திருமுதுகுன்றம்


பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 1

மெய்த்தாறு சுவையுமே ழிசையுமெண் குணங்களும் விரும்புநால்வே
தத்தாலு மறிவொண்ணா நடைதெளியப் பளிங்கேபோ லரிவைபாகம்
ஒத்தாறு சமயங்கட் கொருதலைவன் கருதுமூ ருலவுதெண்ணீர்
முத்தாறு வெதிருதிர நித்திலம்வா ரிக்கொழிக்கு முதுகுன்றமே.

பொழிப்புரை :

மெய்யினால் அறியத்தக்கதாகிய ஆறு சுவைகள் ஏழிசைகள், எண் குணங்கள், எல்லோராலும் விரும்பப்பெறும் நான்கு வேதங்கள் ஆகியவற்றால் அறிய ஒண்ணாதவனும், அன்போடு நடத்தலால் தெளியப் பெறுபவனும், பளிங்கு போன்றவனும், உமையம்மையை ஒரு பாகமாக உடையவனும், ஆறு சமயங்களாலும் மாறுபாடின்றி ஏற்றுக் கொள்ளப் பெறும் ஒரே தலைவனும் ஆகிய சிவபிரான் விரும்பும் ஊர், தெளிந்த நீர் நிறைந்த மணிமுத்தாறு மலையின்கண் உள்ள மூங்கில்கள் உதிர்க்கும் முத்துக்களை வாரிக்கொணர்ந்து கரையிற் கொழிக்கும் திருமுதுகுன்றமாகும்.

குறிப்புரை :

சுவைகளும், இசையும், எண்குணங்களும், வேதமும் அறியவொண்ணாத தலைவன், அகச்சமயமாறுக்கும் ஒரே தலைவன் திருவுளங்கொண்ட ஊர், மணிமுத்தாறு மூங்கில் உதிர்த்த முத்துக்களைக் கொழிக்கும் திருமுதுகுன்றமே என்கின்றது. மெய்த்து ஆறு சுவை - உடற்கண்ணதாகிய உப்பு, புளிப்பு, கார்ப்பு, கைப்பு, தித்திப்பு, துவர்ப்பு என்னும் ஆறுசுவைகள். சுவை, இசை, வேதம் முதலியன மாயா காரியங்கள் ஆதலின் அவற்றால் அறியப்பெறாதவன் ஆயினன் இறைவன். பளிங்கே போல் - வெண்பளிங்கு போல், `சுத்த ஸ்படிக சங்காசம்` என்று இறைவனுக்கு நிறம் கூறுகிறது சிவாகமம். வெதிர் - மூங்கில்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 2

வேரிமிகு குழலியொடு வேடுவனாய் வெங்கானில் விசயன்மேவு
போரின்மிகு பொறையளந்து பாசுபதம் புரிந்தளித்த புராணர்கோயில்
காரின்மலி கடிபொழில்கள் கனிகள்பல மலருதிர்த்துக் கயமுயங்கி
மூரிவளங் கிளர்தென்றல் திருமுன்றிற் புகுந்துலவு முதுகுன்றமே.

பொழிப்புரை :

தேன் மணம் மிகும் கூந்தலையுடைய உமையம்மை யோடு வேட்டுவ உருவந்தாங்கி அருச்சுனன் தவம் புரியும் கொடிய கானகத்திற்குச் சென்று அவனோடு போர் உடற்றி அவன் பொறுமையை அளந்து அவனுக்குப் பாசுபதக் கணையை விரும்பி அளித்த பழையோனாகிய சிவபிரான் உறையும் கோயில், மழையால் செழித்த மணமுடைய சோலைகளில் கனிகளையும் பல மலர்களையும் உதிர்த்து, நீர் நிலைகளைப் பொருந்தி வலிய வளமுடைய தென்றல் காற்று அழகிய வீடுகள் தோறும் புகுந்து உலவும் திருமுதுகுன்றமாகும்.

