திருவிடைமருதூர்


பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1

மருந்தவன் வானவர் தானவர்க்கும்
பெருந்தகை பிறவினொ டிறவுமானான்
அருந்தவ முனிவரொ டால்நிழற்கீழ்
இருந்தவன் வளநக ரிடைமருதே.

பொழிப்புரை :

பிறவி நோய் தீர்க்கும் மருந்தாக விளங்குபவனும், தேவர்கட்கும் அசுரர்கட்கும் தலைவனாய் விளங்குபவனும், உயிர்களின் பிறப்பு இறப்பிற்குக் காரணமானவனும், அரிய தவம் உடைய சனகாதி முனிவர்களோடு கல்லால மரநிழலில் எழுந்தருளியிருந்து அறம் உரைத்தருளியவனுமான சிவபிரானது வளநகர் இடைமருதாகும்.

குறிப்புரை :

இப்பதிகம் முழுதும் இறைவன் திருநகர் இடைமருதே என்கின்றது. மருந்தவன் - மருந்துபோல்பவன். மருந்து, நோய் நீக்கவும், நோய் வாராமல் தடுக்கவும், உடலைவளர்க்கவும் உண்ணப்படு மாறு போல இறைவனும் அநாதியே பந்தித்த மலப்பிணியினீக்கவும், வினை ஏறாமல் காக்கவும், கைவந்த சிவஞானங் கழன்றுபோம்வண்ணம் வாசனை தாக்காமல் வளர்க்கவும் உபகாரப்படுதலின் மருந்தவன் என்றருளினார். அமுதமாயினான் எனலுமாம் . தானவர் - அசுரர் . பிறவு இறவு - பிறப்பு, இறப்பு. `வு` விகுதிபெற்ற தொழிற்பெயர்; மிக அருமையான பிரயோகம். முனிவரோடு ஆலநிழல் கீழ் இருந்தவன் எனப்பிரிக்க.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 2

தோற்றவன் கேடவன் றுணைமுலையாள்
கூற்றவன் கொல்புலித் தோலசைத்த
நீற்றவ னிறைபுன னீள்சடைமேல்
ஏற்றவன் வளநக ரிடைமருதே.

பொழிப்புரை :

உயிர்களின் தோற்றத்திற்கும் கேட்டிற்கும் காரண மானவனும், இணையான தனங்களை உடைய உமையம்மையை ஒரு கூறாகக் கொண்டவனும், கொல்லும் தொழிலில் வல்ல புலியினது தோலை இடையில் கட்டியவனும், மெய்யெலாம் திருநீறு அணிந்தவனும், பெருகிவந்த கங்கையை நீண்ட சடைமுடிமேல் ஏற்று உலகைக்காத்தவனுமான சிவபிரானது வளநகர் இடைமருதாகும்.

குறிப்புரை :

தோற்றவன் - பிறப்பையருளியவன். கேடவன் - அழித்தவன். கூற்றவன் - பாகமதுடையான்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 3

படையுடை மழுவினன் பால்வெண்ணீற்றன்
நடைநவி லேற்றினான் ஞாலமெல்லாம்
உடைதலை யிடுபலி கொண்டுழல்வான்
இடைமரு தினிதுறை யெம்மிறையே.

பொழிப்புரை :

மழுவைத் தனக்குரிய ஆயுதமாகக் கொண்டவனும், பால் போன்று வெள்ளிய திருநீற்றை மேனிமேல் பூசியவனும், இனிய நடையைப் பழகுகின்ற விடை ஏற்றை உடையவனும், உடைந்த தலையோட்டில் பலி கொண்டு உலகெலாம் திரிந்துழல்பவனும் ஆகிய எம் தலைவனாகிய சிவபெருமான் இனிது உறையும் நகர் இடைமருதாகும்.

குறிப்புரை :

நடைநவில் - நடைபழகுகின்ற. உடைதலை - உடைந்த கபாலம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 4

பணைமுலை யுமையொரு பங்கனொன்னார்
துணைமதிண் மூன்றையுஞ் சுடரின்மூழ்கக்
கணைதுரந் தடுதிறற் காலற்செற்ற
இணையிலி வளநக ரிடைமருதே.

