திருமுதுகுன்றம்


பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 1

தேவராயு மசுரராயுஞ் சித்தர்செழு மறைசேர்
நாவராயும் நண்ணுபாரும் விண்ணெரிகால் நீரும்
மேவராய விரைமலரோன் செங்கண்மால் ஈசனென்னும்
மூவராய முதலொருவன் மேயதுமு துகுன்றே.

பொழிப்புரை :

தேவர், அசுரர், சித்தர், செழுமையான வேதங்களை ஓதும் நாவினராகிய அந்தணர், நாம் வாழும் மண், விண், எரி, காற்று, நீர் ஆகிய ஐம்பூதங்கள், மணம் மிக்க தாமரை மலர் மேல் உறையும் நான்முகன், சிவந்த கண்களை உடைய திருமால், உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகள் ஆகிய எல்லாமாகவும் அவர்களின் தலைவராகவும் இருக்கின்ற சிவபிரான் எழுந்தருளியிருப்பது திருமுதுகுன்றத் தலமாகும்.

குறிப்புரை :

இறைவனது முழுமுதற்றன்மையை உணர்த்துகின்றது இது. செழுமறைசேர் நாவர் - அந்தணர். மேவராய - மேவி உள்ளவராகிய. மூவராய முதல் - மூவருமாய் அவர்கள் தலைவருமாய் இருக்கின்ற சிவன்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 2

பற்றுமாகி வானுளோர்க்குப் பல்கதிரோன் மதிபார்
எற்றுநீர்தீக் காலுமேலை விண்ணியமா னனோடு
மற்றுமாதோர் பல்லுயிராய் மாலயனும் மறைகள்
முற்றுமாகி வேறுமானான் மேயதுமு துகுன்றே.

பொழிப்புரை :

தேவர்கட்குப் பற்றுக் கோடாகியும், பல வண்ணக் கதிர்களை உடைய ஞாயிறு, திங்கள் மண், கரையை மோதும் நீர், தீ, காற்று, மேலே உள்ள ஆகாயம், உயிர் ஆகிய அட்ட மூர்த்தங்களாகியும் எல்லா உயிர்களாகியும் திருமால், பிரமன் வேதங்கள் முதலான அனைத்துமாகியும் இவற்றின் வேறானவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளியிருக்கும் தலம் திருமுதுகுன்றம் ஆகும்.

குறிப்புரை :

அட்டமூர்த்தி வடிவாயும், பல்லுயிராயும், மால் அயன் மறைகள் எல்லாம் ஆகியும் உள்ளவர்மேவிய முதுகுன்று என்கின்றது. வானுளோர்க்குப் பற்றும் ஆகி - தேவர்களுக்குப் பற்றப்படும் பொருளாகியும். எற்றுநீர் - கரையை மோதுகின்ற நீர். கால் - காற்று. மேலை விண் - மேலதாகிய ஆகாயம். இயமானன் - புருடன். மற்று, மாது, ஓர் இம்மூன்றும் அசை. முற்றும் ஆகி - இவையெல்லாம் ஆகி. வேறும் ஆனான் - இவற்றின் வேறாயும் இருப்பவன்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 3

வாரிமாகம் வைகுதிங்கள் வாளரவஞ் சூடி
நாரிபாக நயந்துபூமேல் நான்முகன்றன் தலையில்
சீரிதாகப் பலிகொள்செல்வன் செற்றலுந்தோன் றியதோர்
மூரிநாகத் துரிவைபோர்த்தான் மேயதுமு துகுன்றே.

பொழிப்புரை :

கங்கை, வானகத்தே வைகும் திங்கள், ஒளி பொருந் திய பாம்பு ஆகியவற்றை முடிமிசைச் சூடி உமையம்மையை ஒரு பாகமாக விரும்பி ஏற்று, தாமரை மலரில் உறையும் பிரமனது தலைகளில் ஒன்றைக் கொய்து அத்தலையோட்டில் பலி ஏற்கச் செல்பவனும், தன்னைச் சினந்து வந்த வலிய யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்தியவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய தலம் திருமுது குன்றம்.

