கோயில்


பண் :

பாடல் எண் : 1

பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்
நினைப்ப வர்மனங் கோயிலாக் கொண்டவன்
அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத்
தினைத்த னைப்பொழு தும்மறந் துய்வனோ.

பொழிப்புரை :

பனைபோன்ற கையையும் , மும்மதங்களையும் உடைய யானைத்தோலை உரித்துப் போர்த்தவன் ; தன்னை நினைப்பவர் மனத்தைக் கோயிலாக் கொண்டவன் ; வேடம் அனைத்துமாம் அம்பலக்கூத்தன் . இத்தகைய சிற்றம்பலக் கூத்தனைத் தினையளவுப் பொழுதும் மறந்து வாழ்வேனோ !

குறிப்புரை :

பனைக்கை - பனைமரம் போன்ற கரிய பரிய கை . வேழம் - கயாசுரன் என்னும் யானை . இறைவனது எண்வகை வீரச் செயல்களுள் யானையை உரித்துப் போர்த்ததும் ஒன்று . வேடம் அனைத்தும் என்றது போக யோக வேக வடிவங்களை . ` பலபல வேட மாகும் பரன் ` ( சம்பந் .) நினைப்பவர் மனங் கோயிலாக் கொண்டவன் - ` உள்ளம் பெருங்கோயில் ` ( தி .10 திருமந்திரம் .) வாயிலார்செய்த அக வழிபாட்டின் சிறப்பைப் பெரியபுராணத்துக் காண்க . அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்து அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேரலின் என்பது ` மலர்மிசை ஏகினான் ` என்ற திருக்குறட் பகுதிக்குப் பரிமேலழகர் உரைத்த விளக்கம் . தினை - சிறுமைக்குக் காட்டுவதோர் அளவை ; கணப்பொழுதும் மறவேன் என்றது , மறந்தால் உய்யேன் என்பது உணர்த்தியது . இந்நிலை கடவுளை உள்ளவாறு உணர்ந்து அநுபவித்தார்க்கே உளதாவது .

பண் :

பாடல் எண் : 2

தீர்த்த னைச்சிவ னைச்சிவ லோகனை
மூர்த்தி யைமுத லாய ஒருவனைப்
பார்த்த னுக்கருள் செய்தசிற் றம்பலக்
கூத்த னைக்கொடி யேன்மறந் துய்வனோ.

பொழிப்புரை :

அநாதியே பாசங்களின் நீங்கி நின்று தன்னை அடைந்தார்க்கு அவற்றை நீக்கியருளும் தூயனை , பேரின்ப வடிவினனை , சிவலோக நாயகனை , ஞான உருவினனை , உலகத்தோற்றத்தின் முன் அதற்கு மூலமாய் முன்னின்ற ஒருவனை , அருச்சுனனுக்கு வேடனாய்த்தோன்றியும் , பாசுபதமீந்தும் அருள்செய்த சிற்றம்பலத்துக் கூத்தப்பிரானைக் கொடியேனாகிய யான் மறந்து வாழ்வேனோ ? மறவேன் .

குறிப்புரை :

தீர்த்தன் - தூயன் . சிவன் - பேரின்ப வடிவினன் . முதலாய ஒருவன் - ` சத்தே முதற்கண் ஒன்றாய் அத்விதீயமாய் இருந்தது ` என்னும் சாந்தோக்கிய உபநிடத உரைபற்றி எழுந்தது . தமக்குத் திருவருள் கூடாவண்ணம் தடுத்துப் பிறசமயம் புகுவித்த வினைக்கொடுமையைக் கருதிக் கொடியேன் என்றார் .

பண் :

பாடல் எண் : 3

கட்டும் பாம்புங் கபாலங்கை மான்மறி
இட்ட மாயிடு காட்டெரி யாடுவான்
சிட்டர் வாழ்தில்லை யம்பலக் கூத்தனை
எட்ட னைப்பொழு தும்மறந் துய்வனோ.

பொழிப்புரை :

தன்னைச் சுற்றிக் கட்டிக்கொண்டிருக்கும் பாம்பையும் , கையின்கண் பிரமகபாலத்தையும் மான்கன்றையும் உடையவனும் , சர்வசங்கார நிலையில் விரும்பி எரிவீசி ஆடுவோனும் ஆய சிட்டர்கள் வாழும் தில்லைச் சிற்றம்பலத்துக் கூத்தனை எள்ளளவுப் பொழுதேனும் மறந்து வாழ்வேனோ ?

குறிப்புரை :

கபாலம் - பிரமனது மண்டையோடு . மறி - கன்று . இட்டம் - விருப்பம் . எரி - பிரளயகாலத் தீ . எள்தனை - எட்டனை என்றாயிற்று . தனை - அளவு . எள் - அளவின் சிறுமைக்கு எடுத்துக் காட்டு .

பண் :

பாடல் எண் : 4

மாணி பால்கறந் தாட்டி வழிபட
நீணு லகெலாம் ஆளக் கொடுத்தவென்
ஆணியைச் செம்பொ னம்பலத் துள்நின்ற
தாணு வைத்தமி யேன்மறந் துய்வனோ.

