ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை


பண் :

பாடல் எண் : 1

காயம் பலகை கவறைந்து கண்மூன்று
ஆயம் பொருவ(து)ஓர் ஐம்பத்தோ ரக்கரம்
ஏய பெருமான் இருந்து பொருகின்ற
மாயக் கவற்றின் மறைப்பறி யேனே.

பொழிப்புரை :

சிவன் கொடுத்த பொருளை அஃது அன்னதாதலை அறியாது தம்முடையனவாகக் கருதிச் சிவனுக்கும், சிவனடியார் களுக்கும் கொடுக்க மறுத்தவர்களது பொருளை மூர்க்க நாயனார் சூதாடிப் பறித்ததுபோல தம்மையுணருமுகத்தால் தமையுடைய தன்னை உணரற்பால வாகிய உயிர்கள் அதனைச் செய்யாது, தம் கருவி கரணங்களைத் தாம் விரும்பும் வகையிற் செலுத்தி அல்ல லுறுதலை அறிந்த சிவபெருமான் அவைகள் அறியாமல் அவை களோடு கூடியிருந்தே அக்கருவி கரணங்களின் வழித் தன் வழியில் அவைகளைத் திருப்புதலாகிய சூதாட்டத்தினைச் செய்வதாகக் குறிப்பிட்டு, ஆயினும், சூதாடுவோர் பிறர் தமக்கு எதிர் இருந்து தம் பொருளைக் கவர முயலுதலை நன்கு அறிதல் போல உயிர்கள் சிவனை அறிந்து கொள்ளவில்லை` எனக் கூறுகின்றார்.
நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்துச் சம்பாதித்த பொருளாயினும் அப்பொருளை கட்குடிக்கும், கவறொடுதலுக்கும் ஒருவன் பயன்படுத்துவானாயின் அஃது அவனுக்குப் பாவமேயாதல் போல, மூர்க்க நாயனார் சூதாடிப் பொருள் ஈட்டினாராயினும் அதனை அவர் சிவனுக்கும், சிவன் அடியார்களுக்குமின்றி, வேறுவகையில் செலவிடாமையால், அஃது அவர்க்குச் சிவ புண்ணியமேயாயிற்று. வாதவூரடிகள் பாண்டியன் பணத்தைச் செலவிட்டது இத்தகையதோ. சிவன் மறைந்து நின்று செய்யும் செயலும் இப்படிப்பட்டதே.
உயிர்களை நன்னெறியில் செல்ல ஏவிய சிவபெருமான், அதன் பொருட்டு அவைகட்கு வேண்டும் துணைப்பொருள்களை நிரம்பக் கொடுத்திருந்தபோதிலும் அவைகள் அவற்றை மாற்று வழியிற் செலுத்துதலால், அச்செயலை அவன் மறைந்து நின்று மாற்று கின்றான். அஃது ஒரு சூதாடியின் செயல் போன்றுள்ளது. ஆகவே சிவபெருமா -னாகிய சூதாடிக்கு உயிர்கட்கு அவனால் தரப்பட்ட உடம்புகளே சூதாடும் பலகைகள். சாக்கிரம் முதலிய மூன்றவத்தை இடமாகிய புருவ நடு, கண்டம், இருதயம் ஆகியவையே சூதாடு களம். உடம்பின் புறத்தும், அகத்தும் உள்ள கருவிகளே உருட்டியோ, குலுக்கியோ பந்தயம் பெறும் கருவிகள். எழுத்தும், சொல்லும், சொற்றொடருமாய் உணர்வைத் தரும் மொழிகளே. அக்கருவிகளின் வழிப்பெற்ற பந்தயத்தின் படி காய்களை இடம் பெயர்த்து வைத்து, வெற்றி தோல்வியைத் துணிகின்ற வரைகோடுகள் அல்லது கட்டங்கள், இவை -களில் பலகை, களம், உருள் கட்டம் ஆகியவற்றை எல்லாவற்றையும் அறிகின்ற உயிர்கள் அவற்றின் வழித் தம்மை வஞ்சிக்கின்ற சிவன் ஒருவனை அவன் தம்முடன் கூடவேயிருந்தும் அறியவில்லை.

குறிப்புரை :

`இஃதொரு பெருவியப்பு` என்பது குறிப்பெச்சம். ``ஐந்து`` என்றது உபலக்கணம் ஆதலின் தொண்ணூற்றாறையும் கொள்க. கண் - இடம்; களம். ஆயம் - தாயம். அது பத்து, பன்னிரண்டு முதலாகக் கொள்ளப்படும். `ஆயத்தால்` என்னும் உருபு தொகுத்தலாயிற்று. பொருவது - பொருது, வெற்றி தோல்வி அறியும் கூட்டம்; வரைகோடுகள். அக்கரத்தையே கூறினாராயினும் அவற்றால் ஆகும் `பதம், வாக்கியம்` என்பனவும் கொள்ளப்படும். ஏயஏவிய `உடன் இருந்து` என்க. `உலகர் ஆடும் சூதுபோல்வதன்று; வியப்பைத் தரும் சூது` என்றற்கு ``மாயக்கவறு`` என்றார் தோன்றாது மறைந்து நிற்றல் பற்றிச் சிவனைக் ``கள்ளர்`` எனக் கூறிற்றுத் திருவுந்தியார்.8 குமர குருபர அடிகளும் ``வஞ்சித்த எங்கும் உளன் ஒருவன்`` என்றார். 9 மறைப்பு - மறைத்தல் தொழில். அறிதல், அதன் இயல்பினை முற்ற உணர்தல்.
இதனால், சிவன் தனது மறைத்தற் சத்தியை (திரோதான சத்தியை)க் கொண்டு உயிர்களின் ஆணவ மலத்தை அவையறியாமல் நின்று பக்குவப்படுத்தி வருதல் உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

தூறு படர்ந்து கிடந்தது தூநெறி
மாறிக் கிடக்கும் வகையறி வார் இல்லை
மாறிக் கிடக்கும் வகையறி வாளருக்(கு)
ஊறிக் கிடக்கும் என் உள்ளன்பு தானே.

பொழிப்புரை :

அனைவரும் சிறிதும் துன்பம் இன்றி மிக இன்பத்துடன் நடந்து செல்லத் தக்க நல்ல வழி ஒன்று இருக்கின்றது. ஆயினும் முட்புதர்கள் பல அதனை மூடிக்கிடக்கின்றன. அதைத் தெரிந்து அப்புதர்களை நீக்கி நல்வழியைக் கண்டு நடப்பவர் மிகச் சிலராகவேயிருக்கின்றனர். அந்தச் சிலர்மேல்தான் எனது உள்ளத்தில் உள்ள அன்பு கரந்து பாய்கின்றது.

குறிப்புரை :

`நல்ல வழி` என்றது, நாயனார், ``சிவனொடொக்கும் தெய்வம் தேடினும் இல்லை; அவனொடொப்பார் இங்கும் யாவரும் இல்லை`` எனவும், ``சேயினும் நல்லன், அணியன் நல்ல அன்பர்க்குத் - தாயினும் நல்லன் தாள்சடையானே``3 எனவும் முதற்கண் கூறி அவனை அவ்வாறுணர்ந்து நிற்கும் நெறியை.
தூறுகளாவன, அச்சிவனை, ``அவன் தாமச குணத்தன், பித்தன்; சாம்பலைப் பூசிக்கொண்டு, எலும்பு மாலைகளையும், தலைமாலைகளையும் அணிந்துகொண்டு சுடுகாட்டில் ஆடுபவன்`` என்பனபோல் இகழ்ந்து கூறும் உரைகள்.
``இவரைப் பொருளுணர மாட்டாதா ரெல்லாம்
இவரை யிகழ்வதே கண்டீர்``l
என்னும் அம்மை திருமொழியையும் நோக்குக. அதனுள், ``பொருள்` என்றது, `உண்மை` என்றபடி. ஈற்றடி, `நல்லார்கண் நல்லான் அன்பு செய்வர்` என்பதை உணர்த்தி நின்றது.
இதனால், `சிவநெறியாகிய நன்னெறியை இகழ்ந்து கூறும் புன்னெறிகள் உள; அவற்றை அறிந்து விலக்கி அந்நன்னெறிக் கண் செல்ல வல்லார் மிகச் சிலரே` என்பது உள்ளுறையாக உணர்த்தப் பட்டது. ``சைவ சித்தாந்தத் - தேனமு தருந்தினர் சிலரே``l எனக் குரம குருபர அடிகளும் குறித்தருளினார். எனக் குமர குருபர அடிகளும் குறித்தருளினார்.

பண் :

பாடல் எண் : 3

ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில்
சாறு படுவன நான்கு பனைஉள
ஏறற் கரியதோர் ஏணியிட்(டு) அப்பனை
ஏறலுற் றேன் கடல் ஏழுகணஅ டேனே.

பொழிப்புரை :

ஆறு தெருக்கள் - அறிவினால் மிக்க அறு சமயங்கள். அவை அனைத்தும் சந்திக்கின்ற சந்தியிடம் - பக்குவான்மா. அதற்கு வீடு பேறாகிய சாற்றைத் தருவனவாய் முறைப்பட மேட்டு நிலத்தில் உயர்ந்து உயர்ந்து நிற்கும் நான்கு பனை மரங்கள் - சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆறு தெருவில் செல்பவர்களில் யாரும் அந்தப் பனை மரங்களில் ஒன்றிலேனும் ஏற இயலாது. அவற்றை விடுத்துச் சிவ குருவினை அருளால் சிவ நெறியை அடைந்தோரே அவற்றில் ஏற இயலும் ஆகையால், அந்தச் சிவநெறியே அந்தப் பனைமரங்களில் ஏறுதற்கு அரிதல் கிடைக்கும் ஏணி. அந்த ஏணி வழியாக நான் அவற்றில் முறையாக ஏறினேன். ஏறியவுடன் எழுவகைப் பிறவியாகிய கடல்கள் ஏழினது கரையையும் கண்டுகொண்டேன்.

குறிப்புரை :

`நாட்டில் வாழ்பவர்கள் கடற்கரையை அங்கிருந்தே காண வேண்டுமாயின் உயர்ந்த பனைமரத்தின்மேல் ஏறிக் காண வேண்டும். அதுபோலப் பிறவிக் கடலின் கரையை உலகியலில் நின்றே காணவேண்டுமாயின் மிக மேட்டு நிலத்தில் உள்ள ஞானமாகிய பனை மரத்தின்மேல் ஏறிக் காணவேண்டும். அதை அந்த மேட்டு நிலத்தில் சென்று அடைவதற்கு அதற்குக் கீழே கீழே `யோகம், கிரியை, சரியை` என்னும் மூன்று பனை மரங்கள் உள்ளன. அவற்றில் முதலில் உள்ள `சரியை` என்னும் பனை மரம் முதலாக முறையே ஏறிச் சென்று, ஞானமாகிய பனை மரத்தை அடைந்து அதில் ஏறி நான் பிறவியாகிய ஏழு கடல்களை நான் கண்டுவிட்டேன்` என்கின்றார் நாயனார்.
`ஆறு தெருக்கள் சந்திக்கின்ற சந்திப்பை அடைந்த ஒருவன். தான் குறித்த மேலிடத்தை அடைதற்கு எந்தத் தெரு வழியாகச் செல்வது என்று திகைப்பான். அப்பொழுது அருளும், அறிவும் உடையான் ஒருவன், `இவைகளில் எதன் வழியாகவும் செல்லாமல், இதோ தெரிகின்ற இந்த பனைமரங்கள் வழியாக முறையே ஏறிச் சென்று அடைக` எனக் கூறி உதவி செய்தாற்போல ஆறு சமயங்களைக் கண்டு திகைத்த எனக்கு எங்கள் நந்தி பெருமான் வழிகாட்டினார் என்றபடி.
பனைமரத்தில் ஏறி இளைத்தவர்கட்கு ஓர் ஆறுதலாகக் கிடைப்பது அம்மரத்தின் சாறு. அதனை, `பத நீ` என்பர். அது போலச் சரியை முதலிய மூன்றின் இடைநிலைப் பயன் சாலோக சாமீப சாரூபங்களாகிய பத முத்திகளும் ஞானத்தில் சரியை முதலிய மூன்றின் இடைநிலைப் பயன்கள் அதிகார முத்தி, போக முத்தி, இலய முத்தி` - என்னும் அபர முத்திகளுமாம் ஆதலின் அவற்றைக் குறித்தற்கு, ``சாறு படுவன நான்கு பனை`` என்றார்.
இதனால், `ஒன்றோடொன்றொவ்வாத சமயங்களின் வழிச்செல்லாது, சித்தாந்த சைவ நெறியைச் சிவ குருவழியாக அறிந்து, அதில் சரியை, கிரியை, யோகங்களில் வழி ஞானத்தை அடைந்து, அது வழியாகச் சிவப்பேற்றினைப் பெறுதல் வேண்டும்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது
தொழுது கொண் டோடினார் தோட்டக் குடிகள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே.

பொழிப்புரை :

என்னுடைய தோட்டத்தை ஒருசிலர் தங்களுடைய தாக ஆக்கிக்கொண்டு அவர்கள் விருப்பம்போல அதனைப் பயன் படுத்தி வந்தனர். இருப்பினும் அவர்களுக்கிடையே நான் ஒட்டி ஒன்றிச் சிறிது இடத்தைத் தோண்டிக் குழிசெய்து, எனக்குப் பழக்க -மான உணவாகிய கத்தரிக்காயைப் பெறவேண்டி அதன் விதையை ஊன்றினேன், ஆயினும் அந்த விதையினின்று பாகற் கொடி முளைத்துப் படர்ந்தது. படர்ந்த அக்கொடியோ பூசணிப் பூவைப் பூத்தது. அந்தப் பூவோ வாழைக் காயைக் காய்த்தது. அந்தக் காய் பழுத்ததைப் பார்த்துவிட்டு, முன்பு வலிசெய்து குடியிருந்த அந்த அற்பர்கள், `ஐயா, உங்கள் தோட்டம் மிகப்பெரிய புதுமைகள் விளைகின்ற தோட்டமாய் உள்ளது; உங்களுக்கு ஒரு கும்பிடு` என்று சொல்லிக் கும்பிட்டு விட்டு ஓடிவிட்டார்கள்.

குறிப்புரை :

`காய்களில் கத்தரிக்காயையே உண்டு களித்து வந்த நான் கனிகளில் சிறந்த வாழைக்கனி தானாகக் கிடைத்ததை உண்டு, அந்தக் கத்தரிக்காயை வெறுத்துவிட்டுப் பேரானந்தம் அடைந்தேன்` என்பது குறிப்பெச்சம்.
தோடம் - ஆன்ம அறிவு. அதில் குடியிருந்த அற்பர்கள் காமம், வெகுளி, மயக்கம் முதலிய மும்மலங்களின் காரியங்கள். தோண்டிய குழி குருவை அடைந்து வழிபட்டது. அதில் கத்தரி விதைத்தது, `குருவும் இவ்வுலகில் நல்வாழ்வை அடைய வழிசொல்வார்` என்று நினைத்து அவர உபதேசத்தைக் கேட்டது. கத்தரி விதையினின்றும் பாகற்கொடி முளைத்தது. குருவினுடைய உபதேசம் காதில் விழுந்தவுடன் உலகத்தின்மேல் வெறுப்புத் தோன்றியது. இது, `கடல் வாணிபம் செய்து பெரும் பொருள் ஈட்டுவான்` என்று கருதித் திருவெண்காடர் வளர்த்த மகன் அவருக்குக் காதற்ற ஊசியை வைத்து விட்டு மறைந்தது போல்வது. சிலருக்கு இவ்வாறு ஞானம் எதிர்பாராத வகையில் கிடைப்பதுண்டு. திருவாதவூரடிகள் ஞானம் பெற்ற வரலாற்றையும் இங்குக் குறிக்கலாம். இறைவன் சுந்தரரைத் திருமுது குன்றத்திற்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லிக் கூடலையாற்றூரில் கொண்டு விட்டதைக் கூறலாம். பாகற்கொடி பூசணிப் பூவைப் பூத்தது, உலகத்தை வெறுத்த வெறுப்புணர்ச்சியிலிருந்து வீடுபேற்றில் விருப்பம் பிறந்தது. அவ்விருப்பம் ஆன்மாத் தான் கொள்ளத்தக்க விருப்பமாய் அதற்கு அழகு செய்தல் பற்றி, அதனை `பூசு அணி` எனச் சிலேடைப் பொருள்படக் கூறினார். பூசு பூசப்படும் பொருள். அணி - அணியப்படும் பொருள். ``வாழை`` என்பதும் அவ்வாறு `வாழ் ஐ` எனப் பிரிந்து சிலேடைப் பொருள் உணர்த்திற்று. வாழ் - வாழ்வு. ஐ - வியப்பு; அதிசயம் அதிசயமான வாழ்வு, பேரின்ப வாழ்வு. இதனை, ``நீடு வாழ்தல்``3 என்பார் திருவள்ளுவர். `ஞானம் வந்தபின் மும்மல காரியங்கள் ஓடிவிட்டன` என்றார். `வழுதலை, வழுதுணை` என்பன ஒரு பொருட் சொற்கள். ``புழுதியைத் தோண்டினேன்`` என்பதை முதலிலும் ஈற்றடியை இரண்டாம் அடியின் பின்னும் கூட்டுக.
இதனால், ``ஆசாரியராய் உள்ளவரை அடைந்து வழிபட்டால் நம்மையறியாமலும் நமக்கு ஞானம் பிறக்கும்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஐயென்னும் வித்தினில் ஆனை விளைப்பதோர்
செய்யுண்டு செய்யின் தெளிவறி வார்இல்லை
மையணி கண்டன் மனம்பெறின் அந்நிலம்
பொய்யொன் றுமின்றிப் புகல்எளி தாமே.

பொழிப்புரை :

`ஐ` என்று வியக்கத்தக்க மிகச் சிறிய பொருளையே (கடுகு, மிளகு, கொத்துமல்லி போன்ற பொருள்களையே) விளைக்கக் கூடிய விதைகளை இட்டால், அவற்றிலிருந்தே ஆனைபோன்ற மிகப்பெரிய (மாங்காய், தேங்காய், பலாக்காய் போன்ற) பொருள் -களையே விளைவிக்கின்ற அதிசய நிலம் ஒன்று உண்டு. அஃது அத்தன்மைத்தாதலை அறிந்து அதில் விதை விதைக்கின்றவர்கள் உலகத்தில் பலர் இல்லை. அந்த நிலம் சிவன் மனம் வைத்தால், தவறாமல் எளிதில் அடையப்பெறுவதாகும்.

குறிப்புரை :

`ஐ` என்பது வியப்புப் பொருட்டாய், வியப்பிற்குக் காரணமான, ``புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம்`` என்னும் நான்கனுள் சிறுமை பற்றி வந்தது. ஆனை, உவமையாகுபெயராய் அதுபோலும் பொருளை உணர்த்திற்று. ``தெளிவு`` என்பது தெளியப்படும் தன்மை குறித்து நின்றது. ``மனம்`` என்றது. மனத்தின் உவகையை, `நிலம், சிவனது திருமேனி வகைகள்` எனவும், விதைகள் அவற்றிற் செய்யும் சரியை, கிரியை, யோகம் என்னும் வழிபாட்டு வகைகள் எனவும் கொள்க. சிலந்தி ஒன்று வெண்ணாவற் கீழ் உள்ள இலிங்கத்திற்கு வாய் நூலால் பந்தலிட்டுச் சோழ மன்னன் ஆயினமையும், எலியொன்று, திருக்கோயில் உள்ள விளக்கைத் தூண்டி, மூவுலகங்களையும், அடிப்படுத்து ஆண்டமகாபலிச் சக்கரவர்த்தியாயும் ஆயினமை போன்றவற்றை வைத்து இவ்வாறு கூறினார். முதல் இரண்டு அடிகளில், பெரியோர்க்குச் செய்த உபகாரம் பொருளால் சிறிதாயினும் பயனால் பெரிதாதல் அறநூல்கட்கெல்லாம் உடன்பாடாதலின் தேவர்க்கெல்லாம் தேவனாம் பெரியோனுக்குச் செய்யும் வழிபாடு பொருளால் மிகச் சிறிதாயினும், பயனால் மிகப் பெரிதாம்` எனச் சிவபுண்ணியத்தின் சிறப்பை உள்ளுறை வகையால் உணர்த்தி அதனைச் செய்யாதார் நிலைக்கு இரங்கியவாறு. `அச்செயின்` எனச் சுட்டு வருவிக்க. ``தவமும் தவம் உடையார்க்கு ஆகும்``8 என்றபடி. `சிவபுண்ணியத்தில் மனம் செல்லுதற்கும் சிவ புண்ணியம் வேண்டும்` என்பது குறிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

பள்ளச்செய் ஒன்றுண்டு பாழ்ச்செய் இரண்டுள
கள்ளச்செய் அங்கே கலந்து கிடந்தது
உள்ளச்செய் அங்கே உழவுசெய் வார்கட்கு
வெள்ளச்செய் யாகி விளைந்தது தானே.

பொழிப்புரை :

மக்களில் ஒவ்வொருவருக்கும் உள்ளது ஒரு நிலந்தான். அந்த நிலத்தில் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே நீர் எளிதில் பாய்ந்து விளைவைத்தரக் கூடியதாய் உள்ளது மற்றை இரண்டு பகுதிகள் நீர் செல்லாது, முரம்பாய்க் கிடக்கின்றன. மூன்றிலும் உழமுடியாதபடி கருங்கற்கள் உள்ளன. இவற்றைச் சமப்படுத்தி உழ வல்லவர்கட்கு அந்த ஒரு நிலமே வேண்டுமளவு நீர் தேங்கி நிற்கின்ற நிலமாய், நல்ல விளைவைத் தருகின்றது.

குறிப்புரை :

ஒரு நிலம் - ஆன்ம அறிவு. மூன்று பகுதிகள் `கேவலம், சகலம், சுத்தம்` என்னும் மூன்று அவத்தைகள் (இம்மூன்றையும் சகலத்தின் பகுதியாகவே கொள்க.) பள்ள நிலம், அஃதாவது, நன்செய் - சுத்தாவத்தை. `நின்மலாவத்தை` எனப்படுவதும் இதுவே. இதில் திருவருளின் வழிச்சிவம் பிரகாசித்து நிற்றலால், நீர் நன்கு பாயும், ``பள்ளச் செய்`` எனப்பட்டது. ஏனைக் கேவல சகலங்கள் திருவருள் விளக்கம் இன்றி இருத்தலால், ``பாழ்ச் செய்`` எனப்பட்டன. ``கல்ல செய்`` என்பது, எதுகை நோக்கித் திரிந்தும், ஒற்றுமிக்கும் நின்றது. கல்ல செய் - கற்களை உடைய நிலம். இங்ஙனம் கொள்ளாது, `கள்ளம்` என்றே கொள்ளின், கள்ளத்திற்கும், செய்க்கும் இயைபு யாதும் இன்மை அறிக. `கல்லச் செய்` என்றே பாடம் ஓதி `ஒற்று மிக்கது விகாரம்` என உரைப்பினும் ஆம். ``உள்ளச் செய்`` என்பதிலும் சகர ஒற்று, விரித்தல் `இள்ள செய்யாகிய அங்கே` என்க. ``உள்ள செய்`` என்றதனால் வேறு செய் இன்மை பெறப்பட்டது. ``உழவு செய்வார்`` என்றது, சொல்லுவாரது குறிப்பால், `செய்ய வல்லார்க்கு` எனப் பொருள் தந்தது. பாழ்ச் செய்யிலும், கற் செய்யிலும் உழ வல்லவர் அரியராதலை அறிக. நிலம் ஒன்றையே தொல்காப்பிடனார் பகுதி பற்றி ``காடுறையுலகம், மைவரையுலகம்`` என்பன முதலாய்ப் பலபோலக் கூறினாற்போல, இவரும் ஒரு செய்யினையே பகுதி பற்றி, ``பள்ளச் செய், பாழ்ச் செய்`` எனப் பல செய்கள்போலக் கூறினார். இம்மூன்றிலும் நிறைந்துள்ள கற்களாவன ஆணவ மலத்தின் சத்திகள். ஆகவே, இங்கு, சுத்தம் ஆவதும் சகலத்திற் சுத்தமே. மூன்றையும் சமப்படுத்தி உழுதலாவது, குருவுபதேசத்தை நனவிலே மட்டுமன்றிக் கனவிலும் மறவாது உணர்தலாம்.
``துஞ்சலும், துஞ்சல் இலாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாடொறும்``3
``துஞ்சும் போதும் சுடர்விடு சோதியை``9
என்றாற்போல ஆசிரியன்மார் அருளிச் செய்தலை அறிக. வெள்ளம் - நீர்த் தேக்கம். ``வெள்ளச் செய்யாகி`` என்றது, முதற்கண் கூறிய, ``பள்ளச் செய்`` போலவே ஆகி - என்றதாம்.
இதனால், `குரு உபதேசத்தை எந்நிலையிலும் மறவாது உணர்வார் உலகில் உலாவினும் முத்தராய் விளங்குவர்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

மூவணை ஏரும் உழுவது முக்காணி
தாம்அணை கோலின் தறியுறப் பாய்ந்திடும்
நாவணை கோலி நடுவிற் செறுஉழார்
காலணை கோலிக் களர்உழு வார்களே.

பொழிப்புரை :

மூன்றாகப் பொருந்தியுள்ள ஏர்கள் மக்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளன. (அவை, `இடை, பிங்கலை, சுழுமுனை` என்னும் மூன்றும் நாடிகள் வழியாகச் செல்லும் பிராண வாயுக்கள், வழி பற்றி இவை மூன்றாயின.) அந்த ஏர்கள் அனைத்தும் உழுதுகொண்டிருப்பது முக்காணி (முக்கால் மா) அளவான சிறிய நிலத்தையே, (ஒரு மாவில் நான்கில் ஒரு பங்கு `காணி` என்னும் பெயரை உடையது. ஆறு ஆதாரங்களில் முதலாவதாகிய மூலாதாரம் முக்கோண வடிவினது ஆதலின், அதனை ``முக்காணி`` என்றார். சுவாசம் இயல்பாக மூலாதாரத்தினின்று எழுந்து இயங்கிக் கொண்டிருக்கின்றது) அந்த ஏர்களைத் தடை செய்து செலுத்தினால் அவை குறித்த வழியில் இயங்கிப் பயன் தர வல்லன அவ்வாறு அவற்றைக் குறித்த வழியில் செலுத்திச் சில சொற்களால் அதட்டி அடக்கி, நடுவில் உள்ள நல்ல நிலத்தை உழுதால் நல்ல பலன் கிடைக்கும். மக்கள் அவ்வாறு அந்த நல்ல நிலத்தை உழாமல், வடிகாலை மட்டும் பெரிதாக்கிக் களர் நிலத்தை உழுது கொண்டிருக்கின்றார்கள்.

குறிப்புரை :

`இஃது இரங்கத் தக்கது` என்பது குறிப்பெச்சம். `மூ அணை ஏரும்` என்பதில், `மூன்றாய் அணைந்த ஏர்களும்` என ஆக்கம் வருவிக்க. முற்றும்மை கொடுத்தமையால் `உள்ள ஏர்கள் மூன்றே` என்பது பெறப்பட்டது. ``தாம்`` என்றது உழுபவரை. அவர் அணைகோலலாவது, உழும் பகடுகளைத் தம் வழிப்படுத்தி ஓட்டுதல். குறித்த வழியை, குறிக்கோளாதல் பற்றி, ``தறி`` என்றார். ``பாய்ந்திடும்`` என்பது, பாய்ந்து பயன் விளைக்கும்` எனத் தன் காரியம் தோற்றி நின்றது. யோகம் செய்வார் மூலாதாரத்தினின்றும் எழுத்து இயங்கும் வாயுவைத் தடுத்துச் சுழுமுனையில் செலுத்தி, அது பிரமரந்திரத்தில் சென்றபொழுது நா அடியால் மேல் துளையை அடைந்து நிறுத்துவர். அதனையே, ``நா அணை கோலி`` என்றார். எனினும் சூனிய சம்பாடணையாகக் கூறலால், `நா` என்பது ஆகுபெயராய் அதனுள் எழும் சொல்லைக் குறித்து, ஏர் உழுபவர் அதட்டும் மொழிகளைக் குறித்தது. ``நடுவில் செறு`` என்பதற்கு `நடுவில் உள்ள நல்ல நிலம்` என்பது வெளிப்பொருள். `புருவ நடுவில் வில்லைபபோன்ற வடிவத்தை உடைய ஆஞ்ஞை என்னும் ஆதாரம்` என்பது உள்ளுறைப் பொருள். `பிராண வாயுவை நடுநாடியில் பிரமரந்திரம் வகையில் செலுத்துதலால், மூலாதாரத்தில் அடங்கிக் கிடக்கின்ற குண்டலி சத்தி எழுந்து ஆஞ்ஞையை அடையும். அஃது அவ்வாறு அடைந்தால், உண்டாகும் விளக்க உணர்வுகளும், காயசித்தி முதலிய சித்திகளும் பலவாம். ஆகவே, மக்கள் அதனைச் செய்ய மாட்டாது. பிராண வாயுவை அது போன வழியிலே போக விட்டு, விரைவில் மக்கட் பிறப்பை இழக்கின்றனர்` என்பதாம். கால் - வடிகால்; வெளிப்பொருள். பிராண வாயுவின் இயற்கை இயக்கம்; உள்ளுறைப் பொருள். நிலத்திற்கு வடிகால் இன்றி, வடிகால் மட்டும் இருப்பின் காய்ந்து, கமர் வெடித்துக் கெடும். கனர் - எதுவும் விளையாத நிலம். அவை இடை பிங்கலை நாடிகள். இரண்டு, நான்காம் அடிகள் உயிரெதுகை பெற்றன.
இதனால், `யோகம் பயின்று பயனடைதற்குரிய மக்கள் அதனைச் செய்யாது, காலத்தை வீணடித்துக் கெடுகின்றனர்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஏத்தம் இரண்டுள ஏழு துரவுள
மூத்தோன் இறைக்க இளையோன் படுத்தநீர்
பத்தியிற் பாயாது பாழ்ப்பாய்ந்து போயிடின்
கூத்தி வளர்த்ததோர் கோழிப்பு ள்ளாமே.

பொழிப்புரை :

(`ஏத்தம்` என்பதுதான் நீர் இறைக்கும் ஏத்தத்தின் பெயர். அஃது அறியாதார் `ஏற்றம்` என்பர்.) ஏத்தம் இரண்டு - இடை நாடி, பிங்கல நாடி. ஏழு தூவு - ஆறு ஆதாரங்களும், சகஸ்ராரமும், (துரவு - கிணறு) மூத்தோன் - `அகங்காரம்` என்னும் அந்தக் கரணம். இதுவே பிராணவாயுவை இயக்குவது. இளையான் - `மனம்` என்னும் அந்தக் கரணம். (பிராண வாயு இயங்குதலாலே உயிர் அறிவு பெற்று விளங்குகின்றது. அந்த அறிவை நீராகவும், அந்த அறிவு நிற்கும் இடங்களைத் துரவாகவும் பிராண வாயுவின் இயக்கத்தால் உயிரின் அறிவு பிரவர்த்திக்கச் செய்யும் செயலை நீரைப் பயன்படுத்த இறைப்ப தாகவும், அறிவு மனத்தின் வழியே சென்று பயன் விளைத்தலின் மனத்தை நீரை வேண்டும் இடத்திற்குக் கொண்டுபோய்ப் பாய்ச்சுபவ னாகவும் கூறினார். உயிர்க்கு அறிவை உண்டாக்கும் கருவியை நீர் இறைக்கும் மூத்த சகோதரனாகவும், அறிவைக் கொண்டு போய்ப் பயன் படுத்தும் கருவையை, நீரை வேண்டுமிடத்தில் பாய்ச்சும் இளைய சகோதரனாகவும் கூறினார்.) பிராண வாயு நடு நாடியாகிய சுழுமுனையில் சென்றால், ஞானமாகிய பயன் விளையும். அதனால் அதனை, ``பாத்தி`` என்றார். பிராண வாயுவை மனம் சுழுமுனையிற் செலுத்தாது வெளியில் செலுத்தி, அஞ்ஞானமே விளையப் பண்ணுதலால் மூத்தோன் ஓர் ஏத்தத்தின் வழியாக (இடைகலை வழியாக) நீரைத் துரவுக்குத் தந்து மற்றோர் ஏத்தத்தின் வழியாக (பிங்கலை வழியாக) வெளியேற்ற, `அந்நீர் பாத்தியிற் பாயாது, பாழ் நிலத்தில் பாய்கின்றது` என்றார்.