குறிப்புரை :

கங்கை மதி முதலியன சூடி, உமையொருபாகனாய், பலி ஏற்றுண்ணும் பரமன் விரும்பும் இடம் முதுகுன்றம் என்கின்றது. வாரி - கங்கை. மாகம் - ஆகாயம். வாள் - ஒளி. நாரி - பெண்; உமையம்மை. செற்றலும் - கோபித்தலும். மூரிநாகம் - வலியயானை.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 4

பாடுவாருக் கருளுமெந்தை பனிமுதுபௌ வமுந்நீர்
நீடுபாரு முழுதுமோடி யண்டர்நிலை கெடலும்
நாடுதானு மூடுமோடி ஞாலமுநான் முகனும்
ஊடுகாண மூடும்வெள்ளத் துயர்ந்ததுமு துகுன்றே.

பொழிப்புரை :

தன்னைப் பாடிப் பரவுவார்க்கு அருள் செய்யும் எந்தையாகிய சிவபிரான் எழுந்தருளிய தலம், குளிர்ந்த பழமையான கடல் நீண்ட மண் உலகிலும் தேவர் உலகிலும் பரவி, அவர்தம் இருப்பிடங்களை அழித்ததோடு நாடுகளிலும் அவற்றின் இடையிலும் ஓடி, ஞாலத்துள்ளாரும் நான்முகன் முதலிய தேவரும் உயிர் பிழைக்க வழி தேடும்படி, ஊழி வெள்ளமாய்ப் பெருகிய காலத்திலும் அழியாது உயர்ந்து நிற்பதாகிய, திருமுதுகுன்றமாகும்.

குறிப்புரை :


பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 5

வழங்குதிங்கள் வன்னிமத்த மாசுணமீ சணவிச்
செழுங்கல்வேந்தன் செல்விகாணத் தேவர்திசை வணங்கத்
தழங்குமொந்தை தக்கைமிக்க பேய்க்கணம்பூ தஞ்சூழ
முழங்குசெந்தீ யேந்தியாடி மேயதுமு துகுன்றே.

பொழிப்புரை :

வானத்தில் சஞ்சரிக்கும் திங்கள், வன்னியிலை ஊமத்தம் மலர், பாம்பு, ஆகியவற்றைத் திருமுடிமீது நெருக்கமாகச் சூடி, இமவான் மகளாகிய உமையவள் காணத் தேவர்கள் எல்லாத் திசைகளிலும் நின்று வணங்க, மொந்தை, தக்கை, ஆகியன அருகில் ஒலிக்க, பேய்க்கணங்கள் பூதங்கள் சூழ்ந்து விளங்க, முழங்கும் செந்தீயைக் கையில் ஏந்தி ஆடும் சிவபெருமான் மேவிய தலம் திரு முதுகுன்றமாகும்.

குறிப்புரை :

பாம்பு மதி முதலியவற்றைச் சூடிக்கொண்டு மலைமகள் காண இறைவன் ஆடியமர்ந்த இடம் முதுகுன்றம் என்கின்றது. வழங்கு திங்கள் - வானமண்டலத்து ஊடறுத்துச் செல்லும் சந்திரன். வன்னி - வன்னிமரத்து இலை. மாசுணம் - பாம்பு. மீசணவி - சிரத்தின்மேற் கலந்து. செழுங்கல் வேந்தன் - வளப்பமான மலையரசன். தழங்கும் - ஒலிக்கின்ற. மொந்தை - ஒரு முகப்பறை வகைகளில் ஒன்று. தக்கை - இருமுகப்பறை வகையில் ஒன்று; உடுக்கையும் ஆம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 6

சுழிந்தகங்கை தோய்ந்ததிங்கட் டொல்லராநல் லிதழி
சழிந்தசென்னிச் சைவவேடந் தான்நினைந் தைம்புலனும்
அழிந்தசிந்தை யந்தணாளர்க் கறம்பொருளின் பம்வீடு
மொழிந்தவாயான் முக்கணாதி மேயதுமு துகுன்றே.

