திருஇராமனதீச்சரம்


பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1

சங்கொளிர் முன்கையர் தம்மிடையே
அங்கிடு பலிகொளு மவன்கோபப்
பொங்கர வாடலோன் புவனியோங்க
எங்கும னிராமன தீச்சரமே.

பொழிப்புரை :

சங்கு வளையல்கள் அணிந்த முன்கைகளை உடைய முனி பன்னியர் வாழும் வீதிகளிடையே சென்று அங்கு அவர்கள் இடும் பலியை மகிழ்வோடு கொள்பவனும், சினம் பொங்கும் அரவைப் பிடித்து ஆட்டுபவனும், உலக மக்கள் உயர்வுபெற எங்கும் நிறைந்திருப்பவனுமாகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்.

குறிப்புரை :

முனிபன்னியர் இடும்பலியை ஏற்பவனும், அரவு அணிந்தவனும், உலகமெலாம் உயர எங்கும் மன்னியிருப்பவனும் ஆகிய சிவனிடம் இராமனதீச்சரம் என்கின்றது. சங்கு - வளையல். அங்கு - அசை. புவனி - பூமி.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 2

சந்தநன் மலரணி தாழ்சடையன்
தந்தம தத்தவன் றாதையோதான்
அந்தமில் பாடலோ னழகனல்ல
எந்தவ னிராமன தீச்சரமே.

பொழிப்புரை :

அழகிய நல்ல மலர்களை அணிந்து தாழ்ந்து தொங்கும் சடையினை உடையவனும், தந்தத்தையும் மதத்தையும் உடைய விநாயகப் பெருமானின் தந்தையும், முடிவற்ற இசைப்பாடல்களைப் பாடுபவனும், அழகனும், எங்கள் தவப்பேறாய் விளங்கும் நல்லவனுமாய சிவபிரானது தலம், இராமனதீச்சரம்.

குறிப்புரை :

தாழ்சடையன், விநாயகப்பெருமான் தாதை, பாடலன், அழகன் நகர் இது என்கின்றது. சந்தம் - அழகு. தந்தமதத்தவன் - தந்தத்தையும் மதத்தையும் உடைய விநாயகப்பெருமான். அந்தம் இல் - எல்லையில்லாத.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 3

தழைமயி லேறவன் றாதையோதான்
மழைபொழி சடையவன் மன்னுகாதில்
குழையது விலங்கிய கோலமார்பின்
இழையவ னிராமன தீச்சரமே.

பொழிப்புரை :

தழைத்த பீலியோடு கூடிய மயில்மீது ஏறிவரும் முருகனது தந்தையும். உலகிற்கு நீர்வளந்தரும் கங்கை பாயும் சடையினை உடையவனும், காதில் நிலைபெற்று விளங்கும் குழையை அணிந்தவனும், அழகிய மார்பில் குறுக்காக முப்புரிநூல் அணிந்தவனு மாகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்.

குறிப்புரை :

முருகன் தாதை, மார்பில் பூணூலன் நகர் இதுவே என்கின்றது. தழை மயில் - பீலியோடு கூடிய மயில். ஏறவன் - ஏறுதலையுடையவன். மழை - நீர்த்துளி. குழை - காதணி. கோலம் - அழகு. இழை - பூணூல்; ஆபரணமும் ஆம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 4

சத்தியு ளாதியோர் தையல்பங்கன்
முத்திய தாகிய மூர்த்தியோதான்
அத்திய கையினி லழகுசூலம்
வைத்தவ னிராமன தீச்சரமே.

பொழிப்புரை :

சத்திகளில் முதல்வியாக விளங்கும் உமையம் மையை ஒரு பாகமாகக் கொண்டவனும், உயிர்கட்கு முத்திப்பேறாக விளங்கும் கடவுளும், தீயேந்திய கையில் அழகிய சூலத்தைத் தாங்கியவனுமாகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்.

குறிப்புரை :

ஆதி சத்தியின் தலைவன், முத்திதரு முதல்வன் நகர் இது என்கின்றது. அத்தியகையினில் அழகு சூலம் வைத்தவன் - சங்கார கிருத்தியஞ்செய்யும் தீயேந்திய திருக்கரத்தில் அழகுக்காகச் சூலத்தை ஏந்தியவன். இதன் நயம் ஓர்க.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 5

தாழ்ந்தகு ழற்சடை முடியதன்மேல்
தோய்ந்த விளம்பிறை துலங்குசென்னிப்
பாய்ந்தகங் கையொடு படவரவம்
ஏய்ந்தவ னிராமன தீச்சரமே.

பொழிப்புரை :

தலையில், தாழ்ந்த கூந்தலால் இயன்ற சடை முடியின்மேல், அழகு தோய்ந்த இளம்பிறை, பாய்ந்துவரும் கங்கை, படம் பொருந்திய அரவம் ஆகியவற்றைச் சூடிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்.

குறிப்புரை :

பிறையணிந்த சென்னியோடு கங்கை பாம்பு அணிந்தவன் நகர் இது என்கின்றது. ஏய்ந்தவன் - பொருந்தியவன்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 6

சரிகுழ லிலங்கிய தையல்காணும்
பெரியவன் காளிதன் பெரியகூத்தை
அரியவ னாடலோ னங்கையேந்தும்
எரியவ னிராமன தீச்சரமே.