குறிப்புரை :

விசயனது பொறுமையளந்து பாசுபதம் அருளிய பரமன் கோயில், தென்றற்காற்று பொழிலில் கனியுதிர்த்து, மலர்சிந்தி, முன்றிலில் உலாவும் முதுகுன்றம் என்கின்றது. வேரி - தேன். மலர் உதிர்த்து என்றது தென்றலின் மணமுடைமையையும், கயம் முயங்கி என்பது குளிர்மையையும் உணர்த்தின. கயம் - குளம். மூரி - வலிமை.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 3

தக்கனது பெருவேள்விச் சந்திரனிந் திரனெச்ச னருக்கனங்கி
மிக்கவிதா தாவினொடும் விதிவழியே தண்டித்த விமலர்கோயில்
கொக்கினிய கொழும்வருக்கை கதலிகமு குயர்தெங்கின் குலைகொள்சோலை
முக்கனியின் சாறொழுகிச் சேறுலரா நீள்வயல்சூழ் முதுகுன்றமே.

பொழிப்புரை :

தக்கன் செய்த பெருவேள்வியில் சந்திரன், இந்திரன், எச்சன், சூரியன், அனலோன், பிரமன், முதலியவர்களை வீரபத்திரனைக் கொண்டு தண்டித்த விமலனாகிய சிவபெருமான் உறையும் கோயில், இனிய மாங்கனிகள், வளமான பலாக்கனிகள், வாழைக் கனிகள் ஆகிய முக்கனிகளின் சாறு ஒழுகிச் சேறு உலராத நீண்ட வயல்களும் குலைகளையுடைய கமுகு, தென்னை ஆகிய மரங்கள் நிறைந்த சோலைகளும் சூழ்ந்த திருமுதுகுன்றமாகும்.

குறிப்புரை :

சிவத்துரோகியான தக்கன் யாகத்திற்குச் சென்ற குற்றத்திற்காகச் சந்திரன் முதலியோரை முறைப்படி தண்டித்த இறைவன் கோயில், முக்கனியின் சாறொழுகிச் சேறுலரா வயல்சூழ்ந்த முதுகுன்றம் என்கின்றது. எச்சன் - யாகபுருஷன். அருக்கன் - சூரியன். அங்கி - அக்கினி. விதாதா - பிரமன். கொக்கு - மாமரம். வருக்கை - பலா. கதலி - வாழை.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 4

வெம்மைமிகு புரவாணர் மிகைசெய்ய விறலழிந்து விண்ணுளோர்கள்
செம்மலரோ னிந்திரன்மால் சென்றிரப்பத் தேவர்களே தேரதாக
மைம்மருவு மேருவிலு மாசுணநா ணரியெரிகால் வாளியாக
மும்மதிலு நொடியளவிற் பொடிசெய்த முதல்வனிட முதுகுன்றமே.

பொழிப்புரை :

கொடுமை மிகுந்து முப்புரங்களில் வாழும் அவுணர்கள் தீங்கு செய்ய அதனால் தங்கள் வலிமை அழிந்து தேவர்களும், பிரமனும், இந்திரனும், திருமாலும் சென்று தங்களைக் காத்தருளுமாறு வேண்ட, தேவர்களைத் தேராகவும், மேகங்கள் தவழும் உயர்ச்சியையுடைய மேருமலையை வில்லாகவும், வாசுகி என்னும் பாம்பை நாணாகவும், திருமால், அனலோன், வாயுவாகிய முத்தேவர்களையும் அம்பாகவும் கொண்டு அவுணர்களின் மும்மதில்களையும் ஒரு நொடிப் பொழுதில் பொடி செய்ததலைவனாகிய சிவபிரானது இடம், திருமுதுகுன்றமாகும்.

குறிப்புரை :

முப்புராதிகள் தீங்கு செய்ய, தேவர்கள் வேண்டு கோளின் வண்ணம், அவர்களைத் தேர் முதலிய சாதனங்களாகக் கொண்டு எரித்த முதல்வனிடம் முதுகுன்றம் என்கின்றது. விறல் - வலிமை. மாசுணம் - வாசுகியென்னும் பாம்பு. அரி, எரி, கால் வாளியாக - திருமாலும், அங்கியும், காற்றுமாகிய முத்தேவர்களும் அம்பாக.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 5

இழைமேவு கலையல்கு லேந்திழையா ளொருபாலா யொருபாலெள்கா
துழைமேவு முரியுடுத்த வொருவனிருப் பிடமென்ப ரும்பரோங்கு
கழைமேவு மடமந்தி மழைகண்டு மகவினொடும் புகவொண்கல்லின்
முழைமேவு மால்யானை யிரைதேரும் வளர்சாரன் முதுகுன்றமே.

