திருநல்லூர்


பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

கொட்டும் பறைசீராற் குழும வனலேந்தி
நட்டம் பயின்றாடு நல்லூர்ப் பெருமானை
முட்டின் றிருபோது முனியா தெழுந்தன்பு
பட்ட மனத்தார்க ளறியார் பாவமே.

பொழிப்புரை :

பறை கொட்டும் சீருக்கு ஏற்பப் பூதகணங்கள் முதலியன சூழக்கையின்கண் அனலேந்தி விருப்போடு நடனம் ஆடும் நல்லூர்ப் பெருமானைக் காலை மாலை இருபொழுதும் தவறாமல் வெறுப்பின்றி எழுச்சியோடு வணங்கி அன்பு பூண்ட மனத்தார்களைப் பாவம் அணுகாது.

குறிப்புரை :

பறை கொட்டுஞ் சீருக்கு ஏற்ப அனலேந்தியாடும் நல் லூர்ப்பெருமானை, காலை மாலையிருவேளைகளிலும் அன்பு செய்யுமனத்தவர்கள் பாவமறியார் என்கின்றது. சீரால் - சதிக்கு ஏற்ப சீரால் ஆடும் எனக்கூட்டுக. முட்டின்று - இடையீடு இல்லாமல். அன்புபட்ட - அன்பொடு பொருந்திய.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

ஏறி லெருதேறு மெழிலா யிழையோடும்
வேறும் முடனுமாம் விகிர்த ரவரென்ன
நாறும் மலர்ப்பொய்கை நல்லூர்ப் பெருமானைக்
கூறும் மடியார்கட் கடையா குற்றமே.

பொழிப்புரை :

ஊர்தியாக எருது ஒன்றிலேயே ஏறுபவனும், அழகிய உமையம்மையோடு ஒன்றாகவும் வேறாகவும் விளங்கும் தன்மையை உடையவனுமாகிய சிவபெருமான், அன்பர்கள் எண்ணுமாறு மணங்கமழும் மலர்ப் பொய்கை சூழ்ந்த நல்லூரில் விளங்குகின்றான். அப்பெருமான் புகழைக் கூறும் அடியவர்களைக் குற்றங்கள் அடையா.

குறிப்புரை :

அம்மையொடு உடனாயும் வேறாயும் இருக்கும் பெரு மானாகிய, நல்லூர் இறைவனைத் தோத்திரிப்பார்க்குக் குற்றம் அடையா என்கின்றது. ஏறில் எருது ஏறும் விகிர்தர் எனக் கூட்டிப் பொருள்கொள்க. எருதன்றி வேறொன்றிலும் அவர்க்கு விருப்பில்லை என்றவாறு. எழில் - அழகு. வேறாதல் - அம்மையை இடப்பாகத்துக் கொண்டி ருத்தல். உடனாதல் - தன்மேனியில் ஒருபங்காய்க் கொண்டு அர்த்தநாரீச்சுரராக இருத்தல். இதுவும் உருவில் வேறுபட்டுத் தோன்றுதலின் சத்தியைத் தன்னுளடக்கியிருக்கும் நிலை கூறிற்றுமாம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

சூடு மிளந்திங்கட் சுடர்பொற் சடைதாழ
ஓடுண் கலனாக வூரூ ரிடுபிச்சை
நாடுந் நெறியானை நல்லூர்ப் பெருமானைப்
பாடும் மடியார்கட் கடையா பாவமே.

பொழிப்புரை :

இளம்பிறை, முடியிற்சூடி, ஒளி விடுகின்ற பொன் போன்ற சடைகள் தாழ, தலையோட்டையே உண்கலனாகக் கொண்டு, ஒவ்வோர் ஊரிலும் மகளிர் இடும் பிச்சையை நாடிச்செல்லும் அறநெறியாளனாகிய நல்லூர்ப் பெருமானைப் பாடும் அடியவர்களைப் பாவங்கள் அடையா.

குறிப்புரை :

ஊரிடு பிச்சையை நாடும் முறையையுடைய நல்லூர்ப் பெருமானைப் பாடுகின்ற அடியவர்களைப் பாவம் அடையா என்கின்றது. சுடர் பொன் சடை - ஒளிவிடுகின்ற பொன்போலும் திருச்சடை.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

நீத்த நெறியானை நீங்காத் தவத்தானை
நாத்த நெறியானை நல்லூர்ப் பெருமானைக்
காத்த நெறியானைக் கைகூப் பித்தொழு
தேத்து மடியார்கட் கில்லை யிடர்தானே.

பொழிப்புரை :

உலகியல் நெறி முறைகளைத் தான் பின்பற்றாது நீத்தவனும், நீங்காத தவத்தை உடையவனும், கட்டுப்பாடுகளுடைய நெறிகளை வகுத்து அளித்தவனும், அந்நெறி நிற்பாரைக் காத்தருள் பவனும் ஆகிய நல்லூர்ப் பெருமானைக் கைகுவித்துத் தொழுதேத்தும் அடியவர்கட்கு இடரில்லை.

