குறிப்புரை :

வண்டுகள், மலர்களில் அவற்றைத் தொடுக்கும் நிலை யிலும் இருந்தமை, மலர்களிலும் தேனையும் அவற்றில் வதிந்திருக் கும் இருக்கைச் சுவையையும் கருதியாம். அகலகில்லேன் இறையும் என்று அலர் மேல் வதியும் வண்டுகளும் இருக்கும் போலும்! நிம்பம் - வேம்பு: அதன் இலைகளை வீட்டில் செருகுதல் காப்புக் கருதியாம்.

பண் :

பாடல் எண் : 39

ஐயவி யுடன்பல அமைத்தபுகை யாலும்
நெய்யகில் நறுங்குறை நிறைத்தபுகை யாலும்
வெய்யதழல் ஆகுதி விழுப்புகையி னாலும்
தெய்வமணம் நாறவரு செய்தொழில் விளைப்பார்.

பொழிப்புரை :

வெண்கடுகு முதலானவற்றைச் சேர்த்து அமைத்த புகையினாலும், நெய்யுடன் நல்ல மணமுடைய அகில் துண்டுகளால் உண்டாக்கப்பட்ட புகையாலும், விருப்பம் அளிக்கும் வேள்வித் தீயின் சிறந்த புகையாலும் கடவுள் தன்மை கமழ்கின்ற செயலைச் செய் வார்கள்.

குறிப்புரை :

ஐயவி - வெண் சிறுகடுகு, இதன் சாற்றை உடலில் தடவலும், இதன் புகையை நுகர்தலும் தீமை நீங்குதற்கு ஏதுவாம். நெய்யோடு ஐயவி அப்பி ஐதுரைத்து (தி.11 திருமுருகா. வரி 234) `ஐயவிப் புகையும் ஆட்டி\' என வருவனவற்றான் இவ்வழக்கம் பண்டு தொட்டே இருந்தமை புலனாகும்.

பண் :

பாடல் எண் : 40

ஆயபல செய்தொழில்கள் அன்றுமுதல் விண்ணோர்
நாயகன் அருட்பெருமை கூறுநலம் எய்தத்
தூயதிரு மாமறை தொடர்ந்தநடை நூலின்
மேயவிதி ஐயிரு தினத்தினும் விளைத்தார்.

பொழிப்புரை :

அத்தகைய நற்செயல்கள் பலவற்றையும் தேவரின் தலைவரான சிவபெருமான் திருவருளின் பெருமை மிகுமாறு, நன்மை பொருந்த, நான்மறைகளிலும் அவற்றுடன் தொடர்புடைய கற்ப சூத்திரம் முதலிய ஒழுக்க நூல்களிலும் பொருந்திய முறைப்படி, பிள்ளையார் தோன்றிய நாள் முதல் பத்து நாள்களிலும் செய்வித் தார்கள். கு-ரை: வேதங்களின் வழிவந்த ஒழுக்க நூல்களைக் கற்ப சூத்திரம் என்பர்.

குறிப்புரை :

*********************

பண் :

பாடல் எண் : 41

நாமகர ணத்தழகு நாள்பெற நிறுத்திச்
சேமவுத யப்பரிதி யில்திகழ் பிரானைத்
தாமரை மிசைத்தனி முதற்குழவி யென்னத்
தூமணி நிரைத்தணிசெய் தொட்டில்அமர் வித்தார்.

பொழிப்புரை :

பெயர்சூட்டும் அழகிய நல்வினையைப் பிள் ளையார் தோன்றிய நாளிற்கு ஏற்பச் செய்வித்து, உலகிற்கு நலம் செய்யத் தோன்றும் இளஞாயிற்றைப் போலவும், தாமரையில் எழுந் தருளியிருக்கும் தனி முதலாம் முருகப் பெருமானைப் போலவும் விளங்கும் அப்பிள்ளையாரைத் தூய மணிகளை நிரல்பட அழுத்தி அழகு செய்யப்பட்ட தொட்டிலில் இட்டனர்.

குறிப்புரை :

நாள்பெற - தோன்றிய நாளிற்கு (விண்மீன்) ஏற்ப, இவ்வாறு பெயரிடுதல் வழக்கு எனினும் அப்பெயர் இன்னது என அறிதற்கு இயன்றிலது. சேம உதயப் பரிதி - உலகிற்கு நலம் தர எழும் கதிரவன். நலம் - ஒளியும் வெப்பமும். தாமரை மிசைத் தனிக்குழவி - முருகன். `அறுமுக உருவாய்த் தோன்றி அருளொடு சரவணத்தில் வெறிகமழ் கமலப் போதில் வீற்றிருந் தருளினானே\' (கந்த புரா. திருவவ. பா.96) எனவரும் கச்சியப்பர் திருவாக்கும் காண்க.

பண் :

பாடல் எண் : 42

பெருமலை பயந்தகொடி பேணுமுலை யின்பால்
அருமறை குழைத்தமுது செய்தருளு வாரைத்
தரும் இறைவி யார்பரமர் தாள்பரவும் அன்பே
திருமுலை சுரந்தமுது செய்தருளு வித்தார்.

பொழிப்புரை :

மிகப் பெரிய இமயமலையின் அரசன் பெற்ற கொடி போன்ற பார்வதியம்மையார், ஞானத்தை வழங்கியருளும் திருமார்பகத்தில் உளவாய இனிய பாலுடன் கலந்த அரிய சிவஞா னத்தைக் குழைத்து ஊட்டி அமுது செய்தருளவுள்ள அப்பிள்ளை யாரைப் பெற்ற அந்தணர் குல மாதரான பகவதியார், சிவபெரு மானின் திருவடிகளைப் போற்றும் அன்பே தம் திருமார்பகத்தில் பாலாய்ச் சுரக்க, அதனைத் திருவமுது செய்து அருளுமாறு பால் ஊட்டினார்.

குறிப்புரை :

உயிர்களுக்கு ஞானம் வழங்கும் மார்பகமாதலின் `பேணுமுலை\' என்றார். `போகமார்த்த பூண்முலையாள்\' (தி.1 ப.49 பா.1) எனவரும் திருவாக்கும் காண்க.

பண் :

பாடல் எண் : 43

ஆறுலவு செய்யசடை ஐயர்அரு ளாலே
பேறுலகி னுக்கென வரும்பெரி யவர்க்கு
வேறுபல காப்புமிகை என்றவை விரும்பார்
நீறுதிரு நெற்றியில் நிறுத்திநிறை வித்தார்.

பொழிப்புரை :

கங்கையாறு நிலவும் சடையை உடைய சிவ பெருமான் திருவருளால் உலகைக் காத்தற்குரியார் இவராவர் எனத் தோன்றிய பெரியவரான பிள்ளையாருக்கு, மற்றும் பல காப்புகள் மிகையாகும் என, அவை எவற்றையும் விரும்பாதவராய்த் திருநீற்றை அவரின் நெற்றியில் அணிவித்து, அதனையே காப்பாகுமாறு செய்தார் பகவதியார்.

குறிப்புரை :

: `மந்திரமாவது நீறு\', (தி.2 ப.66 பா.1) `ஏலவுடம் பிடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு\' (தி.2 ப.66 பா.9) என இப்பிள்ளையார் பின்னர் அருளி இருப்பதும் காண்க. `குழவி மருங்கினும் கிழவதாகும்\' (தொல். புறத். 29) எனும் நூற்பாவால் பிள்ளைத் தமிழுக்குத் தோற் றுவாய் செய்தது தொல்காப்பியம். அம்மரபு வழிவந்த பிள்ளைத் தமிழும், ஆண்பாற்கென வகுத்த பருவங்கள் பத்தாம். அவற்றுள் ஆசிரியர் ஈண்டுக் குறிப்பன - காப்பு (பா.43), தால் (பா.44), செங் கீரை (பா.45), சப்பாணி (பா.46), வருகை (பா.48), சிறுதேர், சிற்றில் (பா.52) ஆகிய பருவங்களேயாம்.

பண் :

பாடல் எண் : 44

தாயர்திரு மடித்தலத்தும்
தயங்குமணித் தவிசினிலும்
தூயசுடர்த் தொட்டிலினும்
தூங்குமலர்ச் சயனத்தும்
சேயபொருள் திருமறையும்
தீந்தமிழும் சிறக்கவரு
நாயகனைத் தாலாட்டு
நலம்பலபா ராட்டினார்.

பொழிப்புரை :

சிறந்த பொருண்மையைக் கொண்டிருக்கும் மறைகளும், இனிய தமிழும் சிறப்புப் பெற வந்து தோன்றிய தலை வரான அப்பிள்ளையாரை, நற்றாய் முதலியோர் தம் மடியிலும், விளங்கும் மணிகளையுடைய இருக்கைகளிலும், தூய ஒளிவீசும் தொட்டிலிலும், உறங்குதற்கேற்ற மலர்ப் படுக்கையிலும் தாலாட்டுங் கால், அவர் தோன்றலாய் வாய்த்த பல நலங்களையும் எடுத்துப் பாராட்டி மகிழ்ந்தனர்.

குறிப்புரை :

: நற்றாய், செவிலித்தாய், கைத்தாய், பாலூட்டும் தாய், சீராட்டும் தாய் என அழைக்கப் பெறும் ஐவகைத் தாயரும் அடங்கத் `தாயர்\' எனக்கூறினார். ஆட்டுவாள், ஊட்டுவாள், ஓல் உறுத்துவாள், நொடிபயிற்றுவாள் கைத்தாய் எனச் செவிலியர் ஐவர் என்பர் நச்சி னார்க்கினியர்.

பண் :

பாடல் எண் : 45

வருமுறைமைப் பருவத்தின்
வளர்புகலிப் பிள்ளையார்
அருமறைகள் தலையெடுப்ப
ஆண்டதிரு முடியெடுத்துப்
பெருமழுவர் தொண்டல்லால்
பிறிதிசையோம் என்பார்போல்
திருமுகமண் டலமசையச்
செங்கீரை யாடினார்.

பொழிப்புரை :

முறையாக வளர்ந்து வருகின்ற பருவந்தோறும் உரியவாறு வளர்ச்சி பெற்றுவரும் பிள்ளையார், அரிய மறைகள் தலையெடுக்குமாறு தலைமுடியை மேல் எடுத்துப் பெருமழுவைக் கையில் ஏந்திய சிவபெருமானுடைய திருத்தொண்டினை அல்லாது வேறொன்றையும் யாம் காணோம் எனக் காட்டுவார் போல், திருமுகமண்டலம் அசையச் செங்கீரை ஆடியருளினார்.

குறிப்புரை :

குன்றியிருந்த மறைவழக்குகள் மீண்டும் பொலிவு பெறப் பிள்ளையாரின் தோற்றம் காரணமாயிருத்தலின், `அருமறை கள் தலை எடுப்ப\' என்றார். `ஒருதாள் உந்திஎழுந் திருகையும் ஒருங்கு பதித்து நிமிர்ந்து அருள் பொழிதிருமுகம் அசைய அசைந்தினிது ஆடுக செங்கீரை\' (முத்துக். செங்கீரைப். 8) எனவரும் குமரகுருபர அடிக ளின் திருவாக்கால் செங்கீரை ஆடுதலின் இலக்கணம் விளங்கும்.

பண் :

பாடல் எண் : 46

நாமறியோம் பரசமயம்
உலகிலெதிர் நாடாது
போமகல என்றங்கை
தட்டுவதும் புனிதன்பால்
காமருதா ளம்பெறுதற்
கொத்துவதுங் காட்டுவபோல்
தாமரைச்செங் கைகளினால்
சப்பாணி கொட்டினார்.

பொழிப்புரை :

: `யாம் சைவசமயம் அன்றிப் பிற சமயங்களை அறியோம்! ஆதலின் புறச் சமயத்தவர்களே! இவ்வுலகில் எதிர்ப்பட நாடாது அகன்று செல்லுங்கள்\' என்று அழகிய கைகளைக் கொட்டுவதையும் சிவபெருமானிடத்து விருப்பம் மிகும் தாளத்தைப் பெறுவதற்காகக் கைகளை ஒத்துவதையும் காட்டுவன போல், தாமரை போன்ற சிவந்த கைகளால் அப்பிளையார் சப்பாணி கொட்டினார்.

குறிப்புரை :

பாணி - கை: சக - சேர்த்து. கைகள் இரண்டையும் சேர்த்துக் கொட்டுவது சப்பாணி எனப்படும்

பண் :

பாடல் எண் : 47

விதிதவறு படும்வேற்றுச்
சமயங்க ளிடைவிழுந்து
கதிதவழ இருவிசும்பு
நிறைந்தகடி வார்கங்கை
நதிதவழுஞ் சடைமுடியார்
ஞானம்அளித் திடவுரியார்
மதிதவழ்மா ளிகைமுன்றில்
மருங்குதவழ்ந் தருளினார்.

பொழிப்புரை :

இறைவனின் மறைநெறிகளுக்கு மாறுபட்ட புறச் சமயங்கள் வீழ்ந்து நிலை குலையுமாறு, பெரிய வானத்தினின்றும் போந்த பெரிய கங்கையாறு பொருந்திய சடையையுடைய சிவபெரு மான் ஞானம் தந்தருளுதற்குரிய அப்பிள்ளையார், சந்திரன் தவழும் மாளிகையின் முன் பக்கத்தில் தவழ்ந்தருளினார்.

குறிப்புரை :

கதிதவழ்தல் - ஓங்கிநின்ற நிலையிலிருந்து மாறி, கீழே தாழ்ந்து செல்லும் நிலை பெறல். பிறசமயங்கள் தளர்வுற்றுத் தாழப் பிள்ளையார் தவழ்ந் தருளினார்.

பண் :

பாடல் எண் : 48

சூழவரும் பெருஞ்சுற்றத்
தோகையரும் தாதியரும்
காழியர்தஞ் சீராட்டே
கவுணியர்கற் பகமேஎன்
றேழிசையும் பலகலையும்
எவ்வுலகும் தனித்தனியே
வாழவரும் அவர்தம்மை
வருகவரு கெனவழைப்ப.

பொழிப்புரை :

தம்மைச் சூழநிற்கும் அந்தண மகளிரும் தோழியரும் `சீகாழிப் பதியினர் யாவர்க்கும் சிறப்புச் செய்யும் செல் வமே! கவுணிய குலத்தவரின் கற்பகமே!\' எனப் பாராட்டி, ஏழிசையும், மறைகள் முதலான பல கலைகளும், எவ்வுயிர்களும், தனித்தனியே வாழுமாறு வந்து தோன்றிய அப் பிள்ளையாரை `வருக வருக\' என்று அழைக்க,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 49

திருநகையால் அழைத்தவர்தம்
செழுமுகங்கள் மலர்வித்தும்
வருமகிழ்வு தலைசிறப்ப
மற்றவர்மேற் செலவுகைத்தும்
உருகிமனங் கரைந்தலைய
உடன்அணைந்து தழுவியும்முன்
பெருகியஇன் புறஅளித்தார்
பெரும்புகலிப் பிள்ளையார்.

பொழிப்புரை :

காழிப்பிள்ளையார் அங்ஙனம் அழைத்தவரின் செழுமையான முகங்களைத் தம் புன்முறுவலால் மலரச் செய்தும், அதனால் உண்டாகும் மகிழ்ச்சி மேன்மேலும் பெருக, அவர்களின் உடல் மீது பொருந்துமாறு உந்தியும், உள்ளம் உருகிக் கரைந்து நிலை கொள்ளாது இளகும்படி உடன் அணைத்துத் தழுவியும், பெருக் கெடுக்கும் இன்பம் பொருந்துமாறு அளித்தருளினர்.

குறிப்புரை :

முகம் நோக்கல், திருவடியால் உந்தல், மெய் தீண்டல் ஆகியன காண்பார்க்கு மகிழ்ச்சி ஊட்டுவனவாகும். `மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம், மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு\' (குறள், 65) எனவரும் திருவாக்கும் காண்க.

பண் :

பாடல் எண் : 50

வளர்பருவ முறையாண்டு
வருவதன்முன் மலர்வரிவண்
டுளர்கருமென் சுருட்குஞ்சி
உடனலையச் செந்நின்று
கிளர்ஒலிகிண் கிணியெடுப்பக்
கீழ்மைநெறிச் சமயங்கள்
தளர்நடையிட் டறத்தாமும்
தளர்நடையிட் டருளினார்.

பொழிப்புரை :

முற்கூறியவாறு வளரும் பருவங்களின் முறை யாக ஓராண்டு நிறைவதற்குள், மலர்களில் வரிவண்டுகள் ஒலிக்கும் கருமையான மெல்லிய சுருண்ட தலைமயிருடன் அசையச் செம்மை யாக நேர் நின்று விளங்கும் ஒலியைக் கிண்கிணிகள் ஒலிக்கக் கீழான நெறிகளைக் காட்டுகின்ற சமயங்கள் தள்ளாடி ஒழியுமாறு தாமும் தளர்நடை பயின்றருளினார்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 51

தாதியர்தங் கைப்பற்றித்
தளர்நடையின் அசைவொழிந்து
சோதியணி மணிச்சதங்கை
தொடுத்தவடம் புடைசூழ்ந்த
பாதமலர் நிலம்பொருந்தப்
பருவமுறை ஆண்டொன்றின்
மீதணைய நடந்தருளி
விளையாடத் தொடங்கினார்.

பொழிப்புரை :

வளர்ப்புத்தாயரின் கைகளைப் பற்றி நடத்தலால், தளர் நடையின் தளர்ச்சி நீங்கி, ஒளியும் அழகும் கொண்ட மணிகள் இழைத்த சதங்கைகள் கட்டிய வடம் சுற்றிய சிறிய அடிகள் நிலத்திற் பொருந்தும்படி, பருவமுறையில் ஓராண்டு நிறைந்து மேற்செல்ல, பிள்ளையார் நடந்து சென்றருளவும் விளையாடவும் தொடங்கினார்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 52

சிறுமணித்தேர் தொடர்ந்துருட்டிச்
செழுமணற்சிற் றில்கள்இழைக்கும்
நறுநுதற்பே தையர்மருங்கு
நடந்தோடி அடர்ந்தழித்தும்
குறுவியர்ப்புத் துளியரும்பக்
கொழும்பொடியா டியகோல
மறுகிடைப்பே ரொளிபரப்ப
வந்துவளர்ந் தருளினார்.

பொழிப்புரை :

அழகிய சிறுதேரைப் பற்றித் தொடர்ந்து உருட்டிச் செல்ல, செழிய மணலால் சிற்றில் கட்டி விளையாடும் நல்ல நெற்றியை உடைய பேதைப் பெண்களிடத்தில் நடந்தும் ஓடியும் அச்சிற்றில்களை அழித்து விளையாடியும், சிறிய வியர்வைத் துளிகள் உடற்கண் அரும்ப, அதனுடன் திருநீற்றை அணிந்து விளங்கும் திருமேனி அவ்வீதியில் ஒளிபரப்ப வந்து, இவ்வாறாக அவர் வளர்ந்து வரும் நாளில்,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 53

மங்கையோ டுடனாகி
வளர்தோணி வீற்றிருந்த
திங்கள்சேர் சடையார்தம்
திருவருட்குச் செய்தவத்தின்
அங்குரம்போல் வளர்ந்தருளி
அருமறையோ டுலகுய்ய
எங்கள்பிரான் ஈராண்டின்
மேல்ஓராண் டெய்துதலும்.

பொழிப்புரை :

திருநிலை நாயகியாருடன் இருந்து, வளர்ந்து வரும் சீகாழியில் வீற்றிருந்தருளும் மதி நிலவும் சடையையுடைய சிவபெருமானின் திருவருட்பயனுக்குச் செய்யும் தவத்தின் வழித் தோன்றிய முளையைப் போன்று வளர்ந்து, அரிய மறைகளால் உலகம் உய்யுமாறு எம்பெருமானான பிள்ளையாருக்கு இரண்டாண்டின் மேல் ஓராண்டு நிறை வெய்தவும்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 54

நாவாண்ட பலகலையும்
நாமகளும் நலஞ்சிறப்பப்
பூவாண்ட திருமகளும்
புண்ணியமும் பொலிவெய்தச்
சேவாண்ட கொடியவர்தம்
சிரபுரத்துச் சிறுவருக்கு
மூவாண்டில் உலகுய்ய
நிகழ்ந்ததனை மொழிகின்றேன்.

பொழிப்புரை :

திருநிலை நாயகியாருடன் இருந்து, வளர்ந்து வரும் சீகாழியில் வீற்றிருந்தருளும் மதி நிலவும் சடையையுடைய சிவபெருமானின் திருவருட்பயனுக்குச் செய்யும் தவத்தின் வழித் தோன்றிய முளையைப் போன்று வளர்ந்து, அரிய மறைகளால் உலகம் உய்யுமாறு எம்பெருமானான பிள்ளையாருக்கு இரண்டாண்டின் மேல் ஓராண்டு நிறை வெய்தவும்.

குறிப்புரை :

மறை, எழுதாக் கிளவி ஆதலின் `நாவாண்ட பல கலையும்\' என்றார். இம்மூன்று பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 55

பண்டுதிரு வடிமறவாப்
பான்மையோர் தமைப்பரமர்
மண்டுதவ மறைக்குலத்தோர்
வழிபாட்டின் அளித்தருளத்
தொண்டின்நிலை தரவருவார்
தொடர்ந்தபிரி வுணர்வொருகால்
கொண்டெழலும் வெருக்கொண்டாற்
போல்அழுவார் குறிப்பயலாய்.

பொழிப்புரை :

முன்னைய நிலையில் திருவடியை மறவாத பாங்கு உடையவரை, மிகுதவத்தோராய சிவபாத இருதயருக்கு இறைவன் தந்தருளினாராக, அதன்வழி வாய்த்த திருத்தொண்டின் நிலையை உலகத்துக்கு அருள்வதற்கெனத் தோன்றிய அப்பிள்ளை யார், சிவபெருமானையே தொடர்ந்து நின்ற நிலை நீங்காது இருந்தமையின், பிரிந்து போந்த பிரிவுணர்வு ஓரொருகால் எழ, அதனால் அச்சம் கொண்டவரைப் போல் அயலான ஒரு குறிப்புடன் அழுவார்.

குறிப்புரை :

`.................திருந்தடி மறக்குமா றிலாதவென்னை, மையல்செய்திம் மண்ணின்மேல் பிறக்குமாறு காட்டினாய் பிணிப்படு முடம்புவிட் டிறக்குமாறு காட்டினாய்க் கிழுக்குகின்ற தென்னையே\' (தி.2 ப.98 பா.5) எனவரும் பிள்ளையார் திருவாக்கு இவ்வரலாற்றிற்கு அகச்சான்றாய் அமைந்துள்ளது. வெருக்கொள்ளுதல் - விரைந்து தோன்றி மறைவ தொரு அச்சக்குறிப்பு.

பண் :

பாடல் எண் : 56

மேதகைய இந்நாளில்
வேறொருநாள் வேதவிதி
நீதிமுறைச் சடங்குநெறி
முடிப்பதற்கு நீராடத்
தாதையார் போம்பொழுது
தம்பெருமான் அருள்கூடச்
சோதிமணி மனைமுன்றில்
தொடர்ந்தழுது பின்சென்றார்.

பொழிப்புரை :

மேதக்க நிலையில் வளர்ந்து வரும் இந்நாள்களில் ஒருநாள், மறைவழிப்பட்ட நெறியில் செயத்தகும் காலை வழிபாடு களை முடிப்பதற்காக முதலில் நீராடும் பொருட்டுத் தந்தையார் புறப்படும் பொழுது, தம் பெருமானின் அருள்கூடப் பெறுதலால், திருமனையின் ஒளியும் அழகும் உடைய முன்றிலில், பிள்ளையார் தாமும் தந்தையாரைத் தொடர்ந்து அழுதவாறு பின்சென்றார்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 57

பின்சென்ற பிள்ளையார்
தமைநோக்கிப் பெருந்தவத்தோர்
முன்செல்கை தனையொழிந்து
முனிவார்போல் விலக்குதலும்
மின்செய்பொலங் கிண்கிணிக்கால்
கொட்டியவர் மீளாமை
உன்செய்கை இதுவாகில்
போதுஎன்றுஅங் குடன்சென்றார்.

பொழிப்புரை :

தம் பின் தொடர்ந்து வந்த பிள்ளையாரைத் தந்தையாரான சிவபாத இருதயர் பார்த்து, தாம் மேற் செல்வதை நிறுத்திச் சினம் கொண்டவர் போல் காட்டி, தம் பின் வருவதை விலக்கவும், ஒளி மிக்க பொன்னால் ஆய சிறு கிண்கிணிகள் அணிந்த திருவடிகளை நிலத்தில் கொட்டி, மீளாது நிற்க, `உன் செயல் இதுவானால், வருக\' எனக் கூறித் தம்முடனே அழைத்துச் சென்றார்.

குறிப்புரை :

தம் இச்சையில் விடாது பற்றி நிற்கும் ஞானக் குழந்தை, தன் செயலை மிகு அன்புடன் (செல்லமாகத்) தெரிவித்துக்கொள்ளும் நிலை இதுவாகும்.

பண் :

பாடல் எண் : 58

கடையுகத்தில் தனிவெள்ளம்
பலவிரிக்குங் கருப்பம்போல்
இடையறாப் பெருந்தீர்த்தம்
எவற்றினுக்கும் பிறப்பிடமாய்
விடையுயர்த்தார் திருத்தோணிப்
பற்றுவிடா மேன்மையதாம்
தடமதனில் துறையணைந்தார்
தருமத்தின் தலைநின்றார்.

பொழிப்புரை :

அறநெறியில் சிறந்த சிவபாத இருதயர், ஊழி முடிவில் தோன்றும் பெரு வெள்ளங்கள் பலவற்றையும் தன்னிடத்தில் இருந்து விரியுமாறு தோற்றுவிக்கும் கருப்பம் போல், இடையறாது நிற்கும் பெரிய புனித நீர் நிலைகள் எல்லாவற்றுக்கும் பிறப்பிடமாய், ஆனேற்றுக் கொடியை உயர்த்தியருளிய சிவபெருமான் எழுந்தருளி யிருக்கும் திருத்தோணிபுரத்தின் தொடர்ச்சியை நீங்காத மேலான நீர்நிலையின் துறையை அடைந்தார்.

குறிப்புரை :

நீர் அளவாக இருக்கும் பொழுது அக்குளத்தின் அளவில் நின்று திருத்தோணிபுரத்தைச் சார்ந்தும், ஊழிமுடிவில் நீர் பெருகிய பொழுது அத்தோணிபுரம் தன்மேல் மிதக்க அதனோடு இயைந்தும் நிற்றலின், திருத்தோணி பற்றுவிடாது அக்குளம் அமைந்தி ருப்பதாயிற்று.

பண் :

பாடல் எண் : 59

பிள்ளையார் தமைக்கரையில்
வைத்துத்தாம் பிரிவஞ்சித்
தெள்ளுநீர்ப் புகமாட்டார்
தேவியொடுந் திருத்தோணி
வள்ளலார் இருந்தாரை
எதிர்வணங்கி மணிவாவி
உள்ளிழிந்து புனல்புக்கார்
உலகுய்ய மகப்பெற்றார்.

பொழிப்புரை :

உலகுய்ய மகப்பெற்ற சிவபாத இருதயர் பிள்ளை யாரை அப்புனித நீர்க்கரையில் இருக்கச்செய்து, தாம் பிரிவதற்கு அஞ்சி, தெளியும் நீரில் நீராடமாட்டாதவராகிப் பின் திருநிலைநாயகி உடனாய திருத்தோணிபுரத்தில் வீற்றிருக்கும் வள்ளலாரை முன் நின்று வணங்கிப் பின்பு அக்குளத்தில் இறங்கி நீராடச் சென்றார்.

குறிப்புரை :

பிள்ளையாரைக் கரையில் இருக்கச் செய்து தாம் நீரா டற்குச் செல்ல ஒருப்படாத சிவபாத இருதயர், பின் அம்மையப் பராகிய தோணியப்பரை வணங்கி நீராடப்புகுந்தார். இந்நிலை, உடல் தந்தையாம் தம் பொறுப்பினின்றும் நீங்க, உயிர்த் தந்தையாம் தோணியப்பரின் திருவருளில் அப்பிள்ளையார் திளைத்தும் உய்ந்தும் அருள்பெற இருக்கும் பாங்கைக் குறிப்பால் உணர்த்தும் தகையதாய் உள்ளது.

பண் :

பாடல் எண் : 60

நீராடித் தருப்பித்து
நியமங்கள் பலசெய்வார்
சீராடும் திருமகனார்
காண்பதன்முன் செய்ததற்பின்
ஆராத விருப்பினால்
அகமருடம் படியநீர்
பேராது மூழ்கினார்
பெருங்காவல் பெற்றாராய்.

பொழிப்புரை :

நீரில் ஆடித் தருப்பணம் செய்து, பின் மறைவழிச் செயத்தகும் செயல்கள் பலவற்றையும் செய்பவரான சிவபாத இருதயர், பலரும் பாராட்டவுள்ள மகனார் தம்மைத் தேடிக் காண்பதற்கு முன்னம் அச்செயல்களை யெல்லாம் செய்து முடித்துப் பின், தம் மகனாருக்குத் தம்மை விடப் பெரிய காவல் பெற்றாராகி, அடங்காத விருப்பத்தால் அதன்பின் அகமருட ஸ்நாநம் செய்யும் பொருட்டுத் தாம் நின்ற இடத்தினின்றும் அடிபெயராது நீருள் மூழ்கினார்.

குறிப்புரை :

அகமருடம் - பாவத்தைக் கெடுப்பது. இருக்கு வேதத்துள் தொண்ணூறாவது சூக்தம் அகமருட சூக்தமாகும். நீரில் நின்று இதனை மும்முறை கூறி மூழ்குதல் நியமமாகும். தாம் நீராடி வரும்வரை பிள்ளையாரைக் காப்பதற்குத் தம்மினும் மேலான காப்பான திருவருள் துணையே துணையாயிருத்தலின், சிறிதும் தளர்வின்றி, அச்செயற்பாட்டினைச் செய்பவரானார்.

பண் :

பாடல் எண் : 61

மறைமுனிவர் மூழ்குதலும்
மற்றவர்தம் மைக்காணா
திறைதரியார் எனும்நிலைமை
தலைக்கீடா ஈசர்கழல்
முறைபுரிந்த முன்னுணர்வு
மூளஅழத் தொடங்கினார்
நிறைபுனல்வா விக்கரையில்
நின்றருளும் பிள்ளையார்.

பொழிப்புரை :

மறை முனிவராய சிவபாத இருதயர் நீருள் முழுகவும், அவரைக் கண்ணால் காணாமையால் சிறிது பொழுதும் தரித்திருக்க மாட்டார் என்ற காரணத்தைக் காட்டி, சிவபெருமானின் திருவடிகளை முறையாக இடைவிடாமல் எண்ணியிருந்த முன் நினைவு எழுந்ததால், நிறைந்த நீரையுடைய பொய்கைக் கரையில் நின்றிருந்த பிள்ளையார் அழத் தொடங்கினார்.

குறிப்புரை :

தலைக்கீடு - காரணமாக.

பண் :

பாடல் எண் : 62

கண்மலர்கள் நீர்ததும்பக்
கைம்மலர்க ளாற்பிசைந்து
வண்ணமலர்ச் செங்கனிவாய்
மணியதரம் புடைதுடிப்ப
எண்ணில்மறை ஒலிபெருக
எவ்வுயிரும் குதூகலிப்பப்
புண்ணியக்கன் றனையவர்தாம்
பொருமிஅழு தருளினார்.

பொழிப்புரை :

கண்களாகிய மலர்களிலிருந்து நீர் வெளிப்படக் கைம்மலர்களால் அவற்றைப் பிசைந்து, அழகிய தாமரை மலரும் சிவந்த கொவ்வைக் கனி போன்ற திருவாயில் அழகிய உதடுகள் துடிக்க, எண்ணில்லாத மறைகளின் ஒலி பெருகவும், எல்லா உயிர் களும் களிப்படையவும், புண்ணியக் கன்றைப் போன்ற பிள்ளையார் பொருமி அழலானார்.

குறிப்புரை :

மணிஅதரம் - அழகிய உதடுகள்.

பண் :

பாடல் எண் : 63

மெய்ம்மேற்கண் துளிபனிப்ப
வேறெங்கும் பார்த்தழுவார்
தம்மேலைச் சார்புணர்ந்தோ
சாரும்பிள் ளைமைதானோ
செம்மேனி வெண்ணீற்றார்
திருத்தோணிச் சிகரம்பார்த்து
அம்மேஅப் பாஎன்றென்று
அழைத்தருளி அழுதருள.

பொழிப்புரை :

தம் திருமேனியின் மீது கண்ணீர்த் துளிகள் வீழ, தம்மைச் சூழவுள்ள இடங்களை யெல்லாம் பார்த்து அழும் பிள்ளை யார், தம் முன்னைச் சார்பை உணர்ந்தமையாலோ அல்லது அது பொழுது இருந்த பிள்ளைமைச் சார்பாலோ, அறியோம். செம்மேனி யில் வெண்ணீற்றையுடைய சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருத் தோணிபுரத்தின் சிகரத்தைப் பார்த்து `அம்மே! அப்பா!\' என்று அழுத ருளியவாறே அழைத்தருளினாராக,

குறிப்புரை :

மேலைச் சார்பு - முன்னைய தொடர்பு. மறக்குமாறு இலாதிருந்த உணர்வு: `சார்புணர்ந்து சார்புகெட ஒழுகின்\' (குறள், 359) என வரும் திருமறையும் காண்க, பாடல் 55ஐயும் காண்க. திருத் தோணிபுரச் சிகரம் - தோணிபுரக் கோயிலின் உச்சி. தோணிபுரத் தின்கண் வீற்றிருக்கும் சிகரம் என்றலுமாம். சிகரம் - சிவபெருமான்: திருவைந்தெழுத்துள் சிகரம் சிவபெருமானைக் குறிக்குமாற்றான் இவ்வாறு பொருள் கோடலுமொன்று. அழைத்தருளி அழுதருள என ஈரிடத்தும் அருள எனும் சொற் பெய்தார்: உயிர்களனைத்தும் இறை வனை நோக்கி அழவும் வேண்டும், அழைக்கவும் வேண்டும் என்பதை அருளுரையாகக் கோடற்கு. `அழுகேன் நின்பால்\', `ஆரூரா என் றென்றே அலறா நில்லே\' (தி.6 ப.31 பா.3,) எனவரும் திருவாக்கு களையும் காண்க.

பண் :

பாடல் எண் : 64

அந்நிலையில் திருத்தோணி
வீற்றிருந்தார் அருள்நோக்கால்
முன்நிலைமைத் திருத்தொண்டு
முன்னியவர்க் கருள்புரிவான்
பொன்மலைவல் லியுந்தாமும்
பொருவிடைமே லெழுந்தருளிச்
சென்னியிளம் பிறைதிகழச்
செழும்பொய்கை மருங்கணைந்தார்.

பொழிப்புரை :

அதுபொழுது திருத்தோணியில் வீற்றிருக்கும் சிவபெருமான் அருள் நோக்கம் செய்தலால், முன்னைநிலையை நினைந்த அவருக்கு அருள்செய்யும் பொருட்டாக, பொன்மலை வல்லியான திருநிலைநாயகி அம்மையாரும் தாமும், பொருந்துதற் குரிய விடையின் மேல் இவர்ந்தருளி, தலையில் சூடிய இளம்பிறை விளங்கித் தோன்ற, செழுமையான அப்பொய்கையின் அருகில் அடைந்தருளினார்.

குறிப்புரை :

இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 65

திருமறைநூல் வேதியர்க்கும்
தேவியர்க்கும் தாங்கொடுத்த
பெருகுவரம் நினைந்தோதான்
தம்பெருமைக் கழல்பேணும்
ஒருநெறியில் வருஞானங்
கொடுப்பதனுக் குடனிருந்த
அருமறையா ளுடையவளை
அளித்தருள அருள்செய்வார்.

பொழிப்புரை :

நான்மறைகளில் வல்ல அந்தணரான சிவபாத இருதயருக்கும் அவருடைய மனைவியாரான பகவதியாருக்கும், தாம் முன் வழங்கியருளிய பெருவரத்தை நிறைவு செய்ய எண்ணியதனால் போலும், தம் பெருமையுடைய திருவடிகளையே போற்றுகின்ற ஒருமையான நெறியில் நிற்க வரும் சிவஞானத்தைக் கொடுப்பதற் காகத் தம்முடன் இருந்த, அரிய மறைகளையே தம் வடிவமாகக் கொண்டு உயிர்களை ஆட்கொண்டருளுகின்ற ஞான முதல்வியா ரான திருநிலை நாயகி அம்மையாரை அளித்தருளுமாறு அருள் செய்வாராகி,

குறிப்புரை :

முன்வரம் அருளியது 19, 20ஆவது பாடல்களில் காண்க. ஒருநெறியில் வருஞானம் - இறைவனை ஒரு நெறிய மனத்துடன் வழிபட்டதால் வரும் ஞானம், `ஒரு நெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன்\' (தி.1 ப.1 பா.11) எனப் பிள்ளையார் தாமே அருளி இருப்பதும் காண்க. மறைவடிவு கொள்ளுதலும் உயிர்களை ஆட் கொள்ளுதலும் இறைவன் தன் அருள் வயத்தாலாம். அவ்வருளே அம்மையாதலின் `அருமறை யாளுடையவளை\' என்றார். `பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை\' (தி.8 ப.7 பா.14) `அவளால் வந்த ஆக்கம்இவ் வாழ்க்கை யெல்லாம்\' (சித்தி யார், சுப. முதற்சூத்.69) எனவரும் திருவாக்குகளையும் காண்க.

பண் :

பாடல் எண் : 66

அழுகின்ற பிள்ளையார்
தமைநோக்கி அருட்கருணை
எழுகின்ற திருவுள்ளத்
திறையவர்தாம் எவ்வுலகும்
தொழுகின்ற மலைக்கொடியைப்
பார்த்தருளித் துணைமுலைகள்
பொழிகின்ற பாலடிசில்
பொன்வள்ளத் தூட்டென்ன.

பொழிப்புரை :

அழுகின்ற பிள்ளையாரைப் பார்த்து, திருவருட் கருணை பொழியும் உள்ளம் கொண்டவராய சிவபெருமான், எவ்வு லகும் தொழநிற்கும் கொடிபோன்ற திருநிலைநாயகி அம்மையாரைப் பார்த்தருளி, `இரு மார்பகங்களிலிருந்தும் பொழியும் பாலைப் பொற் கிண்ணத்தில் ஏற்று இப் பிள்ளைக்கு ஊட்டுக!\' என்று அருளிச் செய்ய,

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 67

ஆரணமும் உலகேழும்
ஈன்றருளி அனைத்தினுக்கும்
காரணமாய் வளம்பெருகு
கருணைதிரு வடிவான
சீரணங்கு சிவபெருமான்
அருளுதலும் சென்றணைந்து
வாரிணங்கு திருமுலைப்பால்
வள்ளத்துக் கறந்தருளி.

பொழிப்புரை :

மேற் சொன்னவாறு பெருமான் கூறியருளவும், மறைகளையும் ஏழுலகங்களையும் பெற்றருளி எப்பொருளுக்கும் மூலகாரணமாய் நிற்பவரும், வளம் பெருகும் கருணையே தம் வடி வமாய்க் கொண்டவருமான சிறப்புடைய திருநிலை நாயகி அம்மை யார், பிள்ளையார் அருகில் சென்று, கச்சணிந்த தம் திருமுலைப் பாலைப் பொற்கிண்ணத்தில் கறந்தருளி,

குறிப்புரை :

அம்மையார் உண்ணா முலையார் ஆதலின், `பாலடி சில் பொன் வள்ளத் தூட்டென்ன\' இறைவனும் அருள் செய்தார்; அம்மையாரும் அவ்வாறே செய்தருளினார்.

பண் :

பாடல் எண் : 68

எண்ணரிய சிவஞானத்
தின்னமுதம் குழைத்தருளி
உண்ணடிசில் எனவூட்ட
உமையம்மை எதிர்நோக்கும்
கண்மலர்நீர் துடைத்தருளிக்
கையிற்பொற் கிண்ணமளித்
தண்ணலைஅங் கழுகைதீர்த்
தங்கணனார் அருள்புரிந்தார்.

பொழிப்புரை :

திருநிலை நாயகி அம்மையார், நினைத்தற்கு அரிய சிவஞானமாய இனிய அமுதத்தைப் பாலுடனே குழைத்தருளி, தம்மை நோக்கி நிற்கும் பிள்ளையாரின் கண்ணீரைத் துடைத்தருளி, `பாலமுதத்தை உண்பாயாக!\' என்று உண்ணச் செய்ய, பெருமை யுடைய பிள்ளையாரை அங்கு அழுகை தீர்த்துச் சிவபெருமான் அருள் செய்தார்.

குறிப்புரை :

`போதையார் பொற்கிண்ணத்து அடிசில்\' (தி.3 ப.24 பா.2) எனப் பிள்ளையாரும்; `ஞான போனகம் அருளட்டிக் குழைத்த\' (தி.11 ப.27 பா.1 வரி 26) எனப் பட்டினத்து அடிகளும், `பொற்கிண் ணத்தின் ஞான வமிர்தளித்த\' (தி.11 ப.34 பா.73) என நம்பியாண்டார் நம்பிகளும் அருளிய திருவாக்குகள் இவ்வரலாற்றிற்கு அரணா கின்றன. இந்நான்கு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 69

யாவருக்குந் தந்தைதாய்
எனுமிவர்இப் படியளித்தார்
ஆவதனா லாளுடைய
பிள்ளையா ராய்அகில
தேவருக்கும் முனிவருக்குந்
தெரிவரிய பொருளாகும்
தாவில்தனிச் சிவஞான
சம்பந்த ராயினார்.

பொழிப்புரை :

எவ்வுயிர்க்கும் தந்தையும் தாயுமாக விளங்கும் அம்மையப்பர் வெளிப்பட்டுத் தாமே இவ்வாறு அளித்தமையின், `ஆளுடைய பிள்ளையார்\' என்னும் திருப்பெயரை உடையவராகி தேவர்கள் முனிவர்கள் முதலிய யாவரும் தெளிந்து அறிய இயலாத, மெய்ப் பொருளாகிய, எக்காலத்தும் கெடுதல் இல்லாத, ஒப்பில்லாத சிவத்தை உணரும் நிலையாய சிவஞானத்தை உணர்ந்து வாழும் அருள் பெற்றவராய நிலையில், சிவஞானசம்பந்தர் என்ற திருப் பெயரை உடையவராயினார்.

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 70

சிவனடியே சிந்திக்குந்
திருப்பெருகு சிவஞானம்
பவமதனை யறமாற்றும்
பாங்கினில்ஓங் கியஞானம்
உவமையிலாக் கலைஞானம்
உணர்வரிய மெய்ஞ்ஞானம்
தவமுதல்வர் சம்பந்தர்
தாம்உணர்ந்தார் அந்நிலையில்.

பொழிப்புரை :

சிவபெருமான் திருவடிகளைச் சிந்தித்து நிற்குமாற்றான் சிவமாந்தன்மை பெருகச் செய்யும் ஒப்பில்லாத கலை ஞானத்தையும், பிறவிக்குக் காரணமாய மலக்குற்றத்தை வாராமல் தடுக்கும் மேலாய ஞானமான உணர்வரிய மெய்ஞ்ஞானத்தையும் தவ முதல்வரான சிவஞானசம்பந்தர் அந்நிலையில் உணர்ந்தார்.

குறிப்புரை :

சிவத்தைப் பெறவும் பவத்தை விடவும் பெறுவதே ஞானமாகும். சிவபரம்பொருளே மேலாய பொருள் என்றுணரவும் அதனோடு இடையீடின்றி ஒன்றுபட்டு நிற்கவும் கலைஞானம் துணைபுரிவதாகும். ஆதலின் சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானத்தை உவமையிலாக் கலைஞானம் என்றார். உலகியல் அறிவையுணர்த்தும் நூல்களினும் மெய்ப்பொருளையுணர்த்தும் நூல்கள் உயர்வும் சிறப்பும் உடையவாதலின் அவற்றை `உவமை யிலாக் கலைஞானம்\' என்றார்.
பிறவிப் பிணியை அறுத்தற்குரிய மெய்யுணர்வு இருப்பினும் அதனை விடுதற்குக் காலம் வேண்டும். பழக்கம் தவிரப் பழகுதல் அத்துணை எளிதன்று. ஆதலின் `அறமாற்றும்\' என்ற தொடரால் குறித்துக் காட்டினார். ஆதலின், இதனை `உணர்வரிய மெய்ஞ்ஞா னம்\' என்றார். இவ்வாறு நிரல் நிரையாகக் கொண்டு உரைசெய்தற்கு,
மேவரு ஞானம் இரண்டவற் றொன்று விமலனார் பாததா மரையே ஓவறு மன்பின் உணர்திரு வளிக்கும் ஒப்பிலா உயர்கலை ஞானம் தாவரும் பவத்தை வேரொடுங் களையும் தக்கமெய்ஞ் ஞானமொன் றிவற்றால் சாவதும் பிறப்புந் தணப்புறச் சிவத்தைச் சார்ந்தது வாய்நிற்றல் யோகம். -திருத்தணிகைப் புராணம், பா - 353 எனவரும் பாடல் துணை செய்கின்றது.

பண் :

பாடல் எண் : 71

எப்பொருளும் ஆக்குவான்
ஈசநே எனுமுணர்வும்
அப்பொருள்தான் ஆளுடையார்
அடியார்கள் எனுமறிவும்
இப்படியா லிதுவன்றித்
தம்மிசைவு கொண்டியலும்
துப்புரவில் லார்துணிவு
துகளாகச் சூழந்தெழுந்தார்.

பொழிப்புரை :

எப்பொருள்களையும் இயக்குபவன் ஈசனே என் னும் உணர்வும், அப்பொருளாவது ஆளுடையாரும் அவருடைய அடியார்களும் ஆவர் என்ற அறிவும் இன்றித் தத்தம் அறிவிற்கு ஏற்றவாறு எண்ணி இயல்கின்ற தூய்மையில்லாதவரின் துணிவுகளை எல்லாம் தூளாகுமாறு எண்ணி எழுந்தார்.

குறிப்புரை :

இப்பாடற்கண் குறித்த உணர்வும் அறிவும் முன்னைய பாடலில் முதற்கண் குறிக்கப்பட்ட இருவகை ஞானங்களின் பயனாய், முறையே விளைவனவாம். எப்பொருளும் என்பதால் உயிரும் தளைகளும், ஆக்குவான் ஈசனே என்பதால் இறையும் ஆகிய முப்பொருள்களும் குறிக்கப் பட்டன. ஆக்குதல் - உயிரைப்பற்றிய மலம் முதலிய குற்றங்களைப் படைத்தல் முதலிய ஐந்தொழில்களானும் நீக்கிச் சிவப்பேறும் நல்வாழ்வும் பெறச் செய்தலாம். அப்பொருள்தாம் எனும் அறிவு, `மால்அற நேயமும் மலிந்தவர் வேடமும் ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே\' (சிவஞானபோதம், சூ.12) என்னும் ஞானநூல் கூற்றான் அறியலாம். இவ்வுணர்வும் அறிவுமே சிவஞானபோதத்தின் பயனியலில் குறிக்கப் பெற்றுள்ளன. சிவப்பேற்றையடையும் பேரு ணர்வு 11ஆவது நூற்பாவிலும், மலநீக்கமாம் பயன் 10, 12ஆம் நூற் பாக்களிலும் குறிக்கப் பெறுகின்றன.

பண் :

பாடல் எண் : 72

சீர்மறையோர் சிவபாத
இருதயரும் சிறுபொழுதில்
நீர்மருவித் தாஞ்செய்யும்
நியமங்கள் முடித்தேறிப்
பேருணர்விற் பொலிகின்ற
பிள்ளையார் தமைநோக்கி
யார்அளித்த பாலடிசில்
உண்டதுநீ எனவெகுளா.

பொழிப்புரை :

சிறப்புடைய சிவபாத இருதயரும் சிறிது நேரத்தில் நீராடித் தாம் செய்யும் கடமைகளை எல்லாம் முடித்துக் கொண்டு, கரையில் ஏறிப் பேருணர்வில் விளங்கும் தம் மகனாரைப் பார்த்து `நீ யார் தந்த பாலை உண்டாய்\' எனச் சினக்க,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 73

எச்சில்மயங் கிடவுனக்கீ
திட்டாரைக் காட்டென்று
கைச்சிறியது ஒருமாறு
கொண்டோச்சக் காலெடுத்தே
அச்சிறிய பெருந்தகையார்
ஆனந்தக் கண்துளிபெய்
துச்சியின் மேல் எடுத்தருளும்
ஒருதிருக்கை விரற்சுட்டி.

பொழிப்புரை :

`எச்சில் உண்டாக உனக்கு இதை அளித்தவரை எனக்குக் காட்டு\' எனச் சிவபாத இருதயர் உரைத்துச் சிறிய ஒரு கோலைக் கையில் எடுத்து அடிப்பவரைப் போல் ஓச்சிட, அச்சிறிய பெருந்தகையாரான பிள்ளையாரும், ஒருகாலை எடுத்து நின்று கண்களினின்றும் இன்பவெள்ளம் பொழிய உச்சிமேல் தூக்கிய திருக்கையில் ஒருவிரலால் சுட்டிக் காட்டி,

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 74

விண்ணிறைந்த பெருகொளியால்
விளங்குமழ விடைமேலே
பண்ணிறைந்த அருமறைகள்
பணிந்தேத்தப் பாவையுடன்
எண்ணிறைந்த கருணையினால்
நின்றாரை எதிர்காட்டி
உண்ணிறைந்து பொழிந்தெழுந்த
உயர்ஞானத் திருமொழியால்.

பொழிப்புரை :

விண்ணில் நிறைந்து பெருகும் ஞானஒளி கொண்டு, ஆனேற்றின்மீது, பண்சுமந்த அரிய மறைகள் வணங்கிப் போற்ற, உமையம்மையாருடன் எண்ணிறந்த கருணைப் பெருக்கால் எழுந்தருளி நிற்கும் திருத்தோணிபுரத்து இறைவரை எதிரே காட்டி, உள் நிறைந்து தேக்கி மேல் எழுந்து பொழிந்த சிவஞானத் திருவாக் கினால்,

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 75

எல்லையிலா மறைமுதல்மெய்
யுடன்எடுத்த எழுதுமறை
மல்லல்நெடுந் தமிழாலிம்
மாநிலத்தோர்க் குரைசிறப்பப்
பல்லுயிருங் களிகூரத்
தம்பாடல் பரமர்பால்
செல்லுமுறை பெறுவதற்குத்
திருச்செவியைச் சிறப்பித்து.

பொழிப்புரை :

எண்ணிறந்த மறைகளின் முதல் எழுத்தை மெய்யுடனே தொடங்கி எழுதும் மறையை, வளம் வாய்ந்த நெடுந் தமிழால் இப்பேருலகில் உள்ளவர்க்கு உரை சிறந்து பயனளிக்க, பல உயிர்களும் இன்பம் அடைய, தம் திருப்பாடல் இறைவரிடம் செல்கின்ற வகையைப் பெறும் பொருட்டாய்த் திருச்செவியைச் சிறப்பித்து,

குறிப்புரை :

மறைமுதல் - ஓங்காரம். மெய் - த் என்னும் மெய்; சிவசக்தியின் உண்மைநிலை. இது காயத்திரி மந்திரங்களின் இறுதி எழுத்தாகவும், சாந்தோக்கியம் முதலிய உபநிடதங்களில் பிரமப் பொருளைக் குறிக்கும் சொல்லாகவும் அமைந்துள்ளது. சத் என்பதன் இறுதி மெய்யாகிய `த்\' என்பது சிவமூலம் என வாயு சங்கிதை குறிக்கும் என்பர். த் + ஓ = தோ என்பதாகும். மல்லல் - வளம்; உயிர் உய்திபெறுதற்குரிய வளம். `தோடுடைய செவியன்\' எனச் சிறப்பித் தது பிள்ளையார் தம் திருப்பாடலை ஏற்கும் இறைவனின் உடற்கருவி யாய செவியாய் இருத்தல் பற்றியாம் என்பது ஆசிரியர் தரும் விளக்க மாகும். `திருவுலாப் புறம் பாடினேன்; திருச்செவிசாத் திடப் பெறல் வேண்டும்\' (தி.12 சரு.13 பா.47) எனவரும் திருவாக்கும் காண்க.

பண் :

பாடல் எண் : 76

செம்மைபெற எடுத்ததிருத்
தோடுடைய செவியன்எனும்
மெய்ம்மைமொழித் திருப்பதிகம்
பிரமபுரம் மேவினார்
தம்மையடை யாளங்க
ளுடன்சாற்றித் தாதையார்க்
கெம்மையிது செய்தபிரான்
இவனன்றே எனவிசைத்தார்.

பொழிப்புரை :

செம்மை பொருந்தும்படி தொடங்கிய, `தோடு டைய செவியன்\' என்ற மெய்ம் மொழியான திருப்பதிகத்தில், திருப் பிரமபுரத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை அடையா ளங்களுடன் சொல்லி `எம்மை இது செய்தவன் இப்பெருமான் அன்றே\' (தி.1 ப.1) என்று தந்தையாருக்குக் கூறியருளினார்.

குறிப்புரை :

அடையாளங்கள் - தோடுடைய செவியன், விடை யேறி, மதிசூடி, பொடிபூசி என்பனவாம். திருமுறைகளில் மூத்த திருப்பதிகம் எனக் காரைக்கால் அம்மையாரால் அருளப்பெற்ற `கொங்கை திரங்கி\' (தி.11 மூத்த.1) எனும் பதிகம் நட்டபாடைப் பண்ணில் அமைந்தது போல, சிவஞானசம்பந்தரின் இம்முதற்பதிகமும் நட்டபாடைப் பண்ணில் அமைந்தது திருவருட் செயலாகும். இவ்வைந்து பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 77

மண்ணுலகில் வாழ்வார்கள்
பிழைத்தாலும் வந்தடையின்
கண்ணுதலான் பெருங்கருணை
கைக்கொள்ளும் எனக்காட்ட
எண்ணமிலா வல்லரக்கன்
எடுத்துமுறிந் திசைபாட
அண்ணலவற் கருள்புரிந்த
ஆக்கப்பா டருள்செய்தார்.

பொழிப்புரை :

இம்மண்ணுலகத்தில் வாழும் உயிர்கள் பிழையைச் செய்தாலும், அவை தம்மை வந்து அடையின் நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமான் தம் பெருங்கருணையினால் அவற்றை மன்னித்தருளிக் கைகொடுத்து ஆள்வார் என்பதைக் காட்டவே, நல்லுணர்வு இல்லாதவன் ஆன வன்கண்மையுடைய அரக்கனான இராவணன் திருக்கயிலை மலையை எடுக்க, உடல் முறிவுபட்டுப் பின் இசையைப் பாடப் பெருமையுடைய இறைவர் அவனுக்கும் அருள்செய்த ஆக்கப்பாடுகளை அந்தத் திருப்பதிகத்துள் வைத்துப் பாடினார்.

குறிப்புரை :

பதிகந்தொறும் வரும் எட்டாவது பாடலில் இறைவன் இராவணனுக்குச் செய்த அருளிப்பாட்டைக் குறிப்பிடுவர் பிள்ளை யார். இதற்குக் காரணம் தவறு செய்த உயிர்கள் உண்மையிலேயே அத்தவறை உணர்ந்து, தவறு செய்தமைக்குப் பொறுத்தற்கும், இனித் தவறு செய்யாமைக்கு உறுதிப்பாடும் கொண்டு இறைவனை உள்ளன் போடு வேண்டின், இறைவன் மன்னித்தருளுவன் என்பதை நன்குணர் வாம். எனவே பாவமன்னிப்பு என்பது நம் நெறிக்கு இன்று நேற்றன்று தோற்றமில் காலத்தேயே உண்டு எனினும், பிறபிற மதம் போல அத்துணை எளிமையுடையதன்று. `எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று\' (குறள், 655) என்பதே நம் அறமாம்.

பண் :

பாடல் எண் : 78

தொழுவார்க்கே அருளுவது
சிவபெருமான் எனத்தொழார்
வழுவான மனத்தாலே
மாலாய மாலயனும்
இழிவாகுங் கருவிலங்கும்
பறவையுமாய் எய்தாமை
விழுவார்கள் அஞ்செழுத்தும்
துதித்துய்ந்த படிவிரித்தார்.

பொழிப்புரை :

தம்மை வணங்குபவருக்கே அருளுவர் இறைவர் என்பதைத் தெரிந்து கொண்டும் தொழாதவராகி, தவறான மனத்தால் மயக்கம் கொண்ட மாலும் அயனும், இழிந்த பன்றியும் அன்னப் பற வையுமாய்க் கீழும் மேலும் போய்க் காண மாட்டாமல் விழுவார்க ளாய்ப் பின்னர் திருவைந்தெழுத்தைப் போற்றி உய்தி பெற்றமையை மேலே விரிவாய் எடுத்து உரைத்தார்.

குறிப்புரை :

இது பதிகந்தொறும் வரும் ஒன்பதாவது பாடலின் கருத்தாகும். வழுவான மனம் - யான் காண்பேன் என முனைப்புடன் சென்ற மனம். உயிர்கள் இவ்வநுபவத்தைக் கருதி, யான் எனது என்னும் செருக்கற வேண்டும் என்பதே இப்பாடற் கருத்தாகும். யான்செய்தேன் பிறர்செய்தா ரென்னதியா னென்னும் இக்கோணை ஞானஎரி யால்வெதுப்பி நிமிர்த்துத் தான்செவ்வே நின்றிடஅத் தத்துவன்தான் நேரே தனையளித்து முன்னிற்கும் வினையொழித் திட்டோடும் நான்செய்தே னெனுமவர்க்குத் தானங் கின்றி நண்ணுவிக்கும் போகத்தைப் பண்ணுவிக்குங் கன்மம் ஊன்செய்யா ஞானந்தா னுதிப்பி னல்லால் ஒருவருக்கும் யானெனதிங் கொழியா தன்றே. -சித்தி. பத்தாம் சூத்.2 எனவரும் சித்தியார் கூற்றும் காண்க.

பண் :

பாடல் எண் : 79

வேதகா ரணராய
வெண்பிறைசேர் செய்யசடை
நாதன்நெறி அறிந்துய்யார்
தம்மிலே நலங்கொள்ளும்
போதமிலாச் சமண்கையர்
புத்தர்வழி பழியாக்கும்
ஏதமே யெனமொழிந்தார்
எங்கள்பிரான் சம்பந்தர்.

பொழிப்புரை :

மறைகளை அருளிய முன்னவரான பிறைச் சந்திரனை அணிந்த சிவந்த சடையையுடைய சிவபெருமானின் நெறியை, அறிந்து அடைந்து உய்தி பெறாதவரான புறச் சமயத்தாருள், நன்மையில்லாத சமணர்களும், புத்தர்களும் ஆன இவர்களின் நெறி கள் பழியை விளைக்கும் கேடுகளேஆம் என எம்பெருமானாகிய ஞானசம்பந்தர் மொழிந்தருளினார்.

குறிப்புரை :

இது பதிகந்தொறும் வரும் பத்தாம் பாடற்கருத்தாகும். `பரசமயங்கள் செல்லாப் பாக்கியம் பண்ணொணாதே\' (சிவஞா. சித்தி. சூ.3 பா.90) எனவரும் ஞானநூற் பொருளைத் தெரிந்து தெளிந்து கடைப்பிடித்தல் கடனாம்.

பண் :

பாடல் எண் : 80

திருப்பதிகம் நிறைவித்துத்
திருக்கடைக்காப் புச்சாத்தி
இருக்குமொழிப் பிள்ளையார்
எதிர்தொழுது நின்றருள
அருட்கருணைத் திருவாள
னார்அருள்கண் டமரரெலாம்
பெருக்கவிசும் பினிலார்த்துப்
பிரசமலர் மழைபொழிந்தார்.

பொழிப்புரை :

திருப்பதிகத்தை நிறைவாகப் பாடித் திருக்கடைக் காப்பையும் அருளிய மறைமொழியையுடைய பிள்ளையார் இறைவ னைத் தொழுது நின்றாராக, அருட் கருணையுடைய சிவபெருமா னின் நிறைந்த அருளைக் கண்டு, தேவர்கள் விரிந்த விண்ணில் மகிழ் வொலி எழுப்பித் தேனைச் சொரியும் தெய்வ மலர்களை மழையாய்ப் பொழிந்தனர்.

குறிப்புரை :

இறைவன் அருளியது திருமறையாதல் போலப் பிள் ளையார் அருளியதும் மறைமொழியேயாம். பதிகம் நிறைவு பெற்ற தும், அதனை முடித்துக் காட்டும் வகையில், தமது பெயர், பதிகப் பயன் முதலியவற்றைத் தம் இலச்சினையாகக் கூறியருளும் பாடல் திருக் கடைக்காப்பாகும்.

பண் :

பாடல் எண் : 81

வந்தெழும்மங் கலமான
வானதுந் துபிமுழக்கும்
கந்தருவர் கின்னரர்கள்
கானவொலிக் கடல்முழக்கும்
இந்திரனே முதல்தேவர்
எடுத்தேத்தும் இசைமுழக்கும்
அந்தமில்பல் கணநாதர்
அரஎனுமோ சையின்அடங்க.

பொழிப்புரை :

அழிவற்ற சிவகணநாதர்கள் பலர் முழக்கும் `அரகர\' என்ற ஓசையுள் அடங்குமாறு, மங்கலமான தேவமுழக்கும், கந்தருவர், கின்னரர் முதலான தேவ இனத்தாரின் கடல் போன்று முழங்கும் ஒலியும், இந்திரன் முதலிய தேவர்கள் எடுத்துப் போற்றும் இசைகளின் ஒலியும் ஆகிய இத்தகைய ஒலிகளின் தொகுதி இது பொழுது ஒலிப்பதாயின.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 82

மறைகள் கிளர்ந்தொலி வளர
முழங்கிட வானோர்தம்
நிறைமுடி உந்திய நிறைமணி
சிந்திட நீள்வானத்
துறையென வந்துல கடைய
நிறைந்திட ஓவாமெய்ப்
பொறைபெரு குந்தவ முனிவர்
எனுங்கடல் புடைசூழ.

பொழிப்புரை :

மறைகள் எழுந்து ஒலிபெருக முழங்கவும், தேவர் களின் நிறைந்த தலையணிகள் (கிரீடங்கள்) ஒன்றுடன் ஒன்று நெருக் குண்டு நிரல்பட அமைந்த மணிகள் சிதற, அவை நீண்ட வானத்தினின் றும் விழும் பனிநீர்த் துளிகள் போல் வந்து உலகெங்கும் நிறையவும், இடையறாது மெய்ம்மைக்கண் நிற்றலும் அமைதி பெருகவும் வாழும் தவமுனிவர்களின் கூட்டமாகிய கடல் இருமருங்கும் சூழவும்,

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 83

அணைவுற வந்தெழும் அறிவு
தொடங்கின அடியார்பால்
இணையில் பவங்கிளர் கடல்கள்
இகந்திட இருதாளின்
புணையருள் அங்கணர் பொருவிடை
தங்கிய புணர்பாகத்
துணையொ டணைந்தனர் சுருதி
தொடர்ந்த பெருந்தோணி.

பொழிப்புரை :

தம்மை வந்து அடையும் பக்குவமும் பத்திமையும் உடைய அடியவரிடத்தினின்றும் ஒப்பில்லாத வலிமையுடைய பிறவியாகிய பெருங்கடல்கள் நீங்குமாறு தம் இரு திருவடிகளான இனிய புணையை அருளும் கருணையுடைய திருத்தோணியப்பர், போர் செய்தற்குரிய வலிமையுற்ற ஆனேற்றின் மேல் தம்முடன் அமர்ந்தருளும் துணைவியாருடனே, மறைகள் தொடர்ந்து முழங்கும் திருத்தோணிச் சிகரத்திற்கு எழுந்தருளினார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 84

அண்ணல் அணைந்தமை கண்டு
தொடர்ந்தெழும் அன்பாலே
மண்மிசை நின்ற மறைச்சிறு
போதகம் அன்னாரும்
கண்வழி சென்ற கருத்து
விடாது கலந்தேகப்
புண்ணியர் நண்ணிய பூமலி
கோயிலின் உட்புக்கார்.

பொழிப்புரை :

சிவபெருமான் திருக்கோயிலில் எழுந்தருளப் பெற்றதைப் பார்த்து, அப்பெருமானைத் தொடர்ந்து எழும் அன்பி னால், கண்களின் வழியே சென்ற கருத்துவிடாது கலந்ததால், பொய் கைக் கரையில் நின்றருளிய மறைச் சிறுவரான யானைக்கன்று போன்ற பிள்ளையாரும், புண்ணிய மூர்த்தியாய சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் அழகிய திருத்தோணித் திருக்கோயிலுக்குள் சென்று சேர்ந்தார்.