பொழிப்புரை :

மேகலை என்னும் அணிகலன் பொருந்திய அல்குலையும், அழகிய முத்துவடம் முதலியன அணிந்த மேனியையும் உடையவளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு தனக்குரியதான ஒருபாகத்தே மான்தோலை இகழாது உடுத்த ஒப்பற்றவனாகிய சிவபிரானது இருப்பிடம், ஊரின் நடுவே உயர்ந்த மூங்கில்மேல் ஏறி அமர்ந்த மடமந்தி, மழை வருதலைக் கண்டு அஞ்சித்தன் குட்டியோடும் ஒலி சிறந்த மலைக்குகைகளில் ஒடுங்குவதும், பெரியயானைகள் இரை தேர்ந்து திரிவதும் நிகழும் நீண்ட சாரலையுடைய திருமுதுகுன்றமாகும்.

குறிப்புரை :

ஒருபால் உமை விளங்க. ஒருபால் மான்தோலையுடுத்திய ஒருவன் இருப்பிடம் மந்தி மழையைக் கண்டு குட்டியோடு குகையையடைய, யானை இரைதேடும் முதுகுன்றம் என்கின்றது. இழை - அணி. எள்காது - இகழாது. உழை மேவும் உரி - மானினது தோல். கழை - மூங்கில். மந்தி - பெண் குரங்கு. முழை - குகை.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 6

நகையார்வெண் டலைமாலை முடிக்கணிந்த நாதனிடம் நன்முத்தாறு
வகையாரும் வரைப்பண்டங் கொண்டிரண்டு கரையருகு மறியமோதித்
தகையாரும் வரம்பிடறிச் சாலிகழு நீர்குவளை சாயப்பாய்ந்து
முகையார்செந் தாமரைகண் முகமலர வயல்தழுவு முதுகுன்றமே.

பொழிப்புரை :

சிரித்தலைப் பொருந்திய வெண்மையான தலை மாலையை முடியில் அணிந்துள்ள நாதனாகிய சிவபிரானது இடம், நல்ல மணிமுத்தாறு வகை வகையான மலைபடு பொருள்களைக் கொண்டு நெல், கழுநீர், குவளை ஆகியன சாயுமாறு பாய்ந்து வந்து, தாமரை மொட்டுக்கள் முகம் மலரும்படி வயலைச் சென்றடையும் திருமுதுகுன்றமாகும்.

குறிப்புரை :

தலைமாலையணிந்த தலைவனிடம், மணிமுத்தாறு மலைப்பண்டங்களைக் கொண்டு இருகரையிலும் எடுத்து எறிந்து கரையையுடைத்துக்கொண்டு, நெல்லும் கழுநீரும் குவளையும் சாயப்பாய்ந்து, தாமரை மலர வயலைத்தழுவும் முதுகுன்றம் என்கின்றது. நகை - பல். வரைப்பண்டம் - மலைபடுதிரவியம்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 7

அறங்கிளரு நால்வேத மாலின்கீ ழிருந்தருளி யமரர்வேண்ட
நிறங்கிளர்செந் தாமரையோன் சிரமைந்தி னொன்றறுத்த நிமலர்கோயில்
திறங்கொண்மணித் தரளங்கள் வரத்திரண்டங் கெழிற்குறவர் சிறுமிமார்கள்
முறங்களினாற் கொழித்துமணி செலவிலக்கி முத்துலைப்பெய் முதுகுன்றமே.

பொழிப்புரை :

அறநெறி விளங்கித் தோன்றும் நான்கு வேதங்களை ஆலின்கீழ் இருந்து சனகாதியர்க்கு அருளி, தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, செந்நிறம் விளங்கும் தாமரையில் எழுந்தருளிய பிரமனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்த நிமலனாகிய சிவ பிரானது கோயில், முற்றிய மாணிக்கங்கள். முத்துக்கள் ஆகியன ஆற்றில் வருதலைக் கண்டு அழகிய குறவர் குடிப்பெண்கள் திரண்டு சென்று அவற்றை முறங்களால் வாரிமணிகளை விலக்கிப் புடைத்து முத்துக்களை அரிசியாக உலையில் பெய்து சிற்றில் இழைத்து விளையாடி மகிழும் திருமுதுகுன்றமாகும்.

