திருக்கழுக்குன்றம்


பண் :குறிஞ்சி

பாடல் எண் : 1

தோடுடையானொரு காதிற்றூய குழைதாழ
ஏடுடையான் றலைகலனாக விரந்துண்ணும்
நாடுடையா னள்ளிருளேம நடமாடும்
காடுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

பொழிப்புரை :

ஒரு காதில் தோடும் பிறிதொரு காதில் தூய குழையும் தாழ்ந்து தொங்கத், தாமரை மலரில் தங்கும் பிரமனின் தலையோட்டை உண் கலனாகக் கொண்டு இரந்துண்ணும் நாடுகளை உடையவன். நள்ளிருள் யாமத்தில் மகிழ்வோடு சுடுகாட்டில் நடனம் ஆடுபவன். அத்தகையோன் விரும்பி உறையும் கோயில் திருக்கழுக்குன்றமாகும்.

குறிப்புரை :

ஒருகாதில் தோடுடையான், ஒருகாதில் குழைதாழ மலரும் அணிந்தவன், கபாலத்தில் இரந்துண்ணும் நாட்டையுடையவன், நள்ளிருளில் நடமாடுதற்குரிய காட்டையுடையவன். அத்தகைய இறைவன் காதலிக்கும் இடம் கழுக்குன்று என்கின்றது. ஏடு - மலர். நள்ளிருள் - நடு இராத்திரி. ஏமம் - யாமம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 2

கேணவல்லான் கேழல்வெண்கொம்பு குறளாமை
பூணவல்லான் புரிசடைமேலொர் புனல்கொன்றை
பேணவல்லான் பெண்மகள்தன்னை யொருபாகம்
காணவல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

பொழிப்புரை :

திருமாலாகிய பன்றியினது வெண்மையான கொம்பை அகழ்ந்து அணியவல்லவன். வாமனனாக அவதரித்த திருமாலின் கூர்மாவதார ஆமையோட்டினை அணிகலனாகக் கோத்துப் பூணவல்லவன். முறுக்கிய சடைமுடிமேல் ஒப்பற்ற கங்கை, கொன்றை மாலை ஆகியவற்றை விரும்பி அணிபவன். பெண்ணின் நல்லவளான உமையம்மையைத் தன் திருமேனியின் ஒரு பாகமாகக் காணுமாறு செய்தருளியவன். அத்தகையோன் காதல் செய்யும் கோயில் திருக்கழுக்குன்றமாகும்.

குறிப்புரை :

பன்றிக்கொம்பைக் கேணவல்லவனும், ஆமையோட்டைப் பூணவல்லவனும், கொன்றைமாலையணிபவனும், உமையையொருபாகம் உடையவனும் ஆகிய இறைவன் கோயில்கழுக்குன்று என்கின்றது. கேண - சிதைக்க. கேழல் - பன்றி. குறள் ஆமை - சிறிய ஆமை. ஈண்டு அதன் ஓட்டினைக் குறிக்கின்றது.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 3

தேனகத்தார் வண்டதுவுண்ட திகழ்கொன்றை
தானகத்தார் தண்மதிசூடித் தலைமேலோர்
வானகத்தார் வையகத்தார்கள் தொழுதேத்தும்
கானகத்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

பொழிப்புரை :

தேனை அகத்தே இருந்து வண்டுகள் உண்ட, விளங்கிய கொன்றை மாலையைச் சூடிய தலையில் மதியைச் சூடி, வானகத்தவரும், வையகத்தவரும் தொழுதேத்தும் வண்ணம் சுடுகாட்டைத் தனக்கு இடமாகக் கொண்ட இறைவன் விரும்பி உறையும் கோயில் திருக்கழுக்குன்றம்.

