திருச்சிவபுரம்


பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1

இன்குர லிசைகெழும் யாழ்முரலத்
தன்கர மருவிய சதுரனகர்
பொன்கரை பொருபழங் காவிரியின்
தென்கரை மருவிய சிவபுரமே.

பொழிப்புரை :

இனிய ஒலியும் இசையும் பொருந்திய யாழ் முரலு மாறு தனது கரத்தின்கண்ணே அதனை ஏந்தி விளங்கும் சதுரனது நகர், அழகிய கரையினை மோதும் பழமையான காவிரியாற்றின் தென்கரையில் விளங்கும் சிவபுரமாகும்.

குறிப்புரை :

யாழேந்திய கரத்தன் நகர் சிவபுரம் என்கின்றது. முரல - ஒலிக்க.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 2

அன்றடற் காலனைப் பாலனுக்காய்ப்
பொன்றிட வுதைசெய்த புனிதனகர்
வென்றிகொ ளெயிற்றுவெண் பன்றிமுன்னாள்
சென்றடி வீழ்தரு சிவபுரமே.

பொழிப்புரை :

முற்காலத்தில் மார்க்கண்டேயன் பொருட்டு வலிய காலனைக் காலால் அழியுமாறு உதைத்தருளிய புனிதனது நகர், தனது கோரைப் பல்லால் வெற்றி பெறும் வெள்ளைப் பன்றியாகத் திருவவதாரம் கொண்ட திருமால், முற்காலத்தில் வந்து திருவடியைப் பணிந்து வழிபாடு செய்ததலமாகிய சிவபுரமாகும். (திருமால் வெண்ணிறப் பன்றியாகத் திரு அவதாரம் செய்த செய்தி தேவாரத்திலேயே உள்ளது. திவ்வியப் பிரபந்தத்தில் இல்லை.)

குறிப்புரை :

மார்க்கண்டற்காகக் காலனையுதைத்தவன் நகர் இது என்கின்றது. அடல் - வலிமை. பொன்றிட - அழிய. எயிறு - கொம்பு. வெண்பன்றி - திருமாலாகிய சுவேதவராகம். இது இத்தலவரவாற்றுக்குறிப்பை அருளியது.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 3

மலைமகண் மறுகிட மதகரியைக்
கொலைமல்க வுரிசெய்த குழகனகர்
அலைமல்கு மரிசிலி னதனயலே
சிலைமல்கு மதிளணி சிவபுரமே.

பொழிப்புரை :

மலைமகளாகிய பார்வதிதேவி அஞ்சுமாறு மதம் பொருந்திய யானையைக் கொன்று, அதன் தோலை உரித்துப் போர்த்த குழகனது நகர், அலைகள் நிரம்பிய அரிசிலாற்றின் கரையருகே விளங்குவதும் மலை போன்ற மதில்களை உடையதுமான சிவபுரமாகும்.

குறிப்புரை :

மலைமகள் அஞ்ச யானையையுரித்த இறைவன் நகர் இது என்கின்றது. மறுகிட - கலங்க. உரிசெய்த - உரித்த. குழகன் - இளமையையுடையவன். சிலை மல்கும் - மலைபோல விளங்கும்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 4

மண்புன லனலொடு மாருதமும்
விண்புனை மருவிய விகிர்தனகர்
பண்புனை குரல்வழி வண்டுகிண்டிச்
செண்பக மலர்பொழிற் சிவபுரமே.

பொழிப்புரை :

மண், புனல், அனல், காற்று, ஆகாயம் என்னும் ஐம்பூதங்களாய்ப் பொருந்தி விளங்கும் விகிர்தனது நகர், பண் பொருந்திய குரலோடு வண்டுகள் சூழ்ந்து கிளர மலரும் செண்பகப் பூக்களோடு கூடிய பொழில்கள் சூழ்ந்த சிவபுரமாகும்.

