எட்டாம் தந்திரம் - 34. மோட்ச நிந்தை
பண் :
பாடல் எண் : 1
பரகதி உண்டென்ன இல்லை என் போர்கள்
நரகதி செல்வது ஞாலம் அறியும்
இரகதி செய்திடு வார்கடை தோறும்
துரகதி உண்ணத் தொடங்குவர் தாமே.
பொழிப்புரை :
`பிறப்பிறப்பினின்றும் நீங்கிப் பரம்பொருளை அடைந்து இன்புற்றிருக்கும் நிலை உண்டு` என்று உண்மை நூல்களெல்லாம் கூறாநிற்கவும், `அஃது இல்லை` எனப்பிணங்கி, மனஞ் சென்றவாறே செல்பவர்கள் நரகலோகத்தை அடைதல் உலகத்தில் உயர்ந்தோர் பலரும் நன்கறிந்தது நரகத்தின் நீங்கிப்பின்னும் அவர் மக்களாய்ப் பிறப்பின் கடைதொறும் சென்று இரக்கும் செயலையே உடையராவர். அங்ஙனம் இரக்குங்கால் வயிறு நிரம்பாமல் உணவு வேளை முடிவதற்குள் பலரிடம் சென்று இரக்க வேண்டி ஓடவும் தொடங்குவர்.
குறிப்புரை :
`நரக, துரக` என்பன கடைக் குறைந்து நின்றன. ``இர கதி`` என்பது வினைத்தொகை. இதன்கண் `கதி` என்பது நடை; தொழில். `கடை தோறும் இரகதி செய்திடுவார்; நிரம்ப உண்ணத் துரக கதி தொடங்குவர் என்க. தாம், ஏ - அசை. ``ஞாலம்`` என்றது ஆகமப் பிரமாணத்தையுடைய உயர்ந்தோரை.
`பரகதி உண்டு` என்பவரே நோற்றலை மேற்கொள்வர். `அஃது இல்லை` என்பார் நோற்றலைச் செய்யார். நோலாதவர் வறியராய்ப் பிறப்பர்` என்பது உண்மை நூல்களின் முடிவாதல்,
``இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்; பலர் நோலா தவர்``.9
``மேலைத் - தவத்தளவே யாகுமாம் தான் பெற்ற செல்வம்``3 என்பன முதலியவற்றால் விளங்கும். வறுமையால் இரத்தல் உண்டாகும். இரந்த வழியும் மிக்க தீவினையால், உணவு கிடைத்தல் அரிதாகும்.
சித்தாந்த முத்தியை மறுத்து வேறு கூறி, அக் கூற்றிற்கு ஏற்ப ஒழுகுவார்க்கு இவ்வாறான தீங்குகள் உளவாகா ஆயினும், `அவர்க்குப் பிறவி நீங்காது` என்க.
``உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்``9
என்னும் குறட்பாவும் இம்மந்திரத்திற் கூறிய பொருள் நோக்கம் உடைத்தென்க.
இதனால், `முத்தி` என்பதொன்று இல்லை என்பார், தம்மாலே தாம் கெடுதல் கூறப்பட்டது.
இதன்பின் பதிப்புக்களில் காணப்படும். ``கூடகில்லார் குரு வைத்த நெறிகண்டு`` என்னும் மந்திரம் முன்தந்திரத்தில் கேடுகண்டிரங்கல்` அதிகாரத்தில் வந்தது.
பண் :
பாடல் எண் : 2
பறப்பட்டுப் போகும் புகுதும்என் நெஞ்சில்
திறப்பட்ட சிந்தையைத் தெய்வம்என் றெண்ணி
அறப்பட் டமரர் பதி யென் றழைத்தேன்
இறப்பற்றி னேன் இதிங் கென்னென்கின் றானே.
பொழிப்புரை :
பிராண வாயு வெளியே செல்லுங்கால் தானும் வெளிச்சென்றும், அஃது உள்ளே வருங்கால் தானும் உள்ளே வந்ததும் இவ்வாறு உழல்கின்ற எனது மனத்தின் அலைவுக்கிடையே அந்தப் பிராணனை அடக்கியதனால் நிலைபெற்ற சித்தத்தையே பரம் பொருளின் இருப்பிடமாகக் கருதி, அவ்விடத்தில் நின்றே, `புண்ணியங்களின் பயனாய் எதிர்ப்படுகின்ற தேவதேவனே என்று அழைத்தேன் அங்ஙனம் ஒருமுறை யழைத்ததோடன்றித் தொடர்ந்து பன்முறை அழைத்து அவனை உள்ளத்தால் இறுகப் பற்றினேன் அதன்பின்பு அவன் தோன்றி, `நீ இங்கு என்ன செய்கின்றார்` என்று வினாவுகின்றான்.
