பொது


பண் :

பாடல் எண் : 1

அண்டங் கடந்த சுவடு முண்டோ
அனலங்கை யேந்திய ஆட லுண்டோ
பண்டை யெழுவர் படியு முண்டோ
பாரிடங்கள் பலசூழப் போந்த துண்டோ
கண்ட மிறையே கறுத்த துண்டோ
கண்ணின்மேற் கண்ணொன் றுடைய துண்டோ
தொண்டர்கள் சூழத் தொடர்ச்சி யுண்டோ
சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே.

பொழிப்புரை :

அன்பர்களே ! நீங்கள் கண்ட எம்பிரானிடம் அண்டம் கடந்து நின்றதற்கான அடையாளம் உண்டோ ? அங்கையில் அனலேந்திய ஆடலுண்டோ ? பண்டை முனிவர் எழுவர் பணி செய்யும் படியும் உண்டோ ? பூதங்கள் பல சூழப் போதல் உண்டோ ? கண்டம் சிறிதே கறுத்தது உண்டோ ? கண்களுக்கு மேலாக நெற்றியில் கண் ஒன்று உண்டோ ? தொண்டர் சூழும் அத்தொடர்ச்சி உண்டோ ? நீங்கள் அவனைக் கண்டவண்ணம் எமக்குச் சொல்வீராக .

குறிப்புரை :

சுவடு - நடந்து சென்ற அடையாளம் ; அஃது , இங்கு , ` அறிகுறி ` என்னும் அளவாய் நின்று , அதனையுடைய , அயன்மால் தேட நீண்ட ஒளி வடிவைக் குறித்தது , ` ஏந்திய ஆடல் ` என வினை முதலின் தொழில் , வினைமேல் ஏற்றப்பட்டது . பண்டை எழுவர் - ` அகத்தியர் , புலத்தியர் , அங்கிரா , கவுதமர் , வசிட்டர் , காசிபர் , மார்க்கண்டேயர் ` என்னும் முனிவர் . படி - உருவம் ; ` கண்ணாற் கண்டதுண்டோ ` என வினவுவார் , ` உருவம் ` என்றார் . ` பணியும் உண்டோ ` எனப் பாடம் ஓதுதல் சிறக்கும் . ` போந்தது ` என்றது , தொழிலை உணர்த்திய பெயர் . இறையே - சிறிதே . சூழ - சுற்றிலும் . தொடர்ச்சி - தொடர்தல் . ` சூழ் அத் தொடர்ச்சி ` எனப் பிரித்து உரைத்தலும் ஆம் .

பண் :

பாடல் எண் : 2

எரிகின்ற இளஞாயி றன்ன மேனி
யிலங்கிழையோர் பாலுண்டோ வெள்ளே றுண்டோ
விரிகின்ற பொறியரவத் தழலு முண்டோ
வேழத்தி னுரியுண்டோ வெண்ணூ லுண்டோ
வரிநின்ற பொறியரவச் சடையு முண்டோ
அச்சடைமேல் இளமதியம் வைத்த துண்டோ
சொரிகின்ற புனலுண்டோ சூலம் உண்டோ
சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே.

பொழிப்புரை :

அன்பர்களே ! நீங்கள் கண்ட எம்பிரானிடம் இள ஞாயிறு போன்று ஒளிவிடும் அவன் உடலின் ஓருபால் விளங்குகின்ற அணியினை உடைய உமாதேவி உண்டோ ? வெள்ளிய இடப முண்டோ ? பரவுகின்ற தீப்பொறியும் ஒலியுமுடைய தழலுமுண்டோ ? வேழத்தின் தோல் உண்டோ ? வெண்ணூல் உண்டோ ? வரியும் புள்ளி யும் பொருந்திய பாம்பைக் கொண்ட சடையுமுண்டோ ? அச்சடை மேல் வைக்கப்பட்ட இளமதியும் உண்டோ ? சடையிலிருந்து ஒழுகும் நீர் உண்டோ ? கையில் சூலும் உண்டோ ? நீங்கள் அவனைக் கண்ட வண்ணம் எமக்குச் சொல்வீராக .

