திருவண்ணாமலை


பண் :தக்கேசி

பாடல் எண் : 1

பூவார்மலர்கொண் டடியார்தொழுவார் புகழ்வார் வானோர்கள்
மூவார்புரங்க ளெரித்தவன்று மூவர்க் கருள்செய்தார்
தூமாமழைநின் றதிரவெருவித் தொறுவின் னிரையோடும்
ஆமாம்பிணைவந் தணையுஞ்சாரல் அண்ணா மலையாரே.

பொழிப்புரை :

நீர்த்துளிகளைத் தூவும் கரிய மேகங்கள் வானத்தில் நின்றவாறு இடி முழக்கத்தைச்செய்ய, அதனைக் கேட்டு அஞ்சிய காட்டுப் பசுக்களின் மந்தைகளான வரிசைகள் வந்து ஒருங்கிணையும் அடிவாரத்தை உடைய திருவண்ணாமலை இறைவர், அடியவர்கள் பொலிவுமிக்க நறுமலர்களைத் தூவி வழிபடவும், வானோர்கள் புகழ்ந்து போற்றவும், அழியாவரம் பெற்ற அசுரர்களின் முப்புரங்களை எரித்து அழித்து அவ்வசுரர்களில் மூவர்க்கு அருளையும் வழங்கிய பெருமையுடையவர்.

குறிப்புரை :

அடியார்கள் மலர்கொண்டு அடிவணங்குவார்கள்; தேவர்கள் தோத்திரிப்பார்கள்; இங்ஙனமாகத் திரிபுரம் எரித்த பெருமான் அண்ணாமலையார் ஆவர் என்கின்றது. பூ ஆர் மலர் - போதும் விரிந்த பூவும். மூவார் - அழியாதவர்கள். மூவர் - திரிபுராதிகள். தொறுவின் நிரையோடும் - ஆட்டுமந்தை வரிசை யோடும். ஆமாம் பிணை - காட்டுப்பசுக்கள்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 2

மஞ்சைப்போழ்ந்த மதியஞ்சூடும் வானோர் பெருமானார்
நஞ்சைக்கண்டத் தடக்குமதுவு நன்மைப் பொருள்போலும்
வெஞ்சொற்பேசும் வேடர்மடவா ரிதண மதுவேறி
அஞ்சொற்கிளிக ளாயோவென்னும் அண்ணா மலையாரே.

பொழிப்புரை :

குத்து வெட்டு முதலிய கொடிய சொற்களையே பேசும் வேடர்களின் பெண்கள் தினைப்புனங்களில் பரண்மீது ஏறியிருந்து தினைகவரவரும் அழகிய சொற்களைப் பேசும்கிளிகளை ஆயோ என ஒலியெழுப்பி ஓட்டும் திருவண்ணாமலை இறைவர், மேகங்களைக் கிழித்துச் செல்லும் பிறைமதியை முடியிற்சூடும் வானவர் தலைவர். கடலிடைத் தோன்றிய நஞ்சையுண்டு கண்டத்தில் அடக்கியவர். இச்செயல் உலகத்தை அழியாது காக்கும் நன்மை கருதியதேயாகும்.

குறிப்புரை :

அண்ணாமலையாராகிய பிறைசூடிய பெருமான் நஞ்சையுண்டதும் நன்மைகருதியேயாம் என்கின்றது. மஞ்சு - மேகம். வெஞ்சொல்பேசும் வேடர் - பிடி எறி குத்து கொல்லு என்ற கொடிய சொற்களையே பேசுகிற வேடர்கள். மடவார் - வேட்டுவத்தி. இதணம் - பரண். ஆயோ என்பது கிளிஓட்டும் ஒலிக்குறிப்பு.

பண் :தக்கேசி

பாடல் எண் : 3

ஞானத்திரளாய் நின்றபெருமா னல்ல வடியார்மேல்
ஊனத்திரளை நீக்குமதுவு முண்மைப் பொருள்போலும்
ஏனத்திரளோ டினமான்கரடி யிழியு மிரவின்கண்
ஆனைத்திரள்வந் தணையுஞ்சாரல் அண்ணா மலையாரே.

பொழிப்புரை :

இராப்போதில் பன்றிகளின் கூட்டமும், மான் இனங்களும், கரடிகளும், ஒருங்கே இறங்கிவரும் மலைச்சாரலில் யானைகளின் கூட்டமும் வந்தணையும் திருவண்ணாமலை இறைவர், ஞானப் பிழம்பாய் நிற்பவர். நன்மைகளையே கருதும் அடியவர்கள் ஊனுடலோடு பிறக்கும் பிறவிகளை நீக்குபவர். இவ்வருட்செயல் வேதாகமநூல்கள் உணர்த்தும் உண்மைப் பொருளாகும்.