குறிப்புரை :

ஐம்பூதமுமாகிய விகிர்தனகர் இதுவாம் என்கின்றது. மாருதம் - காற்று. பண்புனை குரல் - பண்ணைச்செய்கின்ற குரல்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 5

வீறுநன் குடையவள் மேனிபாகம்
கூறுநன் குடையவன் குளிர்நகர்தான்
நாறுநன் குரவிரி வண்டுகிண்டித்
தேறலுண் டெழுதரு சிவபுரமே.

பொழிப்புரை :

அழகால் தனிப் பெருமை பெற்ற உமையம்மையைத் தன் திருமேனியின் ஒரு பாகமாக உடையவனாகிய சிவபிரானது குளிர்ந்த நகரம், மணம் வீசும் நல்ல குராமலரை வண்டுகள் கிண்டித் தேனை உண்டு மகிழ்ந்து எழும் பொழில் சூழ்ந்த சிவபுரமாகும்.

குறிப்புரை :

உமாதேவியை ஒருபாகங்கொண்டவன் நகர் இதுவாம் என்கின்றது. வீறு - தனிப்பெருமை. நாறு நல்குரவிரி - மணம் வீசுகின்ற நல்லகுராமலர்; விரி - மலர்; முதனிலைத் தொழிலாகு பெயர். தேறல் - தேன்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 6

மாறெதிர் வருதிரி புரமெரித்து
நீறது வாக்கிய நிமலனகர்
நாறுடை நடுபவ ருழவரொடும்
சேறுடை வயலணி சிவபுரமே.

பொழிப்புரை :

பகைமை உணர்வோடு மாறுபட்டுத் தன்னை எதிர்த்துவந்த அசுரர்களின் திரிபுரங்களை எரித்து நீறாக்கிய நிமலனது நகர், உழவர்களோடு நாற்றுநடும் மகளிர் பலரைக் கொண்ட சேற்று வளம் மிக்க வயல்களால் அழகு பெறுவதாகிய சிவபுரமாகும்.

குறிப்புரை :

திரிபுரங்களை நீறாக்கிய நிமலன் நகர் இதுவாம் என் கின்றது. மாறு - பகையாக. நாறு - நாற்று.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 7

ஆவிலைந் தமர்ந்தவ னரிவையொடு
மேவிநன் கிருந்ததொர் வியனகர்தான்
பூவில்வண் டமர்தரு பொய்கையன்னச்
சேவல்தன் பெடைபுல்கு சிவபுரமே.

பொழிப்புரை :

பசுவிடம் உண்டாகும் பால், தயிர் முதலிய ஐந்து பொருள்களை விரும்புபவனாகிய சிவபிரான் உமையம்மையோடு கூடி மகிழ்வுடன் இருக்கின்ற பெரிய நகர், தேனுண்ண வண்டுகள் மொய்க்கும் மலர்களை உடைய பொய்கைகளில் அன்னச் சேவல் தன் பெண் அன்னத்தைத் தழுவி மகிழும் அழகுடைய சிவபுரமாகும்.

குறிப்புரை :

ஆனைந்தாடும் பரமன் அம்மையோடும் எழுந்தருளி இருந்த இடமாம் என்கின்றது. ஆவில் ஐந்து - பஞ்சகவ்யம். அரிவை - உமாதேவி. பூவில் வண்டு கண்ணயர்ந்திருக்கும் பொய்கையிலே, அன்னச்சேவல் தன் பெடையைப்புல்லும் சிவபுரம் என்பதாம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 8

எழின்மலை யெடுத்தவல் லிராவணன்றன்
முழுவலி யடக்கிய முதல்வனகர்
விழவினி லெடுத்தவெண் கொடிமிடைந்து
செழுமுகி லடுக்கும்வண் சிவபுரமே.