குறிப்புரை :

` எரிகின்ற ` என்றது , ` நெருப்புப்போல ஒளி விடுகின்ற ` என்னும் பொருளது . ` மேனியின் ஓர்பால் இலங்கிழை உண்டோ ` என மாறிக் கூட்டுக . இலங்கிழை - விளங்குகின்ற அணியினை உடையாள் ; உமாதேவி . ` உண்டு ` என்பது , அஃறிணை ஒருமை குறித்து வருதலேயன்றி , இடையில் தோன்றாது , பொருளோடு உடனுளதாய உண்மைத் தன்மை குறிக்கும் வழி , இருதிணை ஐம்பால் மூவிடங்களிலும் வருமாதலின் , ` இலங்கிழை உண்டோ ` என்றருளினார் . விரிகின்ற - பரவுகின்ற . பொறி - தீப்பொறி . அரவம் - ஒலி . தழல் - நெருப்பு . நெருப்பை , ` குரை அழல் ` என்றலும் வழக்காதலின் , ` அரவத் தழல் ` என்று அருளினார் . வரி - கீற்று . சொரிகின்ற - ஒழுகும் தன்மை வாய்ந்த . புனல் - நீர் .

பண் :

பாடல் எண் : 3

நிலாமாலை செஞ்சடைமேல் வைத்த துண்டோ
நெற்றிமேற் கண்ணுண்டோ நீறு சாந்தோ
புலால்நாறு வெள்ளெலும்பு பூண்ட துண்டோ
பூதந்தற் சூழ்ந்தனவோ போரே றுண்டோ
கலாமாலை வேற்கண்ணாள் பாகத் துண்டோ
கார்க்கொன்றை மாலை கலந்த துண்டோ
சுலாமாலை யாடரவந் தோள்மே லுண்டோ
சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே.

பொழிப்புரை :

அன்பர்களே ! நீவிர் கண்ட எம்பெருமான் பிறைக் கண்ணியைச் செஞ்சடைமேல் வைத்ததுண்டோ ? அவனுக்கு நெற்றியில் கண்ணுண்டோ ? பூசும் நீறுதான் அவனுக்குச் சந்தனமோ ? புலால் நாறும் வெள்ளெலும்புமாலையை அவன் பூண்டதுண்டோ ? பூதங்கள் அவனைச் சூழ்ந்ததுண்டோ ? போர்க்குணமுடைய இடபம் அருகில் உண்டோ ? போர் செய்யும் தன்மை வாய்ந்தனவும் , வேல்போன்றனவுமாகிய கண்களையுடைய உமையம்மை அவன் பாகமாகப் பொருந்திய துண்டோ ? கார்காலத்து மலரும் கொன்றை மாலை அவனுடலில் கலந்ததுண்டோ ? வளைந்தமாலை போல்வதும் படமெடுத்தாடுவதும் ஆகிய பாம்பு தோள்மேல் விளங்குதல் உண்டோ ? அவனை நீங்கள் கண்டவண்ணம் எமக்குக் கூறுவீராக .

குறிப்புரை :

நிலா மாலை - பிறைக் கண்ணி . சாந்து - சந்தனம் ; ` நீறு தான் சாந்தோ ` என்க . கலா மாலைக்கண் - போர் செய்யும் தன்மை வாய்ந்த கண் . சுலா மாலை அரவம் - வளைந்த மாலை போலும் பாம்பு .

பண் :

பாடல் எண் : 4

பண்ணார்ந்த வீணை பயின்ற துண்டோ
பாரிடங்கள் பலசூழப் போந்த துண்டோ
உண்ணா வருநஞ்ச முண்ட துண்டோ
ஊழித்தீ யன்ன ஒளிதா னுண்டோ
கண்ணார் கழல்காலற் செற்ற துண்டோ
காமனையுங் கண்ணழலாற் காய்ந்த துண்டோ
எண்ணார் திரிபுரங்க ளெய்த துண்டோ
எவ்வகையெம் பிரானாரைக் கண்ட வாறே.

