திருக்கயிலாயம்


பண் :தக்கேசி

பாடல் எண் : 1

பொடிகொளுருவர் புலியினதளர் புரிநூல் திகழ்மார்பில்
கடிகொள்கொன்றை கலந்தநீற்றர் கறைசேர் கண்டத்தர்
இடியகுரலா லிரியுமடங்கல் தொடங்கு முனைச்சாரல்
கடியவிடைமேற் கொடியொன்றுடையார் கயிலை மலையாரே.

பொழிப்புரை :

மேகங்களின் இடிக்குரல் கேட்டு அஞ்சிய சிங்கங்கள், நிலைகெட்டு ஓடத்தொடங்கும் சாரலை உடைய கயிலைமலையில் வாழும் இறைவர், திருநீறு பூசிய திருமேனியை உடையவர். புலியின் தோலை உடுத்தவர். முப்புரிநூல் விளங்கும் மார்பில் மணம் கமழும் கொன்றை மாலையோடு திருநீற்றையும் அணிந்தவர். விடக்கறை பொருந்திய கண்டத்தை உடையவர். விரைந்து செல்லும் விடைமீது ஏறி அவ்விடை எழுதிய கொடி ஒன்றையே தம் கொடியாகக் கொண்டவர்.

குறிப்புரை :

கயிலைநாதனின் திருமேனிப்பூச்சு, உடை, ஆடை, அணி, ஊர்தி முதலியவற்றைக் கூறுகின்றது. பொடி - விபூதி. அதள் - தோல். பொடிகொள் உருவர் என்றது திருமேனி முழுதும் பூசப்பட்டதைக் குறித்தது. நீற்றர் என்பது மார்பில் அணிந்ததைக் குறித்தது. கறை - விடம். இடிய குரலால் - இடிக்குரலால். இரியும் - நிலைகெட்டு ஓடுகின்ற. மடங்கல் - சிங்கம். கடிய விடை - வேகமான இடபம்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

புரிகொள்சடைய ரடியர்க்கெளியார் கிளிசேர் மொழிமங்கை
தெரியவுருவில் வைத்துகந்த தேவர் பெருமானார்
பரியகளிற்றை யரவுவிழுங்கி மழுங்க விருள்கூர்ந்த
கரியமிடற்றர் செய்யமேனிக் கயிலை மலையாரே.

பொழிப்புரை :

பெரிய களிற்றியானையை மலைப்பாம்பு விழுங்கி மறையும் இருள்மிக்க கயிலைமலையில் விடம் உண்ட கரியகண்டராய்ச் சிவந்த திருமேனியராய் விளங்கும் இறைவர் வளைத்துக்கட்டிய சடைமுடியை உடையவர். அடியவர்க்கு எளிமையானவர். கிளி போன்ற மெல்லிய மொழி பேசும் உமைமங்கையைப் பலருக்கும் தெரியுமாறு ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்ந்ததேவர் தலைவராவார்.

குறிப்புரை :

இதுவும் அது. கிளிசேர்மொழி மங்கை - கிளியை யொத்த மொழியினை உடைய உமாதேவி. தெரிய - விளங்க. பரியகளிற்றை அரவு விழுங்கி மழுங்க இருள்கூர்ந்த கயிலை - பெரிய யானையை மலைப்பாம்பு விழுங்கி மறைய இருள்மிகுந்த கயிலை.

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

மாவினுரிவை மங்கைவெருவ மூடி முடிதன்மேல்
மேவு மதியு நதியும்வைத்த விறைவர் கழலுன்னும்
தேவர்தேவர் திரிசூலத்தர் திரங்கன் முகவன்சேர்
காவும்பொழிலுங் கடுங்கற்சுனைசூழ் கயிலை மலையாரே.

பொழிப்புரை :

திரங்கிய தோலை உடைய குரங்குகள் வாழும் காடுகளும் பொழில்களும் மலையிடையே இயற்கையாக அமைந்த சுனைகளும் சூழ்ந்த கயிலைமலைப் பெருமானார் உமையம்மை அஞ்ச யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டு முடிமீது பிறை கங்கை ஆகியவற்றைக் கொண்ட இறைவர், தம் திருவடிகளை நினைந்து போற்றும் தேவர்களின் தேவர். முத்தலைச் சூலத்தை உடையவர்.

குறிப்புரை :

இதுவும் அது. மங்கை வெருவமாவின் உரிவை மூடி - உமாதேவியார் அஞ்ச யானைத்தோலைப் போர்த்து. கழல் உன்னும் - திருவடியைத் தியானிக்கின்ற. திரங்கல் முகவன் - குரங்குகள்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

முந்நீர்சூழ்ந்த நஞ்சமுண்ட முதல்வர் மதனன்றன்
தென்னீருருவ மழியத்திருக்கண் சிவந்த நுதலினார்
மன்னீர்மடுவும் படுகல்லறையி னுழுவை சினங்கொண்டு
கன்னீர்வரைமே லிரைமுன்றேடுங் கயிலை மலையாரே.