குறிப்புரை :

இவனைக் கைதொழுதேத்துவார்கட்கு இடர் இல்லை என்கின்றது. நீத்த நெறியானை - விடுபட்ட நெறிகளையுடையவனை. நெறி என்பனயாவும் மலமாயாபந்தங்களாற் கட்டப்பெற்ற எம் போலியர்க்கே ஆதலின், அவையற்ற இறைவன், விடுபட்ட ஆசார சீலங்களை உடையவனாயினன். நாத்த நெறியானை என்பதில் ஞாத்தநெறி நாத்த நெறியாயிற்று. ஞாத்த - கட்டப்பட்ட; எமக்கு ஒழுங்குகளைக் கட்டிக் கொடுத்தவனை என்பது பொருள்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

ஆகத் துமைகேள்வ னரவச் சடைதாழ
நாகம் மசைத்தானை நல்லூர்ப் பெருமானைத்
தாகம் புகுந்தண்மித் தாள்கள் தொழுந்தொண்டர்
போக மனத்தராய்ப் புகழத் திரிவாரே.

பொழிப்புரை :

தனது திருமேனியில், கூறாகக் கொண்டுள்ள உமையம்மையின் கணவனும் பாம்பணிந்த சடைகள் தாழ்ந்து தொங்க, இடையில் பாம்பைக் கச்சாகக் கட்டியவனும் ஆகிய நல்லூர்ப் பெருமானை, வேட்கை மிக்கவராய் அணுகி அவன் திருவடிகளைத் தொழும் தொண்டர்கள் இன்பம் பொருந்திய மனத்தவராய்ப் பலரும் புகழ உலகில் வாழ்வர்.

குறிப்புரை :

சிவனைச் சேரவேண்டும் என்ற தாகம் எடுத்து அணு குந் தொண்டர்கள் போகம் நிறைந்த மனத்தராக உலகம் புகழத் திரிவார்கள் என்கின்றது. ஆகம் - மேனி. தாகம் புகுந்து - வேட்கைமிக்கு. அண்மி - அணுகி.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

கொல்லுங் களியானை யுரிபோர்த் துமையஞ்ச
நல்ல நெறியானை நல்லூர்ப் பெருமானைச்
செல்லு நெறியானைச் சேர்ந்தா ரிடர்தீரச்
சொல்லு மடியார்க ளறியார் துக்கமே.

பொழிப்புரை :

தன்னைக் கொல்ல வந்த மதம் பொருந்திய யானையை, உமையம்மை அஞ்சுமாறு கொன்று, அதன் தோலைப் போர்த்த நல்ல நெறியாளனாய், நல்லூர்ப் பெருமானாய், எல்லோரும் அடையத்தக்க முத்திநெறியாளனாய் விளங்கும் சிவபிரானை அடைந்து, தங்களது அரிய துன்பங்கள் தீருமாறு புகழ்ந்து போற்றும் அடியவர்கள், துக்கம் அறியார்.

குறிப்புரை :

மக்களடையும் நெறியாகவுள்ள நல்லூர்ப் பெரு மானைச் சொல்லும் அடியார்கள் துக்கம் அறியார் என்கின்றது. உரி - தோல். செல்லுநெறி - அடையத்தகும் நெறியாகிய முத்தி. சேர்ந்தார் - தியானித்தவர்கள்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

எங்கள் பெருமானை யிமையோர் தொழுதேத்தும்
நங்கள் பெருமானை நல்லூர் பிரிவில்லாத்
தங்கை தலைக்கேற்றி யாளென் றடிநீழல்
தங்கு மனத்தார்கள் தடுமாற் றறுப்பாரே.

பொழிப்புரை :

எங்கள் தலைவனும், தேவர்களால் தொழுது போற்றப்படும் நம் பெருமானும், நல்லூரில் பிரிவின்றி எழுந்தருளியிருக்கும் தலைவனுமாய இறைவனை அடைந்து, தம் கைகளை உச்சி மேல் குவித்து, நாங்கள் உனக்கு அடிமை என்று கூறி, அவனது திருவடி நீழலில் ஒன்றி வாழும் மனத்தவர்கள் தடுமாற்றம் இலராவர்.

குறிப்புரை :

சிரமேற் கைகுவித்து, திருமுன்நின்று `அடியேன்மீளா ஆளாவேன்` என்று திருவடி நீழலில் தங்கும் மனத்தார்கள் தடுமாற்றம் அறுப்பார்கள் என்கின்றது.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

காம னெழில்வாட்டிக் கடல்சூ ழிலங்கைக்கோன்
நாம மிறுத்தானை நல்லூர்ப் பெருமானை
ஏம மனத்தாரா யிகழா தெழுந்தொண்டர்
தீப மனத்தார்க ளறியார் தீயவே.

