திருப்பிரமபுரம்


பண் :

பாடல் எண் : 1

அரனை யுள்குவீர் , பிரம னூருளெம்
பரனையே மனம் , பரவி யுய்ம்மினே.

பொழிப்புரை :

சிவபிரானைச் சிந்தித்துப் போற்ற விரும்பும் அன்பர்களே, பிரமனூரில் விளங்கும் பரனையே மனத்தால் பரவிப் போற்றி உய்வீர்களாக.

குறிப்புரை :

சிவபெருமானைச் சிந்திப்பவர்களே, பிரமபுரத்தில் உள்ள பரமனைப் பரவி உய்யுங்கள் என்கின்றது.

பண் :

பாடல் எண் : 2

காண வுள்குவீர் , வேணு நற்புரத்
தாணு வின்கழல் , பேணி யுய்ம்மினே.

பொழிப்புரை :

சிவபிரானைக் கண்டு தொழஎண்ணும் அன்பர்களே, வேணுபுரத்தில் விளங்கும் தாணுவின் திருவடிகளைப் பேணி உய்வீர்களாக.

குறிப்புரை :

காண உள்குவீர் - தரிசிக்க எண்ணுபவர்களே. வேணுபுரம் - சீகாழி. தாணு - சிவபெருமான்.

பண் :

பாடல் எண் : 3

நாத னென்பிர்காள் , காத லொண்புகல்
ஆதி பாதமே , ஓதியுய்ம்மினே.

பொழிப்புரை :

சிவபெருமானை எம் தலைவன் எனக் கூறும் அன்பர்களே! அன்போடு ஒளி விளங்கும் புகலிப் பதியில் விளங்கும் ஆதியின் திருவடிப் பெருமைகளை ஓதி உய்வீர்களாக.

குறிப்புரை :

நாதன் என்பிர்காள் - என் தலைவன் என்பவர்களே. புகல் ஆதி - சீகாழியிலுள்ள முதல்வன்.

பண் :

பாடல் எண் : 4

அங்க மாதுசேர் , பங்க மாயவன்
வெங்குரு மன்னும் , எங்க ளீசனே.

பொழிப்புரை :

அருள் வழங்கும் குறிப்போடு உமையம்மையைத் தனது திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டுள்ளவன், வெங்குருவில் நிலையாக உள்ள எங்கள் ஈசன் ஆவான்.

குறிப்புரை :

அங்கம் - மேனி. பங்கம் - பாதி. வெங்குரு - சீகாழி.

பண் :

பாடல் எண் : 5

வாணி லாச்சடைத் , தோணி வண்புரத்
தாணி நற்பொனைக் , காணு மின்களே.

பொழிப்புரை :

ஒளி பொருந்திய, பிறைமதி பொருந்திய சடைமுடி உடையவனாய்த் தோணிபுரத்தில் விளங்கும் ஆணிப் பொன் போன்ற இறைவனைக் கண்டு தொழுவீர்களாக.

குறிப்புரை :

வாள் நிலாச் சடை - ஒளிபொருந்திய நிலாவை யணிந்த சடை. ஆணிநற்பொனை - மாற்றுயர்ந்த பொன்போன்றவனை. தோணிபுரம் - சீகாழி.

பண் :

பாடல் எண் : 6

பாந்த ளார்சடைப் , பூந்த ராய்மன்னும்
ஏந்து கொங்கையாள் , வேந்த னென்பரே.

பொழிப்புரை :

பாம்பு பொருந்திய சடைமுடியோடு பூந்தராயில் விளங்கும் பெருமானை, ஏந்திய தனபாரங்களை உடைய உமையம்மையின் கணவன் என்று கூறுவார்கள்.

குறிப்புரை :

பாந்தள் - பாம்பு. பூந்தராய் - சீகாழி.

பண் :

பாடல் எண் : 7

கரிய கண்டனைச் , சிரபு ரத்துளெம்
அரசை நாடொறும் , பரவி யுய்ம்மினே.

பொழிப்புரை :

கருமை பொருந்திய கண்டத்தை உடையவனாய்ச், சிரபுரத்துள் எழுந்தருளிய அரசனை நாள்தோறும் பரவி உய்வீர்களாக.

குறிப்புரை :

சிரபுரம் - சீகாழி.

பண் :

பாடல் எண் : 8

நறவ மார்பொழிற் , புறவ நற்பதி
இறைவ னாமமே , மறவ னெஞ்சமே.

பொழிப்புரை :

தேன் பொருந்திய சோலைகளை உடைய புறவமாகிய நல்ல ஊரில் எழுந்தருளிய இறைவன் திருநாமங்களை, நெஞ்சமே! நீ மறவாதே.

குறிப்புரை :

நறவம் - தேன். புறவநற்பதி - சீகாழி. மறவல் நெஞ்சமே எனப்பிரிக்க.

பண் :

பாடல் எண் : 9

தென்றி லரக்கனைக் , குன்றிற் சண்பைமன்
அன்று நெரித்தவா , நின்று நினைமினே.

பொழிப்புரை :

தென் திசையிலுள்ள இலங்கை மன்னனாம் இராவணனாகிய அரக்கனைச் சண்பை மன்னனாகிய சிவபிரான் கயிலை மலையிடைப்படுத்து அன்று நெரித்த வரலாற்றை நின்று நினைத்துப் போற்றுவீர்களாக.

குறிப்புரை :

தென்றில் அரக்கன் - தென்திசையில் உள்ள அரக்கன். குன்றில் - கயிலைமலையில். சண்பை - சீகாழி. அன்று - கயிலையைத் தூக்கிய காலத்து. நெரித்தவா - இராவணனை நெரித்தவாற்றை.

பண் :

பாடல் எண் : 10

அயனு மாலுமாய் , முயலுங் காழியான்
பெயல்வை யெய்திநின் , றியலு முள்ளமே.

பொழிப்புரை :

பிரமனும் திருமாலும் அடிமுடி தேடி முயலும் பரம்பொருளாகிய சீகாழிப்பதியில் விளங்கும் இறைவனது கருணைப் பொழிவைச் சார்ந்து நின்று நினைக்கும் என் உள்ளம்.

குறிப்புரை :

முயலும் - தேடமுயற்சி செய்யும். காழி - சீகாழி.

பண் :

பாடல் எண் : 11

தேர ரமணரைச் , சேர்வில் கொச்சைமன்
நேரில் கழனினைந் , தோரு முள்ளமே.

பொழிப்புரை :

புத்தர் சமணர் ஆகியோரை அணுகாத, கொச்சை வயத்து மன்னனாகிய சிவபிரானின் ஒப்பற்ற திருவடிகளை நினைந்து தியானிக்கும் என் உள்ளம்.

குறிப்புரை :

கொச்சை - சீகாழி. நேரில் கழல் - ஒப்பற்ற திருவடி. ஓரும் - தியானிக்கும்.

பண் :

பாடல் எண் : 12

தொழும னத்தவர் , கழும லத்துறை
பழுதில் சம்பந்தன் , மொழிகள் பத்துமே.

பொழிப்புரை :

கழுமலத்தில் உறையும் குற்றமற்ற ஞானசம்பந்தன் அருளிய மொழிகளாகிய, இத்திருப்பதிகப் பாடல்களை ஓதி, பெருமானைத் தொழும் மனத்தவர் ஆகுக.

குறிப்புரை :

பழுது - குற்றம். கழுமலம் - சீகாழி.
சிற்பி