ஆறாம் தந்திரம் - 3. ஞாதுரு ஞான ஞேயம் 


பண் :

பாடல் எண் : 1

நீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப்
பாங்கான பாசம் படரா படரினும்
ஆங்கார நீங்கி அதனிலை நிற்கவே
நீங்கா அமுதம் நிலைபெற லாமே.

பொழிப்புரை :

ஞானம் கைவரப் பெற்றவன் அந்த ஞானத்தால் அறியும் பொருள் சிவமே யாகையால், அஃது ஒன்றே அவனுக்கு ஞேயப் பொருளாம். அந்தப் பொருள் ஆனந்தமே வடிவினது ஆகையால், என்றும் நீங்குதல் இல்லாத சிவானந்தத்தையுடைய அந்த ஞேயப்பொருளிலே ஞானி ஒரு பொழுதும் நீங்காதே நிற்பானாயின், அநாதி தொட்டு அவனைவிடாது சூழ்ந்து நிற்கமாட்டாவாய் அகன் றொழியும். அவை முற்ற அகன்றொழியாது ஒரோவொருகால் சிறிய வாய் வந்து சூழுமாயினும் அச்சூழல், அவனை முன்போல அஞ் ஞேயப் பொருளை மறந்தொழியும் நிலையை எய்துவிக்கமாட்டா. (ஏனெனில், சிவகுருவின் அருளைப் பெற்ற சிவஞானியின் ஞானத்தை அப்பாசங்கள் முன்போலத் திரிவு படுத்தி, `யான்` என்றும், `எனது` என்றும் செருக்கு விக்கமாட்டா ஆகலான்.) அவ்வாற்றால் பழக்கம்பற்றிச்சிறிதே தலைப்படுகின்ற அந்தச் செருக்கு ஞானத்தால் முற்றாது கழிய, ஞேயத்தில் நிலைத்து நிற்றல் உண்டாகும். அதனால் அத்தகைய சிவஞானிக்கு, அளவிற்பட்டு நீங்குதல் இல்லாது என்றும் உளதாகிய சிவானந்தம் நிலை பெற்றிருத்தல் கூடுவதாம்.

குறிப்புரை :

``நீங்காச் சிவானந்த ஞேயம்`` என்பது உடம்பொடு புணர்த்தது ஆகலான், அதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது. ``நிற்க`` என்னும் எச்சம், விதித்தற் கருத்தன்று இயல்பு கூறியதே. `ஆங்காரம் நீக்கி` எனப் பிறவினையாகக் கூறாது. ``நீங்கி`` எனத் தன்வினையாகக் கூறியது அது பற்றியே. `நீங்கி`` என்பதை `நீங்க` எனத் திரிக்க. `அதன்கண் நிலை நிற்க` என உருபு விரித்துக் கொள்க. ``நீங்கா அமுதம்`` வெளிப்படை.
``சிவானந்த ஞேயம்`` என்றதனால், ``ஞேயமாவது சிவம்` என்பது போந்தது. போதரவே, ``நின்றிட, நிற்க`` என்பவற்றால், `நிற்றல் சிவஞானத்தால்` என ஞானமும், `நிற்பவன் அந்த ஞானத்தை யுடையவன்` என ஞாதுருவும் பெறப்பட்டு, `ஞாதுருதன்னையும், தனது ஞானத்தையும் சிறிதும் எண்ணாது` ஞேயம் ஒன்றையே அறிந்து அதனால் `அதனை அறிகின்றோம் என்ற அறிவும் நீங்கிய நிலையே ஆனந்த நிலையாம் என்பது விளங்கிற்று. இதனையே, `அதீத நிலை` என்றும், `ஆனந்தாதீதம்` என்றும் கூறுவர். இந்நிலையில் ஞாதுரு ஞானஞேயங்கள் இருந்தும் அவை அவற்றை அறிபவனுக்குப் புலனாகாமையால், இந்நிலையை, `திரிபுடி நீங்கிய நிலை` என்பர். அஃது அறியாது, `ஞாதுரு ஞானங்களை ஞேயத்தின் வேறுபட்ட பொருளாக உணர்தலே மயக்க உணர்வாகிய அஞ்ஞானம்` என்றும், `அங்ஙனம் உணராது அவை அவிச்சையால் ஞேயத்தின் வேறுபட்ட பொருள்போலத் தோன்றுகின்றன அவை உண்மையில் ஞேயமாகிய அதுவேயாம் என்று உணரப்பெறுதலே மெய்ஞ்ஞானம்` என்றும் கூறித் தமது அறிவின் நிலையைப் புலப்படுத்திக்கொள்வர் மாயாவாதிகள், அவர் தமது கூற்றால், பெறுவானையும், பேற்றையும் இழத்தல்தெளிவு. இனி, `ஞாதுரு ஞானங்களைப் பெத்தத்திற்போலவே முத்தியிலும் உணர்ந்து நிற்றலே ஆனந்தானுபவம்` என்போரும் இடையீடில்லாத முத்தி யின்பத்தினராகாது, இடையிடையே பெத்தத் துன்பத்தை உடையவராவர். இவற்றையே உமாபதி தேவர் தமது வினா வெண்பாவில், 1.
``காண்பானும் காட்டுவதும் காண்பதுவும் நீத்துண்மை காண்பார்கள் நன்முத்தி காணார்கள் - காண்பானும்
காட்டுவதும் காண்பதுவும் தண்கடந்தைச் சம்பந்தன்
வாட்டுநெறி வாரா தவர்``
என அருளிச்செய்தார். இதனுள் காட்டுவது, ஞானம். காண்பது - காணப்படுவது.
இதனால், அதீத நிலையாகிய முடிந்தநிலையில் உளவாகும் ஞாதுரு முதலிய மூன்றன் இயல்புகளும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நீங்கிடும்
ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடாகும்
ஞேயத்தின் ஞேயத்தை யுற்றவர்
ஆயத்தில் நின்ற அறிவறி யாரே.