குறிப்புரை :
ஆகவே, உடம்பு நீங்கியபின் நான் அடையத் தக்க கதி அவனே` என உணர்ந்தேன் என்பது கருத்து `அதனால், பரகதி இல்லை என்பாரது கூற்று எனக்கு நகை விளைக்கின்றது` என்பதாம் போவதும், புகுவதுமாய் உள்ள நெஞ்சு நிற்றலைக் குறித்தமையால், அவ் விரண்டிற்கும் காரணம் வருவித்துரைக்கப்பட்டது. நெஞ்சு, விடாத ஆகுபெயர். மனம் அலையின் சித்தம் ஒன்றையும் சிந்தியாதாக, அது நிலைத்தவழியே சித்தம் ஒன்றை ஆழ்ந்து சிந்தித்தலின் `திறப்பட்ட சிந்தை`` என்றதற்கு ஏற்ப மனம் நிலைபெற்றமை பெறப்பட்டது. திறப்படுதல். வலியுடைத்தாதல். ``அடியார் சிந்தையுள் தேனூறி நின்று``* ``கருதுவார் இதயத்துக் கமலத்து ஊறும் - தேனவன்காண்``* என்றாற்போலும் சுருதிகளின் வழிநின்று, திறப்பட்ட சிந்தையைத் `தெய்வம்` என்று எண்ணினார் என்க. அறப் பட்ட - அறத்தால். வெளிப்பட்ட. `பட்ட` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ``பட்ட`` என்பது, ``பதி`` என்பதனோடு முடிந்தது. சிந்தையில் இருப்பவனை அழைத்தல் சிந்தையாலேயாம். எனவே அவ்வாறு, பன்முறை பாவித்தலாயிற்று. `ஒரு நாள் அழைத்துவிட்டு விடாமல், பல நாள் அழைத்தல் வேண்டும்` என்பது,
``பவன் எனும் நாமம் பிடித்துத் திரிந்து
பன்னாள் அழைத்தால்,
இவன்எனைப் பன்னாள் அழைப்பொழியான்
என்று எதிர்ப்படுமே``3
``அரங்கமாய்ப் பேய்க்காட்டில் ஆடுவான் வாளா
இரங்குமோ எவ்வுயிர்க்கும் ஏழாய்! - இரங்குமேல்
என்னாக வையான்! தான் எவ்வுலகம் ஈந்தளியான்!
பன்னாள் இரந்தாற் பணிந்து.``9
என்றாற்போலும் திருமொழிகளால் விளங்கும். அதனால், ``இறப்பற்றி`` என்றால் ``இங்கு இது என் என்கின்றான்`` என்றது, `என்னோடு கலந்து உறவாடுகின்றான்` என்றபடி.
இதனால், `பரகதி உண்டு` என்பது இவ்விடத்திற்றானே அனுபவமாய் விளங்கும் என்பது கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 3
திடலிடை நில்லாத நீர்போல ஆங்கே
உடலிடை நில்லா உறுபொருள் காட்டிக்
கடலிடை நில்லாக் கலம்சேரு மாபோல்
அடல்எரி வண்ணனும் அங்குநின் றானே.
பொழிப்புரை :
மேட்டு நிலத்தில் பொழியப்பட்ட மழைநீர் அங்கு நிலைத்து நில்லாது நீங்குவதுபோல, வினையால் உடம்பினிடத்துச் சேர்க்கப்பட்ட உயிர் அதன்கண் நிலைத்து நில்லாது நீங்குவதாகும். ஆயினும், தழல் வண்ணனாகிய சிவனும் அவ்வுயிரோடு கூட அவ்வுடம்பின்கண் நிற்கின்றான். ஏனெனில், கடலிடத்தே நில்லாது கரையையே சேர்வதாகிய மரக்கலம் கடலிடை நின்றாருடன் தானும் நிற்பதுபோல, உயிரைப் பந்தத்தினின்றும் விடுவித்து வீட்டை அடைவித்தற் பொருட்டாம்.