குறிப்புரை :

``பழியுடை ஆக்கை தன்னில், பாழுக்கே நீர் இறைத்து``*
என அப்பர் பெருமானும்,
``ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ கால மெலாம்
பாழுக் கிறைத்தேன்``8
என மாணிக்க வாசகரும் அருளிச் செய்தனர்.
கூத்தாடும் ஆடவன் `கூத்தன்` எனப்படுதல்போல கூத்தாடும் மகள் `கூத்தி` எனப்படுகின்றாள். இங்குக் குறிக்கப்பெறுகின்ற இக்கூத்து, அவிநயக் கூத்து. இதனைப் பழங்காலத்தில் விறலியர் (பாணத்திகள்) ஆடியபோதிலும், பிற்காலத்தில் இது விலைமாதர்க்கே உரியதாய் விட்டது. கோழியைப் பெரிதாக வளர்த்தற்கு மிகத் தொல்லை உண்டு. கூத்தி அத்தொல்லைகளுக்கு உள்ளாகிக் கோழியை வளர்ப்பது, பெரும் -பாலும் தனக்காக அன்றித் தனக்கு விலை கொடுத்துத் தன்னிடம் வருகின்ற விடர்கள் மகிழ்ச்சியடைய அவர்கட்கு ஆக்குதற் பொருட்டேயாம். ஆகவே, கூத்தி வளர்க்கும் கோழிகள் அவளையும், அவள் வாயிலாகப் பலரையும் தீநெறியிற் செல்ல ஊக்குவிப்பனவே யாகும். அது பற்றி உலகியலிலே ஊக்கம் பிறப்பிக்கின்ற பிராண வாயுவை, ``கூத்தி வளர்த்த கோழிப்புள்`` என்றார்.
இதனால், `மக்களத் தமது மூச்சினை வாயியோகமாக்கினால் பயன் மிகவிளையும்; அதைச் செய்யாது வீணடிக்கின்றனர் என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

பட்டிப் பசுக்கள் இருபத்து நால்உள
குட்டிப் பசுக்கள்ஓர் ஏழ்உள ஐந்துள
குட்டிப் பசுக்கள் குடப்பால் சொரியினும்
பட்டிப் பசுவே பனவதற்கு வாய்த்தவே.

பொழிப்புரை :

பட்டி - தொழுவம். `பட்டியில்` என ஏழாம் வேற்றுமை உருபு விரிக்க. பட்டி, தூல, சூக்கும பர தேகங்களும், திரோதான சத்தியும். கன்றை, ``குட்டி`` என்றது மரபு வழுவமைதி. குட்டிப் பசுக்கள் - கன்றையுடைய பசுக்கள். பின்னால், ``குட்டிப் பசுக்கள்`` எனக் கூறி, முன்னே வாளா, ``பசுக்கள்`` என்றமையால், அவை தன்றை ஈனாத மலட்டுப் பசுக்களாயின. கன்றையீனாத பசுக்குள் துளிப் பாலும் தாராமையும் கன்றை யீன்ற` பசுக்கள் குடம் குடமாகப் பாலைத் தருதலும் வெளிப்படை. அவ்வாறிருந்தும் அனைத்தையும் பட்டிக்குள் வைத்துள்ள பார்ப்பானுக்கு மலட்டுப் பசுக்கள்தாம் தெரிந்தன; கன்றையுடைய பசுக்கள் தெரியவில்லை. இதற்கு அவன் கண்ணில் உள்ள கோளாறு காரணம்.

குறிப்புரை :

இருபத்து நான்கு, ஆன்ம தத்துவம். ஏழு, வித்தியா தத்துவம், ஐந்து, சிவதத்துவம். ஆக முப்பத்தாறு தத்துவங்கள் உள்ளன.
ஆன்ம தத்துவங்கள் போக்கிய கண்டமாய் ஆன்மாவால் நுகரப்படுவனவேயன்றிப் போசயித்திருகாண்டமாய், ஆன்மாவை நுகர்வோன் (போக்தா) ஆகவும், செய்வோன் (கர்த்தா) ஆகவும் ஆக்க மாட்டா. அதனால் போக்கிய காண்டமாகிய ஆன்ம தத்துவங்களை `மலட்டுப் பசுக்கள்` என்றும், போசயித்திரு காண்ட மாகிய வித்தியா தத்துவங்களை, `கறவைப் பசுக்கள்` என்றும் கூறினார். வித்தியா தத்துவங்கள் பிரேரக காண்டமாகிய சிவ தத்துவங் களாலே செயற்படுதல் பற்றி அவற்றையும் கறவைப் பசுக்கள் என்றார். பனவன் - பார்ப்பான், ``வாய்த்ததே`` என்று இரங்கிக் கூறினமையால், பார்ப்பான், கண் பார்வை குறைந்த பார்ப்பான் ஆகின்றான். பார்ப்பான், சமய வாதிகள். இது சாதியொருமை. `புறப்புறம், புறம்` என்னும் சமயத்தைச் சார்ந்தவர்கள் ஆன்ம தத்துவங்களை மட்டுமே மறைமுகமாகவோ, நேராகவோ அறிந்து வித்தியா தத்துவம் சிவ தத்துவங்களை அறியாமையால், `கண் பார்வை குறைந்த பார்ப்பான்` என்றது அவர்களையே. கண் பார்வையாவது, சமய ஞானம்.
இதனால், `தத்துவ உணர்வு வேண்டுவோர் சித்தாந்த சைவத் தத்துவங்களை உணராவிடில் பயனில்லை` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

ஈற்றுப் பசுக்கள் இருபத்து நால்உள
ஊற்றுப் பசுக்கள் ஒருகுடம் பால்போதும்
காற்றுப் பசுக்கள் கறந்துண்ணும் காலத்தில்
மாற்றுப் பசுக்கள் வரவறி யோமே.

பொழிப்புரை :

ஈற்றுப் பசுக்கள் - ஈன்றணிய. அஃதாவது, கன்றை யீன்று ஒன்றிரண்டு நாட்களேயான பசுக்கள். இவைகளின் பாலும் பூசைக்கோ, வேள்விக்கோ பயன்படாது. மக்களுக்கு உணவாக்கூட ஆகாது. பயன்படாமை பற்றி மேல், `மலட்டுப் பசுக்கள்` எனக் கூறியவற்றையே, `ஈற்றுப் பசுக்கள்` எனக் கூறினும் இழுக்கில்லை என்னும் கருத்தால் இங்கு இவ்வாறு கூறினார். எனவே, முன் மந்திரத்திற் கூறிய அந்த இருபத்து நான்கே இங்குக் கூறிய இருபத்து நான்கும் ஆகின்றன. முன் மந்திரத்தில், ``குட்டிப் பசுக்கள்`` எனக் கூறியவைகளை இங்கு ``ஊற்றுப் பசுக்கள்`` என்றார். `பாலைச் சுரந்து பொழியும் பசுக்கள்`` என்றபடி. `தனித் தனி ஒவ்வொரு குடம்` என்க. `குடமாக` ஆக்கம் விரிக்க. `புகுதும்` என்பது. `போதும்` என்றபடி ``காற்று`` என்பது பகாப் பதமாய்ப் பிராணனையும், `கால்+று` எனப் பகுபதமாய், கறக்கும்படி துன்புறுத்தப்படும் பசுக்களையும் சிலேடை வகையால் குறித்து நின்றது. காலுதல் - கக்குதல். அஃது இங்குப் பாலைப் பொழிதலைக் குறித்தது. காணுதல், தன்வினை. காற்றுதல், பிறவினை. காற்றுதல், இங்குப் பாலைக் கொடுக்கப்பண்ணுதல். சில பொல்லாத பசுக்கள் கன்றை யீன்றாலும், கன்றுக்கும் பால்கொடாது உதைத்துத் தள்ளும். யாரையும் கறக்கவிடா அப்படிப்பட்ட பசுக்களை அடித்துத் துன்புறுத்தியும், மடியில் மருந்து பூசியும் வலியுறுத்திப்பால் கொடுக்கப் பண்ணுவர்.

குறிப்புரை :

``சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்``9
என்றார் திருவள்ளுவர்.
இவ்வாறு வருத்திக் கறக்கக் கறக்கும் பசுக்கள்போல இடை கலை பிங்கலைக் காற்றுக்கள் யோக முறையால் அடக்கி இயக்கப் பயன்தருதல் பற்றி அவைகளை, காற்றுப் பசுக்கள்`` எனச் சிலேடையாகக் கூறினார். மாற்றுப் பசுக்கள், காற்றுப் பசுக்களுக்கு வேறான பசுக்கள். என்றது, முதலிற் கூறிய ஈற்றுப் பசுக்களையே. வாசியோகம் பயிலுமிடத்து ஞானேந்திரிய கன்மேந்திரியங்களின் செயல் வந்து தடைசெய்ய மாட்டாமையால்,
``காற்றுப் பசுக்கள் கறந்துண்ணும் காலத்து
மாற்றுப் பசுக்கள் வரவறி யோமே``
என்றார். `காற்றுப் பசுக்களை` என இரண்டன் உருபு விரிக்க. வரவு அறியோம் - வருதலைக் காணோம்.
இதனால், `பிற சமயிகளும் ஹடயோகம் செய்யாது, தியான யோகம் செய்யின், அவரவர் சமய முத்தியை அடைவர்` என்பதும் `சித்தாந்தம் தத்துவ ஞானம் உண்டாயின், சிவஞானம் கைவந்து, சித்தாந்த முத்தி எளிதில் கிடைத்துப் பெரும்பயன் தரும்` என்பதும் உள்ளுறையாகக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 11

தட்டான் அகத்தில் தலையான மச்சின்மேல்
மொட்டாய் எழுந்தது செம்பாய் மலர்ந்தது
வட்டம் படவேண்டி வாய்மை மறைத்திட்டுத்
தட்டான் அதனைத் தகைந்துகொண் டானே.

பொழிப்புரை :

தட்டான் ஒருவனது இல்லத்தின் மச்சுமேல், அவன் நண்பன் ஒருவன் தட்டானிடம் இருந்த நம்பகத்தால், `மொட்டு` என்னும் அளவில் பொன்னை வைத்திருந்தான். அது பின்பு அதிசய மாகச் `செம்பு` அளவாக விரிவடைந்தது. அதன் பயன் அனைத்தையும் தட்டான் தனதாக்கிக் கொள்ள எண்ணி உண்மையை மறைத்து, முழுவதையும் கவர்ந்து கொண்டான். (நண்பன் ஏமாற்றப்பட்டான்.)

குறிப்புரை :

தட்டான் - தூல சூக்கும அதிசூக்கும சரீரங்களைத் துருவித் தேடினாலும் அகப்படாதவன்; ஆன்மா. அகம் - உடம்பு. மச்சு - உச்சந்தலை. `குழை, தோடு` என்னும் இயற்கைப் பொருள்களைப் பொன்னால் செயற்கையாகச் செய்து ஆடவரும், மகளிரும் காதில் அணிதல் போல, `மொட்டு` (அரும்பு) என்னும் இயற்கைப் பொருளையும் பொன்னாற் செய்து, ஆடவர் கால் விரலில் அணிவர். `மொட்டு` என்பது தவறு எனக் கருதிச் சிலர் அதனை, `மெட்டு` என்பர். ``எழுந்தது`` என்றது, `காணப்பட்டது` என்றபடி காணப்பட்டமைக்குக், காரணம் குறிப்பாற் கொள்ளக்கிடந்தது. இப் பொன்னாவது, ஏழாம் தானத்தில் உள்ள சகஸ்ராரமே, அது குழவிப் பருவத்தில் மொட்டாயே இருக்கும். ஆகவே, ``மொட்டு`` என்றது சிலேடையாயிற்று. குழந்தை களின் வளர்ச்சி நம் கண்ணிற்குப் புலப்படுவதில்லையாகையால், `அதிசயமாக மலர்ந்தது` என்றார். செம்பு, நீர் முகக்கும் சிறு கலும். `சிறிய மொட்டாய் எழுந்தது, செம்பு அளவு பெரிதாய் விரிந்தது` என்றபடி. வட்டம் - வாசி, என்றது இலாபத்தை. இலாபம் - ஆன்ம லாபம். உச்சந் தலையில் சகஸ்ராரமாகிய பொன்னை மொட்டாக வைத்தவன் பிரம தேவன். அவன் தட்டா னிடத்தில் கொண்ட நம்பிக்கையாவது, `வினையை நுகர்தலாகிய தன் குறிக்கோளை நிறைவேற்றுவான்` என நம்பியது. ஆயினும் ஆன்மாத் தனது பக்குவ முதிர்ச்சியால் அதனை யோகக் காட்சிக்குப் பயன் படுத்திக் கொண்டதே, தட்டான் உண்மையை மறைத்துப் பொன்னைக் கவர்ந்து கொண்டதாகும்.
இதனால், முன் மந்திரத்தில் கூறிய, காற்றுப் பசுக்கைளக் கறந்துண்ணுதலாகிய பயன் இது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 12

அரிக்கின்ற நாற்றங்கால் அல்லற் கழனித்
திரிக்கின்ற ஓட்டம் சிக்கெனக் கட்டி
வரிக்கின்ற நல் ஆன் கறவையைப் பூட்டினேன்
விரிக்கின்ற வெள்ளரி வித்தும்வித் தாமே.

பொழிப்புரை :

நெற்கதிரை அரி அரியாகக் கொள்ளும்படி மிக விளையக்கூடிய நல்ல வயலைப் புல்லும், பூடுகளும் ஆகிய களையைத் தந்து துன்பம் விளைக்கின்ற கழனியாக மாற்றுகின்ற ஒழுக்கலை உறுதியாக அடைத்து, உழும்பொழுதே பாலைப் பொழிந்து கொண்டு போகின்ற வலிய பசுக்களைப் பூட்டி உழுதலா, படர்ந்து செல்கின்ற வெல்ளரி விதையும் செந்நெல் விதையாய்ச் சிறந்த பயனைத் தரும்.

குறிப்புரை :

அரித்தல் - அரி அரியாகச் சேர்த்தல். நாற்று உள்ள இடமே `நாற்றங்கால்` எனப்படுமாயினும், ``அரிக்கின்ற`` என்னும் அடைமொழியால் அது நாற்றுக்களை நட்ட வயலைக் குறித்தது. நெல் வயலில் நீர் நீர் எப்பொழுதும் நிரம்பி நின்றால்தான் நெற்பயிர் வளர்ந்து பயன் தரும். அத்தகைய நீர் தேங்கி நில்லாமல், உழுபவனும் காணாதபடி வரம்புகளுக்குள்ளே சிறு துளைகளால் வெளியேறி விடுவதுண்டு. அத்துளைகளை `மோழை` என்பர். நீர் தங்காது போய் விட்டால், பயிர் வளராது; களைகள் வளர்ந்து விடும். நீரை இங்கு ``ஓட்டம்`` என்றார். ``நாற்றங்கால்`` என்றும், ``கழனி`` என்றும் கூறப்பட்டது உடம்பு. `கழனியாக` என ஆக்கம் விரிக்க. நீர், உடல் வலிமை. உடல் வலிமையுடன் நலம் பெற்றிருந்தால்தான், கற்பன கற்றுக் கேட்டுச் சிந்தித்து அறிவு பெறுதல் இயலும். இல்லையேல் பிணி பல நலிய, மூப்பும் விரைவில் வரும். இயல்பான மூச்சுக்காற்று வெளிச் செல்லும்பொழுது பன்னிரண்டங் குலம் வெளியேறப் பின்பு எட்டங்குலமே உட்புகுகின்றது. இவ்வாற்றால் உடல் வலிமை கணந்தோறும் இழக்கப்படுகின்றது. அதனைத் தடுத்து நிறுத்தினால் உடல் வலிமை பெற்றுத் திகழும். அதனையே, ``சிக்கெனக் கட்டி`` என்றார். வரித்தல் - விரும்பிக் கொள்ளுதல். நன்மை, இங்கு உடல் நலத்தைக் குறித்தது. ``மேல் காற்றுப் பசுக்கள்`` என்றற்கு ஏற்ப. இங்கு ``ஆன் கறவை`` என்றார். விரித்தல் - படரும் கொடிகளைத் தருதல். வெள்ளரி வித்து, சுக்கிலம். உம்மை இழிவு சிறப்பு. அதனால், பின் வந்த விந்து நெல்வித்தாயிற்று. யோகிகட்கு விந்து சயம் வந்து பயன் தருதல் முன் மந்திரத்தில் சொல்லப்பட்டது.
இதனால், `மக்கள் வீணே மாய்ந்தொழியாது. யோகம் பயின்று பயன் பெறவேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

இடாக்கொண்டு தூவி எருகிட்டு வித்திக்
கிடாய்க்கொண்டு பூட்டிக் கிளறி முளையை
மிடாக் கொண்டு சோறட்டு மெள்ள விழுங்கார்
அடர்க்கொண்டு செந்நெல் அறுக்கின்ற வாறே.

பொழிப்புரை :

இங்கு, ``சோறு`` எனப்பட்டது வீடுபேறாதல் தெளிவாகலின், அதுபற்றி ஏனையவும் அதற்கு ஏற்பனவாக உய்த்துணர்ந்து கொள்ளப்படும்.

குறிப்புரை :

இடா - கூடை. இஃது எருவைக் கொண்டுபோய் நிலத்தில் இடுதற்குப் பயன்படும்; விதையை நிரப்பி எடுத்து விதைக்கவும் பயன்படும். எரு ஓரிடத்திலே சேர்ந்துவிடாமல் தூவுதல் வேண்டும். எனவே, `எருவை இடாக் கொண்டு தூவி இட்டு` என மாற்றிக் கொள்ளுதல் வேண்டும். எரு, ஞானத்தில் வேட்கை. இது, விதை, முளை, பயிர் எல்லா வற்றையும் செழிக்கச் செய்யும். விதை - ஞானம். முளை - அன்பு; பக்தி. ``வித்தினைத் தேடி முளையைக் கை விட்டவர்``3 என்றார் திருவுந்தியாரில். கிடாய் - ஆட்டுக் கிடாய். இஃது இளம் பயிரைக் கறித்துப் பாழாக்கிவிடும். `கடா` என்பது எருமைக் கடாவையும், `கிடாய்` என்பது ஆட்டுக்கிடாயையும் குறித்து வரும் பெயர்களாகும். கிடாயை உபலக்கணமாகக் கொண்டு வரும் பெயர்களாகும். கிடாயை உபலக்கணமாகக் கொண்டு பயிரை அழிக்க வரும் மற்றை விலங்கு முதலியவற்றையும் கொள்க. `சுற்றம்` என்னும் தொல்பசுக் குழாங்கள்l ``கொண்டு பூட்டி`` என்றது, `பிடித்து ஓரிடத்திலே நிற்கும்படி கட்டிவிட்டு` என்றபடி. முளையைக் கிளறுத லாவது தடையிற்றி முளைத்தற்கும், பின் நன்கு வளர்வதற்கும் ஆவன செய்தல். அவை முளை நீர் வடித்தலும், முளைநீர் பாய்ச்சுதலும் போல்வன. அவை இங்குக் குருலிங்க சங்கமங்களைச் சிவனெனவே கண்டு வழிபடுதலைக் குறித்தன. மிடா, இங்குச் சோறு சமைக்கும் பானை. சிவபோகத்தை ஏற்கின்ற ஆன்ம உணர்வைக் குறித்தது. ``மெள்ள`` என்றது `சுவைத்து` என்றதாம். விழுங்கார் - உண்ண மாட்டாதவர். `இவை மாட்டாதவர் செந்நெல்லை அறுப்பதாகக் கூறிக்கொள்ளுதல் எவ்வாறு பொருந்தும்` என்பதாம். அடர் - அடர்த்தல்; அறுத்தல். அஃது ஆகுபெயராய் அதற்குரிய கருவையைக் குறித்தது. அதன் உள்ளுறைப் பொருள் ஆன்மாவின் கிரியா சத்தி. ஈற்றில், `எங்ஙனம்` என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது.
இதனால், `ஞான வேட்கையும், அதன் வழியவாகிய ஞானம், பத்தி, பற்றறுதி என்பனவும் இல்லாதார் வீட்டு நெறியில் நிற்பதாகக் கூறிக்கொள்ளுதல் போலியே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

விளைந்து கிடந்தது மேலைக்கு வித்து
விளைந்து கிடந்தது மேலைக்குக் காதம்
விளைந்து விளைந்து விளைந்தகொள் வார்க்கு
விளைந்து கிடந்தது மேவுக் காதமே.

பொழிப்புரை :

உயிர்களாகிய உழவர்களுக்கு இம்மைக் காலம் முடிவதற்குள்ளே மறுமை தோன்றுதற்கு விதை விளைந்து கிடக்கின்றது. அஃது `ஆகாமியம்` என்னும் வினையாம். பிராரத்தத்தின் பயன் விளையும் பொழுது அதுபற்றி மகிழ்ச்சியோ, வருத்தமோ கொள்ளாது ஒட்டின்றிருப்போருக்கு ஆகாமியம் தோன்றாது. மகிழ்ச்சி வருத்தங்களால் அதில் அழுந்துகின்றவர்கட்கு அவை பற்றி நிகழும் முயற்சிகள் ஆகாமியமாய்த் தோன்றிச் சஞ்சிதமாய் நிலைபெறும்.) இம்மை முடிவெய்தப் பெற்ற உயிர் மறுமையில் செல்லும் இடம் இந்நிலம். சுவர்க்க லோகம், நரக லோகம் என்பன ஆதலாலும், அவற்றிடையே உள்ள தொலைவு வேறுபட்டன ஆதலாலும் `இந்த உயிர் இன்ன இடத்தில் செல்லும்` என்னும் வரையறையும் அஃது இங்குச் செய்த வினையால் வரையறுக்கப் படுதலை, ``மேலைக்குக் காதம் விளைந்து கிடந்தது`` என்றார். காதம் - வழியளவு. இப்படி, `முன் விளைந்ததிலிருந்து பின் விளைவு; பின்பு அதிலிருந்து பின் விளைவு என்று விளைவு இடைவிடாது தொடர்ந்து கொண்டே போவதால். அந்த வினையின் பயனைக் கொள்கின்ற உயிர்களுக்கு அவை மாறி மாறிச் செல்லும் மூன்று உலகங்களும் `இது` என்பது முன்னதாகவே வரையறுக்கப்படுகின்றன.

குறிப்புரை :

`ஆகையால் அலைவு நீங்கி, அமைதியுற வேண்டுவார் பின் விளைவு தோன்றாதபடி பார்த்துக் கொள்க` என்பது குறிப் பெச்சம். பின் விளைவு தோன்றாமைக்கு வழி மேற்குறிக்கப்பட்டது. அடுக்கு, இடைவிடாமை குறித்து நின்றது. முக் காதம் - மூன்று வழிகளின் அளவு. சொற் பொருட் பின்வரு நிலையண் வந்தது.
இதனால், `பிறவிக்கு வித்தாகிய ஆகாமியத்திற்குக் காரணமான விருப்பு வெறுப்புக்களை விடுதல் வேண்டும்` என்பது குறிப்பால் அறிவுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

களர்உழு வார்கள் கருத்தை அறியோம்
களர்உழு வார்கள் கருதலும் இல்லை
களர்உழு வார்கள் களரின் முளைத்த
வளர்இள வஞ்சியி மாய்தலும் ஆமே.

பொழிப்புரை :

வினை நிலம் இருக்கப் புல்லும் முளையாத களர் நிலத்தை உழுகின்றவர்கள் அதில் தப்பித் தவறி முளைத்த வஞ்சிக் கொடியின் பொலிவினைக் கண்டு, `அஃது உணவாகும்` என்று மயங்கிப் பின் அஃது அவ்வாறு ஆகாமையால். பட்டினியால் இறத்தலும் கூடுவதே. இவ்வாறு களர் நிலத்தை உழுகின்றவர்கள் `நாம் ஏன் இதனை உழுகின்றோம்` என்றும் எண்ணுவதில்லை. ஆகவே, அவர்களது குறிக்கோளாக நாம் ஒன்றையும் அறியவில்லை.

குறிப்புரை :

`அவர்களது செயலுக்கு அவர்களது முன்னை வினைதான் காரணம்` என்பது குறிப்பெச்சம். விளைநிலம், சிவநெறி; தவநெறி. களர் நிலம், உலகர் நெறி. அதில் தப்பித் தவறி முளைக்கும் வஞ்சிக் கொடியாவது மகளிர் இனம். ``குறிக்கோளிலாது கெட்டேன்``* என்றார் அப்பர் பெருமானும். இம்மந்திரத்தின் அடிகளை 3,4,2,1 என்னும் முறையிற் கூட்டிக் காண்க.
இதனால், `உலகர் வழிபட்டுக் குறிக்கோள் இலாது நாளைக் கழித்தல் பிழை` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

களர்உழு வார்கள் கருத்தை அறியோம்
களர்உழு வார்கள் கருதலும் இல்லை
களர்உழு வார்கள் களரின் முளைத்த
வளர்இள வஞ்சியி மாய்தலும் ஆமே.

பொழிப்புரை :

கூப்பிடு - கூப்பிடுதல்ஓ உரக்கக் கத்தி வெருட்டுதல். முதனிலைத் தொழிற்பெயர். அதனைச் சிறிதும் மதியாத குறுநரிகள் (குள்ள நரிகள்) ஐம்பொறிகள். அவைகட்கு இடமாய் உள்ள கொட்டகாரம் உடம்பு. யாப்பிடல், கட்டுதல். அஃது ``ஆப்பிடு`` என வந்தது. பாசம் - கயிறு. ``ஆப்பிடு பாசம்`` இறந்த கால வினைத் தொகை. கயிறு, வினை, அதில் உயிராகிய மகன் எப்படியோ அகப் பட்டுக் கொண்டான். அவன் அவ்விடத்திலேயே நெருப்பை உண்டாக்கி (சில புண்ணியங்களைச் செய்து) கயிற்றை எரித்துவிட்டுச் சிலநாள் உலாவியிருந்தான். அதை அறிந்து நன்றே அங்குப் புகுந்த மகள் ஒருத்தியின் துணை கிடைத்தமையால் (திரோதான சத்தி அருட்சத்தியாய்ப் பதிந்ததனால்) அந்தக் கொட்டகையை விட்டு வெளியேறி (உடம்பை விட்டு நீங்கி) நல்லதோர் இல்லத்தை (சிவத்தை) அடைந்து இன்பத்துடன் இருக்கின்றான்.

குறிப்புரை :

அவனைப்போல் மற்றவர்களும் ஏன் சிவ புண்ணியத்தைச் செய்து உய்த பெறுதல் கூடாது` என்பது குறிப் பெச்சம். `நலமாக` என ஆக்கம் வருவிக்க. `புகுந்த` என்னும் பெயரெச்சத்து அகரம் தொகுத்தலாயிற்று. தோன்றா எழுவாய் வருவிக்கப்பட்டது. பின்னிரண்டடிகள் இன எதுகை பெற்றன.
இதனால், `வினைத்தொகையை நீங்கிச் சத்திநிபாதம் வருவித்துச் சிவனை அடைவிப்பன சிவபுண்ணியங்கனே` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 17

மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக்
குலைமேல் இருந்த கொழுங்கிளி வீழ
உலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன்
முலைமேல் அமிர்தம் பொழியவைத் தானே.

பொழிப்புரை :

(மலைமேல் மழை பெய்தால், அங்கு வாழும் மான்கன்று வெப்பம் நீங்கிக் குளிர்ச்சியெய்தித் துள்ளத்தானே செய்யு?) யோகிகள் சுழுமுனா நாடியை `மேரு` என்பர் ஆகலான். இங்கு ``மலை`` என்றது அதனையே. மான் கன்று, அதில் உள்ள ஆதாரங்களைச் சார்ந்து நினைக்கும் அந்தக் கரணங்களை. துள்ளுதல், மகிழ்ச்சியெய்தல். கொல்லன் - கருமான்; இரும்புத் தொழில் செய்பவன். இங்கு ``கொல்லன்`` என்றது யோகியை. உலை, கொல்லன் உலை. என்றது மூலாதாரத்தை. அதில் அக்கினியிருத்தலால் ``உலை`` எனப்பட்டது. மூலாக்கினியை ஓங்கி எரியச் செய்தலின் யோகி ``கொல்லன்`` எனப் பட்டான். கொல்லனது உலைமேல் உறுப்பாவது இரும்பு. ``என`` என்றது உவம உருபு. ``அமிர்தம் பொழிய வைத்தான்`` என்றது. `அமிர்தத்தைப் பொழியும்படி செய்து விட்டான்`, அஃதாவது, உலைமேல் உறுப்பை வெதுப்புவதுபோல வெதுப்பிவிட்டான்` என்றதாம் ``முலைமேல் அமிர்தம்`` என்னும் குறிப்பால்` ``ஒருத்தியை`` என்னும் சொல்லெச்சம் வந்து இயைந்தது. ஒருத்தி, குண்டலினி சத்தி. `மூலாக்கினி வெதுப் பிய தால், குண்டலினி சத்தி விழித்தெழுந்து, தனது அமிர்தத்தைப் பொழிவா ளாயினாள்` என்றபடி. `தனது முலைமேல் அமிர்தத்தை` என்க. ``மேல்`` என்றது, `ததும்பி வழிகின்ற` என்னும் குறிப்பினது. ``குலைமேல் இருந்த கொழுங்கனி`` அருட் சத்தி. வீழ்தல், நிபாதமாதல். அந்தக் கனி சுவை மிகுதற்குக் குண்டலி சத்தியின் அமுதமும் வேண்டப்பட்டது.

குறிப்புரை :

இதனால், சிவயோகத்தால் தியான சமாதிகள் கைகூட, சத்தி நிபாதம் வந்து, அது முதிர்ச்சியடைதல் உள்ளுறையாகக் கூறப்பட்டது.


பண் :

பாடல் எண் : 18

பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரு மின்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ப் பொழியுமே.

பொழிப்புரை :

பார்ப்பான், கடவுளைத்திரு உருவிலாயினும், தீயிலாயினும் வைத்து வழிபடுவன், அவனுக்குப் பாற்பசுக்கள் இன்றி யமையாதன. அத்தகைய பசுக்கள் ஐந்து உள்ளன. ஆயினும் பார்ப்பான் பசுமேய்க்க மாட்டான். மேய்ப்பவர் வேண்டும். அவர் யாரும் அவனுக்குக் கிடைக்கவில்லை. அதனால் அவன் அவிழ்த்து ஓட்டிய அப் பசுக்கள் தம் மனம்போன போக்கிலே போய்க் கொட்டிலுக்கு வாராமலே உள்ளன. மேய்ப்பவர் கிடைத்தால், அவை வழிப்பட்டு வந்து வேண்டிய அளவு பாலைக் கொடுக்கும். (மேய்ப்பவர் கிடைக்கவில்லையே!)

