திருக்கழுமலம்


பண் :

பாடல் எண் : 1

சேவுயருந் திண்கொடியான் றிருவடியே சரணென்று சிறந்தவன்பால்
நாவியலு மங்கையொடு நான்முகன்றான் வழிபட்ட நலங்கொள்கோயில்
வாவிதொறும் வண்கமல முகங்காட்டச் செங்குமுதம் வாய்கள்காட்டக்
காவியிருங் கருங்குவளை கருநெய்தல் கண்காட்டுங் கழுமலமே.

பொழிப்புரை :

விடை வடிவம் எழுதி உயர்த்திய வலிமையான கொடியை உடைய சிவபிரானின் திருவடிகளே நமக்குச் சரண் என்று நாவின்கண் பொருந்திய கலைமகளோடு வந்து நான்முகன் சிறந்த அன்போடு வழிபட்ட அழகிய கோயில்; வாவிகள்தோறும் மலரும் வளவிய தாமரை மலர்கள் மகளிர்தம் முகங்களையும் செங்கழுநீர் மலர்கள் வாய்களையும், காவி மலர்கள், கருங்குவளை மலர்கள், கரிய நெய்தல் மலர்கள் ஆகியன கண்களையும் போலத் தோன்றி மலரும் கழுமலத்தின்கண் விளங்குவதாகும்.

குறிப்புரை :

`விடையுயர்த்த பெருமான் திருவடியே சரண்` என்று பிரமன் வழிபட்ட கோயில், நீர்ப்பூக்கள் நேரிழையார் அவயவங்களைக் காட்டும் கழுமலம் என்கின்றது. சே - இடபம். நா இயலும் மங்கை - சரஸ்வதி.

பண் :

பாடல் எண் : 2

பெருந்தடங்கண் செந்துவர்வாய்ப் பீடுடைய மலைச்செல்வி பிரியாமேனி
அருந்தகைய சுண்ணவெண்ணீ றலங்கரித்தா னமரர்தொழ வமருங்கோயில்
தருந்தடக்கை முத்தழலோர் மனைகள்தொறு மிறைவனது தன்மைபாடிக்
கருந்தடங்கண் ணார்கழல்பந் தம்மானைப் பாட்டயருங் கழுமலமே.

பொழிப்புரை :

அகன்ற விழிகளையும், பவளம் போலச் சிவந்த வாயையும் உடைய பெருமை மிக்க மலைமகளாகிய உமையம்மை பிரியாத திருமேனியில், அருமையான திருவெண்ணீற்றுப் பொடியை அழகுறப் பூசிய சிவபிரான் தேவர்கள் தன்னை வணங்க எழுந்தருளி யுள்ள திருக்கோயில், வள்ளன்மையோடு விளங்கும் நீண்ட கைகளை உடைய முத்தீ வேட்கும் அந்தணர்களின் வீடுகள்தோறும் கரியவான பெரிய கண்களை உடைய மகளிர் இறைவனுடைய இயல்புகளைக் கூறிக்கொண்டு கழற்சிக்காய் அம்மானை பந்து ஆகியன ஆடி மகிழும் கழுமல நகரின் கண் உள்ளது.

குறிப்புரை :

பெரியநாயகி பிரியாத மேனியில் திருநீற்றால் அலங்கரித்தான் கோயில் இது என்கின்றது. துவர் - பவளம். பீடு - பெருமை. தரும் தடக்கை - வழங்கும் விசாலமான கை. முத்தழலோர் - முத்தழல் ஓம்பும் அந்தணர். அந்தணர் வீட்டில் மகளிர் இறைவன் புகழைப்பாடி அம்மானை பந்து கழங்கு ஆடுகின்றார்கள் என்பதாம்.

பண் :

பாடல் எண் : 3

அலங்கன்மலி வானவருந் தானவரு மலைகடலைக் கடையப்பூதங்
கலங்கவெழு கடுவிடமுண் டிருண்டமணி கண்டத்தோன் கருதுங்கோயில்
விலங்கலமர் புயன்மறந்து மீன்சனிபுக் கூன்சலிக்குங் காலத்தானுங்
கலங்கலிலா மனப்பெருவண் கையுடைய மெய்யர்வாழ் கழுமலமே.