குறிப்புரை :
கருத்து நோக்கிச் சொற்கிடக்கை முறையானன்றி இவ்வாறு உரை கூறப்பட்டது. உவமம் சுட்டிக் கூறா உவமமாய் நின்றமையால் அதனால் விளக்கப்படும் பொருள் இறுதியில் விரித்துரைக்கப்பட்டது. இடையில் நின்ற காட்டுதல் (அறிவித்தல்) வினை பொருட்கே உரியது ஈசன் உயிர்க்குக் காட்டிக் கண்டிடுவர்``3 என்றது காண்க.
`கடலிடைப்பட்டவர் மரக்கலம், அல்லது புணையைப்பற்றி யின்றித்தாமே கரைசேர மாட்டாமைபோலப் பிறவியுட்பட்ட உயிர்கள் இறைவனைப் பற்றியன்றித் தாமே கரை சேரமாட்டா` என்பதும், `அதனால் இறைவன் தனது கருணை காரணமாகப் பிறப்புடைய உயிர்களோடு உடனாய் நின்று அவற்றை வீடடைவிக்கின்றான்` என்பதும் இங்குக் கூறப்பட்ட பொருள்கள்.
``பிறவிப் பெரு கடல் நீந்துவர்; நீந்தார்
இறைவ னடிசேரா தார்``9
என்றார் திருவள்ளுவரும் `மறு பிறப்பு இல்லை` என்பாரைத் தவிர, ஏனையோர் பலர்க்கும் `உயிர்கள் பிறவியுட் பட்டன` என்பது உடன்பாடு. அதனால், அவர்கள் அனைவரும் இம்மந்திரத்திற்கூறிய உவமையை உடன்படுவர் மேற்காட்டிய திருக்குறளும் `மறுபிறப்பு உண்டு` என்பார்க்குக் கூறுவதாய் எழுந்ததன்றி `மறு பிறப்பு இல்லை` என்பார்க்குக் கூற எழவில்லை. ஆகவே, `பக்தி` என்பது உண்டு என்பது உவமையாலும் விளக்கப்பட்டதாம்.
இதனால், பரகதி உண்மை உவமையில் வைத்து விளக்கப்பட்டது.
பண் :
பாடல் எண் : 4
தாமரைநூல் போலவ தடுப்பார் பரத்தொடும்
போம்வ வேண்டிப் புறத்தே உதர்வர்
காண்வ காட்டக்கண் காணாக் கலதிகள்
தீந்நெறிச் சென்று திரிகின்ற வாறே.
பொழிப்புரை :
தாமரைத் தண்டின் நூல்போல் அறிவுடையார் முன் எளிதில் அற்றுப்போகின்ற நூல்களால், உண்மை நூல்களின் வழிச் செல்வாரைத் தடுக்கின்றவர்கள் தாங்கள் மேல்நிலையை அடைய விரும்பி, அதற்கு மாறான வழிகளில் சென்று அலைவார்கள் அவர்களது செயல்கள், தெரிய வேண்டிய வழியைத் தெரிந்தவர் காட்டினாலும் அதனைக் கண் கொண்டு பாராத குருடர்கள் தாங்கள் அறிந்ததே வழியாகக் கொண்டு துன்பம் தரும் வழிகளில் திரியும் செயல் போன்றனவேயாம்.
குறிப்புரை :
`நூல்` என்னும் பெயர் ஒற்றுமை பற்றித் தாமரை நூலை எடுத்துக்காட்டினார்.
``உன்நூலும் ஒருநூலா உரைப்ப தென்னே!
உலட்டு நூல், பருத்தி நூல், சிலம்பி நூல்கள்``*
என அருணந்தி தேவரும் கூறுதல் காண்க. `போல்வவற்றால் தடுப்பார்`` என உருபு விரிக்க. வினையொடு தொகுங்கால் மூன்றாவதன் தொகை விகற்பப் புணர்ச்சியைப் பெறும். ``வாள்போழ்ந் தட்ட நீள்கழல் மறவர்`` என்றது காண்க. `பரத்தொடும் - போம்வழி தேடிப் புறத்தே திரிதர்வர்`` என்பதை, ``கனக வகை குறித்துக் போய்க் கடற்கே வீழ்வார்``* என்றது போலக் கொள்க. ``திரிகின்றவாறு`` என்பதற்கு எழுவாய் வருவிக்கப்பட்டது.