குறிப்புரை :

அம்மையப்பராய்க் காட்சி கொடுத்து ஞானப்பாலும் ஊட்டியதால் கண்வழிப் புகுந்த அக்காட்சி, உள்ளத்தே பதிந்தும் கவர்ந்தும் இருந்தமையினால் அவ்வம்மையப்பர் எழுந்தருளியிருக் கும், தோணிக்குள் சென்று, மீண்டும் கண்டு வணங்கி மகிழ எண் ணினார். `கண்வழிப் புகுந்த அக்கள்வனே கொலாம்\' எனவரும் திருவாக்கும் காண்க.

பண் :

பாடல் எண் : 85

ஈறில் பெருந்தவம் முன்செய்து
தாதை யெனப்பெற்றார்
மாறு விழுந்த மலர்க்கை
குவித்து மகிழ்ந்தாடி
வேறு விளைந்த வெருட்சி
வியப்பு விருப்போடும்
கூறும் அருந்தமி ழின்பொரு
ளான குறிப்போர்வார்.

பொழிப்புரை :

அளவற்ற தவத்தைச் செய்து இவருடைய தந்தை என அழைத்தற்குரிய சிவபாத இருதயர், பிள்ளையாரை அடிக்க ஓச்சிய சிறுகோலும் நெகிழ, அம்மலர்க் கைகளைக் கூப்பியவாறு மகிழ்ந்து ஆனந்தக் கூத்தாடி, வேறாக விளைந்தனவாய வெருட்சி, வியப்பு, விருப்பு என்ற இவற்றுடன் கூடியவராய்த் தம் பிள்ளையார் எடுத்துச் சொல்லும் அருந்தமிழின் பொருளான குறிப்பை எண்ணு வாராகி,

குறிப்புரை :

மாறு - சிறிய கோல். விழுந்த - தானே கையினின்றும் விழ; `விற்கையினின்று இடைவீழ\' என்புழிப்போல. வேறு விளைந்த - முன் இருந்த மனநிலைக்கு வேறாக. வெருட்சி - அச்சம், சினம் கொண்டதனால் ஆயது. வியப்பு - தாம் இதுகாறும் கண்டறியாத இறைக் காட்சியைப் பிள்ளையார் காட்டக் கண்ட வியப்பு. விருப்பு - உலகியற் பாங்கால் கொண்ட விருப்பினும், அருளியற் பாங்கால் தோன்றிய பெரு விருப்பு.

பண் :

பாடல் எண் : 86

தாணு வினைத்தனி கண்டு
தொடர்ந்தவர் தம்மைப்போல்
காணுதல் பெற்றில ரேனும்
நிகழ்ந்தன கண்டுள்ளார்
தோணி புரத்திறை தன்னரு
ளாதல் துணிந்தார்வம்
பேணு மனத்தொடு முன்புகு
காதலர் பின்சென்றார்.

பொழிப்புரை :

சிவபெருமானைத் தாமே தனியே கண்டு அவரைத் தொடர்ந்தவரான பிள்ளையாரைப் போல், தாம் அவ் இறைவரைக் காணாராயினும், நிகழ்ந்தனவான அடையாளக் குறிக ளையும் திருப்பதிகத் தமிழ்பாடிச் சுட்டிக் காட்டியதையும் கண்டவராத லால், இது தோணிபுர இறைவரின் திருவருள் என்பதை உணர்ந்து, மீதூர்ந்த அன்பு பொருந்திய மனத்துடன் தம்முன்பு சென்று கொண்டிருக்கும் திருமகனாரைத் தொடர்ந்து சென்றார்.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 87

அப்பொழுது அங்கண் அணைந்தது
கண்டவர் அல்லாதார்
முப்புரி நூன்மறை யோர்கள்
உரோம முகிழ்ப்பெய்தி
இப்படி யொப்பதொர் அற்புதம்
எங்குள தென்றென்றே
துப்புறழ் வேணியர் கோயிலின்
வாயில் புறஞ்சூழ.

பொழிப்புரை :

அதுபொழுது அங்கு நிகழ்ந்தனவற்றைக் கண்டவர்களும், காணாதநிலையில் கேட்டவர்களும், முப்புரிநூல் அணிந்த மறையவர்களும் `இவ்வாறாய அற்புத நிகழ்ச்சி வேறு யாண்டு நிகழ்ந்துள்ளது?\' எனக் கூறியவாறு, பவளம் போன்ற சிவந்த சடையையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருத்தோணிக் கோயிலின் திருவாயில் புறத்தில் வந்து சூழ்ந்தனராக,

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 88

பொங்கொளி மால்விடை மீது
புகுந்தணி பொற்றோணி
தங்கி இருந்த பெருந்திரு
வாழ்வு தலைப்பட்டே
இங்கெனை யாளுடை யானுமை
யோடும் இருந்தான்என்
றங்கெதிர் நின்று புகன்றனர்
ஞானத் தமுதுண்டார்.

பொழிப்புரை :

ஞான அமுதை உண்ட பிள்ளையார் தாமும், பொங்கும் ஒளியையுடைய ஆனேற்று ஊர்தியில் இவர்ந்து அழகிய பொலிவுமிக்க திருத்தோணியுள் எழுந்தருளியிருக்கும் பெருந்திரு வாழ்வைச் சென்று கூடி, `என்னை ஆளுடைய பெருமான் உமையம் மையாருடன் இங்கு எழுந்தருளியிருந்தான்\' என்னும் கருத்துடைய திருப்பதிகத்தை இறைவன் திருமுன்னிலையில் நின்று போற்றி வணங்கினார்.

குறிப்புரை :

இதுபொழுது அருளிய பதிகம் தக்கேசிப் பண்ணில் அமைந்த `நறவம் நிறை வண்டு\' (தி.1 ப.74) எனத் தொடங்கும் பதிகமாகும். இப்பதிகம் முழுதும் `உமையோடு இருந்தானே\' என நிறைவு பெறுவதைத் திரு உளம் பற்றியே, ஆசிரியர் இத்தொடரை எடுத்து இயம்புவார் ஆயினர்.

பண் :

பாடல் எண் : 89

இன்னிசை ஏழும் இசைந்த
செழுந்தமிழ் ஈசற்கே
சொன்முறை பாடு தொழும்பருள்
பெற்ற தொடக்கோடும்
பன்மறை வேதியர் காண
விருப்பொடு பால்நாறும்
பொன்மணி வாயினர் கோயிலின்
நின்று புறப்பட்டார்.

பொழிப்புரை :

அன்புடன் ஞான அமுதத்தின் மணம் கமழும் திருவாயையுடைய திருஞானசம்பந்தர், மறைகளை ஓதும் வேதியர் பலரும் காண, இனிய ஏழிசைகளும் பொருந்திய செழுந்தமிழ்த் திருப்பதிகங்களைச் சொன்முறையாகச் சிவபெருமானுக்கே உரியவா கப் பாடுகின்ற திருத்தொண்டாகிய அடிமைத் திறத்தையும் அருளை யும் பெற்ற பிணைப்புடனே கோயிலினின்றும் புறப்பட்டார்.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 90

பேணிய அற்புத நீடருள்
பெற்ற பிரான்முன்னே
நீணிலை யில்திகழ் கோபுர
வாயிலின் நேரெய்தி
வாணில வில்திகழ் வேணியர்
தொண்டர்கள் வாழ்வெய்துந்
தோணி புரத்தவர் தாமெதிர்
கொண்டு துதிக்கின்றார்.

பொழிப்புரை :

விரும்பிய அற்புதமான நீடிய திருவருளைப் பெற்ற ஞானப் பிள்ளையாரின் முன்பு, ஒளிபொருந்திய சந்திரனை விடச் சிறந்து விளங்குகின்ற சடையையுடைய சிவபெருமானின் தொண்டர்களும், வாழ்வடையும் திருத்தோணிபுரத்தில் உள்ளவர்க ளும், நீண்ட நிலைகளுடன் விளங்குகின்ற கோயிலின் வாயிலை அடைந்து தாம் கூடி எதிர்கொண்டு பின்வருமாறு போற்றத் தொடங் கினர்.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 91

காழியர் தவமே கவுணியர்
தனமே கலைஞானத்
தாழிய கடலே அதனிடை
யமுதே அடியார்முன்
வாழிய வந்திம் மண்மிசை
வானோர் தனிநாதன்
ஏழிசை மொழியாள் தன்திரு
வருள்பெற் றனையென்பார்.

பொழிப்புரை :

`காழிப்பதியில் உள்ளார் தம் தவப்பயனாய்த் தோன்றியவரே! கவுணியரின் செல்வமே! கலைஞானம் நிறைந்த ஆழ்ந்த கடல் போன்றவரே! அக்கடலின் அமுதம் போன்றவரே! அடியார் கண்டு வாழும் பொருட்டு இம்மண்ணுலகத்தின் மீது தோன்றி, வானவரின் ஒப்பற்ற தலைவரான சிவபெருமானும், ஏழிசை மொழியாளாய உமையம்மையாரும் ஆகிய இருவர்தம் திருவருளை யும் ஒருங்கே பெற்றீர்!\' என உரைப்பாரும்,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 92

மறைவளர் திருவே வைதிக
நிலையே வளர்ஞானப்
பொறையணி முகிலே புகலியர்
புகலே பொருபொன்னித்
துறைபெறு மணியே சுருதியின்
ஒளியே வெளியேவந்
திறையவன் உமையா ளுடன்அருள்
தரஎய் தினையென்பார்.

பொழிப்புரை :

`மறைகளை வளர்க்கும் செல்வமே! மறை நெறியின் நிலையான பொருளே! வளர்கின்ற ஞானம் என்ற கருத் தாங்கிய மேகமே! புகலி நகரத்தவரின் புகலிடமே! அலைமோதும் காவிரித்துறையில் பெறத்தக்க மணியே! மறைகளில் விளங்கும் ஒளியே! சிவபெருமான் உமையம்மையாருடன் எழுந்தருளி வந்து அருள் வழங்கப்பெறும் பேறு பெற்றீர்! என்பாரும்,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 93

புண்ணிய முதலே புனைமணி
அரைஞா ணொடுபோதும்
கண்ணிறை கதிரே கலைவளர்
மதியே கவின்மேவும்
பண்ணியல் கதியே பருவம
தொருமூ வருடத்தே
எண்ணிய பொருளாய் நின்றவர்
அருள்பெற் றனையென்பார்.

பொழிப்புரை :

`புண்ணியங்களின் முதலே! மணியணிந்த அரை ஞாணுடன் போந்து காட்சியளிக்கும் கண் நிறைந்த கதிரே! கலைகள் வளரும் சந்திரனே! அழகு பொருந்தும் பண்களுக்கும் பெறற்கரிய கதியே! பருவம் மூன்றாண்டி,ல் மனத்தகத்தது என்றறிவார்களுக்கு உள்நின்று அருளும் பொருளாய் நின்ற சிவபெருமானின் திருவரு ளைப் பெற்றீர்!\' என்பாரும் ஆனார்கள்.

குறிப்புரை :

இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 94

என்றினைய பலகூறி இருக்குமொழி
அந்தணரும் ஏனை யோரும்
நின்றுதுதி செய்தவர்தாள் நீள்முடிக்கண்
மேல்ஏந்தி நிரந்த போது
சென்றணைந்த தாதையார் சிவபாத
இருதயர்தாம் தெய்வ ஞானக்
கன்றினைமுன் புக்கெடுத்துப் பியலின்மேற்
கொண்டுகளி கூர்ந்து செல்ல.

பொழிப்புரை :

என இவ்வாறெல்லாம் கூறியருளி, மறை மொழி களையுடைய அந்தணர்களும் மற்ற அடியவர்களும் நின்று போற்றி, அப்பிள்ளையாரின் திருவடிகளைத் தம்முடியில் அணிந்து, நிரல்பட நின்றபோது, தாமே முன்சென்ற தந்தையாரான சிவபாத இருதயர் தெய்வத்தன்மை வாய்ந்த சிவஞானக் குழந்தையான பிள்ளையாரை எடுத்துத் தோளில் சுமந்து பெருமகிழ்வுடனே செல்ல,

குறிப்புரை :

பியலில் - தோளில்.

பண் :

பாடல் எண் : 95

மாமறையோர் குழாத்தினுடன் மல்குதிருத்
தொண்டர்குழாம் மருங்கு சூழ்ந்து
தாமறுவை உத்தரியந் தனிவிசும்பில்
எறிந்தார்க்குந் தன்மை யாலே
பூமறுகு சிவானந்தப் பெருக்காறு
போத அதன்மீது பொங்கும்
காமர்நுரைக் குமிழியெழுந் திழிவனபோல்
விளங்குபெருங் காட்சித் தாக.

பொழிப்புரை :

சிறந்த மறையவர் கூட்டத்துடன் பெருகிய அடியார்தம் கூட்டமும் சூழ்ந்து, தம் உடையின் மேல் உள்ள ஆடைகளையும் உத்தரியங்களையும் விண்ணில் வீசி மகிழ்வொலி செய்கின்ற தன்மையினால், சீகாழியின் அழகிய தெரு, சிவானந்தமாய வெள்ளம் பெருக்கெடுத்துச் செல்ல, அதன் மேல் பொங்கும் நுரைக் குமிழிகள் மேலெழுவதும் இறங்குவதும் போன்ற காட்சியுடையதாக,

குறிப்புரை :

அறுவை - தம் உடைமீது கட்டப்பெற்றிருக்கும் ஆடை. உத்தரியம் - மேலாடை. மறையவரும் அடியவரும் வீதியில் பெருகச் செல்வது சிவானந்த ஆறு செல்வது போன்றிருந்தது. அவர்கள் தம் மகிழ்ச்சி மீதூர்வால் அறுவையையும் மேலாடையையும் விண்ணில் வீசி மகிழ்வது, அவ்வாற்றின் நுரைகள் மேல் எழுவதும் இறங்குவதும் போன்றிருந்தன.

பண் :

பாடல் எண் : 96

நீடுதிருக் கழுமலத்து நிலத்தேவர்
மாளிகைமேல் நெருங்கி அங்கண்
மாடுநிறை மடவார்கள் மங்கலமாம்
மொழிகளால் வாழ்த்தி வாசத்
தோடுமலி நறுமலருஞ் சுண்ணமும்வெண்
பொரியினொடுந் தூவி நிற்பார்
கோடுபயில் குலவரைமேல் மின்குலங்கள்
புடைபெயருங் கொள்கைத் தாக.

பொழிப்புரை :

நீடும் சீகாழியில் அந்தணர்களின் மாளிகைமேல் நெருங்கி, அவ்விடத்தின் பக்கத்தில் நிறைந்த மறையோரின் மங்கை யர், உயர்ந்த உச்சியையுடைய பெரிய மலைகளின் மேலே மின்னல் கூட்டம் புடைபெயர்ந்து போகின்ற காட்சியைக் கொண்டதைப் போல், மங்கலமான பெருஞ்சொற்களால் வாழ்த்தியும், மணமுடைய இதழ் களையுடைய புதிய குளிர்ந்த பூக்களையும் சுண்ணப் பொடிகளையும் வெண்ணெல் பொரியுடனே தூவியும் நிற்பாராய்,

குறிப்புரை :

கோடு - மலை. மங்கையர்கள் சுண்ணமும் பொடியும் தூவி மங்கல வாழ்த்தெடுத்து அடைவது, மின் எழும்பொழுது தோன் றும் ஒளி போன்றது என்றார்.

பண் :

பாடல் எண் : 97

மங்கலதூ ரியந்துவைப்பார் மறைச்சாமம்
பாடுவார் மருங்கு வேதிப்
பொங்குமணி விளக்கெடுத்துப் பூரணகும்
பமும்நிரைப்பார் போற்றி செய்வார்
அங்கவர்கள் மனத்தெழுந்த அதிசயமும்
பெருவிருப்பும் அன்பும் பொங்கத்
தங்குதிரு மலிவீதிச் சண்பைநகர்
வலஞ்செய்து சாருங் காலை.

பொழிப்புரை :

மற்றும் சிலர், மங்கல இயங்களை இசைப்பார்கள். சிலர், சாம கானங்களைப் பாடுவார்கள். சிலர், அருகில் உள்ள திண் ணைகளில் பொங்கும் அழகிய விளக்குகளை ஏந்தி நிறைகுடங்களை நிரல்பட வைப்பார்கள். இங்ஙனம் அந்நகரத்தவர்கள் தத்தம் மனத்தில் எழுந்த அதிசயமும் பெருவிருப்பும் அன்பும் பெருகப் போற்றி மகிழ, அவ் வழகிய வீதிகளின் வழியே சண்பை நகரை வலமாக வரும்பொழுது,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 98

தந்திருமா ளிகையின்கண் எழுந்தருளிப்
புகும்பொழுது சங்க நாதம்
அந்தரதுந் துபிமுதலா அளவில்பெரு
கொலிதழைப்ப அணைந்து புக்கார்
சுந்தரப்பொற் றோணிமிசை இருந்தபிரான்
உடன்அமர்ந்த துணைவி யாகும்
பைந்தொடியாள் திருமுலையின் பாலறா
மதுரமொழிப் பவள வாயார்.

பொழிப்புரை :

அழகிய பொன்மயமான திருத்தோணியின் மேல் எழுந்தருளியிருக்கும் இறைவருடன் கூடிய துணைவியாரான திரு நிலைநாயகி அம்மையாரின் திருமுலைப்பாலின் மணம் மாறாத இனிய மொழியை உடைய பவளம் போன்ற வாயையுடைய பிள்ளை யார், தம் திருமாளிகைக்கு எழுந்தருளி உட்செல்லும் பொழுது, சங்கு ஒலிகளும் தேவதுந்துபி முதலாய அளவில்லாத பெருகிய ஒலிகளும் மிக, உள்ளே புகலானார்.

குறிப்புரை :

இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 99

தூமணிமா ளிகையின்கண் அமர்ந்தருளி
அன்றிரவு தொல்லை நாத
மாமறைகள் திரண்டபெருந் திருத்தோணி
மன்னிவீற் றிருந்தார் செய்ய
காமருசே வடிக்கமலங் கருத்திலுற
இடையறாக் காதல் கொண்டு
நாமநெடுங் கதிர்உதிப்ப நண்ணினார்
திருத்தோணி நம்பர் கோயில்.

பொழிப்புரை :

தூயதும் அழகியதுமான திருமாளிகையில் அமர்ந்திருந்து சிவஞானம் வழங்கப்பெற்ற அன்றிரவில், பழமை யான ஒலிவடிவாய பெருமறைகள் திரண்டு உருவெடுதாற் போன்ற திருத்தோணியில் நிலைபெற்று எழுந்தருளியிருக்கும் சிவபெருமா னின் திருவடித் தாமரைகள் தம் கருத்தில் பொருந்த நீங்காத காதல் கொண்டவராகி, ஒளிபெருகும் ஞாயிறு தோன்றும் முன், திருத்தோணி யப்பரின் திருக்கோயிலைச் சென்று அடைந்தார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 100

காதலுடன் அணைந்துதிருக் கழுமலத்துக்
கலந்துவீற் றிருந்த தங்கள்
தாதையா ரையும்வெளியே தாங்கரிய
மெய்ஞ்ஞானந் தம்பால் வந்து
போதமுலை சுரந்தளித்த புண்ணியத்தா
யாரையும்முன் வணங்கிப் போற்றி
மேதகைய அருள்பெற்றுத் திருக்கோலக்
காஇறைஞ்ச விருப்பிற் சென்றார்.

பொழிப்புரை :

பெருகிய அன்புடன் சேர்ந்து திருக்கழுமலம் எனும் அத்திருப்பதியில் எழுந்தருளியிருக்கும் தம் தந்தையாரையும், தம்மிடம் வெளிப்பட்டு வந்து யாவராலும் காண்டற்கரிய மெய்ஞ் ஞானத்ததைத் திருமுலைசுரந்து வரும் பாலுடன் கலந்து தமக்கு ஊட் டிய புண்ணிய வடிவான திருத்தாயாரையும் முன் வணங்கிப் போற்றி, மேன்மையான அருளைப் பெற்றுத் `திருக்கோலக்கா\' என்ற திருப் பதியை வணங்கும் பொருட்டு விருப்புடன் சென்றார்.

குறிப்புரை :

வணங்கிப் போற்றிய திருப்பதிகம், `எம்பிரான்\' (தி.2 ப.40) எனத் தொடங்கும் சீகாமரப் பண்ணில் அமைந்ததாகும்.

பண் :

பாடல் எண் : 101

பெருக்குஓலிட் டலைபிறங்கும் காவிரிநீர்
பிரசமலர் தரளம் சிந்த
வரிக்கோல வண்டாட மாதரார்
குடைந்தாடும் மணிநீர் வாவித்
திருக்கோலக் காவெய்தித் தேவர்பிரான்
கோயில்வலஞ் செய்து முன்னின்
றிருக்கோலிட் டறிவரிய திருப்பாதம்
ஏத்துவதற் கெடுத்துக் கொள்வார்.

பொழிப்புரை :

நீர்ப்பெருக்கால் ஒலிமிகுந்து அலைகள் பெருகும் காவிரியாறு, நல்ல நீருடன் தேன் மிகுந்த மலர்களையும் முத்துக் களையும் சொரிய, அம்மலர்களைச் சூழ்ந்து வண்டுகள் மொய்க்க, மங்கையர் குடைந்து நீராடுகின்ற நீரையுடைய வாவிகள் பொருந்திய `திருக்கோலக்கா\' என்ற பதியையடைந்து, தேவர்களின் தலைவரான இறைவரின் திருக்கோயிலை வலமாக வந்து, திருமுன்நின்று, மறை கள் முறையிட்டும் அறிதற்கு அரிய இறைவரின் திருவடிகளைப் போற் றத் தொடங்கியவராய்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 102

மெய்ந்நிறைந்த செம்பொருளாம் வேதத்தின்
விழுப்பொருளை வேணிமீது
பைந்நிறைந்த அரவுடனே பசுங்குழவித்
திங்கள்பரித் தருளு வானை
மைந்நிறைந்த மிடற்றானை மடையில்வா
ளைகள்பாய என்னும் வாக்கால்
கைந்நிறைந்த ஒத்துஅறுத்துக் கலைப்பதிகம்
கவுணியர்கோன் பாடுங் காலை.

பொழிப்புரை :

மெய்ம்மை நிறைந்த செம்பொருள் எனப் படுகின்ற நான்மறைகளில் கூறப்படும் பொருளாய் உள்ளவரை, திருச்சடையின் மேல் பாம்புடன் பசுமையான பிறைச் சந்திரனைத் தாங்குபவரை, நஞ்சுடைய திருமிடற்றையுடையவரை, `மடையில் வாளைகள் பாய\' என்ற திருப்பதிகத் திருவாக்கினால், திருக்கரங் களைக் கொண்டு அமைக்கும் காலவரையறையினைச் செய்யும் தாள ஒத்துச் செய்து, கலைகள் நிரம்பிய திருப்பதிகத்தைக் கவுணியர் பெருமானான சம்பந்தர் பாடிய போது,

குறிப்புரை :

கைந்நிறைந்த ஒத்து அறுத்து - பாட்டின் இசைக்கு ஏற்றவாறு கைகளைத் தட்டுதல், நிறுத்தல், எடுத்தல் ஆகிய தொழில் களால் தக்கவாறு அளவுபடுத்துவது. இதுபொழுது பாடி அருளிய பதிகம் `மடையில் வாளை\' (தி.1 ப.23) எனத் தொடங்கும் தக்கராகப் பதிகம் ஆகும்.

பண் :

பாடல் எண் : 103

கையதனால் ஒத்தறுத்துப் பாடுதலும்
கண்டருளிக் கருணை கூர்ந்த
செய்யசடை வானவர்தம் அஞ்செழுத்தும்
எழுதியநற் செம்பொற் றாளம்
ஐயரவர் திருவருளால் எடுத்தபா
டலுக்கிசைந்த அளவால் ஒத்த
வையமெலாம் உய்யவரு மறைச்சிறுவர்
கைத்தலத்து வந்த தன்றே.

பொழிப்புரை :

அங்ஙனம் திருக்கைகளால் தாள ஒத்து அறுதி யிட்டுப் பாடவும் (இறைவர்) கண்டு, அருள் செய்ய, கருணை கூர்ந்த தேவர் பெருமானின் திருவைந்தெழுத்துப் பொறித்த நல்ல செம்பொன் தாளங்கள், இறைவரின் அருளால் எடுத்த அத்திருப்பதிகத்திற்குப் பொருந்திய அளவுபட, வரும் மறைச் சிறுவரான பிள்ளையாரின் திருக்கைகளில் அது பொழுதே வந்து சேர்ந்தன.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின. சென்ற பாடலில் கூறியவாறு `மடையில் வாளை\' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைக் கையினால் ஒத்தறுத்துப் பாடுமளவில் இறையருளால் திருவைந்தெ ழுத்துப் பொறித்த பொற்றாளம் பிள்ளையார் கையில் வரப் பெற்றன. இவ்வரலாற்றிற்கு, `நாளும் இன்னிசை யால்தமிழ் பரப்பும் ஞான சம்பந்த னுக்குல கவர்முன் தாளம் ஈந்த\' (தி.7 ப.62) எனவரும் சுந்தரர் திருவாக்கும், `எழுத் தஞ்சும் இட்டசெம்பொற்றாளங்கள் ஈய\' (தி.11 ப.34 பா.82), `பெற்றது ... செம்பொன் தாளம் அவையே\' (தி.11 ப.36 பா.4) எனவரும் நம்பியாண்டார் நம்பிகள் வாக்குகளும் அரணாகின்றன.

பண் :

பாடல் எண் : 104

காழிவரும் பெருந்தகையார் கையில்வருந்
திருத்தாளக் கருவி கண்டு
வாழியதந் திருமுடிமேற் கொண்டருளி
மனங்களிப்ப மதுர வாயில்
ஏழிசையுந் தழைத்தோங்க இன்னிசைவண்
தமிழ்ப்பதிகம் எய்தப் பாடித்
தாழுமணிக் குழையார்முன் தக்கதிருக்
கடைக்காப்புச் சாத்தி நின்றார்.

பொழிப்புரை :

சீகாழியில் வந்து தோன்றிய பெருந்தகையார் ஆன ஆளுடைய பிள்ளையார், தம் திருக்கையில் வந்த தாளத்தைப் பார்த்துப் பெரும் பேறு எனக் கருதி அதனைத் தம்திருமுடிமீது வைத்து, மனம் மகிழ, இனிமை மிக்க திருவாக்கால் ஏழிசைகளும் தழைத்து ஓங்க, இனிய இசை பொருந்திய அத்தமிழ்ப் பதிகத்தைப் பொருத்த மாகப் பாடி, விரும்பி ஏற்றருளிய குழை அணிந்த சிவபெருமானின் திருமுன்னிலையில் தக்க திருக்கடைக் காப்புச் சாத்தி நின்றார்.

குறிப்புரை :

நலங்கொள் காழி ஞானசம் பந்தன் குலங்கொள் கோலக் காவு ளானையே வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார் உலங்கொள் வினைபோ யோங்கி வாழ்வரே. (தி.1.ப.23.பா.11) என்பது திருக்கடைக்காப்பாக அமைந்த திருப் பாடலாகும். `வினை போய்\' என்பதால் பாச நீக்கமும் `ஓங்கி வாழ் வரே\' என்பதால் சிவப் பேறும் பெறுதலின், இதனினூங்கு உயிர் பெறத் தக்க தொருபயன் இல்லையாதலின் இதனைத் `தக்க திருக்கடைக் காப்பு\' என்றார்.

பண் :

பாடல் எண் : 105

உம்பருல கதிசயிப்ப ஓங்கியநா
தத்தளவின் உண்மை நோக்கித்
தும்புருநா ரதர்முதலாம் சுருதியிசைத்
துறையுள்ளோர் துதித்து மண்மேல்
வம்பலர்மா மழைபொழிந்தார் மறைவாழ
வந்தருளும் மதலை யாரும்
தம்பெருமான் அருள்போற்றி மீண்டருளிச்
சண்பைநகர் சாரச் செல்வார்.

பொழிப்புரை :

விண்ணுலகத்தவரும் வியப்படைய ஓங்கிய அத்தாளத்தின் ஒலியின் மேன்மையை நோக்கி, தும்புரு நாரதர் முதலிய மறை பயில்கின்ற இசைத்துறை வல்லவர் யாவரும் போற்றி, தேன் மிகுந்த மலர்மழையைப் பொழிந்தனர். மறைகள் வாழத் தோன் றியருளிய பெருமகனாரும், தம் இறைவரின் அருளைப் போற்றி அங்கு நின்றும் விடைபெற்றுச் சீகாழிப் பதியை நோக்கிச் செல்பவராகி,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 106

செங்கமல மலர்க்கரத்துத் திருத்தாளத்
துடன்நடந்து செல்லும் போது
தங்கள்குலத் தாதையார் தரியாது
தோளின்மேல் தரித்துக் கொள்ள
அங்கவர்தந் தோளி ன்மிசை எழுந்தருளி
அணைந்தார்சூழ்ந் தமர ரேத்தும்
திங்களணி மணிமாடத் திருத்தோணி
புரத்தோணிச் சிகரக் கோயில்.

பொழிப்புரை :

செந்தாமரை மலர்போன்ற திருக்கைகளில் பொன்னாலாய தாளத்தைக் கொண்டு நடந்து செல்லும் அமையத்தில், தம் குலத் தந்தையார், அவர் நடந்து வருதலைப் பொறாதவராய், அவரைத் தம்தோள்மீது அமர்த்தியபடி, சுற்றிச் சூழ்ந்து தேவர்கள் போற்றுகின்ற, திங்கள் தங்கும் அழகிய மாடங்களையுடைய திருத் தோணிபுரக் கோயிலை வந்து அடைந்தார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 107

திருப்பெருகு பெருங்கோயில் சூழவலங்
கொண்டருளித் திருமுன் நின்றே
அருட்பெருகு திருப்பதிகம் எட்டொருகட்
டளையாக்கி அவற்று ளொன்று
விருப்புறுபொற் றிருத்தோணி வீற்றிருந்தார்
தமைப்பாட மேவுகாதல்
பொருத்தமுற அருள்பெற்றுப் போற்றியெடுத்
தருளினார் பூவார் கொன்றை.

பொழிப்புரை :

திருத்தகவிற்றாகிய பெருங்கோயிலை வலமாக வந்து, இறைவரின் திருமுன்நின்று, அருள் பெருகும் திருப்பதிகத்தைத் தக்கராகப் பண்ணிலமைந்ததாய்ப் பிற்காலத்தார் வகுத்தவாறு, எட்டுக் கட்டளைகளுள் ஒன்றில், தோணியப்பரைப் பாடவேண்டும் என்ற விருப்பம் மீதூர, அப்பெருமானின் அருள் பெற்றுப் `பூவார் கொன்றை\' (தி.1 ப.24) எனத் தொடங்கிப் பாடினார்.

குறிப்புரை :

பண் என்பது இசையாகும். இசையமைப்பின் வேறு பாட்டால் பண்களும் பலவாயின. அவற்றுள்ளும் ஒவ்வொரு பண் ணிலும் பலகட்டளைகள் அமைந்துள்ளன. கட்டளை என்பது அவ் வப்பதிகத்து வரும் சொற்களின் நீட்சியும் குறுக்கமும் குறித்தும், யாப் பமைப்பு குறித்தும் தாள அமைப்பு குறித்தும் இசையமைப்பு வேறு படும் நிலையாகும். இவ்வாறமைந்த கட்டளைகள் தொறும் பாடும் இசையமைப்பு வேறுபடினும், அவற்றின் அடித்தளமாக அமையும் பண் வேறுபடாது.

பண் :

பாடல் எண் : 108

எடுத்ததிருப் பதிகத்தின் இசைதிருத்தா
ளத்தினால் இசைய வொத்தி
அடுத்தநடை பெறப்பாடி ஆர்வமுற
வணங்கிப்போந் தலைநீர்ப் பொன்னி
மடுத்தவயற் பூந்தரா யவர்வாழ
மழவிளங்கோ லத்துக் காட்சி
கொடுத்தருளி வைகினார் குறைவிலா
நிறைஞானக் கொண்ட லார்தாம்.

பொழிப்புரை :

மேற்கூறிய வண்ணம் தொடங்கிய அப் பதிகத்தின் இசையமைதியைத் திருவருளால் பெற்ற அத்தாளத்தால் பொருந்துமாறு, தாள வரையறை செய்து, முன்பாடிய அத்திருப் பதிகத்தினை அடுத்து, அதைப் போன்றே நிகழும்படி பாடியருளி, பேரன்பு பொருந்த வணங்கிப் போய்க் குறைவில்லாத நிறைவான ஞானமழை கருக்கொண்ட மேகத்தைப் போன்ற காழிப் பிள்ளையார், அலைகளையுடைய நீர் பெருகும் காவிரி பாயும் வயல்கள் சூழ்ந்த சீகாழிப் பதியிலுள்ளோர் பெருவாழ்வு அடையுமாறு இளங்குழவி யின் திருவுருவாகத் தோற்றம் கொண்டிருந்தார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 109

அந்நிலையில் ஆளுடைய பிள்ளையார்
தமைமுன்னம் அளித்த தாயார்
முன்னுதிக்க முயன்றதவத் திருநன்னி
பள்ளிமுதன் மறையோர் எல்லாம்
மன்னுபெரு மகிழ்ச்சியுடன் மங்கலதூ
ரியந்துவைப்ப மறைகள் ஓதிக்
கன்னிமதிற் சண்பைநகர் வந்தணைந்து
கவுணியர்கோன் கழலில் தாழ்ந்தார்.

பொழிப்புரை :

அவ்வாறு இருக்கும் நாளில் பிள்ளையாரை முன் ஈன்றெடுத்த தாயாரான பகவதியார், முதற்கண் தன்னிடத்தே தோன்றி யருள முயன்ற தவம் உடைய திருநனிபள்ளியில் உள்ள முதன்மை யுடைய மறையவர் அனைவரும், நிலைபெற்ற மகிழ்ச்சியுடன் மங்கல இயக்கமுடன் மறைகளையும் ஓதியவாறு, அழியாத மதில் சூழ்ந்த சீகாழி என்ற நகருக்கு வந்து சேர்ந்து, கவுணியர் பெருமானின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர்.

குறிப்புரை :

பகவதியார் தன்னிடத்தே தோன்றத் தவம் செய்த இடம் திருநனிபள்ளியாகும். இசை நிறைவு கருதி நன்னி பள்ளி என்றாயிற்று.

பண் :

பாடல் எண் : 110

மங்கலமாம் மெய்ஞ்ஞானம் மண்களிப்பப்
பெற்றபெரு வார்த்தை யாலே
எங்கணும்நீள் பதிமருங்கில் இருபிறப்பா
ளரும்அல்லா ஏனை யோரும்
பொங்குதிருத் தொண்டர்களும் அதிசயித்துக்
குழாங்கொண்டு புகலி யார்தம்
சிங்கஇள வேற்றின்பால் வந்தணைந்து
கழல்பணியுஞ் சிறப்பின் மிக்கார்.

பொழிப்புரை :

பேரின்பப் பெருவாழ்வை வழங்கும் சிவ மெய்ஞ்ஞானத்தை, உலகம் மகிழப் பெற்ற பெருவார்த்தை கேட்ட லால், நீண்ட அத்திருப்பதியின் அருகிலுள்ள இருபிறப்பாளர்கள் யாவ ரும், அவ்வினத்தவரல்லாத மற்றவரும், பெருகும் தொண்டர்களும் வியப்புற்றுத் திரண்டு, சீகாழியில் இளஞ்சிங்கமென விளங்கும் பிள் ளையாரிடத்து வந்து சேர்ந்து, அவருடைய திருவடிகளில் வணங்கும் சிறப்பில் மிக்கவர் ஆனார்கள்.

குறிப்புரை :

மங்கலம் - பேரின்பம். எனவே பேரின்பப் பெரு வாழ்வை யடைவிப்பது மங்கல மாயிற்று.

பண் :

பாடல் எண் : 111

வந்ததிருத் தொண்டர்கட்கும் மல்குசெழு
மறையவர்க்கும் மற்று ளோர்க்கும்
சிந்தைமகிழ் வுறமலர்ந்து திருவமுது
முதலான சிறப்பின் செய்கை
தந்தம்அள வினில்விரும்புந் தகைமையினால்
கடனாற்றுஞ் சண்பை மூதூர்
எந்தைபிரான் சிவலோகம் எனவிளங்கி
எவ்வுலகும் ஏத்து நாளில்.

பொழிப்புரை :

அங்ஙனம் திரண்டுவந்த திருத்தொண்டர்களுக் கும், அந்தணர்களுக்கும் மற்றவர்கட்கும் மனமகிழ்ந்து முகமலர்ந்து உண்பித்தல் முதலான சிறப்புடைய செய்கைகளைத் தத்தம் அளவிலும் நன்றாற்றிவரும் நன்மக்களையுடைய சீகாழிப் பதியானது எம் இறைவரின் சிவலோகமே என விளக்கம் பெற்று எவ்வுலகமும் போற்ற நிற்கும் அந்நாளில்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 112

செழுந்தரளப் பொன்னிசூழ் திருநன்னி
பள்ளியுள்ளோர் தொழுது திங்கள்
கொழுந்தணியுஞ் சடையாரை யெங்கள்பதி
யினிற்கும்பிட் டருள அங்கே
எழுந்தருள வேண்டும்என இசைந்தருளித்
தோணிவீற் றிருந்தார் பாதம்
தொழுந்தகைமை யாலிறைஞ்சி அருள்பெற்றுப்
பிறபதியும் தொழமுன் செல்வார்.

பொழிப்புரை :

செழுமையான முத்துக்களைத் தரும் காவிரியாறு சூழ்ந்த நனிபள்ளியில் உள்ளவர்கள், பிள்ளையாரை வணங்கிப் `பிறைச் சந்திரனை அணியும் சடையையுடைய சிவபெருமானை எங்கள் பதியில் வணங்கும் பொருட்டுத் தாங்கள் எழுந்தருள வேண் டும்\' என வேண்டிக் கொள்ள, அவரும் அதற்கு இசைந்து, திருத் தோணியில் வீற்றிருக்கும் சிவபெருமானின் திருவடிகளை முறைப்படி வணங்கி, விடைபெற்று, நனிபள்ளியே யன்றி மற்றத் திருப்பதிகளுக் கும் தொழுவதற்கு எண்ணிச் செல்வார்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 113

தாதவிழ்செந் தாமரையின் அகவிதழ்போல்
சீறடிகள் தரையின்மீது
போதுவதும் பிறரொருவர் பொறுப்பதுவும்
பொறாஅன்பு புரிந்த சிந்தை
மாதவஞ்செய் தாதையார் வந்தெடுத்துத்
தோளின்மேல் வைத்துக் கொள்ள
நாதர்கழல் தம்முடிமேற் கொண்டகருத்
துடன்போந்தார் ஞான முண்டார்.

பொழிப்புரை :

ஞானப் பாலமுது உண்ட பிள்ளையாரின், இதழ் கள் விரியும் செந்தாமரையின் அக இதழ்கள் போன்ற சிறிய திருவடி கள் தரையில் பொருந்த நடந்து செல்வதையும், பிறர் எவரும் தாங்கு தலையும் பொறுக்காத அன்புகொண்ட மனமுடைய மாதவம் செய்த தந்தையாரான சிவபாத இருதயர், வந்து எடுத்துத் தம் தோளின் மீது சுமந்தவாறு கொண்டு செல்ல, தாம் சிவபெருமானின் திருவடிகளைத் தம் முடிமீது கொண்ட உள்ளத்தவராய்ப் பிள்ளையார் செல்லலானார்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 114

தேனலருங் கொன்றையினார் திருநன்னி
பள்ளியினைச் சாரச் செல்வார்
வானணையும் மலர்ச்சோலை தோன்றுவதெப்
பதியென்ன மகிழ்ச்சி யெய்திப்
பானல்வயல் திருநன்னி பள்ளியெனத்
தாதையார் பணிப்பக் கேட்டு
ஞானபோ னகர்தொழுது நற்றமிழ்ச்சொல்
தொடைமாலை நவில லுற்றார்.

பொழிப்புரை :

தேன் பொழியும் கொன்றை மலரை அணிந்த சிவபெருமான் வீற்றிருக்கும் திருநனிபள்ளியைச் சேரச் செல்பவரான பிள்ளையார், `வானளாவும் மலர்ச் சோலைகளுடன் தோன்றும் இது எப்பதி?\' என்று வினவ, தந்தையார் மகிழ்ச்சி அடைந்து, `அது குவளை மலர்கள் நிறைந்த வயல்களையுடைய திருநனிபள்ளியாகும்\' எனக் கூற, அதைக் கேட்ட பிள்ளையார், நன்மை தரும் தமிழ்ப் பாமாலையான திருப்பதிகத்தை அருளிச் செய்வார்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 115

காரைகள் கூகை முல்லை
எனநிகழ் கலைசேர் வாய்மைச்
சீரியற் பதிகம் பாடித்
திருக்கடைக் காப்புத் தன்னில்
நாரியோர் பாகர் வைகும்
நனிபள்ளி உள்கு வார்தம்
பேரிடர் கெடுதற் காணை
நமதெனும் பெருமை வைத்தார்.

பொழிப்புரை :

`காரைகள் கூகை முல்லை\' (தி.2 ப.84) எனத் தொடங்கிச் செல்லும் கலை ஞானமும் சிவஞானமும் விளங்கும் சிறப் புக் கொண்ட இயற் பதிகத்தைப் பாடி, திருக்கடைக்காப்பில் `உமை யம்மையாரை ஒரு கூற்றில் கொண்ட சிவபெருமான், நிலையாய் எழுந்தருளியுள்ள திருநனிபள்ளியை நினைப்பவரின் பெரிய இடர் கள் யாவும் கெடுவதற்கு ஆணை நமதாகும்\' என்ற பெருமையி னையும் குறித்து அருளினார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின. `கலைசேர் பதிகம்\', `வாய்மைச் சீர் இயற் பதிகம்\' எனத் தனித்தனியே கூட்டுக. கலை - நூலறிவு. வாய்மை - சிவஞானம். `காரைகள் கூகை\'(தி.2 ப.84) எனத் தொடங்கும் இப்பதிகம் பியந்தைக் காந்தாரத்தில் அமைந்ததாகும். இத்திருப்பதிகத்தின் திருக் கடைக்காப்பு, `இசையா லுரைத்த பனுவல் நடுவிரு ளாடுமெந்தை நனிபள்ளி யுள்க வினை கெடுதலாணை நமதே.\' என நிறைவுறுகிறது. இதனையே ஆசிரியர் கொண்டெடுத்து மொழிவாராயினர்.

பண் :

பாடல் எண் : 116

ஆதியார் கோயில் வாயில்
அணைந்துபுக் கன்பு கூர
நீதியாற் பணிந்து போற்றி
நீடிய அருள்முன் பெற்றுப்
போதுவார் தம்மைச் சூழ்ந்து
பூசுரர் குழாங்கள் போற்றும்
காதல்கண் டங்க மர்ந்தார்
கவுணியர் தலைவ னார்தாம்.

பொழிப்புரை :

நனிபள்ளியில் வீற்றிருந்தருளும் பழம் பொரு ளாய சிவபெருமானின் கோயில் வாயிலை அடைந்து, உட்சென்று, அன்புமிக நெறிப்பட வணங்கிப் போற்றி, அப்பெருமானின் பேரரு ளைப் பெற்று, வெளியே செல்பவரான கவுணியர் தலைவரான பிள் ளையார், தம்மைச் சூழ இருந்து அந்தணர் குழாம் போற்றுகின்ற அன்பைக் கண்டு, அங்கே விரும்பி எழுந்தருளியிருந்தார்.

குறிப்புரை :

இப்பதியின் எல்லையிலிருந்தே பாடியருளிய பிள் ளையார், இறைவன் திருமுன் நின்றும் பாடியிருப்பர். `நீதியாற் பணிந்து போற்றி\' என ஆசிரியர் அருளுமாற்றானும் இவ்வுண்மை உணரலாம். எனினும் இப்பதிகம் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 117

அம்பிகை அளித்த ஞானம்
அகிலமும் உய்ய வுண்ட
நம்பெருந் தகையார் தம்மை
எதிர்கொண்டு நண்ண வேண்டி
உம்பரும் வணங்கு மெய்ம்மை
உயர்தவத் தொண்ட ரோடு
தம்பெரு விருப்பால் வந்தார்
தலைசைஅந் தணர்க ளெல்லாம்.

பொழிப்புரை :

உமையம்மையார் அருளிய ஞான அமுதத்தை உலகுய்ய உண்ட நம் பெருந்தகையாரான பிள்ளையாரை எதிர் கொள்ள, தேவர்களும் வணங்கும் மெய்ம்மையுடைய தவத்தில் சிறந்த தொண்டர்களுடனே, திருத்தலைச்சங்காட்டில் வாழும் அந்த ணர்கள் அனைவரும் தம் மிகுவிருப்பத்தால் வந்தார்கள்.

குறிப்புரை :

தலைசை - திருத்தலைச்சங்காடு.

பண் :

பாடல் எண் : 118

காவணம் எங்கும் இட்டுக்
கமுகொடு கதலி நாட்டிப்
பூவணத் தாமந் தூக்கிப்
பூரண கும்ப மேந்தி
ஆவண வீதி எல்லாம்
அலங்கரித் தண்ண லாரை
மாவண மலர்மென் சோலை
வளம்பதி கொண்டு புக்கார்.

பொழிப்புரை :

அந்தணர் முதலியவர்கள், எங்கும் பந்தல் இட்டுக் கமுகு மரங்களையும் வாழை மரங்களையும் நிறுத்தியும், மலர் மாலைகளைத் தொங்கவிட்டும், நிறைகுடங்கள் வைத்தும், வாணிகம் மிக்க தெருக்களை எல்லாம் அணிசெய்தும், பெருமையுடைய பிள் ளையாரை, வண்டுகள் மொய்க்கும் மலர்கள் நிறைந்த மென்மையான சோலைகள் சூழ்ந்த வளமான தம் பதிக்குள் அழைத்துப் போயினர்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 119

திருமறை யோர்கள் சூழ்ந்து
சிந்தையின் மகிழ்ச்சி பொங்கப்
பெருமறை ஓசை மல்கப்
பெருந்திருக் கோயில் எய்தி
அருமறைப் பொருளா னாரைப்
பணிந்தணி நற்சங் கத்தில்
தருமுறை நெறியக் கோயில்
சார்ந்தமை அருளிச் செய்தார்.

பொழிப்புரை :

அந்தணர்கள் சூழ இருந்து தத்தம் உள்ளத்தில் மகிழ்ச்சி மிக மறைகளை ஒலிக்க, பெரிய திருமாடக் கோயிலை அடைந்து, அரிய மறைகளின் பொருளாய் உள்ளவரை வணங்கி, அழகிய வலம்புரிச் சங்கின் வடிவில் அமைக்கப்பட்ட அக்கோயிலில், அவ்விறைவர் விரும்பி வீற்றிருக்கும் தன்மை பற்றித் திருப்பதிகத்தைப் பாடினார்.

குறிப்புரை :

இம்மாடக் கோயில் கோச்செங்கட் சோழரால் கட்டப் பெற்றதாகும். முற்பிறவிச் சார்பால், யானை ஏறாதவாறு கட்டப் பெற்றுள்ள கோவிலாகும். வலமாகச் சுழிந்து வரும் திருச்சுற்றுக்களு டன், நடுவில் கருவறையும், அதன் நடுவில் உயர்ந்த நிலையில் இறை வர் விளங்குவதும் வலம்புரிச் சங்குகள் விளங்கும் தோற்றத்தைக் காட் டுவதாகும். இதுபொழுது பாடிய திருப்பதிகம் `நலச் சங்க\' (தி.2 ப.55) எனும் காந்தாரப் பண்ணில் அமைந்த திருப்பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 120

கறையணி கண்டர் கோயில்
காதலால் பணிந்து பாடி
மறையவர் போற்ற வந்து
திருவலம் புரத்து மன்னும்
இறைவரைத் தொழுது பாடும்
கொடியுடை ஏத்திப் போந்து
நிறைபுனல் திருச்சாய்க் காடு
தொழுதற்கு நினைந்து செல்வார்.

பொழிப்புரை :

நஞ்சின் கருமை கொண்ட கழுத்தையுடைய சிவபெருமானது கோயிலைப் பெருவிருப்பால் பணிந்து திருப்பதிகம் பாடியபின், அந்தணர்கள் தம்மைச் சூழ நின்று போற்ற, வெளியே வந்து, `திருவலம்புரம்\' என்ற திருப்பதியில் சிவபெருமானைத் தொழுது `கொடியுடை மும்மதில்\' எனத் தொடங்கும் திருப்பதிகத்தால் போற்றி, வெளியே வந்து, நிறைந்த நீரையுடைய திருச்சாய்க்காட்டுப் பதியைத் தொழுதற்கு நினைந்து செல்பவராய்,

குறிப்புரை :

திருவலம்புரத்தில் அருளிய பதிகம் `கொடியுடை மும்மதில்\' (தி.3 ப.103) எனத் தொடங்கும் பழம்பஞ்சுரப் பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 121

பன்னகப் பூணி னாரைப்
பல்லவ னீச்ச ரத்துச்
சென்னியால் வணங்கி ஏத்தித்
திருந்திசைப் பதிகம் பாடிப்
பொன்னிசூழ் புகாரில்நீடு
புனிதர்தம் திருச்சாய்க் காட்டு
மன்னுசீர்த்தொண்ட ரெல்லாம்
மகிழ்ந்தெதிர் கொள்ளப் புக்கார்.

பொழிப்புரை :

பாம்புகளை அணியாய்ப் பூண்ட சிவபெரு மானைத் திருப்பல்லவனீச்சரத்தில் தலையினால் வணங்கிப் போற்றி, திருந்தும் இசையையுடைய இரு திருப்பதிகங்களைப் பாடி, காவிரி யாறு சூழும் புகார் நகரத்தில் என்றும் எழுந்தருளியிருக்கும் புனிதரான இறைவர் வீற்றிருக்கும் திருச்சாய்க்காட்டில் நிலைபெற்ற பெருஞ்சிறப் பினையுடைய திருத்தொண்டர்கள் மகிழ்வுடன் எதிர்கொள்ளப் புகுந்தனர்.

குறிப்புரை :

திருப்பல்லவனீச்சரத்தில் அருளிய பதிகங்கள் இரண்டு. 1. அடையார்தம் புரங்கள் - தக்கேசி (தி.1 ப.65), 2. பரசு பாணியர் - பழம் பஞ்சுரம் (தி.3 ப.112). இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 122

வானள வுயர்ந்த வாயில்
உள்வலங் கொண்டு புக்குத்
தேனலர் கொன்றை யார்தம்
திருமுன்பு சென்று தாழ்ந்து
மானிடந் திரித்தார் தம்மைப்
போற்றுவார் மண்பு கார்என்
றூனெலாம் உருக ஏத்தி
உச்சிமேற் குவித்தார் செங்கை.

பொழிப்புரை :

புகுந்த பிள்ளையார், அக்கோயிலை வலம் கொண்டு, வானளாவ உயர்ந்த திருவாயிலுள் புகுந்து, தேன் சொரிய மலர்கின்ற கொன்றை மலர் மாலையை அணிந்த சிவபெருமானின் திருமுன் தாழ்ந்து, மானை இடக்கையிற் கொண்ட சிவபெருமானைப் போற்றுபவராய் `மண்புகார்\' என்ற பதிகத்தைத் தொடங்கி, ஊன் எல்லாம் உருகும்படி ஏத்தி, தம் சிவந்த திருக்கைகளை உச்சியிற் கொண்டு கூப்பி வணங்கினார்.

குறிப்புரை :

இது பொழுது அருளிய பதிகம் `மண்புகார்\'(தி.2 ப.41) எனத் தொடங்கும் சீகாமரப் பண்ணில் அமைந்ததாகும்.

பண் :

பாடல் எண் : 123

சீரினில் திகழ்ந்த பாடல்
திருக்கடைக் காப்புப் போற்றிப்
பாரினில் பொலிந்த தொண்டர்
போற்றிடப் பயில்வார் பின்னும்
ஏரிசைப் பதிகம் பாடி
ஏத்திப்போந் திறைவர் வெண்கா
டாருமெய்க் காத லோடும்
பணிவதற் கணைந்தா ரன்றே.

பொழிப்புரை :

சிறப்புடன் விளங்கும் பாடலால் திருக்கடைக் காப்புச் செய்து போற்றி, உலகில் விளங்கிய திருத்தொண்டர்கள் போற்ற அங்கு இருந்த பிள்ளையார், மேலும், அழகும் இசையும் கொண்ட பதிகத்தைப் பாடிப் போற்றிப் பின், இறைவர் எழுந்தருளி இருக்கும் திருவெண்காட்டினை நிறைந்த மெய்யன்புடன் பணிய, அதுபொழுதே புறப்பட்டார்.

குறிப்புரை :

நொம்பைந்து புடைத்தொல்கு நூபுரஞ்சேர் மெல்லடியார் அம்பந்தும் வரிக்கழலு மரவஞ்செய் பூங்காழிச் சம்பந்தன் றமிழ்பகர்ந்த சாய்க்காட்டுப் பத்தினையும் எம்பந்த மெனக்கருதி யேத்துவார்க் கிடர்கெடுமே. (தி.2 ப.41.பா.11) என்பது இங்குப் போற்றப் பெறும் திருக்கடைக்காப் பாகும். பிள்ளையார் தாம் அருளிய இத்திருப்பாட்டில் உயிர் உறுதி பெறுதற்கு எனக் கொளத்தகும் பிணிப்பாகும் இறைவன் என அருளப் பெற்றிருத்தலின், இப்பதிகம் சீரினில் திகழ்ந்த பாடல் திருக்கடைக் காப்புப் போற்றி என்றார். இத்திருப்பதியில் பின்னும் பாடிய பதிகம் `நித்தலும் நியமம் செய்து\' (தி.2 ப.38) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணில் அமைந்த பதிகம் ஆகும்.

பண் :

பாடல் எண் : 124

பொன்னிதழ்க் கொன்றை வன்னி
புனலிள மதியம்நீடு
சென்னியர் திருவெண் காட்டுத்
திருத்தொண்டர் எதிரே சென்றங்
கின்னதன் மையர்க ளானார்
எனவொணா மகிழ்ச்சி பொங்க
மன்னுசீர்ச் சண்பை யாளும்
மன்னரைக் கொண்டு புக்கார்.

பொழிப்புரை :

பொன்போன்ற இதழ்களையுடைய கொன்றை மலரும், வன்னியும், கங்கையும், பிறைச் சந்திரனும் ஆகிய இவற்றை அணிந்துள்ள தலைமை பொருந்திய சிவபெருமானின் திருவெண் காட்டில் உள்ள தொண்டர்கள், திருமுன்வந்து, இன்னதன்மை ஆனார் என்று இயம்பலாகாதவாறு மேன்மேலும் மகிழ்ச்சி பெருக, நிலை பெற்ற சிறப்பினையுடைய சீகாழியை ஆண்டு வரும் தலைவரான பிள்ளையாரை வரவேற்று, அழைத்துக் கொண்டு அந்நகரத்துள் புகுந்தனர்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 125

முத்தமிழ் விரகர் தாமும்
முதல்வர்கோ புரத்து முன்னர்ச்
சித்தநீ டுவகை யோடும்
சென்றுதாழ்ந் தெழுந்து புக்குப்
பத்தராம் அடியார் சூழப்
பரமர்கோ யிலைச்சூழ் வந்து
நித்தனார் தம்முன் பெய்தி
நிலமுறத் தொழுது வீழ்ந்தார்.

பொழிப்புரை :

முத்தமிழ் வித்தகரான பிள்ளையார், சிவபெரு மானின் திருக்கோபுரத்தை, உள்ளத்தில் பெருகிய மகிழ்ச்சியுடன் முன் தாழ்ந்து வணங்கி, எழுந்து, உட்சென்று, பத்திமை மிக்க தொண்டர்கள் சூழ, இறைவரின் திருக்கோயிலை வலம் வந்து, என்றும் நிலைபெற் றிருக்கும் இறைவரின் திருமுன்பு சென்று, நிலம் பொருந்தத் தொழுது விழுந்தார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 126

மெய்ப்பொரு ளாயி னாரை
வெண்காடு மேவி னாரைச்
செப்பரும் பதிக மாலை
கண்காட்டு நுதன்முன் சேர்த்தி
முப்புரம் செற்றார் பாதம்
சேரும்முக் குளமும் பாடி
ஒப்பரும் ஞானம் உண்டார்
உளமகிழந் தேத்தி வாழ்ந்தார்.

பொழிப்புரை :

மெய்ப்பொருளாக விளங்கியருளும் திருவெண் காட்டில் வீற்றிருக்கும் இறைவற்குச் சொலற்கரிய சிறப்புடைய திருப் பதிகமான `கண்காட்டு நுதலானும்\' (தி.2 ப.48) எனத் தொடங்கும் சீகாமரப் பண்ணில் அமைந்த பதிகத்தை மாலையாகச் சாத்தி, முப்புரங் களையும் எரித்த இறைவர் திருவடிகளைச் சேரும் முக்குளங்களையும் அப்பதிகத்தில் அமைத்துப் பாடி, ஒப்பில்லாத ஞானப் பாலமுது உண்ட பிள்ளையார், மனம் மகிழ்ந்து போற்றி அங்கு வீற்றிருந்தருளினார்.

குறிப்புரை :

முக்குளங்கள்: மதி - (சோம குண்டம்), ஞாயிறு - (சூரிய குண்டம்), நெருப்பு - (அக்கினி குண்டம்) ஆகிய மூவர் பெயரானும் அமைந்திருக்கும் குளங்கள். இம்மூன்றனுள் முன்னிரு குளங்களின் சிறப்பை, `இருகாமத்திணையேரி\' (பட்டினப். வரி 39) எனப் பட்டினப்பாலையும், `சோம குண்டம், சூரிய குண்டம் துறை மூழ்கிக் காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடும் தாம் இன் புறுவர் உலகத்துத் தையலார் போகம் செய் பூமியினும் போய்ப் பிறப் பர்\' (சிலப். புகார்க் கனாத். 59-63) எனச் சிலம்பும் நவிலும். இம்முக்குளச் சிறப்பினைப் பிள்ளையார் 2, 7 ஆகிய பாடல்களில் போற்றியுள்ளார். பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை வாயினவே வரம்பெறுவ ரையுறவேண் டாவொன்றும் வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே. (தி.2 ப.48 பா.2) `....வினைதுரக்கும் முக்குளநன் குடையானு முக்கணுடை யிறையவனே\' (தி.2 ப.48 பா.7) என்பன அப்போற்றி உரைகளாம். இப்பதிகப் பயனாகவே மெய்கண் டார் தோன்றியருளினார் என்பதும் இங்கு நினைவுகூரத் தக்கதாம்.

பண் :

பாடல் எண் : 127

அருமையாற் புறம்பு போந்து
வணங்கிஅங் கமரும் நாளில்
திருமுல்லை வாயில் எய்திச்
செழுந்தமிழ் மாலை சாத்தி
மருவிய பதிகள் மற்றும்
வணங்குவார் மறையோர் ஏத்தத்
தருமலி புகலி வந்து
ஞானசம் பந்தர் சார்ந்தார்.

பொழிப்புரை :

அக்கோயிலினின்றும் பிரிதற்கரிய வகையில் வெளிப்போந்து வணங்கிச் சென்று, அத்திருப்பதியில் அவர் எழுந் தருளியிருந்த அந்நாள்களில், தென் திருமுல்லைவாயிலை அடைந்து செந்தமிழ் மாலையான திருப்பதிகத்தைப் பாடி, அவ்விடத்தினின்றும் அணுகப் பொருந்திய மற்றைய திருப்பதிகளையும் வணங்குவாராய், அந்தணர் போற்ற வந்த ஞானசம்பந்தர், அருட்செல்வம் மிக்க சீகாழியை அடைந்தார்.

குறிப்புரை :

`திருமுல்லைவாயில்\' எனும் பெயருடைய பதிகள் தொண்டை நாட்டிலும் சோழ நாட்டிலுமாக ஈரிடத்தும் உள்ளன. இப்பதி, சோழ நாட்டில் உள்ளதாகும். இவ்வேறுபாடு அறிய இதனைத் தென்திருமுல்லைவாயில் என அழைத்தனர். இங்கு அருளிய பதிகம் `துளிமண்டி\' (தி.2 ப.88) எனத் தொடங்கும் பியந்தைக் காந்தாரப் பண்ணமைந்த பதிகமாகும். இங்கு மருவிய பதிகள் எனக் குறிப்பன இவையிவை எனத்தெரிந்தில.

பண் :

பாடல் எண் : 128

தோணிவீற் றிருந்தார் தம்மைத்
தொழுதுமுன் நின்று தூய
ஆணியாம் பதிகம் பாடி
அருட்பெரு வாழ்வு கூரச்
சேணுயர் மாட மோங்குந்
திருப்பதி அதனிற் செய்ய
வேணியார் தம்மை நாளும்
போற்றிய விருப்பின் மிக்கார்.

பொழிப்புரை :

திருத்தோணியில் வீற்றிருக்கும் சிவபெருமானை வணங்கி, திருமுன்பு நின்று, தூய்மை பொருந்திய உரையாணியான திருப்பதிகத்தைப் பாடி, அருள் பெருக்கும் நல்வாழ்வு பெருக, வானளாவ உயர்ந்த மாளிகைகள் சூழ்ந்த அப்பெரும் பதியில், வீற்றிருந்தருளும் சிவந்த சடையையுடைய சிவபெருமானை நாளும் போற்றிவரும் விருப்பம் மிக்கவராயினர்.

குறிப்புரை :

தூய ஆணி - தூயதாய பொன்னாலாய ஆணி : அச் சாணி இறைவன். உருள் பெருந்தேருக்கு அச்சாணி இன்றியமையா தாதல் போல, உலகுயிர்களின் இயக்கத்திற்கு இறைவன் இன்றியமை யாத அச்சாணியாக விளங்குதலின், அப்பெருமானைத் `தூய ஆணி\' என்றார். `உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து\' (குறள்,1032) எனவரும் குறளும் நினைவு கூரத் தகும். இவ்வாறு இறைவனை உருவகித்துக் கூறும் பதிகம், `அன்ன மென்னடை\' (தி.2 ப.102) எனத் தொடங்கும் நட்டராகப் பண்ண மைந்த திருப்பதிக மாகும். இப்பதிகத்தில் வரும் நான்காவது பாடலில் `சிரபுரத் தமர்கின்ற ஆணிப் பொன்னினை அடிதொழு மடியவர்க் கருவினை யடையாவே\' என வருதலின், இப்பதிகமே இதுபொழுது அருளிய பதிகமாகும். இதுவன்றிச் சிவக்கவிமணியாரும், வ. சு. செ. யும் குறிக்கும் `வண்டரங்க\' (தி.1 ப.60) எனவரும் பதிகமோ, அன்றி `எம்பிரான்\' (தி.2 ப.40) எனவரும் பதிகமோ ஈண்டுப் பாடப்பட்டு இருக்கலாம் என்பது அத்துணைப் பொருத்தம் இன்றாம்.

பண் :

பாடல் எண் : 129

வைகுமந் நாளிற் கீழ்பால்
மயேந்திரப் பள்ளி வாசம்
செய்பொழில் குருகா வூரும்
திருமுல்லை வாயில் உள்ளிட்
டெய்திய பதிக ளெல்லாம்
இன்புற இறைஞ்சி ஏத்தித்
தையலாள் பாகர் தம்மைப்
பாடினார் தமிழ்ச்சொல் மாலை.

பொழிப்புரை :

இவ்வாறு அப்பதியில் வாழ்ந்து வந்த நாள்களில் இப்பதியின் கீழ்த் திசையில் உள்ள திருமயேந்திரப்பள்ளியையும், மணம் கமழ்கின்ற சோலை சூழ்ந்த திருக்குருகாவூரையும், திருமுல்லை வாயில் உள்ளிட்ட முன்பு சென்று வணங்கிய திருப்பதிகள் பலவற்றை யும் இன்பம் பொருந்தப் போற்றி, உமையம்மையை ஒரு கூற்றில் கொண்ட சிவபெருமான் மீது தமிழ்ச் சொல் மாலைகளைப் பாடினார்.

