திருமாற்பேறு
பண் :பழந்தக்கராகம்
பாடல் எண் : 1
ஊறி யார்தரு நஞ்சினை யுண்டுமை
நீறு சேர்திரு மேனியர்
சேறு சேர்வயற் றென்றிரு மாற்பேற்றின்
மாறி லாமணி கண்டரே.
பொழிப்புரை :
சேற்று வளம் நிறைந்த வயல்கள் சூழ்ந்த அழகிய திருமாற்பேற்றில் ஒப்பற்ற நீலமணி போன்ற கண்டத்தை உடைய இறைவர், கடலிடத்தே ஊறிப் பொருந்திவந்த நஞ்சினை உண்டு உமையம்மையோடு கூடியவராய்த் திருநீறு பூசிய திருமேனியராய் விளங்குகிறார்.
குறிப்புரை :
நஞ்சத்தையுண்டு, உமையும் நீறும்சேர்ந்த திருமேனியர் மாற்பேறர் என்கின்றது. ஊறி ஆர் தரு நஞ்சு - கடலில் ஊறி வந்த விடம். உமை நீறுசேர் மேனி எனப் பிரிக்க. மாறிலா - தீது செய்யாத; அருளே வழங்குகின்ற, மணிகண்டர் - நீலகண்டர்.
பண் :பழந்தக்கராகம்
பாடல் எண் : 2
தொடையார் மாமலர் கொண்டிரு போதும்மை
அடைவா ராமடி கள்ளென
மடையார் நீர்மல்கு மன்னிய மாற்பே
றுடையீ ரேயுமை யுள்கியே.
பொழிப்புரை :
வாய்க்கால் மடைகளில் நீர் நிறைந்து விளங்கும் நிலையான திருமாற்பேற்றைத் தமது இருப்பிடமாக உடையவரே, உம்மை நினைந்து சிறந்த மாலைகளைத் தொடுத்து ஏந்திய கையினராய்க் காலை, மாலை இருபோதும் உம்மைத்தலைவராக எண்ணி அடியவர் அடைகின்றனர்.
குறிப்புரை :
மாற்பேறரே உம்மை எண்ணி அடியார்கள் மாலை முதலியவற்றை ஏந்தி இருபோதும் அடைகின்றார்கள் என்கின்றது. தொடை - மாலை. இருபோதும் - காலையும் மாலையும்.
பண் :பழந்தக்கராகம்
பாடல் எண் : 3
பையா ரும்மர வங்கொடு வாட்டிய
கையா னென்று வணங்குவர்
மையார் நஞ்சுண்டு மாற்பேற் றிருக்கின்ற
ஐயா நின்னடி யார்களே.
பொழிப்புரை :
கருநிறம் பொருந்திய நஞ்சை உண்டு தேவர்களைக் காத்தருளிய நீலகண்டராய்த் திருமாற்பேற்றில் வீற்றிருக்கின்ற தலைவரே, உம் அடியவர்கள் படம் பொருந்திய பாம்பைப் பிடித்து ஆட்டும் கைகளை உடையவர் என்று உம்மை வணங்குவார்கள்.
குறிப்புரை :
நின்னடியார்கள் நின்னை அரவமாட்டிய கையான் என்று வணங்குவார்கள் என்கின்றது. பை - படம். மை - கருமை.
பண் :பழந்தக்கராகம்
பாடல் எண் : 4
சால மாமலர் கொண்டு சரணென்று
மேலை யார்கள் விரும்புவர்
மாலி னார்வழி பாடுசெய் மாற்பேற்று
நீல மார்கண்ட நின்னையே.
பொழிப்புரை :
திருமால் வழிபாடு செய்து அருள் பெற்றதால் திருமாற்பேறு என வழங்கும் இத்தலத்தில் விளங்கும் நீலநிறம் பொருந்திய கண்டத்தை உடையவரே, நும்மை மேன்மை மிக்க பெரியோர்கள் மிகுதியான நறுமலர்களைக் கொண்டு அர்ச்சித்து உம்மையே சரண் என்று விரும்பி வழிபடுவர்.
குறிப்புரை :
நீலகண்ட, உயர்ந்தோர்கள் மலர்கொண்டு நின்னை வழிபடுவார்கள் என்கின்றது. சால - மிக. மேலையோர்கள் - உயர்ந்தோர்கள் மாலினார் வழிபாடுசெய் மாற்பேறு என்றது இத்தலவரலாற்றுக் குறிப்பு.
பண் :பழந்தக்கராகம்
பாடல் எண் : 5
மாறி லாமணி யேயென்று வானவர்
ஏற வேமிக வேத்துவர்
கூற னேகுல வுந்திரு மாற்பேற்றின்
நீற னேயென்று நின்னையே.
பொழிப்புரை :
உமையம்மையை ஒரு கூற்றாகக் கொண்டவரே, விளங்கும் திருமாற்பேற்றில் வெண்ணீறுபூசி விளங்குபவரே, ஒப்பற்ற மாணிக்கமணியே என்று உம்மையே வானவர் மிகமிக ஏத்தி மகிழ்வர்.
குறிப்புரை :
நின்னைத் தேவர்கள் மாறிலாமணியே என்று ஏத்துவர் என்கின்றது. சில ரத்தினங்களை அணிந்தால் தீமையும் செய்யக் கூடும்; இந்தமணி எத்தகையோர்க்கும் இன்பமே செய்தலின் மாறிலாமணியே என்றார். ஏறவே - மிக. தாமுயர என்றுமாம்.