குறிப்புரை :

ஞானப்பிழம்பாய் நிற்கும் அண்ணாமலையார் நல்ல அடியார்மேல் வருங்குற்றங்களை நீக்குவதும் உண்மையே போலும் என்கின்றது. திரள் - பிழம்பு. ஊனத்திரள் - குறைகளின் குவியல்; உடம்பு என்றுமாம். உண்மைப்பொருள் - சத்தியம் போலும் என்பது ஒப்பில் போலி. ஏனத்திரள் - பன்றிக்கூட்டம். ஆனை - யானை.

பண் :தக்கேசி

பாடல் எண் : 4

இழைத்தவிடையா ளுமையாள்பங்க ரிமையோர் பெருமானார்
தழைத்தசடையார் விடையொன்றேறித் தரியார் புரமெய்தார்
பிழைத்தபிடியைக் காணாதோடிப் பெருங்கை மதவேழம்
அழைத்துத்திரிந்தங் குறங்குஞ்சாரல் அண்ணா மலையாரே.

பொழிப்புரை :

தன்னைவிட்டுப் பிரிந்த பெண்யானையைக் காணாத பெரிய கையைஉடைய மதம் பொருந்திய ஆண் யானை, குரல் கொடுத்து அழைத்துத் திரிந்து அலுத்து உறங்கும் சாரலைஉடைய திருவண்ணாமலை இறைவர், நூல்போன்று நுண்ணிய இடையினை உடைய உமையம்மையை ஒருபாகமாக உடையவர். விடைமீது ஏறிச்சென்று பகைவரின் முப்புரங்களை எரித்தவர்.

குறிப்புரை :

உமைபங்கர், தேவதேவர், தாழ்சடையார், விடை யேறி, திரிபுரம் எய்தவர் இவர் என்கின்றது. இழைத்த - நூலிழையின் தன்மையையுடைய, தரியார் - பகைவர். பிழைத்த - தவறிய. பெரிய களிறு தன்னை விட்டுப்பிரிந்த பெண்யானையைக் காணாமல் அழைத்துச் சுற்றி அலுத்துப்போய் உறங்கும் சாரல் என மலையியற்கை கூறியவாறு.

பண் :தக்கேசி

பாடல் எண் : 5

உருவிற்றிகழு முமையாள்பங்க ரிமையோர் பெருமானார்
செருவில்லொருகால் வளையவூன்றிச் செந்தீ யெழுவித்தார்
பருவிற்குறவர் புனத்திற்குவித்த பருமா மணிமுத்தம்
அருவித்திரளோ டிழியுஞ்சாரல் அண்ணா மலையாரே.

பொழிப்புரை :

பெரிய வில்லை ஏந்திய குறவர்கள் விளைநில வரப்புக்களில் குவித்து வைத்திருந்த பெரிய முத்துக்களும் மணிகளும் அருவித்திரள்களின் வழியே நிலத்தில் வந்து இழியும் திருவண்ணாமலை இறைவர், உருவத்தால் அழகிய உமையவளை ஒருபாகமாகக் கொண்டவர். இமையவர்கட்குத் தலைவர். பெரிய போர்வில்லை ஒரு காலால் ஊன்றிக்கொண்டு வளைத்துக் கணைஎய்து முப்புரங்களும் செந்தீயால் அழிந்து விழுமாறு செய்தவர்.

குறிப்புரை :

ஒரே உருவில் விளங்கும் உமையொருபாகர், வில் வளைத்துத் திரிபுரத்தைச் செந்தீயாட்டியவர் இவர் என்கிறது. செரு - போர். வில் ஒருகால் வளைய ஊன்றி - வில்லினது ஒரு தலையை வளைவதற்காகக் காலிற் பெருவிரலால் ஊன்றி. பரு வில் குறவர் - பருத்த வில்லையுடைய குறவர்கள். குறவர் குவித்த முத்தங்கள் அருவியோடு இழியும் சாரல் அண்ணாமலை என்க.

பண் :தக்கேசி

பாடல் எண் : 6

எனைத்தோரூழி யடியாரேத்த விமையோர் பெருமானார்
நினைத்துத்தொழுவார் பாவந்தீர்க்கும் நிமல ருறைகோயில்
கனைத்தமேதி காணாதாயன் கைம்மேற் குழலூத
அனைத்துஞ்சென்று திரளுஞ்சாரல் அண்ணா மலையாரே.

பொழிப்புரை :

மலைச்சாரலில் புல்மேய்க்கச் சென்ற ஆயன் கனைத்து மேய்ந்த தம் எருமைகளைக் காணாதவனாய்த் தன் கையிலிருந்த வேய்ங்குழலை ஊத அவ்வளவில் அனைத்தெருமைகளும் வீடு திரும்பும் விருப்போடு ஒன்றுதிரளும் அடிவாரத்தை உடைய திரு வண்ணாமலை, அடியவர்கள் தன்னைத் துதிக்க இமையவர் தலைவனாய்ப் பல்லூழிக் காலங்களைக் கண்ட பழையோனாய் விளங்கும் தன்னை நினைத்துத் தொழும் அன்பர்களின் பாவங்களைத் தீர்த்தருளும் நிமலனாய் விளங்கும் அப்பெரியோனின் கோயிலாக விளங்குவது ஆகும்.

