திருக்கழுமலம்


பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 1

பந்தத்தால் வந்தெப்பால் பயின்றுநின்ற வும்பரப்
பாலேசேர்வா யேனோர்கான் பயில்கண முனிவர்களுஞ்
சிந்தித்தே வந்திப்பச் சிலம்பின்மங்கை தன்னொடுஞ்
சேர்வார்நாணா ணீள்கயிலைத் திகழ்தரு பரிசதெலாஞ்
சந்தித்தே யிந்தப்பார் சனங்கணின்று தங்கணாற்
றாமேகாணா வாழ்வாரத் தகவுசெய்த வனதிடங்
கந்தத்தா லெண்டிக்குங் கமழ்ந்திலங்கு சந்தனக்
காடார்பூவார் சீர்மேவுங் கழுமல வளநகரே.

பொழிப்புரை :

வினைவயத்தால் மண்ணுலகம் வந்து எல்லா இடங்களிலும் பொருந்தி அவ்விடங்களே தமக்கு இருப்பிடமாய் வாழும் தேவர்களும், மற்றவர்களாகிய கானகங்களில் வாழும் முனிவர்களும், மனத்தால் சிந்தித்து வழிபட்டு உய்தி பெறுமாறு, மலையரையன் மகளாகிய பார்வதி தேவியாரோடு சேர்ந்தவராய், நாளும் நாளும் நீண்டுயர்ந்த கயிலைமலையில் விளங்கும் திருவோலக்கச் சிறப்புக்கள் எல்லாவற்றையும் இந்த உலகில் வாழும் மக்கள் தங்கள் கண்களால் தாமே கண்டு வாழ்பவராகப் பெருங்கருணையோடு காட்சி நல்குபவனது இடம் எட்டுத் திசைகளிலும் மணம் கமழ்ந்து விளங்கும் மலர்களோடு கூடிய சந்தன மரக்காடுகள் சிறந்து வளர்ந்து செழிக்கும் கழுமலநகராகும்.

குறிப்புரை :

தேவர்களும் முனிவர்களும் தியானிக்க உமையோடு பொருந்தி, கைலையில் எழுந்தருளியிருக்கின்ற காட்சியை இந்த மண்ணுலகத்தவர்களும் தம் கண்ணாலே கண்டு வாழ அருளியவனது இடம் கழுமலவளநகர் என்கின்றது. பந்தத்தால் வந்து எப்பால் பயின்று நின்ற உம்பர் என்றது ஆணவமலக் கட்டினால் வந்து எவ்விடத்தும் உறைகின்ற தேவர்கள் வினையால் பந்திக்கப்பெற்ற இந்திரன் பிரமன் முதலியோர் கழுமலம் வந்து பூசித்தமைபோல்வன. அப்பாலே சேர்வாய் ஏனோர் - அப்பாலும் அடிசேர்ந்தார்களாய சிவஞானிகள். புறம்பான நெறிகளிற் சேர்ந்த பிறர் என்றுமாம். கான் பயில் கண முனிவர்கள் - காட்டுறை வாழ்க்கையையுடைய கூட்டமான முனிவர்கள். சிலம்பு - மலை. ஈண்டு இமயம். நாள்நாள் நீள் கயிலைத் திகழ்தரு பரிசது எலாம் - நாள்தோறும் திருக்கயிலையில் வீற்றிருக்கும் திருவோலக்கச் சிறப்பெல்லாவற்றையும். பார் - பூமி. தாமே காணா - தாங்களே கண்டு; என்றது அவ்வளவு எளிமை காட்டி நின்றது. கந்தம் - மணம்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 2

பிச்சைக்கே யிச்சித்துப் பிசைந்தணிந்தவெண்பொடிப்
பீடார்நீடார் மாடாரும் பிறைநுத லரிவையொடும்
உச்சத்தா னச்சிப்போ றொடர்ந்தடர்ந்த வெங்கணே
றூராவூரா நீள்வீதிப் பயில்வொடு மொலிசெயிசை
வச்சத்தா னச்சுச்சேர் வடங்கொள்கொங்கை மங்கைமார்
வாராநேரே மாலாகும் வசிவல வவனதிடங்
கச்சத்தான் மெச்சிப்பூக் கலந்திலங்கு வண்டினங்
காரார்காரார் நீள்சோலைக் கழுமல வளநகரே.