இதனால், முத்தியைப் பல்வேறாகக் கூறும் சமய நூல்களின் பொருந்தாமை கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 5
மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள்
கூடுவர் நந்தி யவனைக் குறித்துடன்
காடும் மலையும் கழனி கடல்தொறும்
ஊடும் உருவினை உன்னகி லாரே.
பொழிப்புரை :
பாசக் கூட்டம் மறைக்கின்ற மறைப்பு நீங்கி உடல் வீடும் மனிதர்கள் உடலில் இருக்கும்பொழுது, ``மாயோன் மேய காடுறை யுலகம்``3 என்பது முதலாக முறைப்படுத்துச் சொல்லப்பட்ட நால்வகை நிலங்கள் தோறும் உள்ளிடத்துச் சிவபெருமான் கொண்டிருக்கும் திருவுருவங்களைக் குறித்துச் சென்று வணங்கியிருந்து, உடல் நீங்கிய பொழுது பேரின்ப வடிவினனாகிய சிவபெருமானை அடைந்து அவனோடு இரண்டறக் கலப்பர். ஆயினும், பாசக் கூட்டத்தின் மறைப்பு நீங்கப்பெறாத மனிதர்கள் அத்திருவுருவங்கள் எங்கும் இருப்பினும் அவைகளைப் பற்றி யாதும் நினைக்க மாட்டார்கள்,
குறிப்புரை :
`மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள் காடும் ... ... ... ... உருவினைக் குறித்து நந்தியவனை (அடைந்து) உடன் கூடுவர்; (பிறர்) உன்னகிலார்` என இயைக்க. ``அவன்`` பகுதிப் பொருள் விகுதி. ``குறிகளும் அடையாளமும் கோயிலும் - நெறிகளும் அவர் நின்றதோர் நேர்மையும்``9 நிலமெங்கும் உள்ளனவாகவும் பாசத்தால் மூடப்பட்டுக் கிடக்கும் மனிதர்கள் அவற்றைச் சிறிதும் நோக்குதல் இல்லை. அதனால், அவர்கள் உடல்விட்ட பின்பு` அடையும் நிலை யாது எனக்கூறி இரங்கியவாறு, ``மூடுதல் இன்றி`` என முன்னர்க் கூறப்பட்டமையால், பின்னர் அதன் மறுதலை வருவிக்கப்பட்டது. அவர்கட்கு மேற்கூறியl ``நரகம், சுவர்க்கம், மேதினி`` என்னும் மூன்று உலகங்களுள் யாதானும் ஒன்றிற்சென்று பிறத்தலே கதி என்பது குறிப்பெச்சம். `பிறப்பதற்கே தொழிலாகி, இறக்கின்றாரே`` 8 என்று அருளிச்செய்ததையும் நோக்குக.
இதனால், `சிவநெறியை உணராதவர் மறுமையில் அடையும் நிலை இரக்கத்திற்கு உரியது என்பது கூறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 6
ஆவது தெற்கும் வடக்கும் அமரர்கள்
போவர் குடக்கும் குணக்கும் குறிவ
நாவினில் மந்திரம் என்று நடுஅங்கி
வேவது செய்து விளங்கிடு வீரே.
பொழிப்புரை :
(தலையில் வலக் கன்னத்தை, `தெற்கு` என்றும், இடக் கன்னத்தை `வடக்கு` என்றும், நெற்றியை, `கிழக்கு` என்றும், பிடரிக்கு மேல் உள்ள பகுதியை `மேற்கு` என்று குழூஉக் குறியாக வழங்குதல் சித்தர் மரபு. அம்முறையில்.)
தெற்கும், வடக்கும் உயர்வுடையன. அத்திசையிகளில் தேவர்கள் உலாவுவார்கள். (சூரிய கலை சந்திர கலைகளாகிய பிராணங்கள் வியாபிக்கும்.) மேற்கும், கிழக்கும் யோகி தன் தியானப் பொருளைக் குறித்துச் செல்லும் வழிகளாம். அங்ஙனம் செல்லும் பொழுது நாவால் உச்சரிக்கப் படுவன மந்திரங்கள். இவற்றை யெல்லாம் இவ்வாறு உணர்ந்து, மூலாக்கினியை எழுப்பி
நடுநாடி வழியாக ஓங்கச் செய்து, அதனால் அறிவு விளங்கப் பெறுவீர்களாக.