பொழிப்புரை :

அழகிய கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த வலிய இராவணனின் முழுமையான வல்லமையை அடக்கிய முதல்வனாகிய சிவபிரானது நகர், விழாக் காலங்களில் எடுக்கப்பட்ட வெண்மையான கொடிகள் நிறைந்து கரிய மேகங்களை நெருங்கிச் செறியும் வளமையான சிவபுரமாகும்.

குறிப்புரை :

இராவணனின் வலியடக்கிய முதல்வன்நகர் இது என் கின்றது. எழில்மலை - அழகியகைலை. உற்சவத்தில் உயர்த்திய கொடிகள் மேகத்தையணுகும் சிவபுரம் என விழாச் சிறப்பும், கொடியின் உயரமும் உரைத்தவாறு.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 9

சங்கள வியகையன் சதுர்முகனும்
அங்கள வறிவரி யவனகர்தான்
கங்குலும் பறவைகள் கமுகுதொறும்
செங்கனி நுகர்தரு சிவபுரமே.

பொழிப்புரை :

சங்கேந்திய கையினனாகிய திருமாலும் நான்முகனும் முற்காலத்தில் அடிமுடி தேடி அளந்தறியப் பெறாத சிவபிரானது நகர், இரவிலும் பறவைகள், கமுக மரங்கள் தோறும் தங்கிச் செங்கனிகளை நுகரும் வளம் மிக்க சிவபுரமாகும்.

குறிப்புரை :

அயனும்மாலும் அறியப்பெறாதவன் நகர் இதுவாம் என்கின்றது. சங்கு அளவியகையன் - பாஞ்சசன்யம் என்னும் சங்குகலந்த கையையுடையவன். அளவு - உயரமும், ஆழமும் ஆகிய புறஅளவு. இரவிலுங்கூடப் பறவைகள் கமுகுதோறும் பழநுகரும் நகர் என்று இருபோதும் பறவைக்கு உபகாரப்படுவது உரைக்கப்பெற்றது.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 10

மண்டையிற் குண்டிகை மாசுதரும்
மிண்டரை விலக்கிய விமலனகர்
பண்டமர் தருபழங் காவிரியின்
தெண்டிரை பொருதெழு சிவபுரமே.

பொழிப்புரை :

உண்கலன் குண்டிகை ஆகியனவற்றை ஏந்திய வராய், மாசேறிய உடலினராய்த் தருக்கொடுதிரியும் சமணர்களை வெறுக்கும் சிவபிரானது நகர், பழமையான காலந்தொட்டே ஓடி வந்து வளம் சேர்க்கும் பழங்காவிரியின் அலைகள் வந்து பொருந்தும் சிவபுரமாகும்.

குறிப்புரை :

புறச்சமயிகளை விலக்கிய விமலன் நகரிதுவாம் என் கின்றது. மண்டை - உண்கலம். மாசு - அழுக்கு. பண்டு அமர் தரு பழங்காவிரி - முன்னமே வளந்தரும் பழங்காவிரி எனப்பழமைக்கு எல்லை கூறியவாறு.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 11

சிவனுறை தருசிவ புரநகரைக்
கவுணியர் குலபதி காழியர்கோன்
தவமல்கு தமிழிவை சொல்லவல்லார்
நவமொடு சிவகதி நண்ணுவரே.

பொழிப்புரை :

சிவபெருமான் எழுந்தருளிய சிவபுரநகரைப் போற்றிக் கவுணியர் குலபதியாகிய காழியர் தலைவன் ஞானசம்பந்தன் பாடிய தவத்தைத் தருவனவாகிய இப்பதிகத் தமிழை ஓதவல்லவர் புதுமைகள் பலவும் பெற்று முடிவில் சிவகதிசேர்வர்.

குறிப்புரை :

சிவபுரத்தைக் காழிநாதன் கூறிய பாடலைச் சொல்ல வல்லவர் சிவகதிசேர்வர் எனப்பயன் கூறியது. நவம் - புதுமை.
சிற்பி