குறிப்புரை :

நினைத்துத் தொழுவார் பாவந்தீர்க்கும் நிமலர் உறை கோயில் அண்ணாமலையார் என்கின்றது. எனைத்து ஓர் ஊழி - எத்தகையதோர் ஊழியிலும், கனைத்த - ஒலித்த. மேதிகளைக்காணாத ஆயன் குழலூத அவைகளெல்லாம் திரளும் சாரல் என்க. மேதி - எருமை. குருவருள் : `எனைத்தோ ரூழி அடியார் ஏத்த இமையோர் பெருமானார் நினைத்துத் தொழுவார் பாவம்தீர்க்கும் நிமலர் உறை கோயில்` என்ற தொடரில் நினைத்தால் முத்தி தரும் தலம் திருவண்ணாமலை என்ற குறிப்பு காணப்படுகிறது. நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் `அண்ணாமலையார் துணை` என்றே கையெழுத்திடுவர் கடிதங்களில். அதுபற்றி விசாரித்தபொழுது, நினைத்தால் முத்தி தரும் தலம் அண்ணாமலை என்பதால், `அண்ணாமலையார் துணை` என்று போடுகிறார்கள் என்று ஒரு நகரத்தார், கருப்பன் செட்டியார் என்பவர் குறிப்பிட்டார். இது இப்பாடல் கருத்திற்கு அரணாகவே உள்ளமைகாண்க.

பண் :தக்கேசி

பாடல் எண் : 7

வந்தித்திருக்கு மடியார்தங்கள் வருமேல் வினையோடு
பந்தித்திருந்த பாவந்தீர்க்கும் பரம னுறைகோயில்
முந்தியெழுந்த முழவினோசை முதுகல் வரைகண்மேல்
அந்திப்பிறைவந் தணையுஞ்சாரல் அண்ணா மலையாரே.

பொழிப்புரை :

விழா நிகழ்ச்சிகளை முன்னதாக அறிவித்தெழும் முழவின் ஓசை இடையறாது கேட்பதும், பழமையான மலைப்பாறைகளுக்கு இடையே அந்திக்காலத்துப் பிறை வந்து அணைவதுமாகிய திருவண்ணாமலையில் விளங்கும் இறைவன் தன்னை வழிபட்டு வேறு நினைவின்றி இருக்கும் அடியவர்களின் ஆகாமிய வினைகளோடு அவர்களைப் பந்தித்திருக்கும் பாவங்களையும் போக்கியருளும் பரம னாவான். அவனது கோயில் திருவண்ணாமலையாகும்.

குறிப்புரை :

தொழும் அடியார்களின் ஆகாமிய சஞ்சிதவினைகளைத் தீர்க்கும் பரமன்உறை கோயில் அண்ணாமலை என்கின்றது. வந்தித்து இருக்கும் - வழிபட்டுச் சோகம் பாவனையில் இருக்கும். பந்தித் திருந்த - ஆன்மாவின் அறிவை மறைத்திருந்த. பெரிய பாறைகளில் அந்திப்பிறை அணையும் சாரல் என்பது அண்ணாமலையே பிறைசூடிய பெருமானாகக் காட்சியளிப்பதைக் கருதி.

பண் :தக்கேசி

பாடல் எண் : 8

மறந்தான்கருதி வலியைநினைந்து மாறா யெடுத்தான்றோள்
நிறந்தான்முரிய நெரியவூன்றி நிறைய வருள்செய்தார்
திறந்தான்காட்டி யருளாயென்று தேவ ரவர்வேண்ட
அறந்தான்காட்டி யருளிச்செய்தார் அண்ணா மலையாரே.

பொழிப்புரை :

தனது வலிமையை வெளிப்படுத்தித் திரிபுர அசுரர் களை அழித்து அருள் புரியுமாறு தேவர்கள் வேண்ட, தீயவரை ஒறுப்பது அறநெறியின் பாற்பட்டதாதலை உணர்த்தும் நிலையில் அசுரர்களை அழித்துத் தேவர்கட்கு அருள்செய்த பெருமானாகிய திருவண்ணாமலை இறைவன், தன் வலிமையையும், பெற்ற வெற்றிகளையும் பெரிதாக எண்ணியவனாய்த் தனக்கு மாறாகத்தான் உறையும் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் மார்பு தோள் ஆகியனவற்றை நெரியுமாறு காலை ஊன்றிப் பின் அவ்விராவணன் வேண்ட அவனுக்கு அருள் செய்த மேம்பாடுடையவனாவன்.