பொழிப்புரை :

அன்பர்காள் ! நீவிர் கண்ட எம்பெருமான் பண் நிறைந்த வீணையை வாசித்துப் பழகியதுண்டோ ? பூதங்கள் பல சூழ்ந்து வர வெளியே போந்ததுண்டோ ? உண்ணற்காகாத கொடிய நஞ்சை உண்டதுண்டோ ? ஊழித் தீப் போன்ற ஒளி அவன்பால் உண்டோ ? கண் , மகிழ்வால் நிறைதற்குக் காரணமான திருவடியால் அவன் காலனை உதைத்ததுண்டோ ? மன்மதனையும் நெற்றிக்கண்ணிடத்துத் தோன்றிய நெருப்பால் அவன் அழித்ததுண்டோ ? பகைவருடைய திரிபுரங்கள் மேல் அவன் அம்பு எய்ததுண்டோ ? நீங்கள் அவனை எவ்வகையில் கண்டீர்கள் ?.

குறிப்புரை :

கண் ஆர் கழல் - கண் நிறைதற்கு ( மகிழ்வதற்கு ) ஏதுவாகிய திருவடி . ` கழலானது காலனைச் செற்றது உண்டோ ` என்க . அன்றி , ` கழலாற் செற்றது உண்டோ ` என உருபு விரித்துரைப்பினுமாம் . எண்ணார் - மதியாதவர் .

பண் :

பாடல் எண் : 5

நீறுடைய திருமேனி பாக முண்டோ
நெற்றிமே லொற்றைக்கண் முற்று முண்டோ
கூறுடைய கொடுமழுவாள் கையி லுண்டோ
கொல்புலித்தோ லுடையுண்டோகொண்டவேடம்
ஆறுடைய சடையுண்டோ அரவ முண்டோ
அதனருகே பிறையுண்டோ அளவி லாத
ஏறுடைய கொடியுண்டோ இலய முண்டோ
எவ்வகையெம் பிரானாரைக் கண்ட வாறே.

பொழிப்புரை :

அன்பர்காள் ! நீவிர் கண்ட எம்பெருமானுக்குத் திருமேனியில் நீறு பூசிய பாகமுண்டோ ? நெற்றியில் நெருப்புமிகும் ஒரு கண்ணுமுண்டோ ? கூறுபடுத்துங்கொடிய மழுவாயுதம் கையிலுண்டோ ? கொல்லும் புலியது தோலாகிய உடையுண்டோ ? கங்கையைத் தாங்கும் சடையுண்டோ ? அச்சடையிடத்துப் பாம்பு உண்டோ ? அப் பாம்பின் அருகே பிறையுண்டோ ? பெருமை அளவிட முடியாத இடபக் கொடியுண்டோ ? கூத்துமுண்டோ ? நீங்கள் அவன் கொண்ட எவ்வகை வேடத்தில் அவனைக் கண்டீர்கள் ?.

குறிப்புரை :

` பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் ` ( தி .8 திருவா . திருக்கோத்தும்பி . 18) என்று அருளியவாறு . அம்மை பாகத்தில் சந்தனம் இருக்க , தன் பாகத்தில் மட்டுமே நீறுபூசியிருத்தலின் , ` நீறுடைய திருமேனி பாகம் உண்டோ ` என்று அருளினார் . ` பாகம் ` என்புழி , ` பாகமாய் ` என ஆக்கம் வருவித்து உரைக்க . ` முற்றும் ` என்பதற்கு முற்றுதலும் என உரைக்க . முற்றுதல் - முதிர்தல் ; ( நெருப்பு ) மிகுதல் . கூறு உடைய - கூறுபடுத்தலை உடைய . ` கூறுடைய ` என்பது , எதுகை நோக்கித் திரிந்தது என்றலும் ஆம் . ` கொண்ட வேடம் ` என்பது , முன்னும் பின்னும் சென்று எல்லாவற்றோடும் இயையும் . ` நெற்றிமேல் ஒற்றைக்கண் முற்றுதல் ` முதலியன வேடத்திற்கு உறுப்புக்களாதலின் , வேடம் முற்றுதல் உண்டோ என்றது , சினை வினையை முதலொடு சார்த்தி முடித்ததாக உரைக்க . ` அளவிலாத கொடி ` என இயையும் . அளவிலாமை - ஒப்பாதல் , உயர்வாதல் இல்லாமை . இலயம் - கூத்து .

