திருவாசகம்-திருப்பூவல்லி


பண் :

பாடல் எண் : 1

இணையார் திருவடிஎன்
தலைமேல் வைத்தலுமே
துணையான சுற்றங்கள்
அத்தனையுந் துறந்தொழிந்தேன்
அணையார் புனற்றில்லை
அம்பலத்தே ஆடுகின்ற
புணையாளன் சீர்பாடிப்
பூவல்லி கொய்யாமோ.

பொழிப்புரை :

இரண்டாகிய அரிய திருவடியை, என் தலையின் மீது வைத்தவுடன், இதுவரையில் துணையென்று நினைத்திருந்த உறவினரெல்லாரையும், விட்டு நீங்கினேன். கரைகோலித் தடுக்கப் பட்ட நீர் சூழ்ந்த தில்லைநகர்க் கண்ணதாகிய, அம்பலத்தில் நடிக்கின்ற, நமதுபிறவிக் கடலுக்கு ஓர் மரக்கலம் போல்பவனாகிய சிவபெரு மானது பெருமையைப் புகழ்ந்து பாடி அல்லி மலர்களைப் பறிப்போம்.

குறிப்புரை :

இணை ஆர் - இணையாகப் பொருந்திய. இங்குக் கூறும் தலைவி சிவபெருமானிடத்தில் பேரின்பம் பெற்ற பெண்ணாக வும் கொள்ளப்படுதலின், திருவடி சென்னிமேற் சூட்டப்பெற்றதாகக் கூறலும் பொருந்துவதே.
துணையான - முன்பு எனக்குத் துணையாய் இருந்த; என்றது, `அவை துணையாதல் போலி` என்றபடி. ``துறந் தொழிந்தேன்`` என்றது ஒரு சொல் நீர்மைத்தாய், துணிவுப் பொருள் உணர்த்திற்று. இதன் பின், `ஆதலின்` என்பது எஞ்சிநின்றது.
அணை ஆர் - மடையினால் தடுக்கப்படுகின்ற. புணை யாளன் - திருவருளாகிய புணையை உடையவன். திருவருள் புணை யாதல், பிறவிக் கடலுக்காம். எனவே, ``புணை`` என்றது, சிறப்புருவக மாயிற்று. `அப் புணையாளன்` எனச் சுட்டு வருவித்துரைக்க. சீர் - புகழ். இதனுள் இறைவனது புகழ் பலவும் வருதல் காண்க. இங்கும், `கொய்வாமோ` என்பது, `கொய்யாமோ` என மருவியதாக உரைக்க.

பண் :

பாடல் எண் : 2

எந்தைஎந் தாய்சுற்றம்
மற்றுமெல்லாம் என்னுடைய
பந்தம் அறுத்தென்னை
ஆண்டுகொண்ட பாண்டிப்பிரான்
அந்த இடைமருதில்
ஆனந்தத் தேனிருந்த
பொந்தைப் பரவிநாம்
பூவல்லி கொய்யாமோ. 

பொழிப்புரை :

எனது தந்தையும், எனது தாயும் உறவினரும், மற்றெல்லாப் பொருள்களும் என்னுடைய பிறவிக் கட்டைச் சேதித்து, என்னை ஆண்டருளின, பாண்டிப் பிரானே, ஆதலால் அந்தத் திருவிடை மருதூரின்கண், இன்பத்தேன் தங்கியிருந்த பொந்தினைத் துதித்து நாம் பூவல்லி கொய்யாமோ.

குறிப்புரை :

``எந்தை`` என்பதற்கு ``எம் தாய்`` என்றதனோடு இயைய, `எம் தந்தை` என உரைக்க. ``எம்`` என்றதனை, ``சுற்றம்`` என்றதற்கும் கூட்டி, `எம் மற்றுச் சுற்றம்` என மாற்றியுரைக்க. ``சுற்றம்`` என்றதன்பின், ``என்கின்ற`` என்பது வருவித்து, `எந்தை, எம்தாய், எம் மற்றுச் சுற்றம் என்கின்ற என்னுடைய பந்தம் எல்லாம் அறுத்து` எனக் கூட்டுக. அந்தம் - அழகு. `கொத்து, கொந்து` என்பன ஒரு பொருளவாய் நிற்றல் போல, `பொத்து, பொந்து` என்பன ஒரு பொருளவாய் நிற்கும். பொந்துகளிலும் தேன் ஈக்கள் தேனைச் சேர்த்து வைத்தல் உண்டு. `பாண்டிப்பிரானாகிய பொந்து` என்க.

பண் :

பாடல் எண் : 3

நாயிற் கடைப்பட்ட
நம்மையுமோர் பொருட்படுத்துத்
தாயிற் பெரிதுந்
தயாவுடைய தம்பெருமான்
மாயப் பிறப்பறுத்
தாண்டானென் வல்வினையின்
வாயிற் பொடியட்டிப்
பூவல்லி கொய்யாமோ. 

பொழிப்புரை :

நாயினுங் கடையான, எங்களையும், ஓர் பொருளாக்கி, தாயினும், மிகவும் தயையுடையவனான, தம்பிரான், என் வலிய இருவினைகளின் வாயில், புழுதியைக் கொட்டி, மாயப்பிறவியைச் சேதித்து ஆண்டருளினன், ஆதலால் பூவல்லி கொய்யாமோ.