பொழிப்புரை :

பிச்சை ஏற்பதை விரும்பி நீரில் குழைத்தணிந்த வெண்பொடியினராய்ப் பெருமை பொருந்தியவரும் புகழால் விரிந்தவருமாய், அருகில் விளங்கும் பிறை போன்ற நெற்றியினளாகிய உமையம்மையோடு உச்சிப்போதினை விரும்பித் தன்னை எதிர்ப்பவரைத் தொடர்ந்து கொல்லும் தறுகண்மையை உடைய விடையேற்றின் மீதமர்ந்து, ஊர்ந்து ஊர்ந்து நீண்ட தெருக்களில் விருப்பத்தோடு பாடுவதால், நச்சுதலுக்குரியனவும் முத்துவடங்கள் அணிந்தனவுமாகிய கொங்கைகளை உடைய மகளிர் அவ்விசையைக் கேட்டு வந்து தமக்கு முன்னே விரக மயக்கம் கொள்ளுமாறு வசீகரிக்கும் வன்மை பொருந்திய சிவபிரானது இடம். மேலைக் காற்றினால் அல்லது ஒற்றுமையோடு பூக்களைக் கலந்து விளங்கும் வண்டினங்களோடு கருமை நிறம் பொருந்திய மேகங்கள் தவழும் நீண்ட சோலைகளை உடைய கழுமல வளநகராகும்.

குறிப்புரை :

பிச்சையை விரும்பி, நீரிற்குழைத்த நீற்றையணிந்து. உமாதேவியோடும் உச்சிப்போதில் விடையேறி, வீதியில் பாடிச்செல்லும் தமது இசையைக் கேட்ட மகளிர் மால் கொள்ளச் செய்பவனது இடம் கழுமலம் என்கின்றது. பீடு - பெருமை. நீடு ஆர் - புகழான் நீடுதலைப் பொருந்தும். மாடு ஆரும் - இடப்பக்கத்து இருக்கும். உச்சத்தான் நச்சி - உச்சிப் போதினனாக விரும்பி. போல்: அசை. ஊரா - ஊர்ந்து. ஊர் ஆம் நீள் வீதி - ஊரின் கண்ணதாகிய நீண்ட திரு வீதியில். ஒலிசெய் இசை வச்சத்தால் - பாடலை வைத்ததால், மங்கைமார் - முனிபன்னியர். வாரா - வந்து. மாலாகும் - மயக்கமுறும் வண்ணம். வசிவலஅவன் - வசீகரிக்கும் வன்மையுடையவன். கார் ஆர் கார் ஆர் - கருமை நிறம் பொருந்திய மேகங்கள் படிந்த.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 3

திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்திலங்கு மத்தையின்
சேரேசேரே நீராகச் செறிதரு சுரநதியோ
டங்கைச்சேர் வின்றிக்கே யடைந்துடைந்த வெண்டலைப்
பாலேமேலே மாலேயப் படர்வுறு மவனிறகும்
பொங்கப்பேர் நஞ்சைச்சேர் புயங்கமங்கள் கொன்றையின்
போதார்தாரே தாமேவிப் புரிதரு சடையனிடங்
கங்கைக்கே யும்பொற்பார் கலந்துவந்த பொன்னியின்
காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.

பொழிப்புரை :

திங்கள், தும்பை, விளங்கித் தோன்றும் ஊமத்த மலர் ஆகியவற்றைச் சேர்த்துச் செறிந்த நீராகிய கங்கை நதி, அழகிய கையில் விளங்குவதையன்றி உடைந்த கபாலம், முடிகாண மயக்க உணர்வுடையனாய் மேலே பறந்து சென்ற பிரமனாகிய அன்னத்தின் இறகு, நஞ்சு பொங்கும் பாம்பு, கொன்றை மாலை ஆகியவற்றை அணிந்து, வளைத்துக் கட்டிய சடையை உடைய சிவபிரானது இடம்; கங்கைக்கு நிகரான அழகோடு கலந்து வந்த பொன்னி நதியின் வாய்க்கால்கள் பாய்ந்து வளஞ் சேர்க்கும் கழுமல வளநகராகும்.

குறிப்புரை :

பிறை, தும்பை, ஊமத்தை இவைகள் சேர்ந்து சேர்ந்து, தேவகங்கையோடு, திருக்கரத்திற்சேராதே திருமுடியிற் சூடப்பெற்ற உடைந்த கபாலத்தின்பக்கல், அன்னத்தின் இறகையும், பாம்பையும், கொன்றை மாலையையும் அணிந்த புரிசடைப் பெருமானிடம் கழுமலம் என்கின்றது. திங்கட்கு தும்பைக்கு என்ற நான்கன் உருபுகள் ஏழாம் வேற்றுமைப் பொருளில் வந்தன. திங்களிலும் தும்பையிலும் ஊமத்தத்திலும் சேர்ந்து சேர்ந்து புனலாகப் பொருந்திய சுரநதி எனப் பொருள் முடிபு காண்க. மேலே மால் ஏயப் படர்வுறும் அவன் இறகும் - மேலே மயக்கம் பொருந்தப் பறந்து செல்லும் மகாசூரனுடைய இறகும். புயங்கமங்கள் - பாம்புகள். தார் - மாலை. கங்கைக்கு ஏயும் பொற்பு ஆர் கலந்து வந்த பொன்னி - கங்கைக்குப் பொருந்திய புனிதமாகிய அழகைப் பொருந்திக் கலந்து ஒழுகும் காவிரி. கால் - வாய்க்கால்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 4