பண் :

பாடல் எண் : 6

பட்டமுந் தோடுமோர் பாகங் கண்டேன்
பார்திகழப் பலிதிரிந்து போதக் கண்டேன்
கொட்டிநின் றிலயங்க ளாடக் கண்டேன்
குழைகாதிற் பிறைசென்னி யிலங்கக் கண்டேன்
கட்டங்கக் கொடிதிண்டோள் ஆடக் கண்டேன்
கனமழுவாள் வலங்கையில் இலங்கக் கண்டேன்
சிட்டனைத் திருவால வாயிற் கண்டேன்
தேவனைக் கனவில்நான் கண்ட வாறே.

பொழிப்புரை :

அன்பர்காள் ! சிவபெருமானை நான் கனவில் கண்டவாறே நனவிலும் அவன் நெற்றிப்பட்டமும் செவித்தோடும் ஓரொருபாகத்தில் விளங்கக் கண்டேன் , நிலம் அழகுபெறுமாறு பிச்சை பெறப் பல இடங்களிலும் திரிந்தலையக் கண்டேன் . வாச்சியங்களைப் பூதகணங்கள் இயம்பப் பலவகைக் கூத்துக்களை ஆடக் கண்டேன் , காதிற்குழையும் சென்னியில் பிறையும் விளங்கக் கண்டேன் , உயர்த்திய மழுக்கொடி திண்டோளை ஒட்டி ஆடக்கண்டேன் ; வலிமை மிக்க மழுவாயுதம் வலக்கையில் திகழக் கண்டேன் ; மேலான அவனைத் திருவாலவாயிற் கண்டேன் . அவனை நீவிர் கண்டவாறு எங்ஙனம் ?.

குறிப்புரை :

` கனவில் நான் கண்டவாறே ` என்றதனை , ` கண்டேன் ` என்றவற்றோடு முடித்து , ` நனவிலுங் கண்டேன் ` எனவுரைக்க . பட்டம் - நெற்றிப் பட்டம் . இதுவும் , ஒருபாலே உள்ளது என்க . தோடு , இடக்காதில் மட்டும் உள்ளது . ` பார்திகழ ` என்றது , ` தனது செலவினால் நிலம் அழகுபெற ` என்றதேயன்றி , ` அதன்கண் வாழ்வார் மெய்யுணர்வு பெற்று விளங்க ` என்றதுமாம் . ` கொட்டி ` என்றதனை , ` கொட்ட ` எனத் திரிக்க ; ` வாச்சியங்களைப் பூதகணங்கள் இயம்ப ` என்பது பொருள் . இலயங்கள் - பலவகைக் கூத்துக்கள் . ` காதிற் குழையும் சென்னியிற் பிறையும் இலங்கக் கண்டேன் ` என்க . ஏற்றுக் கொடியே யன்றி , கட்டங்க ( மழு ) க் கொடியும் சிவபிரானுக்கு உண்டென்க . ` வலக்கை ` என்பது மெலிந்து நின்றது - ` வலத்திற் கையில் ` எனலுமாம் . சிட்டன் - மேலானவன் . ` சிட்டனை ` என்றது , ` அவனை ` என்னும் சுட்டளவாய் நின்றது . ` இறைவனை நான் இவ்வாறு கண்டேன் ; நீரும் இவ்வாறு கண்டதுண்டோ ?` எனக் குறிப்பெச்சம் வருவித்து உரைக்க . அங்ஙனம் உரையாவிடில் , இத் திருப்பதிகத்தோடு இயையுமாறில்லை . இனி , இத்திருப்பதிகத்தை , ` வினா விடைத்திருப்பதிகம் ` என்பார் , பிற அடியார்கள் , ` பட்டமுந்தோடும் ஓர் பாகம் கண்டது உண்டோ ` என்பன முதலாக வினாவும் வினாவிற்கு இறுத்த விடையாகக் கொள்வர் , இனிவரும் திருத்தாண்டகங்களுட் சிலவும் அன்ன .