குறிப்புரை :

தயா - தயவு; கருணை. உயிர்களை, `தாம்` என்றல் மரபு என்பதை, `தம்பிரான்` என்னும் வழக்குப்பற்றி அறிந்து கொள்க. மாயம் - நிலையின்மை. ``ஆண்டான்`` என்றதன் பின், `ஆதலின்` என்பது எஞ்சிநின்றது.
பொடி - மண். அட்டி - சொரிந்து. எண்ணம் இழந்தவரை, `வாயில் மண்ணிட்டுக் கொண்டார்` என்னும் வழக்குப் பற்றி, ``வினையின் வாயில் பொடி அட்டி`` என்று அருளினார். இன்னோ ரன்னவை உவமவாயிற்படுத்துரைக்கும் பான்மை வழக்குக்கள். `வினையைத் தோல்வியடையச் செய்து` என்பது பொருள். இது, வினை தோற்றோடுமாறு இறைவன் புகழைப் பாடுதலைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 4

பண்பட்ட தில்லைப்
பதிக்கரசைப் பரவாதே
எண்பட்ட தக்கன்
அருக்கனெச்சன் இந்துஅனல்
விண்பட்ட பூதப்
படைவீர பத்திரரால்
புண்பட்ட வாபாடிப்
பூவல்லி கொய்யாமோ. 

பொழிப்புரை :

மதிப்புப் பெற்ற தக்கனும், சூரியனும், எச்சன் என்பவனும், சந்திரனும், அக்கினியும், அலங்கரித்தலமைந்த, தில்லை நகர்க்கு இறைவனாகிய சிவபெருமானை, துதியாதவர்களாய், மேன்மை பொருந்திய பூதப்படையையுடைய, வீரபத்திரக் கடவுளால் காயப்பட்ட விதத்தை எடுத்துப்பாடி, பூவல்லி கொய்யாமோ.

குறிப்புரை :

பண்படுதல் - செம்மைப் படுதல். எண்பட்ட - வேறோர் எண்ணத்தைப் பொருந்திய. அருக்கண் - சூரியன். எச்சன் - வேள்வித் தேவன். இந்து - சந்திரன். விண்பட்ட - வானத்தினின்றும் பாய்ந்த.

பண் :

பாடல் எண் : 5

தேனாடு கொன்றை
சடைக்கணிந்த சிவபெருமான்
ஊனாடி நாடிவந்
துள்புகுந்தான் உலகர் முன்னே
நானாடி ஆடிநின்
றோலமிட நடம்பயிலும்
வானாடர் கோவுக்கே
பூவல்லி கொய்யாமோ. 

பொழிப்புரை :

தேன் பொருந்திய கொன்றை மலர் மாலையை, சடையின்கண் தரித்த சிவபிரான் பலகால் மானுடவுடம்பெடுத்து வந்து, உலகத்தாருக்கு எதிரில் என் மனத்தில் புகுந்தான். அதனால் நான் ஆடியாடி நின்று, முறையிட, நடனம் செய்கிற தேவர் பிரானுக்கே பூவல்லி கொய்யாமோ.

குறிப்புரை :

தேன் நாடு - வண்டுகள் தேடி அடைகின்ற. ஊன் - உடம்பு. `என் ஊன்` என்க. ``நாடி நாடி`` என்ற அடுக்கு, பல முறை வந்தமை குறித்தது, பலமுறையாவன, திருப்பெருந்துறையிலும், மதுரையிலும், உத்தரகோச மங்கையிலும், கழுக்குன்றத்திலும், வந்தருளியனவாம். `உலகர் முன்னே வந்து` என முன்னே கூட்டுக. `இம்மைக்கண் வந்து அருள் புரிந்தான்` என்பார், ``ஊன் நாடி வந்து`` என்றார். நாடி ஆடி நின்று - தேடி அலைந்து நின்று. நடம் பயிலும் - நாடகம் புரியும்; என்றது, `முன்பு தானே வந்து ஆட்கொண் டருளினான்; இப்பொழுது, நான் நாடி ஆடி ஓலமிடவும் தோன்றாது நாடகம் செய்கின்றான்` என்றவாறு. ``கோவுக்கே`` என்றதன்பின், `பாடி` என ஒரு சொல் வருவிக்க.

பண் :

பாடல் எண் : 6

எரிமூன்று தேவர்க்
கிரங்கியருள் செய்தருளிச்
சிரமூன் றறத்தன்
திருப்புருவம் நெரித்தருளி
உருமூன்று மாகி
உணர்வரிதாம் ஒருவனுமே
புரமூன் றெரித்தவா
பூவல்லி கொய்யாமோ. 

பொழிப்புரை :

மும்மூர்த்திகளாகி, அறிதற்கரிய பொருளாயுள்ள ஒருவனுமே, முத்தீயின் வழியாக அவியை ஏற்கின்ற தேவர்களுக்கு, இரங்கி அருள் செய்து, திரிபுரத்தவர்கள் தலை சுற்றி விழும்படி, தனது திருப்புருவத்தை வளைத்தருளி, மூன்று புரங்களையும் எரித்த விதத்தைப் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ?

