ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணம்


பண் :

பாடல் எண் : 1

நீடு வண்புகழ்ச் சோழர்நீர் நாட்டிடை நிலவும்
மாடு பொன்கொழி காவிரி வடகரைக் கீழ்பால்
ஆடு பூங்கொடி மாடம்நீ டியஅணி நகர்தான்
பீடு தங்கிய திருப்பெரு மங்கலப் பெயர்த்தால்.

பொழிப்புரை :

நீடிய கொடையின் சிறப்பால் புகழ்கொண்ட சோழ அரசர்களது, நீர்வளம் குன்றாத நாட்டில் நிலவுகின்ற தனது கரையின் இருமருங்கும் பொன் கொழித்திடும் காவிரி ஆற்றின் வடகரையின் கிழக்குப் பக்கத்தே, பூங்கொடிகள் ஆடப், பொருந்திய மாடங்கள் நீண்டவரிசையாக இருப்ப, அதனால் அழகு பொருந்திய நகர் ஒன்று ளது. அந்நகர் பெருமை தங்கிய திருப்பெருமங்கலம் என்னும் பெயருடையது.

குறிப்புரை :

தான், ஆல் என்பன அசை.

பண் :

பாடல் எண் : 2

இஞ்சி சூழ்வன எந்திரப் பந்திசூழ் ஞாயில்
மஞ்சு சூழ்வன வரையென வுயர்மணி மாடம்
நஞ்சு சூழ்வன நயனியர் நளினமெல் லடிச்செம்
பஞ்சு சூழ்வன காளையர் குஞ்சியின் பரப்பு.

பொழிப்புரை :

அந்நகரின் உட்புற மதில்களில், பகைவரைத் தாக்குவதற்கு என நாட்டப் பெற்ற எந்திரங்கள் நிரல்படச் சூழ்ந்து இருக்கும். மேகங்கள் வந்து படிந்து சூழ்ந்த வண்ணம் இருப்பன மலை என உயர்ந்த அழகிய மாடங்கள். நஞ்சின் தன்மையை உடைய அழகிய கண்களை உடைய இளம் பெண்களின் தாமரை மலர்போன்ற அடிகளில் ஊட்டிய செம்பஞ்சின் குழம்பு, தம்மைக் காதலால் அணைத்திட வேண்டிநிற்கும் காதலர்களின் முடியில் சூழ்ந்திருக்கும்.

குறிப்புரை :

இஞ்சி - மதில். ஞாயில் - மதில் உறுப்பு. `பிணியின்மை, செல்வம், விளைவு இன்பம், ஏமம், அணி என்ப நாட்டிற்கு இவ்வைந்து\' (குறள், 738) என்பர் திருவள்ளுவர். `இஞ்சி சூழ்வன எந்திரம்\' என்பதால் ஏமமும், `மஞ்சு சூழ்வன மாடம்\' என்பதால் செல்வமும் விளைவும், `நயனியர் அடிப்பஞ்சு காளையர் குஞ்சி சூழ்வன\' என்பதால் பிணியின்மையும் இன்பமும் குறித்துக் காட்டியிருக்கும் அழகு காணத்தக்கது.

பண் :

பாடல் எண் : 3

விழவ றாதன விளங்கொளி மணிநெடு வீதி
முழவ றாதன மொய்குழ லியர்நட வரங்கம்
மழவ றாதன மங்கலம் பொலிமணி முன்றில்
உழவ றாதநல் வளத்தன ஓங்கிருங் குடிகள்.

பொழிப்புரை :

விளங்கும் அழகிய நெடிய வீதிகள் எங்கும், விழாக் கோலங்கள் நீங்காதன. வண்டினம் மொய்க்கும் `கூந்தலையுடைய பெண்கள் நடமாடும் அரங்குகள் எங்கும், முழவின் ஓசைகள் நீங்காதன. மங்கலம் பொலியும் அழகிய முற்றங்கள் எங்கும், மழலைச் சொல் ஓவாத குழந்தைகள் நீங்காதன. பெருமை பொருந்திய பெருங் குடிகளிடத்து உழவின் வளமான உணவின் செல்வம் என்றும் அறாது நிரம்ப உள்ளன.

குறிப்புரை :

வீதிகளில் விழவும், அரங்குகளில் முழவும், முன்றில் களில் மழவும் அடுத்தடுத்து இருத்தற்குக் குடிகளிடத்து உழுவறாத நல்வளங்கள் இருத்தலே காரணம் என்பது உய்த்துணர நின்றது. `உழுவார் உலகத்தார்க்கு ஆணி\' (குறள், 1032) என்றலும் காண்க.

பண் :

பாடல் எண் : 4

நீரி னிற்பொலி சடைமுடி நெற்றிநாட் டத்துக்
காரி னில்திகழ் கண்டர்தங் காதலோர் குழுமிப்
பாரின் மிக்கதோர் பெருமையால் பரமர்தாள் பரவும்
சீரின் மிக்கது சிவபுரி யெனத்தகுஞ் சிறப்பால்.

பொழிப்புரை :

அந்நகரம், கங்கை பொலியும் சடைமுடியையும், நெற்றிக் கண்ணையும், மேகம் போலக் கருமையின் அழகு பொலியும் கரிய கழுத்தையும் உடைய, தேவர்களின் தலைவனான சிவபெரு மானின் அன்பர்கள் கூடி, உலகில் சிறந்ததாய பெருமையால், பரம் பொருளாய ஈசன் திருவடிகளை வணங்கி வரும் சிறப்பின் மிக்கது. அதனால் அது சிவபுரி எனத்தகும் சிறப்பினது.

குறிப்புரை :

நீர் - ஈண்டுக் கங்கையைக் குறித்தது. பரமர் தாள் பரவி வருவதே பாரின் மிக்க சிறப்பாகும். அச்சிறப்புடைமையான் அது சிவபுரி எனத்தகும்.

பண் :

பாடல் எண் : 5

இன்ன வாழ்பதி யதனிடை
ஏயர்கோக் குடிதான்
மன்னி நீடிய வளவர்சே
னாபதிக் குடியாம்
தொன்மை மேவிய தொடர்ச்சியால்
நிகழ்வது தூய
பொன்னி நாட்டுவே ளாண்மையில்
உயர்ந்தபொற் பினதால்.

பொழிப்புரை :

இத்தகைய பெருவாழ்வுடைய அத்திருப்பெரு மங்கலமாய பதியிடத்து இருக்கும் ஏயர்கோக்குடி என்பது, வழிவழி யாகச் சிறந்து வரும் சோழ அரசர்களிடத்துத் தானைத் தலைமை பூண்டு நிற்கும் வரலாறு பெற்றதாய் என்றும் நிறைந்து இருப்பது. இந்த ஏயர் கோக்குடி என்னும் இனம், தூயதான சோழநாட்டு வேளாண்குலத்தில் மிக்குவிளங்கும் பொற்புடையதாகும்.

குறிப்புரை :

ஹேஹயர் என்பது கேகயர் எனக் குறிக்கப்பெற்று அதுவே ஈண்டு ஏயர் என மருவிற்று என்று கூறுப.

பண் :

பாடல் எண் : 6

அங்கண் மிக்கஅக் குடியினில் அவதரித் துள்ளார்
கங்கை வாழ்முடி யார்தொண்டர் கலிக்காமர் என்பார்
தங்கள் நாயகர் அடிபணி வார்அடிச் சார்ந்து
பொங்கு காதலி னவர்பணி போற்றுதல் புரிந்தார்.

பொழிப்புரை :

அத் திருப்பெருமங்கலப் பதியில் மிக்க பெரும் புகழுக்குரிய ஏயர்கோக்குடியில் வந்து தோன்றியவர் கங்கை வாழும் சடையையுடைய பெருமானின் தொண்டராய கலிக்காமர் என்பார். இவர், தங்கள் தலைவரான சிவபெருமானின் திருவடிகளைப் பெரும் பேறாகக் கொண்டு வாழும் அடியார்களுக்குச் செயத்தக்க பணிகளைச் செய்து வந்தார்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 7

புதிய நாள்மதிச் சடைமுடி யார்திருப் புன்கூர்க்
கதிக மாயின திருப்பணி அநேகமுஞ் செய்து
நிதிய மாவன நீறுகந் தார்கழ லென்று
துதியி னாற்பர வித்தொழு தின்புறு கின்றார்.

பொழிப்புரை :

அவர், நாளும் புதியதாய்த் தோன்றும் ஒற்றைக் கலையுடைய பிறையினைச் சூடும் சடை முடியையுடைய பெருமான் எழுந்தருளியிருக்கும் திருப்புன்கூருக்குத் திருப்பணிகள் பலவும் செய்து, அடியவர்களுக்கு உற்ற செல்வமாவன திருநீற்றை உகந்து அணியும் பெருமானின் திருவடிகளே என நாளும் போற்றித் தொழுது, அவ்வழிபாட்டால் வரும் இன்பத்தில் திளைத்து வாழ்பவராய இவர்,

குறிப்புரை :

பெருமானின் திருச்சடையில் இருக்கும் பொலிவாலும் அழகாலும் நாளும் புதிதாய்த் தோன்றுதலின் `புதிய நாள் மதி\' என் றார். மழையின்மையால் நாடு வருந்த மழை வேண்டி, இறைவற்குப் பன்னிருவேலி நிலம் தந்தும், அதனால் மிகு மழை பொழிய, அதனை நிறுத்த வேண்டி மீண்டும் இறைவற்குப் பன்னிருவேலி நிலம் தந்தும் அப்பகுதியை வாழ்வித்த அருமையால் `அதிகமாயின திருப்பணி அனேகமும் செய்து\' என்றார்.
`வையகம் முற்றும் மாமழை மறந்து
வயலில் நீரிலை மாநிலம் தருகோம்
உய்யக் கொள்கமற் றெங்களை யென்ன
ஒளிகொள் வெண் முகிலாய்ப் பரந் தெங்கும்
பெய்யு மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப்
பெயர்த்தும் பன்னிருவேலி கொண்டருளும்
செய்கை\'
(தி.7 ப.55 பா.2) எனச் சுந்தரர் அருளுவதுங் காண்க.

பண் :

பாடல் எண் : 8

நாவ லூர்மன்னர் நாதனைத் தூதுவிட் டதனுக்
கியாவ ரிச்செயல் புரிந்தன ரென்றவ ரிழிப்பத்
தேவர் தம்பிரா னவர்திறந் திருத்திய வதற்கு
மேவ வந்தஅச் செயலினை விளம்புவா னுற்றேன்.

பொழிப்புரை :

திருநாவலூர்த் தலைவராகிய நம்பியாரூரர், பெருமானைப் பரவையாரிடத்துத் தூதராக அனுப்பியதற்கு, யாவர் இச்செயல் புரிவார்? என இகழ்ந்துரைப்ப, தேவர்கட்கும் தலைவரான பெருமான் கலிக்காமருடைய தன்மையைத் திருத்தி, தாம் அடியார்க்கு எளியன் என்பதை உணர வைத்த அவ்வருஞ்செயலின் வரலாற் றினை, இனி அடியேன் எடுத்துச் சொல்லல் உற்றேன்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 9

திருத்தொண்டத் தொகையருளித்
திருநாவ லூராளி
கருத்தொன்று காதலினால்
கனகமதில் திருவாரூர்
ஒருத்தர்கழல் முப்பொழுதும்
உருகியஅன் பொடுபணிந்து
பெருத்தெழுமெய் யன்பினாற்
பிரியாதங் குறையுநாள்.

பொழிப்புரை :

திருநாவலூரை ஆட்சி கொள்ளும் அருளாளராய சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருவாரூரில் தங்கியிருந்து திருத்தொண்டத் தொகையை அருளிய பின்னர், ஒருமைப்பாடுற்ற பெருவிருப்பால், அழகிய மதில் சூழ்ந்த திருவாரூரில் வாழும் ஒப்பற்ற பெருமானின் திருவடிகளை முப்போதும் சென்று உருகிய அன்பொடும் பணிந்து, உள்ளத்து எழுகின்ற மெய்யன்பினால் திருவாரூரை விட்டுப் பிரியாது அங்கு வாழும் நாள்களில்,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 10

தாளாண்மை உழவுதொழில்
தன்மைவளந் தலைசிறந்த
வேளாளர் குண்டையூர்க்
கிழவரெனும் மேதக்கோர்
வாளார்வெண் மதியணிந்தார்
மறையவராய் வழக்கினில்வென்று
ஆளாகக் கொண்டவர்தாள்
அடைந்தன்பா லொழுகுவார்.

பொழிப்புரை :

முயற்சிக்கேற்ற முழுப்பயனை நல்கும் உழவுத் தொழிலின் இயல்பால், வளம் தலைக்கொண்ட வேளாண் குடியின ராய குண்டையூர்க் கிழார் என்னும் பெயருடைய பெரியவர், ஒளி நிறைந்து விளங்கும் வெண்மதியைச் சூடிய பெருமான் இவ்வுலகில் அந்தணராய் வடிவு கொண்டு வந்தருளி, வழக்கினில் வென்று ஆண் டருளப் பெற்ற சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவடிகளையே பற்றாகக் கொண்டு, அன்பினால் அவருக்குத் தொண்டுகள் செய்து வருவாராய்,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 11

செந்நெல்லும் பொன்னன்ன
செழும்பருப்பும் தீங்கரும்பின்
இன்னல்ல வமுதும்முதல்
எண்ணில்பெரும் பலவளங்கள்
மன்னியசீர் வன்றொண்டர்க்
கமுதாக வழுவாமல்
பன்னெடுநாள் பரவையார்
மாளிகைக்குப் படிசமைத்தார்.

பொழிப்புரை :

செந்நெல்லும், பொன் போன்ற செழுமையான பருப்பும், தித்திப்பாய கரும்பின் நல்ல அமுதும், முதலாக எண்ணற்ற பலவகையான வளங்கள் யாவற்றையும் நிலைபெற்ற சிறப்பினையுடைய சுந்தரமூர்த்தி சுவாமிகட்குத் திருவமுதாக அமைத்திட, இடையீடின்றிப் பன்னெடு நாள்கள், தமது இடத்திலிருந்து பரவையார் மாளிகைக்குப் படித்தரமாகத் தந்து வந்தார்.

குறிப்புரை :

படித்தரம் - நாளும் அளித்து வரும் அறக்கட்டளை. இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 12

ஆனசெயல் அன்பின்வரும்
ஆர்வத்தால் மகிழ்ந்தாற்ற
வானமுறை வழங்காமல்
மாநிலத்து வளஞ்சுருங்கப்
போனகநெற் படிநிரம்ப
எடுப்பதற்குப் போதாமை
மானமழி கொள்கையினால்
மனமயங்கி வருந்துவார்.

பொழிப்புரை :

இவ்வாறாக அன்பினால் வரும் ஆர்வத்தால் மகிழ்ந்து, அவருக்குச் செய்துவரும் காலத்து, ஒருசமயம் மழை பொழியாது ஒழிய, நிலத்தின் வளம் சுருங்கிடலால், திருவமுதிற்கு வேண்டிய நெல் அனுப்புதற்கு இயலாமையால், மானம் அழிந்த கொள்கையால், மனம் மயங்கிக் குண்டையூர்க் கிழார் வருந்துவாராகி,

குறிப்புரை :

செயத்தக்கதொன்றைச் செய்ய இயலாமையின் `மானம் அழிகொள்கை\\\' என்றார்.

பண் :

பாடல் எண் : 13

வன்றொண்டர் திருவாரூர்
மாளிகைக்கு நெல்லெடுக்க
இன்றுகுறை யாகின்ற
தென்செய்கேன் எனநினைந்து
துன்றுபெருங் கவலையினால்
துயரெய்தி உண்ணாதே
அன்றிரவு துயில்கொள்ள
அங்கணர்வந் தருள்புரிவார்.

பொழிப்புரை :

வன்றொண்டராய சுந்தரரின் திருவாரூர் மாளி கைக்கு நெல்லை எடுத்துச் சென்றிட இன்று குறை நேர்ந்ததே! என்செய்கேன்? என நினைந்து, பெருகும் கவலை மிகுதியால் துயர் அடைந்து, உணவும் அருந்துதலின்றி, அன்றிரவு துயில்கொள்ள, அது பொறாத அரிய தண்ணளியை யுடையவராய இறைவர், அவர் கனவில் தோன்றி அருள் செய்வாராய்,

குறிப்புரை :

*********************

பண் :

பாடல் எண் : 14

ஆரூரன் தனக்குன்பால்
நெல்தந்தோம் என்றருளி
நீரூருஞ் சடைமுடியார்
நிதிக்கோமான் தனையேவப்
பேரூர்மற் றதனெல்லை
அடங்கவும்நென் மலைப்பிறங்கல்
காரூரும் நெடுவிசும்புங்
கரக்கநிறைந் தோங்கியதால்.

பொழிப்புரை :

`நம்பியாரூரனுக்கு அளித்தற்காக உன்பால் நெல்லினைக் கொடுத்துள்ளோம்\\\' என்று குண்டையூர்க் கிழாருக்கு அருள் செய்து, கங்கைநீர் உலவும் சடைமுடியை உடைய சிவபெரு மான், நிதியின் தலைவனான குபேரனை ஏவுதலும் அச்செயலால், அப்பேரூராய குண்டையூரின் எல்லை அடங்கவும் நெல்லின் மலை யாகவே பொலிந்து, மேகம் தவழும் நெடிய வானமும் மறைய, எங் கும் அந்நெல்மலை ஓங்கியது.

குறிப்புரை :

ஆல் - அசை. இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 15

அவ்விரவு புலர்காலை
உணர்ந்தெழுவார் அதுகண்டே
எவ்வுலகில் நெல்மலைதா
னிதுவென்றே யதிசயித்துச்
செவ்வியபொன் மலைவளைத்தார்
திருவருளின் செயல் போற்றிக்
கொவ்வைவாய்ப் பரவையார்
கொழுநரையே தொழுதெழுவார்.

பொழிப்புரை :

அன்றைய இரவு விடியும் காலத்து, உறக்கத்தி னின்றும் நீங்கி உணர்ந்து எழும் குண்டையூர்க் கிழார், எவ்வுலகின் நெல்மலைதான் இஃது! என்று வியந்து, செவ்விய பொன்மலையாம் மேருவை வில்லாக வளைத்த பெருமானின் திருவருளின் செயலைப் போற்றி செய்து, கொவ்வைப் பழம் போலும் வாயினையுடைய பரவையாரின் கணவரான சுந்தரரையே நினைந்து தொழுவாராய்,

குறிப்புரை :

*********************

பண் :

பாடல் எண் : 16

நாவலூர் மன்ன னார்க்கு
நாயனார் அளித்த நெல்இங்
கியாவரா லெடுக்க லாகும்
இச்செய லவர்க்குச் சொல்லப்
போவன்யா னென்று போந்தார்
புகுந்தவா றருளிச் செய்து
தேவர்தம் பெருமான் ஏவ
நம்பியும் எதிரே சென்றார்.

பொழிப்புரை :

திருநாவலூர் அரசர்க்கு இறைவனால் தரப்பட்ட நெல்மலையை, இங்கு யாவரால் அவ்விடத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்? ஆதலால், அவ்வற்புதச் செயலை நேரில் அவருக்குச் சொல்ல யான் போவன் எனத் திருவாரூருக்குச் சென்றார்; தேவர்கட்கும் தேவராய பெருமானாரும் நம்பியாரூரருக்கு அங்கு நிகழ்ந்த தன் மையை அருள, அவரும் அவ்வாணையைச் சிரமேற்கொண்டு எதிர் சென்றார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 17

குண்டையூர்க் கிழவர் தாமும்
எதிர்கொண்டு கோதில் வாய்மைத்
தொண்டனார் பாதந் தன்னில்
தொழுதுவீழ்ந் தெழுந்து நின்று
பண்டெலாம் அடியேன் செய்த
பணியெனக் கின்று முட்ட
அண்டர்தம் பிரானார் தாமே
நெல்மலைஅளித்தா ரென்று.

பொழிப்புரை :

தம் பதியை நோக்கி எதிர்வரும் சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் குண்டையூர்க் கிழாரும் எதிர்கொண்டு, குற்றமற்ற வாய்மையை உடைய அத்தொண்டரைத் தொழுது, வீழ்ந்து எழுந்து நின்று, பெருமானே! முன்பெல்லாம் அடியேன் உமக்குச் செய்துவந்த பணிக்கு இன்று முட்டுப்பாடுற்ற நிலையில், தேவாதி தேவனாய பெருமானார் தாமே, வேண்டிய நெல் மலையைத் தந்துள்ளார் என மொழிந்து, பின்னரும்,

குறிப்புரை :

*********************

பண் :

பாடல் எண் : 18

மனிதரால் எடுக்கு மெல்லைத்
தன்றுநெல் மலையின் ஆக்கம்
இனியெனால் செய்ய லாகும்
பணியன்றி தென்னக் கேட்டுப்
பனிமதி முடியா ரன்றே
பரிந்துமக் களித்தார் நெல்லென்
றினியன மொழிந்து தாமும்
குண்டையூர் எய்த வந்தார்.

பொழிப்புரை :

`இந்நெல்மலையின் பெருக்கம் மனிதரால் எடுத் திடும் எல்லையில் அடங்குவதன்று. அது என்னால் செய்யத்தகும் பணியும் அன்று\\\' என்று மொழிந்திடச் சுந்தரரும் அவரை நோக்கி, `குளிர்ந்த இளம்பிறையைச் சூடிய சிவபெருமான் உம்பால் பரிந்து இந் நெல்மலையைக் கொடுத்தார்\\\' என இனியவாய சொற்களைக் கூறித் தாமும் அவருடன் கூடிக் குண்டையூர்ப் பதியை அணைய வந்தரு ளினார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 19

விண்ணினை அளக்கு நெல்லின்
வெற்பினை நம்பி நோக்கி
அண்ணலைத் தொழுது போற்றி
அதிசயம் மிகவு மெய்தி
எண்ணில்சீர்ப் பரவை யில்லத்
திந்நெல்லை யெடுக்க ஆளும்
தண்ணில வணிந்தார் தாமே
தரிலன்றி ஒண்ணா தென்று.

பொழிப்புரை :

வானளாவ உயர்ந்து நிற்கும் நெல்மலையை நோக்கியருளி, நம்பியாரூரர் பெருமானைத் தொழுது போற்றி, வியப்புற்ற நிலையில், அளவற்ற நீர்மையை உடைய பரவையின் மாளிகைக்கு இந்நெல்மலையைஎடுத்துச் செல்ல, ஆளினைக் குளிர்ந்த பிறையணிந்த பெருமானே தந்தால் அன்றி, இது எம்மால் எடுக்க முடியாது என மொழிந்து,

குறிப்புரை :

*********************

பண் :

பாடல் எண் : 20

ஆளிடவேண் டிக்கொள்வார்
அருகுதிருப் பதியான
கோளிலியில் தம்பெருமான்
கோயிலினை வந்தெய்தி
வாளனகண் மடவாள்
வருந்தாமே எனும்பதிகம்
மூளவருங் காதலுடன்
முன்தொழுது பாடுதலும்.

பொழிப்புரை :

நெல்மலையை எடுத்திட ஆள்களைத் தருமாறு வேண்டிக் கொள்வாராய், அதற்கு அருகிலுள்ள திருப்பதியான திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கும் பெருமானை அடைந்து, திருமுன் நின்று வணங்கி, `வாள்போலும் நீண்ட வரிவிழியை உடைய பரவை வருந்தாதவாறு இந்நெல் மலையை அவள் மனையில் கொண்டு சேர்க்க நல்ல ஆள்களைத் தந்தருளும்\\\' என்னும் கருத்தமைந்த திருப் பதிகத்தை, மேன்மேலும் பெருகி வளர்கின்ற அன்பினால் தொழுது பாடுதலும்,

குறிப்புரை :

இக்கருத்தமைவுடைய பதிகம், `நீள நினைந்தடியேன்\\\' (தி.7 ப.20) எனத் தொடங்கும் நட்டராகப் பண்ணிலமைந்த பதிகமாகும். நீள நினைந்தடியேன் உனை நித்தலுங் கைதொழுவேன் வாளன கண்மடவா ளவள் வாடி வருந்தாமே கோளிலி எம்பெருமான் குண்டை யூர்ச்சில நெல்லுப் பெற்றேன் ஆளிலை எம்பெருமான் அவை அட்டித்தரப் பணியே. என இப்பதிகத்து வரும் முதற் பாடலிலும், `நெல்லிட ஆள்கள் வேண்டி நினைந்து ஏத்திய பத்தும்\\\' எனவரும் பத்தாவது பாடலிலும் கூறப் பெறும் பொருண்மையை முகந்தே ஆசிரியர் இவ்வரலாற்று அமைவைத் தருகின்றார். `அவள் வாடி வருந்தாமே\\\' என்றது பரவையார் இறைவற் கும், அடியவர்களுக்கும், நாளும் சிறப்பொடு பூசனை செய்துவரும் செயற்பாட்டிற்கன்றி வேறு காரணத்தால் அன்றாம்.

பண் :

பாடல் எண் : 21

பகற்பொழுது கழிந்ததற்பின்
பரவைமனை யளவன்றி
மிகப்பெருகு நெல்லுலகில்
விளங்கியஆ ரூர்நிறையப்
புகப்பெய்து தருவனநம்
பூதங்க ளெனவிசும்பில்
நிகர்ப்பரிய தொருவாக்கு
நிகழ்ந்ததுநின் மலனருளால்.

பொழிப்புரை :

பகற்பொழுது கழிந்ததற்பின், பரவையின் மனை அளவில் அல்லது, மிகப் பெருக விளங்கிடும் இந்நெல், உலகில் விளங் கிய சிறப்புடைய திருவாரூர் நிறைய வந்து சேரும்படி கொண்டு சேர்ப் பன நம் பூதங்கள் எனப் பெருமானின் திருவருளினால், விண்வழி யாக ஒப்பற்றதொரு வாக்கு நிகழ்ந்தது.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின

பண் :

பாடல் எண் : 22

தம்பிரான் அருள்போற்றித்
தரையின்மிசை விழுந்தெழுந்தே
உம்பரா லுணர்வரிய
திருப்பாதந் தொழுதேத்திச்
செம்பொன்நேர் சடையாரைப்
பிறபதியுந் தொழுதுபோய்
நம்பரா ரூரணைந்தார்
நாவலூர் நாவலனார்.

பொழிப்புரை :

தமது பெருமானின் இத்திருவருள் நிகழ்வைக் கேட்ட திருநாவலூரர், அவ்வருளிப்பாட்டை நினைந்து, தொழுது போற்றி, நிலம்மீது விழுந்து எழுந்து, தேவராலும் உணர ஒண்ணாத திருவடிகளைத் தொழுது வணங்கி, அங்கிருந்து நீங்கிச் செம் பொன்னை ஒத்த சடைமுடியையுடைய பெருமானைப் பிற பதிகளி லும் சென்று வணங்கித் திருவாரூர் வந்து சேர்ந்தார்.

குறிப்புரை :

பிற பதிகளாவன திருவலிவலம், திருநெல்லிக்கா, திருக்காறாயில், திருஏமப்பேறூர் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை).
இவற்றிற்குரிய திருப்பதிகங்கள் எவையும் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 23

பூங்கோயில் மகிழ்ந்தருளும்
புராதனரைப் புக்கிறைஞ்சி
நீங்காத பெருமகிழ்ச்சி
யுடனேத்திப் புறம்போந்து
பாங்கானார் புடைசூழ்ந்து
போற்றிசைக்கப் பரவையார்
ஓங்குதிரு மாளிகையின்
உள்ளணைந்தார் ஆரூரர்.

பொழிப்புரை :

திருவாரூரிலுள்ள கோயிலில் அமர்ந்தருளி யிருக்கும் முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளாய பெருமானை முன்சென்று வணங்கிப் பெருமகிழ்ச்சியுடன் போற்றி, வெளியே போந்து, பாங்குடைய அடியார்கள்தம் பக்கலில் சூழ்ந்து போற்றிப் புகழ்ந்து வரப் பரவையாரின் மேலோங்கிய திருவுடைய மாளிகையின் உள்ளாக வந்து சேர்ந்தருளினார்.

குறிப்புரை :

இதுபோது இறைவன் திருமுன்பு போற்றிய திருப்பதிகம் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 24

கோவைவாய்ப் பரவையார்
தாம்மகிழும் படிகூறி
மேவியவர் தம்மோடு
மிகஇன்புற் றிருந்ததற்பின்
சேவின்மே லுமையோடும்
வருவார்தந் திருவருளின்
ஏவலினால் அவ்விரவு
பூதங்கள் மிக்கெழுந்து.

பொழிப்புரை :

கொவ்வைப் பழம் போலும் வாயினை உடைய பரவையார் மகிழுமாறு நிகழ்ந்த செயல்களைக் கூறி, அவருடன் கூடி மிக இன்புற்று இருக்க, ஆனேற்றின் மீது உமையம்மையாருடன் இருந்தருளும் இறைவனின் அருளால், அன்றிரவு பூதங்கள் மிக எழுந்து,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 25

குண்டையூர் நென்மலையைக்
குறட்பூதப் படைகவர்ந்து
வண்டுலாங் குழற்பரவை
மாளிகையை நிறைவித்தே
அண்டர்பிரான் திருவாரூர்
அடங்கவும்நெல் மலையாக்கிக்
கண்டவர்அற் புதமெய்துங்
காட்சிபெற அமைத்தனவால்.

பொழிப்புரை :

குண்டையூரிலிருந்த நெல்மலையைக் குறுகிய வடிவான அப்பூதப் படைகள், ஒருவருக்கும் தெரியாமே, முகந்து எடுத்து வந்து, வண்டுகள் உலாவி விளங்கிடும் கூந்தலையுடைய பரவையாரின் மாளிகை முழுவதும் சேர நிறைவித்தே, அதனுடன் அமையாது, தேவாதி தேவருடைய திருவாரூர் முழுவதும் நெல்லின் மலையேயாக்கி, கண்டவர்கள் வியக்குமாறு காட்சி பெற எங்கும் அமைத்தன.

குறிப்புரை :

ஆல் - அசை. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின

பண் :

பாடல் எண் : 26

அவ்விரவு புலர்காலை
ஆரூரில் வாழ்வார்கண்டு
எவ்வுலகில் விளைந்தனநெல்
மலையிவையென் றதிசயித்து
நவ்விமதர்த் திருநோக்கின்
நங்கைபுகழ்ப் பரவையார்க்
கிவ்வுலகு வாழவரு
நம்பியளித் தனவென்பார்.

பொழிப்புரை :

அன்று இரவு விடியும் அமையத்தே, திருவாரூரில் வாழ்வார் அந்நெல் மலையைப் பார்த்து, இந்நெல் மலைகள் எவ் வுலகில் விளைந்தன? என நினைந்து, வியப்புற்று, இவைதாம் மான் போலும் சிறந்த திருநோக்கினையுடைய நங்கை பரவை நாச்சி யாருக்கு இவ்வுலகம் வாழ வருகின்ற சுந்தரர் கொடுத்தனவாகும் என்று பலபடச் சொல்வார்களாகி,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 27

நீக்கரிய நெற்குன்று
தனைநோக்கி நெறிபலவும்
போக்கரிதா யிடக்கண்டு
மீண்டுந்தம் மில்புகுவார்
பாக்கியத்தின் திருவடிவாம்
பரவையார்க் கிந்நெல்லுப்
போக்குமிட மரிதாகும்
எனப்பலவும் புகல்கின்றார்.

பொழிப்புரை :

தம் முயற்சியால் அகற்றுதற்கு அரிய நெல் மலைகளை அவர்கள் பார்த்து, அதனால் தம்மூரில் பலவழிகளானும் வெளிப்போக அரிதாய்த் திரும்பித் தம் இல்லங்களில் செல்வார்களாய், `நாம் செய்த புண்ணியத்தின் திருவடிவாகிய பரவை அம்மையா ருக்கும், இவ்வளவும் கொண்டு சேர்க்க அவரது மாளிகையில் இடம் அரிதாகும்\' எனப் பலவாறாகப் பேசிக் கொள்வாராய்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 28

வன்றொண்டர் தமக்களித்த
நெற்கண்டு மகிழ்சிறப்பார்
இன்றுங்கள் மனையெல்லைக்
குட்படுநெற் குன்றெல்லாம்
பொன்தங்கு மாளிகையிற்
புகப்பெய்து கொள்கவென
வென்றிமுர சறைவித்தார்
மிக்கபுகழ்ப் பரவையார்.

பொழிப்புரை :

வன்றொண்டர் எனப்பெறும் சுந்தரமூர்த்தி சுவாமி கள் தமக்கு வழங்கிய நெல்மலையை, மிக்க புகழுடைய பரவையார் கண்டு, மனம் களிகூர்ந்து, `இன்று தத்தம் மனைகளின் எல்லைக்குட் பட்ட நெற்குவியலை, அவரவர்களும் தத்தம் மாளிகைகளில் சேரும் படி எடுத்துக் கொள்ளுங்கள்\' என்று வெற்றி முரசினை அறையுமாறு செய்தார்.

குறிப்புரை :

`நின் நயந்துறைநர்க்கும் நீ நயந்துறைநர்க்கும், பன்மாண் கற்பின் நின்கிளை முதலோர்க்கும், கடும்பின் கடும்பசி தீர யாழ நின், நெடுங்குறி எதிர்ப்பை நல்கியோர்க்கும், இன்னோர்க்கும் என்னாது என்னொடும் சூழாது, வல்லாங்கு வாழ்தும் என்னாது, எல்லோர்க்கும், கொடுமதி மனைகிழ வோயே\' (புறம். 163) என மனையாளுக்குக் கூறினர் பெருஞ்சித்திரனார். இங்கு மனையாள் திருவாரூர் வாழ்வார் பலர்க்கும் வழங்குமாறு நிகழ்ந்த அருள்திறம் காண்டற்குரியது. இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 29

அணியாரூர் மறுகதனில்
ஆளியங்கப் பறையறைந்த
பணியாலே மனைநிறைத்துப்
பாங்கெங்கும் நெற்கூடு
கணியாமற் கட்டிநகர்
களிகூரப் பரவையார்
மணியாரம் புனைமார்பின்
வன்றொண்டர் தமைப்பணிந்தார்.

பொழிப்புரை :

அழகிய திருவாரூர் வீதிகளில் ஆள்கள் இயங் குதற்கு ஏற்ப, பறை அறைவித்த அப்பணியால், தத்தம் மனைகளிலும் நெல் நிறைவித்து, மேலும் மிக்கிருந்த நெற்குவியலை அவரவர்களும் தத்தமக்கு அருகில் உள்ள இடங்களிலும் நெற் கூடுகளிலும் குறை விலாது வைத்துத் தமக்குக் கிடைத்த பெரும்பேற்றை நினைந்து, திருவா ரூர் நகரமே களி கூர்ந்திடலும், அது கண்ட பரவையாரும், அழகிய முத்து மாலையை அணிந்தவராய மார்பினையுடைய சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருவடிகளைப் பணிந்தார்.

குறிப்புரை :

பரவையார் தம் கணவரைப் பணிந்தது, இத்துணைப் பேற்றிற்கும் அவரே மூலமாய் நிற்றலைத் தாம் உணர்ந்ததனோடு நம்மனோர்க்கு உணர்த்தவுமாம். இதனால் முரசறைவித்து அவரவர்க் கும் தத்தம் எல்லைக்குட்பட்ட நெல்லை எடுத்துக் கொள்க எனக் கூறியதும், தம் கணவர் திருவுள்ளக் குறிப்புணர்ந்து செய்ததேயாம் என்பதும் உணரக் கிடக்கின்றது.

பண் :

பாடல் எண் : 30

நம்பியா ரூரர்திரு
வாரூரில் நயந்துறைநாள்
செம்பொற்புற் றிடங்கொண்டு
வீற்றிருந்த செழுந்தேனைத்
தம்பெரிய விருப்பினொடுந்
தாழ்ந்துணர்வி னாற்பருகி
இம்பருடன் உம்பர்களும்
அதிசயிப்ப ஏத்தினார்.

பொழிப்புரை :

இவ்வாறாக நம்பியாரூரர் திருவாரூரில் விரும்பி வாழும் காலத்து, நாளும், செம்பொன்மயமான புற்றில் இடங்கொண்டு வீற்றிருக்கும் செழுமை மிக்க தேனாய பெருமானாரைத் தமது உள்ளத்துப் பெருகிய விருப்பினோடும் தாழ்ந்து பணிந்து, அறிதற் கரிய அம்மூர்த்தியைத் தமது உணர்வினால் பருகி, இவ்வுலகில் உள்ள மனிதர்களுடன் தேவர்களும் அவர் வணங்கிப் பெறுகின்ற பேரின்ப நிலையைக் கண்டு, வியந்து நிற்பப் போற்றி வருவாராயினர்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 31

குலபுகழ்க் கோட்புலியார்
குறையிரந்து தம்பதிக்கண்
அலகில்புக ழாரூரர்
எழுந்தருள அடிவணங்கி
நிலவியவன் தொண்டர்அஃ
திசைந்ததற்பி னேரிறைஞ்சிப்
பலர்புகழும் பண்பினார்
மீண்டுந்தம் பதியணைந்தார்.

பொழிப்புரை :

இவ்வாறாய அருள் நிறைவுடன் இவர் இருப்பப் புகழ் விளங்கும் கோட்புலியார் என்னும் நாயனார், திருவாரூர் வந்து, தமது ஊராகிய நாட்டியத்தான்குடிக்கு எழுந்தருளி வருமாறு, குறைவிலாத புகழுடைய சுந்தரரை வேண்டி அவர் திருவடிகளைப் பணிதலும், அதற்கு அவரும் இசைய, அவரை வணங்கிப் பலரும் புகழும் பண்புடைய கோட்புலி நாயனார் அவர் வருகையை எதிர் நோக்கி மீண்டும் தம் பதிக்குச் சென்றார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 32

தேவ ரொதுங்கத் திருத்தொண்டர்
மிடையுஞ் செல்வத் திருவாரூர்
காவல் கொண்டு தனியாளுங்
கடவுட் பெருமான் கழல்வணங்கி
நாவ லூர ரருள் பெற்று
நம்பர் பதிகள் பிறநண்ணிப்
பாவை பாகர் தமைப்பணிந்து
பாடும் விருப்பிற் சென்றணைவார்.

பொழிப்புரை :

தேவர்களும் வழிவிட்டு ஒதுங்கிடச் சீலமுடைய திருத்தொண்டர்கள் நெருங்கிச் சூழும் அருட் செல்வமுடைய திரு வாரூர் நகரினைக் காவல் கொண்டு தனியரசு செலுத்திவரும் பெருமானின் திருவடிகளை வணங்கி, பெருமான் எழுந்தருளி யிருக்கும் பிற பதிகளையும் சென்றடைந்து அங்குப் பெருமானைப் பணிந்து பாடும் விருப்பினுடன் செல்வாராய்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 33

மாலும் அயனும் உணர்வரியார்
மகிழும் பதிகள் பலவணங்கி
ஞால நிகழ்கோட் புலியார்தம்
நாட்டி யத்தான் குடிநண்ண
ஏலும் வகையால் அலங்கரித்தங்
கவரு மெதிர்கொண் டினிதிறைஞ்சிக்
கோல மணிமா ளிகையின்கண்
ஆர்வம் பெருகக் கொடுபுக்கார்.

பொழிப்புரை :

திருமாலும் அயனும் உணர்வரிய சிவபெருமான் இனிதுறையும் பதிகள் பலவற்றையும் வணங்கிப் பின், இந்நிலவுலகில் சிறப்புற்றிலங்கும் கோட்புலி நாயனாரது நாட்டியத்தான்குடி என்னும் நற்பதியை நண்ணுதலும், அவர் வருகை உணர்ந்த கோட்புலியார் தமது நகரைப் பொருந்தும் வகையால் அழகுபடுத்தி, நகர் வாயிலில் வந்து நம்பியாரூரரை எதிர்கொண்டு, இனிது வணங்கித் தமது அழகு மிக்க மணி மாளிகையினிடத்து அழைத்துக் கொண்டு சென்றார்.

குறிப்புரை :

பிற பதிகளாவன திருவிளமர், திருஏமப்பேறூர், மாவூர் முதலியனவாகலாம் என்பர் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை).

பண் :

பாடல் எண் : 34

தூய மணிப்பொன் தவிசிலெழுந்
தருளி யிருக்கத் தூநீரால்
சேய மலர்ச்சே வடிவிளக்கித்
தெளித்துக் கொண்டச் செழும்புனலால்
மேய சுடர்மா ளிகையெங்கும்
விளங்க வீசி யுளங்களிப்ப
ஏய சிறப்பில் அர்ச்சனைகள்
எல்லாம் இயல்பின் முறைபுரிவார்.

பொழிப்புரை :

மாளிகையை அடைந்தபின், தூய முத்துக்களால் ஆன அரியணையில் அவர் இருந்திடக் கோட்புலியார், செம்மை பொருந்திய நம்பி ஆரூரரின் மலரணைய திருவடிகளை நீரால் விளக்கி, அந்நீரைத் தம்மீதும் அழகின் ஒளிவீசும் மாளிகையிடத்தும் எங்கும் விளங்கிடத் தெளித்துத் தம் உள்ளம் களிப்புற, நன்மை பொருந்திய சிறப்பினால் போற்றியுரைகள் பலவற்றையும் இயல்பான முறையினால் புரிவாராய்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 35

பூந்தண் பனிநீர் கொடுசமைத்த
பொருவில் விரைச்சந் தனக்கலவை
வாய்ந்த அகிலி னறுஞ்சாந்து
வாச நிறைமான் மதச்சேறு
தோய்ந்த புகைநா வியின்நறுநெய்
தூய பசுங்கர்ப் பூரமுதல்
ஏய்ந்த அடைக்கா யமுதினைய
எண்ணில் மணிப்பா சனத்தேந்தி.

பொழிப்புரை :

அழகிய மலர்களினின்றும் எடுத்த பன்னீரால் அமைந்த நறுமணம் மிக்க சந்தனக் கலவையையும், பொருந்திய அகிலின் கட்டையைத் தேய்த்தலால் வந்த சாந்தினையும், மணம் நிறைந்த மானின் கத்தூரிக் குழம்பினையும், மணம் மிக்க நறும் புகையையும், வாசனை உடைய புனுகு, பசுங்கற்பூரம் முதலாகிய இவற்றுடன் நன்மை தரும் பாக்கு, வெற்றிலைத் திருவமுது ஆகிய இவற்றையும் எண்ணற்ற பொற்கலங்களில் எடுத்து ஏந்தி வந்து,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 36

வேறு வேறு திருப்பள்ளித்
தாமப் பணிகள் மிகவெடுத்து
மாறி லாத மணித்திருவா
பரண வருக்கம் பலதாங்கி
ஈறில் விதத்துப் பரிவட்டம்
ஊழி னிரைத்தே யெதிரிறைஞ்சி
ஆறு புனைந்தா ரடித்தொண்டர்
அளவில் பூசை கொளவளித்தார்.

பொழிப்புரை :

வேறு வேறு வகையாக அணிந்திடக் கொள்ளும் மலர் மாலைகளை மிகச் சிறப்பாக அமைவதாக, ஒப்பற்ற அணி வகைகளையும், ஒப்பற்ற அழகான ஆடைகளையும் முறையாக வைத்து வணங்கி, கங்கையாறு அணிந்த பெருமானின் திருவடித் தொண்டராய ஆரூரருக்கு, அளவற்ற இப்பூசைகளைக் கொள்ளுமாறு செய்து அருளினார் கோட்புலி நாயனார்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 37

செங்கோல் அரசன் அருளுரிமைச்
சேனா பதியாங் கோட்புலியார்
நங்கோ மானை நாவலூர்
நகரார் வேந்தை நண்பினால்
தங்கோ மனையில் திருவமுது
செய்வித் திறைஞ்சித் தலைசிறந்த
பொங்கோ தம்போற் பெருங்காதல்
புரிந்தார் பின்னும் போற்றுவார்.

பொழிப்புரை :

செவ்விதாக ஆட்சிபுரியும் சோழ அரசனின் அருளிற்கு உரிமையுடைய தானைத் தலைவராய கோட்புலி நாய னார், நம் தலைவரும் திருநாவலூரின் அரசருமான நம்பியாரூரரை நட்பு முறையால், தமது தலைமைப்பாடான திருவுடைய மனையில் திருவமுது செய்வித்து, வணங்கித் தலைசிறந்த பொங்கும் கடல்போல் உளம்பெருகும் காதல் கொண்டு, மேலும் போற்றுவாராய்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 38

ஆனா விருப்பின் மற்றவர்தாம்
அருமை யால்முன் பெற்றெடுத்த
தேனார் கோதைச் சிங்கடியார்
தமையும் அவர்பின் கருவுயிர்த்த
மானார் நோக்கின் வனப்பகையார்
தமையும் கொணர்ந்து வன்றொண்டர்
தூநாண் மலர்த்தாள் பணிவித்துத்
தாமுந் தொழுது சொல்லுவார்.

பொழிப்புரை :

குறைவு படாத நல்ல விருப்பத்தால், தாம் முன்னர்ப் பெற்றெடுத்த தேன் சொரியும் மலர்சூடிய கூந்தலையுடைய சிங்கடியார் என்னும் மகளாரையும், அவளுக்குப் பின் பெற்றெடுத்த மான்போலும் பார்வையால் சிறந்த வனப்பகையார் என்னும் மகளாரையும் நம்பியாரூரரின் திருமுன்பு கொணர்ந்து, அவருடைய தூய அன்றலர்ந்த மலர்போலும் திருவடிகளைப் பணியச் செய்து, தாமும் அவரைத் தொழுது சொல்வாராகி,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 39

அடியேன் பெற்ற மக்களிவர்
அடிமை யாகக் கொண்டருளிக்
கடிசேர் மலர்த்தாள் தொழுதுய்யக்
கருணை யளிக்க வேண்டுமெனக்
தொடிசேர் தளிர்க்கை இவரெனக்குத்
தூய மக்க ளெனக்கொண்டப்
படியே மகண்மை யாக்கொண்டார்
பரவை யார்தங் கொழுநனார்.

பொழிப்புரை :

`பெருமானே! அடியேன் பெற்ற மக்களிவர்கள். உமக்குப் பணிவிடை செய்யும் உரிமைப் பொருளாகக் கொண்டருளி, தங்களின் நறுமணம் மிக்க மலர்த் தாள்களைத் தொழுது உய்ந்திடக் கருணை செய்திடல் வேண்டும்\' என்றலும், அதுகேட்ட பரவையாரின் கணவரான சுந்தரரும், வளையல் அணிந்த தளிர்போலும் மென்மை யான கைகளுடைய இம்மகளிர் தாமும், எனக்குத் தூய மக்களாவர் என மொழிந்து, அவர்களைத் தமது மக்களாக ஏற்றார்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 40

கோதை சூழ்ந்த குழலாரைக்
குறங்கின் வைத்துக் கொண்டிருந்து
காதல் நிறைந்த புதல்வியராம்
கருத்துட் கசிவால் அணைத்துச்சி
மீது கண்ணீர் விழமோந்து
வேண்டு வனவுங் கொடுத்தருளி
நாதர் கோயில் சென்றடைந்தார்
நம்பிதம்பி ரான்தோழர்.

பொழிப்புரை :

மலர்சூடிய கூந்தலையுடைய அம்மக்களைத் தம்மடி மீது வைத்து, அவர்களைத் தம் காதல் நிறைந்த மக்களாய்க் கருத்துட் கொண்டு, கசிவால் அணைத்து, உச்சியின் மீது கண்ணீர் விழ மோந்து அவர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுத்தருளிய பின்னர்த் தம் தலைவராய சிவபெருமானின் திருக்கோயிலைச் சென்றடைந்தார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 41

வென்றி வெள்ளே றுயர்த்தருளும்
விமலர் திருக்கோ புரம்இறைஞ்சி
ஒன்றும் உள்ளத் தொடும்அன்பால்
உச்சி குவித்த கரத்தோடும்
சென்று புக்குப் பணிந்துதிருப்
பதிகம் பூணா னென்றெடுத்துக்
கொன்றை முடியா ரருளுரிமை
சிறப்பித் தார்கோட் புலியாரை.

பொழிப்புரை :

வெற்றியைத் தரும் வெண்மையான ஆனேற்றுக் கொடியை உயர்த்தி அருளும் பெருமானாரின் திருக்கோயிலின் அழகிய கோபுரத்தை வணங்கி, ஒருமைப்பட்ட உள்ளத்தோடும் அன்பினால் உச்சியில் சூடிய திருக்கரத்தோடும், கோயிலினுள் சென்று, பெருமானைப் பணிந்து, அங்குப் `பூணாண்\' எனத் தொடங் கித் திருப்பதிகம் பாடியருளிக் கொன்றை மலரை முடிமேலுடைய பெருமானின் அருளுக்கு உரிமையால் கோட்புலியாரை அப்பதிகத் துள் சிறப்பித்தருளினார்.

குறிப்புரை :

: `பூணாண்\' எனத் தொடக்கமுடைய பதிகம் தக்கராகப் பண்ணில் அமைந்த பதிகமாகும். (தி.7 ப.15).

பண் :

பாடல் எண் : 42

சிறப்பித் தருளுந் திருக்கடைக்காப்
பதனி னிடைச்சிங் கடியாரைப்
பிறப்பித்தெடுத்த பிதாவாகத்
தம்மை நினைந்த பெற்றியினால்
மறப்பில் வகைச்சிங் கடியப்ப
னென்றே தம்மை வைத்தருளி
நிறப்பொற் புடைய இசைபாடி
நிறைந்த அருள்பெற் றிறைஞ்சுவார்.

பொழிப்புரை :

அவ்வாறு கோட்புலி நாயனாரைச் சிறப்பித் தருளும் திருப்பதிகத் திருக்கடைக்காப்பில், சிங்கடியாரைப் பெற்று எடுத்த தந்தையாராகத் தம்மை நினைந்த அத்தன்மையினால், அப் பதிகத்தில் மறவாது `சிங்கடி அப்பன்\' என்றே தம்மை வைத்தருளி, பல வகையானும் நிறைவுடைய பண் இசை பாடிப் பெருமானின் நிறைந்த அருளைப் பெற்று வணங்குவாராய்,

குறிப்புரை :

கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற
கொடிறன் கோட்புலி சென்னி
நாடார் தொல்புகழ் நாட்டியத் தான்குடி
நம்பியை நாளும் மறவாச் சேடார் பூங்கழல் சிங்கடி யப்பன்
திருவா ரூரன் உரைத்த
பாடீ ராகிலும் பாடுமின் தொண்டீர் பாடநும் பாவம் பற்றறுமே.
என்பது இப்பதிகத்து வரும் பத்தாவது பாடலாகும். இதன்கண் கோட் புலியாரைச் சிறப்பித்திருப்பதுடன், அவர்தம் மகளாருக்குத் தந்தை என்ற முறையில் ஆரூரர், தம்மைச் சிங்கடியப்பன் என்று குறித்து இருப்பதும் காண்க.

பண் :

பாடல் எண் : 43

அங்கு நின்றும் எழுந்தருளி
அளவி லன்பில் உள்மகிழச்
செங்க ணுதலார் மேவுதிரு
வலிவ லத்தைச் சேர்ந்திறைஞ்சி
மங்கை பாகர் தமைப்பதிகம்
வலிவ லத்துக் கண்டேனென்
றெங்கும் நிகழ்ந்த தமிழ்மாலை
எடுத்துத் தொடுத்த விசைபுனைவார்.

பொழிப்புரை :

அவ்விடத்தினின்றும் எழுந்தருளி, அளவற்ற அன்பினால் உள்ளம் மகிழ்ந்திட, சிவந்த நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமான் மேவியிருக்கும் திருவலிவலம் என்னும் திருப்பதி யினைச் சேர்ந்து, வணங்கி, உமையொரு கூறனாய பெருமானை `வலிவலத்துக் கண்டேன்\' என்று எங்கும் பெருமை பொருந்த விளங்கும் திருப்பதிகத் தமிழ்மாலையை எடுத்துத் தொடுத்துப் பாடி மகிழ்வார்.

குறிப்புரை :

இந்நிறைவுடைய பாடல், `ஊன் அங்கத்து\' (தி.7 ப.67) எனத் தொடங்கும் தக்கேசிப் பண்ணிலமைந்ததாகும். இப்பதிகப் பாடல் முழுதினும் `வலிவலந்தனில் வந்து கண்டேனே\' என்னும் தொடர் அமைந்திருத்தலின் அதனை ஆசிரியர் எடுத்து மொழிந்தார்.

பண் :

பாடல் எண் : 44

நன்று மகிழுஞ் சம்பந்தர்
நாவுக் கரசர் பாட்டுகந்தீர்
என்று சிறப்பித் திறைஞ்சிமகிழ்ந்
தேத்தி யருள்பெற் றெழுந்தருளி
மன்றி னிடையே நடம்புரிவார்
மருவு பெருமைத் திருவாரூர்
சென்று குறுகிப் பூங்கோயிற்
பெருமான் செம்பொற் கழல்பணிந்து.

பொழிப்புரை :

அத்திருப்பதிகத்தில் பெரிதும் உம்மைப் பரவி மகிழும் திருஞானசம்பந்தப் பெருமானும் திருநாவுக்கரசரும் விண் ணப்பிக்கும் பாடல்களைக் கேட்டு உகந்தீர் என்று மொழிந்து, வணங்கி, அருள்பெற்று, எழுந்தருளி மேற்சென்று, திருவம்பலத்தினிடமாகக் கூத்தியற்றும் பெருமான் வீற்றிருக்கும் பெருமையுடைய திருவாரூ ருக்குச் சென்று அணைந்து, அங்குப் பூங்கோயிலின்கண் அமர்ந்த பெருமானின் செம்பொன்னின் சிலம்பணிந்த சேவடிகளைப் பணிந்து,

குறிப்புரை :

`நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக் கரையனும் பாடிய நற்றமிழ் மாலை சொல்லிய வேசொல்லி ஏத்துகப் பானை\' (தி.7 ப.67 பா.5) என வரும் அருள்மொழியை நினைவு கூர்ந்து இப் பாடலில் அருளுகின்றார் ஆசிரியர். இவ்விரு பெருமக்களும் அரு ளிய பதிகங்களையே தொடர்ந்து கூறினும், பெருமானார் கூறிய தையே கூறுகின்றார் எனும் உவர்ப்பின்றி அருள்செய்வான் என்ப தால், நம் அருளாளர் பெருமக்கள் அருளியனவற்றையே நாம் கூறி உய்யலாம் என்பது தெளிவாகின்றது. காரணம் அவர்கள் அனை வரும் அருளாளர்கள். இறைவனை உயிரினும் மேலாக உணர்ந்து போற்றிவந்த தன்மையால் அப்பெருமானைத் தம்மகத்துக் கொண்ட வர்கள். ஆதலின் அவர்கள் திருவாக்கைச் சலிப்பின்றி ஏற்கின்றான் இறைவன்.

பண் :

பாடல் எண் : 45

இறைஞ்சிப் போந்து பரவையார்
திருமா ளிகையில் எழுந்தருளி
நிறைந்த விருப்பின் மேவுநாள்
நீடு செல்வத் திருவாரூர்ப்
புறம்பு நணிய கோயில்களும்
பணிந்து போற்றிப் புற்றிடமாய்
உறைந்த பெருமான் கழல்பிரியா
தோவா இன்பம் உற்றிருந்தார்.

பொழிப்புரை :

வணங்கியவர், அக்கோயிலினின்றும் மீண்டருளி, பரவையார் திருமாளிகைக்குச் சென்று, அங்குத் தங்கி, உளம் நிறைந்த விருப்புடன் வாழ்ந்து வரும் காலத்தில், நீடிய செல்வமுடைய திருவா ரூரின் புறத்தே அணிமையாக உள்ள கோயில்களையும் சென்று பணிந்து போற்றிப் புற்றின் இடமாக உறைந்தருளும் பெருமானின் திருவடிகளையும் பிரியாது வணங்கி என்றும் ஒழியாத இன்பத்தைப் பெற்றிருந்தார்.

குறிப்புரை :

நண்ணிய கோயில்கள் என்பன திருவிளமர், திருமாலு மங்கை, திருச்சாத்தமங்கை, திருப்பள்ளியின் முக்கூடல் முதலாயின வாகலாம் என்பர் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை). இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 46

செறிபுன் சடையார் திருவாரூர்த்
திருப்பங் குனிஉத் திரத்திருநாள்
குறுக வரலும் பரவையார்
கொடைக்கு விழாவிற் குறைவறுக்க
நிறையும் பொன்கொண் டணைவதற்கு
நினைந்து நம்பி திருப்புகலூர்
இறைவர் பாதம் பணியவெழுந்
தருளிச் சென்றங் கெய்தினார்.

பொழிப்புரை :

இவ்வாறு ஆரூரர் இன்புற்று வாழும் நாளில், நிறைந்த திருச்சடையையுடைய பெருமான் அமர்ந்தருளும் திருவா ரூர்த் திருப்பங்குனி உத்திரத் திருநாள் அணுக, அப்பங்குனி உத்திரத் திருநாளில் பரவையார் நிகழ்த்திவரும் அருந்தொண்டிற்குப் பொருட் குறைவு வாராதவாறு, நிறைந்த பொன் கொண்டணைவதற்குத் திருவுளம் பற்றிய நம்பியாரூரர், திருப்புகலூரில் எழுந்தருளியிருக்கும் இறைவர் திருவடிகளைப் பணிய அங்குச் சென்றார்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 47

சென்று விரும்பித் திருப்புகலூர்த்
தேவர் பெருமான் கோயில்மணி
முன்றில் பணிந்து வலங்கொண்டு
முதல்வர் முன்பு வீழ்ந்திறைஞ்சித்
தொன்று மரபி னடித்தொண்டு
தோய்ந்த வன்பிற் றுதித்தெழுந்து
நின்று பதிக விசைபாடி
நினைந்த கருத்து நிகழ்விப்பார்.

பொழிப்புரை :

சென்று அத்திருப்புகலூரில் அமர்ந்தருளும் தேவர் களின் தலைவனாய பெருமான் எழுந்தருளியிருக்கும் கோயிலின் அழகிய திருமுற்றத்தை அடைந்து, பணிந்து வலங்கொண்டு, தம் முதல் வர் முன்பாக வீழ்ந்து வணங்கி, வழிவழியாக நீளநினைந்து வரும் மரபில் அடிமையாகித் திருவடித் தொண்டு செய்து வரும் சிறப்பினால், முழுவதும் மூழ்கிய அன்பினால் போற்றிசெய்து, எழுந்து திருமுன்பு நின்று, திருப்பதிக இசை பாடித் தாம் நினைந்த கருத்தைப் பெருமா னிடம் விண்ணப்பித்துக் கொள்வாராய்,

குறிப்புரை :

இதுபொழுது அருளிய பதிகம் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 48

சிறிது பொழுது கும்பிட்டுச்
சிந்தை முன்னம் அங்கொழிய
வறிது புறம்போந் தருளியயல்
மடத்தி லணையார் வன்றொண்டர்
அறிவு கூர்ந்த வன்பருடன்
அணிமுன் றிலினோ ரருகிருப்ப
மறிவண் கையா ரருளேயோ
மலர்க்கண் துயில்வந் தெய்தியதால்.

பொழிப்புரை :

சிறிதுநேரம் கும்பிட்டு, சிந்தையில் பெருமானின் நினைப்பைத் தவிரப் பிறிதொழிந்து நிற்ப, வேண்டியவாறு பொருள் பெறாது வறிதே வெளியில் வந்தருளி, அருகில் உள்ள திருமடத்தில் அறிவுமிக்க அன்பர்களுடன் செல்லாது, திருக்கோயிலின் அழகிய திருமுற்றத்தின் அருகே இருந்திட, அதுபொழுது மான்கன்றை ஏந்திய இறைவனின் அருளாலேயோ, என்னவோ, அறியோம். அவருடைய மலர்போன்ற கண்களில் துயில்வந்து பொருந்தியது.

குறிப்புரை :

இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 49

துயில்வந் தெய்தத் தம்பிரான்
றோழ ரங்குத் திருப்பணிக்குப்
பயிலும் சுடுமட் பலகைபல
கொணர்வித் துயரம் பண்ணித்தேன்
அயிலும் சுரும்பார் மலர்ச்சிகழி
முடிமேல் அணையா உத்தரிய
வெயிலுந் தியவெண் பட்டதன்மேல்
விரித்துப் பள்ளி மேவினார்.

பொழிப்புரை :

அவ்வாறு துயில்வந்த அளவில், தம்பிரான் தோழராய சுந்தரர், அங்குத் திருக்கோயில் திருப்பணிக்கு இருந்த சுட்ட மண்கட்டிகளான செங்கற்கள் பலவற்றைக் கொண்டுவரச் செய்து, உயரமாக அடுக்கி, தேன்விரும்பும் வண்டினங்கள் மொய்த்திடும் மலர்களையுடைய திருமுடிக்குமேல் அணையாக மேலாடையாய ஒளி பொருந்திய வெண்பட்டாடையை அதன்மீது விரித்துத் துயில் கொண் டார்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 50

சுற்று மிருந்த தொண்டர்களுந்
துயிலு மளவில் துணைமலர்க்கண்
பற்றுந் துயில்நீங் கிடப்பள்ளி
யுணர்ந்தார் பரவை கேள்வனார்
வெற்றி விடையா ரருளாலே
வேமண் கல்லே விரிசுடர்ச்செம்
பொன்திண் கல்லா யினகண்டு
புகலூ ரிறைவ ரருள்போற்றி.

பொழிப்புரை :

அதுபொழுது உடனிருந்த தொண்டர்களும் துயில்கின்ற அளவில், ஆரூரரின் தாமரை மலரனைய இரு கண்களை யும் பற்றிய உறக்கம் நீங்கிட, வெற்றி பொருந்திய ஆனேற்றை ஊர்தி யாக உடைய பெருமானின் திருவருளால், வெந்திடச் சுட்ட கற்கள், விரிந்த ஒளியுடைய செம்பொன் கற்களாய் இருந்தமை கண்டு, திருப்புகலூர் இறைவரின் அருளை நினைந்து, தொழுது, வணங்கி,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 51

தொண்ட ருணர மகிழ்ந்தெழுந்து
துணைக்கைக் கமல முகைதலைமேல்
கொண்டு கோயி லுட்புக்குக்
குறிப்பி லடங்காப் பேரன்பு
மண்டு காத லுறவணங்கி
வாய்த்த மதுர மொழிமாலை
பண்தங் கிசையில் தம்மையே
புகழ்ந்தென் றெடுத்துப் பாடினார்.

பொழிப்புரை :

: அதுபொழுது அடியவர்களும் துயில் உணரத் தாமும் மகிழ்ந்து எழுந்து, துணையான திருவுடைய செந்தாமரையின் முகைபோலத் திருக்கைகளைத் தலைமேல் குவித்துக்கொண்டு கோயிலுட் புகுந்து, தம்அளவில் அடங்காத பேரன்பு மிகும் காதல் கொள்ள வணங்கித், தமக்கு அந்நிலையில் வாய்த்த இனிய பண்ணமைந்த இசையால் `தம்மையே புகழ்ந்து\' என்று தொடங்கும் பதிகத்தை எடுத்துப் பாடியருளினார்.

குறிப்புரை :

`தம்மையே புகழ்ந்து\' என்று தொடங்கும் பதிகம் கொல்லிப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.34). திருவருளால் செங்கல் பொன்னாக, அப்பேரருள்திறத்தை நினைந்து புலவராற்றுப் படையாக இப்பதிகத்தை அருளிச் செய்துள்ளார் ஆரூரர். திருக்கடைக்காப்பில், வனப்பகையப்பன், சடையன் தன் சிறுவன் என அருளியிருப்பன இவர்தம் வரலாற்றிற்குத் துணையா கின்றன.

பண் :

பாடல் எண் : 52

பதிகம் பாடித் திருக்கடைக்காப்
பணிந்து பரவிப் புறம்போந்தே
எதிரி லின்பம் இம்மையே
தருவா ரருள்பெற் றெழுந்தருளி
நிதியின் குவையும் உடன்கொண்டு
நிறையும் நதியுங் குறைமதியும்
பொதியுஞ் சடையார் திருப்பனையூர்
புகுவார் புரிநூல் மணிமார்பர்.

பொழிப்புரை :

இத்திருப்பதிகம் பாடி அப்பதிகத்திற்குத் திருக் கடைக்காப்பும் அணிந்து போற்றி, வெளியே போந்து, ஒப்பற்ற இன்பத்தை இப்பிறவியிலேயே தரும் பெருமானின் அருள் பெற்று, அப்பெருமானின் அருளால் பெற்ற பொன் குவியலையும் உடன் கொண்டு, நீர் நிறைந்த கங்கை நதியையும், இளம் பிறையையும், திருச்சடையையும் உடைய பெருமானின் திருப்பனையூர் என்னும் திருப்பதிக்குச் சென்று சேர்ந்தார் முந்நூலணிந்த அழகிய மார்புடன் விளங்கும் சுந்தரர்.

குறிப்புரை :

எதிரில் - ஒப்பற்ற. `இம்மை யேதருஞ் சோறுங் கூறையும் ஏத்த லாம்இடர் கெடலுமாம், அம்மை யேசிவ லோகம் ஆள்வதற் கியாதும் ஐயுற வில்லையே\' என வரும் இப்பதிக முதற் பாடல் கருத்தை உளங்கொண்டே `எதிரி லின்பம் இம்மையே தருவா ரருள்பெற்று\' என ஆசிரியர் அருளுவாராயினர்.