பொழிப்புரை :

மன்மதனது உருவஅழகை அழித்துக் கடல் சூழ்ந்த இலங்கை மன்னனாகிய இராவணனது புகழைக் கெடுத்து, விளங்கும் நல்லூரில் எழுந்தருளிய பெருமானை, பாதுகாப்புக் கொண்ட மனத்தவர்களாய் இகழாது அவனைக் காணஎழும் தொண்டர்கள், தீபம் போன்ற ஞானஒளி நிலைத்த மனம் உடையவராவர். தீயனவற்றை அவர்கள் அறியார்.

குறிப்புரை :

இராவணனது புகழைக் கெடுத்த பெருமானாகிய நல் லூர்ப் பெருமானைப் புகழுந்தொண்டர், ஒளிமனத்தர்களாய் தீயன அறியார் என்கின்றது. காமன் - மன்மதன். எழில் - எழுச்சி; தருக்கு. நாமம் - புகழ். ஏம மனத்தார் - பாதுகாப்புற்ற மனத்தவர்கள். தீப மனத்தார் - எழுதிய தீபம்போல நிலைத்த மனத்தடியார்கள்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

வண்ண மலரானும் வைய மளந்தானும்
நண்ண லரியானை நல்லூர்ப் பெருமானைத்
தண்ண மலர்தூவித் தாள்க டொழுதேத்த
எண்ணு மடியார்கட் கில்லை யிடுக்கணே.

பொழிப்புரை :

செந்தாமரையில் விளங்கும் பிரமனும், உலகை அளந்த திருமாலும், நண்ணுதற்கு அரியவனாய் விளங்கும் நல்லூர்ப்பெருமானை, குளிர்ந்த மலர்களைத்தூவி, அவன் திருவடிகளைத் தொழுது வணங்க எண்ணும் அடியவர்களுக்கு, இடுக்கண் இல்லை.

குறிப்புரை :

அயனும் மாலும் அணுகவும் அரிய பெருமான் திரு வடியை மலர்தூவி வணங்கும் அடியார்கட்கு என்றும் துன்பமில்லை என்கின்றது. வண்ணமலரான் - செந்தாமரையில் உள்ள பிரமன். வையம் அளந்தான் - உலகளந்தபெருமாள். தொழுது ஏத்தவும் வேண்டாம் - எண்ணினாற்போதும் இடுக்கண் இல்லை என்று எளிமை கூறியவாறு.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

பிச்சக் குடைநீழற் சமணர் சாக்கியர்
நிச்ச மலர்தூற்ற நின்ற பெருமானை
நச்சு மிடற்றானை நல்லூர்ப் பெருமானை
எச்சு மடியார்கட் கில்லை யிடர்தானே.

பொழிப்புரை :

மயிற்பீலியாலாகிய குடை நீழலில் திரியும் சமணர்களும், புத்தர்களும் நாள்தோறும் பழி தூற்றுமாறு நின்ற பெருமானாய், நஞ்சு பொருந்திய கண்டத்தை உடைய நல்லூர்ப்பெருமானாய் விளங்கும் சிவபிரானை, ஏத்தும் அடியவர்களுக்கு இடரில்லை.

குறிப்புரை :

அமணரும் புத்தரும் அலர்தூற்ற நின்ற பெருமானைப் புகழும் அடியார்கட்கு இடர் இல்லை என்கின்றது. பிச்சக்குடை - மயிற் பீலியாலாகிய குடை. நிச்சம் - நாடோறும். அலர் - பழிச்சொல். நச்சு மிடற்றானை - விஷம்பொருந்திய கழுத்தையுடையவனை. எச்சும் - ஏச்சும். ஏத்தும் என்பதன் மரூஉ.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

தண்ணம் புனற்காழி ஞான சம்பந்தன்
நண்ணும் புனல்வேலி நல்லூர்ப் பெருமானை
வண்ணம் புனைமாலை வைக லேத்துவார்
விண்ணுந் நிலனுமாய் விளங்கும் புகழாரே.

பொழிப்புரை :

குளிர்ந்த நீரால் சூழப்பட்ட சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், பொருந்திய நீரை வேலியாக உடைய நல்லூரில் விளங்கும் பெருமான் இயல்புகளைப் புனைந்து பாடிய இத்திருப்பதிகத்தை நாள்தோறும் சொல்லித் துதிப்பவர் விண்ணும் மண்ணும் விளங்கும் புகழாளர் ஆவர்.

குறிப்புரை :

ஞானசம்பந்தன், நல்லூர்ப்பெருமானைச் சொன்ன புகழ்மாலையை நாளும் ஏத்துவார் விண்ணும் நிலனுமாக விளங்கும் புகழார் என்கின்றது. தண்ணம்புனல்: அம் சாரியை. புனல் வேலி - நீரை வேலியாகவுடைய. வண்ணம்புனை மாலை - இறையியல்புகளை எடுத்துச் சேர்த்துச் சொன்ன மாலை. வைகல் - நாடோறும்.
சிற்பி