குறிப்புரை :

கொன்றையையும், மதியையும் அணிந்து விண்ணவரும் மண்ணவரும் துதிக்கநின்ற இறைவன் இடம் இது என்கின்றது. தேன் அகத்து ஆர் வண்டு - தேனைப் பூவினகத்தில் இருந்து உண்ணும் வண்டு. கொன்றை தான் நக தார் தண்மதிசூடி - கொன்றை மலர, அம்மாலையைத் தண் பிறையோடு சூடி. கானகத்தான் - காட்டில் உறைபவன்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 4

துணையல்செய்தான் றூயவண்டியாழ்செய் சுடர்க்கொன்றை
பிணையல்செய்தான் பெண்ணினல்லாளை யொருபாகம்
இணையல்செய்யா விலங்கெயின்மூன்று மெரியுண்ணக்
கணையல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

பொழிப்புரை :

வண்டுகள் யாழ்போல் ஒலித்து மொய்க்கும் தூய ஒளி நிறைந்த கொன்றை மாலையை அணிந்தவனும், பெண்ணின் நல்லவளான உமையம்மையைக்கூடி அவளைத்தன் உடலில் ஒரு பாகமாகப் பிணைத்திருப்பவனும், தன்னோடு இணைந்து வாராத புரங்கள் மூன்றையும் எரி உண்ணுமாறு கணையை விடுத்தவனுமாகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில், கழுக்குன்றம் ஆகும்.

குறிப்புரை :

கொன்றையணிந்து, உமையை ஒருபாகத்து வைத்து, திரிபுரமெரித்த இறைவன் இடம் இது என்கின்றது. துணையல் - இரண்டிரண்டாகச் சேர்த்துக் கட்டும் மாலை. பிணையல் - புணர்தல். இணையல் - நட்புக்கொள்ளல். கணையல் செய்தான் - அம்பெய்தான். நான்கு அடிகளிலும் அல் சாரியை.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 5

பையுடைய பாம்பொடுநீறு பயில்கின்ற
மெய்யுடையான் வெண்பிறைசூடி விரிகொன்றை
மையுடைய மாமிடற்றண்ணன் மறிசேர்ந்த
கையுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

பொழிப்புரை :

நச்சுப் பையையுடைய பாம்போடு திருநீறு அணிந்த திருமேனியை உடையவனும், வெண்பிறையையும், விரிந்த கொன்றையையும் முடியில் சூடியவனும், விடம் பொருந்தியமிடற்றினை உடைய தலைமையாளனும், மானேந்திய கையை உடையவனுமாகிய சிவபிரான் விரும்பி உறையும் கோயில் கழுக்குன்றம் ஆகும்.

குறிப்புரை :

அரவும் திருநீறும் பழகும் திருமேனியுடையவனும், பிறை கொன்றை இவற்றையணிந்த நீலகண்டனும், மானேந்திய கையையுடையவனும் ஆகிய சிவபெருமான் இடம் கழுக்குன்று என்கின்றது. பை - படம். மை - விடம்.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 6

வெள்ளமெல்லாம் விரிசடைமேலோர் விரிகொன்றை
கொள்ளவல்லான் குரைகழலேத்துஞ் சிறுத்தொண்டர்
உள்ளமெல்லா முள்கிநின்றாங்கே யுடனாடும்
கள்ளம்வல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

பொழிப்புரை :

விரிந்த சடைமுடியின்மேல் வெள்ளமாகப் பெருகி வந்த கங்கையின் அனைத்து நீரையும் விரிந்த கொன்றை மாலையோடு சூடியிருப்பவனும், தனது ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடிகளை ஏத்தித் துதிக்கும் சிறிய தொண்டர்களின் உள்ளமெல்லாம் நிறைந்து, அவர்கள் தியானித்து நின்று ஆடத்தானும் உடன் ஆடும் கள்ளம் வல்லவனுமாகிய, சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றம் ஆகும்.

குறிப்புரை :

விரிசடைமேல் கங்கையையும் கொன்றையையும் சூட வல்லவனும், அடிபணியும் அடியார் உள்ளங்களில் எல்லாம் உடனாய் நின்று ஆடும் கள்ளனுமாகிய பெருமான் காதலிக்கும் கோயில் கழுக்குன்று என்கின்றது. வெள்ளம் - கங்கை. குரை கழல் - ஒலிக்கும் வீரக்கழல். உள்கி - எண்ணி.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 7

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 8

ஆதல்செய்தா னரக்கர்தங்கோனை யருவரையின்
நோதல்செய்தா னொடிவரையின்கண் விரலூன்றிப்
பேர்தல்செய்தான் பெண்மகள்தன்னோ டொருபாகம்
காதல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

பொழிப்புரை :

அரக்கர் கோனை அரிய கயிலை மலையின்கீழ் அகப்படுத்தி, நொடிப்பொழுதில் கால் விரலை ஊன்றி, அவனை நோதல் செய்தவனும், பிறகு அவனுக்கு ஆக்கம் வழங்கியவனும், பெண்மகளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு காதல் செய்தவனுமாகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றம் ஆகும்.

