திருவலிவலம்


பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 1

ஒல்லையாறி யுள்ளமொன்றிக் கள்ளமொழிந் துவெய்ய
சொல்லையாறித் தூய்மைசெய்து காமவினை யகற்றி
நல்லவாறே யுன்றனாமம் நாவில்நவின் றேத்த
வல்லவாறே வந்துநல்காய் வலிவலமே யவனே.

பொழிப்புரை :

திருவலிவலம் மேவிய இறைவனே! பரபரப்பு அடங்கி, மனம் ஒன்றி, வஞ்சம் வெஞ்சொல் தவிர்ந்து தூய்மையோடு, காமம் முதலிய குற்றங்களைக் கடிந்து, நல்ல முறையில் உன் நாம மாகிய திருவைந்தெழுத்தை என் வல்லமைக்குத் தக்கவாறு நான் ஓதி வழிபடுகின்றேன், வந்து அருள்புரிவாயாக.

குறிப்புரை :

வலிவலம் மேயவனே! மனம் ஒன்றி, வஞ்சம் நீங்கி இனிய கூறி, காமமாதிகடிந்து, உனதுநாமத்தைச் சொல்ல, தேவரீர் வந்து அருளவேண்டும் என்கின்றது. ஒல்லை - வேகம். அதாவது பரபரப்பு. கள்ளம் - வஞ்சனை. வெய்ய சொல் - கொடுஞ்சொல். தூய்மை செய்து - மனத்தைப் பண்படுத்தி. நாமம் - திருவைந்தெழுத்து. வல்ல வாறு - அடியேனுடைய தகுதி ஏற்க வல்லவாறு. இறைவற்கு வல்லவாறு என்று உரைப்பாரும் உளர்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 2

இயங்குகின்ற விரவிதிங்கண் மற்றுநற் றேவரெல்லாம்
பயங்களாலே பற்றிநின்பாற் சித்தந்தெளி கின்றிலர்
தயங்குசோதீ சாமவேதா காமனைக்காய்ந் தவனே
மயங்குகின்றேன் வந்துநல்காய் வலிவலமே யவனே.

பொழிப்புரை :

வானவெளியில் இயங்குகின்ற ஞாயிறு, திங்கள் மற்றும் நல்ல தேவர்கள் எல்லோரும் அச்ச மேலீட்டினால் உன்னைப் பரம் பொருள் என்று தம் சித்தம் தெளியாதவராயுள்ளனர். விளங்கும் சோதி வடிவினனே, சாம வேதம் பாடி மகிழ்பவனே, காமனைக் காய்ந்தவனே, எவ்வாறு உன்னைத் தெளிவது என்று யானும் மயங்குகின்றேன். வந்து அருள்புரிவாயாக.

குறிப்புரை :

தேவரெல்லாரும் பயத்தால் பற்றப்பட்டுச் சித்தம் தெளிகிலார்கள்: நானோ மயங்குகின்றேன்: வந்தருள் செய் என்கின்றது. இரவி - சூரியன். திங்கள் - சந்திரன். பயங்களாலே பற்றி - அச்சத்தால் பற்றப்பட்டு.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 3

பெண்டிர்மக்கள் சுற்றமென்னும் பேதைப்பெருங் கடலை
விண்டுபண்டே வாழமாட்டேன் வேதனைநோய் நலியக்
கண்டுகண்டே யுன்றனாமங் காதலிக்கின்ற துள்ளம்
வண்டுகிண்டிப் பாடுஞ்சோலை வலிவலமே யவனே.

பொழிப்புரை :

வண்டுகள் தேனுண்ணற் பொருட்டு மலர்களைக் கிண்டி இசை பாடும் சோலைகள் சூழ்ந்த திருவலிவலத்துள் மேவிய இறைவனே, மனைவி மக்கள் சுற்றம் முதலான பாசப் பெருங்கடலை இளைய காலத்திலேயே கடந்து வாழ்ந்தேன் அல்லேன். வேதனை நோய் ஆகியன நலிய உலகியற் பாசங்கள் துன்பம் தருவன என்பதைக் கண்டு உன் திருநாமம் சொல்வதொன்றே இன்பமாவது என்பதைக் கண்டு அதனை ஓத உள்ளம் விரும்புகிறது. அருள் புரிவாயாக.