குறிப்புரை :
`அங்ஙனம் அறிவு விளங்கப்பெற்றால், சுவர்க்க நரகங்களும், அவற்றைக் கடந்துள்ள சுத்த புவனங்களும் விளங்கச் சித்தாந்த முத்தி நிலையும் விளங்கும்` என்பது குறிப்பெச்சம். ஆவது - உயர்ந்து நிற்பது, இதனை, தெற்கு, வடக்கு இரண்டனோடும் தனித்தனிக் கூட்டுக. மந்திரமாவன பிரணவமும், அம்சமும், திருவைந்தெழுத்துமாம். `உணர்ந்து` என்பது சொல்லெச்சம்.
இதனால், `உண்மை முத்தி நிலையை யோகக் காட்சியால் இவ்வுலகிலே உணர்தல் கூடும்` என்பது கூறப்பட்டது. அதனால், அதனை `இல்லை` என்றல் குற்றமாதல் பெறப்பட்டது.
பண் :
பாடல் எண் : 7
மயக்குற நோக்கினும் மாதவம் செய்வார்
தமக்குறப் பேசின தாரணை கொள்ளார்
சினக்குறப் பேசின தீவனை யாளர்
தமக்குற வல்வினை தாங்கிநின் றாரே.
பொழிப்புரை :
சமயப் பூசலை மேற்கொண்டு, பிற சமயத்தவர் சினங்கொள்ளுமாறு கடுஞ்சொற்களைப் பேசின பாவத்தை யடைந்தவர் தாம் `நெறியல்லா நெறி தன்னை நெறியாக மயங்கும் மயக்கம்* தம்மிடத்தில் பொருந்துதலால் நெறிகளைத் திரிய நோக்கினாராயினும், `நாம் பெரிய தவத்தைச் செய்கின்றோம்` என்பது தான் அவர்கள் கருத்து அவர்கள் தங்களுக்கு உண்மை மனோலயம் வரும்படி சொல்லிய முறையைக் கைக்கொள்ளாமையால் அக் கருத்துப் போலியேயாய் உண்மையில் அவர்கள் தம்மை வந்து சார வேண்டிய வினைகள் வந்து சார்தலினாலே அவற்றைச் சுமந்து நிற்பவரேயாவர்.
குறிப்புரை :
`தவத்தினால் வினையை நீக்கிக்கொள்பவர் அல்லர்` என்பாம். ``மாதவம் செய்வார்`` என்றது அவர்களது கருத்தை நோக்கி. தரணை - எண் வகையோக உறுப்புக்களில் மனம் ஒடுங்கி நிற்கும் நிலை. அஃது அதற்குரிய முறையைக் குறித்தது. `சினக்க` என்னும் வினையெச்சம், குகரச் சாரியையும், `உரு` என்னும் துணை வினையும் பெற்று, `சினக்குற` என வந்தது. ``பேசின`` என்னும் காரணப் பொருளில் வந்த பெயரெச்சத்தை, ``தீவினை`` என்பதனோடே முடிக்க. ``அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்``* என்பவாகலின் உறுதி கூறுமிடத்தும் இன்சொல்லால் கூறுதலே நன்றாகலின் `சமயத்துறையில் தாம் பிறர்க்கு உறுதி கூறுவதாகக் கருதிக்கொண்டு, அவர்பால் கடுஞ்சொற்களை வழங்குதல் தீவினையாம்` என்றபடி. இத்தீவினையை நன்னெறி யாளர் ஒரோ ஒருகாற் செய்யினும் அவர் பிறர்க்கு உறுதி கூறிய நன்மையையேனும் பெறுவர். நெறியாளர் நெறியாளர் இதனைச் செய்யின் அவர்க்கு மிஞ்சுவத் கடுஞ்சொல் வழங்கினமையால் வரும் அத் தீவினைமட்டுமே என்பது கருத்து. இம்மந்திரம் மூன்றாம் எழுத்தெதுகை பெற்றது.
இதனால், சித்தாந்த முத்தியைப் பழிப்பார்க்குத் தீவினையும் உளதாதல் கூறப்பட்டது.