பொழிப்புரை :

இயற்கையாகத் தோன்றிய மலைக் குகைகளில் வாழும் புலிகள், பசியினால் சினமடைந்து கல்லால் இயன்ற மலைமிசை உணவாதற்குரிய இரைகளையும், அருந்துவதற்கு நிலைபெற்ற நீரையுடைய மடுக்களையும் தேடும் கயிலைமலையில் உறையும் தலைவர், கடலில் பரவித் தோன்றிய நஞ்சினைத் திரட்டி உண்டவர் மன்மதனின் அழகிய உருவம் அழியக்கண்சிவந்த நுதலை உடையவர்.

குறிப்புரை :

தென் நீர் உருவம் - அழகிய நீர்மையோடு கூடிய வடிவம். சிவந்த - கோபத்தாற் சிவந்த. மன்னீர் மடு - நிலைபெற்ற நீரினையுடைய சுனை, கல்லறை - குகை. உழுவை - புலி.

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

ஒன்றும்பலவு மாயவேடத் தொருவர் கழல்சேர்வார்
நன்றுநினைந்து நாடற்குரியார் கூடித் திரண்டெங்கும்
தென்றியிருளிற் றிகைத்தகரிதண் சாரல் நெறியோடிக்
கன்றும்பிடியு மடிவாரஞ்சேர் கயிலை மலையாரே.

பொழிப்புரை :

இரவில் சிதறித் தனிமைப்பட்ட யானைகள் குளிர்ந்த மலைச் சாரலின் வழிகளில் விரையச்சென்று கன்றும் பிடியுமாய் இணையும் கயிலைமலைக்குரிய இறைவர். ஒருவராக இருந்தே பற்பல வடிவங்களைக் கொண்ட ஒப்பற்ற பரம்பொருளாவார். தம் திருவடிகளைஅடைய எண்ணும் அடியவர்கள் பேரின்பத்தை அடையும் விருப்போடு நாடுதற்குரியவர்.

குறிப்புரை :

ஒன்றும் பலவும் ஆய வேடத்தார் - ஒன்றாயும் விரிந்து பலவாயும் ஆகிய வேடத்தை உடையவர். கழல் சேர்வார் - திருவடியைத் தியானிப்பவர்கள். நன்று நினைந்து - பேரின்பத்தை விரும்பி. தென்றி - சிதறி. திகைத்தயானை மலைச்சாரல் வழியாக ஒடி, கன்றும் பிடியுமாக அடிவாரத்துச் சேரும் கயிலை என இயற்கை எடுத்துக்காட்டப்பெறுகிறது.

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

தாதார் கொன்றை தயங்குமுடியர் முயங்கு மடவாளைப்
போதார்பாக மாகவைத்த புனிதர் பனிமல்கும்
மூதாருலகின் முனிவருடனா யறநான் கருள்செய்த
காதார்குழையர் வேதத்திரளர் கயிலை மலையாரே.

பொழிப்புரை :

கயிலைமலை இறைவர், மகரந்தம் நிறைந்த கொன்றைமாலை விளங்கும் முடியினை உடையவர். தம்மைத் தழுவிய உமையம்மையை மென்மையான இடப்பாகமாக ஏற்றதூயவர். குளிர்ந்த இவ்வுலகின்கண் வயதால் முதிர்ந்த சனகர் முதலிய முனிவர்களுக்கு அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கையும் அருளிச் செய்தவர். வலக்காதில் குழை அணிந்தவர். வேதவடிவாய் விளங்குபவர்.

குறிப்புரை :

தாது - மகரந்தம். போதார் பாகம் - மெல்லிய இடப் பாகம். உலகின் மூதார் முனிவர் - உலகத்தில் மிக வயது முதிர்ந்த முனிவராகிய சனகாதியர்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

* * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * *

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

தொடுத்தார் புரமூன் றெரியச்சிலைமே லெரியொண் பகழியார்
எடுத்தான்திரள்தோள் முடிகள்பத்து மிடிய விரல்வைத்தார்
கொடுத்தார்படைகள் கொண்டாராளாக் குறுகிவருங் கூற்றைக்
கடுத்தாங்கவனைக் கழலாலுதைத்தார் கயிலை மலையாரே.