பொழிப்புரை :

பருத்த தனங்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனும், பகைவராகிய அசுரர்கட்குத் துணையாக இருந்த மூன்று அரணங்களையும் தீயில் மூழ்கி அழியுமாறு கணையைச் செலுத்தி அழித்தவனும், காலனைச் செற்ற ஒப்பிலியும் ஆகிய சிவபெருமானது வளநகர் இடைமருது ஆகும்.

குறிப்புரை :

பணைமுலை - பருத்தமுலை. ஒன்னார் - பகைவர். துணைமதிள் - திரிபுராதிகள் செய்யும் தீமைக்கெல்லாம் அரணாயிருந்து துணைபுரிந்த மதிள். கணை - அம்பு. அடுதிறல் - கொல்லும் வன்மை.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 5

பொழிலவன் புயலவன் புயலியக்கும்
தொழிலவன் றுயரவன் துயரகற்றும்
கழலவன் கரியுரி போர்த்துகந்த
எழிலவன் வளநக ரிடைமருதே.

பொழிப்புரை :

ஏழ் உலகங்களாக இருப்பவனும், மேகங்களாகவும் அவற்றை இயக்கி மழையைப் பெய்விக்கும் தொழிலைப் புரிவோனாக இருப்பவனும், துன்பங்களைத் தருபவனாகவும் அவற்றைப் போக்கும் கழலணிந்த திருவடிகளை உடையவனாக விளங்குபவனும், யானையின் தோலைப் போர்த்து மகிழ்ந்த அழகனாக விளங்குபவனும் ஆகிய சிவபெருமானது வளநகர் இடைமருதாகும்.

குறிப்புரை :

புயலவன் - மேகமாயுள்ளவன். புயலவனாய், அதனை யியக்கும் தொழிலவனாய், துயரவனாய், துயரை அகற்றும் கழலவனாய், என்பன பொருளாயும், அதனையியக்கும் கருத்தனாயும் இருப்பவன் இறைவனே என்பதை விளக்கிற்று. `கரியுரிபோர்த்துகந்த எழிலவன் என்றது` செய்ய திருமேனிமேல் கரிய தோலைப் போர்த்தியதும் அழகாயிற்று என்பதாம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 6

நிறையவன் புனலொடு மதியும்வைத்த
பொறையவன் புகழவன் புகழநின்ற
மறையவன் மறிகட னஞ்சையுண்ட
இறையவன் வளநக ரிடைமருதே.

பொழிப்புரை :

குறைவற்ற நிறைவாக விளங்குபவனும், கங்கை யோடு திங்களைத் திருமுடியில் வைத்துச் சுமக்கும் சுமையை உடையவனும், புகழ் வடிவினனாக விளங்குபவனும், எல்லோராலும் புகழப்படும் வேதங்களாக விளங்குபவனும், சுருண்டு விழும் அலைகளை உடைய கடலின்கண் தோன்றிய நஞ்சினை உண்ட தலைவனும் ஆகிய சிவபிரானது வளநகர் இடைமருதாகும்.

குறிப்புரை :

பொறையவன் - சுமையையுடையவன்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 7

நனிவளர் மதியொடு நாகம்வைத்த
பனிமலர்க் கொன்றையம் படர்சடையன்
முனிவரொ டமரர்கண் முறைவணங்க
இனிதுறை வளநக ரிடைமருதே.

பொழிப்புரை :

நாள்தோறும் ஒரு கலையாக நன்றாக வளர்தற்குரிய பிறைமதியோடு பாம்பையும் உடனாக வைத்துள்ளவனும் குளிர்ந்த கொன்றை மலர்மாலை சூடிய விரிந்த சடைமுடியை உடையவனும் ஆகிய சிவபிரான் முனிவர்களும் தேவர்களும் முறையாக வணங்க இனிதாக உறையும் வளநகர் இடைமருதாகும்.

குறிப்புரை :

பனிமலர் - குளிர்ந்தமலர், முனிவர் முன்னும், தேவர் பின்னுமாக வணங்குதல் முறையாதலின் முறை வணங்க என்றார். முனிவர்கள் வணக்கம்; உலகம் உய்யவந்த நிஷ்காமிய வணக்கம்; தேவர்கள் வணக்கம்; அசுரர் அழியத் தாம் வாழ வேண்டும் என்னும் காமிய வணக்கம்; ஆதலின் அவர்கள் முன்னும் தேவர்கள் பின்னும் முறையே வணங்க என்றது.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 8

தருக்கின வரக்கன தாளுந்தோளும்
நெரித்தவ னெடுங்கைமா மதகரியன்
றுரித்தவ னொன்னலர் புரங்கண்மூன்றும்
எரித்தவன் வளநக ரிடைமருதே.