பொழிப்புரை :

மலர்மாலை அணிந்த தேவர்களும் அசுரர்களும் கூடி அலைகள் பொருந்திய திருப்பாற்கடலைக் கடைந்தபோது பூதங்களும் கலங்குமாறு எழுந்த கொடிய நஞ்சை, அவர்களைக் காத்தற்பொருட்டுத் தான் உண்டு, கரிய மணி போன்ற மிடற்றினன் ஆகிய சிவபிரான் தனது உறைவிடம் என்று மகிழ்வோடு நினையும் கோயில்; மலைகள் மீது தங்கி மழை பொழியும் மேகங்கள் மழை பொழிவதை மறத்தற்குரியதான மகரராசியில் சனி புகுந்து உணவு கிடைக்காமல் மக்கள் உடல் இளைக்கும் பஞ்ச காலத்திலும் மனம் கலங்காது பெரிய வள்ளன்மையோடு மக்களைக் காக்கும் உண்மையாளர் வாழும் கழுமலத்தின்கண் உள்ளது.

குறிப்புரை :

தேவரும் அசுரரும் பாற்கடலைக் கடைய எழுந்த விடத்தை உண்டு கறுத்தகண்டன் உறைகோயில் இது என்கின்றது. அலங்கல் - மாலை. விலங்கல் - மலை. புயல் - மேகம். மீன் சனி புக்கு - மகர ராசியில் சனி புகுந்து. ஊன் சலிக்கும் காலத்தானும் - உடல் வாடிய காலத்திலும். பஞ்சகாலத்தும் கலங்காத வள்ளல்கள் வாழும் நகர் என்க.

பண் :

பாடல் எண் : 4

பாரிதனை நலிந்தமரர் பயமெய்தச் சயமெய்தும் பரிசுவெம்மைப்
போரிசையும் புரமூன்றும் பொன்றவொரு சிலைவளைத்தோன் பொருந்துங்கோயில்
வாரிசைமென் முலைமடவார் மாளிகையின் சூளிகைமேன் மகப்பாராட்டக்
காரிசையும் விசும்பியங்குங் கணங்கேட்டு மகிழ்வெய்துங் கழுமலமே.

பொழிப்புரை :

மண்ணுலக மக்களை வருத்தியும், தேவர்களை அஞ்சுமாறு செய்தும், வெற்றி பெறும் இயல்பினராய்க் கொடிய போரை நிகழ்த்தும் அவுணர்களின் முப்புரங்களும் அழிய ஒப்பற்ற வில்லை வளைத்த சிவபிரான் உறையும் கோயில்; கச்சணிந்த மென்மையான தனங்களை உடைய மகளிர் மாடவீடுகளின் உச்சியில் நின்று தம் குழந்தைகளைப் பாடிப் பாராட்டும் இசையை மேகங்கள் உலாவும் வானவெளியில் உலாவும் கந்தருவர்கள் கேட்டு மகிழும் கழுமல நகரில் உள்ளதாகும்.

குறிப்புரை :

உலகை வருத்தி, தேவர் அஞ்ச, வெல்லும் வகை வில்லை வளைத்து புரம்எரித்த இறைவன் கோயில் இது என்கின்றது. பார் - பூமி. நலிந்து - வருத்தி. வார் - கச்சு. சூளிகை - உச்சி. மகளிர் மாளிகையின்மேல் குழந்தைகளைத் தாலாட்ட அதனைத் தேவர் கேட்டு மகிழும் கழுமலம் என்க.

பண் :

பாடல் எண் : 5

ஊர்கின்ற வரவமொளி விடுதிங்க ளொடுவன்னி மத்தமன்னும்
நீர்நின்ற கங்கை நகு வெண்டலைசேர் செஞ்சடையா னிகழுங் கோயில்
ஏர்தங்கி மலர்நிலவி யிசைவெள்ளி மலையென்ன நிலவிநின்ற
கார்வண்டின் கணங்களாற் கவின்பெருகு சுதைமாடக் கழுமலமே.

பொழிப்புரை :

ஊர்ந்து செல்லும் அரவு, ஒளிவிடும் திங்கள், வன்னி, ஊமத்த மலர், நீர்வடிவான கங்கை, நகும் வெண்டலை ஆகியன சேர்ந்த செஞ்சடையை உடைய சிவபிரான் எழுந்தருளியுள்ள கோயில்; அழகு பொருந்திய வெள்ளி மலைகள் போல விளங்கி நிற்பனவும் மலர்களால் அலங்கரிக்கப்பெற்று அவற்றை மொய்க்கும் கரிய வண்டுகளின் கணங்களால் சூழப்பெற்றுக் கவின்மிகுவனவுமாய வெண்மையான சுதையால் அமைந்த மாட வீடுகள் நிறைந்த கழுமலநகரில் உள்ளது.