பொழிப்புரை :

கயிலைமலை இறைவர் முப்புரங்களை மேரு வில்லை வளைத்து எரியாகிய ஒளி பொருந்திய அம்பைத் தொடுத்து எரித்து அழித்தவர். கயிலை மலையைப் பெயர்த்த இராவணனின் திரண்ட தோள்கள் பத்துத் தலைகள் ஆகியன நெரியுமாறு கால்விரலை ஊன்றியவர். அவன் பிழையுணர்ந்து வருந்த அவனை அடிமையாக ஏற்று வாள் முதலிய படைகள் கொடுத்தவர். மார்க்கண்டேயனின் உயிரைக் கவர அவன்மேல் நெருங்கி வந்த எமனைச் சினந்து அவனைக் காலால் உதைத்தவர்.

குறிப்புரை :

இராவணனை அடக்கி, வாள் கொடுத்தாண்டார் என்ற வரலாறு காட்டப்படுகிறது. எரிய, சிலைமேல், ஒண்பகழியார் தொடுத்தார் எனக்கூட்டுக. படை - வாள். ஆளாக்கொண்டார் - அடிமையாக ஆட்கொண்டார். கடுத்து - கோபித்து.

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

ஊணாப்பலிகொண் டுலகிலேற்றா ரிலகு மணிநாகம்
பூணாணார மாகப்பூண்டார் புகழு மிருவர்தாம்
பேணாவோடி நேடவெங்கும் பிறங்கு மெரியாகிக்
காணாவண்ண முயர்ந்தார்போலுங் கயிலை மலையாரே.

பொழிப்புரை :

கயிலைமலை இறைவர் உலகில் மகளிர் இடும் பலியை உணவாகக் கொண்டு அதனை ஏற்றவர். விளங்கும் மணிகளைக் கொண்டுள்ள நாகங்களை அனிகலனாகப் பூண்டவர். எல்லோராலும் புகழப்பெறும் திருமால் பிரமர்கள் அடிமுடி காண விரும்பிச் சென்று தேட எங்கும் விளங்கும் எரியுருவோடு அவர்கள் காணாதவாறு உயர்ந்து நின்றவர்.

குறிப்புரை :

உலகில் பலி ஊணாக்கொண்டு ஏற்றார் எனக்கூட்டுக. பூண் நாண் ஆரமாக - பூணத்தகும் மாலையாக. இருவர் - பிரம விஷ்ணுக்கள்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

விருதுபகரும் வெஞ்சொற்சமணர் வஞ்சச் சாக்கியர்
பொருதுபகரு மொழியைக்கொள்ளார் புகழ்வார்க் கணியராய்
எருதொன்றுகைத்திங் கிடுவார்தம்பால் இரந்துண் டிகழ்வார்கள்
கருதும்வண்ண முடையார்போலுங் கயிலை மலையாரே.

பொழிப்புரை :

தாம் பெற்ற விருதுகளைப் பலரிடமும் சொல்லிப் பெருமை கொள்ளும் இயல்புடைய கொடுஞ்சொல் பேசும் சமணரும் வஞ்சனையான மனமுடைய சாக்கியரும் பிறசமயத்தவரோடு சண்டையிட்டுக் கூறும் சொற்களைக் கேளாதவராய், புகழ்ந்து போற்றுவார்க்கு அணிமையானவராய் விடை ஒன்றைச் செலுத்தி உணவிடுவார் பால் இரந்து உண்பவராய் இகழ்பவரும் தம்பெருமையை நினைந்து போற்றும் இயல்பினராய் விளங்குபவர் கயிலைமலை இறைவர்.

குறிப்புரை :

விருது - பட்டங்கள். பொருது - மோதுதல் காரணமாக. எருது ஒன்று உகைத்து - ஓர் இடபத்தில் ஏறிச் செலுத்தி.

பண் :தக்கேசி

பாடல் எண் : 11

போரார்கடலிற் புனல்சூழ்காழிப் புகழார் சம்பந்தன்
காரார்மேகங் குடிகொள்சாரற் கயிலை மலையார்மேல்
தேராவுரைத்த செஞ்சொன்மாலை செப்பு மடியார்மேல்
வாராபிணிகள் வானோருலகின் மருவு மனத்தாரே.

பொழிப்புரை :

கரையோடு போர் செய்யும் கடலினது நீரால் சூழப்பட்ட சீகாழிப்பதியில் தோன்றிய புகழ் பொருந்திய ஞானசம்பந்தன், கரிய மேகங்கள் நிலையாகத் தங்கியுள்ள சாரலை உடைய கயிலைமலை இறைவர்மேல் தெளிந்துரைத்த இச்செஞ்சொல் மாலையாகிய திருப்பதிகத்தை ஓதும் அடியவர்பால் பிணிகள் வாரா. அவர்கள் வானோர் உலகில் மருவும் மனத்தினராவர்.

குறிப்புரை :

கயிலைமலையாரைச் சொன்ன செஞ்சொல்மாலை வல்லார்மேல் பிணிகள் வாரா; வானோர் உலகத்தில் மருவுவர் என்கின்றது. தேரா - தெளிந்து.
சிற்பி