அண்டத்தா லெண்டிக்கு மமைந்தடங்கு மண்டலத்
தாறேவேறே வானாள்வா ரவரவ ரிடமதெலாம்
மண்டிப்போய் வென்றிப்போர் மலைந்தலைந்த வும்பரு
மாறேலாதார் தாமேவும் வலிமிகு புரமெரிய
முண்டத்தே வெந்திட்டே முடிந்திடிந்த விஞ்சிசூழ்
மூவாமூதூர் மூதூரா முனிவுசெய்த வனதிடங்
கண்டிட்டே செஞ்சொற்சேர் கவின்சிறந்த மந்திரக்
காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே.

பொழிப்புரை :

இம்மண்ணுலகில் இருந்துகொண்டே எண் திசைகளையும் உள்ளடக்கிய அனைத்துலகங்களுக்கும் சென்று வெற்றி கொண்டு வான்உலகை ஆளும் தேவர்களையும் நெருங்கிச் சென்று வெற்றிப்போர் செய்து, அத்தேவர்களாலும் எதிர்க்க இயலாதவர்களாய் விளங்கிய அவுணர்களின் வலிமை மிக்க முப்புரங்களைத் தன் நெற்றிவிழியால் வெந்து முடியுமாறு செய்து அவ்இஞ்சி சூழ்ந்த அழியாத பழமையான மூன்று ஊர்களும் முதுமை உடையவாய் அழியுமாறு சினந்த சிவபிரானது இடம், செஞ்சொற்களைக் கண்டு தேர்ந்து தொகுத்த அழகிய மந்திரங்களை மூச்சுக் காற்றாகக் கொண்டு உருவேற்றி வருவோர் வாழும் கழுமலமாகிய வளநகராகும்.

குறிப்புரை :

இம்மண்ணுலகிலிருந்து, வானாள்வார் இடம் எல்லாம் போய்ச் சண்டைசெய்த தேவர்களும் மாறு ஏற்றுப் பொருதலாகாத திரிபுராதிகள் மேவிய முப்புரம் எரிய நெற்றிக் கண்ணால் எரித்து, மூதூர் மூதூராகா வண்ணம் முடிவு செய்தவன் இடம் கழுமலம் என்கின்றது. அண்டத்தால் எண்திக்கும் அமைந்து அடங்கும் மண் தலத்து ஆறே - இவ்வண்டத்தில் எட்டுத் திக்கும் பொருந்தி அடங்கிய பூமியின் வழியாக. வேறேவான் ஆள்வாரது இடம் எலாம் - தனித்த தேவர்களிடம் எல்லாவற்றையும். மண்டிப்போய் - நெருங்கிச்சென்று. உம்பரும் மாறு ஏலாதார் - தேவர்களாலும் எதிர்க்க இயலாத அசுரர்கள். வலிமிகுபுரம் - வரபலமிக்க முப்புரம். முண்டத்தே வெந்திட்டே முடிந்து இடிந்த - நெற்றியால் வெந்து அழிந்து இடிந்த. முண்டம் ஆகுபெயராக நெற்றிக்கண்ணையுணர்த்தியது. இஞ்சி - மதிள். மூவா மூதூர் மூதூரா முனிவு செய்தவனது இடம் - மூப்பையடையாத தொன்மையான நகர் இன்றும் தொன்மையானதாகா வண்ணம் கோபித்தவனது இடம். செஞ்சொல் - நேரே பொருள் பயக்கும் சொல்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 5

திக்கிற்றே வற்றற்றே திகழ்ந்திலங்கு மண்டலச்
சீறார்வீறார் போரார்தா ரகனுட லவனெதிரே
புக்கிட்டே வெட்டிட்டே புகைந்தெழுந்த சண்டத்தீப்
போலேபூநீர் தீகான்மீப் புணர்தரு முயிர்கடிறஞ்
சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்தமங்கை செங்கதத்
தோடேயாமே மாலோகத் துயர்களை பவனதிடங்
கைக்கப்பேர் யுக்கத்தே கனன்றுமிண்டு தண்டலைக்
காடேயோடா வூரேசேர் கழுமல வளநகரே.

