திருப்பாற்றுறை


பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 1

காரார் கொன்றை கலந்த முடியினர்
சீரார் சிந்தை செலச்செய்தார்
பாரார் நாளும் பரவிய பாற்றுறை
யாரா ராதி முதல்வரே.

பொழிப்புரை :

உலக மக்கள் நாள்தோறும் வந்து வழிபட்டுப் போற்றும், ஆத்தி மலர் அணிந்த திருப்பாற்றுறையில் விளங்கும் ஆதிமுதல்வராகிய பெருமானார் கார்காலத்தே மலரும் கொன்றை மலர்மாலை சூடிய திருமுடியினராய் அன்பு கனிந்த நம் சிந்தையைத் தம்மிடமே செல்லச் செய்தார்.

குறிப்புரை :

திருஞானசம்பந்தப் பிள்ளையார் தம்மைப் பெண்ணாக்கி, தலைவனாகத் திருப்பாற்றுறைத் திருமூலநாதரைப் பாவித்து ஈடுபட்டு, சிறந்த சிந்தை தம்மிடமே செல்லச்செய்தார் என்கின்றார். கார் ஆர் கொன்றை - கார்காலத்துத் கொன்றை. சிந்தை செலச்செய்தார். அடியார்கள் சிந்தையைத் தம்மிடமே செல்லச்செய்தார். ஆரார் - தெவிட்டாதவர். ஆதிமுதல்வர் என்றது திருமூலநாதர் என்னும் தலத்திறைவர் பெயரைக் குறிப்பது.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 2

நல்லா ரும்மவர் தீய ரெனப்படும்
சொல்லார் நன்மலர் சூடினார்
பல்லார் வெண்டலைச் செல்வரெம் பாற்றுறை
எல்லா ருந்தொழு மீசரே.

பொழிப்புரை :

பற்கள் பொருந்திய வெண்மையான தலையோட்டை அணிந்தவரும், எல்லாராலும் தொழப்படுபவருமாகிய எம் திருப்பாற்றுறைச் செல்வராகிய ஈசர், நல்லவருக்கு நல்லவராவர். தீயை ஏந்தியதால் தீயர் எனவும் படுவார். அவர் நல்ல மலரைச் சூடியவர்.

குறிப்புரை :

இவர் நல்லவரும் ஆவர்; தீயர் எனவும் சொல்லப் பெறுவர்; ஆயினும் எனது சொன்மலரைச் சூடினார் என்கின்றது. தீயர் - கையில் தீயையுடையவர். சொல் ஆர் நன் மலர் - சொல்லாகிய நிறைந்த நல்லமலர்கள்; என்றது, தலைவி பேசுவனயாவும் அவன் புகழேயாதல் தெரிவித்தது. எல்லாரும் தொழும் - பரிபாகமுடையவர் அஃதில்லாத உலகவர் யாவரும் வணங்கும்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 3

விண்ணார் திங்கள் விளங்கு நுதலினர்
எண்ணார் வந்தெ னெழில்கொண்டார்
பண்ணார் வண்டினம் பாடல்செய் பாற்றுறை
உண்ணா ணாளு முறைவரே.

பொழிப்புரை :

இயற்கையில் பண்ணிசை போல முரலும் வண்டினங்கள் பாடும் திருப்பாற்றுறையுள் எக்காலத்தும் உறைபவரும், விண்ணகத்தே தவழும் திங்கள் விளங்கும் திருமுடியினரும் ஆகிய இறைவர் என் இதயத்தில் இருப்பவராய் வந்து என் எழில்நலம் அனைத்தையும் கவர்ந்தார்.

குறிப்புரை :

திருமூலநாதர் ஆராயாதே வந்து என்னழ கெல்லாவற்றையும் கவர்ந்தார் என்கின்றது. எண்ணார் - எண்ணத்தில் இருப்பவர். இது உறுப்பு நலனழிதல் என்னும் மெய்ப்பாடு. பாற்றுறையுள் நாள்நாளும் உறைவர் எனப்பிரித்துப் பொருள்காண்க.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 4

பூவுந் திங்கள் புனைந்த முடியினர்
ஏவி னல்லா ரெயிலெய்தார்
பாவந் தீர்புனன் மல்கிய பாற்றுறை
ஓவென் சிந்தை யொருவரே.