குறிப்புரை :

பார்ப்பான், ஆன்மா. அகம், உடம்பு, பாற் பசு ஐந்து, இறைவனைக் கண்டும், அவன் புகழைக் கேட்டும், அவன் புகழ் பாடுதலிலே சுவைகண்டும், அவன் வழிபாட்டில் மணம் கண்டும் கைகளால் அவனுக்குரிய பொருள்களைத் தீண்டியும் உவகையடைந்து ஆன்மாவுக்கு உதவக் கூடிய `கண், காது, நா, மூக்கு, மெய்` என்னும் ஐம்பொறிகள். மேய்ப்பர், குருவின் அறிவுரைகள். அவை அப் பொறிகளை அதற்கு உதவும் வகையில் நடத்தும். அவ்வுரைகள் இல்லாமையால் ஆன்மா ஐம்பொறிகளால் வரும் பயனை அடைய இயலாமல் அலமருகின்றது` என்பதாம்.
பாற்பசு - கறவைப் பசு. ``உண்டாய், அடங்கினால்`` என்றமையால், `உண்டாயின் அடங்கும்` என்பது பெறப்பட்டது. ``பாலாய்`` என்பதில் உள்ள ஆக்கம் மிகுதி குறித்தது. `சோறு கல்லும், மண்ணுமாய் உள்ளது` என்பதிற்போல.
இதனால், குரு உபதேசம் பெறாதார், நன்னெறியை அடைய மாட்டாது அல்லல் உறுவர்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 19

ஆமாக்கள் ஐந்தும் அரிஒன்றும் முப்பதும்
தேமா இரண்டொடு தீப்புலி ஒன்பதும்
தாமாக் குரம்கொளின் தம்மனத் துள்ளன
மூவாக் கடாவிடின் மூட்டுகின் றாரே.

பொழிப்புரை :

ஒரு காட்டிலே ஐந்து காட்டுப் பசுக்கள். முப்பத் தொரு சிங்கங்கள், தெய்வத் தன்மை வாய்ந்த இரண்டு குதிரைகள், ஒன்பது கொடிய புலிகள், காட்டெருமைக் கடாக்கள் வாழ்கின்றன. அங்குச் செல்வோர் அவைகளில் இரண்டு குதிரைகளை மட்டும் தம் வசப்படுத்தி, அவற்றின்மேல் தக்கபடி ஏறிச் செல்வாராயின், மேற் கூறிய கொடுவிலங்குகள் யாவும் அவர் விருப்பப்படி அடங்கி நடக்கும். மாறாக, குதிரைமேல் ஏறாது, கட்டுடல் வாய்ந்த அந்தக் கடாக்களின் மேல் ஏறுவாராயின், மேற்சொல்லிய கொடுவிலங்கு களையும் வெறியேற்றித் தாமே தமக்குத் துன்பத்தை வருவித்துக் கொள்பவராவார்.

குறிப்புரை :

ஆமா - காட்டுப் பசு. அவை ஐந்தாவன சிவ தத்துவங்கள். `காட்டுப் பசு, மக்களுக்கு இதம் செய்வது போல, நாவால் நக்கி நக்கியே கொன்றுவிடும்` என்பர். சிவ தத்துவங்கள் வித்தியா தத்துவங்களைச் செலுத்தி, உலக இன்பத்தில் அழுத்திப் பிறப்பை உண்டாக்குதல் பற்றி அவைகள் காட்டுப் பசுக்களாகச் சொல்லப்பட்டன. பக்குவம் வாயாத ஆன்மாக்களுக்கு இறைவனது சத்தி திரோதான சத்தியாய்ப் பிறவித் துன்பத்தை பயத்தலால், அந்தச் சத்தியின் வேறுபாட்டால் உண்டாகிய சிவ தத்துவங்களே அவ்வாறு உருவகித்தார். ஆன்மாப் பக்குவம் எய்தியவுடன் திரோதான சத்தி அருட் சத்தியாக மாறினால் சிவதத்துவங்கள் மட்டுமல்ல; எல்லாத் தத்துவங்களுமே நல்லனவாக மாறிவிடும். அதுவரையில் அவை யாவும் பிறவித் துன்பத்தையே தரும். அரி - சிங்கம். முப்பத்தொரு சிங்கங்களாவன. சிவ தத்துவம் ஐந்து தவிர, மற்றைய தத்துவங்கள். புலியை நோக்கச் சிங்கங்கள் அத்துணைக் கொடியன அல்ல. ஏனெனில் `சிங்கம் பசித்து, உணவை நாடும்பொழுது தான் பிற விலங்குகளைக் கொல்லும்` என்றும், `மற்றை வேளைகளில் எதனையும் கொல்லாது` என்றும் கூறுவர். அம்முறையில் வீடுபேற்றினை நோக்கத் தத்துவங்கள் தடையாயினும், உலகியலை நோக்க, வை உறுதுணைகளேயாம். அது பற்றி அவற்றை `அரிகள்` என்றார். தே - தெய்வத்தன்மை. மா - குதிரை. இப்பல பொருள் ஒருசொல், விலங்குகளின் இடை வைத்து எண்ணப்பட்டதனால், குறித்த பொருளை உணர்த்திற்று. இரண்டு குதிரைகளாவன இடநாடி, வலநாடி மூச்சுக்கள். ஒன்பது புலிகளாவன தூல உடம்பில் உள்ள நவத் துவாரங்கள். இவை எஞ்ஞான்றும் தம் செயலைச் செய்யத் தவறுவதில்லை. அதனால் அடக்கப் படாமை பற்றி அவைகளை, ``தீப் புலி`` என்றார்.
``எண்ணென்றா, உறழ் என்றா ஆயிரண்டும் இனன் ஒன்றல் வேண்டும்`` என்ப.3 ஆகலின், `ஆமாக்கள், தாமாக்கள், கடாக்கள்` என்பவற்றோடு, திப்பிலியை உடன்வைத்துக் கூறுதல் பொருந்தா மையின், `திப்பிலி` எனப்பாடம் ஓதுதலும் ``தேமா`` என்பதற்கு `மா மரம்` எனப் பொருள் உரைத்தலும் பொருந்தாமையறிக. ``அறியேறு முப்பதும்`` எனப்பாடம் ஓதி, `முப்பது, என்பதற்கு, `மூன்றும், பத்தும்` எனப் பொருளுரைத்து, சிலவற்றை இடர்ப்பட்டுக் கொணர்ந்து, `பதின் மூன்று` எனக் காட்டுதலும் வேண்டாதனவேயாதல் அறிந்துகொள்க.
தாமா - தாவுகின்ற குதிரை. ``தாவுகின்ற`` அடையானே, `மா` என்பது பாய்மா ஆயிற்று. குரம் - குதிரையின் குளம்பு. இதனை ஊன்றி நடத்தல் பற்றியே குதிரையை வடமொழியாளர் `குரகதம்` என்றனர். ``குரங்கொளின்`` என்பது, ``நடக்குமாயின்`` என்பதைக் குறிக்கும் குறிப்பு மொழியாய்ப் பின்னும் ஏறிச் செலுத்துதலைக் குறித்தது. ``தம்மனத்து உள்ளன்`` என்பதற்கு, `தங்கள் மனத்தின்படி உள்ளன வாம்` என்க. ஆமா முதலியவற்றைக் கூறினமையால் `காடு` என்பது போந்தமையின், குதிரையை ஏறுவாரும், ``தம்மனம்`` என்பது அவர்மனமும் ஆதல் விளங்கிற்று. மூவாமை, தன் எதிர் மறையாகிய இளமையைக் குறித்தது. `முட்டுகின்றாரே ஆவர்` என ஒரு சொல் வருவித்து முடிக்க. குதிரையை ஏறிச் செலுத்துதலாவது, வாசியோகம் செய்தலாம். யோகம் வல்லார்க்கு மூச்சுக் காற்று அவர் வழிப்படுதலின், அந்நிலையில் அதனைக் குதிரையாகவும், ஏனையோர்க்கு அதுதான் சென்ற வழியே செல்லுதலின் அந்நிலையில் அதனைக் கடாகவும் உருவகித்தார். ஒரு பொருளே நிலை வேறுபாடு பற்றிப் பல பொருளோடு உவமிக்கப் படுதலை, ``நட்டார்க்கு அமிழ்தொத்து, நள்ளார்க்கு நஞ்சொக்கும் இவன்`` என்னும் வழக்கத்தாலும்,
``கார்; அணி கற்பகம்; கற்றவர் நற்றுணை;
பாணர் ஒக்கல்;
சீரணி சிந்தா மணி; அணி தில்லைச்சிற்
றம்பலவன்
தாரணி கொன்றையன்; தக்கோர்தம் சங்கநிதி;
விதி; சேர்
ஊருணி உற்றவர்க்கு; ஊரன், மற்றியாவர்க்கும்
ஊதியமே``l
என்னும் செய்யுளாலும் அறியலாம்.
இதனால், யோகம் பயில்வார்க்கு அவரது கருவி கரணங்கள் அவர் வழிப்பட்டனவாய் வீடு பயத்தலும், அது பயிலாதார்க்கு அவை தம்மியல்பிற் சென்று அதனைப் பயவாமையும் உள்ளுறையாகக் கூறப் பட்டன. முன் தந்திரத்தில் ஐம்பொறிகளை மட்டும் கூறினார்; இம் மந்திரத்தில் அனைத்துக் கருவிகளையும் கூறினார். ஈற்றடி உயிரெதுகை.

பண் :

பாடல் எண் : 20

எழுதாத புத்தகத்(து) ஏட்டின் பொருளைத்
தெருளாத கன்னி தெளிந்திருந் தோத
மலராத பூவின் மணத்தின் மதுவைப்
பிறவாத வண்டு மணம்உண்ட வாறே.

பொழிப்புரை :

எழுத்துக்கள் எழுதப்படாத ஏடு ஒன்று உள்ளது; அதை, `புத்தகம்` என்கின்றனர். அந்தப் புத்தக்கத்தைப் பார்க்காமலே ஒரு பெண் அதில் உள்ள பொருளைத் தானே உணர்ந்து, பிறருக்கும் உணர்த்துகின்றாள். (இது நிற்க. மற்றொரு செய்தி.) மலராத மலர் ஒன்று உள்ளது; அதில் தேனை, பிறவாத வண்டு ஒன்று அதன் மணத்தின் வழியாக அறிந்து சென்று உண்கின்றது. (இவைகளை யெல்லாம் `நம்ப முடியாது` என்றாலும், உண்மையான அதிசய நிகழ்ச்சிகளாய் உள்ளன.)

குறிப்புரை :

எழுதாத ஏடு, இறைவனது ஞான சத்தி. எல்லாப் பொருள்களும் முதலில் அதன்கண் இயல்பாகத் தோன்றுகின்றன. கன்னி, அவனது கிரியா சத்தி அது ஞான சத்தியின் வேறன்மையால், ஞான சத்தியில் தோன்றியவற்றை அப்படியே உயிர்களை அறிவித்தும், செய்வித்தும் நடாத்துகின்றது. இது முதற்கண் கூறப்பட்ட பொருள்.
இனி, மலராத பூ, அரும்பாய்த் தோன்றிப் போதாய் முதிர்ந்து மலராத, அதனால், பின்பு வாடாத பூ, சிவம் என்றும் ஒருபடித்தான இன்பமாய் உள்ளது. பிறக்கும் பொழுது புழுவாய்ப் பிறந்து பின்பு வண்டாக மாறுகின்ற வண்டுகள் போலாது, பிறக்கும்பொழுதே வண்டாய்ப் பிறந்த வண்டு, முற்பிறவிகளிற்றானே ``புறச்சமய நெறி நின்றும், அகச்சமயம் புக்கும், புகல் மிருதி வழி உழன்றும் ... ...``3 வருதலாகிய படிகளையெல்லாம் கடந்து, பிறக்கும்பொழுதே சித்தாந்த சைவ மரபில் பிறந்த ஆன்மா. மணம், அருள்ஒளி. தேன், சிவானந்தம். ``சித்தாந்தத்தே சிவன் தன் திருக்கடைக்கண் சேரத்திச் - செனனம் ஒன்றிலே சீவன் முத்தராக வைத்து ஆண்டு, மலம் கழுவி, ஞானவாரி மடுத்து ஆனந்தம் பொழிவன்`* ஆதலின் பிறக்கும்பொழுதே சித்தாந்த சைவ மரபிற் பிறந்த ஆன்மாவை, ``பிறவாத வண்டு`` என்றார்.
``ஓத`` என்னும் செயவெனெச்சம் நிகழ் காலத்ததாய் நிற்க, `உண்டவாறு வியப்பு` எனச் சொல்லெச்சத்தோடு முடிந்தமையால் `இரண்டும் வியப்பு` என்றதாயிற்று. `மணத்தால் உண்ட` என ஆல் உருபு விரிக்க. ஈரடி உயிரெதுகை வந்தது.
இதனால், உயிர்கட்கு ஞானம் நிகழுமாறும், பிறக்கும் பொழுதே ஞானத்திற்கு உரியவராய்ப் பிறந்தோரது சிறப்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 21

போகின்ற பொய்யும் புகுகின்ற பொய்வித்தும்
கூகின்ற நாவலின் தருங்கனி
ஆகின்ற பைங்கூழ் அவையுண்ணும் ஐவரும்
வேகின்ற கூரை விருத்திபெற் றாரே.

பொழிப்புரை :

பறவைகள் தங்கிக் கூவுகின்ற நாவல் மரத்தி னின்றும் உணவாய் அமைகின்ற கனிகள் சில பயன்படாத இடத்தில் உதிர்வனவாயும், சில, மரத்திற்கு அடியில் உதிர்ந்தும் புதர் முதலிய வற்றால் பயன்படாதனவாயும் போய்விட, அந்த நாவல் மரத்தை உள்ளடக்கியுள்ள குடிலில் வாழ்கின்ற ஐவர், வேறிடத்தில் வளர்ந்த பயிர் தருகின்ற நெல்லை உண்டு வாழ்கின்றனர். அந்தக் குடிலோ சில நாட்களில் வெந்தொழிவதாய் உள்ளது.

குறிப்புரை :

நாவல் மரம், சுவாச கோசம். அதினின்றும் உணவாகக் கிடைக்கும் கனி உடலை நிலைபெறுத்துகின்ற சுவாசம். போகின்ற கனி, வெளிச்செல்லும் காற்று. புகுகின்ற கனி, உள்ளே வரும் காற்று. புகுகின்ற காற்றை வெளிவிடாது தடுத்தால் பயன் விளைதல் பற்றி அதனை ``வித்து`` என்றார். `எனினும், அதனைத் தடுப்பார் இன்மையால் வெளிச்சென்றே வீணாகின்றது` என்றற்கு இரண்டையும் ``பொய்`` என்றே கூறினார். பறவைகள் சுவாச கோசத்தில் உள்ள நரம்பு முதலியன. `கூவுகின்ற` என்பது குறைந்து நின்றது. ஆகின்ற - வளர்கின்ற. பைங்கூழ் - பயிர், அது கருவியாகு பெயராய், அதன் விளைவைக் குறித்தது. பயிராவது, முற்பிறவியில் ஆக்கிய வினை. அதன் விளைவாவது, பிராரத்த விளைவு. அதனை உண்ணும் ஐவர், ஐம்பொறிகள். உண்பது உயிரேயாயினும் அது தன்னை `வேறு` என உணராது அவையாய் நின்று உண்ணுதலின் அவற்றையே உண்போராகக் கூறினார். உயிர் தன்னை, `அவற்றின் வேறு` என உணர்ந்து நீங்கியிருப்பின், பிராரத்த விளைவு உணவாகாது` என்பது கருத்து. விரைவு பற்றி, ``வேகின்ற`` என, எதிர்காலம் நிகழ்கால மாயிற்று. கூரை - குடில். வேவதாய குடிலாவது. தூல உடம்பு. `கூரையில்` என ஏழாவது விரிக்க. விருத்தி - பிழைப்பு.
``நாவலின்`` என்னும் `இன்`, நீக்கப் பொருளில் வந்த ஐந்தனுருபு. கூழ் - உணவு. கனியே உணவாயினும் உணவாம் தன்மையை நோக்கி அதனை வேறு போல வைத்து, ``கூழைத் தரும் கனி`` என்றார். சுவாசத்தை நாவற் கனியாகக் கூறியது, அக்கனி பெரும் பாலும் சாலையோரங்களில் நிற்கும் மரங்களினின்று சாலை நடுவில் உதிர்ந்து கிடப்பினும் வாழை, மா, பலா இவற்றின் கனிகளைப்போல மக்கள் ஆர்வமுடன் கொள்ளாமை பற்றி. `சுவாசமும் இயற்கையாய் அமைந்து, அருமையறியப்படாததாய் உள்ளது` என்பதாம். இரண்டாம் அடியை முதலிற் கூட்டி, முதல் அடியின் ஈற்றில் `ஆக` என்பது வருவிக்க.
``பைங்கூழ்`` எனப்பட்ட பிராரத்த விளைவையே, ``போகின்ற பொய்`` என்பதற்கும் பொருளாக வைத்து, ``புகுகின்ற வித்தாவது ஆகாமியம்`` என்றவர், அதற்கு இயைபு காட்டிற்றிலர்.
இதனால், `சுவாசத்தை யோக நெறியில் பயன்படுத்திக் கொள்ளாதவர், பிராரத்தை அனுபவித்து மறைகின்றவரே யாவர்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

மூங்கில் முளையில் எழுந்ததோர் வேம்புண்டு
வேம்பினைச் சார்ந்து கிடந்த பனையில்ஓர்
பாம்புண்டு பாம்பைத் துரத்தித்தின் பாரின்றி
வேம்பு கிடந்து வெடிக்கின்ற வாறே.

பொழிப்புரை :

முளை, நிலத்தளவில் நிற்பதாகலின், அது அடி நிலத்தில் உள்ள மூலாதாரத்தைக் குறித்தது. சுவாசம் எழுதற்கு வழியை உடைத்தாய் இருத்தலின் அம்முளை உள்துளையை உடைய ``மூங்கில்`` எனப்பட்டது. வேம்பு, நல்லதொரு மருந்து ஆதலின், காய சித்தியைத் தருவதாகிய சுவாசமே ``வேம்பு`` எனப்பட்டது. அந்த வேம்பு மேற்கூறிய மூங்கில் முளையினின்றும் எழுவதாதலை அறிக. பனை, சுழுமுனா நாடி. அதனையே சுவாசம் சார்ந்திருப்பினும், ஒற்றுமைபற்றிச் சுழுமுனை சுவாசத்தைச் சார்ந்திருப்பதாக வைத்து, ``வேம்பினைச் சார்ந்து கிடந்த பனை`` என்றார். கிடந்த பனை என்ற அனுவாதத்தால், `வேம்பினைச் சார்ந்து பனை கிடந்தது` என்பதும் பெறப்பட்டது. குண்டலி சத்தி சுழுமுனையைப் பற்றியிருப்பது ஆகலின் அதனை, ``வேம்பினைச் சார்ந்து கிடந்த பனையில் ஓர் பாம்புண்டு`` என்றார். அந்த பாம்பு நன்கு துயின்று கொண் டிருப்பதால், அதனோடு பனையைப் பற்றியிருக்கின்ற வேம்பினைத் தின்றல் கூடாததாய் உள்ளது. அந்தப் பாம்பினை எழுப்பி விலகச் செய்தால் வேம்பினைத் தின்ன முடியும். அதனைச் செய்ய வல்லவர் இல்லை. அதனால் வேம்பு வீணே வற்றி வெடித்துப் போகின்றது.

குறிப்புரை :

`குண்டலி சத்தி துயில்வதால், நல்லுணர்வு உண்டாகவில்லை. ஆகவே, அதனை எழுப்பினால், நல்லுணர்வு உண்டாகும்; யோகம் பயில முடியும். அவ்வாறு செய்வார் இல்லாமையால், சுவாசம் வீணாய் அழிகின்றது` என்பதாம். துரத்துதல், இங்கு எழுப்பி இயங்கச் செய்தலைக் குறித்தது. `வெடிக்கின்றவாறு இரங்கத்தக்கது` எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க.
இதனால் யோகத்தைப் பற்றாத உலகர் நிலைக்கு இரங்குதல் உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

பத்துப் பரும்புலி யானை பதினைந்து
வித்தகர் ஐவர் வினோதகர் ஈரெண்மர்
அத்தகு மூவர் அறுவர் மருத்துவர்
அத்தலை ஐவர் அமர்ந்துநின் றாரே.

பொழிப்புரை :

(சித்தாந்தத்தில், `கருவிகள் தொண்ணூற்றாறு` என்பவற்றில் `தத்துவம் முப்பத்தாறு, தாத்துவிகம் அறுபது` எனச் சொல்லப்படுகின்றன. படைப்புக் காலந்தொட்டு, அழிப்புக் காலம் வரையில் நிலைத்து நிற்கும் கருவிகள் தத்துவம். அவற்றின் காரியங்களாய், இடையே தோன்றியழிவன தாத்துவிகம். ஆகவே, தாத்துவிகங்கள் யாவும் தூல உடம்பில் உள்ளனவாம். அது பற்றி அத்தாத்துவிகங்களை மட்டுமே இம் மந்திரத்தில் குறிக்கின்றார்.)

குறிப்புரை :

புலி, பாயும் தன்மை உடையது ஆகலின், `பிராணன், உதானன், அபானன், சமானன், வியானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்சயன்` எனப் பெயர்பெற்று இயங்கும் வாயுக்கள் பத்தினையும் ``பத்துப் பரும்புலி`` என்றார். பருமை புலியின் உடலின் கண்ணது, இவை பத்தும், `வாயு` என்னும் ஒரு பூதத்தின் கூறுகளே.
யானை பதினைந்தாவன, பிருதிவி, அப்பு, தேயு, என்னும் மூன்று பூதங்களின் மூவைந்து பதினைந்து கூறுகளாகிய தாத்து விகங்கள். அவற்றுள்,
பிருதிவியின் கூறுகள்:
மயிர், தோல், நரம்பு, எலும்பு, தசை.
அப்புவின் கூறுகள்:
இரத்தம், வெயர்வை, சிறுநீர், நிணம், சுக்கிலம்.
தேயுவின் கூறுகள்:
பசி, தாகம், உடல் வெப்பம், சோம்பல், பித்து. இவைகளைத் தூல உடம்புடைய யானைகள்` என்றார்.
வித்தகர் - திறமையாளர். `ஓசை ஊறு, ஒளி, சுவை, நாற்றம்` என்னும் புலன்கள் ஐந்தும் எல்லோரையும் தம்பால் ஈர்த்து நிற்றலின் இவைகளை ``வித்தகர்`` என்றார். இவ்வைந்தும் முறையே ஆகாயம் முதலிய ஐந்து பூதங்கட்கும் சிறப்புக் குணமும் ஆகும்.
வினோதகர் - பொழுது போக்கிற்கு வேடிக்கை செய்வோர். `இடை கலை, பிங்கலை, சுழுமுனை, அத்தி, அலம் புடை, காந்தாரி, குகு, சிகுவை, புருடன்` என்னும் நாடிகள் பத்தும் உடம்பை வாழச் செய்வதலாம், `காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம்` என்னும் குற்றம் ஆறும் உடலில் வாழும் உயிர் தன் வாழ்நாளைக் கழித்தற்கு ஏதுவாய் நிற்றலாலும் இவைகளை `வினோதகர்` என்றார்.
நாடிகள் பத்தும் `ஆகாயம்` என்னும் ஒரு பூதத்தின் கூறுகளே.
`மூவரோடு அறவர்` என உருபு விரித்து, `ஒன்பதின்மர்` என உரைக்க. இவ்வொன்பதின்மர் ஆவார். தூல உடம்பில் உள்ள நவத் துவாரங்கள், இவைகள் `ஒன்பது வாயில்கள்` என்றும் சொல்லப்படும். கண் இரண்டு, காது இரண்டு. மூக்கு இரண்டு, வாய், எருவாய், கருவாய் இவை ஒவ்வொன்று. இவைகளில் இறுதி மூன்றும் உடல் நிலைப்பிற்கு இன்றியமையாதனவாய் இருத்தலின் இவைகளை ``மூவரோடு`` என வேறு பிரித்து ஓதினார் இவ்வொன்பதும் உடல் நிலைப்பிற்குக் காரணம் ஆதல் பற்றி உடல் நலத்தைச் செய்கின்ற மருத்துவர்களாகக் கூறினார்.
ஈற்றில் உள்ள ``ஐவர்`` என்பதற்கு, `மற்றும் ஓர் ஐவர்` என உரைக்க. `வசனம், கமனம், தானம், விசர்க்கம், ஆனந்தம், என்னும் கன்மேந்திரிய விடயங்கள் ஐந்தையே `மற்றும் ஓர் ஐவர்` என்றார். இவைகளும் ஆகாயம் முதலிய பூதங்களில் ஒவ்வொன்றின் சிறப்புக் குணமாகும்.
ஆகத் தாத்துவிகம் அறுபதினையும் கூறியவாறு காண்க.
ஈற்றில் உள்ள ``ஐவர்`` என்பதை, ``அத்தலை`` என்பதற்கு முன்னே கூட்டி, `ஆகிய இவர்கள் அத்தலை அமர்ந்து நின்றார்` என முடிக்க. திணை விராய் எண்ணிய வழிச் சிறுபான்மை அஃறிணையால் முடியாது, உயர்திணையால் முடிதல், ``பலவயினானும்``* என்ற இலே -சினாற் பெறப்படும். தலை - இடம். சூனிய சம்பாடணையாதல் பற்றி, `அத்தலை` என மறை பொருளாகக் கூறினார். அது தூல தேகமே என்க.
இதனால், `தத்துவ ஆராய்ச்சி செய்வோர் தூல தேகத்தின் இயல்பினை இவ்வாறு ஊன்றி உணர்தல் வேண்டும்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

இரண்டு கடாக்களுண் டிவ்வூரி னுள்ளே
இரண்டு கடாக்கட் கொருவன் தொழும்பன்
இரண்டு கடாவும் இருத்திப் பிடிக்கின்
இரண்டு கடாவும் ஒருகடா ஆமே.

பொழிப்புரை :

(மேல், ``ஆமாக்கள் ஐந்து`` என்னும் மந்திரத்தில்,* `பிராண வாயுத் தன்னை அடக்குவார்க்குக் குதிரையாயும், அல்லாதார்க்குக் கடாவாயும் நிற்கும்` எனக் கூறியதனை இங்கு வேறோராற்றான் வலியுறுத்துகின்றார்.
இரண்டு கடாக்கள், இடநாடி வலநாடிகள் வழியாக இயங்குல் பிராணன். அஃது ஒன்றேயாயினும் இயக்க வகையால் இரண்டாகின்றது. இவ்வூர், இந்தத் தூல தேகம். தொழும்பன் - அடியான். ஆண்டான் சொற்படி அக்கடாக்களை மேய்ப்பவன். அஃது அகங்கார தத்துவம். ஆன்மாவாகிய ஆண்டான் அந்தக் கடாக்களை அந்த அடிமையினிடம் விடாமல் தானே தன்னிடத்தில் கெட்டியாகப் பிடித்து வைப்பானேயானால், அந்த இரண்டு கடாக்களும் ஒரு கடாவாய் விடும். அஃதாவது, `இடை நாடி பிங்கலை நாடி வழியாக இயங்காமல், சுழுமுனை நாடியில் நின்றுவிடும்` என்பதாம்.

குறிப்புரை :

இடை நாடியால் பெரியோர் ஆதலின், ஒன்றே தொழும்பன்` என்பது பாடமன்று.
`ஊர் பெரிது; அதற்கு உழைக்க இரண்டு கடாக்களே இருத்தல் அதிசயம். பின்னும் அவை இரண்டும் ஒன்றாகி விடுதல் அதிசயத்தினும் அதிசயம்` என்றவாறு.

பண் :

பாடல் எண் : 25

ஒத்த மணற்கொல்லை யுள்ளே சமன்கூட்டிப்
பத்தி வலையில் பருத்தி நிறுத்தலால்
முத்தம் கவறாக மூவர்கள் ஊரினுள்
நித்தம் பொருது நிரம்பிநின் றார்களே.

பொழிப்புரை :

பயிரிடுதற்கு ஏற்புடைய ஒரு கொல்லையை, அதனுட்கிடக்கும் மேடு பள்ளங்களைச் சமன் செய்து, வரம்பு கோலி, வரிசை வரிசையாக வேலியைக்கட்டிப் பருத்தியை நான் பயிரிட் -டதனால், எங்கள் ஊரில் உள்ளவர்களில் மூவர் யான் கொண்டிருந்த உள்ள நட்பையே சூதாடு கருவியாகக் கொண்டு இடைவிடாது என்னுடன் சூத பொருது, இப்பொழுது அதை விட்டுவிட்டார்கள்.

குறிப்புரை :

`உழைத்துப் பொருள் தேட விரும்பாதவரே சூதாடு களத்தில் சென்று சேர்வார்கள். நான் பயிர் செய்ய முனைந்து விட்டமையால், அங்கு செல்லவில்லை. அவர்களும் என்னை அங்கு அழைக்கவில்லை` என்பதாம். ஒத்தல், கொல்லைக்கு ஆகுங்கால், பயிருக்கு ஏற்புடைய தன்மையும், மனத்திற்கு ஆகுங்கால் தவத்திற்கு இயையும் பான்மையையும் குறிக்கும். ``மணல்`` என்பதை `மண்+நல்` எனப் பிரித்து, `மண்` என்றதன் உள்ளுறை `மனத்தின் இயல்பு` என்பதாக் கொள்க. கொல்லை, மனம். மேடு - பள்ளம், வெறுப்பு, விருப்பு. `பத்தி - வரிை\\\\u2970?` என்பது வெளிப்பொருள். ``வலை`` என்பதற்கு `வேலி` என வெளிப்பொருள் கொள்ளாவிடில் மறை பொருட் கூற்றாகாது. `பருத்தி` என்பதை உள்ளுறைப் பொருட்டு, `தீ` என்பது குறுகி நின்றதாகக் கொண்டு பெரிய தீ, மூலாக்கினி` என உரைக்க. நிறுத்தல், நிலைப்படுத்துதல். ``முத்தம்`` என்பது முத்தங் கொடுத்தல் போன்ற மிக நெருங்கிய நட்பைக் குறிப்பதாய், வேற்றுமை யின்றி ஒன்றி இயைபை உணர்த்திற்று. மூவர், முக்குணம். நிரம்புதல் - தம் அளவில் தாம் நிற்றல்.
இதனால், `வேண்டுதல், வேண்டாமையை விட்டு, சிவ பத்தியுடன் சிவயோகம் செய்தால், முக்குண விகாரங்கள் நீங்கும்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும்
நாகையும் பூழும் நடுவில் உறைவன
நாகையைக் கூகை நணுக லுறுதலும்
கூகையைக் கண்டெலி கூப்பிடு மாறே.