பொழிப்புரை :

சிவஞானத்தால் சிவமாகிய ஞேயப் பொருளிலே அன்பையும், பின் அந்த ஞேயப்பொருளையும் அடைந்தோர் தம்மையும், தமது அறிவையும் ஆராய்கின்ற அச்செயலில் நிற்கும் அறிவை உடையவராகார். அதனால், அவர் ஞேயத்தை அடைந்து நிற்கும் நிலையில் ஞானம், ஞாதுரு, ஞேயம் என்னும் முப்பகுப்பு அவர்க்கு நீங்குவதாம். அது நீங்கவே, ஞேயம் ஒன்றிலேநிற்கும் ஞாதுருவுக்கு அந்த ஞேயப் பொருளிலே வீட்டின்பம் எய்துவதாம்.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி, ஈற்றடியின் இறுதியில், `அதனால், என்பது, `பறம்பிற் பாரி` என்பது போல நின்றது. `ஞாதுருவுக்கு` என்னும் நான்கனுருபும், அதன் பின், `அஞ் ஞேயத்திலே` என்னும் சுட்டும், தேற்றேகாரமும் தொகுத்தல் பெற்றன. மூன்றாம் அடியில் இடைநின்ற ஞேயம், `நேயம்` என்பதன் போலி அதுவும், பின்வந்த ஞேயஞம் இரண்டாவதன் செல்வெண்ணாய் நின்றன.
சிவஞானமாவது, சிவம் ஒன்றே மெய்ப்பொருள்` என உணரும் ஞானம், அதனானே சிவம் அறியப்பட. அவ் அறிவின் வழி அச்சிவத்தின் மாட்டு அவ்வறிவனுக்கு அன்பு மீதூரும். அது மீதூர்ந்தவழி அச் சிவத்தை யன்றி அவன் வேறொன்றையும் அறியானாவன். அங்ஙனம் ஆய வழி அச் சிவத்தினது ஆனந்தம் இடையீடின்றி எல்லையில்லாமல் பெருகிநிற்கும்` என்பதனை இம்மந்திரத்தில் வகுத்துக்கூறியவாறு,
``அயரா அன்பின் அரன்கழல் செலுமே``1 என்றார் மெய் கண்டதேவரும். `ஆய் அதனில்` என்பதில் `அதனில்` என்பது ``அத்தில்`` என மருவிநின்று. `அறிவறிவாரே` என்பது பாடமன்று.
இதனால், மேற்கூறிய, ``நீங்கா அமுதம் நிலைபெறும்`` நிலை கைவரும் முறைவகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

தானென் றவனென் றிரண்டாகும் தத்துவம்
தானென் றவனென் றிரண்டும் தனிற்கண்டு
தானென்ற பூவை அவனடிச் சாத்தினால்
நானென் றவனென்கை நல்லதொன் றன்றே.