பண் :

பாடல் எண் : 53

செய்ய சடையார் திருப்பனையூர்ப்
புறத்துத் திருக்கூத் தொடுங்காட்சி
எய்த அருள எதிர்சென்றங்
கெழுந்த விருப்பால் விழுந்திறைஞ்சி
ஐயர் தம்மை அரங்காட
வல்லார் அவரே யழகியரென்
றுய்ய வுலகு பெறும்பதிகம்
பாடி யருள்பெற் றுடன்போந்தார்.

பொழிப்புரை :

திருப்பனையூர்த் திருக்கோயிலுக்குச் சுந்தரர் வந்து கொண்டிருக்க, அவர் முன்பாகச் சிவந்த சடையையுடைய சிவபெருமான், தம் கோயிலின் வெளிப்புறத்து, திருக்கூத்தாடும் காட்சியைக் காணுமாறு அருள் செய்திடலும், அங்கு எழுந்த பெரு விருப்பால் விழுந்து வணங்கிப் பெருமானை `அரங்காட வல்லார் அவரே அழகியர்\' என்று இவ்வுலகம் உய்யத் திருப்பதிகம் பாடி, அருள் பெற்று, உடன் திருப்பனையூரினின்றும் சென்றார்.

குறிப்புரை :

: `மாடமாளிகை\' (தி.7 ப.87) எனத் தொடங்கும் இத் திருப்பதிகம் சீகாமரப் பண்ணிலமைந்ததாகும். இப்பதிகத்தில் வரும் ஒன்பது பாடல்களிலும் பெருமானின் திருநடனத்தைப் பலவாறாகச் சிறப்பித்து, அவ்வாறு ஆடல் வல்லார் அவரே அழகியரே என நிறைவு படுத்தியருளுகின்றார் ஆரூரர். அதனை யுளங்கொண்ட குறிப்பிலேயே ஆசிரியர் இப்பாடலை அருளியுள்ளார். திருக்கடைக்காப்பில், `வன்றொண்டன் செஞ்சொற் கேட்டுகப்பா ரவ ரேய ழகியரே\' என நிறைவு செய்திருப்பதும் அறிந்தின்புறத் தக்கதாம். இவ்விரு பாடல் களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 54

வளமல் கியசீர்த் திருப்பனையூர்
வாழ்வா ரேத்த எழுந்தருளி
அளவில் செம்பொன் இட்டிகை
களால்மேல் நெருங்கி யணியாரூர்த்
தளவ முறுவற் பரவையார்
தம்மா ளிகையிற் புகத்தாமும்
உளமன் னியதம் பெருமானார்
தம்மை வணங்கி உவந்தணைந்தார்.

பொழிப்புரை :

வளம் நிறைந்த சிறப்புடைய திருப்பனையூரில் வாழ்வார் வழிக்கொண்டு வணங்கிட, எழுந்தருளிச் சென்று, அளவற்ற செம்பொன் கட்டிகள் யாவற்றையும் ஆள்கள் எடுத்துவர, நெருங்கி வந்து, அழகிய திருவாரூரில் முல்லையரும்பு போலும் புன்முறுவ லுடைய பரவையார் மாளிகையில் அவர்கள் புகுந்திட, தாமும் தம் உள்ளத்துப் பொருந்திய திருவாரூர்ப் பெருமானை வணங்கிப் பெருமகிழ்வுடன் சேர்வாராகி,

குறிப்புரை :

இட்டிகை செய்தல் - அவை பொன்னாலாயவாய் அமைந்திருந்தன.

பண் :

பாடல் எண் : 55

வந்து பரவைப் பிராட்டியார்
மகிழ வைகி மருவுநாள்
அந்த ணாரூர் மருங்கணிய
கோயில் பலவும் அணைந்திறைஞ்சிச்
சிந்தை மகிழ விருப்பினொடும்
தெய்வப் பெருமாள் திருவாரூர்
முந்தி வணங்கி யினிதிருந்தார்
முனைப்பா டியர்தங் காவலனார்.

பொழிப்புரை :

இவ்வாறு திருவாரூருக்கு மீண்டு வந்து பரவைப் பெருமாட்டியார் மகிழத் தங்கி இருந்து, அவருடன் கூடி மகிழும் நாள்களில், அழகிய திருவாரூரின் அருகில் உள்ள கோயில்கள் பல வற்றிற்கும் சென்று வணங்கி, தம் சிந்தை மகிழும் விருப்பினோடும் தேவ தேவனாம் மகாதேவனாகிய திருவாரூர்ப் பெருமானை நாளும் முன்னதாகச் சென்று வணங்கித் திருவாரூரில் இனிதிருந்தருளினார், திருமுனைப்பாடி நாட்டின் அருட் காவலராகிய ஆரூரர்.

குறிப்புரை :

`கோயில் பலவும் அணைந்திறைஞ்சி\' என்றது முன்னர்க் குறித்தனவும், ஆங்காங்குள்ள பிற திருக்கோயில்களும் ஆம். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 56

பலநாள் அமர்வார் பரமர்திரு
வருளால் அங்கு நின்றும்போய்ச்
சிலைமா மேரு வீரனார்
திருநன் னிலத்துச் சென்றெய்தி
வலமா வந்து கோயிலினுள்
வணங்கி மகிழ்ந்து பாடினார்
தலமார் கின்ற தண்ணியல்வெம்
மையினான் என்னுந் தமிழ்மாலை.

பொழிப்புரை :

பல நாள்கள் திருவாரூரில் இவ்வாறு இருந்தருளிய நம்பிகள், பெருமானின் திருவருளால் அங்கிருந்து, பெருமலையான மேருவை வில்லாகக் கொண்டு திரிபுரத்தை எரியச் செய்த வீரராகிய சிவபெருமான் அமர்ந்தருளும் திருநன்னிலப் பதியை அடைந்து, அக்கோயிலை வலம் கொண்டு, உட்புகுந்து, பெருமானை வணங்கி மகிழ்ந்து, `தண்ணியல் வெம்மையினான்\' எனத் தொடங்கும் தமிழ் மாலையைப் பாடினார்.

குறிப்புரை :

`தண்ணியல் வெம்மையினான்\' எனத் தொடங்கும் பதிகம் பஞ்சமப் பண்ணிலமைந்ததாகும். (தி.7 ப.98)

பண் :

பாடல் எண் : 57

பாடி யங்கு வைகியபின்
பரமர் வீழி மிழலையினில்
நீடு மறையான் மேம்பட்ட
அந்த ணாளர் நிறைந்தீண்டி
நாடு மகிழ அவ்வளவும்
நடைக்கா வணம்பா வாடையுடன்
மாடு கதலி பூகநிரை
மல்க மணித்தோ ரணநிரைத்து.

பொழிப்புரை :

பாடி, அத்திருப்பதியில் தங்கியிருந்த பின், திரு வீழிமிழலை என்னும் திருப்பதியில் வாழும் நீடிய மறைவழி ஒழுகிடும் அந்தணர்கள் திரண்டு வந்து நாடெல்லாம் மகிழத் திருவீழிமிழலையி லிருந்து திருநன்னிலம் வரையுள்ள வழி எங்கும், நிலத்தில் நீள விரிக்கின்ற பாவாடையிட்டு, வழியின் இருமருங்கும் கதலி, வாழை, கமுகு ஆகியவைகளை நிரை நிரையாக விளங்க நாட்டி, அங்காங்கே அழகிய தோரண முகப்புகளும் நிரைத்து,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 58

வந்து நம்பி தம்மைஎதிர்
கொண்டு புக்கார் மற்றவருஞ்
சிந்தை மலர்ந்து திருவீழி
மிழலை யிறைஞ்சிச் சேண்விசும்பின்
முந்தை யிழிந்த மொய்யொளிசேர்
கோயில் தன்னை முன்வணங்கிப்
பந்த மறுக்குந் தம்பெருமான்
பாதம் பரவிப் பணிகின்றார்.

பொழிப்புரை :

திருநன்னிலம் வந்து, நம்பிகளை எதிர்கொண்டு அழைத்து, தமது திருவீழிமிழலையை அடைந்தார்கள். அதுபொழுது அப்பெருமகனாரும் தமது சிந்தை மலர்ந்து, திருவீழிமிழலை என்னும் திருப்பதியை வணங்கி, மிக உயர்ந்த வானினின்றும் முன்பொருகால் இறங்கி வந்த மிக்க வியத்தகு ஒளியையுடைய கோயிலை முன்னாக வணங்கிப், பாசக்கட்டினை அறுத்திடும் பெருமானின் திருவடிகளைப் பரவிப் பணிவாராய்,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 59

படங்கொள் அரவில் துயில்வோனும்
பதுமத் தோனும் பரவரிய
விடங்கன் விண்ணோர் பெருமானை
விரவும் புளக முடன்பரவி
அடங்கல் வீழி கொண்டிருந்தீர்
அடியேனுக்கும் அருளுமெனத்
தடங்கொள் செஞ்சொல் தமிழ்மாலை
சாத்தி யங்குச் சாருநாள்.

பொழிப்புரை :

படங்கொண்ட பாம்பில் துயில்கின்ற திருமாலும், செந்தாமரை மலரில் இருந்திடும் அயனும் வணங்கிடற்கு அரியனாய, தேவர்கட்கும் தேவனாய பெருமானை, உடம்பெல்லாம் மயிர் முகிழ்க்க வணங்கி, `அழகில் அடங்காத திருவீழிமிழலையில் கோயில் கொண்டிருந்தீர்! உம் அடியேனுக்கும் அருளும்\' என மிகவும் பொருள் விரிந்த செஞ்சொல்லின் தமிழ் மாலையைச் சாத்தி அங்கு இருந்தருளுகின்ற நாள்களில்,

குறிப்புரை :

இப்பொருண்மை அமைந்த பதிகம் `நம்பினார்க்கு அருள் செய்யும்\' (தி.7 ப.88) என்னும் தொடக்கமுடைய சீகாமரப் பண்ணில் அமைந்ததாகும்.
இப்பதிகப் பாடல்தொறும் `வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே\' என வரும் தொடர் அமைந்துள்ளது. வீழியில், சம்பந்தருக்கும், அப்பர் பெருமானுக்கும் பஞ்சம் தீரும் வரை ஒரு பெருந்தொகை தந்து, துயர்கூர் வறுமை தொலைக்குமாறு அருளி யிருக்கலாம். அவ்வாறன்றி நித்தமும் ஒரு காசு நல்கியமைக்குரிய காரணத்தைத் சுந்தரர் நயமாக அருளும் பதிகம் இதுவாம். `திருமிழலையிருந்து நீர் தமிழோடிசை கேட்கும் இச்சையால் காசு நித்தல் நல்கினீர்\' என்பது இப்பதிகத்து வரும் எட்டாவது பாடலாகும்.

பண் :

பாடல் எண் : 60

வாசி யறிந்து காசளிக்க
வல்ல மிழலை வாணர்பால்
தேசு மிக்க திருவருள்முன்
பெற்றுத் திருவாஞ் சியத்தடிகள்
பாச மறுத்தாட் கொள்ளுந்தாள்
பணிந்து பொருவ னார்என்னும்
மாசில் பதிகம் பாடியமர்ந்
தரிசிற் கரைப்புத் தூரணைந்தார்.

பொழிப்புரை :

தாம் வழங்கிய பொற்காசுகளில் குற்றமும், குற்றம் இன்மையுமாகக் கொடுத்திட வல்ல திருவீழிமிழலையில் அமர்ந்து அருளும் பெருமானிடம், உயிர் விளக்கம் பெறுதற்கான அருள் பெற்றுத் திருவாஞ்சியத்தில் அமர்ந்தருளும் சிவபெருமானின், பாசம் அறுத்து ஆட்கொள்ளும் திருவடி மலர்களைப் பணிந்து, `பொருவ னார்\' எனத் தொடங்கும் மாசில்லாத, புகழுடைய திருப்பதிகத்தினைப் பாடி அங்குத் தங்கிப் பின் திருஅரிசில்கரைப்புத்தூரை அணுகச் சென்றார்.

குறிப்புரை :

`பொருவனார்\' எனத் தொடங்கும் பதிகம், பியந்தைக் காந்தாரப் பண்ணிலமைந்ததாகும் (தி.7 ப.76). இந்நான்கு பாடல் களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 61

செழுநீர் நறையூர் நிலவுதிருச்
சித்தீச் சரமும் பணிந்தேத்தி
விழுநீர் மையினிற் பெருந்தொண்டர்
விருப்பி னோடும் எதிர்கொள்ள
மழுவோ டிளமான் கரதலத்தில்
உடையார் திருப்புத் தூர்வணங்கித்
தொழுநீர் மையினில் துதித்தேத்தித்
தொண்டர் சூழ வுறையுநாள்.

பொழிப்புரை :

அரிசிற்கரைப்புத்தூருக்கு வந்தணையும் அவர், இடையில் அரிசில் என்னும் ஆற்றின் செழுமை மிக்க நீர்வளமுடைய திருநறையூர் என்னும் ஊரில் நிலவிடும் சித்தீச்சரம் என்னும் திருக்கோயிலையும் வணங்கி, ஒழுக்கத்தாலும், பத்திமையாலும் விழுமிய அடியார்கள் விருப்பத்துடன் எதிர்கொள்ள, மழுவுடன் இளைய மானையும் திருக்கைகளில் கொண்ட பெருமான் எழுந்தருளி யிருக்கும் திருஅரிசிற்கரைப்புத்தூர் என்னும் திருப்பதியையும் பணிந்து, போற்றி, அடியார்கள் சூழ அத்திருப்பதியில் இருந்தருளும் காலத்து,

குறிப்புரை :

திருநறையூர் ஊர்ப்பெயர். சித்தீச்சரம் திருக்கோயிலின் பெயர். இவ்விடத்து அருளிய பதிகம் `நீரும் மலரும்\'(தி.7 ப.93) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 62

புனித னார்முன் புகழ்த்துணையார்க்கு
அருளுந் திறமும் போற்றிசைத்து
முனிவர் போற்ற எழுந்தருளி
மூரி வெள்ளக் கங்கையினில்
பனிவெண் திங்கள் அணிசடையார்
பதிகள் பலவும் பணிந்துபோந்
தினிய நினைவி லெய்தினார்
இறைவர் திருவா வடுதுறையில்.

பொழிப்புரை :

திருஅரிசிற்கரைப்புத்தூரில் இருந்தருளும் பெரு மானார் முன்னர்ப் புகழ்த்துணை என்னும் நாயனாருக்கு அருள் புரிந்த வரலாற்றையும் அப்பதிகத்து வைத்துச் சிறப்பித்துப் போற்றிப் பாடி, அங்குள்ள முனிவர்கள் போற்றிட எழுந்தருளி, கங்கையாற்றினையும் குளிர்ந்த வெண்பிறையையும் அணிந்த சடையையுடைய பெருமான் எழுந்தருளியிருக்கும் பதிகள் பலவும் பணிந்து, இனிமை கூர்ந்த நினைவாய்த் திருவாவடுதுறையை அடைந்தார்.

குறிப்புரை :

அரிசில்கரைப்புத்தூரில், `மலைக்கு மகள்\' எனத் தொடங்கும் இந்தளப் பண்ணில் அமைந்த பதிகத்துள், புகழ்த்துணை யாரைச் சிறப்பித்தருளும் பாடல் ஆறாவது பாடலாகும் (தி.7 ப.9 பா.6).
அகத்தடி மைசெய்யும் அந்தணன்றான்
அரிசிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான்
மிகத்தளர் வெய்திக் குடத்தையும்நும்
முடிமேல்விழுத் திட்டு நடுங்குதலும்
வகுத்தவ னுக்குநித் தற்படியும்
வரும்என்றொரு காசினை நின்றநன்றிப்
புகழ்த்துணை கைப்புகச் செய்துகந்தீர்
பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே.
எனவரும் இப்பாடல் புகழ்த்துணையாரின் வரலாற்றைச் சித்தரித்துக் காட்டுதல் காணலாம். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 63

விளங்குந் திருவா வடுதுறையில்
மேயார் கோயில் புடைவலங்கொண்டு
உளங்கொண் டுருகு மன்பினுடன்
உள்புக் கிறைஞ்சி யேத்துவார்
வளங்கொள் பதிக மறையவன்என்று
எடுத்து வளவன் செங்கணான்
தளங்கொள் பிறப்புஞ் சிறப்பித்துத்
தமிழ்ச்சொல் மாலை சாத்தினார்.

பொழிப்புரை :

அருள்விளங்கும் திருவாவடுதுறையில் வீற்றிருந் தருளும் பெருமானின் திருக்கோயிலினை வலங்கொண்டு, இறைவனை உளங்கொண்டு, உருகும் அன்பினுடன் திருக்கோயில் உள்ளே சென்று வணங்கும் சுந்தரர், `மறையவன்\\\' எனத் தொடங்கும் வளங்கொண்ட திருப்பதிகத்தைப் பாடி, அதன்கண் கோச்செங்கட்சோழ அரசரின் பிறப் பையும் சிறப்பித்து அத்தமிழ்ச்சொல் மாலையைச் சாத்தினார்.

குறிப்புரை :

இத்திருப்பதிகம் தக்கேசிப் பண்ணில் அமைந்ததாகும். இப்பதிகத்து வரும் இரண்டாவது பாடலில் (தி.7 ப.66 பா.2), `தெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலந்தி
சித்திரப் பந்தர் சிக்கென இயற்றச்
சுருண்ட செஞ்சடை யாய்அது தன்னைச்
சோழ னாக்கிய தொடர்ச்சி கண்டு\\\'
எனக் கோச்செங்கட்சோழப் பெருமானாரின் பிறப்பின் சிறப்பினை எடுத்து மொழிகின்றார் ஆரூரர். இதனை உளங்கொண்டே சேக்கிழார் இவ்வாறு அருளுவாராயினர். இப்பதிகத்தில் ஐந்து திருப்பாடல்களே கிடைத்துள்ளன. ஒவ்வொன்றிலும் ஒருவரலாற்றுச் செய்தி காணக் கிடக்கின்றது.

பண் :

பாடல் எண் : 64

சாத்தி யங்கு வைகுநாள்
தயங்கு மன்ப ருடன்கூடப்
பேர்த்து மிறைஞ்சி யருள்பெற்றுப்
பெண்ணோர் பாகத் தண்ணலார்
தீர்த்தப் பொன்னித் தென்கரைமேல்
திகழும் பதிகள் பலபணிந்து
மூர்த்தி யார்தம் இடைமருதை
யடைந்தார் முனைப்பா டித்தலைவர்.

பொழிப்புரை :

திருப்பதிக மாலையைச் சாத்தி அங்கிருந்தருளும் நாள்களில், அருள் விளங்கும் அன்பர்களுடன் கூடி மீண்டும் பெரு மானை வணங்கி, அருள்பெற்று, உமையொரு கூறராய அண்ணலா ரின் புண்ணிய நன்னீர் மிகுந்த காவிரியாற்றின் தென்கரையின் மேல் திகழும் திருப்பதிகள் பலவற்றையும் பணிந்து, திருவிடைமருதூரைச் சென்று அடைந்தார், திருமுனைப்பாடியின் தலைவரான சுந்தரர் பெருமான்.

குறிப்புரை :

பதிகள் பல பணிந்து என்பன, திருக்கோழம்பம், திருச்சாத்தனூர், தென்குரங்காடுதுறை முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை).

பண் :

பாடல் எண் : 65

மன்னும் மருதி னமர்ந்தவரை
வணங்கி மதுரச் சொல்மலர்கள்
பன்னிப் புனைந்து பணிந்தேத்திப்
பரவிப் போந்து தொண்டருடன்
அந்நற் பதியி லிருந்தகல்வார்
அரனார் திருநா கேச்சுரத்தை
முன்னிப் புக்கு வலங்கொண்டு
முதல்வர் திருத்தாள் வணங்கினார்.

பொழிப்புரை :

நிலைபெற்ற மருதமர நிழலில் அமர்ந்தருளும் பெருமானாரை வணங்கி, இனிமை மிக்க சொல்மலர்களைக் கொண்டு புனைந்த திருப்பதிகம் பாடிப் போற்றி வணங்கி, அப்பால் அடியார்கள் உடன் அந்நற்பதியினின்றும் நீங்கிச் செல்வார், பெருமானாருடைய திருநாகேச்சுரம் என்னும் திருப்பதியை நினைந்து, அங்குச் சென்று, கோயிலை வலங்கொண்டு பெருமானாரின் திருவடிகளை வணங் கினார்.

குறிப்புரை :

திருவிடைமருதூரில் அருளிய பதிகம், `கழுதை குங்குமம்\' (தி.7 ப.60) எனத் தொடங்கும் தக்கேசிப் பண்ணில் அமைந்ததாகும்.

பண் :

பாடல் எண் : 66

பெருகும் பதிகம் பிறையணிவாள்
நுதலாள் பாடிப் பெயர்ந்துநிறை
திருவின் மலியுஞ் சிவபுரத்துத்
தேவர் பெருமான் கழல்வணங்கி
உருகுஞ் சிந்தை யுடன்போந்தே
யுமையோர் பாகர் தாமகிழ்ந்து
மருவும் பதிகள் பிறபணிந்து
கலைய நல்லூர் மருங்கணைந் தார்

பொழிப்புரை :

வணங்கி அருள்பெருகும், `பிறையணி வாள் நுதலாள்\' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடிப்போற்றி, அங்கிருந்து நீங்கிக் குறைவற்ற செல்வமாய சிவம் நிறைந்து விளங்கும் சிவபுரம் என்னும் திருப்பதியில் இருந்தருளும் தேவர் தலைவனாய சிவபெருமானின் திருவடிகளையும் வணங்கி, உருகிய சிந்தையுடன் வந்து, உமையொரு கூறராய பெருமான் மகிழ்ந்து உறையும் பதிகள் பிறவும் பணிந்து, திருக்கலயநல்லூர் என்னும் திருப்பதியின் அருகாக வந்தருளினர்.

குறிப்புரை :

`பிறையணி வாள் நுதலாள்\' எனத் தொடங்கும் பதிகம் பஞ்சமப் பண்ணிலமைந்ததாகும் (தி.7 ப.99). சிவபுரத்தில் அருளிய பதிகம் கிடைத் திலது. சிவபுரத்திற்கும் கலயநல்லூருக்கும் இடைப்பட்ட பதிகள் எவையெனத் தெரிந்தில.

பண் :

பாடல் எண் : 67

செம்மை மறையோர் திருக்கலைய
நல்லூ ரிறைவர் சேவடிக்கீழ்
மும்மை வணக்கம் பெறவிறைஞ்சி
முன்பு பரவித் தொழுதெழுவார்
கொம்மை மருவு குரும்பைமுலை
யுமையாள் என்னுந் திருப்பதிகம்
மெய்ம்மைப் புராணம் பலவுமிகச்
சிறப்பித் திசையின் விளம்பினார்.

பொழிப்புரை :

செம்மை வாய்ந்த அந்தணர்கள் வாழும் திருக்கலய நல்லூரில் அமர்ந்தருளிய பெருமானின் சேவடிக் கீழ் மனம், மொழி, மெய் ஆகிய முக்கருவிகளானும் வணங்கி, பெருமானின் திரு முன்பு நின்று போற்றித் தொழுதெழும் அவர், தலைமை பொருந்திய `குரும்பை முலை மலர்க்குழலி\' எனத் தொடங்கும் திருப்பதிகத்தில் மெய்ம்மை யான வரலாறுகள் பலவும் வைத்து, இறைவனைச் சிறப்பித்து இசை மிக்க அப்பதிகத்தைப் பாடியருளினார்.

குறிப்புரை :

`குரும்பைமுலை மலர்க்குழலி\' எனத் தொடங்கும் பதிகம் தக்கராகப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.16). இப்பதிகத்தில் இறைவன் உமையம்மையாரை மணந்ததும், சலந்தரன், அந்தகாசுரன், முப்புரத்தவர், தக்கன், இராவணன், தாருகன் முதலியோரை அழித்ததும் ஆகிய செய்திகளை அருளியுள்ளார். இதனால், `மெய்ம் மைப் புராணம் பலவும் மிகச் சிறப்பித்து\' என்றார்.

பண் :

பாடல் எண் : 68

அங்கு நின்று திருக்குடமூக்
கணைந்து பணிந்து பாடிப்போய்
மங்கை பாகர் வலஞ்சுழியை
மருவிப் பெருகு மன்புருகத்
தங்கு காத லுடன்வணங்கித்
தமிழாற் பரசி அரசினுக்குத்
திங்கள் முடியா ரடியளித்த
திருநல் லூரைச் சென்றணைந்தார்.

பொழிப்புரை :

அப்பதியினின்று நீங்கித் திருக்குடமூக்கினைச் சேர்ந்து, பெருமானைப் பணிந்து பாடி, பின் உமையொரு கூறராய பெருமான் அமர்ந்தருளும் திருவலஞ்சுழியைச் சேர்ந்து, பெருகும் அன்பு உருகப் பெருமானிடத்து நிறைந்த காதலுடன் வணங்கித் தமிழாற் போற்றிப் புகழ்ந்து, அப்பால் திருநாவுக்கரசர் பெருமானுக்குத் திங்களைச் சடைமீதணிந்த இறைவர் திருவடி சூட்டி அருள்புரிந்த திருநல்லூரைச் சென்றணைந்தார்.

குறிப்புரை :

இவ்விரு பதிகளிலும் அருளிய பதிகங்கள் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 69

நல்லூர் இறைவர் கழல்போற்றி
நவின்று நடுவு நம்பர்பதி
எல்லா மிறைஞ்சி ஏத்திப்போய்
இசையாற் பரவுந் தம்முடைய
சொல்லூ தியமா வணிந்தவர்தஞ்
சோற்றுத் துறையின் மருங்கெய்தி
அல்லூர் கண்டர் கோயிலினுள்
அடைந்து வலங்கொண் டடிபணிவார்.

பொழிப்புரை :

திருநல்லூரில் வீற்றிருக்கும் இறைவரின் திருவடிகளைப் பணிந்து பாடி, இடையிலுள்ள இறைவருடைய திருப் பதிகள் பலவற்றையும் வணங்கிப் போற்றிச் சென்று, இசையோடு பாடிடும் தம் சொற்களைப் பயனாகக் கொண்டருளும் இறைவரின் திருச்சோற்றுத்துறைக்குச் சென்று, நஞ்சைக் கழுத்தில் கொண்ட பெரு மான் கோயிலினை வலங்கொண்டு திருவடிகளைப் பணிவாராய்,

குறிப்புரை :

திருநல்லூரில் அருளிய பதிகம் கிடைத்திலது. ஊதியம் - பயன்; கேட்டு மகிழும் பயன்.

பண் :

பாடல் எண் : 70

அழனீ ரொழுகி யனையவெனும்
அஞ்சொற் பதிக மெடுத்தருளிக்
கழனீ டியவன் பினிற்போற்றுங்
காதல் கூரப் பரவியபின்
கெழுநீர் மையினி லருள்பெற்றுப்
போந்து பரவை யார்கேள்வர்
முழுநீ றணிவா ரமர்ந்தபதி
பலவும் பணிந்து முன்னுவார்.

பொழிப்புரை :

`அழல்நீர் ஒழுகி அனைய\' எனும் அழகிய சொற்களையுடைய பதிகத்தைப் பாடி எடுத்தருளி, பெருமானின் திருவடிகளிடத்துக் கொண்ட நீடிய அன்பினால் காதல் மீதூர வணங்கிய பின், பொருந்திய திருவருள் பெற்று மேற்சென்று, பரவை கேள்வராய நம்பிகள், முழுமையாக ஒளி நீறணிந்து விளங்கும் சிவபெருமான் அமர்ந்தருளியிருக்கும் திருப்பதிகள் பலவற்றையும் பணிந்து செல்கின்றவர்,

குறிப்புரை :

`அழல்நீர் ஒழுகி அனைய\' எனத் தொடங்கும் திருப்பதிகம் கௌசிகப் பண்ணிலமைந்ததாகும் (தி.7 ப.94). பதி பலவும் என்பன - தண்டங்குறை, திருவேதிகுடி முத லியனவாகலாம் என்பார் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை).

பண் :

பாடல் எண் : 71

தேவர் பெருமான் கண்டியூர்
பணிந்து திருவை யாறதனை
மேவி வணங்கிப் பூந்துருத்தி
விமலர் பாதந் தொழுதிறைஞ்சிச்
சேவில் வருவார் திருவாலம்
பொழிலிற் சேர்ந்து தாழ்ந்திரவு
பாவு சயனத் தமர்ந்தருளிப்
பள்ளி கொள்ளக் கனவின்கண்.

பொழிப்புரை :

தேவர்களின் தலைவனாய பெருமானின் திருக் கண்டியூரைப் பணிந்து, திருவையாற்றிற்குச் சென்று வணங்கி, திருப் பூந்துருத்தியில் எழுந்தருளியிருக்கும் பெருமானின் திருவடிகளைத் தொழுது போற்றிய பின்னர், ஆனேற்றின் மீது இவர்ந்தருளும் பெருமானின் திருவாலம்பொழிலை அடைந்து வணங்கி, அன்றிரவு அங்குத் தங்கித் துயில்கொள்ளும்பொழுது, அவர் கனவில்,

குறிப்புரை :

இப்பதிகளில் அருளிய பதிகங்கள் எவையும் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 72

மழபா டியினில் வருவதற்கு
நினைக்க மறந்தா யோவென்று
குழகா கியதம் கோலமெதிர்
காட்டி யருளக் குறித்துணர்ந்து
நிழலார் சோலைக் கரைப்பொன்னி
வடபா லேறி நெடுமாடம்
அழகார் வீதி மழபாடி
யணைந்தார் நம்பி யாரூரர்.

பொழிப்புரை :

`திருமழபாடி வருதற்கு மட்டுமின்றி நினைக்கவும் மறந்தனையோ?\' என்று தோடணிந்த திருக்காதுடன் விளங்கும் பெரு மானார் காட்சி தந்து உணர்த்தியருளலும், துயில் நீங்கிய சுந்தரர், நிழல் மிகும் சோலைகள் சூழ்ந்த காவிரியாற்றின் வடகரையில் ஏறிச் சென்று, நெடிய மாடங்களுடன் அழகிய வீதிகளையும் உடைய திருமழபா டியை அணைந்தார்.

குறிப்புரை :

`நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலே யொர்நால்விரல்\' (தி.7 ப.45 பா.9) என்பது நம்பிகளின் அநுபவமாதலின், நினைக்கவும் மறந்தனையோ? என்றார். இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 73

அணைந்து திருக்கோ புரமிறைஞ்சி
அன்பர் சூழ வுடன்புகுந்து
பணங்கொ ளரவ மணிந்தார்முன்
பணிந்து வீழ்ந்து பரங்கருணைக்
குணங்கொ ளருளின் திறம்போற்றிக்
கொண்ட புளகத் துடனுருகிப்
புணர்ந்த விசையாற் றிருப்பதிகம்
பொன்னார் மேனி என்றெடுத்து.

பொழிப்புரை :

அணைந்தவர், கோயிலின் திருக்கோபுரத்தை வணங்கி, அன்பர்கள் சூழ உள்ளே சென்று, படங்கொண்ட பாம்பை அணிந்த பெருமானின் திருமுன்னிலையில் பணிந்து வீழ்ந்து, மேலாய கருணையையே குணமாகக் கொண்ட பெருமானின் அருட்டிறத்தைப் போற்றி, மயிர்சிலிர்க்க உருகிப் பணிந்து, பொருந்திய இசையில் `பொன்னார் மேனியனே\' எனத் தொடங்கும் திருப்பதிகத்தை எடுத்து,

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 74

அன்னே யுன்னை யல்லால்யான்
ஆரை நினைக்கேன் எனவேத்தித்
தன்னே ரில்லாப் பதிகமலர்
சாத்தித் தொழுது புறம்பணைந்து
மன்னும் பதியில் சிலநாள்கள்
வைகித் தொண்ட ருடன்மகிழ்ந்து
பொன்னிக் கரையி னிருமருங்கும்
பணிந்து மேல்பாற் போதுவார்.

பொழிப்புரை :

`அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக் கேனே?\' எனப் பாடிப் போற்றி, தனக்கு ஒப்பில்லாத அப்பதிகமாய மாலையைச் சாத்தித் தொழுது, வெளிவந்து, நிலைபெற்ற அப்பதியில் சில நாள்கள் தங்கி, அடியார்களுடன் மகிழ்ந்து, காவிரியின் இரு புறமும் உள்ள திருப்பதிகள் பலவற்றையும் பணிந்து, மேற்றிசையாகச் செல்பவர்,

குறிப்புரை :

`பொன்னார் மேனியனே\'(தி.7 ப.24) எனத் தொடங் கும் திருப்பதிகம் நட்டராகப் பண்ணில் அமைந்ததாகும். `அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே\' என்பது முதற் பாடலில் வரும் நான்காவது அடியாகும். இப்பதிகம் முழுவதும் இத்தொடர் நிறைவுத் தொடராக வந்துள்ளது. `பொன்னிக் கரையின் இருமருங் கும் போதுவார்\' என்றது, வடகரையில் திருஅன்பிலாலந்துறை, திருத்தவத்துறை, திருக்கானூர், வடகரைத் திருமாந்துறை முதலியன வும், தென்கரையில் திருநியமம், திருவேங்கூர் முதலியனவும் ஆகலாம் எனக் குறிப்பிடுவர் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை). பதிகங்கள் எவையும் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 75

செய்ய சடையார் திருவானைக்
காவி லணைந்து திருத்தொண்டர்
எய்த முன்வந் தெதிர்கொள்ள
இறைஞ்சிக் கோயி லுள்புகுந்தே
ஐயர் கமலச் சேவடிக்கீழ்
ஆர்வம் பெருக வீழ்ந்தெழுந்து
மெய்யு முகிழ்ப்பக் கண்பொழிநீர்
வெள்ளம் பரப்ப விம்முவார்.

பொழிப்புரை :

சிவந்த சடையையுடைய பெருமான் அமர்ந்தரு ளும் திருவானைக்காவை அடைய, அங்கு வாழும் அடியவர்கள், இவர் வருகையறிந்து, களிகூர்ந்து, எதிர்கொள்ளத் தாமும் வணங்கி, அவர்களுடன் பெருமானது கோயிலுள் சென்று, சேவடிக் கீழ் ஆர்வம் பெருக வீழ்ந்து எழுந்து, மேனியில் மயிர் முகிழ்த்திட, கண்ணிலிருந்து பொழியும் ஆனந்த வெள்ளம் திருமேனி எங்கும் பரந்து வழியுமாறு திளைப்பவர்,

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 76

மறைக ளாய நான்கும்என
மலர்ந்த செஞ்சொல் தமிழ்ப்பதிகம்
நிறையுங் காத லுடனெடுத்து
நிலவு மன்பர் தமைநோக்கி
இறையும் பணிவா ரெம்மையுமா
ளுடையா ரென்றென் றேத்துவார்
உறையூர்ச் சோழன் மணியாரஞ்
சாத்துந் திறத்தை யுணர்ந்தருளி.

பொழிப்புரை :

`மறைகளாயின நான்கும்\' என மலர்ந்து வரும் செஞ்சொல் கொண்ட தமிழ்ப் பதிகத்தை உள்ளம் நிறைகின்ற காத லுடன் பாட எடுத்துத், தம்முடன் நின்று வழிபடும் அன்பர்களை நோக்கி, `எம்பெருமானை நாளும் பணிவார்கள் எம்மையும் அடிமை யாக உடையவராவர்\' என்று மகிழ்வுடன் போற்றுவார், அத்திருப்பதி யில் முன் வழிபாடாற்றிய உறையூர்ச் சோழ அரசனின் முத்து மாலையை இறைவன் அணிந்தருளிய திருவருட்டிறத்தை உணர்ந் தருளி,

குறிப்புரை :

`மறைகளாயின நான்கும்\' எனத் தொடங்கும் பதிகம் காந்தாரப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.75). `இறைவன் என்றடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே\' எனும் கருத்துப் பாடல்தொறும் வரும் நிறைவுத் தொடராக அமைந்துள்ளது.

பண் :

பாடல் எண் : 77

வளவர் பெருமான் மணியாரம்
சாத்திக் கொண்டு வரும்பொன்னிக்
கிளருந் திரைநீர் மூழ்குதலும்
வழுவிப் போகக் கேதமுற
அளவில் திருமஞ் சனக்குடத்துள்
அதுபுக் காட்ட அணிந்தருளித்
தளரு மவனுக் கருள்புரிந்த
தன்மை சிறக்கச் சாற்றினார்.

பொழிப்புரை :

சோழ மன்னன், அழகிய மணிமாலையை அணிந்து கொண்டு, விரைவாக வரும் காவிரியாற்றில் பெருகும் நீரில் மூழ்குதலும், அவர்தம் முத்து மாலை கழுத்தினின்றும் வழுவிப் போகத் துன்பமுற்று, `ஐயனே! அம்முத்து மாலையை ஏற்றருள்க\' என வேண்ட, பெருமானாரும் திருமுழுக்காட்டும் நீரொடு குடத்தில் அது சேருமாறு செய்வித்துத் தமக்குத் திருமுழுக்காட்டக் கொணர்ந்த காவிரி நீருடன் அம்மாலையையும் அணிந்தருளித் தளர்ச்சியுற்ற சோழ அரசனுக்கு அருள்புரிந்த தன்மையையும் அப்பதிகத்துள் சிறப்பித்து அருளினார்.

குறிப்புரை :

இப்பொருளமைந்த பாடல், தாரமாகிய பொன்னித் தண்டுறை ஆடி விழுத்து நீரில் நின்றடி போற்றி நின்மலா கொள்ளென ஆங்கே ஆரம் கொண்டஎம் ஆனைக் காவுடை ஆதியை நாளும் ஈரம் உள்ளவர் நாளும் எம்மையும் ஆளுடை யாரே. எனவரும் (தி.7 ப.75 பா.7) திருப்பாடலாகும். இவ்வைந்து பாடல் களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 78

சாற்றி யங்குத் தங்குநாள்
தயங்கும் பவளத் திருமேனி
நீற்றர் கோயில் எம்மருங்கும்
சென்று தாழ்ந்து நிறைவிருப்பால்
போற்றி யங்கு நின்றும்போய்ப்
பொருவி லன்பர் மருவியதொண்டு
ஆற்றும் பெருமைத் திருப்பாச்சில் ஆச்சி ராமம் சென்றடைந்தார்.

பொழிப்புரை :

இப்பதிகத்தைப் பாடி அங்குத் தங்கியிருக்கும் நாள்களில், அதன் அருகிலுள்ள ஒளிவளர் பவளமேனியில் ஒளி நீறணிந்து விளங்கும் சிறப்பையுடைய சிவபெருமானின் கோயில்கள் பலவற்றிற்கும் சென்று வணங்கி, நிறைந்த விருப்பால் போற்றி, அங்கி ருந்து ஒப்பற்ற அன்பர்கள் அருகிலிருந்து இறைவற்குத் தொண்டு செய்யும் பெருமையுடைய திருப்பாச்சிலாச்சிராமம் என்னும் பதிக்குச் சென்றடைந்தார்.

குறிப்புரை :

கோயில் எம் மருங்கும் என்றது திருச்சிராப்பள்ளி, உறையூர், திருக்கற்குடி முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணி யார் (பெரிய. பு. உரை). பதிகங்கள் எவையும் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 79

சென்று திருக்கோ புரம்இறைஞ்சித்
தேவர் மலிந்த திருந்துமணி
முன்றில் வலங்கொண்டு உள்ளணைந்து
முதல்வர் முன்பு வீழ்ந்திறைஞ்சி
நன்று பெருகும் பொருட்காதல்
நயப்புப் பெருக நாதரெதிர்
நின்று பரவி நினைந்தபொருள்
அருளா தொழிய நேர்நின்று.

பொழிப்புரை :

சென்று திருக்கோபுரத்தை வணங்கித் தேவர்கள் பெருகக் கூடும் திருந்திய மணிகள் பதித்த கோயிலின் திருமுற்றத் தினை வலங்கொண்டு, உட்சென்று, முதல்வராய பெருமானின் திரு முன்பு வீழ்ந்து வணங்கி, பெரிதாகத் தம் உள்ளத்துப் பெருகும் பொருளின் விருப்புப் பெருகிட, அப்பொருளைப் பெற வேண்டிப் பெருமானின் திருமுன் நின்று வணங்கிட, இறைவர் தாம் நினைந்த பொருளை அருளாது ஒழிய, அவர் முன் நின்று,

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 80

அன்பு நீங்கா அச்சமுட னடுத்த
திருத்தோழமைப் பணியாற்
பொன்பெ றாத திருவுள்ளம்
புழுங்க அழுங்கிப் புறம்பொருபால்
முன்பு நின்ற திருத்தொண்டர்
முகப்பே முறைப்பா டுடையார்போல்
என்பு கரைந்து பிரானார்மற்
றிலையோ யென்ன வெடுக்கின்றார்.

பொழிப்புரை :

அன்பு நீங்காத அச்சமுடன் பெருமானுக்கு உற்ற தோழமையினால், தாம் வேண்டிய பொன்னை விரும்பியவாறு பெறாத அவரது திருவுள்ளம், புழுங்கி, புறம்பாக நின்ற திருத்தொண் டர்களை முன்னிலைப் படுத்தி, அவர்களிடமே தமது முறைப்பாட்டைச் சொல்லிக் கொள்வார்போல, எலும்பும் கரைந்துருகப், `பிரானார் மற்று இல்லையோ\' என்று பாடத் தொடங்குவாராய்,

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 81

நித்தமும் நீங்கா நிலைமையின் நீங்கி
நிலத்திடைப் புலங்கெழும் பிறப்பால்
உய்த்தகா ரணத்தை யுணர்ந்துநொந் தடிமை
யொருமையா மெழுமையு முணர்த்தி
எத்தனை யருளா தொழியினும் பிரானார்
இவரலா தில்லையோ யென்பார்
வைத்தனன் தனக்கே தலையுமென் னாவும்
எனவழுத் தினார்வழித் தொண்டர்.

பொழிப்புரை :

ஒருநாளும் திருக்கயிலாய மலையை விட்டு நீங்காத பேரின்ப நிலையினின்றும் நீங்குமாறு செய்து, இந்நிலவுல கத்தில் ஐம்புல இன்பங்களால் ஆரத் துய்த்தற்குரிய பிறப்பினைக் கொடுத்த காரணத்தை உணர்ந்து வருந்தி, அடிமைத் திறத்தில் இப்பிறப்பிலன்றி எழுமைக்கும் நான் அடிமை என்பதை விண்ணப் பித்து, எவ்வளவும் இவர் அருளா தொழிந்தாலும் இவரலாது பிரானார் எனக்கு இல்லை என நினைவு கூர்ந்து `வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும்\' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடியரு ளினர், வழிவழியாக அடிமை செய்துவரும் நம்பியாரூரர்.

குறிப்புரை :

`வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும்\' எனத் தொடங்கும் திருப்பதிகம் தக்கராகப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.14). `ஒருமையே யல்லேன் எழுமையும் அடியேன் அடியவர்க் கடியனு மானேன்\' எனப் பதினோராவது பாடலில் வரும் தொடரையும், பாடல்தொறும் `இவரலா தில்லையோ பிரானார்\' என வரும் தொடர்களையும் நினைந்து இவ்வரிய கருத்தினை இப் பாடலில் ஆசிரியர் அருளுவாராயினார். இறைவன்பால் பொன் வேண்ட, அவர் தாராது ஒழிந்த நிலை யில் பாடியது என அருளற்குக் காரணம், நான்காவது பாடலில், `பரிந்து ஓர் பேச்சிலர் ஒன்றைத் தரவிலர் ஆகில்\' என்றும், ஒன்பதாவது பாடலில் `பிழைத்தது பொறுத் தொன்று ஈகிலராகில்\' என்றும் அருளுவனவேயாம். `இவரலாது இல்லையோ பிரானார்\' எனும் தொடர் மேலாக நோக்கின் வெகுளற் குறிப்புடையதாய் இருப்பினும், `ஒருமையே யல்லேன் எழுமையும் அடியேன் அடியவர்க் கடியனு மானேன்\' எனவும், `ஏசின வல்ல இகழ்ந்தன வல்ல\' எனவும் அருளும் நம்பியாரூரரின் திருவுள்ளக் கிடக்கையை ஆழ்ந்து கண்ட சேக்கிழார் பெருமான், இறைவன், அருளினும் அருளாதொழியினும், `இவரலாது பிரானார் எனக்கில்லை\' என்பதே அவர்தம் திருவுள்ளம் என மொழி மாற்றிப் பொருள் அமைவு காணச் செய்திருப்பது ஆழ எண்ணற் குரியதாம். வழிவழித் தொண்டர் என இவ்விடத்து அவரைக் குறிப் பதும் எண்ணற்குரியதாம். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 82

இவ்வகை பரவித் திருக்கடைக் காப்பும்
ஏசின வல்லஎன் றிசைப்ப
மெய்வகை விரும்பு தம்பெரு மானார்
விழுநிதிக் குவையளித் தருள
மைவளர் கண்டர் கருணையே பரவி
வணங்கியப் பதியிடை வைகி
எவ்வகை மருங்கு மிறைவர்தம் பதிகள்
இறைஞ்சியங் கிருந்தனர் சில நாள்.

பொழிப்புரை :

இவ்வாறு போற்றி, `ஏசின வல்ல\' என்று இசைத்த திருக்கடைக்காப்பையும் சேர்த்துப் பாட, உண்மை அன்பையே விரும்பியருளும் பெருமானும், பெரும் பொருள் குவையைக் கொடுத்து அருளலும், நஞ்சு வளரும் கழுத்தினையுடைய பெருமானின் திருக் கருணையையே போற்றித் தொழுது வணங்கி, அப்பதியின் இடத்துத் தங்கி, அவ்விடத்து அருகிலுள்ள இறைவர்தம் கோயில்கள் பலவற்றிற் கும் சென்று வணங்கி, மீளவும் வந்து சிலநாள்கள் அங்கு இருந்தனர்.

குறிப்புரை :

எவ்வகை மருங்கும் உள்ள இறைவர்தம் பதிகளை வணங்கி என்றதற்கேற்ப அறியத்தகும் பதிகள் எவை எனத் தெரிந்தில.

பண் :

பாடல் எண் : 83

அப்பதி நீங்கி யருளினாற் போகி
ஆவின்அஞ் சாடுவார் நீடும்
எப்பெயர்ப் பதியு மிருமருங் கிறைஞ்சி
இறைவர்பைஞ் ஞீலியை யெய்திப்
பைப்பணி யணிவார் கோபுர மிறைஞ்சிப்
பாங்கமர் புடைவலங் கொண்டு
துப்புறழ் வேணி யார்கழல் தொழுவார்
தோன்றுகங் காளரைக் கண்டார்.

பொழிப்புரை :

அப்பதியினின்றும் நீங்கித் திருவருட் சார்பாய்ச் சென்று, பசுவினிடத்துப் பெறும் ஐந்து பொருள்களையும் விரும்பித் திருமுழுக்காடிடும் பெருமான் எழுந்தருளி இருக்கும் காவிரியின் இரு மருங்கிலுமுள்ள எல்லாப் பதிகளையும் வணங்கி, சிவபெருமான் உறைகின்ற திருப்பைஞ்ஞீலியை அடைந்து, அங்குப் பாம்பினை அணிந்த இறைவரின் கோயில் கோபுரத்தை வணங்கி, உட்புறமுள்ள திருச்சுற்றில் வலமாக வந்து, பவளம்போலும் செஞ்சடையைக் கொண்ட இறைவரைத் தொழுது, அவர் தமக்கு முன்னதாகத் தோன்றும் கங்காள வேடமுடைய பெருமானாரைக் கண்டார்.

குறிப்புரை :

எப்பெயர்ப் பதியும் என்றது திருச்செந்துறை, திருவாலந்துறை, திருத்துடையூர், திருப்பராய்த்துறை முதலியனவாக லாம் என்பர் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை).

பண் :

பாடல் எண் : 84

கண்டவர் கண்கள் காதல்நீர் வெள்ளம்
பொழிதரக் கைகுவித் திறைஞ்சி
வண்டறை குழலார் மனங்கவர் பலிக்கு
வருந்திரு வடிவுகண் டவர்கள்
கொண்டதோர் மயலால் வினவுகூற் றாகக்
குலவுசொற் காருலா வியவென்று
அண்டர்நா யகரைப் பரவிஆ ரணிய
விடங்கராம் அருந்தமிழ் புனைந்தார்.

பொழிப்புரை :

கண்ட அளவில் அவர் கண்கள் காதலினால் நீர் வெள்ளம் பொழிந்திடக் கைகளைக் கூப்பி, வண்டுகள் பாடும் மலர்களைச் சூடிய பெண்களின் மனம் கவரும்படி அவர்பால் பிச்சை ஏற்கின்ற பெருமானாருடைய அவ்வடிவைக்கண்டு அவர்கள் அப் பெருமானாரிடம் கொண்டதொரு மயக்க மிகுதியால், வினாவிடும் கூற்றாக விளங்கும் சொற்களையுடைய `காருலாவிய நஞ்ை\\u2970?\' எனத் தொடங்கும் பதிகத்தால், தேவாதி தேவர்க்கெல்லாம் தலைவர் ஆன இறைவரைப் போற்றிப் பாடல்தொறும், `ஆரணிய விடங்கராம் இவர்\' என அமையும் அப்பதிகத்தைப் பாடி நிறைவு செய்தார்.

குறிப்புரை :

இம்முதற் குறிப்புடைய பதிகம் கொல்லிப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.36). ஆரணிய விடங்கர் - காட்டை இடமாகக் கொண்டு தாமே தோன்றிய திருவடிவை உடையவர். இத்தொடர் பாடல் தொறும் நின்று, பெருமானை விளிக்கும் தொடராக அமைந்துள்ளது.

பண் :

பாடல் எண் : 85

பரவியப் பதிகத் திருக்கடைக் காப்புச்
சாத்திமுன் பணிந்தருள் பெற்றுக்
கரவிலன் பர்கள்தங் கூட்டமுந் தொழுது
கலந்தினி திருந்துபோந் தருளி
விரவிய ஈங்கோய் மலைமுத லாக
விமலர்தம் பதிபல வணங்கிக்
குரவலர் சோலை யணிதிருப் பாண்டிக்
கொடுமுடி யணைந்தனர் கொங்கில்.

பொழிப்புரை :

அவ்வாறு போற்றியருளிய அப்பதிகத்திற்குத் திருக்கடைக்காப்பும் சாத்தித் திருமுன்பே பணிந்து, அருள்பெற்று, வஞ்சனையற்ற அன்பர்களது கூட்டத்தையும் முன்னாக வணங்கி அவர்களுடன் கலந்து இனிதிருந்து, அப்பால் சென்று, அருள் பொருந்திய திருஈங்கோய்மலை முதலாகப் பெருமானுடைய பதிகள் பலவும் பணிந்து, குரா மரங்கள் மலரும் சோலைகளையுடைய அழகில் சிறந்த கொங்கு நாட்டில் உள்ள திருப்பாண்டிக்கொடுமுடி என்னும் கோயிலைச் சென்று சேர்ந்தார்.

குறிப்புரை :

ஈங்கோய் மலையிலிருந்து திருப்பாண்டிக்கொடுமுடி வரையிலான பதிகள் பல உள. அவற்றுள் எட்டாம் நூற்றாண்டிற்கு முன் இருந்த கோயில்களை ஆய்ந்து அவற்றை ஈண்டுக் குறித்தல் தகும்.

பண் :

பாடல் எண் : 86

கொங்கினிற் பொன்னித் தென்கரைக் கறையூர்க்
கொடுமுடிக் கோயில் முன்குறுகிச்
சங்கவெண் குழையா ருழைவலஞ் செய்து
சார்ந்தடி யிணையினில் தாழ்ந்து
பொங்கிய வேட்கை பெருகிடத்தொழுது
புனிதர்பொன் மேனியை நோக்கி
இங்கிவர் தம்மை மறக்கவொண் ணாதென்
றெழுந்தமெய்க் குறிப்பினி லெடுப்ப.

பொழிப்புரை :

கொங்குநாட்டில் காவிரியாற்றின் தென்கரையில் உள்ள கறையூரில் திருப்பாண்டிக்கொடுமுடி என்னும் கோயில் முன்னாகச் சென்று, சங்கினால் ஆய வெண்தோடணிந்த பெருமானது கோயிலை வலமாக வந்து, பெருமானைச் சார்ந்து, திருவடிகளை அன்பால் தாழ்ந்து வணங்கி, பொங்கிடும் வேட்கை பெருகிடத் தொழுது, புனிதனாய அம்மூர்த்தியின் பொன்மேனியை நோக்கி, இங்கு இவர்தம்மை மறக்க முடியாது என்று எழுந்த உண்மைக் குறிப்பால் திருப்பதிகம் பாடி எடுத்திட்டு,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 87

அண்ணலா ரடிகள் மறக்கினுநாம
அஞ்செழுத் தறியவெப் பொழுதும்
எண்ணிய நாவே யின்சுவை பெருக
இடையறா தியம்புமென் றிதனைத்
திண்ணிய வுணர்விற் கொள்பவர் மற்றுப்
பற்றிலேன் எனச்செழுந் தமிழால்
நண்ணிய அன்பிற் பிணிப்புற நவின்றார்
நமச்சிவா யத்திருப் பதிகம்.

பொழிப்புரை :

`தலைமை சான்ற பெருமானுடைய திருவடிகளை என் மனம் மறந்தாலும், அவருடைய நாமமாகிய ஐந்தெழுத்தினை எப்பொழுதும் எண்ணிய என் நாவே இனிய சுவை பெருக இடை யறாது சொல்லிடும்\' என்ற இதனைத் தமது திண்மையான உணர்வி னிற் கொள்பவர், `மற்றுப் பற்றெனக்கின்றி\' என்று தொடங்கும் செழு மையாய தமிழால் பொருந்திய நமச்சிவாயப் பதிகத்தை அன்பினால் பெருமானாரைப் பற்றிய வாறு பாடி அருளினார்.

குறிப்புரை :

`மற்றுப் பற்றெனக்கின்றி\' என்று தொடங்கும் பதிகம் பழம்பஞ்சுரப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.48). பாடல்தொறும், இறைவனே! நின்னை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே எனும் கருத்தால் நிறையும் தொடர் வருதலின், இப்பதிகத்தை நமச்சிவாயப் பதிகம் என்பர். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 88

உலகெ லாம்உய்ய உறுதியாம் பதிகம்
உரைத்துமெய் யுணர்வறா வொருமை
நிலவிய சிந்தை யுடன்திரு வருளால்
நீங்குவார் பாங்குநற் பதிகள்
பலவுமுன் பணிந்து பரமர்தாள் போற்றிப்
போந்துதண் பனிமலர்ப் படப்பைக்
குலவுமக் கொங்கிற் காஞ்சிவாய்ப் பேரூர்
குறுகினார் முறுகுமா தரவால்.

பொழிப்புரை :

உலகெலாம் ஓதி உய்ய உறுதியாய அப்பதிகத்தைப் பாடியருளி, உண்மையாம் உணர்வினில் ஒருமைப்பாடு நிலவிய சிந்தையுடன், திருவருட் பேற்றினால் நிறைந்து, பெருமானது திரு முன்னின்றும் நீங்கிச் சென்றிடும் அவர், அத்திருக்கோயிலின் புறத்தாக உள்ள பல திருப்பதிகளுக்கும் சென்று பணிந்து, பெருமானுடைய திருவடிகளைப் போற்றி அப்பால் சென்று, குளிர்ந்த நல்ல மலர்கள் நெருங்கிச் செறிந்த மேல் கொங்கு நாட்டில் உள்ள காஞ்சிவாய்ப் பேரூர் என்னும் திருப்பதிக்குச் சென்று, மீதூர்ந்த அன்பின் எழுச்சி யோடு சேர்வுற்றார்.

குறிப்புரை :

`மீகொங்கில் அணி காஞ்சிவாய்\' என்பது ஆரூரர் திருவாக்காகும். ஆதலின் ஆசிரியர் சேக்கிழாரும் `மீகொங்கில்\' எனும் தொடரை எடுத்தாளுவாராயினர். காஞ்சி - ஆறு. இது பேரூருக்கு மேற்கே வெள்ளிமலைச் சாரலில் வன்னி மூலத்தில் தோன்றிப் பேரூர் வரும்வரைக் காஞ்சி நதி என அழைக்கப்பட்டு வருகிறது. பின் இவ்வாறு காவிரியில் கூடும் வரை நொய்யல் ஆறு என அழைப்பர்.மீகொங்கு - மேற்குப் பகுதியிலுள்ள கொங்கு. கொங்கு நாடா னது, கீழ்க்கொங்கு, மேல் கொங்கு, வட கொங்கு என்னும் முப்பிரிவு களைஉடையது. பாங்கு நற்பதிகள் என்பன மேல்கொங்கு நாட்டிலும், காவிரிக் கரையிலுமாக உள்ள திருக்கோயில்களாகலாம் என்பர் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை). சிவன்மலை, சென்னிமலை, ஊதியூர்மலை, பெருந்தலையூர், குரக்குத்தளி முதலிய குன்றின் கண்ணுள்ள கோயில்களாகலாம் என்றும் அவர் கூறுவர்.

பண் :

பாடல் எண் : 89

அத்திருப் பதியை யணைந்துமுன் தம்மை
யாண்டவர் கோயிலுள் புகுந்து
மெய்த்தவர் சூழ வலங்கொண்டு திருமுன்
மேவுவார் தம்மெதிர் விளங்க
நித்தனார் தில்லை மன்றுள்நின் றாடல்
நீடிய கோலம்நேர் காட்டக்
கைத்தலங் குவித்துக் கண்களா னந்தக்
கலுழிநீர் பொழிதரக் கண்டார்.

பொழிப்புரை :

அக்காஞ்சிப் பேரூருக்குச் சென்று, தம்மை ஆட்கொண்டருளிய பெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோயிலை அணைந்து, உண்மை நிறைந்த அடியவர் கூட்டம் சூழ்ந்திட, வலங் கொண்டு, இறைவனின் திருமுன்பு சென்றிடும் அவர், தம் முன்னி லையில், விளக்கமுற என்றும் நிலைபெற்ற பொருளாய இறைவன், தில்லையில் நின்று ஆடிடும் நீடிய கோலத்தை நேராகக் காட்டியருளத் தம் கைகளை உச்சி மீது குவித்துக் கண்களினின்றும் பெருகிவரும் நீர் சொரிந்திடக் கண்டருளினார்.

குறிப்புரை :

பேரூர் முற்காலத்தே பெரிய நகராக விளங்கியதாதலை இதனால் அறியலாம். மேலைச் சிதம்பரம், ஆதிபுரி, பிறவாநெறி என அழைக்கப் பெற்றமை கொண்டு, இது புண்ணியப் பதியாதலையும் அறியலாம். பெருமானின் தில்லைக் காட்சியை இங்குக் கண்டதாகச் சேக்கிழார் கூறுகின்றார். தில்லையில் சுந்தரர் தாம் வழிபட்ட பொழுது `பேரூரர் பெருமானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தே பெற்றா மன்றே\' (தி.7 ப.90 பா.10) எனச் சுந்தரர் கூறுகின்றார் `ஒருவன் என்னும் ஒருவன் காண்க\' (தி.8 ப.4 வரி.43) எனவரும் திருவாக்கை நினைவு கூர்க.

பண் :

பாடல் எண் : 90

காண்டலும் தொழுது வீழ்ந்துஉட னெழுந்து
கரையிலன் பென்பினை யுருக்கப்
பூண்டஐம் புலனிற் புலப்படா இன்பம்
புணர்ந்துமெய் யுணர்வினிற் பொங்கத்
தாண்டவம் புரியுந் தம்பிரா னாரைத்
தலைப்படக் கிடைத்தபின் சைவ
ஆண்டகை யாருக் கடுத்தஅந் நிலைமை
விளைவையார் அளவறிந் துரைப்பார்.

பொழிப்புரை :

காண்டலும் தொழுது வீழ்ந்து, உடன் எழுந்து, கரையிலாது எழும் அன்பு என்பினையும் உருக்கிடத் தம்மிடத்துக் கொண்ட ஐம்புலன்களுக்கும் புலப்படாத இன்பத்தை அடைந்து, அவ்வின்பம் உண்மை உணர்வில் பொங்கிடக் கூத்தியற்றுதலில் வல்ல பெருமானைத் தலைப்படுமாறு கிடைத்தபின், சைவ ஆண்டகையராய நம்பிகளுக்கு, அடுத்து நேர்ந்த அவ்வருட் பேற்றின் நிலையை ஆர்அளவறிந்து உரைப்பார்கள்? எவருமிலர் என்பதாம்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 91

அந்நிலை நிகழ்ந்த ஆரருள் பெற்ற
அன்பனார் இன்பவெள் ளத்து
மன்னிய பாடல் மகிழ்ந்துடன் பரவி
வளம்பதி யதனிடை மருவிப்
பொன்மணி மன்றுள் எடுத்தசே வடியார்
புரிநடங் கும்பிடப் பெற்றால்
என்னினிப் புறம்போய் எய்துவ தென்று
மீண்டெழுந் தருளுதற் கெழுவார்.

பொழிப்புரை :

அவ்வாறாக நிகழ்ந்த பேரருளைப் பெற்ற அன்பராகிய நம்பிகள், தம் இன்ப வெள்ளத்துள் மலர்ந்த பாடலை மகிழ்ந்து உடன் போற்றி, வளம் நிறைந்த அப்பதியிடைப் பொருந்தி, பொன் மணியாலாய அடைதற்கரிய சபையில் எடுத்து நின்றாடிய திருவடிகளைக் கும்பிடப் பெற்றால், இனிப் புறம்பு சென்று போற்றுவது என்? (ஏதும் இன்று) எனும் கருத்துடன் அவ்விடத்தினின்றும் எழுந் தருளிச் செல்வதற்கு முற்படுவாராகி,

குறிப்புரை :

இப்பதிகம் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 92

ஆயிடை நீங்கி அருளினால் செல்வார்
அருவரைச் சுரங்களும் பிறவும்
பாயுநீர் நதியும் பலபல கடந்து
பரமர்தம் பதிபல பணிந்து
மேயவண் தமிழால் விருப்பொடும் பரவி
வெஞ்சமாக் கூடலும் பணிந்து
சேயிடை கழியப் போந்துவந் தடைந்தார்
தென்திசைக் கற்குடி மலையில்.

பொழிப்புரை :

அவ்விடத்தினின்றும் நீங்கிப் பெருமானாரின் அருளைப் பெற்றுச் சென்றிடும் நம்பிகள், அரிய மலைச் சுரங்களை யும், பிற நிலப்பகுதிகளையும், நீருடைய ஆறுகளையும் கடந்து, இடைப்பட்ட பெருமானுடைய பதிகள் பலவும் பணிந்து, பொருந்திய வளம் மிக்க தமிழால் விருப்புடன் போற்றித் திருவெஞ்சமாக் கூடலையும் வணங்கி, நெடுந்தொலைவு கடந்து, தென்திசையில் உள்ள திருக்கற்குடி மலைக்கு வந்தார்.

குறிப்புரை :

நதிகள் பல கடந்து என்றது, அமராவதி, நன்காஞ்சி, சிற்றாறு, குழகனாறு முதலாயினவாகலாம் என்றும், பதிகள் பல என்றது மூலனூர், தென்னிலை, கருவூர் முதலியனவாகலாம் என்றும் கருதுவர் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை). திருவெஞ்சமாக்கூடலில் அருளிய பதிகம், `எறிக்கும்\' (தி.7 ப.42) எனத்தொடங்கும் கொல்லிக் கௌவாணப் பண்ணில் அமைந்த பதிகமாகும். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 93

வீடு தரும்இக் கற்குடியில்
விழுமி யாரைப் பணிந்திறைஞ்சி
நீடு விருப்பில் திருப்பதிகம்
நிறைந்த சிந்தை யுடன்பாடிப்
பாடும் விருப்பில் தொண்டருடன்
பதிகள் பலவும் அணைந்திறைஞ்சித்
தேடு மிருவர் காண்பரியார்
திருவா றைமேற் றளிசென்றார்.

பொழிப்புரை :

வீடுபேற்றை வழங்கிடும் இக்கற்குடிமலையில், நினைத்தற்கரிய மிகு இனிமையுடைய பெருமானைப் பணிந்து, போற்றி, மீதூர்ந்த விருப்பில், நிறைந்த சிந்தையுடன் திருப்பதிகம் பாடி யருளி, மேலும் பெருமானாரைப் பாடும் விருப்பில், அடியார்களுடன் பல பதிகளும் சென்று வணங்கி, தேடிநின்ற அயன், திருமால் ஆகிய இருவருக்கும் காண்டற்கரிய கடவுளின் திருஆறைமேற்றளி என்னும் திருப்பதிக்குச் சென்றார்.

குறிப்புரை :

திருக்கற்குடியில் அருளிய பதிகம் `விடையார்\' எனத் தொடங்கும் நட்டராகப் பண்ணில் அமைந்த பதிகமாகும் (தி.7 ப.27).

பண் :

பாடல் எண் : 94

செம்பொன் மேருச் சிலைவளைத்த
சிவனார் ஆறை மேற்றளியில்
நம்பர் பாதம் பணிந்திறைஞ்சி
நாளு மகிழ்வார்க் கருள்கூட
உம்பர் போற்றுந் தானங்கள்
பலவும் பணிந்து போந்தணைவார்
இம்பர் வாழ இன்னம்பர்
நகரைச் சேர வெய்தினார்.

