திருக்கொடிமாடச்செங்குன்றூர்


பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1

வெந்தவெண் ணீறணிந்து விரிநூல் திகழ்மார்பில் நல்ல
பந்தண வும்விரலா ளொருபாக மமர்ந்தருளிக்
கொந்தண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
அந்தண னைத்தொழுவார் அவல மறுப்பாரே.

பொழிப்புரை :

விரிக்கப் பெற்ற பூணுநூல் திகழும் திருமார் பினனாய், நன்றாக வெந்த திருவெண்ணீற்றை அணிந்து, பந்து பொருந்திய கைவிரல்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு, பூங்கொத்துக்கள் நிறைந்த பொழில் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய அழகிய தண்ணளியை உடைய சிவபெருமானைத் தொழுவார் துன்பங்கள் நீங்கப் பெறுவர்.

குறிப்புரை :

பூணுநூல் திகழ்கின்ற திருமார்பில் வெண்ணீறணிந்து உமையொருபாகமாகக் கொடிமாடச் செங்குன்றூரில் நின்ற அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பார் என்கின்றது. அணவும் - கலக்கும். கொந்து - கொத்து.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 2

அலைமலி தண்புனலோ டரவஞ் சடைக்கணிந் தாகம்
மலைமகள் கூறுடையான் மலையா ரிளவாழைக்
குலைமலி தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
தலைமக னைத்தொழுவார் தடுமாற் றறுப்பாரே.

பொழிப்புரை :

அலைகள் நிறைந்த குளிர்ந்த கங்கை நதியோடு பாம்பினையும், சடையின்கண் அணிந்து, தனது திருமேனியில் மலைமகளை ஓர் பாகமாகக் கொண்டுள்ளவனும், மலையின்கண் வளரும் குலைகள் நிறைந்துள்ள இளவாழை மரங்களை உடைய குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்து விளங்கும் கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய தலைவனுமாகிய சிவபிரானைத் தொழுவார் தடுமாற்றம் தவிர்வர்.

குறிப்புரை :

கங்கை, பாம்பு இவற்றைச் சடைக்கணிந்து மலைமகள் கூறுடையனாக எழுந்தருளியிருக்கின்ற செங்குன்றூர்த் தலைவனைத் தொழுவார் தடுமாற்றம் தகர்ப்பர் என்கின்றது. அரவம் - பாம்பு.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 3

பாலன நீறுபுனை திகழ்மார்பிற் பல்வளைக்கை நல்ல
ஏல மலர்க்குழலா ளொருபாக மமர்ந்தருளிக்
கோல மலர்ப்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மல்கும்
நீலநன் மாமிடற்றான் கழலேத்தல் நீதியே.

பொழிப்புரை :

பால் போன்று வெள்ளிய திருநீற்றைப் புனைந்து விளங்கிய மார்பினோடு பல்வகை வளையல்களையும் பாங்குறப்புனைந்த கையினளாய், மணம் கமழும் நறுமலர்களைச் சூடிய கூந்தலினளாகிய உமையம்மை ஒரு பாகமாக அமைந்த கோலத்தோடு அழகிய மலர்கள் பூத்த பொழில்கள் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய நீல நன்மாமிடற்றானின் கழலணிந்த திருவடிகளை ஏத்துதலே நீதியாகும்.

குறிப்புரை :

நீறுபூசிய திருமேனியோடு மலைமகள் ஒருபாகமாக எழுந்தருளிய செங்குன்றூர் நீலகண்டன் திருவடியைத் தொழுதலே நீதி என்கின்றது. ஏலம் - மயிர்ச்சாந்து. நீலநன்மாமிடற்றான் - நீலகண்டன். நன்மிடறு என்றது தேவர்க்கு நன்மை செய்தலின்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 4

வாருறு கொங்கைநல்ல மடவாள் திகழ்மார்பி னண்ணும்
காருறு கொன்றையொடுங் கதநாகம் பூண்டருளிச்
சீருறு மந்தணர்வாழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
நீருறு செஞ்சடையான் கழலேத்தல் நீதியே.

பொழிப்புரை :

கச்சணிந்த தனங்களை உடைய அழகிய உமையம்மை விளங்கும் திருமார்பின்கண் கார்காலத்தே மலரும் கொன்றை மலர் மாலையோடு சினம் பொருந்திய பாம்பை அணிகலனாகப் பூண்டு சிறப்புப் பொருந்திய அந்தணர்கள் வாழும் கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய கங்கையணிந்த செஞ்சடையனாய் விளங்கும் சிவபிரானின் கழலணிந்த திருவடிகளை ஏத்துதல் நீதியாகும்.

