திருநாவுக்கரசு சுவாமிகள் திருவதிகை வீரட்டா னேசுவரரை வணங்கித் திருப்பணி செய்துவரும் நாள்களில் அன்பு மிக்க மனத்தினால் அருளிய திருப்பதிகங்களுள் இஃது ஒன்றாகும் . இவை இவை இறைவனுடைய காப்புக்கள் ( இடங்கள் ) என்றே எல்லாப் பாடல்களும் முடிவதால் , ` காப்புத் திருத்தாண்டகம் ` எனப் பெயர் பெற்றது . ( தி .12 திருநாவு . புரா . 144.) குறிப்பு : காப்பென்னும் தொழிற் பெயர் , காக்கப்படுவதாகிய இடத்தினைக் குறித்தது . எனவே , இறைவர் நீங்காதுறையும் இடங்களை யுணர்த்திய திருத்தாண்டகத்தை , ` காப்புத் திருத்தாண்டகம் ` என்றதாயிற்று . இத்திருப்பதிகத்துள் எல்லாத் திருத்தாண்டகங்களிலும் முதற்கண் வீரட்டானத்தை அருளிச்செய்தது , ஆங்கு இறைவரை வணங்கி இன்புறுங்காலத்து , அது வாயிலாகப் பிற திருப்பதிகளையும் திருவுள்ளத்து நினைந்தருளினமையான் என்க . இதன் திருப்பாடல்களிலும் , மேலைத் திருப்பதிகப் பாடல்களிற் போலவே , இரண்டு மாச்சீர்கட்கு ஈடாக ஒரு கனிச்சீர் பயிலுதல் அறிக .