பொழிப்புரை :

சிவந்த பொன்னான மேருமலையை வில்லாக வளைத்த சிவபெருமான் உறையும் திருஆறைமேற்றளி என்னும் பதியில் பெருமானுடைய திருவடிகளைப் பணிந்து வணங்கி, நாளும் மகிழ்கின்ற நம்பிகளுக்குத் திருவருள் கூடிட, அப்பாலும் சென்று தேவர்கள் போற்றும் கோயில்கள் பலவும் சென்று பணிந்து வருவார், இவ்வுலகு வாழத் திருஇன்னம்பர் என்னும் நகரைச் சென்றடைந்தார்.

குறிப்புரை :

திருஆறை மேற்றளியில் அருளிய பதிகம் கிடைத்திலது. பதிகள் பலவும் என்பன திருச்சத்திமுற்றம், திருப்பட்டீச்சுரம், திருப்பழையாறை, பழையாறைவடதளி, திருவலஞ்சுழி முதலாயின வாகலாம் என்பர் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை).

பண் :

பாடல் எண் : 95

ஏரின் மருவும் இன்னம்பர்
மகிழ்ந்த ஈசர் கழல்வணங்கி
ஆரு மன்பிற் பணிந்தேத்தி
ஆரா அருளால் அங்கமர்வார்
போரின் மலியுங் கரியுரித்தார்
மருவும் புறம்ப யம்போற்றச்
சேரும் உள்ளம் மிக்கெழமெய்ப்
பதிகம் பாடிச் செல்கின்றார்.

பொழிப்புரை :

அழகு பொருந்திய திருஇன்னம்பரில் மகிழ்ந்தருளி இருக்கும் இறைவனின் திருவடிகளைப் பணிந்து, உள்ளம் நிறையும் அன்பினால் போற்றி செய்து, தெவிட்டாத அருளின் பெருக்கால் இன்புற்று, அங்கு அமர்ந்தருளும் நம்பிகள், போர்த்தொழிலில் மிகு விருப்பங்கொண்டு திரியும் கயாசுரன் என்னும் யானையை உரித்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருப்புறம்பயம் என்னும் திருப் பதிக்கும் சென்று, போற்றுதற்குப் பொருந்திய உள்ளம் மிகவும் வேட்கை எய்த, அங்குச் செல்பவர், செல்லும்போது திருப்பதிகம் பாடியவாறே செல்வாராய்,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 96

அங்க மோதியோ ராறை மேற்றளி
யென்றெ டுத்தமர் காதலில்
பொங்கு செந்தமி ழால்வி ரும்பு
புறம்ப யந்தொழப் போதும்என்
றெங்கும் மன்னிய இன்னி சைப்பதி
கம்பு னைந்துட னெய்தினார்
திங்கள் சூடிய செல்வர் மேவு
திருப்பு றம்பயஞ் சேரவே.

பொழிப்புரை :

`அங்கம் ஓதி ஓர் ஆறை மேற்றளி\' எனத் தொடங் கிப் பெருமானிடம் பொருந்திய காதலால் பொங்கி எழும் செந்தமிழால், தாம் விரும்பிய `புறம்பயம் தொழப்போதும்\' என்று, எங்கும் பரவிய இன்னிசையுடைய தேவாரப் பதிகத்தைப் பாடிக் கொண்டு, திங்களைச் சூடிய இறைவர் வீற்றிருந்தருளும் திருப்புறம் பயம் என்னும் பதிக்குச் சென்றார்.

குறிப்புரை :

இத்தொடக்கமுடைய பதிகம் கொல்லிப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.35). இப்பதிகத்தின் முதற் பாடலில் வரும் `அங்கம் ஓதி ஓர் ஆறை மேற்றளி நின்றும் போந்து வந்து இன்னம்பர்த், தங்கினோமையும் இன்னதென்றிலர் ஈசனார் எழுநெஞ்சம்\' எனவரும் பகுதி, நம்பிகள் தொடர்ந்து போந்தருளும் திருப்பதிச் (தல யாத்திரை) செலவினை அறியவும் வாயிலாயுள்ளது. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 97

அப்ப திக்கண் அமர்ந்த தொண்டரும்
அன்று வெண்ணெய்நல் லூரினில்
ஒப்ப ருந்தனி வேதி யன்பழ
வோலை காட்டிநின் றாண்டவர்
இப்ப திக்கண்வந் தெய்த என்ன
தவங்கள் என்றெதிர் கொள்ளவே
முப்பு ரங்கள் எரித்த சேவகர்
கோயில் வாயிலில் முன்னினார்.

பொழிப்புரை :

அத்திருப்பதிக்கண் வாழும் தொண்டர்களும், இவர்தம் வருகையறிந்து, அன்று திருவெண்ணெய்நல்லூரில் ஒப்பற்ற சிறந்த அந்தணனாய் வந்து பழமையான ஓலை ஒன்றினைக் காட்டி ஆண்டு கொண்டருளப் பெற்ற பேரருளாளராய நம்பிகள், இத்திருப்பதிக்கு வந்து சேர்ந்திட, `என்ன தவங்கள் நாம் செய்தனம்\' எனப் போற்றிச் சென்று, அவரை எதிர்கொண்டிட, அவர்களுடன் கூடி முப்புரங்களையும் எரிசெய்த சிவபெருமான் அமர்ந்தருளும் அக்கோயிலின் திருவாயிலைச் சென்று சேர்ந்தார்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 98

நீடு கோபுர முன்பி றைஞ்சி
நிலாவு தொண்டரொ டுள்ளணைந்து
ஆடன் மேவிய வண்ண லாரடி
போற்றி யஞ்சலி கோலிநின்று
ஏடு லாமலர் தூவி எட்டினொ
டைந்து மாகும் உறுப்பினாற்
பீடு நீடு நிலத்தின் மேற்பெரு
கப்ப ணிந்து வணங்கினார்.

பொழிப்புரை :

நீண்ட கோபுரத்தின் முன்பாக வணங்கித், தம்முடன் கூடிய அடியாருடன் உட்சென்று, அங்கு உலகெலாம் உய்ய நடமாடும் பெருமானின் திருவடிகளையும் வணங்கிக் கைகள் கூப்பி நின்று, மணம் கமழும் இதழ்கள் விரிந்த மலர்களைத் தூவி, உறுப்புக்கள் எட்டுடனும் ஐந்துடனுமாய பெருமை நீடிய நிலமிசைப் பொருந்திய வணக்கங்களைச் செய்தார்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 99

அங்கு நீடருள் பெற்றுஉள் ஆர்வம்
மிகப்பொ ழிந்தெழு மன்பினால்
பொங்கு நாண்மலர்ப் பாத முன்பணிந்
தேத்தி மீண்டு புறத்தணைந்
தெங்கு மாகி நிறைந்து நின்றவர்
தாம கிழ்ந்த விடங்களில்
தங்கு கோல மிறைஞ்சு வாரருள்
தாவி லன்பரோ டெய்தினார்.

பொழிப்புரை :

அங்கு இறைவனின் பேரருளைப் பெற்று, உள்ளத்தில் ஆர்வம் மிகப் பொழிந்து எழுகின்ற அன்பினால் பொங்கி மலர்ந்திடும் பூப்போன்ற அழகிய திருவடிகளை முன்பாகப் பணிந்து போற்றி, மீண்டு வெளியே வந்து, எங்குமாகி நிறைந்து விளங்குகின்ற பெருமான் மகிழ்ந்து உறைகின்ற கோயில்களில் ஆங்காங்கு அவர் கொண்டிருக்கும் திருக்கோலங்களைக் கண்டு பணிவாராகிய நம்பிகள், அருள் நிறைந்த குறைவில்லாத அன்பர்களுடன் சென்றார்.

குறிப்புரை :

திருப்புறம்பயத்தில் பெருமான் முன்பு நின்று போற்றிய பதிகம் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 100

வம்புநீ டலங்கல் மார்பின்
வன்றொண்டர் வன்னி கொன்றை
தும்பைவெள் ளடம்பு திங்க
டூயநீ ரணிந்த சென்னித்
தம்பிரா னமர்ந்த தானம்
பலபல சார்ந்து தாழ்ந்து
கொம்பனா ராடல் நீடு
கூடலை யாற்றூர் சார.

பொழிப்புரை :

நறுமணம் மிக்க மாலை அணிந்த மார்பினை உடைய ஆரூரர், வன்னி, கொன்றை, தும்பை, வெள்ளெருக்கு, இளம் பிறை, தூய கங்கைநீர் ஆகியவற்றை அணிந்த சடையையுடைய சிவ பெருமான் இருந்தருளும் திருப்பதிகள் பலவற்றையும் வணங்கிப் பூங்கொடியின் வனப்புடைய பெண்கள் ஆடல் மிகுந்த கூடலை ஆற்றூரை அணுக,

குறிப்புரை :

தானம் பல பல என்பன, கோவந்த புத்தூர், பழுவூர், கடம்பூர்கரக் கோயில், கடம்பை இளங்கோயில் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார்.

பண் :

பாடல் எண் : 101

செப்பரும் பதியிற் சேரார்
திருமுது குன்றை நோக்கி
ஒப்பரும் புகழார் செல்லும்
ஒருவழி யுமையா ளோடும்
மெய்ப்பரம் பொருளா யுள்ளார்
வேதிய ராகி நின்றார்
முப்புரி நூலுந் தாங்கி
நம்பியா ரூரர் முன்பு.

பொழிப்புரை :

ஆயினும், ஒப்பற்ற புகழுடைய சுந்தரர் பெருமான் சொலற்கரிய பெருமையுடைய திருக்கூடலையாற்றூருக்குச் சேராதவ ராய்த் திருமுதுகுன்றை நோக்கிச் செல்லலும், அவ்வழியில் உமையம் மையாரோடு வீற்றிருந்தருளும் உண்மையான மேலான பொருளாக விளங்கும் சிவபெருமான், ஓர் அந்தணர் வடிவு கொண்டு, முப்புரி நூல் அணிந்து அவர் முன்பு நின்றார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 102

நின்றவர் தம்மை நோக்கி
நெகிழ்ந்தசிந் தையராய்த் தாழ்வார்
இன்றியாம் முதுகுன் றெய்த
வழியெமக் கியம்பும் என்னக்
குன்றவில் லாளி யாரும்
கூடலை யாற்றூர் ஏறச்
சென்றதிவ் வழிதானென்று
செல்வழித் துணையாய்ச் செல்ல.

பொழிப்புரை :

அவ்வழியில் நின்ற அந்தணர் பெருமானை, நம்பிகள் நோக்கி, நெகிழ்ந்த சிந்தை உடையவராகித் தாழ்ந்து வணங்கி, `இன்று யாம் திருமுதுகுன்றத்தைச் சேர்தற்குரிய வழியைச் சொல்லும்\' என்னலும், அதுபொழுது மேருமலையை வில்லாக உடைய சிவ பெருமான் அவரை நோக்கிக் `கூடலையாற்றூரை அடைதற்குரிய வழி இதுவாகும்\' என்று கூறியருளித் தாமும் அவருக்கு வழித்துணையாகச் சென்றிடலும்,

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 103

கண்டவர் கைகள் கூப்பித்
தொழுதுபின் தொடர்வார்க் காணார்
வண்டலர் கொன்றை யாரை
வடிவுடை மழுவென் றேத்தி
அண்டர்தம் பெருமான் போந்த
அதிசயம் அறியே னென்று
கொண்டெழு விருப்பி னோடும்
கூடலை யாற்றூர் புக்கார்.

பொழிப்புரை :

அந்தணனாய எம்பிரான் வழித்துணையாக முன் போகக் கண்டு, கைகள் கூப்பித் தொழுது, பின்னாகச் செல்பவர், முன் போன அந்தணனாரைக் காணாதவராகி, வண்டுகள் மொய்க்க இதழ் விரிந்து விளங்கும் மலர் சூடிய சிவபெருமானை உடன் நினைந்து தொழுது, `வடிவுடை மழு\' எனத் தொடங்கும் பதிகம் பாடிப் போற்றித் தேவர்கள் தலைவனாம் சிவபெருமானார் `இவ்வழிப் போந்த அதி சயம் அறியேன் யான் \' என அப்பதிகத்து மொழிந்து, எம்பிரான் மீது கொண்டெழுகின்ற பெருவிருப்பத்துடன் திருக்கூடலையாற்றூருக்குச் சென்றருளினார்.

குறிப்புரை :

`வடிவுடை மழு\' எனத் தொடங்கும் பதிகம் புறநீர்மைப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.85). `இவ்வழி போந்த அதிசயம் அறியேனே\' எனப் பாடல்தொறும் வரும் நிறைவுத் தொடர் ஆசிரியர் சேக்கிழார் அருளும் இவ்வரலாற்றிற்கு அரணாய் அமைந்துள்ளமை அறியத்தக்கது. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 104

கூடலை யாற்றூர் மேவும்
கொன்றைவார் சடையி னார்தம்
பீடுயர் கோயில் புக்குப்
பெருகிய ஆர்வம் பொங்க
ஆடகப் பொதுவி லாடும்
அறைகழல் வணங்கிப் போற்றி
நீடருள் பெற்றுப் போந்து
திருமுது குன்றி னேர்ந்தார்.

பொழிப்புரை :

அத்திருநகரில் வீற்றிருந்தருளும், கொன்றை மலர் சூடிய சடையையுடைய, பெருமானது பெருமை மிகுந்த கோயிலி னுள் புகுந்து, உள்ளத்துப் பெருகிய ஆர்வம் பொங்கிட, பொன்னா லாய திருச்சபையில் திருக்கூத்தியற்றும் பெருமானின் வீரக்கழலை யணிந்த திருவடிகளை வணங்கிப் போற்றிப் பேரருள் பெற்றுப் பின் திருமுதுகுன்றத்தைச் சென்று சேர்ந்தார்.

குறிப்புரை :

திருமுன்பு நின்று அருளிய பதிகம் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 105

தடநிலைக் கோபு ரத்தைத்
தாழ்ந்துமுன் னிறைஞ்சிக் கோயில்
புடைவலங் கொண்டு புக்குப்
போற்றினர் தொழுது வீழ்ந்து
நடநவில் வாரை நஞ்சி
யிடை எனுஞ் செஞ்சொன் மாலைத்
தொடைநிகழ் பதிகம் பாடித்
தொழுதுகை சுமந்து நின்று.

பொழிப்புரை :

பெருகிய நிலைகளையுடைய கோபுரத்தை முன் வணங்கிக் கோயிலைச் சூழ வலம் வந்து புகுந்து, எஞ்ஞான்றும் மாறாது கூத்தியற்றிவரும் பெருமானைக் கண்ட அளவிலேயே கை தொழுது வீழ்ந்து, `நஞ்சியிடை\' எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடித் தொழுது, தலைமேல் கூப்பிய கையராய் நின்று,

குறிப்புரை :

`நஞ்சியிடை\' எனத் தொடங்கும் திருப்பதிகம் கொல்லிக் கௌவாணப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.43).

பண் :

பாடல் எண் : 106

நாதர்பாற் பொருள் தாம் வேண்டி
நண்ணிய வண்ண மெல்லாம்
கோதறு மனத்துட் கொண்ட
குறிப்பொடும் பரவும் போது
தாதவிழ் கொன்றை வேய்ந்தார்
தரஅருள் பெறுவார் சைவ
வேதியர் தலைவர் மீண்டும்
மெய்யில்வெண் பொடியும் பாட.

பொழிப்புரை :

குற்றமற்ற தம் மனத்தில், தம் தலைவர்பால் பொருள் வேண்டிவந்த குறிப்போடும் வணங்கும் பொழுது, இதழ்கள் விரிந்த கொன்றை மலரைச் சூடிய பெருமான் பொருள் தர, அருள் பெறுவாராய நம்பிகள், மீண்டும் திருமுதுகுன்றத்து இறைவரை `மெய் யில் வெண்பொடி\' எனத் தொடங்கும் பதிகம் பாடிடலும்,

குறிப்புரை :

`மெய்யை முற்றப் பொடிபூசி\' (தி.7 ப.63) எனத் தொடங் கும் திருப்பதிகம் தக்கேசிப் பண்ணில் அமைந்ததாகும். பாடலில் வரும் சொற்கிடக்கையைச் சிறிது மாற்றி, மெய்யில் வெண்பொடியும் பாட என்றருளினார்.

பண் :

பாடல் எண் : 107

பனிமதிச் சடையார் தாமும்
பன்னிரண் டாயி ரம்பொன்
நனியருள் கொடுக்கு மாற்றால்
நல்கிட உடைய நம்பி
தனிவரு மகிழ்ச்சி பொங்கத்
தாழ்ந்தெழுந் தருகு சென்று
கனிவிட மிடற்றி னார்முன்
பின்னொன்று கழற லுற்றார்.

பொழிப்புரை :

குளிர்ந்த பிறையணிந்த சடைமுடியையுடைய சிவபெருமானும், அவருக்குப் பன்னிரண்டாயிரம் பொன்னினை மிகவும் அருள் செய்யும் வகையில் கொடுத்திடலும், ஆளுடைய நம்பிகளுக்குத் தனித்துத் தமது உள்ளத்து எழும் மகிழ்ச்சி பொங்கிட, பெருமானைத் தாழ்ந்து வணங்கி, எழுந்து, அருகாகச் சென்று, கனிந்த நஞ்சை உண்டருளிய கழுத்தினை உடைய பெருமான் திருமுன்பு நின்று, மேலும் விண்ணப்பிப்பாராய்,

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 108

அருளும்இக் கனக மெல்லாம்
அடியனேற் காரூ ருள்ளோர்
மருளுற வியப்ப அங்கே
வரப்பெற வேண்டு மென்னத்
தெருளுற வெழுந்த வாக்கால்
செழுமணி முத்தாற் றிட்டிப்
பொருளினை முழுதும் ஆரூர்க்
குளத்திற்போய்க் கொள்க வென்றார்.

பொழிப்புரை :

பெருமான் எனக்குத் தந்தருளிய இப்பொன் எல்லாம், திருவாரூரில் உள்ளார் கண்டு மருட்சியுறவும், அதிசயித் திடும்படியாகவும் அங்கு வரும்படி செய்தல் வேண்டுமென்று வேண்டி டலும், அதுபொழுது அவர் தெளிவு கொள்ளும்படி, வானில் எழுந்த திருவாக்கால், `ஆரூரனே! செழுமையான மணிமுத்தாற்றில் இட்டு, இப்பொருளை எல்லாம் திருவாரூர்க் குளத்தில் போய்ப் பெற்றுக் கொள்வாய்!\' என்றருளினார்.

குறிப்புரை :

இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 109

என்றுதம் பிரானார் நல்கும்
இன்னருள் பெற்ற பின்னர்
வன்றொண்டர் மச்சம் வெட்டிக்
கைக்கொண்டு மணிமுத் தாற்றில்
பொன்றிரள் எடுத்து நீருள்
புகவிட்டுப் போது கின்றார்
அன்றெனை வலிந்தாட் கொண்ட
அருளிதில் அறிவே னென்று.

பொழிப்புரை :

தம் பெருமானார் அருளிய வானொலியைக் கேட்ட பின்னர், வன்றொண்டராய நம்பிகள், அப்பொன்னின் அடை யாளம் தெரிதற்காக ஒரு துண்டினை வெட்டி, அதனைக் கையிற் கொண்டு, ஏனைய பொன்னின் திரளை அழகிய மணிமுத்தாற்றில் சேருமாறு விடுத்துத் திருவாரூர் நோக்கிப் போகின்றவர், `அன்று எனைத் தாமே வலிய வந்து ஆட்கொண்டருளிய இறைவனின் திரு வருளை, இச்செயலில் மீளவும் அறிவேன்\' என்று,

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 110

மேவிய காதல் தொண்டு
விரவுமெய் விருத்தி பெற்றார்
ஆவியின் விருத்தி யான
அந்தணர் புலியூர் மன்றில்
காவியங் கண்டர் கூத்துக்
கண்டுகும் பிடுவன் என்று
வாவிசூழ் தில்லை மூதூர்
வழிக்கொள்வான் வணங்கிப் போந்தார்.

பொழிப்புரை :

பெருமானிடத்துப் பொருந்திய பெருவிருப்பால் தொண்டு செய்து, உடற்கு வளர்ச்சி தரும் பொன்னைப் பெற்றவர், உயிர்க்கு வளர்ச்சி தரும் (நிலையான இன்பம்) அந்தணர்கள் போற் றும், புலியூரெனும் தில்லைப்பகுதியின் கண்ணுள்ள கனகசபையில் நீல கண்டப் பெருமானின் திருக்கூத்தைக் கண்டு கும்பிடுவன் என்று கருதி, குளங்கள் சூழ்ந்த தில்லை என்னும் ஊரை நோக்கிச் செல்லும் நோக்கத்தில், திருமுதுகுன்றப் பெருமானை வணங்கிப் போயினார்.

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 111

மாடுள பதிகள் சென்று
வணங்கிப்போய் மங்கை பாகர்
நீடிய கடம்பூர் போற்றி
நிறைந்தஆ னந்தக் கூத்தர்
ஆடிய தில்லை மூதூர்
அணைந்தணி வாயில் புக்குச்
சேடுயர் மாட மன்னுஞ்
செழுந்திரு வீதி சார்ந்தார்.

பொழிப்புரை :

செல்லும் வழியில் இடைப்பட்ட பதிகள் பலவும் வணங்கிச் சென்று, உமையொரு கூறராய சிவபெருமான் வீற்றிருக் கும் திருக்கடம்பூரை அடைந்து, பெருமானைப் போற்றி, உள்ளம் நிறைந்த பெருமகிழ்வை வழங்கி அருளும் கூத்துடைய பெருமான் ஆடி அருளும் தில்லை என்னும் மூதூரை (பழைய நகரை) அணைந்து, அழகிய திருவாயிலின் ஊடாக உட்புகுந்து, மிகவும் உயர்ந்த மாடங்கள் விளங்கும் செழுமையான திருவீதியைச் சேர்ந்தார்.

குறிப்புரை :

மாடுள பதிகள் என்பன, திருமுதுகுன்றத்திற்கும், திருத் தில்லைக்கும் இடையிலுள்ள பதிகளாய திருஎருக்கத்தம்புலியூர் முதலாயினவாகலாம். கடம்பூரில் அருளிய பதிகம் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 112

பொற்றிரு வீதி தாழ்ந்து
புண்ணிய விளைவாய் ஓங்கும்
நற்றிரு வாயில் நண்ணி
நறைமலி யலங்கல் மார்பர்
மற்றதன் முன்பு மண்மேல்
வணங்கியுட் புகுந்து பைம்பொன்
சுற்றுமா ளிசைழ் வந்து
தொழுதுகை தலைமேற் கொள்வார்.

பொழிப்புரை :

பொலிவு மிக்க அவ்வீதியைத் தாழ்ந்து வணங்கி, புண்ணியத்தின் விளைவாய் ஓங்கிய நல்ல திருவுடைய கோயிலின் வாயிலை அடைந்து, மணம் நிறைந்த மாலையைச் சூடும் மார்புடைய நம்பிகள், மற்று அத்திருவாயிலின் முன்பாக மண்மேல் விழுந்து வணங்கி, உட்புகுந்து, பசிய பொன்னால் அமைந்த திருச்சுற்றுத் திரு மாளிகைகளையும் வலமாகச் சூழ்ந்து, உச்சிக் கூப்பிய கையினராய்,

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 113

ஆடிய திருமுன் பான
அம்பொனின் கோபு ரத்தின்
ஊடுபுக் கிறைஞ்சி ஓங்கும்
ஒளிவளர் கனக மன்றில்
நாடகச் செய்ய தாளை
நண்ணுற வுண்ணி றைந்து
நீடும்ஆ னந்த வெள்ளக்
கண்கள்நீர் நிரந்து பாய.

பொழிப்புரை :

தில்லைக் கூத்தியற்றும் பெருமானின் திருமுன்பாக விளங்கும் அழகிய பொற் கோபுரத்தின் ஊடாக உள்புகுந்து வணங்கி, ஒளி ஓங்கி வளரும் பொற்பொதுவில் நடனமாடும் பெருமானுடைய செவ்விய திருவடிகளை அணுக வந்தடைய, உள்ளத்து நிறைந்து நீடஓங்கும் ஆனந்த வெள்ளமாக, கண்கள் நீரினை இடையறாது வெளிப்படுத்த,

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 114

பரவுவாய் குளறிக் காதல்
படிதிருப் படியைத் தாழ்ந்து
விரவுமெய் அங்கம் ஐந்தும்
எட்டினும் வணங்கி வேட்கை
உரனுறு திருக்கூத் துள்ளம்
ஆர்தரப் பெருகி நெஞ்சில்
கரவிலா தவரைக் கண்ட
நிறைவுதங் கருத்திற் கொள்ள.

பொழிப்புரை :

போற்ற எடுத்திடும் வாய் குளறிப், பெருமான் இடத்துக் காதல் பெருக உள்ள திருக்களிற்றுப்படியைத் தாழ்ந்து, பொருந்திய வகையால் உடலின் ஐந்து உறுப்புகளும் எட்டு உறுப்புக ளுமாக நிலமிசைப் பொருந்த வணங்கி, உயிர்கள் எல்லாம் உய்தற் குரிய வலிமை மிகுந்த திருக்கூத்து, உள்ளத்துப் பெருகிய இன்பத்தை விடாத தமது உள்ளத்தே, வஞ்சியாது நீள நிறைந்து நிற்கும் பேரொ ளியைக் கண்டு கொண்ட நிறைவு தம் மனத்தில் பெருக்கெடுப்ப,

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 115

மடித்தாடும் அடிமைக்கண் என்றெடுத்து
மன்னுயிர்கட் கருளு மாற்றால்
அடுத்தாற்று நன்னெறிக்கண் நின்றார்கள்
வழுவிநர கணையா வண்ணம்
தடுப்பானைப் பேரூரிற் கண்டநிலை
சிறப்பித்துத் தனிக்கூத் தென்றும்
நடிப்பானை நாம்மனமே பெற்றவா
றெனுங்களிப்பால் நயந்து பாடி.

பொழிப்புரை :

`மடித்தாடும் அடிமைக் கண்\' எனத் தொடங்கி, நிலைபெற்ற உயிர்கட்கு அருள் புரிந்திடும் அத்தகவால், அடுத்துச் செய்திடும் நல்ல நெறியில் ஒழுகி நிற்பார்கள், தவறியும் இயமன் கைப்பட்டு நரகத்துச் சேராதவாறு தடுக்கின்ற பெருமானைத் திருக் காஞ்சிவாய்ப்பேரூரில் கண்ட திருக்கூத்தைச் சிறப்பித்து, ஒப்பற்ற அத் திருக்கூத்தை என்றும் செய்தருள்பவனை, `மனமே! நான் பெற்ற பேறு தான் என்னே!\' என்று மிக நயப்புடன் பாடியருளி,

குறிப்புரை :

மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே
மனனேநீ வாழு நாளுந்
தடுத்தாட்டித் தருமனார் தமர்செக்கி
லிடும்போது தடுத்தாட் கொள்வான்
கடுத்தாடுங் கரதலத்தில் தமருகமும்
எரிஅகலும் கரிய பாம்பும்
பிடித்தாடிப் புலியூர்ச் சிற்றம்பலத்து
எம்பெருமானைப் பெற்றா மன்றே. (தி.7 ப.90 பா.1) என்பது இப்பதிகத்து வரும் முதற் பாடலாகும். இப்பதிகம் குறிஞ்சிப் பண்ணில் அமைந்ததாம் (தி.7 ப.90). `தருமனார் தமர் செக்கில் இடும் போது தடுத்தாட் கொள்வான்\' எனும் பகுதிக்கு வரும் விளக்கமே, `நன்னெறிக்கண் நின்றவர்கள் வழுவி நரகு அடையா வண்ணம் தடுப் பான்\' என்பதாகும்.

பண் :

பாடல் எண் : 116

மீளாத அருள்பெற்றுப் புறம்போந்து
திருவீதி மேவித் தாழ்ந்தே
ஆளான வன்றொண்டர் அந்தணர்கள்
தாம்போற்ற அமர்ந்து வைகி
மாளாத பேரன்பால் பொற்பதியை
வணங்கிப்போய் மறலி வீழத்
தாளாண்மை கொண்டவர்தங் கருப்பறிய
லூர்வணங்கிச் சென்று சார்ந்தார்.

பொழிப்புரை :

பிரியாத அருள் பெற்று, வெளியே சென்று, கோயி லின் திருவீதியை அணைந்து தாழ்ந்து வணங்கி, பெருமானுக்கு ஆளான நம்பிகள், தில்லையில் வாழும் அந்தணர்கள் தம்மைப் போற்ற, அவர்களுடன் அங்கு அமர்ந்து இருந்து, பின்பும் நீங்காத பேரன்பினால் பொற்பதியாம் தில்லையை வணங்கி, அப்பால் சென்று, இயமன் வீழ்ந்திடத் திருவடியை ஓச்சி அருளிய பெருமானது திருக் கருப்பறியலூரை வணங்கி அப்பால் சென்று சேர்ந்தார்.

குறிப்புரை :

இயமன் வீழ இறைவன் தாளாண்மை கொண்ட இடம் திருக்கடவூர் ஆயினும் அச்செயல் திறம் ஆற்றிய இறைவன் யாண்டும் நீக்கமற நிற்றலின் ஈண்டும் இயைபுபடுத்திக் கூறினார். பிறபிற இடங்களில் இங்ஙனம் வருமாற்றிற்கும் இது ஒக்கும். இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 117

கூற்றுதைத்தார் திருக்கொகுடிக் கோயில் நண்ணிக்
கோபுரத்தைத் தொழுதுபுகுந் தன்பர் சூழ
ஏற்றபெருங் காதலினால் இறைஞ்சி யேத்தி
எல்லையிலாப் பெருமகிழ்ச்சி மனத்தி லெய்தப்
போற்றிசைத்துப் புறத்தணைந்தப் பதியின் வைகிப்
புனிதரவர் தமைநினையு மின்பங் கூறிச்
சாற்றியமெய்த் திருப்பதிகஞ் சிம்மாந் தென்னுந்
தமிழ்மாலை புனைந்தங்குச் சாரு நாளில்.

பொழிப்புரை :

இயமனை உதைத்தருளிய பெருமான் எழுந்தருளி யிருக்கும் திருக்கொகுடிக் கோயிலை அடைந்து, முதற்கண் கோபுரத் தைத் தொழுது, உட்சென்று அன்பர்கள் சூழ்ந்துவரப் பெருவிருப்பால் இறைவனைப் போற்றி, எல்லையில்லாத பெருமகிழ்ச்சி மனத்தில் பொருந்தப் பெருமானைப் போற்றிப் பாடிப் புறமே போந்து, அத் திப்பதியில் வதிந்திடும் நாள்களில், அப்புனிதராய பெருமானை நினைவதால் வரும் இன்பப் பெருக்கினை எடுத்து மொழிந்தருளும் திருப்பதிகமான `சிம்மாந்து\' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி, அத்தமிழ் மாலையை, இறைவற்குச் சார்த்தி, அங்கு இருந்திடுங் காலத்தில்,

குறிப்புரை :

திருக்கருப்பறியலூர் - ஊர்ப் பெயர். கொகுடிக் கோயில் - கோயிலின் பெயர். கொகுடி - முல்லை. முல்லையினை உடைய கோயில். இப்பெருமானின் திருமுன்பு அருளிய பதிகம் கிடைத்திலது. அங்குத் தங்கியிருந்த நாள்களில் அருளிய பதிகம் `சிம்மாந்து\' எனத் தொடங்கும் நட்டராகப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.30). `எம்மானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய வாறே\' எனவரும் பதிகக் குறிப்பே ஈண்டு விளக்கப் பெறுகின்றது.

பண் :

பாடல் எண் : 118

கண்ணுதலார் விரும்புகருப் பறிய லூரைக்
கைதொழுது நீங்கிப் போய்க் கயல்கள் பாயும்
மண்ணிவளம் படிக்கரையை நண்ணி யங்கு
மாதொருபா கத்தவர்தாள் வணங்கிப் போற்றி
எண்ணில்புகழ்ப் பதிகமுமுன் னவன்என் றேத்தி
யேகுவார் வாழ்கொளிபுத் தூரெய் தாது
புண்ணியனார் போம்பொழுது நினைந்து மீண்டு
புகுகின்றார் தலைக்கலன்என் றெடுத்துப்போற்றி.

பொழிப்புரை :

நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமான் விரும்பி உறைகின்ற திருக்கருப்பறியலூரைத் தொழுது, வணங்கிப் பின்னர் அங்கிருந்து நீங்கிச் சென்று, மீன்கள் பாய்ந்து திரியும் மண்ணி ஆற்றின் வளமுடைய திருப்பழமண்ணிப் படிக்கரையை அடைந்து, உமையொரு கூறராய் பெருமானின் திருவடிகளைப் பணிந்து போற்றுபவர், எண்ணற்கரிய புகழமைந்த பதிகமாய `முன்னவன்\' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடிப் போற்றிப் பின்னர் திருவாழ்கொளிப்புத்தூர் என்னும் கோயிற்குச் செல்லாது செல்கின் றவர், அத்திருப்பதியை நினைந்தளவில், மீண்டு அங்குச் சென்று, `தலைக்கலன்\' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் போற்றியவாறு உட்சென்றார்.

குறிப்புரை :

`முன்னவன்\' எனத் தொடங்கும் திருப்பதிகம் நட்டராகப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப. 22). `தலைக்கலன்\' எனத் தொடங் கும் திருப்பதிகம் தக்கேசிப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப. 57).

பண் :

பாடல் எண் : 119

திருப்பதிகம் பாடியே சென்றங் கெய்தித்
தேவர்பெரு மானார்தங் கோயில் வாயில்
உருப்பொலியும் மயிர்ப்புளகம் விரவத் தாழ்ந்தே
உள்ளணைந்து பணிந்தேத்தி உருகு மன்பால்
பொருப்பரையன் மடப்பாவை இடப்பா லானைப்
போற்றிசைத்துப் புறம்போந்து தங்கிப் பூமென்
கருப்புவயல் வாழ்கொளிபுத் தூரை நீங்கிக்
கானாட்டு முள்ளூரைக் கலந்த போது.

பொழிப்புரை :

சென்றவர் திருவாழ்கொளிப்புத்தூரில் வீற்றிருக் கும் தேவர் பெருமானாரின் திருக்கோயில் வாயிலைச் சார்ந்து, உடம்பெல்லாம் மயிர்க்கூச்செறியத் தாழ்ந்து, உள்ளாகச் சென்று, பணிந்து, அன்பினால் மலையரசன் மகளாராய உமையம்மையாரை இடமருங்கில் கொண்ட சிவபெருமானை வணங்கிப் போற்றிப் பாடி வெளியே போந்து, அங்குத் தங்கி, பின்னர் அழகும் மென்மையும் உடைய கரும்பின் வயல் நிறைந்த வாழ்கொளிப்புத்தூரை விடுத்து நீங்கி, திருக்கானாட்டு முள்ளூரைச் சேர்ந்த பொழுது,

குறிப்புரை :

இறைவனின் திருமுன்பு அருளிய பதிகம் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 120

கானாட்டு முள்ளூரைச் சாரும் போது
கண்ணுதலார் எதிர்காட்சி கொடுப்பக் கண்டு
தூநாள்மென் மலர்க்கொன்றைச் சடையார் செய்ய
துணைப்பாத மலர்கண்டு தொழுதே னென்று
வானாளுந் திருப்பதிகம் வள்வாய் என்னும்
வண்டமிழின் தொடைமாலை மலரச் சாத்தித்
தேனாரு மலர்ச்சோலை மருங்கு சூழ்ந்த
திருவெதிர்கொள் பாடியினை யெய்தச் செல்வார்.

பொழிப்புரை :

திருக்கானாட்டு முள்ளூரைச் சாரும்பொழுது கண்ணுதற் பெருமான் அவர் எதிரே தோன்றிக் காட்சி கொடுத்தருளக் கண்டு போற்றுவார், தூயதாய அன்றலர்ந்த மெல்லிய மலராகும் கொன்றை மாலையைச் சடைமீது அணிந்த பெருமானாரது இரு திருவடி மலர்களையும் நேரில் கண்டு தொழுதேன் எனும் கருத் தமைந்த, விண்ணுலகத்தையும் ஆட்படுத்தும் `வள்வாய்\' எனத் தொடங்கும் திருப்பதிகத் தமிழ்மாலையை உள்ளம் உருகப்பாடி, பெருமானுக்கு அணிவித்து, அப்பால் தேன்நிறைந்த மலர்களை யுடைய சோலைகள் சூழ்ந்த திருஎதிர்கொள்பாடியைச் சென்று சேர்வாராய்,

குறிப்புரை :

`வள்வாய்\' எனத் தொடங்கும் பதிகம் கொல்லிக் கௌவாணப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.40).

பண் :

பாடல் எண் : 121

எத்திசையுந் தொழுதேத்த மத்த யானை
எடுத்தெதிர்கொள் பாடியினை அடைவோம் என்னும்
சித்தநிலைத் திருப்பதிகம் பாடிவந்து
செல்வமிகு செழுங்கோயி லிறைஞ்சி நண்ணி
அத்தர்தமை அடிவணங்கி அங்கு வைகி
அருள்பெற்றுத் திருவேள்விக் குடியி லெய்தி
முத்திதரும் பெருமானைத் துருத்தி கூட
மூப்பதிலை எனும்பதிகம் மொழிந்து வாழ்ந்தார்.

பொழிப்புரை :

சேர்ந்திடும்பொழுது, எத்திசையும் தொழுது போற்றி `மத்தயானை\' எனத் தொடங்கி, திருஎதிர்கொள்பாடியை அடைவோம் என்னும் கருத்தினை நிலைகொள்ளுமாறு வைத்திடும் திருவுடைய பதிகத்தைப் பாடி வந்து, செல்வமிகுந்த செழுமையான கோயிலினை வணங்கி, அங்குச் சில நாள்கள் தங்கி அருள்பெற்று, திருவேள்விக்குடியைச் சென்றடைந்து, வீடுபேற்றைத் தருகின்ற பெருமானைத் திருத்துருத்தி என்னும் பதியும் சேர்ந்திட `மூப்ப தில்லை\' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடியருளி அங்கிருந் தருளினார்.

குறிப்புரை :

இப்பதிகளில் அருளிய பதிகங்கள்: 1. திருஎதிர்கொள்பாடி: மத்தயானை - இந்தளம் (தி.7 ப.7) 2. திருவேள்விக்குடியும் திருத்துருத்தியும்: மூப்பதுமில்லை - நட்டராகம் (தி.7 ப.18) `திருவேள்விக்குடியில் எய்தி ...... துருத்திகூடி மூப்பதிலை\' எனும் பதிகம் மொழிந்து என்பதால், இவ்விரு பதிகளையும் இணைத் துப் பாடியமை புலனாகும். இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 122

காட்டுநல் வேள்விக் கோலங்
கருத்துற வணங்கிக் காதல்
நாட்டிய உள்ளத் தோடு
நம்பிஆ ரூரர் போற்றி
ஈட்டிய தவத்தோர் சூழ
அங்குநின் றேகி அன்பு
பூட்டிஆட் கொண்டார் மன்னுந்
தானங்கள் இறைஞ்சிப் போந்து.

பொழிப்புரை :

அவ்விடத்து, இறைவன் தன் திருமணக் கோலத் தைக் காட்டியருளியதை நம்பியாரூரர் வணங்கி, மிக்கெழும் உள்ளத் துடன் போற்றி செய்து, தவத்தைப் பெருக்கிக் கொண்ட தொண்டர்கள் தம்மைச் சூழ்ந்து வர, அங்கிருந்தும் நீங்கியருளி, தம்மிடத்து அன்பு கொள்ள வைத்து ஆட்கொண்டருளிய பெருமான் வீற்றிருக்கும் கோயில்கள் பலவற்றையும் வணங்கிச் சென்று,

குறிப்புரை :

மன்னும் தானங்கள் என்பன திருத்துருத்திக்கும் திருவா ரூருக்கும் இடைப்பட்ட பதிகள்: வரும் பாடலிற் காண்க. இப்பாடலின் முன்னிரண்டு அடிகளின் கருத்து இதன் முதற்பாடலாலும், பின்னி ரண்டு அடிகளின் கருத்து வரும் பாடலாலும் நன்கு விளங்குதலின் இப் பாடல் இடைச்செருகல் ஆகலாம் என ஐயுறுவர் சிவக்கவிமணியார்.

பண் :

பாடல் எண் : 123

எஞ்சாத பேரன்பில்
திருத்தொண்ட ருடனெய்தி
நஞ்சாருங் கறைமிடற்றார்
இடம்பலவு நயந்தேத்தி
மஞ்சாரும் பொழிலுடுத்த
மலர்த்தடங்கள் புடைசூழுஞ்
செஞ்சாலி வயன்மருதத்
திருவாரூர் சென்றடைந்தார்.

பொழிப்புரை :

குறைவுபடாத பேரன்பு கொண்ட திருத்தொண்டர் களுடன் கூடிச் சென்று நஞ்சு விளங்கும் கறையுடைய கழுத்துடன் பொலியும் சிவபெருமானின் இடங்கள் பலவும் நயப்புடன் போற்றி, மேகங்கள் மேவும் சோலைகள் சூழ்ந்ததும், மலர்ப் பொய்கைகள் பல புறத்தே சூழந்ததும், செஞ்சாலி நெல் விளையும் வயல்கள் பல சிறந் திருப்பதுமான மருத நில வளம் மிக்க திருவாரூரைச் சென்றடைந்தார்.

குறிப்புரை :

இடம் பலவும் என்பன திருவழுந்தூர், திருவழுவூர், மயிலாடுதுறை, திருத்திலதைப்பதிமுற்றம், திருமீயச்சூர், பேரளம், திருஅம்பர்மாகாளம், அம்பர்பெருந்திருக்கோயில், திருக்கொண்டீச் சரம், திருவிற்குடி, திருப்பள்ளியின் முக்கூடல் முதலாயினவாகலாம். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 124

செல்வமலி திருவாரூர்த்
தேவரொடு முனிவர்களும்
மல்குதிருக் கோபுரத்து
வந்திறைஞ்சி உள்புக்கங்
கெல்லையிலாக் காதன்மிக
எடுத்தமலர்க் கைகுவித்துப்
பல்குபெருந் தொண்டருடன்
பரமர்திரு முன்னணைந்தார்.

பொழிப்புரை :

செல்வம் மிக்கு விளங்கும் திருவாரூரில், தேவர் களும் முனிவர்களும் நெருங்கிச் சூழும் கோபுரத்தைப் பணிந்து, வணங்கி, உட்புகுந்து, அங்கு அமர்ந்தருளும் பெருமானிடத்து, எல்லையில்லாத காதல் மிகுந்திட, கும்பிட எடுத்த மலர்க் கையினைக் குவித்து, பெருகும் திருத்தொண்டருடன் சிவபிரான் திருமுன்பாகச் சென்று சேர்ந்தார்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 125

மூவாத முதலாகி
நடுவாகி முடியாத
சேவாருங் கொடியாரைத்
திருமூலட் டானத்துள்
ஓவாத பெருங்காதல்
உடனிறைஞ்சிப் புறம்போந்து
தாவாத புகழ்ப்பரவை
யார்திருமா ளிகைசார்ந்தார்.

பொழிப்புரை :

எஞ்ஞான்றும் அழியாத முதலாகி, நடுவாகி, முடிதலும் இல்லாத ஆனேற்றுக் கொடியையுடைய சிவபெருமானைத் திருமூலட்டானத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமானை, ஒழியாத பெருங்காதலுடன் வணங்கி, அருள்பெற்று, வெளியே வந்தருளிக் குறைவிலாத புகழுடைய பரவையாரது திருமாளிகையைச் சென்று சேர்ந்தார்.

குறிப்புரை :

முதலும் நடுவும் முடிவும் இல்லாதது இறைவயத்ததாய நிலை. `முந்திய முதல் நடு இறுதியுமானாய்` என்பது உலகைச் செயல் படுத்தும் நிலையது. ஆதலின், இவ்வாறு வரும் திருவாக்குக்கள் முரணாகாமை காண்க.

பண் :

பாடல் எண் : 126

பொங்குபெரு விருப்பினொடு
புரிகுழலார் பலர்போற்றப்
பங்கயக்கண் செங்கனிவாய்ப்
பரவையார் அடிவணங்கி
எங்களையும் நினைந்தருளிற்
றெனஇயம்ப இனிதளித்து
மங்கைநல்லா ரவரோடும்
மகிழ்ந்துறைந்து வைகுநாள்.

பொழிப்புரை :

நம்பிகள் மாளிகை வருதலும், மிக்க பெரு விருப்புடன் அழகிய கூந்தலையுடைய பெண்கள் பலரும் போற்ற, தாமரை மலர் போன்ற கண்களையும், செங்கனி போன்ற வாயினை யும் உடைய பரவையார் எதிர்வந்து, திருவடிகளில் பணிந்தருளி, `எங்களையும் நினைந்து அருளிற்று\' என மொழிந்திடலும், நம்பியாரூ ரரும் அவர்களுக்கு இனிய அருள் புரிந்து, பெண்களில் நல்லாராய பரவையாருடன் மகிழ்ந்து தங்கியிருக்கும் நாள்களில்,

குறிப்புரை :

இறைவனையும், அடியவர்களையும் இடையறாது நினைந்தருளும் திருவுள்ளத்தில், எங்களையும் நினைந்தருளிற்று என அருளியது, நீண்ட கால எல்லை தம்மைப் பிரிந்திருந்த குறிப்புத் தோன்றவாம். இக்கால எல்லைதாமும் பெரிதும் நீட்டித்ததன்று. ஒருநாள் எழுநாள்போல் செல்லும் சேண்சென்றார் வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு. -குறள், 1269 எனும் மனநிலையில் நீட்டித்ததாகும். உம்மை இழிவு சிறப்பும்மை.

பண் :

பாடல் எண் : 127

நாயனார் முதுகுன்றர்
நமக்களித்த நன்னிதியம்
தூயமணி முத்தாற்றில்
புகவிட்டேம் துணைவரவர்
கோயிலின்மா ளிகைமேல்பால்
குளத்தில்அவ ரருளாலே
போய்எடுத்துக் கொடுபோதப்
போதுவாய் எனப்புகல.

பொழிப்புரை :

ஒருநாள் பரவையாரை நம்பிகள் நோக்கியருளி, உயிர்கட்குத் தலைவராய திருமுதுகுன்றத்துப் பெருமானார், நமக்கு வழங்கிய நல்ல நிதியமாகிய பொன்னின் குவியலை எல்லாம் அவர்தம் திருவருளின்படி மணிமுத்தாற்றில் புக விடுத்தோம், நம் துணைவராய திருவாரூர்ப் பெருமானின் கோயிலின் மேற்குப் புறத்தே உள்ள கமலாலயக் குளத்தில் அவரது அருளால் அதனை எடுத்து உனக்குத் தருவதற்கு, நீ என்னுடன் வருவாய் எனப் புகலுதலும்,

குறிப்புரை :

புக - அவ்வாற்றிலிருந்து நம் குளத்திற் புக.

பண் :

பாடல் எண் : 128

என்னஅதி சயம்இதுதான்
என்சொன்ன வாறென்று
மின்னிடையார் சிறுமுறுவ
லுடன்விளம்ப மெய்யுணர்ந்தார்
நன்னுதலாய் என்னுடைய
நாதனரு ளாற்குளத்தில்
பொன்னடைய எடுத்துனக்குத்
தருவதுபொய் யாதென்று.

பொழிப்புரை :

அதுகேட்டுப் புன்சிரிப்புடன் மின்னலையொத்த இடையையுடைய பரவையார், ஈதென்ன அதிசயம்! என்றலும், உண் மைப் பொருளினை உணர்ந்த நம்பிகளும், `நல்ல நெற்றியையுடைய பரவையே! என்னுடைய பெருமானின் அருளால் அக்குளத்தில் பொன் முழுவதையும் எடுத்துத் தருவது பொய்யாகாது! என்று கூறியருளுதலும்,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 129

ஆங்கவரும் உடன்போத
வளவிறந்த விருப்பினுடன்
பூங்கோயி லுண்மகிழ்ந்த
புராதனரைப் புக்கிறைஞ்சி
ஓங்குதிரு மாளிகையை
வலம்வந்தங் குடன்மேலைப்
பாங்குதிருக் குளத்தணைந்தார்
பரவையார் தனித்துணைவர்.

பொழிப்புரை :

அதுகேட்ட பரவையாரும் அவருடன் வர, அவ்வம்மையின் ஒப்பற்ற துணைவராகிய நம்பிகள், அளவுகடந்த விருப்பத்துடன் திருவாரூர்ப் பூங்கோயிலில் அமர்ந்தருளும் முன் னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளாய பெருமானை உட்புகுந்து வணங்கி, மேலோங்கிய கோயில் மாளிகையை வலமாக வந்து, உடனாக மேற்குப் புறத்ததாக விளங்கிடும் திருக்குளத்திற்கு வந்துற்றார்.

குறிப்புரை :

இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 130

மற்றதனின் வடகீழ்பால்
கரைமீது வந்தருளி
முற்றிழையார் தமைநிறுத்தி
முனைப்பாடித் திருநாடர்
கற்றைவார் சடையாரைக்
கைதொழுது குளத்தில்இழிந்து
அற்றைநாள் இட்டெடுப்பார்
போல்அங்குத் தடவுதலும்.

பொழிப்புரை :

பின்பு அந்தக் குளத்தின் வடகிழக்குக் கரையின் மேலாக வந்தருளி, முழுமையான நல்ல பல அணிகளை அணிந்த பரவையாரை அங்கு நிறுத்திப் பின்னர் திருமுனைப்பாடி என்னும் நாட்டைத் தமக்குப் பிறப்பிடமாக உடைய நம்பிகள், தொகுதியாக நீண்டு விளங்கும் சடையையுடைய பெருமானைக் கைதொழுது, குளத்துள் இறங்கி, அன்றைய நாளில் பொன்னைப் போட்டு எடுப்பார் போன்று, அங்குப் பொற்குவியலைப் பெறத் தண்ணீரில் தடவுதலும்,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 131

நீற்றழகர் பாட்டுவந்து
திருவிளையாட் டினில்நின்று
மாற்றுறுசெம் பொன்குளத்து
வருவியா தொழிந்தருள
ஆற்றினிலிட் டுக்குளத்தில்
தேடுவீர் அருளிதுவோ
சாற்றுமெனக் கோற்றொடியார்
மொழிந்தருளத் தனித்தொண்டர்.

பொழிப்புரை :

நீற்றினால் அழகு பொலியும் திருமேனியையுடைய பெருமானும், அதுபொழுது சுந்தரரது திருப்பாட்டை விரும்பிக் கேட்பதொரு திருவிளையாட்டைச் செய்வாராய், சிறந்த மாற்றுடைய செம்பொன்னைக் குளத்தில் வருவியாது மறைத்து அருளலும், அது கண்டு கரையில் நின்ற வளையல் அணிந்த பரவையாரும், நம்பிகளை நோக்கி, `ஆற்றில் இட்டுக் குளத்தில் தேடும் தலைவரே! இறைவனின் இன்னருள் இதுதானோ?\' எனக் கூறலும், தனித்தொண்டராம் நம்பிகள்,

குறிப்புரை :

ஆற்றில் இட்டுக் குளத்தில் தேடுவீர் என்றது நகைக் குறிப்புப்பட நின்றது. அருளிதுவோ என்றது உம் அருளிதுவோ என்பதன்றி இறைவன் உமக்கு நல்கிய அருள் இதுவோ என்னும் குறிப்பும்பட நின்றது.

பண் :

பாடல் எண் : 132

முன்செய்த அருள்வழியே
முருகலர்பூங் குழற்பரவை
தன்செய்ய வாயில்நகை
தாராமே தாருமென
மின்செய்த நூன்மார்பின்
வேதியர்தாம் முதுகுன்றில்
பொன்செய்த மேனியினீர்
எனப்பதிகம் போற்றிசைத்து.

பொழிப்புரை :

பெருமானே! முன்னர் வானொலி வழி வழங்கியவாறே, அழகு விளங்கும் மலர்களைச் சூடிய கூந்தலுடைய பரவையினது சிவந்த வாயில் இகழ்ச்சிக் குறிப்புத் தோன்றாதவாறு பொன்னினைத் தந்தருளும் என்று, மின்னலையொத்த ஒளியை யுடைய நூல் அணிந்த மார்பினையுடைய சுந்தரரும், முதுகுன்றில் அமர்ந்த இறைவரை உளங்கொண்டு `பொன்செய்த மேனியினீர்\' எனத் தொடங்கும் பதிகத்தைப் போற்றிப் பாடி,

குறிப்புரை :

`பொன்செய்த மேனியினீர்\' எனத் தொடங்கும் பதிகம் நட்டராகப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.25).

பண் :

பாடல் எண் : 133

முட்டஇமை யோரறிய
முதுகுன்றில் தந்தபொருள்
சட்டநான் பெறாதொழிந்த
தளர்வினால் கையறவாம்
இட்டளத்தை இவளெதிரே
கெடுத்தருளும் எனுந்திருப்பாட்
டெட்டளவும் பொன்காட்டா
தொழிந்தருள ஏத்துவார்.

பொழிப்புரை :

முழுவதும் தேவர் அறிய, நீர் திருமுதுகுன்றில் தந்தபொருளை, மிகவும் உடன்பெறாது போன தளர்ச்சியினால் வரும் துன்பமாம் அக் கொடுமையை, இப் பரவை முன்னாகக் கொடுத்தருளும் என மொழிகின்ற அத்திருப்பாட்டைப் பாடியருளலும் பெருமான் எட்டாவது திருப்பாட்டுப் பாடும்வரை பொன் காட்டாது ஒழிந்தருளப் பின்னும் போற்றுவாராய்,

குறிப்புரை :

முட்ட - முழுமையாக. சட்ட - செவ்விதாக. இட்டளம் - துன்பம்.

பண் :

பாடல் எண் : 134

ஏத்தாதே இருந்தறியேன்
எனுந்திருப்பாட் டெவ்வுலகும்
காத்தாடும் அம்பலத்துக்
கண்ணுளனாங் கண்ணுதலைக்
கூத்தாதந் தருளாய்இக்
கோமளத்தின் முன்னென்று
நீத்தாருந் தொடர்வரிய
நெறிநின்றார் பரவுதலும்.

பொழிப்புரை :

எம்பெருமானே! `உம்மை எக்காலமும் ஏத்தாது இருந்தறியேன்\' எனும் கருத்தமைவுடைய திருப்பாட்டில், எவ்வுலகி னையும் துன்புறாது அம்பலத்துள் நிறைந்து காத்து ஆடுகின்ற கண் ணுதற் பெருமானையே நினைந்து உருகி, கூத்தா! பொன்னினைத் தந்தருள்வாய்! இப்பரவை முன்பாக என்று, பற்றுக்களை எல்லாம் அறுத்தெரிந்த பெரியோர்களும் தொடர்ந்து பற்றுதற்கரிய நெறி நின்ற ஆரூரர் போற்றுதலும்,

குறிப்புரை :

`ஏத்தாதிருந்தறியேன்\' எனும் பாடல் இப்பதிகத்து வரும் ஒன்பதாவது பாடலாகும். இப்பாடலை எடுத்துமொழிந்தார், பொன்வரப் பெற்ற அருட்குறிப்புடைமையின்.

பண் :

பாடல் எண் : 135

கொந்தவிழ்பூங் கொன்றைமுடிக்
கூத்தனார் திருவருளால்
வந்தெழுபொன் திரளெடுத்து
வரன்முறையாற் கரையேற்ற
அந்தரத்து மலர்மாரி
பொழிந்திழிந்த தவனியுளோர்
இந்தஅதி சயமென்னே
யார்பெறுவார் எனத்தொழுதார்.

பொழிப்புரை :

கொத்துக்களாய் விரிந்த கொன்றைமாலையை முடிமீது சூடியவரும், எஞ்ஞான்றும் திருக்கூத்தியற்றுபவருமான இறைவனின் திருவருளால், அப்பொழுது குளத்தின்கண் வந்த பொன்னின் திரளினை எடுத்து, வரன்முறையால் கரையில் சேர்த் திடலும், விண்ணிலிருந்து மலர்மழை பொழிந்து தரையில் வழிந்ததும், இதனைக் கண்ட நிலவுலகில் உள்ளோர் யாவரும் இவ்வதிசயம் இருந்தவாறு என்னே! இறைவனின் வியத்தகு கருணைப் பெருக்கை யார் பெறுவார்? எனப் போற்றித் தொழுதார்கள்.

குறிப்புரை :

இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 136

ஞாலம்வியப் பெய்தவரு
நற்கனகம் இடையெடுத்து
மூலமெனக் கொடுபோந்த
ஆணியின்முன் னுரைப்பிக்க
நீலமிடற் றவரருளால்
உரைதாழப் பின்னும் நெடு
மாலயனுக் கரியகழல்
வழுத்தினார் வன்றொண்டர்.

பொழிப்புரை :

உலகவர் வியக்குமாறு வந்த நல்ல பொற்குவியலில் ஒரு துண்டை எடுத்துக் கொண்டு முன்னர் முத்தாற்றில் இட்டபோது மூலமான பொன் இதுவெனக் கொண்டு வந்த அவ்வாணிப் பொன் னின் இணையாக இப்பொன்னினையும் உரைத்துப் பார்த்த பொழுது, நீலகண்டப் பெருமானின் அருளால் மாற்றுக் குறைந்து இருக்கப் பின்னரும், நெடிய திருமாலும் நான்முகனும் காணமுடியாத திருவடி களை வன்றொண்டர் போற்றினார்.

குறிப்புரை :

ஆணி - உரைத்துப் பார்த்தற்காக வெட்டிக் கொண்ட துண்டு. இதுபொழுது வழுத்திய பதிகம் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 137

மீட்டுமவர் பரவுதலும்
மெய்யன்ப ரன்பில்வரும்
பாட்டுவந்து கூத்துவந்தார்
படுவாசி முடிவெய்தும்
ஓட்டறுசெம் பொன்னொக்க
ஒருமாவுங் குறையாமல்
காட்டுதலும் மகிழ்ந்தெடுத்துக்
கொண்டுகரை யேறினார்.

பொழிப்புரை :

மீண்டும் அவர் போற்றி வணங்குதலும், மெய்யான அன்பர்களது அன்பில் வருகின்ற பாட்டினை மகிழ்வுடன் ஏற்றுக் கூத்தினையும் மகிழ்ந்து புரிகின்ற பெருமான், தாம் கொடுத்த பொன் னில் குறைவெய்திய அக்குறைபாடுகள் முழுமையாக நீங்க ஒப்பற்ற செம்பொன் முழுவதையும் ஒருமா எடையும் குறையாமல் காட்டுத லும், அதனை மகிழ்ந்து எடுத்துக் கொண்டு கரை ஏறினார்.

குறிப்புரை :

ஒருமா - மிகச் சிறிய அளவு; இருபதில் ஒருபங்கு (1/20 = 0.05) கொண்ட அளவென்பர்.

பண் :

பாடல் எண் : 138

கரையேறிப் பரவையா
ருடன்கனக மானதெலாம்
நிரையேஆ ளிற்சுமத்தி
நெடுநிலைமா ளிகைபோக்கித்
திரையேறும் புனற்சடிலத்
திருமூலட் டானத்தார்
விரையேறு மலர்ப்பாதந்
தொழுதணைந்தார் வீதியினில்.

பொழிப்புரை :

கரையில் ஏறிப் பரவையாருடன் அப்பொன் முழுமையையும் நிரல்பட ஆள்களின் தலைமேல் ஏற்றி நெடுநிலை களையுடைய மாளிகையில் போகுமாறு செல்லவிடுத்து, அலைகள் மிகும் நீருடைய கங்கையைச் சடைமேல் உடைய திருமூலட்டானத்துப் பெருமானின் நறுமணம் பொருந்திய மலரடிகளைத் தொழுது பின் திருவீதியினில் எழுந்தருளி வந்தனர்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 139

வந்திரு மாளிகையி
னுட்புகுந்து மங்கலவாழ்த்து
அந்தமிலா வகையேத்து
மளவிறந்தா ரொலிசிறப்பச்
சிந்தைநிறை மகிழ்ச்சியுடன்
சேயிழையா ருடனமர்ந்தார்
கந்தமலி மலர்ச்சோலை
நாவலர்தங் காவலனார்.

பொழிப்புரை :

திருவீதியில் வந்த நறுமணமுடைய மலர்கள் நிறைந்த சோலைகளையுடைய நாவலூர்த் தலைவராய நாவன்மை யையுடைய நம்பிகளும், திருவுடைய தம் மாளிகையில் உட்புக, நிறையுடைய மங்கல வாழ்த்தினைப் போற்றி செய்யும் அளவிறந்த பெருமக்களின் ஓசை சிறந்தெழ, சிந்தை நிறைந்த மகிழ்ச்சியுடன் அழகிய அணிகளை அணிந்த அம்மையாருடன் அங்கு இருந்தருளினார்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 140

அணியாரூர் மணிப்புற்றில்
அமர்ந்தருளும் பரம்பொருளைப்
பணிவார்அங் கொருநாளில்
பாராட்டுந் திருப்பதிகம்
தணியாத ஆனந்தம்
தலைசிறப்பத் தொண்டருடன்
துணிவாய பேரருள்வினவித்
தொழுதாடிப் பாடுவார்.

பொழிப்புரை :

அழகிய திருவாரூரில், முத்துமணி போலும் திரண் டிருக்கும் கறையான் புற்றின்மீது அமர்ந்தருளும் பரம்பொருளாய பெருமானைப் பணிந்துவரும் நம்பிகள், ஒருநாள், பெருமானின் கருணையைப் பாராட்டும் திருப்பதிகம் ஒன்றைத் தமது உள்ளத்துத் தணியாது எழுகின்ற மகிழ்ச்சி தலைசிறந்து மேற்பட, அடியாருடன் மகிழ்ந்து, உயிர்கள் முடிவாகத் துணிந்து தெளிதற்குரிய பெருமானின் திருவருள் திறத்தினைத் தனித்தனியாக வினவும் முகமாகத் தொழுதும் ஆடியும் பாடிடுவார்,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 141

பண்ணிறையும் வகைபாறு
தாங்கியென வெடுத்தருளி
உண்ணிறையும் மனக்களிப்பால்
உறுபுளகம் மயிர்முகிழ்ப்பக்
கண்ணிறையும் புனல்பொழியக்
கரையிகந்த ஆனந்தம்
எண்ணிறைந்த படிதோன்ற
ஏத்திமதிழ்ந் தின்புற்றார்.

பொழிப்புரை :

பண்ணிறைந்த வகையால், `பாறுதாங்கி\' என எடுத் தருளி, உள்நிறைந்த மனக்களிப்பால் உடல் மேல் மயிர்க்கூச் செறிய வும், கண்களில் நிறைகின்ற நீர் பொழிந்திடவும் கரைகடந்த ஆனந்தம் கருத்தில் நிறைந்தவாறு ஏத்தி மகிழ்ந்து இன்புற்றார்.

குறிப்புரை :

வினாவுரையாகப் பாடியருளிய `பாறுதாங்கிய\' (தி.7 ப.33) எனத் தொடங்கும் பதிகம் கொல்லிப் பண்ணில் அமைந்த பதிகமாகும். திருக்கடைக்காப்பில் இதுகாறும் தாம் கேட்ட வினாக் களுக்கு விடை தருமாறு `பத்தர்காள்! பணிந்தேத்தினேன் பணியீர்\' என வேண்டி நிறைவு செய்துள்ளார். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 142

இன்புற்றங் கமர்நாளில்
ஈறிலரு மறைபரவும்
வன்புற்றில் அரவணிந்த
மன்னவனா ரருள்பெற்றே
அன்புற்ற காதலுடன்
அளவிறந்த பிறபதியும்
பொன்புற்கென் றிடவொளிருஞ்
சடையாரைத் தொழப்போவார்.

பொழிப்புரை :

இன்புற்று அங்கு அமர்கின்ற காலத்தில், முடிவிலாத அரிய நான்மறைகளும் போற்றும் வலிமையாய புற்றின் மீதுள்ள பாம்பணிந்த அரசனார் திருவடிகளைப் பணிந்து, அருள்பெற்று, அன்பு கொண்ட காதலுடன் அளவிறந்த பிற பதிகளுக்கும் பொன் னின் ஒளி தாழ்ந்திட மிளிரும் சடையுடைய பெருமானைத் தொழுதி டப் போவார்,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 143

பரிசனமும் உடன்போதப்
பாங்கமைந்த பதிகள்தொறும்
கரியுரிவை புனைந்தார்தம்
கழல்தொழுது மகிழ்ந்தேத்தித்
துரிசறுநற் பெருந்தொண்டர்
நள்ளாறு தொழுவதற்குப்
புரிவுறுமெய்த் திருத்தொண்டர்
எதிர்கொள்ளப் புக்கணைந்தார்.

பொழிப்புரை :

தமக்குப் பணிபுரிகின்ற ஏவலர்களும் உடன் வந்திட, அருகில் அமைந்திருக்கின்ற கோயில்கள் தோறும் சென்று, அத்திருப்பதிகளில் எல்லாம் யானைத் தோலினைப் போர்த்த பெருமா னின் திருவடிகளைத் தொழுது, மகிழ்ந்து, கும்பிட்டு, குற்றம் அற்ற பெருந்தொண்டராய சுந்தரர், திருநள்ளாறு என்னும் கோயிலினை வணங்குதற்கு, இவர்பால் அன்புற்ற அடியார்கள் அங்கிருப்பார் வந்து எதிர்கொள்ள, உள்ளே புகுந்து சென்றார்.

குறிப்புரை :

பாங்கு அமைந்த பதிகள் என்பன திருவிளமர், திருப்பள் ளியின்முக்கடல் முதலாயின வாகலாம் என்பர் சிவக்கவிமணியார்.