பொழிப்புரை :

பிரமசாரியாகிய சண்டேசர் பசுக்களின் பாலைக் கறந்து அபிடேகித்து வழிபட நீண்ட உலகம் பலவற்றையும் ஆளும் அதிகாரத்தைக் கொடுத்தவன் ; பொன் உரையாணி போன்றவன் ; செம் பொன்னம்பலத்துள் நின்று ஆடும் செம்பொருள் . அவனைத் தனியனாய நான் மறவேன் .

குறிப்புரை :

மாணி - பிரமசாரி , சண்டேசர் . நீள் + உலகு - நீணுலகு . ( சிவஞான . - காப்பு உரை ). ஆணி - பொன்னின் மாற்று அறிதற்கு வைத்திருக்கும் மாற்றுயர்ந்த பொன் ; தனக்கு உவமையில்லாதான் என்னும் கருத்தில் இறைவனுக்குப் பெயராயிற்று . தாணு - நிலை பெற்றவன் . ஸ்தாணவே நம : என்பது இறைவனது நூற்றியெட்டுப் போற்றிகளுள் ஒன்று .

பண் :

பாடல் எண் : 5

பித்த னைப்பெருங் காடரங் காவுடை
முத்த னைமுளை வெண்மதி சூடியைச்
சித்தனைச் செம்பொ னம்பலத் துள்நின்ற
அத்த னையடி யேன்மறந் துய்வனோ.

பொழிப்புரை :

பித்தன் என்ற பெயருடையவனை , இடு காட்டையே ஆடுமிடமாகக்கொண்ட , இயல்பாகவே பாசங்களின் நீங்கியோனை , இளம்பிறைசூடியவனை , எல்லாம் வல்லவனை , செம்பொற் சபையிலே நின்று ஆடும் தலைவனை அடியேன் மறவேன் .

குறிப்புரை :

பித்தன் - பேரன்புடையவன் . பெருங்காடு - மாப்பே ரூழியாகிய சுடலை . அரங்கு - ஆடுமிடம் . முத்தன் - பாசத்தினின்றும் விடுபட்டவன் . சித்தன் - சித்துருவானவன் ; சித்தத்திலிருப்பவன் , அட்டமாசித்திகளை அருள்பவன் . அத்தன் - தலைவன் .

பண் :

பாடல் எண் : 6

நீதி யைநிறை வைமறை நான்குடன்
ஓதி யையொரு வர்க்கும் அறிவொணாச்
சோதி யைச்சுடர்ச் செம்பொனி னம்பலத்
தாதி யையடி யேன்மறந் துய்வனோ.

பொழிப்புரை :

நீதியாகவும் , நிறைவாகவும் , மறைகள் நான்கையும் தந்து பிரமனாதியர்க்கு உபதேசித்தவனாகவும் , ஒருவர்க்கும் அறிய வொண்ணாத சோதியாகவும் , ஒளி வீசும் செம்பொன்னம்பலத்து ஆதியாகவும் உள்ள பெருமானை அடியேன் மறந்து உய்தலும் கூடுமோ .

குறிப்புரை :

நீதியை - நீதிவடிவாயிருப்பவனை ; ` அறவாழி அந்தணன் ` என்னும் திருக்குறள் நினைக்கத்தக்கது . நிறைவை - எங்கும் நிறைந்தவனை . ` மாலறியா நீதி `, ` குறைவிலா நிறைவே ` என்றார் ( தி .8) மணிவாசகரும் . நான்மறைகளையும் ஒருசேரத் தத்புருஷம் முதலிய நான்கு முகங்களால் வெளிப்படுத்தியவன் ஆகலின் மறையோதியை என்றார் . சோதியை - அறிவுக் கறிவாகிய ஒளியை . ஆதி - முதல்வன் .

பண் :

பாடல் எண் : 7

மைகொள் கண்டனெண் தோளன்முக் கண்ணினன்
பைகொள் பாம்பரை யார்த்த பரமனார்
செய்ய மாதுறை சிற்றம்ப லத்தெங்கள்
ஐய னையடி யேன்மறந் துய்வனோ.

பொழிப்புரை :

திருநீலகண்டனும் , எட்டுத்தோளனும் , முக்கண்ணினனும் . படம் கொண்ட பாம்பை அரையிற் கட்டிய பரமனும் , திருமகள் உறையும் சிற்றம்பலத்தின்கண் எங்கள் ஐயனுமாகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ .

குறிப்புரை :

மைகொள் கண்டன் - ஆலகால விடத்தை அடக்கின மையால் கறுத்த கழுத்தை உடையவன் . பைகொள் பாம்பு - படத்தையுடைய பாம்பு . அரை - இடை . ஆர்த்த - கட்டிய . பரமன் - மேலானவன் . செய்யமாது - செய்யாள் , திருமகள் . ஐயன் - தலைவன் , அழகியன் . நுண்ணியன் . ` நூலுணர்வுணரா நுண்ணியோன் அணுத்தரும் தன்மையில் ஐயோன் காண்க ` ( தி .8 திருவாச . திருவண் ) ` வேதங்கள் ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியன் ` ( தி .8 திருவாச - சிவபுரா ).