குறிப்புரை :

எரி மூன்று தேவர் - முத்தீ வேள்வியை விரும்புகின்ற தேவர்கள். ``சிரம் மூன்று அற`` என்றது, `பெருவலியுடைய அசுரர் மூவர் அழிந்தொழிய`` எனப் பொதுப்பொருளே தந்து நின்றது. புருவம் நெரித்தல், சினத்தால் நிகழ்வது. உருமூன்று - மும்மூர்த்திகள். `அருவம் உருவம், அருவுருவம்` என்றும், `போகவடிவம், யோக வடிவம், வேகவடிவம்` என்றும் உரைப்பர். அரிதாம் - அரிய பொரு ளாகிய. ``ஒருவனும்`` என்ற உம்மை, முற்றும்மை. `ஒருவனே மூன்று புரங்களை அழித்தமை வியப்பு` என்றவாறு, ``எரித்தவா`` என்றதன் பின், `பாடி, என்பது எஞ்சிநின்றது. `தேவர்கள்மேல் இரக்கம் வைத்தும். மூவர் அசுரர்மேல் சினங்கொண்டும் ஒருவனே மூன்று புரங்களை எரித்தான்` என்பது இப்பாட்டின் திரண்டபொருள். இனி, மேற்போந்த (தி.8 திருப்பூவல்லி. பா-4) தக்கன்றன் வேள்வி நிகழ்ச்சியே இங்கும் முதல் இரண்டடிகளில் குறிக்கப்பட்டதெனக் கொண்டு, அதற்கியைய உரைப்பர் பிறரெல்லாம்.

பண் :

பாடல் எண் : 7

வணங்கத் தலைவைத்து
வார்கழல்வாய் வாழ்த்தவைத்து
இணங்கத்தன் சீரடியார்
கூட்டமும்வைத் தெம்பெருமான்
அணங்கொ டணிதில்லை
அம்பலத்தே ஆடுகின்ற
குணங்கூரப் பாடிநாம்
பூவல்லி கொய்யாமோ.

பொழிப்புரை :

எம் இறைவன் தன்னை வணங்கும் பொருட்டு, எனக்குச் சிரசை அமைத்து, தன் பெரிய திருவடியைத் துதிக்கும் பொருட்டு எனக்கு வாயை அமைத்து அடியேன் நட்பமையும் பொருட்டு, தன் சிறப்பமைந்த அடியார் குழாத்தையும் அமைத்து அழ கோடு, அழகாகிய தில்லையம்பலத்தில் நடனம் செய்கின்ற கல்யாண குணத்தை மிகுதியாகப் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ?

குறிப்புரை :

``எம் பெருமான்`` என்றதை முதலிற் கூட்டி, அதன்பின், `மக்களாய் உள்ளார்க்கு` என்பது வருவிக்க. ``வார்கழல்`` என்றது தாப்பிசையாய், முன்னரும் சென்று இயையும். ``வாய்`` என்றதனை, ``வாழ்த்த`` என்றதன் பின்னர்க் கூட்டுக. இணங்க - கூடியிருக்க. சீரடியார் - சிறப்புடைய அடியவர்; அவர், `கூடும் அன்பினிற் கும்பிடலேயன்றி, வீடும் வேண்டா விறலினோர்` (தி.12 பெ.புரா. திருக்கூட்ட.8) என்க. அவரையும், `வைத்து` என்றதனால், அவர்கட்குத் தன் திருவடி கூடுதலை விரைய அருளாது இந்நிலவுலகில் சின்னாள் உலாவச் செய்தலும் உலக நலத்தின் பொருட்டென்பது போந்தது. இதனை,
``அன்ன தன்மையர் கயிலையை அணைவதற் கருளார்
மன்னு தீந்தமிழ் புவியின்மேற் பின்னையும் வழுத்த``
(தி.12 பெ. புரா. திருநாவுக்கரசர். 361) என்றதனானும் அறிக. அடிகளிடத்தும் இந்நிலை காணப்படுவது என்க.
``எம் பெருமான்`` என்றது, ``வைத்து`` என்றவற்றோடு முடியு மாகலின், ஆடுதலுக்கு, `தான்` என்னும் எழுவாய் வருவிக்க. அணங் கொடு - தேவியோடு. இதனை, ``அம்பலத்தே` என்றதன் பின்னர்க் கூட்டி, ஒடு, உருபினை `நின்று` என்பது வருவித்து முடிக்க. இவ்வாறு முடியாது, ``தொடியொடு - தொல்கவின் வாடிய தோள்`` (குறள் - 1235) என்றது போல, `ஒடு` வேறு வினைப் பொருளில் வந்தது` எனக் கொண்டு, `அணங்கு காண` என்பது கருத்தாக உரைப்பினும் அமையும். ``குணம்``என்றது அருளை. கூரப்பாடி - மிகப்பாடி. இத் திருப்பாட்டுள், இறைவன் உயிர்களை உய்விக்குமாறெல்லாம் வகுத்தோது முகத்தான், அவன் செய்வனவெல்லாம் உயிர்கள் பொருட்டேயாதலாகிய பேரருள் கூறப்பட்டது.
வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச்
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே
வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே.
(தி.5 ப.90 பா. 7) என்ற திருநாவுக்கரசர் திருமொழி இங்கு நினைக்கத் தக்கது.

