திருவூறல்


பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1

மாறி லவுணரரணம் மவைமாயவோர் வெங்கணையா லன்று
நீறெழ வெய்தவெங்கள் நிமல னிடம்வினவில்
தேற லிரும்பொழிலுந் திகழ்செங்கயல் பாய்வயலுஞ் சூழ்ந்த
ஊற லமர்ந்தபிரா னொலியார்கழ லுள்குதுமே.

பொழிப்புரை :

தமக்கு ஒப்பாரில்லாத வலிய அவுணர்களின் அரணங்களாக விளங்கிய முப்புரங்களை மறையுமாறு முற்காலத்தில் ஒரு வெங்கணையால் நீறுபடச் செய்தழித்த எங்கள் நிமலன் ஆகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள இடம், யாதென வினவில், தேன் நிறைந்த பெரிய பொழில்களும், விளங்கிய செங்கயல்கள் பாயும் வயல்களும், சூழ்ந்துள்ள திருவூறலாகும். அப்பெருமானுடைய ஒலிக்கின்ற கழலணிந்த திருவடிகளை நாம் தியானிப்போம்.

குறிப்புரை :

திரிபுரம் எரித்த சிவபெருமான் இடம் யாதென்று வினாவினால், அது திருஊறலாம்; அங்கு எழுந்தருளியுள்ள இறைவன் கழலைத் தியானிப்போம் என்கின்றது. அரணம் - கோட்டை. தேறல் - தேன்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 2

மத்த மதக்கரியை மலையான்மக ளஞ்சவன்று கையால்
மெத்த வுரித்தவெங்கள் விமலன் விரும்புமிடம்
தொத்தல ரும்பொழில்சூழ் வயல்சேர்ந்தொளிர் நீலநாளுந் நயனம்
ஒத்தல ருங்கழனித் திருவூறலை யுள்குதுமே.

பொழிப்புரை :

மதம் பொருந்திய பெரிய தலையையுடைய யானையை மலைமகள் அஞ்ச, முற்காலத்தில் தன் கைகளால் மெல்ல உரித்த எங்கள் விமலனாகிய சிவபெருமான் விரும்பும் இடம் யாதென வினவில், பூங்கொத்துக்கள் விரிந்துள்ள பொழில்கள் சூழ்ந்ததும், வயல்களில் நாள்தோறும் முளைத்து விளங்கிய நீல மலர்கள் மங்கையரின் கண்களையொத்து மலரும் வயல்வளங்களை உடையதுமான திருவூறலாகும். அத்தலத்தை நாம் நாள்தோறும் நினைவோமாக.

குறிப்புரை :

யானையை உரித்த இறைவன் விரும்பும் இடம் ஊறல்; அதனை உள்குவோம் என்கின்றது. மெத்த - மிக. தொத்து - கொத்து. நயனம் - கண்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 3

ஏன மருப்பினொடு மெழிலாமையும் பூண்டழகார் நன்றும்
கானமர் மான்மறிக்கைக் கடவுள் கருதுமிடம்
வான மதிதடவும் வளர்சோலைகள் சூழ்ந்தழகார் நம்மை
ஊன மறுத்தபிரான் றிருவூறலை யுள்குதுமே.

பொழிப்புரை :

பன்றிக் கொம்புகளோடு ஆமையோட்டையும் அணிகலனாக அழகுறப் பூண்டு, நல்ல காட்டில் வாழும் மான்கன்றைத் தன் கையில் ஏந்தியுள்ள கடவுளாகிய சிவபெருமான் விரும்புமிடம், வானத்தின் கண் உள்ள மதி தோயுமாறு வளர்ந்துள்ள சோலைகளால் அழகுறச் சூழப்பட்டு நமது பிறவிப் பிணியைப் போக்க வல்லவனாய்ச் சிவபிரான் எழுந்தருளிய திருவூறலாகும். அதனை நாம் நாள்தோறும் நினைவோமாக.

குறிப்புரை :

பன்றிக் கொம்பு, ஆமையோடு இவற்றை அணிந்து மான் ஏந்திய கடவுள் இடம் ஊறல்; அதனைத் தியானிப்போம் என்கின்றது. ஏனம் - பன்றி. எழில் - அழகு. மான்மறி - மான்குட்டி. ஊனம் - குறை.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 4

நெய்யணி மூவிலைவே னிறைவெண்மழு வும்மனலு மன்று
கையணி கொள்கையினான் கடவுள் ளிடம்வினவில்
மையணி கண்மடவார் பலர்வந் திறைஞ்சமன்னி நம்மை
உய்யும் வகைபுரிந்தான் றிருவூறலை யுள்குதுமே.