குறிப்புரை :

பெண்டிர் முதலாகிய பாசப் பெருங்கடலில் பற்றி, விட்டுப் பிரியகில்லாது வருந்துகின்றேன்: உனது நாமத்தைச் சொல்ல உளம் விழைகின்றது என அறிவிக்கின்றார்./n பேதைப்பெருங்கடல் - அறியாமைக் கடல். விண்டு - பிரிந்து. கண்டு கண்டு - இவை துன்பம் உன்நாமம் சொல்வது இன்பம் எனப் பலகாலுங்கண்டு.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 4

மெய்யராகிப் பொய்யைநீக்கி வேதனையைத் துறந்து
செய்யரானார் சிந்தையானே தேவர்குலக் கொழுந்தே
நைவனாயே னுன்றனாமம் நாளும்நவிற் றுகின்றேன்
வையமுன்னே வந்துநல்காய் வலிவலமே யவனே.

பொழிப்புரை :

பொய்மையை விலக்கி, உண்மையை மேற்கொண்டு பந்த பாசங்களாகிய வேதனைகளைத் துறந்து செம்மையான மனமுடையோராய் வாழும் அன்பர்களின் சிந்தையுள் இருப்பவனே, தேவர்களின் குலக்கொழுந்தே! நான் வருந்தி நிற்கிறேன். உன்றன் திருநாமத்தை நாள்தோறும் ஓதி வருகிறேன். வலிவலம் மேவிய இறைவனே. வையகத்தே பலரும் காணவந்து அருள்புரிவாயாக.

குறிப்புரை :

செம்மனச் செல்வர் சிந்தையுள் இருப்பவனே! அடியேன் அவலத்தால் நைகின்றேன்: வந்து அருள் செய் என்கின்றது. மெய்யராகி எனவே பொய்யை நீக்கி என்பது பெறப்படவும் மீட்டுங் கூறியது வற்புறுத்த. அல்லது மெய்யராகி - தத்துவஞான உணர்ச்சி உடையராய். பொய்யை நீக்கி என்றுமாம்./n வேதனை - ஆசைபற்றி எழும் துன்பம். செய்யர் - செம்மையான அடியார்கள். நைவன் - வருந்துவேன். வையம் - முன்னே வந்து நல்காய் - இவ்வுலகத்து என்போலியரும் அறிந்துய்யவேண்டி மானைக்காட்டி மானைப் பிடிப்பார்போல் வந்து அருள் செய்வாய்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 5

துஞ்சும்போதுந் துற்றும்போதுஞ் சொல்லுவனுன் றிறமே
தஞ்சமில்லாத் தேவர்வந்துன் றாளிணைக்கீழ்ப் பணிய
நஞ்சையுண்டாய்க் கென்செய்கேனோ நாளும்நினைந் தடியேன்
வஞ்சமுண்டென் றஞ்சுகின்றேன் வலிவலமே யவனே.�

பொழிப்புரை :

திருவலிவலம் மேவிய இறைவனே, உறங்கும் போதும் உண்ணும்போதும் உன்றன் புகழையே சொல்லுவேன். தேவர் கள் வேறு புகலிடம் இல்லாது உன்பால் வந்து உன் தாளிணைகளின் கீழ்ப் பணிய அவர்களைக் காத்தற்பொருட்டு நஞ்சை உண்ட உன் கருணையை நாளும் நினைதலையன்றி வேறு என் செய வல்லேன்? உன் அருள் பெறுதற்குத் தடையாக என்பால் வஞ்சம் உண்டென்று அஞ்சுகின்றேன். அதனைப் போக்கி எனக்கு அருள்.

குறிப்புரை :

உறங்கும்போதும் உண்ணும்போதும் உன்புகழே பேசு கின்றேன்; என்னிடம் வஞ்சம் இருப்பதால் ஏற்பாயோ மாட்டாயோ என அஞ்சுகின்றேன் என்கின்றது. துஞ்சும்போதும் - தூங்கும்போதும். துற்றும்போதும் - உண்ணும்போதும். தஞ்சம் - அடைக்கலத்தானாம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 6

புரிசடையாய் புண்ணியனே நண்ணலார்மூ வெயிலும்
எரியவெய்தா யெம்பெருமா னென்றிமையோர் பரவும்
கரியுரியாய் காலகாலா நீலமணி மிடற்று
வரியரவா வந்துநல்காய் வலிவலமே யவனே.