பொழிப்புரை :

கருடனைப் போலக் கூகையும் பாம்பைக் கண்டவுடன் கொல்லும். அதனால் கூகையும், பாம்பும் தம்முட் பகையாவன. கிளியும் பூனையும் தம்முட் பகையினவாதல் தெளிவு. நாகை - நாகணவாய்ப் புள். இதுவும் கிளியைப்போலப் பேசும் தன்மையுடையது; குறும்பூழ் (காடை) அத்தன்மையைப் பெறாமையால் அவையும் ஒன்றுவன அல்ல. இவை அனைத்தும் வாழ்கின்ற ஒரு காட்டில் எலிகளும் வாழ்கின்றன. ``கிள்ளை பாடுவ; கேட்பன பூவைகள்``3 என்றதனால், `பேசும் தன்மையோடு, கேட்கும் தன்மையுடையது நாகணவாய்ப்புள்` என்பது விளங்கும்.

குறிப்புரை :

கூகை, மற்றைப் பறவைகள் போல வெளியே விருப்பப்படி பறந்து காணப்படாது. இருக்கும் இடம் தெரியாமல் ஒளிந்து கிடக்கும். பாம்பு மிகக் கொடியது. கிளி யாவராலும் மிக விரும்பப்படுவது. பூனை வெளிக்கு நல்லதுபோல இருந்து பாயும் நாகணவாய்ப்புள், கிளியோடு ஓரளவு சமமாக மதிக்கப்படுவது. குறும்பூழ், ஒன்றிலும் சேராதது. `சிறு துரும்பும் பல்லுக்குதவும்` என்பதுபோல, ஓரோர் காலத்தில் சகுனத்தை அது தரும். இவற்றின் நடுவில் உறைவன எலிகள். `இவற்றின்` என்பது எஞ்சி நின்றது.
இவைகளைப் போல, உலகத்தில் பல திறப்பட்ட மக்கள் வாழும் நிலையில், அவர்களுக்குள்ளேயும் ஒற்றுமையின்றி இகலி வாழ்கின்றார்கள். இங்குக் குறஇக்கப்படும் இகல், சமயப் பூசல்.
எலி, ஓர் எளிய பிராணி. மக்களுக்கு அதுவும் பகைதான். ஆயினும் இங்கு மக்களை நாம் கருத வேண்டியதில்லை. மேற்கூறிய, அனைத்தும் சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ எலிக்குப் பகையாவனதாம். அது போல, எத்திற மக்களும் ஏழைக்கு உதவுபவர் அல்லர். மாறாக, நலிவும் செய்வர்.
தத்துவத் துறையில் ஏழையராவார். சற்குரு கிடைக்கப் பெறாதவர். அவர்கள், `நமக்கு யார் வழிகாட்டுவார்கள்` என்று அலமந்திருக்கும் பொழுது, கூகை போல வெளியுலகத்தில் தொடர்பு கொள்ளாத சிலர் சில அறிவுரைகளை வேண்டி, நாகணவாய்ப் புள் போன்றவர்களிடம் அறிவுரை கேட்கச் செல்லும்பொழுது, செல்பவரது நிலை தெரியாமல் அவரைக் குருவைத் தேடுபவர் குருவாக அடைந்தால் என்ன ஆகும்?
``குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே``*
என இவரே முன்பு அருளிச் செய்தபடி, இருவரவுங் கெடுவது தவிர, வேறு எதுவும் விளையாது. இதனையே இங்கு,
``நாகையைக் கூகை நணுக லுறுதலும்
கையைக் கண்டு எலி கூப்பிடுமாறு``
என்றார். கூப்பிடுதல் - தன்பால் வரவழைத்தல். ஆறு - நெறிமுறை. `ஆறு உள்ளது` என ஒரு சொல் வருவித்து முடிக்க. பிற்பகுதிப் பொருள் இனிது விளங்குதற் பொருட்டு, முற்பகுதியில் பல பொருள்களைக் கூறினார்.
இதனுள் உய்த்துணர வைத்த காடாவது உலகம்.
இதனால், சற்குருவைச் சாராது அசற்குருவைச் சார்தலின் குற்றம் உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 27

குலைக்கின்ற நன்னகை யான்கொங் குழக்கின்
நிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான்
உலைக்குப் புறம்எனில் ஓடும் இருக்கும்
புலைக்குப் பிறந்தவை போகின்ற வாறே.

பொழிப்புரை :

(சிலர் இனிய நகை முகங்காட்டித் தீங்கு விளைவித்தல் உண்டு; சிலர் அவ்வாறன்றிக் கோபச் சிரிப்புச் சிரித்துத் தீமையை ஒழித்தல் உண்டு.) அவர்களில் பின்னர்க் கூறிய வகையைச் சார்ந்தவன் ஒருவன் கொங்கு நாட்டு உழக்கில் அடைத்து மூன்று வெள் ளெலிகளைக் கொணர்ந்தான். அவைகள் கொல்லனது உலை போல எரிகின்ற எரிக்கு அப்பால் இருப்பின், ஓடும்; இருக்கும்; இன்னும் பிற வற்றை யெல்லாம் செய்யும். ஆகவே, அவைகளை எரியில் இட்டால், இட்டவனுக்கு உணவாய் விடும். தொல்லை நீங்கும். எனவே, இழிந்த இனத்தவாகிய அவைகளை ஒழிப்பதற்கு வழி அதுவே.

குறிப்புரை :

கோபச் சிரிப்புச் சிரித்துத் தீமையை ஒழித்தவன் சிவன். தீமை, திரிபுரத்தவர். விளைத்தவை குலைத்தற்கு, `தீமை` என்னும் செயப்படுபொருள் வருவிக்க. நிலைத்தல், வாழ்தல். ``வெள்ளெலி`` என்பதில் வெண்மை நிறம் குறித்ததன்று; வெற்ற வெளியைக் குறித்து இவைகளை `நாட்டெலி` என்றும், வீடுகளில் உள்ளவற்றை, `வீட்டெலி` என்றும் கூறுவர். நாட்டெலியே விளைவுச் சேதத்தை உண்டாக்குவன. `வெள்ளெலி மூன்று` என்றது. `புத்தி, அகங்காரம், மனம் என்னும் அந்தக் கரணங்களை. அவையே புறப் புலன்களைப் பற்றிப் பல்வேறு விவகாரங்களை எய்துவன ஆகலின், அவற்றை, ``வெள்ளெலி`` என்றார். இனி, `மூன்றெலி முக்குணம்` என்பாரும் உளர். முக்குணங்கள் இங்ஙனம் காரியமாய்ப் பரிணமித்தன்றிச் செயற்படாமை யறிக. மாயையினின்றும் கருவி கரணங்கள் யாவும் சிவனது சங்கற்பத்தாலே தோன்றுதலின், அவன் இவ்வெலிகளைக் கொணர்ந்ததாகக் கூறினார். உழக்கு, ஒரு முகத்தலளவைக் கருவி. இங்கு அஃது உடம்பைக் குறித்தது. இன்னும் அதன் சிறுமையைக் குறித்தற்கு, ``கொங்குழக்கு`` என்றார். `கொங்கு நாட்டு அளவை அளவிற் குறைந்தன` என்பர். ``உலை`` என்றது, மூலாதாரத்தைக் குறித்துப் பின்னும் அதிலுள்ள அக்கினி எழுந்தோங்கிச் செல்லும் சுழுமுனா நாடியைக் குறித்தது. பிராண வாயு சுழுமுனா நாடியிற் செல்லாது, இடைகலை, பிங்கலை வழியிற் செல்லும், அந்தக் கரணங்களும் அவ்வுயிர்ப்போடு பொருந்திப் புறத்தே உலாவுதலை, ``உலைப்புறம் செல்லின் ஓடும்; இருக்கும் என்றார். அதினின்றே, `உலையகத்து அடங்கின் அடங்கி ஒடுங்கும், என்பது பெறப்பட்டது. புலை - கீழ்மை. கீழ்மையுடைய பொருளை, `கீழ்மை` என்றது உபசாரம். `கீழ்மையுடையது` என்றது, மூலப்பிரகிருதியை. அது தானே குணதத்துவமாகிச் சித்தமாய் நிற்றலால், சித்தம் இங்கு வேறு கூறப்படவில்லை. போதல் - அழிதல் ``போகின்றவாறு இது`` என ஒரு சொல் வருவித்து முடிக்க` வெள்ளெலியை உண்பவர் நெருப்பில் இட்டு உண்டல் பற்றி, `அவை போகின்றவாறு உலையில் இடுதலே` எனக் கூறினார்.
இதனால், `அந்தக் கரணங்களில் அடங்கி ஒடுங்கிப் பயன் தருதல் வாசியோகத்தாலே` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 28

காடுபுக் கார்இனிக் காணார் கடுவெளி
கூடுபுக் கானது ஐந்து குதிரையும்
மூடுபுக் கானது ஆறுள ஒட்டகம்
மூடு புகாவிடின் மூவணை யாமே.

பொழிப்புரை :

இருள் செறிந்த காட்டிற்குள்ளே அகப்பட்டுக் கொண்டவர்கள், அதினின்றும் நீங்கி, ஒளி விளங்கும் வெளி யிடத்தைக் காணுதல் அரிதேயாம். இனி, நாம் குறிப்பிடும் காட்டிற் குள்ளே காட்டுக் குதிரைகள் ஐந்தும், எப்பொழுதுமே நற்குணத்தை அடையாத ஒட்டகங்கள் ஆறும் உள்ளன. (என்றால், இதர்குள் புகுந்துவிட்டவர்களது நிலைமை என்ன!) அந்தக் காட்டிற்குள் புகாமல் இருந்தால், வெளியில் மூன்று நல்லரசுகள் உள்ளன. அவைகளின் கீழ் நல்வாழ்வு வாழலாம்.

குறிப்புரை :

காடு, இருவினைப் புதர்கள். `கூடு, மூடு` என்பனவும் காட்டையே குறித்து நின்றன. ``ஆனது`` இரண்டும் பன்மையொருமை மயக்கம். ``புகாவிடின்`` என்றது வெளியே இருப்பின்`` எனப் புகுதலின் மறுதலைப் பொருளைத் தந்தது. அணை, அரியணை. குதிரைகள் ஐந்து, பஞ்சேந்திரியங்கள். ஒட்டகம் ஆறு, `காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம்` என்னும் அகப் பகை ஆறு. `மூவணை` முத்துரியங்கள். முத்துரியங்கள் முன் தந்திரத்தில் சொல்லப்பட்டன. முதல் அடிவேற்றுப் பொருள் வைப்பணியாய் வந்தது. கடுமை, மிகுதி குறித்தது.
இதனால், `இருவினைகள் வெட்ட வெட்டத் தளிர்க்கும் காடுபோல் உள்ளன; அவற்றிற்குள்ளே அகப்பட்டு அடங்காது நிற்கின்றன பஞ்சேந்திரியங்கள்; அந்நிலையில் மேலும் காமம் முதலிய அறுபகைகள் துன்பம் விளைக்கின்றன. இவற்றிலிருந்து நீங்கினாலே இன்பம் உளதாகும்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

கூறையும் சோறும் குழாயகத் தெண்ணெயும்
காறையும் நாணும் வளையலும் கண்டவர்
பாறையின் உற்றுப் பறக்கின்ற சீலைபோல்
ஆறைக் குழியில் அழுந்துகின் றாரே.

பொழிப்புரை :

பரத்தையர் உடுத்துகின்ற ஆடை, அவர் நல்லுணவு உண்டு வளர்த்துக்கொள்ளும் தசை, குழாய்களில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்போல வெளியே தோன்றாது உள்ளே ஓடுகின்ற இரத்தத்தால் விளங்கும் மேனியழகு, கழுத்தில் அணிகின்ற காறையும், மார்பில் அணிகின்ற பொன் வடமும், கைகளில் அணிகின்ற வளையலும் முதலான அணிகலன்கள் ஆகியவற்றைக் கண்டவர்கள் அவவைகளிலே மயங்கி, பாறைமேல் உலர்த்தப்பட்ட சீலை விரைவில் ஈரத்தை இழந்து காற்றில் பறப்பதுபோலப் பறந்துபோய், அவர்களது உந்திக் குழியில் வீழ்கின்றனர்.

குறிப்புரை :

`அவர்களை மீட்குமாறில்லை` என்பது குறிப்பெச்சம்.
இம்மந்திரம் பரத்தையர் கூட்டத்தை விலக்கியதன்று. என்னை யெனின், இது சூனிய சம்பாடணையாகிய குறிப்புப் பொருளை உடையதன்றி, வெளிப்பபைபொருளதன்று ஆகலானும், அதனை விலக்குதற்கு இங்கு ஓர் இயைபின்மையானும் என்க. மற்று, பரத்தையர் மயக்கத்திற்பட்டாரைத் தெளிவித்தல் அரிதாதலாகிய உலகியலை வைத்து, `மாயையின் மயக்கத்திற்பட்டாரைத் தெளிவித்தல் அரிது` என்பதையே உணர்த்திற்றாம். ஆகவே, உடம்பு மாயையேயாகலின் அதுவே பரத்தை. திருவருளால் தோன்றும் சிவஞானமே இல்லக் கிழத்தி. அவளோடே கூடியிருப்பின், நாற் பயனும் நன்கு விளையும். இவளது மயக்கிலே வீழ்ந்தால், அனைத்துப் பயனும் கெடும்.
இப்பரத்தை உடுத்தியுள்ள அழகான சீலை தோல். தசை தசைகளே. எண்ணெய் - உதிரம். இஃது உலகியற் பொருளில் ஆகு பெயராய் மேனியழகைக் குறித்தது. காறை, எலுமப். நாண் - கயிறு; நரம்புகள். வளையல், நேர்நில்லாது வளைகின்ற மயிர்கள். ஆறு, ஆற்று நீர். ஐக்குழி - அழகிய குழி; என்றது அதன் சுழியை. அஃது இங்கு உவமையாகுபெயராய், உவமையில் உந்தியையும், பொருளில் கருப்பையையும் உணர்த்திற்று. `ஆற்றைக் குழி` என்னும் றகர ஒற்று, எதுகை நோக்கித் தொகுக்கப்பட்டது. மங்கையர் முயக்கில் மயங்கு -வாரை அவர்தம் உந்தியாகிய மடுவில் வீழ்பவராகக் கூறுதல் வழக்கு.
``மன்றலங் கொந்துமிசை தெந்தனந் தேந்தெனென்
வண்டினம் கண்டுதொடர் குழல்மாதர்
... ... ... ... ... ... உந்திஎன் கின்றமடு விழுவேனை
உன் ... ... ... ... அடி சேராய்``
என்னும் திருப்புகழைக் காண்க.
``சீலைபோல்`` என வாளா கூறாது, பாறையில் உற்ற சீலைபோல்`` என்றமையால் அச்சீலை விரைவில் ஈரம் இழத்தல் போல, அறிவையிழத்தல் குறிக்கப்பட்டது.
இதில், `பரத்தையர்` என்னும் முதற்பொருள் ஆற்றலால் கொள்ளக் கிடந்தது.
இதனால், உலகியலில் பரத்தையர் மோகம் நோயும், வறுமையும் போலும் பெருந்துன்பங்களைப் பயத்தல் போல, மெய்ந் நெறியில் உடல் மோகம் பிறவித் துன்பத்தைப் பயக்கும் என்பது உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

துருத்தியுள் அக்கரை தோன்றும் மலைமேல்
விருத்திகண் காணிக்கப் போவார்முப் போதும்
வருத்திஉள் நின்ற மலையைத் தவிர்ப்பான்
ஒருத்திஉள் ளாள்அவள் ஊரறி யோமே.

பொழிப்புரை :

ஆற்றிடைக் குறை ஒன்று உள்ளது; அந்த ஆற்றின் அக்கரையில் மலை ஒன்று இருக்கின்றது. அந்த மலைமேல் நின்று தமது செயல்களைக் கண்காணிக்க நாள்தோறும், `காலை, மாலை, இரவு` என்பவற்றில் எப்பொழுது வேண்டுமானாலும் ஒருவர் போகின்றார்`; திரும்பி வருகின்றார். அவரது கண்காணிப்பை முதலில் சிறிது சிறிதாகவும், பின்பு முழுமையாகவும் தன்பால் ஈர்த்து, அவரை அந்த மலைக்குச் செல்லாதபடி தடுக்கின்ற ஒருத்தி அவரோடு கூடவே இருக்கின்றாள். அவள் எந்த ஊரைச் சேர்ந்தவள் என்பதை நாம் அறியமாட்டோம்.

குறிப்புரை :

``துருத்தி`` என்பது ஆற்றிடைக்குறை. கொல்லன் துருத்தி இரண்டையும் குறிக்கும் பலபொருள் ஒரு சொல்லாகலின், அது வெளிப்படைப் பொருளில் ஆற்றிடைக் குறையையும், குறிப்புப்பொருளில் கொல்லன் உலைத்துருத்தியையும் குறித்தது. கொல்லன் உலைத்துருத்தியாவது சுவாசத்தை வாங்கியும், விட்டும் நின்ற சுவாச கோசம். எனினும் அஃது, அதற்கு இடமாய் உள்ள உடல் முழுவதையும் குறித்தது. `உடல்` என்பது தலைக்குக்கீழ் உள்ள பகுதிக்கெல்லாம் பெயராய், மூலாதாரம், உந்தி, இருதயம், கண்டம் ஆகியவற்றைக் குறித்தது. எனவே, அக்கரையில் உள்ள மலையாவது புருவ நடு. அதுவே ஆன்மாவின் சாக்கிரத்தானம் ஆதலின் உயிர் தன் கருவி கரணங்களின் வாய்ப்பிற்கு றே்ப மூலாதாரத்தினின்று படிப்படியாக மேல் ஏறி வந்து தன் செயலைக் கண்காணிக்கும் இடமாயிற்று. ஆகவே, `போவார் ஆவார் உயிர்` என்பது விளங்கும். ``போவார்`` எனவே, `வருவார்` என்பதும் அமைந்தது. போதல் மேல் ஏறுதலையும், வருதல் கீழ் இறங்குதலையும் குறித்தன. இவை முறையே மேலாலவத்தை, கீழாலவத்தை எனப்படும். இவற்றின் இயல்பெல்லாம் முன் தந்திரத்தில் விளக்கப்பட்டன.
இனி மறதியை உண்டாக்குவது ஆணவ மலமேயாதலின், ``மலையைத் தவிர்ப்பாள் ஒருத்தி`` என்றது ஆணவ மலத்தையேயாம். ஆணவ மலம் வந்தவாறு அறியப்படாமையால், ``அவன் ஊரறி யோமே`` என்றார்.
விருத்தி - தொழில். வருத்தி - வருவித்து; தன்பால் ஈர்த்து.
இதனால், முன் தந்திரத்தில் வெளிப்படையாகச் சொல்லப்பட்ட மேலாலவத்தை கீழாலவத்தையின் இயல்புகள் உள்ளுறையாக உணர்த்தப்பட்டன.

பண் :

பாடல் எண் : 31

பருந்துங் கிளியும் படுபறைக் கொட்டத்
திருந்திய மாதர் திருமணப் பட்டார்
பெருந்தவப் பூதம் பெறல்உரு ஆகும்
இருந்திய பேற்றினில் இன்புறு வாரே.

பொழிப்புரை :

கானக மக்களில் மங்கைப் பருவம் எய்திய மகளிர், உண்மை வாச்சியங்களில் ஏதும் இன்றிப் பருந்தும் பறவையும், ஓசை வேறுபட்டபோதிலும் அடிநிலையிசை ஒன்றேயாக முழக்குகின்ற ஓசைகளையே வாச்சியமாகக் கொண்டே எப்பொழுதும் திருமணம் செய்து கொள்ளப்படுகின்றார்கள். அவர்கட்குப் பிறக்கின்ற பிள்ளை களும் பேயும், பூதமுமாகவே பிறக்கின்றன. ஆயினும் அவர்களில் யாரும் இதைப் பற்றி வருந்துவதாகத் தெரியவில்லை. மகிழ்ச்சி யுடனேயே வாழ்கின்றார்கள்.

குறிப்புரை :

`இது வியப்பு` என்பது குறிப்பெச்சம். உண்மை வாச்சியம் அருள் நாதம். பருந்து தீவினை. கிளி நல்வினை. இவை பறை கொட்டல், ஆரவாரத்தைத் தோற்றுவித்தல். அடிநிலையிசை. ஆணவ மலம். கானக மகளிர், கருவி கரணங்கள். அவர்கள் பருவம் அடைதல், ஒடுங்காது எழுச்சியுற்று நிற்றல். இவர்கட்குக் கணவராகும் கானவர், பெத்தான்மாக்கள். அதீதம் முதலாகச் சாக்கிரம் ஈறாக உள்ள கீழாலவத்தைகள். பிறக்கின்ற பிள்ளைகள், இவ்வவத்தைகளில் நிகழும் அனுபவங்கள். இவைகள் திருவருளை நினைய ஒட்டாது, மீட்டும் மீட்டும் வினைப்பயன்களையே நினைப்பித்தலால் அவை, `பேய் பூதம்` என இகழப்பட்டன. ஆயினும் அவைகளின் உண்மை உணராது மகிழ்ந்து வாழும் உயிர்களை, ``இன்புறுவாரே`` என்றார். ஏகாரம், தேற்றம்.
``பருந்தும், கிளியும் படுபறை கொட்ட`` என்ற குறிப்பினால், மணம் கானவர் மணமாதல் அறியப்பட்டது. `பெறல் உரு, தவப் பெரும் பூதம் ஆகும்` என மாற்றிக்கொள்க. ``ஆகும், இன்புறுவார்`` என்பன போலவே, `படுவார்` என எதிர்காலமாக ஓதற்பாலதனையே வேறோ ராற்றால், ``பட்டார்`` என இறந்த காலமாக மயக்கிக் கூறினார். `இருந்த` என்னும் பெயரெச்சம் இடையே ஓர் இகரம் பெய்து விரிக்கப்பட்டது.
இதனால், முத்திறத்து ஐந்தவத்தைகளுள் சகல ஐந்தவத்தையும் கேவல ஐந்தவத்தையும் பயனிலவாதலை உணர்ந்து சுத்தாவத்தையிற் செல்லமாட்டாதவாறு இழிவு உள்ளுறையாக உணர்த்தப் பட்டது.

பண் :

பாடல் எண் : 32

கூடு பறவை இரைகொத்தி மற்றதன்
ஊடுபுக் குண்டி யறுக்குறில் என்னாக்கும்
சூடெறி நெய்யுண்டு மைகான றிடுகின்ற
பாடறி வார்க்குப் பயன்எளி தாமே.

பொழிப்புரை :

கூட்டில் வாழும் பறவை இரையைத் தேடித் தின்று விட்டுக் கூட்டிற்குள் புகுந்து பின் அதனைச் சீரணிக்கப் பண்ணிக் கொண்டுமட்டும் இருந்தால், அந்தப் பறவை தனக்கு என்ன உறுதிப் பயனைச் செய்துகொள்ளும்? (ஒன்றையும் செய்து கொள்ளாது. ஆகலின் தம் உயிர்க்கு உறுதி செய்துகொள்ள விரும்புவோர் அந்தப் பறவையின் செயலைக் கைக்கொள்ளாமல் விடுத்து,) நெய்யை உணவாக உண்டு அதனாலே ஓங்கி எரிகின்ற நெருப்புப் பின் நறுமணமும், குளிர்மையும், அழகையும் உடைய சாந்தத் தருகின்ற அந்த மேலான செயலை நோக்கி, அதனைக் கடைப்பிடிக்க.

குறிப்புரை :

`கூட்டுப் பறவை` என்னும் பகர ஒற்று, எதுகை நோக்கித் தொக்கப்பட்டது. `மற்று`, வினைமாற்றின் கண் வந்தது. அறுதல் - சீரணித்தல். ``அற்றால் அளவறிந்துண்க``8 என்பது காண்க. அறுத்தல் - சீரணிக்கப்பண்ணுதல். சீரணித்தல் இயல்பிலே நிகழ்வ தாயினும் அது தவிரப் பிறிது செய்யாமையைக் குறித்தற்கு, அதனைப் பரவையால் செய்யப்படுவதுபோலக் கூறினார். உணவை உண்டு அதனைச் சீரணித்துக் கொள்வதனோடு அமைகின்ற உயிர்கள் பல உள ஆயினும் கூட்டில் வாழும் பறவையையே கூறினார், அஃது உடம்பில் வாழும் உயிரைக் குறித்தற்கு, `கூடு` என்பது உடம்பிற்கும் பெயர். அதனை, ``கூடு விட்டிங்கு ஆவிதான் போயின பின்பு ஆரே அனுப விப்பார் - பாவிகாள் அந்தப் பணம்``9என்பதனானும் அறிக. `சுடு` என்பது எதுகை நோக்கி நீண்டமையால் ஈற்றுகரம் குற்றுகரமாய் உயிர் வரக்கெட்டது. `சுடு எரி` முக்கால வினைத்தொகை. நெய்யை உண்டு, மையைக்காலும் எரி, விளக்கெரியும், ஓம குணடத்து எரியும். பாடு - உயர்வு; மேன்மை. ``அறிவார்க்குப் பன் எளிதாமே`` என்றாராயினும் `பயன் வேண்டுவார் அறிந்து கடைப்பிடிக்க`` என்பதே கருத்து.
இதனால், `மக்கள் உணவைத்தேடி உண்டு உடம்பை வளர்ப் பதால் மட்டும் எந்தப் பயனும் இல்லை; அவ்வளர்ச்சிக்கு ஏற்ப மெய் யறிவையும் வளர்த்து, அதற்கேற்ற செயல்களையும் உடையராதல் வேண்டும்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 33

இலையில்லை பூவுண்(டு) இனவண்டிங் கில்லை
தலையில்லை வேர்உண்டு தாள்இல்லை பூவின்
குலையில்லை கொய்யும் மலர்உண்டு சூடும்
தலையில்லை தாழ்ந்த கிளைபுல ராதே.

பொழிப்புரை :

எல்லாச் சமயங்கட்கும் வேர்போன்றது திருவருள். அஃதாவது, `திருவருட் குறிப்பின்றி, எந்தச் சமயமும் உலகில் இருக்கவில்லை` என்பதாம். அத்திருவருளே உணர்ந்த சமயங்கள் வேரின்மேல் வளர்ந்து தழைத்த மரங்களாகும். திருவருளை உணராத சமயங்கள் வளராது முடம்பட்ட மரங்களாம். அவைகளையே, ``வேர் உண்டு; தலையில்லை`` என்றார்.

குறிப்புரை :

பிறர்க்கு உறுதிப்பொருள்களை நன்கு விரித்துரைப்பாரது விரிவுரைகள், நல்லாசிரியரது உபதேசத்தின் வழி அமைந்தனவாயின், அவை பசுமையோடு தழைத்த இலைகளின் நடுவிலே பூத்த பூக்களாய், `பயன்` என்னும் தேன் உள்ளூறப்பெற்று நுகர்ந்து மகிழத் தக்கனவாய் இருக்கும். தான்றோன்றிகளாய் உள்ளாரது விரிவுரைகள் அத்தன்மை உடையன ஆகா. அவைகளையே, ``இலை இல்லை; பூ உண்டு; இன வண்டிங்கில்லை`` என்றார். இவையும் மேற்குறித்த சமயங்களின் பிரச்சாரங்களையேயாம்.
பிற சில கொள்கைகளில் வேறுபாடு உளவாயினும் கடவுட் கொள்கையுடைய சமயங்களிடையே `திருவருள் என்னும் ஓர் ஒற்றுமை உண்டு. அதனால் அவை ஒரு கொத்திலே பூத்த பூக்கள் போல விளங்கும் கடவுட் கொள்கையில்லாத சமயங்களிடையே அத்தகைய ஒற்றுமையில்லாமையால், அவை ஒன்றோடொன்று சேராத தனிப் பூக்கள் போலும். (தனிப் பூவிலும், கொத்தாய் உள்ள பூக்கள் சிறந்து நிற்றல் தெளிவு. இத்தன்மை பற்றிக் கடவுட் கொள்கையில்லாத சமயங்களை, ``(பூவுண்டு; ஆயினும்) பூவின் குலையில்லை; (அதற்குக் காரணம்) தாள் இல்லை`` என்றார். குலை - கொத்து. தாள் - காம்பு.
கடவுட் கொள்கை இல்லாவிடினும், ``நல்லதன் நலனும், தீயதன் தீமையும் இல்லன அல்ல; அங்ஙனமே அவற்றிற்கு ஏற்ற மறுபிறப்புக்களும இல்லன அல்ல``lஎனக் கொள்ளும் சமயங்கள் உள. ``அவை பலரால் எளிதில் பின்பற்றப் படுதலால், எளிதில் பறிக்க வரும் மலர்போல்வனவாம். ஆயினும் கடவுட் கொள்கை இல்லாமையால், நாற்றம் இல்லாத மலர் போலும். அதனால் அவை சூடப் பெறும் தலைகளை இல்லனவாம் - என்பதனை, ``கொய்யும் மலர் உண்டு; சூடும் தலையில்லை`` என்றார்.
இனி, மலர்கள் எளிதில் கொய்ய வருவதற்குக் காரணம், அவை பொருந்தியுள்ள கிளை தாழ்ந்திருத்தலேயாம். `அதுபோல நாற்றம் இல்லாத மலர்கள்போலும் அந்தச் சமயங்கட்கு அடி நிலை யாகிய, கடவுட் கொள்கையற்ற வெற்றறம் உலகில் நிலை பெற்றுத்தான் உள்ளது` என்பதை, ``தாழ்ந்த கிளைபுலராதே`` என்றார். புலர்தல் - உலர்தல்; வற்றுதல். கிளை வாடாமைக்குக்; காரணம், வேர் பசுமையாய் இருத்தல். `சமயங்களின் வேர் திருவருட் குறிப்பு` என நாயனார் முதற்கண் கூறியதை நினைக.
இரண்டாம் அடியின் முற்பகுதியை, `வேர் உண்டு இலையில்லை` என மாற்றி முதலிற் கூட்டியும், அதன் பின்னர், `பூவின் குலையில், (காரணம்) தாள் இல்லை` என மாற்றியும் பொருள் கொள்க. ``பூவின் குலையில்லை`` என்று மட்டுமே கூறியதால், `பூ உண்டு` என்பது பெறப்பட்டது.
இதனால், `புறப்புறம், புறம்` என்னும் இரு கூற்றுப் புறச் சமயங்களின் இழிபுகள் `மருட்கை` என்னும் மெய்ப்பாடு தோன்ற, உள்ளுறையாகக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 34

அக்கரை நின்றதோர் ஆல மரங்கண்டு
நக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வர்
மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டுபோய்த்
தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறே.

பொழிப்புரை :

மக்கள் யாவரும் வினைத் தொடர்ச்சியாகிய ஆற்று வெள்ளத்தில் போய்க்கொண்டிருப்பவரே. ஆயினும் அவருள் ஒரு சிலர் மட்டும் ஆற்றின் அக்கரையில் ஓர் ஆலமரத்தையும், அதன் கீழே உடையின்றியிருக்கும் ஓர் அந்தணரையும் கண்டு வாழ்த்து கின்றார்கள். அதனால் அவ்வந்தணரால் தாம் கடலிற் சென்று விழுவதற்கு முன்னே கரைசேர்க்கவும் பெறுகின்றார்கள். மற்றவர் களும் அவ்வாறே கரை சேரலாம். ஆயினும் அவ்வாறு செய்யாமல் ஐந்து வகையான துன்பங்களை அனுபவித்துக் கொண்டு வெள்ளத் திலே மிதந்து போய்க் கொண்டிருக்கின்றார்கள்.