பண் :

பாடல் எண் : 7

அலைத்தோடு புனற்கங்கை சடையிற் கண்டேன்
அலர்கொன்றைத் தாரணிந்த வாறு கண்டேன்
பலிக்கோடித் திரிவார்கைப் பாம்பு கண்டேன்
பழனம் புகுவாரைப் பகலே கண்டேன்
கலிக்கச்சி மேற்றளியே யிருக்கக் கண்டேன்
கறைமிடறுங் கண்டேன் கனலுங் கண்டேன்
வலித்துடுத்த மான்தோல் அரையிற் கண்டேன்
மறைவல்ல மாதவனைக் கண்ட வாறே.

பொழிப்புரை :

மறைவல்லவனும் , மாதவத்தவனும் ஆகிய சிவ பெருமானுடைய சடையில் அலைவீசி ஓடும் நீர்ப் பெருக்கையுடைய கங்கையைக் கண்டேன் . கொன்றை மலரால் ஆன மாலையை அவன் அணிந்த தன்மையைக் கண்டேன் . பிச்சைக்கு ஓடித்திரியும் அவன் கையில் பாம்பைக் கண்டேன் . பகற்பொழுதில் பழனத்திருப்பதியில் அவன் சென்று புகுதலைக் கண்டேன் . அவன் ஆரவாரம் மிக்க கச்சி மேற்றளியில் மேவி இருக்கக் கண்டேன் . அவனது கறைபொருந்திய மிடற்றைக் கண்டேன் ; கையில் கனலும் கண்டேன் . அரையில் இறுக்கி உடுத்த மான் தோலைக் கண்டேன் . அவனை நான் கண்டவாறு இது . அவனை நீவிர் கண்டவாறு எங்ஙனம் ?

குறிப்புரை :

அலைத்து ஓடு - அலைவீசி ஓடும் தன்மையை உடைய . ` திரிவார் கை ` என , உடம்பொடு புணர்த்ததனால் , ` திரிதல் கண்டேன் ` என்பதும் கொள்ளப்படும் . ` மேற்றளியே ` என்புழி , ` மேற்றளிக் கண்ணே ` என உருபு விரிக்க . கனல் கையில் உளதாதல் வெளிப்படை . வலித்து - இறுக்கி . மாதவன் - பெரிய தவக்கோலத்தை உடையவன் . `( நான் ) கண்டவாறு இது ; இவ்வாறு நீவிரும் கண்டதுண்டோ ?` என்க .

பண் :

பாடல் எண் : 8

நீறேறு திருமேனி நிகழக் கண்டேன்
நீள்சடைமேல் நிறைகங்கை யேறக் கண்டேன்
கூறேறு கொடுமழுவாள் கொள்ளக் கண்டேன்
கொடுகொட்டி கையலகு கையிற் கண்டேன்
ஆறேறு சென்னியணி மதியுங் கண்டேன்
அடியார்கட் காரமுத மாகக் கண்டேன்
ஏறேறி யிந்நெறியே போதக் கண்டேன்
இவ்வகையெம் பெருமானைக் கண்ட வாறே.