குறிப்புரை :

அரவம், மதி, வன்னி, ஊமத்தம், கங்கை, கபாலம் இவை பொருந்திய செஞ்சடையான் கோயில் கழுமலம் என்கின்றது. ஏர் - அழகு.

பண் :

பாடல் எண் : 6

தருஞ்சரதந் தந்தருளென் றடிநினைந்து தழலணைந்து தவங்கள்செய்த
பெருஞ்சதுரர் பெயலர்க்கும் பீடார்தோ ழமையளித்த பெருமான்கோயில்
அரிந்தவய லரவிந்த மதுவுகுப்ப வதுகுடித்துக் களித்துவாளை
கருஞ்சகட மிளகவளர் கரும்பிரிய வகம்பாயுங் கழுமலமே.

பொழிப்புரை :

மெஞ்ஞானியர்க்குத் தரும் உண்மை ஞானத்தை எங்கட்கும் தந்தருள் என்று திருவடிகளை நினைந்து, தீ நடுவில் நின்று தவம் செய்யும் பெரிய சதுரப்பாடு உடையவர்கட்கும் மழை நீரில் நின்று தவமியற்றுபவர்கட்கும் பெருமை மிக்க தோழமையை வழங்கியருளும் சிவபிரான் உறையும் கோயில்; நெல்லறுவடை செய்த வயலில் முளைத்த தாமரை மலர்கள் தேனைச் சொரிய, அதனைக் குடித்துக் களித்த வாளை மீன்கள் வயற்கரைகளில் நிற்கும் பெரிய வண்டிகள் நிலைபெயரவும் கரும்புகள் ஒடியவும் துள்ளிப்பாயும் கழுமல வளநகரில் உள்ளதாகும்.

குறிப்புரை :

அருளுக என்று அடிநினைந்து, தீ நடுவில் தவஞ் செய்யும் சதுரர்க்கும், தோழமை தந்த பெருமான் கோயில் இது என்கின்றது. சரதம் - துணிவு. பீடு - பெருமை. அரிந்தவயல் - அறுத்த வயலிலே. அரவிந்தம் - தாமரை. வாளைமீன் தாமரைத் தேனைக் குடித்துப் பெரிய வண்டி இளக, கருப்பங்காடு விலகப் பாயும் கழுமலம் என்க.

பண் :

பாடல் எண் : 7

புவிமுதலைம் பூதமாய்ப் புலனைந்தாய் நிலனைந்தாய்க் கரண நான்காய்
அவையவைசேர் பயனுருவா யல்லவுரு வாய்நின்றா னமருங்கோயில்
தவமுயல்வோர் மலர்பறிப்பத் தாழவிடு கொம்புதைப்பக் கொக்கின்காய்கள்
கவணெறிகற் போற்சுனையிற் கரைசேரப் புள்ளிரியுங் கழுமலமே.

பொழிப்புரை :

மண், புனல் முதலிய பூதங்கள் ஐந்து. சுவை ஒளி முதலிய புலன்கள் ஐந்து. அவற்றுக்கு இடமாகிய மெய், வாய் முதலிய பொறிகள் ஐந்து. வாக்கு பாதம் முதலிய செய்கருவிகள் ஐந்து. மனம் புத்தி முதலிய உட்கருவிகள் நான்கு ஆகிய ஆன்ம தத்துவங்களாகவும் அவற்றின் பயனாகவும், உருவமாகவும் அருவமாகவும் நிற்கின்ற சிவபிரான் எழுந்தருளிய கோயில், தவம் செய்ய முயல்வோர் இறைவனை அருச்சிக்க மரங்களில் பூத்த மலர்களைப் பறித்துக் கொண்டு விடுத்த கொம்புகள் நிமிர்ந்து தாக்குதலால் மாமரத்தில் காய்த்த காய்கள் விண்டு கவணிலிருந்து வீசப்பட்ட கல்போல சுனைகளில் வீழ ஆங்குறைந்த பறவைகள் அஞ்சி அகலும் வளமான கழுமலவளநகரில் உள்ளதாகும்.