குறிப்புரை :

`வெள்ளம் கடலிற் கொண்டுபோய் விடுதல் உறுதி` என்பது கருத்து.
``ஆல நீழல் உகந்த திருக்கையே;
ஆன பாடல் உகந்த திருக்கையே``3
என்பது முதலாக வரும் பல அருட்டிரு மொழிகளால் ஆலமர நிழல் சிவபிரானது இருக்கையாதல் தெளிவு. சங்க இலக்கியங்கலிலும் இது பெறப்படும். ஆகவே, ``நக்கர்`` என்றது சிவபிரானையே என்பதில் ஐயமில்லை. நடுவே - கடலில் சென்று வீழ்வதற்கு முன்பே ஆல மரத்தை அக்கரைக்கண் நிற்பதாகக் கூறியது, சிவன் வினைத் தொடர்ச்சியோடும், பிறவிப் பெருங்கடலோடும் யாதொரு தொடர்புமின்றி அகல நிற்றலைக் குறித்தற்கு. ஆற்று வெள்ளத்திற் போவாரைக் கரைக்கண் நிற்பார் கரை சேர்த்தல் கூடுமன்றி, போவாருள் ஒருவர்க்கு அது கூடாமை சொல்ல வேண்டா.
ஆற்று வெள்ளத்திற் போவாரைக் கரைக்கண் நிற்பவர் கண்டால், எவரும் தாமே சென்று மீட்பர். அதற்கு மேல், அதற்கு மேல், வெள்ளத்திற் செல்வார் அவர்களை அழைத்து வாழ்த்தினால், அந்தணர் ஒருவர் மீட்கா தொழிவாரோ? ஒழியார். ஆதலின் ``வாழ்த்திப் பயன் கொள்வர்`` என்றார்.
ஆல மரம் விரிந்து படரக் கூடியது; அதன் விழுதுகள் எத்துணைத் தூரமும் எட்டக் கூடியன. ஆகவே, ஆலமரத்தின் கீழ் உள்ள அந்தணர் அந்த விழுதுகளில் ஒன்றன் வழியாக செல்வாரை எளிதில் மீட்பார். ஆயினும் அந்தணர் வீசும் ஆலம் விழுதை ஆற்றிற் செல்பவர்கள் பற்ற வேண்டுமன்றோ! `அது செய்யாமல் ஆற்றிற் செல்பவர்கள் பற்ற வேண்டுமன்றோ! `அது செய்யாமல் பலர் ஆற்றோடே போகின்றனர்` என்பதை, ``தக்கவர் தாழ்ந்து கிடக்கின்றவாறே`` என்றார். தாழ்தல், ஆற்றில் வீழ்தல்.
ஆல மரம், வேதம். அதன் விழுதுகள், அதன் வழி நூல் சார்பு நூல்கள்.
ஆல மரமே பண்டு தொட்டு அருள் வடிவான மரமாகக் கொள்ளப்பட்டு வர, அதனை மாற்றி, அசோக மரத்தையும், அரச மரத்தையும் கொண்டவர்களையும், அவருள் ஒரு சாரார், ``நக்கன்`` என்பது, `திசைகள் தவிர வேறு ஆடை இலன் என்பதாகப் பொருள் தந்து, விபாயக நிலையை உணர்த்தி நிற்க, அதனை யறியாது, உலகியலுக்கு மாறாய், `ஆடையின்றி யிருப்பவன்` எனப் பொருள் கொண்டவர்களையும் குறிப்பிற் குறிப்பாய் உணர்த்தற்குச் சிவனை வேறோராற்றால் சுட்டாது, ``நக்கன்`` எனச் சுட்டினார்.
அசோகும், அரசும் ஆற்றிற் செல்வாரை மீட்கலாகாமை -யையும் நோக்குதல் வேண்டும்.
மிக்கவர் - எஞ்சினோர் ``அஞ்சு துயரம்`` என்பது வெளிப்படைப் பொருளில், `பல துயரம்` என்றும்` உள்ளுறைப் பொருளில் பஞ்சேந் திரியங்களின் துயரம் என்றும் பொருள் தரும். கிடக்கின்றவாறு இரங்கத் தக்கது` என எஞ்சி நின்ற சொல்லெச்சத்தோடு முடிக்க.
இதனால், முன் மந்திரத்தில் பொதுப்படக் கூறிய சமயங்களுல் ஒரு சாரனவற்று இரங்கத் தக்க நிலை வகுத்துக் கூறப்பட்டது. இதனால், காலத்திற்றானே களப்பிரர் ஆட்சி முதலிய காரணங்களால் தமிழ்நாட்டில் சிவனடியார்கட்கு இடுக்கண் தோன்றினமையை உணர்தல் கூடும்.

பண் :

பாடல் எண் : 35

கூப்பிடும் ஆற்றிலே வன்கா(டு) இருகாதம்
காப்பிடு கள்ளர் கலந்துநின் றார்உளர்
காப்பிடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டுக்
கூப்பிடும் ஈண்டதோர் கூரைகொண் டாரே.

பொழிப்புரை :

கூப்பிடு தூரத்தளவேயான குறு வழி ஒன்று உள்ளது. அதற்குள்ளே கடுமையான இரண்டு காடுகள் தனித்தனி ஒவ்வொரு காதம்போல உள்ளன. அந்தக் காடுகளில் வழிச் செல்வாரே மறித்துக் கொண்டுபோய் சிற்றறையில் அடைத்து வைக்கின்ற கள்வர்கள் வாழ்கின்றார்கள். ஒன்றும் அறியாத வழிப்போக்கர்கள் அந்தக் கள்வரை வழிகாட்டுபவராகக் கருதி அவரைப் பின் பற்றிச் சென்று, தமக்கு உதவுபவரை அழைக்க வேண்டிய நிலைமையராய் இச்சிறுவழியில் சிறு குடில் ஒன்றே புகலிடமாக அடைகின்றனர்.

குறிப்புரை :

ஓரிடத்தில் நின்று அழைத்தல், வேறோர் இடத்தில் உள்ளவர் காதில் விழுகின்ற அளவு தூரத்தை, கூப்பிடுதூரம்` என்பர். நெடுவழியின்றிக் குறுவழி` என்றற்கு, ``கூப்பிடும் ஆறு`` என்றார். ஆறு - வழி. இந்தக் குறுவழியாவது, எண்சாண் உடம்பேயாம். இதிற் செல்லும் வழிப்போக்கர், உடம்பில்வாழும் உயிர்கள். ``வன்காடு இரண்டு`` என்பது, சொல்வாரது குறிப்பால் விளங்கிற்று. அவை `கீழாலவத்தை, மேலாலவத்தை` என்பன. அந்தக் காட்டிலே வாழும் கள்வர் கருவிகள். (தத்துவ தாத்து விகங்கள்) இவைகள் மிகுதியாக உயிரைமேல் ஏற்றினால், புருவ நடுவிற்கு மேற் செல்லவிடாது அவ் விடத்தே தடுத்து நிறுத்தலால் ``காப்பிடு கள்வர்`` என்றார். இதனால் இக்கள்வர்கள் எய்தும் பயன் மெய்யறிவாக பொருளைக் கவர்ந்து கொள்ளுதலாம். (கருவிகள் சடமாயினும் உருவக நயம் பற்றிப் பயன் எய்துவனபோலக் கூறினார்.) எண்சாண் உடம்பில் புருவநடு ஓரங்குலமே யாதலாலும் அதற்குள்ளே உயிர் நிற்றலாலும் `இந்தக் குறுவழிக்குள்ளே ஒரு சிறுகுடிலில் அடைபட்டுக் கிடக்கின்றார்கள்` என்பார், ``ஈண்டதோர் கூரை கொண்டாரே`` என்றார். ``ஈண்டு`` என்றது, முன்னர்க் கூறிய கூப்பிடு தூரத்தை. கூரையாவது குடில்.
`சிறு குடில்` எனப்பட்டது புருவ நடுவாகவே, அதன்கண் அடைபட்டிருத்தல், கேவல சாக்கிரமும், மாசகலமும் ஆயிற்று. அவற்றில் கிடைப்பன. பெரிய அளவாகக் கூறின், ஐம்புல இன்பங்களுக்குமேல் இல்லை. அவையும் கண்டதையே கண்டும், உண்டதையே உண்டும், பிறவும் இவ்வாறானவேயாம். அந்நுகர்ச்சி களும் கருவிகளின் சேட்டையால் நிலையின்றி, `சொப்பனம், சுழுத்தி` என்று இப்படியான நிலைகளால் இழக்கப்படுவனவேயாம். இவற்றை யெல்லாம் அடைபட்டிருப்பர் எண்ணி இன்னலுறுவாராயின் இந்தச் சிறுகுடிலினின்றும் தம்மை மீட்டு உதவுபவரை அழைக்கவே செய்வர். அதனால் அக்குடில், ``கூப்பிடு கூரை`` எனப்பட்டது. உதவுவது திருவருளேயாதலான் அதனை அவர்கள் அழைத்தே ஆக வேண்டும். அழைத்தவாற்றை,
``தரிக்கிலேன் காய வாழ்க்கை;
சங்கரா போற்றி! போற்றி!!``3
``தினைத்துணை யேனும் பொறேன் துயர் ஆக்கையின்
திண்வலையே``l
என்பன முதலியவாற்றான் அறிக.
திருவருளாள் உயிர் புருவ நடுவற்கும் மேலே செலுத்தப் படுமாயின் துவாதசாந்தப் பெருவெளியை அடைதலாகிய யோகா வத்தையையும் அதனையும் கடந்து அகண்டாகாரமாய் நிகழும் ஞானா வத்தையையும் எய்தும். `அவ்வாய்ப்பினைப் பெறாத உயிர்கள் சகல கேவலங்களில் நின்று புருவ நடுவை மட்டுமே மேல் நிலையாகக் கொண்டு, இருட்டறையில் கிடக்கின்றன` என்பதே இம்மந்திரத்தால் உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 36

கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை
எட்டியும் வேம்பும் இனியதோர் வாழையும்
கட்டியும் தேனும் கலந்துண்ண மாட்டாதார்
எட்டிப் பழத்துக் கிளைக்கின்ற வாறே.

பொழிப்புரை :

குளம் ஒன்றில், பொருட்படுத்தி எண்ணலாகாத கொட்டியும், சிறந்தனவாகிய வெல்ளாம்பல் செவ்வாம்பல்களும் பூத்துள்ளன. அதுபோலவே, பார்வைக்கு அழகாய் உண்டால் கொல்லும் எட்டிப் பழமும், அழகும் இன்றி, இனிமையும் இன்றி, உண்டால் நோயைத் தீர்க்கும் வேப்பம் பழமும் அழகும், இனிமையும் உடையதாய், உண்டால் பசியைத் தீர்த்து, உடல் நலத்தை நல்குவ தாகிய வாழைப் பழமும் அந்தக் குளக்கரையில் பழுத்திருக்கின்றன. வாழையே மேலும் சுவைப்படுத்தி உண்ண வேண்டுமாயின், கட்டியும், தேனும் மக்கட்குக் கிடையாதன அல்ல; எங்கு கிடைப்பனவே. ஆகவே, வாழப்பழத்தைப் பறித்துக் கட்டியும், தேனும் கலந்து உண்டு, நாவிற்கு நறுஞ்சுவை பெற்றுப் பசி தீர்ந்து, உடல் நலத்தையும் எய்துமளவிற்கு அறிவில்லாத மக்கள், பார்வைக்குக் கவர்ச்சியாய் உள்ள எட்டிப் பழத்தையே பெவேண்டி, `அதனை அம்மரத்தில் ஏறிப் பறிப்பது எவ்வாறு` என்று எண்ணுவதிலேயே காலம் கழித்து இளைக்கின்றார்கள். இஃது இரங்கத் தக்கது.

குறிப்புரை :

`உலகம் சிறுமையும், பெருமையும் கலந்தது` என்பதை முதல் அடி விளக்கிற்று. கொட்டிப்பூ, சிறியனவற்றையும், ஆம்பற் பூ, பெரியனவற்றையும் குறித்தன. இரண்டாம் அடி இறுதியில், `பழுத்துள்ளன` எனச் சொல்லெச்சம் வருவிக்க. `குளத்திடை பழுத் -துள்ளன` என்றாரேனும், `அதன் கரையில் பழுத்துள்ளன` என்பதே கருத்து. `குளம்` என்றதும், `குளக்கரை` என்றதும் உலகத்தையே.
எட்டிப் பழமாவது, ``முற்பயக்கும் சின்னீர இன்பத்திற் பிற்பயக்கும் பீழை பெரிதாம்``* காம இன்பம். வேப்பம் பழமாவது, கவர்ச்சியும், தன்னலமும் இல்லாது, செய்தால், முன்பு உள்ள பாவத்தைப் போக்கும் பசு புண்ணியங்கள். வாழைப் பழம், பத்தியுடைய உள்ளங்கட்கு விருந்தாய், என்றும் நிலைத்து நின்று, ஞானத்தைத் தரும் சிவபுண்ணியங்கள்.
கட்டியும் தேனும் சிவபுண்ணியங்களைச் சிறப்பித்துக் கூறும் சிவ தோத்திர சாத்திர நூல்கள்.
`இளைக்கின்றவாறு இரங்கத் தக்கது` எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க.
இதனால், `நன்மையும், தீமையும் கலந்துள்ள இவ் வுலகத்தில் அறிவுடையோர் தீமையை விலக்கி, நன்மையைப் பொருந்தி இன்புறுவர்` என்பதும், `அறிவிலார், நன்மையை விலக்கித் தீமையைப் பொருந்தித் துன்புறுவர்` என்பதும் உள்ளுறையாகக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 37

பெடைவண்டும் ஆண்வண்டும் பீடிகை வண்ணக்
குடைகொண்ட பாசத்துக் கோலம்உண் டானும்
கடைவண்டு தான்உண்ணும் கண்கலந் திட்ட
பெடைவண்டு தான்பெற்ற தின்பமு மாமே.

பொழிப்புரை :

வண்டினங்களில் `அரசவண்டு` (கோத்தும்பி) எனச் சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற அந்த இனத்தில் பெண் வண்டும், ஆண் வண்டும் உயர்ந்த தாமரை மலர்களையே நாடிச் சென்று தேன் நுகர்தலுடன், அவற்றை அரியணையாகவும், வெண்கொற்றக் குடையாகவும் கொண்டு அன்புடன் கலந்து அரசு வீற்றிருக்கும். சிற்றின வண்டுகளும் இனத்தால் அவற்றோடு ஒப்பனவாயினும் அவை அத்தன்மையின்றிச் சிறு பூக்களையும் நாடி ஒடுலுடன், மற்றும் தம் கண் சென்று கலந்த பொருள்களின் மேல் எல்லாம் ஓடிச்சென்று விழும். ஆகவே, அவ்வினத்துப் பெண்வண்டு அதன் ஆண் வண்டினால் இன்பம் பெற்றதாயினும் அந்த இன்பம் அரசப் பெண் வண்டு, அரச ஆண் வண்டினால் பெற்ற இன்பம் ஆகுமோ! ஆகாது.

குறிப்புரை :

`உடையான், அடியார்` என்னும் முறைமையில் சிவனும் சிவன் அடியார்களும், ஏனைத் தேவரும் அவன் அடியார் களும் ஒரு தன்மைப்பட்டவர் போலக் கருதப்பட்டாலும், சுத்த போகத்தையன்றித் தராமையும் நாடாமையும், மற்றும் அனைத்துலகங்களையும் ஆட்சி செய்யும் உரிமையும், ``இருநிலத்தல் எமக்கெதிரா வாருமில்லை``*\\\\`20``தென்றிசைக்கோன் தானே வந்து - கோவாடிக் குற்றேவல் செய்கென்றாலும் குணமாகக் கொள்ளோம்`` என இருக்கும் பெருமிதமும், இவ்வாறன்றிச் சில விடத்தளவில் சிலவற்றை மட்டுமே தரும் உரிமையும், காமம், வெகுளி, மாற்சரியம் காரணமாகத் தலைப்படும் செயல்களில் வெற்றியைத் தருதலும் விரும்புதலும், அவற்றுள்ளும் தம்மின் வலியாரைக் காணின் அஞ்சு தலும், மூவகைத் துன்பங்களில் ஆதி தெய்விகமாய் வருவனவற்றைக் கடப்பிக்கவும், கடக்கவும் மாட்டாமையும் போல்வனவற்றை நோக்கின், அவ் இரு திறத்தவர்க்கும் இடையேயுள்ள வேறுபாடு, மலைக்கும் மடுவுக்கும் இடையேயுள்ள வேற்றுமை போல்வதாம். ஆகவே, ஏனைத் தேவரையடைந்து அவன் அடியார் பெறும் இன்பம், சிவனை யடைந்து, அவன் அடியார் பெறும் இன்பம் ஆகாது என்பதைப் `பிறிது மொழிதல்` என்னும் அணிவகையால் தோற்றுவித்தது இம்மந்திரம்.
சிவானந்தத்தைத் `தேன்` என்றல் மரபாகலின், அதனை நுகரும் அடியார்களை வண்டாக உருவகிப்பார், அதற்கேற்ப ஏனையவற்றையும் ஒருபுடை ஒப்பாக வைத்து உருவகித்தார்.
``கடைவண்டு`` எனப் பின்னர் வருதலால், முன்னர்க் கூறப் பட்டவை அரச வண்டாயின. அரச வண்டிற்கு ஏற்புடைமை பற்றி, `பீடிகையும், குடையும் ஆவன தாமரை மலர்கள்` என்பது அறியப்படும். கொண்ட பாசம், கொள்வதற்கு ஏதுவாய் நின்ற பாசம். கோலம் - உருவம். `பாசத்தையுடைய உருவம்` என்க. `உண்டாயினும்` என்பது, `உண்டானும்` என மருவி நின்றது. ``எனைத்தானும் நல்லவை கேட்க``9 என்பதிற்போல. `கலந்திட்ட வற்றை` என இரண்டாவது இறுதிக்கண் தொக்கது. ஈற்றில் நின்ற பெடை வண்டு, கடை வண்டு இனத்தைச் சார்ந்தது. ஏகாரம், எதிர்மறைப் பொருட்டாய் வினா.
இதனால், ``சிவனோடொக்கும் தெய்வம் தேடினும் இல்லை`` என முதற்கண் கூறப்பட்ட பொருள் உள்ளுறையாக வலியுறுத்தப் பட்டது.
(இதன் பின் பதிப்புக்களில் காணப்படும் ``கொல்லையில் மேயும் பசுக்கள்`` என்னும் மந்திரம் ஏழாந் தந்திரத்தில் வந்தது.)

பண் :

பாடல் எண் : 38

தட்டத்து நீரிலே தாமரை பூத்தது
குட்டத்து நீரில் குவளை எழுந்தது
விட்டத்தி னுள்ளே விளங்கவல் லார்கட்குக்
குட்டத்தில் இட்டதோர் கொம்மட்டி யாமே.

பொழிப்புரை :

தட்டம் - ஆழம் இன்றிப் பரவலாகத் தேங்கியுள்ள நீர். குட்டம் - ஆழமாய்ச் சிறிது இடத்தில் நிற்கும் நீர்; குளத்து நீர் போல்வது முன்னதில் குவளையும், பின்னதில் தாமரையும் பூத்தல் இயல்பு. ஆயினும் இங்கு அவை மாறிக் காணப்படுகின்றன. ஆகவே, இவற்றை விரைந்து சென்று பறியாமல், பக்கத்தில் இருக்கும் மரக்கிளையில் சிறிது நேரம் யாரேனும் காத்திருப்பார்களாயின், இந்த முரண்பாட்டு நிலை நீங்குதல் தெரியவரும்.

குறிப்புரை :

தட்டத்து நீர் விரைவிற் காய்ந்து மறைந்து விடும். குட்டத்து நீர் நீடு நின்று பயன் தரும். ஆகவே, அவை முறையே உலகின்பத்தையும், வீட்டின்பத்தையும் குறித்தன.
தாமரை பெரு விருப்பினையும் குவளை சிறுவிருப்பினையும் குறித்தன. நிலையானதில் பெருவிருப்பும், நிலையாததில் சிறு விருப்பும் உண்டாதல் முறைமை. மெய்ப்பொருள் இயலில் இவை மாறி நிகழ்தலை முன் இரண்டடிகள் குறித்தன. இவை இயற்கைக்கு மாறாகலின் செயற்கையே. செயற்கை காரணம் உடைத்து. அஃது இங்கு ஆணவம். செயற்கை நிலையாதாகலின் ஆணவம் நீங்க இந்நிலை மாறித் தன்னியல்பு நிகழும். அதற்குச் சிறிது காலம் வேண்டும். அதனையே பன்னிரண்டடிகள் குறித்தன. பறித்தல், இங்கு அதனையே நிலையானதாகக் கருதுதல். விட்டமாவது, அதுபோலும் மரக்கிளை. விளங்குதல், அப்பால் செல்லாமல் காத்திருத்தல்.
கொம்மட்டி, ஒருவகைக்கொடி. அது நிலத்திற் படரும். ஆகவே, அதனை நீரில் இட்டால், அழுகிக் கெடும் ஆதலின், அது நிலையாமைக்கு உவமையாயிற்று. ஆக்கம் உவமை குறித்து நின்றது. ``ஆம்`` என்னும் பயனிலைக்கு, `அத்தன்மை` என்னும் தோன்றா எழுவாய் வருவிக்க.
இதனால், உயிர்கட்குச் சிவானந்த வேட்கையே இயற்கையும், விடயானந்த வேட்கை செயற்கையும் ஆதல் உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 39

ஆறு பறவைகள் ஐந்தத் துள்ளன
நூறு பறவை நுனிக்கொம்பின் மேலன
ஏறு பெரும்பதி ஏழும் கடந்தபின்
மாறுத லின்றி மனைபுக லாமே.

பொழிப்புரை :

ஐந்து இல்லங்கள் உள்ளன. அந்த ஐந்திலும் ஆறு வாவல்கள் வாழ்கின்றன. ஐந்து இல்லங்களில் ஒன்றில் உள்ள ஒரு மரத்தின் நுனிக் கிளையில் நூறு வாவல்கள் வாழ்கின்றன. (இந்த இல்லங்களில் எப்படி நாம் குடியிருக்க முடியும்?) வாவல் முதலிய எந்த இடையூறும் இல்லாத வேறோர் இல்லம் உள்ளது. அது போகப் போக உயரமாய் உள்ள இடத்தில் உள்ளது. அந்த ஏறு நிலை முறையில் ஏழு பெரிய ஊர்களைக் கடந்தால், அந்த இல்லத்துட் புகலாம்.

குறிப்புரை :

ஆறு வாவல்கள், காமக் குரோத லோப மோக மத மாற்சரியங்கள். ஐந்து அகம், பஞ்ச கோசங்கள். அவை முன் தந்திரத் தொடக்கத்தில் காட்டப்பட்டன. மரம், பிராணமய கோசம், அதன் நுனிக்கிளை, புத்தி தத்துவம். நூறு வாவல்கள், புத்தி தத்துவத்தின் அளவிலாப் பாவங்கள். நூறு, அளவின்மையைக் குறித்தது. பெரும் பதி ஏழு, ஆதாரம் ஆறும், `நிராதாரம்` எனப்படும் சகச்சிராரமாகிய ஏழாம் தானமும். மனை, `மீதானம்` எனப்படும் துவாதசாந்தம். பிரணவ யோகத்தால் அதனையடைந்தோர் சிவனைச் சார்வர். மாறுதல், பின் விட்டு தீங்குதல். இது பிறப்பு எய்துதலைக் குறித்தது.
` `பறவை`` எனப்பட்டன ஏற்புழிக் கோடலால் வாவலாயின. வாவல், இனத்தால் பறவையன்றாயினும், பறத்தல் பற்றி, `பறவை` எனப்படும்.
இதனால், `ஆதார யோக நிராதார யோகங்களில் நிற்பின், காமம் முதலிய அகப் பகைகளும், புத்தி குண பாவங்களும் நீங்கிச் சிவனைத் தலைப்படுதல் கூடும்` என்பது உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 40

கொட்டனம்- செய்து குளிக்கின்ற கூவலுள்
வட்டனப் பூமி மருவிவந் தூறிடும்
கட்டனம் செய்து கயிற்றால் தொழுமியுள்
ஒட்டனம் செய்தெளி யாவர்க்கு மாமே.

பொழிப்புரை :

[`அனம்` என்பது ``வட்டனம்`` என்பதில் பண்புப் பெயர் விகுதியாகவும், ஏனைய மூன்றிலும் தொழிற்பெயர் விகுதியாகவும் வந்துள்ளது. `கட்டு` என்பது அடியாக. `கட்டணம், கட்டடம்` என்னும் சொற்கள் இக்காலத்தில் வழங்கக் காண்கின்றோம். இங்கும் `அனம்` என்பதற்கு ஈடாக, `அணம்` என்ற பாட வேறுபாடும் காணப்படுகின்றது. கூலிக் நெற்குற்றுதலை, `கொட்டணம் குற்றுதல்` என்பர். எனவே, இம்மந்திரத்தின் முதற்சீர் நான்கும் முறையே, `கொட்டுதல், வட்டம், கட்டுதல், ஒட்டுதல்` என்னும் பொருளவாம். கொட்டுதல் - நிலத்தைத் தோண்டுதல்.]
நிலத்தைத் தோண்டி, மண் அல்லது மணலை அப்பால் குவிக்கின்ற கிணற்றில், அல்லது ஊற்றுக்குழியில் நீரோடு, சுற்றிலும் மண், அல்லது மணலும் உடன் சேர்ந்துவரும். அந்நீர் கலங்கல் நீராய் இருக்கும். மரத்தாலான வட்டத்தின் மேல் சுடுமட் பலகைகளால் ஓரளவு சுவர் எழுப்பி, அதனைக் கயிற்றால் இறுகக் கட்டிப் புறஞ்சுவரோடு ஒட்டிவைத்தால், மண், அல்லது மணல் வாராது, நீர் மட்டுமே ஊறி வந்து தெளிந்து எல்லார்க்கும் பயன்படும்.

குறிப்புரை :

கிணறு தோண்டி, அதனை இடிந்து வீழாமல் நிலைக்கச் செய்தற்கும் இன்றும் இவ்வாறு செய்யப்படுதலைக் காணலாம். இஃது இங்கு நிலத்தை அகழ்ந்து, அதன் அடியில் உள்ள நீரைபபெற்று இன்புறுவார்க்குச் சுற்றிலும் உள்ள மண், அல்லது மணல் ஆகிய கலங்கல் வந்து சேர்வதுபோல, ஞான சாதனைகளால் அஞ்ஞானத்தை அகழ்ந்தெறிந்து தோன்றாத் துணையாய் நின்று சிவத்தைத் தலைப் பட்டு இன்புறுபவர்கட்குச் சிவானந்தத்துடன், பிராரத்த வாசனையும் வந்து தாக்கும். அதனைத் திருவருளாகிய பாதுகாவலைப் பத்தியால் உறுதிப்படச் செய்யின் சிவானந்தமே மேலிட்டு யாவர்க்கும் பயன்தரும், என்பதைக் குறித்து நின்றது.
``தொழுமி`` என்பதும், `கட்டி` என்னும் பொருட்டாய் நின்றது இவையெல்லாம் சில நாட்டு வழக்குப்போலும்!.
(இதனை அடுத்துப் பதிப்புக்களில் காணப்படும் இரு மந்திரங்கள் வெளிப்படைப் பொருள் ஆகலின், பின் அதிகாரத்தில் இருத்தற்குரியன.)

பண் :

பாடல் எண் : 41

கொட்டுக் குந்தாலி இரண்டே இரண்டுக்கும்
கொட்டுக்குந் தாலிக்கும் பாரை வலிதென்பர்
கொட்டுக்குந் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும்
இட்டம் வலிதென்பர் ஈசன் அருளே.

பொழிப்புரை :

கொட்டு - மண்வெட்டி. குந்தாலி - கோடலி. `இந்த இரண்டே உள்ளன` என்க. `உள்ளன` என்பது சொல்லெச்சம்.

குறிப்புரை :

``இரண்டுக்கும்`` என்பதை இரண்டாம் அடியில், ``குந்தாலிக்கும்`` என்பதன் பின்னர்க் கூட்டுக. இரண்டாம் அடியில் `கோட்டுக் குந்தாலி` என்பது உம்மைத் தொகையாய் நின்றது. அதன் ஈற்றில் நான்கனுருபு. உறழ்பொருளாகிய ஐந்தாவதின் பொருளில் வந்தது. ஈற்றில் உள்ள உம்மை சிறப்பு.
பாரை - கடப்பாரை. ``பாரைக்கு நெக்குவிடாப் பாறை, பசுமரத்தின் - வேருக்கு நெக்குவிடும்``l என்னும் ஔவையார் வாக்கைக் காண்க.
மண்வெட்டி ஈர மண்ணைத்தான் பறிக்கும். கோடாலி மரத்தை மேலோடு வெட்டும். பாரை வலிய நிலைத்தையும் அகழும். மரத்தை வேரேடும் சாய்க்கும். ஆகவே, மண்வெட்டி, கோடாலி இரண்டையும் விடப் பாரை வலியது. ``இரண்டே உள; பாரை வலியது`` என்றதனால், பாரை கிடைத்தற்கரிதாதல் கூறப்பட்டது.
மண்வெட்டி இடைகலை நாடி, இது பூரிப்பால் நோயைப் போக்கும். கோடலி, பிங்கலை நாடி, இஃது இரேசகத்தால் மாசு நீக்கும். பாரை, சுழுமுனை நாடி. இது கும்பகத்தால் இறப்பு நீக்கல், அறியாமையைப் போக்கல் ஆகியவைகளைச் செய்யும். எனவே, முன்னிரண்டடிகளால் வாசி யோகத்தின் சிறப்புணர்த்தப்பட்டதாம்.
இட்டம் - வெளிப்படை பொருளில், `இட்ட+அம்` எனப் பிரித்து, மேகம் பெய்த மழையையும். (அம்-நீர்) உள்ளுறைப் பொருளில் அன்பையும் குறித்தது. அன்பு, சிவ பத்தி.
மழை நீர் நிலத்தையும் எளிதில் அகழும்; மரங்களையும் எளிதில் வேரோடு கல்லிவிடும். ஆகவே அது, மண்வெட்டி, கோடாலி, பாரை மூன்றையும் விட வலியதாம்.
`வாசியோகத்தைவிடப் பத்தி வலிது` என்றபடி,
`ஈசன் அருள் நிலை இவ்வாறு உள்ளது` என்க.
``ஆறு பார்ப்பானுக்கு இரண்டே கண்கள்;
மாறுகோள் இல்லை; மதியுள்ளோர் சொல்லுங்கள்``
என்றால், பின்னடி முன்னடியைச் சார்ந்து வந்ததேயன்றி, உள்ளுறைப் பொருளதாகாது. (ஆறு - வழி, அல்லது யாறு. பார்ப்பான் - பார்ப்பவன்.) அஃதே போல், இங்கு, ``ஈசன் அருள்`` என்பது உள்ளுறைப் பொருள் இன்றி, முற்கூறிய பொருளைச் சார்ந்து நின்றது.

பண் :

பாடல் எண் : 42

கயலொன்று கண்டவர் கண்டே யிருப்பர்
முயலொன்று கண்டவர் மூவரும் உய்வர்
பறையொன்று பூசல் பிடிப்பான் ஒருவன்
மறையொன்று கண்ட துருவம்பொன னாமே.