பொழிப்புரை :

`ஆன்மாவும், சிவமும்` எனப்பொருள் இரண்டாம். அவ்விரண்டையும் ஆன்மாவாகிய ஞாதா தனது ஞானத்தின்கண் வைத்து நன்கு காணுதல் வேண்டும். பின் அங்ஙனம் கண்டதன் பயனாக ஞாதா தானாகிய மலரைச் சிவனுக்கு அவனது அருபளாகிய திருவடியிலே சாத்திவிடுவானாயின், முதலில், `ஆன்மா, சிவம் எனப் பொருள் இரண்டுள்ளன` என உணர்ந்த உணர்வு நல்லதோர் உணர்வாய்ப் பயன் தரும்.

குறிப்புரை :

`பரமான்மாவை யன்றிச் சீவான்மா என்பதொன்று வேறில்லை` என்பாரை மறுத்தற்கும், `முத்தி நிலையில் பாசம் செயலற்று இருந்தும் இல்லாதனவாம்` என்பது உணர்த்தற்கும், ``தானென் றவனென் றிரண்டாகும் தத்துவம்`` என்றாராகலின், இது, மேல், (... ... ...)
``பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போற்பசு பாசம் அனாதி``
என்றதனோடு மாறுகொள்ளாமை அறிக. ஞாதா தன்னையும், சிவத்தையும் தன் அறிவில் வைத்துக் காணுதலாவது, சிவம் தானே விளங்கும் அறிவினதாய் அறிந்தும், தனது அறிவினுள் நின்று அறி வித்தும் நிற்றலையும், தான் அச்சிவம் அறிவித்தாலன்றி அறிய மாட்டாமையையும் உணர்ந்து, அதனானே, தான் அடிமையும், சிவம் தன்னை உடைப்பொருளாதலையும் தெளிதல். அத் தெளிவு உள தாகவே, ஞாதா தனக்கெனச் செயல் இன்மையை உணர்ந்து, தான் சிவனது உடைமையாயே நிற்பனாகலின், அதனை உருவக வகையால், ``தானென்ற பூவை அவனடி சாத்துதல்`` என்றார். இதனை, ``கூட்டில் வாள் சாத்தி நிற்றல்``1 என வேறோர் உருவகத்தால் உணர்த்தினார் திருவுந்தியார் ஆசிரியர். ``என்று, என்கை`` என்பன எண்ணிச் சொல்லுதலைக் குறித்தன. ``அன்றே`` என்பது தேற்றத்தின் கண் வந்தது. இங்ஙனமன்றி, ஏகாரத்தை ஈற்றசை யாக்கி, `திரிபுடி ஞானம் நில்லாது போவதாம்` எனவும் உரைப்பர்.
இதனால், ஞாதாவும் ஞேயம்போல என்றும் உள்பொருளே யாயினும், அவன் ஞேயத்தில் அடங்கியவழியே இன்பம் பெறுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

வைச்சன ஆறாறும் மாற்றி எனைவைத்து
மெச்சப் பரன்றன் வியாத்துவம் மேலிட்டு
நிச்சய மாக்கிச் சிவமாக்கி ஞேயத்தால்
அச்சங் கெடுத்தென்னை ஆண்டனன் நந்தியே.

பொழிப்புரை :

எம் குரவராகிய நந்திபெருமான் என் மேல் வைத்த தமது அருளினால், முன்னே என்னைக் கட்டுட் படுத்து வைத்த முப்பத்தாறு தத்துவங்களையும் நீக்கி என்னை அவற்றினின்று வேறாக்கி வைத்து, என்னை யாவரும் `பெரியோன்` என்று புகழும் படிச் சிவ வியாபகத்தை என்பால் மேலிடுவித்துப் பின் உறுதியாக என்னைச் சிவமேயாகச் செய்து பிறவிக்கு அஞ்சும் எனது அச்சத்தை ஒழித்து என்னை ஆட்கொண்டருளினார்.