பண் :

பாடல் எண் : 144

விண்தடவு கோபுரத்தைப்
பணிந்துகர மேல்குவித்துக்
கொண்டுபுகுந் தண்ணலார்
கோயிலினை வலஞ்செய்து
மண்டியபே ரன்பினொடு
மன்னுதிரு நள்ளாறர்
புண்டரிகச் சேவடிக்கீழ்ப்
பொருந்தநில மிசைப்பணிந்தார்.

பொழிப்புரை :

வானளாவிய அக்கோபுரத்தைப் பணிந்து, கைகளை உச்சிமேற் குவித்து, உட்புகுந்தருளி, பெருமானுடைய கோயிலினை வலம்செய்து, உள்ளத்துப் பெருகும் பேரன்புடன் என்றும் அங்கு அமர்ந்தருளும் திருநள்ளாற்றுப் பெருமானின் செந்தாமரை மலர் போலும் சேவடியின் கீழாக, நிலத்தில் விழுந்து வணங்கினார்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 145

அங்கணரைப் பணிந்தேத்தி
அருளினால் தொழுதுபோய்
மங்குலணி மணிமாடத்
திருக்கடவூர் வந்தெய்தித்
திங்கள்வளர் முடியார்தந்
திருமயா னமும்பணிந்து
பொங்குமிசைப் பதிகம்மரு
வார்கொன்றை யெனப்போற்றி.

பொழிப்புரை :

அழகிய நெற்றிக்கண்ணையுடைய இறைவனை அத்திருப்பதியில் பணிந்து போற்றித் திருவருள் முன்னிற்கத் தொழுது நீங்கிப் போய், மேகங்கள் தவழும் அழகிய மாடங்கள் நிரம்பிய திருக்கடவூர் என்னும் திருப்பதியை வந்தடைந்து, பணிந்து, இளம் பிறை மலரும் சடைமுடியையுடைய பெருமானது திருமயானம் என்னும் திருப்பதியையும் பணிந்து, பொங்கும் இசையுடைய பதிக மான `மருவார் கொன்றை\' எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடிப் போற்றி செய்து,

குறிப்புரை :

இத்திருப்பதிகளில் அருளிய பதிகங்கள்: 1. திருநள்ளாறு: செம்பொன்மேனி - தக்கேசி (தி.7 ப.68) 2. திருக்கடவூர் மயானம்: மருவார் கொன்றை - பழம்பஞ்சுரம் (தி.7 ப.53)

பண் :

பாடல் எண் : 146

திருவீரட் டானத்துத்
தேவர்பிரான் சினக்கூற்றின்
பொருவீரந் தொலைத்தகழல்
பணிந்துபொடி யார்மேனி
மருவீரத் தமிழ்மாலை
புனைந்தேத்தி மலைவளைத்த
பெருவீரர் வலம்புரத்துப்
பெருகார்வத் தொடுஞ்சென்றார்.

பொழிப்புரை :

திருக்கடவூர் வீரட்டானத்து அமர்ந்தருளும் தேவாதி தேவனது சினம் மிக்க இயமனின் வீரத்தைத் தொலைத்த திருவடிகளைப் பணிந்து, `பொடியார் மேனியனே\' எனத் தொடங்கும் கசிந்துருகும் தமிழ் மாலையைப் பாடிப் போற்றி வணங்கி, அப்பால் மேரு மலையை வளைத்த பெரு வீரராய சிவபெருமான் அமர்ந்து அருளும் திருவலம்புரம் என்னும் திருப்பதிக்குப் பெருகிய ஆர்வத் தோடும் சென்றார்.

குறிப்புரை :

`பொடியார் மேனியனே\' எனத் தொடங்கும் பதிகம் நட்டராகப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.28).

பண் :

பாடல் எண் : 147

வரையோடு நிகர்புரிசை
வலம்புரத்தார் கழல்வணங்கி
உரையோசைப் பதிகம்எனக்
கினியோதிப் போய்ச்சங்க
நிரையோடு துமித்தூப
மணித்தீப நித்திலப்பூந்
திரையோதங் கொண்டிறைஞ்சுந்
திருச்சாய்க்கா டெய்தினார்.

பொழிப்புரை :

மலையை ஒத்த மதில் சூழ்ந்த திருவலம்புரம் என்னும் திருப்பதியில் அமர்ந்தருளும் பெருமானது திருவடிகளை வணங்கிச் சிறந்த ஓசையுடைய திருப்பதிகமான `எனக்கினி\' எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடிப் போற்றி, அப்பால் சென்று, சங்குகளின் நிரையான இயங்களோடு, அலைத்துளிகளான நறுமணப் புகை யையும், ஒன்பான் மணிகளான ஒளியையும், முத்துக்களாகிய வெண் மையான மலர்களையும் ஏற்று, அலைகளாகிய திருக்கைகளால் போற்றி வணங்கும் கடல் சூழ்ந்த திருச்சாய்க்காடு என்னும் திருப் பதிக்கு வந்து சேர்ந்தார்.

குறிப்புரை :

`எனக்கினி\' எனத் தொடங்கும் பதிகம் காந்தாரப் பண் ணில் அமைந்ததாகும் (தி.7 ப.72). துமித் தூலம் - அனைத்துளிகளால் ஆன தூபம்.

பண் :

பாடல் எண் : 148

தேவர்பெரு மான்தன்னைத்
திருச்சாய்க்காட் டினிற்பணிந்து
பாவலர்செந் தமிழ்மாலைத்
திருப்பதிகம் பாடிப்போய்
மேவலர்தம் புரமெரித்தார்
வெண்காடு பணிந்தேத்தி
நாவலர்கா வலரடைந்தார்
நனிபள்ளித் திருநகரில்.

பொழிப்புரை :

திருச்சாய்க்காடு என்னும் திருப்பதிக்குச் சென்று சேர்ந்து, தேவர் தலைவரான பெருமானைப் பணிந்து, பாடலாக அலரும் செந்தமிழ் மாலைத் திருப்பதிகத்தைப் பாடி, அப்பால் சென்று, பகைவருடைய முப்புரங்களையும் எரித்த பெருமானின் திருவெண் காடு என்னும் திருப்பதிக்குச் சென்று பணிந்து போற்றி, நாவன்மை யுடைய புலவர்களுக்கு என்றும் காவலராய நாவலூரர் திருநனிபள் ளித் திருநகரிடத்துச் சென்றார்.

குறிப்புரை :

திருவெண்காட்டில் அருளிய `படங்கொள் நாகம்\' (தி.7 ப.6) எனத் தொடங்கும் திருப்பதிகம் இந்தளப் பண்ணில் அமைந்த தாகும். திருச்சாய்க்காட்டில் அருளிய பதிகம் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 149

நனிபள்ளி யமர்ந்தபிரான்
கழல்வணங்கி நற்றமிழின்
புனிதநறுந் தொடைபுனைந்து
திருச்செம்பொன் பள்ளிமுதல்
பனிமதிசேர் சடையார்தம்
பதிபலவும் பணிந்துபோய்த்
தனிவிடைமேல் வருவார்தம்
திருநின்றி யூர்சார்ந்தார்.

பொழிப்புரை :

திருநனிபள்ளியில் அமர்ந்தருளும் சிவபெருமா னின் திருவடிகளை வணங்கி நல்ல தமிழினால் தூய்மையும், இனிமை யும் விரவிய தமிழ்மாலை தொடுத்து அணிவித்துத் திருச்செம்பொன் பள்ளி முதலாக உள்ள குளிர்ந்த இளம் பிறையை அணிந்த சடையை யுடைய பெருமானது திருப்பதிகள் பலவும் பணிந்து சென்று, ஒப்பற்ற ஆனேற்றின் மீது இவர்ந்தருளும் பெருமானது திருநின்றியூர் என் னும் திருப்பதியைச் சேர்ந்தார்.

குறிப்புரை :

திருநனிபள்ளியில் அருளிய பதிகம் `ஆதியன்\'(தி.7 ப.97) எனத் தொடங்கும் பஞ்சமப் பண்ணில் அமைந்த பதிகமாகும். திருச்செம்பொன்பள்ளி முதலான பதிபலவும் என்பன, திருப்பறியலூர், திருவிளநகர், திருமயிலாடுதுறை, திருக்கஞ்சாறு முதலாயினவாக லாம் என்பர் சிவக்கவிமணியார். பதிகங்கள் எவையும் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 150

நின்றியூர் மேயாரை
நேயத்தால் புக்கிறைஞ்சி
ஒன்றியஅன் புள்ளுருகப்
பாடுவார் உடையஅர
சென்றுமுல கிடர்நீங்கப்
பாடியஏ ழெழுநூறும்
அன்றுசிறப் பித்தஞ்சொல்
திருப்பதிகம் அருள்செய்தார்.

பொழிப்புரை :

திருநின்றியூரில் வீற்றிருந்தருளும் பெருமானாரை உட்புகுந்து அன்பினால் வணங்கி, இறைவனுடன் ஒன்றிய அன்பு உள்ளத்தை உருக்கத் தமிழ் மறையைப் பாடும் அவர், ஆளுடைய அரசர், என்றும் உலகம் இடர் நீங்கப் பாடியருளியன நாலாயிரத்துத் தொள்ளாயிரம் (4,900) பதிகங்களாகும் எனும் வரலாற்றை, அன்று தம்முடைய பதிகத்தில் வைத்துச் சிறப்பித்து அருள் நிறைந்த சொல்லு டைய திருப்பதிகம் பாடினார்.

குறிப்புரை :

திருநின்றியூரில் அருளிய பதிகம் `திருவும் வண்மை யும்\'(தி.7 ப.65) எனத் தொடங்கும் தக்கேசிப் பண்ணில் அமைந்த பதிகமாகும். இப்பதிகத்தில் வரும் இரண்டாவது பாடலில், `இணை கொள் ஏழெழு நூறு இரும்பனுவல் ஈன்றவன் திருநாவினுக் கரையன்\' என அருளப் பெற்ற குறிப்பே சேக்கிழார் பெருமானால் ஈண்டுக் குறிக்கப்பட்டுள்ளது. 7 x 700 = 4,900 பதிகங்கள். `பதிகம் ஏழெழு நூறு பகரு மாகவியோகி\' (தி.11 திருநாவுக். பா.7) என நம்பியாண் டார் நம்பிகளும் இது குறித்துப் போற்றுவர்.

பண் :

பாடல் எண் : 151

அப்பதியில் அன்பருடன்
அமர்ந்தகல்வார் அகலிடத்தில்
செப்பரிய புகழ்நீடூர்
பணியாது செல்பொழுதில்
ஒப்பரிய வுணர்வினால்
நினைந்தருளித் தொழலுறுவார்
மெய்ப்பொருள்வண் தமிழ்மாலை
விளம்பியே மீண்டணைந்தார்.

பொழிப்புரை :

அப்பதியில் அன்பர்களுடன் தங்கி அப்பால் செல்பவர், அகன்ற இந்நிலவுலகில் சொலற்கரிய புகழுடைய திருநீடூர் என்னும் திருப்பதியைப் பணியாது செல்கின்ற அமையத்தில், தம்மிடத் துள்ள ஒப்பரிய அருள்வயப்பட்ட உணர்வினால் அத்திருப்பதியை நினைந்தருளித் தொழுகின்றவர், உண்மைப் பொருள் நிறைந்த வண்மையான தமிழ்மாலைத் திருப்பதிகம் பாடி மேலும் செல்லாது, மீண்டும் திருநீடூர் வருவாராயினர்.

குறிப்புரை :

திருநின்றியூரில் தங்கியிருந்த பொழுது அருளிய பதிகம் `அற்றவனார்\' (தி.7 ப.19) எனத் தொடங்கும் நட்டராகப் பண்ணில் அமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 152

மடலாரும் புனல்நீடூர்
மருவினர்தாள் வணங்காது
விடலாமே எனுங்காதல்
விருப்புறும்அத் திருப்பதிகம்
அடலார்சூ லப்படையார்
தமைப்பாடி அடிவணங்கி
உடலாரும் மயிர்ப்புளகம்
மிகப்பணிந்தங் குறைகின்றார்.

பொழிப்புரை :

`மலர்கள் நிறைந்த நீர்ப் பெருக்குடைய திருநீடூரில் இருந்தருளும் பெருமானின் திருவடிகளைப் பணியாது விடலாமே\\\' என்னும் கருத்துடைய `ஊர்வதோர் விடை\\\' எனத் தொடங்கும் அத் திருப்பதிகத்தைப் போர் விளங்கிய சூலப் படையை உடைய பெரு மான்மீது பாடியருளித் திருவடி பணிந்து, பணியும்தொறும் மெய் நிறைந்து சிலிர்க்கும் மயிர்க்கூச்சம் மேன்மேல் எழுந்திடப் பணிந்து அங்குத் தங்கியிருந்தருளுவார்,

குறிப்புரை :

`ஊர்வதோர் விடை\\\' எனத் தொடங்கும் பதிகம் தக்கேசிப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.56).

பண் :

பாடல் எண் : 153

அங்கண்இனி தமர்ந்தருளால்
திருப்புன்கூ ரணைத்திறைஞ்சிக்
கொங்கலரும் மலர்ச்சோலைத்
திருக்கோலக் காஅணையக்
கங்கைசடைக் கரந்தவர்தாம்
எதிர்காட்சி கொடுத்தருளப்
பொங்குவிருப் பால்தொழுது
திருப்பதிகம் போற்றிசைப்பார்.

பொழிப்புரை :

`ஊர்வதோர் விடை\' எனத் தொடங்கும் பதிகம் தக்கேசிப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.56).

குறிப்புரை :

திருக்கோலக்காவில் அருளிய பதிகம் `புற்றில்வாள் அரவு\' (தி.7 ப.62) எனத் தொடங்கும் தக்கேசிப் பண்ணில் அமைந்த தாகும். பதிகப் பாடல் தோறும் `கோலக்காவினில் கண்டு கொண் டேனே\' என வருவது கண்டு, `எதிர்காட்சி கொடுத்தருள\' என்ற வர லாற்றுப் பின்னணியை அமைத்துக் கொண்டார்.

பண் :

பாடல் எண் : 154

திருஞான சம்பந்தர்
திருக்கைக ளால் ஒற்றிப்
பெருகார்வத் துடன்பாடப்
பிஞ்ஞகனார் கண்டிரங்கி
அருளாலே திருத்தாளம்
அளித்தபடி சிறப்பித்துப்
பொருள்மாலைத் திருப்பதிகம்
பாடியே போற்றிசைத்தார்.

பொழிப்புரை :

திருஞானசம்பந்தர் தமது திருக்கைகளால் தாளமிட்டுப் பெருகும் ஆர்வத்துடன் அத்திருப்பதியை முன்னால் பாடிட, அதுகண்டு பெருமானார் திருவுள்ளமிரங்கி அவருக்குத் திருத்தாளம் வழங்கிய வரலாற்றைத் தாம் பாடிய பதிகத்து வைத்துச் சிறப்பித்துப் பொருள் சிறந்த மாலையாகும் அத்திருப்பதிகத்தை இசையுடன் பாடிப் போற்றி செய்தார்.

குறிப்புரை :

மேற்கூறிய பதிகத்துள் வரும் எட்டாவது பாடலில், `நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர் முன் தாளம் ஈந்து அவன் பாடலுக்கு இரங்கும் தன்மை யாளனை\' என வரும் குறிப்பை முகந்தெடுத்துக் கூறும் குறிப்பு இதுவாம். இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 155

மூவாத முழுமுதலார்
முதற்கோலக் காஅகன்று
தாவாத புகழ்ச்சண்பை
வலங்கொண்டு தாழ்ந்திறைஞ்சி
நாவார்முத் தமிழ்விரகர்
நற்பதங்கள் பரவிப்போய்
மேவார்தம் புரஞ்செற்றார்
குருகாவூர் மேவுவார்.

பொழிப்புரை :

எக்காலத்தும் மூப்படையாத முழுமுதல்வராய சிவபெருமான் அமர்ந்த முதன்மையான அத்திருக்கோலக்காவை நீங்கிக் குறைவிலாத புகழுடைய சீகாழி நகரையும் வலங்கொண்டு, விழுந்து வணங்கி, அங்குத் தோன்றிய நாவார்ந்த முத்தமிழில் வல்லுனரான திருஞானசம்பந்தரின் திருவடிகளைப் போற்றி, அப்பால் சென்று, பகைவர்களாகிய முப்புரத்தவரை எரித்த பெருமா னது திருக்குருகாவூரை அணைவார்,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 156

உண்ணீரின் வேட்கையுடன்
உறுபசியால் மிகவருந்திப்
பண்ணீர்மை மொழிப்பரவை
யார்கொழுநர் வரும்பாங்கர்க்
கண்ணீடு திருநுதலார்
காதலவர் கருத்தறிந்து
தண்ணீரும் பொதிசோறும்
கொண்டுவழிச் சார்கின்றார்.

பொழிப்புரை :

உண்ணும் வேட்கையோடு தமக்குற்ற பசியாலும் மிகவும் வருந்திப் பண்ணிசை போல இனிமையாகப் பேசும் பரவை யாரின் கணவரான நம்பியாரூரர் வரும் அமையத்தில், நீண்ட கண்ணை நெற்றியில் கொண்ட சிவபெருமான், தம் அன்பர்பால் உற்ற அன்பு சிறந்திட. அவர்தம் வேட்கையை அறிந்து, தண்ணீரும் பொதிசோறும் திருக்கையில் கொண்டு அவர் வரும் வழியாகத் தாமும் சேர்பவராய்,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 157

வேனிலுறு வெயில்வெம்மை
தணிப்பதற்கு விரைக்குளிர்மென்
பானல்மலர்த் தடம்போலும்
பந்தரொரு பாலமைத்தே
ஆனமறை வேதியராய்
அருள்வேடங் கொண்டிருந்தார்
மானமருந் திருக்கரத்தார்
வன்தொண்டர் தமைப்பார்த்து.

பொழிப்புரை :

வேனிற்காலத்து வெயிலின் வெப்பத்தை நீக்குதற் காக, நறுமணம் மிக்க குளிர்ந்த மெல்லிய பாலின் சுவையையுடைய செங்கழுநீர் மலர்கள் நிறைந்த குளம்போலும் குளிர்ந்த தண்ணீர்ப் பந்தரை ஒருமருங்கு அமைத்து, மான் ஏந்திய கையுடன் விளங்கும் இறைவர், தாம் ஒரு மறைபயின்ற அந்தணராய் அருள் வேடங் கொண்டு, நம்பியாரூரர் வரும் வழியைப் பார்த்திருந்தார்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 158

குருகாவூர் அமர்ந்தருளும்
குழகர்வழி பார்த்திருப்பத்
திருவாரூர்த் தம்பிரான்
தோழர்திருத் தொண்டருடன்
வருவார்அப் பந்தரிடைப்
புகுந்துதிரு மறையவர்பால்
பெருகார்வஞ் செலவிருந்தார்
சிவாயநம வெனப்பேசி.

பொழிப்புரை :

திருக்குருகாவூர் அமர்ந்தருளும் மிக இளையவராகிய பெருமான், அவர் வரும் வழியைப் பார்த்திருப்ப, திருவாரூரில் இருக்கும் தம்பிரான் தோழராகிய நம்பியாரூரர், அடியவர்களுடன் அவ்வழி வருவார், அத்தண்ணீர்ப் பந்தரிடை வந்து, அங்கிருந்த அழகுடைய அந்தணர் பெருமான்பால் தம் கருத்துச் செல்லும்படி நோக்கிச் `சிவாயநம\' எனக் கூறி அமர்ந்தார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 159

ஆலநிழற் கீழிருந்தார்
அவர்தம்மை எதிர்நோக்கிச்
சாலமிகப் பசித்தீர்இப்
பொதிசோறு தருகின்றேன்
காலமினித் தாழாமே
கைக்கொண்டிங் கினிதருந்தி
ஏலநறுங் குளிர்தண்ணீர்
குடித்திளைப்புத் தீரஎன.

பொழிப்புரை :

அதுபொழுது கல்லால மரத்தின் கீழிருந்தருளும் இறைவர் அவரைப் பார்த்து, `நீர் மிகவும் பசித்திருக்கின்றீர்\' என்னிட முள்ள இப்பொதிசோற்றினைத் தருகின்றேன், காலந் தாழ்த்தலின்றி இதனை இனிதுண்டு, மணம்மிக்க குளிர்ந்த தண்ணீரும் பருகி, இளைப் புத் தீரும்\' என்னலும்,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 160

வன்தொண்டர் அதுகேட்டு
மறைமுனிவர் தரும்பொதிசோறு
இன்றுநமக் கெதிர்விலக்க
லாகாதென் றிசைந்தருளிப்
பொன்றயங்கு நூல்மார்பர்
தரும்பொதிசோ றதுவாங்கிச்
சென்றுதிருத் தொண்டருடன்
திருவமுது செய்தருளி.

பொழிப்புரை :

அதுகேட்ட வன்தொண்டர்,`இம்மறை முனிவர் தரும் பொதிசோற்றை மறுத்தல் தகாது\' என்று எண்ணி, அதற்கு இசைந்து பொன்னனைய நூல் அணிந்த மார்பையுடைய அவ்வந் தணர் கொடுக்கும் பொதிசோற்றினை வாங்கிச் சென்று, அடியவர்களு டன் திருவமுது செய்தருள,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 161

எண்ணிறந்த பரிசனங்கள்
எல்லாரும் இனிதருந்தப்
பண்ணியபின் அம்மருங்கு
பசித்தணைந்தார் களும்அருந்த
உண்ணிறைந்த ஆரமுதாய்
ஒருகாலும் உலவாதே
புண்ணியனார் தாமளித்த
பொதிசோறு பொலிந்ததால்.

பொழிப்புரை :

தம்முடன் வந்த எண்ணற்ற ஏவலர் முதலிய அனைவரையும் இனிது உண்ணச் செய்து, பின் அதன் அயலே பசித்து அணைந்தார்களும் அருந்திட, உள்ளத்து நிறைந்த அரிய அமுதாகி, ஒரு காலமும் குறைவிலாது, புண்ணியப் பொருளாகும் அந்தணனார் கொடுத்த அப்பொதிசோறு பொலிந்தது. இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 162

சங்கரனார் திருவருள்போல்
தண்ணீரின் சுவையார்ந்து
பொங்கிவரும் ஆதரவால்
அவர் நாமம் புகழ்ந்தேத்தி
அங்கயர்வால் பள்ளியமர்ந்
தருகணைந்தார் களுந்துயிலக்
கங்கைசடைக் கரந்தார்அப்
பந்தரொடுந் தாங்கரந்தார்.

பொழிப்புரை :

எண்ணற்ற உயிர்கட்கெல்லாம் இன்பம் தந்தருளும் இறைவனாரின் இன்னருள் என விளங்கும் தண்ணீரினையும் குடித்துத் திளைத்து, உள்ளத்துப் பொங்கி வரும் மீதூர்ந்த அன்பால் பெரு மானின் திருப்பெயராய திருவைந்தெழுத்தைப் புகழ்ந்து போற்றி, அவ்விடத்து அமுதுண்ட களைப்பால் துயில்கொள்ள, அவருடன் அருகில் இருந்தவர் தாமும் உறங்கிட, கங்கையாற்றைச் சடைமீது மறைத்திருக்கும் சிவபெருமான் தாமும் தம் தோற்றத்தைத் தண்ணீர்ப் பந்தருடன் மறைந்து அருளினார்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 163

சித்தநிலை திரியாத
திருநாவ லூர்மன்னர்
அத்தகுதி யினிற்பள்ளி
யுணர்ந்தவரைக் காணாமை
இத்தனையா மாற்றை
அறிந்திலேன் எனவெடுத்து
மெய்த்தகைய திருப்பதிகம்
விளம்பியே சென்றடைந்தார்.

பொழிப்புரை :

சிவபெருமானிடத்து வைத்த சித்தநிலை மாறாத திருநாவலூரின் அருள் அரசரான சுந்தரர், அவ்வளவில் விழித்துத் தமக்குப் பொதிசோறு கொடுத்து அருளிய அந்தணர் பெருமானைக் காணாது, அது இறைவன் செயலாக இருந்தமையுணர்ந்து, `இத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான்\' எனப் பாட எடுத்து மெய்ம்மை விளங்கிய அத்திருப்பதிகத்தைப் பாடியவாறே திருக்குருகாவூரினைச் சென்று அடைந்தார்.

குறிப்புரை :

`இத்தனை யாமாற்றை\' எனத் தொடங்கும் பதிகம் நட்ட ராகப் பண்ணில் அமைந்ததாகும்(தி.7 ப.29) `ஆவியைப் போகாமே தவிர்த்து என்னை ஆட்கொண்டாய்\' `பாடுவார் பசி தீர்ப்பாய்\' என இப்பதிகத்து வரும் தொடர்கள், இவ்வரலாற்றுக்கு அரணாகின்றன.

பண் :

பாடல் எண் : 164

குருகாவூர் அமர்ந்தருளும்
குழகனார் கோயிலினுக்
கருகார்பொற் கோபுரத்தை
யணைந்திறைஞ்சி யுள்புக்கு
வருகாதல் கூரவலங்
கொண்டுதிரு முன்வணங்கிப்
பருகாவின் னமுதத்தைக்
கண்களாற் பருகினார்.

பொழிப்புரை :

திருக்குருகாவூரில் அமர்ந்தருளும் பெருமானின் திருக்கோயிலுக்கு அருகே சென்று பொற்கோபுரத்தை வணங்கி, உட்புகுந்து உள்ளத்தெழுகின்ற காதல் பெருக, வலங்கொண்டு, திரு முன்பு வணங்கி, பருகத் தெவிட்டாத இன்னமுதான பெருமானைத் தம் கண்களால் கண்டு மகிழ்ந்தார்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 165

கண்ணார்ந்த இன்னமுதைக்
கையாரத் தொழுதிறைஞ்சிப்
பண்ணார்ந்த திருப்பதிகம்
பாடியே பணிந்தேத்தி
உள்நாடும் பெருங்காதல்
உடையவர்தாம் புறத்தெய்தி
நண்ணார்வத் தொண்டருடன்
அங்கினிது நயந்திருந்தார்.

பொழிப்புரை :

கண்ணிற்கு இனிமை தரும் அமுதத்தைக் கையாரக் கும்பிட்டு வணங்கி, பண்ணிசை தவழும் திருப்பதிகத்தைப் பாடிப் பணிந்து போற்றி, பெருமானைத் தம் உள்ளத்தே நாடும் பெருங் காதலையுடைய சுந்தரர் வெளியே வந்து, அங்கிருந்த ஆர்வமுடைய அடியவருடன் அத்திருப்பதியில் இனிது விருப்புற்று இருந்தார்.

குறிப்புரை :

இதுபொழுது அருளிய பதிகம் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 166

அந்நாளில் தம்பெருமான்
அருள்கூடப் பணிந்தகன்று
மின்னார்செஞ் சடைமுடியார்
விரும்புமிடம் பலவணங்கிக்
கன்னாடும் எயில்புடைசூழ்
கழிப்பாலை தொழுதேத்தித்
தென்னாவ லூர்மன்னர்
திருத்தில்லை வந்தடைந்தார்.

பொழிப்புரை :

அந்நாள்களில், தம் பெருமானின் அருள்கூடப் பணிந்து, விடைபெற்று, அங்கிருந்து அகன்று, மின்போல் மிளிரும் செஞ்சடை முடியையுடைய பெருமான் விரும்பி அமர்ந்தருளும் இடங்கள் பலவும் வணங்கி, கற்களால் அமைந்த மதில் சூழ்ந்த திருக் கழிப்பாலைக்குச் சென்று வணங்கிப் போற்றி, அப்பால் தென்னாட்டில் சிறந்த திருநாவலூர் அரசர், திருவமைந்த திருத்தில்லைக்கு வந்து சேர்ந்தார்.

குறிப்புரை :

விரும்பும் இடம்பல வணங்கி என்பன திருமுல்லை வாயில், திருமயேந்திரப்பள்ளி, திருநல்லூர்ப்பெருமணம் முதலாயின வாகலாம் என்பர் சிவக்கவிமணியார். திருக்கழிப்பாலையில் அருளிய பதிகம் `செடியேன்\' (தி.7 ப.23) எனும் தொடக்கமுடைய நட்டராகப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

பண் :

பாடல் எண் : 167

சீர்வளருந் திருத்தில்லைத்
திருவீதி பணிந்துபுகுந்
தேர்வளர்பொன் திருமன்றுள்
எடுத்தசே வடியிறைஞ்சிப்
பார்வளர மறைவளர்க்கும்
பதியதனில் பணிந்துறைவார்
போர்வளர்மே ருச்சிலையார்
திருத்தினைமா நகர்புகுந்தார்.

பொழிப்புரை :

மேன்மேலும் சிறப்புகள் பலவும் வளர்கின்ற திருவு டைய தில்லை நகரின் திருவீதியைப் பணிந்து, உட்புகுந்து, அழகு வள ரும் பொன்னாலாய திருச்சபையில் ஆட எடுத்த திருவடிகளை வணங்கி, இந்நிலவுலகு வளர மறைகளை வளர்க்கும் தில்லை என்னும் அப்பதியதனில் பணிந்து தங்குபவர், முப்புரத்தை அழிக்கும் போரில் தலைநின்ற மேருமலையை வில்லாக உடைய பெருமானின் திருத் தினை மாநகரினைச் சென்று சேர்ந்தார்.

குறிப்புரை :

இதுபொழுது தில்லையில் அருளிய பதிகங்கள் கிடைத்தில.

பண் :

பாடல் எண் : 168

திருத்தினைமா நகர்மேவும்
சிவக்கொழுந்தைப் பணிந்துபோய்
நிருத்தனார் அமர்ந்தருளும்
நிறைபதிகள் பலவணங்கிப்
பொருத்தமிகுந் திருத்தொண்டர்
போற்றுதிரு நாவலூர்
கருத்தில்வரு மாதரவால்
கைதொழச்சென் றெய்தினார்.

பொழிப்புரை :

திருத்தினை மாநகரில் வீற்றிருந்தருளும் சிவக் கொழுந்தைப் பணிந்து, அங்கிருந்தும் கூத்தியற்றும் பெருமானார் அமர்ந்தருளும் திருப்பதிகள் பலவும் வணங்கிச் சென்று, திருவருள் உறைப்பு மிகும் திருத்தொண்டர்கள் போற்றுகின்ற திருநாவலூருக்கு வரும் ஆதரவால், அப்பதியில் வீற்றிருக்கும் இறைவனைக் கை தொழச் சென்றார்.

குறிப்புரை :

திருத்தினை நகரில் அருளிய பதிகம் கிடைத்திலது. நிறை பதிகள் பலவணங்கி என்பன திருச்சோபுரம், திருமாணிகுழி, திருப் பல்லவனகரம், திருமுண்டீச்சுரம், திருக்குணபரஈச்சுரம், திருஅதிகை வீரட்டம், திருவாமூர், சித்தவடம், திருமணம் வந்த புத்தூர் முதலாயின வாகலாம் என்பர் சிவக்கவிமணியார்.

பண் :

பாடல் எண் : 169

திருநாவ லூர்மன்னர்
சேர்கின்றார் எனக்கேட்டுப்
பெருநாமப் பதியோரும்
தொண்டர்களும் பெருவாழ்வு
வருநாள்என் றலங்கரித்து
வந்தெதிர்கொண் டுள்ளணையச்
செருநாகத் துரிபுனைந்தார்
செழுங்கோயி லுள்ளணைந்தார்.

பொழிப்புரை :

திருநாவலூரின் அருள் அரசராய சுந்தரர், அங்கு எழுந்தருளுவதைக் கேட்டுப் பெரும் புகழுடைய அப்பதியில் உள்ளார்களும், தொண்டர்களும், `தங்களுக்கு இன்று பெருவாழ்வு வருநாள்\' என்று நகரம் முழுவதும் அணி செய்து, அவரை எதிர் கொண்டு அழைத்துச் சென்றிட, அவரும் சென்று, வலி மிகுந்த யானை யின் தோலைப் போர்த்த பெருமானின் திருவமைந்த திருக்கோயிலின் உள்ளாகச் சென்றருளினார்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 170

மேவியஅத் தொண்டர்குழாம்
மிடைந்தரவென் றெழுமோசை
மூவுலகும் போயொலிப்ப
முதல்வனார் முன்பெய்தி
ஆவியினு மடைவுடையா
ரடிக்கமலத் தருள்போற்றிக்
கோவலனான் முகனெடுத்துப்
பாடியே கும்பிட்டார்.

பொழிப்புரை :

தம்முடன் வந்த அடியவர் கூட்டம் நெருங்கி, அரகர என மொழிந்திட எழுகின்ற ஓசை மூவுலகும் சென்று ஒலித்திட, முதல்வனாரின் திருமுன்பு எய்தி, உயிரினும் சிறந்தாராய பெருமா னின் திருவடித் தாமரை வழங்கியருளும் பேரருளின் திறம் போற்றி, `கோவலன் நான்முகன்\' எனத் தொடங்கும் திருப்பதிகத்தை எடுத்துப் பாடிக் கும்பிட்டார்.

குறிப்புரை :

`கோவலன் நான்முகன்\' எனத் தொடங்கும் பதிகம் நட்டராகப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.17). இறைவன் ஆவ ணம் கொண்டு ஆட்கொள்ளவரத் தாம் வன்மைகள் பேசி வன்தொண் டர் என்பதோர் வாழ்வு பெற்றமையை இத்திருப்பதிகத்தில் பாடக் குறித்து அருளுகின்றார். நரசிங்க முனையரையர் பற்றிய குறிப்பும் இதன் உள் காணக்கிடக்கின்றது.

பண் :

பாடல் எண் : 171

நலம்பெருகும் அப்பதியில்
நாடியஅன் பொடுநயந்து
குலம்பெருகுந் திருத்தொண்டர்
குழாத்தோடு மினிதமர்ந்து
சலம்பெருகுஞ் சடைமுடியார்
தாள்வணங்கி யருள்பெற்றுப்
பொலம்புரிநூல் மணிமார்பர்
பிறபதியுந் தொழப்போவார்.

பொழிப்புரை :

நலம் என்றும் பெருகிய அப்பதியில் பெருமானை விரும்பிக் கொண்ட அன்போடும் பணிந்து, குலம் பெருகும் திருத்தொண்டர் கூட்டத்தோடும் இனிதே அங்குத் தங்கி, கங்கை தங்கும் சடைமுடியையுடைய பெருமானின் திருவடிகளை வணங்கி, அருள்பெற்று, அழகு பொருந்திய முப்புரி நூலை அணிந்த மார்பினராய சுந்தரர், அப்பதியினின்றும் நீங்கிப் பிறபதிகளையும் தொழுதிடப் போவார்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 172

தண்டகமாந் திருநாட்டுத்
தனிவிடையார் மகிழ்விடங்கள்
தொண்டர்எதிர் கொண்டணையத்
தொழுதுபோய்த் தூயநதி
வண்டறைபூம் புறவுமலை
வளமருதம் பலகடந்தே
எண்திசையோர் பரவுதிருக்
கழுக்குன்றை யெய்தினார்.

பொழிப்புரை :

குளிர்ந்த நீர்வளமுடைய திருநாட்டில் ஒப்பற்ற ஆனேற்று ஊர்தியையுடைய பெருமான் மகிழ்ந்தருளும் இடங்களில் அடியவர்கள் அங்கங்கும் எதிர்கொண்டு வணங்கிடத் தொழுது சென்று, தூய ஆறுகளும், வண்டுகள் பாடும் சோலைகள் சூழ்ந்த முல்லை நிலங்களும், மலைவளம் தரும் குறிஞ்சி நிலங்களும், மருத நிலங்களுமாய பல இடங்களைக் கடந்து, எண்திசையினில் உள்ளா கியவரும் வணங்கிடும் திருக்கழுக்குன்றத்தை அடைந்தார்.

குறிப்புரை :

மகிழ்விடங்கள் தொழுது என்பன, திருப்புறவார்பனங் காட்டூர், திண்டீச்சுரம், திருஅச்சிறுபாக்கம், உருத்திரகோடி முதலாயின வாகலாம் என்பர் சிவக்கவிமணியார். நதிகள் - வராக நதி, பாலாறு, பெண்ணையாறு முதலியன. புறவு - இடைப்பட்ட காடுகள். திண்டிவ னம், அச்சிறுபாக்கம், செஞ்சி முதலாயின என்பர் சிவக்கவிமணியார். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 173

தேனார்ந்த மலர்ச்சோலை
திருக்கழுக்குன் றத்தடியார்
ஆனாத விருப்பினொடு
மெதிர்கொள்ள அடைந்தருளித்
தூநாள்வெண் மதியணிந்த
சுடர்க்கொழுந்தைத் தொழுதிறைஞ்சிப்
பாநாடு மின்னிசையின்
திருப்பதிகம் பாடினார்.

பொழிப்புரை :

மகிழ்விடங்கள் தொழுது என்பன, திருப்புறவார்பனங் காட்டூர், திண்டீச்சுரம், திருஅச்சிறுபாக்கம், உருத்திரகோடி முதலாயின வாகலாம் என்பர் சிவக்கவிமணியார். நதிகள் - வராக நதி, பாலாறு, பெண்ணையாறு முதலியன. புறவு - இடைப்பட்ட காடுகள். திண்டிவ னம், அச்சிறுபாக்கம், செஞ்சி முதலாயின என்பர் சிவக்கவிமணியார். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

குறிப்புரை :

இங்கு அருளிய பதிகம் `கொன்று செய்த\'(தி.7 ப.8) என்னும் தொடக்கமுடைய நட்டபாடைப் பண்ணில் அமைந்த பதிக மாகும். தூ நாள் வெண்மதி - தூ - தூய்மை : சாபம் நீங்கி இறையருள் பெற்ற தூய்மை. நாள் - புதிய : அன்றலர்ந்த.

பண் :

பாடல் எண் : 174

பாடியஅப் பதியின்கண்
இனிதமர்ந்து பணிந்துபோய்
நாடியநல் லுணர்வினொடும்
திருக்கச்சூர் தனைநண்ணி
ஆடகமா மதில்புடைசூழ்
ஆலக்கோ யிலின்அமுதைக்
கூடியமெய் யன்புருகக்
கும்பிட்டுப் புறத்தணைந்தார்.

பொழிப்புரை :

இவ்வாறு பாடிய அத்திருப்பதியில் இனிது தங்கி, பணிந்து, அப்பால் சென்று, பெருமானை நாடிய நல்லுணர்வோடும் திருக்கச்சூரை அடைந்து, அங்குப் பொன்னாலான பெரிய மதில்கள் சூழப்பெற்ற ஆலக்கோயிலில் அமர்ந்தருளும் அமுதாய பெருமானை உள்ளத்தில் பெருகும் உண்மையான அன்பு உருகக் கும்பிட்டு வெளியே வந்தருளினார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 175

அணைந்தருளும் அவ்வேலை
அமுதுசெயும் பொழுதாகக்
கொணர்ந்தமுது சமைத்தளிக்கும்
பரிசனமும் குறுகாமைத்
தணந்தபசி வருத்தத்தால்
தம்பிரான் திருவாயில்
புணர்ந்தமதில் புறத்திருந்தார்
முனைப்பாடிப் புரவலனார்.

பொழிப்புரை :

வெளியே வந்தருளிய அப்பொழுது, திருவமுது செய்யும் பொழுதாகிட, உணவுப் பொருள்களைக் கொண்டு வந்து அமுதினைச் சமைத்துக் கொடுத்திடும் ஏவலர் அவ்விடம் வந்து சேராமையால், பெருகிய பசியின் வருத்தத்தினால், திருமுனைப்பாடி நாட்டின் பேரருளாளராய சுந்தரர், கோயில் திருவாயிலினைச் சேர்ந்த மதிலின் அருகே இருந்தருளினார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 176

வன்தொண்டர் பசிதீர்க்க
மலையின்மேல் மருந்தானார்
மின்தங்கு வெண்டலையோ
டொழிந்தொருவெற் றோடேந்தி
அன்றங்கு வாழ்வாரோர்
அந்தணராய்ப் புறப்பட்டுச்
சென்றன்பர் முகநோக்கி
அருள்கூரச் செப்புவார்.

பொழிப்புரை :

அவ்வாறு பசியுடன் இருந்த வன்தொண்டரின் பசியைத் தீர்த்திட, கச்சூர்மலைமேல் வீற்றிருக்கும், கொடிய பசிப் பிணியைத் தீர்த்தருளும் மருந்தாகிய சிவபெருமான், தமது திருக்கரத்து ஏந்திய மின்னல் போலும் ஒளிபொருந்திய வெண்தலை ஓட்டினை நீக்கி வேறு ஒரு மண் ஓட்டினைத் திருக்கையில் ஏந்தி, அவ்விடத்து வாழும் ஓர் அந்தணர் வடிவில் சென்று, அவர் திருமுகத்தை நோக்கி, அருள் கூர்ந்திடச் சொல்வாராய்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 177

மெய்ப்பசியால் மிகவருந்தி
இளைத்திருந்தீர் வேட்கைவிட
இப்பொழுதே சோறிரந்திங்
கியானுமக்குக் கொணர்கின்றேன்
அப்புறநீர் அகலாதே
சிறிதுபொழு தமருமெனச்
செப்பியவர் திருக்கச்சூர்
மனைதோறும் சென்றிரப்பார்.

பொழிப்புரை :

`உடலில் ஏற்பட்ட பசியால் மிக வருந்தி, நீவிர் இளைத்திருக்கின்றீர்; உம் பசிவருத்தம் நீங்கிட, இப்பொழுதே நான் சோற்றினை இரந்து உமக்குக் கொண்டு வருவேன்; நீவிர் அப்புறம் போகாமல் சிறிது நேரம் இங்கு அமரும்\' எனச் சொல்லி, அவர் திருக்கச்சூர் என்னும் அந்நகரில் உள்ள மனைதோறும் சென்று சோறு இரப்பாராய்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 178

வெண்திருநீற் றணிதிகழ
விளங்குநூல் ஒளிதுளங்கக்
கண்டவர்கள் மனமுருகக்
கடும்பகற்போ திடும்பலிக்குப்
புண்டரிகக் கழல்புவிமேல்
பொருந்தமனை தொறும்புக்குக்
கொண்டுதாம் விரும்பியாட்
கொண்டவர்முன் கொடுவந்தார்.

பொழிப்புரை :

வெண்மையான திருநீற்றின் அழகு திகழ, மார்பில் விளங்கிய நூல், ஒளியுடன் விளங்கக் கண்டவர்கள் மனம் காதலால் உருகிட, கடுமையான வெயில் மிக்க நண்பகல் பொழுதில் இடுகின்ற பிச்சைக்காகத் தாமரை யனைய திருவடிகள் நிலத்தில் பொருந்திட, வீடுகள்தொறும் புகுந்து சோறு பெற்றுக் கொண்டு வந்தவர்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 179

இரந்துதாங் கொடுவந்த
இன்னடிசி லுங்கறியும்
அரந்தைதரும் பசீதீர
அருந்துவீ ரெனவளிப்பப்
பெருந்தகையார் மறையவர்தம்
பேரருளின் திறம்பேணி
நிரந்தபெருங் காதலினால்
நேர்தொழுது வாங்கினார்.

பொழிப்புரை :

இரந்து தாம் கொண்டு வந்த இனிய சோற்றையும், கறிவகைகளையும் எடுத்துத் `துயர்தரும்நும் பசிதீர உண்டிடுவீர்\' எனக் கொடுத்திடலும், பெருந்தகையாராய சுந்தரர் அந்தணராக வந்து அருளியவரின் பேரருளைப் போற்றி உள்ளம் நிறைகின்ற பெருங் காதலினால் எதிரே தொழுது அச்சோற்றை வாங்கியவர்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 180

வாங்கிஅத் திருவமுது
வன்தொண்டர் மருங்கணைந்த
ஓங்குதவத் தொண்டருடன்
உண்டருளி யுவந்திருப்ப
ஆங்கருகு நின்றார்போல்
அவர்தம்மை யறியாமே
நீங்கினா ரெப்பொருளும்
நீங்காத நிலைமையினார்.

பொழிப்புரை :

வாங்கிய அத்திருவமுதைச் சுந்தரர் தம் மேலாய தவமுடைய அடியார்களுடன் உண்டருளிப் பெருமகிழ்ச்சி கொண்டு இருப்ப, எப்பொருளினும் நீங்குதலரிய தேவராய பெருமானும், அவர் அருகே நின்றாற்போல் நின்று, அவரை அறியாது மறைந் தருளினார்.

குறிப்புரை :

இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 181

திருநாவ லூராளி
சிவயோகி யார்நீங்க
வருநாம மறையவனார்
இறையவனா ரெனமதித்தே
பெருநாதச் சிலம்பணிசே
வடிவருந்தப் பெரும்பகற்கண்
உருநாடி எழுந்தருளிற்
றென்பொருட்டாம் எனவுருகி.

பொழிப்புரை :

அதுகண்டு திருநாவலூரின் மன்னராய சுந்தரரும், சிவயோகியாய அவ்வந்தணர் பெருமான் மறைந்திடத் தம் முன்பு வந்தருளிய அந்த அந்தணர், எல்லாம் வல்ல ஈசனாகும் என எண்ணிப் பேரொலியையுடைய சிலம்பு ஒலித்திட அணிந்த திருவடிகள் இந்நிலவுலகில் வருத்தமடைய, இக்கொடிய பெரும் பகற்பொழுதில் நாடி வந்தருளியது என் பொருட்டாகவன்றோ? என உள்ளம் உருகி,

குறிப்புரை :

********************

பண் :

பாடல் எண் : 182

முதுவா யோரி என்றெடுத்து
முதல்வ னார்தம் பெருங்கருணை
அதுவா மிதுவென் றதிசயம்வந்
தெய்தக் கண்ணீர் மழையருவிப்
புதுவார் புனலின் மயிர்ப்புளகம்
புதையப் பதிகம் போற்றிசைத்து
மதுவார் இதழி முடியாரைப்
பாடி மகிழ்ந்து வணங்கினார்.

பொழிப்புரை :

`முதுவாய் ஓரி\' எனத் தொடங்கி எப்பொருட்கும் மூலமான சிவபெருமானது பெருங்கருணை அதுவாம் இது எனும் கருத்தமைய, கண்களில் நீர் மழை அருவியென மேனியில் புது நீராகிப் பொழிய, உடல் முழுதும் மயிர்க் கூச்செறிய, அப்பதிகத்தை இசையு டன் பாடிப் போற்றி, தேனார்ந்த கொன்றை மலரை முடிமேல் சூடிய பெருமானை மகிழ்ந்து வணங்கினார்.

குறிப்புரை :

`முதுவாய் ஓரி\' எனத் தொடங்கும் பதிகம் கொல்லிக் கௌவாணத்தில் அமைந்த பதிகமாகும் (தி.7 ப.41). இவ்வரலாற் றிற்கு இப்பதிகம் அகச்சான்றாக அமைந்துள்ளது. தமக்காக உச்சிப் பொழுதில் வீடுதொறும் சென்றிரந்து வந்த பெருங்கருணையைச் சுந்தரர் பலபடக் குறித்து நன்றியுணர்வோடு போற்றி மகிழ்கின்றார். இரண்டாவது பாடலில் `கச்சேர் அரவு ஒன்று அரையில் அசைத்துக் கழலும் கிலம்பு ஒலிக்க பலிக்கென்று உச்சம் போதா ஊர் ஊர்திரியக் கண்டால் அடியார் உருகாரே\' எனவரும் பகுதி எண்ணற்குரியது.

பண் :

பாடல் எண் : 183

வந்தித் திறைவ ரருளாற்போய்
மங்கை பாகர் மகிழ்ந்தவிடம்
முந்தித் தொண்ட ரெதிர்கொள்ளப்
புக்கு முக்கட்பெருமானைச்
சிந்தித் திடவந் தருள்செய்கழல்
பணிந்து செஞ்சொல் தொடைபுனைந்தே
அந்திச் செக்கர்ப் பெருகொளியார்
அமருங் காஞ்சி மருங்கணைந்தார்.

பொழிப்புரை :

இவ்வாறு இறைவனாரைப் போற்றி, அவர் அருள்பெற்று, உமையம்மையாரை ஒரு கூற்றில் உடைய பெருமான் மகிழ்ந்தருளும் திருப்பதிகள் பலவற்றிற்கும் ஆங்காங்குள்ள அடிய வர்கள் எதிர்கொளச் சென்று அத்திருப்பதிகளில் கோயில் கொண்டிருக் கும் முக்கட் செல்வரை நினைந்த வண்ணம் திருவடிகளை வணங்கிச் செஞ்சொற்களாலாய தமிழ்ப் பதிக மாலைகளைச் சூட்டி, மாலைப் பொழுதில் தோன்றும் செக்கர் வானம் போலும் சிவப்பு மிக்க ஒளியை யுடைய பெருமான் வீற்றிருக்கும் காஞ்சிபுரத்தின் அருகாக வந்து சேர்ந்தார்.

குறிப்புரை :

மங்கைபாகர் மகிழ்ந்த இடங்கள் என்பன திருக்கச்சூருக் கும், காஞ்சிபுரத்திற்கும் இடையேயுள்ள பதிகளாம். அவை திருமுக் கூடல், திருவில்வலம், திருமாகறல், திருக்குரங்கணில்முட்டம் முதலா யினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார்.

பண் :

பாடல் எண் : 184

அன்று வெண்ணெய் நல்லூரில்
அரியும் அயனுந் தொடர்வரிய
வென்றி மழவெள் விடையுயர்த்தார்
வேத முதல்வ ராய்வந்து
நின்று சபைமுன் வழக்குரைத்து
நேரே தொடர்ந்தாட் கொண்டவர்தாம்
இன்றிங் கெய்தப் பெற்றோமென்று
எயில்சூழ் காஞ்சிநகர் வாழ்வார்.

பொழிப்புரை :

அதுபொழுது மதில் சூழ்ந்த காஞ்சிநகரில், வாழும் அடியவர்கள் பலரும், அன்றொரு நாள் திருவெண்ணெய் நல்லூரில், மாலும் அயனும் தொடர்வரியாராகும், வெற்றி தரும் இளைய ஆனேற் றுக் கொடியைக் கொண்டிருக்கும் பெருமானார், தாம் ஒரு வேத முதல்வராய அந்தணராய் வடிவுகொண்டு வந்து, அவையிடத்து நேர் நின்று தொடர்ந்து வழக்குரைத்துத் தடுத்தாட் கொள்ளப்பட்டவரான சுந்தரர், இன்று இங்கு வந்திடப் பேறு பெற்றோம் என்று கூறி,

குறிப்புரை :

********************

பண் :

பாடல் எண் : 185

மல்கு மகிழ்ச்சி மிகப்பெருக
மறுகு மணித்தோ ரணம்நாட்டி
அல்கு தீபம் நிறைகுடங்கள்
அகிலின் தூபங் கொடியெடுத்துச்
செல்வ மனைகள் அலங்கரித்துத்
தெற்றி யாடன் முழவதிரப்
பல்கு தொண்ட ருடன்கூடிப்
பதியின் புறம்போய் எதிர்கொண்டார்.

பொழிப்புரை :

உள்ளத்துப் பொருந்திய மகிழ்ச்சி மிகப் பெருகிட, வீதிகள் தோறும் அழகிய முத்துத் தோரணங்களை நாட்டி, ஒளிவளர் விளக்குக்கள், நிறை குடங்கள், அகிலின் நறும்புகை, கொடிகள் ஆகியவற்றை எடுத்து, செல்வம் மிகும் தம் மனைகள் தோறும் அணி செய்து, தத்தம் முன்றில்தோறும் நடனமாடுதற்கேற்ற முழவுகள் முழங்கிடத் திரளும் அடியவர்களுடன் கூடி, தம் பதியின் புறம்போந்து அவரை எதிர் கொண்டார்கள்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 186

ஆண்ட நம்பி யெதிர்கொண்ட
அடியார் வணங்க எதிர்வணங்கி
நீண்ட மதிற்கோ புரங்கடந்து
நிறைமா ளிகைவீ தியிற்போந்து
பூண்ட காதல் வாழ்த்தினுடன்
புனைமங் கலதூ ரியம்ஒலிப்ப
ஈண்டு தொண்டர் பெருகுதிரு
ஏகாம் பரஞ்சென் றெய்தினார்.

பொழிப்புரை :

இறைவனால் ஆட்கொள்ளப் பெற்ற சுந்தரர், தம்மை எதிர்கொண்ட அடியவர்கள் வணங்கத் தாமும் வணங்கி, நீண்ட மதில்களையுடைய கோபுரத்தைக் கடந்து, நிரல்பட அமைந்த மாளிகைகளின் வீதிவழியே சென்று, தம்பால் பூண்ட அன்பினால் பெருகிய வாழ்த்தொலிகளுடன் சிறந்த மங்கல இயங்களும் ஒலித்திட, நெருங்கிய தொண்டர்கள் சூழத் திருவேகாம்பரம் என்னும் கோயி லைச் சென்றடைந்தார்.

குறிப்புரை :

********************

பண் :

பாடல் எண் : 187

ஆழிநெடுமா லயன்முதலாம்
அமரர் நெருங்கு கோபுரமுன்
பூமி யுறமண் மிசைமேனி
பொருந்த வணங்கிப் புகுந்தருளிச்
சூழு மணிமா ளிகைபலவுந்
தொழுது வணங்கி வலங்கொண்டு
வாழி மணிபபொற் கோயிலினுள்
வந்தார் அணுக்க வன்தொண்டர்.

பொழிப்புரை :

இறைவனின் அணுக்கத் தொண்டராய சுந்தரர், சக்கரப் படையை உடைய நெடிய திருமால், நான்முகன் முதலாய தேவர்களும் சூழ நிற்கும் கோபுரம் முன்பாக, நிலத்தில் உடல் படிந்திட வணங்கி, உட்சென்று, பெருமானின் இருப்பிடத்தைச் சூழ்ந்த அழகிய பல மாளிகைகளையும் தொழுது வணங்கி, வலங்கொண்டு அழகிய பொற்கோயில் உள்ளாக வந்தார்.

குறிப்புரை :

********************

பண் :

பாடல் எண் : 188

கைகள் கூப்பி முன்னணைவார்
கம்பை யாறு பெருகிவர
ஐயர் தமக்கு மிகஅஞ்சி
ஆரத் தழுவிக் கொண்டிருந்த
மையு லாவுங் கருநெடுங்கண்
மலையா ளென்றும் வழிபடுபூஞ்
செய்ய கமலச் சேவடிக்கீழ்த்
திருந்து காத லுடன் வீழ்ந்தார்.

பொழிப்புரை :

கைகளைக் கூப்பியவாறு பெருமானின் திருமுன்பு செல்பவராய ஆரூரர், கம்பையாறு பெருகிவரக் கண்டு, பெருமானின் திருமேனியின் பொருட்டு மிகப் பயந்து, நன்றாக அவரை இறுகத் தழுவிக்கொண்டிருந்த மைதீட்டி விளங்கும் நீண்ட கண்களை உடைய மலையரசன் மகளாரான ஏலவார் குழலார், என்றும் வழிபட்டு வருகின்ற செந்தாமரை மலர் போன்ற மென்மையும், நிறமும், மணமும் கொண்ட பெருமானின் திருவடிகளின் கீழாகத் திருந்திய காதலுடன் வணங்கினார்.

குறிப்புரை :

********************

பண் :

பாடல் எண் : 189

வீழ்ந்து போற்றிப் பரவசமாய்
விம்மி யெழுந்து மெய்யன்பால்
வாழ்ந்த சிந்தை யுடன்பாடி
மாறா விருப்பிற் புறம்போந்து
சூழ்ந்த தொண்ட ருடன்மருவும்
நாளில் தொல்லைக் கச்சிநகர்த்
தாழ்ந்த சடையா ராலயங்கள்
பலவுஞ் சார்ந்து வணங்குவார்.

பொழிப்புரை :

கால்உற வணங்கிப் போற்றி செய்து, தன்வயம் இழந்து, விம்மி அழுது எழுந்து மெய்யன்பினால் வாழ்வு பெற்ற சிந்தையால், பெருமானைப் பாடி, மாறாத விருப்பத்துடன் வெளியே வந்து, தம்மைச் சூழ்ந்த அடியவர்களுடன் ஆரூரர் அங்குத் தங்கியிருக் கும் நாள்களில், பழமையான காஞ்சி நகரைச் சூழ்ந்து விளங்கிடும் சடையையுடைய பெருமான் திருக்கோயில்கள் பலவற்றையும் சென்று வணங்குவாராய்,

குறிப்புரை :

திருக்கச்சி ஏகம்பத்தில் இதுபொழுது அருளிய பதிகம் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 190

சீரார் காஞ்சி மன்னுதிருக்
காமக் கோட்டம் சென்றிறைஞ்சி
நீரார் சடையா ரமர்ந்தருளும்
நீடு திருமேற் றளிமேவி
ஆரா அன்பிற் பணிந்தேத்து
மளவில்நுந்தா வொண்சுடராம்
பாரார் பெருமைத் திருப்பதிகம்
பாடி மகிழ்ந்து பரவினார்.

பொழிப்புரை :

சிறப்பு மிக்க காஞ்சிப் பதியில் விளங்கும் திருக்காமக் கோட்டத்திற்குச் சென்று வணங்கி, கங்கையைச் சடையில் உடைய பெருமான் நிலைபெற்று வாழும் திருக்கச்சிமேற்றளி என்னும் கோயிலை அடைந்து ஆராத அன்பினால், பெருமானைப் பணிந்து போற் றும் வகையில் இந்நிலவுலகில் அளவற்ற பெருமையுடைய `நுந்தா வொண் சுடரே\' எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடி மகிழ்ந்து போற்றினார்.

குறிப்புரை :

`நொந்தா வொண்சுடரே\' எனத் தொடங்கும் பதிகம் நட்ட ராகப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.21). இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 191

ஓண காந்தன் தளிமேவும்
ஒருவர் தம்மை யுரிமையுடன்
பேணி யமைந்த தோழமையால்
பெருகும் அடிமைத் திறம்பேசிக்
காண மோடு பொன்வேண்டி
நெய்யும் பாலும் கலைவிளங்கும்
யாணர்ப் பதிகம் எடுத்தேத்தி
யெண்ணில் நிதிபெற் றினிதிருந்தார்.

பொழிப்புரை :

திருவோணகாந்தன்தளியில் எழுந்தருளி இருக் கும் இறைவரை, உரிமையோடு விரும்பி ஏற்ற தோழமைத் திறம் பற்றிப் பெருகிவரும் அடிமைத் திறத்தினைக் கூறி, காசுடன் பொன்னை விரும்பி, `நெய்யும் பாலும்\' எனத் தொடங்கும் இசைக் கலைகளின் தன்மை விளங்குகின்ற அழகிய திருப்பதிகத்தினை எடுத்துப் போற்றி அளவற்ற செல்வங்களைப் பெற்று இனிதாக இருந்தார்.

குறிப்புரை :

ஓணன், காந்தன் என்ற இரு அசுரர்களாலும் வழிபடப் பெற்றதால் ஓணகாந்தன்தளி எனப் பெயர் பெற்றது. `நெய்யும் பாலும்\' எனத் தொடங்கும் பதிகம், (தி.7 ப.5) இந்தளப் பண்ணில் அமைந்த தாகும். `கையில் ஒன்றும் காணம் இல்லை\'என வரும் குறிப்பால், இது பொன் வேண்டியருளிய பதிகமாதல் தெரியலாம். `உங்களுக்கு ஆட் செய்ய மாட்டோம்; இல்லை என்னீர் உண்டும் என்னீர்; ஓடிப் போகீர் பற்றுந் தாரீர்; வாரமாகித் திருவடிக்குப் பணிசெய் தொண்டர் பெறுவ தென்னே\' என வரும் முறைப்பாடுகள் இவர்தம் தோழமைத் திறத்தை விளக்கலின், `உரிமையுடன் பேணியமைந்த தோழமையால்\' பாடி அருளியது எனச் சேக்கிழார் குறித்தருளுவாராயினர்.

பண் :

பாடல் எண் : 192

அங்கண் அமர்வார் அனேகதங்கா
வதத்தை யெய்தி யுள்ளணைந்து
செங்கண் விடையார் தமைப்பணிந்து
தேனெய் புரிந்தென் றெடுத்ததமிழ்
தங்கு மிடமா மெனப்பாடித்
தாழ்ந்து பிறவுந் தானங்கள்
பொங்கு காத லுடன்போற்றிப்
புரிந்தப் பதியிற் பொருந்துநாள்.

பொழிப்புரை :

அப்பதியில் விரும்பித் தங்கியிருந்தவராய நம்பிகள், திருக்கச்சி அனேகதங்காவதத்தினைச் சேர்ந்து, திருக்கோயி லின் உள்ளே அணைந்து, சிவந்த கண்களையுடைய ஆனேற்றை உடையாராகிய இறைவரை வணங்கித் `தேன்நெய் புரிந்து\' எனத் தொடங்கும் திருப்பதிகத்தினைப் பாடியருளி, வணங்கி, இறைவன் எழுந்தருளியிருக்கும் பிற பதிகளையும் மேன்மேலும் மிகும் பெரு விருப்புடன் சென்று போற்றி, இடைவிடாத நினைவுடனே அக்கச்சித் திருப்பதியில் பொருந்தவிருக்கும் நாள்களில்,

குறிப்புரை :

`தேன்நெய்\' (தி.7 ப.5) எனத் தொடங்கும் பதிகம், இந் தளப் பண்ணில் அமைந்ததாகும். பிற தானங்கள் என்பன, காஞ்சியில் உள்ளனவும், அதனைச் சூழ்ந்து உள்ளனவுமாய திருக்கோயில்க ளாம். திருக்குறிப்புத்தொண்டர் புராணத்து (தி.12 பு.19), இக் கோயில்கள் பலவும் குறித்துக் காட்டப் பெற்றுள்ளன. ஆண்டுக் காண்க.

பண் :

பாடல் எண் : 193

பாட இசையும் பணியினால்
பாவை தழுவக் குழைகம்பர்
ஆடல் மருவுஞ் சேவடிகள்
பரவிப் பிரியா தமர்கின்றார்
நீட மூதூர்ப் புறத்திறைவர்
நிலவும் பதிகள் தொழவிருப்பால்
மாட நெருங்கு வன்பார்த்தான்
பனங்காட் டூரில் வந்தடைந்தார்.

பொழிப்புரை :

பாடுதற்கு இசைகின்ற பணிசெய்யப் பெற்றதனால், அம்மையார் தழுவக் குழைந்து காட்டிய திருவேகம்பரது அருட் கூத்தாடும் திருவடிகளைப் போற்றிப் பிரியாது விரும்பி எழுந்தருளி இருக்கின்ற நம்பியாரூரர், மிகப் பழமையான அக்கச்சிமூதூரின் புறத் திலே நிலவுகின்ற பதிகள் பலவற்றையும் தொழுது விருப்பத்தினால் சென்று, மாடங்கள் நெருங்கி விளங்கும் வன்பார்த்தான்பனங்காட் டூரை வந்து அடைந்தார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 194

செல்வ மல்கு திருப்பனங்காட்
டூரிற் செம்பொற் செழுஞ்சுடரை
அல்லல் அறுக்கும் அருமருந்தை
வணங்கி யன்பு பொழிகண்ணீர்
மல்கநின்று விடையின்மேல்
வருவார் எனும்வண் டமிழ்ப்பதிகம்
நல்ல இசையி னுடன்பாடிப்
போந்து புறம்பு நண்ணுவார்.

பொழிப்புரை :

செல்வம் நிறைந்த திருப்பனங்காட்டூரில் எழுந் தருளியிருக்கும் சிவந்த பொன்போன்ற ஒளியையுடைய செழுஞ்சுட ராயும், பிறவித் துன்பத்தினை அறுக்கும் அரிய மருந்தாயும் இருக்கும் இறைவரைப் பணிந்து, அன்பு மேலீட்டால் பொழியும் கண்ணீர் பெருக நின்று, `விடையின் மேல் வருவானை\' எனத் தொடங்கும் வளப்பம் உடைய பதிகத்தை நல்ல இசை பொருந்தப் பாடிப் புறம் போந்து சேர்வாராய்,

குறிப்புரை :

`விடையின் மேல் வருவானை\' எனத் தொடங்கும் பதிகம் சீகாமரப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.86).

பண் :

பாடல் எண் : 195

மன்னு திருமாற் பேறணைந்து
வணங்கிப் பரவித் திருவல்லம்
தன்னுள் எய்தி இறைஞ்சிப்போய்ச்
சாரும் மேல்பாற் சடைக்கற்றைப்
பின்னல் முடியா ரிடம்பலவும்
பேணி வணங்கிப் பெருந்தொண்டர்
சென்னி முகில்தோய் தடங்குவட்டுத்
திருக்கா ளத்தி மலைசேர்ந்தார்.

பொழிப்புரை :

அதன்பின், நிலைபெற்ற திருமாற்பேறு என்னும் திருப்பதியை அடைந்து வணங்கிப் போற்றி, திருவல்லம் அடைந்து வணங்கிப் போய், மேற்குப் புறமாக உள்ள கற்றையாய சடைமுடியை யுடைய பெருமான் வீற்றிருக்கும் இடங்கள் பலவற்றையும் விருப் புடன் வணங்கிச் சென்ற பெரிய தொண்டரான நம்பிகள், முடியின் மீது முகில் படியும் அகன்ற சிகரங்களுடைய திருக்காளத்தி மலையினைச் சேர்ந்தார்.

குறிப்புரை :

இப்பதிகளில் அருளிய பதிகங்கள் கிடைத்தில. திருவல் லத்திற்கு மேற்குப்புறமாக உள்ள பதிகள், திருக்கரபுரம் முதலாயின வாகலாம்.