பொழிப்புரை :

எட்டுத் திசைகளுக்கும் காவலர்களாகிய தெய்வங்கள் அங்கங்கே இருந்து காவல் செய்து விளங்கும் இம் மண்ணுலகைச் சீறி அழித்தற்கு வந்த வலிய போர் வல்ல தாருகன் உடலை அவன் எதிரிலேயே புகுந்து வெட்டி வீழ்த்தி, புதைந்தெழுந்து வந்த ஊழித் தீப் போலத் தோன்றி மண் நீர் தீ கால் விண் ஆகிய ஐம்பூத வடிவாய் விளங்கும் இவ்வுலகில் வாழும் உயிர்களை அழிக்கச் சிவந்த கோபத்தோடு சொக்க நிருத்தத்தில் நடனமாடி வந்த காளியின் கோபத்தை அவளோடு எதிர் நடனம் ஆடி வென்று பெரிதான இவ்வுலக உயிர்களின் துயரைக் களைந்தவன் ஆகிய சிவபிரானது இடம் பலரும் வெறுக்கக் கனன்று வந்த பேரூழிக் காலத்தும் செறிந்த சோலைகளாகிய காடுகளோடு அழியாத ஊராக விளங்கும் கழுமல வளநகராகும்.

குறிப்புரை :

திக்குப்பாலகர்கள் அங்கங்கே விளங்க, இவ்வுலகத்துச் சீறி வந்த தாரகன் உடலை அவனெதிரிலேயே வெட்டி, விளைந்த ஊழித்தீயைப் போன்ற காளியின் கோபமானது ஐம்பூதச் சேர்க்கையாலான உலகத்துற்ற உயிர்களுக்குப் பொருந்தாதபடி உலகத்துயரைக் களைபவனது இடம் கழுமலநகர் என்கின்றது. திக்கில் தேவு அற்று அற்றே திகழ்ந்திலங்கு மண்டலம் - திக்குப் பாலகர்கள் அங்கங்கே அத்தன்மையோடு விளங்குகின்ற உலகம். சீறு ஆர் - கோபித்தலைப் பொருந்திய. சீறு ஆர் முதலியவற்றைத் தனித்தனி தாரகனோடு ஒட்டுக. வீறு - தனித்திருத்தல். சண்டத்தீப் போலத் தொடர்ந்த மங்கையினது எனக்கூட்டுக. உயிர்கள் திறம் ஏயாமே துயர்களைபவன் என இயைக்க. சொக்கத்தே: சொக்கம் என்ற நிருத்தம். நிர்த்தத்தே தொடர்ந்த மங்கை - சொக்க நிருத்தத்தில் தோற்றுத் தொடர்ந்த காளி. செம்கதத்தோடு ஏயாமே - சிவந்த கோபத்தோடு பொருந்தாதபடி. கைக்க - வெறுக்க. பேர்யுக்கத்தே கனன்றும் - பெரிய ஊழித்தீயில் கனன்றும். மிண்டு தண்டலைக் காடே ஓடா - அழியாது மிண்டிய குளிர்ந்த காடுகள் அகலாத. இது நெருப்பூழியிலும் நிலைத்தநகரம் என்பதறிவித்தது.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 6

செற்றிட்டே வெற்றிச்சேர் திகழ்ந்ததும்பி மொய்ம்புறுஞ்
சேரேவாரா நீள்கோதைத் தெரியிழை பிடியதுவாய்
ஒற்றைச்சேர் முற்றற்கொம் புடைத்தடக்கை முக்கண்மிக்
கோவாதேபாய் மாதானத் துறுபுகர் முகவிறையைப்
பெற்றிட்டே மற்றிப்பார் பெருத்துமிக்க துக்கமும்
பேராநோய்தா மேயாமைப் பிரிவுசெய்த வனதிடங்
கற்றிட்டே யெட்டெட்டுக் கலைத்துறைக் கரைச்செலக்
காணாதாரே சேராமெய்க் கழுமல வளநகரே.

பொழிப்புரை :

சலந்தரன், திரிபுரத்தசுரர் முதலானவர்களைக் கொன்று வெற்றி பெற்று விளங்கும் வலிமை பொருந்திய ஆண் யானை வடிவு கொண்ட தன்னைச் சேர்தற் பொருட்டு வரும் நீண்ட மலர்மாலை அணிந்த உமையம்மை பெண்யானை வடிவு கொண்டு வந்து கூட முற்றிய ஒரு கொம்பையும் நீண்ட கையையும் மூன்று கண்களையும், இடைவிடாது மிகுந்து பொழியும் மதநீரையும் புள்ளிகளோடு கூடிய முகத்தையும் உடைய விநாயகனைப் பெற்றெடுத்து இவ்வுலகில் வாழும் மக்கட்குப் பெரிய துன்பங்களும் நோய்களும் வந்து பொருந்தாதவாறு செய்து காத்தருளிய சிவபிரானது இடம், அறுபத்து நான்கு கலைகளையும் முற்றக் கற்றுக் கரைகண்டு அவற்றின் வழி ஒழுகுவோர் சேர்ந்துறைவதும், அவ்வாறு ஒழுகாதார் அடைய முடியாததுமாகிய கழுமல வளநகராகும்.