குறிப்புரை :

ஆலின் கீழிருந்து சனகாதியர்க்கு வேதப்பொருளை அருளிச்செய்து, தேவர் வேண்டுகோட்கிரங்கிப் பிரமன் சிரங்கொய்த நிமலர் கோயில், குறச்சிறுமியர் முறத்தால் முத்தைக் கொழித்துச் சிற்றுலையிற் கொட்டும் முதுகுன்றம் என்கின்றது. தரளம் - முத்து. மணி - மாணிக்கங்கள்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 8

கதிரொளிய நெடுமுடிபத் துடையகட லிலங்கையர்கோன் கண்ணும்வாயும்
பிதிரொளிய கனல்பிறங்கப் பெருங்கயிலை மலையைநிலை பெயர்த்தஞான்று
மதிலளகைக் கிறைமுரல மலரடியொன் றூன்றிமறை பாடவாங்கே
முதிரொளிய சுடர்நெடுவாண் முன்னீந்தான் வாய்ந்தபதி முதுகுன்றமே.

பொழிப்புரை :

கதிரவன் போன்ற ஒளியுடைய நீண்ட மகுடங்களைச் சூடிய பத்துத் தலைகளையுடைய இராவணன் கண்களும், வாயும், ஒளிபரவும் தீ வெளிப்படச் சினங்கொண்டு பெரிய கயிலாயமலையை நிலைபெயர்த்த காலத்து, மதில்கள் சூழ்ந்த அளகாபுரிக்கு இறைவனாகிய குபேரன் மகிழுமாறு, மலர்போன்ற தன் திருவடி ஒன்றை ஊன்றி அவ் இராவணனைத் தண்டித்துப் பின் அவன் மறைபாடித் துதித்த அளவில் அவனுக்கு மிக்க ஒளியுள்ள நீண்ட வாளை முற்படத்தந்த சிவபிரான் எழுந்தருளிய பதி திருமுதுகுன்றமாகும்.

குறிப்புரை :

இராவணனுக்கு மறக்கருணையும் அறக்கருணையும் காட்டியாட்கொண்டவனிடம் முதுகுன்றம் என்கின்றது. அளகைக்கு இறை முரல - குபேரன் தன் பகைவனாகிப் புஷ்பக விமானத்தைக் கவர்ந்த இராவணன் ஒழிந்தான் என்று மகிழ்ச்சி ஒலிக்க.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 9

பூவார்பொற் றவிசின்மிசை யிருந்தவனும் பூந்துழாய் புனைந்தமாலும்
ஓவாது கழுகேன மாயுயர்ந்தாழ்ந் துறநாடி யுண்மைகாணாத்
தேவாருந் திருவுருவன் சேருமலை செழுநிலத்தை மூடவந்த
மூவாத முழங்கொலிநீர் கீழ்தாழ மேலுயர்ந்த முதுகுன்றமே.

பொழிப்புரை :

தாமரை மலராகிய அழகிய தவிசின்மிசை விளங்கும் பிரமனும், அழகிய துளசிமாலை அணிந்த திருமாலும், அன்னமாகவும், பன்றியாகவும் உருமாறி வானில் பறந்தும், நிலத்தை அகழ்ந்தும் இடைவிடாது தேடியும் உண்மை காண இயலாத தெய்வஒளி பொருந்திய திருவுருவை உடையவனாகிய சிவபிரான் எழுந்தருளிய மலை, ஊழிக் காலத்து உலகத்தை மூடுமாறு முழங்கி வந்த கடல்நீர் கீழ்ப்படத் தான் மேல் உயர்ந்து தோன்றும் திருமுதுகுன்றமாகும்.