குறிப்புரை :

ஐம்பூதமாய், ஐம்புலனாய், ஐம்பொறியாய், நாற்கரணமாய், அவற்றின்பயனாய், உருவாய், அருவாய் நின்றான் அமரும் கோயில் இது என்கின்றது. நிலன் ஐந்து - புலன்கள் தோன்றுதற்கு இடமாய ஐம்பொறிகள். கரணம் நான்கு - மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பன. அவை அவை சேர்பயன் உருவாய் - பூத முதலியவற்றைச் சேர்ந்தபயனே வடிவாய்; என்றது பூதப்பயனாய சுவை முதலியதன் மாத்திரை ஐந்தும், புலனைந்தின் பயனாய பொறியின்பம் ஐந்தும், நிலனைந்தின் பயனாய புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என்ற ஒழுக்கம் ஐந்தும், கரணம் நான்கின் பயனாய நினைத்தலும் புத்தி பண்ணலும் சிந்தித்தலும் இது செய்வேன் என அகங்கரித்து எழுதலுமாகிய நான்கும் கொள்ளப்பெறும். அல்ல வுருவாய் - இவையல்லாத அருவாய ஞானமாய். பூப்பறிப்போர் விட்ட பூங்கொம்புகள் சென்று தாக்க மாங்காய்கள் கவண்கல்லைப் போலச் சுனைக்கரையில் விழப் பறவைகள் அஞ்சியகலும்நகர் என்க.

பண் :

பாடல் எண் : 8

அடல்வந்த வானவரை யழித்துலகு தெழித்துழலு மரக்கர்கோமான்
மிடல்வந்த விருபதுதோ ணெரியவிரற் பணிகொண்டோன் மேவுங்கோயில்
நடவந்த வுழவரிது நடவொணா வகைபரலாய்த் தென்றுதுன்று
கடல்வந்த சங்கீன்ற முத்துவயற் கரைகுவிக்குங் கழுமலமே.

பொழிப்புரை :

வலிமை பொருந்திய தேவர்கள் பலரை அழித்து உலகை அச்சுறுத்தித் திரிந்த அரக்கர் தலைவனாகிய இராவணனின் வலிமைமிக்க இருபது தோள்களையும் கால் விரலால் நெரிய ஊன்றி அவனைப் பணிகொண்ட சிவபிரான் எழுந்தருளியுள்ள கோயிலை உடையது, நாற்று நடவந்த உழவர்கள் இவை நாற்று நடுவதற்கு இடையூறாய்ப் பரற்கற்கள் போலத் தோன்றுகின்றனவே என்று கூறுமாறு கடலின்கண் இருந்துவந்த சங்குகள் முத்துக்களை வயல்களில் ஈன்று குவிக்கும் கழுமலமாகும்.

குறிப்புரை :

தேவர்களை அழித்து உலகை வருத்தி உழலும் இராவணனது இருபது தோள்களும் நெரிய விரலூன்றிய சிவபெருமான் உறையுங்கோயில் நாற்று நடவந்த உழவர்கள் பருக்கைக் கல்லாக இருக்கிறதென்று எண்ணி முத்துக்களை வரப்பில் குவிக்கும் கழுமலம் என்கின்றது. அடல் - வலிமையோடு. ஒழித்து - கொன்று. மிடல் - வலிமை. பரல் ஆய்த்து - பருக்கைக் கல்லாயிற்று. துன்று - நெருங்கிய. இது நெய்தலோடு தழீஇய மருதம் என்பதை விளக்கிற்று.

பண் :

பாடல் எண் : 9

பூமகள்தன் கோனயனும் புள்ளினொடு கேழலுரு வாகிப்புக்கிட்
டாமளவுஞ் சென்றுமுடி யடிகாணா வகைநின்றா னமருங்கோயில்
பாமருவுங் கலைப்புலவோர் பன்மலர்கள் கொண்டணிந்து பரிசினாலே
காமனைகள் பூரித்துக் களிகூர்ந்து நின்றேத்துங் கழுமலமே.

பொழிப்புரை :

திருமகளின் கேள்வனாகிய திருமாலும், நான் முகனும் பன்றி உருவம் எடுத்தும், அன்னப்பறவை வடிவமெடுத்தும், தேடப் புகுந்து தம்மால் ஆமளவும் சென்று அடிமுடி காணாதவராய்த் தோற்று நிற்க, அழலுருவாய் ஓங்கி நின்ற சிவபிரான் எழுந்தருளிய கோயிலையுடையது, பல்வகைப் பாக்களில் அமைந்துள்ள அருங்கலைகளை அறிந்த புலவர்கள் பல மலர்களைக் கொண்டு அருச்சித்து முறையோடு விருப்பங்கள் நிறைவேறக்கண்டு களிகூர்ந்து போற்றும் கழுமல நகராகும்.