குறிப்புரை :

இலங்கை மன்னனது தோள் நெரிய, விரல் ஊன்றிய இறைவன் அண்ணாமலையான் என்கிறது. மறம் - வீரம். நிறம் - மார்பு. தேவர் திறங் காட்டியருளாய் என்று வேண்ட, அறங்காட்டி அருள் செய்தார் எனமுடிக்க.

பண் :தக்கேசி

பாடல் எண் : 9

தேடிக்காணார் திருமால்பிரமன் றேவர் பெருமானை
மூடியோங்கி முதுவேயுகுத்த முத்தம் பலகொண்டு
கூடிக்குறவர் மடவார்குவித்துக் கொள்ள வம்மினென்
றாடிப்பாடி யளக்குஞ்சாரல் அண்ணா மலையாரே.

பொழிப்புரை :

மலையை மூடி ஓங்கிவளர்ந்த பழமையான மூங்கில் மரங்கள் உகுத்த முத்துக்கள் பலவற்றைக் குறவர்குலப்பெண்கள் ஓரிடத்தே குவித்து வைத்து அவற்றை வாங்கிட வருக என மக்களை அழைத்து ஆடிப்பாடி அவர்களுக்கு அளந்து அளிக்கும் திரு வண்ணாமலை இறைவனாகிய தேவர் பெருமானைத் திருமால் பிரமன் ஆகிய இருவர் தேடிக் காணாதவராயினர்.

குறிப்புரை :

மாலும் அயனும் பெருமானைத் தேடிக் காணாரா யிருக்கக் குறத்தியர் மூங்கில் முத்துக்களைக்குவித்து, வாங்கிக்கொள்ள வாருங்கள் என்றழைக்கும் அண்ணாமலை என்கின்றது. வேய் உகுத்த முத்தம் - மூங்கிலில் பிறந்த முத்துக்கள்.

பண் :தக்கேசி

பாடல் எண் : 10

தட்டையிடுக்கித் தலையைப்பறித்துச் சமணே நின்றுண்ணும்
பிட்டர்சொல்லுக் கொள்ளவேண்டா பேணித் தொழுமின்கள்
வட்டமுலையா ளுமையாள்பங்கர் மன்னி யுறைகோயில்
அட்டமாளித் திரள்வந்தணையும் அண்ணா மலையாரே.

பொழிப்புரை :

தடுக்கை அக்குளில் இடுக்கிக் கொண்டு தலைமயிரை ஒன்றொன்றாகப் பறித்த முண்டிதராய் ஆடையின்றி நின்றுண்ணும் சமணர்களாகிய பித்தர்களின் சொற்களைப் பொருளெனக் கொள்ளல் வேண்டா. வட்டமான தனங்களைக் கொண்ட உமையம்மையின் பங்கராய், மலைச்சாரல்களில் சிங்கஏறுகள் கூட்டமாய் வந்தணையும் திருவண்ணாமலையில் வீற்றிருந்தருளும் பெருமான் நிலையாக எழுந்தருளி உறையும் கோயிலை விரும்பித் தொழுவீராக.

குறிப்புரை :

சமணர் புத்தர் சொல்லைக் கேளாதே, இறைவனைத் தொழுங்கள்; அவ்விறைவன் உறையுங்கோயில் அண்ணாமலையாகும் என்கின்றது. தட்டு - தடுக்கு. பிட்டர் - பிரட்டர்கள். அட்டம் - குறுக்கு. தக்க - உரை.406.

பண் :தக்கேசி

பாடல் எண் : 11

அல்லாடரவ மியங்குஞ்சாரல் அண்ணா மலையாரை
நல்லார்பரவப் படுவான்காழி ஞான சம்பந்தன்
சொல்லான்மலிந்த பாடலான பத்து மிவைகற்று
வல்லாரெல்லாம் வானோர்வணங்க மன்னி வாழ்வாரே.

பொழிப்புரை :

இரவு வேளைகளில் படம் எடுத்தாடும் பாம்புகள் இயங்கும் சாரலை உடைய திருவண்ணாமலையில் உறையும் இறைவரை, நல்லவர்களால் போற்றப்படுபவனாகிய, சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் போற்றிப்பாடிய அருஞ்சொல்லமைப் புக்கள் நிறைந்த இப்பதிகப் பாடல்கள் பத்தையும் கற்று வல்லவர் அனைவரும் வானோர் வணங்க நிலைபெற்று வாழ்வர்.

குறிப்புரை :

அண்ணாமலையாரை ஞானசம்பந்தன் சொன்ன இப்பாடல் வல்லார் தேவர்வணங்க வாழ்வார்கள் என்கின்றது. அல் - இரவு. மன்னி - நிலைபெற்று.
சிற்பி