குறிப்புரை :

திருமயேந்திரப்பள்ளியில் அருளிய பதிகம்: `திரைதரு\' - பண் : கொல்லி (தி.3 ப.31). திருக்குருகாவூரில் அருளிய பதிகம் : `சுண்ணவெண்\' - பண்: அந்தாளிக் குறிஞ்சி (தி.3 ப.124). திருமுல்லைவாயில் உள்ளிட்ட பதிகளாவன: திருக்கலிக்காமூர், திருவெண்காடு, கீழைத் திருக்காட்டுப்பள்ளி முதலியனவாகலாம். இவற்றுள் திருமுல்லைவாயிலுக்குப் பாடிய பதிகம் ஒன்றே இருத் தலின், அது முதல்முறை சென்ற பொழுது பாடியது என முன்னர்க் குறிக்கப்பட்டது. இது பொழுது பாடிய பதிகம் கிடைத்திலது. திருக்கலிக்காமூரில் அருளிய பதிகம்: `மடல்வரையின்\' - பண்: பழம்பஞ்சுரம் (தி.3 ப.105). திருவெண்காட்டில் அருளிய பதிகங்கள்: `உண்டாய் நஞ்ை\\u2970?\' - பண்: காந்தாரம் (தி.2 ப.61). `மந்திர மறையவை\' - பண்: காந்தார பஞ்சமம் (தி.3 ப.15). கீழைத்திருக்காட்டுப்பள்ளியில் அருளிய பதிகம்: `செய்யருகே\' - பண் : நட்டபாடை (தி.1 ப.5).

பண் :

பாடல் எண் : 130

அவ்வகை மருங்கு சூழ்ந்த
பதிகளில் அரனார் பொற்றாள்
மெய்வகை ஞானம் உண்ட
வேதியர் விரவிப் போற்றி
உய்வகை மண்ணு ளோருக்கு
உதவிய பதிகம் பாடி
எவ்வகை யோரும் ஏத்த
இறைவரை ஏத்து நாளில்.

பொழிப்புரை :

அங்ஙனமே அருகிலுள்ள திருப்பதிகளுக்குச் சென்று, இறைவரின் அழகிய திருவடிமலர்களை, மெய்ஞ்ஞானப் பாலமுது உண்ட பிள்ளையார் போற்றி, இந்நிலவுலகத்தில் உள் ளவருக்கு உய்யும் வகை உதவும் பொருட்டுத் திருப்பதிகங்களைப் பாடி, எவ்வகையோர்களும் போற்றுமாறு சிவபெருமானை வணங்கி வதிந்திருக்கும் நாள்களில்,

குறிப்புரை :

மருங்கு சூழ்ந்துள்ள பதிகள் செம்பங்குடி, திருக் கொண்டல், திருமயிலாடி, நல்லூர்ப்பெருமணம், நல்லூர் முதலாயின ஆகலாம் என்பர் சிவக்கவிமணியார். எனினும் இப்பதிகளுக்கு உரிய பதிகங்கள் கிடைத்தில. நல்லூர்ப்பெருமணத்திற்கு இதுபொழுது கிடைத்திருக்கும் பதிகம் இவ்வமையத்தில் அருளப்பெற்றதன்று.

பண் :

பாடல் எண் : 131

திருநீல கண்டத்துப்
பெரும்பாணர் தெள்ளமுதின்
வருநீர்மை இசைப்பாட்டு
மதங்கசூ ளாமணியார்
ஒருநீர்மையுடன் உடைய
பிள்ளையார் கழல்வணங்கத்
தருநீர்மை யாழ்கொண்டு
சண்பையிலே வந்தணைந்தார்.

பொழிப்புரை :

திருநீலகண்டத்துப் பெரும்பாணரும், தெள்ளிய அமுதமாய இசைப்பாடலைப் பாடும் மதங்க சூளாமணியாரும், ஒன்றுபட்ட அன்பின் திறத்தால், ஆளுடைய பிள்ளையாரின் திருவடி களை வணங்குவதற்கு, இசையால் இன்பம் பயக்கும் யாழினைக் கொண்டு, சீகாழிப் பதிக்கு வந்து சேர்ந்தனர்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 132

பெரும்பாணர் வரவறிந்து
பிள்ளையார் எதிர்கொள்ளச்
சுரும்பார்செங் கமலமலர்த்
துணைப்பாதந் தொழுதெழுந்து
விரும்பார்வத் தொடும்ஏத்தி
மெய்ம்மொழிக ளால்துதித்து
வரும்பான்மை தருவாழ்வு
வந்தெய்த மகிழ்சிறந்தார்.

பொழிப்புரை :

`திருநீலகண்டத்து யாழ்ப்பாண நாயனாரும்\' தெள்ளிய அமுதமாய இசைப் பாடலைப் பாடும் `மதங்க சூளாமணி யாரும்\' வருதலை அறிந்து, ஞானசம்பந்தப் பிள்ளையார் எதிரேற்று வரவேற்க, வண்டுகள் பொருந்திய செந்தாமரை மலர் போன்ற அவருடைய இரு திருவடிகளையும் இருவரும் வணங்கி எழுந்து, விரும்பும் ஆர்வத்தோடும் ஏத்தி, மெய்ம்மொழிகளால் போற்றிவரும் பான்மையினால் கிடைக்கப் பெற்ற பெருவாழ்வு வந்து பொருந்த, மகிழ்ச்சியில் திளைத்தனர்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 133

அளவிலா மகிழ்ச்சியினார்
தமைநோக்கி ஐயர்நீர்
உளமகிழ இங்கணைந்த
உறுதியுடை யோமென்றே
இளநிலா நகைமுகிழ்ப்ப
இசைத்தவரை உடன்கொண்டு
களநிலவு நஞ்சணிந்தார்
பாலணையுங் கவுணியனார்.

பொழிப்புரை :

அளவற்ற மகிழ்ச்சியுடைய அவ்விருவரையும் நோக்கி, `ஐயரே! தாங்கள் மனம் மகிழ இங்குச் சேர்ந்ததனால் ஆன உறுதிப் பொருளைப் பெற்றவர் ஆனோம்\' என்று இளநிலா ஒளிவீசும் புன்னகையுடன் கூறி, அவர்களையும் தம்முடனே கொண்டு, கருமை பொருந்திய நஞ்சுடைய கழுத்தினரான சிவபெருமானிடம் சேரும் கவுணியரான பிள்ளையார்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 134

கோயிலினிற் புறமுன்றிற்
கொடுபுக்குக் கும்பிடுவித்
தேயுமிசை யாழ்உங்கள்
இறைவருக்கிங் கியற்றும்என
ஆயபுகழ்ப் பிள்ளையார்
அருள்பெற்ற அதற்கிறைஞ்சி
மேயதொடைத் தந்திரியாழ்
வீக்கிஇசை விரிக்கின்றார்.

பொழிப்புரை :

திருக்கோயிலின் புறத்தேயுள்ள திருமுற்றத்தில் புகுந்து வணங்கச் செய்து `பொருந்திய இசையையும் யாழையும் உம் இறைவற்கு இங்கிருந்து இயக்குங்கள்\' என்று கூறியருள, அவர்களும் புகழ் பொருந்திய பிள்ளையாரின் திருவருளைப் பெற்றதால் வணங்கிப் பொருந்திய தொடை நரம்புகளை வீக்கி, இசையை வாசிப்பார்களாகி,

குறிப்புரை :

திருக்கோயிலின் புறமுற்றத்தே நின்று வணங்கச் செய்தது அக்கால மரபு பற்றியதாம்.

பண் :

பாடல் எண் : 135

தானநிலைக் கோல்வடித்துப்
படிமுறைமைத் தகுதியினால்
ஆனஇசை ஆராய்வுற்
றங்கணர்தம் பாணியினை
மானமுறைப் பாடினியா
ருடன்பாடி வாசிக்க
ஞானபோ னகர்மகிழ்ந்தார்
நான்மறையோர் அதிசயத்தார்.

பொழிப்புரை :

இசையிடங்கள் உரிய நிலையில் உண்டாகுமாறு கருவியினால் அமைத்து, நரம்பு படியும் முறைமையின் தகுதியால் ஆன, எடுத்தும் படுத்தும் இசைக்கும் வகையில் இசையைத் தெரிந்து, இறைவரின் திருப்பாட்டினை அளவுபடும் முறையில் பாடினவரான மதங்க சூளாமணியாருடன் ஒன்றிப் பாடி யாழ் வாசிக்கக் கேட்டு, ஞானப் பால் உண்டவரான சம்பந்தர் மகிழ்ச்சியடைந்தார். மறையவர்களும் வியப்புற்றனர்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 136

யாழிலெழும் ஓசையுடன்
இருவர்மிடற் றிசையொன்றி
வாழிதிருத் தோணியுளார்
மருங்கணையும் மாட்சியினைத்
தாழுமிரு சிறைப்பறவை
படிந்ததனி விசும்பிடைநின்
றேழிசை நூற் கந்தருவர்
விஞ்சையரும் எடுத்திசைத்தார்.

பொழிப்புரை :

யாழினின்று எழும் ஓசையோடு இருவர் மிடற் றின் இசையும் ஒன்றித் திருத்தோணியில் உள்ளாரிடம் அணையும் பெருமையை, தாழ்ந்து வரும் கின்னர மிதுனங்களான இரு பறவை களும், சூழ்ந்த ஒப்பற்ற விசும்பில் நின்று, ஏழிசை நூலில் வல்ல கந்தருவர், வித்தியாதரர் என்பவர்களும் பாராட்டினர்.

குறிப்புரை :

கின்னர மிதுனங்கள் - இவை சந்திர மண்டலத்தில் வாழும் பறவை இனத்தவை என்றும், இசை கேட்டு மகிழும் இயல்பு உடையவை என்றும் கூறுப. இப்பறவைகளோடு, கந்தருவர், வித்தியாதரர்களும் இருந்து இவர்கள் இசையை வியந்து கேட்டு மகிழ்ந்தனர் என்பதாம்.

பண் :

பாடல் எண் : 137

எண்ணருஞ்சீர்த் திருத்தோணி
எம்பெருமான் கழல்பரவிப்
பண்ணமையா ழிசைகூடப்
பெரும்பாணர் பாடியபின்
கண்ணுதலார் அருளினால்
காழியர்கோன் கொடுபோந்து
நண்ணிஉறை யிடஞ்சமைத்து
நல்விருந்து சிறந்தளிப்ப.

பொழிப்புரை :

நினைத்தற்கு அரிய சிறப்புடைய திருத்தோணி யில் வீற்றிருக்கும் இறைவரின் திருவடிகளைப் போற்றி, பண்பொருந் திய யாழும், மிடற்று இசையும் பொருந்துமாறு திருநீலகண்டப் பெரும் பாணரும் அவர்தம் மனைவியாரும் பாடி நிறைவுசெய்த பின்பு, நெற்றிக் கண்ணையுடைய இறைவரின் அருளால் சீகாழித் தலைவர் ஆன ஞானசம்பந்தர், அவர்களை அழைத்துக் கொண்டு சென்று, அவர்கள் தங்கியிருப்பதற்குத் தனியிடம் அமைத்து, நல்ல விருந்தை யும் சிறப்பாக அளிக்க,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 138

பிள்ளையார் அருள்பெற்ற
பெரும்பாணர் பிறையணிந்த
வெள்ளநீர்ச் சடையாரை
அவர்மொழிந்த மெய்ப்பதிகம்
உள்ளபடி கேட்டலுமே
யுருகுபெரு மகிழ்ச்சியராய்த்
தெள்ளமிர்தம் அருந்தினர்போற்
சிந்தைகளிப் புறத்தொழுதார்.

பொழிப்புரை :

காழிப் பிள்ளையாரின் அருளைப் பெற்ற பெரும் பாணரும், பிறைச்சந்திரனை அணிந்த கங்கையாறு தங்கிய சடையுடை யவரை, அவர் பாடிய மெய்ப் பதிகங்களை உள்ளவாறு அடியார்கள் சொல்லக் கேட்டு மனமுருகும் பெருமகிழ்ச்சி உடையவராய், தெளிந்த அமுதத்தை உண்டவர் போல உள்ளம் களிப்புக் கொள்ள வணங்கினர்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 139

காழியார் தவப்பயனாம்
கவுணியர்தம் தோன்றலார்
ஆழிவிட முண்டவர்தம்
அடிபோற்றும் பதிகஇசை
யாழின்முறை மையின்இட்டே
எவ்வுயிரு மகிழ்வித்தார்
ஏழிசையும் பணிகொண்ட
நீலகண்ட யாழ்ப்பாணர்.

பொழிப்புரை :

சீகாழிப் பதியினர் செய்த தவப்பயனாய் உள்ள கவுணியர் குலத்தில் தோன்றிய சம்பந்தர், கடலில் தோன்றிய நஞ்சை உண்ட இறைவரின் திருவடிகளைப் போற்றும் பதிகங்களின் இசையை ஏழிசைகளையும் ஏவல் கொண்ட திருநீலகண்ட யாழ்ப்பாணர், யாழ் முறைமையால் வாசித்து எவ்வுயிர்களையும் மகிழ்வித்தார்.

குறிப்புரை :

ஏழிசையும் பணிகொண்ட நீலகண்ட யாழ்ப்பாணர் என்பார், அப்பண்கள் தாமும் தம் ஏவல்வழி நிற்கும் பெற்றியவாய் நிற்றலின். அப்பண்கள் அமையப் பாடத் தாம் அரிதில் இசைப்பதின்றி, இவர் இசைக்கும் அளவில் அவை வந்து அமையும் என்பது கருத்தாம்.

பண் :

பாடல் எண் : 140

சிறியமறைக் களிறளித்த
திருப்பதிக இசையாழின்
நெறியிலிடும் பெரும்பாணர்
பின்னுநீர் அருள்செய்யும்
அறிவரிய திருப்பதிக
இசையாழில் இட்டடியேன்
பிறிவின்றிச் சேவிக்கப்
பெறவேண்டும் எனத்தொழுதார்.

பொழிப்புரை :

சிறிய மறைக் களிறாய பிள்ளையார் அருளிய திருப்பதிக இசையினை யாழிசையின் நெறியில் வாசித்த பெரும் பாணர், மேலும் அவரை நோக்கி, `தாங்கள் ஆணையிட்டருளும் அறிதற்கரிய பெருமையுடைய திருப்பதிகங்களது இசையை யாழில் இசைத்து, அடியேன் தங்களைப் பிரியாமல் வணங்கி, உடன் இருக்கும் பேறு பெற வேண்டும்\' என்று வேண்டி வணங்கினார்.

குறிப்புரை :

சிறிய களிறு, மறைக்களிறு எனத் தனியே கூட்டுக. அவை அவர்தம் இளமைப் பருவத்தையும் தமிழ் மறைசாற்றி வரும் தகைமையையும் குறித்தன.

பண் :

பாடல் எண் : 141

மற்றதற்குப் பிள்ளையார்
மனமகிழ்வுற் றிசைந்தருளப்
பெற்றவர்தாம் தம்பிரான்
அருளிதுவே யெனப்பேணிச்
சொற்றமிழ்மா லையின்இசைகள்
சுருதியாழ் முறைதொடுத்தே
அற்றைநாட் போலென்றும்
அகலாநண் புடன்அமர்ந்தார்.

பொழிப்புரை :

அவ்விண்ணப்பத்திற்கு மகிழ்ந்த பிள்ளையார் உள்ளம் மகிழ்ந்து இசைந்தருள, அத்தகைய பேற்றைப் பெற்ற பாண னார், `இது நம் பெருமானின் அருளேயாம்\' என்று விருப்பத்துடன் பேணி, பிள்ளையாருடைய திருப்பதிகங்களான தமிழ் மாலைகளைப் பண்ணமைந்த யாழிசையின் முறையில் வைத்து வாசித்துக் கொண்டே அந்நாள் போன்றே என்றும் பிரியாதவராய் உடன் இருந்து வந்தனர்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 142

சிரபுரத்தில் அமர்ந்தருளுந்
திருஞான சம்பந்தர்
பரவுதிருத் தில்லைநடம்
பயில்வாரைப் பணிந்தேத்த
விரவியெழும் பெருங்காதல்
வெள்ளத்தை உள்ளத்தில்
தரஇசையுங் குறிப்பறியத்
தவமுனிவர்க்கு அருள்செய்தார்.

பொழிப்புரை :

சீகாழியில் இருந்தருளும் திருஞானசம்பந்தர், யாவரும் வணங்கிப் போற்றும் திருத்தில்லையில் திருக்கூத்தியற்றும் இறைவரைப் பணிந்து போற்றிட, பொருந்தி எழும் விருப்பமான பெருவெள்ளத்தைத் தம் உள்ளத்தில் கொள்ள, அதற்கு இசையும் அருட் குறிப்பும் நிகழ்ந்ததாக, அவ்வருட் குறிப்பைத் தவ முனிவராம் தந்தையாரான சிவபாத இருதயருக்குக் கூறினார்.

குறிப்புரை :

பிள்ளையாருக்குத் தில்லைக்குச் செல்ல வேண்டும் எனும் விருப்பமும், குறிப்பும் உள்ளத்தில் தோன்றுதற்கேற்ற திருவருட் குறிப்பு நிகழ, அதனைத் தம் தந்தையாரிடம் தெரிவித்தார்.

பண் :

பாடல் எண் : 143

பிள்ளையார் அருள்செய்யப்
பெருந்தவத்தாற் பெற்றெடுத்த
வள்ளலார் தாமும்உடன்
செல்வதற்கு மனங்களிப்ப
வெள்ளிமால் வரையென்னத்
திருத்தோணி வீற்றிருந்த
புள்ளிமா னுரியாரைத்
தொழுதருளாற் புறப்பட்டார்.

பொழிப்புரை :

காழிப்பிள்ளையார் இவ்வாறு அருள்செய்ய, பெருந்தவத்தின் பயனாய்ப் பிள்ளையாரைத் தமக்கு மகனாராகப் பெற்ற வள்ளலாரான சிவபாத இருதயர், தாமும், அவருடன் செல்ல மன மகிழ்ச்சியுடன் ஒருப்பட்டாராக, பெரிய வெள்ளி மலைபோல் விளங்கும் திருத்தோணியில் வீற்றிருந்தருளும் புள்ளிமான் தோலை உடைய இறைவரை வணங்கி, அருள் விடை பெற்றுச் சீகாழியில் இருந்தும் புறப்பட்டனர்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 144

தாவில்யாழ்ப் பாணரொடும்
தாதையார் தம்மோடும்
மேவியசீ ரடியார்கள்
புடைவரவெங் குருவேந்தர்
பூவின்மே லயன்போற்றும்
புகலியினைக் கடந்துபோய்த்
தேவர்கள்தம் பெருந்தேவர்
திருத்தில்லை வழிச்செல்வார்.

பொழிப்புரை :

குற்றம் இல்லாத யாழ்ப்பாணரோடும், தந்தை சிவபாத இருதயருடனும் பொருந்திய சிறப்புடைய அடியவர்கள் இருமருங்கும் சூழ்ந்து வர, மண்ணுலகில் வந்து நான்முகன் வழிபட்ட சீகாழிப் பதியைக் கடந்து, தேவர்களுக்கெல்லாம் பெருந்தலைவராய கூத்தப் பெருமானின் திருத்தில்லையை நோக்கிச் செல்வாராயினர்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 145

நள்ளி ருட்கண்நின் றாடுவார்
உறைபதி நடுவுகண் டனபோற்றி
முள்ளு டைப்புற வெள்ளிதழ்க்
கேதகை முகிழ்விரி மணஞ்சூழப்
புள்ளு டைத்தடம் பழனமும்
படுகரும் புடைகழிந் திடப்போந்து
கொள்ளி டத்திரு நதிக்கரை
அணைந்தனர் கவுணியர் குலதீபர்.

பொழிப்புரை :

நள்ளிருளில் நட்டம் பயின்று ஆடுகின்ற இறை வர் எழுந்தருளியிருக்கும் தில்லைத் திருப்பதிக்கு இடையில் கண்ட வற்றை வழிபட்டு, அடியில் முள்களுடன் கூடிய புற இதழ்களைக் கொண்ட தாழைகளின் மொட்டுகள் மலருகின்றதால் மணம் கமழ் கின்ற, நீர்ப் பறவைகளையுடைய இடம் அகன்ற வயல்களும், பள்ள மான நிலங்களும் இருமருங்கிலும் கழிந்திடச் சென்று, கவுணியர் குல விளக்கான ஞானசம்பந்தர் கொள்ளிடத்தின் தென்கரையை அடைந்தார்.

குறிப்புரை :

`உறைபதி நடுவு கண்டன போற்றி\' எனவரும் பதிக ளும் பதிகங்களும் இவை எனத் தெரிந்தில. இவ்விரு பாடல்களும் ஒரு முடிபுடையன.

பண் :

பாடல் எண் : 146

வண்டி ரைத்தெழு செழுமலர்ப்
பிறங்கலும் மணியும் ஆரமும்உந்தித்
தண்ட லைப்பல வளத்தொடும்
வருபுனல் தாழ்ந்துசே வடிதாழத்
தெண்டி ரைக்கடற்பவளமும்
பணிலமும் செழுமணித் திரள்முத்தும்
கொண்டு இரட்டிவந்து ஓதமங்கு
எதிர்கொளக் கொள்ளிடங் கடந்தேறி.

பொழிப்புரை :

வண்டுகள் ஒலித்து எழுகின்ற செழுமையான மலர்களின் கூட்டத்தையும், மணிகளையும், சந்தனக் கட்டைகளையும் வாரிக் கொண்டு, சோலைகளின் வளங்கள் பலவற்றுடன் வருகின்ற ஆற்றின் நீர், தாழ்ந்த தம் அடிகளை வணங்கவும், தெளிவான அலை களையுடைய தன்னிடத்தினின்றும் பவளங்கள், சங்குகள் ஆகியவற் றையும், மற்ற மணிகளையும், திரண்ட முத்துக்களையும் அலைகளால் வாரிக் கொண்டு வீசி வரும் கடல்நீர் எதிர் கொள்ளவும், கொள்ளிடத் திருநதியினைக் கடந்து வடகரையின் மேல் ஏறி,

குறிப்புரை :

இப்பாடல் ஆற்று வளமும், கடல் வளமும் ஒருங்கு உளங்கொள அமைந்துள்ளது.

பண் :

பாடல் எண் : 147

பல்கு தொண்டர்தங் குழாத்தொடும்
உடன்வரும் பயில்மறை யவர்சூழச்
செல்க திப்பயன் காண்பவர்
போல்களி சிந்தைகூர் தரக்கண்டு
மல்கு தேவரே முதலனைத்
துயிர்களும் வணங்கவேண் டினவெல்லாம்
நல்கு தில்லைசூழ் திருவெல்லை
பணிந்தனர் ஞானஆ ரமுதுண்டார்.

பொழிப்புரை :

நிறைந்த அடியவர் திருக்கூட்டத்துடன் பழகி வரும் அந்தணர்கள் சூழ்ந்துவர, செல்லும் கதியின் பயனைக் காண் பவரைப் போல் உளமகிழ்வு கொண்டு, பெருகிய தேவர் முதலான எவ்வுயிர்களும் வணங்க, அவரவர் வேண்டிய வரங்களையெல்லாம் தரும் தில்லையைச் சூழ்ந்த திருவெல்லையினை, ஞானம் நிறைந்த பால் அமுது உண்ட பிள்ளையார் நிலத்தில் விழுந்து வணங்கினார்.

குறிப்புரை :

செல்கதி - சிவகதி. `எண்ணில்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலை\' (தி.3 ப.24 பா.1)எனவரும் திருவாக்கும் காண்க. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 148

செங்கண் ஏற்றவர் தில்லையே
நோக்கிஇத் திருந்துல கினிற்கெல்லாம்
மங்க லந்தரு மழவிளம்
போதகம் வரும்இரு மருங்கெங்கும்
தங்கு புள்ளொலி வாழ்த்துரை
எடுத்துமுன் தாமரை மதுவாசப்
பொங்கு செம்முகை கரங்குவித்
தலர்முகங் காட்டின புனற்பொய்கை.

பொழிப்புரை :

இத்திருந்திய உலகுக்கெல்லாம் மங்கலம் தரும் இளமையுடைய யானைக் கன்றான ஞானசம்பந்தர் வரும் இருமருங் கிலும், எங்கும் உறையும் பறவைகளின் ஒலியான வாழ்த்துகள், வழங்க, தாமரை மலர்களின் செம்முகையான கைகள் குவிய, நீர்ப் பொய்கைகள் மலர்ந்த முகத்தைக் காட்டி வரவேற்றன.

குறிப்புரை :

மங்கலம் தருதல் - சிவம் பெருக்குதல். மழ, இளஎன்பன இளமை யென்னும் ஒரு பொருள் குறித்த பல சொற்களாம். பிள்ளை யாரை அங்குள்ள பொய்கைகள் வரவேற்கும் திறனை இப்பாடல் கூறுகின்றது.

பண் :

பாடல் எண் : 149

கலவ மென்மயில் இனங்களித்
தழைத்திடக் கடிமணக் குளிர்கால்வந்
துலவி முன்பணிந் தெதிர்கொளச்
கிளர்ந்தெழுந் துடன்வருஞ் சுரும்பார்ப்ப
இலகு செந்தளிர் ஒளிநிறந்
திகழ்தர இருகுழை புடையாட
மலர்மு கம்பொலிந் தசையமென்
கொம்பர்நின் றாடுவ மலர்ச்சோலை.

பொழிப்புரை :

மலர்ச் சோலைகளில், தோகைகளையுடைய மென்மையான மயில் இனங்கள் மகிழ்வுடன் அழைக்கவும், புதிய மணமுடைய குளிர்ந்த தென்றல் காற்று எதிர் கொண்டு வரவேற்கவும், பெயர்ந்து எழுந்து உடன்வரும் வண்டுகள் ஒலிக்கவும், விளங்கும் செந்தளிர்கள் ஒளியுடைய நிறம் விளங்கவும், இருகுழைகள் இரு மருங்கும் ஆடவும், மலர்கள் முகம் பொலிந்து அசையவும், மென்மை யான கொம்புகள் நின்று ஆடின.

குறிப்புரை :

இருகுழை - பெரிய தளிர்கள்: பெண்களுக்கு ஆகுங்கால், காதணியாம். இதனால், சோலைகள் பிள்ளையாரை வரவேற்கும் காட்சி புலனாகும்.

பண் :

பாடல் எண் : 150

இழைத்த டங்கொங்கை இமயமா
மலைக்கொடி இன்னமு தெனஞானம்
குழைத்த ளித்திட அமுதுசெய்
தருளிய குருளையார் வரக்கண்டு
மழைத்த மந்தமா ருதத்தினால்
நறுமலர் வண்ணநுண் துகள்தூவித்
தழைத்த பொங்கெழில் முகஞ்செய்து
வணங்கின தடம்பணை வயற்சாலி.

பொழிப்புரை :

இடம் அகன்ற வயல்களில் உள்ள நெற்பயிர்கள், அணிகள் அணிந்த மார்பகங்களையுடைய, இமயமலையில் தோன் றிய கொடிபோன்ற பார்வதியம்மையார் இனிய அமுதச் சிவஞானத் தைக் குழைத்து அளிக்க, அதை உண்டருளிய ஞானசம்பந்தர் வரக் கண்டு, குளிர்ந்த மென்மையான காற்றினால் மணம் கமழும் மலர் களின் அழகிய நுண்ணிய பூந்தாதுக்களான சுண்ணத்தைத் தூவித் தழைத்த எழில் முகம் செய்து வணங்கின.

குறிப்புரை :

நெற்பயிர்கள், பிள்ளையாரை வரவேற்ற காட்சி இதனால் விளக்கப் பெறுகின்றது.

பண் :

பாடல் எண் : 151

ஞாலம் உய்ந்திட ஞானமுண்
டவர்எழுந் தருளும்அந் நலங்கண்டு
சேல லம்புதண் புனல்தடம்
படிந்தணை சீதமா ருதம்வீசச்
சால வும்பல கண்பெறும்
பயன்பெறுந் தன்மையிற் களிகூர்வ
போல சைந்திரு புடைமிடைந்
தாடின புறம்பணை நறும்பூகம்.

பொழிப்புரை :

வயல்களின் அருகேயுள்ள மணம் கமழும் பாக்கு மரங்கள், உலகம் உய்யும் பொருட்டாக ஞான அமுதையுண்டவர் எழுந்தருளும் திருத்தகைமையைக் கண்டு, சேல் மீன்கள் அலம்பும் குளிர்ந்த நீரையுடைய பொய்கைகளில் படிந்து அணைகின்ற குளிர்ந்த காற்று வீச, மிகப் பல கண்கள் பெற்ற பயன் பெறும் தன்மையினால் மகிழ்ச்சி அடைவன போல், இருமருங்கிலும் அசைந்து நெருங்கி ஆடின.

குறிப்புரை :

பூகம்: கமுகு என்கின்ற பாக்கு மரங்கள். பிள்ளையார் வரவு கண்டநிலையில் அம்மரங்கள் அவரை ஆடி வரவேற்றனவாம்.

பண் :

பாடல் எண் : 152

பவந்த விர்ப்பவர் தில்லைசூழ்
எல்லையில் மறையவர் பயில்வேள்விச்
சிவந்த ரும்பய னுடையஆ
குதிகளின் செழும்புகைப் பரப்பாலே
தவந்த ழைப்பவந் தருளிய
பிள்ளையார் தாமணை வுறமுன்னே
நிவந்த நீலநுண் துகில்விதா
னித்தது போன்றது நெடுவானம்.

பொழிப்புரை :

தவம் தழையத் தோன்றியருளிய ஞானசம்பந்தப் பெருமான் வந்தருள, அவரை வரவேற்று மகிழும் பொருட்டுப் பிற வியை ஒழித்தருளுபவரான கூத்தரின் திருத்தில்லை நகரத்தைச் சூழ்ந்த எல்லையில், மறையவர் பயிலும் வேள்வியில், சிவத்தன்மையை விளக்கும் பயன் கொண்ட வேள்வித் தீயினின்றும் எழுகின்ற செழும் புகையினது பரப்பினால், பெரிய வானம், உயர்ந்த நீலநிறமான நுட்ப மான துகிலை மேற் கட்டியாய்க் கட்டினதைப் போல் விளங்கியது.

குறிப்புரை :

சிவம் தரும் பயன் - பாச நீக்கம் செய்து சிவத்தை அடை விக்கும் பயன்: வீடு பேறாம் பயன். கொள்ளிடத்தின் தென்கரையை அடைந்து தில்லையை நோக்கிவரும் பிள்ளையாரை, இருமருங்கிலு முள்ள பொய்கைகளும் (பா.148), சோலைகளும் (பா.149), நெற் பயிர்களும் (பா.150), பாக்குமரங்களும் (பா.151), வானமும் (பா.152) மகிழ்ச்சி மீதூர எதிர்கொண்டவாற்றைத் தொடர்ந்து கூறி யிருக்கும் திறம் அறிந்து போற்றுதற்குரியதாம்.

பண் :

பாடல் எண் : 153

கரும்பு செந்நெல்பைங் கமுகொடு
கலந்துயர் கழனியம் பணைநீங்கி
அரும்பு மென்மலர் தளிர்பல
மூலமென் றனைத்தின் ஆகரமான
மருங்கில் நந்தன வனம்பணிந்
தணைந்தனர் மாடமா ளிகையோங்கி
நெருங்கு தில்லைசூழ் நெடுமதில்
தென்திரு வாயில் நேரணித்தாக.

பொழிப்புரை :

கரும்பும் செந்நெல்லும் பசுமையான பாக்கு மரங்களுடன் கலந்து உயர்தற்கு இடமான வயல்களைக் கொண்ட மருத நிலத்தைக் கடந்து, அரும்புகளும் மென்மையான தளிர்களும், பழங்களும், வேர்களும் என்றிவை முதலான எல்லாவற்றிற்கும் பிறப்பிடமாக உள்ள திருநந்தன வனங்களை வணங்கி, மாடமாளிகை கள் ஓங்கிச் செறியும் தில்லை மாநகரைச் சூழ்ந்த மதிலின் தென்திசை வாயிலின் அருகில், ஞானசம்பந்தர் வந்து சேர்ந்தார்.

குறிப்புரை :

பொய்கை முதலாக உள்ள இயற்கைப் பொருள்கள் யாவும் பிள்ளையாரை வணங்கி வரவேற்கத் திருநந்தனவனத்தை மட்டும் இவர் வணங்கி வந்தனர் என்றது, அஃது இறைவற்குப் பயன் படும் தகவும் பயனும் கருதியாம். `பன்மலர்ப் புனித நந்த வனங்கள் பணிந்து சென்றனன் மணங்கமழ் தாரான்\' எனச் சுந்தரர் வரலாற்றில் (தி.12 சரு.1-5 பா.94) வருமாறும் காண்க.

பண் :

பாடல் எண் : 154

பொங்கு கொங்கையிற் கறந்தமெய்ஞ்
ஞானமாம் போனகம் பொற்குன்ற
மங்கை செங்கையா லூட்டவுண்
டருளிய மதலையார் வந்தார்என்
றங்கண்வாழ் பெருந்திருத் தில்லை
அந்தண ரன்பர்களுடன் ஈண்டி
எங்கும்மங்கல அணிமிக அலங்கரித்
தெதிர் கொள அணைவார்கள்.

பொழிப்புரை :

`பால் பெருகிய மார்பகங்களில் கலந்த மெய்ஞ் ஞானப் பாலமுதினைப் பொன்மலையின் மங்கையாரான உமையம் மையார் தம் கையினால் எடுத்து ஊட்ட, அதனை உண்டருளிய பிள்ளையார் வந்தார்\' என்று அங்கு வாழ்கின்ற தில்லைவாழ் அந்தணர்கள் அடியார்களுடன் கூடி நிறைந்து, யாண்டும் நகரை அணி செய்து, பிள்ளையாரை எதிர்கொள்ள அணைவாராய்,

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 155

வேத நாதமும் மங்கல
முழக்கமும் விசும்பிடை நிறைந்தோங்கச்
சீத வாசநீர் நிறைகுடந்
தீபங்கள் திசையெலாம் நிறைந்தாரச்
சோதி மாமணி வாயிலின் புறஞ்சென்று
சோபன வாக்கமுஞ் சொல்லிக்
கோதி லாதவர் ஞானசம்
பந்தரை எதிர்கொண்டு கொடுபுக்கார்.

பொழிப்புரை :

மறைகளின் ஒலியும், மங்கல முழக்கமும் வானத் தில் நிறைந்து ஒலிக்கவும், குளிர்ச்சியும் மணமும் உடைய நீர் நிரம்பிய குடங்களும் நல்விளக்குகளும் நிறைந்து பொருந்தவும், ஒளி பொருந்திய பெரிய மணிகளையுடைய திருவாயிலின் வெளியே நின்று, மங்கலம் பெருக, `நல் வரவாகுக\' என்ற நன் மொழிகளையும் வாழ்த்துரைகளையும் சொல்லித் தீது நீங்கப் பெற்று வாழ்ந்தவர்களாகி, ஞானசம்பந்தரை எதிர் ஏற்று அழைத்துச் சென்றனர்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 156

செல்வம் மல்கிய தில்லைமூ
தூரினில் தென்றிசைத் திருவாயில்
எல்லை நீங்கியுள் புகுந்திரு
மருங்குநின் றெடுக்கும்ஏத் தொலிசூழ
மல்லல் ஆவண மறுகிடைக்
கழிந்துபோய் மறையவர் நிறைவாழ்க்கைத்
தொல்லை மாளிகை நிறைத்திரு
வீதியைத் தொழுதணைந் தனர்தூயோர்.

பொழிப்புரை :

செல்வம் நிரம்பிய தில்லை மூதூரில் தெற்கு வாயிலின் வழி உட்புகுந்து, இருமருங்கிலும் எடுத்துப் போற்றும் ஒலி சூழ, வளமையுடைய அங்காடித் தெருவினைக் கடந்துபோய், அந் தணர்களின் நிறைவுடைய வாழ்க்கையைக் காண்டற்குரிய திருமாளி கைகள் நிரல்பட அமைந்து நிற்கும் திருவீதியைத் தொழுது, பிள்ளை யாரான தூயவர் திருநகரத்துள் சென்றனர்.

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 157

மலர்ந்த பேரொளி குளிர்தரச்
சிவமணங் கமழ்ந்துவான் துகள்மாறிச்
சிலம்ப லம்புசே வடியவர்
பயில்வுறுஞ் செம்மையால் திருத்தொண்டு
கலந்த அன்பர்தஞ் சிந்தையில்
திகழ்திரு வீதிகண் களிசெய்யப்
புலங்கொள் மைந்தனார் எழுநிலைக்
கோபுரம் பணிந்தெழுந் தனர்போற்றி.

பொழிப்புரை :

உலகெலாம் மலர்ந்த பேரொளி தண்ணிதாக அமைய, சிவ மணம் கமழ நிற்பதால் வானளவாய தூசுகள் நீங்கப் பெற்று, சிலம்பு ஒலிக்கும் சேவடிகளையுடைய கூத்தப் பெருமான் வீற்றிருக்கப் பெற்றதால் திருத்தொண்டின் உறைப்புப் பெற்ற அடிய வர்களின் உள்ளம் போல் விளங்கும் அவ்வீதியானது தம் கண்களை மகிழச் செய்ய, இவ்வுலகம் பயன் கொள்வதற்குரிய ஞானசம்பந்தப் பிள்ளையார் எழுநிலைக் கோபுரத்தைப் போற்றிப் பணிந்து எழுந்தார்.

குறிப்புரை :

அடியவர்களின் திருவுள்ளம் எனத் திருவீதி திகழ்ந்தது: திருவீதிக்கு ஆங்கால்: ஒளிதிகழ்தல் - சந்திரகாந்தக் கற்களாலாய மாடங்கள், திருவிளக்குகள் ஒளிதருதல். சிவமணம் கமழ்தல் - பெரு மானுக்குரிய தூபம் முதலாய நறுமணப் பொருள்கள் கமழ்தல். வான் துகள் - வானளாவிய தூசுகள். சிலம்பு அலம்ப சேவடியவர் பயில் வுறல் - பெருமான் திருவுலாப்போதருதல். அடியவர்களின் திருவுள் ளத்திற்கு ஆங்கால்: மலர்ந்த பேரொளி திகழ்தல் - உயிராவணம் இருந்து உற்று நோக்கிய நிலையில் உள்ளத்துள் சிவமுளைதழைதல். சிவ மணம் - சிவயோகத்தால் பெற்ற சிவமணம். வான்துகள் - நீள இருந்த ஆணவம் முதலாய தூசுகள். சேவடிபயில்வுறல் - சிவப் பேற்றை அடைதல்.

பண் :

பாடல் எண் : 158

நீடு நீள்நிலைக் கோபுரத்
துள்புக்கு நிலவிய திருமுன்றில்
மாடு செம்பொனின் மாளிகை
வலங்கொண்டு வானுற வளர்திங்கள்
சூடு கின்றபே ரம்பலம்
தொழுதுபோந் தருமறை தொடர்ந்தேத்த
ஆடு கின்றவர் முன்புற
அணைந்தனர் அணிகிளர் மணிவாயில்.

பொழிப்புரை :

நீண்டுயர்ந்த நிலைகளைக் கொண்ட தெற்குக் கோபுரத்துள் புகுந்து, நிலைபெற்ற திருமுற்றத்தின் அருகேயுள்ள செம்பொன் மாளிகையைச் சூழ வலமாக வந்து, வானுற ஓங்கிய திங்களைச் சூடிடும் உயர்ந்த பேரம்பலத்தை வணங்கி, மேலும் சென்று, அரிய மறைகள் தொடர்ந்து போற்றத் திருக்கூத்து இயற்றும் கூத்தப் பெருமானின் திருமுன்பு சேர்வதற்கு, அழகு மிகும் மணிகளையுடைய திருவணுக்கன் திருவாயிலை அடைந்தார் ஞானசம்பந்தர்.

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 159

நந்தி யெம்பிரான் முதற்கண
நாதர்கள் நலங்கொள்பன் முறைகூட
அந்த மில்லவர் அணுகிமுன்
தொழுதிரு அணுக்கனாந் திருவாயில்
சிந்தை யார்வமும் பெருகிடச்
சென்னியிற் சிறியசெங் கையேற
உய்ந்து வாழ்திரு நயனங்கள்
களிகொள்ள உருகுமன் பொடுபுக்கார்.

பொழிப்புரை :

நந்தி தேவரான நம்பெருமானைத் தலைவராகக் கொண்ட சிவகணநாதர்கள், நலம்மிக நிரல்படக் கூடி நிற்க, எண்ணி றந்த அடியவர்கள், முனிவர்கள், தேவர்கள் முதலியவர்கள் அவர்க ளின் பின்நின்று தொழுகின்ற திருவணுக்கன் வாயிலில், உள்ளத்தில் ஆர்வம் பெருகவும், தலைமீது சிறிய சிவந்த கைகள் ஏறிக் குவியவும், கண்கள் மகிழ்ச்சி பொருந்தவும், உருகிய அன்புடன் உட்புகுந்தார் காழிப் பிள்ளையார்.

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 160

அண்ண லார்தமக் களித்தமெய்ஞ்
ஞானமே யானஅம் பலமுந்தம்
உண்ணி றைந்தஞா னத்தெழும்
ஆனந்த வொருபெருந் திருக்கூத்தும்
கண்ணில் முன்புறக் கண்டுகும்
பிட்டெழுங் களிப்பொடுங் கடற்காழிப்
புண்ணி யக்கொழுந் தனையவர்
போற்றுவார் புனிதரா டியபொற்பு.

பொழிப்புரை :

தலைமையமைந்த இறைவர் தமக்குத் தந்த மெய்ஞ்ஞானமேயாய திருவம்பலத்தையும், தமதுள்ளத்தே நிறைந் துள்ள அச்சிவஞானத்துள் எழுகின்ற சிவானந்தமான ஒப்பில்லாத பெருமை பொருந்திய திருக்கூத்தையும், கண்களின் முன் வெளிப்படக் கண்டு வணங்கியதால் உண்டான பெருமகிழ்வுடன், கடல் சூழ்ந்த சீகா ழியில் தோன்றிய சிவ புண்ணியக் கொழுந்து போன்ற பிள்ளையார், தூயவரான இறைவரின் திருக்கூத்து இயற்றும் அழகைப் போற்று பவராய்,

குறிப்புரை :

மெய்ஞ்ஞானம் - மெய்யுணர்வு : தன்னறிவானும் தனக்குற்ற கருவிகளானும் அறிதற்கரியதாகலின் உணர்வரிய மெய்ஞ் ஞானம் என முன்னர்க் குறித்தார். இவ்வுணர்வின் பயன் இறையைக் கண்டு மகிழ்தலாம்.

பண் :

பாடல் எண் : 161

உணர்வின் நேர்பெற வருஞ்சிவ
போகத்தை ஒழிவின்றி உருவின்கண்
அணையும் ஐம்பொறி அளவினும்
எளிவர அருளினை எனப்போற்றி
இணையில் வண்பெருங் கருணையே
ஏத்திமுன் எடுத்தசொற் பதிகத்திற்
புணரு மின்னிசை பாடினர்
ஆடினர் பொழிந்தனர் விழிமாரி.

பொழிப்புரை :

`உள் உணர்வால் உணர வருகின்ற சிவபோ கத்தை, வெளிப்படப் புலப்படுத்தி நிற்கும் ஐம்பொறிகளின் அளவி லும் எளிதில் கண்டு மகிழும் வண்ணம் அருள்செய்தீர்\' எனப் போற்றி ஒப்பில்லாத கருணைத் திறத்தை முன்னர்த் தொடங்கிய சொற் பதிகத் தில் பொருந்தும் இனிய இசையுடன் பாடுபவராய், மகிழ்ச்சி மீதூரக் கூத்தாடுபவராய்க் கண்களினின்றும் அவ்வின்பப் பெருக்கைப் பொழிந்தவராய்,

குறிப்புரை :

இக்கருத்தமைவுடைய திருப்பதிகம் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 162

ஊழி முதல்வர்க்
குரிமைத் தொழிற்சிறப்பால்
வாழிதிருத் தில்லைவாழ்
அந்தணரை முன்வைத்தே
ஏழிசையும் ஓங்க
எடுத்தார் எமையாளும்
காழியர்தங் காவலனார்
கற்றாங் கெரியோம்பி.

பொழிப்புரை :

ஊழிகளின் முதல்வரான கூத்தப் பெருமானுக்கு உரிய அகம்படிமைத் தொழில் புரிந்துவரும் சிறப்பால், தில்லையில் வாழும் அந்தணரை முதலில் வைத்து, ஏழிசையும் பொருந்தி விளங்கக் `கற்றாங்கு எரியோம்பி\' என்ற முதற்குறிப்பை உடைய திருப்பதிகத்தை எம்மை ஆளும் சீகாழிக் காவலர் தொடங்கியவராய்,

குறிப்புரை :

தொடர்ந்து வரும் பிறப்பு இறப்பின் தொடர்பால் இளைப்புற்று நிற்கும் உயிர்களுக்கு அவ்விளைப்பு நீங்குதற்காக அவற்றைத் தன்பால் ஒடுக்கியும், வினை நீக்கத்தின் பொருட்டு மீளத் தோற்றுவித்தும் வரும் பாங்கால், இறைவனை, `ஊழி முதல்வன்\' என்றார். `ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனையே\' (தி.8 ப.7 பா.8) என வரும் திருவாக்கும் காண்க. இவ்வாறு அந்தத்தைச் செய்யும் பெருமானே ஆதியாதல் பற்றி `அந்தம் ஆதி\' என மெய்ந்நூல்கள் குறிப்பதாயின. `கற்றாங்கு எரியோம்பிக் கலியை வாராமே, செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய\' என இப் பதிகம் (தி.1 ப.80). தொடங்கி வருதலின், `தில்லைவாழ் அந்தணரை முன்வைத்தே\' எனக் கூறினார். இப்பதிகம் குறிஞ்சிப் பண்ணில் அமைந்துள்ளது

பண் :

பாடல் எண் : 163

பண்ணார் பதிகத்
திருக்கடைக்காப் புப்பரவி
உண்ணாடும் என்பும்
உயிருங் கரைந்துருக்கும்
விண்ணா யகன்கூத்து
வெட்டவெளி யேதிளைத்துக்
கண்ணா ரமுதுண்டார்
காலம் பெறஅழுதார்.

பொழிப்புரை :

காலம் உண்டாகவே காதல் செய்து அழுது அழைத்தவரான பிள்ளையார், பண் நிரம்பிய திருப்பதிகத்தின் திருக்கடைக்காப்பினை நிறைவித்துப் போற்றி, உடற்கு நிலைக்கள னாய எலும்பும், உயிரும் கரையுமாறு உருக்குகின்ற இறைவரின் அருட்கூத்தை வெட்ட வெளியில் நுகர்ந்து, கண்ணகத்தே நின்று களிதரும் அமுதை உட்கொண்டார்.

குறிப்புரை :

இப்பதிகப் பண் குறிஞ்சியாம். இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 164

முன்மால் அயன்அறியா
மூர்த்தியார் முன்னின்று
சொன்மாலை யாற்காலம்
எல்லாந் துதித்திறைஞ்சிப்
பன்மா மறைவெள்ளம்
சூழ்ந்து பரவுகின்ற
பொன்மா ளிகையைவலங்
கொண்டு புறம்போந்தார்.

பொழிப்புரை :

முற்காலத்தில் திருமாலும் நான்முகனும் அறியாத இறைவரின் திருமுன் நின்று, சொல் மாலையான திருப்பதிகங்களால் எல்லாக் காலங்களிலும் போற்றி வணங்கி, அளவற்ற பெருமறை களின் வெள்ளங்கள் சூழ்ந்து வணங்குகின்ற செம்பொன் மாளிகை யான பொன்னம்பலத்தை வலமாக வந்து புறத்தே போந்தார்.

குறிப்புரை :

`சொல்மாலையால் கால மெல்லாம் துதித்து\' எனவே, இக்கால எல்லையில் பிள்ளையார், பல்வேறு பண்களில், பல பதிகங் களை அருளிச் செய்திருத்தல் வேண்டும். எனினும் அவை கிடைத் தில. பன்மாமறை வெள்ளம் - அளவற்ற மறைகள். அம்மறைகளை ஓதிவரும் அளவற்ற அந்தணர் கூட்டம் என்றும் அமையும். இனி அம்மாளிகையின் தூண்கள், பலகணிகள், மேல்வேய்ந்த ஓடுகள் பலவும் மறைகளின் மந்திர உறுப்புக்களாக அமைந்திருத்தல் பற்றி இங்ஙனம் கூறினார் எனலுமாம்.

பண் :

பாடல் எண் : 165

செல்வத் திருமுன்றில்
தாழ்ந்தெழுந்து தேவர்குழாம்
மல்குந் திருவாயில்
வந்திறைஞ்சி மாதவங்கள்
நல்குந் திருவீதி
நான்குந் தொழுதங்கண்
அல்குந் திறம்அஞ்சு
வார்சண்பை ஆண்டகையார்.

பொழிப்புரை :

செல்வம் பொருந்திய திருமுன்றிலின் கீழே விழுந்து வணங்கி எழுந்து, விண்ணவர் கூட்டம் நிறைந்திருக்கும் திருவாயிலில் வந்து வணங்கி, மாதவங்களைத் தரும் நான்கு வீதிக ளையும் வணங்கி, அவ்விடத்தில் தங்கியிருத்தற்கும் பிள்ளையார் அஞ்சுபவராய்,

குறிப்புரை :

செல்வத் திருமுன்றில் - செல்வராய பெருமானும் அவரை வணங்கும் செல்வமாய செல்வமும் நிலைபெற்றிருக்கும் திருமுன்றில். தவத்தின் பயன் சிவத்தை அடைதலாம். இவ்வீதிகள் சிவமே நிலவிய திருவீதிகளாதலின் அப்பயனை அவ்வீதிகளே நல்குதலின் `மாதவங்கள் நல்கும் திருவீதி\' என்றார். அவ்விடத்துத் தங்குதற்கும் அஞ்சினார் என்பதால் அப்பதியின் பெருமையுணர நின்றது. அன்றியும் தாழ்வெனும் தன்மையோடும் சைவமாம் சமயம் சார்ந்து நிற்கும் பிள்ளையாரின் பெருமையும் உணர நின்றது.

பண் :

பாடல் எண் : 166

செய்ய சடையார்
திருவேட் களஞ்சென்று
கைதொழுது சொற்பதிகம்
பாடிக் கழுமலக்கோன்
வைகி அருளுமிடம்
அங்காக மன்றாடும்
ஐயன் திருக்கூத்துக்
கும்பிட் டணைவுறுநாள்.

பொழிப்புரை :

ஞானசம்பந்தர் சிவந்த சடையையுடைய சிவபெருமானின் திருவேட்களத்துக்குச் சென்று, கையால் தொழுது சொல்பதிகத்தைப் பாடி, எழுந்தருளியிருக்கும் இடம் அவ்விடமாக, நாளும் அப்பேரம்பலத்தில் வீற்றிருந்தருளும் பெருமானாரின் திருக் கூத்தையும் சென்று கண்டு மகிழ்ந்து மீண்டு போந்திருக்கும் அந்நாளில்,

குறிப்புரை :

திருவேட்களத்தில் பாடிய சொற்பதிகம் `அந்தமும் ஆதியும்\' (தி.1 ப.39) என்று தொடங்கும் தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 167

கைம்மான் மறியார்
கழிப்பாலை யுள்ளணைந்து
மெய்ம்மாலைச் சொற்பதிகம்
பாடிவிரைக் கொன்றைச்
செம்மாலை வேணித்
திருவுச்சி மேவியுறை
அம்மானைக் கும்பிட்
டருந்தமிழும் பாடினார்.

பொழிப்புரை :

தம் திருக்கையில் மான் கன்றைக் கொண்டி ருக்கும் சிவபெருமான் எழுந்தருளிய திருக்கழிப் பாலையைச் சேர்ந்து மெய்ம்மை பொருந்திய சொற்பதிகத்தைப் பாடி, மணமுடைய கொன்றை மலராலாய அழகான மாலையைச் சூடிய திருச்சடையை உடைய `திருவுச்சி\' என்னும் பதியில் எழுந்தருளிய இறைவரைக் கும்பிட்டு அரிய தமிழ்ப்பதிகத்தையும் பாடினார் காழிப் பிள்ளையார்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின. திருக்கழிப்பாலையில் அருளிய பதிகங்கள்: 1. `புனலாடிய\' (தி.2 ப.21) - பண், இந்தளம். 2. `வெந்தகுங்கிலியப்புகை\' (தி.3 ப.44) - பண், கௌசிகம். திருநெல்வாயிலில் அருளிய பதிகம்: `புடையினார்\' (தி.2 ப.26) - பண், இந்தளம். இத்திருப்பதி திருவுச்சி என்றும், சிவபுரி என்றும் அழைக்கப்பெறும். இப்பதிகப் பாடல் தொறும் இறைவன் `உச்சியாரே\' எனக் குறிக்கப் பெறுதலும் காணலாம். உச்சியார் - தலை மீது உள்ளவர் எனும் பொருள்படவும் வரும். `தலைமே லான்\' (தி.6 ப.8 பா.5) என வரும் அப்பர் திருவாக்கும் காண்க.

பண் :

பாடல் எண் : 168

பாடும் பதிகஇசை
யாழ்ப்பாண ரும்பயிற்றி
நாடுஞ் சிறப்பெய்த
நாளும்நடம் போற்றுவார்
நீடுந் திருத்தில்லை
அந்தணர்கள் நீள்மன்றுள்
ஆடுங் கழற்கணுக்க
ராம்பே றதிசயிப்பார்.

பொழிப்புரை :

பாடப்பட்ட பதிகத்தின் இசையினைத் திரு நீலகண்ட யாழ்ப்பாணரும் யாழில் இசைத்து வேண்டத்தகும் சிறப் பைப் பெற்றார். நாளும் தில்லையில் சென்று இறைவரின் திருக்கூத் தைப் போற்றிவரும் பிள்ளையார், தில்லைவாழ் அந்தணர்கள் நீளும் திருவம்பலத்தில் ஆடும் திருவடிகளுக்கு அணுக்கத் தொண்டர்களாக இருக்கும் பேற்றைப் பார்த்து வியப்படைந்து வந்தனர்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 169

ஆங்கவர்தஞ் சீலத்
தளவின் மையும்நினைந்தே
ஓங்கியெழுங் காதல்
ஒழியாத உள்ளத்தார்
தேங்கமழுஞ் சோலைத்
திருவேட் களங்கடந்து
பூங்கிடங்கு சூழ்புலியூர்ப்
புக்கணையும் போழ்தின்கண்.

பொழிப்புரை :

அங்கு வாழும் அந்தணர்கள் தம் ஒழுக்கத்தில் அளவில்லாத சிறப்புடன் நிற்கும் நிலைமையும் எண்ணி, மேல் கிளர்ந்து எழும் ஆசை நீங்காத மனத்துடன், ஒருநாள் மணம் வீசும் சோலை சூழ்ந்த திருவேட்களத்தைக் கடந்து, மலர்கள் நிரம்பிய அகழி சூழ்ந்த திருப்புலியூரினுள் புகுந்து சேர்கின்ற போழ்தில்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 170

அண்டத் திறைவர்
அருளால் அணிதில்லை
முண்டத் திருநீற்று
மூவா யிரவர்களும்
தொண்டத் தகைமைக்
கணநாத ராய்தோன்றக்
கண்டஅப் பரிசுபெரும்
பாணர்க்கும் காட்டினார்.

பொழிப்புரை :

எவ்வுலகிற்கும் இறைவரான கூத்தப் பெருமான் திருவருளால், அழகிய தில்லையில் வாழ்கின்ற, நெற்றியில் திருநீற்றை அணிந்த அந்தணர் மூவாயிரவரும் திருத்தொண்டின் தன்மையுடைய சிவகண நாதர்களாய்த் தோன்றக் கண்டு, அதனை ஞானசம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கும் காட்டினார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 171

செல்வம் பிரிவறியாத்
தில்லைவாழ் அந்தணரும்
எல்லையில்சீர்ச் சண்பை
இளவே றெழுந்தருளி
ஒல்லை இறைஞ்சாமுன்
தாமும் உடனிறைஞ்சி
மல்லல் அணிவீதி
மருங்கணைய வந்தார்கள்.

பொழிப்புரை :

அருட்செல்வம் என்றும் நீங்கப் பெறாத தில்லை வாழ் அந்தணர்களும், அளவற்ற சிறப்பையுடைய சீகாழியில் தோன் றிய இளஞ்சிங்க ஏற்றைப் போன்ற ஞானசம்பந்தர் எழுந்தருளி வந்து விரைந்து தம்மை வணங்குதற்கு முன்பே, தாமும் உடனே வணங்கிச் செழுமையும் பொலிவும் கொண்ட வீதியில் அவர் அருகே சூழ வந்தனர்.

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 172

பொங்கி யெழுங்காதல்
புலனாகப் பூசுரர்தம்
சிங்கம் அனையார்
திருமுடியின் மேற்குவித்த
பங்கயத்தின் செவ்வி
பழித்து வனப்போங்கும்
செங்கை யொடுஞ்சென்று
திருவாயி லுட்புக்கார்.

பொழிப்புரை :

மேன்மேலும் பெருகி எழும் மிக்க ஆசையானது வெளித் தோன்றுமாறு அந்தணர்களின் சிங்கம் போன்ற ஆளுடைய பிள்ளையார், தலைமீது கூப்பிய தாமரை மலரின் அழகையும் வென்று அவ்வழகாலே ஓங்கும் கையுடனே சென்று திருவாயிலுள் புகுந்தார்.

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 173

ஒன்றிய சிந்தை
உருக உயர்மேருக்
குன்றனைய பேரம்
பலமருங்கு கும்பிட்டு
மன்றுள் நிறைந்தாடும்
மாணிக்கக் கூத்தர்எதிர்
சென்றணைந்து தாழ்ந்தார்
திருக்களிற் றுப்படிக்கீழ்.

பொழிப்புரை :

இறைவரிடம் ஒன்றுபட்ட மனம் உருக, உயர்ந்த மேரு மலையைப் போன்ற பேரம்பலத்துள் நிறைந்து அருள்கூத்து இயற்றுகின்ற மாணிக்கக் கூத்தரின் திருமுன்பு திருக்களிற்றுப் படியின் கீழே நின்று தாழ்ந்து எழுந்தார்.

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 174

ஆடி னாய்நறு நெய்யொடு
பால்தயிர் என்றெடுத் தார்வத்தால்
பாடி னார்பின்னும் அப்பதி
கத்தினிற் பரவிய பாட்டொன்றில்
நீடு வாழ்தில்லை நான்மறை
யோர்தமைக் கண்டஅந் நிலையெல்லாம்
கூடு மாறுகோத்து அவர்தொழு
தேத்துசிற் றம்பலம் எனக்கூறி.

பொழிப்புரை :

`ஆடினாய் நறுநெய்யொடு பால் தயிர்\' என்று தொடங்கி, மிகுந்த ஆசையுடன் பாடினார். மேலும் அப்பதிகத்தில் போற்றியதொரு திருப்பாட்டில், தில்லைவாழ் அந்தணர்களை அன்று தாம் கணநாதராய்க் கண்ட அந்நிலைகள் எல்லாம் பொருந்துமாறு கோத்து, அத்தகைய தன்மையுடையவர் தொழுது, வணங்கும் திருச்சிற்றம்பலமாகும் என்று எடுத்துக் கூறி,

குறிப்புரை :

`ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர்\' (தி.3 ப.1) எனத் தொடங்கும் பதிகம், காந்தார பஞ்சமப் பண்ணில் அமைந்தது. தில்லைவாழ் அந்தணர்களைச் சிவகணநாதர்களாகப் பிள்ளையார் கண்டு போற்றிய குறிப்பை, இப்பதிகத்துள் 3ஆவது பாடல் கூறும்.
`நீலத் தார்கரி யமிடற் றார்நல்ல
நெற்றி மேலுற்ற கண்ணி னார்பற்று
சூலத் தார்சுட லைப் பொடி நீறணி வார்சடையார்
சீலத் தார்தொழு தேத்துசிற் றம்பலஞ்
சேர்த லாற்கழற் சேவடி கைதொழக்
கோலத் தாயரு ளாயுன காரணங் கூறுதுமே\' (தி.3 ப.1 பா.3)
என்பது அப்பாடலாகும். இதன்கண் தில்லைவாழ் அந்தணர்களைச் சிவகணநாதரின் தோற்றமாகக் கண்டிருப்பதைக் காணலாம். நீலநிறம் பொருந்திய கழுத்தும், நெற்றிக் கண்ணும், சூலமும் தில்லைவாழ் அந்த ணர்களுக்கு இயல்பில் அமைந்தனவல்ல. ஆயினும் அவை அவர்களி டத்துக் கண்டது சிவகணங்களாக இறைவர் காட்டிய நிலையிலேயாம். திருவாரூர்ப் பிறந்தார்களைச் சிவகணங்களாக நமிநந்தி அடிகட்கு இறைவர் காட்டியமையும் ஈண்டு நினைவு கூரலாம். (தி.12 பு.27 பா.27).

பண் :

பாடல் எண் : 175

இன்ன தன்மையில் இன்னிசைப்
பதிகமும் திருக்கடைக் காப்பேற்றி
மன்னும் ஆனந்த வெள்ளத்தில்
திளைத்தெதிர் வந்துமுன் நின்றாடும்
பின்னு வார்சடைக் கூத்தர்பே
ரருள்பெறப் பிரியாத விடைபெற்றுப்
பொன்னின் அம்பலஞ் சூழ்ந்துதாழ்ந்
தெழுந்துபோந் தணைந்தனர் புறமுன்றில்.

பொழிப்புரை :

இவ்வாறாய நிலையில் இனிய இசை பொருந்திய பதிகத்தைத் திருக்கடைக் காப்புச் சொல்லி நிறைவாக்கிப் போற்றி, நிலைபெற்ற ஆனந்த வெள்ளத்துள் முழுகித் திளைத்து, எதிரில் வந்து நின்றாடும் பின்னிய நீண்ட சடையையுடைய கூத்தரின் திருவருளைப் பெறுமாறு பிரியா விடை பெற்றுப் பொன்னம்பலத்தை வலம் வந்து வெளிமுற்றத்தை அடைந்தார் பிள்ளையார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 176

அப்பு றத்திடை வணங்கிஅங்
கருளுடன் அணிமணித் திருவாயில்
பொற்பு றத்தொழு தெழுந்துடன்
போதரப் போற்றிய புகழ்ப்பாணர்
நற்ப தந்தொழு தடியனேன்
பதிமுதல்நதி நிவாக் கரை மேய
ஒப்பில் தானங்கள் பணிந்திட
வேண்டும்என் றுரைசெய அதுநேர்வார்.

பொழிப்புரை :

அத்திரு முற்றத்தைப் புறத்தில் வணங்கி, அங்குத் திருவருள் பெற்று அழகிய மணிகள் பதித்த திருவாயிலில் தொழுது, வணங்கி, எழுந்தார் பிள்ளையார். அது பொழுது தம்முடன் வரப் பெறும் பேற்றைப் பெற்ற புகழையுடைய திருநீலகண்ட யாழ்ப்பாணர் தம் திருவடிகளை வணங்கி, அடியவனின் பதியான `திருஎருக்கத்தம் புலியூர்\' முதலாக `நிவா நதியின் கரையில் உள்ள ஒப்பில்லாத திருப்பதிகளைச் சென்று வணங்க வேண்டும்\' என்று வேண்டிக் கொள்ளப் பிள்ளையாரும் அதற்கு உடன்பட்டவராய்,

குறிப்புரை :

நிவாநதி - வட வெள்ளாற்றை இன்றும் சிற்சில இடங்களில் நிவா நதி என அழைப்பர். திருமுறைகளில் நிவா நதி எனும் பெயரே பெரிதும் குறிப்பிடப்படுகின்றது.

பண் :

பாடல் எண் : 177

பொங்கு தெண்திரைப் புனிதநீர்
நிவாக்கரைக் குடதிசை மிசைப்போந்து
தங்கு தந்தையா ருடன்பரி
சனங்களும் தவமுனி வருஞ்செல்லச்
செங்கை யாழ்திரு நீலகண்
டப்பெரும் பாணனா ருடன்சேர
மங்கை யார்புகழ் மதங்கசூ
ளாமணி யார்உடன் வரவந்தார்.

பொழிப்புரை :

நீர் பெருகுகின்ற தெளிந்த அலைகளையுடைய, தூய நீர் நிரம்பிய, நிவா நதிக்கரையின் வழியே, மேற்குத் திசையில் சென்று, தம்முடன் வந்தருளும் தந்தையாரான சிவபாத இருதயர், அடியவர்கள், தவமுனிவர்கள், செவ்விய கையில் யாழையுடைய திருநீலகண்ட யாழ்ப்பாணர், அவர் மனைவியாரான மதங்க சூளா மணியாரும் யாவரும் உடன்வர ஆளுடைய பிள்ளையார் சென் றருளினார்.