பொழிப்புரை :

குளத்தில் கயல் மீன்களில் ஒவ்வொன்றை அதன் துள்ளல், பிறழ்ச்சி முதலியவற்றின் கவர்ச்சியால் கண்டு மயங்கினோர் அதைக் கண்டுகொண்டிருப்பதோடே ஒழிவர். (இஃது, `உலகத்தில் மாயையின் விசித்திரத்தில் மயங்கினோர் அம்மயங்குதலோடே ஒழிவர்` என்பதைக் குறித்தது.)
கரையில் முயல் ஒன்றைக் கண்டவர் அதனைப் பிடிக்க அஃது ஓடும் வழியே ஓடி, இறுதியில் பெரும் பயனைப் பெறுவர். (அஃது எங்ஙனமெனில்,) அவ்வழியின் முடிவில் மறைவில் ஒரு பொருள் உள்ளது; அது பொன். (`அதனைப் பெறுவர்` என்றபடி.) (``முயல்`` என்பது சிலேடை வகையால் `முயற்சி` எனப் பொருள் தந்து, சரியை, கிரியை, யோகம் ஆகிய தவங்களைக் குறித்தது. முயல் ஓடி அடையும் புதரில் சில வேளைகளில் புதையல்கள் இருப்பதுண்டு. அஃது இங்குச் சிவஞானத்தைக் குறித்தது,
``மறை`` என்பது சிலேடையாய், காட்டுப் புதர் மறைவையும், வேதத்தையும் குறித்தது.
``மறை ஒன்று கண்டது`` என்னும் தொடரை, வெளிப்படைப் பொருட்டு, `மறைவில் ஒரு பொருள் காணப்பட்டது` எனவும், உள்ளுறைப் பொருட்டு, `வேதம் முடிவாக ஒரு பொருளைக் கண்டது` எனவும் விரித்துக் கொள்க.
உருவம் - பொருள். `அவ்வுருவம்` எனச் சுட்டு வருவிக்க.
``பொன்`` என்பது, பொன்னையும், பொன்னோடொக்கும் சிவத்தையும் குறித்தது. சிவம் பொன்னாகவும், உயிர் செம்பாகவும் சித்தாந்தத்தில் சொல்லப்படுதல் வெளிப்படை.
கயலைக் காண்போரும், முயலைக் காண்போரும் ஆகிய அவ்விருத் திறத்தாருமன்றித் தனியே நின்று. `நான் கயலைப் பிடிப்பேன், முயலைப் பிடிப்பேன்` என்று வாய்ப்பறை சாற்றுதலையே உறுதிப் பொருளாகக் கொண்ட ஒருவன் யாதொரு பயனையும் பெறாமல், வாய்ப்பறை சாற்றுதலோடே நிற்பன். (இஃது அறம் முதலிய பொருள் நூல்களை ஓதுதல் - பிறருக்கு உரைத்தல்களை மட்டுமே செய்து, தாம் அவற்றின் வழி நில்லாதாரைக் குறித்தது.)
கரையில் முயல் ஒன்றைக் கண்டவர் அதனைப் பிடிக்க அஃது ஓடும் வழியே ஓடி, இறுதியில் பெரும் பயனைப் பெறுவர். (அஃது எங்ஙனமெனில்,) அவ்வழியின் முடிவில் மறைவில் ஒரு பொருள் உள்ளது; அது பொன். (`அதனைப் பெறுவர்` என்றபடி.) (``முயல்`` என்பது சிலேடை வகையால் `முயற்சி` எனப் பொருள் தந்து, சரியை, கிரியை, யோகம் ஆகிய தவங்களைக் குறித்தது. முயல் ஓடி அடையும் புதரில் சில வேளைகளில் புதையல்கள் இருப்பதுண்டு. அஃது இங்குச் சிவஞானத்தைக் குறித்தது.
``மறை ஒன்று கண்டது`` என்னும் தொடரை, வெளிப்படைப் பொருட்டு, `மறைவில் ஒரு பொருள் காணப்பட்டது` எனவும், உள்ளுறைப் பொருட்டு, `வேதம் முடிவாக ஒரு பொருளைக் கண்டது` எனவும் விரித்துக் கொள்க.
உருவம் - பொருள் `அவ்வுருவம்` எனச் சுட்டு வருவிக்க.
``பொன்`` என்பது, பொன்னையும், பொன்னோடொக்கும் சிவத்தையும் குறித்தது. சிவம் பொன்னாகவும், உயிர் செம்பாகவும் சித்தாந்தத்தில் சொல்லப்படுதல் வெளிப்படை.
கயலைக் காண்போரும், முயலைக் காண்போரும் ஆகிய அவ்விருத் திறத்தாருமன்றித் தனியே நின்று. `நான் கயலைப் பிடிப்பேன், முயலைப் பிடிப்பேன்` என்று வாய்ப்பறை சாற்றுதலையே உறுதிப் பொருளாகக் கொண்ட ஒருவன் யாதொரு பயனையும் பெறாமல், வாய்ப்பறை சாற்றுதலோடே நிற்பன். (இஃது அறம் முதலிய பொருள் நூல்களை ஓதுதல் - பிறருக்கு உரைத்தல்களை மட்டுமே செய்து, தாம் அவற்றின்வழி நில்லாதாரைக் குறித்தது.
``பிறருக்குப் பயன்படத் தாம்கற்ற விற்பார்,
தமக்குப் பயன்வே றுடையார்; ... ... ...
... ... ... தென்புலத்தார்
கோவினை வேலை கொளல்`` *
என்றார் குமரகுருபரரும். பூசல் - ஆரவாரம்.

குறிப்புரை :

``ஓதி யுணர்ந்து, பிறர்க்குரைத்தும் தான் அடங்காப் - பேதையிற் பேதையார் இல்``l என்றபடியுள்ள வாய்ப்பறை சாற்று வானது இழிவு நோக்கி ஒருமையாற் கூறினார். அம்மூன்றாம் அடியை இறுதிக்கண் கூட்டியுரைக்க. உலக நெறி பிறவி நெறியாகலின் அதனைக் குளமாகவும், தவநெறி வீட்டு நெறியாகலின் அதனை நிலமாகவும் கூறினார். இதில் ஈரடி எதுகை வந்தது.
இதனால் உலக நெறியில் நிற்பார் உலக இன்பத்தையும், தவநெறியில் நிற்பார் வீட்டின்பத்தையும் பெறுதலும், யாதொரு நெறியிலும் நில்லாது வாய்ப்பறை சாற்றுவார் யாதும் எய்தாமையும் உடன் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 43

கோரை யெழுந்து கிடந்த குளத்தினில்
ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது
நாரை படிகின்றாற் போல்நல்ல நாதனார்
பாரைக் கிடக்கப் படிகின்ற வாறே.

பொழிப்புரை :

இயல்பாகவே வலிய கோரைப் புற்கள் முளைத்துப் படர்ந்து கிடக்கின்ற ஒரு குளத்தில், அதற்கு மேல் மெல்லிய ஆரைக் கொடிகளும் தொடர்ந்து படர்ந்துவிட்டன. இந்நிலையில் அந்தக் குளத்தை உடைய நல்ல தலைவர் ஒருவர், அதில் நாரைகள் மூழ்குவதுபோலத் தரையளவும் செல்ல மூழ்குவது எங்ஙனம்?

குறிப்புரை :

`இயலாததாய் உள்ளது` என்பதாம். குளம், சீவான்மா, அதன் அறிவு அக்குளத்தின் நீர், வலிய கோரை ஆணவ மலம். அதன் மேல் தொடர்ந்து படர்ந்த ஆரைக் கொடிகள் மாயையும், கன்மமும், குளத்தை உடைய நாதனார், பரமான்வாகிய சிவன். நாதனார் குளத்து நீரில் தரையளவும் செல்ல முழுகுதல், சிவன் சீவான்மாவின் அறிவு முழுதும் பற்றி விளங்குதல். இஃது இயற்கையாயினும் ஆணவ மலம் காரணமாகச் செயற்கையாய்ப் புதிதாக விளங்குதல்போலக் கூறப்பட்டது. ``நாரைபோல்` என்பது இடைக்கண் போந்த உவமை. ``நாரை`` என்றது நீர்மூழ்கும் பறவைகளைக் குறித்த குறிப்பு மொழி. ``பாரை`` என்னும் இரண்டன் உருபை `பார்க்கண்` என ஏழாவதாகத் திரித்துக் கொள்க. படிதல் - மூழ்குதல் `படிகின்றவாறு எங்ஙனம்` என ஒரு சொல் வருவித்து முடிக்க.
இதனால், `வலிய மூல மலமாகிய ஆணவ பந்தமும், அதற்கு மேல் ஆகந்துக மலங்கலாகிய மாயா கன்ம பந்தங்களும் உள்ள வரையில் சிவ விளக்கம் சீவ போதத்தில் முழுமையாக உண்டாதல் இயலாது` என்பது உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 44

கொல்லைமுக் காதமும் காடரைக் காதமும்
எல்லை மயங்கிக் கிடந்த இருநெறி
எல்லை மயங்கா தியங்கவல் லார்களுக்(கு)
ஒல்லை கடந்துசென்(று) ஊர்புக லாமே.

பொழிப்புரை :

இரண்டு வழிகள் தனித்தனியே பிரிந்து விளங்காமல் ஒன்றோடொன்று பின்னிக் கிடக்கின்றன. ஒரு வழி மூன்று காத தூரம் உள்ளது. அதிற் சென்றால், விளைவுள்ள கொல்லையை அடைந்து இன்புறலாம்.
மற்றொரு வழி அரைக்காத தொலைவே உள்ளது. அது கருதி அதிற் சென்றால் அஃது இருள் அடர்ந்த காட்டில் கொண்டுபோய்ச் சேர்க்கும். ஆகவே, அவ்வழிகளில் முக்காத வழியை ஊன்றியுணர்ந்து கண்டு நடக்க வல்லவர் உளரானால், அவர் மேற்குறித்த கொல்லையை யேயன்றி, அதைக் கடந்துள்ள நல்லதோர் ஊரையும் விரைவில் அடையலாம்.

குறிப்புரை :

முக்காத வழி தவ நெறி அதனைக் கடைபோகச் செல்லுதல் அரிதாதல் பற்றி, முக்காவதம் என்றார். கொல்லை, சிவலோகம், அதைக் கடந்த ஊர் பரமுத்தி நிலை.
அரைக் காதவழி வினைவழி. அஃது எளிதாதல் பற்றி, ``அரைக் காதம்`` என்றார். எனவே, `இதிற்றான் பெரும்பாலோர் செல்வர்` என்பது விளங்கும்.
``செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர்
செயற்கரிய செய்கலா தார்``
- திருக்குறள் - 26.
என்னும் திருக்குறளை இங்கு நினைவு கூர்க. காடு - பிறவிச் சூழல்.
முதல் அடியின் ஈற்றில் `ஆக` என்பது வருவிக்க.
இதனால், உலகர் அவநெறி சென்று பிறவியை அடைய, பெரியோர் தவநெறி சென்று வீடு பெறுதல் உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 45

உழவொன்று வித்து ஒருங்கிய காலத்(து)
எழுமழை பெய்யா(து) இருநிலம் செவ்வி
தழுவி வினைசென்று தான்பய வாது
வழுவாது போவன் வளர்சடை யானே.

பொழிப்புரை :

வெள்ளிதாய் எழுந்த மேகம் மழை பெய்தல் இல்லை. அப்பொழுது உழவுக்கு வேண்டுவதாகிய விதைகள் சேமித்து வைக்கப்பட்ட இடத்திலே கிடக்க, நிலமும் பதப்படாது, உழவுத் தொழிலும் நிகழ்ந்து பயன் தாராது.
(இதனானே, `கரிதாய் எழுந்த மேகம் மழைபொழிந்த காலத்து, மேற்கூறியன மேற்கூறியவற்றிற்கு மறுதலையாய் நிகழும்` என்பதும் பெறப்படும்.) ஆகவே, மழையைப் பெய்விப்போனாகிய சிவன் பெய்வியாது ஒழிதல் இல்லை.

குறிப்புரை :

``மழை`` (மேகம்) என்றது, சிவனது அருளை. அதனைப் போககாமிகளை நோக்கி, மறக் கருணையாகிய திரோதான சத்தியாகவும், மோட்ச காமிகளை நோக்கி, அறக் கருணையாகிய அருட் சத்தியாகவும் கொள்க.
இனி, `உழவு, வித்து` என்பனவும் போகத்திற்கு ஆகாமியம் ஏறுதலும், சஞ்சிதம் கிடத்தலுமாகவும், மோட்சத்திற்குத் தவம் மிகுதலும், ஞானம் முதிர்தலுமாகவும் கொள்க. நிலம், இரண்டிற்கும் ஆன்ம உணர்வேயாம்.
``எழு மழை பெய்யாது`` என்பதனை முதலிற்கூட்டிப் பொருள் கொள்க. பெய்யாது - பெய்யாமையால், வினை. உழவுத் தொழில். மழையின் இன்றியமையாமையையே உடன்பாட்டு முகத்தாலும், எதிர்மறை முகத்தாலும் வலியுறுத்தினார்.
இதனால் `போகமாயினும், மோட்சமாயினும் சிவனருள் இன்றி ஆகாது; அவன் அன்றி ஓரணுவும் அசையாது` என்பது உள்ளுறை வகையால் வலியுறுத்தப்பட்டது.
``கண்ணுதல் யோகிருப்பக்
காமன் நின்றிட வேட்கைக்கு
விண்ணுறு தேவ ராதி
மெலிந்தமை ஓரார்; மால்தான்
எண்ணிவேள் மதனை ஏவ,
எரிவிழித் திமவான் பெற்ற
பெண்ணினைப் புணர்ந்து யிர்க்குப்
பேரின்பம் அளித்த தோரார்``
என்பது சிவஞான சித்தி.* இதனை ஒட்டி,
``எல்லா உயிர்க்கும் உயிர் அருணேசர்;
இவர் அசைவி
னல்லாது அணுவும் அசையாது என்பது
அறிந்தனமே;
வில்லாடன் மாரன் இருக்கவும் யோகம்
விளைத்த அந்நாள்
புல்லா திருந்தன எல்லா உயிருந்தம்
போகத்தையே``*
எனப் பிற்காலத்தவரும் கூறினார். இதன் ஈற்றடி, முதல் மூன்று அடிகளின் சார்பு பொருளாக வந்தது.

பண் :

பாடல் எண் : 46

பதுங்கினும் பாய்புலி பன்னிரு காதம்
ஒதுங்கிய தண்கடல் ஓதம் உலவ
அதுங்கிய ஆர்கலி ஆரமு தூறப்
பொதுங்கிய ஐவரைப் போய்வளைத் தானே.

பொழிப்புரை :

காட்டிலே வாழ்கின்ற ஒருவன் அங்குள்ள ஒரு புலிக்கு அஞ்சி எங்கே பதுங்கியிருந்தாலும் அந்தப் புலி பன்னிரண்டு காதம் வரையிலும் பாய்கின்றது. அதனால் அவன் அந்தக் காட்டை விட்டு ஒரு கடற்கரையை அடைந்தான். அங்கே புலிப் பாய்ச்சல் இன்றிக் குளிர்ச்சியான அலைகள் அழகாக வந்து வந்து சென்றன. பின் அவன் பெற ஒட்டாமல் ஐவர் வந்து கூர்மையான கருவியாற் குற்றினர். ஆயினும் அவன் அவர்களை வளைத்துக் கொண்டு அடித்துத் துரத்தினான். (பின்பு அவன் அமிர்தத்தை உண்டு மகிழ்ந்தான் என்பதைச் சொல்ல வேண்டுமோ!.)

குறிப்புரை :

காடு, தூல உடம்பு. அதில் உள்ள பிராண வாயு பன்னிரண்டங்குலம் வெளியேறி வாழ்நாளைச் சிறிது சிறிதாக உண்டு வருதலால் அதனைப் பன்னிரண்டு காதம் பாய்ந்து தாக்கும் புலியாகக் கூறினார். `பன்னிரு காதம் பாயும்` என ஒரு சொல் வருவித்து முடிக்க.
உடம்பையே உடம்பாகக்கொண்டு செயற்படுதலை விடுத்து, அருளையே உடம்பாகக் கொள்ளுதலைக் கடற்கரையை அடைந்ததாகக் கூறினார். கடற்கரை இனிய இடமாதல் தெளிவு. அருளை உடம்பாகக் கொண்டோர்க்கு நிகழ்வன யாவும் அருட் செயலாகத் தோன்றுதலைக் கடல் அலைகள் வந்து உலவுவதாகக் கூறினார்.
அமிர்தம், சிவானந்தம். அதனைப் பற்ற ஒட்டாமல் வந்து தாக்கும் ஐவர் ஐம்பொறிகள். அருள்வழி நிற்பார்க்கு ஐம்பொறிகளை வெல்லும் எளிதாதல்பற்றி, ``ஐவரைப் போய் வளைத்தான்`` என்றார்.
அதுக்குதல், பொதுக்குதல் என்பன எதுகை நோக்கி மெலிந்து நின்றன. அதுக்குதல் வாயில் இட்டுச் சுவைத்தல். பொதுக்குதல், உடம்பில் தைத்தலும், தைக்கச் செய்தலும்.
`ஆர்கலி அதுக்கிய ஆரமுது ஊற` என்க.
``பாய்புலி`` என்றதனால், `பதுங்குதல் காட்டில்` என்பது பெறப்பட, அதனால் `ஒருவன்` என்னும் எழுவாய் பெறப்பட்டது. ஒருவன் உயிர்.
பெத்த நிலையில் நிற்பார்க்கு மாயா உடம்பே உடம்பாகவும் முத்தி நிலையில் நிற்பார்க்கு அருளே உடம்பாகவும் நிற்றலும், முறையே அவற்றால் விளையும் துன்ப இன்பங்களும் இதனால் உள்ளுறையாகக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 47

தோணிஒன் றேறித் தொடர்ந்து கடல்புக்கு
வாணிபம் செய்து வழங்கி வளர்மகன்
நீலிக் கிறைக்குமேல் நெஞ்சின் நிலைதளர்ந்(து)
ஆலிப் பழம்போல் அளிகின்ற அப்பே.

பொழிப்புரை :

கடலில் தோணி ஒன்றில் ஏறிப் புகுந்து சென்றும், மீண்டும் தொடர்ந்து வாணிபத்தைச் செய்தும் ஆக்கம் பெற்று வருகின்ற ஒருவன் தனது ஆக்கத்தை மனைவியர்க்குக் கொடுத்து வாழ்க்கை நடத்தச் சொல்லாமல் பரத்தைக்கு வழங்குவானாயின், நாளடைவில் அவன் கவலை மீதூர, ஆலங்கட்டி பழம்போலத் தோன்றிச் சாற்றைத் தாராமல் நீரையே தருதல் போலும் நிலையை அடைவான்.

குறிப்புரை :

``உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்``3 என்பது போல அவன் வாழ்க்கை கெடும் என்றபடி.
தோணி, மனம். ``மனம் எனும் தோணி பற்றி``l என அப்பரும் அருளிச்செய்தார். அந்தக் கரணம் அனைத்தும், `மனம்` எனத்தொகுத்து வழங்கப்படும். அந்தக் கரணமே சூக்கும தேகம். அது முத்தியடையுங்காறும் நீங்காதிருக்கும். `உயிர்கள் செய்த புண்ணிய பாவங்கள் புத்தி தத்துவத்தைப் பற்றிக் கிடந்து பயன் தரும்` என்பது சைவ சித்தாந்தம் அதனால், அதனைப் பிறவியாகிய கடலில் பயணம் செய்தற்குரிய தோணியாக உருவகித்தார். வழங்குதல் - பயணம் செய்தல்.
உயிர் உடம்பை பற்றி நின்று பிற உயிர்களிடத்து நல்லன தீயனவற்றைச் செய்தல், வாணிபத்தில் விலை கொடுப்பதனோடும், அதனால் செய்த உயிர் தான் அடைகின்ற அறம் பாவங்கள் பண்டத்தைக் கொள்வதனோடும் ஒக்கும். ஆதலின் இச்செயலை ``வாணிபம்`` என்றும், `அதனை உயிர் தொடர்ந்து நடத்துகின்றது` என்றும் கூறினார்.
அற உணர்வும் இறையுணர்வும் மனைவியர். கொண்ட பண்டங்களாகிய அறம் பாவங்களை இவ்விருவகை உணர்வுகளும் முதிர்வதற்குப் பயன்படுத்தினால் நலன் விளையும். அது பற்றி இவ்வுணர்வுகளை மனைவியராகக் கூறினார்.
பொய்க் கண்ணீர் வடிக்கின்றவளை `நீலி` என்றல் வழக்கு. அது பற்றிப் பொய்யாக பரிவு காட்டும் பரத்தையை, ``நீலி`` என்றார்.
பரத்தை, பல பொருள்கள் மேலும் செல்லும் ஆசை. ஒருவன் தனது அறிவால் மேலும் மேலும் ஆசையை வளர்த்தால் அவன் கெடுவானன்றோ! அது பற்றி, ``நெஞ்சின் நிலைதளர்ந்து ... ... அன்பே`` என்றார். அளிதல், மெலிந்து கரைதல். `அப்பே ஆம்` என முடிக்க. இம்மந்திரம் ஈரடி எதுகை பெற்றது.
இதனால், `அறிவால் அற உணர்வையும், இறையுணர்வையும் பெருக்கிக் கொள்ளாமல், ஆசையை வளர்ப்பார் கெடுவர்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 48

முக்காத ஆற்றிலே மூன்றுள வாழைகள்
செக்குப் பழுத்த திரிமலம் காய்த்தன
பக்குவம் மிக்கார் படங்கினார் கன்னியர்
நக்குமல ருண்டு நடுவுநின் றாரே.

பொழிப்புரை :

முக்காத ஆறு - தனித்தனி ஒவ்வொரு காதத் தொலைவுள்ள மூன்று ஆறுகள். அவை, `உலகியல் ஒழுக்கம், மெய்நெறி ஒழுக்கம், மெய்யுணர்வு` என்பனவாம்.
அந்த ஆறுகளில் தனித்தனி ஒன்றாக, மூன்று வாழை மரங்கள் உள்ளன. அவை அவற்றால் விளையும், அறமும், அருளும், வீடு பேறுமாம்.

குறிப்புரை :

`செகு` என்னும் பகுதி ஒற்றிரட்டி, `செய்து` என்னும் இறந்த கால வினையெச்சமாய் நின்றது. இது, `செகுத்து` எனவும் வரும். செகுத்தல் - அழித்தல். பழுத்த - முற்றிய. ``காய்த்தன`` என்பது, `ஒழித்தன` என்னும் குறிப்பு. அதனால் ஏற்புடையன கொள்ளப் பட்டன.
`மலம்` என்பது இங்கு, `அழுக்கைக் குறித்து, அதனால் விளையும் நோயைக் குறித்தது. மூன்று வாழைகளும் முறையே பூ, காய், பழம் என்பவற்றால் ஒவ்வொரு நோயைப் போக்கும் நிலையில் உள்ளன. பக்குவம் மிக்கவர்கள் பழத்தை உண்டு எல்லா நோய்களும் நீங்கப்பெற்று அமைதியுற்றார்கள். (`பக்குவான்மாக்களாய் உள்ளவர்கள் மெய்யுணர்வாகிய பழத்தை உண்டு வீட்டை அடைந்து இன்புற்றார்கள்` என்பதாம்.)
`பக்குவனார்` என்பது, `பக்கனார்` எனக்குறைந்து நின்றது. `மிக்கு ஆர்பு அடங்கினார்` எனப்பிரிக்க. ஆர்பு - உண்டு; `செய்பு` என்னும் வினையெச்சம்.
பக்குவம் வாயாத சிறு மகளிரைப் போலப் பக்குவம் எய்தாது, அபக்குவராய் உள்ளோர் பூவையும். காயையுமே மகிழ்ந்து உண்டு, `நோயுற்றோர், நோயற்றோர்` என்னும் இருதிறத்தார்க்கும் நடுப்பட்ட வர்களாய் நின்றார்கள். பழத்தின் அருமையறிந்து அதனைப்பறித்து உண்பதற்கும் அறிவு வேண்டும் என்க.
[பக்குவம் முதிராது அபக்குவராய் உள்ளவர்கள், மெய் யுணர்வைப் பெறாது, இருவகை ஒழுக்கங்களை மட்டுமே உடையராய், `அறம், அருள்` என்பவற்றை மட்டும் பெறுதலோடு, உலகர்க்கும், அறிவர்க்கும் இடைப்பட்டவராய் உள்ளனர்` என்பதாம்.]
உடலில் உண்டாகும் மூன்று நோய்களாவன `தோல் நோய்` வயிற்று நோய் குருதி நோய்` என்பன. இவை முறையே, `மாயை, கன்மம், ஆணவம்` என்னும் மலங்கலைக் குறித்தன. இவைகளில் வாழைப் பூத் தோல் நோயையும், காய், தோல் நோயோடு வயிற்று நோயையும், பழம் எல்லா நோயையும் போக்கும். அது போல அறம் மாயையாகிய உலகியல் துன்பத்தைப் போக்கும். அருள் இருவினை யொப்பு வருவிக்கும் முகத்தால் கன்ம மலத்தைப் போக்கி, உலகியல் துன்பமும் உயிரைத் தாக்காதவாறு செய்யும். அருளாகிய சத்தி நிபாதத்தில் உண்டாகும் மெய்யுணர்வு, முன்பே பாகம் எய்திய ஆணவ மலத்தை அடியோடு போக்கி, மெய்ப் பொருளைக் காட்டி, வீடு அடைவிக்கும், ஆணவம் நீங்கவே, ஏனை மலங்களுக்கும் தொடர்பு யாதும் இன்றி, அகன்றொழியும். ஆகவே, வீடெய்தினார்க்குத் துன்பம் யாதும் இல்லையாம்.
``திரிமலம்`` என்பது, உள்ளுறைப் பொருளில் மும்மலங்களைக் குறித்தது.
நகுதல் - மகிழ்தல். ``மலர் உண்டு`` என்றாரேனும், ``மலரையும், காயையும் உண்டு`` என்றல் கருத்தென்க.
இதனால், அபக்குவ பக்குவிகளது இயல்பும், அவர் செய்யும் சாதனைகளும், அவற்றின் பயன்களும் உள்ளுறையாகக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 49

அடியும் முடியும் அமைந்ததோர் அத்தி
முடியும் நுனியின்கண் முத்தலை மூங்கில்
கொடியும் படையுங் கொளும்சார்பை யைந்து
மடியும் வலம்புரி வாய்த்தவ் வாறே.

பொழிப்புரை :

வேரும், கிளையும் அமைய வேண்டிய முறையிலே அமைந்த அத்தி மரம் ஒன்று உள்ளது (அத்தி - எலும்பு. அது சிலேடையாய், உள்ளுறையில் உடம்பைக் குறித்தது. உடம்பிற்கு வேர் வித்தியா தத்துவத்தில் உள்ள மாயா தத்துவம். கிளை, பிருதிவி தத்துவம்.)

குறிப்புரை :

முடியும் நுனி - கிளைக்கும் மேல் உள்ள இடம். மூங்கில், சுத்த தத்துவம். முத்தலையாவன அதிகார போக, லய தத்துவங்கள்.
கொடியும், படையும் தாத்துவிகங்கள். கொடி, படர்க்கொடி. படை, இலை தளிர் பூ முதலியவற்றின் கூட்டம். கொள் சார்பு - கொடி கட்கும், படைகட்கும் பற்றாய் உள்ளவை. ``ஐயைந்து`` உம்மைத் தொகைப் பத்து. அவை ஞானேந்திரியம் ஐந்தும், கண்மேந்திரியம் ஐந்தும். இவைகளாலேயே உயிர்க்கு எல்லா அறிவும், செயலும் நிகழும்.
அத்திப்பழம் உணவாகவும், மூங்கில் பலவற்றுக்குக் கருவி யாகவும் நமக்கு உதவுவனபோலத் தோன்றினாலும் இவையெல்லாம் பேருதவிகள் அல்ல. இவற்றின் வேறாய் இனியதொரு சோலை உண்டு; அதனை அடைந்தால், அல்லல்கள் அற்று, அமைதியுடன் வாழலாம். ஆயினும் அந்தச் சோலையை இந்த அத்தி மரத்தின் வழியாகவே அடைய வேண்டியுள்ளது. அதனால் இந்த அத்தி மரத்தையும் புறக்கணித்தற்கு இல்லை.
வலம்புரி - நந்தியாவட்ட மலர். அது நல்லதொரு சோலையைக் குறித்த குறிப்பு மொழி. மடிதல், இங்கு, அல்லலற்று அமைதியுடன் இருத்தல். ``சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே``3 என முதற்கட் கூறியதையும் நினைக.
சோலை, முத்தி நிலை. `அதனை அடைதற்குச் சாதனமாகவே இவ்வுடம்பு அமைந்துள்ளது` என்பதை, ``வலம்புரி வாய்த்தது அவ் ஆறே`` என்றார். ஆறு - வழி. `ஆற்றால்` என உருபு விரிக்க. ஏகாரம், பிரிநிலை.
இதனால், முன்பு, ``உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே`` என வெளிப்படையாகக் கூறப்பட்ட பொருள் உள்ளுறையாகக் கூறி வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 50

பன்றியும் பாம்பும்பசு முசு வானரம்
தென்றிக் கிடந்த சிறுநரிக் கூட்டத்துள்
குன்றாமைக் கூட்டித் தராசின் நிறுத்த பின்
குன்றி நிறையைக் குறைக்கின்ற வாறே.

பொழிப்புரை :

ஒரு குறு நரிக் கூட்டத்திற்குள்ளே, பன்றி, பாம்பு, பசு, குரங்கு இவைகளும் நிறைந்துள்ளன. அவைகளின் இயல்பை முற்றவும், துலாக்கோலில் இட்டு நிறுப்பது போல நுட்பமாக ஆராய்ந்து உணர்ந்தால் அவற்றால் விளையும் துன்பங்களைச் சிறிது சிறிதாகக் குறைக்கும் நிலை உண்டாகும்.

குறிப்புரை :

குறுநரிகள், சகல வருக்கத்து ஆன்மாக்கள். பிரளயாகலர் விஞ்ஞான கலர்கள் பெரு நரிகள். நரி தந்திரம் உடையது ஆதலின் அது அறிவுடைய - சிற்றறிவுடைய ஆன்மாக்கட்கு உவமையாயிற்று.
பன்றி, பாம்பு, பசு இவை முறையே தாமத, இராசத, சாத்துவிக குணங்கள். குரங்கு, மனம், முசு, வானரம், இரு பெயர் ஒட்டு. தராசில் இட்டு நிறுத்தல் தத்துவ ஆராய்ச்சியை நுண்ணிதாகச் செய்தல்.
`குன்றியளவாக` என ஆக்கம் வருவித்து, `குன்றி குன்றியாக` என உரைக்க. குன்றி - குன்றிமணி. நிறை, பன்றி முதலியவற்றின் வலிமை. `குறைக்கின்ற ஆறு உளதாம்` என ஒரு சொல் வருவித்து முடிக்க.
`தெற்றி` என்பது மெலிந்து நின்றது. கிடந்த - கிடந்தன. தெற்றிக் கிடத்தல் - நெருங்கிக் கிடத்தல்.
இதனால், தத்துவ ஆராய்ச்சியே பந்த நீக்கத்திற்கு வழியாதல் உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 51

மொட்டித் தெழுந்ததோர் மொட்டுண்டு மொட்டினைக்
கட்டுவிட் டோடின் மலர்தலும் காணலாம்
பற்றுவிட் டம்மனை பாழ்பட நோக்கினால்
கட்டுவிட் டாலன்றிக் காணஒண் ணாதே.

