திருவிடைமருதூர்
பண் :குறிஞ்சி
பாடல் எண் : 1
தோடொர் காதினன் பாடு மறையினன்
காடு பேணிநின் றாடு மருதனே.
பொழிப்புரை :
திருவிடைமருதூர் இறைவன் தோட்டை, இடத் திருச்செவியில் அணிந்தவனாய் நான்கு வேதங்களைப் பாடுபவனாய், சுடுகாட்டை விரும்பி அதன்கண் நின்று ஆடுகின்றவனாவான்.
குறிப்புரை :
பேணி - விரும்பி.
பண் :குறிஞ்சி
பாடல் எண் : 2
கருதார் புரமெய்வர் எருதே யினிதூர்வர்
மருதே யிடமாகும் விருதாம் வினைதீர்ப்பே.
பொழிப்புரை :
தம்மைக் கருதாதவராகிய அசுரர்களின் முப்புரங்களை எய்து அழித்தவரும், எருதை வாகனமாகக் கொண்டு இனிதாக ஊர்பவரும் ஆகிய இறைவர்க்குத் திருவிடை மருதூரே விரும்பி உறையும் இடமாகும். அவரைத் தொழுதால் புகழ் சேரும். வினைகள் தீர் தலை உடையனவாகும்.
குறிப்புரை :
கருதார் - பகைவர். விருது ஆம் - பெருமை உளதாம். வினை தீர்ப்பு ஆம் - வினைகள் தீர்தலை உடையனவாம்.
பண் :குறிஞ்சி
பாடல் எண் : 3
எண்ணு மடியார்கள் அண்ணன் மருதரைப்
பண்ணின் மொழிசொல்ல விண்ணுந் தமதாமே.
பொழிப்புரை :
மனத்தால் எண்ணி வழிபடும் அன்பர்கள் தலைமையாளராய் விளங்கும் மருதவாணரைப் பண்ணிசையோடு அவர்தம் புகழைப் போற்ற, விண்ணுலகமும் அவர்கள் வசமாகும்.
குறிப்புரை :
அண்ணல் - பெருமையிற் சிறந்தவர். பண்ணின் மொழி - தோத்திரங்கள்.
பண் :குறிஞ்சி
பாடல் எண் : 4
விரியார் சடைமேனி எரியார் மருதரைத்
தரியா தேத்துவார் பெரியா ருலகிலே.
பொழிப்புரை :
விரிந்த சடைமுடியை உடையவரும், எரிபோன்ற சிவந்த மேனியருமாகிய மருதவாணரைத் தாமதியாது துதிப்பவர் உலகில் பெரியவர் எனப்போற்றப்படுவர்.
குறிப்புரை :
எரி - மழு. தரியாது - தாமதியாது.
பண் :குறிஞ்சி
பாடல் எண் : 5
பந்த விடையேறும் எந்தை மருதரைச்
சிந்தை செய்பவர் புந்தி நல்லரே.
பொழிப்புரை :
கட்டுத்தறியில் கட்டத்தக்க விடையை ஊர்ந்து வரும் எந்தையாராகிய மருதவாணரை மனத்தால் தியானிப்பவர்கள் அறிவால் மேம்பட்டவராவர்.
குறிப்புரை :
பந்தவிடை - கட்டோடு கூடிய இடபம்.
பண் :குறிஞ்சி
பாடல் எண் : 6
கழலுஞ் சிலம்பார்க்கும் எழிலார் மருதரைத்
தொழலே பேணுவார்க் குழலும் வினைபோமே
பொழிப்புரை :
ஒரு காலில் கழலும் , பிறிதொரு காலில் சிலம்பும் ஒலிக்கும் உமைபாகராகிய அழகிய மருதவாணரை விரும்பித் தொழு வதை நியமமாகக் கொண்டவர்க்கு வருத்துதற்கு உரிய வினைகள் துன் புறுத்தா ; அகலும் .
குறிப்புரை :
கழலும் சிலம்பும் ஆர்க்கும் - ஒருகால் கழலும் , ஒருகால் சிலம்பும் ஒலிக்கும் . உழலும் வினை - வருத்தும் வினைகள் .
பண் :குறிஞ்சி
பாடல் எண் : 7
பிறையார் சடையண்ணல் மறையார் மருதரை
நிறையால் நினைபவர் குறையா ரின்பமே.
பொழிப்புரை :
பிறை பொருந்திய சடைமுடியினை உடைய தலை மையாளரான வேதங்களை அருளிய மருதவாணரை நிறைந்த மனத்தால் நினைப்பவர் இன்பம் குறையப் பெறார்.
குறிப்புரை :
நிறையால் - நிறைவோடு.
பண் :குறிஞ்சி
பாடல் எண் : 8
எடுத்தான் புயந்தன்னை அடுத்தார் மருதரைத்
தொடுத்தார் மலர்சூட்ட விடுத்தார் வேட்கையே.
பொழிப்புரை :
கயிலை மலையை எடுத்த இராவணனின் தோள் களை நெரித்த மருதவாணருக்குச் சூட்டுவதற்கு மலர் தொடுத்தவர்கள், பிறவிக்குக் காரணமான ஆசையை விடுத்தவர்களாவர்.
குறிப்புரை :
எடுத்தான் - கைலையைத் தூக்கிய இராவணன், வேட் கை - பொருள்கள்மேல் தோன்றும் பற்றுள்ளம்.
பண் :குறிஞ்சி
பாடல் எண் : 9
இருவர்க் கெரியாய உருவ மருதரைப்
பரவி யேத்துவார் மருவி வாழ்வரே.
பொழிப்புரை :
திருமால் பிரமர் அடிமுடி அறிய முடியாதவாறு எரி உருவமாய் நின்ற மருதவாணரைப் புகழ்ந்து ஏத்தித் துதிப்பவர் எல்லா நலன்களோடும் மருவி வாழும் வாழ்க்கையைப் பெறுவர்.
குறிப்புரை :
இருவர்க்கு - அயனுக்கும் மாலுக்கும். மருவி - எல்லா வற்றொடும் பொருந்தி.
பண் :குறிஞ்சி
பாடல் எண் : 10
நின்றுண் சமண்தேரர் என்று மருதரை
அன்றி யுரைசொல்ல நன்று மொழியாரே.
பொழிப்புரை :
நின்றுண்ணும் சமணரும், புத்தரும் எக்காலத்தும் இடைமருது இறைவனாகிய சிவபெருமானை மாறுபட்ட உரைகளால் கூறுவதால் அவர் எக்காலத்தும் நல்லனவே கூறார்.
குறிப்புரை :
சமணரும் புத்தரும் என்றைக்கும் மருதப்பெருமானை அன்றிப் பிறவற்றைப் பேசுவதால் நல்லதைச் சொல்லமாட்டார்கள்.
பண் :குறிஞ்சி
பாடல் எண் : 11
கருது சம்பந்தன் மருத ரடிபாடிப்
பெரிதுந் தமிழ்சொல்லப் பொருத வினைபோமே.
பொழிப்புரை :
இறைவன் திருவருளையே கருதும் ஞானசம்பந்தன் மருதவாணரின் திருவடிகளைப் பெரிதும் போற்றிப் பாடிய இத்தமிழ் மாலையை ஓதுபவர்க்குத் துன்புறுத்திய வினைகள் போகும்.
குறிப்புரை :
பொருதவினை - இதுவரையில் வருத்திவந்த வினை.