குறிப்புரை :

கொல்லி மலை, பச்சைமலை ஆகிய இம்மலைகளி லிருந்து வரும் கானாரியாறு, எழுமூர் ஆறு, என்பனவும், கல்விராயன் மலையிலிருந்து பல சிற்றாறுகளாகப் பெருகி, ஆற்றூர், ஆறகனூர், சின்ன சேலம் வழியாக வரும் இப்போது வசிஷ்ட நதி என்று வழங்கும் ஆறும், கல்விராயன் மலை, மற்றும் சில சரிவுகளிலிருந்து வரும் மயூர நதி, திருமணிமுத்தாறு (திருமுதுகுன்றம் வழியாக வருவது), தேனாறு முதலியவைகளும் ஆங்காங்கு வந்து கூடி, வடவெள்ளாறு என்ற பெயரால் பெருகி வரும் சிறப்புடையது நிவா நதியாகும். ஆதலின் ஆசிரியர், `பொங்கு தெண்டிரைப் புனிதநீர் நிவா\' என்றார் (சிவக் கவிமணியவர்கள் குறிப்பு). இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 178

இருந்த டங்களும் பழனமும்
கடந்துபோய் எருக்கத்தம் புலியூரின்
மருங்கு சென்றுற நீலகண்
டப்பெரும் பாணனார் வணங்கிக்கார்
நெருங்கு சோலைசூழ் இப்பதி
அடியனேன் பதியென நெடிதின்புற்
றருங்க லைச்சிறு மழஇளங்
களிறனார் அங்கணைந் தருள்செய்வார்.

பொழிப்புரை :

பெரிய நீர் நிலைகளையும் வயல்களையும் கடந்து சென்று திருஎருக்கத்தம்புலியூரின் அருகில் சென்று சேர, திருநீலகண்ட யாழ்ப்பாணர் திருமுன் வந்து வணங்கி நின்று, மேகங்கள் நெருங்கிய தும் பூஞ்சோலைகள் சூழ்ந்ததுமான இத்திருப்பதி, அடியேனின் பதியா கும் என்று விண்ணப்பித்துக் கொள்ள, மிகவும் மகிழ்ச்சியடைந்து, அரிய மறை முதலிய கலைகள் யாவும் விளங்குதற்கு இடமான அத் திருப்பதியை சிறிய இளைய யானைக் கன்றைப் போன்ற பிள்ளை யார் அணைந்து அருள் செய்பவராய்,

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 179

ஐயர் நீரவ தரித்திட
இப்பதி அளவில்மா தவமுன்பு
செய்த வாறெனச் சிறப்புரைத்
தருளிஅச் செழும்பதி இடங்கொண்ட
மைகொள் கண்டர்தங் கோயிலி
னுட்புக்கு வலங்கொண்டு வணங்கிப்பார்
உய்ய வந்தவர் செழுந்தமிழ்ப்
பதிகம்அங் கிசையுடன் உரைசெய்தார்.

பொழிப்புரை :

`ஐயரே! நீர் இங்குத் தோன்றுதற்கு இத்திருப்பதி யானது அளவற்ற பெருந்தவத்தைச் செய்திருந்தது எனச் சிறப்பித்துக் கூறி, அச் செழிப்புடைய திருப்பதியில் இடம் கொண்டு எழுந்தருளி இருக்கும் திருநீலகண்டரான இறைவரின் திருக்கோயிலுக்குள் சென்று வணங்கி, உலகுய்யத் தோன்றிய பிள்ளையார் செழுந்தமிழ்ப் பதி கத்தை இசையுடன் அருள்செய்தார்.

குறிப்புரை :

இத்திருப்பதியில் பாடியருளியது `படையார் தரு\' (தி.1 ப.89) என்று தொடங்கும் குறிஞ்சிப் பண்ணில் அமைந்த பதிகமாகும். சிறந்த அடியவர்கள் உடன் இருக்கப் பாடுங்கால் அவர்களை அப்பதி கப் பாடல்களுள் ஒன்றிலோ அல்லது பதிகம் முழுமையாகவோ கூடச் சிறப்பித்துப் பாடுவது சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய பெருமக்களின் இயல்பாகும். இதனை அவரவர் வரலாற்றிலும் ஆங்காங்குக் காண இயலுகின்றது. அந்நிலையில், யாழ்ப்பாணர் தில்லையில், தம்பதி முதலாயவற்றிற்கு வரவேண்டும் என விண்ணப்பித்துக் கொண்டும், உடன் வந்தும், திருப்பதிகங்களை யாழிலிட்டு இசைத்தும் வர, அவரைச் சம்பந்தர் அவர்தம் திருப்பதியில் அருளிய இப்பதிகத்துள் ஓரிடத்தேனும் வைத்துப் பாடாதிரார் என்றே நினைய வேண்டியுள் ளது. இப்பதிகத்துள் ஏழாவது பாடல் கிடைத்திலது. ஒருகால் அப்பாடலில் இயைத்துப் பாடி இருக்கலாம் அன்றி இத்திருப்பதிக்கு, இப்பதிகம் தவிரப் பிறபதிகங்கள் இருந்து, அவற்றில் வைத்துப் பாடப்பெற்று, அவை இன்று கிடைக்காமலும் இருக்கலாம், திருவருள். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 180

அங்கு நின்றெழுந் தருளிமற்
றவருடன் அம்பொன்மா மலைவல்லி
பங்கர் தாமினி துறையுநற்
பதிபல பரிவொடும் பணிந்தேத்தித்
துங்க வண்டமிழ்த் தொடைமலர்
பாடிப்போய்த் தொல்லைவெங் குருவேந்தர்
செங்க ணேற்றவர் திருமுது
குன்றினைத் தொழுதுசென் றணைகின்றார்.

பொழிப்புரை :

அப்பதியினின்றும் புறப்பட்டு மேற்சென்று, அழகிய பொன்மலையில் தோன்றியருளிய உமையம்மையை ஒரு கூற்றில் கொண்ட சிவபெருமான் இனிதாய் உறைகின்ற பதியாகிய பலவற்றிற்கும் சென்று பணிந்து ஏத்தி, உயர்ந்த வண்டமிழ்ப் பாமா லைகள் பாடிச் சென்று, பழமையான சீகாழித் தலைவரான பிள்ளை யார் சிவந்த கண்களையுடைய ஆனேற்றை ஊர்தியாகக் கொண்ட சிவபெருமானின் `திருமுதுகுன்றத்தை\' வணங்கிச் சென்று அணைப வராய்,

குறிப்புரை :

`பதிபல பரிவோடும் பணிந்தேத்தி\' என்பதால், திருஎருக்கத்தம்புலியூரிலிருந்து திருமுதுகுன்றம் வரையிலுள்ள பல பதிகளுக்கும் சென்று பற்பல திருப்பதிகங்களையும் பாடியருளியிருக் கலாம். எனினும் அப்பதிகங்கள் எவையும் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 181

மொய்கொள் மாமணி கொழித்துமுத்
தாறுசூழ் முதுகுன்றை அடைவோம்என்று
எய்து சொன்மலர் மாலைவண்
பதிகத்தை இசையொடும் புனைந்தேத்திச்
செய்த வத்திரு முனிவருந்
தேவருந் திசையெலாம் நெருங்கப்புக்
கையர் சேவடி பணியுமப்
பொருப்பினில் ஆதர வுடன்சென்றார்.

பொழிப்புரை :

`பெருமணிகளை மிகுதியாகக் கொழித்துக் கொண்டு வரும் திருமணிமுத்தாறு சூழும் திருமுதுகுன்றத்தைச் சென்ற டைவோம்\' என்று பொருந்தும் சொல்மலர்களாலாய பதிகத்தை இசையுடன் பாடிப் போற்றி, சிறந்த தவத்தையுடைய முனிவர்களும் தேவர்களும் திசையனைத்தும் நெருங்கப் புகுந்து, இறைவரின் சேவடி களை வணங்குகின்ற அப்பழமலையினிடத்து அன்பு மீதூரச் சென்ற டைந்தார்.

குறிப்புரை :

`முதுகுன்றடைவோமே\' எனும் தொடர், பதிகம் முழுதும் அமைந்துள்ளது. அப்பதிகம் `மத்தா வரை\' (தி.1 ப.12) எனத் தொடங்கும் நட்டபாடைப் பண்ணாலாமைந்த பதிகம் ஆகும். இஃது திருப்பதியை அணையும் பொழுது அருளியதாகும். இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 182

வான நாயகர் திருமுது
குன்றினை வழிபட வலங்கொள்வார்
தூந றுந்தமிழ்ச் சொல்லிருக்
குக்குறட் டுணைமலர் மொழிந்தேத்தி
ஞான போனகர் நம்பர்தங்
கோயிலை நண்ணியங் குள்புக்குத்
தேன லம்புதண் கொன்றையார்
சேவடி திளைத்தஅன் பொடுதாழ்ந்தார்.

பொழிப்புரை :

தேவதேவரான சிவபெருமானின் திருமுதுகுன் றத்தை வழிபடும் பொருட்டு, அதை வலமாய் வருகின்றவராய்த் தூய நல்ல தமிழ்ச் சொற்களால் திருவிருக்குக்குறட் பதிகமாகிய துணை மலர்களை மொழிந்து, போற்றிச் சிவபெருமானின் கோயிலை அடைந்து, உட்சென்று, தேன்சிந்தும் குளிர்ந்த கொன்றை மலர்மாலை அணிந்த சிவபெருமானின் அடிகளில், ஞான அமுதத்தை உண்ட பிள்ளையார், மிகுந்த அன்புடனே தாழ்ந்து வணங்கினார்.

குறிப்புரை :

திருக்கோயிலை வலம் வரும் பொழுது அருளிய திருவிருக்குக்குறள் பதிகம், `நின்று மலர்தூவி\' (தி.1 ப.93) எனத் தொடங் கும் குறிஞ்சிப் பண்ணில் அமைந்த திருப்பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 183

தாழ்ந்தெ ழுந்துமுன் முரசதிர்ந்
தெழும்எனுந் தண்டமிழ்த் தொடைசாத்தி
வாழ்ந்து போந்தங்கண் வளம்பதி
அதனிடை வைகுவார் மணிவெற்புச்
சூழ்ந்த தண்புனல் சுலவுமுத்
தாற்றொடு தொடுத்தசொல் தொடைமாலை
வீழ்ந்த காதலாற் பலமுறை
விளம்பியே மேவினார் சிலநாள்கள்.

பொழிப்புரை :

வணங்கி எழுந்து, இறைவன் திருமுன்பு நின்று, `முரசதிர்ந்தெழுதரு\' என்ற தண்ணார் தமிழ் மாலையைப் பாடி, இன்புற்று வெளிப்போந்து, வளம் மிக்க அத்திருப்பதியில் தங்கி யிருந்தார். அவர் மணிகளையுடைய அந்தத் திருமுதுகுன்றத்தைச் சூழ்ந்த நீருடைய `முத்தாற்றினுடனே\' சேர்த்து இயற்றிய திருப்பதிக மாலையை விரும்பிய அன்புடனே பலமுறையும் கூறி, அங்குச் சில நாள்கள் தங்கியிருந்தார்.

குறிப்புரை :

இறைவன் திருமுன்பு அருளியது `முரசதிர்ந்தெழுதரு\' (தி.3 ப.99) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணிலமைந்த பதிகமாகும். இப்பதியில் வாழ்ந்தருளிய பொழுது, மணிமுத்தாறு நதியுடன் இணைந்த பல பதிகங்களை அருளிச் செய்தார் என ஆசிரியர் அருளுகின்றார். இப் பதிக்கென இவ்வமையத்து அருளியனவாகக் காணக் கிடைக்கும் பிற பதிகங்கள் நான்காம். அவை:
1. `தேவராயும்\' (தி.1 ப.53) - பழந்தக்கராகம்
2. `மெய்த்தாறு\' (தி.1 ப.131) - மேகராகக் குறிஞ்சி
3. `தேவாசிறியோம்\' (தி.2 ப.64) - காந்தாரம்
4. `வண்ண மாமலர்\' (தி.3 ப.34) - கொல்லி.
2ஆவது பதிகத்தில் 1, 11 ஆகிய இருபாடல்களிலும், 4ஆவது பதிகத்தில் 4ஆவது பாடலிலும் மணிமுத்தாறு பேசப்படுகின்றது. சேக்கிழார் திருவாக்கை நோக்கின், மணிமுத்தாற்றினை இணைத்துப் பாடிய மேலும் சில பதிகங்கள் இருக்கலாம் எனக் கருத இடனுண்டு.

பண் :

பாடல் எண் : 184

ஆங்கு நாதரைப் பணிந்துபெண்
ணாகடம் அணைந்தரு மறையோசை
ஓங்கு தூங்கானை மாடத்துள்
அமர்கின்ற வொருதனிப் பரஞ்சோதிப்
பாங்க ணைந்துமுன் வலங்கொண்டு
பணிவுற்றுப் பரவுசொல் தமிழ்மாலை
தீங்கு நீங்குவீர் தொழுமின்கள்
எனும்இசைப் பதிகமும் தெரிவித்தார்.

பொழிப்புரை :

அங்கு வீற்றிருக்கும் தலைவரை வணங்கி, விடை பெற்றுச் சென்று `திருப்பெண்ணாகடம்\' என்ற பதியை அடைந்து, அரிய மறைகளின் ஓசை முழங்கும் `திருத்தூங்கானைமாடம்\' என்ற அக்கோயிலுள் விரும்பி வீற்றிருக்கின்ற ஒப்பற்ற மேலாய ஒளியான இறைவரின் அருகணைந்து, வலம் வந்து, திருமுன்பு பணிந்து, எழுந்து, போற்றும் சொல் தமிழ் மாலையான, `தீங்கினின்றும் நீங்கும் கருத்துடையீர்களே! இங்குத் தொழுமின்கள்\' என்ற கருத்துடைய இசைப் பதிகத்தைப் பாடியருளினார்.

குறிப்புரை :

இதுபொழுது அருளிய பதிகம் `ஒடுங்கும்\' (தி.1 ப.59) எனத் தொடங்கும் பழந்தக்கராகப் பதிகம் ஆகும். இப்பதிகத்துள்ள பாடல்கள் பத்தும், `உலகியலை விடுத்து வீட்டுலகம் அடையக் கருதுவீர் திருத்தூங்கானை மாடம் தொழுமின்களே\' என ஆற்றுப் படுத்துகின்றன. அவற்றை உளங் கொண்டே ஆசிரியர் சேக்கிழாரும், இவ்வாறு மொழிந்தருளுகின்றார்.

பண் :

பாடல் எண் : 185

கருவ ரைப்பிற் புகாதவர் கைதொழும்
ஒருவ ரைத்தொழு துள்ள முவந்துபோய்ப்
பெருவ ரத்தினிற் பெற்றவர் தம்முடன்
திருவ ரத்துறை சேர்தும்என் றேகுவார்.

பொழிப்புரை :

பிறவியின் எல்லைக்கு உட்படாத அடியவர்கள் கை தொழுகின்ற சுடர்க் கொழுந்தீசரை வணங்கி, மனம் மகிழ்ந்து, விடைபெற்றுக் கொண்டவர், தோணியப்பரிடம் தவம் கிடந்து பெற்ற வரத்தால் தம்மை ஈன்ற தந்தையாருடன் `திருவரத்துறையைச்\' சேர்வோம் எனச் செல்பவராய்,

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 186

முந்தை நாள்கள் ஒரோவொரு கால்முது
தந்தை யார்பியல் மேலிருப் பார்தவிர்ந்
தந்த ணாளர் அவரரு கேசெலச்
சிந்தை செய்விருப் போடுமுன் சென்றனர்.

பொழிப்புரை :

முன்நாள்களில் செல்லும் பொழுதெல்லாம் முதுமைப் பருவம் உடைய தந்தையாரின் தோள் மீது ஓரொருகால் எழுந்தருளிச் சென்ற அப்பிள்ளையார், இதுபொழுது அந்நிலையை விடுத்து, அந்தணர்களும் அத்தந்தையாரும் தம்மைச் சூழ்ந்துவர மனத்திற் கொண்ட பெருவிருப்போடு, முன்னே நடந்து சென்றார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 187

ஆதி யார்தம் அரத்துறை நோக் கியே
காத லால்அணை வார்கடி தேகிடத்
தாதை யாரும் பரிவுறச் சம்பந்தர்
பாத தாமரை நொந்தன பைப்பய.

பொழிப்புரை :

பழைமையுடையவரான சிவபெருமானின் திருவரத்துறையினை நோக்கி, மிக்க விருப்புடன் அணைபவராய், விரைவாய்ச் செல்லவும், தந்தையாரும் வருந்த, ஞானசம்பந்தரின் திருவடித் தாமரைகளும் சிறிதளவு நொந்தன.

குறிப்புரை :

பைப்பய - பையப்பைய; சிறிது சிறிதாக; மிகப் பெரிதாக இன்றிச் சிறிய அளவில் வருந்தின. திருவடி வருந்தவும் தாம் வருந்தவில்லை என்பார், அத்திருவடிகள் மீது வைத்துக் கூறினார்.

பண் :

பாடல் எண் : 188

மறைய னைத்தும் ஒருவடி வாமென
நிறைம திப்பிள்ளை நீள்நிலஞ் சேர்ந்தெனத்
துறைய லைக்கங்கை சூடும் அரத்துறை
இறைவ ரைத்தொழு வான்விரைந் தேகினார்.

பொழிப்புரை :

மறைகள் யாவும் ஒருவடிவம் கொண்டாற்போல் நிறையும் திங்கள் ஒன்று, நீண்ட இம்மண்ணுலகத்தில் வந்து சேர்ந்தாற் போலச் சென்று, நீர்த் துறைகளில் அலைகளை வீசும் கங்கை சூடும் திருவரத்துறையில் வீற்றிருக்கும் இறைவரைத் தொழுவதற்காக விரைந்து சென்றனர்

குறிப்புரை :

மறைகள் திரண்டு ஒரு வடிவு எடுத்தாற் போலக் கலைகள் பதினாறும் திரண்டு ஒரு முழுத் திங்களாய் நிறைவு பெற, அத்திங்கள் மண்ணுலகத்திற்கு வந்தாற் போலக் காழிப் பிள்ளையார் வரலாயினார்.

பண் :

பாடல் எண் : 189

பாச மற்றில ராயினும் பார்மிசை
ஆசை சங்கரற் காயின தன்மையால்
தேசு மிக்க திருவுரு வானவர்
ஈச னைத்தொழு தேதொழு தேகினார்.

பொழிப்புரை :

உலகியல் பாசம் சிறிதும் இல்லாதவராயினும் இறைவனிடத்துப் பாசம் கொண்ட தன்மையால் சிவ ஒளி மிக்க திரு உருவான பிள்ளையார் சிவபெருமானை வணங்கியவாறு சென்றார்.

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 190

இந்த மாநிலத் தின்இருள் நீங்கிட
வந்த வைதிக மாமணி யானவர்
சிந்தை ஆரமு தாகிய செஞ்சடைத்
தந்தை யார்கழல் தாழ்ந்தெழுந்து ஏகினார்.

பொழிப்புரை :

இப்பேருலக இருள் நீங்கத் தோன்றிய வேதியர் குல மணியான சம்பந்தர், மனத்தில் ஊறும் அமுதமான சிவந்த சடையையுடைய தந்தையாம் சிவபெருமானின் திருவடிகளைத் தாழ்ந்து வணங்கி எழுந்து சென்றார்.

குறிப்புரை :

இவற்றால் பிள்ளையாருக்குத் திருவரத்துறைப் பெருமானைக் கண்டு வணங்குதற்குரிய உள்ள மிகுதியும் உடல் பெற்றியும் ஒருங்கு புலனாகின்றன. இம்மூன்று பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 191

மாறன் பாடி யெனும்பதி வந்துற
ஆறு செல்வருத் தத்தின் அசைவினால்
வேறு செல்பவர் வெய்துறப் பிள்ளையார்
ஏறு மஞ்செழுத் தோதிஅங் கெய்திட.

பொழிப்புரை :

`மாறன் பாடி\' என்ற ஊரில் வந்து சேர, வழி நடந்து செல்லும் வருத்தத்தால் உண்டான சோர்வால் தம்மைச் சூழ வரும் அடியார்கள் இளைப்படைய, சிறந்ததான ஐந்தெழுத்தைப் எண்ணியவாறு பிள்ளையார் அங்குச் சேர,

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 192

உய்ய வந்தசம் பந்த ருடன்வந்தார்க்
கெய்து வெம்மை இளைப்பஞ்சி னான்போலக்
கைக ளாயிரம் வாங்கிக் கரந்துபோய்
வெய்ய வன்சென்று மேல்கடல் வீழ்ந்தனன்.

பொழிப்புரை :

உலகு உய்வதற்காக வந்த ஞானசம்பந்தருடன் வந்தவர்க்கு, வழிநடந்து வந்ததன் வெம்மையினால் உண்டான இளைப்பைப் பார்த்து, அச்சம் கொண்டவனைப் போல் தன் அளவற்ற கைகளையும் உள்ளே இழுத்துக் கொண்டு, மறைந்து போய்க் கதிரவன் மேலைக் கடலில் விழுந்தான்.

குறிப்புரை :

ஒளி நீங்கி இருள் சேர வந்ததைத் தற்குறிப்பேற்றமாக ஆசிரியர் இங்ஙனம் கூறுவாராயினர். இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 193

அற்றை நாள்இர வப்பதி யின்னிடைச்
சுற்று நீடிய தொண்டர்கள் போற்றிடப்
பெற்ற மூர்ந்த பிரான்கழல் பேணுவார்
வெற்றி மாதவத் தோருடன் மேவினார்.

பொழிப்புரை :

அன்றிரவில் அப்பதியில் தம்மைச் சூழ இருந்த திருத்தொண்டர்கள் போற்ற, ஆனேற்றை ஊர்தியாகக் கொண்ட சிவ பெருமானின் திருவடிகளையே போற்றுபவரான பிள்ளையார், உள் ளொளி பெருக்கும் வெற்றி பொருந்திய மாதவத்தவருடன் அங்குத் தங்கியிருந்தனர்.

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 194

இந்நி லைக்கண் எழில்வளர் பூந்தராய்
மன்ன னார்தம் வழிவருத் தத்தினை
அன்ன மாடுந் துறைநீர் அரத்துறைச்
சென்னி யாற்றர் திருவுளஞ் செய்தனர்.

பொழிப்புரை :

இந்நிலையில் அழகு மிக்க சீகாழித் தோன் றலாரின் வழி வருத்தத்தை, அன்னப் பறவைகள் பொருந்திய நீர்த் துறைகளையுடைய திருவரத்துறையில் எழுந்தருளியிருக்கும் தலை யில் கங்கையாற்றையுடைய இறைவர், தம் திருவுள்ளத்தில் கொண்டார்.

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 195

ஏறுதற்குச் சிவிகை இடக்குடை
கூறி ஊதக் குலவுபொற் சின்னங்கள்
மாறில் முத்தின் படியினால் மன்னிய
நீறு வந்த நிமலர் அருளுவார்.

பொழிப்புரை :

பிள்ளையார் ஏறிச் செல்வதற்குச் சிவிகையும், மேலே கவித்துக் கொள்வதற்குக் குடையும், அவர்தம் பொருள்சேர் புகழை எடுத்துக் கூறி ஊதுவதற்கு விளக்கம் கொண்ட அழகிய சின்னங்களும் ஆகிய இவற்றை முத்துக்கள் பதிய அமைத்த சிறப்புடன் வழங்க, ஒப்பில்லாத திருநீற்றை விரும்பும் அரத்துறை இறைவர் அருள்வாராய்,

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 196

நீடு வாழ்பதி யாகும்நெல் வாயிலின்
மாட மாமனை தோறும் மறையோர்க்குக்
கூடு கங்குற் கனவிற் குலமறை
தேடு சேவடி தோன்றமுன் சென்றுபின்.

பொழிப்புரை :

பெருவாழ்வு பெற்ற திருப்பதியான திருநெல் வாயில்அரத்துறையில் மாடங்களைக் கொண்ட பெரிய இல்லங்கள் தோறும் உள்ள மறையவர்களுக்கு அன்றிரவு கனவில், பெருமையு டைய நான்மறைகளும் தேடும் செவ்விய திருவடிகள் தோன்றுமாறு, அவர் முன்போய்,

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 197

ஞான சம்பந்தன் நம்பால் அணைகின்றான்
மான முத்தின் சிவிகை மணிக்குடை
ஆன சின்னம்நம் பாற்கொண் டருங்கலைக்
கோன வன்பா லணைந்து கொடும்என.

பொழிப்புரை :

`ஞானசம்பந்தன் நம்மிடம் வருகிறான். அரிய கலைகளுக்கெல்லாம் தலைவனான அவனிடம் நீங்கள் பெரிய முத்துச் சிவிகையையும் அழகிய குடையையும், பொருந்திய சின்னங்களை யும் நம்மிடம் பெற்றுக் கொண்டு போய்க் கொடுங்கள்\' என்று இறைவர் உரைத்தருள,

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 198

அந்த ணாளர் உரைத்தஅப் போழ்தினில்
வந்து கூடி மகிழ்ந்தற் புதமுறுஞ்
சிந்தை யோடும் செழுநீர் அரத்துறை
இந்து சேகரர் கோயில்வந் தெய்தினர்.

பொழிப்புரை :

இறைவர் உரைத்த அளவில், அந்தணர்கள் வந்து ஒன்றாகக் கூடி, தாம் தாமும் கண்ட கனவைச் சொல்லி மகிழ்ந்து, அற்புதமான சிந்தையுடன் செழுமையான நீர்வளம் பொருந்திய திருவரத்துறையில் எழுந்தருளிய பிறை சூடிய சடையையுடைய பெருமானின் கோயிலின் வாயிலில் வந்து கூடினர்.

குறிப்புரை :

இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 199

ஆங்கு மற்ற அருளடி யாருடன்
ஓங்கு கோயிலுள் ளார்க்கும்உண் டாயிட
ஈங்கி தென்ன அதிசயம் என்பவர்
தாங்கள் அம்மறை யோர்கள்முன் சாற்றினார்.

பொழிப்புரை :

அங்கு முன் சொன்ன வண்ணம் இறைவர் அருள் அங்குள்ள அடியாருடன் ஓங்கு கோயிலுள் உள்ளவர்களுக்கும் உண்டாகியது. உண்டாகவே `இங்கு இது என்ன பேரதிசயம்\' என்று வியந்தவர்கள், அங்குவந்து கூடிய அம்மறையவர்களுக்குத் தாங்கள் முதலில் கூறினர்.

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 200

சால மிக்க வியப்புறு தன்மையின்
பால ராதலும் பள்ளி யெழுச்சியின்
காலம் எய்திடக் காதல் வழிப்படுஞ்
சீலம் மிக்கார் திருக்காப்பு நீக்கினார்.

பொழிப்புரை :

மிகப் பெரிய வியப்பை அடைந்த நிலையில், அச்சமயத்தில் திருப்பள்ளி எழுச்சிக்குரிய காலம் வரவும் அன்பு வழிப்பட்ட சீலம் உடைய அவர்கள் கோயிலின் கதவைத் திறந்தனர்.

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 201

திங்கள் நீர்மைச் செழுந்திரள் முத்தினால்
துங்க வெண்குடை தூய சிவிகையும்
பொங்க வூதும் பொருவருஞ் சின்னமும்
அங்கண் நாதர் அருளினாற் கண்டனர்.

பொழிப்புரை :

சந்திரன் போன்ற தண்ணிய செழுமையான முத்துக்கள் இழைத்த பெரிய வெண்குடையும், தூய சிவிகையும், ஒலி மிகுமாறு ஊதப்பெறும் ஒப்பிலாத சின்னங்களும் ஆகிய இவற்றை அங்கு இறைவரின் திருவருளால் அவர்கள் பார்த்தனர்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 202

கண்ட பின்னவர் கைதலை மேற்குவித்
தெண்டி சைக்கும் விளக்கிவை யாம்எனத்
தொண்ட ரோடும் மறையவர் சூழ்ந்தெழுந்
தண்டர் நாடும் அறிவுற ஆர்த்தனர்.

பொழிப்புரை :

அவற்றைக் கண்ட அவர்கள் தம் கைகளைத் தலைமீது குவித்து, `இவை எண்திசைக்கும் விளக்காகும்\' எனக் கூறி, தொண்டர்களுடன் சூழ்ந்து, வணங்கி, எழுந்து, தேவர் உலகமும், அறியும்படி மகிழ்வைப் பெருக்கினர்.

குறிப்புரை :

பிள்ளையாரின் அடிமைத் திறனும், அவருக்கு அரத்துறை இறைவர் வழங்கிய அருள் பெருக்குமாகியவற்றை எண் திசையிலுள் ளாரும் அறிதலின், இவ்வியத்தகு நிகழ்ச்சி எண் திசைக்கும் விளக் காயிற்று.

பண் :

பாடல் எண் : 203

சங்கு துந்துபி தாரைபே ரிம்முதல்
பொங்கு பல்லிய நாதம் பொலிந்தெழ
அங்க ணன்அரு ளால்அவை கொண்டுடன்
பொங்கு காதல் எதிர்கொளப் போதுவார்.

பொழிப்புரை :

சங்கு, துந்துபி, தாரை, பேரிகை முதலியவாகப் பேரொலி பெருக்கும் இயங்களின் ஓசை பொலிவு பெற்று எழுமாறு செய்து, இறைவரின் திருவருளால் வரப்பெற்ற அச்சிவிகை, குடை, சின்னங்கள் என்ற இவற்றை உடன் கொண்டு, மேன் மேலும் எழு கின்ற ஆசை எதிர்கொள்ளப் போவாராய்,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 204

மாசில் வாய்மைநெல் வாயில் மறையவர்
ஆசில் சீர்ச்சண்பை ஆண்டகை யார்க்கெதிர்
தேசு டைச்சிவி கைமுத லாயின
ஈசர் இன்னரு ளால்தாங்கி ஏகினார்.

பொழிப்புரை :

குற்றம் இல்லாத வாய்மையுடைய திருநெல் வாயிலில் உள்ள அந்தணர்கள், குற்றமற்ற சிறப்பையுடைய சீகாழியில் தோன்றிய பிள்ளையாருக்கு, ஒளியுடைய சிவிகை முதலியவற்றை இறைவரின் திருவருளால் தாங்கிச் சென்றனர்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 205

இத்த லைஇவர் இன்னணம் ஏகினார்
அத்த லைச்சண்பை நாதர்க்கும் அவ்விரா
முத்த நற்சிவி கைமுத லாயின
உய்த்த ளிக்கும் படிமுன் உணர்த்துவார்.

பொழிப்புரை :

இவ்விடத்திலுள்ள இவர்கள் இவ்வாறு சென்ற னர். அங்குச் சீகாழித் தலைவரான பிள்ளையாருக்கும் அன்றைய இரவே நல்ல முத்துக்கள் பதித்து வைத்த சிவிகை முதலானவற்றை ஏற்றுப் பயன் கொள்ளுமாறு முன் உணர்த்துவாராய்,

குறிப்புரை :

இத்தலை அத்தலை என்பன இவ்விடம் அவ்விடம் எனும் பொருள் குறித்தன.

பண் :

பாடல் எண் : 206

அள்ளல் நீர்வயல் சூழும் அரத்துறை
வள்ள லார்நாம் மகிழ்ந்தளிக் கும்மவை
கொள்ள லாகும்கொண் டுய்த்தல் செய் வாய்என
உள்ள வாறருள் செய்ய வுணர்ந்தபின்.

பொழிப்புரை :

சேறுமிக்க நீர்வளம் வாய்ந்த வயல்கள் சூழ்ந்த திருவரத்துறையில் எழுந்தருளியிருக்கும் வள்ளலாரான சிவபெரு மான், `நாம் மகிழ்ந்தளிக்கும் இச்சிவிகை முதலானவை ஏற்றுக் கொள்ளத் தக்கவையாகும் ஆதலின், அவற்றை ஏற்றுப் பயன் கொள்வாயாக!\' என்று பிள்ளையாருக்கு அருளிச் செய்ய, அவ்வரு ளிப்பாட்டை அறிந்து உறக்கம் நீங்கிய பின்பு,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 207

சண்பை யாளியார் தாங்கண்ட மெய்யருள்
பண்பு தந்தையார் தம்முடன் பாங்கமர்
தொண்ட ருக்கருள் செய்து தொழாமுனம்
விண்பு லப்பட வீங்கிருள் நீங்கலும்.

பொழிப்புரை :

சீகாழித் தலைவரான சம்பந்தர், தாம் கனவில் கண்ட மெய்யருளின் தன்மையைத் தந்தையாருக்கும் அருகிலிருந்த தொண்டர்களுக்கும் கூறியருளித் திருவருளைத் தொழுவதற்கு முன்னமேயே, வானம் வெளிப்பட்டுத் தோன்ற, இருள் நீங்கவும்,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 208

மாலை யாமம் புலர்வுறும் வைகறை
வேலை செய்வினை முற்றிவெண் ணீறணி
கோல மேனிய ராய்க்கைம் மலர்குவித்
தேல அஞ்செழுத் தோதி எழுந்தனர்.

பொழிப்புரை :

முன்னர் இருந்த மாலையும் யாமமும் முறையே நீங்க, பொழுது புலரும் விடியற்காலையில் செயத்தக்க கடன்களை முடித்து, வெண்மையான திருநீற்றினை அணிந்த சிவப்பொலிவு கொண்ட அழகிய திருமேனியராகி, கைம்மலர்களைத் தலைமேல் குவித்துப் பொருந்துமாறு திருவைந்தெழுத்தை ஓதி எழுந்தருளி யிருந்தார்.

குறிப்புரை :

`வெய்யவன் சென்று மேல்கடல் வீழ்ந்தனன்\' என முன்னர் (பா. 192) வந்த மாலையும், அதனைத் தொடர்ந்து வந்த யாமமும் நீங்க, பொழுது புலர்வுறும் வேளையில் என வரலாற்றியைபு அறிய, `மாலையாமம் புலர்வுறும் வைகறை\' என்றார். இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 209

போத ஞானப் புகலிப் புனிதரைச்
சீத முத்தின் சிவிகைமே லேற்றிடக்
காதல் செய்பவன் போலக் கருங்கடல்
மீது தேரின்வந் தெய்தினன் வெய்யவன்.

பொழிப்புரை :

மெய்யுணர்தலாகிய ஞானம் பெற்ற தூயவரான சீகாழித் தலைவரைக் குளிர்ந்த முத்துக்களையுடைய சிவிகையில் ஏற்றி வணங்க, மிக்க அன்பு கொண்டவன் போலக் கதிரவனும் கரிய கடல் மீது தோன்றித் தன்தேர் மீது ஏறிவந்தனன்.

குறிப்புரை :

கதிரவன் வந்தமையைத் தற்குறிப்பேற்ற அணி நலம் பொதுளக் கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 210

ஆய போழ்தின் அரவெனும் ஆர்ப்புடன்
தூய முத்தின் சிவிகை சுடர்க்குடை
மேய சின்னங்கள் கொண்டுமெய் யன்பரோ
டேய அந்தணர் தாமெதிர் தோன்றினார்.

பொழிப்புரை :

அதுபொழுது `அரகர\' என்ற முழக்கத்துடன் தூய முத்தினால் ஆய சிவிகையையும், ஒளிபொருந்திய குடையையும், பொருந்திய சின்னங்களையும் தாங்கிக் கொண்டு மெய்யன்பர்கள் உடனே பொருந்திய அந்தணர்களும், அங்கிருந்த பிள்ளையாரின் எதிரே வந்து தோன்றினர்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 211

வந்து தோன்றிய அந்தணர் மாதவர்
கந்த வார்பொழில் காழிநன் னாடர்முன்
அந்த மில்சீர் அரத்துறை ஆதியார்
தந்த பேரருள் தாங்குவீர் என்றனர்.

பொழிப்புரை :

வந்து தோன்றிய அந்தணர்களும் மெய் அன்பர்களும் மணம் மிக்க பொழில்களையுடைய சீகாழித் தலைவர் ஆன சம்பந்தர் திருமுன்புநின்று, `அழிவற்ற சிறப்பையுடைய திருவரத் துறை இறைவர் அளித்தருளிய பேரருள் வடிவான இப்பொருள்களை ஏற்றுக்கொள்வீராக\' என வேண்டினர்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 212

என்று தங்களுக் கீச ரருள்செய்த
தொன்றும் அங்கொழி யாமை உரைத்துமுன்
நின்று போற்றித் தொழுதிட நேர்ந்தது
மன்று ளார்அருள் என்று வணங்கினார்.

பொழிப்புரை :

ஈசர் தமக்குக் கனவில் அருளியதும் நனவில் வழங்கியதுமான அருளிச் செயல்களுள் ஒன்றையும் விடாமல் எடுத்துக் கூறிப் பிள்ளையாரின் முன் நின்று போற்றி வணங்கினர். `இவ்வருஞ் செயல்கள் எல்லாம் பெருமன்றுள் ஆடும் பெருமானின் திருவருளேயாகும்.\' எனப் பிள்ளையார் கூறி வணங்கினர்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 213

மெய்ம்மை போற்றி விடாத விருப்பினால்
தம்மை யுன்னும் பரிசுதந் தாள்பவர்
செம்மை நித்தில யானச் சிறப்பருள்
எம்மை யாளுவப் பானின் றளித்ததே.

பொழிப்புரை :

உள்ளவாறு போற்றிப் பற்றுவிடாத விருப்பத்தால் தம்மை நினைத்திருக்கும் தன்மையைக் கொடுத்து அருளுகின்ற இறைவர், செம்மையான முத்துச் சிவிகையாம் சிறப்பை அளித்தல் எம்மைத் தம் அடியவராக உவந்து ஆட்கொள்ளும் பொருட்டாய் இன்று அளித்த பேறுதான் என்னே! என வியந்தனராய்,

குறிப்புரை :

இப்பாடல், அடுத்திருக்கும் `எந்தையீசன்\' எனத் தொடங்கும் பாடலை அடுத்துச் சில பதிப்புக்களிலும், `பொடியணிந்த\' எனும் பாடலை அடுத்துச் சில பதிப்புக்களிலும் காணப்படுகின்றது. இவ்வீரமைவுகளும் வரலாற்றுத் தொடர்ச்சிக்குப் பொருந்துமாறில்லை என்பர் சிவக்கவிமணியார்.

பண் :

பாடல் எண் : 214

எந்தை ஈசன் எனஎடுத்து இவ்வருள்
வந்த வாறுமற்று இவ்வண மோஎன்று
சிந்தை செய்யும் திருப்பதி கத்துஇசை
புந்தி யாரப் புகன்றெதிர் போற்றுவார்.

பொழிப்புரை :

`எந்தை ஈசன்\' எனத் தொடங்கிச் சிவபெருமா னின் திருவருள் இருந்த வண்ணம் இவ்வண்ணமோ என்று சிந்தை செய்யும் இத்திருப்பதிகத்து இசையை உள்ளம் நிறைவு கொள்ளும் வரை புகன்று எதிரே நின்று போற்றுவாராய்,

குறிப்புரை :

எதிர்போற்றி - இறைவன் அருளிய அருங் கொடை களை அப்பெருமானது திருமுன்னிலையில் நின்று போற்றி `எந்தை ஈசன்\'(தி.2 ப.90) எனத் தொடங்கும் இப்பதிகம் பியந்தைக் காந்தாரப் பண்ணில் அமைந்ததாகும். அரத்துறை அடிகள் தம் அருள் அப்பெரு மானை நாளும் மனம், மொழி, மெய்களால் வணங்கி நிற்பார்க்கல் லாது கிட்டாது எனப் பாடல்தொறும் கூறப்பட்டுள்ளது.

பண் :

பாடல் எண் : 215

பொடிய ணிந்த புராணன் அரத்துறை
அடிகள் தம்மரு ளேயிது வாமெனப்
படியி லாதசொல் மாலைகள் பாடியே
நெடிது போற்றிப் பதிகம் நிரப்பினார்.

பொழிப்புரை :

திருநீற்றை அணிந்த முன்னைப் பழம்பொருட் கும் முன்னைப்பழம் பொருளாய் திருவரத்துறை இறைவரின் திரு வருளே இதுவாகும் என ஒப்பற்ற சொல்மாலைகளைப் பாடி, நீள நினைந்து வணங்கித் திருப்பதிகத்தை நிறைவு செய்தார்.

குறிப்புரை :

இப்பதிகப் பாடல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சொல் மாலை ஆகும். ஆதலின் பன்மை வாசகம் படக் கூறினார். இம் மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 216

சோதி முத்தின் சிவிகைசூழ் வந்துபார்
மீது தாழ்ந்துவெண் ணீற்றொளி போற்றிநின்
றாதி யார்அரு ளாதலின் அஞ்செழுத்
தோதி யேறினார் உய்ய வுலகெலாம்.

பொழிப்புரை :

ஒளிபொருந்திய முத்துச் சிவிகையினைச் சூழ்ந்து வலமாக வந்து, நிலத்தின் மேல் விழுந்து வணங்கி, அதன் வெண்ணீற்று ஒளியைப் போற்றி நின்று, அது இறைவரின் அருள் என வியந்து திருவைந்தெழுத்தை ஓதிப் பிள்ளையார் உலகம் எல்லாம் உய்தற் கென அதில் ஏறியருளினார்.

குறிப்புரை :

`உலகெலாம்\' எனும் தொடர் இறைவர் ஆசிரியருக்கு எடுத்துக் கொடுத்த தொடராகும். அதனை ஈண்டுத் தம் காப்பியத்தில் நடுவிடமாய ஈண்டும் வைத்துப் போற்றியுள்ளமை அறியத் தக்கது.

பண் :

பாடல் எண் : 217

தொண்டர் ஆர்த்தனர் சுருதிகள்
ஆர்த்தன தொல்லை
அண்டர் ஆர்த்தனர் அகிலமும்
ஆர்ப்புடன் எய்தக்
கொண்டல் ஆர்த்தன முழவமும்
ஆர்த்தன குழுமி
வண்ட றாப்பொலி மலர்மழை
ஆர்த்தது வானம்.

பொழிப்புரை :

அடியவர் மகிழ்வொலி செய்தனர். மறைகள் முழங்கின. பழைமையுடைய தேவர்கள் மகிழ்வொலி செய்தனர். மேகங்கள் உலகம் உவக்குமாறு முழங்கின. முழவு இயங்கள் ஒலித் தன. கூட்டமாய்ச் சேர்ந்து வண்டுகள் நீங்காத அழகிய மலர் மழையை வானம் சொரிந்தது.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 218

வளையும் ஆர்த்தன வயிர்களும்
ஆர்த்தன மறையின்
கிளையும் ஆர்த்தன திளைஞரும்
ஆர்த்தனர் கெழுவும்
களைகண் ஆர்த்ததொர் கருணையின்
ஆர்கவின் முத்தின்
விளையு மாக்கதிர் வெண்குடை
ஆர்த்தது மிசையே.

பொழிப்புரை :

சங்குகள் ஒலித்தன, ஊது கொம்புகள் ஒலித்தன, மறை வேள்விகள் ஒலித்தன, உறவினர் மகிழ்வொலி செய்தனர், உயிர்க்கு உயிராக இருந்தருளும் இறைவரின் கருணையினால் பிணிக்கப்பட்ட முத்துக்களினின்று வீசும் பெருங்கதிர்களுடன் வெண் குடை மேலே கவிழ்க்கப்பட்டு விளக்கம் பெற்றது.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 219

பல்கு வெண்கதிர்ப் பத்திசேர்
நித்திலச் சிவிகைப்
புல்கு நீற்றொளி யுடன்பொலி
புகலிகா வலனார்
அல்கு வெள்வளை அலைத்தெழு
மணிநிரைத் தரங்கம்
மல்கு பாற்கடல் வளர்மதி
உதித்தென வந்தார்.

பொழிப்புரை :

பெருகும் வெண்கதிர்களின் ஒழுங்குடைய முத்துச் சிவிகையின் மீது திருநீற்று ஒளியுடன் விளங்கும் சீகாழித் தலைவர், தங்கும் வெண்மையான சங்குகளை வாரி எழுகின்ற அழ கிய வரிசையான அலைகள் நிறைந்த பாற்கடலில் வளரும் திங்கள் தோன்றினாற் போல எழுந்தருளி வந்தார்.

குறிப்புரை :

பாற்கடல் முத்துச் சிவிகைக்கும், திங்கள் அதன் மீது இயங்கிவரும் பிள்ளையாருக்கும் உவமையாயின. `பான்மதி உவரி ஈன்றால் எனமகப் பயந்த போது\' (தி.12 பு.10 பா.33) என ஆசிரியர் முன் அருளிய திருவாக்கும் நினைவு கூர்க.

பண் :

பாடல் எண் : 220

நீடுதொண்டர்கள் மறையவர்
ஏனையோர் நெருங்கி
மாடு கொண்டெழு மகிழ்ச்சியின்
மலர்க்கைமேல் குவித்தே
ஆடு கின்றனர் அயர்ந்தனர்
அளவில் ஆனந்தம்
கூடு கின்றகண் பொழிபுனல்
வெள்ளத்தில் குளித்தார்.

பொழிப்புரை :

நிறைந்த தொண்டர்களும், அந்தணர்களும் மற்றவர்களும் நெருங்கி வந்து, தங்கள் உள்ளத்தில் மீதூர்ந்து எழுகின்ற மகிழ்ச்சியினால் மலர்க்கைகளை மேலே குவித்துத் தன் வயம் இழந்த நிலையில் ஆடினர்; அளவற்ற மகிழ்ச்சி பொருந்திய கண்களினின்று பொழியும் கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கினர்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 221

செய்ய பொன்புனை வெண்தர
ளத்தணி சிறக்கச்
சைவ மாமறைத் தலைவர்பால்
பெறுந்தனிக் காளம்
வையம் ஏழுடன் மறைகளும்
நிறைதவத் தோரும்
உய்ய ஞானசம் பந்தன்வந்
தான்என ஊத.

பொழிப்புரை :

சிவந்த பொன்னாலாய வெண்முத்துக்களின் அழகு சிறக்குமாறு உள்ளதும் சைவத்திற்கும் நான்மறைகட்கும் தலை வர் ஆன சிவபெருமானிடத்தில் பெற்றதும், ஒப்பில்லாததுமான எக்காளம் என்ற சின்னம், உலகு ஏழும் நான்மறைகளும் நிறைந்த தவத்தை உடையவர்களும் உய்யுமாறு `திருஞானசம்பந்தன் வந்தான்\' என்று கூறி ஊதவும்,

குறிப்புரை :

செய்யபொன் புனை வெண் தரளத்து அணி சிறக்கும் காளம், சைவமாமறைத் தலைவர் பாற்பெறுங் காளம், தனிக் காளம் எனத் தனித் தனியே கூட்டுக. ஏனைய காளங்கள் வெறும் உலகியல் பற்றிய நிகழ்ச்சிகளையே ஊதுவன. இதுவோ ஞானசம்பந்தரைப் பற்றியும் அவருக்கு அருளிய இறைவரைப் பற்றியுமான செய்திக ளைக் கூறுவதாகும். ஆதலின் அதன் சிறப்புத் தோன்ற இங்ஙனம் கூறினார்.

பண் :

பாடல் எண் : 222

சுற்று மாமறைச் சுருதியின்
பெருகொலி நடுவே
தெற்றி னார்புர மெரித்தவர்
தருதிருச் சின்னம்
முற்று மானவன் ஞானமே
முலைசுரந் தூட்டப்
பெற்ற பாலறா வாயன்வந்
தான்எனப் பிடிக்க.

பொழிப்புரை :

சூழ்ந்து ஒலிக்கும் பெருமறைச் சுருதிகளின் பெருமுழக்கத்தினிடையே பகைவரின் முப்புரங்களையும் எரித்த இறைவர் அளித்தருளிய திருச்சின்னம் `ஞானமே வடிவாய அம்மையார் தம் ஞானத் திருமுலை சுரந்து ஞான அமுது ஊட்டப் பெற்ற பாலறாவாயன் வந்தான்\' என ஊதவும்,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 223

புணர்ந்த மெய்த்தவக் குழாத்தொடும்
போதுவார் முன்னே
இணைந்த நித்திலத் திலங்கொளி
நலங்கிளர் தாரை
அணைந்த மாமறை முதற்கலை
அகிலமும் ஓதா
துணர்ந்த முத்தமிழ் விரகன்வந்
தானென ஊத.

பொழிப்புரை :

சூழவரும் மெய்த்தவ முனிவர் குழுவுடன் செல்கின்றவர் முன்பு, இணைந்த முத்துக்களின் விளங்கும் ஒளிப் பெருமை சூழ்ந்து கிளர்தற்கு இடமான தாரை என்ற சின்னம் `பெரு மறைகளையும் அவற்றின் வழித்தாய் வரும் எல்லாக் கலைகளையும் ஓதாமல் உணர்ந்த முத்தமிழ் விரகன் வந்தான்\' என ஊதவும்,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 224

தெருளும் மெய்க்கலை விளங்கவும்
பாருளோர் சிந்தை
இருளும் நீங்கவும் எழுதுசொன்
மறையளிப் பவர்தாம்
பொருளும் ஞானமும் போகமும்
போற்றியென் பாருக்
கருளும் அங்கணர் திருவரத்
துறையைவந் தணைந்தார்.

பொழிப்புரை :

தெளிவைத்தரும் உண்மைக் கலைகள் விளங் கும்படியும், அதனுடன் உலகத்தில் உள்ளவரின் சிந்தையில் தங்கிய இருள் நீங்கும்படியும் எழுதும் சொல் மறையை அளிப்பவரான ஆளுடைய பிள்ளையார், `போற்றி\' என்று வழிபடுவோர்க்குப் பொரு ளையும், ஞானத்தையும், இன்பத்தையும் அளிக்கும் சிவபெருமானின் திருவரத்துறையை வந்து அடைந்தார்.

குறிப்புரை :

இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 225

வந்து கோபுர மணிநெடு
வாயில்சேய்த் தாகச்
சந்த நித்திலச் சிவிகைநின்
றிழிந்துதாழ்ந் தெழுந்து
சிந்தை ஆர்வமும் மகிழ்ச்சியும்
பொங்கிமுன் செல்ல
அந்தி நாண்மதி அணிந்தவர்
கோயிலுள் அடைந்தார்.

பொழிப்புரை :

அத்திருப்பதிக்கு அணுக வந்தருளிய பிள்ளை யார், கோபுரவாயில் தொலைவிலே தோன்றிய அளவில், அழகிய முத்துச் சிவிகையினின்றும் கீழே இறங்கி நிலத்தில் விழுந்து பருவடி வாக விளங்கும் இலிங்கத்திருமேனியாகிய அக்கோபுரத்தை வணங்கி எழுந்து, உள்ளத்தில் எழுந்த ஆசையும் மகிழ்ச்சியும் மேலும் மேலும் பொங்கித் தமக்கு முன் செல்ல, மாலைக் காலத்தில் தோன்றும் பிறைச் சந்திரனைச் சூடிய திருவரத்துறை இறைவரின் திருக்கோயிலின் உள் அடைந்தனர்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 226

மன்னுகோயிலை வலங்கொண்டு
திருமுன்பு வந்து
சென்னி யிற்கரங் குவித்துவீழ்ந்
தன்பொடு திளைப்பார்
என்னை யும்பொரு ளாகஇன்
னருள்புரிந் தருளும்
பொன்ன டித்தலத் தாமரை
போற்றி என் றெழுந்தார்.

பொழிப்புரை :

நிலைபெற்ற அக்கோயிலை வலம் வந்து, திருமுன்பு வந்து, தலைமீது கைகளைக் குவித்து நிலத்தில் விழுந்து, அன்பில் திளைப்பவராய் `என்னையும் ஒருபொருளாகக் கொண்டு இனிய அருளைச் செய்யும் பொன்னடித் தாமரைகளுக்கு என்றும் வணக்கம் செலுத்தும் கடப்பாடுடையேன்\' என்று எழுந்து போற்றினார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 227

சூடி னார்கர கமலங்கள்
சொரிந்திழி கண்ணீர்
ஆடி னார்திரு மேனியில்
அரத்துறை விரும்பி
நீடி னார்திரு அருட்பெருங்
கருணையே நிகழப்
பாடி னார்திருப் பதிகம்ஏ
ழிசையொடும் பயில.

பொழிப்புரை :

கைம்மலர்களைத் தலைமேல் சூடிக்கொண்டார், பெருகி வழிகின்ற கண்ணீர் ஒழுக்கால் திருமேனி நனைய ஆடினார். திருவரத்துறையை விரும்பித் தொன்றுதொட்டு வீற்றிருந்தருளும் இறைவரின் கருணையை நினைந்து ஏழிசையுடன் பொருந்தத் திருப் பதிகம் பாடினார்.

குறிப்புரை :

இவ்வரிய பதிகம் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 228

இசைவி ளங்கிட இயல்பினில்
பாடிநின் றேத்தி
மிசைவி ளங்குநீர் வேணியார்
அருளினால் மீண்டு
திசைவி ளங்கிடத் திருவருள்
பெற்றவர் சிலநாள்
அசைவில் சீர்த்தொண்டர் தம்முடன்
அப்பதி அமர்ந்தார்.

பொழிப்புரை :

ஏழ் இசையும் பொருந்துமாறு திருவருட் கருணையைத் திருப்பதிகத்தால் போற்றிப் பாடி நிறைவாக்கி, நின்று வழிபட்டு, மேலே கங்கை நீர் விளங்குவதற்கு இடமான சடையை உடைய சிவபெருமானின் திருவருள் பெற்று, அங்கு நின்று மீண்டும் எழுந்தருளி, எத்திசையில் உள்ளவர்களும் சிவஞானம் பெற்றுய் யும்படி திருவருள் பெற்றவரான பிள்ளையார், தம்நிலையில் தாழாத சிறப்புடைய தொண்டர்களுடன், சில நாள்கள் அத்திருப்பதியில், விரும்பி எழுந்தருளி இருந்தார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 229

தேவர் தம்பிரான் திருவரத்
துறையினில் இறைஞ்சி
மேவு நாள்களில் விமலனார்
நெல்வெண்ணெய் முதலாத்
தாவில் அன்பர்கள் தம்முடன்
தொழுதுபின் சண்பைக்
காவ லார்அருள் பெற்றுடன்
கலந்துமீண் டணைந்தார்.

பொழிப்புரை :

தேவரின் தலைவரான சிவபெருமானைத் திருவரத்துறையில் இருந்து வணங்கி அங்கிருந்தருளிய நாள்களில், சிவபெருமானின் திருநெல்வெண்ணெய் முதலான திருப்பதிகளைக் குற்றம் அற்ற அன்பர்களுடனே தொழுது, பின் சீகாழித் தலைவரான பிள்ளையார் இறைவரின் திருவருளைப் பெற்று உடன் கலந்திருந்து மீண்டும் திருவரத்துறையில் வந்து சேர்ந்தார்.

குறிப்புரை :

திருநெல்வெண்ணெய் முதலாக உள்ள திருப்பதிகளை வணங்கினார் எனக் குறிக்கப்பெறினும், அப்பதிகள் எவையென அறிதற்கில்லை. திருநெல்வெண்ணெய்க்கு உரிய பதிகம் மட்டுமே கிடைத்துள்ளது. பதிகம் - நல்வெணெய் விழுது (தி.3 ப.96) பண் : சாதாரி.

பண் :

பாடல் எண் : 230

விளங்கு வேணுபு ரத்திருத்
தோணிவீற் றிருந்த
களங்கொள் கண்டர்தங்
காதலி யாருடன்கூட
உளங்கொ ளப்புகுந் துணர்வினில்
வெளிப்பட உருகி
வளங்கொள் பூம்புனற் புகலிமேற்
செலமனம் வைத்தார்.

பொழிப்புரை :

பிள்ளையார் வணங்கி வரும் வேணுபுரமான சீகாழியில், திருத்தோணிக் கோயிலில் வீற்றிருந்தருளும் திருநீலகண்ட ரான இறைவர் தம் துணைவியாராகிய திருநிலைநாயகி அம்மையா ருடன், தம் உள்ளத்தே இடம் கொள்ள நிறைந்து உள்புகுந்து உணர்வில் வெளிப்படக் கண்டு, உள்ளம் உருகி, வளம் உடைய அழகிய நீர் பொருந்திய சீகாழிக்குச் செல்ல உள்ளம் கொண்டார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 231

அண்ண லார்திரு வரத்துறை
அடிகளை வணங்கி
நண்ணு பேரரு ளால்விடை
கொண்டுபோய் நடங்கொண்
டுண்ணி றைந்தபூங் கழலினை
உச்சிமேற் கொண்டே
வெண்ணி லாமலர் நித்திலச்
சிவிகைமேற் கொண்டார்.

பொழிப்புரை :

பெருமையுடைய திருவரத்துறை இறைவரை வணங்கி, பொருந்திய அவரது பெருந் திருவருளினால் விடைபெற் றுக் கொண்டு சென்று, உள்ளத்தில் ஆனந்தக் கூத்தியற்றி ஆட்கொண் டருளிவரும் அழகிய திருவடிகளைத் தலைமீது கொண்ட வண்ணம், வெண்மையான நிலவு ஒளி வீசும் முத்துச் சிவிகையின் மீது இவர்ந் தருளினார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 232

சிவிகை முத்தினிற் பெருகொளி
திசையெலாம் விளக்கக்
கவிகை வெண்மதிக் குளிரொளி
கதிர்செய்வான் கலப்பக்
குவிகை மேற்கொண்டு மறையவர்
குணலையிட் டாடப்
புவிகைம் மாறின்றிப் போற்றவந்
தருளினார் போந்தார்.

பொழிப்புரை :

சிவிகையில் பதிக்கப்பெற்ற முத்துக்களினின்றும் பெருகும் ஒளி எத்திசைகளையும் விளக்கவும், மேலே கவித்த முத்துக் குடையின் வெண்மையான மதிபோன்ற ஒளி, கதிரவனின் ஒளி பரவு கின்ற வானத்தில் கலக்கவும், குவித்த கைகளைத் தலை மேற்கொண்டு தம்மைச் சூழ்ந்துவரும் அந்தணர்கள் மகிழ்ச்சி மீதூர்வால் குணலைக் கூத்து இட்டு மகிழ்ந்து ஆடிவரவும், கைம்மாறு வேண்டாக் கடப்பாட் டுடன் உலகைக் காப்பதற்கு என்றே தோன்றிய பிள்ளையார் எழுந் தருளினர்.

குறிப்புரை :

குணலை - மகிழ்ச்சி மீதூர ஆடும் ஒருவகைக் கூத்து.

பண் :

பாடல் எண் : 233

மறைமு ழங்கின தழங்கின
வண்தமிழ் வயிரின்
குறைந ரன்றன முரன்றன
வளைக்குலங் காளம்
முறையி யம்பின இயம்பல
ஒலித்தன முரசப்
பொறை கறங்கின பிறங்கின
போற்றிசை அரவம்.

பொழிப்புரை :

மறைகள் முழுங்கின; வளமையுடைய தமிழ் மறைகள் ஒலித்தன; பல்வேறு வகையான ஊதுகொம்புகளின் ஒலிகள் ஒலித்தன; சங்கின் கூட்டங்கள் முழங்கின; எக்காளங்கள் பிள்ளையா ரின் முறையான மெய்க்கீர்த்திகளைக் கூறி ஒலித்தன; மற்றும் பலவகை இயங்களும் ஒலித்தன; முரசுபோன்ற பெரிய இயங்கள் பலவும் ஒலித்தன; அடியார்தம் போற்றியுரைகளின் ஒலி, இவ்வொலிகளுக் கெல்லாம் மேலாக ஒலித்தது.

குறிப்புரை :

வயிரின் குறைகள் - ஊதுகொம்புகள் நீண்டனவாயும், சிறுசிறு துண்டுகளாகவும் இருத்தலைக் குறைகள் என்றார்.

பண் :

பாடல் எண் : 234

உடைய பிள்ளையார் வருமெல்லை
யுள்ளஅப் பதியோர்
புடையி ரண்டினுங் கொடியொடு
பூந்துகில் விதானம்
நடைசெய் காவணம் தோரணம்
பூகநற் கதலி
மிடையு மாலைகள் நிறைகுடம்
விளக்கொடு நிரைத்தார்.

பொழிப்புரை :

ஆளுடைய பிள்ளையார் வரும் இடங்களில் எல்லாம், ஆங்காங்குள்ள ஊரவர்கள் இருமருங்கிலும் கொடிகளுடன் அழகிய துகில்களையும், நடைக்காவணங்களையும், தோரணங்களை, பாக்கு, வாழை, நெருங்கிய மாலைகள் போன்ற இவற்றால் செய்யும் அணிவகைகளையும், விளக்குடன் நீர்நிறை குடங்களையும் நிரல்பட வைத்து எதிர்கொண்டார்கள்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 235

அனைய செய்கையால் எதிர்கொளும்
பதிகளா னவற்றின்
வினைத ரும்பவந் தீர்ப்பவர்
கோயில்கள் மேவிப்
புனையும் வண்டமிழ் மொழிந்தடி
பணிந்துபோந் தணைந்தார்
பனைநெ டுங்கைமா வுரித்தவர்
மகிழ்பெரும் பழுவூர்.

பொழிப்புரை :

அவ்வகையில் தம்மை எதிர்கொண்ட திருப்பதி களில் வினைவயத்தால் வரும் பிறவிகளை நீக்கியருளும் இறைவரின் திருக்கோயில்களுக்குச் சென்று புனையும் வளமை கொண்ட தமிழ்ப் பதிகங்களைப் பாடி, இறைவரின் திருவடிகளை வணங்கிச் சென்று, பனை போன்ற நீண்ட கையையுடைய யானையை உரித்த சிவபெரு மான் வீற்றிருக்கும் `திருப்பழுவூர்\' என்ற திருப்பதியைப் பிள்ளையார் அடைந்தார்.

குறிப்புரை :

எதிர் கொண்ட பதிகள் எவை எனத் தெரிந்தில.

பண் :

பாடல் எண் : 236

அங்கணைந் திளம்பிறை அணிந்த சென்னியார்
பொங்கெழிற் கோபுரந் தொழுது புக்கபின்
துங்கநீள் விமானத்தைச் சூழ்ந்து வந்துமுன்
பங்கயச் சேவடி பணிந்து பாடுவார்.

பொழிப்புரை :

அங்குச் சென்று பிறைச் சந்திரனைச் சூடிய திருச்சடையையுடைய இறைவரின் பெருகும் அழகுடைய திருக் கோபுரத்தை வணங்கிக் கோயிலுள் புகுந்து, பின்பு, பெரிய விமா னத்தைச் சூழ்ந்து வலம் வந்து, திருமுன்பு சென்று, தாமரை போன்ற திருவடிகளைத் தொழுது பாடுவாராய்,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 237

மண்ணினிற் பொலிகுல மலையர் தாந்தொழு
தெண்ணில்சீர்ப் பணிகள்செய் தேத்துந் தன்மையில்
நண்ணிய வகைசிறப் பித்து நாதரைப்
பண்ணினில் திகழ்திருப் பதிகம் பாடினார்.

பொழிப்புரை :

இந்நிலவுலகில் சிறந்து விளங்கும் அந்தணர் குலத்தில் வந்த மலையாளர்கள் தொழுது, எண்ணற்ற பல சிறந்த பணிகளைச் செய்து போற்றி வரும் பான்மையைச் சிறப்பித்து, இறை வரைப் போற்றிப் பண் இசையால் விளங்கும் திருப்பதிகத்தைப் பாடினார்.

குறிப்புரை :

இவ்விடத்தருளிய பதிகம் `முத்தன்மிகு மூவிலைநல்\' (தி.2 ப.34) என்ற தொடக்கம் உடைய இந்தளப் பண்ணமைந்த பதிகம் ஆகும். இப்பதிகத்தில் 4, 5, 7, 9, 11 ஆகிய பாடல்களில் மலையா ளர்கள் வழிபட்டமை சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. `அந்தணர்க ளானமலை யாளரவ ரேத்தும், பந்தமலி கின்றபழு வூரரனை\' (தி.2 ப.34) எனவரும் திருக்கடைக்காப்பில் இவர்களின் பணி தொகுத்துக் கூறப்பட்டுள்ளது. இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 238

பாவின திசைவழி பாடி அங்ககன்
றியாவருந் தொழுதுட னேத்த எய்தினார்
மூவுல குய்யநஞ் சுண்ட மூர்த்தியார்
மேவிய பெருந்திரு விசய மங்கையில்.

பொழிப்புரை :

இத்திருப்பதிகத்தை இசை வழியே பாடி, அங்கு நின்று சென்று, யாவரும் உடன்கூடி வணங்குமாறு, மூவுலகங்களும் உய்ய நஞ்சை உண்டருளிய இறைவர் விரும்பி எழுந்தருளியுள்ள பெரிய `திருவிசயமங்கை\' என்ற பதியைச் சேர்ந்தனர்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 239

அந்தணர் விசயமங் கையினில் அங்கணர்
தந்தனி ஆலயஞ் சூழ்ந்து தாழ்ந்துமுன்
வந்தனை செய்துகோ தனத்தை மன்னிய
செந்தமிழ் மாலையிற் சிறப்பித் தேத்தினார்.

