திருநல்லம்


பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

கல்லா னிழன்மேய கறைசேர் கண்டாவென்
றெல்லா மொழியாலு மிமையோர் தொழுதேத்த
வில்லா லரண்மூன்றும் வெந்து விழவெய்த
நல்லா னமையாள்வா னல்ல நகரானே.

பொழிப்புரை :

இமையவர்கள் கல்லால மரநிழலில் எழுந்தருளிய கறை பொருந்திய கண்டத்தை உடையவனே என்று தமக்குத் தெரிந்த அனைத்து மொழிகளாலும் தோத்திரம் செய்து தொழுது ஏத்த, மேரு வில்லால் அசுரர்தம் மூன்று அரண்களும் வெந்து விழுமாறு செய்தருளிய பெரியவனாகிய சிவபிரான் நம்மையாட்கொள்ளுதற் பொருட்டு நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

உபதேச குருமூர்த்தியாயிருந்த நீலகண்டா என்று தேவர்கள் தோத்திரிக்கத் திரிபுரம் எரித்த பெருமான் நமையாட் கொள்ளுவதற்காகத் திருநல்லம் என்னும் திருப்பதியில் எழுந்தருளியிருக்கின்றார் என்கின்றது. கறை - விஷம். எல்லா மொழியாலும் - தமக்குத் தெரிந்த மொழிகள் எல்லாவற்றாலும்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

தக்கன் பெருவேள்வி தன்னி லமரரைத்
துக்கம் பலசெய்து சுடர்பொற் சடைதாழக்
கொக்கின் னிறகோடு குளிர்வெண் பிறைசூடும்
நக்கன் னமையாள்வா னல்ல நகரானே.

பொழிப்புரை :

தன்னை இகழ்ந்து தக்கன் செய்த பெரிய வேள்விக்குச் சென்ற அமரர்களை, அவ்வேள்விக் களத்திலேயே பலவகையான துக்கங்களை அடையச் செய்தவனும், ஒளிவிடும் பொன்போன்ற சடைகள் தாழ்ந்து தொங்கக் கொக்கின் இறகோடு குளிர்ந்த வெண்மையான பிறையைச் சூடியிருப்பவனும் திகம்பரனுமாய இறைவன் நம்மை ஆளுதற்பொருட்டு நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

தக்கயாகத்தில் தேவர்களைத் துக்கப்படச்செய்த பெரு மான் இவர் என்கின்றது. நக்கன் - நக்நன். இது நிர்வாணி என்னும் பொருளது.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

அந்தி மதியோடு மரவச் சடைதாழ
முந்தி யனலேந்தி முதுகாட் டெரியாடி
சிந்தித் தெழவல்லார் தீரா வினைதீர்க்கும்
நந்தி நமையாள்வா னல்ல நகரானே.

பொழிப்புரை :

மாலைக் காலத்தில் தோன்றும் பிறை மதியோடு பாம்பையும் அணிந்த சடைமுடி தாழ்ந்து தொங்க, முற்பட்ட ஊழிக்காலத்தில் கையில் அனலேந்திப் பழமையான சுடுகாட்டகத்தே எரியில் நின்றாடித் தன்னைச் சிந்தித்தே எச்செயலையும் தொடங்கும் அன்பர்களின் தீராதவினைகள் எல்லாவற்றையும் தீர்த்தருளும் நந்தியாகிய சிவபெருமான், நம்மை ஆட்கொண்டருளுதற் பொருட்டு நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

தியானிப்பவர்களுடைய தீராவினை நீக்குவார் இவர் என்கின்றது. முந்தி - ஊழித் தொடக்கத்தில். தீராவினை - இறைவன் திருவருளால் அன்றி வேறொன்றாலும் தீராதவினை. நந்தி - சிவ பெருமான்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

குளிரும் மதிசூடிக் கொன்றைச் சடைதாழ
மிளிரும் மரவோடு வெண்ணூ றிகழ்மார்பில்
தளிருந் திருமேனித் தையல் பாகமாய்
நளிரும் வயல்சூழ்ந்த நல்ல நகரானே.