பொழிப்புரை :

அன்பர்காள் ! எம்பெருமான் திருநீறு திகழும் திருமேனியுடன் உலவக் கண்டேன் . அவன் நீண்ட சடைமேல் நீர்நிறை கங்கை பொருந்தக் கண்டேன் . கூறுபடுத்தலைப் பொருந்திய கொடிய மழுவாயுதத்தை அவன் கொள்ளக் கண்டேன் . கொடுகொட்டி என்னும் வாச்சியத்தையும் கையலகு என்னும் ஆயுதத்தையும் அவன் கையிற் கண்டேன் . ஆறு பொருந்திய அவன் தலையில் அழகிய மதியையும் கண்டேன் . அவன் அடியார்க்கு ஆரமுதம் போன்று இன்பஞ் செய்தலைக் கண்டேன் . அவன் இடபவாகனமேறி இவ்வழியே வரக் கண்டேன் . அவனை இவ்வகையில் யான் கண்டேன் . அவனை நீவிர் கண்டவாறு எங்ஙனம் ?.

குறிப்புரை :

நிகழ்தல் - உலாவுதல் , ` கூறேறும் ` என்பதற்கு மேல் . ( பா .5) ` கூறுடைய ` என்றதற்கு உரைத்தவாறே உரைக்க . அலகு - ஒரு வகை வாள் ; அவ்வகையில் சிறிதாயதனை , ` கையலகு ` என்று அருளினார் . ` சென்னியின்கண் அணிந்த மதி ` என்க . ` ஆக ` என்னும் , செயவெனெச்சம் தொழிற் பெயர்ப் பொருள்தந்து நின்றது . ` இந்நெறி ` என்றது , சுவாமிகளும் பிற அடியவரும் உள்ள இடத்தை .

பண் :

பாடல் எண் : 9

விரையுண்ட வெண்ணீறு தானு முண்டு
வெண்டலைகை யுண்டொருகை வீணை யுண்டு
சுரையுண்டு சூடும் பிறையொன் றுண்டு
சூலமுந் தண்டுஞ் சுமந்த துண்டு
அரையுண்ட கோவண ஆடை யுண்டு
வலிக்கோலுந் தோலு மழகா வுண்டு
இரையுண் டறியாத பாம்பு முண்டு
இமையோர் பெருமா னிலாத தென்னே.

பொழிப்புரை :

அன்பர்காள் ! இமையோர் பெருமானுடலில் மணமுடைய வெண்ணீறு உண்டு . அவன் கைகளில் ஒன்றில் வெண்டலையும் ஒன்றில் வீணையுமுண்டு . சுரைபோன்று தோன்றும் சடை முடியுண்டு அவனுக்கு , அதில் அவன் சூடும் பிறை ஒன்றுண்டு . அவன் சூலாயுதத்தையும் தண்டாயுதத்தையும் சுமந்ததுண்டு , அவனுக்கு இடுப்பில் கட்டிய கோவண ஆடையுண்டு , அவன்பால் ஊன்றுகோலும் போர்க்குந்தோலும் அழகாக உண்டு . அவனிடத்து இருக்கும் பாம்பு பசி இல்லாததாகலின் இரையுண்டறியாதது . அவனிடம் எல்லாம் உள . இவ்வாறு அவனை நான் கண்டேன் . நீவிர் அவனைக் கண்டவாறு எங்ஙனம் ?

குறிப்புரை :