பண் :

பாடல் எண் : 8

நெறிசெய் தருளித்தன்
சீரடியார் பொன்னடிக்கே
குறிசெய்து கொண்டென்னை
ஆண்டபிரான் குணம்பரவி
முறிசெய்து நம்மை
முழுதுடற்றும் பழவினையைக்
கிறிசெய்த வாபாடிப்
பூவல்லி கொய்யாமோ.

பொழிப்புரை :

எனக்கு நல்வழியை உண்டாக்கியருளி, தன் சிறப்பை உடைய அடியார்களுடைய பொன்னடிகளுக்கே, இலக் காக்கிக் கொண்டு, என்னை ஆண்டருளின இறைவனது, மங்கள குணங்களைப் புகழ்ந்து, எம்மை முழுமையும் அடிமையாக்கி வருத்து கின்ற, பழவினைகளைப் பொய்யாக்கின (இல்லையாகச் செய்த) விதத்தைப் புகழ்ந்து பாடிப் பூவல்லி கொய்யாமோ?

குறிப்புரை :

``என்னை`` என்றதனை முதலிற் கொள்க. நெறி செய்து-நல்வழிப்படுத்தி. குறிசெய்து (உரிய பொருளாக்கத்) திரு வுளங்கொண்டு. கொண்டு - ஏற்றுக்கொண்டு. பரவி - பரவுதலால், `பரவிக் கிறிசெய்த` என இயையும். முறிசெய்து - ஆவணம் செய்து கொண்டு; ஆவணம், இங்கு, அடிமைப் பத்திரம். முழுது - அன்று தொட்டு இன்றுகாறும் இடைவிடாது நின்று. உடற்றும் - வருத்துகின்ற. கிறிசெய்து - பொய்யாக்கி; இல்லையாகச் செய்து. ``ஆண்டபிரான் குணம் பரவி வல்வினையைக் கிறிசெய்தவா` என்றதனால், இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார்மாட்டு இருள்சேர் இருவினையும் சேராமை (குறள் - 5). பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

பன்னாட் பரவிப்
பணிசெய்யப் பாதமலர்
என்ஆகம் துன்னவைத்த
பெரியோன் எழிற்சுடராய்க்
கல்நா ருரித்தென்னை
யாண்டுகொண்டான் கழலிணைகள்
பொன்னான வாபாடிப்
பூவல்லி கொய்யாமோ. 

பொழிப்புரை :

யான், அநேகநாள் துதித்து, பணிவிடை செய்யும் படி, தன் திருவடி மலரை, என் மனத்தில் பொருந்த அமைத்த பெருமையையுடையான், அழகிய சோதியாகி, முற்படக் கல்லில் நார் உரித்த பிறகு என்னை ஆண்டருளினவனுடைய இரண்டு திருவடிகள் அழகியனவாயிருந்த விதத்தைப் புகழ்ந்து பாடிப் பூவல்லி கொய்யாமோ?

குறிப்புரை :

ஆகம் - மார்பு; அஃது இருதயத்தைக் குறித்தது. இனி, `அகம் என்பது நீட்டலாயிற்று` எனினுமாம், பெரியோனாகிய ஆண்டுகொண்டானது கழலிணைகள்` என்க. `கழலிணைகள்` எனப்பட்டது பற்றிய குறிப்பு மேலே (தி.8 திருத்தெள்ளேணம் பா.17) தரப்பட்டது. சுடர் - ஞான விளக்கு; என்றது, ஆசான மூர்த்தியை, பொன் - நிதி. `நமக்குப் பொன்னானவா` என்க.

பண் :

பாடல் எண் : 10

பேராசை யாமிந்தப்
பிண்டமறப் பெருந்துறையான்
சீரார் திருவடிஎன்
தலைமேல் வைத்தபிரான்
காரார் கடல் நஞ்சை
உண்டுகந்த காபாலி
போரார் புரம்பாடிப்
பூவல்லி கொய்யாமோ. 

பொழிப்புரை :

பேராசையால் உண்டாகிய இந்த உடம்பின் தொடர்பு அற்றுப்போம்படி, திருப்பெருந்துறையை உடையானும், சிறப்பமைந்த திருவடியை, என்சிரசின் மேல் வைத்த பெருமானும், கருமை நிறைந்த பாற்கடலில் தோன்றிய நஞ்சை உண்டு மகிழ்ந்த காபாலியும் ஆகிய சிவபெருமானது போர்க்கிலக்காயிருந்த முப்புரத்தின் வரலாற்றைப் பாடிப் பூவல்லி கொய்யாமோ?