பொழிப்புரை :

மூழ்கியவருடைய பாவங்களைப் போக்கும் தீர்த்த நலம் உடைய திருப்பாற்றுறையுள் மலர்களையும் பிறைமதியையும் புனைந்த திருமுடியினராய்க் கணையொன்றால் பகைவராய் வந்தடைந்த அசுரர்களின் முப்புரங்களை அழித்த இறைவரே என்மனம் பிறவற்றில் செல்லாது ஓவுதல் செய்த ஒருவராவர்.

குறிப்புரை :

அம்பால் அடையார் புரம் எய்த பாற்றுறைநாதனே என் சிந்தைக்கண் உள்ள ஒருவர் என்கின்றது. ஏவின் - அம்பால். அல்லார் - பகைவர். ஓ என்பது வினாப்பொருளின் கண்ணது.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 5

மாகந் தோய்மதி சூடி மகிழ்ந்தென
தாகம் பொன்னிற மாக்கினார்
பாகம் பெண்ணு முடையவர் பாற்றுறை
நாகம் பூண்ட நயவரே.

பொழிப்புரை :

தம் திருமேனியின் ஒருபாதியாய்ப் பெண்ணைக் கொண்டுள்ளவரும், நாகத்தை அணிகலனாகப் பூண்டவரும் ஆகிய, திருப்பாற்றுறை இறைவர், வானகத்தே தோயும் பிறைமதியை முடியிற்சூடி மகிழ்ந்து வந்து எனது உடலைப் பொன்னிறமான பசலை பூக்கச் செய்தவராவார்.

குறிப்புரை :

ஒருபாதியில் பெண்ணையும் உடைய பெருமான் என்னுடைய மார்பைப் பொன்னிறமாக்கினார் என்று பிரிவால் வருந்திய தலைவி பசந்தமையையறிவிக்கின்றது. மாகம் - ஆகாயம். ஆகம் - மார்பு. நயவர் - நலமுடையவர்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 6

போது பொன்றிகழ் கொன்றை புனைமுடி
நாதர் வந்தெ னலங்கொண்டார்
பாதந் தொண்டர் பரவிய பாற்றுறை
வேத மோதும் விகிர்தரே.

பொழிப்புரை :

தொண்டர்கள் தம் திருவடிகளைப் பரவத்திருப்பாற்றுறையுள் விளங்கும் வேதங்களை அருளிய விகிர்தரும், பொன்போல் திகழும் கொன்றை மலர்களைப் புனைந்த திருமுடியினை உடைய தலைவருமாகிய சிவபிரானாரே என்பால் வந்து என் அழகினைக் கவர்ந்தவராவார்.

குறிப்புரை :

கொன்றைபுனைந்த நாதர்வந்து என் நலங்கொண்டார் என்கின்றது.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 7

வாடல் வெண்டலை சூடினர் மால்விடை
கோடல் செய்த குறிப்பினார்
பாடல் வண்டினம் பண்செயும் பாற்றுறை
ஆட னாக மசைத்தாரே.

பொழிப்புரை :

பாடல்கள் பலவற்றைப்பாடும் வண்டினங்கள் சிறந்த பண்களை மிழற்றும் திருப்பாற்றுறையுள், ஆடுதலில் வல்ல நாகப்பாம்பைத் திருமேனியில் பல இடங்களிலும் கட்டியுள்ள இறைவர், உலர்ந்த வெள்ளிய தலையோடுகளை மாலையாகச் சூடியவராவர். பெரிய இடபத்தின் மேல் ஏறிவந்து என் அழகைக் கவர்ந்து செல்லும் குறிப்பினர்.

குறிப்புரை :

ஆடும் அரவையணிந்த பாற்றுறைநாதர் விடையேறிப் பிரிதலைக் கருதினார் என்கின்றது. வாடல் வெண்தலை - உலர்ந்த தலை. மால்விடை கோடல்செய்த குறிப்பினார் - பெரிய இடபத்தைக் கொள்ளுதலைச்செய்த குறிப்பினையுடைவர்; என்றது. ஊர்தியாகிய விடையைக் கொள்ளுதல் என்பது. தலைவன் பிரிவு கருதியதாம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 8

வெவ்வ மேனிய ராய்வெள்ளை நீற்றினர்
எவ்வஞ் செய்தெ னெழில்கொண்டார்
பவ்வ நஞ்சடை கண்டரெம் பாற்றுறை
மவ்வல் சூடிய மைந்தரே.

பொழிப்புரை :

கடலிடைத் தோன்றிய நஞ்சடைந்த கண்டரும், முல்லை மலர் சூடிய மைந்தரும் ஆகிய எம் திருப்பாற்றுறை இறைவர் விரும்பத்தக்க திருமேனியராய், வெண்மையான திருவெண்ணீறு அணிந்தவராய் வந்து, என் எழிலைக் கொண்டு பின் பிரிவுத்துன்பம் தந்தவராவர்.