பொழிப்புரை :

திருவலிவலம் மேவிய இறைவனே, முறுகிய சடையை உடையவனே, புண்ணிய வடிவினனே! பகைவர் தம் முப்புரங்களும் எரியுமாறு அம்பெய்தவனே என்று தேவர்கள்பரவும், யானையின் தோலை அணிந்தவனே, காலனுக்குக் காலனே! நீலமணி போலும் கண்டத்தையும் வரிந்து கட்டப் பெற்ற பாம்பினையும் உடையவனே! என்பால் வந்து அருள்புரிவாயாக.

குறிப்புரை :

புண்ணியனே! காலகாலா! நீலகண்டா! வந்து அருள் செய் என்கின்றது. நண்ணலார் - பகைவர். வரி அரவு - வரிந்து கட்டப் பட்ட பாம்பு.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 7

தாயும்நீயே தந்தைநீயே சங்கரனே யடியேன்
ஆயும்நின்பா லன்புசெய்வா னாதரிக்கின் றதுள்ளம்
ஆயமாய காயந்தன்னு ளைவர்நின்றொன் றலொட்டார்
மாயமேயென் றஞ்சுகின்றேன் வலிவலமே யவனே.

பொழிப்புரை :

திருவலிவலம் மேவிய இறைவனே! சங்கரனே எனக்குத் தாயும் தந்தையும் நீயேயாவாய். அடியேன் உள்ளம் சிவஞானிகளால் ஆய்ந்துணரப்படும் நின்பால் அன்பு செய்ய விரும்புகின்றது. எனக்குப் படைத்தளிக்கப்பட்ட இவ்வுடலிடைப்பொருந்திய ஐம்பொறிகள் உன்னைப் பொருந்தவொட்டாமல் தடுக்கின்றன. இம்மாயத்தைக் கண்டு யான் அஞ்சுகின்றேன். அருள்புரிவாயாக.

குறிப்புரை :

சுற்றமும் மற்றெல்லாமும் நீயே என்கின்றது. ஆயும் - சிவஞானம் கைவரப்பெற்ற ஆன்மாவினால் ஆராயப்படுகின்ற. ஆயம் ஆய - படைக்கப்பெற்ற. ஐவர் - பஞ்சேந்திரியங்கள். ஒன்றல் ஒட்டார் - நின்னோடு பொருந்தவிடார்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 8

நீரொடுங்குஞ் செஞ்சடையாய் நின்னுடையபொன் மலையை
வேரொடும்பீழ்ந் தேந்தலுற்ற வேந்தனிரா வணனைத்
தேரொடும்போய் வீழ்ந்தலறத் திருவிரலா லடர்த்த
வாரொடுங்குங் கொங்கைபங்கா வலிவலமே யவனே.

பொழிப்புரை :

திருவலிவலம் மேவிய இறைவனே தருக்கி வந்த கங்கை செயல் இழந்து ஒடுங்கிய செஞ்சடையை உடையவனே, உன்னுடைய பொன்மயமான கயிலை மலையை வேரோடும் பிடுங்கி ஏந்தத் தொடங்கிய இலங்கை வேந்தன் இராவணனைத் தேரோடும் வீழ்ந்து அலறுமாறு உன்கால் திருவிரலால் அடர்த்தவனே, கச்சு அணிந்த பெருத்ததனங்களை உடைய உமைபங்கனே! வந்து நல்காய்.

குறிப்புரை :

ஆணவத்தால் மிஞ்சிய இராவணனையும் அடக்கி ஆட்கொண்ட அம்மையப்பா! அடியேனை ஆட்கொள்ளவேண்டும் என்கின்றது. நீர் ஒடுங்கும் - தருக்கிவந்த கங்கைதன் வலி ஒடுங்கும். பொன்மலை - அழகிய கயிலைமலை. பீழ்ந்து - பிடுங்கி. வார் ஒடுங்கும் - கச்சு தன்வலியழியும்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 9

ஆதியாய நான்முகனும் மாலுமறி வரிய
சோதியானே நீதியில்லேன் சொல்லுவனின் றிறமே
ஓதிநாளு முன்னையேத்து மென்னைவினை யவலம்
வாதியாமே வந்துநல்காய் வலிவலமே யவனே.