குறிப்புரை :

`அதனால், யான் இதுபொழுது ஞேயமேயாய் நிற்கின்றேன்` என்பது குறிப்பெச்சம். ஞேயமேயானபின் சொல்நிகழ வழியில்லையாதலின், இங்ஙனம் சொல் நிகழ்ந்தவாறு என்னை யெனின், அதுவும் அந்த ஞேயத்தது இயல்பாகிய அருளால், ``நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்``1 என்று எழுந்த உணர்வினா லேயாம் என்க. `வியாபகத்துவம்` என்பது ``வியாத்துவம்`` என மருவிற்று. `மேலிடுவித்து` என்பது தொகுத்தல் பெற்றது.
இதனால், ஞாதா ஞானத்தைப் பெற்று ஞேயத்து அழுந்தும் முறைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

முன்னை யறிவறி யாதஅம் மூடர்போல்
பின்னை யறிவறி யாமையைப் பேதித்தான்
தன்னை யறியப் பரனாக்கித் தற்சிவத்
தென்னை யறிவித் திருந்தனன் நந்தியே.

பொழிப்புரை :

யான் நந்தி பெருமானைக் குருவாக அடைதற்கு முன், அறியத்தக்க பொருளை அறியாது கிடக்கின்ற அறிவிலிகளோடு ஒருங்கொத்திருந்தேனாக, அவரை அடைந்த பின் அவ் அறியா மையை நீக்கிச் சிவத்தை உணருமாறு என்னைக் கருவிக் கூட்டத்திற்கு அயலானாக ஆக்கி, அவ் ஆக்கப்பட்டால் யான் சொரூப சிவத்தில் தோய்ந்தபின்பு மீளக் கருவிக் கூட்டத்திற் செல்லாதவாறு உணர்வைத் தந்து கொண்டிருக்கின்றார்.

குறிப்புரை :

`போல` என்னும் செயவெனெச்சத்தது ஈற்றகரம் தொகுத்தல் பெற்றது. அவ் எச்சத்திற்கு, `யான்` என்னும் எழுவாய் வருவிக்க. ``அறிவறியாமை`` என்பது முன்னர்ப் போந்ததனைச் சுட்டும் அளவாய் நின்றது. பேதித்தல் - வேறுபடுத்தல், நீக்குதல். தன்னை - சிவத்தை. ``சிவம்`` என்பது, சிவமாய் நின்ற நிலையைக் குறித்தது. அறிவித்தல், இங்கு அறியாமை புகாதவாறு காத்தல். `அங்ஙனம் காத்தலாலே யான் ஞேயத்தின் நீங்காதவனாயினேன்` என்பது கருத்து.
இதனால், `குருவருளில் உறைத்து நிற்றலாலே ஞேயத்தழுந்து தல் உண்டாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

காணாத கண்ணுடன் கேளாத கேள்வியும்
கோணாத போகமும் கூடாத கூட்டமும்
நாணாத நாணமும் நாதாந்த போதமும்
காணா யெனவந்து காட்டினன் நந்தியே.

பொழிப்புரை :

`எங்கள் குரவராகிய நந்தி பெருமான், கண் இன்றியே காண்கின்ற காட்சியையும், காது இன்றியே கேட்கின்ற கேள் வியையும், சித்தம் திரியாதே நுகர்கின்ற நுகர்ச்சியையும், கூடாமலே கூடி நிற்கின்ற கூட்டத்தையும், நாணாமலே நாணுகின்ற நாணத்தையும், நாதம் இன்றியே உணரும் உணர்வையும் காண்பாயாக`` என அணுகி வந்து காட்டி யருளினார்.

குறிப்புரை :

கண் முதலிய கருவிகளின் துணையின்றியே காட்சி முதலிய புணலுணர்வுகளையும் நாதத்தின் துணையின்றியே சவிகற்ப உணர்வையும், முன்பு வேறாய் நின்று பின்பு கூடாது இயல்பிலே இரண்டற நிற்கும் நிலை விளங்கப் பெறுதலாகிய புணர்ச்சியையும், முக்குணங்களும் மாறி மாறி வருதலால் சித்தம் திரிபெய்துதல் இன்றி என்றும் ஒருபடித்தாய் நின்று நுகரும் சிவானுபவத்தையும், பிறர்முன் இளிவந்து நின்று நாணுதலாகிய நாணமின்றி, முன்னை அறியா மையை நினைந்து வெள்கி விலாஇறச் சிரித்தலாகிய 1 நாணத்தையும் பெறுதல் சிவஞானம் பற்றுக்கோடாயவழிக் கிடைப்ப தாகலின், `அதனை அவ்வாற்றால் தந்தருளினார்` என்றவாறு. ``கேளாதே எல்லாம் கேட்டான்``2 என்னும் சிவனது இயல்பு அவனைச் சார்ந்தார்க்கும் உளதாதல் அறிக.
இதனால், சிவகுருவால் சிவஞானத்தைப் பெற்ற ஞாதுரு அந்த ஞானத்தால் ஞேயத்தை உணரும் முறை கூறப்பட்டது. இது துரிய நிலை.