பொழிப்புரை :

சுழிகளோடு கூடிய கங்கை, அதன்கண் தோய்ந்த திங்கள், பழமையான பாம்பு, நல்ல கொன்றை மலர் ஆகியன நெருங்கிய சென்னியை உடைய முக்கண் ஆதியாகிய சிவபிரானுடைய சைவ வேடத்தை விருப்புற்று நினைத்து, ஐம்புலன்களும் மனமும் அழிந்த சிந்தையினராகிய சனகர் முதலிய அந்தணாளர்கட்கு அறம் பொருள் இன்பம் வீடு ஆகியவற்றை உபதேசித்த திருவாயினனாய் எழுந்தருளியிருப்பது திருமுதுகுன்றம் ஆகும். தாள் நினைத்து, தாள் இணைத்து என்பவும் பாடம்.

குறிப்புரை :

கொன்றை, மதி, கங்கை முதலியன அணிந்த சென்னியோடு அந்தணர்க்கு அருமறைகளை உபதேசித்த இறைவன் மேயது திருமுதுகுன்றம் என்கின்றது. சுழிந்த - சுழிகளோடு கூடிய. தொல் அரா - பழம் பாம்பு. இதழி - கொன்றை. சழிந்த - நெருங்கிக் கிடக்கின்ற. சைவ வேடம் - தாழ்சடை வெண்ணீறு தாழ்வடம் முதலிய முனிவர் வேடத்தோடு. தாள் இணைத்து - கால்களைப் பதுமம் முதலிய ஆசனவகைகள் பொருந்தப் பின்னி. அழிந்த - செயலற்றுப்போன. சென்னி, வாயான், ஆதி மேயது எனக் கூட்டிப் பொருள் காண்க./n குருவருள் : சுழிந்த கங்கை தோய்ந்த திங்கள் தொல்அரா நல்லிதழி, சழிந்த சென்னிச் சைவவேடம் தான் நினைந்து ஐம்புலனும் அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு என்ற பாடம் புதுவை பிரெஞ்சு இந்தியக் கலை நிறுவன ஆய்வுப் பதிப்பில் காணப்படுகிறது. இது சிறப்பாய் உள்ளது. `சைவ வேடம் தாள் நினைந்து` என்பதிலும் சைவ வேடத்தையும் தாளையும் நினைத்து ஐம்புலனும் அழிந்த சிந்தை அந்தணாளர் என்பதும் சிறக்கிறது. தாள் இணைத்து என்பதில் சிறப்புத் தோன்றவில்லை.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 7

* * * * * * *

பொழிப்புரை :

* * * * * * *

குறிப்புரை :

* * * * * * *

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 8

மயங்குமாயம் வல்லராகி வானினொடு நீரும்
இயங்குவோருக் கிறைவனாய விராவணன்றோ ணெரித்த
புயங்கராக மாநடத்தன் புணர்முலைமா துமையாள்
முயங்குமார்பன் முனிவரேத்த மேயதுமு துகுன்றே.

பொழிப்புரை :

அறிவை மயங்கச் செய்யும் மாயத்தில் வல்லவராய் வான், நீர் ஆகியவற்றிலும் சஞ்சரிக்கும் இயல்பினராய அரக்கர்களுக்குத் தலைவனாகிய இராவணனின் தோளை நெரித்த வலிமையோடு பாம்பு நடனத்தில் விருப்புடையவனும், செறிந்த தனபாரங்களை உடைய உமையம்மையைத் தழுவிய மார்பினனும் ஆகிய சிவபிரான் முனிவர்கள் ஏத்த எழுந்தருளி விளங்கும் தலம் திருமுதுகுன்றமாகும்.

குறிப்புரை :

மாயம்வல்லராய், வானிலும் நீரிலும் இயங்குகின்ற அரக்கர்களுக்குத் தலைவனாகிய இராவணனை அடக்கிய புஜங்க நடனத்தினராகிய இறைவன் முனிவர்கள் வந்து அடிவணங்க மேயது முதுகுன்றம் என்கின்றது. புயங்கராக மாநடத்தன் - பாம்பு நடனத்தில் விருப்புடையன். புணர் முலை - இணைந்த முலை.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 9

ஞாலமுண்ட மாலுமற்றை நான்முகனும் மறியாக்
கோலமண்டர் சிந்தைகொள்ளா ராயினுங்கொய் மலரால்
ஏலவிண்டை கட்டிநாம மிசையவெப்போ துமேத்தும்
மூலமுண்ட நீற்றர்வாயான் மேயதுமு துகுன்றே.