விரை உண்ட - வாசனையை ஏற்ற ; இனி , ` வாசனைப் பொருளாம் தன்மையைக் கொண்ட ` என்றுமாம் . சுரை - உறை . ` சுரை உண்டு ` என்றதில் உள்ள , ` உண்டு ` என்பதனை , ` உண்ண ` எனத் திரிக்க . ` சடைமுடியானது சுரைபோல உள்வாங்கும்படி சூடும் பிறை ` என்றபடி . தண்டு - தண்டாயுதம் ; சிறப்புப் படைக்கலங்கள் சூலமும் மழுவும் என்பதனால் ஏனைய படைக்கலங்கள் சிவபிரானுக்கு உரியவல்ல என்பது , பொருளன்று என்க . கோவண ஆடை - கீழ் வாங்கி உடுத்தப்படும் உடை . வலிக்கோல் - ஊன்றுகோல் ; இது , பிரம்பும் மாத்திரைக்கோலும் ஆகும் . இறைவனுக்கு அணியாய பாம்புகள் . பசி , பிணி , மூப்பு முதலியன இன்றி , என்றும் ஒருபெற்றியன வாய் இருத்தலின் , ` இரை உண்டு அறியாத பாம்பு ` என்று அருளினார் . ` பசியோடிருக்கும் பாம்பு ` என , நகைச்சுவையும் தோற்றியது . ` இமையோர் பெருமான் இலாதது என் ` என்றது , தேற்றம் பற்றி . ` உளன் ` என்றதனை , எதிர்மறை முகத்தால் அருளிச்செய்தவாறு . ` வெண்ணீறு முதலியன உண்டு ; அவற்றை நீவிர் கண்டது உண்டோ ?` என்க .

பண் :

பாடல் எண் : 10

மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி
மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்
ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்
ஓரூர னல்லன் ஓருவம னில்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே.

பொழிப்புரை :

இறைவன் மைபூசிய கண்ணளாம் உமையம்மையும் தானுமாகிக் கச்சி மயானத்து வாழ்பவனும் நீண்ட சடையினனும் ஆவான் ` என்று கூறின் அவன் அவ்வளவே ஆம் தன்மையன் அல்லன் . அவன் எப்பொருளையும் தன்பொருட்டு ஏற்க இசைதலை உடையான் அல்லன் . உலகப் பொருள்களில் ஒருவன் அல்லன் ; ஓரூர்க்கே உரியனல்லன் . யாதொரு பொருளும் தனக்கு உவமையாதல் இல்லாதவன் . அதனால் அவனுடைய அந்தத் தன்மையையும் அந்த நிறத்தையும் அந்த வடிவத்தையும் அவன் திருவருளையே கண்ணாகப் பெற்றுக் காணலாமேயல்லாமல் மற்றைப் பொருள்கள் போலப் பிறரொருவர் இன்னவகையுட்பட்டவன் , இன்ன நிறத்தையுடையவன் , இன்ன வடிவத்தை உடையவன் என்று இவனைச் சொல்லோவியமாகவோ எழுத்தோவியமாகவோ எழுதிக் காட்டல் இயலாது .

குறிப்புரை :

