திருப்புறவம்


பண் :

பாடல் எண் : 1

எய்யாவென்றித் தானவரூர்மூன் றெரிசெய்த
மையார்கண்டன் மாதுமைவைகுந் திருமேனிச்
செய்யான் வெண்ணீறணிவான் றிகழ்பொற் பதிபோலும்
பொய்யாநாவி னந்தணர்வாழும் புறவம்மே.

பொழிப்புரை :

பொய் கூறாத நாவினை உடைய அந்தணர்கள் வாழும் திருப்புறவம் என்னும் சீகாழிப்பதி, இளையாத வெற்றியை உடைய அசுரர்களின் முப்புரங்களை எரித்த நீலகண்டன், உமையம்மையை ஒருகூறாகக் கொண்டு எழுந்தருளும், செய்ய திருமேனியனாய் வெண்ணீறு அணிந்தவனாய் விளங்கும் அழகிய பதியாகும்.

குறிப்புரை :

புறவம் திரிபுரம் எரித்த நீலகண்டர்பதிபோலும் என் கின்றது. எய்யா வென்றி - இளையாத வெற்றியையுடைய. தானவர் - அசுரர்கள். மை - விடம். பொய்யாநாவின் அந்தணர் - பொய்யே சொல்லாத நாவினை உடைய அந்தணர். அவர்கள் கூறும் உரை, தவறாத நா என்றுமாம்.

பண் :

பாடல் எண் : 2

மாதொருபாலு மாலொருபாலும் மகிழ்கின்ற
நாதனென்றேத்து நம்பரன்வைகுந் நகர்போலும்
மாதவிமேய வண்டிசைபாட மயிலாடப்
போதலர்செம்பொன் புன்னைகொடுக்கும் புறவம்மே.

பொழிப்புரை :

குருக்கத்தியில் மேவிய வண்டுகள் இசைபாடவும் மயில்கள் ஆடவும், அவற்றிற்குப் பரிசிலாகப் புன்னை மரங்கள் விரிந்த மலர்களின் மகரந்தங்களைப் பொன்னாக அளிக்கும் இயற்கை வளம்சான்ற புறவம் என்னும் பதி, உமையம்மையை ஒரு பாகமாகவும் திருமாலை ஒரு பாகமாகவும் கொண்டு மகிழ்கின்ற நம் மேலான தலைவன் வைகும் நகராகும்.

குறிப்புரை :

ஒருபாதி உமையும் ஒருபாதி மாலுமாக இருக்கும் நாதன் நகர் புறவம் என்கின்றது. மாதவி மேய வண்டு - குருக்கத்தியில் மேவிய வண்டுகள். புன்னை போதலர் செம்பொன் கொடுக்கும் புறவம் - புன்னைமரங்கள் போதாய் இருந்து அலர்ந்து மகரந்தங்களாய செம்பொன்னைக் கொடுக்கும் புறவம்; இதனால் மரங்களும் வள்ளன்மை செய்யும் நகரம் என்றறிவித்தவாறு.

பண் :

பாடல் எண் : 3

வற்றாநதியும் மதியும் பொதியுஞ் சடைமேலே
புற்றாரரவின் படமாடவுமிப் புவனிக்கோர்
பற்றாயிடுமின் பலியென்றடைவார் பதிபோலும்
பொற்றாமரையின் பொய்கைநிலாவும் புறவம்மே.

பொழிப்புரை :

என்றும் நீர் வற்றாத கங்கையும், பிறையும் பொருந்திய சடையின்மேல் புற்றை இடமாகக் கொண்ட பாம்புபடத்துடன்ஆட , இவ்வுலகிற்கு ஒரு பற்றுக்கோடாகி , எனக்குப் பலி இடு மின் என்று பல ஊர்களுக்கும் செல்லும் சிவபிரானது பதி, அழகிய தாமரைகள் மலர்ந்துள்ள பொய்கை விளங்கும் புறவம் என்னும் பதியாகும்.

குறிப்புரை :

இவ்வுலகத்திற்கு ஒருபற்றுக்கோடாக இருக்க எமக்குப் பலியிடுங்கள் என்றுவரும் இறைவன்பதி புறவம் என்கின்றது. வற்றா நதி - கங்கை. பொற்றாமரையின் பொய்கை நிலாவும் - பொற்றாமரையைப்போல பிரமதீர்த்தம் விளங்குகின்ற.

பண் :

பாடல் எண் : 4

துன்னார்புரமும் பிரமன்சிரமுந் துணிசெய்து
மின்னார்சடைமே லரவும்மதியும் விளையாடப்
பன்னாளிடுமின் பலியென்றடைவார் பதிபோலும்
பொன்னார்புரிநூ லந்தணர்வாழும் புறவம்மே.