குறிப்புரை :

உமாதேவி பெண்யானையின் வடிவாய், அசுரர் களைக் கொன்று வெற்றி சேர்ந்த ஆண்யானையினது தோள்களைச் சேர்ந்து ஒற்றைக் கொம்புடைய யானைமுகக் கடவுளைப் பெற்று இவ்வுலகம் துன்பம் எய்தாவகை பிரிவு செய்தவனது இடம் கழுமலவள நகர் என்கின்றது. செற்றிட்டே வெற்றிச்சேர் திகழ்ந்த தும்பி - சலந்தரன், திரிபுராதிகள் முதலிய அசுரர்களைக் கொன்று வெற்றியடைந்து விளங்கிய ஆண்யானையினது. மொய்ம்புறும் சேரே வாரா - தோளைப் பொருந்தும் புணர்ச்சியில் வந்து, நீள் கோதைத் தெரி யிழை - நீண்ட மாலையணிந்த உமாதேவியார். பிடியது வாய் - பெண்யானையின் வடிவாய். ஒற்றைச்சேர் முற்றல் கொம்புடைத் தடக்கை - ஒற்றையாகச் சேர்ந்த முற்றிய கொம்பினையுடைய துதிக்கையையும், மிக்கு ஓவாதேபாய் மாதானத்து உறு புகர் முக இறையைப் பெற்றிட்டு - மிகுந்து இடைவிடாது பாய்கின்ற பெரிய மதநீரோடு கூடிய யானைமுகக்கடவுளைப் பெற்று. இப்பார் பெருத்து மிக்க துக்கமும் - இவ்வுலகம் மிகப் பெரிய துக்கத்தையும். பேரா நோய் தாம் ஏயாமை - நீங்காத நோயையும் பொருந்தாதபடி. எட்டெட்டுக் கலைத்துறை கரை செலக் கற்றிட்டு - அறுபத்துநான்கு கலைகளையும் முடிவுபோகக் கற்று. காணாதார் - கரை காணாதார். சேரா - அடையாத.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 7

பத்திப்பேர் வித்திட்டே பரந்தவைம் புலன்கள்வாய்ப் பாலேபோகா
மேகாவாப் பகையறும் வகைநினையா
முத்திக்கே விக்கத்தே முடிக்குமுக் குணங்கள்வாய்
மூடாவூடா நாலந்தக் கரணமு மொருநெறியாய்ச்
சித்திக்கே யுய்த்திட்டுத் திகழ்ந்தமெய்ப் பரம்பொருள்
சேர்வார்தாமே தானாகச் செயுமவ னுறையுமிடங்
கத்திட்டோர் சட்டங்கங் கலந்திலங்கு நற்பொருள்
காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே.

பொழிப்புரை :

அன்பாகிய விதையை ஊன்றி, பரந்துபட்ட சுவை முதலிய ஐம்புலன்கள் வழி ஒழுகாது தம்மைக் காத்துக் காமம் முதலிய பகைகளைக் கடிந்து முத்திக்கு இடையூறாகும் முக்குணங்களின்வழி ஒழுகாது அந்தக்கரணங்கள் நான்கையும் ஒரு நெறிப்படுத்திச் சிந்தனையில் செலுத்தி விளங்கும், மெய்ப்பரம்பொருளாகிய தன்னையே எண்ணுபவர்களைத் தானாகச் செய்யும் சிவபெருமான் உறையும் இடம், ஆறு அங்கங்களையும் கற்றுணர்ந்தோர் தம்மோடு கலந்து விளங்கும் சிவபரம் பொருளின் திருவடிகளை இடைவிடாது தியானித்து வாழும் கழுமல வளநகராகும்.

குறிப்புரை :

அன்பாகிற விதையை இட்டு, புலன்வழி பொருந்தாது, பகையாறையும் கடிந்து, முத்திக்கு இடையூறாகிய சாத்விக இராஜஸ தாமஸங்களாகிய மூன்று குணங்கள் மூடாதபடி அந்தக்கரணம் ஒரு நெறிப்பட சிந்திக்க, மெய்ப்பொருளையே தியானிக்கின்ற சிவஞானிகளைச் சிவமாகவே செய்யும் சிவன் உறையும் இடம் கழுமலவளநகர் என்கின்றது. பரந்த ஐம்புலன்கள் வாய்ப்பாலே போகாமேகாவா - எங்கும் பரவியுள்ள சுவை முதலாகிய ஐம்புலன்களிடம் சென்று பற்றாதபடி காத்து, பகை அறும்வகை நினையா - காமமாதிய உட்பகை ஆறையும் நீங்கும்வகை நினைத்து. முத்திக்கே விக்கத்தே முடிக்கும் முக்குணங்கள் வாய்மூடாவூடா - முத்திக்கு இடையூறாக முடிக்கும் முக்குணங்களின் வழியை மூடிப்பிணங்கி. நால் அந்தக்கரணமும் ஒரு நெறியாய்ச் சித்திக்கே உய்த்திட்டு - மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் அந்தக் கரணங்கள் நான்கையும் ஒருநெறிப்படுத்திச் சிந்தனையில் செலுத்தி. திகழ்ந்த மெய்ப்பொருள் சேர்வார் - விளங்கிய சிவபரம்பொருளைத் தியானிப்பவர்கள். தாமே தானாகச்செயுமவன் - அவர்களனைவரையும் சிவமாகச் செய்யும் இறைவன். சட்டங்கம் கத்திட்டோர் கலந்திலங்கும் காலே ஓவாதார் - ஆறு வேதாங்கங்களையும் ஓதியுணர்ந்தோர்கள் ஒன்றி விளங்கும் சிவமாய நற்பொருளின் திருவடியை இடைவிடாது தியானிப்பவர்கள்.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 8