பொழிப்புரை :

ஓர் இல்லத்திற்குள்ளே சிறிதளவே அரும்பிய அரும்பு ஒன்று உள்ளது. அது மலராமைக்குக் காரணம் அதனை இறுக்கியுள்ள பொருள்கள். ஆகவே, இறுக்கிய பொருள்கள் நீங்கினால், அந்த அரும்பை மலர் நிலையிலும் வைத்துக் காண முடியும். (ஆனால், அரும்பு இல்லத்திற்குள் இருப்பதால், கதிரவன் ஒளி, காற்று முதலியன புக முடியாமையினால், இறுக்கியுள்ள பொருள்கள் நீங்குமாறில்லை.) உடையவள் அந்த இல்லத்தின்மேல் உள்ள பற்றைவிட்டு, அதனை வெற்ற வெளியாகச் செய்தால், இறுக்கிய பொருள்களும் நிங்கும்; அரும்பும் மலரும். ஆகவே, அந்த நிலையை அந்த இல்லம் வெளியானாலன்றிக் காண இயலாது.

குறிப்புரை :

மொட்டித்தல் - அரும்புதல். மொட்டு - அரும்பு. ஓர் மொட்டு, சாதியொருமை. அஃது பக்குவம் அடையாத உயிர்களைக் குறித்தது. பக்குவம் வாராதபடி தடுப்பது சூழ்நிலை. அஃது இங்கு மும்மலங்களைக் குறித்தது. இல்லம், அறிவர் இனம் இல்லாத, உலகர் இனம், `அவ்வினத்தை விட்டு அறிவர் இனத்தை ஒருவன் அடைந்தால், கட்டு நீங்குதற்குரிய நிலைமை உண்டாகி அறிவு முதிரப் பெற்று வீடு பெறலாம்; இல்லையேல் இயலாது` என்றபடி.
மூன்றாம் அடியை இரண்டாம் அடிக்கு முன்னர்க் கூட்டியுரைக்க. ``அம்மனை`` எனச்சுட்டிக் கூறினமையால், அரும்பு மனைக்குள்ளே இருத்தல் பெறப்பட்டது. அரும்பு, உயிருணர்வு. ``கட்டு விட்டு ஓடின்`` என்ற அனுவாதத்தால் கட்டு விட்டோடுதல் பெறப்பட்டது. `மலர்தல் நிலையில் காணலாம்` என்க. உம்மை சிறப்பு. ஈற்றடி, எதிர்மறை முகத்தலால் வலியுறுத்தியது.

பண் :

பாடல் எண் : 52

நீரின்றிப் பாயும் நிலத்தினில் பச்சையாம்
யாருமிங் கென்றும் அறியவல் லாரில்லை
கூரும் மழைபொழி யாது பொழிபுனல்
தேரின்இந் நீர்மை திடரின்நில் லாதே.

பொழிப்புரை :

வயல்கள் யாவும் மேல் நீர் வந்து பாயவே பயிர்களை யுடையவாகும். ஆயினும் ஒரு வயல், மேல் நீர் வந்து பாயாமல் உள்ளிருந்தே ஊறும் நீரை உடையதாய்ப் பயிரை உடைய தாகும். அந்த வயலை அறிபவர் ஒருவரும் இல்லை. (அதனால் அவர்கள் வானத்தை நோக்கியிருந்து, `பஞ்சம், பஞ்சம்` என்கின் றார்கள்.) மேற் குறித்த வயலில் வானம் எதுவும், எப்பொழுதும் பொழிதல் இல்லை. இனி மழை நீரில் தன்மையை ஆராயுமிடத்து, அது `மேட்டில் ஏறாது` என்பது தெளிவு. (அதனால் பெய்கின்ற மழை நீரும் அந்த வயலில் ஏறிப் பாய்வதில்லை. ஆகவே, `மழையால் விளையும், மழையின்மையால் பஞ்சமும், என்கின்ற நிலை அந்த வயலிடத்தில் இல்லை.)

குறிப்புரை :

அந்த அதிசய வயலாவது சிவம். அதில் விளைவன எல்லாம் அதன் அருளாலே. ஆகவே, அந்த அருள் உள்ளிருந்தே ஊறும் நீராயிற்று.
மற்றை வயல்கள் உயிர்கள். அந்த வயல்களுக்கு ஆணவ மாகிய வானத்தில், மாயையாகிய மேகம் தோன்றி, கன்மமாகிய மழையைப் பொழியவே நன்செய்ப் பயிர்களும், புன்செய்ப் பயிர்களும் உளவாகும். இந்த மழை நீர் மேற்குறித்த அந்த மேட்டு வயலில் ஏறமாட்டாது. ஆகவே, இந்த மழை வளம்படுதலாலோ, வறட்சியடைதலாலோ அந்த வயலுக்கு வருவதொன்றில்லை.
``இந்த அரிய செய்தியை அறிந்து கொண்டு அந்த வயலை அடைந்து வாழ அரியாதவர்களாய், உலகர் அல்லல் உறுகின்றார்கள்` என்பதாம்.
பாய்தல் - இங்கு, மேல் எழுந்து பாய்தல்; ஊறுதல். நிலம் - வயல். ``பச்ை\\\\u2970?``, ஆகுபெயராய்ப் பயிர்களைக் குறித்தது. இங்கு முத்தான்மாக்காளைக் கொள்க.
படர்தல் - உள்ளது சிறத்தல். அஃது ஆவி மேகமாய், மேகம் மழையாதலால். `அங்குப் பொழியாது` என ஒருசொல் வருவிக்க. புனல், அதன் தன்மையைக் குறித்த ஆகுபெயர். இந்நீர்மை - இந்த நீரின் தன்மை. திடரில் நில்லாமையைக் கிளந்து கூறியது. `இந்நீர் அவ்வயிலில் செல்லாது` என்பதைப் பெறுவித்தற்கு.
இதனால், `பாசங்களால் விளையும் பயன்களை விரும்பாது விடுத்து, பதியால் விளையும் பயன்களை விரும்பி, அதனையடைய முயலல் வேண்டும்` என்பது உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 53

கூகைக் குருந்தம தேறிக் குணம் பயில்
மோகம் உலகுக் குணர்கின்ற காலத்து
நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும்
பாகனும் ஆகின்ற பண்பனும் ஆமே.

பொழிப்புரை :

கூகை, கதிரவன் விளங்கி நிற்கவும் கண் தெரியாது அலமரும் பறவை. அது, சிவம் வில்கி நிற்கவும் அதனை அறிய மாட்டாது அல்லர் உறும் பெத்தான்மாவைக் குறித்தது.
கூகை பகற் குருடாயினும் அதற்கு நல்லதொரு குருந்த மரம் கிடைத்து, அதில் வாழ்கின்றது. அஃதாவது, வேதாகம வழக்கும், ஆன்றோர் ஒழுக்கமும் மிக்க கரும பூமி.
இருப்பினும், அந்தக் கூகை தன் குருடாதல் தன்மையால், அம்மரத்தில் பற்றுவன விடுவனவற்றையும் விலக்குவன கொள்வன ஆகியனவற்றையும் பிரித்தறிய மாட்டாது, தடுமாறிக் கொண்டிருக்கும் பொழுது அத்தடுமாற்றத்தின் நடுவே தெய்வம் ஒன்று திடீரென அதற்குக் கண்கொடுத்தது. ஆகவே, அந்தத் தெய்வந்தான் அந்தக் கூகைகளை வழிநடத்தும் பாகனும், உற்றுழியுதவும் நண்பனும் ஆகும்.

குறிப்புரை :

`குணத்தால் பயில் மோகத்தை உணர்கின்ற காலத்து` என்க. குணம் - கூகையின் குணம்; குருட்டுத் தன்மை. மோகம் - திரிபுணர்வு. ``உலகுக்கு`` என்னும் நான்கன் உருபு, ``நாணற் கிழங்கு மணற்கீன்ற முளை``8 என்பது போல் ஏழாவதன் மயக்கமாய் வந்தது. நாகம் - விண்ணுலகம். ந + அகம் = நாகம். `பாவம் இல்லாத உலகம்` என்பது இதன் பொருள். அஃது ஆகுபெயராய், அங்கு வாழும் தெய்வத்தைக் குறித்தது. தெய்வம் கண் தந்ததாவது, சத்தி நிபாதம் வந்து ஞானத்தை உணரச் செய்தமை. அப்பால் அந்த சத்தியே (திருவருளே) ஆன்மாவுக்கு எல்லாமாய் உதவும்.
திணை மயக்கம், உருவக உவமைகளில் `வழு` எனக் கடியப் படாது ஆகலின், `நாகம் பாகனும், பண்பனும் ஆம்` என்றது திணை வழுவாகமையறிக.
``நாகமும்`` என்னும் உம்மை சிறப்பு, உரைசெய்தது, (கண் தெரிய) வரம் கொடுத்தது. வெளிப்படை பொருள் இறந்த காலம் ஆகற்பாற்றாயினும் உவமைகளில் சிறந்தது நோக்கி, முக்காலத்திற்கும் பொதுவாகக் கூறினார். ஆகின்ற பண்பன் உறுதுணை யாகின்ற பண்பினை யுடையவன்; நண்பன்.
இதனால், `சத்தி நிபாதத்தாலே அஞ்ஞானம் அகன்று பிரகாசிக்கும்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 54

வாழையும் சூரையும் வந்திடங் கொண்டன
வாழைக்குச் சூரை வலிது வலிதென்பர்
வாழையும் சூரையும் வன்துண்டம் செய்திட்டு
வாழை இடங்கொண்டு வாழ்கின்ற வாறே.

பொழிப்புரை :

ஒருவன் வாழும் இல்லத்தில் வாழைச் செடியும், முள் மிகுந்த பிரப்பங் கொடியும் வளர்ந்து, அதில் உள்ள இடம் முழுவதையும் கவர்ந்து கொண்டன, இந்நிலையில், அதில் வாழவேண்டிய தலைவன் எவ்வாறு வாழ்வது?
வாழையை அழிப்பதைவிடப் பிரப்பங்கொடியை வேரோடு அறுத்தெறிவது `கடினம்; கடினம்` என்கின்றார்கள். இருப்பினும் வாழை நல்லது போலத் தோன்றினாலும் வாழ இடம் இல்லாமல் செய்வதால் அதையும், பிரப்பங் கொடியையும் ஒருங்கே அறுத்தெறிந்துதான் வாழ வேண்டும்.

குறிப்புரை :

வாழை, இன்பம். சூரை - துன்பம் இவவைகளால் கவர்ந்து கொள்ளப்பட்ட இடம் புத்தி தத்துவம்.
ஈற்றடியில் உள்ள ``வாழை`` என்பதை, `வாழ்+ஐ` எனப்பிரித்து, `வாழ வேண்டிய தலைவன்` என உரைக்க.
தலைவன், ஆன்மா. வாழ்தல், பசுகரணத்தைச் சிவகரணம் ஆக்கிச் சிவானந்தம் எய்துதல். `வாழ்கின்றவாறு, வன்துண்டம் செய்திட்டு` என மாறிக்கூட்டி முடிக்க. இரண்டையும் துண்டம் செய்தலாவது, அவற்றில் அழுந்தாது விடுதல்.
அடுக்கு, வலியுறுத்தற் பொருட்டு, `இன்பத்தில் அழுந்தாமல் இருத்தல் கூடும்; துன்பத்தில் அழுந்தாமல் இருப்பது அரிது` என்பதை, ``வாழைக்குச் சூரை வலிது வலிது என்பர்`` என்றார்.
இதனால், ``ஓடும், செம்பொன்னும் ஒக்கவே நோக்கும்`` இருவினையொப்பு வந்தாலன்றிச் சிவானந்த வாழ்வு வாழ இயலாது` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 55

நிலத்தைப் பிளந்து நெடுங்கடல் ஓட்டிப்
புனத்துக் குறவன் புணர்த்த கொழுமீன்
விலக்குமீன் யாவர்க்கும் வேண்டின் குறையா
அருத்தமும் இன்றி அடுவதும் ஆமே.

பொழிப்புரை :

குறிஞ்சி நிலத்தவனாகிய குறவன் ஒருவன் அவ் விடத்துத் தன்தொழிலை விடுத்து, அதே நிலத்தை அடைந்து நிலத்தை உழுதான். பின்பு அத்தொழிலையும் முற்ற முடியாமல் இடையே உள்ள கொழுத்த மீனைப் பிடித்துக் கொணர்ந்தான். (`இவன் இந்தத் தொழிலையேதான் தொடர்ந்து செய்து நிலைபெறுவான்` என்பது என்ன நிச்சயம்!) ஆகவே, இவனைப்போல நிலையின்றி வாழ்தலைத் தவிருங்கள். தவிராது வேண்டின் நிற்பின், என்றும் நிலைத்து ஊதியத்தைத் தரக்கூடிய முதலைப் பெறுதலும் இன்றி, கொல்வது போலும் நிச்சல் நிரப்பு``3 (வறுமை) வந்து பற்றிக் கொள்ளுதலும் கூடும்.

குறிப்புரை :

`எந்தத் தொழிலையும் நிலையாகச் செய்யாது, தாவித் தாவிச் செல்பவன் நிலைபேறு எய்தான்` என்பதை நினைவூட்டி, `அது போல எந்த ஒரு சமயத்திலும் (மதத்திலும்) நிலைத்து நில்லாதவன் எந்தப் பயனையும் அடையமாட்டான்`, என்பதை உள்ளுறையாக உணர்த்தினார். `நிலையாகச் செய்தல்` என்பது, அந்தச் சமயத்தின் வழி நிற்றலை.
`உயிர் இயல்பாகவே ஐம்பு வேடருட்பட்டது` என்பதனால் அதனை, `குறவன்` என்றார். குறவர் பண்பாடில்லாத வாழ்க்கையர் ஆதலின் அவர் இதனால் அவைதிக மதங்களைக் குறித்தது அவற்றில் உள்ள நவநிலையாகவும் பற்றாது விடுத்தலே, `அம்மதங்களை விடுத்தல்` எந்த நிலையாக ஓட்டுதலுக்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது.
மருத நிலத்தவர் பண்பாடுடைய வாழ்க்கையர் ஆதலின் அவர் இனம் வைதிக சமயங்களைக் குறித்தது.
நெய்தல் நில மக்கள் கொலை, களவு செய்யாது வாழ்தலால் குறவரினும் மேம்பட்டவராயினும், இழிதொழில் செய்பவர் ஆதலின் அவர் இனம் வாம மார்க்கங்களைக் குறித்தது. வாம மார்க்கத்தவர் கடவுட் கொள்கையினராதல் நினைவு கூரத்தக்கது.
`மீன்பிடி தொழிலின் இழிவினை உணர்ந்த காலத்தில் அதனையும் விட வேண்டி வரும்` என்பது குறிப்பு. தம்முள் வேறுபாடுடைய குறிஞ்சி, மருதம், நெய்தல் என்னும் நிலங்கள், உயிர் வருக்கத்தவரால் தோற்றுவிக்கப்பட்டுத் தம்முள் மாறுபாடும் சமயங்கள் ஆகவே, இறைவனால் தோற்றுவிக்கப்பட்டு, `இது ஆகும்; அது அல்லது எனும் பிணக்கில்லாது``9 அனைத்தையும் தன்னுள் அடங்கக் கொண்ட சித்தாந்த சைவம், ``தெண்கடல் வளாகம் பொதுமையின்றி - வெண் குடை நிழற்றும் ஒருமையரசன்,8 வாழ்வு போன்ற, என்றும் மாறாது நின்று நிலவும் வாழ்வாம்`` என்றதாயிற்று. ``புனத்துக் குறவன்`` என்பதை முதலில் வருவிக்க. ``மீன் விலக்குமின்`` என்றாராயினும், `அதுபோன்ற செயலையும்` கருத்தையும் நீக்குதல் என்றலே கருத்து.
`வேண்டின், யாவர்க்கும் அருத்தமும் இன்றி, அடுவதும் ஆம்` எனக் கூட்டி யுரைக்க. அருத்தம் - முதல். அது திருவருள். வறுமை - வினை. இதனுள் மூன்றாம் எழுத்தெதுகை வந்தது.
இதனால், `சித்தாந்த சைவமே ``பேரா இயற்கை``3 யாகிய வீடுபேற்றினைத் தரும்` என்பது உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 56

தளிர்க்கும் ஒருபிள்ளை தட்டான் அகத்தில்
விளிப்பதோர் சங்குண்டு வேந்தனை நாடிக்
களிக்கும் குசவர்க்கும் காவிதி யார்க்கும்
அளிக்கும் பதத்தொன்றாம் ஆய்ந்துகொள் வார்க்கே.

பொழிப்புரை :

தட்டான் - எதிலும் அகப்படாதவன். ஆறு அத்துவாக்களையும் துருவித் துருவி ஆராய்ந்தாலும் அறியப்படாதது ஆன்மா. அதன் அகம், தூல உடம்பு. அதில் வளர்கின்ற பிள்ளை மூச்சுக்காற்று. தளிர்த்தல் - வளர்தல். விளித்தல் - அழைத்தல். சங்கு குறிக்கப்பட்டால் குழந்தைகள் அதனை நோக்கி ஓடுதல் இயல்பு. சங்கு, இங்கு `ஹம்ஸம்` என்னும் அசபா மந்திரம். அதுவே மூச்சினை விட்டும், வாங்கியும் இயக்குதலால், அதனை அக்குழந்தையை அழைக்கும் சங்காகக் கூறினார். அம்மந்திரத்தின் பயனை ஆராய்ந்து உணர் பவர்கட்கு அஃது, அரசனைச் சார்ந்த குயவர் முதலிய சிறு தொழிலா ளர்க்கும், காவிதிகள் முதலிய பெருமையுடைய தொழிலாளர்க்கும் அரசன் இடும் கட்டளையாக முடியும். அக்கட்டளைகளாவன `போ, வா` என்பன. சிறுதொழிலாளர்களை அரசன் அகன்று செல்லும்படியும், பெருந்தொழிலாளர்களை அணுகி வரும்படியும் கூறுவான். `போ` என்பது இரேசித்தலையும், `வா` என்பது பூரித்தலையும் குறித்தன. காவிதிகள், வரி தண்டுவோர். பதம் - சொல். `தனித்தனி ஒன்றாம்` என்க. `அச்சங்கு` எனத்தோன்றா எழுவாய் வருவித்து, `பதத்து ஒன்றாம்` என முடிக்க. ``குசவர`` என்றது உபலக்கணம்.

குறிப்புரை :

இதனால், `யோகத்தை அசபா மந்திரத்தை உணர்ந்து செய்யும் பிரணவ யோகமாகச் செய்தல் வேண்டும்` என்பது, உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 57

குடைவிட்டுப் போந்தது கோயில் எருமை
படைகண்டு மீண்டது பாதி வழியில்
உடையவன் மந்திரி உள்ளலும் ஊரார்
அடையார் நெடுங்கடை ஐந்தொடு நான்கே.

பொழிப்புரை :

தலைவன் ஒருவனது இல்லத்தில் கொட்டிலில் இருந்த எருமை அதைவிட்டுப் புறப்பட்டு மேயப் போந்தது. ஆயினும் உயிர்களைத் துன்புறுத்தும் படைகள் எதிரே வருதலைக் கண்டு அந்த எருமை பாதி வழியிலே திரும்பிவிட்டது. அதையறிந்து அந்தத் தலைவ -னுடைய அமைச்சன் அந்தப் படைகளை விலக்க, அந்த இல்லத்திற்கு உள்ள ஒன்பது வாயில்களுள் ஒன்றையும் ஒருவரும் அடைக்கவில்லை.

குறிப்புரை :

`அதனால் அந்த எருமை தன் விருப்பம் போலச் சென்று மேய்ந்து பாலைச் சொரிந்து வருகின்றது` என்பது குறிப்பெச்சம்.
கோ - தலைவன்; உயிர், அதனது இல்லம், தூல உடம்பு. எருமை, பிராண வாயு. இதுவே உயிர்க்கு வலு ஊட்டுவதாய்க் கட்டுப்படுத்தி நடத்தினால் பெரும் பயனைத் தருவதாய் இருத்தல் பற்றி இதனை, வலியையும், மிகுந்த பாலைப் பொழிதலையும் உடைய எருமையாக உருவகித்தார்.
குடை, குடைபோல் அமைந்த கொட்டில். அது மூலாதாரம். மூச்சு அதனினின்றும் போதல் வெளியேபோய் வலுப்பெற்று மீறாதற்கு. படைகள் பிராரத்தத்தால் வரும் நோய்கள். இந்நோய்கள் உடம்பின் வாயில்கள் ஒன்பதையும் அடைத்து, அகால மரணத்தை உண்டு பண்ணும். இவைகளால் மூச்சும் தடைப்படும். ஆகவே, ``படை கண்டு மீண்டது பாதி வழியில்`` என்றார்.
உயிர்க்கு அமைச்சன் சித்தம். அஃது அனைத்தையும் சிந்தித்து, உயிர்ப்பாகிய எருமையைத் தன் விருப்பப்படி நடத்திச் செல்ல, அந்த எருமையைத் தடுத்து நிறுத்தற்கு, உடம்பாகிய இல்லத்தின் வாயிலை அடைக்க ஒருவரும் முன்வரவில்லை. எனவே, எருமை தொடர்ந்து நன்கு மேய்ந்து பாலைச் சொரிந்து வருகின்றது. அஃதாவது உடம்பை எந்த நோய் முதலியனவும் அழிக்க எழவில்லை. அதனால், `வாழ்நாள் எல்லையின்றி நீட்டிக்கின்றது` என்பதாம்.
``ஊரார்`` என்றதும், படைகளையே. உள்ள, அதன் காரியமாகிய நெறிப்படுத்தி நடத்துதலைக் குறித்தது. நெடுங்கடை - பெரிய வாயில். ஐந்தொடு நான்கு - ஒன்பது.
இதனால், `வாசியோகம் புரியின், உடல், நரை, திரை மூப்புப் பிணிகள் இன்றி வலிதாக, வாழ்நாள் நீட்டிக்கும்` என்பது உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 58

போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
ஆகப் படைத்தன ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டொடு நாலு புரவியும்
பாகன் விடாவிடிற் பன்றியும் ஆமே.

பொழிப்புரை :

வீரன் ஒருவன் ஓர் யானையையும், பன்னிரண்டு குதிரைகளையும் முறையாக வெளியே ஓட்டி நடத்தி, உள்ளே கொணர்ந்து கட்டிப் பணிபுரிதற்கு ஏற்புடைத்தாக அரசன் வெளிச் செல்லும் பொருள் எட்டும், உள்ள வந்து சேரும் பொருள் பதினெட்டுமாக, ஒன்பது வாயில்களையுடைய ஒரு கூடத்தைக் கட்டிக் கொடுத்தான். வீரன் அதில் முறையாக அந்த யானையையும், குதிரை -யையும் வைத்து நடத்தாவிடில், அவை பன்றிபோல யாவராலும் இகழப் படுவனவாய், அந்தக் கூடத்தையும அருவருக்கத் தக்கதாகிவிடும்.

குறிப்புரை :

நாகம் - யானை. இது மனத்தைக் குறித்தது. ``தொண்டர் அஞ்சு களிறும் அடக்கி``8 என்பது போல, ஐம்பொறிகளையே யானை யாகக் கூறுதல் பெருவழக்காயினும், உண்மையில் யானைபோல அடங்காது புலன்களின்மேல் செல்வது மனமே. `மனத்தொடு கூடாத வழி, இந்திரியங்கள் விடயங்களைக் கவரமாட்டா` என்பது தருக்க மதம். இஃதே பற்றி, ``பொறிவாயில் ஐந்தவித்தான்``l என்னும் குறள் உரையில், `ஐந்து அவா` எனப் பொருள் உரைத்த பரிமேலழகர், `அவா ஒன்றுதானே; ஐந்து எப்படியாகும்` என்னும் தடையைக் கருத்துட் கொண்டு, ``புலன்கள் ஐந்தாகலான் அவற்றின்கட் செல்கின்ற அவாவும் ஐந்தாயிற்று`` என உரைத்தார். எனவே, ``ஐந்து`` என்றல் சார்பு பற்றியேயாகலான், `ஒன்று` என்பதே உண்மையாம். ஆகவே, ``அஞ்சு களிறு`` என்றல் சார்பு பற்றியேயாக, களிறு ஒன்றேயாதல் அறியப்படும். அடங்காது புலன்கள்மேற் செல்வது` மனமேயாகலான்` அதனை `யானை` என்றற்குத் தடையின்மை யறிக.
குதிரை பன்னிரண்டாவன, வெளிச்செல்லும் பன்னிரண் -டங்குல மூச்சு. பாகன் - நடாத்தும் வீரன். அவன் ஆன்மா விடுதல் - அடக்கிச் செலுத்துதல்.
ஒன்பது வாயிலையுடைய கூடம் தூல உடம்பு. அதில் வெளிச்செல்லும் பொருள்கள், `வெயர்வை, கோழை, பீளை, சளி, குறும்பி, மலம், சிறுநீர், சுக்கிலம்` என்பன.
உள்வந்து சேரும் பொருள் பதினெட்டாவன, ஞானேந்திரிய விடயங்கள் ஐந்தும், கன்மேந்திரிய விடயங்கள் ஐந்தும், காமம், வெகுளி, மயக்கம் ஆகிய குற்றம் மூன்றும், ஆதியான்மிகம், ஆதிதைவிகம், ஆதிபௌதிகம் ஆகிய துன்பம் மூன்றும், இவற்றால் ஏறும் நன்றும் தீதுமாய வினையிரண்டுமாம். முக்குற்றங்கள் அகத்து நிகழ்வன வாயினும் புறப்பொருள் ஏதுவாக அன்றி நிகழாமையறிக. வாயில்களையே கூறினாராயினும் அத்துணை வாயில்களையுடைய கூடத்தைக் குறித்தலே கருத்து.
முதற்கண் கூடத்தையே சிந்தெடுத்துக் கூறினமையால், ``பன்றியுமாம்`` என்றதன்பின், கூடம் பாழ்படுதலையுணர்த்துதல் கருத்தாயிற்று. ``பன்றியும்`` என்னும் உம்மை இழிவு சிறப்பு.
இதனால், `வாசி யோகம் செய்து, மனத்தை அடக்காவிடில் எடுத்த பிறப்பு வாளா மாயும்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 59

பாசி படர்ந்து கிடந்த குளத்திடைக்
கூசி யிருக்கும் குருகிரை தேர்ந்துண்ணும்
தூசி மறவன் துணைவழி எய்திடப்
பாசி கிடந்து பதைக்கின்ற வாறே.

பொழிப்புரை :

பாசி படர்ந்த குளம், மலத்தால் மறைக்கப்பட்ட ஆன்ம அறிவு. குளத்தில் இரைதேர்ந்து வாழும் குருகு, (பறவை) அவ்வறிவால் பயன்பெற்று வரும் ஆன்மா. பாசி படர்ந்து கிடத்தலால் குருகு தனக்குரிய இரையை எளிதில் காண இயலவில்லை. வருந்தி வருந்திச் சிறிது காண்கின்றது. அஃதாவது ஆன்மாத் தனக்குரிய சிவத்தை எப்பொழுதாவது, எவையோ சிலமுறையில் அறிகின்றது. கூசியிருத்தல் - உயிரற்றது போல ஒடுங்கியிருத்தல்.

குறிப்புரை :

தூசி மறவன் - படைகளில் முன்னணியிற் செல்லும் வீரன். அவன் குரு மூர்த்தியை அதிட்டித்து நிற்கும் சிவன். படை வீரன் தன் போக்கிலே போய்க்கொண்டிருக்கும் பொழுது குளத்தை அடுத்துச் செல்லும் வழியை அடைவானாயின், நீர் பருக வேண்டிக் குளத்தை அடைவான்; அவனால் பாசிகள் அப்புறப்படுத்தப்படும். அப்பொழுது குருகு, தனக்கு வேண்டிய இரையை வேண்டிய மட்டும் உண்டு மகிழும். `அதுபோலக் குருமூர்த்தி தம் இயல்பில் இருப்பினும், ஒருவனது சத்திநிபாத நிலையைக் காணின், ``நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்``9 என்னும் வேட்கையால் அவனை ஏற்று அவனது பாசத்தைப் போக்குவார். அப்பொழுது அவன் `சிவத்தை நன்குணர்ந்து, சிவானந்தத்தில் மூழ்கித் திளைப்பான்` என்பதாம்.
ஆறு - முறைமை; நிலைமை. `மறவன் எய்திடப் பாசி பதைக்கின்ற நிலைமை உண்டாகும்` என ஒரு சொல் வருவித்து முடிக்க. துணை வழி, அருகில் சார்ந்து செல்லும் வழி.
இதனால், குருவருள் கிடைத்த வழியே பாச நீக்கமும், சிவப்பேறும் உளவாம்` என்பது உள்ளுறையாக உணர்தத்ப்பட்டது.

பண் :

பாடல் எண் : 60

கும்ப மலைமேல் எழுந்ததோர் கொம்புண்டு
கொம்புக்கும் அப்பால் அடிப்பதோர் காற்றுண்டு
வம்பாய் மலர்ந்ததோர் பூஉண்(டு)அப் பூவுக்குள்
வண்டாக் கிடந்து மணங்கொள்வன் ஈசனே.

பொழிப்புரை :

கும்பம் - குடம். இதனைக் கவிழ்த்து வைத்த குடமாகக் கொள்க. கவிழ்த்து வைத்த குடம் கீழே குறுகியும், மேலே விரிந்தும் இருக்கும். அதுபோலப் பிருதிவியிலிருந்து பிரகிருதி முடியப் போகப் போக விரிந்துள்ளன ஆன்ம தத்துவங்கள். ஆகவே அவற்றின் தொகுதியை, ``கும்பமலை`` என்றார். கும்பமலை - கும்பம் போன்ற மலை.

குறிப்புரை :

``கொம்பு`` என்றது தறி. மலையின் உச்சியில் தறி ஒன்று மலையுள்ளே அடிவரையில் ஊடுருவ அடிக்கப்பட்டு, மேலேயும் உயர்ந்து நிற்பதாகக் கொள்ளவேண்டும். ஏனெனில், இவையெல்லாம் அதிசயப்பொருள்களாகவே கூறப்படுதலின், இத்தறி, இத்தறி ஆன்ம தத்துவத்தை வியாபித்து, அவற்றிற்கு மேலேயுள்ள, அராகம் முதல், மாயை முடிய உள்ள வித்தியா தத்துவங்களின், தொகுதி. இவை ஆன்ம தத்துவங்களை நிலைபெறுத்தித் தாமும் நிலைபெற்றிருத்தலால் இவ்வாறு கூறப்பட்டன.
கொம்புக்கும் அப்பால் அடிப்பதோர் காற்று சுத்த தத்துவங்கள். அவை சூக்குமமாயும், காற்றுப்போல வீசிப்பிற தத்துவங்களைத் தூய்மை செய்து, முற்றிலும் வியாபித்திருத்தலாலும் இவ்வாறு உருவகிக்கப்பட்டது.
வம்பு - புதுமை. புதுமையாய் மலர்ந்ததோர் பூ, தத்துவ ஆராய்ச்சியால் தத்துவ ரூபம், தத்துவ தரிசனம். தத்துவ சுத்தி இவைகளைச் செய்து இவற்றின் நீங்கி, அவற்றின் மேலாய் விளங்குகின்ற சுத்தான்மா.
இது வரையில் உருவக முறையால் தாம் கருதிய பொருளை உள்ளுறைப் பொருளாக உணர்த்திய நாயனார், `ஆன்மாக்களின் இரு தய கமலத்தில் விளங்குபவன் சிவன்` என்னும் முறைமை பற்றி, அவன் தயிரில் நெய்போல இனிது விளங்குவது சுத்தான்ம சைதன்னியத்தில் தான்` என்பதை, `சிவன் இந்தப் புதுமலரில்தான் வண்டாக் கிடந்து மணங்கொள்வன்`` எனச் சிறிது வெளிப்படை யாகவே கூறிவிட்டார்.
`மலர் ஆன்மா` எனவே, மணம், அதன் போதம் ஆயிற்று. ஆகவே, `இந்தப் புதுமலரில் ஈசன் வண்டாய்க் கிடந்து மணங் கொள்ளுதல்` என்பது, சீவபோதத்தைத்தான் உண்டு, சிவபோதம் வாயிலாகச் சிவானந்தத்தை வழங்குதல் ஆயிற்று. இதன் ஈற்றடி இன எதுகை பெற்றது.
இதனால், `தத்துவங்களின் நீங்கித் தூய்தாய் நின்ற சுத்தான்ம சைதன்னியத்தில் தான் சிவன் விளங்கி நிற்பான்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 61

வீணையும் தண்டும் வரிவி இசைமுரல்
தாணுவும் மேவித் தருதலைப் பெய்தது
வாணிபம் சிக்கென் றதுஅடை யாமுனம்
காணியும் அங்கே கலக்கின்ற வாறே.