பண் :

பாடல் எண் : 196

தடுக்க லாகாப் பெருங்காதல்
தலைநின் றருளுங் கண்ணப்பர்
இடுக்கண் களைந்தாட் கொண்டருளும்
இறைவர் மகிழ்ந்த காளத்தி
அடுக்கல் சேர அணைந்துபணிந்
தருளா லேறி அன்பாறு
மடுப்பத் திருமுன் சென்றெய்தி
மலைமேல் மருந்தை வணங்கினார்.

பொழிப்புரை :

தடுத்தற்கரிய பெருங்காதல் தலைநின்று விளங்கும் கண்ணப்ப நாயனாரது துன்பத்தைக் களைந்து ஆட்கொண்டருளும் இறைவர், மகிழ்ந்து வீற்றிருக்கும் திருக்காளத்தி மலையினைச் சேரச் சென்று பணிந்து, அப்பெருமான் திருவருள் மீதூர அம்மலை மீது ஏறி, அன்பெனும் ஆறு கரையது புரளக் காளத்தி அப்பரின் திருமுன்பாகச் சென்று, அம்மலைமேல் என்றும் பிறவிப் பிணிக்கு மருந்தாக இருந் தருளும் பெருமானை வணங்கினார்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 197

வணங்கி உள்ளங் களிகூர
மகிழ்ந்து போற்றி மதுரஇசை
அணங்கு செண்டா டெனும்பதிகம்
பாடி யன்பாற் கண்ணப்பர்
மணங்கொள் மலர்ச்சே வடிபணிந்து
வாழ்ந்து போந்து மன்னுபதி
இணங்கு தொண்ட ருடன்கெழுமி
இன்புற் றிருக்கும் அந்நாளில்.

பொழிப்புரை :

வணங்கி, உள்ளம் களிகூர்ந்திட மகிழ்ந்து போற்றி, இனிமை மிகுந்த இசையால், `செண்டாடும் விடையாய்\' எனத் தொடங் கிடும் திருப்பதிகத்தைப் பாடி, அன்பினால் கண்ணப்ப நாயனாரது மணம் நிறைந்து விளங்கும் தாமரை மலர் போலும் சிவந்த திருவடிகளைப் பணிந்து, பெரும்பேறு பெற்று, வெளியே வந்து விளங்கும் அத்திருக் காளத்தியில் தம்முடன் இணங்கிய அடியாருடன் பொருந்தி இன்புற்று இருக்கும் அந்நாள்களில்,

குறிப்புரை :

`செண்டாடும் விடையாய்\' எனத் தொடங்கும் பதிகம் நட்டராகப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.26).

பண் :

பாடல் எண் : 198

வடமா திரத்துப் பருப்பதமும்
திருக்கே தார மலையுமுதல்
இடமா அரனார் தாமுவந்த
வெல்லா மிங்கே இருந்திறைஞ்சி
நடமா டியசே வடியாரை
நண்ணி னார்போ லுண்ணிறைந்து
திடமாங் கருத்தில் திருப்பதிகம்
பாடிக் காதல் சிறந்திருந்தார்.

பொழிப்புரை :

வடபுலத்துள்ள நிலைபெற்ற திருப்பருப்பதம், திருக் கேதாரம் ஆகிய மலைப் பதிகளையும், இவை முதலாக உள்ள சிவ பெருமான் உவந்து உறைகின்ற பிற இடங்களையும், திருக்காளத் தியில் இருந்தவாறே வணங்கி, அத்திருப்பதிகளில் சென்று கூத்தியற் றும் திருவடிகளை உடைய பெருமானை நேரில் சென்று வணங்கினாற் போல் உள்ளம் மகிழ்ந்து, உறைப்புடைய திருவுள்ளத்தால், அப்பதி களை உளம் கொண்ட நிலையில் திருப்பதிகங்கள் பாடியருளினார்.

குறிப்புரை :

திருக்கேதாரம் முதலாகவுள்ள திருப்பதிகளாவன, திருக்கயிலாயம், திருஅனேகதங்காவதம், திருஇந்திர நீலப்பருப்பதம் முதலாயினவாகலாம். ஆளுடைய பிள்ளையார் திருக்காளத்தியில் இருந்தவாறே, இப்பதிகளையெல்லாம் வணங்கிப் போற்றியதைப் போல, இவரும் இங்கிருந்தவாறே பணிந்து போற்றியுள்ளார். இத்திருப்பதிகளில் இரு திருப்பதிகளில் அருளிய திருப்பதிகங்களே கிடைத்துள்ளன. 1. திருப்பருப்பதம்: மானும்மரை - நட்டபாடை (தி.7 ப.79) 2. திருக்கேதாரம்: வாழ்வாவது - நட்டபாடை (தி.7 ப.78) இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 199

அங்குச் சிலநாள் வைகியபின்
அருளாற் போந்து பொருவிடையார்
தங்கும் இடங்க ளெனைப்பலவுஞ்
சார்ந்து தாழ்ந்து தமிழ்பாடிப்
பொங்கு புணரிக் கரைமருங்கு
புவியுட் சிவலோகம் போலத்
திங்கள் முடியா ரமர்ந்ததிரு
வொற்றியூரைச் சென்றடைந்தார்.

பொழிப்புரை :

இந்நிலையில் அங்குச் சில நாள்கள் இருந்தருளிய பின், பெருமானின் திருவருள் பெற்றுப் பொருதலில் வல்ல ஆனேற்று ஊர்தியையுடைய பெருமான் எழுந்தருளியிருக்கும் ஏனைய பதிகள் பலவும் சென்று வணங்கித் தமிழ்ப் பதிகங்கள் பாடிப் போற்றிப் பொங்கும் அலைகளையுடைய கடற்கரையோரத்தில் விளங்கும் இந் நிலவுலகில் சிவலோகம் எனச் சிறந்து விளங்கும் இளம்பிறையினை முடிமேற் சூடிய சிவபெருமான் அமர்ந்தருளும் திருவொற்றியூரைச் சென்றடைந்தார்.

குறிப்புரை :

இடங்கள் எனைப் பலவும் என்றது, திருக்காளத்தியி லிருந்து திருவொற்றியூர் செல்லும் வரையில் உள்ள இடைப்பட்ட பதி களாம். அவை திருக்காரிக்கரை, திருக்கள்ளில், புண்ணிய கோடீசுவரர் கோயில் முதலாயினவாகலாம்.

பண் :

பாடல் எண் : 200

அண்ணல் தொடர்ந்தா வணங்காட்டி
ஆண்ட நம்பி யெழுந்தருள
எண்ணில் பெருமை ஆதிபுரி
இறைவ ரடியா ரெதிர்கொள்வார்
வண்ண வீதி வாயில்தொறும்
வாழை கமுகு தோரணங்கள்
சுண்ண நிறைபொற் குடந்தூப
தீப மெடுத்துத் தொழவெழுங்கால்.

பொழிப்புரை :

பெருமனார் தாமே தொடர்ந்து வந்து ஆவணம் காட்டி ஆட்கொள்ளப்பெற்ற நம்பியாரூரர் எழுந்தருளலும், எண் ணற்ற பெருமையுடைய தோற்றமில் காலத்தே தோன்றிய திரு வொற்றியூர்ப் பெருமான்பால் அன்பு கொண்ட அடியார்கள் வந்து எதிர்கொள்பவர்கள், அழகு பொருந்திய தம் வீதிகளின் வாயில்கள் தோறும் வாழை, கமுகு, தோரணங்கள், பொற்சுண்ணம் நிறைந்த பொற்குடங்கள், நறும்புகை, ஒளிவிளக்கு முதலியவற்றை எடுத்து நகரை அணிசெய்து, நம்பிகளைத் தொழ வந்தபொழுது,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 201

வரமங் கலநல் லியம்முழங்க
வாச மாலை யணியரங்கில்
புரமங் கையர்கள் நடமாடப்
பொழியும் வெள்ளப் பூமாரி
அரமங் கையரும் அமரர்களும்
வீச அன்ப ருடன்புகுந்தார்
பிரமன் தலையிற் பலியுகந்த
பிரானார் விரும்பு பெருந் தொண்டர்.

பொழிப்புரை :

சிறந்த மங்கலமுடைய நல்ல இயங்கள் முழங்கிட, நறுமணமுடைய மாலைகள் அணிசெய்யும் நாட்டிய அரங்குகளில், சிலம்பணிந்த பெண்கள் நடனமாடிட, எங்கும் பொழியும் மழை வெள்ளம் போல் பூ மழையைத் தேவப் பெண்களும் தேவர்களும் பொழிந்திட, நான்முகனது தலையில் பலியை உவந்து ஏற்றருளும் சிவபெருமான் விரும்பும் பெருந்தொண்டராம் நம்பிகள், அன்பர்களு டன் அந்நகரில் புகுந்தனர்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 202

ஒற்றியூரி னுமையோடுங்
கூட நின்றா ருயர்தவத்தின்
பற்று மிக்க திருத்தொண்டர்
பரந்த கடல்போல் வந்தீண்டிச்
சுற்றம் அணைந்து துதிசெய்யத்
தொழுது தம்பி ரானன்பர்
கொற்ற மழவே றுடையவர்தங்
கோயில் வாயி லெய்தினார்.

பொழிப்புரை :

திருவொற்றியூரில் உமையம்மையாரோடும் கூட நின்றருளும் சிவபெருமானது உயர்ந்த தவத்தில் பற்றுமிக்க திருத் தொண்டர்கள், பரந்த பெருங் கடல்போலப் பெருக வந்துகூடி, அவரது சுற்றம் போல அணைந்து போற்ற, தாமும் அவர்களைத் தொழுது, பெருமானின் அன்பராம் நம்பிகள், வெற்றி பொருந்திய இளைய விடையை ஊர்தியாகவுடைய பெருமானது கோயில் வாயில் முன்பாக வந்தடைந்தார்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 203

வானை அளக்குங் கோபுரத்தை
மகிழ்ந்து பணிந்து புகுந்துவளர்
கூனல் இளவெண் பிறைச்சடையார்
கோயில் வலங்கொண் டெதிர்குறுகி
ஊனும் உயிருங் கரைந்துருக
உச்சி குவித்த கையினுடன்
ஆன காத லுடன் வீழ்ந்தார்
ஆரா வன்பி னாரூரர்.

பொழிப்புரை :

வானினை அளப்பது போலும் கோபுரத்தை மகிழ்ந்து பணிந்து உள்ளே புகுந்து, வளர்ந்துவரும் வளைந்த இளமை ஆன வெண்பிறையைச் சடைமேல் உடைய பெருமானது கோயிலை வலங்கொண்டு, திருமுன்பு சேர்ந்து, ஊனும் உயிரும் கரைந்து உருகிட உச்சிமீது குவித்த கையுடன் உள்ளத்துப் பெருகிய காதலுடன், ஆராத அன்பினையுடைய நம்பியாரூரர் வீழ்ந்து வணங்கினார்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 204

ஏட்டு வரியில் ஒற்றியூர்
நீங்கல் என்ன எழுத்தறியும்
நாட்ட மலருந் திருநுதலார்
நறும்பொற் கமலச் சேவடியிற்
கூட்டு முணர்வு கொண்டெழுந்து
கோதி லமுத இசைகூடப்
பாட்டும் பாடிப் பரவிஎனும்
பதிக மெடுத்துப் பாடினார்.

பொழிப்புரை :

எழுதப் பெற்ற ஏட்டின் வரியில் `திருவொற்றியூர் நீங்கலாக` எனும் தொடரைப் புகுத்தி எழுத்தறிய வல்லவரும், சிறந்த திருக்கண்ணினையும், திருநெற்றியையும் உடையவருமான சிவபெருமானாரது வாசனை கொண்ட பொன்னின் தாமரை போலும் திருவடிக் கீழாகக் கூட்டிய உணர்வு கொண்டு, எழுந்து, கோதிலாத அமுதம் போலும் இசை வந்து கூடப் `பாட்டும் பாடிப் பரவி` எனத் தொடங்கும் திருப்பதிகத்தை எடுத்துப் பாடினார்.

குறிப்புரை :

`பாட்டும் பாடிப் பரவி எனத் தொடங்கும் பதிகம் குறிஞ்சிப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.91).

பண் :

பாடல் எண் : 205

பாடி அறிவு பரவசமாம்
பரிவு பற்றப் புறம்போந்து
நீடு விருப்பிற் பெருங்காதல்
நிறைந்த அன்பர் பலர்போற்றத்
தேடும் அயனும் திருமாலும்
அறிதற் கரிய திருப்பாதங்
கூடுங் காலங் களில்அணைந்து
பரவிக் கும்பிட் டினிதிருந்தார்.

பொழிப்புரை :

இப்பதிகம் பாடியருளி அறிவு தன்வயமிழந்து சிவமயமாகிப் பரிவு கொண்டிட வெளியே வந்து, நீடிய விருப்புடைய பெருங்காதல் நிறைந்த அன்பர் பலர் போற்றிட, தேடுகின்ற பிரமனும் திருமாலும் அறிதற்கு அரிய சிவபெருமானின் திருப்பாதத்தைப் பரிவொடுங் கூடிக் கும்பிடும் காலங்களில் சென்றடைந்து போற்றிக் கும்பிட்டு அங்கு இனிதே இருந்தார் ஆரூரர்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 206

இந்த நிலைமை யாரிவரிங்
கிருந்தார் முன்பே இவர்க்காக
அந்தண் கயிலை மலைநீங்கி
அருளாற் போந்த அநிந்திதையார்
வந்து புவிமேல் அவதரித்து
வளர்ந்து பின்பு வன்தொண்டர்
சந்த விரைசூழ் புயஞ்சேர்ந்த
பரிசு தெரியச் சாற்றுவாம்.

பொழிப்புரை :

இந்நிலையில் ஆரூரர் இங்கு இருந்தார். நம்பிகள் இவ்வாறு வருதற்கு முன்னே, இவருக்காக அழகிய திருக்கயிலாய மலையை விடுத்து நீங்கி, திருவருட் செயலால் இவ்வுலகில் வந்த அநிந்திதையார் அவதரித்து வளர்ந்து, பின்னாகச் சுந்தரமூர்த்தி நாயனாரது வாசனை கமழ்ந்திடும் மாலை சூடும் தோளினைச் சேர்ந்த அவ்வருட் செயலை அறிந்தவாறு சொல்லுவோம்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 207

நாலாங் குலத்திற் பெருகுநல
முடையார் வாழும் ஞாயிற்றின்
மேலாங் கொள்கை வேளாண்மை
மிக்க திருஞா யிறுகிழவர்
பாலா தரவு தருமகளார்
ஆகிப் பார்மேல் அவதரித்தார்
ஆலா லஞ்சேர் கறைமிடற்றார்
அருளால் முன்னை அநிந்திதையார்.

பொழிப்புரை :

அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் எனப்படும் நான்கு வகையான குலத்தில், நான்காவதாகச் சொல்லப்படும் வேளா ளர் குலத்தில், பெருகும் நலமுடையவராய், உலகிற்கு ஒளிதந்து உதவு கின்ற கதிரவனினும் மேலான கொள்கை உடையவராய், உழவுத் தொழிலில் தலைசிறந்தவராய் வாழ்ந்துவரும் ஞாயிறுகிழார் என்பார் ஒருவருக்கு, அன்புமிகும் மகளாராகி, முன்பு அநிந்திதை எனப் பெயர் பெற்ற அம்மையார், நீலமணிமிடற்று ஒருவனாய பெருமானின் திருவருளால் இவ்வுலகில் தோன்றினார்,

குறிப்புரை :

முன்பு - ஞாயிறு என்னும் பதியில் தோன்றும் முன்பு. திருக்கயிலையில் அநிந்திதை எனும் பெயருடையராய் வாழ்ந்த நிலையைக் குறிக்க இவ்வாறு கூறினார்.

பண் :

பாடல் எண் : 208

மலையான் மடந்தை மலர்ப்பாதம்
மறவா அன்பால் வந்தநெறி
தலையா முணர்வு வந்தணையத்
தாமே யறிந்த சங்கிலியார்
அலையார் வேற்கண் சிறுமகளி
ராயத் தோடும் விளையாட்டு
நிலையா யினஅப் பருவங்கள்
தோறும் நிகழ நிரம்புவார்.

பொழிப்புரை :

மலையரசன் மகளாராய உமையம்மையாரின் மலர் அனைய திருவடிகளை மறவாத அன்பினால், அதுவே உள்ளத் துத் தலையாய அன்பின் உணர்ச்சியாக வந்து சேர, தமது நிலையைத் தாமே அறிந்த சங்கிலியார், கூரிய வேல் போன்ற நீண்ட வரிவிழிகளை யுடைய சிறு பெண்கள் கூட்டத்துடன் விளையாடி வரும் நிலைகளாய கழங்காடல், அம்மானை. பந்தாடல் முதலிய பருவங்கள் முறையே வர, வயது நிரம்பிவரும் நிலையில்,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 209

சீர்கொள் மரபில் வருஞ்செயலே
யன்றித் தெய்வ நிகழ்தன்மை
பாரில் எவரும் அதிசயிக்கும்
பண்பில் வளரும் பைந்தொடியார்
வாரும் அணிய அணியவாம்
வளர்மென் முலைகள் இடைவருத்தச்
சாரும் பதத்தில் தந்தையார்
தங்கள் மனைவி யார்க்குரைப்பார்.

பொழிப்புரை :

சீர்மை பொருந்திய குலமரபில் வருகின்ற செயலே யன்றி, உள்ளத்தில் தெய்வத் தன்மை நிகழும் பண்பும் விளங்க, உலக வர் வியக்கும் பண்பில் வளர்ந்துவரும் பசிய வளையல் அணிந்த சங்கிலியார், கச்சு அணிதற்கான காலம் நெருங்க, வளரும் முலைகள் இடையினை வருத்திட, வளர்ந்து, எழில் திகழும் பருவத்தில் அவரது நிலைகண்டு தந்தையாரான ஞாயிறு கிழார் தம் மனைவியாருக்குச் சொல்லுவாராய்,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 210

வடிவும் குணமும் நம்முடைய
மகட்கு மண்ணு ளோர்க்கிசையும்
படிவ மன்றி மேற்பட்ட
பரிசாம் பான்மை அறிகிலோம்
கடிசேர் மணமும் இனிநிகழுங்
கால மென்னக் கற்புவளர்
கொடியே அனைய மனைவியார்
ஏற்கு மாற்றால் கொடுமென்றார்.

பொழிப்புரை :

நம் மகளுக்கு வடிவும் குணமும் இந்நிலவுலகில் உள்ள ஏனைய பெண்கட்குப் பொருந்துவனவாக அன்றி, மிகமேம் பட்ட நிலையில் விளங்குவது நாம் எவ்வாறென அறிகிலோம்! மகளிர்க்கு நிறை காக்கும் காப்பாக விளங்கும் திருமணமும் இனி நிகழ்தற்குரிய காலமாகும் என்றிடலும், அது கேட்டுக் கற்பு வளரும் பூங்கொடி போலும் மனைவியார், கணவனாரை நோக்கி, நம் மக ளாரை ஏற்கும் முறையாகத் திருமணம் செய்து கொடுப்பீராக என்றார்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 211

தாய ரோடும் தந்தையார்
பேசக் கேட்ட சங்கிலியார்
ஏயும் மாற்றம் அன்றிதுஎம்
பெருமா னீசன் திருவருளே
மேய வொருவர்க் குரிய தியான்
வேறென் விளையும் எனவெருவுற்று
ஆய வுணர்வு மயங்கிமிக
அயர்ந்தே அவனி மிசைவிழுந்தார்.

பொழிப்புரை :

தாயாரும் தந்தையாரும் தமது திருமணம் பற்றிய பேச்சினைப் பேசக் கேட்ட சங்கிலியார், இத்திருமண வார்த்தை எனக் குப் பொருந்துவது அன்று; எம்பெருமானின் திருவருள் முழுமை யாகப் பொருந்திய ஒருவருக்கே என் வாழ்க்கை உரியது. இவ்வாறாக, இவர்தம் எண்ணங்களால் இதனின் வேறாய் விளைந்திடுமோ? என அஞ்சிய அச்ச நினைவால், உணர்வு மயங்கி, மிகச் சோர்ந்து நிலத்தில் விழுந்தார்.

குறிப்புரை :

`உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம் உன்னடி யார் தாள் பணிவோம், ஆங்கவர்க்கே பாங்காவோம், அன்னவரே எம் கணவராவார்\', `எம் கொங்கைநின் அன்பர் அல்லார் தோள் சேரற்க\' (தி.8 ப.7 பா.19) என உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் வைத்துக் கூறும் மகளிர் நினைவு ஈண்டு மறக்கப்போமோ?

பண் :

பாடல் எண் : 212

பாங்கு நின்ற தந்தையார்
தாயார் பதைத்துப் பரிந்தெடுத்தே
ஏங்கும் உள்ளத் தினராகி
இவளுக் கென்னோ உற்றதெனத்
தாங்கிச் சீத விரைப்பனிநீர்
தெளித்துத் தைவந் ததுநீங்க
வாங்கு சிலைநன் னுதலாரை
வந்த துனக்கிங் கென்னென்றார்.

பொழிப்புரை :

அருகில் நின்ற தந்தையாரும் தாயாரும் மகளார் வீழ்ந்தமை கண்டு பதைத்துப் பரிவுடன் அவரை எடுத்து, ஏங்குகின்ற உள்ளமுடையராகி, இவளுக்கு என்ன நேர்ந்தது? என்று கைகளில் அணைத்துத் தாங்கி, குளிர்ந்த நறுமணமுடைய பன்னீரைத் தெளித்து, உடம்பில் தடவிட, அவர்தம் மயக்கமும் அயர்ச்சியும் நீங்க, வளைந்த வில்போலும் நெற்றியையுடைய அவரை நோக்கி, `உனக்கு இங்கு என்ன நேர்ந்தது?\' எனக் கேட்டனர்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 213

என்று தம்மை ஈன்றெடுத்தார்
வினவ மறைவிட் டியம்புவார்
இன்றென் திறத்து நீர்மொழிந்த
திதுஎன் பரிசுக் கிசையாது
வென்றி விடையா ரருள் செய்தார்
ஒருவர்க் குரியேன் யானினிமேல்
சென்று திருவொற்றி யூரணைந்து
சிவனார் அருளிற் செல்வனென.

பொழிப்புரை :

அருகில் நின்ற தந்தையாரும் தாயாரும் மகளார் வீழ்ந்தமை கண்டு பதைத்துப் பரிவுடன் அவரை எடுத்து, ஏங்குகின்ற உள்ளமுடையராகி, இவளுக்கு என்ன நேர்ந்தது? என்று கைகளில் அணைத்துத் தாங்கி, குளிர்ந்த நறுமணமுடைய பன்னீரைத் தெளித்து, உடம்பில் தடவிட, அவர்தம் மயக்கமும் அயர்ச்சியும் நீங்க, வளைந்த வில்போலும் நெற்றியையுடைய அவரை நோக்கி, `உனக்கு இங்கு என்ன நேர்ந்தது?\' எனக் கேட்டனர்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 214

அந்த மாற்றங் கேட்டவர்தாம்
அயர்வும் பயமும் அதிசயமும்
வந்த வுள்ளத் தினராகி
மற்ற மாற்றம் மறைத்தொழுகப்
பந்தம் நீடும் இவர்குலத்து
நிகராம் ஒருவன் பரிசறியான்
சிந்தை விரும்பி மகட்பேச
விடுத்தான் சிலருஞ் சென்றிசைத்தார்.

பொழிப்புரை :

அச் சொற்களைக் கேட்ட முதுகுரவர் இருவரும் மனத்தில் சோர்வும் அச்சமும் அதிசயமும் கொண்டவராகி, தம்மிடம் சொல்லிய அச்சொற்களை ஒருவருக்கும் தெரியாதவாறு மறைத்து ஒழுக, இவர் தமக்குக் குடிப்பிறப்பானும், பிற பண்புகளானும் ஒத்தான் ஒருவன், இவ்வுண்மை அறியானாய், சங்கிலியாரை விரும்பி மணம் பேசச் சிலரை விடுப்ப, அவரும் ஞாயிறு கிழாரிடம் வந்து கேட்டனர்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 215

தாதை யாரும் அதுகேட்டுத்
தன்மை விளம்பத் தகாமையினால்
ஏத மெய்தா வகைமொழிந்து
போக்க அவராங் கெய்தாமுன்
தீதங் கிழைத்தே யிறந்தான்போற்
செல்ல விடுத்தா ருடன் சென்றான்
மாத ராரைப் பெற்றார்மற்று
அதனைக் கேட்டு மனமருண்டார்.

பொழிப்புரை :

தந்தையாரும் அவ்வார்த்தையைக் கேட்டு, உண்மை நிலையை உணர்த்தத் தகாமையினால், அவர்கள் மனம் வருந்தா வகையில் சில வார்த்தைகளைச் சொல்லி, அவர்களைப் போக்கலும், அவர்களும் தம்மை விடுத்த அவனிடம் செல்லும் முன்பே, பெருந்தீங்கைச் செய்தான் ஒருவன் அதன்பயனாக உடன் இறந்தாற்போல, மணம் பேச விடுத்த அவர்கள், அவனிடத்தினின்றும் புறப்பட்ட அளவிலேயே அவனும் இறந்தொழிந்தான். இச்செய்தி கேட்டதும் சங்கிலியாரைப் பெற்ற தந்தை தாயர் பெரிதும் மனம் கலங்கினார்கள்.

குறிப்புரை :

பெண் கேட்க வந்தாருக்குத் தம்மகளைக் கொடுக்கும் விருப்பம் இல்லையாயினும், அதனை அவ்வாறே சொல்லல் மர பன்று, வந்தாருக்கு மனம் வருந்தாதவாறு சொல்லலே மரபாகும். இவ் வகையிலேயே இங்கும் `ஏதம் எய்தாவகை மொழிந்து\' என்றார். ஆனால் அவ் ஏதம் தானும், அவர்கள் அளவிலன்றித் தம் குடும்ப அளவிலும் எய்தாவகை கூறல்வேண்டும். பெண்ணளவிலோ அன்றித் தம் குடும்ப அளவிலோ ஏதோ குறைபாடு உள்ளது; அதனால்தான் மணம் நேர்தலைத் தவிர்க்கிறார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு உண்டாகிவிடக்கூடாது. எனவே தங்குலத்திற்கும் மகளின் பெண் தன்மைக்கும் ஏதம் எய்தா வகையானும் மொழிதல் வேண்டும். இத்தகைய உலகியல் உணர்வுகள் எல்லாம் அடங்கவே `ஏதம் எய்தாவகை மொழிந்து\' என்றார். நல்லதன் நலனும் தீயதன் தீங்கும் உடன் நிகழ்வனவல்ல; பெரும்பாலும் `தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை வீயாது அடியுறைந் தற்று\' (குறள்,208) என்புழிப் போல அவ்வக்கால எல்லை வந்துழியே வருத்தும். மாறாக மிகப் பெரிய நன்மையே அல்லது மிகப்பெரிய தீமையோ செய்யின் `பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் (குறள், 319) என்றற்கு இணங்க, உடன் வருதலும் உண்டு. அவ்வகையிலேயே மிகப் பெரிய தீங்கு செய்தவன் அதன் பயனை உடன் அடைந்தாற் போல, மணம் பேச விடுத்த அவனும் அதற்குரியவரை விடுத்த அளவி லேயே இறந்தனன் என்றார். `செல்ல விடுத்தாருடன் சென்றான்\' என்றது, `கற்புடைய மடவாரும் கணவனாருடன் சென்றார் (தி.12 பு. 27 பா.28) என்றாற்போல வரும் தொடராயிருப்பினும் அங்குக் கணவனார் இறப்ப, அவ்வம்மையாரும் உடன் இறந்தார் என்ற அமைப்பில் பொருள் கொள நின்றது. ஆனால் இங்கே மணம் பேச விடுத்தான்; அவர்கள் அவ்வினைக்குச் சென்ற அளவிலேயே தானும் சென்றான் (இறந்தான்) எனும் கருத்தமைய நிற்கின்றது. சென்ற அள வில் அவர்களுக்கும், அவனுக்கும் உடனிகழ்ச்சிப் பொருள்கொள நிற்பினும் அவர்கள் மணம்பேசச் சென்றனர்; இவன் உயிர் செலச் சென்றனன் என்பது கருத்தாகும்.

பண் :

பாடல் எண் : 216

தைய லார்சங் கிலியார்தம்
திறத்துப் பேசத் தகாவார்த்தை
உய்ய வேண்டும் நினைவுடையார்
உரையா ரென்றங் குலகறியச்
செய்த விதிபோல் இதுநிகழச்
சிறந்தார்க் குள்ள படிசெப்பி
நையும் உள்ளத் துடன்அஞ்சி
நங்கை செயலே உடன்படுவார்.

பொழிப்புரை :

தையலாரான சங்கிலியார் திறத்துப் பேசத் தகாத வார்த்தையை, இவ்வுலகில் வாழ வேண்டும் எனும் நினைவுடையார் சொல்லார் என்பதை இங்கு உலகறியச் செய்து வைத்த விதியின் திறம்போல, இச்செயல் நிகழ, தம்மூரில் உள்ள பெரியோர்களுக்குச் சங்கிலியார் தன்மையை உள்ளவாறு வெளிப்படுத்தி, வருந்திடும் உள்ளத்துடன் அச்சம் கொண்டு, சங்கிலியார் விரும்பிய அச்செய் கைக்கே உடன்படுவாராய்,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 217

அணங்கே யாகும் இவள்செய்கை
அறிந்தோர் பேச அஞ்சுவரால்
வணங்கும் ஈசர் திறமன்றி
வார்த்தை யறியாள் மற்றொன்றும்
குணங்க ளிவையா மினியிவள் தான்
குறித்த படியே ஒற்றிநகர்ப்
பணங்கொ ளரவச் சடையார்தம்
பாற்கொண் டணைவோம் எனப்பகர்வார்.

பொழிப்புரை :

பெண்களுக்குள் தெய்வமே யாகும் இவளது செய்கை இதனை அறிந்தோர், இவள் பற்றிய வேறு திறம் பேச அஞ்சுவார்கள் என்றும், தாம் வணங்கும் ஈசனுடைய பெருமை யல்லாது மற்றொரு வார்த்தை பேசவும் அறியாள் என்றும், இவளது செயல் இது என்றும், பெற்றோரும் உற்றோரும் தெளிந்து, இனி இப்பெண் நம்மிடம் தெரிவித்தபடியே திருவொற்றியூர் நகரிடத்துப் படம் கொண்ட பாம்பினைச் சடைமேலுடைய நாயகன் பால் சேர்த்திடலே தக்கது எனத் துணிவார்களாகி,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 218

பண்ணார் மொழிச்சங் கிலியாரை
நோக்கிப் பயந்தா ரொடுங்கிளைஞர்
தெண்ணீர் முடியார் திருவொற்றி
யூரிற் சேர்ந்து செல்கதியும்
கண்ணார் நுதலார் திருவருளால்
ஆகக் கன்னி மாடத்துத்
தண்ணார் தடஞ்சூ ழந்நகரிற்
றங்கிப் புரிவீர் தவமென்று.

பொழிப்புரை :

பண் போலும் இனிய மொழியுடைய சங்கிலி யாரை நோக்கி, பெற்ற தாய் தந்தையருடன் சுற்றத்தவரும் சொல்லு வார்களாகி, `அம்மையே! நீர், தெளிந்த கங்கை நீரை முடியில் கொண்ட சிவபெருமானின் திருவொற்றியூர் நகரைச் சேர்ந்து, இனி உமக்குச் செல்கின்ற கதியும் கண்ணார்ந்த நெற்றியுடைய கடவுளின் திருவருளேயாக, குளிர்ந்த குளங்கள் சூழ்ந்த நகரிடத்து ஒரு கன்னி மாடத்து தங்கி, தவத்தினைச் செய்திடுவீர்\' என்று கூறி,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 219

பெற்ற தாதை சுற்றத்தார்
பிறைசேர் முடியார் விதியாலே
மற்றுச் செயலொன் றறியாது
மங்கை யார்சங் கிலியார் தாம்
சொற்ற வண்ணஞ் செயத்துணிந்து
துதைந்த செல்வத் தொடும்புரங்கள்
செற்ற சிலையார் திருவொற்றி
யூரிற் கொண்டு சென்றணைந்தார்.

பொழிப்புரை :

பெற்ற தந்தையர் உள்ளிட்ட சுற்றத்தார், பிறை யணிந்த சடைமுடியையுடைய திருவொற்றியூர்ப் பெருமான் திருவரு ளாலே, மற்றச் செயல் ஒன்றும் அறியாது, பெண்ணில் நல்லாராகிய சங்கிலியார் சொல்லிய வண்ணம் செய்திடத் துணிந்து, பெருகிய செல்வத்தோடும், முப்புரங்களையும் எரித்த வில்லையுடைய பெரு மான் அமர்ந்த திருவொற்றியூருக்கு அழைத்துச் சென்றார்கள்.

குறிப்புரை :

இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 220

சென்னி வளர்வெண் பிறையணிந்த
சிவனார் கோயி லுள்புகுந்து
துன்னுஞ் சுற்றத் தொடும்பணிந்து
தொல்லைப் பதியோர் இசைவினால்
கன்னி மாட மருங்கமைத்துக்
கடிசேர் முறைமைக் காப்பியற்றி
மன்னுஞ் செல்வந் தகவகுத்துத்
தந்தை யார்வந் தடிவணங்கி.

பொழிப்புரை :

திருமுடிமீது வளர்கின்ற வெண்பிறையை அணிந்த பெருமான் அமர்ந்தருளும் திருவொற்றியூர்க் கோயிலுக்குள் புகுந்து நெருங்கிவரும் சுற்றத்தோடும் பணிந்து, உலகத் தோற்றத்தில் மிக முந்திய அத்திருப்பதியில் ஆண்டுள்ளோரின் இசைவுடன் பெருமா னின் திருக்கோயிலின் அருகே, ஒரு கன்னி மாடம் அமைத்து, அங்கு ஒருவரும் புகமுடியாத முறைமையால் காவலும் செய்து வைத்து, அச்சூழற்கு வேண்டும் செல்வத்தைத் தகுதியுடன் அமைத்துத் தாதை யாரான ஞாயிறு கிழார் வந்து தமது மகளார் சங்கிலியாரின் திருவடி களை வணங்கி,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 221

யாங்கள் உமக்குப் பணிசெய்ய
ஈசற் கேற்ற பணிவிரும்பி
ஓங்கு கன்னி மாடத்தில்
உறைகின் றீரென் றுரைக்கின்றார்
தாங்கற் கரிய கண்கள்நீர்த்
தாரை ஒழுகத் தரியாதே
ஏங்கு சுற்றத் தொடும்இறைஞ்சிப்
போனார் எயில்சூழ் தம்பதியில்.

பொழிப்புரை :

`யாங்கள் உமக்குப் பணிசெய்திட நீர் ஈசனுக் கேற்ற பணியினை விரும்பிச் செய்து மேலோங்கிய கன்னிமாடத்தில் உறைவீராக\\\' என்று மொழிகின்றவர், தாங்கற்கரிய கண்ணீர் தாரை தாரையாக ஒழுகப் பிரிவாற்றாது, சுற்றத்தோடும் வணங்கி, எழுந்து, மதில் சூழ்ந்த தமது ஊருக்குச் சென்றார்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 222

காதல் புரிந்து தவம்புரியுங்
கன்னி யாரங் கமர்கின்றார்
பூத நாதர் கோயிலினிற்
காலந் தோறும் புக்கிறைஞ்சி
நீதி முறைமை வழுவாது
தமக்கு நேர்ந்த பணி செய்யச்
சீத மலர்ப்பூ மண்டபத்துத்
திரைசூழ் ஒருபாற் சென்றிருந்து.

பொழிப்புரை :

பெருமான்பால் பேரன்பு பூண்டு, தவம்புரியும் கன்னியாராம் சங்கிலியார், பூதங்கட்கு எல்லாம் தலைவனாய சிவ பெருமானின் திருக்கோயிலில், காலம் தோறும் சென்று வணங்கி, நீதி முறைமையில் ஏதும் தவறாது, தமக்கு உற்ற பணியினைச் செய்திடற்கு மாலை கட்டும் அத்திருமண்டபத்துத் திரை சூழ்ந்த ஒருபுறத்துத் தாம் இருந்து,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 223

பண்டு கயிலைத் திருமலையில்
செய்யும் பணியின் பான்மைமனம்
கொண்ட உணர்வு தலைநிற்பக்
குலவு மலர்மென் கொடியனையார்
வண்டு மருவுந் திருமலர்மென்
மாலை காலங் களுக்கேற்ப
அண்டர் பெருமான் முடிச்சாத்த
அமைத்து வணங்கி யமருநாள்.

பொழிப்புரை :

முன்பு திருக்கயிலையில் செய்துவந்த பணியினை, அப் பான்மையால் மனம்கொண்ட உணர்வே தலைநிற்ப, விளங்கிடும் மெல்லிய பூங்கொடி போலும் வனப்புடைய சங்கிலியார், வண்டுகள் மொய்த்திடும் திருவுடைய மலர்கோத்த மிருதுவாய நல்ல மாலை களை, அவ்வக் காலங்களின் விதிமுறைக்கு ஏற்ற பண்பினால், தேவர்களுக்குத் தலைவனாய சிவபெருமானின் திருமுடிமேல் சாத் திடத் தொடுத்துக் கொடுத்து, வணங்கி, அங்குக் கன்னிமாடத்து வாழ்ந்து வரும் நாள்களில்,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 224

அந்தி வண்ணத் தொருவர்திரு
வருளால் வந்த ஆரூரர்
கந்த மாலைச் சங்கிலியார்
தம்மைக் காதல் மணம்புணர
வந்த பருவ மாதலால்
வகுத்த தன்மை வழுவாத
முந்தை விதியால் வந்தொருநாள்
முதல்வர் கோயி லுட்புகுந்தார்.

பொழிப்புரை :

மாலைக் காலத்துச் செக்கர் வானத்தின் நிறத்தினை ஒத்த, ஒப்பற்றவராய பெருமானாரின் திருவருளால் இவ்வுலகில் வந்த நம்பிகள், நறுமணம் மிக்க மாலையைத் தொடுக்கும் சங்கிலியாரைக் காதல் மணஞ் செய்திட வந்த பருவம் இதுபொழுதாக அமைதலினால், வகுத்தான் வகுத்த வழி அமையும் முன்னைய விதியின் பயனாக ஒருநாள், சிவபெருமானின் திருக்கோயிலுள் புகுந்தார்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 225

அண்டர் பெருமான் அந்தணராய்
ஆண்ட நம்பி யங்கணரைப்
பண்டை முறைமை யாற்பணிந்து
பாடிப் பரவிப் புறம்போந்து
தொண்டு செய்வார் திருத்தொழில்கள்
கண்டு தொழுது செல்கின்றார்
புண்ட ரீகத் தடம்நிகர்பூந்
திருமண் டபத்தி னுட்புகுந்தார்.

பொழிப்புரை :

தேவாதி தேவராய பெருமானார், அந்தணராய வடிவுகொண்டு ஆட்கொள்ளப் பெற்ற நம்பியாரூரர், நெற்றியில் கண்கொண்ட அப் பெருமானை, முன்னைய நாளெல்லாம் வணங்கி டும் முறைமையால் வணங்கி, வெளியே வந்து, ஆங்குத் தொண்டு செய்து வரும் அடியார்களது திருவுடைய தொழில்கண்டு பணிந்து செல்கின் றவர், தாமரை மலர் நிறைந்த பொய்கையை ஒத்த, வனப்புடைய மலர்களைத் தொடுக்கும் திருமண்டபத்தின் உள்ளாகச் சென்றார்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 226

அன்பு நாரா அஞ்செழுத்து
நெஞ்சு தொடுக்க அலர்தொடுத்தே
என்புள் ளுருகும் அடியாரைத்
தொழுது நீங்கி வேறிடத்து
முன்பு போலத் திரைநீக்கி
முதல்வர் சாத்தும் பணிகொடுத்து
மின்போல் மறையுஞ் சங்கிலியார்
தம்மை விதியாற் கண்ணுற்றார்.

பொழிப்புரை :

அன்பே நாராக ஐந்தெழுத்தை நெஞ்சம் தொடுக்க வும், அத்தன்மையால் தம் கைகளால் மலர்களைத் தொடுத்தே, என்பும் உள் உருக மனமுருகி வரும் அடியவர்களை நம்பிகள் கண்டு தொழுது நீங்கும்பொழுது, முன்பு போலத் திரையினை நீக்கித் தம் பணியில் நின்று, தொடுத்த பூமாலைகளைக் கொடுத்து மின்னல் எனத் தோன்றி மறையும் சங்கிலியாரைப் பண்டை விதியால் கண்ணுற்றார்.

குறிப்புரை :

அகத்தும் புறத்தும் இறைவற்கென மாலை தொடுத்து, என்பும் உருக வழிபட்டுவரும் அடியவர்களைச் சுந்தரர், தொழுது நீங்கும் அளவில், தாம் இருந்த இடத்திலுள்ள திரையை நீக்கிக் கொண்டு, கட்டிய மாலைகளை இறைவற்குக் கொடுத்து, மின்னல் என மறையும் சங்கிலியாரைக் கண்ணுற்றார் என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 227

கோவா முத்தும் சுரும்பேறாக்
கொழுமென் முகையு மனையாரைச்
சேவார் கொடியார் திருத்தொண்டர்
கண்ட போது சிந்தைநிறை
காவா தவர்பால் போய்வீழத்
தம்பாற் காம னார் துரந்த
பூவா ளிகள்வந் துறவீழத்
தரியார் புறமே போந்துரைப்பார்.

பொழிப்புரை :

கோக்கப்படாத முத்தும், வண்டுகள் மொய்த்திடாத நல்ல மிருதுவாய அரும்பும் ஒத்த சங்கிலியாரை, விடைக் கொடியை உடைய சிவபெருமானின் திருத்தொண்டரான நம்பிகள் கண்டபோது, தமது நிறையைக் காக்க இயலாது அம்மையார்பால் காமஉணர்வின் வயப்பட்டுச் சிந்தை சென்றிட, அதுபொழுது மன்மதன் சொரிந்த மலர் அம்புகள் மேன்மேல் வந்து வீழ்ந்திடத் தரியாது வெளியே வந்து சொல்வாராகி,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 228

இன்ன பரிசென் றறிவரிதால்
ஈங்கோர் மருங்கு திரைக்குள்ளால்
பொன்னும் மணியும் மலர்ந்தவொளி
யமுதில் அளாவிப் புதியமதி
தன்னுள் நீர்மை யால்குழைத்துச்
சமைத்த மின்னுக் கொடிபோல்வாள்
என்னை யுள்ளந் திரிவித்தாள்
யார்கொல் என்றங் கியம்புதலும்.

பொழிப்புரை :

இஃது இன்ன தன்மை என்று சொல்ல முடிய வில்லை; இவ்விடத்து ஒருபக்கத்துத் திரைக்குள்ளாகப் பொன்னும் முத்தும் மலர்ந்த ஒளி, அமுதில் அளைந்து சேர்த்துப் பின்னர் அவ் வொளியமுதினைப் புதிய சந்திரனில் உள்ள நிலவாய அமுதின் தன் மையிற் குழைத்து, உருச்செய்த மின்னுக் கொடிபோலும் அப்பெண், என் மனத்தை மாற்றினள். இப்பெண்தான் யார் எனக் கூறலும்,

குறிப்புரை :

இயம்பல் - தம் வாய்விட்டுக் கூறல். அவ்வளவில் அருளு கின்றார் அவரைப்பற்றிக் கூறலாயினர். நயத்தக்க நாகரிகம் இது.

பண் :

பாடல் எண் : 229

அருகு நின்றார் விளம்புவார்
அவர்தாம் நங்கை சங்கிலியார்
பெருகு தவத்தால் ஈசர்பணி
பேணுங் கன்னி யாரென்ன
இருவ ராலிப் பிறவியைஎம்
பெருமான் அருளால் எய்துவித்தார்
மருவும் பரவை ஒருத்திஇவள்
மற்றை யவளாம் எனமருண்டார்.

பொழிப்புரை :

அருகே நின்றவர்கள் சொல்லுவார்களாய், அவர் தான் நங்கையாகிய சங்கிலியார் என்பவர், பெருகும் தவமுடையவர், ஈசர் பணி பேணும் கன்னியர் என்னலும், அது கேட்டருளிய நம்பிகள், இருவரால் இப்பிறவியை எம்பெருமான் அடைய வைத்தார், அவர்க ளுள் முன் அணைந்த பரவை ஒருத்தி, சங்கிலியாய இவள் மற்றைய வளாம் என எண்ணி மனம் மருட்சியடைந்தனர்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 230

மின்னார் சடையார் தமக்காளாம்
விதியால் வாழும் எனைவருத்தித்
தன்னா ரருளால் வரும்பேறு
தவத்தால் அணையா வகைதடுத்தே
என்னா ருயிரும் எழின்மலரும்
கூடப் பிணைக்கும் இவள்தன்னைப்
பொன்னார் இதழி முடியார்பால்
பெறுவே னென்று போய்ப்புக்கார்.

பொழிப்புரை :

மின் அனைய சடையையுடைய பெருமானுக்கு ஆளாகும் விதியால் வாழும் எனை வருத்தி, இறைவனது அருளால் வரும் பேற்றைத் தனது தவத்தால் என்பால் அணையாவகை தடுத்து, எனது அரிய உயிரையும் அழகிய மலரையும் சேரப் பிணைக்கும் இவள் தன்னை, பொன்னார்ந்த மலர்க் கொன்றை முடியுடைய பெரு மான்பால் விண்ணப்பித்துப் பெறுவேன் என நினைந்து இறைவன் கோயிலினுட் சென்று புகுந்தார்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 231

மலர்மே லயனும் நெடுமாலும்
வானும் நிலனுங் கிளைத்தறியா
நிலவு மலருங் திருமுடியும்
நீடுங் கழலும் உடையாரை
உலக மெல்லாந் தாமுடையார்
ஆயும் ஒற்றி யூரமர்ந்த
இலகு சோதிப் பரம்பொருளை
இறைஞ்சி முன்னின் றேத்துவார்.

பொழிப்புரை :

தாமரை மலர்மேல் இருந்த அயனும், நெடிய உருவுடைய திருமாலும் வானத்திலும் நிலத்தினுள்ளும் ஊடுருவிச் சென்றும் அறிய முடியாத இளம்பிறை சூடிய திருமுடியையும் நீண்ட திருவடிகளையும் உடைய சிவபிரானை, உலகம் யாவையும் தாமே உடையவராகி இருந்தும், திருவொற்றியூர்த் திருப்பதியில் அமர்ந்து என்றும் உறைகின்ற ஒளிப்பிழம்பாய சோதியாம் முதல்பொருளை வணங்கித் திருமுன்பு நின்று போற்றுவாராய்,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 232

மங்கை யொருபால் மகிழந்ததுவும்
அன்றி மணிநீண் முடியின்கண்
கங்கை தன்னைக் கரந்தருளும்
காதலுடையீர் அடியேனுக்
கிங்கு நுமக்குத் திருமாலை
தொடுத் தெனுள்ளத் தொடையவிழ்த்த
திங்கள் வதனச் சங்கிலியைத்
தந்தென் வருத்தந் தீருமென.

பொழிப்புரை :

மலைமகளை ஒருபாகத்து வைத்து மகிழ்ந்ததும் அல்லாமல், உமது அழகிய நீண்ட திருமுடியினிடத்துக் கங்கை என் னும் பெண்ணையும் மறைத்து வைத்திருக்கும் காதல் உடையீர்! இங்கு உமக்குத் திருவுடைய பூமாலை தொடுத்து என் உள்ளத்தின் நிறை யையும் அவிழச் செய்த முழுமதியென விளங்கும் சங்கிலியாரைத் தந்தருளி, எனக்குற்ற வருத்தத்தை நீக்குவீராக என்னலும்,

குறிப்புரை :

முன் ஒரு பெண்ணை மணந்திருக்கும் நீ, பின் ஒரு பெண்ணை வேண்டுவது ஏன்? என்னும் வினா எழாதவாறு பெரு மானை விளித்துக் கூறியருளியது எண்ணி மகிழ்தற்குரியது. வெல்லும் சொல் இன்மையறிந்து கூறிய விளியழகே அழகாம்.

பண் :

பாடல் எண் : 233

அண்ண லார்முன் பலவும்அவர்
அறிய வுணர்த்திப் புறத்தணைந்தே
எண்ண மெல்லாம் உமக்கடிமை
யாமா றெண்ணும் என்னெஞ்சில்
திண்ண மெல்லா முடைவித்தாள்
செய்வ தொன்று மறியேன் யான்
தண்ணி லாமின் னொளிர்பவளச்
சடையீர் அருளும் எனத்தளர்வார்.

பொழிப்புரை :

இறைவனின் திருமுன்பு நின்று இனிய பல கூற்று களால் அவர் அறியும்படி உணர்த்தி, வெளியே வந்து, என் எண்ணம் எல்லாம் உமக்கு அடிமையாமாறு எண்ணும் எனது நெஞ்சினில் அதன் திண்மை எல்லாவற்றையும் உடையச் செய்தாள். இனிச் செய்வதொன்றும் அறியேன் நான், குளிர்ந்த நிலவு ஒளிரும் பவளம் போலும் சடையை உடையீர்! நும் அடியேற்கு அருளும் எனக் கூறித் தளர்வாராய்,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 234

மதிவாள் முடியார் மகிழ்கோயிற்
புறத்தோர் மருங்கு வந்திருப்பக்
கதிரோன் மேலைக் கடல்காண
மாலைக் கடலைக் கண்டயர்வார்
முதிரா முலையார் தம்மைமணம்
புணர்க்க வேண்டி முளரிவளை
நிதியா னண்பர் தமக்கருளும்
நண்பால் நினைந்து நினைந்தழிய.

பொழிப்புரை :

இளம்பிறை தவழும் திருச்சடையை உடைய பெருமான் மகிழ்கின்ற கோயிலின் வெளியே ஒருபுறமாக நம்பிகள் இருப்பக் கதிரவன் மேலைக் கடலிற் செல்லும் காலமாகிய மாலைக் காலம் வந்துற, அதுகண்டு மயங்குவார், முதிராத முலையையுடைய சங்கிலியாரைத் தமக்குத் திருமணம் செய்ய வேண்டிப் பதுமநிதி சங்கநிதி எனும் இரண்டையும் உடைமையாகக் கொண்டு நிற்கும் குபேரனை நட்பாகக் கொண்டிருக்கும் பெருமான் தமக்குத் தோழன் என்பதை நினைந்து நினைந்து மனம் அழிய,

குறிப்புரை :

இறைவன் குபேரனையன்றித் தம்மையும் தோழனாகக் கொண்டிருக்கும் நட்பு உரிமையால் தமக்கு உதவ வேண்டி மனம் அழிந்தவராயினர். `நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு உப்பாதல் சான்றோர் கடன்\' (குறள், 802) என்பர் திருவள்ளுவர். அத்தகைய உரிமையும் தகுதியும் பற்றியே இவ்வகையானும் உதவ வேண்டுகின்றார் நம்பிகள்.

பண் :

பாடல் எண் : 235

உம்ப ருய்ய உலகுய்ய
ஓல வேலை விடமுண்ட
தம்பி ரானார் வன்தொண்டர்
தம்பா லெய்திச் சங்கிலியை
இம்ப ருலகில் யாவருக்கும்
எய்த வொண்ணா இருந்தவத்துக்
கொம்பை உனக்குத் தருகின்றோம்
கொண்ட கவலை ஒழிகென்ன.

பொழிப்புரை :

தேவர் உலகும் இவ்வுலகும் உய்ய நஞ்சுண்டருளிய இறைவர் நம்பிகள்பால் வந்தருளி, அவரை நோக்கி, இந்த உலகில் யாவரும் அடைய முடியாத பெருந் தவத்தின் பூங்கொடியாம் சங்கி லியை உனக்குத் தருகின்றோம்; நீ மனத்தில் கொண்ட கவலையை ஒழிவாயாக! என்னலும்,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 236

அன்று வெண்ணெய் நல்லூரில்
வலிய ஆண்டு கொண்டருளி
ஒன்று மறியா நாயேனுக்
குறுதி யளித்தீர் உயிர்காக்க
இன்றும் இவளை மணம்புணர்க்க
ஏன்று நின்றீர் எனப்போற்றி
மன்றல் மலர்ச்சே வடியிணைக்கீழ்
வணங்கி மகிழ்ந்தார் வன்தொண்டர்.

பொழிப்புரை :

அன்று திருவெண்ணெய்நல்லூரில் வலியவந்து ஆட்கொண்டருளி ஒன்றும் அறியாத நாயேனுக்கு உறுதி வழங்கி யருளினீர்! எனது உயிரைக் காத்திட இன்றும் இச்சங்கிலியைத் திரு மணம் செய்து வைத்தற்கு ஏற்றருளினீர்! என்று பெருமானைப் போற்றி அவர்தம் மணம் கமழும் மலர்ச் சேவடிகளை வணங்கி மகிழ்வுற்றார்.

குறிப்புரை :

இவ் ஆறு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 237

ஆண்டு கொண்ட அந்தணனார்
அவருக் கருளிக் கருணையினால்
நீண்ட கங்குல் யாமத்து
நீங்கி வானில் நிறைமதியந்
தீண்டு கன்னி மாடத்துச்
சென்று திகழ்சங் கிலியாராம்
தூண்டு சோதி விளக்கனையார்
தம்பால் கனவில் தோன்றினார்.

பொழிப்புரை :

நம்பிகளை ஆண்டு கொண்ட அறவாழி அந்தண னாராகிய இறைவரும் அவருக்கு அருள் புரிந்து, கருணையுடன், நீண்டு பெருகிய இரவின் யாமத்து அவ்விடத்தினின்றும் நீங்கி, வானில் நிறைந்த திங்களஞ் செல்வனும் தீண்டும் உயர்வுடைய கன்னிமாடத் துச் சென்றருளி, அவ்விடத்துத் திகழும் சங்கிலியார் எனப்படும் தூண்டும் ஒளி விளக்கினை ஒத்த அம்மையார் பாலாகக் கனவில் தோன்றினார்.

குறிப்புரை :

தூண்டுசோதி விளக்கு அனையார் - இறையருளால் உந்தப்பட்டு ஒளிவிளங்க வாழ்தலின் இனியும் வாழ இருத்தலின், இங்ஙனம் கூறினார்.

பண் :

பாடல் எண் : 238

தோற்றும் பொழுதிற் சங்கிலியார்
தொழுது விழுந்து பரவசமாய்
ஆற்ற அன்பு பொங்கியெழுந்
தடியே னுய்ய எழுந் தருளும்
பேற்றுக் கென்யான் செய்வதெனப்
பெரிய கருணை பொழிந்தனைய
நீற்றுக் கோல வேதியரும்
நேர்நின் றருளிச் செய்கின்றார்.

பொழிப்புரை :

இறைவர், சங்கிலியார் கனவில் தோன்றிய பொழுது, சங்கிலியார் தொழுது விழுந்து தம்வயமிழந்து மிகவும் அன்பு பொங்கி எழுந்து, `ஐயனே! அடியேன் உய்ய எழுந்தருளி வந்த பேற்றிற்கு என்ன கைம்மாறு செய்வது\' என்னலும், அதுபொழுது பெரிய கருணையையே மேலே பொழிந்தாற்போல் விளங்கும் திரு நீற்றின் திருமேனியைக் கொண்ட சிறந்த அந்தணரும் நேராக நின்று அருள் புரிவாராய்,

குறிப்புரை :

திருநீறு கருணையின் வண்ணமாதல், `பராவணமாவது நீறு\' என்பதாலும் அறியப்படும்.

பண் :

பாடல் எண் : 239

சாருந் தவத்துச் சங்கிலிகேள்
சால என்பா லன்புடையான்
மேரு வரையின் மேம்பட்ட
தவத்தான் வெண்ணெய் நல்லூரில்
யாரு மறிய யான்ஆள
உரியான் உன்னை யெனையிரந்தான்
வார்கொள் முலையாய் நீயவனை
மணத்தால் அணைவாய் மகிழ்ந்தென்றார்.

பொழிப்புரை :

`எம்பால் சாரும் தவமுடைய சங்கிலியே! கேள். மிகவும் என்பால் அன்புடையன். மேருமலையிலும் மேம்பட்ட தவமுடையவன். திருவெண்ணெய்நல்லூரில் யாரும் அறிய யான் ஆண்டுகொள்ள உரிமையுடையவன். உன்னை வேண்டி என்னை இரந்தான். கச்சணிந்த மார்பகத்தை உடையவளே! நீ அவனைத் திருமணம் புரிந்து மகிழ்ந்து வாழ்வாயாக! என்றருளிச் செய்தனர்.

குறிப்புரை :

தவம் பெற்ற பெருவாழ்வைச் சங்கிலியாருக்கும், நம்பி களுக்கும் இயைத்துக் கூறியது, கயிலையில் தன்பாலும், நிலவுலகில் அடியவர்பாலும் பூண்டு நிற்கும் தவம்பற்றியாம். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 240

ஆதி தேவர் முன்னின்றங்
கருளிச் செய்த பொழுதின்கண்
மாத ரார்சங் கிலியாரும்
மாலும் மயனு மறிவரிய
சீத மலர்த்தா மரையடிக்கீழ்ச்
சேர்ந்து வீழ்ந்து செந்நின்று
வேத முதல்வர் முன்னடுக்கம்
எய்தித் தொழுது விளம்புவார்.

பொழிப்புரை :

மூலகாரணமாய் நிற்கும் முதல்வனார் அருளிச் செய்த அளவில், சங்கிலியாரும், மாலும் அயனும் அறிதற்கரிய குளிர்ந்த மலராய தாமரை போலும் திருவடிக்கீழ்ப் பொருந்த வீழ்ந்து, நேர் நின்று, வேதமுதல்வராய அவர் முன்பு நடுக்கமடைந்து தொழுது சொல்வாராகி,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 241

எம்பி ரானே நீரருளிச்
செய்தார்க் குரியேன் யான்இமையோர்
தம்பி ரானே அருள்தலைமேற்
கொண்டேன் தக்க விதிமணத்தால்
நம்பி யாரூ ரருக்கென்னை
நல்கி யருளும் பொழுதிமயக்
கொம்பி னாகங் கொண்டீர்க்குக்
கூறுந் திறமொன் றுளதென்பார்.

பொழிப்புரை :

எம்பெருமானே! நீர் அருளிச் செய்த அவருக்கே உரியவள் நான். தேவர்களின் தலைவனே! உமது அருளிப்பாட்டை என் தலைமேற் கொண்டேன். தக்க விதியுடைய திருமணத்தால் நம்பிகளுக்கு என்னைக் கொடுத்தருளும்பொழுது, மலையரையன் மகளாராய உமையம்மையாரை ஒருபாலாகக் கொண்டிருக்கும் பெருமானுக்கு விண்ணப்பித்துக் கொள்வதும் ஒன்று உண்டு என்பாராய்,

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 242

பின்னும் பின்னல் முடியார்முன்
பெருக நாணித் தொழுரைப்பார்
மன்னுந் திருவா ரூரின்கண்
அவர்தாம் மிகவும் மகிழ்ந்துறைவ
தென்னுந் தன்மை யறிந்தருளும்
எம்பி ராட்டி திருமுலைதோய்
மின்னும் புரிநூல் அணிமார்பீர்
என்றார் குன்றா விளக்கனையார்.

பொழிப்புரை :

இணைந்துவிளங்கும் புரிபுன் சடையையுடைய இறைவனை முன்னாகப் பெரிதும் நாணம் பெருகத் தொழுது சொல்வா ராய், விளங்கும் திருவாரூரின்கண் அவர் மிகவும் மகிழ்ந்து தங்குவது என்னும் தன்மையைத் திருவுளங் கொண்டு, எம்பெருமாட்டியின் திரு முலை தோய்ந்த, மின்னும் முப்புரி நூலணிந்த மார்புடையீரே! அதற் கேற்ப அருள் புரிதல் வேண்டும் என்றார், விளக்கினை ஒத்த சங்கிலியார்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 243

மற்றவர்தம் உரைகொண்டு
வன்தொண்டர் நிலைமையினை
ஒற்றிநகர் அமர்ந்தபிரான்
உணர்ந்தருளி யுரைசெய்வார்
பொற்றொடியா யுனையிகந்து
போகாமைக் கொருசபதம்
அற்றமுறு நிலைமையினால்
அவன்செய்வா னெனவருளி.

பொழிப்புரை :

மற்று அச்சங்கிலியார்தம் விண்ணப்பத்தை ஏற்றருளி, நம்பிகளின் நிலையைத் திருவொற்றியூர் நகர் அமர்ந்த பெருமான் உணர்ந்தருளி உரைப்பாராய், பொன்னாலாய வளையல் அணிந்தவளே! உன்னை விடுத்துப் போகாமைக்குரியதொரு சூளு ரையை மறைவாகப் பொருந்திய நிலையில் அவனும் செய்து தரு வான் என அருள் புரிந்து,

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 244

வேயனைய தோளியார்
பால்நின்று மீண்டருளித்
தூயமனம் மகிழ்ந்திருந்த
தோழனார் பால்அணைந்து
நீஅவளை மணம்புணரும்
நிலையுரைத்தோம் அதற்கவள்பால்
ஆயதொரு குறைஉன்னால்
அமைப்பதுள தென்றருள.

பொழிப்புரை :

மூங்கிலின் வனப்பினை ஒத்த தோளுடைய சங்கிலி யாரிடத்தினின்றும் மீண்டருளித் திரும்பவும் தூயதான தனது மனத் தகத்து மகிழ்ந்திருக்கின்ற தோழர் சுந்தரனார்பால் சென்று, அவரை நோக்கி அவளை மணஞ் செய்திடும் நிலைமையை நாம் சொன் னோம், அதற்கு அவள்பாலாக நின்றதொரு குறையுளது, அது உன்னால் முடித்துக் கொடுக்க வேண்டியதாகும் எனப் பெருமான் மொழிதலும்,

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 245

வன்தொண்டர் மனங்களித்து
வணங்கிஅடி யேன்செய்ய
நின்றகுறை யாதென்ன
நீயவளை மணம்புணர்தற்
கொன்றியுட னேநிகழ
ஒருசபத மவள்முன்பு
சென்றுகிடைத் திவ்விரவே
செய்கவென வருள்செய்தார்.

பொழிப்புரை :

அதுகேட்ட வன்தொண்டராய நம்பிகளும் பெரிதும் மனம் மகிழ்ந்து பணிந்து, அடியேன் செயத்தக்கதொரு குறை யாது? எனலும், பெருமானும் அவரை நோக்கி, நீ அவளைத் திரு மணம் செய்தற்கு, அவளுடன் என்றும் பிரியாது உடன் உறைதற்கான சூளுரையொன்றை இன்றிரவே அவள் முன்பு செய்திடுவாய் என்று அருள் புரிந்தார்.

குறிப்புரை :

சென்று கிடைத்து என்பது விரைந்து சென்று அவளை யடைந்து எனும் பொருள்பட நின்றது. இம்மூன்று பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 246

என்செய்தால் இதுமுடியும்
ஆதுசெய்வன் யானிதற்கு
மின்செய்த புரிசடையீர்
அருள்பெறுதல் வேண்டுமென
முன்செய்த முறுவலுடன்
முதல்வரவர் முகநோக்கி
உன்செய்கை தனக்கினியென்
வேண்டுவதென் றுரைத்தருள.

பொழிப்புரை :

எம்பெருமானே! என்செய்தால் இத்திருமணம் இனிது நிகழ்வுறுமோ அதனைச் செய்வேன் யான், ஆனால் அவ்வண் ணம் செய்திடற்கு மின் ஒளிரும் புரிபுன் சடையீர்! உமது அருள் பெறு தல் வேண்டும் எனலும், அதனைத் திருவுளம் கொண்டு, புன்முறுவ லுடன் அவரது முகத்தை நோக்கி உனது செயலுக்கு இனி நாம் என் செய்திடல் வேண்டும்? எனப் பெருமான் கேட்டருளலும்,

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 247

வம்பணிமென் முலையவர்க்கு
மனங்கொடுத்த வன்தொண்டர்
நம்பரிவர் பிறபதியும்
நயந்தகோ லஞ்சென்று
கும்பிடவே கடவேனுக்
கிதுவிலக்கா மெனுங்குறிப்பால்
தம்பெருமான் றிருமுன்பு
தாம்வேண்டுங் குறையிரப்பார்.

பொழிப்புரை :

அதுபொழுது கச்சணிந்த மார்பகத்தையுடைய சங்கிலியாரிடத்து மனங்கொடுத்த நம்பிகள், இங்கிருக்கும் எம்பெரு மானின் இத்திருப்பதியல்லாது, பிற பிற திருப்பதிகளிலும் இத்திருக் கோலத்தை வழிபட வேண்டும் எனும் உளங்கொண்ட அடியேனுக்கு இச்சூளுரை தடையாகும் என நினைந்த குறிப்பினால், தம்மை ஆளாகவுடைய பெருமானின் திருமுன்பு தாம் வேண்டுதற்குரிய குறையினைக் கூறி இரந்திடுவாராகி,

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 248

சங்கரர்தாள் பணிந்திருந்து
தமிழ்வேந்தர் மொழிகின்றார்
மங்கையவள் தனைப்பிரியா
வகைசபதஞ் செய்வதனுக்
கங்கவளோ டியான்வந்தால்
அப்பொழுது கோயில்விடத்
தங்குமிடந் திருமகிழ்க்கீழ்க்
கொளவேண்டு மெனத்தாழ்ந்தார்.