குறிப்புரை :

பிண்டம் - உடம்பு. உடம்பு ஆசையால் வருதலின். அதனை ஆசையாகவே ஒற்றுமைப்படுத்து ஓதியருளினார். `பிண்டம் அறப்பாடி` என இயைக்க. போர்ஆர்புரம் - போர் பொருந்திய ஊர்; தலங்கள். சிவபிரானது போர்ச் செயல்களைக் குறிக்கும் தலங்கள் எட்டு. அவை, `அட்ட வீரட்டம்` எனப்படும். அவற்றை, 1பூமன் சிரம் கண்டி2 அந்தகன் கோவல்
3புரம் அதிகை
4மாமன் பறியல் 5சலந்தரன் விற்குடி
6மா வழுவூர்
7காமன் குறுக்கை 8யமன் கட வூர்இந்தக்
காசினியில்
தேமன்னு கொன்றையும் திங்களும் சூடிதன்
சேவகமே.
என்னும் தனிப்பாடலால் அறிக. சிவநெறியை அழித்துப் புத்தராய் நின்று பின் சிவபெருமானோடு போரேற்று அழிந்த அசுரரது திரி புரங்களை, அப்பெருமானிடத்து அன்புடையார் பாடாராகலின், ``புரம்`` என்றதற்கு, `திரிபுரம்` என உரைத்தல் பொருந்தாமை வெளிப் படை. `புரத்துப் போரார்தல்` என மாற்றி உரைத்தும் எனின், அது ``புர மூன்று எரித்தவா`` என மேலே (தி.8 திருப்பூவல்லி. பா-6.) கூறப்பட்டமை காண்க.
இனி, இவ்வாறன்றி, `பேரானந்தம் பாடி` (தி.8 திருப்பூவல்லி. பா-18.) எனப் பின்னர் மோனையின்றி வருதல்போல, ஈண்டும், `பேரார் புரம்` எனப் பாடம் ஓதி, `புகழ் பொருந்திய சிவலோகம்` என்று உரைப்பினுமாம்.

பண் :

பாடல் எண் : 11

பாலும் அமுதமுந்
தேனுடனாம் பராபரமாய்க்
கோலங் குளிர்ந்துள்ளங்
கொண்டபிரான் குரைகழல்கள்
ஞாலம் பரவுவார்
நன்னெறியாம் அந்நெறியே
போலும் புகழ்பாடிப்
பூவல்லி கொய்யாமோ. 

பொழிப்புரை :

பாலையும், அமிர்தத்தையும், தேனையும் ஒத்த பராபரப் பொருளாகி, குளிர்ச்சியாகிய திருவுருக் கொண்டு வந்து, என் மனத்தைக் கவர்ந்து கொண்ட இறைவனது ஒலிக்கின்ற வீரக்கழலை அணிந்த திருவடிகளை உலகத்தில் வழிபடுவோர்களுடைய நல்வழி யாகி, அவ்வழியையே நிகர்ப்பதாகிய, இறைவனது புகழைப் பாடிப் பூவல்லி கொய்யாமோ?.

குறிப்புரை :

``தேன்`` என்றவிடத்தும் உம்மை விரிக்க. உடனாம் - ஒருங்கு கலந்தது போலும்.
பராபரமாய் - மிக மேலான இன்பமாய். ``கோலம் குளிர்ந்து`` என, இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் நின்றது. `கோலத்தை இனிதாகக் கொண்டு` என்பது பொருள். `கழல்களை ஞாலத்துப் பரவுவார்` எனவும்`, பரவுவாரது நன்னெறியாகிய அந்நெறியானே புகழைப் பாடி` எனவும் உரைக்க .
``போலும்`` என்றது அசைநிலை. உண்மையான் நோக்குமிடத்து இறைவனது பேராற்றலுக்கு யாதொரு செயலும் அரியதன்றாதலின், ``போலும் புகழ்`` என்றார் என்றலுமாம்.

பண் :

பாடல் எண் : 12

வானவன் மாலயன்
மற்றுமுள்ள தேவர்கட்கும்
கோனவ னாய் நின்று
கூடலிலாக் குணக்குறியோன்
ஆன நெடுங்கடல்
ஆலாலம் அமுதுசெய்யப்
போனகம் ஆனவா
பூவல்லி கொய்யாமோ. 

பொழிப்புரை :

இந்திரன், திருமால், பிரமன் மற்றுமுண்டாகிய தேவர்கள் ஆகிய எல்லார்க்கும் அரசனாயிருந்தும், ஒருவரும் சென்றணுக வொண்ணாத குணங்குறிகளை உடையவன், நெடியபாற் கடலிலுண்டாகிய ஆலகால விஷத்தைத் திருவமுது செய்யவே, அது உணவாயினவாறென்ன வியப்பு என்று பூவல்லி கொய்யாமோ?

குறிப்புரை :

``கோனவன்` என்றதில் ``அவன்``, பகுதிப் பொருள் விகுதி. ``கூடல் இலாக் குணக் குறியோன்`` என்றது, `அறிந்து அடைதற் கேற்ற குணமும், குறியும் இல்லாதவன்` என்றபடி. போனகம்- நல்உணவு. ஆன - பொருந்திய. இங்கும், ``ஆனவா`` என்றதன் பின், ``பாடி`` என்பது வருவிக்க.

பண் :

பாடல் எண் : 13

அன்றால நீழற்கீழ்
அருமறைகள் தானருளி
நன்றாக வானவர்
மாமுனிவர் நாள்தோறும்
நின்றார ஏத்தும்
நிறைகழலோன் புனைகொன்றைப்
பொன்றாது பாடிநாம்
பூவல்லி கொய்யாமோ. 