பொழிப்புரை :

`மறையவர் வாழ்கின்ற விசயமங்கை என்ற திருப்பதியில் சிவபெருமானின் ஒப்பற்ற திருக்கோயிலை வலம் வந்து வணங்கி, திருமுன் வணங்கி நின்று, அங்குப் பசுக்கள் வழிபட்ட செயலை, நிலைபெறச் செந்தமிழ்ப் பதிகத்தில் வைத்துச் சிறப்பித்துப் போற்றி வழிபட்டனர்.

குறிப்புரை :

இப்பதியில் பாடப்பட்டது `மருவமர் குழலுமை\' (தி.3 ப.17) எனத் தொடங்கும் காந்தார பஞ்சமப் பண்ணிலமைந்த பதிகமாகும். `கோதனம் வழிபடக் குலவு நான்மறை வேதியர் தொழு தெழு விசய மங்கையே\' எனவரும் 2ஆவது பாடலை உளங்கொண்டு ஆசிரியர் அருளிச் செய்துள்ளார். கோதனம் - பசுக்களாகிய செல்வம்.

பண் :

பாடல் எண் : 240

விசயமங் கையினிடம் அகன்று மெய்யர்தாள்
அசைவில்வை காவினில் அணைந்து பாடிப்போந்
திசைவளர் ஞானசம் பந்தர் எய்தினார்
திசையுடை ஆடையர் திருப்பு றம்பயம்.

பொழிப்புரை :

விசயமங்கை என்ற பதியினின்றும் நீங்கிச் சென்று, இறைவரின் திருவடி என்றும் நிலைபெற்றிருக்கும் திருவைகா வூர் என்னும் திருப்பதியை அடைந்து திருப்பதிகம் சாத்தியருளினார். பின் அப்பதியினின்றும் சென்று, நாளும் இன்னிசையால் தமிழ் வளர்க்கும் திருஞானசம்பந்தர், எண் திசைகளையே ஆடையாகக் கொண்ட இறைவரின் `திருப்புறம்பயம்\' என்ற பதியை அடைந்தார்.

குறிப்புரை :

திருவைகாவூரில் இவர் பாடிய பதிகம் `கோழைமிட றாககவி\' (தி.3 ப.71) என்று தொடங்கும் சாதாரிப் பண்ணமைந்த பதிக மாகும்.

பண் :

பாடல் எண் : 241

புறம்பயத் திறைவரை வணங்கிப் போற்றிசெய்
திறம்புரி நீர்மையிற் பதிகச் செந்தமிழ்
நிறம்பயி லிசையுடன் பாடி நீடிய
அறந்தரு கொள்கையார் அமர்ந்து மேவினார்.

பொழிப்புரை :

திருப்புறம்பயத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை வணங்கிப் போற்றும் பண்ணியல் திறம் அமைந்த செந்தமிழை, வண்ணம் மிகும் இசையுடன் பாடி, நீடிய அறத்தை உதவும் கொள்கையினரான பிள்ளையார், அங்கு விருப்புடன் எழுந் தருளி இருந்தார்.

குறிப்புரை :

இப்பதியில் பாடிய பதிகம் `மறம்பய மலைந்தவர்\' (தி.2 ப.30) எனும் தொடக்கம் உடைய இந்தளப் பண்ணிலமைந்த பதிகமாகும். திறம்புரிநீர்மையில் - பண்ணியல் திறம் பொருந்திய தன்மையில். பண், பண்ணியல், திறம், திறத்திறம் எனப் பண் வகை நான்கென்பர். இவற்றுள் திறம் பொருந்திய நீர்மையில் இப்பதிகத்தை அருளினர். நீடிய அறமாவது உயிர் பெறுதற்குரிய நிலைத்த பயனாய வீட்டுலகைப் பெறும் அறமாம். இவ்வறத்தைக் கூற வந்தவரே ஞானசம்பந்தர் ஆவர் `சிவம் பெருக்கும் பிள்ளையார்\' என்றதும் இதுபற்றியேயாம்.

பண் :

பாடல் எண் : 242

அத்திருப் பதிபணிந் தகன்று போய்அனல்
கைத்தலத் தவர்பதி பிறவுங் கைதொழு
முத்தமிழ் விரகராம் முதல்வர் நண்ணினார்
செய்த்தலைப் பணிலமுத்து ஈனுஞ் சேய்ஞலூர்.

பொழிப்புரை :

அத்திருப்புறம்பயம் என்ற பதியைப் பணிந்து சென்று, தீயை ஏந்திய கையையுடைய இறைவரின் திருப்பதிகள் பலவற்றையும் வணங்கும் முத்தமிழ் வல்லவரான பிள்ளையார் வயல் களில் சங்குகள் முத்துக்களை ஈனுவதற்கு இடமான `திருச்சேய்ஞ லூரை\' வந்தடைந்தார்.

குறிப்புரை :

`பதிபிறவும் கைதொழுது\' என்பதால் அப்பதிகள் திருவியலூர், திருந்துதேவன்குடி முதலாயினவாகலாம் எனக் கூறி, அவற்றிற்குரிய பதிகங்களையும் ஈண்டுக் காட்டினர் சிவக்கவிமணியார். எனினும் பின்வரும் 294, 295ஆம் பாடல்களில் இத்திருப்பதிகளை வணங்கினார் பிள்ளையார் என விதந்து கூறும் இடத்தையே இப்பதி கங்கள் அருளியமை சேக்கிழாரால் குறித்துப் போற்றப்படுகின்றது. ஆதலின் இப்பதிகங்களைப் பின்வரும் அவ்விடங்களின் அணியன வாகக் குறிப்பதே பொருந்துவதாகும்.

பண் :

பாடல் எண் : 243

திருமலி புகலிமன் சேரச் சேய்ஞலூர்
அருமறை யவர்பதி அலங்க ரித்துமுன்
பெருமறை யொடுமுழ வொலிபி றங்கவே
வருமுறை எதிர்கொள வந்து முந்தினார்.

பொழிப்புரை :

செல்வம் மிக்க சீகாழிப் பதியின் தலைவர் இங்ஙனம் எழுந்தருள, சேய்ஞலூரில் வாழ்கின்ற அந்தணர்கள், தம் பதியை அணிசெய்து, முன்பாக மறை முழக்கத்துடன் மங்கல முழவுகளின் ஒலிகளும் விளங்க முறைமை வழாது பிள்ளையாரை எதிர்கொள்ளும் பொருட்டு வந்தனர்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 244

ஞானசம் பந்தரும் நாய னார்சடைத்
தூநறுந் தொடையல்முன் சூட்டும் பிள்ளையார்
பான்மையில் வரும்பதி என்று நித்தில
யானமுன் இழிந்தெதிர் இறைஞ்சி எய்தினார்.

பொழிப்புரை :

திருஞானசம்பந்தப் பெருமானும், `இறைவர் தம் சடையில் சாத்திய தூய நறிய கொன்றை மலர் மாலையை முன்னர்த் தம் தலையில் சூட்டப் பெறும் பேறுடைய சண்டீசர், எழுமையும் ஏமாப்புடைய நல்லுணர்வோடு வந்து தோன்றிய திருப்பதி இது\' என்று மனத்துள் எண்ணி, முத்துப் பல்லக்கினின்றும் இழிந்து, அப் பதியை வணங்கி வந்து சேர்ந்தார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 245

மாமறை யாளர்வண் புகலிப் பிள்ளையார்
தாம்எழுந் தருளிடத் தங்கள் பிள்ளையார்
காமரும் பதியில்வந் தருளக் கண்டன
ராமகிழ் வுடன்பணிந் தாடி ஆர்த்தனர்.

பொழிப்புரை :

பெருமை மிகுந்த அந்தணர்கள், அருட் கொடை யாளரான சீகாழிப் பிள்ளையார் அங்ஙனம் எழுந்தருளிவர, தங்க ளின் சண்டீசப் பிள்ளையாரே அழகிய தம்பதியின் மீண்டும் எழுந் தருளி வரக்கண்டது போன்ற மகிழ்வுடன் வணங்கியும் ஆடியும் மகிழ் வொலி செய்தும் எதிர் கொண்டனர்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 246

களித்தனர் புண்ணியக் கரக வாசநீர்
தெளித்தனர் பொரிகளும் மலருஞ் சிந்தினர்
துளித்தனர் கண்மழை சுருதி யாயிரம்
அளித்தவர் கோயிலுள் அவர்முன் பெய்தினார்.

பொழிப்புரை :

அவ்வூரவர் இங்ஙனம் மகிழ்ச்சியடைந்து புண்ணியக் குடத்திலுள்ள மணம் கொண்ட நீரைத் தெளித்தனர். பொரிகளையும், மலர்களையும் சொரிந்தனர். ஆனந்தக் கண்ணீர் பொழிந்தனர். அளவற்ற மறைகளை வழங்கியருளிய சிவபெருமா னது திருக்கோயிலில் புகுந்து அப்பிள்ளையாரின் முன்னர்ச் சென்றனர்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 247

வெங்குரு வேந்தரும் விளங்கு கோயிலைப்
பொங்கிய விருப்பினால் புடைவ லங்கொடு
செங்கைகள் சென்னிமேற் குவித்துச் சென்றுபுக்
கங்கணர் முன்புற அணைந்து தாழ்ந்தனர்.

பொழிப்புரை :

வெங்குரு என்னும் சீகாழித் தலைவரான பிள்ளையாரும், விளங்கும் கோயிலை மிக்க விருப்பத்துடன் வலமாக வந்து, சிவந்த கைகளைத் தலைமேல் குவித்து, உள்ளே புகுந்து, இறைவரின் திருமுன்பு சேர்ந்து வணங்கினர்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 248

வேதியர் சேய்ஞலூர் விமலர் தங்கழல்
காதலிற் பணிந்தவர் கருணை போற்றுவார்
தாதைதாள் தடிந்தசண் டீசப் பிள்ளையார்
பாதகப் பயன்பெறும் பரிசு பாடினார்.

பொழிப்புரை :

அந்தணர் வாழ்தற்கு இடமான சேய்ஞலூரில் எழுந்தருளியிருக்கும், இயல்பாகவே வினையின் நீங்கியவராய இறைவரின் திருவடிகளை வணங்கி, அப்பெருமானின் அருள் திறத்தைப் போற்றுபவராய பிள்ளையார், தம் தந்தையின் காலை வெட்டிய சண்டீசப் பிள்ளையார், கொடுஞ்செயலான அதற்குப் பய னாய் இறைவரின் மகனார் ஆன தன்மையைப் போற்றிப் பாடினார்.

குறிப்புரை :

இத்திருப்பதியில் அருளிய பதிகம் `நூலடைந்த\' (தி.1 ப.48) எனத் தொடங்கும் பழந்தக்கராகப் பதிகமாகும். இப்பதிகத்தில்,
பீரடைந்த பாலதாட்டப் பேணாத வன்றாதை
வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடிந் தான்றனக்குத்
தாரடைந்த மாலை சூட்டித் தலைமைவ குத்ததென்னே
சீரடைந்த கோயில்மல்கு சேய்ஞலூர் மேயவனே.
-தி.1 ப.48 பா.7 எனவரும் ஏழாவது திருப்பாடலை நினைவு கூருகின்றார் ஆசிரியர் சேக்கிழார்.

பண் :

பாடல் எண் : 249

இன்னிசை வண்டமிழ் பாடி ஏத்தியே
நன்னெடும் பதியுளோர் நயக்க வைகிய
பின்னர்வெண் பிறையணி வேணிப் பிஞ்ஞகர்
மன்னிய திருப்பனந் தாள்வ ணங்கினார்.

பொழிப்புரை :

பிள்ளையார், இனிய இசையமைப்புடைய இவ் வண்டமிழ்ப் பதிகத்தைப் பாடிப் போற்றினார்; மிகுந்த பழைமை யுடைய அத்திருப்பதியில் உள்ளவர்கள் விரும்பியதால் அங்குத் தங்கினார்; பின்பு வெண்மையான பிறையைச் சூடிய செஞ்சடையார் எழுந்தருளியிருக்கும் திருப்பனந்தாளுக்குச் சென்று வணங்கினார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 250

ஆங்கணி சொல்மலர் மாலை சாத்திஅப்
பாங்குபந் தணைநலூர் பணிந்து பாடிப்போய்த்
தீங்குதீர் மாமறைச் செம்மை அந்தணர்
ஓங்கும்ஓ மாம்புலி யூர்வந் துற்றனர்.

பொழிப்புரை :

அத்திருப்பதியில் அழகிய சொல்மலர்களால் ஆன பதிகமாலையைச் சாத்தியபின், அருகில் உள்ள `திருப்பந்தணை நல்லூரைப்\' பணிந்து பாடிப் போற்றி, மேற்செல்கின்றவர், தீமையை நீக்கும் பெருமறைபயிலும் வேதியர்கள் விளங்கி உயர்வதற்கு இடமான `திரு ஓமாம்புலியூரினில்\' வந்து சேர்ந்தார்.

குறிப்புரை :

திருப்பனந்தாளில் இறைவர் திருமுன்பு அருளியது, `கண்பொலி நெற்றியினான்\' (தி.3 ப.62) எனத் தொடங்கும் பஞ்சமப் பண்ணிலமைந்த பதிகமாகும். தாடகையீச்சரம் என்றது அப்பெயரு டைய பெருமாட்டி வழிபட்டமையால் ஏற்பட்ட கோயில் பெயர் ஆகும். பந்தணைநல்லூரில் பாடியது, `இடரினார் கூற்றை\'(தி.3 ப.121) எனத் தொடங்கும் புறநீர்மைப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 251

மற்றநற் பதிவட தளியின் மேவிய
அற்புதர் அடிபணிந் தலர்ந்த செந்தமிழ்ச்
சொற்றொடை பாடிஅங் ககன்று சூழ்மதில்
பொற்பதி வாழ்கொளி புத்தூர் புக்கனர்.

பொழிப்புரை :

அந்நற்பதியில் வடதளிக் கோயிலில் எழுந்தரு ளிய, அற்புதமான சிவபெருமானின் திருவடிகளை வணங்கி விளங் கும் செந்தமிழால் ஆன பதிகத்தைப் பாடினார்; அங்கிருந்து புறப்பட்டுச் சென்று, சூழ்ந்த மதிலை உடைய அழகிய பதியான திருவாழ்கொளிப் புத்தூரில் வந்து புகுந்தனர்.

குறிப்புரை :

திருஓமாம்புலியூரில் பாடிய பதிகம் `பூங்கொடி மடவாள்\' (தி.3 ப.122) எனத் தொடங்கும் புறநீர்மைப் பண்ணி லமைந்த பதிகம் ஆகும். வடதளி - ஊரின் வடபுறத்துள்ள கோயில். இது கோயிலின் பெயர். ஓமம் - வேள்வி. ஓமமாம் புலியூர் - வேள்வி ஓவாத புலியூர்.

பண் :

பாடல் எண் : 252

சீர்வளர் கோயிலை அணைந்து தேமலர்க்
கார்வளர் கண்டர்தாள் பணிந்து காண்பவர்
பார்புகழ் பதிகங்கள் பாடி நீடுவார்
வார்புகழ்க் கடம்பையும் வணங்கி வாழ்ந்தனர்.

பொழிப்புரை :

சிறப்பு மிக்க அத்திருக்கோயிலை அடைந்து, தேன்பொருந்திய கருங்குவளை மலர் போன்ற கரிய நிறம் வளர் வதற்கு இடமான கழுத்தையுடைய இறைவரின் திருவடிகளை வணங்கி, பெருமானாரைக் கண்டு மகிழ்பவர், உலகம் புகழும் திருப்பதிகங்களைப் பாடியருளி, நிறைந்த புகழைக் கொண்ட `திருக் கடம்பூரை\'யும் வணங்கினார்.

குறிப்புரை :

திருவாழ்கொளிப்புத்தூரில் பாடிய பதிகம் `பொடி யுடை மார்பினர்\' (தி.1 ப.40) எனத் தொடங்கும் தக்கராகப் பண்ணில மைந்த பதிகமாகும். இப்பதிகத்து வரும் பாடல் தொறும், அப்பெரு மான் அடியைக் காண்போம், சேர்வோம், சார்வோம் என உலகினரை உளப்படுத்திக் கூறுவதால், `பார் புகழ் பதிகங்கள்\' என்றார். பாரோடு சேர்ந்து புகழும் பதிகங்கள் என்றவாறு. பதிகங்கள் என்ற பன்மையால் மேலும் பல பதிகங்கள் இருந்திருக்கலாம். எனினும் இதனையடுத்து வரும் ஒரு பதிகமே இன்று காணக் கிடைக்கின்றது. இப்பதிகம், `சாகையாயிரம்\' என்பது: பண் - பியந்தைக் காந்தாரம் (தி.2 ப.94). அடுத்துவணங்கிய திருக்கடம்பூர் கரக்கோயிலில் அருளியது `வானமர் திங்கள்\' (தி.2 ப.68) எனத் தொடங்கும் காந்தாரப் பண்ணி லமைந்த பதிகமாம்.

பண் :

பாடல் எண் : 253

நம்பரை நலந்திகழ் நாரை யூரினில்
கும்பிடும் விருப்பொடு குறுகிக் கூடிய
வம்பலர் செந்தமிழ் மாலை பாடிநின்
றெம்பிரான் கவுணியர் தலைவர் ஏத்தினார்.

பொழிப்புரை :

இறைவரை நன்மை விளங்கும் திருநாரையூரில் வழிபடும் விருப்புடன் சென்று சேர்ந்து, சிவமணம் கமழ்ந்து விரிகின்ற மாலைகளான திருப்பதிகங்களைப் பாடி நின்று, எம் தலைவரான கவு ணியர் குலத்தலைவர் வணங்கினர்.

குறிப்புரை :

வம்பு: சிவமணம். கூடிய - கமழ்கின்ற. இத்திருப்பதி யில் இதுபொழுது பாடிய பதிகங்கள் பல இருத்தல் வேண்டும். எனினும் கிடைத்திருக்கும் பதிகங்கள் மூன்றேயாம். இவற்றுள் முன்னர்ப் பாடியது, பின்னர்ப் பாடியன எவையெனப் பிரித்தறிய இயலாதுள்ளன. எனினும், `உரையினில் வந்தபாவம்\' (தி.2 ப.86) எனத் தொடங்கும் பியந்தைக் காந்தாரப் பண்ணிலமைந்த பதிகத்தை முன்னர் அருளியதாகக் கொள்ளலாம். அடுத்துப் பாடிய பதிகங்கள்:
1. `காம்பினை வென்ற\' (தி.3 ப.102) - பழம்பஞ்சுரம்
2. `கடலிடை வெங்கடு\' (தி.3 ப.107) - பழம்பஞ்சுரம்

பண் :

பாடல் எண் : 254

அப்பதி பணிந்தருந் தமிழ்பு னைந்துதம்
மெய்ப்படு விருப்பொடு மேவு நாள்அரன்
பொற்பதி பலவுமுன் பணிந்து போந்தனர்
பைப்பணி யவர்கருப் பறிய லூரினில்.

பொழிப்புரை :

அத்திருப்பதியின் கண்ணுள்ள இறைவரை வணங்கி அரிய தமிழ்ப் பதிகங்களைப் பாடித் தம் உள்ளன்பு நிறைந்த விருப்புடன் தங்கியிருந்த அந்நாள்களில், அருகிலிருக்கும் இறைவ ரின் அழகிய பதிகள் பலவற்றையும் சென்று பணிந்து போந்தவர், பையையுடைய பாம்பைச் சூடிய இறைவர் வீற்றிருக்கும் திருக்கருப் பறியலூர் வந்து சேர்ந்தார்.

குறிப்புரை :

திருநாரையூரில் தங்கியிருந்த நாள்களில், அருகில் இருக்கும் பதிகள் பலவற்றையும் வணங்கித் திருப்பதிகங்கள் பாடிப் போந்ததாக ஆசிரியர் குறித்தருளுகின்றார். அப்பதிகள், குரக்குக்கா முதலியன போலும் எனக் குறிக்கின்றார் சிவக்கவிமணியார். எனினும் அப்பதிக்கு, பிள்ளையார் பாடிய பதிகம் காணக் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 255

பரமர்தந் திருக்கருப் பறிய லூரினைச்
சிரபுரச் சிறுவர்கை தொழுது செந்தமிழ்
உரையிசை பாடிஅம் மருங்கி னுள்ளவாம்
சுரர்தொழும் பதிகளுந் தொழுது பாடினார்.

பொழிப்புரை :

சிவபெருமானின் திருக்கருப்பறியலூரை வணங்கிச் செந்தமிழ்ப் பதிகத்தைப் பாடியருளிய சீகாழிப் பிள்ளையார், அதற்கு அருகிலுள்ள தேவர்கள் வணங்குகின்ற பிற திருப்பதிகளையும் வணங்கிப் பாடினார்.

குறிப்புரை :

திருக்கருப்பறியலூரில் பாடிய பதிகம் `சுற்றமொடு பற்றவை\' (தி.2 ப.31) என்று தொடங்கும் இந்தளப் பண்ணிலமைந்த பதிகமாகும். அருகிலுள்ள பதிகளையும் வணங்கினார் என ஆசிரியர் குறிப்பிடுகின்றார். அப்பதிகள் திருப்புன்கூர், திருப்புள்ளிருக்கு வேளூர் முதலாயினவாகலாம் எனக் கருதுவர் சிவக்கவிமணியார்.

பண் :

பாடல் எண் : 256

மண்ணுலகு செய்ததவப் பயனா யுள்ள
வள்ளலார் அப்பதிகள் வணங்கி ஏகி
எண்ணில்முர சிரங்கியெழப் பணிலம் ஆர்ப்ப
இலங்கியகா ளம்சின்னம் எங்கும்ஊதக்
கண்வளர்மென் கரும்புமிடை கதிர்செஞ் சாலி
கதலிகமு குடன்ஓங்குங் கழனி நாட்டுத்
தெண்ணிலவு சூடியதம் பெருமான் வைகுந்
திருப்பிரம புரஞ்சாரச் செல்லும் போது.

பொழிப்புரை :

இம்மண்ணுலகம் செய்த தவப் பயனால் தோன்றிய வள்ளலாரான பிள்ளையார், அப்பதிகள் பலவற்றையும் வணங்கி, அப்பால் சென்று அளவற்ற முரசுகள் எழுந்து ஒலிக்கவும், சங்குகள் முழங்கவும், விளங்கும் எக்காளங்களும் சின்னங்களும் எங்கும் இயம்பவும், கணுக்கள் வளரும் மென்மையான கரும்புகளும் நெருங்கிய கதிர்களையுடைய செந்நெல்லும், வாழைகளும், கமுகு களும் ஒருங்கே ஓங்கும் வயல்கள் பொருந்திய சோழ நாட்டில், தெளிந்த பிறையைச் சூடிய தம் இறைவர் எழுந்தருளியுள்ள திருப் பிரமபுரம் என்ற சீகாழியைச் சாரச் செல்லும் போது,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 257

பிள்ளையார் எழுந்தருளக் கேட்ட செல்வப்
பிரமபுரத் தருமறையோர் பெருகு காதல்
உள்ளமகிழ் சிறந்தோங்கத் தோணி மேவும்
உமைபாகர் கழல்வணங்கி உவகை கூர
வெள்ளமறை ஒலிபெருகு மறுகு தோறும்
மிடைமகர தோரணங்கள் கதலி பூகம்
தெள்ளுபுனல் நிறைகுடங்கள் தீப தூபம்
செழுங்கொடிகள் நிறைத்தெதிர்கொள் சிறப்பிற் செல்வார்.

பொழிப்புரை :

பிள்ளையார் தம்பதிக்கு வருகின்றார் என்பதைக் கேட்ட செல்வம் பொருந்திய பிரமபுரத்தில் வாழ்கின்ற அந்தணர்கள், பெருகுங் காதலால் தம் உள்ளங்களில் மகிழ்ச்சி பெருகி எழுதலால், திருத்தோணியில் எழுந்தருளியிருக்கும் திருநிலை நாயகியாரை ஒரு கூற்றில் கொண்ட இறைவரின் திருவடிகளை வணங்கி, மகிழ்ச்சி மிக, மறைகளின் ஒலி பெருகும் திருவீதிகளில் எல்லாம், நெருங்கிய மாதோரணங்கள், வாழை, பாக்கு தெளிந்த நீர் உடைய குடங்கள், விளக்குகள், நறும் புகை, செழுங்கொடிகள் என்னும் இவற்றை நிரல் பட அமைத்து வரவேற்றற்குரிய சிறப்புக்களை மிகுதியாய்ச் செய்து,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 258

ஆரணங்கள் மதுரவொலி எழுந்து பொங்க
அரசிலையுந் தருப்பையும்பெய் தணிந்த வாசப்
பூரணகும் பங்கள்நிறை கரகம்ஏந்திப்
புதுமலரும் நறுந்துகளும் பொரியுந் தூவி
வாரணங்கு முலைஉமையாள் குழைத்த செம்பொன்
வள்ளத்தில் அமுதுண்ட வள்ள லாரைச்
சீரணங்கு மணிமுத்தின் சிவிகை மீது
செழுந்தரளக் குடைநிழற் கீழ்ச்சென்று கண்டார்.

பொழிப்புரை :

நான்மறைகளின் இனிய ஒலி எழுந்து பெருக, அரசிலையையும் தருப்பையையும் இட்டு அணி செய்யப்பட்ட மண முடைய நிறை குடங்களையும் நிறைந்த கரகங்களையும் தாங்கி, புதிய மலர்களையும் நறுமண மிக்க பொடிகளையும் பொரியையும் தூவி, கச்சணிந்த மார்பகங்களையுடைய உமையம்மையார் தந்த செம்பொன் கிண்ணத்தில் சிவஞானத்துடன் குழைத்த பால் அமுதத்தை உண்ட வள்ளலாரான பிள்ளையாரைச் சிறந்த முத்துக் குடை நிழற்றும் முத்துச் சிவிகையின் மீது கண்டனர்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 259

கண்டபொழு தேகைகள் தலைமேற் கொண்டு
கண்களிப்ப மனங்களிப்பக் காதல் பொங்கித்
தொண்டர்களும் மறையவரும் சென்று சூழ்ந்து
சொல்லிறந்த மகிழ்ச்சியினால் துதித்த ஓசை
எண்திசையும் நிறைவித்தார் ஆடை வீசி
இருவிசும்பின் வெளிதூர்த்தார் ஏறு சீர்த்தி
வண்டமிழ்நா யகரும்இழிந் தெதிரே சென்று
வணங்கியவ ருடன்கூடி மகிழ்ந்து புக்கார்.

பொழிப்புரை :

பார்த்தவுடனே தலைகள் மீது கைகளைக் குவித்துக் கண்கள் களிப்படையவும், உள்ளம் மகிழவும், காதல் பெருகத் தொண்டர்களும் அந்தணர்களும் சென்று பிள்ளையாரைச் சூழ்ந்து, சொலற்கரிய மகிழ்ச்சியால் போற்றிய ஓசை எண்திசை களிலும் நிறையுமாறு செய்தனர். தம் மேலாடைகளை வீசி வானத்தை மறைத்தனர். மேன்மேலும் பெருகும் புகழையுடைய தமிழ்த் தலை வரான ஆளுடைய பிள்ளையாரும் சிவிகையினின்றும் இறங்கி, அவர்கள் எதிரே சென்று வணங்கி, அவர்களுடன் கூடி மகிழ்ந்து அந் நகரத்துள் புகுந்தார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 260

திங்களணி மணிமாடம் மிடைந்தவீதி
சென்றணைந்து தெய்வமறைக் கற்பின் மாதர்
மங்கலவாழ்த் திசையிரண்டு மருங்கும் மல்க
வானவர்நா யகர்கோயில் மருங்கு சார்ந்து
துங்கநிலைக் கோபுரத்தை இறைஞ்சிப் புக்குச்
சூழ்ந்துதிருத் தோணிமிசை மேவி னார்கள்
தங்கள்திரு முன்புதாழ்ந் தெழுந்து நின்று
தமிழ்வேதம் பாடினார் தாளம் பெற்றார்.

பொழிப்புரை :

சந்திரனைத் தாங்குமாறு உயர்ந்த அழகிய மாளிகைகள் நிறைந்த தெருவில் சென்று அணைந்து, கடவுட்டன்மை கொண்ட மறைவழி வந்த கற்புடைய மங்கையர் முழக்கும் மங்கல வாழ்த்து இருமருங்கிலும் நிறைய, இறைவரது பெரிய நிலைகளை உடைய கோபுரத்தை வணங்கிக் கோயிலுள் புகுந்து, வலம் வந்து, திருத்தாளம் பெற்றவரான பிள்ளையார், திருத்தோணியில் எழுந் தருளிய இறைவரின் திருமுன்பு வீழ்ந்து வணங்கி எழுந்து, தமிழ் மறையான பதிகத்தைப் பாடினார்.

குறிப்புரை :

இதுபொழுது அருளிய பதிகம், இப்பொழுது காணப் பெறும் பதிகங்களுள் ஒன்றோ, அன்றிப் பிறவோ என அறுதியிட்டுக் கூறுதற்கு இல்லை.

பண் :

பாடல் எண் : 261

பரவுதிருப் பதிகஇசை பாடி நீடும்
பரங்கருணைத் திருவருளின் பரிசு போற்றி
விரவுமலர்க் கண்பனிப்பக் கைகள் கூப்பி
வீழ்ந்தெழுந்து புறம்போந்து வேத வாய்மைச்
சிரபுரத்துப் பிள்ளையார் செல்லும் போது
திருநீல கண்டயாழ்ப் பாணர் பின்னே
வரஅவரை வளம்பெருகு மனையிற் போக
அருள்செய்து தந்திருமா ளிகையின் வந்தார்.

பொழிப்புரை :

போற்றுதற்குரிய இசை பொருந்திய திருப்பதிகத் தைப் பாடிப் பெருங்கருணை செய்த திருவருளின் தன்மையைப் போற்றிப் பொருந்திய மலர் போன்ற கண்கள் இன்ப நீரைப் பொழியக் கைகளைத் தலைமேல் குவித்து, வீழ்ந்து வணங்கி, வெளியே வந்து, மறையின் வாய்மை விளங்கும் காழிப் பிள்ளையார் சென்றருளும் பொழுது, திருநீலகண்ட யாழ்ப்பாணர் தம்பின்னே வர, வளம் பெரு கும் அவர்தம் இருக்கைக்குச் செல்லுமாறு அருள் செய்து, தம் மாளிகை யின் அருகில் வந்தாராக.

குறிப்புரை :

யாழ்ப்பாணர் தம் மனைவியுடன் தம்மைக் காணவந்த பொழுதே, அவருக்கெனத் தனி மனையொன்று அமைத்து அதில் இருக்கச் செய்தது முன்னர்க் கூறப்பட்டது. அம்முறையிலேயே இது பொழுதும் அவரைத் தம் துணைவியாருடன் இருக்கச் செய்தனர்.

பண் :

பாடல் எண் : 262

மறையவர்கள் அடிபோற்றத் தந்தை யாரும்
மருங்கணைய மாளிகையில்அணையும் போதில்
நிறைகுடமும் மணிவிளக்கும் முதலா யுள்ள
நீதிமறைக் குலமகளிர் நெருங்கி யேந்த
இறைவர்திரு நீற்றுக்காப் பேந்தி முன்சென்
றீன்றதா யார்சாத்தி இறைஞ்சி ஏத்த
முறைமையவர்க் கருள்செய்து மடத்தில் புக்கார்
முதல்வர்பால் மணிமுத்தின் சிவிகை பெற்றார்.

பொழிப்புரை :

அங்கிருந்த அந்தணர்கள் தம் அடிகளை வணங்கத் தந்தையாரும் தம் அருகில் நெருங்கி வரத் தம் திருமாளி கையை அடையும் பொழுது, மரபு வழாத மறைக்குல மடந்தையர் நிறை குடத்தையும் அழகிய விளக்குகளையும் ஏந்தி நிற்க, அவரன்பைப் பெற்றவரான பகவதியார், சிவபெருமானின் திருநீற்றுக் காப்பினை ஏந்தி முன்வந்து சாத்திப் பணிந்து பாராட்ட, முறைமையாக அவரவர்க்கும் அருள் செய்து பெருமானிடம் மணிமுத்துச் சிவிகை பெற்றவரான பிள்ளையார், திருமடத்துள் புகுந்தார்.

குறிப்புரை :

பிள்ளையாரின் நெற்றியில் நீறு சாத்தியது, தாயார் எனவந்த உலகியல் நிலையிலாம். அவரைப் பணிந்தது, திருவருள் நலத்தால் ஞானம் பெற்ற அருளியல் நிலையிலாம். இவ்விரு நிலைக ளையும் காண நேருவது நாம் பெற்ற புண்ணியமாகும். இது போன்றே பிள்ளையார் இருந்தருளும் இடத்தை ஒருகால் மாளிகை என்றும், பிறிதொருகால் மடம் என்றும் குறிப்பதுமாகும். மாளிகை என்றது அதன் வளத்தைக் காட்டி நிற்கும். மடம் என்றது அதன்கண் ஆற்றி வந்த அறச் செயலையும் அருட்செயலையும் காட்டி நிற்கும்.

பண் :

பாடல் எண் : 263

செல்வநெடு மாளிகையில் அமர்ந்து நாளுந்
திருத்தோணி மிசையாரைச் சென்று தாழ்ந்து
மல்குதிருப் பதிகங்கள் பலவும் பாடி
மனமகிழ்ந்து போற்றிசைத்து வைகு நாளில்
ஒல்லைமுறை உபநயனப் பருவ மெய்த
உலகிறந்த சிவஞானம் உணரப் பெற்றார்
தொல்லைமறை விதிச்சடங்கு மறையோர் செய்யத்
தோலொடுநூல் தாங்கினார் சுரர்கள் போற்ற.

பொழிப்புரை :

செல்வம் பெருகும் நீண்ட தம் திருமாளிகையில் இருந்து ஒவ்வொரு நாளும், திருத்தோணியில் எழுந்தருளியிருக்கும் இறைவரைச் சென்று பணிந்து, பொருந்திய பதிகங்கள் பலவற்றையும் பாடி மனமகிழ்வுடன் இருந்து வரும் நாள்களில், விரைவாக முறைப்படி செயத்தக்க உபநயனப் பருவம் வந்துசேர, உலகியலுக்கு அப்பாற்பட்ட சிவஞானத்தை அறியப் பெற்ற பிள்ளையார், தொன்று தொட்டு வரும் மறைநெறிப்படி உபநயனத்துக்குரிய செயற்பாடுகளை அந்தணர்கள் செய்யத் தேவர்களும் போற்றுமாறு பிள்ளையார் அந் நிலையில் தோலுடனே நூலையும் தாங்கிக் கொண்டார்.

குறிப்புரை :

செல்வம் பெருகும் நீண்ட தம் திருமாளிகையில் இருந்து ஒவ்வொரு நாளும், திருத்தோணியில் எழுந்தருளியிருக்கும் இறைவரைச் சென்று பணிந்து, பொருந்திய பதிகங்கள் பலவற்றையும் பாடி மனமகிழ்வுடன் இருந்து வரும் நாள்களில், விரைவாக முறைப்படி செயத்தக்க உபநயனப் பருவம் வந்துசேர, உலகியலுக்கு அப்பாற்பட்ட சிவஞானத்தை அறியப் பெற்ற பிள்ளையார், தொன்று தொட்டு வரும் மறைநெறிப்படி உபநயனத்துக்குரிய செயற்பாடுகளை அந்தணர்கள் செய்யத் தேவர்களும் போற்றுமாறு பிள்ளையார் அந் நிலையில் தோலுடனே நூலையும் தாங்கிக் கொண்டார்.

பண் :

பாடல் எண் : 264

ஒருபிறப்பும் எய்தாமை உடையார் தம்மை
உலகியல்பின் உபநயன முறைமை யாகும்
இருபிறப்பின் நிலைமையினைச் சடங்கு காட்டி
எய்துவிக்கும் மறைமுனிவ ரெதிரே நின்று
வருதிறத்தின் மறைநான்குந் தந்தோம் என்று
மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுர வாக்கால்
பொருவிறப்ப ஓதினார் புகலி வந்த
புண்ணியனார் எண்ணிறந்த புனித வேதம்.

பொழிப்புரை :

எப்பிறவியிலும் வாராத இயல்புடைய பிள்ளை யாரை, உலகில் மற்றவர் இயல்பில் அவரை வைத்து உபநயன முறையான இருபிறப்பின் நிலையை அதற்குரிய செயற்பாடுகளால் காட்டிச் செய்கின்ற அந்தணர்கள் எதிரில் நின்று, `வழிவழியாகக் கூறப்பெற்று வரும் தன்மையில் நான்மறைகளையும் தந்தோம்\' என்று உரிய மந்திரங்களைச் சொல்லும் அவர்களுக்குத் தம் இனிய வாக்கினால் சீகாழியில் தோன்றிய புண்ணியமே வடிவான பிள்ளை யார் ஒப்பற்ற நிலையில் நின்று எண்ணற்ற புனித மறைகளையும் ஓதினார்.

குறிப்புரை :

`மறக்குமா றிலாதவென்னை மையல்செய்திம் மண் ணின்மேல் பிறக்குமாறு காட்டினாய்\' (தி.2 ப.98 பா.5) என வருந்தி நின்றவர் பிள்ளையார். தம் திருமணத்தின் பொழுது யாவரும் புகுக எனத் தம்முடன் வந்தார் அனைவரையும் வீடுபேறு பெற அழைத்துச் சென்றவர். அப்பெருமை உடையாருக்கு இனிப் பிறப்பு என்பது ஏது? ஒன்றுமில்லை. ஆதலின் `ஒரு பிறப்பும் எய்தாமை யுடையார்\' என் றார். அத்தகைய ஞானச் செம்மலுக்கு இருபிறப்பின் நிலைமையினை உணர்த்தவேண்டி, அவ்வந்தணர்கள் நான்மறைகளையும் தந்தோம் என்றது உலகியல் வயப்பட்டதன்றிப் பிறிதன்று என்பார், அவர்க ளுக்கு `எண்ணிறந்த புனித வேதம்\' இப்பிள்ளையார் ஓதினார் என் றார். இதனால் அவ்வந்தணர்களுக்குப் பிள்ளையார், தம் தியானப் பொருள் ஆகவும் (குருமூர்த்திகளாக) ஆனார் என, வரும் பாடலில் ஆசிரியர் சேக்கிழார் கூறுவாராயினர். இந்நிலைகளை யெல்லாம் ஆழமாக நினைதல் இன்றியமையாததாகும்.

பண் :

பாடல் எண் : 265

சுருதியா யிரம்ஓதி அங்க மான
தொல்கலைகள் எடுத்தியம்புந் தோன்ற லாரைப்
பரிதிஆ யிரகோடி விரிந்தால் என்னப்
பரஞ்சோதி அருள்பெற்ற பான்மை மேன்மை
கருதிஆ தரவோடும் வியப்புற் றேத்துங்
கலைமறையோர் கவுணியனார் தம்மைக் கண்முன்
வருதியா னப்பொருள்என் றிறைஞ்சித் தாமுன்
வல்லமறை கேட்டையந் தீர்ந்து வாழ்ந்தார்.

பொழிப்புரை :

எண்ணிறந்த பல மறைகளையும் ஓதியதுடன் அவற்றின் அங்கமான பழைய கலைகளையும் எடுத்துக் கூறிய பெருமை வாய்ந்த பிள்ளையாரை, எண்ணற்ற கதிரவர்கள் ஒருங்கு கூடித் தம் கதிர்களை விரித்தாற் போல மேலாக விளங்கும் ஒளிப் பிழம்பாய இறைவரின் திருவருளைப் பெற்ற பான்மையின் மேன் மையை எண்ணி, அன்பும் வியப்பும் கொண்டு போற்றும் அவ்வந் தணர்கள், கவுணியர் பெருமானான பிள்ளையாரைத் `தங்கள் கண் முன் வெளிப்பட்டு வரும் தியானப் பொருள் ஆவார்\' என்று எண்ணி வணங்கித் தாங்கள் முன்னே கொண்ட மறைகளில் ஏற்பட்ட தமக் குள்ள ஐயங்களையும் கேட்டுத் தெளிந்தனர்.

குறிப்புரை :

அங்கமான தொல்கலைகள் தருக்கம், வியாகரணம், முதலிய ஆறு அங்கங்கள். இறைவனின் பேரொளிக்கு ஆயிரங் கோடி கதிரவர்களின் ஒளி உவமை. ஈண்டு ஆயிரங் கோடி என்பது எண்ணற் றவை எனும் பொருளில் நின்றது. கதிரவனுக்கு ஒளி தருபவனே இறைவன் ஆவன். `அருக்கனிற் சோதி அமைத்தோன் காண்க\' (தி.8 ப.3 வரி.20) என வரும் திருவாசகமும் காண்க. ஆதலின் அக்கதிரவர்களின் ஒளி ஒரு புடை ஒப்புமையாகவே அமையும். தியானப் பொருள் - தியானிக்கப்படும் பொருள்: குருவாகவும் சிவமாகவும் எண்ணிப்போற்றப்படும் பொருள்.

பண் :

பாடல் எண் : 266

மந்திரங்க ளானவெலாம் அருளிச் செய்து
மற்றவற்றின் வைதிகநூற் சடங்கின் வந்த
சிந்தைமயக் குறும்ஐயந் தெளிய எல்லாஞ்
செழுமறையோர்க் கருளியவர் தெருளும் ஆற்றால்
முந்தைமுதன் மந்திரங்கள் எல்லாந் தோன்றும்
முதலாகும் முதல்வனார் எழுத்தஞ் சென்பார்
அந்தியினுள் மந்திரம் அஞ்செழுத்து மேயென்
றஞ்செழுத்தின் திருப்பதிகம் அருளிச் செய்தார்.

பொழிப்புரை :

மறைவழிப்பட்ட மந்திரங்கள் எல்லாவற்றையும் சொல்லியருளியபின், அம்மறைவழிப்பட்ட வேள்விச் செயற்பாடுக ளில் அவர்களின் சிந்தையில் வந்த ஐயங்களையெல்லாம் தெளியு மாறு அவ்வந்தணர்களுக்கு எடுத்துக் கூறியதுடன், அவர்கள் மனம் தெளியுமாறு தொன்மையும் முதன்மையும் பெற்ற எல்லா மந்திரங் களும் தோன்றுவதற்குக் காரணம் சிவபெருமானின் திருவைந்தெ ழுத்தே யாகும் என அருளுவாராய் `முப்போதும் ஓதுதற்குரிய மந்திரம் திருவைந்தெழுத்தே யாகும்\' என ஐந்தெழுத்தின் திருப்பதிகத்தையும் அருள் செய்தார்.

குறிப்புரை :

இப்பதிகம் `துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும்\' (தி.3 ப.22) எனத் தொடங்கும் காந்தார பஞ்சமப் பண்ணிலமைந்த பதிக மாகும். இப்பதிகத்தில்,
மந்திர நான்மறை யாகி வானவர்
சிந்தையுள் நின்று அவர் தம்மை யாள்வன
செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க்
கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே.
-தி.3 ப.22 பா.2 எனவரும் இரண்டாவது பாடலின் 4ஆவது அடியே ஆசிரியரால் எடுத்துக் கூறப்பட்டதாகும். அந்தி - முப்பொழுதும். இதனால் அவ்வந் தணர்களுக்குக் குரு உபதேசமும் பெற வாய்ப்பாயிற்று.

பண் :

பாடல் எண் : 267

அத்தகைமை பிள்ளையார் அருளிச் செய்ய
அந்தணர்கள் அருள்தலைமேற் கொண்டு தாழ்ந்து
சித்தமகிழ் வொடுசிறப்பத் தாமும் தெய்வத்
திருத்தோணி அமர்ந்தாரைச் சென்று தாழ்ந்து
மெய்த்தஇசைப் பதிகங்கள் கொண்டு போற்றி
விரைமலர்த்தாள் மனங்கொண்டு மீண்டுபோந்து
பத்தருடன் இனிதமரும் பண்பு கூடப்
பரமர்தாள் பணிந்தேத்திப் பயிலும் நாளில்.

பொழிப்புரை :

அவ்வாறான பதிகத்தைப் பிள்ளையார் பாடி அரு ளவே, அம்மறையவர்கள் அவ்வருளிப்பாட்டினை உபதேசமாகக் கொண்டு, சிரமேல் தாங்கி வணங்கி மனம் மகிழ்ந்தனராக, பிள்ளை யார் தாமும் தெய்வத் திருத்தோணியில் எழுந்தருளியிருக்கும் இறை வரைச் சென்று பணிந்து பாடற் பொருளுக்கு இசைந்த இசையுடன் கூடிய திருப்பதிகங்களால் போற்றி, அவருடைய மணம் கமழும் மலர் போன்ற திருவடிகளை உள்ளத்தில் வைத்து, வெளிப் போந்து அடியார்களுடன் இனிதாய் அமரும் தன்மை கூடுமாறு இறைவரின் திருவடிகளைப் பணிந்து போற்றி இருந்தருளிய அந்நாள்களில்,

குறிப்புரை :

இதுபொழுது அருளப் பெற்ற மெய்த்த இசைத் திருப்பதிகங்கள் எவை எனத் தெரிந்தில.

பண் :

பாடல் எண் : 268

பந்தணை மெல்விர லாளும்
பரமரும் பாய்விடை மீது
வந்துபொன் வள்ளத் தளித்த
வரம்பில்ஞா னத்தமு துண்ட
செந்தமிழ் ஞானசம் பந்தர்
திறங்கேட்டி றைஞ்சுதற் காக
அந்தணர் பூந்தராய் தன்னில்
அணைந்தனர் நாவுக் கரையர்.

பொழிப்புரை :

பந்தொடு பழகிய மென்மையான விரலையுடைய உமையம்மையாரும் இறைவரும் ஆனேற்றின் மீது எழுந்தருளி வெளிப்பட்டு வந்து, பொற்கிண்ணத்தில் அளித்த எல்லையில்லாத ஞானப் பாலையுண்ட செந்தமிழ்த் தலைவரான திருஞானசம்பந்தரின் திறங்களைக் கேட்டு, அவரை வணங்குதற்காக, அந்தணர்கள் சிறப்பு டன் இருக்கும் சீகாழிப் பதிக்குத் திருநாவுக்கரசு நாயனார் வந்தருளினார்.

குறிப்புரை :

மூன்றாண்டில் ஞானம் பெற்ற பிள்ளையாரின் அருள் திறங்களை, அவர் உபநயனம் பெற்ற ஏழாவது ஆண்டிற்குப் பிறகே நாவரசர் அறிய நேர்ந்தமை இதனால் புலனாகின்றது. எத்துணை அரிய செய்திகளும் நிகழ்ந்த அவ்வவ்விடத்தே போற்றப் பெற்று வந்ததல்லது நாடெங்கிலும் அவை தெரிதற்குப் போதிய சூழலும் வாய்ப்பும் அக்காலத்தே இல்லாதிருந்தமை விளங்குகின்றன. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 269

வாக்கின் பெருவிறல் மன்னர்
வந்தணைந் தாரெனக் கேட்டுப்
பூக்கமழ் வாசத் தடஞ்சூழ்
புகலிப் பெருந்தகை யாரும்
ஆக்கிய நல்வினைப் பேறென்
றன்பர் குழாத்தொடும் எய்தி
ஏற்கும் பெருவிருப் போடும்
எதிர்கொள எய்தும் பொழுதில்.

பொழிப்புரை :

பேராற்றலை யுடைய சொல்லரசர் வந்துள்ளார் என்பதைக் கேட்டு, நீர்ப்பூக்கள் மணம் கமழும் பொய்கைகள் சூழ்ந்த சீகாழியில் வந்தருளிய பெருந்தகையாரான பிள்ளையாரும், `இது முன் நல்வினையினால் நேர்ந்த பேறாகும்\' என்று மனத்துள் கொண்டு, அன்பர்கள் சூழ அவரை வரவேற்கும் பெருவிருப்பத்துடனே எதிர் கொள்ளச் சென்ற போழ்தில்,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 270

சிந்தை இடையறா அன்பும்
திருமேனி தன்னில் அசைவும்
கந்தை மிகையாம் கருத்தும்
கையுழ வாரப் படையும்
வந்திழி கண்ணீர் மழையும்
வடிவிற் பொலிதிரு நீறும்
அந்தமி லாத்திரு வேடத்
தரசும் எதிர்வந் தணைய.

பொழிப்புரை :

உள்ளத்தில் இடையறாது பெருகும் அன்பும், திருமேனியில் அசைவும், கந்தையும் மிகையாம் என்ற கருத்தும், கையில் உழவாரப் படையும், வெளிப்பட்டுப் பெருகி வழிகின்ற கண்ணீர் மழையும், திருமேனியில் விளங்கும் திருநீறுமாய், அந்தம் இல்லாத திருவேடத்தையுடைய திருநாவுக்கரசரும் எதிரே வந்தாராக,

குறிப்புரை :

நாவரசரின் திருவேடப் பொலிவழகை உள்ளக் கிழியில் உரு எழுதிக் காண்டற்கு ஏதுவாக ஆசிரியர் மூன்று இடங்க ளில் அவ்வழகு பொலி திருவடிவைக் குறித்துள்ளார். அவற்றுள் இஃது ஒன்றாகும். சிந்தை இடையறா அன்பை வந்திழி கண்ணீர் மழை வெளிப் படுத்தி நிற்கின்றது. அன்பிற்கு அடைக்கும் தாழ் இல்லையன்றோ? அசைவு - தளர்ச்சி. இதனால் அடிகளின் வயதறிய வாய்ப்புண்டு. ஞானசம்பந்தரின் முதல் முறைச் சந்திப்பு இது. திருப்புகலூரில் இரண்டாவது முறையாகவும், திருப்பூந்துருத்தியில் மூன்றாவது முறையாகவும் சந்திக்கவுள்ளார் இவர். இம் முதல்முறைச் சந்திப்பிலேயே `திருமேனி அசைவு\' குறிப்பிடப்படுகின்றது. காத்தாள் பவர் காவல் இகழ்ந்து, சமண் சமயத்தில் சார்ந்தது ஏறத்தாழ இருபத்தைந்திலிருந்து முப்பது வயதுக்குள் இருக்குமானால் இவர் மீண்டும் சைவ சமயம் சார்ந்தது அறுபத்தைந்து வயதுக்கு மேல் இருக்கலாம். இந்நிலையில் இதுபொழுது இவர்தம் வயது 70 ஆகலாம் என எண்ண இடம் உண்டு. இவ்வரையறை முன்பின்னுமாகலாம் . ஞானியர்க்கு ஓடும் கவந்தியுமே உறவாகும் ஆதலால் அவருக்குக் கந்தையும் மிகையாயிற்று. பிறப்பறுக்கலுற்றார்க்கு உடம்பே மிகை என்பர் திருவள்ளுவர்.

பண் :

பாடல் எண் : 271

கண்ட கவுணியக் கன்றும்
கருத்திற் பரவுமெய்க் காதல்
தொண்டர் திருவேடம் நேரே
தோன்றிய தென்று தொழுதே
அண்டரும் போற்ற அணைந்தங்
கரசும் எதிர்வந் திறைஞ்ச
மண்டிய ஆர்வம் பெருக
மதுர மொழியருள் செய்தார்.

பொழிப்புரை :

அங்ஙனம் அவர் வருதலைக் கண்ட ஞானசம்பந் தரும் `உள்ளத்தில் பரவி வருகின்ற உண்மையன்பின் பெருக்குக் கிடனான தொண்டர் திருவேடம் நேரேவந்து தோன்றியது\' எனக் கொண்டு தொழுதபடியே தேவர்களும் போற்றுமாறு அங்குச் சேர, அது பொழுது நாவுக்கரசரும் எதிரே வந்து வணங்க, மிகுந்த ஆசைபெருக, அவருக்கு இனிய மொழிகளைக் கூறியருளினார்.

குறிப்புரை :

அடியவர் எனில் எப்படியிருக்க வேண்டும் என்பதைச் சம்பந்தர் உள்ளத்தில் தெளிந்து, அதற்கு ஒரு வடிவங் கொண்டு தொழுது வந்துள்ளார். இதுவரை அவர் அவ்வாறு உருக்கொண்ட திருவேடம் நாவரசர் திருவேடமேயாக இருக்கக் கண்ட நிலையில், மீதூர்ந்த அன்பினால் அவரை வணங்கினார். இவ்வாற்றான் நாவரச ரின் திருவேடப் பொலிவழகு எவ்வளவு போற்றற்குரியது என்பது புலனாகும். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 272

பேரிசை நாவுக் கரசைப்
பிள்ளையார் கொண்டுடன் போந்து
போர்விடை யார்திருத் தோணிப்
பொற்கோயி லுள்புகும் போதில்
ஆர்வம் பெருக அணையும்
அவருடன் கும்பிட் டருளால்
சீர்வளர் தொண்ட ரைக்கொண்டு
திருமா ளிகையினில் சேர்ந்தார்.

பொழிப்புரை :

மிகு புகழுடைய நாவுக்கரசரைப் பிள்ளையார் உடன் வரவேற்றுச் சென்று, ஆனேற்றூர்தியையுடைய இறைவரின் திருத்தோணி என்ற அழகிய கோயிலுள் புகும்போது, ஆர்வம் மிகுதி யால் அணையும் அவருடனே கூடி, இறைவரை வணங்கித் திருவரு ளால், சிறப்பு மிகச் செய்யும் திருத்தொண்டரான அரசைத் தம்முடன் அழைத்துக் கொண்டு தம் திருமாளிகைக்குச் சென்றார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 273

அணையுந் திருந்தொண்டர் தம்மோ
டாண்ட அரசுக்கும் அன்பால்
இணையில் திருவமு தாக்கி
இயல்பால் அமுதுசெய் வித்துப்
புணரும் பெருகன்பு நண்பும்
பொங்கிய காதலில் கும்பிட்
டுணருஞ்சொல் மாலைகள் சாத்தி
உடன்மகிழ் வெய்தி உறைந்தார்.

பொழிப்புரை :

சூழவரும் திருத்தொண்டர்களுடன் ஆளுடைய அரசர்க்கும் ஒப்பில்லாத உணவை, ஏற்ற இயல்பால் ஆக்குவித்து உண்ணச் செய்தருளிப் பொருந்திய பேரன்பும் நட்பும் மேன்மேலும் மிக வணங்கிச் சிவபெருமானை உள்ளத்தில் கண்டு மகிழும் திருப்பதி கங்களைப் பாடி, மகிழ்ச்சி பொருந்த உடன் இருந்தனர்.

குறிப்புரை :

இங்கு அருளிய சொல்மாலைகள் எவைஎன உறுதியாக அறிதற்கியலாதுள்ளது.

பண் :

பாடல் எண் : 274

அந்நாள் சிலநாள்கள் செல்ல
அருள்திரு நாவுக் கரசர்
மின்னார் சடையண்ணல் எங்கும்
மேவிடங் கும்பிட வேண்டிப்
பொன்மார்பின் முந்நூல் புனைந்த
புகலிப் பிரானிசை வோடும்
பின்னாக வெய்த விறைஞ்சிப்
பிரியாத நண்பொடும் போந்தார்.

பொழிப்புரை :

அங்ஙனமாக, நாள்கள் சில செல்ல, திருவருள் பெற்றிலங்கும் திருநாவுக்கரசர், மின்னல் போல ஒளிவிடும் சடையை உடைய இறைவர் வீற்றிருக்கும் ஏனைய திருப்பதிகளுக்கும் சென்று கும்பிட விரும்பி அழகிய மார்பில் முப்புரிநூல் அணிந்த சீகாழிச் செம்மலான பிள்ளையாரின் இசைவுடன் பின்னரும் வந்து பழகி இன்புறும் நட்புரிமையுடன் பிரிந்து சென்றனர்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 275

வாக்கின் தனிமன்னர் ஏக
மாறாத் திருவுளத் தோடும்
பூக்கமழ் பண்ணைகள் சூழ்ந்த
புகலியில் மீண்டும் புகுந்து
தேக்கிய மாமறை வெள்ளத்
திருத்தோணி வீற்றிருந் தாரைத்
தூக்கின் தமிழ்மாலை பாடித்
தொழுதங் குறைகின்ற நாளில்.

பொழிப்புரை :

ஒப்பில்லாத திருநாவுக்கரசர் செல்ல, மாறுபாடு இல்லாத திருவுள்ளத்துடன் மலர்கள் மணம் கமழும் வயல்கள் சூழ்ந்த சீகாழிப் பதியுள் பிள்ளையார் மீண்டு வந்து புகுந்து, நிறைந்த மறைக ளின் வடிவாய்த் திருத்தோணியில் வீற்றிருக்கின்ற தோணியப்பரை அழகிய செய்யுள்களாலாகிய இனிய தமிழ் மாலைகளைப் பாடி வணங்கி அங்கு இருந்துவரும் நாள்களில்,

குறிப்புரை :

பிள்ளையார் மீண்டுவந்து புகுந்து என்றார், நாவரசருடன் காழி எல்லைவரை சென்று அவரை வழியனுப்பியமை தோன்ற. இதுபொழுது பாடிய பதிகங்களும் இவை எனத் தெரிந்தில. தூக்கு - செய்யுள்.

பண் :

பாடல் எண் : 276

செந்தமிழ் மாலை விகற்பச்
செய்யுட்க ளான்மொழி மாற்றும்
வந்தசொற் சீர்மா லைமாற்று
வழிமொழி எல்லா மடக்குச்
சந்த இயமகம் ஏகபாதம்
தமிழிருக்குக் குறள் சாத்தி
எந்தைக் கெழுகூற் றிருக்கை
ஈரடி ஈரடி வைப்பு.

பொழிப்புரை :

பல்வேறு வகைப்பட்ட செய்யுள்களாலான செந்தமிழ் மாலைகளாகத் `திருமொழி மாற்று\' என்ற பதிகமும் வழிமொழித் `திருவிராகப் பதிகமும், `எல்லா அடிகளிலும் எல்லாச் சீர்களிலும் மடங்கி வருகின்ற இயமகமாகிய `திரு ஏகபாதப் பதிகமும்\' தமிழில் சிறந்த `இருக்குக் குறள்\' பதிகமும், ஆகிய இவற்றைப் பாடிச் சாத்தியதுடன், எம் தந்தைக்கு அருளிய `எழுகூற்றிருக்கையும்\' `ஈரடி\' என்ற திருப்பதிகமும், `ஈரடிமேல் வைப்பு\' என்னும் திருப்பதிகமும்,

குறிப்புரை :

விகற்பச் செய்யுள்கள் - சொல்லணிநேர் பயின்ற பல்வேறு வகைப்பட்ட செய்யுள்கள். காழிப் பிள்ளையார் திருப்பதிகள் தோறும் சென்று வழிபட்டு வரும் முறையில், இந்நான்காவது செலவு நயப்பு நிறைவுற்றதும் காழியில் தங்கிய நாள்கள் மிகுதியாகும். ஆதலின் இதுபொழுது அருளிய பதிகமும் மிகுதியாகவுள்ளன.
இவ்வகையில் அமைந்த பதிகங்கள்:
1. `மொழிமாற்று\': காடதணி (தி.1 ப.117) - வியாழக்குறிஞ்சி
2. `மாலைமாற்று\': யாமாமாநீ (தி.3 ப.117) - கௌசிகம்
3. `வழிமொழி\': சுரருலகு (தி.3 ப.67) - சாதாரி
4. `ஏகபாதம்\': பிரமபுரத்துறை (தி.1 ப.127) - வியாழக்குறிஞ்சி
5. `இருக்குக்குறள்\': அரனை உள்குவீர் (தி.1 ப.90) - குறிஞ்சி
6. `எழுகூற்றிருக்கை\': ஓருருவாயினை (தி.1 ப.128) - வியாழக்குறிஞ்சி
7. `ஈரடி\': வரமதே கொளா (தி.3 ப.110) - பழம்பஞ்சுரம்
8. `ஈரடி மேல்வைப்பு\' : தக்கன்வேள்வி (தி.3 ப.5) - காந்தார பஞ்சமம்
1. மொழிமாற்று: பாடலில் வரும் சொற்கள் பொருள் அமைவிற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளுதல் இதன் இலக்கணமாகும்.
2. மாலை மாற்று: ஒரு மாலைக்கு அமைந்த இரு தலைப்புகளுள், எதனை முதலாகக் கொண்டு நோக்கினாலும் அம்மாலை ஒரே தன்மை யதாய்த் தோன்றுமாறு போல, ஒரு செய்யுளை முதலிலிருந்தோ, இறுதி யிலிருந்தோ எவ்வகையில் தொடர்ந்து வாசித்தாலும் அதே செய்யு ளாக அமையுமாறு ஒத்த எழுத்துக்களை நிரலே பெற்றிருப்பது மாலைமாற்றுச் செய்யுளாம்.
3. வழிமொழித் திருவிராகம்: குற்றெழுத்துப் பயின்று வரும் முடுகிய ஓசையுடையதாய் அடிமுதற் சீரின் இரண்டாம் எழுத்து சீர்தோறும் ஒன்றி வழியெதுகையால் வரத்தொடுப்பது இவ்வகையதாம்.
4. ஏகபாதம்: ஓரடியுள் வரும் சொற்சீர்களே நான்கு அடிகளிலும் மடக்கி வரப் பாடுவதாம். ஏகம் - ஒன்று; பாதம் - அடி = ஒரே அடி.
5. இருக்குக்குறள்: இரு சீரால் இயன்ற நான்கு அடிகளையுடைய பாட்டாம்.
6. திருமுக்கால்: ஒரு பாடலில் இரண்டாவது அடி மடங்கி மூன்றாவது அடியாகவும் வரப்பாடுவது இவ்வகையதாகும். இரண் டாம் அடியே மூன்றாவது அடியாக வருதலின் இப்பாடல் மூன்றடி உடையதாகிறது. ஆதலின் இதனை முக்கால் என்றனர்.
7. எழுகூற்றிருக்கை: ஒன்று முதல் ஏழு வரையிலான எண்கள் தொடர, அவ்வெண்கள் ஒவ்வொன்றும் நிறைவுறும்பொழுது, நிரல் பட ஒன்றுவரைக் கீழிறங்கி நிற்கப் பாடுவதாம்.
8. ஈரடி: இரண்டடிகளால் இயன்ற பாடல் வகையதாம்.
9. ஈரடி மேல் வைப்பு: ஈரடியால் இயன்ற செய்யுளாய் அதன் மேலும் ஈரடிகள் வைத்துப் பாடின் அது ஈரடி மேல் வைப்பாம். பின்னிரண்டடியாக வரும் வைப்புப் பதிகம் முழுமையும் ஒன்றேயாக அமைவதும் உண்டு, வெவ்வேறாக அமைவதும் உண்டு. இது அடுத்து வரும் நாலடி வைப்பிற்கும் பொருந்தும்.

பண் :

பாடல் எண் : 277

நாலடி மேல்வைப்பு மேன்மை
நடையின் முடுகும் இராகம்
சால்பினிற் சக்கரம் ஆதி
விகற்பங்கள் சாற்றும் பதிக
மூலஇலக்கிய மாக எல்லாப்
பொருள் களும் முற்ற
ஞாலத் துயர்காழி யாரைப்
பாடினார் ஞானசம் பந்தர்.

பொழிப்புரை :

`நாலடி மேல் வைப்பு\' என்ற திருப்பதிகமும், மேன்மையுடைய முடுகும் நடையில் அமைந்த `திருவிராகம்\' என்ற பதிகங்களும், மேன்மை கொண்ட `திருச்சக்கரமாற்று\' முதலான திருப்பதிகங்களும் ஆகிய இவை மூல இலக்கியங்களாக உலகத்திற்கு வழிகாட்டி நிற்குமாறு, எல்லாப் பொருள்களும் நிரம்பி இருக்கக் காணுமாறு, உலகத்தில் உயரும் சீகாழி இறைவரைத் திருஞானசம் பந்தர் பாடியருளினார்.