பண் :பழந்தக்கராகம்
பாடல் எண் : 6
உரையா தாரில்லை யொன்றுநின் றன்மையைப்
பரவா தாரில்லை நாள்களும்
திரையார் பாலியின் றென்கரை மாற்பேற்
றரையா னேயரு ணல்கிடே.
பொழிப்புரை :
அலைகள் பொருந்திய பாலியாற்றின் தென்கரையில் விளங்கும் திருமாற்பேற்றில் விளங்கும் அரசனே, பொருந்திய நின் பெருந்தன்மையை வியந்து உரையாதார் இல்லை. நாள்தோறும் உன் பெருமைகளைப் பரவாதவர் இல்லை. அருள் நல்குவீராக.
குறிப்புரை :
திருமாற்பேற்று அரைசனே, உன்னைப் புகழாதாரும், பரவாதாரும் இல்லை என்கின்றது. இத்தலம் பாலியாற்றுத் தென்கரையது என்பது குறிக்கப்பெறுகின்றது.
பண் :பழந்தக்கராகம்
பாடல் எண் : 7
* * * * * * * * *
பொழிப்புரை :
* * * * * * * * *
குறிப்புரை :
* * * * * * * * *
பண் :பழந்தக்கராகம்
பாடல் எண் : 8
அரச ளிக்கு மரக்க னவன்றனை
உரைகெ டுத்தவ னொல்கிட
வரமி குத்தவெம் மாற்பேற் றடிகளைப்
பரவி டக்கெடும் பாவமே.
பொழிப்புரை :
இலங்கை நாட்டை ஆளும் இராவணனின் புகழை மங்கச் செய்து, பின் அவன் பிழை உணர்ந்து வேண்டிய அளவில் அவனுக்கு வரங்கள் பலவற்றையும் மிகுதியாக அளித்தருளிய எமது திருமாற்பேற்று அடிகளைப் பரவப் பாவம் கெடும்.
குறிப்புரை :
இராவணன் வலிகெடுத்து வரமளித்த இறைவனைப் பரவப் பாவம் கெடும் என்கின்றது, உரை - புகழ். ஒல்கிட - பணிய.
பண் :பழந்தக்கராகம்
பாடல் எண் : 9
இருவர் தேவருந் தேடித் திரிந்தினி
ஒருவ ராலறி வொண்ணிலன்
மருவு நீள்கழன் மாற்பேற் றடிகளைப்
பரவு வார்வினை பாறுமே.
பொழிப்புரை :
திருமால் பிரமன் ஆகிய இருவரும் அடிமுடி காணத்தேடித் திரிந்தும் ஒருவராலும் அறிய ஒண்ணாத இயல்பினனாகிய, திருமாற்பேற்றுள் விளங்கும் சிவபிரானுடைய பெருமை விரிந்த திருவடிகளைப் பரவித்துதிப்பார் வினைகள் கெடும்.
குறிப்புரை :
இறைவன் அடிகளைப் பரவுவார் வினைசிதறும் என்கின்றது. தேவர் இருவர் - அயனும் மாலும். இருவர் தேடியும் ஒருவராலும் அறிய முடியாதவன் என்பது கருத்து.
பண் :பழந்தக்கராகம்
பாடல் எண் : 10
தூசு போர்த்துழல் வார்கையிற் றுற்றுணும்
நீசர் தம்முரை கொள்ளெலும்
தேச மல்கிய தென்றிரு மாற்பேற்றின்
ஈச னென்றெடுத் தேத்துமே.
பொழிப்புரை :
ஆடையை மேனிமேற் போர்த்து உழல்வோரும், கைகளில் உணவை ஏற்று உண்ணும் இழிந்தோருமாகிய புத்த, சமணர்களின் உரைகளை மெய்யெனக் கொள்ளாதீர். புகழ் பொருந்திய அழகிய திருமாற்பேற்றுள் விளங்கும் ஈசன் என்று பெருமானைப் புகழ்ந்து போற்றுமின்.
குறிப்புரை :
சமணர் புத்தர் சழக்குரை கொள்ளாதீர்; திருமாற் பேற்றீசன் என்று ஏத்தும் என்கின்றது. தூசு - ஆடை. துற்று - உணவு. நீசர் - இழிந்தவர். கொள்ளெலும் - கொள்ளாதீர்கள்; இது அருவழக்கு. தேசம் - ஒளி.
பண் :பழந்தக்கராகம்
பாடல் எண் : 11
மன்னி மாலொடு சோமன் பணிசெயும்
மன்னு மாற்பேற் றடிகளை
மன்னு காழியுண் ஞானசம் பந்தன்சொல்
பன்ன வேவினை பாறுமே.
பொழிப்புரை :
திருமாலும் சந்திரனும் தங்கியிருந்து பணிசெய்து வழிபட்ட நிலைபேறுடைய திருமாற்பேற்றுள் விளங்கும் இறைவனை நிலைத்த காழிமாநகருள் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத்தை ஓதினால் வினைகள் கெடும்.
குறிப்புரை :
இத்தலம் மாலும், மதியும் வணங்கிய தலமாதலின் இத்தலத்திறைவனை வழிபட வினைகள் சிதறும் என்கின்றது. சோமன் - சந்திரன். பன்ன - சொல்ல.