பொழிப்புரை :

அக்காலத்தில் கல்லாலின் நீழலில் எழுந்தருளி, அருமையாகிய வேதப் பொருள்களை அருளிச் செய்து, தேவர்களும் பெரிய முனிவர்களும் தினந்தோறும் நிலைத்திருந்து வாயாரத் துதிக் கும்படியான நிறைகழலை அணிந்த திருவடிகளை உடையோன் அணிந்த கொன்றைப் பூவின் சிறப்பைப் புகழ்ந்து பாடி நாம் பூவல்லி கொய்யாமோ?

குறிப்புரை :

``தான்`` என்றதனை முதற்கண்வைத்து எழுவாயாக்கி, அதனை, `அருளி, கழலோன்`` என்னும் பெயர்ப் பயனிலைகள் கொடுத்து முடித்து, `அவன் புனைகொன்றைப் பொன்தாது பாடி` எனச் சுட்டுப்பெயர் வருவித்துரைக்க. ``புனைகொன்றை``, வினைத் தொகை. `பொற்றாது` என்பது, எதுகை நோக்கி மெலிந்து நின்றது; பொன்போலும் தாது, மகரந்தம்.

பண் :

பாடல் எண் : 14

படமாக என்னுள்ளே
தன்னிணைப்போ தவையளித்திங்கு
இடமாகக் கொண்டிருந்
தேகம்பம் மேயபிரான்
தடமார் மதில்தில்லை
அம்பலமே தானிடமா
நடமாடு மாபாடிப்
பூவல்லி கொய்யாமோ.

பொழிப்புரை :

என் மனமே எழுதுபடமாகத் தன்னிரண்டு திருவடி மலர்களைப் பதியவைத்து, இவ்விடத்தை இடமாகக் கொண்டிருந்தும் திருவேகம்பத்திலும் பொருந்தியிருந்த பெருமான், விசாலம் பொருந்திய மதில்சூழ்ந்த தில்லையம்பலத்தையே இடமாகக் கொண்டு, நடனம் செய்யும் முறைமையைப் பாடிப் பூவல்லி கொய்யாமோ?

குறிப்புரை :

படம் - ஓவியம். `உள்ளக்கிழியின் உருவெழுதி` (தி.6 ப.25 பா.1) என்றருளினார் திருநாவுக்கரசரும். ``போது`` என்றது, உவமையாகு பெயராய்த் திருவடியை உணர்த்திற்று. `இங்கு இருந்து` என இயையும். `இங்கு` என்றதனால் `நிலமே இடமாக` என்பது, தானேபோதரும், தடம் ஆர் - குளங்கள் நிறைந்த, தான், அசைநிலை.

பண் :

பாடல் எண் : 15

அங்கி அருக்கன்
இராவணன்அந் தகன்கூற்றன்
செங்கண் அரிஅயன்
இந்திரனுஞ் சந்திரனும்
பங்கமில் தக்கனும்
எச்சனுந்தம் பரிசழியப்
பொங்கியசீர் பாடிநாம்
பூவல்லி கொய்யாமோ. 

பொழிப்புரை :

அக்கினித் தேவனும், சூரியனும், இராவணனும், சனியும், நமனும், செந்தாமரைக் கண்ணனாகிய திருமாலும், பிரமனும், தேவர்கோனும், சந்திரனும், அழிவற்ற தக்கனும், எச்சன் என்பவனும், தமது தன்மையழியும்படி, கோபித்த சிறப்பைப் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ?

குறிப்புரை :

அந்தகன் - அந்தகாசுரன், பரிசு - தன்மை; என்றது வலிமையை. பொங்கிய சீர் - மிக்குப் பரவிய புகழ். `பரிசு அழிந்த மையால் பொங்கிய சீர்` என்க. இங்குக் கூறப்பட்டவருள் இராவண னும், அந்தகாசுரனும் ஒழித்து ஒழிந்தோர் அனைவரும் தக்கன் வேள்வியில் ஒறுக்கப்பட்டவர் என்க.

பண் :

பாடல் எண் : 16

திண்போர் விடையான்
சிவபுரத்தார் போரேறு
மண்பால் மதுரையிற்
பிட்டமுது செய்தருளித்
தண்டாலே பாண்டியன்
தன்னைப் பணிகொண்ட
புண்பாடல் பாடிநாம்
பூவல்லி கொய்யாமோ. 

பொழிப்புரை :

திடமான, போர்க்குரிய இடபத்தை உடையவன், சிவநகரத்தார்ப் போரேறாயிருப்பவன், அவன் மண்ணுலகில் மதுரைப் பதியில், பிட்டினைத் திருவமுது செய்தருளி, பிரப்பந் தண்டினால் பாண்டியன் தன்னைப் பணிகொண்டதனால் உண்டாகிய, புண்ணைப் பற்றிய பாடலைப் பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ?

