ஐந்தாம் தந்திரம் - 15. சாயுச்சம்


பண் :

பாடல் எண் : 1

சைவம் சிவனுடன் சம்பந்த மாகுதல்
சைவம் தனையறிந் தேசிவம் சாருதல்
சைவம் சிவமன்றிச் சாராமல் நீங்குதல்
சைவம் சிவானந்தம் சாயுச் சியமே.

பொழிப்புரை :

`சைவம்` என்னும் சொல்லின் பொருள் `சிவனுடன் தொடர்புற்று நிற்றல்` என்பது, ஆகவே, சீவன்தான் சிவனது அடிமை என்னும் உண்மையை உணர்ந்து அவனைச் சார்ந்து நிற்றலே நிறை வான சிவநெறியாம். சிவனைச் சார்ந்து நின்றபின்னும் அவனை யன்றிப் பிறிதொன்றையும் சாராது அற விடுத்தலும் அந்நெறி நிறை வுடையதாதற்கு இன்றியமையாதது. அத்தகைய நிறைவான சிவ நெறி யின் பயன் சிவனது பேரின்பமே. அவ்வின்பத்தைப் பெற்று அதில் மூழ்கியிருக்கும் நிலையே சாயுச்சமாம்.

குறிப்புரை :

மூன்றாம் அடியில், `சிவந் தன்னை` என ஓதுதல் பாடம் அன்று. இவ்வடியை, `சைவம் பசுபாசம் சாராமல் நீங்குதல் - (அல்லது) நீவுதல்` எனவும் ஓதுவர்.
இதனால், `சிவநெறியின் முடிந்த பயன் சாயுச்சமே` என்பது பல்லாற்றானும் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

சாயுச் சியஞ்சாக்கி ராதீதம் சாருதல்
சாயுச் சியம்உப சாந்தத்துள் தங்குதல்
சாயுச் சியஞ்சிவ மாதல் முடிவிலாச்
சாயுச் சியம்மனத் தானந்த சத்தியே.

பொழிப்புரை :

சாயுச்சம், சீவன் முத்தி நிலையில் சாக்கிராதீதமாய் அமைதியிற்படுத்தி, சிவம் அன்றிப்பிறிதொன்றும் தோன்றாமல் சிவம் ஒன்றையே தோற்றுவித்து, அறிவின்கண் சிவனது குணமான எல்லையில் இன்ப வெள்ளத்தைத் தந்து நிற்கும்.

குறிப்புரை :

இவற்றைப் படிமுறையால் வேறு வேறு தொடராக ஓதினாரேனும் அவற்றை ஒருங்கெண்ணித் தொகுத்தல் கருத்து என்க. ``முடிவிலா`` என்பதனை ``ஆனந்தம்`` என்பதற்கு முன் கூட்டுக. மனம், கருவியாகுபெயர். குணத்தை ``சத்தி`` என்றார்.
இதனால், சிவநெறியின் முடிந்த பயன் இம்மையிற்றானே பெறப்படுதல் கூறப்பட்டது.
``மூதறிவார்க்கு - அம்மையும் இம்மையே யாம்`` 1
என்பது திருவருட்பயன். இந்நிலை எய்தினாரையே, `சீவன்மூத்தர்`, எனவும், `அணைந்தோர்` எனவும் கூறுவர்.
சிற்பி