குறிப்புரை :

முல்லைசூடிய இறைவர் பிரிவுத் துன்பத்தை எனக்குப் பெரிதாக்கி எனது அழகைக் கவர்ந்தார் என்கின்றது. வெவ்வ மேனியர் - வெம்மையோடுகூடிய மேனியை யுடையவர். எவ்வம் செய்து - துன்புறுத்தி. பவ்வம்நஞ்சு - கடல் நஞ்சு. மவ்வல் - முல்லை.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 9

ஏன மன்னமு மானவ ருக்கெரி
ஆன வண்ணத்தெ மண்ணலார்
பான லம்மலர் விம்மிய பாற்றுறை
வான வெண்பிறை மைந்தரே.

பொழிப்புரை :

நீலோற்பல மலர்கள் நிறைந்த நீர் நிலைகளோடு கூடிய திருப்பாற்றுறையுள் வானகத்தே விளங்கும் வெண்மையான பிறை மதியைச் சூடி எழுந்தருளியுள்ள மைந்தராகிய இறைவர், பன்றியும், அன்னமுமாய் அடிமுடி தேடிய திருமால், பிரமன் ஆகியோருக்கு அழலுருவமாய் ஓங்கி நின்ற அண்ணலார் ஆவார்.

குறிப்புரை :

தீப்பிழம்பாகிய செல்வரே வெண்பிறை அணிந்த மைந்தராக இருக்கின்றார் என்கின்றது. ஏனம் - பன்றி. பானல் - நீலோற்பலம்.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 10

வெந்த நீற்றினர் வேலினர் நூலினர்
வந்தெ னன்னலம் வௌவினார்
பைந்தண் மாதவி சூழ்தரு பாற்றுறை
மைந்தர் தாமோர் மணாளரே.

பொழிப்புரை :

பசுமையான குளிர்ந்த குருக்கத்திக் கொடிகள் சூழ்ந்துள்ள திருப்பாற்றுறையுள் எழுந்தருளியுள்ள மைந்தராகிய இறைவர், மேனி மீது வெந்த நீறு பூசியவராய், கையில் வேலேந்தியவராய், மார்பில் பூணூல் அணிந்தவராய் வந்து என் அழகினை வவ்விச் சென்றார். அவர் முன்னரே மலைமகளை மணந்த மணாளர் ஆவார்.

குறிப்புரை :

பாற்றுறை மணாளர் என்நலம் வௌவினார் என்கின் றது. இதில் தலைவி தலைவருடைய உள்ளத் தூய்மையைக் காட்டும் வீரத்தை விளக்கும் வேலையும், இதுவரை மணமாகாமையைக் காட்டும் நூலையுங்கண்டு காதலித்தேன், அவர் என்நலத்தை வௌவினார் என்பதுதோன்ற, நீற்றினர் வேலினர் நூலினராய்வந்து என் நலத்தை வௌவினார் என்கின்றார். எம்மணாளர் என்னாது ஓர் மணாளர் என்றது மலைமகளையும் அலைமகளையும் முன்னரே மணந்திருக்கின்றமை குறிப்பிக்க. இப்பதிகத்துள் இராவணனை அடர்த் ததும், புறச்சமயிகளைப் பற்றிய குறிப்பும் கூறாமை, தலைவனும் தலைவியுமாய் இருந்து அநுபவிக்கும் அருள்நெறி முதிர்ச்சியால் என அறிக. வரும் தோணிபுரப்பதிகத்தும் இக்காட்சியைக் காண்க.

பண் :பழந்தக்கராகம்

பாடல் எண் : 11

பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய
பத்து நூறு பெயரனைப்
பத்தன் ஞானசம் பந்தன தின்றமிழ்
பத்தும் பாடிப் பரவுமே.

பொழிப்புரை :

அடியவர்கள் நிறைந்துள்ள திருப்பாற்றுறையுள் எழுந்தருளிய ஆயிரம் திருநாமங்களையுடைய இறைவனை, பக்தனாகிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய இனிய தமிழ்ப் பாடல்களாகிய இப்பத்தையும் பாடிப்பரவுமின்.

குறிப்புரை :

பாற்றுறைநாதரைப்பற்றிய இப்பாடல் பத்தையுஞ் சொல்லிப்பரவுங்கள் என்கின்றது. பத்து நூறு பெயரன் - ஆயிரந்திருநாமத்தையுடையவன்.
சிற்பி