பொழிப்புரை :

வீணை, நாதத்தைத் தரும் நரம்புகள். அது கன்ம மலத்தைக் குறித்தது. தண்டு, நரம்புகள் கட்டப்பட்டுள்ள கோல். அது மாயா மலத்தைக் குறித்தது. கோல் பற்றுக்கோடாக நின்று நரம்புகள் நாதத்தைத் தருதல் போல, மாயை பற்றுக்கோடாக நின்று நரம்புகள் கன்மம் விளைவுகள் பலவற்றையும் தருவதாதலை அறிக. இசை முரல் தாணு, வீணை வல்லான். அவன் மாயை கன்மங்களைக் கூட்டிச் செயற் படுத்துகின்ற சிவன். வீணை வல்லான் தன் இசை வன்மையைக் கொடுத்து, அரங்கில் உள்ளவர்களது உள்ளங்களைக் கவர்கின்றான். இஃது அவன் செய்யும் ஒரு வாணிபம் ஆகும். இங்கு அவ்வாணிபம், மாயை கன்மங்களைச் செயற்படுத்தும் முறையால், முன்பு தன்னை நோக்காது பிறவற்றை நோக்கியிருந்த உயிர்களைத் தன்னை நோக்கும் படியாகச் செய்தலைக் குறித்தது. சிக்கென்றது - பயனளித்துவிட்டது. அதனையே முன்பு ``தருதலைப்பெய்தது`` என்றார். தகு - தகுதி; உயிர்களின் பக்குவம்; முதனிலைத் தொழிற்பெயர். அடைத்தல், கடையை அடைத்தல்; அஃதாவது, `வாணிபத்தை விட்டுவிடுதல். அது சிவன் தனது ஐந்தொழிலை நிறுத்திவிடுதல். முத்தி பெற்ற உயிர் களிடத்தில் அவன் ஐந்தொழில் நடாத்துதல் இல்லை. எனவே, கடையை அடைப்பதற்கு முன் வாணிபம் தேவைப்படாத, நிலையான காணி யுரிமை வாய்த்துவிட்டது. அஃதாவது, `முத்தி நிலை வாய்த்துவிட்டது` என்பதாம்.

குறிப்புரை :

கலக்கின்றவாறு வியப்பு` என ஒரு சொல் வருவித்து முடிக்க. மேனி - மேவியதனால்.
இதனால், `இறைவன் மாயை கன்மங்களைக் கூட்டி ஐந்தொழில் செய்தலாலே உயிர்கள் பக்குவம் எய்திய வீடு பெறுகின்றன` என்பது உள்ளுறையாக உணர்த்தப்பட்டது. ஆகவே, `இறைவன் ஐந்தொழில் செய்தல் உயிர்களை உய்வித்தற் பொருட்டே` என்பதை உணர்த்தியதாயிற்று.

பண் :

பாடல் எண் : 62

கொங்குபுக் காரொடு வாணிபம் செய்தஅஃ(து)
அங்குபுக் காலன்றி ஆய்ந்தறி வார்இல்லை
திங்கள்புக் கால்இரு ளாவ தறிந்திலர்
தங்குபுக் கார்சிலர் தாபதர் தாமே.

பொழிப்புரை :

பரத கண்டத்திற்கு வெளியே உள்ள யவனர் பரத கண்டத்தில் வந்து இறங்குவது கொங்கு நாட்டிலே. அஃதாவது சேரநாட்டிலே. அவர்களோடு பரத கண்டத்தவர் வாணிபம் செய்து நல்ல அருங்கலம் முதலியவைகளைப் பெறுதலைப் பரத கண்டத்தில் உள்ளவர்கள் அந்தக் கொங்கு நாட்டில் சென்று பார்த்தால் தான் அறிந்துகொள்ள முடியும். அங்குச் செல்லாமல் தொண்டைநாடு. சோழ நாடு, பாண்டி நாடு இவைகளில் இருந்து கொண்டே அறிய முடியாது.
சந்திரன் உதயமானால் இருளைப் பார்க்கமுடியாது. (அது போலக் கொங்கு நாட்டை அடைந்தால் மேற்குறித்த அறியாமை நீங்கிவிடும்.) ஆயினும் நல்லூழ் உள்ள ஒரு சிலரே கொங்கு நாட்டையடைந்து வாணிபத்தில் நற்பயன் எய்தி வாழ்கின்றார்கள். (ஏனையோர்க்கு அஃது இயலவில்லை.)

குறிப்புரை :

பரத கண்டத்தின் நடுவில் வடக்குத் தெற்கு நீளத்தில் போதிய இடைவெளி விட்டு இமயம் முதல் குமரி வரை பிரித்தால், பரத கண்டம் கீழைக்கரை, நடுப்பகுதி, மேலைக்கரை` என மூன்று பிரி வினதாய் நிற்கும். அவற்றுள் மேலைக் கரைப்பகுதியையே ``கொங்கு நாடு`` எனறார். கீழைக்கரை முதலிய மூன்று பகுதிகளும், உடம்பில் யோக முறையில் கீழ் நின்றும் மேல் நோக்கிச் சொல்லப்படுகின்ற, அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திரமண்டலம்` என்பவற்றைக் குறித்தன.
இவற்றுள் அக்கினி மண்டலம் கீழாலவத்தைக்கும், சூரிய மண்டலம் மத்தியாலவத்தைக்கும், சந்திர மண்டலம் யோகாவத்தை யாகிய மேலாலவத்தைக்கும் இடமாகக் குறிக்கப்பட்டன. கீழாலவத்தை மத்தியாலவத்தைகளில் துவாத சாந்தத்தில் உள்ள சிவம் தோன்றா -மையால், கீழைக் கரைப் பகுதியும், நடுப்பகுதியும் மேலை நாட்டவர் தொடர்பு கொள்ளாத இடமாகவும், யோகாவத்தையில் சிவம் புலனாதல் பற்றி மேலைக்கரையை மேலே நாட்டவர் வந்து புகும் இடமாகவும் கூறினார். எனவே, பரத கண்டத்தவர் மேலை நாட்டவரோடு வாணிபம் செய்தலாவது, கீழாலவத்தை மத்தியா லவத்தைகளில் உழல்கின்ற உயிர், யோகாவத்தையாகிய மேலாலவத்தையை எய்தி, ``தந்ததுன் றன்னைக் கொண்டதென் றன்னைச் சங்கரா ஆர்கொலோ சதுரர்``9 என்றபடி சிவனுடன் கொண்டும், கொடுத்தும் ஊடாடுதலையேயாயிற்று.
மேலாலவத்தையை எய்தினோர்க்கு அஞ்ஞான இருள் நீங்குதலையே மூன்றாம் அடி குறித்தது.
``தாபதர்`` என்றது, வெளிப்படைப் பொருளில் பசு புண்ணியம் செய்தாரையும், உள்ளுறைப் பொருளில் சிவ புண்ணியம் செய்தாரையும் குறித்து நின்றது. இச்சிவபுண்ணியம் `சரியை கிரியைகள்` என்க.
கொங்கு புக்கார், மேலை நாட்டவர். தங்கு - அவர் வந்து தங்குமிடம்; கொங்கு நாடு. தங்கு, தொழிலாகு பெயராய், தங்கும் இடத்தைக் குறித்தது. `அங்குப் புக்கால்` என்னும் பகர ஒற்று செய்யுள் நோக்கித் தொகுத்தலாயிற்று. பிற ஏழாவதன் தொகையில் ஒற்று மிகாமை இலேசினாற் கொள்க. இனி ஒற்று மிகுத்தே பாடம் ஓதினும் ஆம். அப்பொழுது, `திங்கட் புக்கால்` என, ஒற்றுத் திரிந்து நிற்கும்.
இதனால், `யோக நிலையை எய்தினோர் சிவத்தைத் தலைப்படுவார்` என்பது உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 63

போதும் புலர்ந்தது பொன்னிறம் கொண்டது
தாதவிழ் புன்னை தயங்கும் இருகரை
ஏதம்இல் ஈசன் இயங்கும் நெறிஇது
மாதர் இருந்ததோர் மண்டலந் தானே.

பொழிப்புரை :

பொழுது விடிந்துவிட்டது. அதனால், மலர்களை யுடைய புன்னைமரம் விளங்குகின்ற, கடலின் இக்கரை, அக்கரையாகிய இருகரைகளும் பொன்னிறம் பெற்று விளங்குவன வாயின் ஆகவே, அந்தக் கரைகள் சிவனும், சத்தியும் எழுந்தருளி யிருக்கும் இடமாகவும் ஆகிவிட்டன.

குறிப்புரை :

பொழுது விடிதலாவது, ஆணவ மலம் நீங்குதல். ``தாதவிழ் புன்னை`` என்னும் அஃறிணை யியற்பெயர். இங்குப் பன்மையில் வந்து, பல உயிர்களைக் குறித்தது. புன்னை அரும்பு ஆன்ம பூதம். அவ்வரும்பு மகரந்தத்தோடு மலர்தலாவது, திருவருள் உணர் உடையதாய் விரிவடைதல் பொழுது புலர்ந்தால் புன்னை மகரந்தத்தோடு மலர்தல் போல, ஆணவம் நீங்கியதால் ஆன்மாக் களின் அறிவு சிவகணமாகிய திருவருள் உணர்வைப் பெற்று விரி வடைந்தது. இரு கரை, பெத்த முத்திகள். முத்தியில் ஆன்ம உணர்வு சிவணம் பெற்றுத் திகழ்தல் நன்கறியப்பட்டது. பெத்த நிலையிலும் அவ்வுணர்வு அன்ன தாதல் சீவன் முத்தி நிலையிலாம் ஆகவே, ``இருகரையும் பொன்னிறம் கொண்டது`` என்றது. ஆணவ மலம் நீங்கினால், ஆன்மா இவ்வுடம்போ -டிருக்கும் பொழுதே முத்தியை அடைந்து நிற்கும்` என்பது உணர்த்திய வாறு. ``பொன்னிறங் கொண்டது`` என்பது அழகு பெற்று விளங் -குதலைக் குறித்தது. புன்னை மலரின் மகரந்தம் பொன்னிறம் உடையது. தயங்குதல் - விளங்குதல்.
பிறவி `கடல்` என்றும், முத்தி `அக்கரை` என்றும் சொல்லப் படுதலால், பெத்தத்தை `இக்கரை` என்றார். `இருகரையும்` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. ``இருகரையும் பொன்னிறம் கொண்டது`` என்றது. பன்மையொருமை மயக்கம். ``போதும்`` என்னும் உம்மைச் சிறப்பு.
`மாதர், சத்தி, சிவமும், சத்தியும் இருக்கும் இடம்` என ஒருங்கு கூறற்பாலதனை வலியுறுத்தற் பொருட்டுத் தனித்தனியே கூறினார்.
இதனால், ``ஆணவ இருள் நீங்கினால், `அம்மை` என்பதின்றி இம்மையே முத்தியாம்`` என்பது உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 64

கோமுற் றமரும் குடிகளும் தம்முளே
காமுற்ற கத்தி யிடுவர் கடைதொறும்
வீவற்ற எல்லை விடாது வழிகாட்டி
யாமுற்ற தட்டினால் ஐந்துண்ண லாமே.

பொழிப்புரை :

செங்கோல் அரசன் உண்மையாகவே மிகவும் அன்பு செலுத்தினாலும் அவனது தன்மையை அறியாத குடிகள் வெளிப்படையாக இன்றி, மறைவாகத் தங்களுக்குள்ளே வாய்ப்பு நேரும்பொழுதெல்லாம் அவ்வரசனைப் பற்றிப் பல தூற்றுதல் மொழிகளைக் கூறிக்கொள்வார். ஆயினும் கால வரையறையின்றிக் குடிகளுக்கு அவை வாழ வழிவகுத்து வரும் அரசன் தன் கடமையி னின்று தவறுவானேயானால், நாம் உணவு முதலியவற்றைப் பெற்று வாழ இயலுமோ! (இயலாது.)

குறிப்புரை :

அமர்தல் - விரும்புதல். உம்மை, சிறப்பு. குடிகளை உண்மையாகவே மிகவும் விரும்பும் செங்கோல் அரசன், ஆன்மாக் களின்மேல் உண்மையான அறக்கருணையை உடைய சிவன். அவன் அத்தகைய கருணையாளனாய் உயிர்கட்கு, `பெத்தம், முத்தி` இரு நிலைகளிலும் உபகரித்துவரினும், அறிவற்ற உயிர்கள், `சிவன் இல்லை` என்றும், `இருப்பினும் அவனுக்குக் கண் இல்லை` என்றும் இன்னோரன்னவாகத் தம் வாய்க்கு வந்ததைத் தங்களுக்குள் கூறிக் கொள்வர். அதனையே, ``கடைதொறும், காமுற்ற கத்தியிடுவர்`` என்றார். கடை - இடம்; வாய்ப்பு. காமுற்ற - விரும்பிய சொற்கள். வீதல் - முடிதல் எல்லை, கால எல்லை. அரசன் ஒருவனேயன்றிப் பலர் வரினும் அரசு நீடு செல்வதேயாகலின் அதனைச் சிவன் செயலுக்கு உவமையாகக் கூறினார். ``வழிகாட்டி`` என்பது பெயர். `யாம் உற்றவற்றைத் தட்டினால்` என்க. தட்டுதல் - தவறுதல். ஐந்து, ஐம்புல நுகர்ச்சி.
அரசு கால வரையறையின்றிக் குடிகளை ஓம்பன், சிவன் பெத்தம், முத்தி இரண்டிலும் உயிர்கட்கு உபகரித்தலைக் குறித்தது. பலவற்றைச் சொல்லுமிடத்துப் படர்க்கையில் வைத்துக் கூறிய பொருள் நமக்கும் பொருந்தவதாயின், அதனைப் பின்பு ஓரிடத்தில் நம்மேல் வைத்துக் கூறுதலும் பொருந்துவதே. அதனை, `நீர் இன்றி யமையாது உலகம் என்றால், மழையின்றி நாம் எங்ஙனம் அமைவேம்` என்பதுபோலக் கூறிக் காண்க. இம்முறையில், ``தம்மிலே கத்தி யிடுவர்`` எனக் கூறிப் பின்பு, ``உற்ற தட்டினால் யாம் உண்ணலாமே`` என்றார். ஏகாரம் எதிர்மறை குறித்த வினா, `ஐம்புல நுகர்ச்சி` என்பது வெளிப்படைப் பொருளில் உடல் ஓம்புதலையும். உள்ளுறைப் பொருளில் வினை நுகர்ச்சியையும் குறித்து நின்றது. இதனுள், மூன்றாம் அடி மூன்றாம் எழுத்தெதுகை பெற்றது.
`பெத்த நிலையிலும் சிவன் உடனாய் நின்று உபகரியாகிவிடின், உயிர்கள் வினையை ஈட்டுதல் நுகர்தல்களைச் செய்தல் இயலாது` என்றபடி.

பண் :

பாடல் எண் : 65

தோட்டத்தில் மாம்பழம் தொண்டி விழந்தக்கால்
நாட்டின் புறத்தில் நரிஅழைத் தென்செயும்
மூட்டிக் கொடுத்த முதல்வனை முன்னிட்டுக்
காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே.

பொழிப்புரை :

தோட்டம் - வேதம், ஆகமம், திருமுறை ஆகிய முதல் நூல்களின் தொகுதி. அதில் பழுத்த மாம்பழம், திருவைந்தெழுத்து. ``வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே``3 என்னும் அருட்டிரு மொழியைக் காண்க.
தொண்டி விடுதல் - பழுத்து விழுதல். பழமையைக் குறிக்கும் `தொண்டு` என்னும் பெயரடியாகப் பிறந்த வினை. பழுத்த முதியோனை. `தொண்டு கிழவன்` என்பர். ``தொந்தி சரிய, மயிரே வெளிற, நிரை தந்தம் அலைய`` எனத் தொடங்கும் திருப்புகழைக் காண்க. திருவைந்தெழுத்துப் பழுத்து விழுதலாவது, சமயாசாரியர்கள் போன்ற பெயியோர்கள் கருணை மீதூர்ந்து அதனை உலகறிய எடுத்தக் கூறி வலியுறுத்துதல். நாயனார் காலத்திலும் அத்தகைய பெரியோர்கள் இருந்திருக்கலாம்.
``நமச்சி வாய வாஅழ்க நாதன்றாள் வாழ்க``9
என்றும்,
``தலையாய ஐந்தினையும் சாதித்துத் தாழ்ந்து
தலையா யினஉணர்ந்தோர் காண்பர் - தலையாய
அண்டத்தான், ஆதிரையான், ஆலாலம் உண்டிருண்ட
கண்டத்தான்` செம்பொற் கழல்``l
என்றும்,
``வாயிலே வைக்கு மளவின் மருந்தாகித்
தீய பிறவிநோய் தீர்க்குமே - தூயஏ
கம்பெருமான், தேவியொடு மன்னு கயிலாயத்(து)
எம்பெருமான் ஓரஞ் செழுத்து``
``அஞ்செழுத்துங் கண்டீர் அருமறைக ளாவனவும்,
அஞ்செழுத்துங் கற்க அணித்தாகும், - நஞ்சவித்த
காளத் தியில்யார்க்கும் கண்டற் கரிதாய்போய்,
நீளத்தே நின்ற நெறி``3
என்றும் அருளிச்செய்த ஆளுடைய அடிகள், காரைக்காலம்மையார், நக்கீர தேவ நாயனார் முதலிய பெரியோர்களை இங்கு நினைவு கூர்தல் நன்று.
நரி - நரிக்கூட்டம் அதனை, ``நாட்டின் புறத்தன`` என்றமையால், ஒரு கூட்டம் வேதத்திற்குப் புறம்பான. மற்றொரு கூட்டம் வேதத்திற்குள் இருப்பினும் சிவாகமத்திற்குப் புறம்பானது. `இவை எவை` என்பதை அறிந்துகொள்க. இந்த நரிக்கூட்டங்கட்கும், மேற்குறித்த மாம்பழத்திற்கும் என்ன தொடர்பு உண்டாகும். யாதும் தொடர்பு உண்டாகாது. அதனையே, ``நாட்டின் புறத்த நரிஅழைத் தென்செயும்`` என்றார். அழைத்தல் - கூப்பிடுதல்.
இனி, அகப்புறச் சமய நூல்களிலும், அகச்சமய உரைகளிலும் திருவைந்தெழுத்தின் சிறப்புக் குறிக்கப்பட்ட தாயினும், அவர் அதனைத் தெளியமாட்டாது புறக்கணித்துவிடுவர். அத்தனையே, ``காட்டிக் கொடுத்தவர் கைவிட்டவாறு`` என்றார். கொடுக்கப்பட்டவர் கொடுத்தவர் அந்நூல்களின் ஆசிரியர்களும், உரையில் ஆசிரியர்களும். `மாம்பழத்தைக் கனவிலும் கருதாது கூப்பிட்டுக் கொண்டிருக்கின்ற நரிக் கூட்டங்கள் போக, ஒரு சில மக்கட் கூட்டமும் அப்பழத்தைக் காட்டுவார் காட்டிக் கொடுக்கவும் எடுத்து உண்டு பயன்பெற்றில என்பதாம்.
மூட்டிக் கொடுத்த முதல்வன், தோட்டத்தை உண்டாக்கி வளர்த்த தலைவன். அவன் சிவன். தோட்டத்தையுடையான் கருணை காரணமாக, பசித்தவர்க்கு இதன் பழத்தைக் கொடுக்க` என்று தன் ஏவலாளர்க்குச் சொல்லியுள்ளான். அஃதே அவன் ஆணை. எனவே, `பிறவிப் பிணியால் துன்புறுவார்க்குத் திருவைந்தெழுத்தின் சிறப்பினை உணர்ந்தோர் உணர்த்துக` என்பதே சிவனது சங்கற்பம் என்பதும், அவ்வாற்றால் உணர்ந்தோர் உணர்த்தினும் மக்கள் அவரவர் பக்குவ பேதங்கட்கு ஏற்ப அதனைச் செவிமடாதோரும், செவிமடுப்பினும் பேணாதோரும், பேணினும் உட்கிடைப் பொருளை முற்ற உணர்ந்து முழுப் பயனைப் பெறாதோருமாய் உளர்` என்பதும் கூறியவாறு.

குறிப்புரை :

`முதல்வன்`, என்பது ஆகுபெயராய் அவனது ஆணையைக் குறித்தது. `கொடுத்தவரும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. `கைவிட்டவாறு இரங்கத் தக்கது` என ஒரு சொல் வருவித்து முடிக்க.
இதனால் சமயிகள் பலரும் திருவைந்தெழுத்திகள் உண்மை அடியோடே அல்லது முற்றவோ உணராதவர்களாய்ப் பிறப்பின் பயனை இழத்தல் உள்ளுறையாக உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 66

புலர்ந்தது போதென்று புட்கள் சிலம்பப்
புலர்ந்தது போதென்று பூங்கொடி புல்லிப்
புலம்பி னவளோடும் போகம் நுகரும்
புலம்பனுக் கென்றும் புலர்ந்தின்று போதே.

பொழிப்புரை :

தலைவன் தலைவியர் இன்பமாகக் கூடியிருத்தற் குரிய காலம் இராக்காலம். பொழுது விடிந்துவிட்டால், தலைவன் துயிலை விட்டு வெளியே அறம், பொருள் ஆகியவற்றின் செயல்களில் செல்லுதற்கு உரியன். பொழுது விடிதலைத் தலைவன் தானே உணராவிடினும் அதனை அவனுக்கு, ``கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்``3 என்றபடி சிறப்பாகக் கோழி கூவ, அதனுடன் மற்றைப் பறவைகளும் ஒலித்து அறிவிக்கின்றன. அதனால் பொழுது விடிந்ததை நன்குணர்ந்தும் தலைவர் சிலர் விரைந்தெழுந்து வெளிச் செல்வதில்லை. அது நிற்கத் தலைவியருள்ளும் ஒரு சிலர் தலைவனை எழ விடாது புலம்புவர். இவ்வகையில் எவ்வகையிலோ, புட்கள் ஒலித்தும் எழுந்து வெளிச்சொல்லாதவர்கட்குப் புட்கள் ஒலித்தாலும், மற்றும் என்ன நிகழ்ந்தாலும் எப்பொழுது பொழுது விடிவதேயில்லை. (பகலாயினும் இரவேயாய் இருக்கும்.)

குறிப்புரை :

மக்கள் வாழ்க்கையில்,
``முப்பதாம் ஆண்டளவில் மூன்றற் றொருபொருளைத்
தப்பாமல் தன்னுட் பெறானாயின் - செப்பும்
கலையளவே யாகுமாம்; காரிகையார் தங்கள்
முலையளவே யாகுமாம் மூப்பு``
என்ற ஔவையார் வாக்கின்படி, கற்பன கற்று, அறிவன அறிந்து அறத்திற்குரியராம் தன்மை பெறுதற்குரிய காலம் முதல் முப்பது ஆண்டுகளாகும்.
பின்பு இல்லாளோடு கூடி இன்பம் நுகர்ந்து, அறத்தையும் தேடிக்கொள்ளுதற்குரிய காலம் அடுத்த முப்பதாண்டுகளாகும். அஃதாவது அறுபதாம் ஆண்டு முடியவாம். பின்பு உலகப்பற்றை விடுத்துத் துறவு பூணுதல் வேண்டும். இதுபொதுவான ஒரு முறை. சிறப்பாக இல்லறத்திற் செல்லாமலே உள்ளத்தில் பற்றில்லையாயின் துறவை மேற்கொள்ளுதல் சிறப்புடையதே.
தமிழாசிரியர் கூறும் துறவு, `நாட்டை விடுத்துக் காட்டிலே தான் வாழவேண்டும்` என்பதன்று. `பற்றற்று இருத்தல் வேண்டும்` என்பதே. பற்றில்லாதவர் உடல் நிலைமையைப் பொறுத்து எங்கிருப்பினும் துறவரே. `நாட்டை விடக் கூடாது` என்பதில்லை. விடுதல் விடாமை அவரவரது உடல் நிலையைப் பொறுத்தது.
துறவற இயலில் துறவு நிலையைப் பலவகையாக விளக்கிய திருவள்ளுவர் `நாடு, காடு` என்னும் இரு வாழ்விடங்களில் எதனையும் வரையறுக்கவில்லை.
அறுபதாண்டு வரையில் இன்பம் நுகரும் காலமாக வகுக்கப் பட்டமையால், அந்தக் காலத்தை `இராக் காலம்` என்றும், அறுபதாண்டு கடந்ததை, `பொழுது விடிந்துவிட்ட காலம்` என்றும் நாயனார் கூறியருளினார்.
அறுபதாண்டு கடந்து விட்டதை ஒவ்வொரு தன் மகனும் அறிவான். ஆயினும், உலகப் பற்று அறது அதனையே அவன் பற்றிக் கிடப்பதற்கு, அவனுடைய மனநிலை அல்லது குடும்பச் சூழ்நிலை இரண்டில் எந்த ஒன்றும் காரணமாகலாம். அதனையே நாயனார் பொழுது விடிந்தும் படுக்கையை விட்டு வெளிவாராதவனது தன்மையாகக் கூறினார்.
``பூங்கொடி`` என்பது உருவகம். ஆகவே, அஃது அஃறிணைப் பெயராய், பூங்கொடி புல்லி`` என்பது, `பூங்கொடியைப் புல்லி` என இரண்டாவதன் தொகையாகவும், `பூங்கொடியாற் புல்லப்பட்டு` என மூன்றாவதன் தொகையாகவும், `புலி கொன்ற யானை` என்பது போலத் ``தடுமாறு தொழிற் பெயராய்``* நின்றதாம். புலம்பினவள் - தனிமையைப் பொறாதவள். அஃது இங்குக் குடும்பச் சூழ்நிலையைக் குறித்தது.
புலம்பன், நெய்தல் நிலத்தலைவன். நிலத்திற்கு உரியது இரங்கல். எனவே, `இத்தகைய தலைவன் இரக்கத்திற்கு உரியவன்` என்பது குறிப்பு.
கோழி கூவுதல், நாள் நிலைச் சுவடிகள் ஒருவனது ஆண்டளவைத் திட்டவட்டமாகக் காட்டுதல். பிற புட்கள் ஒலித்தல், உடம்பில் நரையும், திரையும் முதலானவை தோன்றுதல் `மனத்திட்பம் இல்லாதவனுக்கு எவை நிகழ்ந்தும் என்ன பயன்` என்றற்கு. `புலம்பனுக்கென்றும் புலர்ந்தின்று போதே`` என்றார்.
இதனால், அறநூல் முறைப்படி வாழாதவர் மக்கட் பிறப்பின் பயனை எய்தாமை உள்ளுறையாகக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 67

தோணிஒன் றுண்டு துறையில் விடுவது
ஆணி மிதித்துநின்(று) ஐவர்கோல் ஊன்றலும்
வாணிபம் செய்வார் வழியிடை யாற்றிடை
ஆணி கலங்கின் அதுஇது ஆமே.

பொழிப்புரை :

அடித் தட்டினைத் தக்கபடி மிதித்து, குறிப்பிட்ட ஐந்துபேர் ஓட்டினால், சென்று சேர வேண்டிய துறையில் கொண்டு போய் விடுகின்ற தோணி ஒன்று உள்ளது. (அது திருவைந்தெழுத்து மந்திரமாகும். ``அஞ்செழுத்தின் புணை பிடித்துக் கிடக்கின்றேனை``3 என ஆளுடைய அடிகளும் அருளிச் செய்தார். ``ஆணி`` என்றது அடித்தட்டினை. அதனைத் தக்கபடி மிதித்தலாவது பளு சமமாக இருக்கும்படி வைத்தல். படகின் அடித்தட்டுப் பளுவைத் தாங்கி நிற்பது. பளு சமமாய் இல்லாவிடில் தோணி புரண்டுவிடும். ``தோணி`` என்றது ஒரு மரத்தோணியன்று படகேயாம். பளுவைச் சமமாக வைதத்ல் அது வல்லார்க்கே கூடுவது. அதனால் இங்கு அது திருவைந்தெழுத்தின் மேலோட்டமான பொருளாகாது, உள்ளீடான பொருளாய் நிற்றலாம். அஃது உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன் எனும் நூல்களில் ஐந்தெழுத்திற்கும் சொல்லப்பட்ட ஐந்து பொருள்கள்.) அவைகளையே இங்கு ``ஐவர்`` என்றார். அவர்கள் கோல் ஊன்றி ஓட்டுதலாவது, திருவைந்தெழுத்தை, `தூலம், சூக்குமம், அதிசூக்குமம், காரணம், மகாகாரணம்` என்பனவாகப் படிப்படியாக நுணுகி நுணுகி வர உணர்த்துதல்த. ``அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி``l என, ஐந்தையும், ``ஐந்து பதம்`` என அருளிச் செய்தமையும் உணரற்பாற்று.

குறிப்புரை :

தோணியில் சென்று வாணிபம் செய்வார், திருவைந்தெழுத்தின் உட்பொருளை ஆசிரியர் உபதேசிக்கக் கேட்டு, அதனை மேற்கூறியபடி முறையில் ஓதி, மேன்மேல் உயரும் உயிர்கள்.
தோணியை ஓட்டுவார் அதனைத் செவ்வனே ஓட்டுதற்கு, அதில் ஏறியிருப்பவர்களும் ஒத்துழைத்தல் வேண்டும். அவ்வாறின்று முரண்விளைப்பார்களாயின் தோணி கவிழ்ந்துவிடும். தோணி கவிழ்தலையே, ``ஆணி கலங்கின்`` ``அது இது ஆம்`` என்றது, `மேலது கீழாகியும், கீழது மேலாகியும் புரளும்` என்றபடி. ``அது இது ஆம்`` என்றதனானே, இது அது ஆம் என்பதும் கொள்க. ``வழியிடை யாற்றிடை`` என்றதில் வழி, செல்லும் வழியையும், யாறு, `அவ்வழியாவது இது` என்பதையும் குறித்துச் சிறப்பும், பொதுவுமாய் நின்றன. இரண்டாம் அடியை முதலில் வைத்து, `துறையில்` விடுவது தோணி ஒன்று உண்டு` என மாற்றியுரைக்க.
இங்குக் குறித்த வாணிபத்தின் இயல்பை, மேல் ``கொங்கு புக்காரொடு வாணிபம் செய்தது``3 என்றதில் காண்க.
இதனால், பலதிறப் பொருள்களை மறைத்துரையாடலாகக் கூறிவந்து, இறுதியில் அந்த அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்து முடிக்கப்பட்டது.
சிற்பி