பொழிப்புரை :

இன்பத்தை வழங்கிவரும் பெருமானுடைய திருவடிகளைப் பணிந்து, அவர் திருமுன்பிருந்து, தமிழ் வேந்தராய சுந்தரர் மொழிவாராய், எம்பிரானே! சங்கிலியாகிய அவள்தனை நான் திருமணம் செய்து பிரியாதிருத்தற்குரிய சூளுரையைச் செய்வ தற்கு அங்கு அவளுடன் திருமுன்பு வந்தால், அதுபொழுது தாங்கள் கோயிலை விடுத்து நீங்கித் தங்குகின்ற இடம் திருவுடைய மகிழ மரத்தின் கீழாக அமையவேண்டும் என வேண்டி விண்ணப்பித்துக் கொண்டார்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 249

தம்பிரான் தோழரவர்
தாம்வேண்டிக் கொண்டருள
உம்பர்நா யகருமதற்
குடன்பாடு செய்வாராய்
நம்பிநீ சொன்னபடி
நாஞ்செய்தும் என்றருள
எம்பிரா னேயரிய
தினியெனக்கென் னெனவேத்தி.

பொழிப்புரை :

தம்பிரான் தோழராகிய சுந்தரர் இவ்வண்ணம் இரந்து வேண்டிக் கொண்டருளலும், தேவர்கட்குத் தலைவராய சிவ பெருமானும் அதற்கு உடன்பட்டுச் சுந்தரனே! நீ சொன்னபடி நாம் செய்வோம் என்று அருளலும், அதனைக் கேட்டருளிய சுந்தரரும், எம்பிரானே! இனி எனக்கு அரியதொரு செயல் எதுவாகும்? (எதுவுமின்று) எனப் போற்றி செய்து,

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 250

அஞ்சலிசென் னியில்மன்ன
அருள்பெற்றுப் புறம்போதச்
செஞ்சடையார் அவர்மாட்டுத்
திருவிளையாட் டினைமகிழ்ந்தோ
வஞ்சியிடைச் சங்கிலியார்
வழியடிமைப் பெருமையோ
துஞ்சிருள்மீ ளவும்அணைந்தார்
அவர்க்குறுதி சொல்லுவார்.

பொழிப்புரை :

இரு கைகளும் கூப்பியவாறு உச்சியில் விளங்க எம்பிரானிடம் இவ்வாறாக அருள்பெற்று வெளியே வந்திடலும், அது பொழுது செஞ்சடையையுடைய சிவபெருமானும், தம் தோழரிடத்து ஒரு திருவிளையாடல் புரிதற்கு மகிழ்ந்தோ! அல்லது வஞ்சிக்கொடி போன்ற சிற்றிடையினையுடைய சங்கிலியார் வழிவழியாகச் செய்து வரும் அடிமையின் பெருமையை எண்ணியோ! நாம் அறியோம்! உயிர்கள் அனைத்தும் துயில்கொள்ளும் இரவிலே, மீண்டும் உறுதி சொல்வதற்குச் சங்கிலியார்பால் சென்றார்.

குறிப்புரை :

மன்னுயிரெல்லாம் துயில அருள் செய்யும் பெருமான் தான் துயிலாது அவ்வுயிர்களுக்கு அருள் செய்தலிலேயே திருவுளம் கொண்டிருத்தலை அறிவிக்கவே, `துஞ்சிருள் மீளவும் அணைந்தார்\' என்றார். `உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றி\' (தி.6 ப.55 பா.11) என நினைந்துருகுவதல்லது அப்பெருமானுக்கு உயிர்களா கிய நாம் என் செய்ய வல்லோம்? இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 251

சங்கிலியார் தம்மருங்கு
முன்புபோற் சார்ந்தருளி
நங்கையுனக் காரூரன்
நயந்துசூ ளுறக்கடவன்
அங்கு நமக் கெதிர்செய்யும்
அதற்குநீ யிசையாதே
கொங்கலர்பூ மகிழின்கீழ்க்
கொள்கவெனக் குறித்தருள.

பொழிப்புரை :

சங்கிலியாரிடத்து முன்பு போலச் சென்றருளி, பெருமான் அவரை நோக்கிப், பெண்ணே! உனக்குச் சுந்தரன் சூளுரை செய்வன், அச்சூளுரையை நம் முன்பு செய்திடற்கு இசைவு கொள் ளாது, நறுமணம் மிக்க மலர்களையுடைய மகிழ மரத்தின்கீழ்ச் செய் தற்கு ஏற்பாயாக\' எனக் குறித்தருளலும்,

குறிப்புரை :

`பொன்னவிலும் கொன்றையினாய், போய் மகிழ்க்கீழ் இரு என்று, சொன்ன எனைக் காணாமே சூளுறவு மகிழ்க்கீழே, என்ன வல்ல பெருமானே\' எனவரும் நம்பிகள் கூற்றே இந்நிகழ்விற்கு அடித்தளமாகும்.

பண் :

பாடல் எண் : 252

மற்றவருங் கைகுவித்து
மாலயனுக் கறிவரியீர்
அற்றமெனக் கருள்புரிந்த
அதனில்அடி யேனாகப்
பெற்றதியான் எனக்கண்கள்
பெருந்தாரை பொழிந்திழிய
வெற்றிமழ விடையார்தம்
சேவடிக்கீழ் வீழ்ந்தெழுந்தார்.

பொழிப்புரை :

: அதுகேட்ட சங்கிலியாரும் வணங்கி, எம்பெருமா னைக் கைகூப்பித் தொழுது, மாலும் அயனும் அறிதற்கரியீர்! பிறர்க்குக் கூறற்கரிய உண்மை நிலையை எனக்கு அருள்புரிந்த அத்தன்மையால், பெருமானுக்கு அடியேனாகப் பெற்றேன் யான் என்று கூறிக் கண்க ளில் பெருந் தாரையாக நீர்வழிந்திழிய, வெற்றி பொருந்திய இளைய விடையையுடைய பெருமான் திருவடிக் கீழ்ப் பணிந்து வீழ்ந்து எழுந் தார்.

குறிப்புரை :

அற்றம் - பிறர்க்குக் கூறற்கரிய மறைவான செய்தி: அந்தரங்கம், இரகசியம் என்பனவும் அன்ன. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 253

தையலார் தமக்கருளிச்
சடாமகுடர் எழுந்தருள
எய்தியபோ ததிசயத்தால்
உணர்ந்தெழுந்தவ் விரவின்கண்
செய்யசடை யாரருளின்
திறம்நினைந்தே கண்துயிலார்
ஐயமுடன் அருகுதுயில்
சேடியரை அணைந்தெழுப்பி.

பொழிப்புரை :

சங்கிலியாருக்கு அருள்புரிந்து சடைமுடியுடைய பெருமான் எழுந்தருளிச் சென்றிடலும், இந்நிகழ்ச்சி கனவில் நிகழப் பெற்றபோதும் நனவுபோல் உணர்ந்தெழுந்த சங்கிலியார் அவ்விர வின்கண்ணே செம்மையான சடையுடைய பெருமானது திருவருளின் திறத்தை நினைந்து, மேலும் கண் துயிலாராகி, மனத்தில் பெரும் ஐயப்பாட்டுடன், அருகே துயின்ற தோழியரை அணைந்து அவரை எழுப்பிடலும்,

குறிப்புரை :

ஐயம் - தாம் கண்ட கனவு நிகழ்ச்சியின்கண் கொண்ட ஐயம். இறைவன் தன்பொருட்டாக ஒருமுறைக்கு இருமுறை எழுந்த ருளி வந்ததும், தனக்கு உற்றதுறைத்தும், உறுவது கூறியும் செய்த அருளிப்பாடு எவரும் பெறுதற்கரிது ஆதலின், அதன்கண் ஐயம் எழலாயிற்று.

பண் :

பாடல் எண் : 254

நீங்குதுயிற் பாங்கியர்க்கு
நீங்கல்எழுத் தறியுமவர்
தாங்கனவில் எழுந்தருளித்
தமக்கருளிச் செய்ததெலாம்
பாங்கறிய மொழியஅவர்
பயத்தினுடன் அதிசயமும்
தாங்குமகிழ்ச் சியும்எய்தச்
சங்கிலியார் தமைப்பணிந்தார்.

பொழிப்புரை :

துயில் நீங்கிய தோழியர்க்கெல்லாம் ஏட்டில் உள்ள வரியைநீக்கி எழுத்தறிய வல்ல திருவொற்றியூர்ப் பெருமான், தமது கனவில் அருளிச் செய்த இவ்வருளிப் பாட்டை யெல்லாம் அவர்கள் பாங்குடன் அறியுமாறு மொழிந்திடலும், அதுகேட்ட தோழியர்கள் அச்சமும் வியப்பும் கொண்டு தம்மை அறியாது பெற்ற மகிழ்ச்சியால் சங்கிலியாரைப் பணிந்தார்கள்.

குறிப்புரை :

இறைவர் அருளிய மறைவாகக் கொள்ளத்தக்க செய்தி யைத் தோழியரிடம் கூறியது பொருந்துமோ? எனில், பொருந்தும்.
தோழியரும் தானும் உடல் வகையால் பலராக இருப்பினும், உணர்வு வகையால் ஒன்றிய மனமுடையர்களாகவே இருந்தலினா லாம்.
`இருவரே மெய்வடிவில் ஏந்திகழ் நல்லார், ஒருவரே தம்மில் உயிர்\' எனவரும் கூற்றும் காண்க. (தண்டியலங்காரம் - மேற்கோள்).
இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 255

சேயிழையார் திருப்பள்ளி
யெழுச்சிக்கு மலர்தொடுக்கும்
தூயபணிப் பொழுதாகத்
தொழில்புரிவா ருடன்போதத்
கோயிலின்முன் காலமது
வாகவே குறித்தணைந்தார்
ஆயசப தஞ்செய்ய
வரவுபார்த் தாரூரர்.

பொழிப்புரை :

அதுபொழுது சங்கிலியாருக்குப் பெருமானுடைய திருப்பள்ளி எழுச்சிக்கு மலர் தொடுக்கும் பொழுதாகிட, அவர் எழுந்து அத்தொழில் செய்திடும் பெண்களுடன் தாம் கோயில் சென்றிட, கோயிலின் முன்பாகச் சங்கிலியார் வரும் காலத்தை உணர்ந்து, தமது சூளுரையை நிறைவேற்றும் காலம் அதுவாகவே அமைத்துக் கொண்டு, பெருமான் அருளியவாறு சூளுரை செய்திட, நம்பிகள் வருவாராயினர்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 256

நின்றவர்அங் கெதிர்வந்த
நேரிழையார் தம்மருங்கு
சென்றணைந்து தம்பெருமான்
திருவருளின் திறங்கூற
மின்தயங்கு நுண்ணிடையார்
விதியுடன்பட் டெதிர்விளம்பார்
ஒன்றியநா ணொடுமடவார்
உடனொதுங்கி உட்புகுந்தார்.

பொழிப்புரை :

நின்ற நம்பிகள், அங்கு எதிர்வந்த சங்கிலியா ரிடத்துச் சென்று சேர்ந்து, பெருமானின் திருவருள் திறங்களை எடுத்து மொழிய, மின்னல் என ஒளிரும் நுண்ணிய இடையையுடைய சங்கிலி யார், சூளுரை செய்தற்குரிய நீர்மையை நேராக எதிர்நின்று சொல்லா ராகி, உள்ளத்துக்கொண்ட நாணமுடன் ஒதுங்கித், தம்முடன் வந்த தோழியருடன் கோயிலுட் புகுந்தார்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 257

அங்கவர்தம் பின்சென்ற
ஆரூரர் ஆயிழையீர்
இங்குநான் பிரியாமை
உமக்கிசையும் படியியம்பத்
திங்கள்முடி யார்திருமுன்
போதுவீர் எனச்செப்பச்
சங்கிலியார் கனவுரைப்பக்
கேட்டதா தியர்மொழிவார்.

பொழிப்புரை :

அங்கு அவர்பின் சென்ற நம்பிகள் அவரை நோக்கி, அழகிய அணிகளை அணிந்தீர்! இங்கு நான் உம்மைப் பிரியாமைக்கு இசைந்து சூளுரை செய்திட, இளம்பிறை அணிந்த திருச்சடையை யுடைய பெருமான் முன்பு போதுவீராக என மொழியலும், அது கண்டு சங்கிலியார் தம் கனவைச் சொல்லக் கேட்ட அவர்தம் தோழி யர்கள் சுந்தரருக்குச் சொல்வார்களாய்,

குறிப்புரை :

முன்பாடலில், சுந்தரர் திருவருளின் திறம்கூறச் சங்கிலி யார் எதிர் மொழியாது தோழியருடன் ஒதுங்கி உட்புகுந்ததும், இப் பாடலில் இறைவன் திருமுன் வர அழைப்பத் தோழியர் வழித் தம் கருத்தை யுணர்த்துவதும் அவர்தம் பெண்மைத் தன்மையைக் காட்டி நிற்கின்றன `அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்தல் நிச்சமும் பெண்பாற் குரியவென்ப\' (தொல். களவு. 8) எனத் தொல்காப்பியர் கூறும் பெண்மையை இவர்வழி கண்டு மகிழ ஏதுவாகின்றது.

பண் :

பாடல் எண் : 258

எம்பெருமான் இதற்காக
எழுந்தருளி யிமையவர்கள்
தம்பெருமான் திருமுன்பு
சாற்றுவது தகாதென்ன
நம்பெருமான் வன்தொண்டர்
நாதர்செயல் அறியாதே
கொம்பனையீர் யான்செய்வ
தெங்கென்று கூறுதலும்.

பொழிப்புரை :

எம்பெருமானே! இச்சூளுரைக்காகத் தாங்கள் எழுந்தருளி வந்து இறைவரின் திருமுன்பு சொல்வது தகாது என்றலும், அது கேட்டருளிய நம்பிகள் தம் பெருமானது செய்கையை அறியாத வராய்ப் பூங்கொடி போல்வீர்! பின்னர் யான் சூளுரை செய்வது எங்கே? என்று கூறுதலும்,

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 259

மாதரவர் மகிழ்க்கீழே
அமையுமென மனமருள்வார்
ஈதலரா கிலும்ஆகும்
இவர்சொன்ன படிமறுக்கில்
ஆதலினால் உடன்படலே
அமையுமெனத் துணிந்தாகில்
போதுவீ ரெனமகிழ்க்கீழ்
அவர்போதப் போயணைந்தார்.

பொழிப்புரை :

அதற்கு அப்பெண்கள், மகிழ மரத்தின் கீழே செய்ய அமையும் என்றதும், அதுகேட்டு மனம் மயங்கியவராய், யான் இவர் சொன்னபடி செய்ய மறுத்தால், முற்கூறிய உறுதிப்பாட்டிற்கு மாறாகும் ஆதலின் நான் உடன்படலே பொருந்திய செயலாகும் என்று துணிந்து, அங்ஙனமாயின் நீர் மகிழ மரத்தடியிற் போதுவீர் என்ன, அவர்கள் போதலும் தாமும் அங்குச் சென்று சேர்ந்தார்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 260

தாவாத பெருந்தவத்துச்
சங்கிலியா ருங்காண
மூவாத திருமகிழை
முக்காலும் வலம்வந்து
மேவாதிங் கியானகலேன்
எனநின்று விளம்பினார்
பூவார்தண் புனற்பொய்கை
முனைப்பாடிப் புரவலனார்.

பொழிப்புரை :

குறைவிலாத பெருந் தவமுடைய சங்கிலியாரும் காண, என்றும் அழியாத மகிழ மரத்தை மும்முறையாக வலம் வந்து, நான் இங்கிராது அகன்று போகேன் என நின்று விளம்பினார், மலர்கள் மலர்ந்திடத் தோன்றும் குளிர்ந்த நீர்ப் பொய்கையுடைய திருமுனைப் பாடி நாட்டின் தலைவரான நம்பிகள்.

குறிப்புரை :

************

பண் :

பாடல் எண் : 261

மேவியசீ ராரூரர்
மெய்ச்சபத வினைமுடிப்பக்
காவியினேர் கண்ணாருங்
கண்டுமிக மனங்கலங்கிப்
பாவியேன் இதுகண்டேன்
தம்பிரான் பணியால்என்
றாவிசோர்ந் தழிவார்அங்
கொருமருங்கு மறைந்தயர்ந்தார்.

பொழிப்புரை :

என்றும் பொருந்திய சிறப்பினையுடைய நம்பிகள் உண்மையாகச் சூளுரை செய்திடும் அச்செயலை முடித்திடக் குவளை மலரை ஒத்த கண்களையுடைய சங்கிலியாரும், அதுகண்டு மிகவும் மனம் கலங்கிப் பாவியேன் இந்நிகழ்வினை எம்பெருமான் பணியால் கண்டேன் என்று உயிர் சோர்ந்து மனம் அழிபவர், அங்கு ஒருபுறம் மறைந்து நின்றனர்.

குறிப்புரை :

நம்பிகள், தம்மை மணந்தபின் பிரியாது தம்மோடு இருத்தல் வேண்டும் என்பது கருத்தெனினும், இடையில் நிகழ்ந்த இந்நிகழ்வுகள் அவரை வருத்தின. இதுவும் அப்பெண்தன்மையை விளக்குவதாகும்.

பண் :

பாடல் எண் : 262

திருநாவ லூராளி
தம்முடைய செயல்முற்றிப்
பொருநாகத் துரிபுனைந்தார்
கோயிலினுட் புகுந்திறைஞ்சி
அருள்நாளுந் தரவிருந்தீர்
செய்தவா றழகிதெனப்
பெருநாமம் எடுத்தேத்திப்
பெருமகிழ்ச்சி யுடன்போந்தார்.

பொழிப்புரை :

திருநாவலூரினுக்கு அரசராய சுந்தரர், தமது செயல் முடித்துப் போர்செய்யும் யானைத் தோலைப் போர்த்த சிவபெருமான் கோயிலினுள் புகுந்து, ஐயனே! நின் அருளை நாளும் வழங்க இங்கிருந்தீர்! இச்செயல் செய்தவாறு அழகியது, என்று பெருமா னுடைய பெரும்பெயரான திருவைந்தெழுத்தைப் போற்றி, மகிழ்ந்து, பெருமகிழ்ச்சியுடன் வெளியே வந்தருளினர்.

குறிப்புரை :

சுந்தரர் தாம் இறைவன் திருமுன்பு சூளுரைக்குங்கால், அவர் மகிழ மரத்தடியில் எழுந்தருளியிருக்க வேண்டியது அவருக்கும் இறைவற்கும் மட்டுமே தெரியும். அங்ஙனமிருக்க அவர் திருமுன்பு சூளுரைக்க முற்பட்ட பொழுது, தோழியர்கள் மகிழ மரத்தடியே அமையும் என்றது, இறைவன் உணர்த்த உணர்ந்ததன்றிப் பிறிதன்று என்பதை யுணர்ந்த நம்பிகள், குறிப்பு மொழியால் `இச்செயல் அழகிது\' என்றார். அங்ஙனமாயினும் அவ்வருள் இதற்கு முன்னின்று அருளியது போலப் பின்னும் அருளும் என்ற உறுதிப்பாடும், தோழமையாம் உரிமையுணர்வும் நிலைபெற உள்ளத்திருத்தலின், சலியாது பெருமகிழ்வுடன் வந்தருளினார்.

பண் :

பாடல் எண் : 263

வார்புனையும் வனமுலையார்
வன்தொண்டர் போனதற்பின்
தார்புனையும் மண்டபத்துத்
தம்முடைய பணிசெய்து
கார்புனையும் மணிகண்டர்
செயல்கருத்திற் கொண்டிறைஞ்சி
ஏர்புனையுங் கன்னிமா
டம்புகுந்தார் இருள்புலர.

பொழிப்புரை :

கச்சணிந்த மார்பகங்களையுடைய சங்கிலியார், நம்பிகள் போனபின்பு, மாலைகட்டும் மண்டபம் சென்று தம் பணி களை முடித்துக் கருமையான மேகம் போலும் அழகிய திருக்கழுத் தினையுடைய சிவபெருமானின் செயலினைக் கருத்தில் கொண்டு, வணங்கி, இருள் நீங்கிப் பொழுது விடிந்திட அழகு பொருந்தும் கன்னி மாடத்துள் புகுந்தார்.

குறிப்புரை :

*******************

பண் :

பாடல் எண் : 264

அன்றிரவே ஆதிபுரி
ஒற்றிகொண்டார் ஆட்கொண்ட
பொன்றிகழ்பூண் வன்தொண்டர்
புரிந்தவினை முடித்தருள
நின்றபுகழ்த் திருவொற்றி
யூர்நிலவு தொண்டருக்கு
மன்றல்வினை செய்வதற்கு
மனங்கொள்ள வுணர்த்துவார்.

பொழிப்புரை :

அன்றைய இரவிலேயே தொன்மைமிகு மூதூராய திருவொற்றியூரை உடையவராகிய பெருமானும், தாம் ஆட்கொண் டிருக்கும் பொன்னாலாய அணிகலன்களை அணிந்த நம்பிகளின் விருப்பிற் கிணங்கப் புகழ் விளங்கி நிற்கும் திருவொற்றியூரில் வாழும் தொண்டர்கட்குச் சுந்தரருக்குச் சங்கிலியாரைத் திருமணம் செய்திடற்கு மனம் கொள்ளும்படி கனவில் அருள் செய்வாராய்,

குறிப்புரை :

*******************

பண் :

பாடல் எண் : 265

நம்பியா ரூரனுக்கு
நங்கைசங் கிலிதன்னை
இம்பர்ஞா லத்திடைநம்
ஏவலினால் மணவினைசெய்
தும்பர்வா ழுலகறிய
அளிப்பீரென் றுணர்த்துதலும்
தம்பிரான் திருத்தொண்டர்
அருள்தலைமேற் கொண்டெழுவார்.

பொழிப்புரை :

`சுந்தரனுக்குச் சங்கிலியை இவ்வுலகில் நமது ஏவலின்படி மணவினை செய்து, விண்ணவரும் அறியுமாறு திரு மணம் செய்து கொடுப்பீர்களாக\' என்று அவர்கள் அறிந்திடக் கனவில் உணர்த்துதலும், பெருமானிடத்து அன்பு பூண்டிருக்கும் திருத்தொண் டர்களும் அப்பணியைத் தலைமேற் கொண்டு எழுவார்களாய்,

குறிப்புரை :

*******************

பண் :

பாடல் எண் : 266

மண்ணிறைந்த பெருஞ்செல்வத்
திருவொற்றி யூர்மன்னும்
எண்ணிறைந்த திருத்தொண்டர்
எழிற்பதியோ ருடனீண்டி
உண்ணிறைந்த மகிழ்ச்சியுடன்
உம்பர்பூ மழைபொழியக்
கண்ணிறைந்த பெருஞ்சிறப்பிற்
கலியாணஞ் செய்தளித்தார்.

பொழிப்புரை :

திருவருள் நிறைந்த திருவொற்றியூரில் இருக்கும் அத்திருத்தொண்டர்களுடன் அழகிய அப்பதியில் உள்ளோரும் சேர்ந்து, மகிழ்ச்சியுடன் தேவர்கள் பூமழை பொழிந்திட, காண்பார்தம் கண்கள் களிகொள்ளப் பெருஞ்சிறப்புடன் கலியாணம் செய்து கொடுத்தார்கள்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 267

பண்டுநிகழ் பான்மையினால்
பசுபதிதன் னருளாலே
வண்டமர்பூங் குழலாரை
மணம்புணர்ந்த வன்தொண்டர்
புண்டரிகத் தவள்வனப்பைப்
புறங்கண்ட தூநலத்தைக்
கண்டுகேட் டுண்டுயிர்த்துற்
றமர்ந்திருந்தார் காதலினால்.

பொழிப்புரை :

முன் திருக்கயிலாய மலையில் நிகழ்ந்த நியதியால், உயிர்கட்கெல்லாம் தலைவனான சிவபெருமானின் அருளாலே, வண்டுகள் மொய்த்திடும் கூந்தலையுடைய சங்கிலியாரைத் திருமணம் செய்த நம்பிகள், தாமரை மலர்மேல் இருக்கும் திருமகளின் வனப் பையும் புறங்கண்ட அத்துணை அழகுடைய தூய நலமுடைய சங்கிலி யாரைக் கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றும் விருப்பம் மீதூரத் துய்த்திருந்தார்.

குறிப்புரை :

`நற்பெரும் பான்மை கூட்ட\', `பண்டைவிதி கடைக் கூட்ட\' என முன்னர்ப் பரவையார் திறத்துக் கூறியவாறே இங்கும் கூறப்பட்டது. `கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள\' (குறள், 1101) எனும் திருக்குறளை இப்பாடலில் முகந்தெடுத்து மொழிந்துள்ளார் ஆசிரியர். இவ்வாறே, கழறிற்றறிவாரும் தம் திருக்கயிலாய ஞானவுலாவில் இவ்வருங் குறளை முகந்தெடுத்துள்ளமையும் அறியத்தக்கதாகும். உலகியல் வழித்தாய் இங்ஙனம் கூறினும், சுந்தரர் தம் அருளியல் வாழ்வில் பன்னாளும் பயில் யோகமாய் அமைந்தவாற்றை ஆசிரியர் முன்னர்க் (பா.327) கூறியவாறு ஈண்டும் உணர்ந்து மகிழல் வேண்டும்.

பண் :

பாடல் எண் : 268

யாழின்மொழி எழின்முறுவல்
இருகுழைமேற் கடைபிறழும்
மாழைவிழி வனமுலையார்
மணியல்குல் துறைபடிந்து
வீழுமவர்க் கிடைதோன்றி
மிகும்புலவிப் புணர்ச்சிக்கண்
ஊழியா மொருகணந்தான்
அவ்வூழி யொருகணமாம்.

பொழிப்புரை :

யாழினும் இனிய மொழியும் , அழகிய முறுவலும், இரு குழைக் காதின்பாலாகப் பார்வை புரளும் மாவடு போன்ற கண்களும், பருத்த மார்பகங்களும் உடைய பெறுதற்கரிய சங்கிலி யாரை, அவருடைய அல்குலாகிய பொய்கையில் படிந்து துய்த்து வரும் நம்பிகளுக்கும், சங்கிலியாருக்கும் இடைப்பட்ட புலத்தலும் புணர்தலும் நிகழும் பொழுதெல்லாம், அக்காலங்கள் முறையே ஒரு கணப்பொழுது ஊழியாகவும், ஊழிதானும் ஒரு கணமாகவும் நீட்டித் தும் சுருங்கியும் நிற்கும்.

குறிப்புரை :

`புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ\' (குறள், 1323), `ஊடுக மன்னோ ஒளியிழை\' (குறள்,1329), `ஊடுதல் காமத்திற்கு இன்பம்\' (குறள்,1330) என வருவனவற்றால் ஊடலின் இன்றியமை யாமை விளங்கும். அப்புலவி தானும் உப்பமைந்தற்றாய் இருத்தல் வேண்டுமேயன்றிச் சிறிது மிகினும் சுவை குன்றுமாதலின் அக்காலம் கணப்பொழுதாயினும், இவர்களுக்கு ஊழியாகுமாம். தாம் வீழ்வார் மென்தோளைத் துய்த்தலினும் தாமரைக் கண்ணனானுலகும் வேண் டப் படுவதொன்று அன்றாதலின் அக்காலந்தானும் மிகப் பெரிதாயி னும் இவர்களுக்கு ஒரு கணமாகும். அகப்பொருட் சுவையைத் திருக்குறள் வழியாகக் குழைத்து இழைத்திடும் ஆசிரியர் சேக்கிழாரின் கவிநலன் அறிந்து இன்புறற்குரியதாகும்.

பண் :

பாடல் எண் : 269

இந்நிலையில் பேரின்பம்
இனிதமர்வார் இறையுறையும்
மன்னுபுகழ் ஒற்றியூர்
அதனில்மகிழ் சிறப்பினால்
சென்னிமதி புனைவார்தந்
திருப்பாதந் தொழுதிருந்தார்
முன்னியகா லங்கள்பல
முறைமையினால் வந்தகல.

பொழிப்புரை :

இந்நிலையில் பேரின்பத் துறையில் சங்கிலியா ருடன் இனிதமர்ந்தருளும் நம்பிகள், பெருமான் உறைந்தருளும் புகழ் விளங்கும் திருவொற்றியூர்தனில் மகிழ்ந்து உறைகின்ற சிறப்பினால் முறைமையாக வரும் காலங்கள் பலவும் தத்தம் எல்லையில் வந்து கழிந்திடத் திருச்சடையின்மீது இளம்பிறையை அணிந்து விளங்கும் பெருமானின் திருவடிகளைத் தொழுது அங்கிருந்தார்.

குறிப்புரை :

*******************

பண் :

பாடல் எண் : 270

பொங்குதமிழ்ப் பொதியமலைப்
பிறந்துபூஞ் சந்தனத்தின்
கொங்கணைந்து குளிர்சாரல்
இடைவளர்ந்த கொழுந்தென்றல்
அங்கணையத் திருவாரூர்
அணிவீதி அழகரவர்
மங்கலநாள் வசந்தமெதிர்
கொண்டருளும் வகைநினைந்தார்.

பொழிப்புரை :

தமிழ் மேன்மேலும் தழைத்து வளருகின்ற பொதிய மலையில் தோன்றி, பூக்கள் மலரும் சந்தன மரங்களின் அடுக்கலில் அணைந்து, குளிர்ந்த மரச்சாரலிடையாக வளர்ந்து வரும் மிருதுவாய தென்றல் காற்று அங்கு வீசிடவும், அக்காற்றின் நலம் கண்ட நம்பிகள், திருவாரூரின் அழகிய வீதிகளில் வசந்த விழாப்பெருநாள்களில் எழுந் தருளி உலாப்போகும் பெருமான் எதிராக வசந்தக் காற்று எதிர் கொண்டு வணங்கும் தன்மையை நினைந்தருளினார்.

குறிப்புரை :

திருவொற்றியூரில் வீசிய கடற் காற்று, திருவாரூர்ப் பெருமானின் முன்னாக வீசும் வசந்த காலக் காற்றை நினைவு கூர வைத்தது.

பண் :

பாடல் எண் : 271

வெண்மதியின் கொழுந்தணிந்த
வீதிவிடங் கப்பெருமான்
ஒண்ணுதலார் புடைபரந்த
ஓலக்க மதனிடையே
பண்ணமரும் மொழிப்பரவை
யார்பாட லாடல்தனைக்
கண்ணுறமுன் கண்டுகேட்
டார்போலக் கருதினார்.

பொழிப்புரை :

(அதுபொழுது) நம்பிகள், வெண்பிறையின் கொழுந்து அணிந்த வீதிவிடங்கப் பெருமானது, அழகிய நெற்றியை யுடைய பெண்கள் சூழ்ந்திடக் கொலு வீற்றிருக்கும் திருமண்டபத்துப் பண் பொருந்தும் மொழியையுடைய பரவையாரது பாடல் ஆடல் ஆகிய இவைகளைத் தம் கண்முன்னாகக் கண்டு கேட்கப்பெற்றாற் போலவே கருதினார்.

குறிப்புரை :

ஆரூர்ப்பெருமானின் திருமுன்னாக வரும் காற்று நினைவு வரவே அதனைத் தொடர்ந்து, அவர் அமர்ந்திருக்கும் திரு வோலக்கத்தினில் பரவையார் ஆடும் ஆடலும் பாடலும் காணும் காட்சியும் நினைவிற்கு வந்தது. இம்மூன்று பாடல்களானும் நம்பிகள் திருவொற்றியூரில் இருந்தருளிய காலமும், இதுபொழுது நிகழ்ந்து வரும் காலமும் உணர முடிகின்றது. முன் (பா.269) முன்னிய காலங்கள் பலமுறைமையினால் வந்தகல எனப் பன்மைப்படக் கூறவே, இரண்டு மூன்று பருவ காலங்களாவது நம்பிகள் சங்கிலியா ரோடு ஒற்றியூரில் உறைந்திருக்கவேண்டும் எனக் கருதலாம். பின் னர்ப் பங்குனித் திருநாளுக்குப் பண்டுபோல் வருவாராகி எனக் குறிப்பதால், இவர் இந்நினைவோடு சங்கிலியாரைப் பிரிந்து செல்லும் காலம் இளவேனிற் காலம் எனத் தெரிகிறது. இளவேனிற் காலத்துப் பிரியும் இவர் இதற்கு முந்திய காலங்கள் பல செல்ல இங்கிருந்தார் எனவே, கார் காலத்தில் சங்கிலியாரைத் திருமணம் செய்துகொண்டு இருக்கலாம் எனக் கருத இடனுண்டு. எனவே கார் காலத்தில் சங்கிலி யாரை மணந்த நம்பிகள் கூதிர், முன்பனி, பின்பனி ஆகிய காலங்களில் அப்பெருமாட்டியாரோடு உடனுறைந்து, பின் வேனிற் காலமாகிய பங்குனி மாதத்தில் பிரிந்து சென்றுள்ளார் என்பது விளங்குகிறது. சிவக்கவிமணியார் உரையும் காண்க.

பண் :

பாடல் எண் : 272

பூங்கோயில் அமர்ந்தாரைப்
புற்றிடங்கொண் டிருந்தாரை
நீங்காத காதலினால்
நினைந்தாரை நினைவாரைப்
பாங்காகத் தாமுன்பு
பணியவரும் பயனுணர்வார்
ஈங்குநான் மறந்தேனென்
றேசறவால் மிகவழிவார்.

பொழிப்புரை :

பூங்கோயிலில் வீற்றிருக்கும் புற்றிடங் கொண்ட பெருமானாரை, நீங்காத காதலினால் தம்மை நினைத்திருப்பவரை தாமும் நினைந்து அருளுவாரைத் தாம் முன்னைய நாள்களில் பணிய, அதனால் வருகின்ற இன்பப் பயனை உணர்வாராகிய அவர், இங்கே நான் மறந்தேனே என எண்ணிப் பதைப்பால் மிகவும் மனம் அயர் வாராய்,

குறிப்புரை :

தம்மை நினைத்திருப்பவர்களை, இறைவர் தாமும் நினைந்தருளுவார். `தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்ப போற்றி\' எனவரும் திருவாக்கும் காண்க.

பண் :

பாடல் எண் : 273

மின்னொளிர்செஞ் சடையானை
வேதமுத லானானை
மன்னுபுகழ்த் திருவாரூர்
மகிழ்ந்தானை மிகநினைந்து
பன்னியசொற் பத்திமையும்
அடிமையையுங் கைவிடுவான்
என்னுமிசைத் திருப்பதிகம்
எடுத்தியம்பி யிரங்கினார்.

பொழிப்புரை :

மின்போல் ஒளிரும் செஞ்சடையையுடைய பெருமானை, மறைகட்கெல்லாம் முதற்பொருளாயினானை, சீர் மன்னிய புகழுடைய திருவாரூரில் மகிழ்ந்திருப்பவனை, மிகவும் நீள நினைந்து, பலபடப் புகழ்ந்த சொற்களாலாய `பத்திமையும் அடிமை யையும் கைவிடுவான்\' எனத் தொடங்கும் இசையுடைய பதிகத்தால் பாடி, மிகவும் இரங்கினார்.

குறிப்புரை :

`பத்திமையும் அடிமையையும் கைவிடுவான்\' எனத் தொடங்கும் பதிகம், பழம்பஞ்சுரப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.51).

பண் :

பாடல் எண் : 274

பின்னொருநாள் திருவாரூர்
தனைப்பெருக நினைந்தருளி
உன்னஇனி யார்கோயில்
புகுந்திறைஞ்சி ஒற்றிநகர்
தன்னையக லப்புக்கார்
தாஞ்செய்த சபதத்தால்
முன்னடிகள் தோன்றாது
கண்மறைய மூர்ச்சித்தார்.

பொழிப்புரை :

பின்பொரு நாள், திருவாரூரினை மிகவும் நினைந் தருளி, நினைக்க இனிமைதரும் பெருமானாரது திருவொற்றியூர்க் கோயிலுக்குள் சென்று பணிந்து, தாம் திருவாரூருக்குப் போக ஒருப் பட்டுத் திருவொற்றியூர் நகரினின்றும் அகன்றிடத் தாம் முன்செய்த சூளுரையால், தம் அடி பெயர்ந்திடும் நிலையறியாது கண் ஒளி மறைய மயங்கினார்.

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 275

செய்வதனை யறியாது
திகைத்தருளி நெடிதுயிர்ப்பார்
மைவிரவு கண்ணார்பால்
சூளுறவு மறுத்ததனால்
இவ்வினைவந் தெய்தியதாம்
எனநினைந்தெம் பெருமானை
வெவ்வியஇத் துயர்நீங்கப்
பாடுவேன் எனநினைந்து.

பொழிப்புரை :

மேற்செய்வதறியாது திகைத்தருளி, நெடிது பெருமூச்செறிபவர், மைபூசிய கண்களையுடைய சங்கிலியார்பாலா கச் செய்த சூளுரையை மறுத்தலால், இவ்விளைவு நேர்ந்தது என எண்ணி எம் பெருமானைக் கொடிய இத்துயர் நீங்கிடப் பாடுவேன் என நினைந்து,

குறிப்புரை :

**********

பண் :

பாடல் எண் : 276

அழுக்கு மெய்கொடென் றெடுத்தசொற் பதிகம்
ஆதி நீள்புரி யண்ணலை யோதி
வழுத்து நெஞ்சொடு தாழ்ந்துநின் றுரைப்பார்
மாதொர் பாகனார் மலர்ப்பதம் உன்னி
இழுக்கு நீக்கிட வேண்டும்என் றிரந்தே
எய்து வெந்துயர்க் கையற வினுக்கும்
பழிக்கும் வெள்கிநல் லிசைகொடு பரவிப்
பணிந்து சாலவும் பலபல நினைவார்.

பொழிப்புரை :

`அழுக்கு மெய் கொடு\' எனத் தொடங்கும் செஞ் சொல் திருப்பதிகத்தை, ஆதியாய திருவொற்றியூர் இறைவனாரைப் போற்றி வணங்கும் நெஞ்சோடு தாழ்ந்து, அங்கு நின்று பாடும் அவர், உமையொரு கூறராய பெருமானாரின் மலரனைய திருவடிகளை நினைந்து, தமக்கு நேர்ந்த இழுக்கு நீங்கிட வேண்டும் என்று இரந்து துயர் தரும் செயலற்ற நிலைக்கும் தமக்குக் கண்பார்வை இழந்ததால் வந்த பழிக்கும் நாணி, நல்ல இசை கொண்டு எம்பெருமானைப் போற்றிப் பணிந்து பல பல நினைவாராய்,

குறிப்புரை :

`அழுக்கு மெய் கொடு\' எனத் தொடங்கும் பதிகம் தக்கே சிப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.54).

பண் :

பாடல் எண் : 277

அங்கு நாதர்செய் அருளது வாக
அங்கை கூப்பியா ரூர்தொழ நினைந்தே
பொங்கு காதன்மீ ளாநிலை மையினால்
போது வார்வழி காட்டமுன் போந்து
திங்கள் வேணியார் திருமுல்லை வாயில்
சென்றி றைஞ்சிநீ டிய திருப் பதிகம்
சங்கிலிக் காகஎன் கண்களை மறைத்தீர்
என்று சாற்றிய தன்மையிற் பாடி.

பொழிப்புரை :

அங்குத் திருவொற்றியூர் இறைவர் செய்த அருள் அதுவேயாகத் தம் அழகிய கைகளைக் கூப்பி வணங்கித் திருவாரூர்ச் சென்று தொழ விரும்பிப் பொங்கும் காதலால், வழிக்கொள்ளும் அவர், முன்போவார் வழிகாட்டிடச் சென்று, இளம்பிறையைச் சடையிலுடைய பெருமானின் வடதிருமுல்லைவாயில் என்னும் திருப்பதிக்குச் சென்று வணங்கி, பெருமை மிகுந்த திருப்பதிகம் பாடு வார், `சங்கிலிக்காக என் கண்களை மறைத்தீர்\' எனப் பாடியருளினார்.

குறிப்புரை :

வடதிருமுல்லைவாயிலில் அருளிய `திருவும் மெய்ப் பொருளும்\' (தி.7 ப.69) எனத் தொடங்கும் தக்கேசிப் பண்ணில் அமைந்த பதிகத்தின் இரண்டாவது பாடலில் வரும் `சங்கிலிக்கா என் கண் கொண்ட பண்ப\' எனவருவதை ஆசிரியர் இங்குச் சொல்கிறார்.

பண் :

பாடல் எண் : 278

தொண்டை மானுக்கன் றருள்கொடுத் தருளுந்
தொல்லை வண்புகழ் முல்லை நாயகரைக்
கொண்ட வெந்துயர் களைகெனப் பரவிக்
குறித்த காதலின் நெறிக்கொள வருவார்
வண்டுலா மலர்ச் சோலைகள் சூழ்ந்து
மாட மாளிகை நீடுவெண் பாக்கம்
கண்ட தொண்டர்கள் எதிர்கொள வணங்கி
காயும்நா கத்தர் கோயிலை யடைந்தார்.

பொழிப்புரை :

தொண்டைமான் என்னும் அரசனுக்கு முன்னைய நாளில் அருள் புரிந்திடும், வடதிருமுல்லைவாயிலில் அமர்ந்தருளும் தலைவனை நினைந்து, `அடியனேன் கொண்ட கொடும் துயர் களைந் திடுவாய்\' எனப் போற்றித் திருவாரூர் மேல் குறித்த காதலால் வழிக் கொண்டு வருபவர், வண்டுகள் மொய்த்திடும் சோலைகள் சூழ்ந்து, மாட மாளிகைகள் நிரல்பட அமைந்து விளங்கிடும் திருவெண்பாக்கத்தில் உள்ள அடியவர்கள் நகர எல்லையில் எதிர்கொண்டிடத் தாம் அவரை வணங்கிக் கொலை புரியும் யானையை உரித்த சிவபெருமானது அக்கோயிலைச் சென்றடைந்தார்.

குறிப்புரை :

இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 279

அணைந்த தொண்டர்க ளுடன்வல மாக
அங்கண் நாயகர் கோயில்முன் னெய்திக்
குணங்க ளேத்தியே பரவியஞ் சலியால்
குவித்த கைதலை மேற்கொண்டு நின்று
வணங்கி நீர்மகிழ் கோயிலு ளீரே
என்ற வன்தொண்டர்க் கூன்றுகோ லருளி
இணங்கி லாமொழி யால்உளோம் போகீர்
என்றி யம்பினார் ஏதிலார் போல.

பொழிப்புரை :

தம்முடன் வந்த தொண்டர்களுடன் வலமாக வந்து, திருமுன்பு சென்று, பெருமானது குணங்களைப் போற்றி வணங்கி, அஞ்சலியால் கூப்பிய கரங்களைத் தலைமேற் கொண்டு வணங்கிக் கண் தெரியாத கையறவால், `எம்பிரானே! நீர் கோயிலில் உள்ளீரோ?\' என்று கேட்ட நம்பிகளுக்கு, எம்பிரான் ஓர் ஊன்றுகோல் கொடுத் தருளி, இதமுடன் எடுத்துச் சொல்லாத ஒரு வார்த்தையாக `உளோம் போகீர்\' என்று மொழிந்தார்; தாம் ஒரு தொடர்பிலார் போல.

குறிப்புரை :

குழைவிரவு வடிகாதா என்றலும், கோயிலில் உள் ளாயோ என்றதும் கடுஞ்சொற்களேயாகும். எனினும் அவற்றை அவர்தம் வருத்த மிகுதியால் கூற, பெருமானும் `உளோம்\' என்ற அளவில் கூட நில்லாது `போகீர்\' என்றும் கூறிப் போகச் செய்தமை நம்பிகளுக்குப் பெருவருத்தத்தைத் தந்துள்ளது. இதனைப் பாடல் தொறும் கூறுவதோடமையாது, 9ஆவது பாடலில், `ஒன்னலரைக் கண்டார் போல்\' என்று, அருளியது அவர்தம் வருத்த மிகுதியை மேலும் காட்டுவதாகும். 10ஆவது பாடலில் `ஊன்றுவதோர் கோல் அருளி\' என்றது அச்செயல்தானும் தமக்கு ஓராற்றான் ஆறுதல் தந்தமையைக் குறித்தருளியதாகும். இவ்வகையில் இப்பாடற்குறிப்பு கள், ஆசிரியர் தம் வரலாற்று அமைவிற்கு எடுத்துக்காட்டுகளா கின்றன.

பண் :

பாடல் எண் : 280

பிழையுளன பொறுத்திடுவர்
என்றெடுத்துப் பெண்பாகம்
விழைவடிவிற் பெருமானை
வெண்பாக்கம் மகிழ்ந்தானை
இழையெனமா சுணமணிந்த
விறையானைப் பாடினார்
மழை தவழு நெடும்புரிசை
நாவலூர் மன்னவனார்.

பொழிப்புரை :

குழைவிரவு வடிகாதா என்றலும், கோயிலில் உள் ளாயோ என்றதும் கடுஞ்சொற்களேயாகும். எனினும் அவற்றை அவர்தம் வருத்த மிகுதியால் கூற, பெருமானும் `உளோம்\\\' என்ற அளவில் கூட நில்லாது `போகீர்\\\' என்றும் கூறிப் போகச் செய்தமை நம்பிகளுக்குப் பெருவருத்தத்தைத் தந்துள்ளது. இதனைப் பாடல் தொறும் கூறுவதோடமையாது, 9ஆவது பாடலில், `ஒன்னலரைக் கண்டார் போல்\\\' என்று, அருளியது அவர்தம் வருத்த மிகுதியை மேலும் காட்டுவதாகும். 10ஆவது பாடலில் `ஊன்றுவதோர் கோல் அருளி\\\' என்றது அச்செயல்தானும் தமக்கு ஓராற்றான் ஆறுதல் தந்தமையைக் குறித்தருளியதாகும். இவ்வகையில் இப்பாடற்குறிப்பு கள், ஆசிரியர் தம் வரலாற்று அமைவிற்கு எடுத்துக்காட்டுகளா கின்றன.

குறிப்புரை :

`பிழையுளன பொறுத்திடுவர்\\\' எனத் தொடங்கும் பதிகம் சீகாமரப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.89).

பண் :

பாடல் எண் : 281

முன்னின்று முறைப்பாடு
போல்மொழிந்த மொழிமாலைப்
பன்னும்இசைத் திருப்பதிகம்
பாடியபின் பற்றாய
என்னுடைய பிரானருள்இங்
கித்தனைகொ லாமென்று
மன்னுபெருந் தொண்டருடன்
வணங்கியே வழிக்கொள்வார்.

பொழிப்புரை :

பெருமான் கோயிலின் திருமுன்பு நின்று, தமது முறைப்பாடு உரைப்பார்போலப் பாடிய தமிழ் மாலையாய இசை யுடைய திருப்பதிகத்தைப் பாடிய பின்பு, `எனக்குப் பற்றுக்கோடாய பெருமானது அருள் `இவ்வளவினதே போலும்\' என மொழிந்து, தம்முடன் வந்த பெருமைமிக்க அடியவர்களுடன் வணங்கி, அப்பால் திருவாரூர் நோக்கி வழிக்கொள்வாராய்,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 282

அங்கணர்தம் பதியதனை
அகன்றுபோய் அன்பருடன்
பங்கயப்பூந் தடம்பணைசூழ்
பழையனுர் உழையெய்தித்
தங்குவார் அம்மைதிருத்
தலையாலே வலங்கொள்ளும்
திங்கண்முடி யாராடுந்
திருவாலங் காட்டினயல்.

பொழிப்புரை :

நெற்றிக்கண்ணை உடைய இறைவரின் திருப்பதி யினின்றும் நீங்கிப்போய், அன்பர்களுடன் தாமரை மலர்கள் நிறைந்த குளங்கள் புறமே சூழ இருக்கும் வயல்களை உடைய பழையனூர் வந்து சேர்ந்து, காரைக்கால் அம்மையார் தலையாலே வலங்கொள நின்ற, இளம்பிறையை முடியில் அணிந்த பெருமான் திருக்கூத்தியற்றி வரும் திருவாலங்காடு என்னும் பதியின் அயலாக,

குறிப்புரை :

நம்பிகள் திருவாலங்காட்டின் உட்செல்லாது அயலே நின்று, இறைவரின் திருக்கோயிலை நோக்கியவாறே தொழுதற்குக் காரணம், அம்மையார் அக்கோயிலை வலங்கொண்டும் வணங்கியும் இருந்தருளும் காரணத்தாலாம். ஆளுடைய பிள்ளையார் இத்திருப்பதிக்குச் சென்றபொழுதும் இந்நியமமே கொண்டு வழிபட்டமையும் நினைவுகூரத் தக்கதாம்.

பண் :

பாடல் எண் : 283

முன்னின்று தொழுதேத்தி
முத்தாஎன் றெடுத்தருளிப்
பன்னும்இசைத் திருப்பதிகம்
பாடிமகிழ்ந் தேத்துவார்
அந்நின்று வணங்கிப்போய்த்
திருவூறல் அமர்ந்திறைஞ்சிக்
கன்னிமதில் மணிமாடக்
காஞ்சிமா நகரணைந்தார்.

பொழிப்புரை :

முன்பாக நின்று தொழுது போற்றி, `முத்தா முத்தி, என்று தொடங்கும் இசையமைந்த திருப்பதிகத்தைப் பாடி மகிழ்ந்து, அவ்விடத்தினின்றும் நீங்கிச் சென்று, திருவூறல் என்னும் பதியில் தங்கி, வணங்கி, அப்பால் சென்று, அழியாத மதில் சூழ்ந்த அழகிய மாடங்களையுடைய திருக்காஞ்சி மாநகரினை அடைந்தார்.

குறிப்புரை :

`முத்தா முத்தி, என்று தொடங்கும் பதிகம், பழம்பஞ்சுரப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.52). இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 284

தேனிலவு பொழிற்கச்சித்
திருக்காமக் கோட்டத்தில்
ஊனில்வளர் உயிர்க்கெல்லாம்
ஒழியாத கருணையினால்
ஆனதிரு வறம்புரக்கும்
அம்மைதிருக் கோயிலின்முன்
வானில்வளர் திருவாயில்
வணங்கினார் வன்தொண்டர்.

பொழிப்புரை :

தேன் உண்ணும் வண்டுகள் உலவிடும் சோலை களை உடைய காஞ்சி மாநகரில், திருக்காமக்கோட்டத்தில், உடம்பு டைய உயிர்க்கெல்லாம் ஒழியாத கருணையினால் ஆன அறத்தினை விரும்பிப் புரிந்தருளும் பெருமாட்டியின் திருக்கோயிலின் முன்பாக, வான் நோக்கி உயரும் திருவாயிலினை வணங்கினார் நம்பிகள்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 285

தொழுது விழுந் தெழுந்தருளாற்
துதித்துப்போய்த் தொல்லுலகம்
முழுதும்அளித் தழித்தாக்கும்
முதல்வர்திரு வேகம்பம்
பழுதில்அடி யார்முன்பு
புகப்புக்குப் பணிகின்றார்
இழுதையேன் திருமுன்பே
என்மொழிவேன் என்றிறைஞ்சி.

பொழிப்புரை :

தொழுது விழுந்து, எழுந்து, அருளால் போற்றி, அப்பால் சென்று, முன்னான இவ்வுலகம் முழுதும் காத்தும் படைத்தும் அழித்தும் விளையாடும் முதல்வருடைய திருவேகம்பம் என்னும் திருப்பதியில், பழுதிலாத அடியவர்கள் முன் செல்லத் தாம் பின்னாகப் புகுந்து, பெருமானைப் பணிகின்றவராகிப் பேயனாகிய யான், பெரு மானின் திருமுன் நின்று யாதென்று மொழிவேன் என மொழிந்து, வணங்கியருளி,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 286

விண்ணாள்வார் அமுதுண்ண
மிக்கபெரு விடமுண்ட
கண்ணாளா கச்சியே
கம்பனே கடையானேன்
எண்ணாத பிழைபொறுத்திங்
கியான்காண எழிற்பவள
வண்ணாகண் ணளித்தருளாய்
எனவீழ்ந்து வணங்கினார்.

பொழிப்புரை :

விண்ணுலகத்தை ஆளுகின்ற தேவர்கள் அமுது உண்டு இறவாதிருப்ப, மிக்க பெரு நஞ்சுண்ட கருணையாளனே! கச்சி ஏகம்பம் உறைவானே! கடைப்பட்ட நாயேன் நினைந்து செய்யாத பிழையைப் பொறுத்து இங்கு யான் காண, எழில் திகழும் பவள வண்ணா! கண் தந்தருள்வாய்! என வேண்டி நிலத்தில் வீழ்ந்து வணங் கினார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 287

பங்கயச்செங் கைத்தளிரால்
பனிமலர்கொண் டருச்சித்துச்
செங்கயற்கண் மலைவல்லி
பணிந்தசே வடிநினைந்து
பொங்கியஅன் பொடுபரவிப்
போற்றியஆ ரூரருக்கு
மங்கைதழு வக்குழைந்தார்
மறைந்தஇடக் கண்கொடுத்தார்.

பொழிப்புரை :

தாமரைமலர்போலும் செங்கைத் தளிரால் எடுத்து குளிர்ந்த மலர்கொண்டு போற்றி செய்து, சிவந்த கயல் மீனை ஒத்த கண்ணுடைய மலைக்கொடியாம் உமையம்மையார் பணிந்த சேவடி களை மிகவும் நினைந்து, பொங்கிடும் அன்புடன் வணங்கிப் போற்றி டும் நம்பிகளுக்கு, எம்பிராட்டி தழுவிடக் குழைந்து காட்டிய இறைவர் மறைந்த கண்களில், இடக்கண் பார்வையைக் கொடுத்தருளினார்.

குறிப்புரை :

இதுபொழுது அருளிய பதிகம் கிடைத்திலது. பிராட்டி தழுவக் குழைந்த இடத்துப் பெற்ற கண்ணாதலின், இடக்கண் கொடுத் தார் என அருளினார் போலும். கண் மறைந்த இடம் திருவொற்றியூரும், இடக் கண் பெற்ற இடம் காஞ்சிபுரமும், வலக் கண் பெற்ற இடம் ஆரூருமாகும். இம்மூன்றும் நிலத் திருப்பதிகளாதலின், (பிருதிவித் தலங்கள்) யாது யாண்டு ஒடுங்கியது, அஃது ஆண்டுநின்றே மீள உளதாம் என்னும் நியதியை அறிவிப்பதாக அமைந்துளது என நயம் காண்பர் சிவக்கவிமணியார்.

பண் :

பாடல் எண் : 288

ஞாலந்தான் இடந்தவனும்
நளிர்விசும்பு கடந்தவனும்
மூலந்தான் அறிவரியார்
கண்ணளித்து முலைச்சுவட்டுக்
கோலந்தான் காட்டுதலும்
குறுகிவிழுந் தெழுந்துகளித்
தாலந்தா னுகந்தவன் என்
றெடுத்தாடிப் பாடினார்.

பொழிப்புரை :

இந்நிலவுலகைக் கீண்டு தேடிய மாலும், அழகிய வானத்தைக் கடந்து சென்ற அயனும் முறையே திருவடியையும், முடியையும் காண இயலாத சிவபெருமான், இடக் கண் கொடுத்து, எம்பிராட்டியின் முலைச் சுவடு அணிந்த கோலத்தைக் காட்டலும், பெருமானை அணுக விழுந்து எழுந்து மனம் மகிழ்ந்து, `ஆலந்தான் உகந்தவன்\' என்று தொடங்கிப் பதிகம் பாடி, ஆடிப் பரவினார்.

குறிப்புரை :

`ஆலந்தான் உகந்தவன்\' என்று தொடங்கும் பதிகம் தக்கேசிப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.61). இப்பதிகப் பாடல் தொறும் அம்மையார் வழிபடப் பெற்ற அரிய புண்ணியச் செயலையும், `காணக் கண் அடியேன் பெற்றவாறே\' என்ற அருளிப்பாட்டையும் நம்பிகள் அருளுகின்றார். இக்குறிப்புகள் வரலாற்றிற்கு அரணாவதுடன், இடக் கண் பெற்றமையை உய்த்துணர்தற்கும் ஏதுவாகின்றன.

பண் :

பாடல் எண் : 289

பாடிமிகப் பரவசமாய்ப்
பணிவார்க்குப் பாவையுடன்
நீடியகோ லங்காட்ட
நிறைந்தவிருப் புடனிறைஞ்சிச்
சூடியஅஞ் சலியினராய்த்
தொழுதுபுறம் போந்தன்பு
கூடியமெய்த் தொண்டருடன்
கும்பிட்டங் கினிதமர்வார்.

பொழிப்புரை :

திருப்பதிகம் பாடித் தம்வயம் இழந்து பணிகின்ற நம்பிகட்கு, உமையம்மையாருடன் பெரிதும் பொருந்தியிருக்கும் திருக்கோலம் காண்பித்திடத் தாம் கண்டு, நிறைகின்ற விருப்பத்துடன் பணிந்து உச்சியில் கூப்பிய கையினராய்த் தொழுது வெளியே வந்து, அன்பு பொருந்திய மெய்யடியாருடன் கும்பிட்டுக் காஞ்சிப் பதியில் இனிதே தங்கியிருப்பவர்,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 290

மாமலையாள் முலைச்சுவடும்
வளைத்தழும்பும் அணிந்தமதிப்
பூமலிவார் சடையாரைப்
போற்றியரு ளதுவாகத்
தேமலர்வார் பொழிற்காஞ்சித்
திருநகரங் கடந்தகல்வார்
பாமலர்மா லைப்பதிகம்
திருவாரூர் மேற்பரவி.

பொழிப்புரை :

உயர்ந்த இமயமலையில் தோன்றிய உமை அம் மையாரின் முலைச்சுவடும் வளையல்களின் தழும்பும் அணிந்த, இளம்பிறை சூடிய, கொன்றைப் பூவணிந்த சடையையுடைய பெருமா னைப் போற்றி செய்து, தமக்கு இடக் கண் பெற்ற அருள் அதுவேயாகக் கொண்டு தேன் பொருந்திய மலர்கள் பெருகிய சோலைகளையுடைய காஞ்சித் திருநகரத்தைக் கடந்து, மேற்செல்லும் நம்பிகள், பாடல்கள் மலரும் திருப்பதிகத்தைத் திருவாரூர் மேலாகப் பாடிப் போற்றி செய்து,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 291

அந்தியும்நண் பகலும்என
எடுத்தார்வத் துடனசையால்
எந்தைபிரான் திருவாரூர்
என்றுகொல்எய் துவதென்று
சந்தஇசை பாடிப்போய்த்
தாங்கரிய ஆதரவு
வந்தணைய அன்பருடன்
மகிழ்ந்துவழிக் கொள்கின்றார்.

பொழிப்புரை :

`அந்தியும் நண்பகலும்\' எனப் பாட எடுத்து, உள் ளத்துத் திருவாரூருக்குச் செல்ல வேண்டும் என்னும் ஆர்வம் மிக, அப் பெரும்பதிக்கு என்று சேருவது எனும் குறிப்புடைய சந்தம் உடைய இசை யினைப் பாடி அன்பர்களுடன் மகிழ்ந்து வழிக்கொள்ளும் ஆரூரர்,

குறிப்புரை :

`அந்தியும் நண்பகலும்\' எனத் தொடங்கும் பதிகம் புறநீர் மைப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப. 83). பதிகப் பாடல்தொறும் `திருவாரூர்புக்கு .... என்று கொல் எய்துவதோ\' என நிறைவுறுவதை உளங்கொண்டு ஆசிரியர் இப்பாடலையும் அக்குறிப்பையும் எடுத்து மொழிவாராயினர்.

பண் :

பாடல் எண் : 292

மன்னுதிருப் பதிகள்தொறும்
வன்னியொடு கூவிளமும்
சென்னிமிசை வைத்துவந்தார்
கோயிலின்முன் சென்றிறைஞ்சிப்
பன்னுதமிழ்த் தொடைசாத்திப்
பரவியே போந்தணைந்தார்
அன்னமலி வயற்றடங்கள் சூழ்ந்ததிரு வாமாத்தூர்.

பொழிப்புரை :

`அந்தியும் நண்பகலும்\' எனத் தொடங்கும் பதிகம் புறநீர் மைப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப. 83). பதிகப் பாடல்தொறும் `திருவாரூர்புக்கு .... என்று கொல் எய்துவதோ\' என நிறைவுறுவதை உளங்கொண்டு ஆசிரியர் இப்பாடலையும் அக்குறிப்பையும் எடுத்து மொழிவாராயினர்.

குறிப்புரை :

மன்னு திருப்பதிகள்தொறும் என்பன காஞ்சியிலிருந்து ஆரூர் செல்வதற்கு இடைப்பட்ட பதிகளாம். அவை திருவில்வலம், திருக்குரங்கணில்முட்டம், புரிசை நாட்டுப் புரிசை, திருவெண்குன்றம், திருப்புறவார் பனங்காட்டூர், திண்டீச்சுரம் முதலாயினவாகலாம் என் பர் சிவக்கவிமணியார். பதிகங்கள் எவையும் கிடைத்தில. நம்பிகளின் பதிகங்களில் இவற்றில் சில வைப்புப் பதிகளாய் உள்ளன. இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 293

அங்கணரை ஆமாத்தூர்
அழகர்தமை யடிவணங்கித்
தங்கும்இசைத் திருப்பதிகம்
பாடிப்போய்த் தாரணிக்கு
மங்கலமாம் பெருந்தொண்டை
வளநாடு கடந்தணைந்தார்
செங்கண்வள வன்பிறந்த
சீர்நாடு நீர்நாடு.

பொழிப்புரை :

உயிர்களுக்கு அருள் வழங்கியருளும் அழகிய பெருமானாரைத் திருஆமாத்தூரில் எழுந்தருளியிருக்கும் அழகரை வணங்கி, இசை பொருந்திய திருப்பதிகம் பாடி, அப்பாற்சென்று, இந்நிலவுலகிற்கு மங்கலமாக விளங்கும் தொண்டைநாடு என்னும் வளமுடைய நாட்டினைக் கடந்து, கோச்செங்கட் சோழன் தோன்றிய சீர்மைமிகுந்த நாடாய நீர்வளமுடைய சோழ நாட்டினை அடைந்தார்.

குறிப்புரை :

திருஆமாத்தூரில் அருளிய பதிகம் `காண்டனன்\' (தி.7 ப.45) எனத் தொடங்கும் கொல்லிக் கௌவாணப் பண்ணில் அமைந்த பதிகம் ஆகும். இப்பதிகத்தில் வரும் நான்காவது பாடலும், ஒன்பதாவது பாட லும் நம்பிகள் யோகநெறியில் தலைநின்றவராதலை விளக்கி நிற்கின்றன. தொண்டை நாட்டின் சிறப்பினைத் திருக்குறிப்புத் தொண்டர் புராணத்து ஆசிரியர் விளங்கக் கூறியுள்ளார். அத்தகைய சிறப்புகளை உடைமையின் `மங்கலமாம் பெருந் தொண்டை வளநாடு\' என்றார். செங்கண் வளவன் - கோச்செங்கட் சோழர்.

பண் :

பாடல் எண் : 294

அந்நாட்டின் மருங்குதிரு வரத்துறையைச் சென்றெய்தி
மின்னாரும் படைமழுவார்
விரைமலர்த்தாள் பணிந்தெழுந்து
சொன்மாலை மலர்க்கல்வா
யகில்என்னுந் தொடைசாத்தி
மன்னார்வத் திருத்தொண்ட
ருடன்மகிழ்ந்து வைகினார்.

பொழிப்புரை :

அச் சோழநாட்டின் அருகே விளங்கிய திருநெல் வாயில்அரத்துறை என்னும் கோயிலைச் சென்று சேர்ந்து, மின்ஒளி விளங் கும் மழுப்படையை உடைய பெருமானின் நறுமணமுடைய மலர னைய திருவடிகளைப் பணிந்து, எழுந்து, சொல்லாக மலரும் மாலை யாய, `கல்வாய் அகில்\' எனத் தொடங்கும் பாமாலை பாடிச் சாத்தி, மேலான ஆர்வமுடைய திருத்தொண்டருடன் மகிழ்ந்திருந்தார்.

குறிப்புரை :

`கல்வாய் அகில்\' எனத் தொடங்கும் இந்தளப் பண்ணில் அமைந்த (தி.7 ப.3) இப்பதிகத்தில் `எற்றே ஒரு கண்ணிலன்\' என 3ஆவது பாடலில் வரும் குறிப்பு, நம்பிகளின் வரலாற்றிற்கு அரணாகும்.

பண் :

பாடல் எண் : 295

பரமர்திரு வரத்துறையைப்
பணிந்துபோய்ப் பலபதிகள்
விரவிமழ விடையுயர்த்தார்
விரைமலர்த்தாள் தொழுதேத்தி
உரவுநீர்த் தடம்பொன்னி
அடைந்தன்ப ருடனாடி
அரவணிந்தார் அமர்ந்ததிரு
வாவடுதண் டுறைஅணைந்தார்.

பொழிப்புரை :

சிவபெருமானுடைய திருவரத்துறை என்னும் திருப்பதியைப் பணிந்து, அப்பால் சென்று, அவ்வவ் விடங்களிலு முள்ள பல திருப்பதிகளையடைந்து விடைக் கொடியையுடைய சிவபெருமானது மணமிக்க மலரனைய திருவடிகளைத் தொழுது போற்றி, பெருகிய நீருடைய குளிர்ந்த காவிரியாற்றைச் சேர்ந்து, அன்பருடன் நீராடி எழுந்து, அப்பால் சென்று, பாம்பணிந்த பெருமா னின் திருஆவடுதண்டுறையை அணைந்தார்.