குறிப்புரை :

சிவபுரம் - சிவலோகம். அங்கு உள்ளார்க்குத் தலைவ னாய் நின்று இடர்களைதலின், ``சிவபுரத்தார் போர் ஏறு`` என்று அருளினார். மண்பால் - மண்ணுலகத்தில். அமுது செய்து - உண்டு. ``தண்டு`` என்றது பிரம்பினை. ``தன்னை`` என்றது, ``விடையான்`` எனவும், ``ஏறு`` எனவும் கூறப்பட்டவனைக் குறித்தது. `தன்னைப் பாண்டியன் தண்டாலே பணிகொண்ட புண்` என்க. பணிகொள்ளுதல் - ஏவல்கொள்ளுதல். `பணிகொண்ட புண்`` என்றது, `ஆறுசென்ற வியர்` என்பது போல நின்றது. ``பாடல் பாடி`` என்றதற்கு மேல் (தி.8 திருத்தெள்ளேணம். பா-8) உரைத்தவாறு உரைக்க.

பண் :

பாடல் எண் : 17

முன்னாய மாலயனும்
வானவருந் தானவரும்
பொன்னார் திருவடி
தாமறியார் போற்றுவதே
என்னாகம் உள்புகுந்
தாண்டுகொண்டான் இலங்கணியாம்
பன்னாகம் பாடிநாம்
பூவல்லி கொய்யாமோ. 

பொழிப்புரை :

தேவர்களுக்குள் முன்னவர்களாகிய திருமாலும், பிரமனும், தேவர்களும், அவுணரும் பொன்போலும் அரிய திரு வடியைத்தாம் அறியமாட்டார்கள். அப்படியிருக்க எம்மால் வணங்கப் படுவதோ? என் மனத்தினுள்ளே புகுந்து என்னை ஆண்டு கொண்ட வனுடைய, ஆபரணமாகிய பல நாகங்களைப் புகழ்ந்து பாடி நாம் பூவல்லி கொய்யாமோ?

குறிப்புரை :

முன் ஆய - தேவருள் முன்நிற்கின்ற. தானவர் - அசுரர். ``இலங்கு அணியாம் பன்னாகம்`` எனப் பின்னர் வருதலின், ``பொன்னார் திருவடி`` என்றவை, பன்னாகம் அணிந்த அப் பெருமானுடையவை ஆயின. `பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம்` எனச் சிவபெருமானது திருவடிகளை, ``பொன்னார் திருவடி`` (தி.4 ப.109பா.1) என அப்பரும் அருளிச் செய்தார். `ஆகத்துக்கண் உள் புகுந்து` என்க. ``உள்`` என்றது, மனத்தை. ஆண்டு கொண்டானது அணி` என்பதாம். இலங்கு அணி - விளங்குகின்ற ஆபரணம். பல் நாகம் - பல பாம்புகள்.
தாருகாவன முனிவர்களது மனைவிமார்கள் முன் சிவ பெருமான் பிச்சைக்கோலத்துடன் சென்றபொழுது அம்மகளிர் அவரது அழகில் ஈடுபட்டுத் தம் கற்பினை இழந்தமை பற்றிச் சினந்த அம் முனிவர்கள் கொடுவேள்வி ஒன்றைச் செய்து அதனினின்றும் உண்டாக்கி அனுப்பிய பொருள்களுள், பாம்புகளும் சில; அவற்றை யும், காசிப முனிவர் மனைவியருள், `வினதை` என்பவள் பெற்ற மகனாகிய கருடனுக்கு அஞ்சி அடைக்கலம் புகுந்த, அம்முனிவர் மனைவியருள் மற்றொருத்தியாகிய கத்துரு என்பவள் பெற்ற பாம்புகளையும் சிவபெருமான் அணிகலங்களாக அணிந்து கொண்டனர் என்பது புராண வரலாறு.

பண் :

பாடல் எண் : 18

சீரார் திருவடித்
திண்சிலம்பு சிலம்பொலிக்கே
ஆராத ஆசையதாய்
அடியேன் அகமகிழத்
தேரார்ந்த வீதிப்
பெருந்துறையான் திருநடஞ்செய்
பேரானந் தம்பாடிப்
பூவல்லி கொய்யாமோ. 

பொழிப்புரை :

சிறப்புப் பொருந்திய திருவடி மேலணிந்த, திடமான சிலம்புகள், ஒலிக்கின்ற ஒலிக்கே, வெறுக்காத ஆசை கொண்டு அடிமையாகிய நான் மனமகிழுமாறு தேரோடுகிற தெருக்களோடு கூடிய திருப்பெருந்துறையை உடையவன் திரு நடனம் பண்ணுவதனால் உண்டாகிற பேரின்பத்தைப் புகழ்ந்து பாடிப் பூவல்லி கொய்யாமோ?

குறிப்புரை :

`திருவடிக்கண் அணிந்த சிலம்பு சிலம்பு ஒலி` என்க. சிலம்பு ஒலி - ஒலிக்கின்ற ஒலி. ஆசையது - ஆசையை உடையது. `ஆய` என்பதன் இறுதிநிலை தொகுத்தலாயிற்று. `ஆசையதாய அகம்` என்க. `அகம் மகிழ நடம்செய்` என இயையும். நடம்புரியும் பொழுது சிலம்பொலி கேட்கப்படுதலின், ஆசைப்பட்ட அகம், அது கேட்டு மகிழ்வதாயிற்று, செய் பேரானந்தம் - செய்ததனால் விளையும் பெரிய இன்பம்.