பொழிப்புரை :

பகைவர்களாகிய திரிபுர அசுரர்களின் முப்புரங் களையும், பிரமனின் தலைகளில் ஒன்றையும் அழித்து, மின்னல் போல் ஒளி விடும் சடைமுடி மேல் பாம்பும் மதியும் பகை நீங்கி விளையாடு மாறு சூடிப் பல நாள்களும் சென்று பலியிடுமின் என்று கூறித் திரிவானாகிய சிவபிரானது பதி, பொன்னாலியன்ற முப்புரிநூலை அணிந்த அந்தணர்கள் வாழும் புறவமாகும்.

குறிப்புரை :

திரிபுரத்தையும் பிரமன் சிரத்தையும் அழித்து, சடை மேல் பாம்பும் மதியும் விளையாட, பலியிடுங்கள் என்று வருவார் பதிபுறவம் என்கின்றது. பொன் ஆர் புரிநூல் - பொன்னாலாகிய பூநூல்.

பண் :

பாடல் எண் : 5

தேவாவரனே சரணென்றிமையோர் திசைதோறுங்
காவாயென்று வந்தடையக்கார் விடமுண்டு
பாவார்மறையும் பயில்வோருறையும் பதிபோலும்
பூவார்கோலச் சோலைசுலாவும் புறவம்மே.

பொழிப்புரை :

பாற்கடலைக் கடைந்தபோது எழுந்த விடத்தின் கொடுமை தாங்காது, தேவர்கள் திசைதோறும் சூழ்ந்து நின்று `தேவனே! அரனே! உனக்கு அடைக்கலம் எங்களைக் காவாய்` எனச் சரண்அடைய, அக்கடலில் தோன்றிய கரிய விடத்தை உண்டு, பாடல்களாக அமைந்த வேதங்களைப் பயிலும் சிவபெருமான் வாழும் பதி, மலர்கள் நிறைந்த அழகிய சோலைகள் சூழ்ந்த புறவம் என்னும் பதியாகும்.

குறிப்புரை :

தேவர்கள் `தேவதேவா! அடைக்கலம்` என்று அரற்ற விடம் உண்டவர் பதி இது என்கின்றது. சரண் - அடைக்கலம். கார் விடம் - கரிய விஷம். பா ஆர் மறை - பாக்களோடு கூடிய வேதம்.

பண் :

பாடல் எண் : 6

கற்றறிவெய்திக் காமன்முன்னாகும் முகவெல்லாம்
அற்றரனேநின் னடிசரணென்னு மடியோர்க்குப்
பற்றதுவாய பாசுபதன்சேர் பதியென்பர்
பொற்றிகழ்மாடத் தொளிகள் நிலாவும் புறவம்மே.

பொழிப்புரை :

மெய்ந்நூல்களைக் கற்று, அதனால் நல்லறிவும் பெற்று, காமனாகிய மன்மதனின் குறிப்பினால் ஆகும் காமவிருப்பமெல்லாம் அற்று, `அரனே! நின் திருவடிகளே சரண்` என்று கூறும் அடியவர்கட்குப் பற்றுக்கோடாய்ப் பாசுபதன் எழுந்தருளிய பதி, பொன் நிறைந்து விளங்கும் மாடவீடுகளின் ஒளி சூழ்ந்த புறவம் என்னும் பதியாகும் என்பர்.

குறிப்புரை :

கற்றறிந்து, காமனுக்கும் முன்னோனாயிருக்கும் முக ஒளியெல்லாம் கெட்டு, அரனே அடைக்கலமென்னும் அடியவருக்குப் பற்றாயபரன் சேர்பதிபுறவம் என்கின்றது. முகவு - முகவொளி.

பண் :

பாடல் எண் : 7

எண்டிசையோரஞ் சிடுவகைகார்சேர் வரையென்னக்
கொண்டெழுகோல முகில்போற்பெரிய கரிதன்னைப்
பண்டுரிசெய்தோன் பாவனைசெய்யும் பதியென்பர்
புண்டரிகத்தோன் போன்மறையோர்சேர் புறவம்மே.

பொழிப்புரை :

எண்திசையில் உள்ளாரும் அஞ்சிடுமாறு கரிய மலைபோலவும், நீரை முகந்து கொண்டெழுந்த அழகிய கரிய மேகம் போலவும் வந்த பெரிய களிற்று யானையை முற்காலத்தில் கொன்று அதன் தோலை உரித்துப் போர்த்த சிவபிரான் விரும்பியிருக்கும் பதி, தாமரை மலர் மேல் உறையும் நான்முகன் போல வேதங்களில் வல்ல அந்தணர்கள் வாழும் புறவமாகும்.

குறிப்புரை :

திசையெல்லாம் நடுங்கவந்த யானையை உரித்துப் போர்த்தவன் பதிபுறவம் என்கின்றது. கார் சேர் வரை - கருமை சேர்ந்தமலை. கோலமுகில்போல் - அழகிய மேகத்தைப்போல. பாவனை செய்யும் - விரும்பியிருக்கும். புண்டரிகத்தோன் - பிரமன்.