குறிப்புரை :

பிரமனும் திருமாலும் அன்னமாயும், பன்றியாயும் அடிமுடிகாணப் பெறாதான் அமருங்கோயில் புலவர்கள் பூக்கொண்டு அணிந்து இஷ்டத்தை நிறைவேற்ற வழிபாடு செய்யும் கழுமலம் என்கின்றது. பூ மகள் தன் கோன் - இலக்குமி நாயகனாகிய திருமால். புள் - பறவையாகிய அன்னம். கேழல் - பன்றி. ஆம் அளவும் - ஆணவத்தால் விளைந்த தற்போதம் கெடுமளவும். காமனை - விருப்பம்.

பண் :

பாடல் எண் : 10

குணமின்றிப் புத்தர்களும் பொய்த்தவத்தை மெய்த்தவமாய் நின்றுகையில்
உணன்மருவுஞ் சமணர்களு முணராத வகைநின்றா னுறையுங்கோயில்
மணமருவும் வதுவையொலி விழவினொலி யிவையிசைய மண்மேற்றேவர்
கணமருவு மறையினொலி கீழ்ப்படுக்க மேற்படுக்குங் கழுமலமே.

பொழிப்புரை :

நற்குணங்கள் இல்லாத புத்தர்களும், பொய்த்தவத்தை மெய்த்தவமாய் எண்ணிக் கையில் உணவேற்று உண்டு வாழும் சமணர்களும், அறிய முடியாதவாறு நின்ற சிவபிரான் உறையும் கோயிலை உடையது, ஆடவர் பெண்டிரை மணக்கும் திருமணத்தில் எழும் ஆரவாரமும், திருவிழாக்களின் ஓசையும், பூசுரர்களாகிய அந்தணர்கள் ஓதும் வேத ஒலியை அடங்குமாறு செய்து மிகுந்து ஒலிக்கும் கழுமல நகராகும்.

குறிப்புரை :

குணமில்லாமல் புத்தர்களும், பொய்த்தவத்தை மெய்த்தவமாக்காட்டியொழுகும் சமணர்களும், உணராதவகை நின்றான் கோயில், திருமணவொலியும், விழவொலியும் தம்முட் கலக்க, பூவுலகில் தேவர்கள் கூட்டம் சேருங்கால் உளதாகும் வேதவொலி அடங்க, அவை மேற்பட ஒலிக்கும் கழுமலம் என்கின்றது. வதுவை - தாலிகட்டுங் கல்யாணம்.

பண் :

பாடல் எண் : 11

கற்றவர்கள் பணிந்தேத்துங் கழுமலத்து ளீசன்றன் கழன்மேனல்லோர்
நற்றுணையாம் பெருந்தன்மை ஞானசம் பந்தன்றா னயந்துசொன்ன
சொற்றுணையோ ரைந்தினொடைந் திவைவல்லார் தூமலராள் துணைவராகி
முற்றுலக மதுவாண்டு முக்கணா னடிசேர முயல்கின்றாரே.

பொழிப்புரை :

கற்றவர்களாலே பணிந்து வழிபடப்பெறும் கழுமலத்துள் விளங்கும் இறைவருடைய திருவடிகளின் மேல், நல்லோர்க்கு நற்றுணையாகும் பெருந்தன்மையையுடைய ஞானசம்பந்தன் விரும்பிப் போற்றிப்பாடிய, ஓதுவார்களுக்குத் துணையாய் அமைந்த சொற்களையுடைய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் வல்லவர், திருமகள் கேள்வராய் இவ்வுலகம் முழுவதையும் அரசாண்டு சிவனடி கூடும் முயற்சியைச் செய்கின்றவராவர்.

குறிப்புரை :

கழுமலத்தீசன் திருவடிமேல், கற்றவர் நற்றுணையாகிய ஞானசம்பந்தன் சொன்ன திருப்பாடல் பத்தும் வல்லார் திருமகள் கணவராகி உலகமுழுதாண்டு சிவபெருமான் திருவடி சேரமுயல் கின்றார் என்கின்றது. சொல்துணை - ஓதுவார்க்குத் துணையான சொல்.
சிற்பி