செம்பைச்சே ரிஞ்சிச்சூழ் செறிந்திலங்கு பைம்பொழிற்
சேரேவாரா வாரீசத் திரையெறி நகரிறைவன்
இம்பர்க்கே தஞ்செய்திட் டிருந்தரன் பயின்றவெற்
பேரார்பூநே ரோர்பாதத் தெழில்விர லவணிறுவிட்
டம்பொற்பூண் வென்றித்தோ ளழிந்துவந்த னஞ்செய்தாற்
காரார்கூர்வாள் வாணாளன் றருள்புரி பவனதிடங்
கம்பத்தார் தும்பித்திண் கவுட்சொரிந்த மும்மதக்
காரார்சேறார் மாவீதிக் கழுமல வளநகரே.

பொழிப்புரை :

செம்பினால் இயன்ற மதில்களால் சூழப்பெற்றுச் செறிந்து விளங்குவதும், பசுமையான பொழில்கள் சேர்ந்ததும், நீண்ட கடல்களின் அலைகளால் மோதப் பெறுவதுமாகிய இலங்காபுரி நகருக்கு இறைவனாகிய இராவணன், இவ்வுலக மக்கட்குத் துன்பங்கள் செய்து வாழ்ந்ததோடு சிவபிரான் உறையும் கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்டபோது அழகிய மலர் போன்ற ஓர் திருவடி விரல் ஒன்றை ஊன்றி அழகிய பொன்னணிகலன்கள் பூண்ட அவனது வெற்றி நிறைந்த தோள்வலிமையை அழித்து அவன் பிழை உணர்ந்து வந்தனம் செய்த அளவில் அவனுக்கு அரிய கூரிய வாளையும் நீண்ட வாழ்நாளையும் அப்பொழுதே அருள் புரிந்தருளிய சிவபெருமானது இடம்; கம்பங்களில் கட்டிய யானைகளின் வலியகன்னங்கள் முதலியன பொழிந்த மும்மதங்களால் நிலம் கரிய சேறாகும் வீதிகளை உடைய கழுமலநகராகும்.

குறிப்புரை :

செம்பினால் இயன்ற மதில் சூழந்த, மிகச் செறிவாக விளங்கும் பசிய பொழில் சேர்ந்து வரும் கடற்றிரைவந்து மோதும் நகருக்குத் தலைவனாகிய இராவணன், இவ்வுலக மக்களுக்குத் துன்பம் விளைத்ததோடுமட்டுமின்றி. சிவனுறையும் கைலையையும் எடுத்தலைச்செய்ய, மலர்போன்ற திருவடியின் விரல் ஒன்றால் ஊன்றி, பொன்னணிகள் பூண்டதோளை நெரியச்செய்து, அவன் வணங்க வாளும் வாழ்நாளும் அருள்செய்தவனது இடம் கழுமலம் என்கின்றது. செம்பைச் சேர் இஞ்சி - செப்புத் தகடு வேய்ந்த முகட்டினையுடைய மதில். வாரிசம் - கடல். இம்பர் - இவ்வுலகத்தவர். ஏர் ஆர் - எழுச்சியை அடையச் செய்து; அதாவது எடுக்க என்பதாகும். வந்தனம் செய்தாற்கு ஆர் ஆர் கூர்வாள் வாழ்நாள் அன்று அருள்புரிபவன் எனப் பிரிக்க. கம்பத்து ஆர் தும்பி திண் கவுள் சொரிந்த மும்மதக் கார் ஆர் சேறு ஆர் மாவீதி - கம்பத்திற்கட்டிய யானையினது திண்ணிய கன்னத்தினின்று சொரிந்த மும்மதத்தாலாகிய கரிய சேறு பொருந்திய பெரியவீதி.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 9

பன்றிக்கோ லங்கொண்டிப் படித்தடம் பயின்றிடப்
பானாமாறா னாமேயப் பறவையி னுருவுகொள
ஒன்றிட்டே யம்புச்சே ருயர்ந்தபங் கயத்தவ
னோதானோதா னஃதுணரா துருவின தடிமுடியுஞ்
சென்றிட்டே வந்திப்பத் திருக்களங்கொள் பைங்கணின்
றேசால்வேறோ ராகாரந் தெரிவுசெய் தவனதிடங்
கன்றுக்கே முன்றிற்கே கலந்திலந் நிறைக்கவுங்
காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.