குறிப்புரை :

கயிலையைத் தூக்கிய இராவணனை அழியச் செய்தவனும், உமையை ஒரு பாகத்திருத்திக் காதல் செய்தவனும் ஆகிய இறைவன் இடம் இது என்கின்றது. நொடிவரை - நொடிப்பொழுது.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 9

இடந்தபெம்மா னேனமதாயு மனமாயும்
தொடர்ந்தபெம்மான் றூமதிசூடி வரையார்தம்
மடந்தைபெம்மான் வார்கழலோச்சிக் காலனைக்
கடந்தபெம்மான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

பொழிப்புரை :

அடிமுடி காணப் பன்றி உருவோடு நிலத்தை அகழ்ந்து சென்ற திருமாலும், அன்னமாய்ப் பறந்து சென்ற நான்முகனும், தொடர்ந்த பெருமானாய், தூய மதியை முடியிற் சூடியவன், மலைமகளின் தலைவன், வார்கழலணிந்த திருவடியை உயர்த்திக் காலனைக் காய்ந்தவன் ஆகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றம் ஆகும்.

குறிப்புரை :

திருமால் பன்றியாய்த் தோண்டிக் காணவும், பிரமன் அன்னமாய்ப் பறந்து தொடரவும் நின்ற பெருமான், காலனைக் கடந்த பெருமான் காதல்செய்த இடம் இது என்கின்றது. இடந்த - தோண்டிய. ஏனம் - பன்றி. கடந்த - வென்ற.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 10

தேயநின்றான் றிரிபுரங்கங்கை சடைமேலே
பாயநின்றான் பலர்புகழ்ந்தேத்த வுலகெல்லாம்
சாயநின்றான் வன்சமண்குண்டர் சாக்கீயர்
காயநின்றான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.

பொழிப்புரை :

முப்புரங்களை அழியுமாறு செய்தவனும், பெருகிவந்த கங்கை தன் சடை மேல் பாய நின்றவனும், பலரும் புகழ்ந்து போற்ற உலகனைத்தும் ஊழி இறுதியில் அழியுமாறு நின்றவனும், வலிய சமண் குண்டர்களும், புத்தர்களும் கெடுமாறு நின்றவனும் ஆகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றமாகும்.

குறிப்புரை :

திரிபுரம் தேயவும், கங்கை சடைமேலே பாயவும் நின்ற பெருமான், புறச்சமயிகள் காயநின்றவன் காதல் செய்யுமிடம் கழுக்குன்று என்கின்றது. தேய - அழிய. சாய - கெட. சாக்கியர் என்பது சந்த நோக்கி நீண்டது.

பண் :குறிஞ்சி

பாடல் எண் : 11

கண்ணுதலான் காதல்செய்கோயில் கழுக்குன்றை
நண்ணியசீர் ஞானசம்பந்தன் றமிழ்மாலை
பண்ணியல்பாற் பாடியபத்து மிவைவல்லார்
புண்ணியராய் விண்ணவரோடும் புகுவாரே.

பொழிப்புரை :

நெற்றியில் கண்ணுடையவனாகிய சிவபிரான் காதல் செய்யும் கோயிலாகிய திருக்கழுக்குன்றத்தைப் புகழ் பொருந்திய ஞானசம்பந்தன் பண் அமைதியோடு பாடிய தமிழ் மாலையாகிய பத்துப் பாடல்களையும் பாடிப் போற்றுபவர் புண்ணியராய்த் தேவர்களோடு வானுலகம் புகுவர்.

குறிப்புரை :

ஞானசம்பந்தன் பாடிய கழுக்குன்றப் பதிகத்தைப் பண்ணியல்பால் பாடிய பத்தும் வல்லவர் புண்ணியராய்த் தேவரோடு உடன் உறைவர் என்கின்றது.
சிற்பி