திருஅன்னியூர்


பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

மன்னி யூரிறை சென்னி யார்பிறை
அன்னி யூரமர் மன்னு சோதியே.

பொழிப்புரை :

திருஅன்னியூரில் எழுந்தருளிய நிலைபெற்ற ஒளி வடிவினனாகிய சிவன், பிறை சூடிய திருமுடியோடு பல தலங்களிலும் எழுந்தருளியிருந்து, ஆங்காங்குள்ள மக்கட்குத் தலைவனாய் விளங்குபவன்.

குறிப்புரை :

சென்னி - தலை. சோதிமன்னி ஊர் இறை என முடிக்க.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

பழகுந் தொண்டர்வம் அழக னன்னியூர்க்
குழகன் சேவடி தொழுது வாழ்மினே.

பொழிப்புரை :

இறைவன்பால் மனம் ஒன்றிப் பழகும் தொண்டர்களே வாருங்கள். அன்னியூரில் அழகனாகவும் இளமைத் தன்மை உடையவனாகவும் எழுந்தருளியுள்ள சிவபிரானின் செம்மையான திருவடிகளைத் தொழுது வாழ்வீர்களாக.

குறிப்புரை :

வம் - வாருங்கள். குழகன் - இளையவன்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

நீதி பேணுவீர் ஆதி யன்னியூர்ச்
சோதி நாமமே ஓதி யுய்ம்மினே.

பொழிப்புரை :

நீதியைப் போற்றி அதன்படி வாழ்கின்றவர்களே, அன்னியூரில் விளங்கும் ஒளி வடிவினனாகிய சிவபிரான் திருநாமங்களையே ஓதிஉய்வீர்களாக.

குறிப்புரை :

**********

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

பத்த ராயினீர் அத்த ரன்னியூர்ச்
சித்தர் தாள் தொழ முத்த ராவரே.

பொழிப்புரை :

இறைவனிடம் பத்திமை பூண்டவர்களே, தலைமை யாளனாய் அன்னியூரில் விளங்கும் ஞானவடிவினனின் திருவடிகளைத் தொழுதலால் வினை மாசுகளிலிருந்து விடுபட்டவராவீர்.

குறிப்புரை :

*********

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

நிறைவு வேண்டுவீர் அறவ னன்னியூர்
மறையு ளான்கழற் குறவு செய்ம்மினே.

பொழிப்புரை :

மனநிறைவுடன் வாழ விரும்புகின்றவர்களே, அற வடிவினனாய் நான்கு வேதங்களிலும் பரம்பொருளாகக் கூறப்பட்டுள்ள அன்னியூர்ப் பெருமான் திருவடிகளுக்கு அன்பு செய்து அவனோடு உறவு கொள்வீர்களாக.

குறிப்புரை :

நிறைவு வேண்டுவீர் - குறைவிலா நிறைவாக விரும்புகின்றவர்களே. அறவன் - அற வடிவானவன்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

இன்பம் வேண்டுவீர் அன்ப னன்னியூர்
நன்பொ னென்னுமின் உம்பராகவே.

பொழிப்புரை :

உலக வாழ்க்கையில் இன்பங்களை எய்த விரும்பும் அடியவர்களே, அன்பனாக விளங்கும் அன்னியூர் இறைவனை நல்ல பொன்னே என்று கூறுமின், தேவர்களாகலாம்.

குறிப்புரை :

உம்பராக - தேவர்களாக. நன்பொன் என்னுமின் - நல்ல பொன் என்று சொல்லுங்கள்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

அந்த ணாளர்தம் தந்தை யன்னியூர்
எந்தை யேயெனப் பந்த நீங்குமே.

பொழிப்புரை :

அந்தணர்களின் தந்தையாக விளங்கும் அன்னியூர் இறைவனை எந்தையே என அழைக்க மல மாயைகள் நீங்கும்.

குறிப்புரை :

பந்தம் - மல மாயையால் விளைந்த கட்டு.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

தூர்த்த னைச்செற்ற தீர்த்த னன்னியூர்
ஆத்த மாவடைந் தேத்தி வாழ்மினே.

பொழிப்புரை :

காமாந்தகனாகிய இராவணனைத் தண்டித்த புனித னாகிய அன்னியூர் இறைவனை அடைந்து அன்புக்குரியவனாக அவனைப் போற்றி வாழுங்கள்.

குறிப்புரை :

தூர்த்தன் - காமியாகிய இராவணன். தீர்த்தன் - பரிசுத்தமானவன். ஆத்தமா - அன்போடு. ஆப்தமாக என்பதன் சிதைவு.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

இருவர் நாடிய அரவ னன்னியூர்
பரவு வார்விண்ணுக் கொருவ ராவரே.

பொழிப்புரை :

திருமால் பிரமர்களால் அடிமுடி தேடப்பட்ட அரவை அணிகலனாகப் பூண்ட அன்னியூர் இறைவனைப் பரவித் துதிப்பவர் தேவருலகில் இந்திரராவர்.

குறிப்புரை :

விண்ணுக்கு ஒருவராவர் - இந்திரனாவர்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

குண்டர் தேரருக்கு அண்ட னன்னியூர்த்
தொண்டு ளார்வினை விண்டு போகுமே.

பொழிப்புரை :

சமணர்களாலும் புத்தர்களாலும் அணுக முடியாதவனாகிய அன்னியூர் இறைவனுக்குத் தொண்டு செய்பவர்களின் வினைகள் விண்டு போகும்.

குறிப்புரை :

அண்டன் - அண்டமுடியாதவன், வினை விண்டு போகும் - நெல்வாய் விண்டதுபோல வினை முளைக்குந் தன்மையழியும்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

பூந்த ராய்ப்பந்தன் ஆய்ந்த பாடலால்
வேந்த னன்னியூர் சேர்ந்து வாழ்மினே.

பொழிப்புரை :

பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் ஆய்ந்து சொல்லிய பாடல்களைப் பாடி அன்னியூர் வேந்தனாகிய சிவபிரானைச் சேர்ந்து வாழ்வீர்களாக.

குறிப்புரை :

பந்தன் - ஞானசம்பந்தன் என்பதன் முதற்குறை. பூந்த ராய் - சீகாழி.
சிற்பி