தொகை
`இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
(தி.7 ப.39 பா.1)
தொகை, பொ-ரை: (சிவனடியார்க்குத்) தம்மிடத்துள்ளது எப்பொருளாயினும் அதனை இல்லை என்னாமல் வழங்கிய இயற்பகை நாயனாருக்கும் அடியேன்.
வகை
செய்தவர் வேண்டிய தியாதுங் கொடுப்பச் சிவன்றவனாய்க்
கைதவம் பேசிநின் காதலி யைத்தரு கென்றலுமே
மைதிகழ் கண்ணியை யீந்தவன் வாய்ந்த பெரும்புகழ்வந்
தெய்திய காவிரிப் பூம்பட் டினத்து ளியற்பகையே.
-தி.11 திருத்தொண்டர் திருவந்தாதி, 3
வகை, பொ-ரை: சிவபெருமானை நினைந்து நினைந்து இன்புறு தலையே தவமாகச் செய்துவரும் சிவனடியார்கள் எது வேண்டினும் தவறாது கொடுத்துவரும் சிவபெருமான், தவவேடமுடன் வந்து `நின் மனைவியைத் தருக` எனக் கூறவும், மை தீட்டிய கண்களை உடைய தம் மனைவியை ஈந்தவரும், அதனால் பெரும்புகழ் வந்து எய்தப் பெற்றவரும் ஆக விளங்கியவர் காவிரிப் பூம்பட்டினத்து இயற்பகையார் ஆவர்.