பொழிப்புரை :

திருமால் பன்றி உருவம் எடுத்து இவ்வுலகைப் பிளந்து சென்று பாதாளம்வரை தேடியும், நீரில் தோன்றிய தாமரை மலரில் உறையும் நான்முகன் வேதங்களை ஓதுபவனாக இருந்தும் அதன் உண்மைப் பொருளை உணராது அன்னப்பறவை வடிவம் எடுத்து வானவெளியில் பறந்து சென்று தேடியும் தம் எதிரே தோன்றிய வடிவினது அடிமுடிகளைக் காணாது அயர்த்துச் சென்று வழிபட அவர்களின் பசுமையான கண்களுக்கு அழகிய நீலகண்டத்தோடு தனது வல்லமையால் வேறோர் வடிவம் தெரியச் செய்தவனது இடம் ஆன் கன்றுகள் முன்றிலில் நிறைந்து கலந்து நின்று இல்லத்தை நிறைக்கவும் வாய்க்கால்கள் வந்து மேல் ஏறிப்பாயவும் வளத்தால் நிறைந்து விளங்கும் கழுமல வளநகராகும்.

குறிப்புரை :

திருமால் பன்றியுருவெடுத்துப் பூமியைத் தோண்டியும், பங்கயத்தவன் அன்னமாய்ப் பறந்தும் அடிமுடி தேடியும் அறியாதே வணங்க, அக்கினிப்பிழம்பாகிய வேறோர் வடிவம் காட்டிய இறைவனிடம் கழுமலம் என்கின்றது. மால் தான் பன்றிக்கோலம் கொண்டு, இப்படித்தடம் பயின்று இடப்பான் ஆம் அம்புசேர் உயர்ந்த பங்கயத்தவனோ தான் மேய பறவையின் உருவுகொள ஒன்றிட்டு உருவினது அடிமுடியும் அஃது உணராது சென்றிட்டே வந்திப்ப, திருக்களம்கொள் பைங்கண் நின்று ஏசால், வேறு ஓர் ஆகாரம் தெரிவு செய்தவனிடம் எனப்பிரித்துக் கூட்டிப் பொருள்கொள்க. படித்தடம் - பூமி. இடப்பானாம் - தோண்டுவானாம். மால் - திருமால். தான்மேய பறவை - தான் ஊர்தியாக விரும்பியபறவை. அம்பு - நீர். தான் ஓதான் - தான் வேதங்களை ஓதியவனாக இருந்தும் அடிமுடியும் உணராது எனக்கூட்டுக. ஏசால் - வல்லமையால். ஆகாரம் - வடிவம். முன்றிற்கே கன்றுக்கே கலந்து இல்லம் நிறைக்கவும் - முன்றிலில் கன்று கலந்து வீட்டை வளத்தால் நிறைக்கவும், காலே வாரா மேலே பாய் - வாய்க்கால் வந்து மேலேறிப் பாயும் கழுமலம் என்க.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 10

தட்டிட்டே முட்டிக்கைத் தடுக்கிடுக்கி நின்றுணாத்
தாமேபேணா தேநாளுஞ் சமணொடு உழல்பவரும்
இட்டத்தா லத்தந்தா னிதன்றதென்று நின்றவர்க்
கேயாமேவா யேதுச்சொல் லிலைமலி மருதம்பூப்
புட்டத்தே யட்டிட்டுப் புதைக்குமெய்க்கொள் புத்தரும்
போல்வார்தாமோ ராமேபோய்ப் புணர்வுசெய் தவனதிடங்
கட்டிக்கால் வெட்டித்தீங் கரும்புதந்த பைம்புனற்
காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.

பொழிப்புரை :

தட்டைக் கையில்ஏந்தி வளைந்த கையில் தடுக்கை இடுக்கி நின்று உண்டு ஆடைகளால் தம்மைப் பேணாது நாள்தோறும் வருந்தித் திரியும் சமணர்களும், தம்விருப்பப்படி கேட்பவர்க்குத் தெளிவு ஏற்படாதவாறு பொருள் இது அன்று அதுதான் என்று வாய்க்கு வந்தபடி காரணம் கூறுபவரும், இலைகள் நெருங்கிய மருதமரத்தின் பூவை அரைத்துப் பின்புறத்தேப் பூசிச் சாயமூட்டிய ஆடையைத் தம் உடலின் பின்பாகத்தே சுற்றிக்கொண்டு உடலை மறைப்போரும் ஆகிய புத்தர்களும் போல்பவர் கண்டறியாதவாறு சென்று எழுந்தருளியுள்ள சிவபிரானது இடம் வெல்லக்கட்டிகளைத்தரும் இனிய கரும்பை வெட்டியதால் அக்கரும்பு தந்த இனியசாறு வாய்க்கால் வழியே வந்து மேல் ஏறிப்பாயும் வளமுடைய கழுமலவளநகராகும்.