பண் :

பாடல் எண் : 7

மோனங்கை வந்தோர்க்கு முத்தியும் கைகூடும்
மோனங்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்னிற்கும்
மோனங்கை வந்தூமை யாம்மொழி முற்றுங்காண்
மோனங்கை வந்தைங் கருமமும் முன்னுமே.

பொழிப்புரை :

மௌன நிலை கைவரப் பெற்றோர்க்குப் பரமுத்தி உண்டாகும். அதற்கு முன்னே பரசித்திகள் உளவாம். நாதத்தின் பிணிப்பும் விட்டொழியும். இறைவனது ஐந்தொழில்களில் இறுதிய தாகிய அருளால் தொழிலும் நிகழ்ந்து, அவை அனைத்தும் இயற்றப் பட்டு முடியும்.,

குறிப்புரை :

மௌன நிலையாவது தற்போதம் சிறிதும் எழாத அதீத நிலையாம். திரிபுடி அற்ற நிலையும் இதுவேயாதல் அறிக.
``மோனம் என்பது ஞான வரம்பு``3 என்னும் ஔவையார் திருமொழியும் காண்க. பரசித்திகள் மூன்றாம் தந்திரத்திற் கூறப் பட்டன. ஊமை மொழி, பிரணவம். காரண நிலையது ஆதல் தோன்ற அஃது, `ஊமை மொழி` எனப்படுகின்றது. அதுவே நாதமாதல் அறிக. முற்றுதல் - முடிவுற்று நீங்குதல். இதுவும் பாச ஞானமாய்ப் பந்தமாத லின் நீங்குதற்குரியதாயிற்று. முன்னுதல் - நினைத்தல் சங்கற்பித்தல். தன்காரியம் தோன்ற நின்ற இதற்கு, `சிவன்` என்னும் எழுவாய் வரு விக்க. இவ்வாறன்றி, `முன்னப் படும்` எனச் செயப்பாட்டு வினை யாக்கி உரைத்தலுமாம். பின்னிரண்டடிகளில் ``வந்து`` என்பவற்றை `வர` எனத் திரிக்க.
இதனால், திரிபுடி நீங்கிய நிலையினது இயல்பு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றன்பால்
வைத்த கலைகாலை நான்மடங் கான்மாற்றி
உய்த்தவத் தானந்தத் தொண்குரு பாதத்தே
பெத்த மறுத்தோர் பிறந்திற வாரே.

பொழிப்புரை :

சிவ குருவின் திருவடிப் பேற்றால் எல்லாப் பொருள் களும் அற்றுச் `சிவஞாதா, சிவஞானம், சிவஞேயம்` என்னும் மூன்று பொருளிலே வந்து முடிந்த தன்மையை, `சந்திர கலை, சூரிய கலை, அக்கினி கலை` என்னும் மூன்று வகையில் இயங்கும் பிரணவாயுவை முறைப்படி அடக்குமாற்றால் ஞேயமாகிய ஒன்றில் அடங்கச் செய்தலால் விளைந்த ஆனந்தத்தால் திரிபுடியாகிய கட்டினை அறுத்தோர் அதன்பின் பிறந்தும், இறந்தும் வருதலைச் செய்யார் முத்தி பெறுவர் என்றதாம்.