பண் :

பாடல் எண் : 8

முழுதும் வானுல கத்துள தேவர்கள்
தொழுதும் போற்றியுந் தூயசெம் பொன்னினால்
எழுதி மேய்ந்தசிற் றம்பலக் கூத்தனை
இழுதை யேன்மறந் தெங்ஙன முய்வனோ.

பொழிப்புரை :

விண்ணிலுள்ள தேவர் வந்து பரவிப் போற்றித் தூய செம்பொன்னினால் முழுதும் எழுதி மேய்ந்த சிற்றம்பலத்துக் கூத்தப் பெருமானை இழிவுடைய யான் மறந்து எங்ஙனம் உய்வன் ?

குறிப்புரை :

தேவர்கள் முழுதும் எழுதிமேய்ந்த என மாறுக . தூய செம்பொன் - ஆடகம் . கிளிச்சிறை , சாம்புநதம் , சாதரூபம் என்பவற்றில் தூயதான கனகம் . சிற்றம்பலம் பொன்னம்பலம் என்பது காலங் கடந்த பெயர் வழக்கு . ஆதலின் பராந்தக சோழன் போன்ற சோழ வேந்தர்கட்கு முன்பே தேவர்களால் பொன் வேயப்பட்டது என்பது அறியவேண்டுவதொன்று . முழுதும் எழுதி மேய்ந்த - கோயில் விமானம் முழுதும் பரப்பி வேயப்பட்ட . இழுதையேன் - குற்ற முடையவன் . வேய்ந்த - மேய்ந்த என்றாயது .

பண் :

பாடல் எண் : 9

காரு லாமலர்க் கொன்றையந் தாரனை
வாரு லாமுலை மங்கைம ணாளனைத்
தேரு லாவிய தில்லையுட் கூத்தனை
ஆர்கி லாஅமு தைமறந் துய்வனோ.

பொழிப்புரை :

கார்காலத்துப் பூக்கும் கொன்றை மாலையனை , கச்சணிந்த தனங்களை உடைய உமைகேள்வனை , தேர் உலாவும் தில்லையுள் கூத்தப்பெருமானை , உண்ணத்தெவிட்டாத அமுது போல் வானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ .

குறிப்புரை :

கார்காலத்து மலர்கின்ற பூவாதலின் காருலாமலர்க் கொன்றை என்றார் . ` கண்ணி கார்நறுங் கொன்றை ` ( புறநானூறு .) காருலாமலர்க் கொன்றை - கார் உலாவுகின்ற காலத்துப் பூத்த கொன்றை மலர் . தார் - போக மாலை ; உயிர்களுக்குப் போகம் நிகழ்தற் பொருட்டுக் கார்காலத்து மலரும் கொன்றைத்தாரணிந்து உமையொரு பாகங்கொண்டு போகியாயிருப்பன் என்க . ` போகம் ஈன்ற புண்ணியன் ` என்றார் தேவரும் . வார் - கச்சு . தேருலாவிய தில்லையுட்கூத்தன் - தேருலாவிய கூத்தன் , தில்லையுள் கூத்தன் . நடராசப் பெருமான் திருவிழாக்காலங்களில் ஏனைய நாள்களில் உலாவராது , தேர்த் திருநாள் மட்டிலுமே உலாவருவதைக் குறித்ததுமாம் .

பண் :

பாடல் எண் : 10

ஓங்கு மால்வரை யேந்தலுற் றான்சிரம்
வீங்கி விம்முற வூன்றிய தாளினான்
தேங்கு நீர்வயல் சூழ்தில்லைக் கூத்தனைப்
பாங்கி லாத்தொண்ட னேன்மறந் துய்வனோ.

பொழிப்புரை :

உயர்ந்த திருக்கயிலாயத்திருமலையை எடுக்கலுற்ற இராவணன் சிரங்கள் பருத்து விம்முதல் அடைய ஊன்றிய திருவடி உடையவனும் நீர்வளம் சான்ற தில்லையுட் கூத்தனும் ஆகிய பெருமானை நல்ல சார்பில்லாத தொண்டனேன் மறந்து உய்தலுங் கூடுமோ .

குறிப்புரை :

ஓங்குமால்வரை - ஊழிதோறூழி முற்றும் உயர்ந்து நிற்கும் மலைகளில் தலையாகிய திருக்கயிலாயம் . தலையாய மலைrயெடுத்த தகவிலோன் ( அப்பர் . தி . 6. ப . 97. பா . 10.) ஏந்தலுற்றான் - எடுக்க விரும்பியவன் . சிரம் - தலைகள் . நீர்தேங்கு வயல் என மாறுக . பாங்கு - நற்சார்பு . உரிமை , கிழமை என்றலும் ஆம் .
சிற்பி