பண் :

பாடல் எண் : 19

அத்தி யுரித்தது
போர்த்தருளும் பெருந்துறையான்
பித்த வடிவுகொண்
டிவ்வுலகிற் பிள்ளையுமாம்
முத்தி முழுமுதலுத்
தரகோச மங்கைவள்ளல்
புத்தி புகுந்தவா
பூவல்லி கொய்யாமோ. 

பொழிப்புரை :

யானையை உரித்து, அந்தத் தோலைப் போர்த் தருளிய திருப்பெருந்துறையை உடையான், பித்த வேடங் கொண்டு இந்த உலகத்தில் சிலர்க்குப் பிள்ளையுமாகி, முத்தி முழுமுதற் பொருளுமா, திருவுத்தரகோச மங்கையில் எழுந்தருளிய வள்ளலுமா இருக்கிறதனோடு அவன் என் மனத்துள் புகுந்த படியைப் புகழ்ந்து பூவல்லி கொய்யாமோ?

குறிப்புரை :

அத்தி - யானை, ``அது`` என்றது, உரிக்கப்பட்ட தோலினை, தோலைப் போர்வையும், ஆடையுமாகக் கொண்டது முதலியவற்றையே, `பித்தவடிவு` என்றார். பிள்ளை - மகவு. சிவ பெருமான் மகவாய் வந்தமையை, ``ஓரி யூரின் உவந்தினி தருளிப் - பாரிரும் பாலக னாகிய பரிசும்`` (தி.8 கீர்த்தி - 68-69) என முன்னே அருளிச் செய்தார். ``பிள்ளையுமாம்`` என்ற உம்மையால், காளையு மாதல் தழுவப்பட்டது. தாருகாவன முனிவர் மனைவியர் முன் சென்றது முதலியவை காளைவடிவமாதல் அறிக. இவற்றால் இவை யனைத்தும் நாடகமாதலல்லது. அவனது உண்மை இயல்பு அன்றென்பது குறித்தவாறாம். இவ்வாற்றானே, அவன் முத்தி முழுமுதலாதல் தெளிவிக்கப்பட்டது. முத்தியாவது பிறவியற்ற நிலையாதலானும், சிவபிரான் ஒருவனே பிறப்பில்லாதவன் ஆதலானும், அவனல்லது அந்நிலையை அருள்வார் பிறர் இன்மையின், ``முத்தி முழுமுதல்`` என்று அருளிச் செய்தார். முழு முதல் - முடிந்த தலைவன். `ஏனையோர் பலரும் இடைநிலையாய சிலவற்றைத் தருபவரே` என்றதற்கு, இவ்வாறு அருளினார். ``புகுந்தவா பாடி`` என வருவித்துரைக்க.

பண் :

பாடல் எண் : 20

மாவார ஏறி
மதுரைநகர் புகுந்தருளித்
தேவார்ந்த கோலந்
திகழப் பெருந்துறையான்
கோவாகி வந்தெம்மைக்
குற்றேவல் கொண்டருளும்
பூவார் கழல்பரவிப்
பூவல்லி கொய்யாமோ. 

பொழிப்புரை :

திருப் பெருந்துறையான், குதிரையைப் பொருந்த ஏறி, மதுரை நகரத்தில் புகுந்தருளி, தெய்வத்தன்மை பொருந்திய திருவுருவம் விளங்க, தலைவனாய் வந்து, எம்மை ஆட் கொண் டருளும், செந்தாமரை மலர் போலும் திருவடிகளைத் துதித்துப் பாடிப் பூவல்லி கொய்யாமோ?.

குறிப்புரை :

மா - குதிரையை. ஆர ஏறி - நன்கு ஊர்ந்து. ``புகுந்தருளி`` என்றது, ``கோவாகி`` என்றதனோடு முடியும். `குதிரை மேல் வந்தபொழுதும் அவனது உருவம் வியக்கத்தக்கதாய் இருந்தது` என்றதற்கு, ``தேவார்ந்த கோலம் திகழ`` என்றார். கோ - தலைவன். ``சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடன்`` (சிவஞான போதம்-சூ. 10, அதி.2.) ஆதலின், அங்ஙனம் காக்க வந்த நிலையை, ``கோவாகி`` என்று அருளினார். இத் திருப்பாட்டினால், இறைவன் அடிகளைக் காத்தற்பொருட்டு மதுரை நகரில் குதிரை ஏறி வந்தமை இனிது பெறப்படும். பூ ஆர் - மலர் போலப் பொருந்திய. பூ, பொலிவுமாம். `பலரும் தூவி வணங்கும் மலர்கள் பொருந்திய கழல்` எனலுமாம். இப் பாட்டும், அடுத்துவரும் திருவுந்தியாரின் இறுதிப்பாட்டும் சில பிரதி களில் இல்லை என்பர்; அவ்வாற்றான் இவை இடைச் செருகலாயின், பத்தொன்பது பாட்டுக்களால் ஆயினமை பற்றியே இது, திருச்சாழலின் பின் வைத்துக் கோக்கப்பட்டதாகும்.
சிற்பி