பொழிப்புரை :

நெய் பூசப்பெற்ற மூவிலை வேல், ஒளிநிறைந்த வெண்மழு, அனல் ஆகியவற்றைத் தன் கைகளில் அணியும் கோட்பாட்டினை உடைய கடவுள் விரும்பும் இடம் யாதென வினவுவீராயின், மை பூசப் பெற்ற கண்களையுடைய மடவார் பலர் வந்து வழிபட நிலையாகத் தங்கி, நாம் உய்யும் வகையில் எழுந்தருளி அருள் புரியும் திருவூறலாகும். அத்தலத்தை நாம் நாள்தோறும் நினைவோமாக.

குறிப்புரை :

திரிசூலம், மழு, அனல் இவற்றைக் கையில் ஏந்திய கடவுள் இடம் திருஊறல் என்கின்றது. நெய்யணி - நெய் பூசப்பெற்ற. ஆயுதங்கள் துருப்பிடிக்காவாறு நெய் பூசிவைத்தல் மரபு. உய்யும் வகை - துன்பத்தினின்று ஈடேறும் வகை.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 5

எண்டிசை யோர்மகிழ வெழின்மாலையும் போனகமும் பண்டு
சண்டி தொழவளித்தான் அவன்றாழு மிடம்வினவில்
கொண்டல்கள் தங்குபொழிற் குளிர்பொய்கைகள் சூழ்ந்து நஞ்சை
உண்டபி ரானமருந் திருவூறலை யுள்குதுமே.

பொழிப்புரை :

எட்டுத் திசைகளில் உள்ளாரும் கண்டு மகிழுமாறு தன்னைத் தொழுத சண்டீசர்க்கு அழகிய மாலை, உணவு முதலியவற்றை முற்காலத்தே அளித்தருளியவனும், கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு தேவர்களைக் காத்தவனுமாகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம் யாதென வினவில், மேகங்கள் தங்கும் பொழில்களும், குளிர்ந்த பொய்கைகளும் சூழ்ந்து விளங்கும் திருவூறலாகும். அதனை நாம் நாள்தோறும் நினைவோமாக.

குறிப்புரை :

தான் சாத்திய மாலையும் உண்ட உணவும், சண்டே சுரர்க்கு அருள் செய்தவன் இடம் திருஊறல் என்கின்றது போனகம் - உணவு. சண்டி - சண்டேசுவரர். கொண்டல்கள் - மேகங்கள்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 6

* * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * *

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 7

* * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * *

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 8

கறுத்த மனத்தினொடுங் கடுங்காலன்வந் தெய்துதலுங் கலங்கி
மறுக்குறு மாணிக்கருள மகிழ்ந்தா னிடம்வினவில்
செறுத்தெழு வாளரக்கன் சிரந்தோளு மெய்யுந்நெரிய வன்று
ஒறுத்தருள் செய்தபிரான் றிருவூறலை யுள்குதுமே.

பொழிப்புரை :

சினம் பொருந்திய மனத்தோடு கூடிய கொடிய காலன் தம் வாழ்நாளைக் கவரவந்து அடைதலைக் கண்டு கலங்கி மயங்கிய மார்க்கண்டேயனுக்கு அருள் புரிந்தவனும், தன்னை மதியாது சினந்து வந்த வாள்வல்ல இராவணனின் தலை, தோள், உடல் ஆகியனவற்றை முற்காலத்தில் நெரித்து அருள் செய்தவனுமாகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம் யாதென வினவில் திருவூறலாகும். அதனை நாம் நாள்தோறும் நினைவோமாக.