பொழிப்புரை :

குளிர்ந்த பிறை மதியைச் சூடி, கொன்றை மலர் களை அணிந்துள்ள சடைகள் தாழ்ந்து தொங்க, விளங்கும் பாம்போடு பூணநூல் திகழும் மார்பினனாய்த் தளிர் போன்ற திருமேனியை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்ட சிவபிரான் குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

உமையொருபாகன் இவன் என்கின்றது. மிளிரும் - விளங்குகின்ற. தளிரும்திகழ் மேனி - தளிரைப்போல் விளங்குகின்ற மேனி. நளிரும் வயல் - குளிர்ந்த வயல்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

மணியார் திகழ்கண்டம் முடையான் மலர்மல்கு
பிணிவார் சடையெந்தை பெருமான் கழல்பேணித்
துணிவார் மலர்கொண்டு தொண்டர் தொழுதேத்த
நணியா னமையாள்வா னல்ல நகரானே.

பொழிப்புரை :

நீலமணி போன்ற விளங்கிய கண்டத்தினை உடைய வனும், மலர்கள் நிறைந்த வளைத்துக் கட்டப்பட்ட நீண்ட சடைமுடியினனும், எமக்குத் தந்தையானவனும் ஆகிய பெருமான் மனத் துணிவோடு மலர் கொண்டு தன் திருவடிகளை விரும்பித் தொழுதேத்தவும் நம்மை ஆட்கொண்டருளவும் நண்ணிய நிலையினனாய் நல்லம் நகரில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

மலர்கொண்டு கழல்பேணி, தொண்டர்கள் தொழுது ஏத்த அவர்களுக்கு அண்மையில் இருப்பவன் இவன் என்கின்றது. மணி - நீலமணி. பிணிவார் சடை - கட்டிய நீண்ட சடை. நணியான் - நணுகியவன். துணிவார் தொண்டர் - மனத்துணிவினை உடைய தொண்டர்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

வாசம் மலர்மல்கு மலையான் மகளோடும்
பூசுஞ் சுடுநீறு புனைந்தான் விரிகொன்றை
ஈசன் னெனவுள்கி யெழுவார் வினைகட்கு
நாசன் னமையாள்வா னல்ல நகரானே.

பொழிப்புரை :

மணம் கமழ்கின்ற மலர்களைச் சூடிய மலையரையன் மகளாகிய பார்வதிதேவியோடும், பூசத்தக்கதாய்ச் சுட்டெடுத்த திருநீறு அணிந்தவனாய், இதழ் விரிந்த கொன்றை மாலையைப் புனைந்தவனாய், ஈசன் எனத் தன்னை நினைந்தேத்துபவர்களின் வினைகளைப் பொடிசெய்பவனாய், விளங்கும் இறைவன், நம்மை ஆட்கொண்டருள நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

உமாதேவியோடு நீறணிந்து கொன்றை சூடிய ஈசன் எனத் தியானிப்பார்க்கு வினைநாசம் செய்பவன் இவன் என்கின்றது. உள்கி - நினைத்து.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

அங்கோல் வளைமங்கை காண வனலேந்திக்
கொங்கார் நறுங்கொன்றை சூடிக் குழகாக
வெங்கா டிடமாக வெந்தீ விளையாடும்
நங்கோ னமையாள்வா னல்ல நகரானே.

பொழிப்புரை :

அழகிய திரண்ட வளையல்களை அணிந்த உமை யம்மை காணக் கையில் அனல் ஏந்தி, தேன் நிறைந்த மணமுடைய கொன்றை மலர்மாலை சூடி, இளமைக் கோலத்தில் சுடுகாட்டை அரங்காகக் கொண்டு எரியாடும் நம் தலைவனாகிய சிவபிரான், நம்மை ஆட்கொள்ளுதற் பொருட்டு நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

உமையம்மைகாணக் கொன்றைசூடி, ஊழிக்காலத்தில் நடனம் புரிபவர் இவர் என்கின்றது. அம் கோல் வளை - அழகிய திரண்ட வளையல். கொங்கு - மணம் நிறைந்த தேன். குழகாக - இளமையாக.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

பெண்ணார் திருமேனிப் பெருமான் பிறைமல்கு
கண்ணார் நுதலினான் கயிலை கருத்தினால்
எண்ணா தெடுத்தானை யிறையே விரலூன்றி
நண்ணார் புரமெய்தா னல்ல நகரானே.