குறிப்புரை :

உமாதேவி விளங்குகின்ற, திருமார்பில் கொன்றை மாலையையும் பாம்பு அணியையும் பூண்டு வீற்றிருக்கும் செங்குன்றூர் நாதன் சேவடியைத் துதித்தல் நீதியாம் என்கின்றது. வார் - கச்சு. கதம் - கோபம். சீர் - புகழ்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 5

பொன்றிக ழாமையொடு புரிநூல் திகழ்மார்பி னல்ல
பன்றியின் கொம்பணிந்து பணைத்தோளியோர் பாகமாகக்
குன்றன மாளிகைசூழ் கொடிமாடச் செங்குன்றூர் வானில்
மின்றிகழ் செஞ்சடையான் கழலேத்தல் மெய்ப்பொருளே.

பொழிப்புரை :

திருமகள் விளங்கும் திருமாலாகிய ஆமையினது ஓட்டினோடு முப்புரிநூல் திகழும் மார்பின்கண் நல்ல பன்றியின் கொம்புகளையும் அணிந்து மூங்கில் போன்ற தோளினளாகிய உமையம்மை ஒரு பாகமாக விளங்கக் குன்றுகள் போன்ற மாளிகைகள் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் வானில் திகழும் மின்னல் போன்று விளங்கும் செஞ்சடையானின் கழலணிந்த திருவடிகளை ஏத்துதலே மெய்ப்பொருளாகும்.

குறிப்புரை :

ஆமையோடும் பூணூலும் விளங்கும் மார்பில், பன்றிக் கொம்பையும் அணிந்த மாதொருபாதியனான செங்குன்றூர் நாதன் கழலேத்துதலே மெய்ப்பொருள் என்கின்றது. பொன் திகழ் ஆமை ஓடு - திருமகள் விளங்குகின்ற திருமாலாகிய ஆமையின் ஓடு. பணை - மூங்கில்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 6

ஓங்கிய மூவிலைநற் சூல மொருகையன் சென்னி
தாங்கிய கங்கையொடு மதியஞ் சடைக்கணிந்து
கோங்கண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்த
பாங்கன தாள்தொழுவார் வினையாய பற்றறுமே.

பொழிப்புரை :

மேம்பட்ட மூவிலை வடிவான நல்ல சூலத்தை ஒரு கையில் ஏந்தியவனாய்த் திருமுடியில் தடுத்த கங்கையோடு, பிறையையும் சடையின்கண் அணிந்து, தேன் பொருந்திய பொழில்கள் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் பொருந்திய தோழனாய் விளங்கும் சிவபெருமானின் திருவடிகளைத் தொழுபவர்களின் வினைகள் வேர்ப்பற்றோடு நீங்கும்.

குறிப்புரை :

சூலமேந்திய கையனும், கங்கையும் மதியமும் சூடியவனும் ஆகிய செங்குன்றூர் நாதன் தாள் தொழுவாரது வினைப்பற்று நீங்கும் என்கின்றது. ஓங்கிய - சிறந்த. கோங்கு அணவும் - கோங்க மரங்கள் கலந்த. பாங்கன தாள் - தோழமை பூண்ட இறைவனுடைய தாள்கள்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 7

நீடலர் கொன்றையொடு நிமிர்புன் சடைதாழ வெள்ளை
வாட லுடைதலையிற் பலிகொள்ளும் வாழ்க்கையனாய்க்
கோடல் வளம்புறவிற் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
சேடன தாள்தொழுவார் வினையாய தேயுமே.

பொழிப்புரை :

கொத்தாக நீண்டு மலர்கின்ற கொன்றை மலர்களோடு நிமிர்ந்து தோன்றும் சிவந்த சடைகள் தாழ்ந்து தொங்க, வெண்மையான புலால் நீங்கிய தலையோட்டில் பலி ஏற்றுண்ணும் வாழ்க்கையனாய், வெண்காந்தள் மலர்ந்த புதர்களை உடைய வளமான முல்லை நிலங்களால் சூழப்பட்ட கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய பெருமை உடையோனின் திருவடிகளைத் தொழுபவர்களின் வினைகள் தேய்ந்தொழியும்.

குறிப்புரை :

கொன்றை மாலையோடு சடைதாழ, உலர்ந்த தலையிற் பலிகொள்ளும் செங்குன்றூர்நாதன் தாள் தொழுவாரது வினைதேயும் என்கின்றது. நீடு அலர் கொன்றை - மாலையாக நீண்டு மலர்கின்ற கொன்றை. வாடல் - உலர்தல். கோடல் - செங்காந்தள். சேடன் - பெருமையுடையவன்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 8

மத்தநன் மாமலரும் மதியும்வளர் கொன்றையுடன் துன்று
தொத்தலர் செஞ்சடைமேல் துதைய வுடன்சூடிக்
கொத்தலர் தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய
தத்துவ னைத்தொழுவார் தடுமாற் றறுப்பாரே.