குறிப்புரை :

இவ்வகையில் அமைந்த பதிகங்கள்:
1. `நாலடி மேல் வைப்பு\': இயலிசை (தி.3 ப.3) - காந்தாரபஞ்சமம்.
2. `முடுகும் இராகம்\': முன்னிய கலை (தி.2 ப.29) - இந்தளம்
3. `முடுகும் இராகம்\': சங்கமரு (தி.3 ப.81) - சாதாரி
4. `முடுகும் இராகம்\': பெண்ணியல் (தி.3 ப. 84) - சாதாரி
5. `முடுகும் இராகம்\': எந்தமது சிந்தை (தி.3 ப.75) - சாதாரி
6. `முடுகும் இராகம்\': பிறையணி (தி.1 ப.19) - நட்டபாடை
7. `சக்கரம்\' : விளங்கியசீர் ( தி.2 ப.73) - காந்தாரம்
8. `ஆதிவிகற்பம் முக்கால்\': விண்ணவர் தொழு (தி.3 ப.94) - சாதாரி
9. `திருத்தாளச்சதி\': பந்தத்தால் (தி.1 ப.126) - வியாழக்குறிஞ்சி
10. `ஆவின் பாய்ச்சல்\' (கோமூத்திரி): பூமகனூர் - காந்தாரம்
11. `பல்பெயர்ப்பத்து\': எரியார் - தக்கேசி
1. முடுகும் இராகம்: நெகிழ்ந்த ஓசையவாகிய நெட்டெழுத்துக்கள் விரவாது குற்றெழுத்துக்களால் இயன்று இடையறவு படாது பாடப்படுவது.
2. திருச்சக்கர மாற்று: உருள் (சக்கரம்) வடிவாக அடைத்துச் சுழன்று வருவது போலச் சீகாழியின் பன்னிரு பெயர்களும் மாறி மாறிச் சுழன்று வரப் பாடியருளிய பதிகம் இப்பெயர் அமைய அமைந்துள்ளது.
3. திருமுக்கால்: முழுவதும் தொடர், முடுகிய ஓசையுடையதாய் வரும் பாடல் இவ்வகையதாகும்.
இவ்வாறு முடுகி வரும் ஓசை யமைப்பை அராகம் என்பர். காலப்போக்கில் அது இராகம் என மாறிற்று.
4. திருத்தாளச் சதி: ஆடரங்குகளில் மகளிர் பாடியவாறு நடித்தற்குப் பொருந்திய தாளச் சொற்கட்டுக்களாக அமைந்திருப்பது இவ்வகையாலாய பாடலாம்.
5. கோமூத்திரி: நடையன் பசு, நீர்க்கழிவு செய்யும்பொழுது, நிலத்தில் வளைந்து வளைந்து விழும் பாங்குபோலச் செய்யுளை அமைப்பது இவ்வகையதாகும்.
6. திருஇயமகம்: `யமகம்\' என்பது வடசொல். தமிழ் வழக்குப்படி யகரம் மொழிமுதற்கண் வாராமையின் இகரம் பெற்று இயமகம் ஆயிற்று. ஓரடியில் முன் வைத்த சொல்லோ தொடரோ வேறொரு பொருள்பட மீண்டும் அதே அடியில் மடக்கி வருவது இவ்வகையதாம். இதனை `மடக்கு\' என்றும் கூறுவர்.
7. பல்பெயர்ப் பத்து: சீகாழிப் பதியின் பன்னிருபெயர்களை தனித் தனியே ஒவ்வொரு பாடலில் குறிக்கும் இப்பதிகம் அகப்பொருள் துறையில் அமைந்துள்ளது.
இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 278

இன்னிசை பாடின எல்லாம்
யாழ்ப்பெரும் பாணனார் தாமும்
மன்னும் இசைவடி வான
மதங்கசூ ளாமணி யாரும்
பன்னிய ஏழிசை பற்றிப்
பாடப் பதிகங்கள் பாடிப்
பொன்னின் திருத்தா ளம்பெற்றார்
புகலியிற் போற்றி யிருந்தார்.

பொழிப்புரை :

இனிய இசையில் முற்கூறியவாறு பாடிய எல்லாப் பதிகங்களையும் பெரும்பாணரும், பொருந்திய இசை, ஓர் உருவு எடுத்தாற் போன்ற மதங்கசூளாமணியாரும், போற்றப்படும் ஏழிசைகளும் அமையப் பாடி இறைவரைப் போற்றப் பொன் தாளம் பெற்ற பிள்ளையார் சீகாழியில் தங்கியிருந்தார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 279

அங்கண் அமர்கின்ற நாளில்
அருந்தமிழ்நா டெத்தி னுள்ளும்
திங்கட் சடையண்ண லார்தம்
திருப்பதி யாவையுங் கும்பிட்
டெங்குந் தமிழ்மா லைபாடி
ஏத்திஇங் கெய்துவன் என்று
தங்குலத் தாதையா ரோடுந்
தவமுனி வர்க்கருள் செய்தார்.

பொழிப்புரை :

அப்பதியில் விருப்பத்துடன் எழுந்தருளி இருக்கும் நாள்களில், `அரிய தமிழ் நாட்டிலும், மற்றுமுள்ள நாடுகளி லும், திங்களை அணிந்த சடையையுடைய சிவபெருமான் எழுந்தரு ளியிருக்கும் திருப்பதிகள் பலவற்றிற்கும் சென்று கும்பிட்டு, எங்கும் தமிழ் மாலைத் திருப்பதிகங்களைப் பாடிப் போற்றிய பின் இங்கு வந்து சேர்வன்\' எனத் தம் பெருமையுடைய தந்தையார் சிவபாத இருதயருக் கும் தவ முனிவர்களான அடியவர் மற்றும் அந்தணர்க்கும் கூறினார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 280

பெருகு விருப்புடன் நோக்கிப்
பெற்ற குலத்தாதை யாரும்
அருமையால் உம்மைப் பயந்த
அதனாற் பிரிந்துறை வாற்றேன்
இருமைக்கும் இன்ப மளிக்கும்
யாகமும் யான்செய வேண்டும்
ஒருமையால் இன்னஞ் சிலநாள்
உடன்எய் துவேன்என் றுரைத்தார்.

பொழிப்புரை :

மேன்மேலும் பெருகும் விருப்பத்தோடு பிள்ளை யாரைப் பார்த்து, அவரை ஈன்ற சிவபாத இருதயர், `அரிய தவம் செய்து அதன் பயனாக உம்மை ஈன்றெடுத்தேன், ஆதலால் உம்மைப் பிரிந்து இங்கிருப்பதற்கு ஒருப்படேன், இம்மைக்கும் மறுமைக்கும் இன்பம் பயக்கும் சிவவேள்வியையும் யான் செய்தல் வேண்டும், ஆதலால் இன்னும் சில நாள்கள் உம்முடன் வருவன்\' எனக் கூறினார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 281

ஆண்டகை யாரும் இசைந்தங்
கம்பொற் றிருத்தோணி மேவும்
நீண்ட சடையார் அடிக்கீழ்ப்
பணிவுற்று நீடருள் பெற்றே
ஈண்டு புகழ்த்தாதை யார்பின்
எய்திட யாழ்ப்பாண ரோடும்
காண்தகு காழி தொழுது
காதலி னால்புறம் போந்தார்.

பொழிப்புரை :

ஆண் தகையாளரான சம்பந்தரும் அதற்கு இசைந்து, அங்கு அழகிய பொன்னார்ந்த திருத்தோணியில் எழுந்த ருளி நீண்ட சடையையுடைய இறைவரின் திருவடிக்கீழ் விழுந்து வணங்கி, நீடிய திருவருளைப் பெற்று, மிகுந்த புகழையுடைய தந்தை யார் பின்தொடர்ந்துவர, திருநீலகண்ட யாழ்ப்பாணர் தம் உடனே வரக் காணத் தக்க சீகாழிப் பதியை வணங்கி, நீங்காத பத்திமையுடன் புறம் போந்தார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 282

அத்திரு மூதூரின் உள்ளார்
அமர்ந்துடன் போதுவார் போத
மெய்த்தவர் அந்தணர் நீங்கா
விடைகொண்டு மீள்வார்கள் மீள
முத்தின் சிவிகைமேல் கொண்டு
மொய்யொளித் தாமம் நிரைத்த
நித்தில வெண்குடை மீது
நிறைமதி போல நிழற்ற.

பொழிப்புரை :

அப்பழம் பதியில் உள்ளவர்களுள் உண்மைத் தவத்தவர்கள் உடன் வருவாராய்ப் பின் தொடர்ந்து செல்லவும், அந்தணர்கள் பிரியா விடைபெற்றுப் பதியில் மீண்டு செல்பவர்கள் மீளவும், முத்துச் சிவிகையின் மேல் பிள்ளையார் எழுந்தருளி, நெருங் கிய முத்து மாலைகளை நிரல்படக் கட்டிய வெண்மையான முத்துக் குடையானது மேலே முழுச்சந்திரன் போல் நிழலைச் செய்யவும்,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 283

சின்னந் தனிக்காளந் தாரை
சிரபுரத் தாண்டகை வந்தார்
என்னுந் தகைமை விளங்க
ஏற்ற திருப்பெயர் சாற்ற
முன்எம் மருங்கும் நிரந்த
முரசுடைப் பல்லிய மார்ப்ப
மன்னுந் திருத்தொண்ட ரானார்
வந்தெதிர் கொண்டு வணங்க.

பொழிப்புரை :

முத்துச் சின்னமும், ஒப்பில்லாத முத்துக் காளமும், முத்தால் ஆன தாரையும், `சீகாழியில் தோன்றிய ஆளுடைய பிள்ளையார் வந்தருளினார்\' என்னும் தன்மையை உலகுக்கு விளங்கு மாறு அவருடைய பற்பல பெயர்களையும் எடுத்துச் சொல்லி ஊதிப் பிடிக்கவும், திருமுன்பு எம்மருங்கிலும் வரிசையாய் முரசுகளும் மற்றும் பல இயங்களும் முழங்கவும், நிலைபெற்ற திருத்தொண்டர்கள் வந்து எதிர் கொண்டு வணங்கவும்,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 284

சங்க நாதங்கள் ஒலிப்பத்
தழங்குபொற் கோடு முழங்க
மங்கல வாழ்த்துரை எங்கும்
மல்க மறைமுன் இயம்பத்
திங்களும் பாம்பும் அணிந்தார்
திருப்பதி எங்கும்முன் சென்று
பொங்கிய காதலிற் போற்றப்
புகலிக் கவுணியர் போந்தார்.

பொழிப்புரை :

சங்கின் ஒலிமுழங்கவும், விளங்கும் அழகிய கொம்புகள் ஒலிக்கவும், மங்கலமான வாழ்த்துரை எங்கும் பெருக வும், முன்னே மறைகள் முழங்கவும், பிறைச் சந்திரனையும் பாம் பையும் அணிந்த இறைவரின் திருப்பதிகள் எங்கும் உள்ளனவற்றின் முன்சென்று, மேன்மேலும் பெருகும் விருப்பத்துடன் போற்றியும் சீகாழிக் கவுணியர்தம் செல்வத் தோன்றலார் எழுந்தருளிச் சென்றார்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 285

திருமறைச் சண்பைய ராளி
சிவனார் திருக்கண்ணார் கோயில்
பெருவிருப் பாலணைந் தேத்திப்
பிஞ்ஞகர் கோயில் பிறவும்
உருகிய அன்பால் இறைஞ்சி
உயர்தமிழ் மாலை கொண் டேத்தி
வருபுனற் பொன்னி வடபால்
குடதிசை நோக்கி வருவார்.

பொழிப்புரை :

அந்தணர்தம் பதியான சீகாழிப் பதியின் தலைவ ரான ஆளுடைய பிள்ளையார், இறைவர் எழுந்தருளியுள்ள திருக் கண்ணார் கோயில் என்னும் பதியைப் பெருகும் விருப்பத்துடன் அணைந்து, திருப்பதியைப் பாடிப் போற்றி, இறைவர் எழுந்தருளி இருக்கும் திருக்கோயில்கள் பலவற்றையும் உருகும் அன்புடன் சென்று வணங்கி, உயரும் தமிழ் மாலைகளாகிய தேவாரத் திருப் பதிகங்களைப் பாடித் துதித்துப் பெருகிவரும் நீரையுடைய காவிரியின் வழியாய் மேற்றிசை நோக்கி வருவாராய்,

குறிப்புரை :

திருக்கண்ணார் கோயிலில் பாடிய பதிகம் `தண்ணார் திங்கள்\' (தி.1 ப.101) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும். குறுமாணக்குடி என இக்காலத்தில் இவ்வூரை அழைப்பர். கோயில் பலவும் என்றது திருக்கடைமுடி, திருநாங்கூர் முதலியனவாக லாம். இவற்றில் திருக்கடைமுடிக்கு அமைந்த திருப்பதிகம் `அருத்தனை\' (தி.1 ப.111) எனத் தொடங்கும் வியாழக் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 286

போற்றிய காதல் பெருகப்
புள்ளிருக் குந்திரு வேளூர்
நாற்றடந் தோளுடை மூன்று
நயனப்பிரான் கோயில் நண்ணி
ஏற்றஅன் பெய்தவ ணங்கி
இருவர்புள் வேந்தர் இறைஞ்சி
ஆற்றிய பூசனை சாற்றி
அஞ்சொற் பதிக மணிந்தார்.

பொழிப்புரை :

உள்ளத் தெழும் விருப்பம் மேன்மேலும் மிக, `திருப்புள்ளிருக்கு வேளூரில்\' நான்கு பெருந்தோள்களையுடைய முக்கண்ணுடைய பெருமான் வீற்றிருக்கும் கோயிலை அடைந்து, உரிய பேரன்பு பொருந்த வணங்கி, பறவையரசர்களான சம்பாதி சடாயு என்பவர்கள் வணங்கிச் செய்த வழிபாட்டின் பெருமையைப் பாராட்டிப் போற்றி, அழகான சொற்களால் அமைந்த திருப்பதிகத்தை இறைவர்க்கு அணிவித்தார்.

குறிப்புரை :

இத்திருப்பதியில் அருளிய பதிகம் `கள்ளார்ந்த\' (தி.2 ப.43) எனத் தொடங்கும் சீகாமரப் பண்ணிலமைந்த பதிகமாகும். புள் - சம்பாதி, சடாயு எனும் பறவைகள். இருக்கு - மறைகள். வேள் - முருகன். இவர்கள் வழிபட்ட பதியாதலின் இப்பெயர் பெற்றது. முதற் பத்துப் பாடல்களிலும் இப்பறவைகள் ஆற்றிய இறைவழிபாட்டுச் சிறப்பும், இராவணனுடன் செய்த போர்ச் சிறப்பும் குறிக்கப்பட் டுள்ளன. `யோசனைபோய்ப் பூக்கொணர்ந்து அங்கு, பூசனை செய்து இனிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே\'! என வரும் பகுதி அவர்களின் ஆழ்ந்த பத்திமையை விளக்குவது ஆகும்.

பண் :

பாடல் எண் : 287

நீடு திருநின்றி யூரின்
நிமலர்தம் நீள்கழல் ஏத்திக்
கூடிய காதலில் போற்றிக்
கும்பிட்டு வண்டமிழ் கூறி
நாடுசீர் நீடூர் வணங்கி
நம்பர்திருப் புன்கூர் நண்ணி
ஆடிய பாதம் இறைஞ்சி
அருந்தமிழ் பாடிஅ மர்ந்தார்.

பொழிப்புரை :

திரு என்றும் நிலைபெற்றிருக்கும் திருநின்றியூரில் இறைவரின் பெருமைமிக்க திருவடிகளைப் போற்றி மிக்க பத்திமை யுடன் வணங்கிக் கும்பிட்டு, வளமையான திருப்பதிகத்தைப் பாடி அருளி, நாளும் சிறப்புடைய திருநீடூரை வணங்கி, இறைவரின் திருப் புன்கூரை அடைந்து, அருட்கூத்து இயற்றும் திருவடிகளை வணங்கி, அருந்தமிழ்ப் பதிகம் பாடி ஆங்கே விருப்பத்துடன் வதிந்தருளினார்.

குறிப்புரை :

திருநின்றவூரில் பாடிய பதிகம், `சூலம்படை\' (தி.1 ப.18) என்று தொடங்கும் நட்டபாடைப் பண்ணிலமைந்த பதிகமாகும். திருநீடூரில் சுந்தரர் பதிகம் ஒன்றே உள்ளது. திருப்புன்கூரில் அருளிய பதிகம், `முந்தி நின்ற\' (தி.1 ப.27) எனத் தொடங்கும் தக்கராகப் பண் ணிலமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 288

அங்குநின் றேகிஅப் பாங்கில்
அரனார் மகிழ்கோயி லான
எங்கணுஞ் சென்று பணிந்தே
ஏத்தி இமவான் மடந்தை
பங்கர் உறைபழ மண்ணிப்
படிக்கரைக் கோயில் வணங்கித்
தங்கு தமிழ்மாலை சாத்தித்
திருக்குறுக் கைப்பதி சார்ந்தார்.

பொழிப்புரை :

அத்திருப்பதியினின்றும் புறப்பட்டுச் சென்று அருகி லிருக்கும், இறைவர் வீற்றிருக்கும், கோயில்கள் எங்கணும் சென்று, பணிந்து போற்றி, உமையம்மையாரை ஒரு கூற்றில் கொண்ட சிவபெரு மான் வீற்றிருக்கும் `திருப்பழமண்ணிப்படிக்கரைக்\' கோயிலை வணங்கி, தமிழ் மாலை பாடி, `திருக்குறுக்கைப்\' பதியை அடைந்தார்.

குறிப்புரை :

அருகிலிருக்கும் கோயில்களாவன: திருக்குரக்குக்கா, முதலாயினவாகலாம். ஆண்டு அப்பர் அருளிய பதிகமே கிடைத்துள் ளது. திருப்பழமண்ணிப்படிக்கரைக்குடியில் சுந்தரர் அருளிய பதிகம் ஒன்றே உள்ளது. பிள்ளையார் அருளிய பதிகங்கள்கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 289

திருக்குறுக் கைப்பதி மன்னித்
திருவீரட் டானத் தமர்ந்த
பொருப்புவில் லாளரை ஏத்திப்
போந்தன்னி யூர்சென்று போற்றிப்
பருக்கை வரையுரித் தார்தம்
பந்தணை நல்லூர் பணிந்து
விருப்புடன் பாடல் இசைத்தார்
வேதம் தமிழால் விரித்தார்.

பொழிப்புரை :

திருக்குறுக்கைப் பதியை அடைந்து, அங்குள்ள திருவீரட்டானக் கோயிலில் விரும்பி எழுந்தருளியிருக்கும், மேரு மலையை வில்லாகக் கொண்ட இறைவரைப் போற்றி, அங்கிருந்தும் புறப்பட்டுச் சென்று, `திரு அன்னியூர்\' என்ற பதியை வழிபட்டு, பெரிய கையையுடைய மலை போன்ற யானையை உரித்த சிவபெருமானின் `திருப்பந்தணைநல்லூரைப்\' பணிந்து, மறைகளைத் தமிழால் விரித்துப் பாடினார்.

குறிப்புரை :

அன்னியூரில் பாடிய பதிகம் `மன்னியூரிறை\' (தி.1 ப.96) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும். திருப்பந்தணைநல்லூரில் அருளிய பதிகம் முன்னர் 250ஆம் பாடலில் குறித்தாயிற்று. இப்போது அருளிய பதிகம் காணக் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 290

அப்பதி போற்றி அகல்வார்
அரனார் திருமணஞ்சேரி
செப்பருஞ் சீர்த்தொண்ட ரோடும்
சென்று தொழுதிசை பாடி
எப்பொரு ளுந்தரும் ஈசர்
எதிர்கொள்பா டிப்பதி எய்தி
ஒப்பில் பதிகங்கள் பாடி
ஓங்குவேள் விக்குடி யுற்றார்.

பொழிப்புரை :

அத்திருப்பதியைப் போற்றி மேற்செல்பவராய், இறைவரின் `திருமணஞ்சேரியைச்\' சொலற்கரிய திருத்தொண்டர்கள் உடன்வரச் சென்று வழிபட்டுத் திருப்பதிகத்தைப் பாடி, உயிர்க்கு வேண்டிய எல்லாப் பொருள்களையும் வழங்கும் இறைவரின் `திரு எதிர்கொள்பாடி\' என்ற பதியை அடைந்து, ஒப்பில்லாத திருப்பதிகங் களைப் பாடி, உயர்ந்த `வேள்விக்குடியை\' அடைந்தார்.

குறிப்புரை :

திருமணஞ்சேரியில் அருளிய பதிகம் `அயிலாரும்\' (தி.2 ப.16) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணிலமைந்த பதிக மாகும். திருஎதிர்கொள்பாடியில் அருளிய பதிகங்கள் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 291

செழுந்திரு வேள்விக் குடியில்
திகழ்மண வாளநற் கோலம்
பொழிந்த புனற்பொன்னி மேவும்
புனிதத் துருத்தி இரவில்
தழும்பிய தன்மையும் கூடத்
தண்டமிழ் மாலையிற் பாடிக்
கொழுந்துவெண் திங்கள் அணிந்தார்
கோடி காவிற்சென் றடைந்தார்.

பொழிப்புரை :

அம்மையப்பராகிய பெருமான், வளம் மிக்க `திருவேள்விக்குடியில்\' வீற்றிருக்கும் மணவாளத் திருக்கோலத்தை, பொய்யாமல் வருகின்ற நீர் வளம் கொண்ட தூய `திருத்துருத்தியில்\' பகலில் காணக் காட்டி, இரவில் இவ்வேள்விக்குடியில் அக்கோலத்துட னேயே எழுந்தருளிய தன்மையையும் சேர்த்துக் குளிர்ந்த தமிழ்மாலை பாடி, முளைக்கும் கொழுந்தைப் போன்ற வெண்மையான பிறைச் சந்திரனைச் சூடிய இறைவரின் `திருக்கோடிகா\' என்ற திருப்பதிக்குச் சென்று அடைந்தார்.

குறிப்புரை :

திருத்துருத்தியையும் திருவேள்விக்குடியையும் இணைத்து ஒரே பதிகத்தில் பாடப் பெற்றுள்ளன. காரணம், இறைவன் உமையம்மையாருக்குப் பகலில் திருத்துருத்தியிலும், இரவில் திரு வேள்விக்குடியிலுமாக வீற்றிருந்தருளிக் காட்சி கொடுத்தருளியமை யாகும். இவ்வகையில் அமைந்த திருப்பதிகம், `ஓங்கி மேலுழிதரு\' (தி.3 ப.90) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணிலமைந்த திருப் பதிகமாகும்.
ஓங்கிமே லுழிதரு மொலிபுனற் கங்கையை யொருசடைமேல்
தாங்கினா ரிடுபலி தலைகல னாக்கொண்ட தம்மடிகள்
பாங்கினா லுமையொடு பகலிடம் புகலிடம் பைம்பொழில்சூழ்
வீங்குநீர்த் துருத்தியா ரிரவிடத் துறைவர்வேள் விக்குடியே.
எனவரும் முதல்பாடல், இவ்வீரிடங்களிலும் உறையுமாற்றை விளக்கி நிற்றலும் காண்க. தழும்பிய தன்மை - விளங்க வெளிப்பட்டிருக்கும் நிலை.

பண் :

பாடல் எண் : 292

திருக்கோடி காவில் அமர்ந்த
தேவர் சிகாமணி தன்னை
எருக்கோ டிதழியும் பாம்பும்
இசைந்தணிந் தானைவெள் ளேனப்
பருக்கோடு அணிந்த பிரானைப்
பணிந்துசொல் மாலைகள் பாடிக்
கருக்கோடி நீப்பார்கள் சேரும்
கஞ்சனூர் கைதொழச் சென்றார்.

பொழிப்புரை :

திருக்கோடிகாவில் அமர்ந்திருக்கும் தேவர்களின் தலைவரான இறைவரை, எருக்கு மலருடனே கொன்றை மலரையும் அணிந்தவரை, வெள்ளைப் பன்றியான திருமாலின் பருத்த கொம் பைப் பூண்ட பெருமானாரைப் பணிந்து சொல்மாலைகளாலான திருப் பதிகங்களை பாடி, பிறப்பு அறுக்கலுற்றோர் அடைவதற்கு இடமான திருக்கஞ்சனூரை வணங்குவதற்குச் சென்றார்.

குறிப்புரை :

இத்திருப்பதியில் அருளியது, `இன்று நன்று\' (தி.2 ப.99) எனத் தொடங்கும் நட்டராகப் பண்ணிலமைந்த பதிகமாகும். சொல்மாலை கள் எனப் பன்மைப்படக் கூறினும் கிடைத்துள்ளது ஈதொன்றேயாம்.

பண் :

பாடல் எண் : 293

கஞ்சனூ ராண்டதங் கோவைக்
கண்ணுற் றிறைஞ்சிமுன் போந்து
மஞ்சணை மாமதில் சூழும்
மாந்துறை வந்து வணங்கி
அஞ்சொல் தமிழ்மாலை சாத்தி
அங்ககன் றன்பர்முன் னாகச்
செஞ்சடை வேதியர் மன்னும்
திருமங் கலக்குடி சேர்ந்தார்.

பொழிப்புரை :

திருக்கஞ்சனூரை ஆண்டருளுகின்ற தம் இறைவரைக் கண்டு கும்பிட்டு மேற்சென்று, மேகம் தவழ்கின்ற மதில் சூழ்ந்த `திருமாந்துறை\' என்ற பதிக்குச் சென்று வணங்கிச் சொல் மாலைபாடி, அங்கிருந்து புறப்பட்டு அன்பர்கள் எதிர்கொள்ளச் சிவந்த சடையையுடைய அந்தணரான சிவபெருமான் நிலையாக வீற்றிருக்கின்ற `திருமங்கலக்குடியை\' அடைந்தார்.

குறிப்புரை :

திருக்கஞ்சனூர், திருமாந்துறை ஆகிய பதிகளுக்குரிய திருப்பதிகங்கள் கிடைத்தில. திருமங்கலக்குடியில் அருளிய பதிகம் `சீரினார் மணியும்\' (தி.2 ப.10) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணி லமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 294

வெங்கண் விடைமேல் வருவார்
வியலூர் அடிகளைப் போற்றித்
தங்கிய இன்னிசை கூடுந்
தமிழ்ப்பதி கத்தொடை சாத்தி
அங்க ணமர்வார்தம் முன்னே
அருள்வே டங்காட்டத் தொழுது
செங்கண்மா லுக்கரி யார்தந்
திருந்துதே வன்குடி சேர்ந்தார்.

பொழிப்புரை :

அப்பதியினின்றும் புறப்பட்ட பிள்ளையார், கொடிய கண்களையுடைய ஆனேற்றின் மீது எழுந்தருளும் `திரு வியலூர்\' இறைவரை வணங்கித் தங்கி, இனிய இசையுடைய தமிழ் மாலை பாடி, இத்திருப்பதியில் விரும்பி எழுந்தருளியுள்ள இறைவர், தம்முன்பு அருள் திருவேடம் நேரே காட்டத் தொழுது, செங்கண் மாலுக்கு அரியவரான இறைவரின் திருந்துதேவன் குடியினைச் சென்று அடைந்தார்.

குறிப்புரை :

திருவியலூரில் அருளிய பதிகம் `குரவம் கமழ்\' (தி.1 ப.13) எனத் தொடங்கும் நட்டபாடைப் பண்ணிலமைந்த பதிகமாகும். இப்பதிகத்து வரும் 5ஆவது பாடலில் `கண்ணார்தரு முருவாகிய கடவுள்ளிடம்\' என வருவது கொண்டு, `அருள்வேடம் காட்டத் தொழுது\' என ஆசிரியர் அருளியிருப்பர் போலும்.

பண் :

பாடல் எண் : 295

திருந்துதே வன்குடி மன்னும்
சிவபெரு மான்கோயில் எய்திப்
பொருந்திய காதலிற் புக்குப்
போற்றி வணங்கிப் புரிவார்
மருந்தொடு மந்திர மாகி
மற்றும் இவர்வேட மாம்என்
றருந்தமிழ் மாலை புனைந்தார்
அளவில்ஞா னத்தமு துண்டார்.

பொழிப்புரை :

உயிர்கள் பிறவியலையாற்றினின்றும் திருந்து தற்கு ஏதுவாய தேவன்குடி என்ற திருப்பதியில் நிலையாக வீற்றிருக் கும் இறைவனின் கோயிலை அடைந்து, பொருந்திய அன்பு மீதூரச் சென்று போற்றி வணங்கி நினைவாராகி, இவர்தம் வேடம் மருந்தும் மந்திரமும் ஆகும் என்று அளவில்லாத ஞானப் பாலையுண்ட பெற்றி மையால், பிள்ளையார் அரிய தமிழ் மாலையைச் சாத்தினார்.

குறிப்புரை :

இப்பதியில் அருளிய பதிகம் `மருந்து வேண்டில் இவை\' (தி.3 ப.25) எனத் தொடங்கும் கொல்லிப் பண்ணிலமைந்த திருப்பதிகமாகும்.
மருந்துவேண் டில்இவை மந்திரங் கள்இவை
புரிந்துகேட் கப்படும் புண்ணியங் கள்இவை
திருந்துதே வன்குடித் தேவர்தே வெய்திய
அருந்தவத் தோர்தொழும் அடிகள்வே டங்களே.(தி.3 ப.25 பா.1)
எனவரும் முதற்பாடலை முகந்தவாறு சேக்கிழார் இத்திருப்பதிகக் கருத்தை அருளுகின்றார். `தேவன்குடி\' என்பது ஊர்ப் பெயர். திருந்து என்பது அதற்கு அடையாய் நின்றது.

பண் :

பாடல் எண் : 296

மொய்திகழ் சோலையம் மூதூர்
முன்னகன் றந்நெறி செல்வார்
செய்தரு சாலிக ரும்பு
தெங்குபைம் பூகத்தி டைபோய்
மைதிகழ் கண்டர்தங் கோயில்
மருங்குள்ள எல்லாம் வணங்கி
எய்தினர் ஞானசம் பந்தர்
இன்னம்பர் ஈசர்தம் கோயில்.

பொழிப்புரை :

அரும்புகள் விளங்கும் சோலைகள் சூழ்ந்த அப்பழமையான ஊரினின்றும் நீங்கி, அவ்வழியில் செல்பவராகி, வயல்களில் விளைந்து நிற்கும் நெல்லும் கரும்பும் தென்னையும் பசிய கமுகும் என்ற இவற்றிடையே சென்று, நஞ்சு விளங்கும் கழுத்தை உடைய இறைவரின் கோயில்களுள், அம்மருங்கில் உள்ளனவற்றை யெல்லாம் வணங்கிக்கொண்டு, திருஇன்னம்பர் இறைவரின் கோயி லைத் திருஞானசம்பந்தர் அடைந்தார்.

குறிப்புரை :

மொய் - அரும்பு. மருங்குள்ள கோயில்கள் எல்லாம் என்பன திருக்கொட்டையூர், திருவிசயமங்கை, திருபுறம்பயம், திரு வைகாவூர் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். எனினும் பதிகங்கள் எவையும் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 297

இன்னம்பர் மன்னும்பி ரானை
இறைஞ்சி இடைமடக் கான
பன்னுந்த மிழ்த்தொடை மாலைப்
பாடல்பு னைந்து பரவிப்
பொன்னங்க ழலிணை போற்றிப்
புறம்போந்த ணைந்து புகுந்தார்
மன்னுந்த டங்கரைப் பொன்னி
வடகுரங் காடு துறையில்.

பொழிப்புரை :

திருஇன்னம்பரில் வீற்றிருந்தருளும் இறைவனை வணங்கி, இடைமடக்கான யாப்பால் அமைந்த `திருமுக்கால்\' என்ற இறைவரின் புகழைப் பரவும் திருப்பதிகத் தமிழ்ப் பாடல் மாலைகளைச் சாத்தி, வணங்கி, இறைவரின் பொன்னடிகளைப் போற்றிப் புறப்பட் டுச் சென்று, நிலை பெற்ற பெரிய கரையையுடைய காவிரியின் வட கரையில் உள்ள வடகுரங்காடுதுறையில் வந்து அணைந்தார்.

குறிப்புரை :

திருஇன்னம்பரில் அருளிய பதிகம் `எண்டிசைக்கும்\' (தி.3 ப.95) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணிலமைந்த பதிகமாகும். பாடற்குரிய நான்கடிகளில் இடையிலுள்ள இரண்டாவது அடி மடங்கி மீண்டும் மூன்றாவது அடியாகவும் வருவது இடைமடக்காகும். இவ் வகையில் நான்கடிகளில் இரண்டும் மூன்றுமாக அமைந்த அடிகள், சொல்லானும் பொருளானும் ஒரு நிலையவாய் இருத்தலின் அவற்றை ஓரடியாகக் கொள்ள, மூன்றடிகளாக அமைதலின் முக்கால் என்றனர்.

பண் :

பாடல் எண் : 298

வடகுரங் காடு துறையில்
வாலியார் தாம்வழி பட்ட
அடைவுந் திருப்பதி கத்தில்
அறியச் சிறப்பித் தருளிப்
புடைகொண் டிறைஞ்சினர் போந்து
புறத்துள்ள தானங்கள் போற்றி
படைகொண்ட மூவிலை வேலார்
பழனத் திருப்பதி சார்ந்தார்.

பொழிப்புரை :

வடகுரங்காடுதுறையில் வந்து, வாலி வழிபட்டுப் புகலிடமாகக் கொண்ட வரலாற்றைத் திருப்பதிகத்தில் உலகம் அறியச் சிறப்பித்துப் பாடி, திருக்கோயிலை வலம் வந்து வணங்கிப் புறப்பட்டு அதன் அருகில் உள்ள திருப்பதிகளை யெல்லாம் வணங்கிய வண் ணம் மூவிலைச் சூலத்தைக் கைக்கொண்ட இறைவர் எழுந்தருளிய திருப்பழனத் திருப்பதியைச் சென்றடைந்தார்.

குறிப்புரை :

வடகுரங்காடுதுறையில் அருளிய பதிகம் `கோங்கமே\' (தி.3 ப.91) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணிலமைந்த பதிகமாகும். `கோவமா மலரொடு தூபமுஞ் சாந்தமுங் கொண்டுபோற்றி வாலியார் வழிபடப் பொருந்தினார்\' `நீலமா மணிநிறத் தரக்கனை யிருபது கரத்தொடொல்க வாலினாற் கட்டிய வாலியார் வழிபட மன்னு கோயில்\' என இப்பதிகத்து ஆறாவதும் எட்டாவதும் ஆக வரும் பாடல்களை உளங்கொண்டு சேக்கிழார் இவ்வாறு அருளுகின்றார். புறத்துள்ள தலங்கள் என்பன திங்களூர் முதலாயினவாகலாம். பதிகங் கள் எவையும் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 299

பழனத்து மேவிய முக்கண்
பரமேட்டி யார்பயில் கோயில்
உடைபுக் கிறைஞ்சிநின் றேத்தி
உருகிய சிந்தைய ராகி
விழைசொற் பதிகம் விளம்பி
விருப்புடன் மேவி யகல்வார்
அழனக்க பங்கய வாவி
ஐயாறு சென்றடை கின்றார்.

பொழிப்புரை :

திருப்பழனத்தில் வீற்றிருக்கும் முக்கண்களை உடைய சிவபெருமான் திருக்கோயிலுள் புகுந்து நின்று போற்றி உருகிய உள்ளத்தையுடையவராகி, விரும்புதற்குரிய தமிழ்ச் சொல் பதிகத்தைப் பாடிப் பெருவிருப்புடன் அங்குத் தங்கியிருந்து, பின் அங்கிருந்தும் நீங்குபவராய்த் தீயைப் பழித்த செந்தாமரை மலர்கள் மலர்ந்த நீர்நிலைகளையுடைய திருவையாற்றை அடைபவர்.

குறிப்புரை :

திருப்பழனத்தில் அருளிய பதிகம் `வேதமோதி\' (தி.1 ப.67) எனத் தொடங்கும் தக்கேசிப் பண்ணிலமைந்த பதிகமாகும். அழல் நக்க பங்கயம் - நிறத்தால் தீயைப் பழித்த செந்தாமரை மலர்கள், `யாழைப் பழித்தன்ன மொழி\' எனவரும் திருவாக்கினை நினைவு கூர வைக்கின்றது. அழல் நக்க - செம்மை நிறத்தால் நெருப்பினும் மேம்பட விளங்கல்.

பண் :

பாடல் எண் : 300

மாடநிரை மணிவீதித் திருவையாற்
றினில்வாழு மல்கு தொண்டர்
நாடுய்யப் புகலிவரு ஞானபோ
னகர்வந்து நண்ணி னாரென்
றாடலொடு பாடலறா அணிமூதூர்
அடையஅலங் காரஞ் செய்து
நீடுமனக் களிப்பினொடும் எதிர்கொள்ள
நித்திலயா னத்து நீங்கி.

பொழிப்புரை :

நிரல்பட அமைந்த மாடங்களைக் கொண்ட திரு வையாற்றில் வாழ்கின்ற அடியவர்கள், உலகம் உய்யும் பொருட்டுச் சீகாழியில் தோன்றி ஞான அமுதம் உண்ட பிள்ளையார் வருகின்றார் என்னும் பதைப்பு உளங்கொண்ட ஆர்வத்தால், ஆடலொடு பாடல் அறாத அழகிய அப்பழமையான நகரை முழுமையாக அணிசெய்து, பெருகிய உள்ள மகிழ்வுடன் வரவேற்கப் பிள்ளையாரும் முத்துச் சிவி கையினின்றும் இறங்கிவந்து,

குறிப்புரை :

நித்திலயானம் - முத்துச் சிவிகை.

பண் :

பாடல் எண் : 301

வந்தணைந்து திருத்தொண்டர் மருங்குவர
மானேந்து கையர் தம்பால்
நந்திதிரு வருள்பெற்ற நன்னகரை
முன்னிறைஞ்சி நண்ணும் போதில்
ஐந்துபுலன் நிலைகலங்கும்இடத்தஞ்சல்
என்பார்தம் ஐயா றென்று
புந்திநிறை செந்தமிழின் சந்தஇசை
போற்றிசைத்தார் புகலி வேந்தர்.

பொழிப்புரை :

திரண்டுவந்த தொண்டர்கள் தம்மைச் சூழ்ந்து வர, மானை ஏந்திய கையையுடைய இறைவனிடத்தில் நந்தியெம் பெருமான் அருளைப் பெற்ற அத்திருப்பதியை வணங்கி, புலனைந்தும் பொறிகலங்கி நெறி மயங்கியவிடத்து, `அஞ்சற்க\' என்று அருளுரை வழங்கும் இறைவரது திருவையாறு இதுவாகும் எனும் திருவுளத் துடன், மனம் நிறைந்து எழுந்த செந்தமிழினது சந்த இசைப் பதிகத்தால் வணங்கிப் போற்றினார், சீகாழித் தலைவரான சம்பந்தர்.

குறிப்புரை :

திருவையாற்றை நண்ணிய அளவில் அருளிய பதிகம் `புலனைந்தும்\' (தி.1 ப.130) எனத் தொடங்கும் மேகராகக் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும். `புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைம்மேலுந்தி, அலமந்த போதாக வஞ்சேலென் றருள்செய்வா னமருங்கோயில்\' எனவரும் இப்பதிகத்தின் முதற்பாட் டினை முகந்து நின்று, ஆசிரியர் சேக்கிழார் இவ்வாறு அருளிச் செய் கின்றார். இம் மூன்று பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 302

மணிவீதி இடங்கடந்து மாலயனுக்
கரியபிரான் மன்னுங் கோயில்
அணிநீடு கோபுரத்தை அணைந்திறைஞ்சி
உள்ளெய்தி அளவில் காதல்
தணியாத கருத்தினொடும் தம்பெருமான்
கோயில்வலங் கொண்டு தாழ்ந்து
பணிசூடும் அவர்முன்பு பணிந்துவீழ்ந்
தெழுந்தன்பாற் பரவு கின்றார்.

பொழிப்புரை :

அழகிய திருவீதிகளைக் கடந்து சென்று திருமாலுக்கும் நான்முகனுக்கும் அறிதற்கு அரிய சிவபெருமான் நிலையாய் வீற்றிருக்கும் கோயிலின் அழகு பொருந்திய கோபுரத்தைச் சார்ந்து பணிந்து கோயிலுள் சென்று அளவில்லாத ஆசையானது பெருகித் தணியாத மனத்துடன் இறைவரின் திருக்கோயிலை வலமாய் வந்து பாம்பை அணிந்த அப்பெருமானின் திருமுன்பு வணங்கி நிலமுற விழுந்து, எழுந்து, அன்பால் போற்றுவாராய்,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 303

கோடல்கோங் கங்குளிர்கூ விளம்என்னுந்
திருப்பதிகக் குலவு மாலை
நீடுபெருந் திருக்கூத்து நிறைந்ததிரு
வுள்ளத்து நிலைமை தோன்ற
ஆடுமா றதுவல்லான் ஐயாற்றெம்
ஐயனே என்று நின்று
பாடினார் ஆடினார் பண்பினொடும்
கண்பொழிநீர் பரந்து பாய.

பொழிப்புரை :

`கோடல்கோங் கங்குளிர் கூவிளம்\' ( தி.2 ப.6) எனத் தொடங்கும் திருப்பதிகமான சிறந்த சொல்மாலையை, நீடிய பெருந் திருக்கூத்தின் சிறப்பு நிறைவாகத் தம் உள்ளத்திலே தோன்ற `ஆடு மாறுவல் லானும்ஐ யாறுடை யையனே\' என்ற கருத்தை நிறை வாகக் கொண்ட பதிகத்தைப் பாடி, அன்பினால் இன்பமார்ந்திருக்கும் விழிகளிலிருந்து ஆனந்தக் கண்ணீர் இடையீடின்றிப் பரந்து பாய்ந் திடப் பாடினார்; ஆடினார்.

குறிப்புரை :

கோடல் கோங்கம்\' எனத் தொடங்கும் இப்பதிகம் இந்தளப் பண்ணிலமைந்ததாகும். இத்தொடக்கமுடைய பதிகத்தின் முதற் பாடல், `ஆடு மாறுவல் லானுமை யாறுடை யையனே\' என நிறைவு பெறுகிறது. பதிகம் முழுதும் இவ்வாறமைந்த முடிபு கொண்ட தொடர்களை முகந்த நிலையில் சேக்கிழார் இவ்வாறு அருளிச் செய்கின்றார்.
இஃதன்றிப் பிள்ளையார் திருவையாற்றில் ஆடிப் பாடியவாறு அருளிய பதிகங்கள் மூன்று:
1. `கலையார்மதி\': (தி.1 ப.36) -தக்கராகம்.
2. `பணிந்தவர்\': (தி.1 ப.120) - வியாழக்குறிஞ்சி.
3. `திருத்திகழ்\': (தி.2 ப.32) - இந்தளம்.
இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 304

பலமுறையும் பணிந்தெழுந்து புறம்போந்து
பரவுதிருத் தொண்ட ரோடு
நிலவுதிருப் பதியதன் கண்நிகழுநாள்
நிகரிலா நெடுநீர்க் கங்கை
அலையுமதி முடியார்தம் பெரும்புலியூர்
முதலான அணைந்து போற்றிக்
குலவுதமிழ்த் தொடைபுனைந்து மீண்டணைந்து
பெருகார்வங் கூரு நாளில்.

பொழிப்புரை :

பலமுறையும் வணங்கி எழுந்து வெளியே வந்து, வணங்கி எழும் திருத்தொண்டர்களுடன் நிலை பெற்று அத்திருப்பதி யில் இருந்தருளிய அந்நாள்களில், ஒப்பில்லாத பெருகிய நீரையுடைய கங்கை அலைதற்கு இடமான முடியில் பிறைச் சந்திரைனைச் சூடிய இறைவரது `பெரும் புலியூர்\' முதலான பதிகளுக்கும் சென்று போற்றித் தமிழ் மாலைகளைப் பாடி, மீண்டும் திருவையாற்றை அடைந்து, பெரு கும் ஆசை மிக அங்கிருந்து வரும் நாள்களில்,

குறிப்புரை :

திருப்பெரும்புலியூரில் அருளிய பதிகம் `மண்ணுமோர்\' (தி.2 ப.67) எனத் தொடங்கும் காந்தாரப் பண்ணிலமைந்த பதிகமாகும். இத்திருப்பதி முதலான பதிகளுக்கும் சென்றார் எனக் குறிப்பதற்கேற்ப அப்பதிகள் இவை என அறிதற்கு இல்லை.

பண் :

பாடல் எண் : 305

குடதிசைமேற் போவதற்குக் கும்பிட்டங்
கருள்பெற்றுக் குறிப்பி னோடும்
படருநெறி மேலணைவார் பரமர்திரு
நெய்த்தானப் பதியில் நண்ணி
அடையுமனம் உறவணங்கி அருந்தமிழ்மா
லைகள்பாடி அங்கு நின்றும்
புடைவளர்மென் கரும்பினொடு பூகமிடை
மழபாடி போற்றச் சென்றார்.

பொழிப்புரை :

இப்பதியின் மேற்குத் திசையில் செல்வதற்கு விடை பெறக் கும்பிட்டுத் திருவருளைப் பெற்று, அங்ஙனம் பெற்ற அவ்வருட் குறிப்பின் வழியே செல்கின்றவர் திருநெய்த்தானத்தை அடைந்து மனம் பொருந்த வணங்கி, அரிய தமிழ் மாலைகளைப் பாடி, அங்கிருந்த இருமருங்கும் வளரும் கரும்புடன் பாக்கு மரங்களும் நெருங்கியுள்ள `திருமழபாடியை\' வணங்கச் செல்லலானார்.

குறிப்புரை :

திருநெய்த்தானத்தில் அருளிய பதிகம் `மையாடிய கண் டன்\' (தி.1 ப.15) எனத் தொடங்கும் நட்டபாடைப் பண்ணிலமைந்த பதிகம் ஆகும். இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 306

செங்கைமான் மறியார்தந் திருமழபா
டிப்புறத்துச் சேரச் செல்வார்
அங்கையார் அழலென்னுந் திருப்பதிகம்
எடுத்தருளி அணைந்த போழ்தில்
மங்கைவாழ் பாகத்தார் மழபாடி
தலையினால் வணங்கு வார்கள்
பொங்குமா தவமுடையார் எனத்தொழுது
போற்றிசைத்தே கோயில் புக்கார்.

பொழிப்புரை :

சிவந்த மான் கன்றை ஏந்திய சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் திருமழபாடியின் புறத்தே செல்பவரான பிள் ளையார், `அங்கையாரழல்\' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைத் தொடங்கி, மேலும் அப்பதியை அணுகும் பொழுது `உமையம்மையை ஒரு கூற்றில் கொண்ட இறைவர் வீற்றிருக்கும் திருமழபாடியைத் தலை யினால் வணங்குபவர்கள் மேன்மேலும் பெருகும் தவம் பெற்றவர் கள்\' எனப் பாடிப் போற்றித் தொழுதவாறே கோயிலுள் புகுந்தார்.

குறிப்புரை :

`அங்கையார் அழல்\' (தி.3 ப.48) எனத் தொடங்கும் கௌசிகப் பண்ணிலமைந்த இப்பதிகத்தில் வரும் நான்காவது பாடல், `திருமழ பாடியைத் தலையி னால்வணங் கத்தவ மாகுமே\' என நிறைவு பெறுகிறது. இக்குறிப்பை உளங்கொண்ட வகையில், இவ்வாறு அருளுகின்றார் சேக்கிழார்.

பண் :

பாடல் எண் : 307

மழபாடி வயிரமணித் தூணமர்ந்து
மகிழ்கோயில் வலங்கொண் டெய்திச்
செழுவாச மலர்க்கமலச் சேவடிக்கீழ்ச்
சென்றுதாழ்ந் தெழுந்து நின்று
தொழுதாடிப் பாடிநறுஞ் சொல்மாலைத்
தொடையணிந்து துதித்துப் போந்தே
ஒழியாத நேசமுடன் உடையவரைக்
கும்பிட்டங் குறைந்தார் சின்னாள்.

பொழிப்புரை :

அத்திருமழபாடியில் அழகிய வயிரமணித் தூண் ஆக வீற்றிருந்தருளும் பெருமானாரின் கோயிலை வலம் வந்து, செழுமையான மணம் பொருந்திய தாமரை மலர் போன்ற திருவடிக் கீழே விழுந்து வணங்கி எழுந்து நின்று, தொழுதும் ஆடியும் பாடியும் நல்ல சொல்மாலைத் தொடை பாடிப் போற்றியும் வெளிப்போந்த நிலையில், இடையறாத அன்புடன் தம் தலைவரான இறைவரைக் கும்பிட்டு, அத்திருப்பதியில் சில நாள்கள் தங்கியிருந்தார் பிள்ளையார்.

குறிப்புரை :

இத் திருப்பதியில் சாற்றியருளிய பதிகங்கள் இரண்டு: 1. `களையும்\' : (தி.2 ப.9) - இந்தளம். 2. `காலையார்\' : (தி.3 ப.28) - கொல்லி. இவற்றுள் முன்னையது இதுபொழுதும், பின்னையது இங்கிருந்த நாள்களிலுமாகப் பாடியிருக்கலாம். இப்பதியில் இருந் தருளும் இறைவனின் திருப்பெயர் வயிரமணித்தூண்நாதர் என்ப தாகும். `மழபாடி வயிரத்தூணே\' என்பது அப்பர் திருவாக்காகும்.

பண் :

பாடல் எண் : 308

அதன்மருங்கு கடந்தருளால் திருக்கானூர்
பணிந்தேத்தி ஆன்ற சைவ
முதன்மறையோர் அன்பிலா லந்துறையின்
முன்னவனைத் தொழுது போற்றிப்
பதநிறைசெந் தமிழ்பாடிச் சடைமுடியார்
பலபதியும் பணிந்து பாடி
மதகரட வரையுரித்தார் வடகரைமாந்
துறையணைந்தார் மணிநூல் மார்பர்.

பொழிப்புரை :

அப்பதியைக் கடந்து சென்றவர், திருக்கா னூரைப் பணிந்து போற்றி, பெருமை பெற்ற ஆதிசைவர் இருக்கும் திரு அன்பிலாலந்துறை இறைவரை வணங்கிப் போற்றி, வளம் மிக்க சொற்களமைந்த செந்தமிழ்ப் பதிகத்தைப் பாடி, சிவபெருமானின் பல பதிகளையும் வணங்கிப் போற்றி, அருவியென மதத்தைச் சொரியும் மலையனைய யானையை உரித்த இறைவரின் `வடகரை மாந்துறையை\' அழகிய முப்புரிநூல் அணிந்த மார்பையுடைய சம்பந்தர் சென்று சேர்ந்தார்.

குறிப்புரை :

திருக்கானூரில் அருளிய பதிகம், `வானார் சோதி\' (தி.1 ப.73) எனத் தொடங்கும் தக்கேசிப் பண்ணிலமைந்ததாகும். திருஅன்பிலாலந்துறையில் அருளிய பதிகம், `கணை நீடெரி\' (தி.1 ப.33) எனத் தொடங்கும் தக்கராகப் பண்ணிலமைந்ததாகும். `சடை முடியார் பல பதியும் பாடி\' என்பதற்கேற்பப் பிள்ளையார் வணங்கிய திருப்பதிகள் எவை என அறிதற்கியன்றிலது. பதம் - வளம் மிக்க சொற் கள்: மந்திரம் என்றலுமாம். மாந்துறை - ஊர்ப்பெயர். காவிரியின் வட கரையில் அமைந்திருத்தல் பற்றி அஃது அதற்கு அடைமொழியாயிற்று.

பண் :

பாடல் எண் : 309

சென்றுதிரு மாந்துறையில் திகழ்ந்துறையும்
திருநதிவாழ் சென்னி யார்தம்
முன்றில்பணிந் தணிநெடுமா ளிகைவலஞ்செய்
துள்புக்கு முன்பு தாழ்ந்து
துன்றுகதிர்ப் பரிதிமதி மருத்துக்கள்
தொழுதுவழி பாடு செய்ய
நின்றநிலை சிறப்பித்து நிறைதமிழின்
சொல்மாலை நிகழப் பாடி.

பொழிப்புரை :

சென்றவர், திருமாந்துறையில் விளக்கம் பெற வீற்றிருந்தருளும் கங்கையாறு தங்கப் பெற்று வாழ்வு அடைந்த சடையை உடைய இறைவரின் திருமுற்றத்தை வணங்கி, அழகிய நீண்ட திருமாளிகையை வலம் வந்து, உட்சென்று, திருமுன் விழுந்து பணிந்து, செறிந்த ஒளிர்க் கதிர்களையுடைய ஞாயிறும், சந்திரனும், தேவ மருத்துவர்களும் தொழுது வழிபட, இறைவர் எழுந்தருளிய நிலையைச் சிறப்பித்த சொல்மாலையை நிலவி நிற்கும்படியாகப் பாடி,

குறிப்புரை :

திருமாந்துறையில் அருளியது, `செம்பொனார் தரு\' (தி.2 ப.110) எனத் தொடங்கும் நட்டராகப் பண்ணிலமைந்ததாகும். பரிதி, மதி, தேவ மருத்துவர்களும் வழிபட்டமை இப்பதிகத்துள் வரும் ஆறாவது பாடலில் காணும் குறிப்பாகும்.

பண் :

பாடல் எண் : 310

அங்கணகன் றம்மருங்கில் அங்கணர்தம்
பதிபிறவும் அணைந்து போற்றிச்
செங்கமலப் பொதியவிழச் சேல்பாயும்
வயல்மதுவால் சேறு மாறாப்
பொங்கொலிநீர் மழநாட்டுப் பொன்னிவட
கரைமிசைப் போய்ப் புகலி வேந்தர்
நங்கள்பிரான் திருப்பாச்சி லாச்சிரா
மம்பணிய நண்ணும் போதில்.

பொழிப்புரை :

அவ்விடத்தினின்றும் நீங்கி அருகில் உள்ள சிவ பெருமானின் பிற திருப்பதிகளையும் வணங்கி, செந்தாமரை மலர்க ளின் மொட்டு அவிழ, சேல்மீன் பாய, தேன் பொழிவதால் சேறு உலராத வயல்களையுடைய, பொங்கும் ஒலிமிக்க நீரையுடைய மழநாட்டில், காவிரியின் வடகரை வழியாகச் சென்ற சீகாழித் தலைவர், நம் இறைவரின் திருப்பாச்சிலாச்சிராமத்தைத் தொழுவதற்குச் சேரும் பொழுதில்,

குறிப்புரை :

பாச்சில் - ஊரின் பெயர். ஆச்சிராமம் - கோயிலின் பெயர். `பதி பிறவும்\' என்பன திருத்தவத்துறை, பூவாளுர், திருமங் கலம் முதலியன வாகலாம் என்பர் சிவக்கவிமணியார். பதிகங்கள் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 311

அந்நகரிற் கொல்லிமழ வன்பயந்த
அரும்பெறல்ஆர் அமுத மென்சொல்
கன்னிஇள மடப்பிணையாங் காமருகோ
மளக்கொழுந்தின் கதிர்செய் மேனி
மன்னுபெரும் பிணியாகும் முயலகன்வந்
தணைவுறமெய் வருத்த மெய்தித்
தன்னுடைய பெருஞ்சுற்றம் புலம்பெய்தத்
தானும்மனந் தளர்வு கொள்வான்.

பொழிப்புரை :

அந்நகரத்தில் கொல்லி மழவன் தான் பெற் றெடுத்த அரிய அமுதம் போன்ற மென்மையான சொல்லையுடைய கன்னியான இளமான் போன்ற அழகான இளங்கொழுந்தினுடைய ஒளி பொருந்திய உடம்பில், முயலகன் வந்து சார்ந்ததால், உடல் வருந்தித் தனது உறவினர் வருந்தத் தானும் உள்ளத் தளர்ச்சி அடைந்தவனாய்,

குறிப்புரை :

முயலகன் - உடலில் வலிப்பு ஏற்பட உணர்வற்றுக் கிடக்கும் நோய். இக்காலத்தில் வலிப்பு எனக் கூறப் படுவதொரு நோய்.

பண் :

பாடல் எண் : 312

மற்றுவே றொருபரிசால் தவிராமை
மறிவளரும் கையார் பாதம்
பற்றியே வருங்குலத்துப் பான்மையினான்
ஆதலினாற் பரிவு தீரப்
பொற்றொடியைக் கொடுவந்து போர்க்கோலச்
சேவகராய்ப் புரங்கள் மூன்றும்
செற்றவர்தங் கோயிலினுள் கொடுபுகுந்து
திருமுன்பே இட்டு வைத்தான்.

பொழிப்புரை :

எவ்வாற்றானும் நீக்க மாட்டாமையால், மான் கன்றினையுடைய திருக்கையைக் கொண்ட சிவபெருமானின் திருவடிகளைப் பற்றி வாழ்தலையே வழிவழியாகக் கொண்டு நிற்கும் தன்மையனாதலின், அத்துன்பம் நீங்கும் பொருட்டுப் பொன் வளையல் அணிந்த அப்பெண்ணை அழைத்து வந்து, போர்க்கோலம் கொண்ட வீரராய், முப்புரங்களையும் எரித்த இறைவரின் திருக் கோயிலில், அவர் திருமுன்பு இட்டு வைத்தான்.

குறிப்புரை :

இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 313

அவ்வளவில் ஆளுடைய பிள்ளையார்
எழுந்தருளி அணுக வெய்தச்
செவ்வியமெய்ஞ்ஞானமுணர் திருஞான
சம்பந்தன் வந்தான் என்றே
எவ்வுலகுந் துயர்நீங்கப் பணிமாறுந்
தனிக்காளத் தெழுந்த வோசை
வெவ்வுயிர்க்கும் அவன்கேளா மெல்லியலை
விட்டெதிரே விரைந்து செல்வான்.

பொழிப்புரை :

அந்நிலையில் ஆளுடைய பிள்ளையார் அத்திருப்பதிக்கு எழுந்தருளி, அப்பதியினை அணுகிவரச் `செம்மை தரும் மெய்ஞ்ஞானத்தை உணர்ந்த திருஞானசம்பந்தன்\' என எவ்வுலகும் துன்பம் நீங்குமாறு ஒலிக்கின்ற திருக்காளம் முதலான இயங்கள் ஒலிக்க, துன்ப மிகுதியால் பெருமூச்சு விட்டுக் கொண்டு இருக்கும் அக்கொல்லி மழவன், அதனைக் கேட்டு, மென்மைத் தன்மை வாய்ந்த அப்பெண்ணை அங்கே விட்டுப் பிள்ளையாரை எதிர் கொள்ள விரைந்து செல்வானாகி,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 314

மாநகரம் அலங்கரிமின் மகரதோ
ரணம்நாட்டும் மணிநீர் வாசத்
தூநறும்பூ ரணகும்பம் சோதிமணி
விளக்கினொடு தூபம் ஏந்தும்
ஏனையணி பிறவுமெலாம் எழில்பெருக
இயற்றும்என ஏவித் தானும்
வானவர்நா யகர்மகனார் வருமுன்பு
தொழுதணைந்தான் மழவர் கோமான்.

பொழிப்புரை :

`பெரிய இந்நகரை அணிசெய்யுங்கள். மகர தோரணங்களைக் கட்டுங்கள்! மணிகளை இட்ட மணநீர் நிறைந்த நிறை குடங்களையும் ஒளியுடைய அழகிய விளக்குகளுடன் நறுமணப் புகையையும் ஏந்துங்கள்! இன்னும் பிறபிற அணிகளையெல்லாம் பெருகச் செய்யுங்கள்!\' என ஆணையிட்டு, அக்கொல்லி மழவன் தானும் தேவதேவரான சிவபெருமானின் மகனாரான பிள்ளையாரின் திருமுன்பு தொழுதபடியே சென்றணைந்தான்.

குறிப்புரை :

அம்மையப்பராய் வந்து ஞானப்பால் ஊட்டியமை யின், பிள்ளையார் அவர் திருமகனார் எனக் கருதப் பெற்றனர். இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 315

பிள்ளையார் எழுந்தருளப் பெற்றேனென்
றானந்தம் பெருகு காதல்
வெள்ளநீர் கண்பொழியத் திருமுத்தின்
சிவிகை யின்முன் வீழ்ந்தபோது
வள்ளலார் எழுகவென மலர்வித்த
திருவாக்கால் மலர்க்கை சென்னி
கொள்ளமகிழ்ந் துடன்சென்று குலப்பதியின்
மணிவீதி கொண்டு புக்கான்.

பொழிப்புரை :

சென்றவன் `பிள்ளையார் எழுந்தருளப் பேறு பெற்றேன்!\' என எண்ணி, மேன்மேலும் பெருகும் அன்பினால் வெள்ளமாய்க் கண்கள் நீரைப் பொழிய, முத்துச் சிவிகையின் முன்பு விழுந்த பொழுது, வள்ளலாரான பிள்ளையார் `எழுக\' என்ற திரு வாக்கால் அருள, அவன் தன் மலர்க் கைகளைத் தலைமேல் குவித்துக் கொண்டு எழுந்து, அவருடனே சென்று பழமையான அப்பதியின் திருவீதி வழியே அழைத்துக் கொண்டு வந்து நகரினுள் புகுந்தான்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 316

மங்கலதூ ரியம்முழங்கு மணிவீதி
கடந்துமதிச் சடையார் கோயிற்
பொங்குசுடர்க் கோபுரத்துக் கணித்தாகப்
புனைமுத்தின் சிவிகை நின்றும்
அங்கண்இழிந் தருளுமுறை இழிந்தருளி
அணிவாயில் பணிந்து புக்குத்
தங்கள்பிரான் கோயில்வலங் கொண்டுதிரு
முன்வணங்கச் சாருங் காலை.

பொழிப்புரை :

மங்கல இயங்கள் ஒலிக்கும் அவ்வீதியைக் கடந்து சென்று, பிறைச் சந்திரனை அணிந்த சடையையுடைய இறைவரின் திருக்கோயிலின் பொங்கும் ஒளி வீசும் கோபுரத்துக்கு அருகில், அழகிய முத்துச் சிவிகையினின்றும் இறங்கிய பிள்ளையார், அழகிய வாயிலை வணங்கி உள்ளே புகுந்து, தம் இறைவரின் கோயிலை வலம் வந்து, அப்பெருமானைத் திருமுன்பு சென்று வணங்கச் செல் லும் பொழுது,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 317

கன்னியிளங் கொடியுணர்வு கழிந்துநிலன்
சேர்ந்ததனைக் கண்டு நோக்கி
என்இதுவென் றருள்செய்ய மழவன்தான்
எதிர்இறைஞ்சி அடியேன் பெற்ற
பொன்இவளை முயலகனாம் பொருவிலரும்
பிணிபொருந்தப் புனிதர் கோயில்
முன்னணையக் கொணர்வித்தேன் இதுபுகுந்த
படியென்று மொழிந்து நின்றான்.

பொழிப்புரை :

கன்னியாகிய இளங்கொடிபோன்ற ஒரு பெண், உணர்வின்றி நிலத்தில் கிடப்பதைப் பார்த்து, இஃது என்ன? எனப் பிள்ளையார் கேட்க, அதனைக் கேட்ட கொல்லி மழவன், அவர் எதிரே வணங்கி, `அடியேன் பெற்ற பொன் போன்ற இப் பெண்ணை ஒப்பில் லாத தீர்ப்பதற்கு அரிய `முயலகன்\' என்ற நோய் பற்ற, அதனைத் தீர்க்க இயலாது இறைவர் தம் திருக்கோயிலில் அவர் திருமுன்பு கொணர்ந்து இவ்வகையில் கிடத்தியுள்ளேன்! இதுவே நிகழ்ந்தது!\' எனக் கூறி நின்றான்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 318

அணிகிளர் தாரவன் சொன்னமாற்றம்
அருளொடுங் கேட்டுஅந் நிலையின்நின்றே
பணிவளர் செஞ்சடைப் பாச்சின்மேய
பரம்பொரு ளாயினா ரைப்பணிந்து
மணிவளர் கண்டரோ மங்கையைவாட
மயல்செய்வ தோஇவர் மாண்பதென்று
தணிவில் பிணிதவிர்க் கும்பதிகத்
தண்டமிழ் பாடினார் சண்பைநாதர்.

பொழிப்புரை :

அழகிய மாலையை அணிந்த மழவன் சொல் லியவற்றை அருளோடும் கேட்டருளி, அந்நிலையில் நின்றவாறே, பாம்பு வாழ்தற் கிடனாய சிவந்த சடையினையுடைய திருப்பாச்சிலாச் சிராமத்தில் வீற்றிருக்கும் மேலாய பெருமானைப் பணிந்து, நஞ்சு வளர்தற் கிடனாய கழுத்தினை யுடையவரோ, இம்மங்கையை வாடும்படி மயக்கம் செய்வதோ இவர்தம் மாண்பு என்று எடுத்துத் தீர்த்தற்கரிய அந்நோயினைத் தீர்க்கும் தண்தமிழ்ப் பதிக மாலையைப் பாடியருளினார்.

குறிப்புரை :

இதுபொழுது அருளிய பதிகம் `துணிவளர் திங்கள்\' (தி.1 ப.44) எனத் தொடங்கும் தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமாகும். இப்பதிகத்தின் முதற் பாடல், `மணிவளர்கண்டரோ மங்கையைவாட மயல்செய்வதோ விவர்மாண்பே\' என நிறைவு பெறுகிறது. இதனையே ஆசிரியர் எடுத்து மொழிகின்றார். இப்பதிகப் பாடல்கள் பத்தும் இறைவனின் அரும் பண்புகள் பலவற்றையும் விரித்துக் கூறி, `இவ்வரும் பண்பு உடையவரோ இந்நங்கையை இடர் செய்வதா இவர் மாண்பு\' என எடுத்து மொழிகின்றன. இப்பதிக முதற் பாடலில் `சுடர்ச்சடை சுற்றி முடித்து\' எனக் கூறுதற்கேற்ப இத்திருக் கோயிலில் உள்ள கூத்தப் பெருமானின் திருமுடி இன்றும் காட்சி அளிக்கின்றது.