குறிப்புரை :

மார்க்கண்டேயற்கு அருள்செய்த இறைவன் இடம் திருஊறல் என்கின்றது. கறுத்த - கோபித்த. மறுக்குறும் - மயங்கிய. மாணி - பிரமசாரியாகிய மார்க்கண்டன். செறுத்து - கோபித்து. அரக்கன் என்றது இராவணனை. ஒறுத்து - தண்டித்து.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 9

நீரின் மிசைத்துயின்றோ னிறைநான் முகனுமறியா தன்று
தேரும் வகை நிமிர்ந்தான் அவன்சேரு மிடம்வினவில்
பாரின் மிசையடியார் பலர்வந் திறைஞ்சமகிழ்ந் தாகம்
ஊரு மரவசைத்தான் றிருவூறலை யுள்குதுமே.

பொழிப்புரை :

கடல்நீரின் மேல் துயில் கொள்வோனாகிய திருமாலும் ஞானத்தினால் நிறைவுபெற்ற நான்முகனும் அறிய முடியாமல் தேடி ஆராயுமாறு நிமிர்ந்து நின்றவனும், மண்ணுலகில் அடியவர் பலரும் வந்து வணங்க மகிழ்ந்து ஊரும் பாம்பினை இடையில் கட்டியவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் யாதென வினவில் திருவூறலாகும். அதனை நாமும் உள்குவோமாக.

குறிப்புரை :

அயனும் மாலும் அறியாத வண்ணம் அக்கினி மலையாய் நிமிர்ந்தவன் இடம் திருஊறல் என்கின்றது. நீரின் மிசைத் துயின்றோன் - திருமால். தேரும் வகை - ஆராயும் வகை.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 10

பொன்னியல் சீவரத்தார் புளித்தட்டையர் மோட்டமணர் குண்டர்
என்னு மிவர்க்கருளா வீசனிடம் வினவில்
தென்னென வண்டினங்கள் செறியார்பொழில் சூழ்ந்தழகார் தன்னை
உன்ன வினைகெடுப்பான் றிருவூறலை யுள்குதுமே.

பொழிப்புரை :

பொன்போன்ற மஞ்சட் காவியுடை அணிந்த புத்தர்கள், புளிப்பேறிய காடியைத் தட்டில் இட்டு உண்பவர்கள் ஆகிய அறியாமையை உடைய சமண் குண்டர்கள் என்னும் இவர்கட்கு அருள் புரியாதவனும், தன்னை நினைவார்களின் வினைகளைக் கெடுப்பவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் யாதென வினவில் வண்டு இனங்கள் தென்னென்ற ஓசையோடு செறிந்த பொழில்கள் சூழ்ந்த அழகிய திருவூறலாகும். அதனை நாமும் நினைவோமாக.

குறிப்புரை :

புத்தருக்கும் சமணருக்கும் அருள்செய்யாத ஈசன் இடம் திருஊறல் என்கின்றது. பொன்னியல் சீவரத்தார் - பொன் போன்ற நிறத்தினையுடைய உடை அணிந்தவர்கள். புளித் தட்டையர் - புளித்த நீரோடு கூடிய பழஞ்சோற்றைத் தட்டில் இட்டு உண்பவர், தென்என: ஒலிக்குறிப்பு, தன்னை உன்ன வினைகெடுப்பான் - தன்னைத் தியானிப்பவர்களின் இரு வினையைக் கெடுப்பவன்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 11

கோட லிரும்புறவிற் கொடிமாடக் கொச்சையர்மன் மெச்ச
ஓடு புனல்சடைமேற் கரந்தான் றிருவூறல்
நாட லரும்புகழான் மிகுஞானசம் பந்தன்சொன்ன நல்ல
பாடல்கள் பத்தும்வல்லார் பரலோகத் திருப்பாரே.

பொழிப்புரை :

செங்காந்தட் செடிகள் நிறைந்த பெரிய புதர்கள் விளங்குவதும் கொடிகள் கட்டிய மாட வீடுகளைக் கொண்டதுமான கொச்சையம்பதிக்குத் தலைவனும், பெருகிவரும் கங்கையைச் சடைமிசைக் கரந்தவனுமாகிய சிவபிரானது திருவூறலைப் பற்றி நாடற் கரிய புகழால் மிக்க ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் வல்லவர் பரலோகத்திருப்பர்.

குறிப்புரை :

திருஊறலைப் பற்றிய பாடல் பத்தையும் வல்லவர் பரலோகத்து இருப்பார் என்கின்றது. கோடல் - செங்காந்தள். இரும் புறவில் - பெரிய காடுகளை உடைய. நாடல் அரும் - பிறரால் தேடற்கரிய.
சிற்பி