` கண்ணாளும் தானும் ` என்றதன் பின் ` ` ஆகி ` என்பது வருவித்து , அதனை , ` மயானத்தான் , வார்சடையான் ` என்னும் வினைக்குறிப்பு முற்றுக்களோடு முடிக்க . கச்சி மயானம் , கச்சி ஏகம்பத்திற்கு அணித்தாய் உள்ள ஒரு வைப்புத்தலம் . வார்சடை - நீண்டசடை . என்னின் - எனறு சொல்வோம் எனில் . அல்லான் - அத்தன்மையன் அல்லன் ; என்றது , அதுவே முற்றிலும் அவனுடைய இயல்பு அன்று ; அஃது அவனது பொதுவியல்பே என்றபடி . ` மற்று , அவனுடைய உண்மை இயல்பு யாது எனின் ` என்பது எஞ்சி நின்றது . ஒப்பு உடையன் அல்லன் - இவற்றைத் தன்பொருட்டாக ஏற்றுடையவன் அல்லன் . ஒருவன் அல்லன் - உலகப் பொருள்களில் ஒருவனல்லன் . ஓர் ஊரன் அல்லன் - ஓர் இடத்தில் வரையறைப்பட்டு நிற்பவன் அல்லன் . ஓர் உவமன் இல்லி - தனக்கு எவ்வாற்றானும் யாதொரு பொருளும் உவமையாதல் இல்லாதவன் . இங்கு , ` அதனால் ` என்பது வருவிக்க . ` அப்படி ` முதலிய மூன்றும் , ` கச்சிமயானத்தான் , வார் சடையான் ` என்றாற்போலும் இயல்புகளைக் குறித்தன ; அவரவரும் , தாம் தாம் , அவன் திருவருளையே கண்ணாகப் பெற்றுக் காணின் அவைகளைக் காணலாமே யல்லது , மற்றைய பொருள்கள் போல , பிறரொருவர் , இன்ன வகையுட்பட்டவன் , இன்ன நிறத்தை உடையவன் , இன்ன வடிவம் உடையவன் என்று , சொல்லோவிய மாகவோ எழுத்தோவியமாகவோ எழுதிக்காட்டல் இயலாது ` என்க . ` இறைவன் ` என்புழித் தொகுக்கப்பட்ட இரண்டாம் வேற்றுமையை விரித்து , ` என்று ` என்றதன் பின்னர்க் கூட்டியுரைக்க . எனவே , ` மேலைத் திருத்தாண்டகங்களினும் , வருந் திருத் தாண்டகத்தினும் பலவாற்றானும் வினாவிய இயல்புகள் யாவும் அவன் அருள் பெற்றார்க்கன்றிக் காணவாரா ` என்பதனை அறி வுறுக்கும் முகத்தால் , அப்பேறு வாய்க்கப்பெற்ற தாமும் , பிற அடியவர் களும் ஆகியோரது நிலையை நினைந்து மகிழ்ந்தருளியவாறாயிற்று .

பண் :

பாடல் எண் : 11

பொன்னொத்த மேனிமேற் பொடியுங் கண்டேன்
புலித்தோ லுடைகண்டேன் புணரத் தன்மேல்
மின்னொத்த நுண்ணிடையாள் பாகங் கண்டேன்
மிளிர்வதொரு பாம்பும் அரைமேற் கண்டேன்
அன்னத்தே ரூர்ந்த அரக்கன் தன்னை
அலற அடர்த்திட்ட அடியுங் கண்டேன்
சின்ன மலர்க்கொன்றைக் கண்ணி கண்டேன்
சிவனைநான் சிந்தையுட் கண்ட வாறே.

பொழிப்புரை :

அன்பர்காள் ! நான் சிவபெருமானை என் சிந்தனையுட் கண்டவாறே என் கண்ணிலும் அவன் பொன்னார் மேனி மேல் திருநீற்றுப் பொடியும் கண்டேன் ; புலித்தோலாகிய உடை கண்டேன் . தன்னிடப்பாகத்தில் மின்னலைப் போன்ற நுண்ணிய இடையை உடைய உமையாள் பொருந்தக் கண்டேன் . ஒளியுடைப் பாம்பு ஒன்றையும் அரைமேற்கண்டேன் . அன்னம்போன்ற வெள்ளிய தேரினை ஊர்ந்த அரக்கன் அலற அவனை நசுக்கிய திருவடியையும் கண்டேன் . அடையாளப் பூவாகிய கொன்றை மலராலான தலை மாலையையும் கண்டேன் . நீவிர் அவனைக் கண்டவாறு எங்ஙனம் ?

குறிப்புரை :

பொடி - திருவெண்ணீறு . ` தன்மேல் புணர ` எனமாற்றி , ` தன்னிடத்துப் பொருந்த ` என உரைக்க . ` பாகத்தில் நுண்ணிடையாள் பொருந்தக் கண்டேன் ` என இயையும் . ` பாம்பும் ` என்னும் உம்மை , எச்சம் . அன்னத்தேர் - அன்னம் போலும் வெண்மையாகிய விமானம் ; புட்பக விமானம் . சின்னமலர்க் கொன்றை - அடையாளப் பூவாகிய கொன்றை . ` சிவனை நான் சிந்தையுட் கண்டவாறே கண்ணிலும் கண்டேன் ; நீவிரும் அவ்வாறு கண்டது உண்டோ ?` என்க .
சிற்பி