குறிப்புரை :

**************

பண் :

பாடல் எண் : 296

அங்கணைவார் தமையடியார்
எதிர்கொள்ளப் புக்கருளிப்
பொங்குதிருக் கோயிலினைப்
புடைவலங்கொண்டு உள்ளணைந்து
கங்கைவாழ் சடையாய்ஓர்
கண்ணிலேன் எனக்கவல்வார்
இங்கெனக்கா ருறவென்னுந்
திருப்பதிக மெடுத்திசைத்தார்.

பொழிப்புரை :

அத்திருப்பதியை அணைய வரும் நம்பிகளை, அடியவர்கள் வந்து எதிர்கொண்டிட, அவர்களுடன் புகுந்தருளி, பெருகிநிற்கும் அருளின் சிறப்புடைய திருக்கோயிலினை வலம் வந்து, உள்ளே சென்று, எம்பிரானை நினைந்து, `கங்கை வார் சடையாய் ஓர் கண்ணிலேன்\' எனக் கவல்பவர், `இங்கு எனக்கு ஆர் உறவு\' என்று சிறந்ததொரு திருப்பதிகத்தை எடுத்துப் பாடி அருளினார்.

குறிப்புரை :

`கங்கைவார் சடையாய்\' (தி.7 ப. 70) எனும் முதற் குறிப்புடைய பதிகம் தக்கேசிப் பண்ணில் அமைந்ததாகும். பதிகப் பாடல் தொறும் `யார் எனக்கு உறவு அமரர்கள் ஏறே\' எனவரும் நிறை வுத் தொடரை ஆசிரியர் முகந்தெடுத்து மொழிந்துள்ளார். திருக்கடைக் காப்பில் `சிங்கடியப்பன்\' எனத் தம்மைக் குறித்திருப்பது, வரலாற் றிற்கு அரணாயுள்ளது. இப்பதிகத்து வரும் இரண்டாவது பாடலில், `கண்ணிலேன் உடம்பில் அடுநோயால் கருத்தழிந்து உனக்கே பொறையானேன்\' எனவரும் முறைப்பாட்டால், கண்ணிழந்ததோடு உடம்பை வருத்தும் மேக நோயும் நம்பிகளுக்கு இருந்தமை விளங்குகின்றது.

பண் :

பாடல் எண் : 297

திருப்பதிகங் கொடுபரவிப்
பணிந்துதிரு வருளாற்போய்
விருப்பினொடுந் திருத்துருத்தி
தனைமேவி விமலர்கழல்
அருத்தியினாற் புக்கிறைஞ்சி
யடியேன்மே லுற்றபிணி
வருத்தமெனை ஒழித்தருள
வேண்டுமென வணங்குவார்.

பொழிப்புரை :

திருப்பதிகம் கொண்டு போற்றி செய்து, பணிந்து, திருவருளால் விருப்பத்துடன் திருத்துருத்தி என்னும் கோயிலை அடைந்து, பெருமானின் திருவடிகளை அன்பினால் வணங்கி, `எம்பிரானே! அடியேனுக்குற்ற மேக நோயினை நீக்கியருள வேண் டும்\' என வணங்குவாராய்,

குறிப்புரை :

பிணி நீங்க வேண்டிப் பாடிய திருப்பதிகம் கிடைத்திலது.

பண் :

பாடல் எண் : 298

பரவியே பணிந்தவர்க்குப்
பரமர் திரு வருள்புரிவார்
விரவியஇப் பிணியடையத்
தவிர்ப்பதற்கு வேறாக
வரமலர்வண் டறைதீர்த்த
வடகுளத்துக் குளிஎன்னக்
கரவில்திருத் தொண்டர்தாங்
கைதொழுது புறப்பட்டார்.

பொழிப்புரை :

இவ்வாறு வேண்டிப் போற்றிய நம்பிகளுக்குப் பெருமான் திருவருள் புரிவாராய், `பொருந்திய இப்பிணி முழுவதும் தீர்தற்கு இக்கோயிலின் அருகேயுள்ள நல்ல மலர்களில் வண்டுகள் மொய்த்துப்பாட விளங்கும் புனித நீரையுடைய வடகுளத்தில் குளிப் பாயாக\' என அருளிட, அதுகேட்ட வஞ்சனையற்ற நம்பிகள் கை தொழுது, புறப்பட்டுச் சென்றார்.

குறிப்புரை :

வடகுளம் - திருக்கோயிலின் வடபுறத்தே உள்ளது. இதன் கரையில், ஒற்றைக்கண்ணுடைய திருவடிவில் நம்பிகளின் திருவுரு அமைந்துள்ளது. தீது நீங்கக் கடல், ஆறு, குளம் முதலியவற்றில் ஆடுவது பண்டு தொட்டு வரும் மரபாகும். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 299

மிக்கபுனல் தீர்த்தத்தின்
முன்னணைந்து வேதமெலாந்
தொக்கவடி வாயிருந்த
துருத்தியார் தமைத்தொழுது
புக்கதனில் மூழ்குதலும்
புதியபிணி யதுநீங்கி
அக்கணமே மணியொளிசேர்
திருமேனி யாயினார்.

பொழிப்புரை :

பெருகிய நீருடைய வடகுளத்துப் புனித நீர் முன் அணுகி நான்மறைகளும் திரண்டதொரு வடிவென இருந்தருளும் திருத்துருத்திப் பெருமானாரைத் தொழுது, மூழ்குதலும், அக்கணமே அவர் உடம்பில் இருந்ததொரு புதிய நோய் நீங்க, முத்தின் ஒளியை யுடைய திருமேனியை உடையராயினார்.

குறிப்புரை :

புதிய பிணி என்றார், கண்ணிழந்த பிணியினின்றும் வேறாதல் பற்றி. எனவே உடல் பற்றிய பிணி; மேக நோய் என்பர்.

பண் :

பாடல் எண் : 300

கண்டவர்கள் அதிசயிப்பக்
கரையேறி உடைபுனைந்து
மண்டுபெருங் காதலினால்
கோயிலினை வந்தடைந்து
தொண்டரெதிர் மின்னுமா
மேகம்எனுஞ் சொற்பதிகம்
எண்திசையு மறிந்துய்ய
ஏழிசையால் எடுத்திசைத்தார்.

பொழிப்புரை :

கண்டவர்கள் வியந்திடக் கரையேறி, உடை அணிந்து, உள்ளத்துப் பெருகும் காதலினால் கோயிலை அடைந்து, அடியவர்கள் திருமுன்பாக நின்று, `மின்னுமா மேகம்\' எனத் தொடங்கி எடுத்த திருப்பதிகத்தை எட்டுத் திக்கில் உள்ளாரும் இறைவனது அற்புதத்தை அறிந்து உய்ய, ஏழிசையும் பொருந்தப் பாடினார்.

குறிப்புரை :

`மின்னுமா மேகம்\' எனத் தொடங்கும் பதிகம், காந்தாரப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.74). `என்னை நான் மறக்குமாறு எம்பெரு மானை என்னுடம்பு அடும்பிணி இடர்கெடுத்தானை\' என இப்பதிக முதற்பாடலில் வரும் தொடர், இவ்வரலாற்றிற்கு அரணா கின்றது. எம் பெருமானை, இடர்கெடுத்தானை மறக்குமாறு என்னை? எனக் கூட்டுக.

பண் :

பாடல் எண் : 301

பண்ணிறைந்த தமிழ்பாடிப்
பரமர்திரு வருள்மறவா
தெண்ணிறைந்த தொண்டருடன்
பணிந்தங்கண் உறைந்தேகி
உண்ணிறைந்த பதிபிறவும்
உடையவர்தாள் வணங்கிப்போய்க்
கண்ணிறைந்த திருவாரூர்
முன்தோன்றக் காண்கின்றார்.

பொழிப்புரை :

பண்ணின் இசைநிறைந்த இத்திருப்பதிகத்தைப் பாடிப் பெருமானுடைய திருவருள் மறவாது, அளவிறந்த அடியவர் களுடன் பணிந்து, அங்குத் தங்கி, அப்பால் சென்று, உளம் நிறைவான திருப்பதிகள் பலவற்றிற்கும் சென்று இறைவரின் திருவடிகளை வணங்கிச் சென்று, கண்ணிற்கு விருந்தாகும் நிறைவுடைய திருவாரூர் முன்னாகத் தோன்றக் காண்கின்றவர்,

குறிப்புரை :

பதிபிறவும் என்பன திருமயிலாடுதுறை, திருப்பேரளம் முதலாயினவாகலாம்.

பண் :

பாடல் எண் : 302

அன்றுதிரு நோக்கொன்றால்
ஆரக்கண் டின்புறார்
நின்றுநில மிசைவீழ்ந்து
நெடிதுயிர்த்து நேரிறைஞ்சி
வன்தொண்டர் திருவாரூர்
மயங்குமா லையிற்புகுந்து
துன்றுசடைத் தூவாயார்
தமைமுன்னந் தொழவணைந்தார்.

பொழிப்புரை :

அன்று தமது ஒரு கண்ணால் கொள்ளும் திருப் பார்வையால், திருவாரூரின் அற்புதம் முழுவதும் ஆரக் கண்டு இன்புற இயலாதவராய் நின்று, நிலத்தின் மீது வீழ்ந்து, நெடிதே மூச்செறிந்து, நேராக வணங்கி, எழுந்து, நம்பிகள், பொழுது மயங்கும் மாலைக் காலத்தில் திருவாரூர் சென்று, அங்குப் பரந்த சடையை உடைய தூவாயராகிய பெருமானை முன்னாகப் பணிதற்கு அணைந்தார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 303

பொங்குதிருத் தொண்டருடன்
உள்ளணைந்து புக்கிறைஞ்சி
துங்கவிசைத் திருப்பதிகம்
தூவாயா என்றெடுத்தே
இங்கெமது துயர்களைந்து
கண்காணக் காட்டாயென்
றங்கணர்தம் முன்னின்று
பாடியருந் தமிழ்புனைந்தார்.

பொழிப்புரை :

அன்புமிகும் அடியவர்களுடன் உள்ளே சென்று வணங்கி, மேலான இசையையுடைய திருப்பதிகமாய, `தூவாயா\' எனப் பாட எடுத்தே, ` இங்கு எனது துயர்களைந்து கண்காணக் காட்டாய்\' என்னும் பொருளியையப் போற்றி மகிழ்ந்து, கண்ணுதற் பெருமான் திருமுன்பு நின்று, அரிய தமிழ்மாலையைச் சூட்டினார்.

குறிப்புரை :

`தூவாயா\' எனத் தொடங்கும் பதிகம் பஞ்சமப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.96). இடைதெரிந்து - தம்வேண்டுகோளை விரும்பி ஏற்றற்குரியகாலத்தே. `இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக\' (குறள்., 712) என வரும் திருக்குறளானும் இப் பொருண்மை அறியப்படும். தூவாயார் - பரவையுண் மண்டளியில் எழுந்தருளியிருக்கும் இறைவர் பெயர். தூ - உண்ணுகின்ற; வாயார் - திருவாயினை உடை யவர். ஒருகால் வந்த ஊழிப்பெருவெள்ளத்தால் திருவாரூர் அழியா திருக்கக் காத்தவர் என்னும் குறிப்பினது. பரவை - கடல், உண் - உண்ணுகின்ற; மண்டளி - பெருமான் எழுந்தருளியிருக்கும் இடம். தூவாயர் என்பதற்கு தூ - பற்றுக்கோடு; ஆயார் - ஆயவர் எனப் பொருள்கண்டு எவ்வுயிர்க்கும் பற்றுக் கோடாயவர் எனப் பொருள் விரித்துத் தூ பற்றுக் கோடாதற்கு `இனந்தூய்மை தூவா வரும்\' (குறள்., 455) எனும் திருக்குறளையும் மேற்கோள் காட்டுவர் சிவக்கவி மணியார்.

பண் :

பாடல் எண் : 304

ஆறணியுஞ் சடையாரைத்
தொழுதுபுறம் போந்தங்கண்
வேறிருந்து திருத்தொண்டர்
விரவுவா ருடன்கூடி
ஏறுயர்த்தார் திருமூலட்
டானத்துள் இடைதெரிந்து
மாறில்திரு அத்தயா
மத்திறைஞ்ச வந்தணைந்தார்.

பொழிப்புரை :

கங்கை அணிந்த திருச்சடையையுடைய இறைவரை வணங்கி, அருள்பெற்று, வெளிப்போந்து, அவ்விடத்தே வேறாக இருந்து வந்த சிவனடியார்கள் பலருடன் கூடி விடைக் கொடியை உயர்த்திய பெருமானது பெருங்கோயிலாய திருமூலட் டானத்தைச் சேர்வதற்கு தக்க அருளுடைய காலத்தை உணர்ந்து, மாறிலாத திருவருள் நிறைந்த நடுயாமத்து வணங்கிட அங்கு வந்தணைந்தார்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 305

ஆதிதிரு அன்பரெதிர்
அணையஅவர் முகநோக்கிக்
கோதிலிசை யாற்குருகு
பாயவெனக் கோத்தெடுத்தே
ஏதிலார் போல்வினவி
ஏசறவால் திருப்பதிகம்
காதல்புரி கைக்கிளையாற்
பாடியே கலந்தணைவார்.

பொழிப்புரை :

ஆதியாய பெருமானின் அன்பர்கள், இவர் எதிரில் வரக்கண்டு, அவர்கள் முகம் நோக்கிக் கோதிலாத இசையையுடைய பதிகத்தால், `குருகு பாய\' எனத் தொடங்கி எடுத்து, அவர்களை வினவுமுகமாகத் தாம் அயலவர்போல அவர்களைக் கேட்டுத் தமது கவலை மிகுதியினால் பாடிய பதிகம், எம்பிரான்பால் காதல் புரியும், கைக்கிளை என்னும் திணையில் அமைய, அத்தொண்டர்களுடன் கலந்து வந்தருளுவார்,

குறிப்புரை :

இம்முதற் குறிப்புடைய பதிகம் கொல்லிப் பண்ணில் அமைந்ததாகும்(தி.7 ப.37). காமப் பகுதி கடவுளும் வரையார் ஏனோர் பாங்கினும் என்மனார்புலவர் -தொல்.புறத்.28 என்பது தொல்காப்பியம். இதன்கண் வரும் காமப் பகுதி என்பதற்கு, நச்சினார்க்கினியர், கடவுள் மாட்டுக் கடவுட் பெண்டிர் நயப்பனவும், கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயப்பனவும், கடவுள் மானிடப் பெண்டிரை நயப்பனவும் பிறவுமாம் என விளக்கம் கண்டனர். அவ்வகையில் இக்கைக்கிளை கடவுள்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பகுதியாகும். பொருண்மை இதுவாயினும், அடியவர் முகநோக்கி அருளியதாக ஆசிரியர் சேக்கிழார் அருளியிருக்கும் திறம் ஆழமுடையதாகும்.

பண் :

பாடல் எண் : 306

சீர்பெருகுந் திருத்தேவா
சிரியன்முன் சென்றிறைஞ்சிக்
கார்விரவு கோபுரத்தைக்
கைதொழுதே உட்புகுந்து
தார்பெருகு பூங்கோயில்
தனைவணங்கிச் சார்ந்தணைவார்
ஆர்வமிகு பெருங்காத
லால்அவனி மேல்வீழ்ந்தார்.

பொழிப்புரை :

சீர்மை மிகுந்த தேவாசிரியத் திருமண்டபத்தை முன்சென்று வணங்கி, மேகங்கள் படிந்த பெருங் கோபுரத்தைக் கை தொழுது, உள்ளே சென்று, மாலைகள் மிக விளங்குகின்ற பூங்கோயில் என்னும் பெயர் பூண்ட பெருமானது திருமாளிகையினை வணங்கிச் சேருகின்ற நம்பிகள், இறைவன் திருமுன்பு வருபவராய், ஆர்வம் மிகுந்த பெருங்காதலால் நிலத்தின்மேல் தம்வயமிழந்து வீழ்ந்தார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின

பண் :

பாடல் எண் : 307

வீழ்ந்தெழுந்து கைதொழுது
முன்னின்று விம்மியே
வாழ்ந்தமலர்க் கண்ணொன்றால்
ஆராமல் மனமழிவார்
ஆழ்ந்ததுயர்க் கடலிடைநின்
றடியேனை யெடுத்தருளித்
தாழ்ந்தகருத் தினைநிரப்பிக்
கண்தாரும் எனத்தாழ்ந்தார்.

பொழிப்புரை :

வீழ்ந்து எழுந்து கைதொழுது முன்னின்று விம்மி வாழ்வுடைய கண் ஒன்றால் கண்டு நிறைவு கொள்ளாது மனம் அயர்வார், ஆழ்ந்த துயர்க் கடலிடை நின்று அடியேனை எடுத்தருளி, தாழ்ந்து வேண்டிக் குறையிரக்கும் எனது கருத்தை நிரப்பிக் கண்ணி னைத் தாரீர் என வேண்டினார்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 308

திருநாவ லூர்மன்னர்
திருவாரூர் வீற்றிருந்த
பெருமானைத் திருமூலட்
டானஞ்சேர் பிஞ்ஞகனைப்
பருகாஇன் னமுதத்தைக்
கண்களாற் பருகுதற்கு
மருவார்வத் துடன்மற்றைக்
கண்தாரீ ரெனவணங்கி.

பொழிப்புரை :

திருநாவலூர் அரசரான நம்பிகள், திருவாரூரில் வீற்றிருந்த பெருமானை, திருமூலட்டானத்தே கோயில் கொண் டிருக்கும் பரம்பொருளை, உண்ணற்கரிய அமுதத்தைக் கண்களால் கண்டு மகிழ்தற்கு உள்ளத்துக் கொண்ட ஆர்வத்துடன், மற்றைக் கண்தாரீர் என வேண்டி வணங்கி,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 309

மீளா வடிமை எனவெடுத்து
மிக்க தேவர் குலமெல்லம்
மாளா மேநஞ் சுண்டருளி
மன்னி யிருந்த பெருமானைத்
தாளா தரிக்கும் மெய்யடியார்
தமக்கா மிடர்நீர் தரியீரென்
ஆளாந் திருத்தோ ழமைத்திறத்தால்
அஞ்சொற் பதிகம் பாடினார்.

பொழிப்புரை :

`மீளா அடிமை\' எனத் தொடங்கி, மிக்க மேலான தேவர்குலம் எல்லாம் மாளாதவாறு அன்றெழுந்த நஞ்சுண்டருளித் திருவாரூரில் இருந்தருளும் பெருமானை, நின் திருவடிகளை விரும்பி வணங்கி வரும் மெய்யடியார்களுக்கு வருகின்ற இடரை நீர் பார்த் திருந்து தரிக்க மாட்டீரே! எனும் குறிப்புடன் தோழமையும் ஆகிய திறத்தால் அழகிய சொற்களையுடைய அத்திருப்பதிகத்தைப் பாடினார்.

குறிப்புரை :

ஆளாதல் - அடிமையாதல். `மீளா அடிமை\' எனத் தொடங்கும் பதிகம், செந்துருத்திப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.95). அல்லல் சொன்னக்கால் வாளா அங்கிருப்பீர் என்பதை வினவு முகமாகக் கொண்டு காணில், வறிதே அங்கு இருப்பீர்? இருக்க மாட்டீரே! என்ற பொருளைச் சொற்குறிப்பால் அறியுமாற்றான், ஆசிரியர் இவ்வகையில் அமைப்பார் ஆயினார். அங்ஙனம் வாளா இருக்க மாட்டாதீர், இதுபொழுது மறுதலையாகிய இருப்பின் வாழ்ந்து போதீரே எனும் கருத்துடையதாக அருளுகின்றார் ஆசிரியர்.

பண் :

பாடல் எண் : 310

பூத முதல்வர் புற்றிடங்கொண்
டிருந்த புனிதர் வன்தொண்டர்
காதல் புரிவே தனைக்கிரங்கிக்
கருணைத் திருநோக் களித்தருளிக்
சீத மலர்க்கண் கொடுத்தருளச்
செவ்வே விழித்து முகமலர்ந்து
பாத மலர்கள் மேற்பணிந்து
வீழ்ந்தார் உள்ளம் பரவசமாய்.

பொழிப்புரை :

உயிர்கட்கெல்லாம் முதல்வராய புற்றிடங் கொண்ட பெருமானார், நம்பிகள் அன்பினால் எடுத்து மொழியும் இத்துன்பங் களுக்கு இரங்கிக் கருணையால் குளிர்ந்த மலர்க்கண்ணைக் கொடுத் தருளலும், உடன் செப்பமாகப் பார்த்து, முக மலர்ந்து, தம்வயமிழந்த வராய், இறைவரின் திருவடிமலர்களில் பணிந்து வீழ்ந்தார்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 311

விழுந்தும் எழுந்தும் பலமுறையால்
மேவிப் பணிந்து மிகப்பரவி
எழுந்த களிப்பி னாலாடிப்
பாடி இன்ப வெள்ளத்தில்
அழுந்தி யிரண்டு கண்ணாலும்
அம்பொற் புற்றி னிடையெழுந்த
செழுந்தண் பவளச் சிவக்கொழுந்தின்
அருளைப் பருகித் திளைக்கின்றார்.

பொழிப்புரை :

விழுந்தும் எழுந்தும் பலமுறையால் பணிந்து மிக வும் போற்றி, மனத்தில் எழுந்த மகிழ்வால் ஆடிப்பாடி இன்பவெள்ளத் தில் அழுந்தி, இரு கண்களாலும் அழகிய பொன் புற்றின் இடனாக முளைத்தெழுந்த செழுமையாய தண்ணளியையுடைய பவள ஒளி பரந்த சிவக்கொழுந்தின் அருளைப் பருகித் திளைத்து இன்புறுமவர்.

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 312

காலம் நிரம்பத் தொழுதேத்திக்
கனக மணிமா ளிகைக்கோயில்
ஞால முய்ய வரும்நம்பி
நலங்கொள் விருப்பால் வலங்கொண்டு
மாலும் அயனு முறையிருக்கும்
வாயில் கழியப் புறம்போந்து
சீல முடைய அன்பருடன்
தேவா சிரியன் மருங்கணைந்தார்.

பொழிப்புரை :

அவ்வழிபாட்டுக் காலம் நிரம்பும் வரையிலும் தொழுது போற்றிப் பொன்மயமாய் மிளிர்கின்ற அழகிய மாளிகை களை உடைய கோயிலினை, இவ்வுலகு உய்ந்திட வரும் நம்பிகள், நலம்கொள்ளும் விருப்பால் வலம் கொண்டு வந்து திருமாலும் நான் முகனும் முறையே வழிபாட்டிற்காகக் காத்திருக்கும் திருவாயிலைக் கடந்து, சீலமுடைய அன்பர்களுடன் தேவாசிரிய மண்டபம் அருகாக வந்து சேர்ந்தார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 313

நங்கை பரவை யார்தம்மை
நம்பி பிரிந்து போனதற்பின்
தங்கு மணிமா ளிகையின்கண்
தனிமை கூரத் தளர்வார்க்குக்
கங்குல் பகலாய்ப் பகல்கங்கு
லாகிக் கழியா நாளெல்லாம்
பொங்கு காதல் மீதூரப்
புலர்வார் சிலநாள் போனதற்பின்.

பொழிப்புரை :

இவ்வாறு இவர் இங்கிருப்ப, பரவையார், தம்மைச் சுந்தரர் பிரிந்து சென்றது முதல், தம் அழகிய மாளிகையினிடத்துத் தனிமை கூர்ந்திடத் தளர்ந்திடுவார், இரவு பகலாகவும், பகல் இரவாக வும் கால வேறுபாடு உணராதவாறு தனிமையின் துயரால் கழிகின்ற நாள்கள் எல்லாம் பொங்கு காதல் மிகப் பெருக வாட்டம் மிக, அக்கால எல்லை கழிய,

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 314

செம்மை நெறிசேர் திருநாவ
லூரர் ஒற்றி யூர்சேர்ந்து
கொம்மை முலையார் சங்கிலியார்
தம்மைக் குலவு மணம்புணர்ந்த
மெய்ம்மை வார்த்தை தாம்அவர்பால்
விட்டார் வந்து கட்டுரைப்பத்
தம்மை யறியா வெகுளியினால்
தரியா நெஞ்சி னொடுந்தளர்வார்.

பொழிப்புரை :

செம்மை நெறியாம் சிவநெறியைச் சேர்ந்த திரு நாவலூர்த் தலைவராய நம்பிகள், திருவொற்றியூர் சேர்ந்து பெருத்த மார்பகங்களையுடைய சங்கிலியாரைச் சிறப்பாகத் திருமணம் செய்து கொண்ட மெய்ம்மையை, அவர்தம் நிலையை அறிந்திடத் தாம் அவர்பால் விட்ட மக்கள் வந்து சொல்ல, அதுகேட்டலும், தம்மையும் அறியாது எழுந்த சினமிகுதியால் தாங்கொணாத நெஞ்சமொடும் தளர்ச்சியுறுவார்

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 315

மென்பூஞ் சயனத் திடைத்துயிலும்
மேவார் விழித்தும் இனிதமரார்
பொன்பூந் தவிசின் மிசையினிரார்
நில்லார் செல்லார் புறம்பொழியார்
மன்பூ வாளி மழைகழியார்
மறவார் நினையார் என்செய்வார்
என்பூ டுருக்கும் புலவியோ
பிரிவோ இரண்டின் இடைப்பட்டார்.

பொழிப்புரை :

மெல்லிய மலர்ப்படுக்கையில் துயில் கொள்ளார். கண்விழித்து ஆறுதலாக இருக்கவும் அறியார். பொன்பதித்த பூந்தவி சின் மேலும் இருக்க மாட்டார். நில்லார். நடந்திடார். வேறிடம் போகார். மன்மதனுடைய மலராய மழையிலும் நீங்கார். சுந்தரரை மறக்கவும் மாட்டார். சினம் மிகுதியால் அவரை நினைக்கவும் மாட் டார். இந்நிலையில் என் செய்வார்? என்பினையும் ஊடுருக்கும் புல வியோ! பிரிவோ! இவ்விரண்டானும் வரும் துயரின் இடைப்பட்டார்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 316

ஆன கவலைக் கையறவால்
அழியும் நாளில் ஆரூரர்
கூனல் இளவெண் பிறைக்கண்ணி
முடியார் கோயில் முன்குறுகப்
பானல் விழியார் மாளிகையில்
பண்டு செல்லும் பரிசினால்
போன பெருமைப் பரிசனங்கள்
புகுதப் பெறாது புறநின்றார்.

பொழிப்புரை :

இவ்வாறான கவலையின் துயரால் அழிகின்ற நாள்களில், வளைந்த இளைய வெண்ணிறமுடைய பிறைக்கொழுந் தைச் சூடிய முடியையுடைய திருவாரூர்ப் பெருமான் கோயில் முன் நம்பியாரூர் வந்து சேரலும், குவளையனைய கண்களையுடைய பரவையாரது மாளிகையில் முன்போலச் சென்றிடும் ஏவலர்கள், யாவரும் உள்ளே சென்றிடற்கு அனுமதி இல்லாதாக வெளியே நின்றார்கள்.

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 317

நின்ற நிலைமை அவர்கள் சிலர்
நிலவு திருவா ரூரர்எதிர்
சென்று மொழிவார் திருவொற்றி
யூரில் நிகழ்ந்த செய்கையெலாம்
ஒன்று மொழியா வகையறிந்தங்
குள்ளார் தள்ள மாளிகையில்
இன்று புறமுஞ் சென்றெய்தப்
பெற்றி லோம்என் றிறைஞ்சினார்.

பொழிப்புரை :

அவ்வாறு நின்றவர்களில் சிலர், திருவாரூரர் எதிர்சென்று சொல்லுவார், `திருவொற்றியூரில் நிகழ்ந்த செய்கை எல் லாம் ஒன்றும் ஒழியாத வகை அறிந்து, அங்குள்ளார் எங்களை உட் புகாதபடி வெளியே தள்ளிடப் பரவையாரது மாளிகை முற்றத்தின் வெளி யில்கூடி நாம் போகமுடியாது போனோம்\' என்று கூறி வணங்கினர்.

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 318

மற்ற மாற்றங் கேட்டழிந்த
மனத்த ராகி வன்தொண்டர்
உற்ற இதனுக் கினியென்னோ
செயலேன் றுயர்வார் உலகியல்பு
கற்ற மாந்தர் சிலர் தம்மைக்
காதற் பரவை யார்கொண்ட
செற்ற நிலைமை யறிந்தவர்க்குத்
தீர்வு சொல்லச் செலவிட்டார்.

பொழிப்புரை :

மற்று அம்மாற்றம் கேட்டு அழிந்த மனமுடைய ராகிய நம்பிகள், `இனி இதனுக்கு என்னோ செயல்?\' என்று உணர்ப வர், அதற்காக உலகின் நீதி இயல்பைக் கற்ற மாந்தர் சிலர் தம்மை அழைத் துத் தமது காதலியார் பரவையார் கொண்ட சினத்தைத் தெரிந்து, அதுதீர்தற்கேற்ப நன்மை கூறித் தெருட்டுமாறு செல்லவிட்டார்.

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 319

நம்பி யருளால் சென்றவரும்
நங்கை பரவை யார்தமது
பைம்பொன் மணிமா ளிகையணைந்து
பண்பு புரியும் பாங்கினால்
வெம்பு புலவிக் கடலழுந்தும்
மின்னே ரிடையார் முன்னெய்தி
எம்பி ராட்டிக் கிதுதகுமோ
என்று பலவும் எடுத்துரைப்பார்.

பொழிப்புரை :

நம்பிகளின் அருளாணைவழிச் சென்ற அப் பெரியோர்களும், பெண்மணியாம் பரவையார் தம் மாளிகையினை அணைந்து, அவர்தம் செற்றத்தைத் தணிக்கும் தன்மையால், வெம் பிடும் கவலையாய புலவியெனும் கடலில் வீழ்ந்து அழுந்திக் கரை காணாது தவித்திடும் மின்னலை ஒத்த சிற்றிடையை உடைய பரவை யார் திருமுன்பு சென்று, `எம்பிராட்டிக்கு இத்தன்மை தகுதியாமோ?\' என்று பலவும் எடுத்துச் சொன்னார்கள்.

குறிப்புரை :

பண்பு புரியும் பாங்கினால் என்பதற்குக் கற்பை அவா விய நிலமையால் புலவி என்னும் கடலில் அழுந்தி நிற்கும் பரவையார் எனப் பொருள் கொள்வாரும் உளர்.

பண் :

பாடல் எண் : 320

பேத நிலைமை நீதியினாற்
பின்னும் பலவுஞ் சொன்னவர்முன்
மாத ரவரும் மறுத்துமனங்
கொண்ட செற்றம் மாற்றாராய்
ஏதம் மருவு மவர்திறத்தில்
இந்த மாற்றம் இயம்பில்உயிர்
போத லொழியா தெனவுரைத்தார்
அவரும் அஞ்சிப் புறம்போந்தார்.

பொழிப்புரை :

முன்னர் இனியவாகக் (சாமமாக) கூறிப் புலவி நீக்க முயன்றவர்கள், மேற்கொண்டு புலவி கொள்வதாலாய இன்னாமை யையும், அது நீங்கி வாழ்தலாகிய இனிமையையும் ஆக வேறுபடுத்திக் (பேதமாக) கூற, பரவையாரும் அவர் உரையை மறுத்து, மனத்தில் கொண்ட சினம் ஆறாதவராய்க் `குற்றம் பொருந்திய அவர் திறத்ததாக இனியும் நீர் சொல்ல முற்படின், எனது உயிர் நீங்கிடும்\' என்று கூற, அதுகேட்ட அப்பெரியோரும் அஞ்சி வெளியே போந்தார்கள்.

குறிப்புரை :

இப்பாடலில் பேத நிலைமை (வேற்றுமைப்பட) கூற என்றதால், இதுகாறும் கூறியது சாம நிலைமை (இன்சொல்லாக) என்பது பெற்றாம். இன்சொற் கூறல் (சாமம்), வேறுபடுத்திக் கூறல் (பேதம்), கொடுத்தல் (தானம்), ஒறுத்தல் (தண்டம்) என ஒருவர் ஒருவரை ஆற்றுப்படுத்தும் நிலை நான்காம். இவற்றுள் புலவி நீக்கத்திற் கெனக் கொளற்குரியன முன்னைய இரண்டுமேயாதலின், இவ்விரு வகையானும் கூறினார்கள். பிள்ளைத் தமிழில் அம்புலிப் பருவத்தில் இந்நால்வகையானும் ஆற்றப்படுத்தும் மரபைக் காணலாம்.

பண் :

பாடல் எண் : 321

போந்து புகுந்த படியெல்லாம்
பூந்தண் பழன முனைப்பாடி
வேந்தர் தமக்கு விளம்புதலும்
வெருவுற் றயர்வார் துயர்வேலை
நீந்தும் புணையாந் துணைகாணார்
நிகழ்ந்த சிந்தா குலம்நெஞ்சில்
காந்த அழிந்து தோய்ந்தெழார்
கங்குல் இடையா மக்கடலுள்.

பொழிப்புரை :

வெளிப்போந்த பெரியவர்கள், அங்கு நிகழ்ந்தன வற்றை மலர்கள் நிறைந்த குளிர்ந்த வயல்களை உடைய திருமுனைப் பாடி நாட்டின் தலைவராய நம்பிகளுக்கு எடுத்துச் சொல்லுதலும், அது கேட்ட அவர் அஞ்சி அயர்ச்சி கொள்வாராய்த் தம்மிடத்துக் கொண்ட கவலைக் கடற்குக் கரைகாணும் துணையைக் காணாராய்ப் பெருந் துன்பத்தால் மனமழிந்து, சோர்ந்து, அன்றைய இரவின் இடையாம மாய கடலில் அழுந்தி நிற்பாராயினர்.

குறிப்புரை :

இடையாமம் - யாமத்தின் இடை; பாதியிரவு - நள்ளிரவு.

பண் :

பாடல் எண் : 322

அருகு சூழ்ந்தார் துயின்றுதிரு
அத்த யாமம் பணிமடங்கிப்
பெருகு புவனஞ் சலிப்பின்றிப்
பேயும் உறங்கும் பிறங்கிருள்வாய்
முருகு விரியு மலர்க்கொன்றை
முடிமேல் அரவும் இளமதியுஞ்
செருகு மொருவர் தோழர்தனி
வருந்தி இருந்து சிந்திப்பார்.

பொழிப்புரை :

அருகில் இருந்த ஏவலர்களும் துயில, நடுயாமத்து நிகழும் வழிபாடும் அடங்கிப் பெருகிய இவ்வுலகில் உள்ளாரும் தமது செயல் ஒழிந்து உறங்கப் பேயும் உறங்கிக் கிடக்கும் இருளிடத்து, மணம் கமழும் மலர்க் கொன்றையைச் சூடிய திருமுடிமேல் பாம்பை யும் இளம்பிறையையும் கொண்ட ஒப்பற்ற இறைவரின் தோழரான நம்பிகள் தனியே இருந்து வருந்திச் சிந்திப்பாராய்,

குறிப்புரை :

இப்பாடலில் வரும் முன்னிரண்டடிகள், `மன்னுயி ரெல் லாம் துயிற்றி அளித்திரா என்னல்லது இல்லைத் துணை\' (குறள்., 1168), `நனந்தலை உலகமும் துஞ்சும் ஓர்யான்மன்ற துஞ்சாதேனே\' எனவரும் சங்கச் செய்யுள்களை நினைவு கூரச் செய்கின்றன.

பண் :

பாடல் எண் : 323

முன்னை வினையால் இவ்வினைக்கு
மூல மானாள் பாலணைய
என்னை உடையாய் நினைந்தருளாய்
இந்த யாமத் தெழுந்தருளி
அன்ன மனையாள் புலவியினை
அகற்றில் உய்ய லாமன்றிப்
பின்னை யில்லைச் செயவென்று
பெருமா னடிகள் தமைநினைந்தார்.

பொழிப்புரை :

முன்னர்ச் செய்த வினையின் பயனாய், இப்பிறவியில் இத்துயருக்குக் காரணமாகும் பரவைபால் நான் சென்றிட, என்னை அமையாக உடையவனே! நினைந்தருளாய்! என நினைவு கொள்பவர், இவ்யாமத்து நீர் எழுந்தருளி அன்னப் பறவையை ஒத்த அப்பரவையின் புலவியை நீக்கினால் அன்றி, யான் உய்தற்குரிய செயல் இல்லை, என்று தம் பெருமானின் திருவடிகளைச் சிந்தை செய்தார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

பண் :

பாடல் எண் : 324

அடியார் இடுக்கண் தரியாதார்
ஆண்டு கொண்ட தோழர்குறை
முடியா திருக்க வல்லரே
முற்று மளித்தாள் பொற்றளிர்க்கைத்
தொடியார் தழும்பும் முலைச்சுவடும்
உடையார் தொண்டர் தாங்காணும்
படியால் அணைந்தார் நெடியோனுங்
காணா அடிகள் படிதோய.

பொழிப்புரை :

அடியவர்களின் துன்பங்களைக் கண்டு பொறுக்க லாற்றாத இறைவர், தாம் விரும்பி ஆண்டுகொண்ட தோழராய நம்பிகளின் குறையினை முடிக்காமல் மனம் வலித்திருக்க வல்லமை உடையரோ? (அல்லர். ஆதலின்,) உலகம் முழுதும் பெற்ற உமையம் மையாரின் அழகிய தளிரனைய கைகளின் வளையல் தழும்பும், முலைச் சுவடும் கொண்ட இறைவர், திருமாலும் பன்றியாய்ச் சென் றுணர முடியாத திருவடிகள் இந்நிலவுலகில் தோய்த்திடத் தம்தொண் டர் தம்மை நேராகக் காணும்படியாக வந்தருளினார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 325

தம்பி ரானார் எழுந்தருளத்
தாங்கற் கரிய மகிழ்ச்சியினால்
கம்பி யாநின் றவயவங்கள்
கலந்த புளகம் மயிர்முகிழ்ப்ப
நம்பி யாரூ ரரும்எதிரே
நளின மலர்க்கை தலைகுவிய
அம்பி காவல் லவர்செய்ய
அடித்தா மரையின் கீழ்வீழ்ந்தார்.

பொழிப்புரை :

தம் பெருமான் எழுந்தருளி வந்திடலும், அவரைக் கண்டு தாங்கற்கரிய மகிழ்ச்சியினால் உடல் உறுப்புக்கள் அனைத்தும் நடுக்கம் கொண்டிட, மயிர்க்கூச்செறிந்திட, நம்பிகளும் அவர் திரு முன்பாக எழுந்து, தாமரை மலர் அனைய கைகள் உச்சிமேற்குவிய வணங்கி, உமையொரு கூறராய சிவபெருமானின் சிவந்த தாமரை போலும் திருவடியின் கீழ் வீழ்ந்தார்.

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 326

விழுந்து பரவி மிக்கபெரு
விருப்பி னோடும் எதிர் போற்றி
எழுந்த நண்பர் தமைநோக்கி
யென்நீ யுற்ற தென்றருளத்
தொழுந்தங் குறையை விளம்புவார்
யானே தொடங்குந் துரிசிடைப்பட்
டழுந்து மென்னை யின்னமெடுத்
தாள வேண்டு முமக்கென்று.

பொழிப்புரை :

வீழ்ந்து வணங்கி எழுந்து, மிக்க விருப்பினுடன் போற்றி முன்நின்ற தோழரை நோக்கி, `உனக்கு நேர்ந்தது என்ன?\' என்று வினவ, நம்பிகளும் தொழுது தமது குறையைச் சொல்வாராய், `யானே தொடங்கிய குற்றத்தின் உட்பட்டு அழுந்தி வேதனையுறும் என்னை இன்னமும் எடுத்தாள வேண்டும், அது உமக்காய செயல் ஆகும்\' என்று கூறி,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 327

அடியே னங்குத் திருவொற்றி
யூரில் நீரே யருள்செய்ய
வடிவே லொண்கண் சங்கிலியை
மணஞ்செய் தணைந்த திறமெல்லாம்
கொடியே ரிடையாள் பரவைதா
னறிந்து தன்பால் யான்குறுகின்
முடிவே னென்று துணிந்திருந்தா
ளென்னான் செய்வ தெனமொழிந்து.

பொழிப்புரை :

`அடியேன் அங்குத் திருவொற்றியூரில் நீரே அருள்புரிந்திட, வடித்த வேல்போலும் கூரிய கண்களையுடைய சங்கிலியாரைத் திருமணம் செய்து கூடிய தன்மை எல்லாவற்றையும், கொடிபோலும் சிறிய இடையையுடைய பரவை தான் கேள்வியுற்றுச் சினம் கொண்டு, தன்பால் யான் செல்லின் தான் மடிவேன் என்று துணிந்துள்ளாள்; இதற்கு நான் என் செய்வேன்?\' என்று கூறியருளி,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 328

நாய னீரே நான்உமக்கிங்
கடியே னாகில் நீர்எனக்குத்
தாயி னல்ல தோழருமாந்
தம்பி ரானா ரேயாகில்
ஆய வறிவும் இழந்தழிவேன்
அயர்வு நோக்கி அவ்வளவும்
போயிவ் விரவே பரவையுறு
புலவி தீர்த்துத் தாருமென.

பொழிப்புரை :

`என் தலைவனே! நான் உமக்கு இங்கு அடியேன் என்பதனால், அத்துடன் நீர் எனக்குத் தாயினும் இனிய கருணை உடைய நல்ல தோழருமாய தலைவருமாகுவீரானால், எனக்குற்ற அறிவெல்லாம் பரவைபால் கொண்ட காதலால் அழிந்திடும் வருத்தத் தைக் கண்டு, அவ்வளவில் நீர் இவ்விரவே பரவைபால் சென்று, அவள் கொண்டிருக்கும் புலவியை நீக்கியருள வேண்டும்\' என்று கூறலும்,

குறிப்புரை :

*****************

பண் :

பாடல் எண் : 329

அன்பு வேண்டும் தம்பெருமான்
அடியார் வேண்டிற் றேவேண்டி
முன்பு நின்று விண்ணப்பம்
செய்த நம்பி முகம்நோக்கித்
துன்பம் ஒழிநீ யாம்உனக்கோர்
தூத னாகி இப்பொழுதே
பொன்செய் மணிப்பூண் பரவைபால்
போகின் றோம்என் றருள்செய்தார்.

பொழிப்புரை :

அடியாரது அன்பினையே வேண்டி நிற்கின்ற பெருமான், தனது அடியவராய நம்பிகள் வேண்டியதையே தாம் செய்திட விரும்பி, முன்பாக நின்று விண்ணப்பம் செய்த அவர்தம் முகத்தை நோக்கியருளி, `சுந்தரனே! உனது துன்பத்தை ஒழித்திடு வாய், யாம் உனக்கு ஒரு தூதனாக இப்பொழுதே, பொன்னால் செய்த அழகிய அணிகளை அணிந்த பரவைபால் செல்கின்றோம்\' என்று அருள் செய்தார்.

குறிப்புரை :

இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 330

எல்லை யில்லாக் களிப்பின ராய்
இறைவர் தாளில் வீழ்ந்தெழுந்து
வல்ல பரிசெல் லாந்துதித்து
வாழ்ந்து நின்ற வன்தொண்டர்
முல்லை முகைவெண் ணகைப்பரவை
முகில்சேர் மாடத் திடைச்செல்ல
நில்லா தீண்ட எழுந்தருளி
நீக்கும் புலவி யெனத்தொழுதார்.

பொழிப்புரை :

எல்லை இல்லாத களிப்புடையராகி இறைவரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி எழுந்து, தம்மால் இயன்ற வகையால் எல்லாம் வாழ்த்தி, வாழ்வு பெற்ற நம்பிகள், தமது தலைவரை நோக்கி, `முல்லை மலர்போலும் முறுவலுடைய பரவையின் முகில்கள் படிந்த மாடத்திடைச் சென்றிட, இங்கு நில்லாது இப்பொழுதே எழுந்தருளிச் சென்று, அவள் புலவியை நீக்கியருள்வீராக\' எனத் தொழுதார்.

குறிப்புரை :

ஈண்ட - விரைவாக. `நில்லாது ஈண்ட எழுந்தருளி நீக்கும்\' என வேண்டியது நம்பிகளின் தோழமைத் திறம் பற்றியாம்.

பண் :

பாடல் எண் : 331

அண்டர் வாழக் கருணையினால்
ஆல காலம் அமுதாக
உண்ட நீலக் கோலமிடற்
றொருவர் இருவர்க் கறிவரியார்
வண்டு வாழும் மலர்க்கூந்தல்
பரவை யார்மா ளிகைநோக்கித்
தொண்ட னார்தம் துயர்நீக்கத்
தூத னாராய் எழுந்தருள.

பொழிப்புரை :

தேவர்கள் வாழ்ந்திடக் கருணையால் நஞ்சினை அமுதமாக உண்ட நீலநிறமுடைய அழகிய திருக்கழுத்தையுடைய ஒப்பற்றவரும், அயன் திருமால் என்னும் இருவரும் காண அரிய வரும் ஆகிய இறைவர், வண்டுகள் மொய்த்திடும் மலர்களைச் சூடிய கூந்தலையுடைய பரவையாரது திருமாளிகையினை நோக்கிப் புறப்பட்டுத் தமது தொண்டனாரின் துயர் தீர்த்திடத் தாம் ஒரு தூதுவராக எழுந் தருளிச் செல்ல,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 332

தேவா சிரியன் முறையிருக்குந்
தேவ ரெல்லாஞ் சேவித்துப்
போவார் தம்மில் வேண்டுவார்
போத ஒழிந்தார் புறத்தொழிய
ஓவா அணுக்கச் சேவகத்தில்
உள்ளோர் பூத கணநாதர்
மூவா முனிவர் யோகிகளின்
முதலா னார்கள் முன்போக.

பொழிப்புரை :

தேவாசிரிய மண்டபத்தில் முறையாகத் தங்கி இருக்கும் தேவர்கள் பலரும் எழுந்து பெருமானை வணங்கிச் செல்ப வர்கள் செல்ல உடன்வருபவர்கள் வர, ஒழிந்தவர்கள் புறத்தாய்ப் போக! ஒளிமுதலாம் சிவபெருமானுக்கு ஒழியாது அணித்தாக நெருங்கித் தொண்டுபுரியும் தொழில் உள்ளோர்களும், பூதரும், கண நாதரும், மூப்பினை நீங்கிச் சாவா உடம்பெய்திய தவமுனிவர்களும், யோகியர்களும் ஆகிய அனைவரும் முன்னாகச் சென்றிடவும்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 333

அருகு பெரிய தேவருடன்
அணைந்து வரும்அவ் விருடிகளும்
மருவு நண்பின் நிதிக்கோனும்
முதலா யுள்ளோர் மகிழ்ந்தேத்தத்
தெருவும் விசும்பும் நிறைந்துவிரைச்
செழும்பூ மாரி பொழிந்தலையப்
பொருவி லன்பர் விடுந்தூதர்
புனித வீதி யினிற்போத.

பொழிப்புரை :

அருகே பெருமானாய பெரிய தேவருடன் அணைந்து வருகின்ற அந்த இருடிகளும், எம்பிரான்பால் பொருந்திய நண்புடைய நிதியின் தலைவனாய குபேரனும் முதலாக உள்ளோர் மகிழ்ந்து போற்றிடத் தெருவும் வானும் நிறைந்த நறுமணம்மிக்க மலர் மழையைப் பொழிந்து வணங்கிட, ஒப்பற்ற அன்பர் ஆகிய சுந்தரர் விடுகின்ற பெருமானாராய தூதர், தூய திருவீதியில் போதரவும்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 334

மாலும் அயனுங் காணாதார்
மலர்த்தாள் பூண்டு வந்திறைஞ்சும்
காலம் இதுவென் றங்கவரை
அழைத்தா லென்னக் கடல்விளைத்த
ஆல மிருண்ட கண்டத்தான்
அடித்தா மரைமேற் சிலம்பொலிப்ப
நீல மலர்க்கட் பரவையார்
திருமா ளிகையை நேர்நோக்கி.

பொழிப்புரை :

திருவடியை முன்தேடிக் காணாதாரான திருமாலும் அயனும் இப்பொழுது நேராகக் கண்டு கண் குளிர வணங்கிடும் காலம் இதுவென்று அவரை வாருங்கள் என அழைத்தாற் போலக் கடலினின் றும் தோன்றிய நஞ்சை உண்டு இருண்ட திருக்கழுத்தினை உடைய இறைவரின் திருவடித் தாமரை மலர்மேல் அணிந்த சிலம்புகள் ஒலித் திட, குவளை மலர்போலும் அழகிய கண்களையுடைய பரவையார் திருமாளிகையை நேராக நோக்கி,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 335

இறைவர் விரைவில் எழுந்தருள
எய்து மவர்கள் பின்தொடர
அறைகொள் திரைநீர் தொடர்சடையில்
அரவு தொடர அரியஇளம்
பிறைகொள் அருகு நறைஇதழிப்
பிணையல் சுரும்பு தொடரவுடன்
மறைகள் தொடர வன்தொண்டர்
மனமுந் தொடர வரும்பொழுது.

பொழிப்புரை :

பெருமான் விரைவாக எழுந்தருள, அவருடன் முன்கூறப்பெற்றவர்கள் பலரும் பின்தொடர, ஒலிக்கும் அலைகள் சூழ்ந்த கங்கைநீரைப் பாம்பு தொடர, அரிய இளம்பிறையின் அருகே வாசனையுடைய கொன்றை மலர் மாலையின்மீது வண்டினம் தொடர, உடன் மறைகளும் தொடர, நம்பிகளின் மனமும் தொடர, வரும்பொழுது,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 336

பெருவீ ரையினும் மிகமுழங்கிப்
பிறங்கு மதகுஞ் சரம்உரித்து
மரவீ ருரிவை புனைந்தவர்தம்
மருங்கு சூழ்வார் நெருங்குதலால்
திருவீ தியினில் அழகரவர்
மகிழுஞ் செல்வத் திருவாரூர்
ஒருவீ தியிலே சிவலோகம்
முழுதுங் காண வுளதாமால்.

பொழிப்புரை :

பெரிய கடலினும் மிக முழங்கிப் பேரொலி புரியும் மதயானையை உரித்து, அதன் தோலைப் போர்த்த சிவபெருமானது இருமருங்கும் சூழ்வார் இவ்வண்ணம் திருவீதியில் நெருங்குதலால் அழகிய கோலமுடைய வீதிவிடங்கராய பெருமான் மகிழ்ந்துறையும் செல்வமுடைய திருவாருரின் இந்த ஒரு வீதியிலேயே சிவலோகம் முழுவதும் காணக் கூடியதாக உள்ளது.

குறிப்புரை :

பெருவீரை - பெரிய கடல்; இவ்வாறு பாடல்களும் ஒருமுடிபின

பண் :

பாடல் எண் : 337

ஞாலம் உய்ய எழுந்தருளும்
நம்பி தூதர் பரவையார்
கோல மணிமா ளிகைவாயில்
குறுகு வார்முன் கூடத்தம்
பால்அங் கணைந்தார் புறநிற்பப்
பண்டே தம்மை யர்ச்சிக்கும்
சீல முடைய மறைமுனிவர்
ஆகித் தனியே சென்றணைந்தார்.

பொழிப்புரை :

இந்நிலவுலகம் உய்ந்திட எழுந்தருளிவரும் சுந்தர ரின் தூதுவர், பரவையாரது அழகிய நல்ல திருமாளிகை வாயிலில் சேர்வாராகி, முன்னாகத் தம்மைச் சூழ்ந்து வந்தார்கள் அனைவரை யும் வெளியே நிற்கப் பணித்து தொடர்ந்து தம்மை வழிபாடு செய்துவரும் சீலமுடைய சிவவேதியராய வடிவு கொண்டு, அந்த மாளிகை வாயிலைத் தனியே சென்றடைந்தார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 338

சென்று மணிவா யிற்கதவம்
செறிய அடைத்த அதன்முன்பு
நின்று பாவாய் திறவாய்என்று
அழைப்ப நெறிமென் குழலாரும்
ஒன்றுந் துயிலா துணர்ந்தயர்வார்
உடைய பெருமான் பூசனைசெய்
துன்றும் புரிநூல் மணிமார்பர்
போலும் அழைத்தார் எனத்துணிந்து.

பொழிப்புரை :

சென்று, கதவம் நன்கு அடைக்கப்பெற்ற அழகிய அவ்வாயிலில் நின்று, `பரவையே! கதவைத் திறந்திடுவாய்\' என்று அழைத்திடச் செறிந்த, சிறந்த, மெல்லிய கூந்தலையுடைய பரவையா ரும், ஒரு சிறிதும் துயிலாது புலவியால் வாடி அயர்பவர், என்னை அடிமையாக உடைய திருவாரூர்ப் பெருமானுக்குப் பூசனை புரிந் திடும் நெருங்கிய முப்புரி நூலையணிந்த மார்பையுடைய சிவவேதி யர் போலும் அழைத்தார் எனத் துணிவு கொண்டு,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 339

பாதி மதிவாழ் முடியாரைப்
பயில்பூ சனையின் பணிபுரிவார்
பாதி யிரவில் இங்கணைந்த
தென்னோ என்று பயமெய்திப்
பாதி உமையாள் திருவடிவிற்
பரம ராவ தறியாதே
பாதி மதிவாள் நுதலாரும்
பதைத்து வந்து கடைதிறந்தார்.

பொழிப்புரை :

இளம்பிறை வாழ்தற்குரிய திருச்சடையையுடைய சிவபெருமானுக்குப் பணிகளைச் செய்துவரும் சிவவேதியர், நடு யாமத்து இவ்விருளில் இங்கு வந்தது என்ன காரணமோ என்று பெரிதும் அச்சம் கொண்டு எழுந்து, வாயில் வந்து அழைத்தவர், உமை யொரு கூறராய சிவபெருமானாராவது அறியாதே, பாதியாய பிறை போலும் அழகிய நெற்றியையுடைய பரவையாரும், பதைப்புடன் வந்து தமது வாயிலின் கதவைத் திறந்தார்.

குறிப்புரை :

பாதி என அடிதோறும் வரும் சொல், முதல் அடியிலும் நான்காவது அடியிலும் மதி என்பதனோடும், இரண்டாவது அடியில் இரவோடும், மூன்றாவது அடியில் உமையம்மையாரோடும் இயைந்து சொற்பொருள் பின்வருநிலயணி அமைய அமைந் திருப்பது அழகு தருகிறது. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 340

மன்னும் உரிமை வன்தொண்டர்
வாயில் தூதர் வாயிலிடை
முன்னின் றாரைக் கண்டிறைஞ்சி
முழுது முறங்கும் பொழுதின்கண்
என்னை யாளும் பெருமானிங்
கெய்தி யருளி னாரென்ன
மின்னு மணிநூ லணிமார்பீர்
எய்த வேண்டிற் றென்என்றார்.

பொழிப்புரை :

நிலைபெற்ற தோழராகும் உரிமையுடைய சுந்தர ரின் தூதர், தமது மாளிகை வாயில் முன்னாக நின்றாரைக் கண்டு வணங்கிப் பரவையார் உலகம் எல்லாம் உறங்குகின்ற பெரு யாமத்திடை, என்னை யாளும் பெருமான் இங்கு எழுந்தருளினார் என்னும்படி, மின்னும் அழகிய நூலணிந்த மார்பினையுடையீர்! நீர் இங்கு வருதல் வேண்டும் செயல் யாதோ? என்று வினவினார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 341

கங்கைநீர் கரந்த வேணி
கரந்தவர் அருளிச் செய்வார்
நங்கைநீ மறாது செய்யின்
நான்வந்த துரைப்ப தென்ன
அங்கயல் விழியி னாரும்
அதனைநீ ரருளிச் செய்தால்
இங்கெனக் கிசையு மாகில்
இசையலாம் என்று சொல்லி.

பொழிப்புரை :

கங்கையாற்றை மறைத்து வைத்த பெருமான் அருளிச் செய்கின்றார், `பெண்ணே! நான் சொல்வதை நீ மறுத்திடாது செய்யின் நான் வந்த காரணத்தைச் சொல்வேன்\' என்றலும், அது கேட்டு அழகிய கயல்மீன் போலும் நீண்ட விழியையுடைய பரவையா ரும், `அக்காரணத்தை நீர் சொல்லியருளினால் அது இங்கு எனக்கு இசையுமாகில் நான் இசைய இயலும்\' என்றலும்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 342

என்னினைந் தணைந்த தென்பால்
இன்னதென் றருளிச் செய்தால்
பின்னைய தியலு மாகில்
ஆம்எனப் பிரானார் தாமும்
மின்னிடை மடவாய் நம்பி
வரஇங்கு வேண்டு மென்ன
நன்னுத லாருஞ் சால
நன்றுநம் பெருமை யென்பார்.

பொழிப்புரை :

நீர் என்ன நினைந்து என்பால் வந்தது? அதனை இன்னதென்று சொல்லியருளிச் செய்தால், பின்னர் அஃது என்னால் முடியுமாகில் நான் செய்திட முடியும் எனக் கூறிடலும், அதுகேட்ட எம்பெருமானார் தாமும், `மின்னலை ஒத்த சிற்றிடையையுடைய பெண்ணே! சுந்தரன் இங்கு வரப்பெறல் வேண்டும்\' என்றலும், அதுகேட்ட நல்ல நெற்றியையுடைய பரவையாரும், `மிகவும் நன்று, நம்முடைய பெருமை\' என்று சொல்வாராய்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 343

பங்குனித் திருநா ளுக்குப்
பண்டுபோல் வருவா ராகி
இங்கெனைப் பிரிந்து போகி
ஒற்றியூர் எய்தி யங்கே
சங்கிலித் தொடக்குண் டாருக்
கிங்கொரு சார்வுண் டோநீர்
கங்குலின் வந்து சொன்ன
காரியம் அழகி தென்றார்.

பொழிப்புரை :

பங்குனி உத்தரத் திருநாளுக்கு வழக்கம்போல மீண்டு என்னிடம் வருவார்போல இங்கு என்னைத் தனியே விடுத் துப் பிரிந்து சென்று, திருவொற்றியூர் சேர்ந்து, அங்கே சங்கிலியாரு டன் தொடர்பு கொண்ட அவருக்கு, இங்கு ஒரு சார்வும் உண்டோ? இந்த இரவிலே நீர் வந்து சொன்ன இச்செயல்தானும் நன்றாக இருக்கின்றது என்றார்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 344

நாதரும் அதனைக் கேட்டு
நங்கைநீ நம்பி செய்த
ஏதங்கள் மனத்துக் கொள்ளா
தெய்திய வெகுளி நீங்கி
நோதகவு ஒழித்தற் கன்றோ
நுன்னையான் வேண்டிக் கொண்ட
தாதலின் மறுத்தல் செய்ய
அடாதென அருளிச் செய்தார்.

பொழிப்புரை :

இறைவரும் அதனைக் கேட்டு, `பெண்ணே! நீ உனது தலைவனான சுந்தரன் செய்த குற்றங்களை மனத்தில் கொள்ளாது, அதனால் விளைந்த புலவியினின்றும் நீங்கி, நின் துன்பத்தை ஒழித் திடவன்றோ யான் வேண்டிக் கொண்டது, ஆதலால் நீ மறுத்து இருப்பது தகாது\' என்று சொல்லியருளினார்

குறிப்புரை :

நோ- துன்பம் : தகவு - தன்மை. `நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று\' (குறள்., 157) எனவரும் திருவாக்கும் காண்க.

பண் :

பாடல் எண் : 345

அருமறை முனிவ ரான
ஐயரைத் தைய லார்தாம்
கருமம்ஈ தாக நீர்
கடைத்தலை வருதல் நுந்தம்
பெருமைக்குத் தகுவ தன்றால்
ஒற்றியூர் உறுதி பெற்றார்
வருவதற் கிசையேன் நீரும்
போம்என மறுத்துச் சொன்னார்.

பொழிப்புரை :

அந்தணராய் வடிவுகொண்ட பெருமானாரை நோக்கிப் பரவையாரும், `குறித்த இச்செயலுக்காக நீர் இங்கு வருதல், நும் பெருமைக்குத் தகுவதன்றாம்; திருவொற்றியூரில் சங்கிலியாரிடம் அப்பதியிலேயே இருத்தற்கு உறுதிபூண்டார். அவர் இங்கு வருவதற்கு இசையேன்; நீரும் போமின்!\' என்று மறுத்துச் சொன்னார்.

குறிப்புரை :

உறுதி - அப்பதியிலேயே இருத்தற்காம் உறுதிமொழி. (சங்கிலியாரிடம் செய்த சபதம்).

பண் :

பாடல் எண் : 346

நம்பர்தாம் அதனைக் கேட்டு
நகையும்உட் கொண்டு மெய்ம்மைத்
தம்பரி சறியக் காட்டார்
தனிப்பெருந் தோழ னார்தம்
வெம்புறு வேட்கை காணும்
திருவிளை யாட்டின் மேவி
வம்பலர் குழலி னார்தாம்
மறுத்ததே கொண்டு மீண்டார்.

பொழிப்புரை :

அந்தணராக வந்த இறைவர், அதுகேட்டு உள்நகை யுடையராய், உண்மையாய தம் தன்மையை வெளிப்படக் காட்டாரா கித் தம் தனிப்பெருந் தோழனார், பரவைபால் கொண்ட வேட்கையின் விளைவைக் கண்டு மகிழ்ந்தருளும் திருவிளையாட்டினைத் திரு வுளங்கொண்டு, மணம் கமழும் கூந்தலையுடைய பரவையார் மறுத்த அச்சொல்லையே ஏற்றுக்கொண்டு, மீண்டு அருளினார்.

குறிப்புரை :

யாவர்க்கும் முன்னவனே முன்னிற்கும் பொழுது முடி யாத பொருள் உளதோ? இன்று; எனினும் சுந்தரருக்குப் பரவையார் பால் இருக்கும் பெருவேட்கையைக் காணும் திருவிளையாட்டால் மீண்டு சென்றார், என்றார்.

பண் :

பாடல் எண் : 347

தூதரைப் போக விட்டு
வரவுபார்த் திருந்த தொண்டர்
நாதரைஅறிவி லாதேன்
நன்னுதல் புலவி நீக்கப்
போதரத் தொழுதேன் என்று
புலம்புவார் பரவை யாரைக்
காதலில் இசைவு கொண்டு
வருவதே கருத்துட் கொள்வார்.

பொழிப்புரை :

இறைவரைத் தூதுவராகப் போகவிட்டு வரவு பார்த்திருந்த தொண்டர் சுந்தரரும், `நல்ல அழகிய நெற்றியுடைய பர வையின் புலவியை நீக்கப் போதருமாறு, அறிவிலாதே நான், நாதரைத் தொழுதேனே! என் செய்தேன்?\' என்று புலம்புவார்; எவ்வாறாயினும் பரவையாரைத் தம்பால் கொண்ட காதல் பெருக இசைவித்துக் கொண்டே வருவர் என்று தம் கருத்தினில் கொள்வாராய்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 348

போயவள் மனையில் நண்ணும்
புண்ணியர் என்செய் தாரோ
நாயனார் தம்மைக் கண்டால்
நன்னுதல் மறுக்கு மோதான்
ஆயஎன் அயர்வு தன்னை
அறிந்தெழுந் தருளி னார்தாம்
சேயிழை துனிதீர்த் தன்றி
மீள்வதும் செய்யார் என்று.

பொழிப்புரை :

இங்கு நின்றும் பரவையின் மனைக்குச் சென்ற புண்ணியர் என் செய்தாரோ? நம் தலைவரைக் கண்டால் பரவையும் மறுப்பாளோ? எவ்வாறாயினும் எனது அயர்ச்சி அறிந்து எழுந்தரு ளிச் சென்ற பெருமான், பரவையது கலக்கத்தை நீக்கி ஆறுதல் செய் தன்றி மீண்டு வரமாட்டார் என நினைந்து,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 349

வழியெதிர் கொள்ளச் செல்வர்
வரவுகா ணாது மீள்வர்
அழிவுற மயங்கி நிற்பர்
அசைவுடன் இருப்பர் நெற்றி
விழியவர் தாழ்த்தா ரென்று
மீளவு மெழுவர் மாரன் பொழிமலர் மாரி வீழ
ஒதுங்குவார் புன்க ணுற்றார்.

பொழிப்புரை :

மீண்டு வரும் பெருமானை வழியில் எதிர் கொள்ளத் தாம் எழுந்து செல்வார்; ஆனால் அவர் வரவைக் காணாது மீள்வார்; மனம் அழிவுற மயங்கி நிற்பார்; அச்சோர்வுடன் ஒருபுறம் இருப்பார்; நெற்றியில் கண் உடைய பெருமான் வரத் தாழ்த்தார் என்று மீளவும் எழுவர்; மன்மதன் பொழிகின்ற மலர்மாரி வீழ ஒதுங்குவார்; இவ்வாறு பெருந் துயரமுற்றார்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 350

பரவையார் தம்பால் நம்பி
தூதராம் பாங்கிற் போன
அரவணி சடையார் மீண்டே
அறியுமாறு அணையும் போதில்
இரவுதான் பகலாய்த் தோன்ற
எதிரெழுந் தணையை விட்ட
உரவுநீர் வெள்ளம் போல
ஓங்கிய களிப்பிற் சென்றார்.

பொழிப்புரை :

பரவையாரிடத்துச் சுந்தரருடைய தூதுவராகச் சென்ற பாம்பணிந்த சடையையுடைய பெருமான், மீண்டு, தம்மை அறியுமாறு சுந்தரர்பால் வரும்பொழுது, பெருமானது ஒளியால் இரவின்றிப் பகல் என ஒளி தோன்றிட, நம்பிகள் அதுகண்டு எதிர் எழுந்து, பெருமானது முன்பாக அணையை உடைத்தெழும் விரை வான நீர் வெள்ளம் போன்று, மனத்தில் பெரு மகிழ்வுடன் சென்றார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 351

சென்றுதம் பிரானைத் தாழ்ந்து
திருமுகம் முறுவல் செய்ய
ஒன்றிய விளையாட் டோரார்
உறுதிசெய் தணைந்தா ரென்றே
அன்றுநீ ராண்டு கொண்ட
அதனுக்குத் தகவே செய்தீர்
இன்றிவள் வெகுளி யெல்லாந்
தீர்த்தெழுந் தருளி என்றார்.