பொழிப்புரை :

உலகங்களை உண்ட திருமாலும், நான்முகனும் அறிய முடியாத இறைவனது திருக்கோலத்தைத் தேவர்களும் அறியாதவர் ஆயினர். நாள்தோறும் கொய்த மலர்களைக் கொண்டு இண்டை முதலிய மாலைகள் தொடுத்துத் தன் திருப்பெயரையே எப்போதும் மனம் பொருந்தச் சொல்பவரும், மூலமலத்தை அழிக்கும் திருநீற்றை மெய்யிற் பூசுபவருமாகிய அடியவர்களின் வாயில், நாமமந்திரமாக உறைந்தருளுகின்ற அப்பெருமான் மேவிய தலம் திருமுதுகுன்றமாகும்.

குறிப்புரை :

அயனும் மாலும் அறியாத வடிவைத் தேவர்கள் மனங் கொள்ள மாட்டாராயினும் ஆணவ வலிகெடுத்த அடியார்கள் மலர்மாலை கட்டி வழிபடும் இடம் முதுகுன்றம் என்கின்றது. கோலம் - விண்ணும் பாதலமும் ஊடுருவி நின்ற தீப்பிழம்பாகிய வடிவம். ஏல - பொருந்த. நாமம் - திருவைந்தெழுத்து. மூலம் உண்ட நீற்றர் - மூல மலமாகிய ஆணவத்தின் வலிகெடுத்த திருநீற்றினையுடைய அடியவர்கள். வாயான் - வாயில் நாமமந்திரமாக உறைபவன்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 10

உறிகொள்கையர் சீவரத்த ருண்டுழன்மிண் டர்சொல்லை
நெறிகளென்ன நினைவுறாதே நித்தலுங்கை தொழுமின்
மறிகொள்கையன் வங்கமுந்நீர்ப் பொங்குவிடத் தையுண்ட
முறிகொண்மேனி மங்கைபங்கன் மேயதுமு துகுன்றே.

பொழிப்புரை :

குண்டிகையை உறியில் கட்டித் தூக்கிய கையினரும், காவியாடையைத் தரித்தவரும், உண்டு உழல்பவரும் ஆகிய சமண புத்தர்கள் கூறுவனவற்றை நெறிகள் எனக் கருதாது, நாள் தோறும், சென்று வணங்குவீராக. மானை ஏந்திய கையினனும், கப்பல்கள் ஓடும் கடலிடைப் பொங்கி எழுந்த விடத்தை உண்டவனும், தளிர் போலும் மேனியளாகிய உமையம்மையை ஒருகூறாக உடையவனுமாகிய சிவபிரான் மேவியுள்ளது திருமுதுகுன்றமாகும். அத்திருத்தலத்தை வணங்குவீராக.

குறிப்புரை :

சமணர் புத்தர் சொற்களைக் கேளாதீர்கள்; இறைவனை நித்தம் தொழுங்கள்; அவ்விறைவன் மேயது முதுகுன்றே என்கின்றது. உறி - சமணர்கள் குண்டிகை வைத்திருக்கும் கயிற்றுறி. சீவரம் - மஞ்சளாடை. மிண்டர் - உடல் வலிமையுடையவர். வங்க முந்நீர் - கப்பலோடுங் கடல்; என்றது கடல் என்ற பொதுமைபற்றி வந்த அடைமொழி. முறி - தளிர்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 11

மொய்த்துவானோர் பல்கணங்கள் வணங்குமு துகுன்றைப்
பித்தர்வேடம் பெருமையென்னும் பிரமபுரத் தலைவன்
* * * * * * *

பொழிப்புரை :

தேவர் கணங்கள் பலவும் நிறைந்து செறிந்து வணங்கும் திருமுதுகுன்றத்திறைவனை, பித்தர் போலத் தன் வயம் இழந்து திரிவாரின் தவவேடம் பெருமை தருவதாகும் எனக் கருதும் பிரமபுரத்தலைவனான ஞானசம்பந்தன்... ...

குறிப்புரை :

பித்தர் வேடம் பெருமை என்னும் - சிவபோத மிகுதியால் பித்தரைப்போல இருப்பார் வேடம் பெருமைதருவதாகும் என்னும்... ...
சிற்பி