பொழிப்புரை :

உமையம்மையைத் திருமேனியின் ஒரு கூற்றிலே கொண்டுள்ள பெருமானும், பிறை மதியை முடியில் சூடிக் கண்பொருந்திய நுதலினனாய் விளங்குவோனும், இறைவனது வரம் பிலாற்றலை மனத்தால் எண்ணாது கயிலை மலையை எடுத்த இரா வணனைச் சிறிதே விரலூன்றி அடர்த்தவனும், பகைவர்தம் முப்புரங்களை எய்தழித்தவனுமாகிய சிவபிரான், நம்மை ஆட்கொண்டருள, நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

இராவணனை விரலால் ஊன்றித் திரிபுரம் எரித்தவர் இவர் என்கின்றது. எண்ணாது - பின்வருகின்ற தீங்கை முன் ஆராயாது. இறையே - சிறிது. நண்ணார் - பகைவர்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

நாகத் தணையானு நளிர்மா மலரானும்
போகத் தியல்பினாற் பொலிய வழகாகும்
ஆகத் தவளோடு மமர்ந்தங் கழகாரும்
நாகம் மரையார்த்தா னல்ல நகரானே.

பொழிப்புரை :

பாம்பணையில் துயிலும் திருமாலும், தண்ணிய, தாமரை மலர்மேல் எழுந்தருளியுள்ள நான்முகனும், திருமகள் கலைமகளிரோடு போகம் பொருந்திவாழ, தானும் மலைமகளோடு கூடிப் போகியாய் இருந்து அருள் செய்த, அழகு பொருந்திய பாம்பை இடையில் அரைநாணாகக் கட்டிக் கொண்டிருப்பவன் ஆகிய சிவ பிரான், நம்மை ஆள நல்லம் என்னும் நகரிடை எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

நாகத்தணையான் - திருமால். திருமாலை இச்சொல் லால் குறித்தது, அணையிருந்தும் அணையிலேயே அருகில் அலர் மகள் இருந்தும், மாலுக்குப் போகம் கூடவேண்டுமாயின் இறைவன் போகியாய் இருந்தால் அல்லது பயனில்லை என்பதைக்காட்ட. மாமலரான் என்பதும் அங்ஙனமே.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

குறியில் சமணோடு குண்டர் வண்டேரர்
அறிவில் லுரைகேட்டங் கவமே கழியாதே
பொறிகொள் ளரவார்த்தான் பொல்லா வினைதீர்க்கும்
நறைகொள் பொழில்சூழ்ந்த நல்ல நகரானே.

பொழிப்புரை :

குறிக்கோள் இல்லாத சமணர்களும் புத்தரும் கூறும் அறிவற்ற சொற்களைக் கேட்டு நாள்களைப் பயனற்றனவாய்ப்போக்காதீர், புள்ளிகளோடு கூடிய பாம்பினை இடையிற்கட்டிய பரமன், நம் பொல்லா வினைகளைத் தீர்க்கும் நிலையில் தேன் நிறைந்த பொழில்கள் சூழ்ந்த நல்லம் என்னும் நகரிடை எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

இது பொல்லாவினையைப் போக்குவார் இவர் என் கின்றது. குறி இல் சமண் - குறிக்கோளற்ற சமணர். குண்டர் - அறிவிலிகள். தேரர் - புத்தர். அவமே - வீணாக, பொறி - படப்பொறி. நறை - தேன்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

நலமார் மறையோர்வாழ் நல்ல நகர்மேய
கொலைசேர் மழுவானைக் கொச்சை யமர்ந்தோங்கு
தலமார் தமிழ்ஞான சம்பந் தன்சொன்ன
கலைக ளிவைவல்லார் கவலை கழிவாரே.

பொழிப்புரை :

நன்மைகள் நிறைந்த வேதங்களை ஓதும் அந்த ணர்கள் வாழும் நல்லம் நகரில் எழுந்தருளிய, கொல்லும் தொழில் வல்ல மழுவைக் கையில் ஏந்திய சிவபிரானை, கொச்சை வயம் என்னும் புகழுடைய தலத்தில் வாழ்ந்த தமிழ் ஞானசம்பந்தன், போற்றிப் பாடிய கலைநலம் வாய்ந்த இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர், கவலைகள் நீங்கப் பெறுவர்.

குறிப்புரை :

நல்ல நகரானை ஞானசம்பந்தன் சொன்ன கலை களாகிய இவைகளை வல்லவர்கள் கவலை கழிவார் என்கின்றது. கொச்சை - சீகாழி. இப்பதிகத்தைக் கலைகள் எனச் சிறப்பித்தமை காண்க.
சிற்பி