குறிப்புரை :

`ஒண்குரு பாதத்தால்` என உருபு விரித்து. அத் தொடரை முதலிற் கூட்டி, `முடிந்ததை உய்த்த வத்து ஆனந்தத்தால் பெத்தம் அறுத்தோர் பிறந்திறவார்`` என வினை முடிவு செய்க. முத்திரை - குறி பொருள். ``மூன்று`` இரண்டில் முன்னது ஞாதுரு முதலிய மூன்றையும், பின்னது இடைகலை முதலிய மூன்றையும் குறித்தன. நான்மடங்கா - ஒன்று நான்காக. அஃதாவது, பதினாறு மாத்திரையளவாகப் பூரித்ததை அறுபத்து நான்கு மாத்திரை யளவாகக் கும்பித்தல். இம்முறையில் ஞாதுரு முதலிய மூன்றையும் வத்துவின் கண் உய்த்தலாவது, இப்பிராணாயாமத்தால் ஞேயப் பொருளாகிய சிவத்தையே தியானித்து அதனில் ஒன்றி யிருத்தலாகிய சமாதி நிலையைப் பெறுதல். ``உய்த்த`` என்னும் பெயரெச்சம், ``வத்து`` என்னும் இடப்பெயர் கொண்டது. வத்து, பரவத்து பரம்பொருள். வத்துவினது ஆனந்தத்தால் பெத்தம் அறுத்தோர் - பரம்பொருளாகிய சிவனது ஆனந்த மேலீட்டார் திரிபுடி ஞானத்தை அறுத்தோர். திரிபுடி ஞானமும் ஆனந்தானுபவத்திற்குத் தடையாகலின், ``பெத்தம்`` எனப்பட்டது. ``பிறந்திறவார்`` என்றது, `ஏனையோர் போலப் பிறப்பில் மீளாது, எவ்வாற்றானும் முத்தியைப் பெறுவர்` என்றதாம்.
இதனால், ஞாதுரு ஞான ஞேய வேறுபாடு நீங்குதற்கு யோகமும் தக்கதொரு சாதனமாதல் கூறப்பட்டது. `இவ்யோகம் உபாய நிட்டை` என்க.

பண் :

பாடல் எண் : 9

மேலைச் சொரூபங்கள் மூன்றும் மிகுசத்தி
பாலித்த முத்திரை பற்றும் பரஞானம்
ஆலித்த நட்டமே ஞேயம் புகுந்தற்ற
மூலச் சொரூபன் மொழிஞா துருவனே.

பொழிப்புரை :

மேலே கூறிவந்த ஞாதுரு முதலிய மூன்றன் இயல் புகளையும் சிவசத்தி இனிது விளங்கக் காட்ட அங்ஙனம் கண்ட உணர்வே ஞேயத்தைப் பற்றுதற்குரிய மேலானஞானம். அந்த ஞானத்தில் ஆரவாரித்து திருநடனத்தையுடைய சிவனே ஞேயம். அந்த ஞேயத்தில் அழுந்தித்தானும், தனது ஞானமும் தோன்றாது. முதற்பொருளின் இயல்பு முற்றும் தனது இயல்பாக விளங்கப் பெற்ற ஆன்மாவே ஞாதுரு.

குறிப்புரை :

`இங்ஙனம் முத்தி நிலையிலும் இம்மூன்றும் உண்மை யால், முத்தி என்பது பெறுவானும், பேறும் இல்லாத ஒன்றாகப் பிறர் கூறும் நிலைகள் அல்ல` என்றவாறு. எனவே திரிபுடி அற்ற நிலை என்பது, `அவை அறியப்படாதநிலை` எனப் பொருள்படுதலன்றி, `அவை இல்லாதொழியும் நிலை` என்றதாயிற்று. இஃது இவ்வதிகாரத்து முதற்கண் காட்டிய வினா வெண்பாவாலும் நன் கறியப்படும். சொரூபம் - இயல்பு. சிவசத்தியை, ``மிகு சத்தி`` என்றார். `மூன்றையும் மிகுசத்தி பாலித்த` என்க. ``பாலித்த`` என்னும் பெயரெச்சம், ``முத்திரை`` என்னும் செயப்படு பொருட் பெயர் கொண்டது. முத்திரை - குறி உணர்வு. `முத்திரையே பரஞானம்` என ஏகாரம் விரித்துமுடிக்க. `நட்டம்` என்றது அதனை உடைய பொருளை. `சொரூபனே ஞாதுருவன்` என ஏகாரத்தை மாற்றிக் கூட்டியுரைக்க. `ஞாதுரு` என்னும் வடசொல்லை. `ஞாதுரு வாம் தன்மை யுடையவன்` எனத் தமிழ் முறைப்பட ஓதினார்.
இதனால், ஞாதுரு ஞான ஞேயங்களது இயல்புகளும், அம் மூன்றும் என்றும் உள்ள பொருள்களாதலும் கூறப்பட்டன.
சிற்பி