குறிப்புரை :

அயனும், மாலும் ஆழ்ந்தும் உயர்ந்தும் தேடியும் அறியமுடியாத இறைவனிடம், ஊழியில் உயர்ந்த முதுகுன்றம் என்கின்றது. தவிசு - ஆசனம். துழாய் - துளசி. ஓவாது - இடைவிடாது. கழுகு - பறவையின் பொதுப் பெயராய் அன்னத்தையுணர்த்தியது. ஏனம் - பன்றி.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 10

மேனியிற்சீ வரத்தாரும் விரிதருதட் டுடையாரும் விரவலாகா
ஊனிகளா யுள்ளார்சொற் கொள்ளாது முள்ளுணர்ந்தங் குய்மின்றொண்டீர்
ஞானிகளா யுள்ளார்க ணான்மறையை முழுதுணர்ந்தைம் புலன்கள்செற்று
மோனிகளாய் முனிச்செல்வர் தனித்திருந்து தவம்புரியு முதுகுன்றமே.

பொழிப்புரை :

உடம்பில் துவராடை புனைந்த புத்த மதத்தினரும், விரிந்த ஓலைத் தடுக்கை உடையாகப் பூண்ட சமணர்களும், நட்புச் செய்து கோடற்கு ஏலாதவராய்த் தங்கள் உடலை வளர்த்தலையே குறிக்கோளாக உடைய ஊனிகளாவர். அவர்கள் சொற்களைக் கேளாது ஞானிகளாக உள்ளவர்களும், நான்மறைகளை உணர்ந்தவர்களும், ஐம்புலன்களை வென்ற மௌனிகளும், முனிவர்களாகிய செல்வர்களும், தனித்திருந்து தவம் புரியும் திருமுதுகுன்றை உள்ளத்தால் உணர்ந்து, தொண்டர்களே! உய்வீர்களாக.

குறிப்புரை :

தொண்டர்களே! புத்தரும் சமணருமாகிய ஊனிகளின் சொற்கொள்ளாது உள்ளுணர்ந்து உய்யுங்கள்! ஞானிகள் வேதத்தையுணர்ந்து ஐம்புலன்களையும் அடக்கி, மோனிகளாய்த் தனித்திருந்து தவம் புரியும் இடம் முதுகுன்றம் என்கின்றது. ஞானி - அறிவை வளர்ப்பவன். ஊனி - உடம்பை வளர்ப்பவன்.

பண் :மேகராகக்குறிஞ்சி

பாடல் எண் : 11

முழங்கொலிநீர் முத்தாறு வலஞ்செய்யு முதுகுன்றத் திறையைமூவாப்
பழங்கிழமைப் பன்னிருபேர் படைத்துடைய கழுமலமே பதியாக்கொண்டு
தழங்கெரிமூன் றோம்புதொழிற் றமிழ்ஞான சம்பந்தன் சமைத்தபாடல்
வழங்குமிசை கூடும்வகை பாடுமவர் நீடுலக மாள்வர்தாமே.

பொழிப்புரை :

ஆரவாரத்தோடு நிறைந்துவரும் மணிமுத்தாறு வலஞ்செய்து இறைஞ்சும் திருமுதுகுன்றத்து இறைவனை, முதுமையுறாததாய்ப் பழமையாகவே பன்னிரு பெயர்களைக் கொண்டுள்ள கழுமலப்பதியில் முத்தீ வேட்கும் தொழிலையுடைய தமிழ் ஞானசம் பந்தன் இயற்றிய இப்பதிகப் பாடல்களைப் பொருந்தும் இசையோடு இயன்ற அளவில் பாடி வழிபடுபவர் உலகத்தை நெடுங்காலம் ஆள்வர்.

குறிப்புரை :

முதுகுன்றநாதனைப் பன்னிருநாமம் படைத்த பழம் பதியாகிய காழியையிடமாகக்கொண்ட, தழலோம்பு தொழிலுடைய தமிழ் ஞானசம்பந்தன் அமைத்த பாடல்களை, இசை கூடும் வகை பாடுபவர்கள் உலகத்தை நெடுங்காலம் ஆள்வர் என்கின்றது. தழங்கு - ஒலிக்கின்ற. எரிமூன்று - ஆகவனீயம், காருகபத்யம், தக்ஷிணாக்கினி என்பன.
சிற்பி