பொழிப்புரை :

திருமுன்பு சென்று, தம் பெருமானைத் தாழ்ந்து, அவரது திருமுக மலர்வினால் முறுவல் செய்திடப் பெருமான் கொண்ட திருவிளையாட்டினை உணராராகித் தமக்காகப் பரவையின் புலவியை நீக்கி வந்தார் என்று நினைந்து, பெருமானை நோக்கி, `ஐயனே! அன்று நீர் என்னை அடிமையாக ஆண்டு கொண்டருளிய செயலிற்குத் தகவாகவே, இன்றும் பரவையினது புலவியைத் தீர்த்து இங்கு வந்தருளினீர்\' என மொழிந்தார்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 352

அம்மொழி விளம்பு நம்பிக்
கையர்தா மருளிச் செய்வார்
நம்மைநீ சொல்ல நாம்போய்ப்
பரவைதன் இல்லம் நண்ணிக்
கொம்மைவெம் முலையி னாட்குன்
திறமெலாங் கூறக் கொள்ளாள்
வெம்மைதான் சொல்லி நாமே
வேண்டவும் மறுத்தா ளென்றார்.

பொழிப்புரை :

அவ்வாறு விளம்பிய சுந்தரருக்கு, இறைவர் அருளிச் செய்வாராய், `நம்மை நீ தூதுபோம்படி சொல்ல, நாம் போய் பரவையாரது இல்லத்தை அடைந்து, பருத்த மார்பகங்களையுடைய அவளுக்கு உன் தன்மை எல்லாம் கூறியும், அவள் ஏற்றுக்கொண் டாள் இல்லை; நாம் பலகால் வேண்டி நின்றும் கடிய மொழிகளைக் கூறி மறுத்து விட்டாள்\' என்றார்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 353

அண்ணலார் அருளிச் செய்யக்
கேட்டஆ ரூரர் தாமும்
துண்ணென நடுக்க முற்றே
தொழுதுநீ ரருளிச் செய்த
வண்ணமும் அடியா ளான
பரவையோ மறுப்பாள் நாங்கள்
எண்ணஆர் அடிமைக் கென்ப
தின்றறி வித்தீ ரென்று.

பொழிப்புரை :

பெருமான் இவ்வாறு அருளக் கேட்ட சுந்தரரும், திடீரென மெய்நடுக்கம் கொண்டு, தொழுது, நீர் அருளிச் செய்யவும் உமது அடியாளான பரவையோ மறுத்திடுவாள்? (மறுக்க வல்லள் அல்லள்) நாங்கள் உம் அடிமைத் திறத்தில் வைத்து எண்ணற்குரிய ரல்லோம் என்பதை இன்று அறிவித்தீர் என்று கூறி,

குறிப்புரை :

பரவையின் புலவி நீக்காமையின் அவளையும், தம் மோடு அவளை இயைவிக்காமையின் தம்மையும் அடிமைத் திறத்தில் வைத்து எண்ணவில்லை என்றார். நாங்கள் என்றது பரவையாரையும் உளப்படுத்தி நிற்பதாகும்.

பண் :

பாடல் எண் : 354

வானவர் உய்ய வேண்டி
மறிகடல் நஞ்சை யுண்டீர்
தானவர் புரங்கள் வேவ
மூவரைத் தவிர்த்தாட் கொண்டீர்
நான்மறைச் சிறுவர்க் காகக்
காலனைக் காய்ந்து நட்டீர்
யான்மிகை யுமக்கின் றானால்
என்செய்வீர் போதா தென்றார்.

பொழிப்புரை :

தேவர்கள் உய்ய வேண்டிக் கடலில் தோன்றிய நஞ்சை உண்டீர்; அசுரரது முப்புரங்களும் எரிந்து அவிய, அவற்றுள் இருந்த மூன்று அசுரர்களுக்கு மட்டும் ஊறு வாராது தவிர்த்தருளினீர்; நான்மறைவழி ஒழுகிடும் அந்தணச் சிறுவர் மார்க்கண்டேயருக்காக இயமனை உதைத்து, அவரை அடிமை கொண்டீர்; இவ்வாறாய அளவிலா ஆற்றலும் பேரருட் கருணையும் உடைய உமக்கு, நான் மிகையாய போது மீண்டு வாராது என் செய்வீர்? என்று கூறியவர்,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 355

ஆவதே செய்தீர் இன்றென்
அடிமைநீர் வேண்டா விட்டால்
பாவியேன் தன்னை அன்று
வலியஆட் கொண்ட பற்றென்
நோவும்என் னழிவுங் கண்டீர்
நுடங்கிடை யவள்பால் இன்று
மேவுதல் செய்யீ ராகில்
விடுமுயிர் என்று வீழ்ந்தார்.

பொழிப்புரை :

எங்களுக்கு ஆகவேண்டிய செயலையே செய்தீர்; இன்று எனது அடிமைத் தன்மையை வேண்டாது விடுப்பின், பாவி யேனைஅன்று வலிய வந்து ஆட்கொண்ட பற்று எற்றிற்கு? எனது வருத்த மிகுதியையும் மன அழிவையும் கண்டும் திருவுள்ளம் பற்றுகிலீர்! மீண்டும் சிறிய இடையையுடைய பரவைபால் சென்று, நீர் இன்று என்னைக் கூட்டி வைத்திடாவிடில் என் உயிர் நீங்கும் என்று கூறிப் பெருமானின் திருவடியில் வீழ்ந்தார்.

குறிப்புரை :

ஆகவே செய்தீர் என்பது, குறிப்பு மொழியாக மறுதலைப் பொருள் கொள நின்றது. இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 356

தம்பிரான் அதனைக் கண்டு
தரியாது தளர்ந்து வீழ்ந்த
நம்பியை அருளால் நோக்கி
நாம்இன்னம் அவள்பாற் போய்அக்
கொம்பினை இப்போ தேநீ
குறுகுமா கூறு கின்றோம்
வெம்புறு துயர்நீங் கென்றார்
வினையெலாம் விளைக்க வல்லார்.

பொழிப்புரை :

பெருமான் அதனைக் கண்டு பொறுக்கலாற்றாது, தம்முன் தளர்ந்து வீழ்ந்த நம்பிகளை அருளால் நோக்கி, `நாம் இன்னமும் ஒருகால் பரவைபால் சென்று பூங்கொடிபோலும் அவளை இப்பொழுதே நீ சேருமாறு கூறுகின்றோம், வெதும்பும் நின் துயரத்தி னின்றும் நீங்குவாய்\' என்று உயிர்கட்குற்ற வினைப்பயன்களை எல்லாம் தவறாது கூட்ட வல்ல பெருமானார் கூறியருளினார்.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 357

மயங்கிய நண்பர் உய்ய
வாக்கெனும் மதுர வாய்மை
நயங்கிள ரமுதம் நல்க
நாவலூர் மன்னர் தாமும்
உயங்கிய கலக்கம் நீக்கி
யும்மடித் தொழும்ப னேனைப்
பயங்கெடுத்து இவ்வா றன்றோ
பணிகொள்வ தென்று போற்ற.

பொழிப்புரை :

திருமுன்பு வீழ்ந்து மயங்கிய நண்பர் சுந்தரர் உய்ந்திட, தமது திருவாக்கு என்னும் இனிய வாய்மொழியாகும் அமுதினைக் கொடுத்திடலும், திருநாவலூர் அரசராய அவரும் தம்மை வருத்திய கலக்கம் நீங்கி, எழுந்து, எம்பிரானே! உம் திருவடி பணியும் தொண்டனேனை அச்சத்தினினின்றும் நீக்கி, இவ்வண்ணமாக அன்றோ பணிகொள்வது எனக் கூறிப் போற்றுதலும்,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 358

அன்பர்மேற் கருணை கூர
ஆண்டவர் மீண்டுஞ் செல்லப்
பின்புசென்றிறைஞ்சி நம்பி
பேதுற வோடு மீண்டார்
முன்புடன் போதா தாரும்
முறைமையிற் சேவித் தேகப்
பொன்புரி சடையார் மாதர்
புனிதமா ளிகையிற் சென்றார்.

பொழிப்புரை :

அன்பர்மேல் திருக்கருணை கூர்ந்திட ஆண்டு கொண்ட பெருமானும், மீண்டும் தூதாகச் சென்றிடப் பின் சென்று அவரை வணங்கிய சுந்தரரும், உள்ளம் மயங்கிட மீண்டு வந்தார். முன்னர்ப் போற்றிசெய்து செல்லாத மற்றையவர்களும் முறைமை யாகப் பெருமானை வணங்கி உடன் போதரப் பொன்போல் மிளிரும் சடையையுடைய பெருமானாரும் பரவையாருடைய தூய மாளிகைக் குச் சென்றருளினார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 359

மதிநுதற் பரவை யார்தாம்
மறையவர் போன பின்பு
முதிர்மறை முனியாய் வந்தார்
அருளுடை முதல்வ ராகும்
.அதிசயம் பலவும் தோன்ற
அறிவுற்றே அஞ்சிக் கெட்டேன்
எதிர்மொழி எம்பி ரான்முன்
என்செய மறுத்தேன் என்பார்.

பொழிப்புரை :

பிறைபோலும் நெற்றியையுடைய பரவையார், அந்தணர் வடிவுடன் முதன்முறை தூது வந்து சென்றபின்பு, முதிய முறைவழி ஒழுகும் முனிவராய் வந்த பெருமான் அருள் சிறந்த சிவபெருமானேயாகும் என்னும் அதிசயம் பலவும் மனத்தில் தோன்றிட, அந்நினைவால் அஞ்சி, அந்தோ! கெட்டேன். எம்பிரான் முன்னராக எதிர்மொழி மறுத்துப் பேசி என்ன செயல் செய்தேன் என்று வருந்துவாராய்,

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 360

கண்துயில் எய்தார் வெய்ய
கையற வெய்தி ஈங்குஇன்று
அண்டர்தம் பிரானார் தோழர்க்
காகஅர்ச் சிப்பார் கோலம்
கொண்டணைந் தவரை யானுட்
கொண்டிலேன் பாவி யேன்என்
றொண்சுடர் வாயி லேபார்த்
துழையரோ டழியும் போதில்.

பொழிப்புரை :

கண்துயில் கொள்ளாராய், கொடுந் துயரம் அடைந்து, ஈங்கு இன்றிரவு தேவர்தம் பெருமான் தம் தோழருக்காகத் தம் திருமேனி தீண்டி வழிபடும் முனிவர் கோலம் கொண்டு வந்தரு ளினார். நான் பாவியேன் அதனை நினைந்து கருத்துட் கொண்டிலா திருந்தேனே! எனக் கூறித் தனது ஒளிபொருந்திய அழகிய திருவாயி லையே நோக்கியவாறு தன் தோழியருடன் பெரும் மனத்துயரால் மயங்கியிருந்தபொழுது.

குறிப்புரை :

*************

பண் :

பாடல் எண் : 361

வெறியுறு கொன்றை வேணி
விமலருந் தாமாந் தன்மை
அறிவுறு கோலத் தோடும்
மளவில்பல் பூத நாதர்
செறிவுறு தேவர் யோகர்
முனிவர்கள் சூழ்ந்து செல்ல
மறுவில்சீர்ப் பரவை யார்தம்
மாளிகை புகுந்தார் வந்து.

பொழிப்புரை :

மணம் மிக்க தேன்சொரியும் கொன்றை மாலையைத் திருச்சடையிலுடைய இறைவரும், தாமே வருகின்றார் என்னும் தன்மையை அறியக் கொள்ளும் உண்மை வடிவில் அளவில் லாத பல்பூதகணங்களும் புடைசூழத் தேவர்கள், யோகிகள், முனிவர் கள் முதலிய யாவரும் பின் வரக் குற்றம் எதுவுமில்லாத சீருடைய பரவையாரது மாளிகையில் வந்து புகுந்தருளினார்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 362

பாரிடத் தலைவர் முன்னாம்
பல்கண நாதர் தேவர்
நேர்வுறு முனிவர் சித்தர்
இயக்கர்கள் நிறைத லாலே
பேரரு ளாள ரெய்தப்
பெற்றமா ளிகைதான் தென்பால்
சீர்வளர் கயிலை வெள்ளித்
திருமலை போன்ற தன்றே.

பொழிப்புரை :

பூதகணங்களின் தலைவரும், கணநாதரும், தேவர்களும், சிவபெருமானையன்றி எண்ணாத ஒழுகலாறு உடைய முனிவர்களும், சித்தர்களும், இயக்கர்களும், யாவரும் வந்து நிறைத லால், பேரருளாளராய எம் பெருமானார் சென்று அடைந்திடப் பெற்ற அம்மாளிகை தான், தென்னாட்டில் விளங்கிடும் சீர்வளரும் திருக் கயிலாயத் திருமலை போன்றிருந்தது.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 363

ஐயர்அங் கணைந்த போதில்
அகிலலோ கத்துள் ளாரும்
எய்தியே செறிந்து சூழ
எதிர்கொண்ட பரவை யார்தாம்
மெய்யுறு நடுக்கத் தோடு
மிக்கெழும் மகிழ்ச்சி பொங்கச்
செய்யதா ளிணைமுன் சேர
விரைவினாற் சென்று வீழ்ந்தார்.

பொழிப்புரை :

அனைத்துலகத்துள்ளாரும் வந்து நெருங்கிச் சூழப் பெருமானார் அங்கு எழுந்தருளியபொழுது, அப்பெருமானாரை எதிர்கொண்ட பரவையாரும், உடல் நடுக்கத்துடன் உள்ளத்து மிகுந்து எழும் மகிழ்ச்சி பொங்கிடச் செம்மையாய திருவடிகளைப் பொருந்த மிகு விரைவில் சென்று வீழ்ந்தார்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 364

அரிஅயற் கரியார் தாமும்
ஆயிழை யாரை நோக்கி
உரிமையால் ஊரன் ஏவ
மீளவும் உன்பால் வந்தோம்
முருகலர் குழலாய் இன்னம்
முன்புபோல் மறாதே நின்பால்
பிரிவுற வருந்து கின்றான்
வரப்பெற வேண்டும் என்றார்.

பொழிப்புரை :

மால், அயனுக்கு அரிய பெருமானும், பரவை யாரைப் பார்த்தருளி, தோழன் என்ற உரிமையால் சுந்தரன் நம்மை ஏவ மீளவும் யாம் உன்பால் வந்தோம்; மணம் கமழும் கூந்தலை யுடைய பரவையே! முன்போல நீ மறுத்திடாது, பிரிவாற்றாது பெரிதும் வருந்தும் சுந்தரன், இங்கு வரப் பெறுதல் வேண்டும் என்றார்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 365

பெருந்தடங் கண்ணி னாரும்
பிரான்முன்பு மிகவும் அஞ்சி
வருந்திய வுள்ளத் தோடு
மலர்க்கரங் குழல்மேற் கொண்டே
அருந்திரு மறையோ ராகி
அணைந்தீர்முன் னடியேன் செய்த
இருந்தவப் பயனாம் என்ன
எய்திய நீரோ என்பார்.

பொழிப்புரை :

நீண்டு அகன்ற கண்களையுடைய பரவையாரும், பெருமானிடத்துப் பெரிதும் அஞ்சி, வருந்திய உள்ளத்தோடு, மலர் போன்ற தமது கைகளை உச்சியிற் குவித்து, அரிய திருவுடைய அந்த ணராகி முன்வந்தவர், அடியேன் செய்த பெருந் தவத்தின் பயனாக இதுபொழுது வந்தருளிய நீரோ? என்று வினவியவாறு,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 366

துளிவளர் கண்ணீர் வாரத்
தொழுதுவிண் ணப்பஞ் செய்வார்
ஒளிவளர் செய்ய பாதம்
வருந்தஓர் இரவு மாறா
தளிவரும் அன்பர்க் காக
அங்கொடிங் குழல்வீ ராகி
எளிவரு வீரு மானால்
என்செய்கேன் இசையா தென்றார்.

பொழிப்புரை :

துளிகளாகக் கண்களில் நீர் வாரப் பெருமானாரை தொழுது விண்ணப்பஞ் செய்வார், `ஒளிவளரும் செவ்விய இத்திருவடிகள் வருந்திட இன்று ஓர் இரவு முழுதும் உமது அன்பருக்காக அங்கும் இங்குமாக உழன்று அடியவருக்கு எளியராகி வருவீராயின், நான் இசையாது வேறு என் செய்ய வல்லேன்? என்றார்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 367

நங்கைநின் தன்மைக் கேற்கும்
நன்மையே மொழிந்தா யென்று
மங்கையோர் பாகம் வைத்த
வள்ளலார் விரைந்து போகத்
திங்கள் வாணுதலி னாருஞ்
சென்றுபின் னிறைஞ்சி மீண்டார்
எங்களை யாளும் நம்பி
தூதர்மீண் டேகு கின்றார்.

பொழிப்புரை :

`பெண்ணே! நினது பெருமையாம் தகவிற்கேற்ப, நன்மையே மொழிந்தாய்\' என்று பாராட்டி, உமையம்மையாரை ஒருகூற்றில் கொண்ட வள்ளலாரான பெருமான், விரைந்து போதலும், அதுகண்டு இளம்பிறை போலும் அழகிய நெற்றியினை உடைய பரவையாரும் எப்பெருமான் பின்சென்று வணங்கி மீள, எம்மையெல்லாம் உய்யக்கொள்ளும் சுந்தரரின் தூதர் மீண்டு செல்ல,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 368

ஆதியும் மேலும் மால்அயன்
நாடற் கருளாதார்
தூதினில் ஏகித் தொண்டரை
யாளுந் தொழில்கண்டே
வீதியில் ஆடிப் பாடி
மகிழ்ந்தே மிடைகின்றார்
பூதியில் நீடும் பல்கண
நாதர் புகழ்வீரர்.

பொழிப்புரை :

அடியையும், முடியையும் நாடிக் காண்டற்கு இயலாத பரம்பொருளாம் சிவபெருமான், தாமே தூதாகச் சென்று தமது தொண்டர் சுந்தரர் பெருமானை ஆட்கொண்டிடும் அருட் செய லைக் கண்டு, நீற்றின் ஒளியால் பெருகிய கோலமுடைய கணநாதர் களும், புகழுடைய பூத வீரர்களும் அவர் சென்றருளும் திருவீதியில் ஆடியும், பாடியும் மிக மகிழ்ந்தே நெருங்குகின்றார்களாய்,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 369

அன்னவர் முன்னும் பின்னும்
மருங்கும் அணைவெய்த
மின்னிடை யார்பால் அன்பரை
உய்க்கும் விரைவோடும்
சென்னியில் நீடுங் கங்கை
ததும்பத் திருவாரூர்
மன்னவ னார்அம் மறையவ
னார்பால் வந்துற்றார்.

பொழிப்புரை :

இவ்வாறாக அவர்கள் முன்னும், பின்னும், அயலேயும் வந்து சூழ்தர, மின்னல் போன்ற இடையையுடைய பரவையார் பாலாகத் தம் அன்பர் சுந்தரரைச் சேர்த்திடும் பொருட்டுக் கொண்ட விரைவுடன், திருமுடிமேல் கொண்டு விளங்கும் கங்கை ததும்பிட, ஆதி சைவராய சுந்தரரிடத்து வந்துசேர்ந்தார்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 370

அன்பரும் என்பால் ஆவி
யளிக்கும் படிபோனார்
என்செய்து மீள்வார் இன்னமும்
என்றே யிடர்கூரப்
பொன்புரி முந்நூல் மார்பினர்
செல்லப் பொலிவீதி
முன்புற நேருங் கண்ணிணை
தானும் முகிழாரால்.

பொழிப்புரை :

அன்பராய சுந்தரரும், என்னிடத்து உயிரைத் தந்தருளுதற்கெனச் சென்ற பெருமான், இனியும் என் செய்து மீள்வாரோ? என்ற இடர் பெருகப் பொன்போன்ற முப்புரிநூல் அணிந்த இறைவர் சென்றிடப் பொலிவுமிகும் வீதியினை முன்னாக நோக்கிக் கண் இமையாது நின்றார்.

குறிப்புரை :

முகிழ்த்தல் - இமைத்தல். மூடுதல்.

பண் :

பாடல் எண் : 371

அந்நிலை மைக்கண் மன்மதன்
வாளிக் கழிவார்தம்
மன்னுயிர் நல்குந் தம்பெரு
மானார் வந்தெய்த
முன்னெதிர் சென்றே மூவுல
குஞ்சென் றடையுந்தாள்
சென்னியில் வைத்தென் சொல்லுவ
ரென்றே தெளியாதார்.

பொழிப்புரை :

அதுபொழுது மன்மதன் ஓய்வின்றிச் சொரியும் மலர் அம்புகட்கு அழிபவராய சுந்தரருக்கு, உயிரைத் தந்தருளும் தம் இறைவர் வந்துசேர, அவர்திருமுன்பு சென்று, மூவுலகங்களும் பணியும் பெருமானது திருவடிகளை உச்சியிற்கொண்டு வணங்கி, என்ன சொல்லுவாரோ என்று தெளியாராகி,

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 372

எம்பெரு மானீர் என்னுயிர்
காவா திடர்செய்யும்
கொம்பனை யாள்பால் என்கொடு
வந்தீர் குறையென்னத்
தம்பெரு மானும் தாழ்குழல்
செற்றந் தணிவித்தோம்
நம்பி யினிப்போய் மற்றவள்
தன்பால் நணுகென்ன.

பொழிப்புரை :

`எம்பெருமானே! என் உயிர் காவாது இடர்செய்திடும் பூங்கொடிபோலும் பரவையிடமிருந்து என்ன மாற்றம் கொண்டு வந்தீர்? என்னலும், எம்பெருமானும் அவரை நோக்கித் `தாழ்ந்த கூந்தலையுடைய பரவையின் சினத்தைத் தணிவித்தோம்; சுந்தரனே! நீ இனிச் சென்று பரவையிடம் சேர்வாய்! என்னலும்,

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 373

நந்தி பிரானார் வந்தருள்
செய்ய நலமெய்தும்
சிந்தையு ளார்வங் கூர்களி
யெய்தித் திகழ்கின்றார்
பந்தமும் வீடும் தீரருள்
செய்யும் படிசெய்தீர்
எந்தைபி ரானே என்னினி
யென்பால் இடரென்றார்.

பொழிப்புரை :

பெருமானார் இவ்வண்ணம் அருள் செய்திட, நலம் பெருகும் தமது சிந்தையில் மீதூர்ந்த மகிழ்ச்சி பொங்கத் திகழ்கின்ற சுந்தரர், எம்பெருமானே! உயிர்கட்குப் பாசக் கட்டையும் வீட்டையும் அருள் செய்துவரும் அத்தகவால், இதுவும் செய்தீர்! இனி அடியே னுக்கு என்ன இடருளது? என்று போற்றினார்.

குறிப்புரை :

இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 374

என்றடி வீழும் நண்பர்தம்
அன்புக் கெளிவந்தார்
சென்றணை நீஅச் சேயிழை
பாலென் றருள்செய்து
வென்றுயர் சேமேல் வீதி
விடங்கப் பெருமாள் தம்
பொன்றிகழ் வாயிற் கோயில்
புகுந்தார் புவிவாழ.

பொழிப்புரை :

என்றுகூறித் திருவடிகளில் வீழும் தோழர்தம் அன்பிற்கு எளிவந்த பெருமானாரும் அவரை நோக்கி, இப்போதே `நீ அப்பரவைபால் சென்று சேர்க\' என்று அருள்புரிந்து உயர்ந்த விடைமேல் வரும் ஆரூர் அமர்ந்த தியாகேசர், தமது பொன்திகழும் வாயிலுடைய கோயிலுள் உலகுய்யப் புகுந்தருளினார்.

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 375

தம்பிரா னார்பின் சென்று
தாழ்ந்தெழுந் தருளால் மீள்வார்
எம்பிரான் வல்ல வாறென்
எய்திய மகிழ்ச்சி யோடும்
வம்பலர் குழலார் செம்பொன்
மாளிகை வாயில் நோக்கி
நம்பியா ரூரர் காதல்
நயந்தெழுந் தருளும் போது.

பொழிப்புரை :

தமது பெருமான் பின்சென்று தாழ்ந்து எழுந்து அருளால் மீள்பவர், எம்பெருமானுடைய வல்லமை இருந்தவாறு என்? என்று தம்மிடத்துக் கொண்ட மகிழ்ச்சியோடும், மணம் கமழும் கூந்தலையுடைய பரவையாரின் செம்பொன்னின் மாளிகை வாயிலை நோக்கி, நம்பிகள் காதலுடன் நயந்து எழுந்தருளும் பொழுது,

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 376

முன்துயில் உணர்ந்து சூழ்ந்த
பரிசனம் மருங்கு மொய்ப்ப
மின்திகழ் பொலம்பூ மாரி
விண்ணவர் பொழிந்து வாழ்த்த
மன்றல்செய் மதுர சீத
சீகரங் கொண்டு மந்தத்
தென்றலும் எதிர்கொண் டெய்துஞ்
சேவகம் முன்பு காட்ட.

பொழிப்புரை :

முன்னமேயே துயில்நீங்கி எழுந்து சூழ்ந்த ஏவலர்கள் நெருங்கிவர, மின்னின் ஒளி திகழும் அழகிய பூமழையை வானவர் பொழிந்து வாழ்த்தெடுப்ப, நறுமணமும் இனிமையும் தவழும் இனிய குளிர்ந்த நீர்த்திவலைகளுடன் கூடி மெல்லிதாய் வீசிடும் தென்றற் காற்று எதிர்கொண்டு பணிசெய்யும் சேவகத் தன்மையை முன்புகாட்ட,

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 377

மாலைதண் கலவைச் சேறு
மான்மதச் சாந்து பொங்கும்
கோலநற் பசுங்கர்ப் பூரம்
குங்குமம் முதலா யுள்ள
சாலுமெய்க் கலன்கள் கூடச்
சாத்தும்பூ ணாடை வர்க்கம்
பாலனம் பிறவும் ஏந்தும்
பரிசனம் முன்பு செல்ல.

பொழிப்புரை :

பூமாலையும், குளிர்ந்த சந்தனக் கலவைச் சாந்தும், கத்தூரிக் குழம்பும், பசிய கற்பூரமும், குங்குமமும் முதலாக உள்ள திருமேனியில் கொள்ளுதற்குரிய, பொருந்திய அணி வகைகளும், அழகிய பட்டாடை வகைகளும், தகுதியுடைய பிறவும் தாங்கிவரும் ஏவலர் முன்சென்றிட,

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 378

இவ்வகை இவர்வந் தெய்த
எய்திய விருப்பி னோடும்
மைவளர் நெடுங்கண் ணாரும்
மாளிகை அடைய மன்னும்
செய்வினை அலங்கா ரத்துச்
சிறப்பணி பலவுஞ் செய்து
நெய்வளர் விளக்குத் தூபம்
நிறைகுடம் நிரைத்துப் பின்னும்.

பொழிப்புரை :

இவ்வகையாய சிறப்புக்கள் பொருந்த எம்பிரான் சுந்தரர் வந்து சேர, இதற்கிடையில் சுந்தரரை அடைந்திடும் விருப்பத் துடன் மை பூசப் பெற்ற நீண்ட வரிவிழிகளை உடைய பரவையாரும், தமது மாளிகை முழுவதும் விளங்கிடச் செய்திடும் அழகிய அணிவகைகள் பலவும் செய்து, நெய் வார்த்து வளர்ந்தெரியும் விளக்கு, நறுமணப்புகை, நிறைகுடம் ஆகிய இவைகள் நிரை நிரையாக வைத்து, மேலும்,

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 379

பூமலி நறும்பொன் தாமம்
புனைமணிக் கோவை நாற்றிக்
காமர்பொற் சுண்ணம் வீசிக்
கமழ்நறுஞ் சாந்து நீவித்
தூமலர் வீதி சூழ்ந்த
தோகையர் வாழ்த்தத் தாமும்
மாமணி வாயில் முன்பு
வந்தெதி ரேற்று நின்றார்.

பொழிப்புரை :

பூக்கள் மலர்ந்த பொன்நிற மாலைகள், நன்கு அழகு பெறக் கட்டிய மணிமாலைகள் ஆகியவற்றைத் தூக்கி, அழகிய பொற்சுண்ணம் எங்கும் வீசி, வாசனை உடைய சந்தனத்தால் மெழுகி, தூய மலர்நிறைந்த அத்திருவீதியில் தோழிப் பெண்கள் வாழ்த்துக்கள் பலவும் மொழியத் தாமும் பேரழகுடன் சிறந்த முத்து மணிவாயில் முன்பாக வந்து, சுந்தரரை எதிர் வரவேற்று நின்றார் பரவையார்.

குறிப்புரை :

இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 380

வண்டுலாங் குழலார் முன்பு
வன்தொண்டர் வந்து கூடக்
கண்டபோ துள்ளங் காதல்
வெள்ளத்தின் கரைகா ணாது
கொண்டநாண் அச்சங் கூர
வணங்கஅக் குரிசி லாரும்
தண்டளிர்ச் செங்கை பற்றிக்
கொண்டுமா ளிகையுள் சார்ந்தார்.

பொழிப்புரை :

இங்ஙனம் எதிர்கொள்ளும் பரவையார் திருமுன்பு, சுந்தரர் வந்து சேரக் கண்டபோது, தமது உள்ளத்து எழுந்த காதல் வெள்ளம் கரை காணாதவாறு பெருகிட, நாணமும், அச்சமும் மீதூர வணங்கிடலும், பெருமைமிக்க நம்பியாரூரரும் அவர்தம் குளிர்ந்த தளிர் போலும் சிவந்த கைகளைப் பற்றிக்கொண்டு மாளிகையின் உள்ளே புகுந்தார்.

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 381

இருவருந் தம்பி ரானார்
தாமிடை யாடிச் செய்த
திருவருட் கருணை வெள்ளத்
திறத்தினைப் போற்றிச் சிந்தை
மருவிய வின்ப வெள்ளத்
தழுந்திய புணர்ச்சி வாய்ப்ப
ஒருவரு ளொருவர் மேவு
நிலைமையி லுயிரொன் றானார்.

பொழிப்புரை :

பரவையாரும் சுந்தரரும் தங்கள் பெருமானார், தம்மிடத்துச் செய்தருளிய திருவருளின் கருணை வெள்ளத் திறத்தினைப் போற்றித் தத்தம் சிந்தையுள் பொருந்திய இன்ப வெள்ளத்துள் அழுந்தி ஒருமையுற்ற அன்பினால் ஒருவரில் ஒருவர் மேவிய நிலையில் உயிர் ஒன்றானார்.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 382

ஆரணக் கமலக் கோயின்
மேவிப்புற் றிடங்கொண் டாண்ட
நீரணி வேணி யாரை
. நிரந்தரம் பணிந்து போற்றிப்
பாரணி விளக்குஞ் செஞ்சொற்
பதிகமா லைகளுஞ் சாத்தித்
தாரணி மணிப்பூண் மார்பர்
தாமகிழ்ந் திருந்த நாளில்.

பொழிப்புரை :

மறைகளாய பூங்கோயிலுள் பொருந்திப் புற்றிடங் கொண்டு ஆண்டருளிய கங்கைநீர் அணிந்த சடையையுடைய பெரு மானாரை நாளும் பணிந்து போற்றி, இந்நிலவுலகைக் திருவருள் நீழலாம் அழகில் விளங்கிடச் செய்யும் செஞ்சொல் பாமாலைகளைப் பாடிச் சாத்தி, மாலையணிந்த அழகிய முந்நூல் மார்பராய சுந்தரர் திருவாரூரில் மகிழ்ந்திருந்த நாள்களில்,

குறிப்புரை :

இதுபோது அருளிய பதிகங்கள் இன்னதெனத் தெரிய வில்லை.

பண் :

பாடல் எண் : 383

நம்பியா ரூரர் நெஞ்சில்
நடுக்கம்ஒன் றின்றி நின்று
தம்பிரா னாரைத் தூது
தையல்பால் விட்டார் என்னும்
இம்பரின் மிக்க வார்த்தை
ஏயர்கோ னார்தாங் கேட்டு
வெம்பினார் அதிச யித்தார்
வெருவினார் விளம்ப லுற்றார்.

பொழிப்புரை :

சுந்தரர், தமது நெஞ்சில் கொஞ்சமும் நடுக்கம் ஒன் றும் இல்லாது, எம்பெருமானை ஒரு பெண்ணிடம் தூதாக விட்டார் என்ற, இவ்வுலகில் மிகுமேம்பாட்டுடன் பேசப்படும் வார்த்தையை, ஏயர்கோன் கலிக்காமர் கேட்டு வெம்பினார்; அதிசயம் கொண்டார்; அச்சமுற்றார்; இதனைச் சொல்லலுமானார்.

குறிப்புரை :

யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடைய பெரு மானை, யாவர்க்கும் கீழாயதொரு உலகியல் வயப்பட்ட செய்திக்கா கத் தூது விடுக்கின்றோமே என்று அஞ்சியிருக்க வேண்டும்; நடுக் கமும் கொண்டிருக்க வேண்டும்; அவ்வாறன்றித் துணிந்து தூதுவிட் டார் என்பார், `நடுக்கம் ஒன்று இன்றி\' என்றார்.

பண் :

பாடல் எண் : 384

நாயனை அடியான் ஏவும்
காரியம் நன்று சாலம்
ஏயுமென் றிதனைச் செய்வான்
தொண்டனாம் என்னே பாவம்
பேயனேன் பொறுக்க வொண்ணாப்
பிழையினைச் செவியால் கேட்ப
தாயின பின்னும் மாயா
திருந்ததென் னாவி யென்பார்.

பொழிப்புரை :

`யாவர்க்கும் மேலாய தலைவனை ஒரு அடியனாய சுந்தரன் ஏவிய செயல் நன்றாயிருக்கிறது! மிகவும் இது பொருந்தும் என இச்செயலைச் செய்தான் ஒரு தொண்டனாம்! இது என்ன செயல்! பெரும் பாவமே! பொறுக்க முடியாத இப்பிழையினைப் பேயனே னான என் செவியால் கேட்க நேர்ந்தும், நீங்காதிருந்தது என் உயிர்! என்று சொல்லுவார்,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 385

காரிகை தன்பால் செல்லும்
காதலால் ஒருவன் ஏவப்
பாரிடை நடந்து செய்ய
பாததா மரைகள் நோவத்
தேரணி வீதியூடு செல்வது
வருவ தாகி
ஓரிர வெல்லாம் தூதுக்
குழல்வராம் ஒருவ ரென்று.

பொழிப்புரை :

ஒரு பெண்ணிடத்துச் செல்லும் காதலால் ஒருவன் ஏவ, இவ்வுலகிடை நடந்து, செம்மையாய திருவடித் தாமரைகள் நோ வுறத் தேர் ஓடும் அழகிய வீதியில் செல்வதும் வருவதுமாக ஓர் இரவு முழுவதும் தூதிற்கு உழன்று திரிவாராம் எம் பெருமானார் என மொழிந்து, பின்னும்,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 386

நம்பர்தாம் அடியார் ஆற்றாராகியே
நண்ணி னாரேல்
உம்பரார் கோனும் மாலும்அயனுநேர்
உணர வொண்ணா
எம்பிரா னிசைந்தார் ஏவப்
பெறுவதே இதனுக் குள்ளம்
கம்பியா தவளை யான்முன்
காணுநாள் எந்நா ளென்று.

பொழிப்புரை :

எம்பெருமான் தமது அடியவரின் துயரம் தாங் கொணாது முன் வந்தார் என்றாலும், அத்துடன் தேவர்களின் அரச னாய இந்திரனும், அயனும், திருமாலும் அறிய ஒண்ணாத எம்பிரான் தூது போதற்கு இசைந்தார் என்றாலும் அவரை அவ்வாறு தூது செல்ல விடுத்திடவுமாமோ? இக்கொடுஞ் செயற்குச் சிறிதும் உள்ளம் நடுக்க முறாதவனை, யான் காணும் நாளும் எந்நாளோ? என எண்ணிய வராய்,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 387

அரிவைகா ரணத்தி னாலே
ஆளுடைப் பரமர் தம்மை
இரவினில் தூது போக
ஏவியங் கிருந்தான் தன்னை
வரவெதிர் காண்பே னாகில்
வருவதென் னாங்கொல் என்று
விரவிய செற்றம் பற்றி
விள்ளும்உள் ளத்த ராகி.

பொழிப்புரை :

பெண் ஒருத்தியின் காரணத்தினால் ஆளுடைய பெருமானார் தம்மை இரவிலே தூது போம்படி விடுத்து, அங்கு இருந்தவனை, என் எதிரே வரக் காணின் என்ன விளைவு நேருமோ? என்று பெருகிய சினம் வெடிப்பது போன்ற உள்ளத்தராகி,

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 388

ஈறிலாப் புகழின் ஓங்கும்
ஏயர்கோ னார்தாம் எண்ணப்
பேறிது பெற்றார் கேட்டுப்
பிழையுடன் படுவா ராகி
வேறினி யிதற்குத் தீர்வு
வேண்டுவார் விரிபூங் கொன்றை
ஆறிடு சடைய னாருக்
கதனைவிண் ணப்பஞ் செய்து.

பொழிப்புரை :

ஈறில்லாத புகழோடு ஓங்கும் ஏயர்கோன் கலிக்காம நாயனார் மேற்கூறியவாறு எண்ணும் பேற்றைப் பெற்ற சுந்தரர் கேட்டுத் தாம் செய்தது தவறு என்று உடன்பட்டவராய், இப்பிழைக்குத் தீர்வினை வேண்டிக் கொள்வாராகிய அவர், விரிந்த பூங்கொன்றை யுடன் கங்கையும் விளங்கி நிற்கும் சடையராய சிவபெருமானாரிடம் அதனை விண்ணப்பம் செய்து,

குறிப்புரை :

தாம் செய்தது தவறு என்பதை முழுமையாக உணர்ந்தமை யும், அத்தவறு காரணமாக ஏயர்கோன் நாயனார் தம்மைச் சினந்தது ஏற்றுக் கொள்ளுதற்குரியதே என்பதையும் திருவுளம் கொண்டார். ஆதலின், அவர்தம் எண்ணமே தமக்குப் பேறாகும் என்று கருதினார் சுந்தரர். அவர்கொண்ட சினம், தாம் தம் தவற்றினின்றும் நீங்கக் காரண மாயினமையின், அதுவே அவர் பெற்ற பேறுமாயிற்று.

பண் :

பாடல் எண் : 389

நாள்தொறும் பணிந்து போற்ற
நாதரும் அதனை நோக்கி
நீடிய தொண்டர் தம்முள்
இருவரும் மேவும் நீர்மை
கூடுதல் புரிவார் ஏயர்
குரிசிலார் தம்பால் மேனி
வாடுறு சூலை தன்னை
அருளினார் வருந்து மாற்றால்.

பொழிப்புரை :

நாள்தோறும் தமது தவற்றை நினைந்து போற்றிட, இறைவர், நீளநினைந்து வழிபட்டுவரும் இருபெருந் தொண்டர்களும் கூடி மகிழவேண்டும் எனும் திருவுளம் கொண்டவராய், ஏயர்கோன் கலிக்காமரிடத்து வாடுறும் சூலை நோயினைச் சேருமாறு அருள் செய்தார்.

குறிப்புரை :

இவ்வெட்டுப் பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 390

ஏதமில் பெருமைச் செய்கை
ஏயர்தம் பெருமான் பக்கல்
ஆதியார் ஏவும் சூலை
அனல்செய்வேல் குடைவ தென்ன
வேதனை மேன்மேற் செய்ய
மிகஅதற் குடைந்து வீழ்ந்து
பூதநா யகர்தம் பொற்றாள்
பற்றியே போற்று கின்றார்.

பொழிப்புரை :

குற்றம் ஏதும் இல்லாத பெருமையின் செய்கை யுடைய ஏயர்கோன் கலிக்காம நாயனாரிடத்து, இறைவர் அருளிய சூலைநோய், நெருப்பாலாகிய வேல் வயிற்றைக் குடைவது போன்ற வேதனையை மேன்மேல் செய்திட, அதனைப் பொறுக்கலாற்றாது அவர் மிக வருந்திச் சோர்வுற்று வீழ்ந்து, உயிர்கட்கெல்லாம் தலைவர் ஆன சிவபெருமானின் திருவடிகளைப் பற்றியவாறு போற்றுவாராய்,

குறிப்புரை :

சூலைநோயின் துன்பத்தை நாவரசர் அருளுமாற்றான் நன்கறியலாம். `புண்ணிலாம் பெரும் புழையில் கனல் நுழைந்தால்\' (கம்பராமா. கையடைப் படலம், 12) என உவமை காட்டிய துயரினும், `அனல் செய்வேல் குடைவதென்ன\' என்ற உவமை காட்டும் துயரம் மிக்கதாகின்றது. அனல்செய்வேல் - அனலில் காய்ச்சிய வேல் என்றே பலரும் விளக்கினர். நெருப்பால் ஆகிய வேல் எனில் மேலும் சிறக்கு மன்றோ? இஃது இல்பொருள் உவமையாம்.

பண் :

பாடல் எண் : 391

சிந்தையால் வாக்கால் அன்பர்
திருந்தடி போற்றி செய்ய
எந்தமை யாளும் ஏயர்
காவலர் தம்பால் ஈசர்
வந்துனை வருத்துஞ் சூலை
வன்தொண்டன் தீர்க்கி லன்றி
முந்துற வொழியா தென்று
மொழிந்தருள் செய்யக் கேட்டு.

பொழிப்புரை :

மனத்தாலும் மொழியாலும் பெருமானாருடைய திருந்திய திருவடிகளைப் போற்றி வரும் எம்மையாளும் ஏயர்கோன் கலிக்காமனார் பாடல் இறைவர் தோன்றி, `உன்னை வருத்திடும் சூலைநோய் சுந்தரன் தீர்த்தார் அன்றி, வேறு எவ்வாற்றானும் நீங்காது\' என்று மொழிந்து அருள் செய்திட, அதுகேட்டு,

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 392

எம்பிரான் எந்தை தந்தை
தந்தைஎங் கூட்ட மெல்லாம்
தம்பிரான் நீரே யென்று
வழிவழி சார்ந்து வாழும்
இம்பரின் மிக்க வாழ்க்கை
யென்னைநின் றீருஞ் சூலை
வம்பென ஆண்டு கொண்டான்
ஒருவனோ தீர்ப்பான் வந்து.

பொழிப்புரை :

`எம்பெருமானே! எம் தந்தை, அவர் தந்தை, இவர் முதலாய கூட்டமெல்லம் நம் தலைவர் நீரேயென்று வழிவழிச் சார்ந்து வாழும் இந்த உலகில், மிக மேலான வாழ்க்கை உடைய என்னை நின்று அறுத்திடும் இச் சூலைநோயை, வல்வழக்கு இட்டு ஆட்கொள்ளப் பெற்றான் ஒருவனோ வந்து தீர்ப்பான்?\'

குறிப்புரை :

எம்பிரான் நீரே என்றவிடத்து வந்த ஏகாரம் தேற்றப் பொருளது. `உற்றவரும் உறுதுணையும் நீயே\' என்புழிப் போல. இனிப் பிரிநிலையுமாம். `உன்னையல்லால் பிறதெய்வம் உள்கேன்\' என்புழிப்போல. வம்பு - புதுமை; மையல் - மானுடமாய் மயங்கும் வழி. ஐயனே தடுத்தாட் கொண்டு அருள் செய்ய வேண்டும் என விண்ணப்பித்துக்கொண்ட விண்ணப்பத்தைத் தானே மறந்தவிடத்தும், பெருமான் தம் கருணையால் ஓலைகொண்டு வந்தருளி உணர்த்தியும் உணராது, அவரைப் பித்தன் என மொழிந்தும், திருக்கரத்திலிருந்த ஆவணத்தைக் கிழித்தெறிந்தும் செய்த துரிசுகளையெல்லாம் இறை வன் பொறுத்தருளி ஆட்கொள்ளப்பெற்ற நிலை சுந்தரருக்குக் கிடைத் தது. இவ்வாறு வலிய வந்து ஆட்கொள்ளப் பெற்றமையாலேயே `வன்தொண்டன்\' எனப் பெயர்பெற்றமையும் கருதுக. தாம் முன்பின் நினையாத நிலையில் இறைவன் குருந்த மரத்தடியில் குருமூர்த்தியாக வந்து ஆட்கொண்டருளினமையின் `வம்பெனப்பழுத்து\' என்றார் வாதவூர் அடிகள்; இறைவன் வம்பென (புதுமையாக) வந்தும், தாம் `புவனியிற் சேவடி தீண்டினன் காண்க, அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க, சிவன் என யானும் தேறினன் காண்க\' என அருளுகின்றார். இத்தகைய குழைந்த மனப் பக்குவத்தால் அவர் `வம்பெனப்பழுத்து\' என்றார். சுந்தரர்பால் அமைந்த சூழ்நிலை வேறாதலின் `வம்பென ஆண்டு கொண்டான்\' என்றார் சேக்கிழார்.

பண் :

பாடல் எண் : 393

மற்றவன் தீர்க்கில் தீரா
தொழிந்தெனை வருத்தல் நன்றால்
பெற்றம்மே லுயர்த்தீர் செய்யும்
பெருமையை அறிந்தார் யாரே
உற்றவன் தொண்டற் கேயாம்
உறுதியே செய்தீர் என்னக்
கற்றைவார் சடையார் தாமும்
அவர்முன்பு கரந்தா ரன்றே.

பொழிப்புரை :

`விடைக்கொடியை உடைய பெருமானே! மற்று அந்தச் சுந்தரன் தீர்ப்பதினும் இச்சூலைநோய் தீராதொழிந்து எனைவருத்துதல் நன்றாம்; நீர் செய்திடும் பெருமைகளை உயர்ந்தவர் யாவரே? உம்பால் உற்ற சுந்தரனுக்கே மேன்மையான உறுதியும் செய் தீர்!\' என்னலும், அவ்வளவில் தொகுதியாக நீண்ட சடையையுடைய பெருமானும் அவர் முன்பு நின்று மறைந்தருளினார்.

குறிப்புரை :

இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 394

வன்தொண்டர் தம்பால் சென்று
வள்ளலா ரருளிச் செய்வார்
இன்றுநம் ஏவ லாலே
ஏயர்கோ னுற்ற சூலை
சென்றுநீ தீர்ப்பா யாகென்
றருள்செயச் சிந்தை யோடு
நன்றுமெய்ம் மகிழ்ந்து போற்றி
வணங்கினார் நாவ லூரர்.

பொழிப்புரை :

சுந்தரரிடத்துச் சென்று, இறைவர் அருளிச் செய் வாராய், சுந்தரனே! இன்று நமது ஏவலால் ஏயர்கோன் கலிக்காமனா ரிடத்துப் பொருந்திய சூலை நோயை நீ சென்று தீர்ப்பாயாக என்று அருள் புரிந்திட, மனமும் உடலும் ஒருங்கு மகிழ்ந்து போற்றி வணங் கினார் திருநாவலூரர்.

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 395

அண்ணலார் அருளிச் செய்து
நீங்கஆரூரர் தாமும்
விண்ணவர் தம்பி ரானார்
ஏவலால் விரைந்து செல்வார்
கண்ணிய மனத்தின் மேவுங்
காதலாற் கலிக்கா மர்க்குத்
திண்ணிய சூலை தீர்க்க
வருந்திறஞ் செப்பி விட்டார்.

பொழிப்புரை :

இவ்வாறு பெருமான் அருள்புரிந்து மறைந்திடச் சுந்தரரும் தேவர்க்கெல்லாம் தேவனாய பெருமானின் அருளாணை யின் வண்ணம் விரைந்து சென்று ஏயர்கோனார்பால் கொண்ட காத லால் அவருக்கு உற்ற கொடுமை பயந்திடும் சூலைநோயைத் தாம் தீர்த் திட வரும் தன்மையை முன்சென்று அறிவித்திடத் தூதுவரை அனுப்பினார்.

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 396

நாதர்தம் அருளால் நண்ணும்
சூலையும் அவர்பாற் கேட்ட
கேதமும் வருத்த மீண்டும்
வன்தொண்டர் வரவு கேட்டுத்
தூதனாய் எம்பி ரானை
ஏவினான் சூலை தீர்க்கும்
ஏதமிங் கெய்த வெய்தில்
யான்செய்வது என்னாம் என்பார்.

பொழிப்புரை :

பெருமானது அருளால் வந்திடும் சூலையும் அவர் பால் கேட்ட துன்புறுசொல்லும் தம்மை வருத்திட, அதன்மேலும், சுந்தரர் சூலைநோயைத் தீர்த்திட வருகின்றார் என்ற வார்த்தையும் கேட்டு தூதனாக எம்பெருமானைச் செலுத்திய சுந்தரன் எனக்குற்ற சூலைநோயைத் தீர்த்திட வரும் துன்பமும் நேர்ந்தால் யான் என் செய்வது? எனக் கருதியவராய்,

குறிப்புரை :

கேதம் - துன்பம்; ஈண்டுக் கேட்ட என்பதால் துன்புறுதற் குரிய சொல்லாயிற்று. `சூலை வன்தொண்டன் தீர்க்கிலன்றி முற்றுற ஒழியாது\' என்பதே கேதப்பட வரும் மொழியாம்.

பண் :

பாடல் எண் : 397

மற்றவன் இங்கு வந்து
தீர்ப்பதன் முன்நான் மாயப்
பற்றிநின் றென்னை நீங்காப்
பாதகச் சூலை தன்னை
உற்றஇவ் வயிற்றி னோடும்
கிழிப்பன்என் றுடைவாள் தன்னால்
செற்றிட வுயிரி னோடும்
சூலையுந் தீர்ந்த தன்றே.

பொழிப்புரை :

மற்று அந்தச் சுந்தரன் வந்து இச்சூலை நோயைத் தீர்ப்பதன்முன், நான் மாய்ந்திடும் அளவு என்னைப் பற்றி நின்று வருத்தும் இச்சூலை நோயை அஃது அடைந்த இவ் வயிற்றோடும் கிழிப்பேன் என்று கூறி, உடை வாளினால் வயிற்றில் கீறிட, அவரது உயிருடன் சூலை நோயும் தீர்ந்தது.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 398

கருதரும் பெருமை நீர்மைக்
கலிக்காமர் தேவி யாரும்
பொருவருங் கணவ ரோடு
போவது புரியுங் காலை
மருவிஇங் கணைந்தார் நம்பி
என்றுமுன் வந்தார் கூற
ஒருவரும் அழுதல் செய்யா
தொழிகவென் றுரைத்துப் பின்னும்.

பொழிப்புரை :

நினைத்தற்கரிய பெருமையும் பண்பும் மிக்க கலிக்காம நாயனார் மனைவியாரும், அதுகண்டு, தமது ஒப்பற்ற கணவரோடு தம் உயிரை நீக்கி, அவருடன் போவது துணிந்து, அதற்கென ஆயத்தம் செய்திடும் வேளை, நம்பிகள் விரைவில் அங்கு வரவிருக்கும் செய்தியை, அவர் முன்னாக வந்த சிலர்கூற, அதுகேட்ட அம்மனைவியாரும் ஒருவரும் இங்கு அழுதல் செய்யாது இருத்தல் வேண்டும் என்று கூறிப் பின்னரும்,

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 399

கணவர்தஞ் செய்கை தன்னைக்
கரந்துகா வலரை நம்பி
அணைவுறும் பொழுது சால
அலங்கரித் தெதிர்போம் என்னப்
புணர்நிலை வாயில் தீபம்
பூரண கும்பம் வைத்துத்
துணர்மலர் மாலை தூக்கித்
தொழுதெதிர் கொள்ளச் சென்றார்.

பொழிப்புரை :

கணவனார்தம் செயலை மறைத்துச் சுந்தரர் தம் மாளிகைக்கு வர அணையும்பொழுது, அதனை நன்கு அணிசெய்து வரவேற்றிடுவோம் என்று ஏவலரிடம் கூறிட, அவர்களும் அவர் விரும்பியவாறே, அழகு சிறந்த அம்மாளிகை வாயிலில் நல்விளக்கும் நிறை குடமும் வைத்துப் பசிய மகரந்தப் பொடி பரக்கும் மலர்மாலை களைத் தொங்கவிட்டு வணங்கி எதிர்கொண்டிட முன்சென்றார்கள்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 400

செம்மைசேர் சிந்தை மாந்தர்
சென்றெதிர் கொண்டு போற்ற
நம்மையா ளுடைய நம்பி
நகைமுகம் அவர்க்கு நல்கி
மெய்ம்மையாம் விருப்பி னோடும்
மேவியுட் புகுந்து மிக்க
மொய்ம்மலர்த் தவிசின் மீது
முகம்மலர்ந் திருந்த போது.

பொழிப்புரை :

செம்மை சேர்ந்த சிந்தை உடைய அப்பணியாளர் களும் பிறரும் சென்று சுந்தரரை எதிர்கொண்டு போற்றிட, அவரும் புன்முறுவல் செய்து மகிழ்வித்து, உண்மையாம் விருப்பினோடும் சென்று மாளிகை உள்ளே புகுந்து, மலர்பரப்பிய இருக்கையில் முக மலர்ச்சியுடன் இருந்தபொழுது,

குறிப்புரை :

***********

பண் :

பாடல் எண் : 401

பான்மைஅர்ச் சனைக ளெல்லாம்
பண்பினில் வழாமை ஏய்ந்த
நான்மறை தொடர்ந்த வாய்மை
நம்பியா ரூரர் கொண்டிங்
கியான்மிக வருந்து கின்றேன்
ஏயர்கோ னார்தாம் உற்ற
ஊனவெஞ் சூலை நீக்கி
யுடனிருப் பதனுக் கென்றார்.

பொழிப்புரை :

முறையாகவும் பண்பு மேம்பாட்டுடனும் வழிபா டாற்றிப் போற்றிடப் பொருந்திய நான்மறைகளின் பிழிவாகத் தொடர்ந்து தமிழ்ப் பதிகங்களை அருளிவரும் சுந்தரர் அதனை ஏற்றுக் கொண்டு, ஏயர்கோனாருக்கு உற்ற மிகக் கொடுமையாய சூலை நோயை நீக்கி அவருடன் இருந்திடலன்றி, இங்கு இனித் தனித்திருக்க வருந்துகிறேன் என்றருளினார்.

குறிப்புரை :

இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 402

மாதர்தம் ஏவ லாலே
மனைத்தொழில் மாக்கள் மற்றிங்
கேதமொன் றில்லை யுள்ளே
பள்ளிகொள் கின்றார் என்னத்
தீதணை வில்லை யேனும்
என்மனந் தெருளா தின்னம்
ஆதலால் அவரைக் காண
வேண்டுமென் றருளிச் செய்தார்.

பொழிப்புரை :

ஏயர்கோனார்தம் மனைவியாரின் ஏவலால், மனையில் பணிபுரிந்திடும் மக்கள், `மற்று இங்கு ஏதும் குறை ஒன்றும் இல்லை; அவர் உள்ளே பள்ளி கொள்கின்றார், என்றிடலும், நம்பிகள் அவருக்குத் தீங்கு ஒன்றும் இல்லையெனினும், மனம் தெளிவுற வில்லை, ஆதலால் நான் அவரை உடன் காணவேண்டும் என்று அருளிச் செய்தார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 403

வன்தொண்டர் பின்னுங் கூற
மற்றவர் தம்மைக் காட்டத்
துன்றிய குருதி சோரத்
தொடர்குடர் சொரிந்துள் ளாவி
பொன்றியே கிடந்தார் தம்மைக்
கண்டபின் புகுந்த வாறு
நன்றென மொழிந்து நானும்
நண்ணுவேன் இவர்முன் பென்பார்.

பொழிப்புரை :

சுந்தரர் பெருமான் பின்னரும் அவரைக் காண வேண்டுமென மொழிந்திட, அப்பணியாளர்கள், அவரை அழைத்துச் சென்று காட்டிட, வடிந்திட்ட குருதி சோர்ந்திடத் தொடர்ந்த குடல், அறுபட்டு வெளிப்போந்திட, உயிர்நீங்கிக் கிடக்கும் ஏயர்கோனாரைக் கண்ட அளவில், `இங்கு நேர்ந்தவாறு நன்று\' என்று மொழிந்து, நானும் இவர்முன் செல்வேன் என்பார்,

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 404

கோளுறு மனத்த ராகிக்
குற்றுடை வாளைப் பற்ற
ஆளுடைத் தம்பி ரானார்
அருளினால் அவரும் உய்ந்து
கேளிரே யாகிக் கெட்டேன்
எனவிரைந் தெழுந்து கையில்
வாளினைப் பிடித்துக் கொள்ள
வன்தொண்டர் வணங்கி வீழ்ந்தார்.

பொழிப்புரை :

தாம் மனம் கொண்ட குறிக்கோளின்றும் பிழையாத வராய், உயிரை நீக்குதற்கென உடைவாளைப் பற்றிட, அவ்வளவில் உயிர்களையெல்லாம் அடிமையாகக் கொண்டருளும் பெருமானார் அருளினால் உயிர்பெற்ற ஏயர்கோனார், சுந்தரரைக் கண்ட அளவில் `என் நட்புடையவரேயாகவும் நான் கெட்டேன்\' என்று விரைந்து எழுந்து, அவர் திருக்கையில் கொண்ட வாளினைப் பிடித்திட, அவரும் ஏயர்கோன் பெருமானாரை வணங்கி அவர்முன்பு வீழ்ந்தார்.

குறிப்புரை :

இறைவரிடத்தேயன்றி அவர்தம் அடியவர்களிடத்தும் இத்தகைய கேண்மையும் கிழமையும் கொண்ட சுந்தரரை, யான் அறியாது கெட்டேன் என்பார், கெட்டேன் என்றார். தூது சென்ற இறைவரே, அவரைப் பற்றி அருளவும், தாம் மனங்கொள்ளாதிருந் தமையும், உயிர் துறக்க நினைந்தமையும் மிகக்கொடியது என்ப தையும் `கெட்டேன்\' என்றார். எனவே உணர்வாலும் உயிராலும் கெட நேர்ந்தமை கூறினாராயிற்று.இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.

பண் :

பாடல் எண் : 405

மற்றவர் வணங்கி வீழ
வாளினை மாற்றி ஏயர்
கொற்றவ னாரும் நம்பி
குரைகழல் பணிந்து வீழ்ந்தார்
அற்றைநாள் நிகழ்ந்த இந்த
அதிசயங் கண்டு வானோர்
பொற்றட மலரின் மாரி
பொழிந்தனர் புவனம் போற்ற.

பொழிப்புரை :

சுந்தரர் பெருமான் வணங்க, ஏயர்கோன் பெருமா னாரும் தாம் பற்றிய வாளினை அகற்றிச் சுந்தரர் பெருமானின் மெல் லென இசைத்திடும் சிலம்பணிந்த திருவடி மலர்களில் பணிந்து வீழ்ந் தார். அன்றைய நாளில் நடந்த இவ்வியத்தகு செயலைக் கண்ட தேவர்கள், இவ்வுலகம் போற்றிடக் கற்பக மலர்களை மழையெனப் பொழிந்தனர்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 406

இருவரும் எழுந்து புல்லி
இடைவிடா நண்பி னாலே
பொருவரு மகிழ்ச்சி பொங்கத்
திருப்புன்கூர்ப் புனிதர் பாதம்
மருவினர் போற்றி நின்று
வன்தொண்டர் தம்பி ரானார்
அருளினை நினைந்தே அந்த
ணாளன்என் றெடுத்துப் பாடி.

பொழிப்புரை :

இருவருமெழுந்து ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டு, இடைவிடாத நட்பினால் ஒப்பற்ற மகிழ்ச்சி பொங் கிடத் திருப்புன்கூர்க் கோயிலைச் சேர்ந்து, அங்கு வீற்றிருந்தருளும் பெருமானாரின் திருவடிகளைப் போற்றி நின்றனர். வன்தொண்டராம் சுந்தரர் பெருமான், சிவபெருமானாரது திருவருளினை நினைந்து `அந்தணாளன்\' என எடுத்துப் பாடியருளி,

குறிப்புரை :

`அந்தணாளன்\' எனத்தொடக்கமுடைய திருப்பதிகம் தக்கேசிப் பண்ணில் அமைந்ததாகும் (தி.7 ப.55). இப்பதிகத்தில் மார்க் கண்டேயர், இயக்கர், கின்னரர், வருணன், அருச்சுனன், பகீரதன், முப் புரத்தவரில் மூவர், இராவணன் முதலானோருக்கு அருள் புரிந்ததைக் குறிப்பித்தருளுவதோடு, ஏயர்கோன்கலிக்காம நாயனாருக்கு அருள் புரிந்தமையையும் கூறி, அவ்வருட் கருணை தமக்குமாக வேண்டுகின் றார். நான்காவது பாடலில், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், நாளைப் போவார், சிலந்தி, சூதர், சாக்கியர், கண்ணப்பர், கணம்புல்லர் ஆகி யோர் குற்றம் செய்யினும் குணம் எனக் கருதும் கொள்கை கண்டு பெருமானை அடைந்ததாக அருளுகின்றார். அக்குறிப்புத் தாம் செய்த குற்றத்தையும் குணமாகக் கொண்டருளும் பெருமானாரின் திறத்தை ஏயர்கோன்கலிக்காம நாயனாரும் திருவுள்ளம் பற்றுமாறு அமைந் துள்ளது.

பண் :

பாடல் எண் : 407

சிலபகல் கழிந்த பின்பு
திருமுனைப் பாடி நாடர்
மலர்புகழ்த் திருவா ரூரின்
மகிழ்ந்துடன் வந்த ஏயர்
குலமுதற் றலைவ னாருங்
கூடவே குளிர்பூங் கோயில்
நிலவினார் தம்மைக் கும்பிட்
டுறைந்தனர் நிறைந்த அன்பால்.

பொழிப்புரை :

வணங்கி அருள்பெற்றுச் சிலநாள்கள் ஏயர்கோன் கலிக்காம நாயனாரோடு அங்கிருந்தருளிய பின்பு, திருமுனைப்பாடி நாடுடையை சுந்தரர், திருவாரூர் மீண்டிட, அவருடன் மகிழ்ந்து உடன் வந்த ஏயர்குலத்தாரின் முதல் தலைவராய கலிக்காமருடன் கூடிச் சென்று, முதிர்ந்த பூங்கோயிலில் புற்றின்மீது அமர்ந்தருளும் பெரு மானாரைக் கும்பிட்டு, அங்குச் சுந்தரருடன் நிறைந்த அன்பால் தங்கி யிருந்தார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 408

அங்கினி தமர்ந்து நம்பி
அருளினான் மீண்டு போந்து
பொங்கிய திருவின் மிக்க
தம்பதி புகுந்து பொற்பில்
தங்குநாள் ஏயர் கோனார்
தமக்கேற்ற தொண்டு செய்தே
செங்கண்மால் விடையார் பாதம்
சேர்ந்தனர் சிறப்பி னோடும்.

பொழிப்புரை :

அங்கு இனிதிருந்து, சுந்தரரது அருளால் கலிக்காமர் மீண்டு சென்று, பொங்கிய செல்வத்தின் மிக்க தம் பதியாய திருப்பெருமங்கலத்திற்குச் சென்று பொற்பினுடன் அங்குத் தங்கி இருக்கும் காலத்தில், தமக்கு ஏற்ற தொண்டினைச் செய்து வந்தவர், பின் சிவந்த கண்களையுடைய ஆனேற்றின்மீது இவர்ந்தருளும் சிவபெருமானின் திருவடிகளைச் சேர்ந்தார்.

குறிப்புரை :

****************

பண் :

பாடல் எண் : 409

நள்ளிருள் நாய னாரைத்
தூதுவிட் டவர்க்கே நண்பாம்
வள்ளலார் ஏயர் கோனார்
மலரடி வணங்கிப் புக்கேன்
உள்ளுணர் வான ஞானம்
முதலிய வொருநான் குண்மை
தெள்ளுதீந் தமிழாற் கூறுந்
திருமூலர் பெருமை செப்ப.

பொழிப்புரை :

நடுவிருள் யாமத்திலே தம் தலைவரைத் தூதுவிட்ட சுந்தரருக்கே நண்பராம் வள்ளலாரான ஏயர்கோன் கலிக்காம நாயனா ருடைய மலரடிகளை வணங்கி, உள்ளத்து உணர்வினால் பெறத்தக்க ஞானம் முதலாய நான்கின் உண்மையைத் தெள்ளிய தீந்தமிழால் கூறுகின்றவராய திருமூல நாயனாரின் பெருமையை இனிச் சொல்லப் புகுகின்றேன்.

குறிப்புரை :

சரியை முதலாய மூன்றானும் பெறத்தக்கது ஞானமே யாதலின், அதனை முன்வைத்து ஏனைய மூன்றையும் அதன்பின் அடைவாகக் கூறினார். திருமூலர்தம் வரலாற்று நிறைவிலும், `நலம்\' என இவ்வாறே அடைவு படுத்தியருள்வர். ஆசிரியர் தொல்காப்பியர் `இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை\' (தொல்.களவு -1) என அருளியிருப்பதும் ஈண்டு நினைவு கூரலாம். ஏயர்கோன் கலிக்காமநாயனார் புராணம் முற்றிற்று.
சிற்பி