குறிப்புரை :

சமணரும் புத்தரும் போல்வார் தம்மை அறியா வண்ணம் மறைப்பித்த இறைவனிடம் இது என்கின்றது. தட்டு இட்டே, முட்டிக்கை தடுக்கு இடுக்கி நின்று உணா தாமே பேணாதே நாளும் சமணொடும் உழல்பவரும் - மண்டையை ஏந்தி கைமுட்டியில் தடுக்கை இடுக்கிக்கொண்டு, நின்றுகொண்டு உண்டு, தாம் ஒன்றையும் பேணாதவர்கள்போல நாளும் சமண் கொள்கையோடு சுற்றுபவர்களும், இட்டத்தால் அத்தம் தான் இது அன்று அது என்று நின்றவர்க்கு ஏயாமே வாய் ஏது சொல் - விருப்பப்படி பொருள் இது அன்று அதுதான் என்று கேட்பவர்க்குப் பொருந்தாமல் வாயில் வந்தபடி காரணம் சொல்லும் (புத்தர்). இலை மலி மருதம்பூப் புட்டத்தே அட்டு இட்டு புதைக்கும் மெய்கொள் புத்தர் - மருதமரப் பூவை அரைத்து பின்பக்கத்துப் பூசி உடலை மறைக்கும் புத்தர்கள். ஓராமே - ஆராயாமல். புணர்வு - சூழ்ச்சி. கால் வெட்டி கட்டித் தீங்கரும்பு தந்த பைம்புனல் காலேவாரா மேலேயாய் - அடியை வெட்டிக் கட்டி இனிய கரும்புகள் தந்த சுவைநீர் கால்வழி வந்து மேலேறிப்பாயும் நகர் என்க.

பண் :வியாழக்குறிஞ்சி

பாடல் எண் : 11

கஞ்சத்தே னுண்டிட்டே களித்துவண்டு சண்பகக்
கானேதேனே போராருங் கழுமல நகரிறையைத்
தஞ்சைச்சார் சண்பைக்கோன் சமைத்தநற் கலைத்துறை
தாமேபோல்வார் தேனேரார் தமிழ்விர கனமொழிகள்
எஞ்சத்தேய் வின்றிக்கே யிமைத்திசைத்த மைத்தகொண்
டேழேயேழே நாலேமூன் றியலிசை யிசையியல்பா
வஞ்சத்தேய் வின்றிக்கே மனங்கொளப் பயிற்றுவோர்
மார்பேசேர்வாள் வானோர்சீர் மதிநுதன் மடவரலே.

பொழிப்புரை :

தாமரை மலரிலுள்ள தேனைக் குடித்துக்களித்த வண்டுகள் சண்பக மரச்சோலைகளில் உள்ள தேன் வண்டுகளோடு போரிடும் கழுமல வளநகர் இறைவனைத் தஞ்சமாகச் சார்ந்துள்ள சண்பைநகர்த் தலைவனும் தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் குறைவின்றிப் பாடியமைத்த தேனுக்கு நிகரான இப்பதிகப் பாடல்களை நல்ல கலைகளில் துறைபோய்த் தமக்குத் தாமே நிகராய் இருபத்தொரு பண்முறையினால் இயல்பாக வஞ்சனையின்றி மனம் பொருந்தப்பாடுபவர்களின் மார்பினில் தேவர்களால் போற்றப் பெறும் சிறப்புமிக்க பிறை போன்ற நெற்றியினை உடைய திருமகள் சேர்வாள்.

குறிப்புரை :

கழுமல நகரிறையைத் திருஞானசம்பந்தன் சொன்ன மொழிகளை இசையோடு குறையின்றி மனங்கொளப் பயிற்றுவோர் மார்பைத்திருமகள் சேர்வாள் எனப் பயன்கூறியது. கஞ்சத்தேன் உண்டிட்டு - தாமரையிலுள்ள தேனைக்குடித்து. சண்பகக் கானே தேனே போராரும் - சண்பகக் காட்டிலுள்ள வண்டோடு பொரும். தஞ்சை சார் - அடைக்கலமாகச் சாருகின்ற. தேன் நேர் ஆர் தமிழ் விரகன மொழிகள் - தேனுக்கு ஒப்பான தமிழ் விரகருடைய சொற்கள். எஞ்ச தேய்வு இன்றி - குறைவின்றி. ஏழே ஏழே நாலே மூன்று இயல் இசை இசை இயல்பா - இருபத்தொரு பண் முறையால். வானோர் சீர்மதி நுதல் மடவரல் - தேவர்களது சிறப்போடுகூடிய மதிபோன்ற நெற்றியினையுடைய திருமகள்.
சிற்பி