பொழிப்புரை :

திருவலிவலம் மேவிய இறைவனே! உலகங்களைப் படைத்துக் காத்தலில் ஆதியானவர்களாகிய நான்முகனும், திருமாலும் அறிதற்கரிய சோதிப் பிழம்பாய்த் தோன்றியவனே! யான் நீதியில்லாதேன் ஆயினும் உன்புகழையே சொல்லுகின்றேன். நாள்தோறும் உன்புகழையே ஓதி உன்னையே ஏத்தும் என்னை வினைகளும் அவற்றின் பயனாய துன்பங்களும் வந்து தாக்காமல் வந்து அருள் புரிவாயாக.

குறிப்புரை :

இடைவிடாது உன்னையே தோத்திரிக்கின்றேன். ஆத லால் அடியேனை அவலவினைகள் அடையாவண்ணம் அருள் செய்க என்கின்றது. வினை அவலம் - வினையும் அதனால்வரும் துன்பமும். வாதியாமே - துன்புறுத்தாதபடி.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 10

பொதியிலானே பூவணத்தாய் பொன்றிகழுங் கயிலைப்
பதியிலானே பத்தர்சித்தம் பற்றுவிடா தவனே
விதியிலாதார் வெஞ்சமணர் சாக்கியரென் றிவர்கள்
மதியிலாதா ரென்செய்வாரோ வலிவலமே யவனே.

பொழிப்புரை :

திருவலிவலம் மேவிய இறைவனே, பொதிய மலையைத் தனக்கு இடமாகக் கொண்டவனே, திருப்பூவணம் என்னும் தலத்தில் உறைபவனே, தன்பால் பக்தி செய்யும் அன்பர்களின் சித்தங்களில் எழுந்தருளி இருப்பவனே, கொடிய சமணர்களும் சாக்கியர்களும் உன்னை அடையும் புண்ணியம் இல்லாதவர்கள். அறிவற்ற அவர்கள் தங்கள் சமய நெறியில் என்ன பயனைக் காண்பார்களோ?.

குறிப்புரை :

புறச்சமயிகள் என்செய்வார்களென, அவர்கட்காக இரங்குகின்றது. பொதியிலான் - பொதியமலையைத் தனக்கு இடமாகக்கொண்டவன். பொதியிலும், திருப்பூவணமும், கயிலையும், அன்பர் உள்ளமும் அவன் உறையுமிடங்கள் என அறிவிக்கப்படுகின்றன.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 11

வன்னிகொன்றை மத்தஞ்சூடும் வலிவலமே யவனைப்
பொன்னிநாடன் புகலிவேந்தன் ஞானசம்பந்தன் சொன்ன
பன்னுபாடல் பத்தும்வல்லார் மெய்த்தவத்தோர் விரும்பும்
மன்னுசோதி யீசனோடே மன்னியிருப் பாரே.

பொழிப்புரை :

வன்னி கொன்றை மலர், ஊமத்தை மலர் ஆகிய வற்றைச் சூடும் திருவலிவலம் மேவிய இறைவனைக் காவிரி நாட்டிலுள்ள புகலி என்னும் சீகாழிப்பதிக்கு வேந்தனாய ஞானசம்பந்தன் புகழ்ந்து ஓதியனவும் எக்காலத்தும் ஓதத்தக்கனவும் ஆகிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர், உண்மைத் தவமுடையோர் விரும்பும் நிலைபெற்ற, சோதி வடிவான ஈசனோடு மன்னியிருப்பர்.

குறிப்புரை :

இப்பாடல் பத்தும் வல்லார் இறைவனோடு ஒன்றி இருப்பார் என்கின்றது. பொன்னி நாடன் - காவிரிநாட்டிற்பிறந்தவன். மன்னு சோதி - நிலைபெற்றசோதி வடிவானவன்.
சிற்பி