பொழிப்புரை :

செஞ்சடைமீது நல்ல ஊமத்த மலரையும் இள மதியையும் கொத்தாக அலரும் கொன்றை மலருடன் ஒருசேர நெருங்கச்சூடிப் பூங்கொத்துக்கள் அலரும் தண்ணிய பொழில் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய தத்துவனைத் தொழுவார் தடுமாற்றங்கள் இலராவர்.

குறிப்புரை :

ஊமத்தம் பூவும், பிறையும், கொன்றையும் செஞ்சடை மேற்சூடிய தத்துவனைத் தொழுவார் தடுமாற்றம் அறுப்பார் என்கின்றது. துன்று - நெருங்கிய. தொத்து - கொத்து. துதைய - செறிய. தத்துவன் - மெய்ப்பொருளானவன்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 9

செம்பொனின் மேனியனாம் பிரமன்றிரு மாலுந்தேட நின்ற
அம்பவ ளத்திரள்போ லொளியாய வாதிபிரான்
கொம்பண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் மேய
நம்பன தாடொழுவார் வினையாய நாசமே.

பொழிப்புரை :

சிவந்த பொன்போன்ற மேனியினன் ஆகிய பிரமனும் திருமாலும் தேடுமாறு பவளத்திரள்போல ஒளி வடிவினனாய் ஓங்கி நின்ற மூலகாரணனும், கொம்புகளாகக் கிளைத்து நெருங்கிய மரங்கள் நிறைந்த பொழில் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளியவனுமாகிய சிவபிரானின் திருவடிகளைத் தொழுபவர்களின் வினைகள் நாசமாகும்.

குறிப்புரை :

அயனும் மாலும் தேடச் செம்பவளத்திரள்போல தீவடிவாய ஆதிப்பிரானது தாள்தொழுவார் வினைகள் யாவும் நாசமாம் என்கின்றது. கொம்பு அணவும் பொழில் - கொம்புகள் செறிந்த சோலை. நம்பன் - சிவன்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 10

போதியர் பிண்டியரென் றிவர்கள் புறங்கூறும் பொய்ந்நூல்
ஓதிய கட்டுரைகேட் டுழல்வீர் வரிக்குயில்கள்
கோதிய தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
வேதிய னைத்தொழநும் வினையான வீடுமே.

பொழிப்புரை :

போதி மரத்தை வழிபடும் புத்தர், அசோக மரத்தை வழிபடும் சமணர் ஆகியோர் பொய்ந்நூல்களை மேற்கோள்களாகக் காட்டிக் கூறும் புனைந்துரைகளைக் கேட்டு அவற்றை மெய்யெனக் கருதி உழல்பவர்களே!, இசை பாடும் குயில்கள் கோதிய தளிர்களோடு கூடிய தண்பொழில் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய வேதம் விரித்த சிவபிரானைத் தொழுமின்; நம் வினைகள் யாவும் அழியும்.

குறிப்புரை :

புத்தர் சமணர் இவர்களுடைய புறவுரை கேட்டு உழலுகின்ற மக்களே! செங்குன்றூர் வேதியனைத் தொழ உங்கள் வினையாயின அழியும் என்கின்றது. போதியர் - புத்தர். பிண்டியர் - சைனர். கட்டுரை - கட்டிச் சொன்ன பொய்யுரை. கோதிய - மூக்காற்கோதியுண்ட. வேதியன் - வேதங்களை அருளிச்செய்தவன். வீடும் - அழியும்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 11

அலைமலி தண்புனல்சூழ்ந் தழகார் புகலிந்நகர் பேணும்
தலைமக னாகிநின்ற தமிழ்ஞான சம்பந்தன்
கொலைமலி மூவிலையான் கொடிமாடச் செங்குன்றூ ரேத்தும்
நலமலி பாடல்வல்லார் வினையான நாசமே.

பொழிப்புரை :

அலைகள் மிகுந்த குளிர்ந்த நீரால் சூழப்பட்ட அழகிய புகலி நகரை விரும்பும் தலைமகனாகிய தமிழ் ஞானசம்பந்தன், கொல்லும் தொழிலில் வல்ல மூன்று இலை வடிவான சூலத்தைக் கையில் ஏந்தியவனாய சிவபிரான் எழுந்தருளிய கொடிமாடச் செங்குன்றூரைப் போற்றிப் பாடிய, நலம் மிக்க, இப்பதிகப் பாடல்களை ஓத, வல்லவர்களின் வினைகள் நாசமாகும்.

குறிப்புரை :

ஞானசம்பந்தப் பெருமான் செங்குன்றூர் நாதரை ஏத்திய நலமிகுந்த பாடல் வல்லார் வினைகள் நாசமாம் எனப்பயன் கூறுகின்றது. புகலி - சீகாழி. கொலைமலிமூவிலையான் - கொலைபுரியும் முத்தலைச் சூலம் ஏந்தியவன்.
சிற்பி