பண் :

பாடல் எண் : 8

பரக்குந்தொல்சீர்த் தேவர்கள்சேனைப் பௌவத்தைத்
துரக்குஞ்செந்தீப் போலமர்செய்யுந் தொழின்மேவும்
அரக்கன்றிண்டோ ளழிவித்தானக் காலத்திற்
புரக்கும்வேந்தன் சேர்தருமூதூர் புறவம்மே.

பொழிப்புரை :

எங்கும் பரவிய பழமையான புகழை உடைய தேவர்களின் கடல் போன்ற படையை, ஊழித்தீப்போன்று அழிக்கும் தொழிலில் வல்ல இராவணனின் வலிய தோள்வலியை அக்காலத்தில் அழித்தருளி, அனைத்து உலகங்களையும் புரந்தருளும் வேந்தனாக விளங்கும் சிவபிரான் எழுந்தருளிய பழமையான ஊர் புறவமாகும்.

குறிப்புரை :

தேவர்களின் சேனைக்கடலை ஓட்டும் ஊழித்தீயைப் போல, சண்டைசெய்யும் இராவணனது தோள்வலியை வாட்டியவனது பதிபுறவம் என்கிறது. பௌவம் - கடல். துரக்கும் - ஓட்டும்.

பண் :

பாடல் எண் : 9

மீத்திகழண்டந் தந்தயனோடு மிகுமாலும்
மூர்த்தியை நாடிக் காணவொணாது முயல்விட்டாங்
கேத்தவெளிப்பா டெய்தியவன்ற னிடமென்பர்
பூத்திகழ்சோலைத் தென்றலுலாவும் புறவம்மே.

பொழிப்புரை :

மேலானதாக விளங்கும் உலகங்களைப் படைத்த பிரமனும், புகழால் மேம்பட்ட திருமாலும் அழலுருவாய் வெளிப்பட்ட சிவமூர்த்தியின் அடிமுடிகளைக்காண இயலாது தமது முயற்சியைக் கைவிட்டு ஏத்த, அவர்கட்குக் காட்சி தந்தருளிய சிவபிரானது இடம், மலர்கள் நிறைந்த சோலைகளில் தென்றல் வந்து உலாவும் புறவமாகும்.

குறிப்புரை :

அயனும் மாலும் அறியாத பெருமான் இடம் புறவம் என்கிறது. மூர்த்தியை - உருவங்கொண்ட இறைவனை.

பண் :

பாடல் எண் : 10

வையகநீர்தீ வாயுவும்விண்ணும் முதலானான்
மெய்யலதேர ருண்டிலையென்றே நின்றேதங்
கையினிலுண்போர் காணவொணாதான் நகரென்பர்
பொய்யகமில்லாப் பூசுரர்வாழும் புறவம்மே.

பொழிப்புரை :

மண், நீர், தீ, காற்று, விண் ஆகிய ஐம்பூதங்களில் நிறைந்து, அவற்றின் முதலாக விளங்கும் இறைவனாய், உண்மையல்லாதவற்றைப் பேசி உண்டு இல்லை என்ற உரைகளால் அத்தி நாத்தி எனக்கூறிக் கொண்டு தம் கைகளில் உணவேற்று உண்போராய சமணரும், புத்தரும் காண ஒண்ணாத சிவபிரானின் நகர், நெஞ்சிலும் பொய்யறியாத பூசுரர் வாழும் புறவமாகும்.

குறிப்புரை :

ஐம்பெரும் பூதமானவனும் புறச்சமயிகளால் பொருந்த ஒண்ணாதவனுமாகிய இறைவன் நகரம் புறவம் என்கின்றது. வையகம் - மண். உண்டு இலை என்று - அஸ்தி நாஸ்தி கூறி. பூசுரர் - அந்தணர்.

பண் :

பாடல் எண் : 11

பொன்னியன்மாடப் புரிசைநிலாவும் புறவத்து
மன்னியவீசன் சேவடிநாளும் பணிகின்ற
தன்னியல்பில்லாச் சண்பையர்கோன்சீர்ச் சம்பந்தன்
இன்னிசையீரைந் தேத்தவல்லோர்கட் கிடர்போமே.

பொழிப்புரை :

பொன்னால் இயன்ற மாடங்களின் மதில்கள் சூழ்ந்த, புறவம் என்னும் பதியில் நிலைபெற்று விளங்கும் சிவபிரானின் சேவடிகளை, நாள்தோறும் பணிந்து, சீவபோதம் அற்றுச் சிவபோதம் உடையவனாய்ப் போற்றும் சண்பையர் தலைவனாகிய புகழ்மிக்க ஞானசம்பந்தன், இன்னிசையோடு பாடிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடி ஏத்தவல்லவர்கட்கு, இடர் போகும்.

குறிப்புரை :

புறவத்து ஈசனை, இப்பதிகம் சொல்லி ஏத்தவல்லாருக்கு இடர்போம் என்கின்றது. தன்னியல்பில்லாச் சண்பையர் கோன் - சீவபோதமற்ற திருஞானசம்பந்தர்.
சிற்பி