பண் :

பாடல் எண் : 319

பன்னு தமிழ்மறை யாம்பதிகம்
பாடித் திருக்கடைக் காப்புச்சாத்தி
மன்னுங் கவுணியர் போற்றிநிற்க
மழவன் பயந்த மழலைமென்சொல்
கன்னி யுறுபிணி விட்டுநீங்கக்
கதுமெனப் பார்மிசை நின்றெழுந்து
பொன்னின் கொடியென ஒல்கிவந்து
பொருவலித் தாதை புடையணைந்தாள்.

பொழிப்புரை :

புகழ்ந்து பேசப்படுகின்ற தமிழ் மறையான திருப்பதிகத்தைப் பாடி, நிறைவில் திருக்கடைக்காப்பும் அருளிச் செய்து, நிலைபெற்ற கவுணியர் தலைவரான சம்பந்தர் வணங்கி நிற்ப, அதுபொழுது மழவன் பெற்ற மழலையாகிய மென்மையான சொற் களையுடைய அக்கன்னி, நோய் நீங்கப் பெற்று, மிக விரைவாக நிலத் தினின்றும் எழுந்து பொற்கொடிபோல் ஒதுங்கி நடந்து வந்து, போர் வன்மை கொண்ட தந்தையின் அருகே அடைந்தனள்.

குறிப்புரை :

இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபுடையன. இவ்வர லாற்றை நினைவு கூரும் வகையில் இப்பதியிலுள்ள கூத்தப் பெரு மானின் திருவடிக்கீழ் முயலகன் இல்லாதுள்ளது. எனினும் முயலகன் என்னும் நோய் வேறு; திருவடிக்கீழ் இருக்கும் முயலகன் வேறு.

பண் :

பாடல் எண் : 320

வன்பிணி நீங்கு மகளைக்கண்ட
மழவன் பெருகு மகிழ்ச்சிபொங்கத்
தன்தனிப் பாவையும் தானுங்கூடச்
சண்பையர் காவலர் தாளில்வீழ
நின்ற அருமறைப் பிள்ளையாரும்
நீரணி வேணி நிமலர்பாதம்
ஒன்றிய சிந்தை யுடன்பணிந்தார்
உம்பர்பிரான் திருத் தொண்டர்ஆர்த்தார்.

பொழிப்புரை :

கொடிய முயலகன் என்ற நோய் நீங்கிய மக ளைக் கண்ட மழவன், பெருகிய மகிழ்ச்சிமீதூர, தன்னுடைய ஒப்பில் லாத மகளும் தானும் சீகாழித் தலைவரான பிள்ளையாரின் திருவடி களில் விழுந்து வணங்க, அங்கு நின்ற பிள்ளையாரும் கங்கை நீரைத் தரித்த சடையையுடைய குற்றமற்ற இறைவரின் திருவடிகளை ஒரு நெறியாகக் கொண்டு பணிந்தார்; தேவ தேவரான இறைவரின் அடிய வர்கள் மகிழ்வொலி செய்தனர்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 321

நீடு திருவாச் சிராமம்மன்னும்
நேரிழை பாகத்தர் தாள்வணங்கிக்
கூடும் அருளுடன் அங்கமர்ந்து
கும்பிடும் கொள்கைமேற் கொண்டுபோந்தே
ஆடல் பயின்றார் பதிபிறவும்
அணைந்து பணிந்தடி போற்றியேகிச்
சேடர்கள் வாழுந் திருப்பைஞ்ஞீலிச்
சிவபெருமானை இறைஞ்சச் சென்றார்.

பொழிப்புரை :

என்றும் அருள் நீடுகின்ற திருப்பாச்சிலாச் சிராமத்தில் நிலையாய் எழுந்தருளியிருக்கும் உமையம்மையை ஒரு கூற்றில் கொண்ட இறைவரின் திருவடிகளை வணங்கி, பெருகிவரும் சிவபெருமானின் அருளுடனே அங்கிருந்த பிள்ளையார், மேலும் பல பதிகளை வணங்கும் திருக்குறிப்பால் சென்று, ஆடலில் மகிழ் வுடைய இறைவரின் திருப்பதிகள் பலவற்றையும் அடைந்து வணங்கித் திருவடிகளைப் போற்றி, மேலும் சென்று அறிவால் சிறந்தவர் உறைகின்ற `திருப்பைஞ்ஞீலிச்\' சிவபெருமானை வணங்குவதற்காகச் சென்றருளினார்.

குறிப்புரை :

இங்குப் பதிபிறவும் என்றது திருப்புலிவலம், திருத்துறையூர் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். பதிகங்கள் எவையும் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 322

பண்பயில் வண்டினம் பாடுஞ்சோலைப்
பைஞ்ஞீலி வாணர் கழல்பணிந்து
மண்பர வுந்தமிழ் மாலைபாடி
வைகி வணங்கி மகிழ்ந்து போந்து
திண்பெருந் தெய்வக் கயிலையில்வாழ்
சிவனார் பதிபல சென்றிறைஞ்சிச்
சண்பை வளந்தரு நாடர்வந்து
தடந்திரு ஈங்கோய் மலையைச்சார்ந்தார்.

பொழிப்புரை :

பண்களைப் பயிலும் வண்டினங்கள் பாடுதற்கு இடனான சோலைகள் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலி இறைவர் திருவடி களை வணங்கி, உலகத்தவர் போற்றும் தமிழ் மாலையான திருப் பதிகத் தைப் பாடி, அத்திருப்பதியில் தங்கி வணங்கி மகிழ்ந்து, மேற்சென்று, திண்ணிய பெரிய தெய்வத் தன்மை வாய்ந்த திருக்கயிலை மலையில் வாழ்கின்ற சிவபெருமானின் பதிகள் பலவற்றையும் சென்று வணங்கி, வளம் தருகின்ற சீகாழிப் பதிக்குத் தலைவரான பிள்ளையார், `திரு ஈங்கோய்\' மலையைச் சார்ந்தார்.

குறிப்புரை :

திருப்பைஞ்ஞீலியில் அருளியது, `ஆரிடம் பாடிலர்\' (தி.3 ப.14) எனத் தொடங்கும் காந்தாரபஞ்சமப் பண்ணிலமைந்த திருப்பதிகமாகும். பதிபல என்றது திருத்தலையூர், திருநெற்குன்றம், முசிறி முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். பதிகங்கள் எவையும் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 323

செங்கட் குறவரைத் தேவர்போற்றுந்
திகழ்திரு ஈங்கோய் மலையின்மேவுங்
கங்கைச் சடையார் கழல்பணிந்து
கலந்த இசைப்பதி கம்புனைந்து
பொங்கர்ப் பொழில்சூழ் மலையும்மற்றும்
புறத்துள்ள தானங்க ளெல்லாம்போற்றிக்
கொங்கிற் குடபுலஞ் சென்றணைந்தார்
கோதின் மெய்ஞ் ஞானக் கொழுந்தனையார்.

பொழிப்புரை :

சிவந்த கண்களை உடைய குறவரைத் தேவர்கள் வந்து வணங்குவதற்கு இடனான, `திருஈங்கோய்\' மலையில் வீற்றிருக்கும் கங்கையைச் சடையில் கொண்ட சிவபெருமானைப் பணிந்து, இசையுடன் பொருந்திய திருப்பதிகத்தைப் பாடி, பெருகிய சோலைகள் சூழ்ந்த மலையையும் மற்றும் அயலில் உள்ள இடங்கள் எல்லாவற்றையும் வணங்கிக் கொங்கு நாட்டின் மேல்பகுதியில், குற்றம் இல்லாத மெய்ஞ்ஞானக் கொழுந்தனைய ஆளுடைய பிள்ளையார் சென்று சேர்ந்தார்.

குறிப்புரை :

இவ்விடத்துப் பாடியருளியது, `வானத்துயர் தண்\' (தி.1 ப.70) எனத் தொடங்கும் தக்கேசிப் பண்ணிலமைந்த பதிகம் ஆகும். இங்கு மலை எனக் குறிப்பது திருவாட்போக்கி (ஐயர் மலை) யாகலாம். ஆனால் இதனைப் பின்னர் வந்து வணங்குவதாக ஆசிரி யர், 339ஆம் பாடலிலும் குறிக்கின்றார்.

பண் :

பாடல் எண் : 324

அண்டர்பிரான் ஆலயங்கள்
அம்மருங்குள் ளனபணிந்து
தெண்டிரைநீர்த் தடம்பொன்னித்
தென்கரையாங் கொங்கினிடை
வண்டலையும் புனற்சடையார்
மகிழ்விடங்கள் தொழுதணைந்தார்
கொண்டல்பயில் நெடும்புரிசைக்
கொடிமாடச் செங்குன்றூர்.

பொழிப்புரை :

தேவர்களின் தலைவரான சிவபெருமான் திருக்கோயில்கள் அப்பக்கங்களில் உள்ளவற்றையெல்லாம் வணங்கிச் சென்று, தெளிவான அலைகளையுடைய நீர் கொண்ட காவிரியின் தெற்குக் கரையில் உள்ள கொங்கு நாட்டில், வண்டுகள் அலைதற்கு இடனாகப் பெருகும் நீரையுடைய சடையார் மகிழ்ந்து வீற்றிருக்கும் திருப்பதிகள் பலவற்றையும் வணங்கி, மேகங்கள் தவழும் நீண்ட மதிலையுடைய திருக்கொடிமாடச் செங்குன்றினை அடைந்தார் பிள் ளையார்.

குறிப்புரை :

தென்கரையாம் கொங்கினிடை எனப் பின்னர் விதந்து கூறுவதால் அண்டர்பிரான் ஆலயங்கள் என முன்னர்க் கூறுவது காவிரியின் வடகரையிலுள்ள திருப்பதிகள் பலவுமாகும். இவ்வகை யில் ஈங்கோய் மலையிலிருந்து ஏறத்தாழ நாமக்கல், சேலம் வரையில் உள்ள திருப்பதிகள் பலவுமாகலாம். இதுபோன்றே காவிரித் தென் கரையிலும் கடம்பந்துறை முதல் கரூர் வரையிலுள்ள திருப்பதிகள் பலவுமாகலாம். கருவூரில் வணங் குவதைப் பின் 339ஆம் பாடலில் ஆசிரியர் குறித்தருளுகின்றார். காழிச்செல்வர் இவ்வகையில் வணங்கிச் சென்ற அத்திருப்பதிகளைப் பெயரளவில் அறிதற்கியலாதுள்ளது. திருவருளாக, கொடிமாடச் செங்குன்றூர் இக்காலத்துத் திருச் செங்கோடு என வழங்கப் பெறுகின்றது.

பண் :

பாடல் எண் : 325

அந்நகரில் வாழ்வாரும்
அடியவரும் மனமகிழ்ந்து
பன்னெடுந்தோ ரணமுதலாப்
பயிலணிகள் பலஅமைத்து
முன்னுறவந் தெதிர்கொண்டு
பணிந்தேத்தி மொய்கரங்கள்
சென்னியுறக் கொண்டணைந்தார்
சினவிடையார் செழுங்கோயில்.

பொழிப்புரை :

அந்த நகரத்தில் வாழ்பவர்களும் சிவனடியார் களும் மகிழ்ந்து, நீண்ட பல தோரணங்கள், வாழை மரங்கள், பாக்கு மரங்கள் முதலானவற்றை அமைத்து அணிசெய்து, எதிர்கொண்டு வணங்கிப் போற்றி, இருகைகளையும் தலைமீது பொருந்த ஏற்றி, சினமுடைய ஆனேற்றை ஊர்தியாகவுடைய இறைவர் எழுந்தருளிய கோயிலின்கண் பிள்ளையாரை அழைத்துக் கொண்டு சென்றனர்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 326

தம்பெருமான் கோயிலினுள்
எழுந்தருளித் தமிழ்விரகர்
நம்பரவர் திருமுன்பு
தாழ்ந்தெழுந்து நலஞ்சிறக்க
இம்பரும்உம் பருமேத்த
இன்னிசைவண் டமிழ்பாடிக்
கும்பிடும்ஆ தரவுடன்அக்
கோநகரில் இனிதமர்ந்தார்.

பொழிப்புரை :

நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர், தம் இறைவர் கோயிலுள் சென்று, அவரது திருமுன்பு தாழ்ந்து வணங்கி, இம்மண் ணுலகத்தவரும், விண்ணுலகத்தவரும் நலம்பெற இனிய இசையுடன் வளம் பொருந்திய தமிழ்ப் பதிகத்தைப் பாடி, மேலும் கும்பிட வேண் டும் என்ற ஆசையால் அந்நகரத்தில் இனிதாக வீற்றிருந்தார்.

குறிப்புரை :

இறைவன் திருமுன்பு அருளிய பதிகம் `வெந்த வெண் ணீறணிந்து\' (தி.1 ப.107) எனத் தொடங்கும் வியாழக் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகம் ஆகும்.

பண் :

பாடல் எண் : 327

அப்பாலைக் குடபுலத்தில்
ஆறணிந்தார்அமர்கோயில்
எப்பாலுஞ் சென்றேத்தித்
திருநணா வினைஇறைஞ்சிப்
பைப்பாந்தள் புனைந்தவரைப்
பரவிப்பண் டமர்கின்ற
வைப்பான செங்குன்றூர்
வந்தணைந்து வைகினார்.

பொழிப்புரை :

அப்பகுதியில் மேற்குத் திசையில், கங்கையைச் சூடிய இறைவர் விரும்பி எழுந்தருளியிருக்கும் கோயில்களை உடைய எல்லா இடங்களிலும் சென்று வணங்கி, `திருநணா\\\' என்ற பதியை அடைந்து, பாம்பை அணிந்த இறைவரை வணங்கி, முன்னர்த் தாம் விரும்பி எழுந்தருளியிருந்த கொடிமாடச் செங்குன்றூரில் சென்று வீற்றிருந்தார்.

குறிப்புரை :

குடபுலத்திலுள்ள கோயில்கள் எல்லாம் சென்றிறைஞ்சி என்றது, பேரூர், அவிநாசி, கொல்லிமலை, மாட்டூர், சேவூர், தோழூர், ஏழூர், திருமுருகன்பூண்டி, குரக்குத்தளி, குமரிகொங்கு முதலியன வாகலாம் என்பர் சிவக்கவிமணியார். பதிகங்கள் எவையும் கிடைத் தில. திருநணா என்பது இக்காலத்தில் பவானி என அழைக்கப் பெறுகிறது. இத்திருப்பதியில் அருளிய பதிகம் `பந்தார்விரல்\\\' (தி.2 ப.72) எனத் தொடங்கும் காந்தாரப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 328

ஆங்குடைய பிள்ளையார்
அமர்ந்துறையும் நாளின்கண்
தூங்குதுளி முகிற்குலங்கள்
சுரந்துபெய லொழிகாலை
வீங்கொலிநீர் வைப்பெல்லாம்
வெயில்பெறா விருப்புவரப்
பாங்கர்வரை யுங்குளிரும்
பனிப்பருவ மெய்தியதால்.

பொழிப்புரை :

அவ்விடத்தில் ஆளுடைய பிள்ளையார் விரும் பித் தங்கியிருந்த நாள்களில், பெய்யும் துளிகளையுடைய மேகக் கூட்டங்கள் மழை சுரத்தலின்றும் நீங்கப் பெருகிய ஒலியுடைய நீரால் சூழப்பட்ட உலகில் எல்லாரும் வெயில் பெறாததனால், அவ் விருப்பம் மேலிட அருகிலுள்ள மலைகளும் குளிர்ச்சி அடையத்தக்க முன்பனிப் பருவம் வந்து சேர்ந்தது.

குறிப்புரை :

மழைபொழியும் காலம் கூதிர்க் காலம் ஆகும். அது நீங்க முன்பனிக் காலம் வந்தது. இக்கால இயற்கையைத் தொல்காப்பியம் முதலாகவுள்ள இலக்கண நூல்கள் தொடர்ந்து குறித்து வந்துள்ளன. இவ்வாறு மழையும், அது நீங்கியபின் பனியும் தொடர்ந்தமையின், வெயில் வேண்டும் விருப்பைப் பெற்றனர் மக்கள்.

பண் :

பாடல் எண் : 329

அளிக்குலங்கள் சுளித்தகல
அரவிந்தம் முகம்புலரப்
பளிக்குமணி மரகதவல்
லியிற்கோத்த பான்மையெனத்
துளித்தலைமெல் லறுகுபனி
தொடுத்தசையச் சூழ்பனியால்
குளிர்க்குடைந்து வெண்படாம்
போர்த்தனைய குன்றுகளும்.

பொழிப்புரை :

வண்டின் கூட்டங்கள் வெறுத்து நீங்க, தாமரைகள் முகம் கருக, பளிங்கு மணியை மரகதக் கொடியில் கோத்தது போல மெல்லிய அறுகம்புல்லின் நுனியில் பனித் துளிகள் சேர்ந்து அசைய, சூழ்ந்த பனியினால் நேர்ந்த குளிருக்கு ஆற்றாது உடைந்து, குன்றுகளும் வெண்மையான போர்வை போர்த்தன போல விளங்கின.

குறிப்புரை :

இதில் வரும் உவமைகள் இரண்டும், வருணனைக்கு அழகுக்கு அழகு செய்வன போல் விளங்குகின்றன.

பண் :

பாடல் எண் : 330

மொய்பனிகூர் குளிர்வாடை
முழுதுலவும் பொழுதேயாய்க்
கொய்தளிர்மென் சோலைகளும்
குலைந்தசையக் குளிர்க்கொதுங்கி
வெய்யவனும் கரநிமிர்க்க
மாட்டான்போல் விசும்பினிடை
ஐதுவெயில் விரிப்பதுவும்
அடங்குவது மாகுமால்.

பொழிப்புரை :

மிக்க பனி செறிந்த குளிரையுடைய வாடைக் காற்று முழுமையாக வீசும் காலமானதால், பறித்தற்குரிய தளிர்கள் தழைத்த மெல்லிய சோலைகளும் குளிர்ச்சி பெற்றுத் தடுமாற, குளிரால் ஒருமருங்கு ஒதுங்கி நிற்கும் கதிரையுடைய சூரியனும் தன் கதிர்களை நிமிர்ந்து

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 331

நீடியஅப்பதிகளெலாம்
நிரைமாடத் திறைகள்தொறும்
பேடையுடன் பவளக்கால்
புறவொடுங்கப் பித்திகையின்
தோடலர்மென் குழன்மடவார்
துணைக்கலச மென்முலையுள்
ஆடவர்தம் பணைத்தோளும்
மணிமார்பும் அடங்குவன.

பொழிப்புரை :

பழமையால் நீடிய அங்குள்ள திருப்பதிகள் எங் கும் நிரல்பட அமைந்த மாடங்களின் வீட்டு இறப்புகள்தொறும், தம் பெடைகளுடன் பவளம் போன்ற கால்களை உடைய புறாக்கள் ஒடுங்கியிருக்கும்; சிறுசண்பக மலரின் இதழ்கள் விரிவதற்கு இடமான மென்மையான கூந்தலையுடைய தம் பெண்களின் இணைக் கலசம் போன்ற விரும்பத்தக்க மார்பகங்களில், ஆடவர்களின் பருத்த தோள்களும் அழகிய மார்புகளும் அடங்குவனவாம்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 332

அரிசனமும் குங்குமமும்
அரைத்தமைப்பார் அயலெல்லாம்
பரியஅகிற் குறைபிளந்து
புகைப்பார்கள் பாங்கெல்லாம்
எரியுமிழ்பேழ் வாய்த்தோணி
இரும்பீர்ப்பார் இடையெல்லாம்
விரிமலர்மென் புறவணிந்த
மீப்புலத்து வைப்பெல்லாம்.

பொழிப்புரை :

விரியும் மென்மையான மலர்களையுடைய மலை சார்ந்த நிலங்களில் எங்கும், அருகில் மஞ்சளும் குங்குமமும் சேர அரைத்து வைப்பர்; பக்க இடங்கள் எங்கும் பெரிய அகில் துண்டு களைப் பிளந்து புகை எழுப்புவர்; இடை இடங்களில் தீயை உமிழ் கின்ற பெரிய வாயை உடைய தோணி வடிவில் அமைந்த இரும்புச் சட்டியைக் குளிர் காய்வதன் பொருட்டுத் தம் அருகில் இழுத்துக் கொள்வர்.

குறிப்புரை :

மஞ்சளும், குங்குமமும் சேர அரைத்து வைத்து அன லூட்டி அகில் பொடி தூவி சூடான நறுமணப்புகை கொள்ள குளிருக்கு இதமாம். இந்நான்கு பாடல்களும் முன்பனிப் பருவத்தைச் சித்தரித்துக் காட்டும் அழகு எண்ணி மகிழ்தற்குரியதாம்.

பண் :

பாடல் எண் : 333

அந்நாளில் கொடிமாடச்
செங்குன்றூர் அமர்ந்திருந்த
மெய்ஞ்ஞானப் பிள்ளையா
ருடன்மேவும் பரிசனங்கள்
பன்னாளும் அந்நாட்டில்
பயின்றதனால் பனித்தகுளிர்
முன்னான பிணிவந்து
மூள்வதுபோல் முடுகுதலும்.

பொழிப்புரை :

அந்நாள்களில் கொடிமாடச் செங்குன்றூரில் தங்கியிருந்த பிள்ளையாருடன் உள்ள அடியவர்கள், பல நாள்கள் அங்குத் தங்கியிருந்ததால், நடுங்குதற்கு ஏதுவாய குளிரை முன்னே காணும் மலைச்சுரம் வந்து மேல் அடர்வதைப் போல் வருத்தவே,

குறிப்புரை :

குளிர் முன்னரும், சுரம் பின்னரும் வருதலின், முன்னான பிணி வந்து என்றார். மலைநாட்டியற்கையில் வரும் சுரம் மலைச்சுரம் ஆகும்.

பண் :

பாடல் எண் : 334

அந்நிலைமை ஆளுடைய
பிள்ளையார்க் கவர்களெலாம்
முன்னறிவித் திறைஞ்சுதலும்
முதல்வனார் அருள்தொழுதே
இந்நிலத்தின் இயல்பெனினும்
நமக்கெய்தப் பெறாஎன்று
சென்னிமதி யணிந்தாரைத்
திருப்பதிகம் பாடுவார்.

பொழிப்புரை :

அந்நிலைமையை அங்குச் சூழவுள்ளார்கள் எல்லாம் பிள்ளையாரின் திருமுன் போந்து, அவரிடம் கூறி விண்ணப் பித்துக் கொள்ளவும், இறைவரின் திருவருளைத் தொழுது, `இந் நாட்டின் இயல்பே இது; ஆயினும் இதன் கொடுமைகள் நமக்கு வந்து சேர மாட்டா\' என்ற கருத்துடன், சென்னியில் சந்திரனை அணிந்த இறைவரைத் திருப்பதிகம் பாடுவாராய்,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 335

அவ்வினைக் கிவ்வினை
என்றெடுத் தையர்அமுதுசெய்த
வெவ்விடம் முன்தடுத்
தெம்மிடர் நீக்கிய வெற்றியினால்
எவ்விடத்தும்அடி யார்இடர்
காப்பது கண்டமென்றே
செய்வினை தீண்டா திருநீல
கண்டம் எனச்செப்பினார்.

பொழிப்புரை :

`அவ்வினைக்கு இவ்வினை\' (தி.1 ப.116) என்று தொடங்கி, `இறைவர் உண்ட கொடிய நஞ்சைத் தடுத்து எம் துன்பங்களை யெல்லாம் வராமல் காத்தது அவரது திருநீலகண்டமே ஆகும்\' என்ற கருத்தினை வைத்துச் `செய்வினை எம்மைத் தீண்டப் பெறா\' என்று திருநீலகண்டத்தினிடம் ஆணை என அருளினார்.

குறிப்புரை :

`அவ்வினைக்கு இவ்வினையாம்\' (தி.1 ப.116) எனத் தொடங்கும் பதிகம் வியாழக்குறிஞ்சிப் பண்ணிலமைந்ததாகும். நீலகண்டம் - கருமை பொருந்திய கழுத்து. பிறவுயிர்கட்கு இறுதிவாரா வண்ணம் காக்க இறைவர் தாம் நஞ்சையுண்டார். அதனால் அவர் கழுத்துக் கருமை பொருந்தியதாயிற்று; இவ்வருஞ் செயலுக்கு இடனாய உறைப்பின் சிறப்புக் கருதி `திரு\' என்னும் அடைமொழி கூட்டித் `திருநீலகண்டம்\' என அழைக்கப் பெறுவதாயிற்று. உயிர்க்கு வரும் வினை இயல்பைப் பாடல்தொறும் குறித்து, அவை திருநீல கண்டத்தை நினைவதால் உயிர்களைத் தீண்டா எனும் கருத்து அமைவை ஈற்றில் காட்டி அருளுகின்றார். பிள்ளையார், `ஆணை நமதே\' என்று அருளிய இடங்களில் இஃது இரண்டாவதாகும். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 336

ஆய குறிப்பினில் ஆணை
நிகழ அருளிச்செய்து
தூய பதிகத் திருக்கடைக்
காப்புத் தொடுத்தணிய
மேயஅப் பொற்பதி வாழ்பவர்க்
கேயன்றி மேவும்அந்நாள்
தீய பனிப்பிணி அந்நாடு
அடங்கவும் தீர்ந்ததன்றே.

பொழிப்புரை :

அத்தகைய அருட் குறிப்புடன் திருஆணை நிகழும்படி செய்து, தூய திருப்பதிகத்திற்குத் திருக்கடைக் காப்பும் தொடுத்து அணிந்தருளவே, பொருந்திய அத்திருப்பதியில் வாழ்பவர்க்கு மட்டுமன்றி, அந்நாளில் அந்நாடு முழுமையும் இருந்த மலைச் சுரம் அப்பொழுதே நீங்கியது.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 337

அப்பதி யின்கண் அமர்ந்து
சிலநாளில் அங்ககன்று
துப்புறழ் வேணியர் தானம்
பலவும் தொழுதருளி
முப்புரி நூலுடன் தோலணி
மார்பர் முனிவரொடும்
செப்பருஞ் சீர்த்திருப் பாண்டிக்
கொடுமுடி சென்றணைந்தார்.

பொழிப்புரை :

மான்தோலுடன் கூடிய முப்புரிநூல் அணிந்த மார்பையுடைய பிள்ளையார், அந்நகரத்தில் சில நாள்கள் விரும்பி இருந்தருளியவர், பின் அப்பதியினின்றும் புறப்பட்டுச் சென்று, பவ ளம் போன்ற சிவந்த சடையையுடைய இறைவர் எழுந்தருளி இருக் கும் இடங்கள் பலவற்றையும் வணங்கி, சொல்வதற்கு அரிய சிறப்பை யுடைய திருப்பாண்டிக்கொடுமுடியை உடன்வரும் அந்தணர்களுடன் சென்று அடைந்தார்.

குறிப்புரை :

`தானம்பலவும்\' என்றது திருச்செங்கோட்டிற்கும் கொடுமுடிக்கும் இடைப்பட்ட திருப்பதிகளாகும். பதிகங்கள் எவை யும் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 338

பருவம் அறாப்பொன்னிப் பாண்டிக்
கொடுமுடி யார்தம்பாதம்
மருவி வணங்கி வளத்தமிழ்
மாலை மகிழ்ந்துசாத்தி
விரிசுடர் மாளிகை வெஞ்சமாக்
கூடல் விடையவர்தம்
பொருவில்தா னம்பலபோற்றிக்
குணதிசைப் போதுகின்றார்.

பொழிப்புரை :

காலம் தவறாது நீரைத்தரும் காவிரிக்கரையில் உள்ள திருப்பாண்டிக்கொடுமுடியில் இறைவர் திருவடிகளை வணங்கி, வளம் தரும் தமிழ்ப் பதிகத்தைப் பாடிச் சாத்தி, ஒளி வீசும் மாடங்களையுடைய `வெஞ்சமாக்கூடல்\' முதலாகச் சிவபெருமானின் ஒப்பற்ற இடங்கள் பலவற்றையும் வணங்கிப் போற்றிக் கிழக்குத் திசையில் செல்ல ஒருப்பட்டவராய்,

குறிப்புரை :

திருப்பாண்டிக் கொடுமுடியில் அருளிய பதிகம், `பெண்ணமர் மேனியி னாரும்\' (தி.2 ப.69) எனத் தொடங்கும் காந்தாரப் பண்ணில் அமைந்த பதிகமாகும். திருவெஞ்சமாக்கூடலில் அருளிய பதிகம் கிடைத்திலது. இப்பதியிலிருந்து கருவூர் வரையில், பிள்ளையார் வணங்கி வந்த பதிகளும் பாடியருளிய பதிகங்களும் இவை என அறியக் கூடவில்லை.

பண் :

பாடல் எண் : 339

செல்வக் கருவூர்த் திருவா
னிலைக்கோயில் சென்றிறைஞ்சி
நல்லிசை வண்தமிழ்ச் சொற்றொடை
பாடிஅந் நாடகன்று
மல்கிய மாணிக்க வெற்பு
முதலா வணங்கிவந்து
பல்கு திரைப்பொன்னித் தென்கரைத்
தானம் பலபணிவார்.

பொழிப்புரை :

செல்வ வளம் பொருந்தி கருவூரில் `திருவானிலை\' என்ற கோயிலில் சென்று வணங்கி, நல்ல இசையுடன் கூடிய வளமான தமிழ்ச் சொல் மாலையான திருப்பதிகத்தைப் பாடி, கொங்கு நாடான அதைவிட்டு அகன்று, பொருந்திய மாணிக்க மலை (இரத்தினகிரி) எனும் `திருவாட்போக்கியினை\' முதலில் வணங்கி, மேற்சென்று, பெருகும் அலைகளை உடைய காவிரியின் தென்கரைப் பதிகள் பலவற்றையும் வணங்குபவராய்,

குறிப்புரை :

திருக்கருவூர்த் திருவானிலையில் அருளிய பதிகம் `தொண்டெலாமலர்\' எனத் தொடங்கும் இந்தளப் பண்ணிலமைந்த பதிகமாகும். பொன்னித் தென்கரைத் தானங்கள் என்பன கருவூருக் கும் திருவாட்போக்கிக்கும் (இரத்தினகிரிக்கும்) இடைப்பட்ட திருப் பதிகளாகும். இவை எவையென அறியக் கூடவில்லை. திருவாட் போக்கியில் அருளிய பதிகமும் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 340

பன்னெடுங் குன்றும் படர்நெடுங்
கானும் பலபதியும்
அந்நிலைத் தானங்க ளாயின
எல்லாம் அமர்ந்திறைஞ்சி
மன்னு புகலியில் வைதிக
வாய்மை மறையவனார்
பொன்னியல் வேணிப் புனிதர்
பராய்த்துறை யுட்புகுந்தார்.

பொழிப்புரை :

பல பெரிய குன்றுகளிலும் பரந்த பெரிய காடுக ளிலும் பல பதிகளிலும் அங்கங்கும் இறைவர் நிலையாய் வீற்றிருக்கும் பதிகளிலுள்ள கோயில்களை எல்லாம் விருப்புடன் சென்று வணங்கி, நிலைபெற்ற சீகாழியில் தோன்றிய மறையுண்மையை நிலை நாட்டும் மறையவரான பிள்ளையார், பொன் போன்ற சடையையுடைய தூயவரான சிவபெருமான் வீற்றிருக்கும் `திருப்பராய்த்துறை\' என்ற பதியுள் புகுந்தார்.

குறிப்புரை :

`பன்னெடுங் குன்றும் படர் நெடுங்கானும் (பெருங்கா னும் என்றும் பாடம்) பலபதியும்\' எனக் குறிப்பன திருவாட்போக்கிக் கும் திருப்பராய்த்துறைக்கும் இடைப்பட்ட இடங்களாகும். அவை, இவை எனத் தெரிந்தில. இம் மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 341

நீடும் பராய்த்துறை நெற்றித்
தனிக்கண்ணர் கோயில்நண்ணிக்
கூடுங் கருத்தொடு கும்பிட்டுக்
கோதில் தமிழ்ச்சொல்மாலை
பாடுங் கவுணியர் கண்பனி
மாரி பரந்திழியச்
சூடுங் கரதலத் தஞ்சலி கோலித்
தொழுது நின்றார்.

பொழிப்புரை :

சிறப்புமிக்க திருப்பராய்த்துறை என்ற பதியில் வீற்றிருக்கும் நெற்றிக் கண்ணையுடைய இறைவரின் திருக்கோயிலை அடைந்து, ஒருமையுணர்வுடன் வணங்கி, குற்றம் இல்லாத தமிழ் மாலையைப் பாடுகின்ற கவுணியக் குலத்தலைவரான பிள்ளையார், கண்களினின்றும் நீர் மழை பெருக, கைகளைத் தலை மீது கூப்பித் தொழுது நின்றார்.

குறிப்புரை :

திருப்பராய்த்துறையில் அருளியது, `நீறு சேர்வதொர்\' (தி.1 ப.135) எனத் தொடங்கும் மேகராகக் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 342

தொழுது புறம்பணைந் தங்குநின்
றேகிச் சுரர்பணிவுற்
றெழுதிரு வாலந் துறைதிருச்
செந்துறை யேமுதலா
வழுவில் கோயில்கள் சென்று
வணங்கி மகிழ்ந்தணைவார்
செழுமலர்ச் சோலைத் திருக்கற்
குடிமலை சேரவந்தார்.

பொழிப்புரை :

வணங்கி வெளிப்போந்து, அத்திருப்பதியினின் றும் நீங்கித் தேவர்கள் வந்து வணங்கி எழுகின்ற திருவாலந்துறை திருச்செந்துறை முதலான குற்றம் அற்ற பல கோயில்களையும் வணங்கி, மகிழ்வுடன் அணைபவரான சம்பந்தர், செழுமை பொருந்திய மலர்ச் சோலைகளையுடைய `திருக்கற்குடிமலை\'யைச் சேரச் சென்றார்.

குறிப்புரை :

திருவாலந்துறை, திருச்செந்துறை ஆகிய பதிகளுக்கு உரிய பதிகங்கள் கிடைத்தில. இப்பதிகளுக்கும் திருக்கற்குடிக்கும் இடைப்பட்ட இடங்களும் இவை என அறியக் கூடவில்லை.

பண் :

பாடல் எண் : 343

கற்குடி மாமலை மேலெழுந்த
கனகக் கொழுந்தினைக் கால்வளையப்
பொற்றிரள் மேருச் சிலைவளைத்த
போர்விடை யாளியைப் போற்றிசைத்து
நற்றமிழ் மாலை புனைந்தருளி
ஞானசம் பந்தர் புலங்கள்ஐ ந்தும்
செற்றவர் மூக்கீச் சரம்பணிந்து
திருச்சிராப் பள்ளிச் சிலம்பணைந்தார்.

பொழிப்புரை :

திருக்கற்குடி மாமலையின் மீது வீற்றிருக்கும் பொற்கொழுந்து போன்றவரை, பொன்மேரு மலையை வளைத்த ஆனேற்றை ஊர்தியாகக் கொண்டவரைப் போற்றி, நல்ல தமிழ் மாலையைச் சூட்டி, ஞானசம்பந்தர், பொறிவாயில் ஐந்துஅவித்த புனி தரின் `திருமூக்கீச்சரத்தினைப்\' பணிந்து சென்று, `திருச்சிராப்பள்ளி\' மலையை அடைந்தார்.

குறிப்புரை :

திருக்கற்குடியில் அருளியது, `வடந்திகழ் மென்முலை\' (தி.1 ப.43) எனத் தொடங்கும் தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமா கும். திருமூக்கீச்சரத்தில் அருளிய பதிகம் `சாந்தம் வெண்ணீறென\' (தி.2 ப.120) எனத் தொடங்கும் செவ்வழிப் பண்ணிலமைந்த பதிகமா கும். திருமூக்கீச்சரம் இதுபொழுது உறையூர் என வழங்கப் பெறுவதாம்.

பண் :

பாடல் எண் : 344

செம்மணி வாரி அருவிதூங்கும்
சிராப்பள்ளி மேய செழுஞ்சுடரைக்
கைம்மலை ஈருரி போர்வை சாத்தும்
கண்ணுத லாரைக் கழல்பணிந்து
மெய்ம்மகிழ் வெய்தி உளங்குளிர
விளங்கிய சொற்றமிழ் மாலைவேய்ந்து
மைம்மலர் கண்டர்தம் ஆனைக்காவை
வணங்கும் விருப்பொடு வந்தணைந்தார்.

பொழிப்புரை :

செந்நிறமான மணிகளை வாரிக் கொணரும் அருவிகள் பாய்தற்கு இடனான `திருச்சிராப்பள்ளி\' மலையின் மேல் வீற்றிருக்கும், யானையின் தோலை உரித்து அதைப் போர்த்திக் கொண்ட, நெற்றிக் கண்ணையுடைய இறைவரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, உண்மையான மகிழ்ச்சியை அடைந்து, மனம் குளிர்ந்து விளங்கிய சொல் தமிழ் மாலையைப் புனைந்து, கருமை விளங்கும் கழுத்தினையுடைய இறைவரின் `திருவானைக்கா\' என்ற பதியை வணங்கும் விருப்புடனே பிள்ளையார் வந்து அடைந்தார்.

குறிப்புரை :

திருச்சிராப்பள்ளியில் அருளியது, `நன்றுடையானை\' (தி.1 ப.98) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகம்.

பண் :

பாடல் எண் : 345

விண்ணவர் போற்றிசெய் ஆனைக்காவில்
வெண்ணாவல் மேவிய மெய்ப்பொருளை
நண்ணி யிறைஞ்சிமுன் வீழ்ந்தெழுந்து
நாற்கோட்டு நாகம் பணிந்ததுவும்
அண்ணல்கோச் செங்க ணரசன்செய்த
அடிமையும் அஞ்சொல் தொடையில்வைத்துப்
பண்ணுறு செந்தமிழ் மாலைபாடிப்
பரவிநின் றேத்தினர் பான்மையினால்.

பொழிப்புரை :

தேவர்கள் வணங்கும் திருவானைக்காவில் வெண்ணாவல் மரத்தின் கீழ் எழுந்தருளியுள்ள மெய்ப் பொருளான இறைவரை அடைந்து, வணங்கி எழுந்து, நான்கு கொம்புகளை யுடைய வெள்ளை யானை பணிந்த இயல்பையும், பெருமையுடைய கோச்செங்கட் சோழ அரசர் செய்த அடிமைத் திறத்தையும், அழகிய சொற்றொடையில் வைத்துப் பண் பொருந்திய செந்தமிழ் மாலையான திருப்பதிகத்தை அடிமைத் திறம் பிழையாது நின்ற பான்மையினால் போற்றினார்.

குறிப்புரை :

இதுபொழுது அருளியது, `மழையார் மிடறா\' (தி.2 ப.23) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணிலமைந்த பதிகம். இப் பதிகத்தின் 4ஆவது பாடலில், வெள்ளை யானைக்கு அருள் செய்த மையையும், 5ஆவது பாடலில் கோச்செங்கட் சோழருக்கு அருள் செய்தமையையும் பிள்ளையார் குறித்தருளுகின்றார்.

பண் :

பாடல் எண் : 346

நாரணன் நான்முகன் காணாவுண்மை
வெண்ணாவல் உண்மை மயேந்திரமும்
சீரணி நீடு திருக்கயிலை
செல்வத் திருவாரூர் மேயபண்பும்
ஆரணத் துட்பொரு ளாயினாரை
ஆனைக்கா வின்கட் புகழ்ந்துபாடி
ஏரணியும் பொழில் சூழ்ந்தசண்பை
ஏந்தலார் எல்லையில் இன்பமுற்றார்.

பொழிப்புரை :

திருமாலும் நான்முகனும் காணாத உண்மைப் பொருளாயவரும் வெண்ணாவலிலும், உண்மைப் பொருளை அருளிய மயேந்திரத்திலும், சிறப்பும் அழகும் பொருந்திய திருக் கயிலையிலும், செல்வத் திருவாரூரிலும் எழுந்தருளியிருக்கும் பண்பு டையவருமான மறைகளின் உட்பொருளாய் உள்ள இறைவரைத் திருவானைக்கா என்ற பதியில் பாடி, அழகு பொருந்திய சோலைகள் சூழ்ந்த சீகாழித் தலைவரான பிள்ளையார் எல்லையற்ற இன்பத்தைப் பெற்றார்.

குறிப்புரை :

இந்நான்கு திருப்பதிகளையும் ஒருங்கு இணைத்துக் கூறிய பதிகம், `மண்ணது வுண்ட\' (தி.3 ப.109) எனத் தொடங்கும் பழம்பஞ்சுரப் பண்ணிலமைந்த பதிகமாகும். மயேந்திர மலை இமயத் தின் ஒரு பகுதி என்பாரும், குமரிக் கடலிலிருந்து நீரில் மூழ்கியதொரு மலை என்பாரும் ஆக இருதிறத்தார் உளர். `ஒலிதரு கயிலை உயர் கிழவோனே\' (தி.8 ப.2 வரி.146) என்றும் `மன்னு மாமலை மகேந்திர மதனுள் சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்\' (தி.8 ப.2 வரி.9) என்றும் திருவாசகத்துட் காணும் திருவாக்குகளால் இவற்றுள் முன்னைய கருத்தே வலியுடைத்தாகலாம். ஆகமம் அருளிச் செய்யப்பட்ட இடம் ஆதலின் `உண்மை மயேந்திரம்\' என்றார்.

பண் :

பாடல் எண் : 347

கைதொழு தேத்திப் புறத்தணைந்து
காமர் பதியதன் கட்சிலநாள்
வைகி வணங்கி மகிழ்ந்தணைவார்
மன்னுந் தவத்துறை வானவர்தாள்
எய்தி இறைஞ்சி எழுந்துநின்றே
இன்தமிழ் மாலைகொண் டேத்திப்போந்து
வைதிக மாமணி அம்மருங்கு
மற்றுள்ள தானம் வழுத்திச் செல்வார்.

பொழிப்புரை :

கையால் தொழுது போற்றி வெளியே வந்து, அழகிய அப்பதியில் சிலநாள்கள் தங்கி வணங்கி மகிழ்ந்து, மேல் செல்பவராய், நிலை பெற்ற `தவத்துறை\' (இலால்குடி)யில் உள்ள இறைவரின் திருவடிகளை நிலத்தில் விழுந்து வணங்கி எழுந்து நின்று, இனிய தமிழ் மாலை பாடிப் போற்றி, மேற்சென்று வைதிக நெறியின் மணிபோன்ற அப்பிள்ளையார், அம் மருங்கில் மற்றும் உள்ள திருப் பதிகளையும் வணங்கிச் செல்வாராய்,

குறிப்புரை :

திருவானைக்காவில், சில நாள் வதிந்த பொழுது அரு ளிய பதிகம் `வானைக்காவல்\' (தி.3 ப.55) எனத் தொடங்கும் கௌசி கப் பண்ணிலமைந்த பதிகமாகும். திருத்தவத்துறையில் அருளிய பதிகம் கிடைத்திலது. மற்றுள்ள தானம் வழுத்திச் செல்வார் என்றது, திருமங்கலம், திருமாந்துறை முதலியினவாகலாம். பதிகங்கள் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 348

ஏறுயர்த் தார்திருப் பாற்றுறையும்
எறும்பியூர் மாமலை யேமுதலா
வேறுபதி கள்பல வும்போற்றி
விரவுந் திருத்தொண்டர் வந்துசூழ
ஈறில்புகழ்ச் சண்பை ஆளியார்தாம்
எண்திசை யோரும் தொழுதிறைஞ்ச
நீறணிசெம் பவளப் பொருப்பில்
நெடுங்கள மாநகர் சென்றுசேர்ந்தார்.

பொழிப்புரை :

விடைக்கொடியை உடைய இறைவரின் திருப் பாற்றுறையும், திருவெறும்பியூர் மாமலையும் முதலான பிற பதிகளை வணங்கி, மனமியைந்து பரவி வரும் தொண்டர்கள் பலரும் சூழவரும் எல்லையற்ற புகழையுடைய சீகாழித் தலைவர், எண்திசையில் உள்ள வர்களும் தொழுது வணங்கத் திருநீற்றை அணிந்த செம்பவள மலை போன்ற சிவபெருமானின் திருநெடுங்கள மாநகரைச் சென்று அடைந் தார்.

குறிப்புரை :

திருப்பாற்றுறையில் அருளியது, `காரார் கொன்றை\' (தி.1 ப.56) எனத் தொடங்கும் பழந்தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமாகும். திருஎறும்பியூரில் அருளிய பதிகம் கிடைத்திலது. வேறு பதிகள் பலவும் போற்றி என்பதில் குறிக்கத்தக்க பதிகள் இவை என அறியக் கூடவில்லை.

பண் :

பாடல் எண் : 349

நெடுங்களத் தாதியை அன்பால்நின்பால்
நெஞ்சம் செலாவகை நேர்விலக்கும்
இடும்பைகள் தீர்த்தருள் செய்வாய்என்னும்
இன்னிசை மாலைகொண் டேத்தியேகி
அடும்பணிச் செஞ்சடை யார்பதிகள்
அணைந்து பணிந்து நியமம்போற்றிக்
கடுங்கை வரையுரித் தார்மகிழ்ந்த
காட்டுப்பள் ளிப்பதி கைதொழுவார்.

பொழிப்புரை :

திருநெடுங்களத்தில் வீற்றிருக்கின்ற மூலமூர்த்தி யான இறைவரை, `அன்பால் உம்மிடம் உள்ளம் செல்லாதவாறு தகைக்கும் இடும்பைகளையெல்லாம் தீர்த்து அருள் செய்வீராக!\' என வேண்டிக் கொள்ளும் குறிப்பைக் கொண்ட இன்னிசைத் திருப்பதிக மான மாலையினால் போற்றி, மேற்சென்று, கொல்லும் இயல்புடைய பாம்பைச் சூடிய சிவந்த சடையினரான சிவபெருமானாருடைய திருப்பதிகளை வணங்கி, திருநியமத்தைப் போற்றி, வலிய துதிக் கையை உடைய யானையை உரித்த இறைவர் மகிழ்வுடன் வீற்றிருக் கும் `திருக்காட்டுப்பள்ளி\' என்னும் திருப்பதியைக் கைதொழுவாராய்,

குறிப்புரை :

திருநெடுங்களத்தில் அருளியது, `மறையுடையாய்\' (தி.1 ப.52) எனத் தொடங்கும் பழந்தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமாகும். இப்பதிகப் பாடல்தொறும் `இடர்களையாய்\' என வருவது பற்றி, நம்மனோர்க்கெல்லாம் அவ்வப்பொழுதும், அடுக்கி வரும் உலகியல் துன்பங்களை யெல்லாம் நீக்க வேண்டும் எனும் குறிப்புடையதாக, இப்பதிகத்தைப் பன்முறையும் ஓதி வருகின்றோம். இதுவும் வாய்மை எனினும், ஆசிரியர் சேக்கிழார் தரும் விளக்கம் வேறாகும் என்பது அறியத்தக்கது. பெருமானிடத்துக் கொள்ளும் அன்புள்ளத்திற்கும் ஆற்றிவரும் வழிபாட்டிற்கும் இடையூறாக வரும் இடர்ப்பாடுகளை நீக்க வேண்டும் எனும் குறிப்பில் அருளுவதாகவே குறிக்கின்றார் சேக்கிழார். பதிகத்து வரும் பாடல்களை ஊன்றிப் படிப் பின் அவர்தம் திருவுள்ளக் கருத்தே உண்மை என்பது தெளியலாம். திருநியமம் என்னும் தலத்தில் அருளிய பதிகம் கிடைத்திலது. `செஞ்சடையார் பதிகள் அணைந்து போற்றி\' என்பது, திருநெடுங்களத் திற்கும் திருநியமத்திற்கும் இடைப்பட்ட பதிகளைக் குறிக்கும். கடையக் குடி முதலியனவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். இவ்வாறு வரும் இடங்களைக் குறித்துக் கொண்டு, அவ்வவ் விடங்களில் உள்ள பதி களை நேரில் சென்று தெளிவு பெறல் நலம் பயக்கும்.

பண் :

பாடல் எண் : 350

சென்று திகழ்திருக் காட்டுப்பள்ளிச்
செஞ்சடை நம்பர்தங் கோயில்எய்தி
முன்றில் வலங்கொண் டிறைஞ்சிவீழ்ந்து
மொய்கழற் சேவடி கைதொழுவார்
கன்றணை ஆவின் கருத்துவாய்ப்பக்
கண்ணுத லாரைமுன் போற்றிசெய்து
மன்றுள்நின் றாடல் மனத்துள்வைப்பார்
வாருமன் னும்முலை பாடிவாழ்ந்தார்.

பொழிப்புரை :

சென்று விளங்கும் மேலைத் திருக்காட்டுப் பள்ளியில் வீற்றிருக்கும் செஞ்சடையை உடைய சிவபெருமானின் கோயிலை அடைந்து, திருமுன்றிலை வலமாக வந்து வணங்கி, வீழ்ந்து எழுந்து வலிய கழலை அணிந்த திருவடிகளை வணங்குவாராய், கன்றைச் சேர்ந்த பசுவின் கருத்தையுடைய அன்பு உள்ளத்தில் பொருந்த நெற்றிக் கண்ணையுடைய இறைவரைத் திருமுன்பு நின்று வணங்கி, மன்றினுள் இருந்து இயற்றும் அருட்கூத்தைத் தம் உள்ளத் தில் கொண்டு, `வாரு மன்னும்\' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி வாழ்வு பெற்றார்.

குறிப்புரை :

`வாரு மன்னும்\' (தி.3 ப.29) எனத் தொடங்கும் பதிகம் கொல்லிப் பண்ணிலமைந்ததாகும்.

பண் :

பாடல் எண் : 351

அங்கப் பதிநின் றெழுந்தருளி
அணிதிரு வாலம் பொழில்வணங்கிப்
பொங்கு புனற்பொன்னிப் பூந்துருத்திப்
பொய்யிலி யாரைப் பணிந்துபோற்றி
எங்கும் நிகழ்திருத் தொண்டர்குழாம்
எதிர்கொள்ள எப்பதி யும்தொழுது
செங்கயல் பாய்வயல் ஓடைசூழ்ந்த
திருக்கண்டி யூர்தொழச் சென்றணைந்தார்.

பொழிப்புரை :

அவ்விடத்தே அப்பதியினின்றும் புறப்பட்டுச் சென்று, அழகிய திருஆலம்பொழிலினை வணங்கிப் பொங்கும் நீர் வளம் வாய்ந்த காவிரி நடுவிலுள்ள `திருப்பூந்துருத்தி\' என்ற பதியுள் வீற்றிருக்கும் `பொய்யிலியப்பரைப் ` பணிந்து போற்றி, எங்கும் நிலவி வரும் திருத்தொண்டர் கூட்டம் எதிர் வந்து அழைத்துச் செல்ல, அம்மருங்குள்ள பலபதிகளையும் வணங்கிச் சென்று, செங்கயல்கள் பாய்வதற்கு இடமான வயல்களும் ஓடைகளும் சூழ்ந்த `திருக் கண்டியூரை\' வணங்குவதற்குச் சென்று சேர்ந்தார்.

குறிப்புரை :

திருவாலம்பொழிலிற்கும் திருப்பூந்துருத்திக்கும் பதிகங்கள் கிடைத்தில. எப்பதியும் என்பன திங்களுர் திருநெய்த்தானம் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார்.

பண் :

பாடல் எண் : 352

கண்டியூர் வீரட்டர் கோயிவெய்திக்
கலந்தடி யாருடன் காதல்பொங்கக்
கொண்ட விருப்புடன் தாழ்ந்திறைஞ்சிக்
குலவு மகிழ்ச்சியின் கொள்கையினால்
தொண்டர் குழாத்தினை நோக்கிநின்று
தொடுத்த இசைத்தமிழ் மாலைதன்னில்
அண்டர் பிரான்தன் அருளின்வண்ணம்
அடியார் பெருமையிற் கேட்டருளி.

பொழிப்புரை :

திருக்கண்டியூர் வீரட்டனாரின் கோயிலை அடைந்து, சூழவந்த அடியார்களுடன் அன்பு மேலிட, விருப்பத்துடன் கீழே விழுந்து வணங்கி, பொருந்திய மகிழ்ச்சியினால் திருத்தொண்டர் குழாத்தினைப் பார்த்து நின்று, தாம் பாடிய இசைத் தமிழ் மாலையான திருப்பதிகத்தில், சிவபெருமானின் திருவருள் வண்ணங்கள் பலவற் றையும் அடியவர் வாயிலாக வெளிப்படுத்தும் வகையால் வினவியருளி,

குறிப்புரை :

திருக்கண்டியூரில் அருளியது, `வினவினேன் அறியா மையில்\' (தி.3 ப.38) எனத் தொடங்கும் கொல்லிப் பண்ணிலமைந்த பதிகமாகும். இப்பதிகம் முழுமையும் பெருமானின் திருமேனியிற் காணும் அணிகலன்கள் பற்றியும், அவன்மேற் கொண்ட அருட்செயல் களில் சிலவற்றைப் பற்றியும் அடியவர்களிடம் அவற்றிற்கான காரணங்களை வினவுவதாக அமைந்துள்ளது. இவ்வாறான பதி கத்தை வினாவுரைப் பதிகம் என்பர்.

பண் :

பாடல் எண் : 353

வினவி எடுத்த திருப்பதிகம்
மேவு திருக்கடைக் காப்புத்தன்னில்
அனைய நினைவரி யோன்செயலை
அடியாரைக் கேட்டு மகிழ்ந்ததன்மை
புனைவுறு பாடலில் போற்றிசெய்து
போந்து புகலிக் கவுணியனார்
துனைபுனற் பொன்னித் திரைவலங்கொள்
சோற்றுத் துறைதொழச் சென்றடைவார்.

பொழிப்புரை :

அங்ஙனம் `வினவினேன்\' எனத் தொடங்கிய திருப்பதிகத்தில் பொருந்திய திருக்கடைக்காப்பினில் நினைத்தற்கரிய சிவபெருமானின் அருட்செயலின் திறங்களை, அடியாரைக் கேட்டு மகிழ்ந்த இயல்பைக் கூறிய பாடலால் துதித்து, மேற்சென்று, சீகாழியில் தோன்றிய கவுணியர் குலத் தேன்றலார் விரைவாய்ச் செல்லும் நீரையுடைய காவிரியின் அலைகள் வலம் கொண்டு செல்கின்ற திருச்சோற்றுத்துறையினைச் சென்று அணைவாராகி,

குறிப்புரை :

திருக்கண்டியூர் பதிகத் திருக்கடைக்காப்பில் `கருத் தனைப்பொழில் சூழுங்கண்டியூர் வீரட்டத்துறை கள்வனை அருத் தனைத்திறம் அடியார்பால்மிகக் கேட்டுகந்த வினாவுரை\' என வரு வது கொண்டு ஆசிரியர் இவ்வாறு அருளிச் செய்வாராயினர்.

பண் :

பாடல் எண் : 354

அப்பர்சோற் றுத்துறை சென்றடை வோம்என்
றொப்பில் வண்டமிழ் மாலை ஒருமையால்
செப்பி யேசென்று சேர்ந்தனர் சேர்விலார்
முப்புரம் செற்ற முன்னவர் கோயில்முன்.

பொழிப்புரை :

`அப்பரின் திருச்சோற்றுத் துறையைச் சென்று அடைவோம்\' என்று முடியும் கருத்துடையதாய், ஒப்பிகந்த வளமை மிகுந்த தமிழ் மாலையை உள்ளத்தில் கொண்ட ஒருமைப் பாட்டுடன் பாடிச் சென்று, பகைவரின் முப்புரங்களையும் எரித்த முதல்வரின் கோயில் முன்பு பிள்ளையார் சென்றனர்.

குறிப்புரை :

இப்பதியை அணுகவரும் நிலையில் அருளிய பதிகம் `செப்ப நெஞ்(தி.1 ப.28) எனத் தொடங்கும் தக்கராகப் பண்ணில் அமைந்த பதிகமாகும். பாடல்தொறும் திருச்சோற்றுத்துறை சென்றடை வோம் எனும் குறிப்புடையதாய் அமைந்துள்ளது. முதற்பாடலில் `அப்பர் சோற்றுத்துறை சென்றடைவோம்\' என வருவதை ஆசிரியர் எடுத்து மொழிந்துள்ளார்.

பண் :

பாடல் எண் : 355

தொல்லை நீள்திருச் சோற்றுத் துறையுறை
செல்வர் கோயில் வலங்கொண்டு தேவர்கள்
அல்லல் தீர்க்கநஞ் சுண்ட பிரானடி
எல்லை யில்அன்பு கூர இறைஞ்சினார்.

பொழிப்புரை :

நீண்ட பழமையுடைய திருச்சோற்றுத்துறையுள் எழுந்தருளிய அருட் செல்வரான சிவபெருமானின் கோயிலை வலம் வந்து, வணங்கித் தேவர்களின் துன்பங்களைத் தீர்க்கும் பொருட்டு நஞ்சினை உண்ட பெருமானின் திருவடிகளை அளவற்ற அன்பு பெருக வணங்கினார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 356

இறைஞ்சி ஏத்தி எழுந்துநின் றின்னிசை
நிறைந்த செந்தமிழ் பாடி நிலாவிஅங்
குறைந்து வந்தடி யாருட னெய்தினார்
சிறந்த சீர்த்திரு வேதி குடியினில்.

பொழிப்புரை :

வணங்கிப் போற்றி எழுந்து நின்று இனிய பண் ணிசை நிறைந்த செந்தமிழ்ப் பதிகம் பாடி, அப்பதியில் தங்கியவர், அடியவருடன் கூடிச் சிறந்த சீர்மை மிகுந்த திருவேதிகுடியில் வந்து சேர்ந்தார்.

குறிப்புரை :

திருச்சோற்றுத்துறை இறைவர் திருமுன்பு அருளிய பதிகம் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 357

வேத வேதியர் வேதி குடியினில்
நாதர் கோயில் அணைந்து நலந்திகழ்
பாத பங்கயம் போற்றிப் பணிந்தெழுந்
தோதி னார்தமிழ் வேதத்தின் ஓங்கிசை.

பொழிப்புரை :

மறைகளை ஓதும் மறையவர் வாழும் திருவேதி குடியில் முதல்வரின் கோயிலை அடைந்து, நன்மை பெருகும் திருவடி மலர்களை வணங்கி எழுந்து நின்று, தமிழால் மறைகளினும் சிறந்த இசையையுடைய திருப்பதிகத்தை அருளினார்.

குறிப்புரை :

இவ்விடத்து அருளிய பதிகம், `நீறுவரி\' (தி.3 ப.78) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 358

எழுது மாமறை யாம்பதி கத்திசை
முழுதும் பாடி முதல்வரைப் போற்றிமுன்
தொழுது போந்துவந் தெய்தினார் சோலைசூழ்
பழுதில் சீர்த்திரு வெண்ணிப் பதியினில்.

பொழிப்புரை :

எழுகின்ற பெருமறையான இசையுடைய திருப்பதிகத்தை நிறைவாகப் பாடி, இறைவரை வணங்கி, மேற்சென்று அழகிய சோலைகளால் சூழப்பட்ட குற்றம் அற்ற சிறப்புடைய `திரு வெண்ணி\' என்னும் திருப்பதியை அடைந்தார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 359

வெண்ணி மேய விடையவர் கோயிலை
நண்ணி நாடிய காதலில் நாள்மதிக்
கண்ணி யார்தங் கழலிணை போற்றியே
பண்ணில் நீடும் பதிகமும் பாடினார்.

பொழிப்புரை :

திருவெண்ணிப் பதியில் எழுந்தருளியிருக்கும் ஆனேற்றினையுடைய இறைவரின் திருக்கோயிலை அடைந்து, உள் ளம் பொருந்தி அன்பால் இளம்பிறைக் கண்ணியை அணிந்த இறை வரின் திருவடியைப் போற்றிப் பண்ணால் மிக்க திருப்பதிகத்தையும் பாடினார்.

குறிப்புரை :

திருவெண்ணியூரில் அருளியது `சடையானை\' (தி.2 ப.14) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணிலமைந்த பதிகமாகும். பதிகமும் - பதிகமுன் என்றும் பாடம்.

பண் :

பாடல் எண் : 360

பாடி நின்று பரவிப் பணிந்துபோய்
ஆடும் அங்கணர் கோயில்அங் குள்ளன
மாடு சென்று வணங்கி மகிழ்ந்தனர்
நீடு சண்பை நிறைபுகழ் வேதியர்.

பொழிப்புரை :

பதிகம் பாடி நின்று போற்றி வணங்கி, மேற் சென்று அருட்கூத்தியற்றும் இறைவர் வீற்றிருக்கும் அம்மருங்கில் உள்ளனவாகிய கோயில்களைச் சென்று வணங்கிச் சீகாழியில் தோன் றிய நிறைந்த புகழையுடைய பிள்ளையார் மகிழ்ச்சி அடைந்தார்.

குறிப்புரை :

கோயில் அங்குள்ளன என்றது, திருவெண்ணியூரில் இருந்து திருச்சக்கரப்பள்ளி வரையிலான இடங்களில் உள்ள கோயில் களாம். பதிகங்கள் எவையும் கிடைத்தில. வெண்ணிக் குயத்தியார் எனும் சங்க காலப் பெண்பாற் புலவர் இவ்வூரினர் என்பதும் குறிப் பிடத்தக்கதாம்.

பண் :

பாடல் எண் : 361

மொய்தருஞ் சோலைசூழ் முளரிமுள் ளடவிபோய்
மெய்தரும் பரிவிலான் வேள்வியைப் பாழ்படச்
செய்தசங் கரர்திருச் சக்கரப் பள்ளிமுன்
பெய்தவந் தருளினார் இயலிசைத் தலைவனார்.

பொழிப்புரை :

நெருங்கிய சோலைகள் சூழ்ந்த தாமரைத் தண்டுகளின் முட்காடு எனப்படுகின்ற பொய்கைகள் மிக்க மருத நிலத் தில் சென்று, மெய்ப்பொருளை உணர்ந்து செய்யும் அறிவும் அன்பும் இல்லாத தக்கனின் வேள்வியை அழியச் செய்த சிவபெருமான் வீற் றிருக்கும் `திருச்சக்கரப்பள்ளி\' என்ற பதியில், இயல் இசை வல்ல பிள்ளையார் வந்து சேர்ந்தார்.

குறிப்புரை :

`வெள்ளத் தனைய மலர்நீட்டம்\' (குறள், 595) என்ப வாகலின், அத்தண்டுகள் காடாக மண்டிக் கிடக்கும் காடுகள் குளங்கள் எனப்பட்டன.

பண் :

பாடல் எண் : 362

சக்கரப் பள்ளியார் தந்தனிக் கோயிலுள்
புக்கருத் தியினுடன் புனைமலர்த் தாள்பணிந்
தக்கரைப் பரமர்பால் அன்புறும் பரிவுகூர்
மிக்கசொல் தமிழினால் வேதமும் பாடினார்.

பொழிப்புரை :

திருச்சக்கரப் பள்ளியில் வீற்றிருக்கும் இறைவ ரின் ஒப்பற்ற கோயிலுள் புகுந்து, விருப்பத்துடன் அழகிய மலரனைய திருவடிகளை வணங்கி, எலும்பு மாலையைச் சூடிய அரையை உடைய இறைவரிடத்து, அன்புமிகும் ஆற்றல் மிக்க சொற்களாலான தமிழால், நான்மறைப் பொருள்களையும் உள்ளீடாகக் கொண்ட திருப்பதிகத்தையும் பாடியருளினார்.

குறிப்புரை :

திருசக்கரப்பள்ளியில் அருளிய பதிகம் `படையினார்\' (தி.3 ப.37) என்று தொடங்கும் கொல்லிப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 363

தலைவர்தம் சக்கரப் பள்ளிதன் னிடையகன்
றலைபுனற் பணைகளின் அருகுபோய் அருமறைப்
புலனுறும் சிந்தையார் புள்ளமங் கைப்பதி
குலவும் ஆலந்துறைக் கோயிலைக் குறுகினார்.

பொழிப்புரை :

அரிய மறையின் உட்பொருளான ஞானத்தைத் தம் அறிவில் நிரம்பப் பெற்ற பிள்ளையார், சிவபெருமானின் திருச் சக்கரப் பள்ளியினின்றும் நீங்கி, அலையும் நீர் பரந்த வயல்களின் அருகாகச் சென்று, `திருப்புள்ளமங்கை\' என்ற திருப்பதியில் விளங் கும் `திருவாலந்துறை\' எனப் பெயர் பெறும் கோயிலை அடைந்தார்.