பொழிப்புரை :

செருக்குற்ற அரக்கனாகிய இராவணனின் தாள் களையும், தோள்களையும் நெரித்தவனும், நீண்ட கையை உடைய பெரிய மதயானையை அக்காலத்தில் உரித்துப் போர்த்தவனும், பகைவர்களாகிய அசுரர்களின் புரங்கள் மூன்றையும் எரித்தவனும் ஆகிய சிவபெருமானது வளநகர் இடைமருதாகும்.

குறிப்புரை :

அரக்கன் - இராவணன். ஒன்னலர் - பகைவர்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 9

பெரியவன் பெண்ணினொ டாணுமானான்
வரியர வணைமறி கடற்றுயின்ற
கரியவ னலரவன் காண்பரிய
எரியவன் வளநக ரிடைமருதே.

பொழிப்புரை :

எல்லோரினும் பெரியவனும், பெண் ஆண் வடிவாக விளங்குபவனும், வயிற்றிடையே கீற்றுக்களாகிய கோடுகளை உடைய பாம்பணைமேல் கடலிடையே துயிலும் கரியவனாகிய திருமால் தாமரை மலர்மேல் உறையும் நான்முகன் ஆகியோர் காணுதற்கரிய எரியுருவாய் ஓங்கி நின்றவனும் ஆகிய சிவபெருமானது வளநகர் இடைமருதாகும்.

குறிப்புரை :

அரவணை - ஆதிசேடனாகிய படுக்கை. கரியவன் - திருமால். அலரவன் - பிரமன்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 10

சிந்தையில் சமணொடு தேரர்சொன்ன
புந்தியி லுரையவை பொருள்கொளாதே
அந்தண ரோத்தினொ டரவமோவா
எந்தைதன் வளநக ரிடைமருதே.

பொழிப்புரை :

சிந்திக்கும் திறனற்ற சமணர்களும், புத்தர்களும் கூறிய அறிவற்ற உரைகளைப் பொருளுடைய உரைகளாகக் கொள்ளாதீர். அந்தணர்களின் வேத ஒலியோடு விழவொலி நீங்காத வளநகர் ஆகிய இடைமருது எந்தையாகிய சிவபிரான் உறையும் இடமாகும் என்று அறிந்து சென்று வழிபடுமின்.

குறிப்புரை :

சிந்தை இல் சமண் - சிந்தனை என்பதொன்றற்ற சமணர். தேரர் - புத்தர். புந்தி இல் உரை - புத்தியற்ற வார்த்தை. ஓத்து - வேதம். அரவம் - ஒலி.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 11

இலைமலி பொழிலிடை மருதிறையை
நலமிகு ஞானசம்பந்தன்சொன்ன
பலமிகு தமிழிவை பத்தும்வல்லார்
உலகுறு புகழினொ டோங்குவரே.

பொழிப்புரை :

இலைகள் நிறைந்த பொழில்கள் சூழ்ந்த இடை மருதில் உறையும் சிவபிரானை, அருள்நலம் மிகுந்த ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய பயன்மிகு தமிழ்ப் பாடல்களாலியன்ற இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதிவழிபட வல்லவர் உலகில் நிறைந்து விளங்கும் புகழ்கள் அனைத்தையும் பெற்று ஓங்கி வாழ்வர்.

குறிப்புரை :

இடைமருதூர்ப் பதிகமாகிய இப்பத்தையும் வல்லவர், உலகிற் புகழோடு ஓங்கி வாழ்வர் என்கின்றது. பலமிகு தமிழ் - பயன் மிகுந்த தமிழ். தெய்வபலமிகுந்த தமிழ் என்றுமாம். புகழ் இம்மைப்பயனே என்பார் உலகு உறு புகழ் என்று அருளினர். நலம் - திருவருட்டிறம்.
சிற்பி