பொழிப்புரை :

பிடரியின்மேல் விளங்கும் சுருண்ட கூந்தலினளாகிய உமையம்மை அருகிலிருந்து காணும் பெரியவனும், காளியின் பெரிய கூத்தோடு போட்டியிட்டு அவளால் அறிதற்கு அரியவனாய், நடனமாடுபவனும், அழகிய கையில் எரி ஏந்திவிளங்குபவனுமாகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்.

குறிப்புரை :

பராசக்தி காணும் பெரியவன், காளியின் கூத்திற்கு அரியவன், ஆனந்தக் கூத்தன் நகர் இது என்கின்றது. சரிகுழல் - பிடரிமீது சரிந்த கூந்தல். இத்தலத்து இறைவிநாமம் சரியார் குழலி.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 7

மாறிலா மாதொரு பங்கன்மேனி
நீறது வாடலோ னீள்சடைமேல்
ஆறது சூடுவா னழகன்விடை
ஏறவ னிராமன தீச்சரமே.

பொழிப்புரை :

தனக்கு ஒப்பாரில்லாத அழகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனும், திருமேனியில் திருநீற்றை அணிந்தவனும், நீண்ட சடைமுடியின்மேல் கங்கையைச் சூடியவனும் அழகனும், விடையின்மேல் ஏறிவருபவனுமாகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்.

குறிப்புரை :

மாதொருபங்கன், நீறாடி, ஆறுசூடி, அழகன் நகர் இது என்கின்றது. மாறு இலா மாது - அபின்னையாகிய பராசக்தி. நீறு அது ஆடலோன் - நீறாடியவன்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 8

தடவரை யரக்கனைத் தலைநெரித்தோன்
படவர வாட்டிய படர்சடையன்
நடமது வாடலா னான்மறைக்கும்
இடமவ னிராமன தீச்சரமே.

பொழிப்புரை :

பெரிய கயிலை மலையால் இராவணனின் தலையை நெரித்தவனும், படம் பொருந்திய பாம்பை ஆட்டி மகிழ்பவனும், விரிந்த சடைமுடியை உடையவனும், நடனம் புரிபவனும், நான்கு வேதங்கட்கும் இடமாக விளங்குபவனும் ஆகிய சிவபிரானது தலம் இராமனதீச்சரம்.

குறிப்புரை :

இராவணனை நெரித்தவன், அரவாட்டிய சடையன், நடனம் ஆடுதலையுடையவன் நகர் இது என்கின்றது. நான்மறைக்கும் இடம் அவன் - வேதங்கள் நான்கிற்கும் இடம் ஆயவன்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 9

தனமணி தையல்தன் பாகன்றன்னை
அனமணி யயனணி முடியுங்காணான்
பனமணி வரவரி பாதங்காணான்
இனமணி யிராமன தீச்சரமே.

பொழிப்புரை :

அழகிய தனபாரங்களையுடைய உமையம்மையின் கேள்வனும், அன்னமாகத் தன்னை மாற்றிக் கொண்டு, அழகிய முடியைக் காணாது திரும்பிய நான்முகன், திருவடியைக் காணாத, படங்களில் மணிகளையுடைய ஆதிசேடனாகிய அணையில் துயிலும் திருமால் ஆகியோர் வணங்க அருள் புரிந்தவனுமாகிய சிவபிரானது தலம் பல்வகையான மணிக்குவைகளையுடைய இராமனதீச்சரம் ஆகும்.

குறிப்புரை :

உமைபாகனை அயன்முடிகாணான், அரிஅடிகாணான். அத்தகைய இறைவன் நகர் இது என்கின்றது. அனம் அணிஅயன் - அன்னமாகத் தன்னைப்புனைந்து கொண்டபிரமன். பன மணி வரவு அரி - படங்களில் மணிகளையுடைய ஆதிசேடன் மேல் வருதலை யுடைய மால். பண என்பது எதுகை நோக்கிப் பன என ஆயிற்று. நான்கு தலைகளையுடைய பிரமன் ஒரு முடியைக் காணாமையும், ஏனமாய் நான்கு கால்களையுடைய திருமால் இணையடி காணாமையும் வியப்பு என நயம் தோன்றநின்றது.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 10

தறிபோலாஞ் சமணர்சாக் கியர்சொற்கொளேல்
அறிவோரா னாம மறிந்துரைமின்
மறிகையோன் றன்முடி மணியார்கங்கை
எறிபவ னிராமன தீச்சரமே.

பொழிப்புரை :

மரத்தால் இயன்ற தடிபோன்ற அறிவற்ற சமண புத்தருடைய சொற்களைக் கேளாதீர். மெய்ஞ்ஞானியர்கள் வாயினால் இறைவன் திருப்பெயரை அறிந்து சொல்வீர்களாக. அப்பெருமான் மான் இளங்கன்றை ஏந்திய கையனாய்த் தனது முடியில், மணிகளோடு கூடிய கங்கை நதி அலை, மோதுபவனாய், இராமனதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான். சென்று வழிபடுக.

குறிப்புரை :

அறிவால் அறியப்பெறாதவன், மான்கையன், கங்கையன்நகர் இது என்கின்றது. தறி - கம்பம். அறிவு - பசு, பாச ஞானம். பாசஞானத்தாலும் படர் பசுஞானத்தாலும் ஈசனையறிய வொண்ணாது ஆதலின் இங்ஙனம் கூறினார். மறி - மான்குட்டி.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 11

தேன்மலர்க் கொன்றையோன்
* * * * * * * *

பொழிப்புரை :

தேன் பொருந்திய கொன்றை மாலையைச் சூடியவன் .

குறிப்புரை :

* * * * * * * * *
சிற்பி