குறிப்புரை :

திருப்புள்ளமங்கை ஊர்ப்பெயர். ஆலந்துறை கோயில் பெயர்.

பண் :

பாடல் எண் : 364

மன்னும்அக் கோயில்சேர் மான்மறிக் கையர்தம்
பொன்னடித் தலம்உறப் புரிவொடுந் தொழுதெழுந்
தின்னிசைத் தமிழ்புனைந் திறைவர்சே லூருடன்
பன்னுபா லைத்துறைப் பதிபணிந் தேகினார்.

பொழிப்புரை :

நிலைபெற்ற அக்கோயிலில் எழுந்தருளி இருக் கும் மான் கன்றை ஏந்திய கையையுடைய இறைவரின், பொன்னார் திரு வடிகளை அன்புடன் தொழுது, எழுந்து, இனிய இசையையுடைய தமிழ்ப் பதிகத்தைப் பாடி, இறைவர் வீற்றிருக்கின்ற திருச்சேலூரை வணங்கிப் புகழ்ந்து, சொல்லப் பெறும் `திருப்பாலைத் துறை\' என்ற பதியையும் வணங்கினார்.

குறிப்புரை :

திருப்புள்ளமங்கையில் அருளியது, `பாலுந்துறு திரளா யின\' (தி.1 ப.16) எனத் தொடங்கும் நட்டபாடைப் பண்ணிலமைந்த பதிகமாகும். திருச்சேலூரிலும், திருப்பாலைத்துறையிலும் அருளிய பதிகங்கள் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 365

காவின்மேல் முகிலெழுங் கமழ்நறும் புறவுபோய்
வாவிநீ டலவன்வாழ் பெடையுடன் மலர்நறும்
பூவின்மேல் விழைவுறும் புகலியார் தலைவனார்
சேவின்மேல் அண்ணலார் திருநலூர் நண்ணினார்.

பொழிப்புரை :

பொய்கைகளில் பொருந்திய ஆண் நண்டுகள், பெண் நண்டுகளுடன், மலரும் நல்ல மணமுடைய தாமரை மலரின் மேல் விரும்பி இருத்தற்கிடனாய சீகாழித் தலைவரான பிள்ளையார், சோலைகளின் மீது மேகங்கள் தவழ்கின்ற மணம் கமழும் நல்ல முல்லை நிலத்தின் வழியிலே சென்று, ஆனேற்று ஊர்தியின் மேல் எழுந்தருளும் இறைவரின் திருநல்லூரை வந்து அடைந்தார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 366

மன்றலங் கழனிசூழ் திருநலூர் மறைவலோர்
துன்றுமங் கலவினைத் துழனியால் எதிர்கொளப்
பொன்தயங் கொளிமணிச் சிவிகையிற் பொலிவுறச்
சென்றணைந் தருளினார் சிரபுரச் செம்மலார்.

பொழிப்புரை :

பிள்ளையார், மணம்கமழும் அழகிய வயல்கள் சூழ்ந்த திருநல்லூரில் வாழும் மறையவர்கள், நெருங்கிய மங்கலப் பொருள்களின் நிறைவுடனே வரவேற்கப் பொன் விளங்கும் ஒளி பொருந்திய முத்துச் சிவிகையின் மீது அழகு விளங்கச் சென்று அடைந்தார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 367

நித்திலச் சிவிகைமேல் நின்றிழிந் தருளியே
மொய்த்தஅந் தணர்குழாம் முன்செலப் பின்செலும்
பத்தரும் பரிசனங் களுமுடன் பரவவே
அத்தர்தங் கோபுரந் தொழுதணைந் தருளினார்.

பொழிப்புரை :

முத்துச் சிவிகையினின்றும் இழிந்த பிள்ளையார், சூழ இருந்த அந்தணர்கள் முன் செல்லப் பின் செல்கின்ற அடியவர் களும் அருகிருந்து பணிசெய்து வரும் தொண்டர்களும் தம்முடன் ஒருங்கிருந்து போற்றிவர, இறைவரின் கோபுரத்தை வணங்கிக் கோயிலுக்குள் சென்றார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 368

வெள்ளிமால் வரையைநேர் விரிசுடர்க் கோயிலைப்
பிள்ளையார் வலம்வரும் பொழுதினில் பெருகுசீர்
வெள்ளஆ னந்தமெய் பொழியமே லேறிநீர்
துள்ளுவார் சடையரைத் தொழுதுமுன் பரவுவார்.

பொழிப்புரை :

வெள்ளி மலையைப் போல விளங்கும் ஒளியை யுடைய அக்கோயிலைப் பிள்ளையார் வலம் வரும் பொழுது, பெரு கிய சிறப்பு மிக்க ஆனந்தக் கண்ணீர் வழிந்து திருமேனி எங்கும் பொழிய, அம்மாடக் கோயிலின் மேல் ஏறிச் சென்று, கங்கை நீர் பெரு கப் பொருந்திய சடையையுடைய இறைவரை வணங்கித் திருமுன்பு நின்று வணங்குவாராய்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 369

பரவுசொற் பதிகமுன் பாடினார் பரிவுதான்
வரவயர்த் துருகுநேர் மனனுடன் புறம்அணைந்
தரவுடைச் சடையர்பே ரருள்பெறும் பெருமையால்
விரவும்அப் பதியமர்ந் தருளியே மேவினார்.

பொழிப்புரை :

போற்றத்தகும் சொற்களாலான பதிகத்தினைப் பாடியவராய், மிக்க அன்புடன் மேலிட்டதால் தம்மையும் மறந்து உருகும் நேர்மைபெற்ற உள்ளத்துடன் கோயில் புறத்தை அடைந்து பாம்புகளைப் பூண்ட சடையையுடைய இறைவரின் திருவருளைப் பெறும் பெருமையால், இறைவர் வீற்றிருக்கும் அத்திருப்பதியில் விரும்பி வீற்றிருந்தார்.

குறிப்புரை :

திருநல்லூரில் பாடியது, `வண்டிரிய\' (தி.3 ப.83) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணிலமைந்த பதிகமாகும். இவ்விரு பாடல் களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 370

அன்ன தன்மையில் அப்பதி
யினில் அமர்ந் தருளி
மின்னு செஞ்சடை விமலர்தாள்
விருப்பொடு வணங்கிப்
பன்னும் இன்னிசைப் பதிகமும்
பலமுறை பாடி
நன்னெ டுங்குல நான்மறை
யவர்தொழ நயந்தார்.

பொழிப்புரை :

அவ்வாறு அப்பதியில் தங்கி, மின் போன்ற சிவந்த சடையையுடைய இறைவரின் திருவடிகளை விருப்புடன் வணங்கிப் புகழ்ந்து சொல்லப்படுகின்ற இனிய இசையுடன் கூடிய பல்வேறு யாப்பமைவுகளும்இசைக் கட்டளைகளும் பொருந்தப் பாடி, நன்மை நீடிய மறையவர்கள் வணங்கி நிற்ப, அங்குத் தங்கியிருந்தார்.

குறிப்புரை :

இவ்வாறாய இன்னிசைப் பதிகம் பல பாடி என்றாரே னும், இதுபொழுது இசைத்தருளியனவாகக் கிடைத்துள்ள பதிகங்கள் இரண்டேயாம். 1. `கொட்டும் பறை\': (தி.1 ப.86) - குறிஞ்சிப் பண். 2.`பெண்ணமரும்\': (தி.2 ப.57) - காந்தாரப் பண்.

பண் :

பாடல் எண் : 371

நீடும் அப்பதி நீங்குவார்
நிகழ்திரு நல்லூர்
ஆடுவார் திரு அருள்பெற
அகன்றுபோந் தங்கண்
மாடு முள்ளன வணங்கியே
பரவிவந் தணைந்தார்
தேடும் மால்அயற் கரியவர்
திருக்கரு காவூர்.

பொழிப்புரை :

நிலை பெற்ற அப்பதியினின்றும் நீங்குபவரான பிள்ளையார், விளங்கும் அத்திருநல்லூரில் எழுந்தருளிக் கூத்தியற்றும் இறைவரின் திருவருளைப் பெற்று, அவ்விடத்தினின்றும் புறப்பட்டுச் சென்று, அருகிலுள்ள திருப்பதிகளை வணங்கிய வண்ணம், தம்மைத் தேடிய திருமாலுக்கும் நான்முகனுக்கும் அரியவரான இறைவரின் திருக்கருகாவூரில் வந்து சேர்ந்தார்.

குறிப்புரை :

மாடும் உள்ளன பதிகள் எவை எனத் தெரிந்தில.

பண் :

பாடல் எண் : 372

வந்து பந்தர்மா தவிமணங்
கமழ்கரு காவூர்ச்
சந்த மாமறை தந்தவர்
கழலிணை தாழ்ந்தே
அந்த மில்லவர் வண்ணம்ஆர்
அழல்வண்ணம் என்று
சிந்தை இன்புறப் பாடினார்
செழுந்தமிழ்ப் பதிகம்.

பொழிப்புரை :

வந்து, பந்தலில் படர்ந்து ஏறிய முல்லைகள் மணம் கமழ்கின்ற `திருக்கருகாவூரில்\' எழுந்தருளியிருக்கும் இசையமைதி உடைய பெருமறைகளைத் தந்த இறைவரின் திருவடிகளை வணங்கி, என்றும் அழியாமல் நிலைபெற்றிருக்கும் சிவபெருமானின் நிறம் தீயின் நிறமேயாம் என்ற கருத்தும் முடிபும் உடையதாய செந்தமிழ்ப் பதிகத்தை உள்ளம் மகிழப் பாடினார்.

குறிப்புரை :

இப்பதியில் பாடியருளிய பதிகம் `முத்தி லங்கும்\' (தி.3 ப.46) எனத் தொடங்கும் கௌசிகப் பண்ணிலமைந்ததாகும். பதிகப் பாடல்தொறும் `இறைவனின் வண்ணம் அழல் வண்ணமே\' என்னும் கருத்து முடிபுடையதாக அமைந்திருத்தலின், ஆசிரியர் சேக்கிழார் இவ்வாறு அருளிச் செய்வாராயினார்.

பண் :

பாடல் எண் : 373

பதிக இன்னிசை பாடிப்போய்ப்
பிறபதி பலவும்
நதிய ணிந்தவர் கோயில்கள்
நண்ணியே வணங்கி
அணைந்தனர் மன்றுள்
அதிர்சி லம்படி யார்மகிழ்
அவளிவ ணல்லூர்.

பொழிப்புரை :

இவ்வாறாய இன்னிசைப் பதிகங்களைப் பாடிச் செல்பவர் பிற பதிகளிலுள்ள கங்கையாற்றை அணிந்த சிவபெரு மானின் கோயில்களை அடைந்து வணங்கிப் பொன்னம்பலத்தில் கூத்தாடுகின்ற ஒலிக்கும் சிலம்பினையுடைய இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கின்ற `திருஅவள்இவள்நல்லூரை\' இனிய முத்தமிழும் பொருந்திய திருவாக்கையுடைய பிள்ளையார் அணைந்தார்.

குறிப்புரை :

`பிற பதிபலவும்\' எனக் குறிக்கப்பட்டன தென்குடித் திட்டை முதலாயினவாகலாம். தென்குடித்திட்டையில் அருளிய பதிகம் `முன்னை நான்மறை\' (தி.3 ப.35) எனத் தொடங்கும் கொல்லிப் பண்ணில் அமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 374

மன்னும் அப்பதி வானவர்
போற்றவும் மகிழ்ந்த
தன்மை யார்பயில் கோயிலுள்
தம்பரி சுடையார்
என்னும் நாமமும் நிகழ்ந்திட
ஏத்திமுன் இறைஞ்சிப்
பன்னு சீர்ப்பதி பலவும்அப்
பாற்சென்று பணிவார்.

பொழிப்புரை :

நிலைபெற்ற அத்திருப்பதியில் தேவர்களும் போற்ற மகிழ்ந்து எழுந்தருளும் இயல்பு கொண்ட இறைவரின் கோயிலுக்குள் புகுந்து, `தம்பரிசு உடையார்\' என்ற பெயரும் வெளிப் பட வைத்துப் போற்றித் திருமுன்பு வணங்கிச் சொல்லுதற்குரிய சிறப்புடைய பதிகள் பலவற்றிலும் சென்று வணங்குபவராய்,

குறிப்புரை :

திருஅவள்இவள்நல்லூரில் அருளிய பதிகம் `கொம்பிரிய\' (தி.3 ப.82) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணி லமைந்த பதிகமாகும். இப்பதிகத்தில் வரும் முதற் பாடலில் தம்பரிசி னோடு சுடுநீறு தரவந்து இடபம் ஏறி, எனவருவதால் தம்பரிசுடையார் என்ற நாமமும் வெளிப்பட என்றார். இறைவர், தம்பரிசுடையார் சாட்சிநாதர் என்ற பெயர்களால் அழைக்கப் பெறுகின்றார்.. ஈண்டுப் பன்னுசீர்ப் பதிபலவும் என்றவை எவை எனத் தெரிந்தில.

பண் :

பாடல் எண் : 375

பழுதில் சீர்த்திருப் பரிதிநன்
னியமமும் பணிந்தங்
கெழுது மாமறை யாம்பதி
கத்திசை போற்றி
முழுது மானவர் கோயில்கள்
வணங்கியே முறைமை
வழுவில் சீர்திருப் பூவனூர்
வணங்கிவந் தணைந்து.

பொழிப்புரை :

குற்றங்கள் இல்லையாகச் செய்யும் சிறப்புடைய `திருப்பரிதி நியமத்ததை\' வழிபட்டு, அங்கே எழுதும் மறையாகும் திருப்பதிகத்தைப் பாடிப் போற்றி, எல்லாமாய் இருக்கும் சிவபெருமானின் திருக்கோயிலை வணங்கி, முறைமையினின்றும் தவறாத சிறப்புடைய `திருப்பூவனூரை\' வந்து சேர்ந்து,

குறிப்புரை :

திருப்பரிதி நியமத்தில் அருளிய பதிகம் `விண் கொண்ட\' (தி.3 ப.104) எனத் தொடங்கும் பழம்பஞ்சுரப் பதிகமாகும். வழுவில் சீர் - வழுவி லார் எனவும் பாடம்.

பண் :

பாடல் எண் : 376

பொங்கு காதலிற் போற்றிஅங்
கருளுடன் போந்து
பங்க யத்தடம் பணைப்பதி
பலவுமுன் பணிந்தே
எங்கும் அன்பர்கள் ஏத்தொலி
எடுக்கவந் தணைந்தார்
அங்க ணர்க்கிட மாகிய
பழம்பதி ஆவூர்.

பொழிப்புரை :

வளரும் விருப்ப மிகுதியினால் போற்றி அவ் விடத்தினின்றும் நீங்கிச் சென்று, தாமரை மலர்களையுடைய பெரிய வயல்கள் சூழ்ந்த பதிகள் பலவும் போற்றி, அன்பர்கள் யாண்டும் ஒலிபெருக வாழ்த்தி வரச் சிவபெருமான் அமர்ந்தருளும் பழைய பதியான `திரு ஆவூரினை\' அடைந்தார்.

குறிப்புரை :

திருப்பூவனூரில் அருளிய பதிகம் கிடைத்திலது. பதிகள் பலவும் என்பன திருவெண்ணியூர், திருஅரதைப்பெரும்பாழி முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். திருவெண்ணி யூருக்கு முன்னரே சென்று தொழுததாக 228ஆவது பாடலில் காணலாம். திருஅரதைப்பெரும்பாழியைப் பின்னரும் வழிபட்டதாக 403ஆவது பாடலில் காணலாம். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 377

பணியும் அப்பதிப் பசுபதீச்
சரத்தினி திருந்த
மணியை உள்புக்கு வழிபடும்
விருப்பினால் வணங்கித்
தணிவில் காதலில் தண்டமிழ்
மாலைகள் சாத்தி
அணிவி ளங்கிய திருநலூர்
மீண்டும்வந் தணைந்தார்.

பொழிப்புரை :

பணியும் அப்பதியில், பசுபதீச்சரக் கோயிலில் இனிதாக வீற்றிருந்தருளும் மணியான இறைவரைக் கோயிலுள் புகுந்து வழிபடும் விருப்பத்தினால் வணங்கிக் குறைவில்லாத அன்புடன் குளிர்ந்த தமிழ் மாலைகள் பாடிச் சாத்தி, அழகுடைய திருநல்லூரின்கண் மீண்டும் வந்தடைந்தார்.

குறிப்புரை :

திருஆவூர் - ஊர்ப்பெயர். பசுபதீச்சரம் - கோயில் பெயர். இங்கு அருளிய பதிகம் `புண்ணியர்\' (தி.1 ப.8) எனத் தொடங்கும் நட்டபாடைப் பண்ணிலமைந்த பதிகம் ஆகும்.

பண் :

பாடல் எண் : 378

மறை விளங்கும்அப் பதியினில்
மணிகண்டர் பொற்றாள்
நிறையும் அன்பொடு வணங்கியே
நிகழ்பவர் நிலவும்
பிறைய ணிந்தவர் அருள்பெறப்
பிரசமென் மலர்வண்
டறைந றும்பொழில் திருவலஞ்
சுழியில்வந் தணைந்தார்.

பொழிப்புரை :

மறைகள் விளங்குதற்கு இடமான அப்பதியில் கரிய கழுத்தினையுடையவரான இறைவரின் பொன்னடிகளை நிறைவான அன்புடன் வணங்கியவாறே எழுந்தருளும் ஆளுடைய பிள்ளையார், பிறைசூடிய இறைவரின் நிலைபெற்ற திருவருளைப் பெற்று, உலகம் உய்வு பெற, தேன் பொருந்திய மலர்களில் வண்டுகள் ஒலிக்கின்ற மணம் வீசும் சோலைகள் சூழ்ந்த திருவலஞ்சுழியின்கண் வந்து சேர்ந்தார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 379

மதிபு னைந்தவர் வலஞ்சுழி
மருவுமா தவத்து
முதிரும் அன்பர்கள் முத்தமிழ்
விரகர்த முன்வந்
தெதிர்கொள் போழ்தினில் இழிந்தவர்
எதிர்செல மதியைக்
கதிர்செய் வெண்முகிற் குழாம்புடை
சூழ்ந்தெனக் கலந்தார்.

பொழிப்புரை :

பிறைச் சந்திரனைச் சூடிய இறைவர் திருவலஞ் சுழியில் வாழ்கின்ற பெருந்தவத்தின் முதிர்ச்சியுடைய அன்பர்கள் திரண்டு முத்தமிழ்ச் செல்வரான பிள்ளையாரின் முன்வந்து, மதியை ஒளி பொருந்திய வெண்மேகங்கள் சுற்றிச் சூழ்ந்தது போல, எதிர் கொண்டனர்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 380

கலந்த அன்பர்கள் தொழுதெழக்
கவுணியர் தலைவர்
அலர்ந்த செங்கம லக்கரம்
குவித்துடன் அணைவார்
வலஞ்சு ழிப்பெரு மான்மகிழ்
கோயில்வந் தெய்திப்
பொலங்கொள் நீள்சுடர்க் கோபுரம்
இறைஞ்சியுட் புகுந்தார்.

பொழிப்புரை :

திரண்டு வந்த அன்பர்கள் கீழே வீழ்ந்து தொழுது எழுந்து நிற்க, கவுணியர் தலைவரான பிள்ளையார், அப்பொழுது அலர்ந்த செந்தாமரை மலர் போன்ற கைகளைக் கூப்பி அணைபவ ராய்த் திருவலஞ்சுழி இறைவர் மகிழ்ந்து எழுந்தருளியிருக்கும் கோயிலைச் சேர்ந்து, பொன்மயமாக ஒளிவிட்டு விளங்கும் கோபு ரத்தை வணங்கி உள்ளே புகுந்தனர்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 381

மருவலார்புரம் முனிந்தவர்
திருமுன்றில் வலங்கொண்
டுருகும் அன்புடன்உச்சிமேல்
அஞ்சலி யினராய்த்
திருவ லஞ்சுழி யுடையவர்
சேவடித் தலத்தில்
பெருகும்ஆதர வுடன்பணிந்
தெழுந்தனர் பெரியோர்.

பொழிப்புரை :

பகைவரின் முப்புரங்களையும் எரித்த இறை வரின் திருமுற்றத்தை வலம் வந்து, உளம் உருகும் அன்புடனே, தலையின் மேல் கைகுவித்து வணங்கித் திருவலஞ்சுழி இறைவரின் திருவடிகளில் பெருகும் அன்புடனே பெரியவரான சம்பந்தர் பணிந்து எழுந்தார்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 382

ஞானபோனகர் நம்பர்முன்
தொழுதெழு விருப்பால்
ஆனகாதலில் அங்கண
ரவர்தமை வினவும்
ஊனமில்இசை யுடன்விளங்
கியதிருப் பதிகம்
பானலார்மணி கண்டரைப்
பாடினார் பரவி.

பொழிப்புரை :

ஞானப்பாலையுண்ட பிள்ளையார் சிவபெரு மானின் திருமுன்பு தொழுது எழும் விருப்பத்தினால் விளைந்த ஆசையினால் இறைவரை முன்னிலைப்படுத்தி, வினவுகின்ற கருத்தை உடைய குற்றம் அற்ற இசையுடனே விளங்கும் திருப்பதிகத்தைக் குவளை மலர் போன்ற கரிய கழுத்தினையுடைய இறைவரை வணங் கிப் போற்றினார்.

குறிப்புரை :

இதுபொழுது அருளிய பதிகம் `விண்டெலாமலர்\' (தி.2 ப.2) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணிலமைந்த பதிகமாகும். பிள்ளையார் இறைவரை நோக்கியும், அடியவரை நோக்கியும் வினவும் வினாவுரைப் பதிகங்கள் பல. அவ்வினாக்களுள் ஒன்றாய் வருவதும், வேறு வேறாய் வருவனவுமாக அமையும். இப்பதிகத்தில் இறைவரை நோக்கிப் பாடல் தொறும் பலிதேர்ந்து உழல்வது எற்றுக்கு? என ஒரே வினாவாய் அமைந்திருக்கும் பாங்கு அறியத்தக்கது.

பண் :

பாடல் எண் : 383

புலங்கொள் இன்தமிழ் போற்றினர்
புறத்தினில் அணைந்தே
இலங்கு நீர்ப்பொன்னி சூழ்திருப்
பதியினி லிருந்து
நலங்கொள் காதலின் நாதர்தாள்
நாள்தொறும் பரவி
வலஞ்சு ழிப்பெருமான் தொண்டர்தம்
முடன் மகிழ்ந்தார்.

பொழிப்புரை :

உளங்கொளற்குரிய அருளுரையாக நன்மக்கள் உள்ளத்தில் கொள்ளும் இனிய இசைத் தமிழ்ப் பதிகங்ளைச் சாத்தி வணங்கியவராய்க் கோயிலின் வெளியே போந்து, பெருகிவரும் நீரையுடைய காவிரி சூழ்ந்த அப்பதியில் தங்கியிருந்து, நன்மை பொருந்திய அன்பினால் இறைவரின் திருவடிகளை நாள்தோறும் வணங்கிப் பெருமானின் தொண்டர்களுடனே கூடி மகிழ்வுடனிருந்து வந்தார்.

குறிப்புரை :

இப்பதியில் இருந்தருளிய பொழுது பாடியருளிய பதிகங்கள் இரண்டாம். 1) `என்ன புண்ணியம் செய்தனை\' (தி.2 ப.106) - நட்டராகம். 2) `பள்ளமதாய\' (தி.3 ப.106) - பழம்பஞ்சுரம். இவ்விரு பதிகங்களிலும் வரும் முதற் பாடல்கள், பிள்ளையார் தம் நெஞ்சிற்கும் நம்மனோர்க்குமாகக் கூறிய அருளுரைகளாக அமைந் துள்ளன. இரண்டாவது பதிகத்தில் 3 முதல் 6 முடிய உள்ள பாடல்களும் அவ்வாறே அமைந்துள்ளன. ஆதலின் `புலங்கொள் இன்தமிழ்\' எனப் போற்றினர் ஆசிரியர்.

பண் :

பாடல் எண் : 384

மகிழ்ந்த தன்தலை வாழும்அந்
நாளிடை வானில்
திகழ்ந்த ஞாயிறு துணைப்புணர்
ஓரையுட் சேர்ந்து
நிகழ்ந்த தன்மையில் நிலவும்ஏழ்
கடல்நீர்மை குன்ற
வெகுண்டு வெங்கதிர்பரப்பலின்
முதிர்ந்தது வேனில்.

பொழிப்புரை :

மகிழ்வுடன் அப்பதியில் அவர் வாழ்ந்து வரு கின்ற நாள்களில், வானத்தில் விளங்கிய கதிரவன், மிதுன ஓரையுள் சேரப் பொருந்தி, ஏழ்கடலும் தம் நீர்மை குறையுமாறு சினத்துடன் வெம்மையான கதிர்களைப் பரப்புதலால் அக்காலம் முதுவேனிற் பருவமாகச் சிறந்தது.

குறிப்புரை :

வானவீதியிற் செல்லும் கதிரவன் அவ்வவ்விடத்தும் பொருந்திவரும் ஓரைகளாலேயே திங்கள் பெயர்கள் வேறுபடுகின் றன; பருவநிலைகள் மாறுபடுகின்றன. அவ்வகையில் கதிரவன் மிதுன ஓரையில் சேரும்பொழுது வரும் பருவம் முதிர்வேனிற் பருவமாகும். முதிர்ந்தது வேனில் - முதுவேனில் வந்தது. முதிர்ந்தது வேனில் என்றது சமாதியணியாம். இப்பருவத்திற்குரிய திங்கள் ஆனியும் ஆடியுமாகும். `ஏழ்கடல் நீர்மை குன்ற\' என்றது `நெடுங்கட லும் தன்நீர்மை குன்றும்\' (குறள், 17) எனும் குறளை முகந்து நிற்ப தாகும்.

பண் :

பாடல் எண் : 385

தண்பு னற்குறிர் கால்நறுஞ்
சந்தனத் தேய்வை
பண்பு நீடிய வாசமென்
மலர்பொதி பனிநீர்
நண்பு டைத்துணை நகைமணி
முத்தணி நாளும்
உண்ப மாதுரி யச்சுவை
உலகுளோர் விரும்ப.

பொழிப்புரை :

குளிர்ச்சியுடைய நீர்க் கலப்பால் குளிர்ந்து வீசும் காற்றையும், மணம் பொருந்திய சந்தனத்தையும், மணத்தால் ஊறுபாடு அற்ற நறுமணமுடைய பூக்களுள் பொதிந்த பனிநீரையும், ஒன்றற் கொன்று இயைபுடைய ஒளிபொருந்திய இணைமணிகளால் இயைந்த முத்து மாலைகளையும், உண்ணக் கூடிய சுவைப் பண்டங்களையும் உலகத்தவர் விரும்புமாறு வேனில்காலம் முதிர்ந்தது.

குறிப்புரை :

ஒன்றற் கொன்று இயைபுடைய இணையான மணிகள். நண்புடைத் துணை மணி - அன்புடைய வாழ்க்கைத் துணை என்றலும் ஒன்று. முதுவேனிற்காலத்தில் விரும்புதற்குரிய நுகர்ச்சிப் பொருள்களை ஒருங்கு குறித்திருக்கும் அருமை எண்ணற்குரியதாம்.

பண் :

பாடல் எண் : 386

அறல்மலியுங் கான்யாற்றின்
நீர்நசையால் அணையுமான்
பெறலரிய புனலென்று
பேய்த்தேரின் பின்தொடரும்
உறையுணவு கொள்ளும்புள்
தேம்பஅயல் இரைதேரும்
பறவைசிறை விரித்தொடுங்கப்
பனிப்புறத்து வதியுமால்.

பொழிப்புரை :

கரியமணல் மிக்க காட்டினிடம் நீர்பெறும் விருப்பத்தால் சேர்ந்த மான் கூட்டம் (அங்கே நீரைப் பெறாததால்) பெறுதற்கு அரிய நீர் என்ற தோற்றம் பற்றி மயங்கிக் கானல்நீரின் பின்னால் தொடர்ந்து செல்லும்; மழைத் துளிகளை உணவாகக் கொள்ளும் சாதகப் பறவைகள், உணவு பெறாது வருந்தி வேறு உணவைத் தேடித் திரியும். பறவைகள் சிறகுகளை விரித்துக் கொண்டு வெம்மை பொறுக்க இயலாது தாம் ஒடுங்குவதற்குத் தக்க குளிர்ந்த இடங்களில் தங்கும்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 387

நீணிலைமா ளிகைமேலும்
நிலாமுன்றின் மருங்கினிலும்
வாணிழனற் சோலையிலும்
மலர்வாவிக் கரைமாடும்
பூணிலவு முத்தணிந்த
பூங்குழலார் முலைத்தடத்தும்
காணும்மகிழ்ச் சியின்மலர்ந்து
மாந்தர்கலந் துறைவரால்.

பொழிப்புரை :

உயர்ந்தோங்கும் மாளிகைகளின் மீதும், நிலா முற்றங்களின் அருகிலும், ஒளியுடைய நிழலைப் பரப்பும் சோலை யிலும், மலர்ப் பொய்கைகளின் கரைகளிலும், முத்துக்களைக் கொண்ட பூங்குழலையுடைய மாதர்களின் கொங்கைத் தடங்களிலும், ஆடவர் மகிழ்ந்துறைவர்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 388

மயிலொடுங்க வண்டாட
மலர்க்கமல முகைவிரியக்
குயிலொடுங்காச் சோலையின்மெல்
தளிர்கோதிக் கூவியெழத்
துயிலொடுங்கா உயிரனைத்தும்
துயில்பயிலச் சுடர்வானில்
வெயிலொடுங்கா வெம்மைதரும்
வேனில்விரி தருநாளில்.

பொழிப்புரை :

மயில்கள் ஒடுங்கவும், வண்டுகள் சூழ்ந்து முரலவும், தாமரை அரும்புகள் மலரவும், வளங்குன்றாத சோலை களின் மெல்லிய தளிரைக் கோதிக் குயில்கள் கூவி எழவும், துயில் கொள்ளாத உயிர்கள் எல்லாம் துயில் கொள்ளவும், வானத்தில் விளங்கும் ஒளிக் கதிர்களையுடைய கதிரவன், தன் வெம்மையான கதிர்களை ஒடுக்காமல் வெம்மை தருகின்ற முதுவேனிற் பருவத் திற்குரிய நாள்களில்,

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 389

சண்பைவரும் பிள்ளையார்
சடாமகுடர் வலஞ்சுழியை
எண்பெருகத் தொழுதேத்திப்
பழையாறை எய்துதற்கு
நண்புடைய அடியார்கள்
உடன்போத நடந்தருளி
விண்பொருநீள் மதிளாறை
மேற்றளிசென் றெய்தினார்.

பொழிப்புரை :

காழிப்பதியில் தோன்றியருளிய பிள்ளையார், சடையை முடியணியாகக் கொண்ட சிவபெருமானின் திருவலஞ்சுழி என்ற அப்பதியினை எண்ணம் பெருகப் போற்றி, பழையாறை என்ற பதியைச் சார்வதற்காக, நட்புக் கொண்டிருக்கும் அடியவர்களுடன் போவதை விரும்பி, நடந்து சென்று, வான் அளாவிய நீண்டுயர்ந்த மதிலையுடைய திருப்பழையாறைமேற்றளியை அடைந்தார்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 390

திருவாறை மேற்றளியில்
திகழ்ந்திருந்த செந்தீயின்
உருவாளன் அடிவணங்கி
உருகியஅன் பொடுபோற்றி
மருவாரும் குழல்மலையாள்
வழிபாடு செய்யஅருள்
தருவார்தந் திருச்சத்தி
முற்றத்தின் புறஞ்சார்ந்தார்.

பொழிப்புரை :

பழையாறைமேற்றளியில் வீற்றிருந்தருளும் செந்தீ நிறத்தவரான இறைவரின் திருவடிகளை உருகிய அன்புடனே வணங்கிப் போற்றி, மணம் பொருந்திய கூந்தலையுடைய மலையர சன் மகள் வழிபட அருள் செய்த இறைவரின் `திருச்சத்தி முற்றம்\' என்ற பதியின் புறத்தே அடைந்தருளினர் பிள்ளையார்.

குறிப்புரை :

பழையாறைமேற்றளியில் அருளிய பதிகம் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 391

திருச்சத்தி முற்றத்தில்
சென்றெய்தித் திருமலையாள்
அருச்சித்த சேவடிகள்
ஆர்வமுறப் பணிந்தேத்திக்
கருச்சுற்றில் அடையாமல்
கைதருவார் கழல்பாடி
விருப்புற்றுத் திருப்பட்டீச்
சரம்பணிய மேவுங்கால்.

பொழிப்புரை :

திருச்சத்திமுற்றத்தினைச் சென்றடைந்து திரு மலைவல்லியார் போற்றி வழிபட்ட அழகிய திருவடிகளை ஆர்வத் துடனே வணங்கி, பிறவிச் சுழலில் அகப்படாமல் கைதந்து ஈடேற்று பவரான இறைவரின் திருவடிகளைப் பாடி, விருப்புக் கொண்டு `திருப்பட்டீச்சரத்தை\' வணங்கச் சென்ற போழ்து,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 392

வெம்மைதரு வேனிலிடை
வெயில்வெப்பந் தணிப்பதற்கு
மும்மைநிலைத் தமிழ்விரகர்
முடிமீதே சிவபூதம்
தம்மைஅறி யாதபடி
தண்தரளப் பந்தரெடுத்
தெம்மைவிடுத் தருள்புரிந்தார்
பட்டீசர் என்றியம்ப.

பொழிப்புரை :

வெப்பத்தை மிகுதியாய் அளிக்கும் முதுவேனிற் காலத்தின் வெம்மையைத் தணித்து ஆற்றும் பொருட்டு, முத்தமிழ் வல்லுநரான சம்பந்தரின் திருமுடியின் மீது, தம்மை அறியாத வகையால் சிவபூதம் குளிர்மை தரும் முத்துப் பந்தரை எடுத்துப் பிடித்து, `பட்டீசர் எங்களை இதனுடன் சென்று தருமாறு திருவாய் மலர்ந்தருளினார்\' எனக் கூற,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 393

அவ்வுரையும் மணிமுத்தின்
பந்தரும்ஆ காயமெழச்
செவ்விய மெய்ஞ் ஞானமுணர்
சிரபுரத்துப் பிள்ளையார்
இவ்வினைதான் ஈசர்திரு
வருளாகில் இசைவதென
மெய்விரவு புளகமுடன்
மேதினியின் மிசைத்தாழ்ந்தார்.

பொழிப்புரை :

அச்சொற்களும் அழகிய முத்துப் பந்தரும் வானத்தில் எழுந்தனவாக, செம்மையான சிவஞானத்தை உணர்ந்த ஆளுடைய பிள்ளையார், `இச்செயல்தானும் இறைவரின் திருவருளா யின் நமக்கு இயைவதாகுக!\' என்று உள்ளத்தில் எண்ணி மேனியில் மயிர்க் கூச்சல் உண்டாக, நிலத்தில் வீழ்ந்து வணங்கினார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 394

அதுபொழுதே அணிமுத்தின்
பந்தரினை அருள்சிறக்கக்
கதிரொளிய மணிக்காம்பு
பரிசனங்கள் கைக்கொண்டார்
மதுரமொழி மறைத்தலைவர்
மருங்கிமையோர் பொழிவாசப்
புதுமலரால் அப்பந்தர்
பூம்பந்த ரும்போலும்.

பொழிப்புரை :

அதுபோழ்து உடன் வந்த ஏவலர் அழகிய முத்துப் பந்தரைத் திருவருள் சிறக்க ஒளிவீசும் அழகிய காம்புகளைக் கையில் பிடித்தனர். இனிய மொழியையுடைய தமிழ் மறைத் தலைவர் ஆன பிள்ளையாரின் அருகில், தேவர்கள் பொழிந்த மணமுடைய தெய்வப் பூக்களால், அம்முத்துப் பந்தர், பூம் பந்தர் போலவும் விளங்கியது.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 395

தொண்டர்குழாம் ஆர்ப்பெடுப்பச்
சுருதிகளின் பெருந்துழனி
எண்திசையும் நிறைந்தோங்க
எழுந்தருளும் பிள்ளையார்
வெண்தரளப் பந்தர் நிழல்
மீதணையத் திருமன்றில்
அண்டர்பிரான் எடுத்ததிரு
வடிநீழல் எனஅமர்ந்தார்.

பொழிப்புரை :

தொண்டர் கூட்டமானது மகிழ்வொலி செய்யவும், மறைகளின் பேரொலி எண்திசைகளிலும் நிறைந்து எழவும் எழுந்தருளி வருகின்ற பிள்ளையார், வெண்மையான முத்துப் பந்தரின் நிழலானது தம் முடியின் மீது நிழற்றுவதால், பொன்னம் பலத்தில் கூத்தப்பிரானின் தூக்கிய திருவடி நீழலில் அமர்ந்திருத் தலைப் போல் அமர்ந்திருந்தார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 396

பாரின்மிசை அன்பருடன்
வருகின்றார் பன்னகத்தின்
ஆரம்அணிந் தவர்தந்த
அருட்கருணைத் திறம்போற்றி
ஈரமனங் களிதழைப்ப
எதிர்கொள்ள முகமலர்ந்து
சேரவரும் தொண்டருடன்
திருப்பட்டீச் சரம்அணைந்தார்.

பொழிப்புரை :

நிலத்தின் மீது தொண்டர்களுடன் வருகின்ற பிள்ளையார், பாம்புகளையே மாலையாகச் சூடிய இறைவர் அளித்த பெருங்கருணைத் திறத்தைப் போற்றிய வண்ணமே, அன்பு நிறைந்த உள்ளம் களிப்புக் கொள்ள எதிர்கொள்ளும் பொருட்டு முகமலர்ந்து வருகின்ற திருத்தொண்டர்களுடன் திருப்பட்டீச்சரத்தை அடைந்தனர்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 397

சென்றணைந்து திருவாயில்
புறத்திறைஞ்சி உள்புக்கு
வென்றிவிடை யவர்கோயில்
வலங்கொண்டு வெண்கோட்டுப்
பன்றிகிளைத் தறியாத
பாததா மரைகண்டு
முன்தொழுது விழுந்தெழுந்து
மொழிமாலை போற்றிசைத்தார்.

பொழிப்புரை :

சென்று சேர்ந்து வாயிலின் வெளியில் வணங்கி, உள்ளே புகுந்து, வெற்றி பொருந்திய ஆனேற்றை ஊர்தியாக உடைய சிவபெருமானின் திருக்கோயிலை வலம் வந்து, வெள்ளைக் கொம்பு டைய பன்றி உருவெடுத்த திருமால் நிலத்தைத் தோண்டியும் காண இயலாத திருவடித் தாமரைகளைக் கண்டு, திருமுன்பு வணங்கி, நிலத்தில் வீழ்ந்து எழுந்து சொல்மாலை கொண்டு போற்றினார்.

குறிப்புரை :

இறைவன் திருமுன்பு அருளிய பதிகம் `பாடல்மறை\' (தி.3 ப.73) எனத் தொடங்கும் சாதாரிப் பண்ணில் அமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 398

அருள்வெள்ளத் திறம்பரவி
அளப்பரிய ஆனந்தப்
பெருவெள்ளத் திடைமூழ்கிப்
பேராத பெருங்காதல்
திருவுள்ளப் பரிவுடனே
செம்பொன்மலை வல்லியார்
தருவள்ளத் தமுதுண்ட
சம்பந்தர் புறத்தணைந்தார்.

பொழிப்புரை :

திருக்கருணைப் பெருக்கின் திறத்தைப் போற்றி அதனால் அளவிடற்கரிய இன்ப வெள்ளத்தில் திளைத்து, மாறாத பெருங்காதல் கொண்ட உளம் பெருகிய அன்புடன், செம்பொன் மலையரசனின் மகளாரான உமையம்மையார், பொற்கிண்ணத்தில் தந்தருளிய ஞான அமுது உண்டருளிய பிள்ளையார் திருக்கோயில் புறத்தே அடைந்தார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 399

அப்பதியில் அமர்கின்ற
ஆளுடைய பிள்ளையார்
செப்பருஞ்சீர்த் திருவாறை
வடதளியில் சென்றிறைஞ்சி
ஒப்பரிய தமிழ்பாடி
உடனமரும் தொண்டருடன்
எப்பொருளு மாய்நின்றார்
இரும்பூளை எய்தினார்.

பொழிப்புரை :

அப்பதியில் விரும்பி எழுந்தருளிய ஆளுடைய பிள்ளையார் சொலற்கரிய சிறப்பினையுடைய பழையாறைவடதளி யில் சென்று வணங்கி, ஒப்பில்லாத தமிழ்ப் பதிகத்தைப் பாடித் தாம் உடனாய் விரும்பிய தொண்டர்களுடனே எல்லாப் பொருள்களுமாய் நின்ற சிவபெருமானின் `திருவிரும்பூளையினை\' அடைந்தார்.

குறிப்புரை :

பழையாறை வடதளியில் அருளிய பதிகம் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 400

தேவர்பிரா னமர்ந்ததிரு
இரும்பூளை சென்றெய்தக்
காவணநீள் தோரணங்கள்
நாட்டியுடன் களிசிறப்பப்
பூவணமா லைகள்நாற்றிப்
பூரணபொற் குடநிரைத்தங்கு
யாவர்களும் போற்றிசைப்பத்
திருத்தொண்டர் எதிர்கெண்டார்.

பொழிப்புரை :

பிள்ளையார், தேவர்களின் தலைவரான சிவபெருமான் விரும்பி வீற்றிருக்கும் திருவிரும்பூளையினைச் சென்றடையப் பந்தல்களைத் தோரணங்களுடன் நிறுத்திப் பெருகிய மகிழ்ச்சி ஓங்குதலால் நிறம்பொருந்திய மலர்களால் அமைந்த அழகிய பெரிய மாலைகளைத் தொங்கவிட்டு, நீர்நிறைந்த குடங்களை நிரல்பட அமைத்து, அனைவரும் போற்றத் தொண்டர்கள் அங்கு எதிர் கொண்டனர்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 401

வண்டமிழின் மொழிவிரகர்
மணிமுத்தின் சிவிகையினைத்
தொண்டர்குழாத் தெதிர்இழிந்தங்
கவர்தொழத்தா முந்தொழுதே
அண்டர்பிரான் கோயிலினை
அணைந்திறைஞ்சி முன்நின்று
பண்டரும்இன் னிசைப்பதிகம்
பரம்பொருளைப் பாடுவார்.

பொழிப்புரை :

வளம் பொருந்திய தேவாரத் தமிழையருளும், முகனமர்ந்து இன்சொற்களைப் பேசும் தலைவரான பிள்ளையார், அழகிய முத்துச் சிவிகையினின்றும் தம்மை எதிர்கொண்டு வரவேற்ற தொண்டர் கூட்டத்தின் எதிரே இறங்கி, அவர்கள் தம்மை வணங்கத் தாமும் அவர்களை வணங்கி, தேவர் தலைவரின் திருக்கோயிலை அடைந்து, வணங்கித் திருமுன் நின்று, பண்ணிசையை வெளிப்படுத் தும் இனிய இசையுடைய திருப்பதிகத்தால், மேலாய பொருளான இறைவரைப் பாடுவாராய்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 402

நிகரிலா மேருவரை
அணுவாக நீண்டானை
நுகர்கின்ற தொண்டர்தமக்
கமுதாகி நொய்யானைத்
தகவொன்ற அடியார்கள்
தமைவினவித் தமிழ்விரகர்
பகர்கின்ற அருமறையின்
பொருள்விரியப் பாடினார்.

பொழிப்புரை :

ஒப்பற்ற பெரிய மேருமலையும் ஓர் அணுவாகு மாறு நீண்ட பெருமையுடையவராகியும், துய்ப்பனவும், உய்ப்பனவும் எல்லாம் தாமேயாகத் துய்க்கின்ற தொண்டர்களுக்கு அமுதமாயும் எளியராயும் விளங்கி நிற்கும் அம்மேலாய பொருளைத் தகுதி மிக்க அடியவரை வினவும் தன்மையில், தமிழ் வல்லுநரான பிள்ளையார், சொல்லப்படுகின்ற அரிய மறைகளின் உட்பொருள் விளங்கப் பாடினர்.

குறிப்புரை :

திருஇரும்பூளையில் பாடியருளிய பதிகம் `சீரார் கழலே\' எனத் தொடங்கும் இந்தளப் பண்ணில் அமைந்த பதிகமாகும். இப்பதிகம் முழுவதும் அடியவர்களிடம் பலபட அமைந்த வினாக்க ளைக் கேட்டு மகிழும் வினவுரைப் பதிகமாக அமைந்துள்ளது.

பண் :

பாடல் எண் : 403

பாடும் அரதைப்பெரும்
பாழியே முதலாகச்
சேடர்பயில் திருச்சேறை
திருநாலூர் குடவாயில்
நாடியசீர் நறையூர்தென்
திருப்புத்தூர் நயந்திறைஞ்சி
நீடுதமிழ்த் தொடைபுனைந்தந்
நெடுநகரில் இனிதமர்ந்தார்.

பொழிப்புரை :

போற்றப் பெறுகின்ற `அரதைப் பெரும்பாழி\' முதலாக அறிவுடையவர்கள் வாழ்கின்ற `திருச்சேறையும்\', `திரு நாலூரும்\', `திருக்குடவாயிலும்\', சிறப்புகள் பலவும் தாமே நாடி வருதற் குரிய `திருநறையூரும்\', `தென் திருப்புத்தூரும்\' ஆகிய இப்பதிகளை விருப்புடன் வழிபட்டு, நீண்ட தமிழ் மாலைகளைப் பாடி, அத்தென் திருப்புத்தூரில் இனிதே வீற்றிருந்தார் பிள்ளையார்.

குறிப்புரை :

இப்பதிகளில் அருளிய பதிகங்கள்: பதியின் பெயர் பாட்டுமுதற்குறிப்பு பண் அரதைப்பெரும்பாழி பைத்தபாம்போடரை கொல்லி - தி.3 ப.30 திருச்சேறை முறியுறு சாதாரி - தி.3 ப.86 திருநாலூர்மயானம் பாலூரும் சீகாமரம் - தி.2 ப.46 திருக்குடவாயில் 1.திகழுந்திருமாலொடு இந்தளம் - தி.2 ப.22 2.கலைவாழும் காந்தாரம் - தி.2 ப.58 திருநறையூர்ச்சித்தீச்சரம் 1.ஊருலாவு தக்கராகம் - தி.1 ப.29 2.பிறைகொள்சடையர் தக்கேசி - தி.1 ப.71 3.நேரியனாகும் பியந்தைக் - தி.2 ப.87 காந்தாரம் தென் திருப்புத்தூர் மின்னும் சடைமேல் காந்தாரம் - தி.2 ப.63 திருஅரதைப்பெரும்பாழி இதுபொழுது அரித்துவாரமங்க லம் என வழங்கப்பெறுகிறது. திருநாலூர்மயானம், திருநாலூர் எனவும், நாலூர் மயானம் எனவும் இரு பதிகளாகவுள்ளன. இப்பதி கம் நாலூர் மயானத்திற்குரிய பதிகமாகும். குடவாயில், குடவாசல் என வழங்கப்படுகிறது. திருநறையூர் - பதியின் பெயர். சித்தீச்சரம் - திருக்கோயிலின் பெயர். தென்திருப்புத்தூர், அரிசில்கரைப்புத்தூர் என வழங்கப்பெறுகிறது.

பண் :

பாடல் எண் : 404

அங்கண்இனி தமருநாள்
அடல்வெள்ளே னத்துருவாய்ச்
செங்கண்நெடு மால்பணியும்
சிவபுரத்துச் சென்றடைந்து
கங்கைசடைக் கரந்தவர்தங்
கழல்வணங்கிக் காதலினால்
பொங்குமிசைத் திருப்பதிகம்
முன்நின்று போற்றிசைத்தார்.

பொழிப்புரை :

அவ்வரிசில்கரைப் புத்தூரில் பிள்ளையார் எழுந்தருளியிருந்த பொழுது, வன்மையுடைய வெண்மையான பன்றி வடிவைக் கொண்ட சிவந்த கண்களையுடைய திருமால் வணங்கும் சிவபுரத்திற்குச் சென்று, கங்கையைச் சடையில் அடக்கிய இறைவரின் திருவடிகளை வணங்கி, மிக்க விருப்பத்தால் இசை பெருகும் திருப்பதிகங்களைத் திருமுன்பு நின்று பாடினார்.

குறிப்புரை :

இப்பதியில் அருளிய பதிகங்கள் மூன்று. 1. புவம்வளி : தி.1 ப.21 - நட்டபாடை 2. இன்குரல் : தி.1 ப.112 - வியாழக்குறிஞ்சி 3. கலைமலி : தி.1 ப.125 - வியாழக்குறிஞ்சி

பண் :

பாடல் எண் : 405

போற்றிசைத்துப் புனிதரருள்
பெற்றுப்போந்து எவ்வுயிரும்
தோற்றுவித்த அயன்போற்றுந்
தோணிபுரத் தந்தணனார்
ஏற்றுமிசை ஏற்றுகந்த
இறைவர்தமை ஏத்துதற்கு
நாற்றிசையோர் பரவுதிருக்
குடமூக்கு நண்ணினார்.

பொழிப்புரை :

போற்றி, இறைவரின் திருவருளைப் பெற்று, எவ்வுயிர்களையும் இறைவரின் ஆணையின் வண்ணம் பிறவியில் புகுத்தும் நான்முகன் வணங்கும் திருத்தோணிபுரத்தில் தோன்றிய பிள்ளையார், ஆனேற்றின் மீது வருதலை விரும்பிய இறைவரைப் போற்றுதற்காக, நாற்றிசையில் உள்ளவரும் வணங்கும் திருக்குட மூக்கை அடைந்தார்.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 406

தேமருவு மலர்ச்சோலைத்
திருக்குடமூக் கினிற்செல்வ
மாமறையோர் பூந்தராய்
வள்ளலார் வந்தருளத்
தூமறையின் ஒலிபெருகத்
தூரியமங் கலமுழங்கக்
கோமுறைமை எதிர்கொண்டு
தம்பதியில் கொடுபுக்கார்.

பொழிப்புரை :

தேன் பொருந்திய மலர்கள் நிறைந்த திருக்குட மூக்கினில் வாழ்கின்ற செல்வப் பெருமறையோர், காழி வள்ளலார் ஆகிய பிள்ளையாரை மறையொலி பெருகவும், மங்கல இயங்கள் ஒலிக்கவும், மன்னரை எதிர் கொள்ளும் முறையில் எதிர் கொண்டு, தம் பதியினிடத்து அழைத்துச் சென்றனர்.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 407

திருஞான சம்பந்தர்
திருக்குடமூக் கினைச்சேர
வருவார்தம் பெருமானை
வண்டமிழின் திருப்பதிகம்
உருகாநின் றுளமகிழக்
குடமூக்கை உகந்திருந்த
பெருமான்எம் இறையென்று
பெருகிசையால் பரவினார்.

பொழிப்புரை :

திருக்குடமூக்கினைச் சேர வருபவரான திருஞான சம்பந்தர், தம் இறைவரை வளமையுடைய தமிழ்ப் பதிகத்தால் உள்ளம் உருகி மகிழத் திருக்குடமூக்கை உவந்து விரும்பி வீற்றிருந்த பெரு மான் எம் இறைவர் என்று பெருகிய இசையால் பாடினார்.

குறிப்புரை :

இதுபொழுது அருளிய பதிகம் `அரவிரி\' (தி.3 ப.59) எனத் தொடங்கும் பஞ்சமப் பண்ணிலமைந்த பதிகமாகும். பாடல் தொறும் `குடமூக்கை உவந்திருந்த பெருமான் எம்மிறை\' என நிறைவு பெறுதலின், அக்குறிப்பினை எடுத்து மொழியலானார் ஆசிரியர்.

பண் :

பாடல் எண் : 408

வந்தணைந்து திருக்கீழ்க்கோட்
டத்திருந்த வான்பொருளைச்
சிந்தைமகிழ் வுறவணங்கித்
திருத்தொண்ட ருடன்செல்வார்
அந்தணர்கள் புடைசூழ்ந்து
போற்றிசைப்ப அவரோடும்
கந்தமலர்ப் பொழில்சூழ்ந்த
காரோணஞ் சென்றடைந்தார்.

பொழிப்புரை :

மேற்கூறியவாறு போற்றி வந்து, திருக்கீழ்க் கோட் டத்தில் வீற்றிருந்த இறைவரை மனம் மகிழ வணங்கித் தொண்டர் கூட்டத்துடன் செல்பவரான சம்பந்தர், அந்தணர்கள் சூழப் போற்றி வர, அவரோடும் கூடி, மணம் பொருந்திய பூஞ்சோலைகள் சூழ்ந்த திருக்காரோணத்தைச் சென்று அடைந்தார். கு-ரை: திருக்குடந்தைக் கீழ்க்கோட்டத்தில் அருளிய பதிகம் கிடைத்திலது.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 409

பூமருவும் கங்கைமுதல்
புனிதமாம் பெருந்தீர்த்தம்
மாமகந்தான் ஆடுதற்கு
வந்துவழி படுங்கோயில்
தூமருவு மலர்க்கையால்
தொழுதுவலங் கொண்டணைந்து
காமர்கெட நுதல்விழித்தார்
கழல்பணிந்து கண்களித்தார்.

பொழிப்புரை :

மலர்கள் பொருந்திய கங்கை முதலான தூய நதிகள் பலவும், தத்தம் இடங்களிலிருந்து இப்பதியிலுள்ள குளத்தில் மாமகத்தன்று ஆடும் பொருட்டாக வந்து வழிபடுகின்ற பெருமை உடைய அக்கோயிலைத் தூய்மையான மலர்போன்ற கைகளால் தொழுது, வலம் வந்து, மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்த இறை வரின் திருவடிகளை வணங்கிக் கண்டுகளித்தனர்.

குறிப்புரை :

`தாவி முதற் காவிரிநல் யமுனை கங்கை சரசுவதி பொற்றாமரை புட்கரணி தெண்ணீர்க் கோவியொடு குமரிவரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தைக் கீழ்க் கோட்டத்தெங் கூத்தனாரே\' (தி.6 ப.75 பா.10) எனவரும் அப்பர் அடிகளின் திருவாக்கை யுளங்கொண்டு ஆசிரியர் சேக்கிழார் இப்பாடலை அருளிச் செய்துள்ளார்.

பண் :

பாடல் எண் : 410

கண்ணாரும் அருமணியைக்
காரோணத் தாரமுதை
நண்ணாதார் புரமெரித்த
நான்மறையின் பொருளானைப்
பண்ணார்ந்த திருப்பதிகம்
பணிந்தேத்திப் பிறபதியும்
எண்ணார்ந்த சீரடியா
ருடன்பணிவுற் றெழுந்தருளி.

பொழிப்புரை :

கண்ணகத்தே நின்று களிதரும் அரிய மணி போன்றவரும், திருக்குடந்தைக் காரோணத்தில் எழுந்தருளியிருக்கும் அமுதம் போன்றவரும், பகைவரின் முப்புரங்களை எரித்த நான்மறை களின் பொருளாக விளங்குபவருமான இறைவரை வணங்கிப் பண்ணமைந்த திருப்பதிகத்தைப் பாடிப் பணிந்து, போற்றிப் பிற பதிகளையும் வணங்க எண்ணி, எண்ணிறந்த அடியவர்களுடன் பணிந்து, அங்கிருந்து மேற்செல்வார்.

குறிப்புரை :

திருக்குடந்தைக் காரோணத்தில் அருளிய பதிகம் `வாரார் கொங்கை\' (தி.1 ப.72) எனத் தொடங்கும் தக்கேசிப் பண்ணிலமைந்த பதிகமாகும். பிறபதிகள் என்றது திருக்குடமூக்கில் உள்ள பிற திருக்கோயில்களான, திருக்கருக்குடி, திருக்கொட்டையூர், திருக்கலயநல்லூர் முதலியனவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். திருக்கருக்குடியில் அருளிய பதிகம் `நனவிலும் கனவிலும்\' : (தி.3 ப.21) எனத் தொடங்கும் காந்தாரபஞ்சமப் பண்ணிலமைந்ததாகும். பிற பதிகளின் பதிகங்கள் எவையும் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 411

திருநாகேச் சரத்தமர்ந்த
செங்கனகத் தனிக்குன்றைக்
கருநாகத் துரிபுனைந்த
கண்ணுதலைச் சென்றிறைஞ்சி
அருஞானச் செந்தமிழின்
திருப்பதிகம் அருள்செய்து
பெருஞான சம்பந்தர்
பெருகார்வத் தின்புற்றார்.

பொழிப்புரை :

திருநாகேச்சரத்தில் வீற்றிருக்கும் செம்பொன் மலை போன்ற கரிய யானையின் தோலைப் போர்த்துக் கொண்ட பெருமானை வணங்கி, அரிய ஞானம் விளங்கும் செந்தமிழின் இனிய திருப்பதிகத்தைப் பாடி அருள் செய்து, பெருகும் அன்பினால் இன்பம் ஆர்ந்திருந்தார்.

குறிப்புரை :

இப்பதியில் இதுபொழுது அருளிய பதிகம் `தழை கொள்\' (தி.2 ப.119) எனத் தொடங்கும் செவ்வழிப் பண்ணில் அமைந்த பதிகமாகும். இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 412

மாநாகம் அருச்சித்த
மலர்க்கமலத் தாள்வணங்கி
நாணாளும் பரவுவார்
பிணிதீர்க்கும் நலம்போற்றிப்
பானாறும் மணிவாயர்
பரமர்திரு விடைமருதில்
பூநாறும் புனற்பொன்னித்
தடங்கரைபோய்ப் புகுகின்றார்.

பொழிப்புரை :

ஆதிசேடன் வழிபட்ட தாமரை போன்ற திருவடிகளை வணங்கி, நாளும் வணங்குபவர்களின் பிணிகளைப் போக்கும் நன்மையினைப் போற்றி, ஞானப்பாலமுதின் மணம் கமழும் திருவாயினையுடைய பிள்ளையார், மலர்கள் மலர்ந்து மணம் வீசும் காவிரியின் வடகரை வழியாகச் சென்று, இறைவரின் `திருவிடை மருதூரில்\\\' புகுகின்றவர்,

குறிப்புரை :

திருநாகேச்சரத்தில் பாடிய பதிகம் `பொன்னேர் தரு\\\' (தி.2 ப.24) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணிலமைந்த பதிகமாகும். `வல்வினை மாய்ந்தறும்\\\' இன்புறும் என்பனவாகிய குறிப்பு கள் அமைந்திருத்தலின், `நாள் நாளும் பரவுவார் பிணி தீர்க்கும் நலம் போற்றி\\\' என்றார்.

பண் :

பாடல் எண் : 413

ஓங்குதிருப் பதிகம்ஓ
டேகலன்என் றெடுத்தருளித்
தாங்கரிய பெருமகிழ்ச்சி
தலைசிறக்குந் தன்மையினால்
ஈங்கெனையா ளுடையபிரான்
இடைமரு தீதோஎன்று
பாங்குடைய இன்னிசையால்
பாடிஎழுந் தருளினார்.

பொழிப்புரை :

உயர்ந்த திருப்பதிகத்தை `ஓடேகலன்\' எனத் தொடங்கித் தாங்குதற்கரிய மகிழ்ச்சி மேன்மேலும் பெருகுதலால், `இங்கு என்னை ஆளுடைய இறைவர் வீற்றிருக்கும் திருவிடைமருது இதுதானோ?\' என்ற கருத்துடன் நல்ல இயல்புடைய இசை பொருந்தப் பாடி அந்தப் பதியினுள் புகுந்தார்.

குறிப்புரை :

இதுபொழுது அருளியது `ஓடேகலன்\' (தி.1 ப.32) எனும் தொடங்கும் தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமா கும். பாடல்தொறும் `இடைமருது ஈதோ\' என வரும் தொடர் அமைந்து இருத்தலின் அதனை ஆசிரியர் குறிப்பிடுவாராயினர். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 414

அடியவர்கள் எதிர்கொள்ள
எழுந்தருளி அங்கணைந்து
முடிவில்பரம் பொருளானார்
முதற்கோயில் முன்னிறைஞ்சிப்
படியில்வலங் கொண்டுதிரு
முன்பெய்திப் பார்மீது
நெடிதுபணிந் தெழுந்தன்பு
நிறைகண்ணீர் நிரந்திழிய.

பொழிப்புரை :

அப்பதியிலுள்ளார் எதிர்கொள்ளச் சென்று, அப்பதியை அடைந்து, நிலைபெற்ற பரம்பொருளான இறைவரின் பெருங்கோயிலை முன்னே வணங்கி, வலம் வந்து, திருமுன்பு அடைந்து, தரையில் விழுந்து அன்பு நிறைவதால் பொழியும் கண்ணீர் இடையறாது வழிய,

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 415

பரவுறுசெந் தமிழ்ப்பதிகம்
பாடிஅமர்ந் தப்பதியில்
விரவுவார் திருப்பதிகம்
பலபாடி வெண்மதியோ
டரவுசடைக் கணிந்தவர்தம்
தாள்போற்றி ஆர்வத்தால்
உரவுதிருத் தொண்டருடன்
பணிந்தேத்தி உறையுநாள்.

பொழிப்புரை :

இறைவரைப் போற்றுகின்ற செந்தமிழ்ப் பதிகம் பாடி, விருப்பத்துடன் அப்பதியில் இருந்தருளும் சம்பந்தர், மேலும் பல திருப்பதிகங்களையும் பாடி, வெண்மையான பிறைச் சந்திரனுடன் பாம்பையும் சடையில் அணிந்த பெருமானாரின் திருவடிகளைப் போற்றி, உறைப்புடைய திருத்தொண்டர்களுடன் இறைவரை வணங் கிப் போற்றி, அன்பு மிகுதியால் அங்குத் தங்கியிருந்த காலத்தில்,

குறிப்புரை :

இறைவரின் திருமுன்பு அருளிய பதிகம் `பொங்கு நூல்\' எனத் தொடங்கும் காந்தாரப் பண்ணிலமைந்த பதிகமாகும். மேலும் இப்பதியில் அருளிய பதிகங்கள் நான்குள்ளன. அவை: 1. `தோடோர்\' : தி.1 ப.95 - குறிஞ்சி 2. `மருந்தவன்\' : தி.1 ப.110 - வியாழக்குறிஞ்சி 3. `நடை மரு\' : தி.1 ப.121 - வியாழக்குறிஞ்சி 4. `விரிதரு\' : தி.1 ப.122 - வியாழக்குறிஞ்சி

பண் :

பாடல் எண் : 416

மருங்குளநற் பதிகள்பல
பணிந்துமா நதிக்கரைபோய்க்
குரங்காடு துறையணைந்து
குழகனார் குரைகழல்கள்
பெருங்காத லால்பணிந்து
பேணியஇன் னிசைபெருக
அருங்கலைநூல் திருப்பதிகம்
அருள்செய்து பரவினார்.

பொழிப்புரை :

அருகில் உள்ள பலபதிகளையும் வணங்கிக் காவிரிப் பெருங்கரை வழியே சென்று, திருத்தென்குரங்காடுதுறை யினைச் சேர்ந்து, இறைவரின் ஒலிக்கும் கழல் பூண்ட திருவடிகளைப் பெருங் காதலால் வணங்கி, விரும்பிய இனிய இசை பெருகவுள்ள அரிய கலை நூல்களின் பொருள்களை விரிக்கும் திருப்பதிகத்தைப் பாடி வணங்கினார்.

குறிப்புரை :

தென்குரங்காடுதுறையில் அருளிய பதிகம் `பரவக் கெடும்\' (தி.2 ப.35) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணில் அமைந்த பதிகமாகும். `மருங்குள நற்பதிகள்\' என்பன இன்னவென அறிதற் கியன்றிலது. இம்மூன்று பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 417

அம்ம லர்த்தடம் பதிபணிந்
தகன்றுபோந் தருகு
மைம்ம லர்க்களத் திறைவர்தங்
கோயில்கள் வணங்கி
நம்ம லத்துயர் தீர்க்கவந்
தருளிய ஞானச்
செம்ம லார்திரு ஆவடு
துறையினைச் சேர்ந்தார்.

பொழிப்புரை :

அழகிய தாமரை மலர்கள் நிறைந்த குளங்களை உடைய அத்திருப்பதியை வணங்கிப் பின், அதனின்றும் நீங்கிச் சென்று அருகிலுள்ள கருநிறக்கண்டத்தையுடைய இறைவரின் கோயில்களை வணங்கி, நம் பாசத்துன்பங்களை நீக்குவதற்கென்றே தோன்றிய ஞானச் செம்மலாம் சம்பந்தர், திருவாவடுதுறையைச் சேர்ந்தார்.

குறிப்புரை :

இறைவரின் கோயில்கள் என்றது சாத்தனூர் ம