திருத்தருமபுரம்


பண் :யாழ்மூரி

பாடல் எண் : 1

மாதர்ம டப்பிடியும் மட வன்னமு மன்னதோர்
நடை யுடைம் மலைமக டுணையென மகிழ்வர்
பூதவி னப்படைநின் றிசைபாடவு மாடுவ
ரவர்படர் சடைந்நெடு முடியதொர் புனலர்
வேதமொ டேழிசைபா டுவ ராழ்கடல் வெண்டிரை
யிரைந் நுரை கரை பொரு துவிம்மிநின் றயலே
தாதவிழ் புன்னை தயங் கும லர்ச்சிறைவண்டறை
யெழில் பொழில் குயில் பயில்தருமபு ரம்பதியே.

பொழிப்புரை :

விரும்பத்தக்க இளம்பிடியையும், இள அன்னத்தையும் போன்ற நடையினை உடையவளாகிய பார்வதி தேவியைத்தம் துணைவியாகக் கொண்டு மகிழ்பவரும், பூதப்படைகள் நின்று இசை பாட ஆடுபவரும், விரிந்த சடைகளையுடைய நீண்ட முடிமீது கங்கையை அணிந்தவரும் வேதங்களையும், ஏழிசைகளையும் பாடுபவரும் ஆகிய இறைவர்தம் இடமாக விளங்குவது ஆழ்ந்த கடலின் வெண்மையான அலைகள் ஆரவாரித்து நுரைகளோடு கரையைப் பொருது விளங்கவும், அதன் அயலில் புன்னை மரங்களில் பூத்த மகரந்தம் பொருந்திய மலர்களில் வண்டுகள் ஒலிக்கவும். அழகிய பொழில்களில் குயில்கள் பாடவும் விளங்கும் திருத்தருமபுரம் என்னும் நகராகும்.

குறிப்புரை :

மலைமகளைத் துணையாகக்கொண்டு மகிழ்ந்தவரும், பூதப்படை இசைபாட ஆடுபவரும், கங்கைச் சடையரும், வேதத்தையும் இசையையும் பாடுபவரும் ஆகிய இறைவர் இடம் தருமபுரம் என் கின்றது. பிடி - பெண்யானை. உமாதேவியின் பெருமித நடைக்குப் பெண்யானையும், நடையின் மென்மைக்கு அன்னமும் உவமமாயிற்று. தருமபுரம் நெய்தனிலச் சார்புடையதாதலின் புன்னை கூறப்பட்டது.

பண் :யாழ்மூரி

பாடல் எண் : 2

பொங்குந டைப்புகலில் விடை யாமவ ரூர்திவெண்
பொடி யணி தடங் கொண்மார் புபூணநூல் புரள
மங்குலி டைத்தவழும் மதி சூடுவ ராடுவர்
வளங் கிளர் புனலர வம்வைகிய சடையர்
சங்குக டற்றிரையா லுதை யுண்டுச ரிந்திரிந்
தொசிந் தசைந் திசைந் துசே ரும்வெண்மணற் குவைமேல்
தங்குக திர்ம்மணிநித் தில மெல்லிரு ளொல்கநின்
றிலங் கொளிந் நலங் கெழிற் றருமபு ரம்பதியே.

பொழிப்புரை :

சினம் பொங்கிய நடையினைஉடையதாய், உவமை சொல்லுதற்கு வேறொன்று இல்லாததாய் விளங்கும் விடையை ஊர்தியாகக் கொண்டவரும், திருநீறு அணிந்த அகன்ற மார்பின்கண் பூணூல் புரள வானத்தில் தவழும் பிறைமதியைச் சூடி ஆடுபவரும், வளமைகளைத் தருவதாகிய கங்கை, அரவம் ஆகியன தங்கிய சடையினருமாகிய சிவபிரானாரது இடம், கடல் அலைகளால் அலைக்கப் பெற்ற சங்குகள் சரிந்து இரிந்து, ஒசிந்து, அசைந்து, இசைந்து வெண்மணற் குவியலின் மேல் ஏறித் தங்கி ஈனும் ஒளி பொருந்திய முத்துமணிகளால் மெல்லிய இருள் விலகி ஒளி சிறந்து தோன்றும் அழகிய திருத்தருமபுரமாகிய நகரமாகும்.

குறிப்புரை :

ஊர்தி விடையாம் நீறணிந்தமார்பில் பூணுநூல் புரள மதிசூடுவர், ஆடுவர், கங்கையும் அரவும் தங்கிய சடையர் பதி தருமபுரம் என்கின்றது. பொங்கிய நடையோடு, வேறு அடைக்கலத்தான மில்லாத விடையாம் அவர் வாகனம் என்பதாம். மங்குல் - ஆகாயம். சங்கு கடல் அலையால் மோதப்பெற்று மணற் குவியல்மேல் தங்கியதால் `ஈனப்பெற்ற முத்துக்கள் இருளோட்டி விளங்கும் நலங்கெழுமும் தருமபுரம்` என்க. சங்கு சரிந்து இரிந்து ஒசிந்து அசைந்து இசைந்து சேரும் மணல் எனக் கூட்டுக. இது மணல்மேட்டின்மேல் சங்கு ஏறிய அருமைப்பாட்டை அறிவிக்கின்றது.

பண் :யாழ்மூரி

பாடல் எண் : 3

விண்ணுறு மால்வரைபோல் விடை யேறுவ ராறுசூ
டுவர் விரி சுரியொளி கொடோடுநின் றிலங்கக்
கண்ணுற நின்றொளிருங் கதிர் வெண்மதிக் கண்ணியர்
கழிந் தவ ரிழிந் திடும் முடைதலை கலனாப்
பெண்ணுற நின்றவர் தம் முரு வம்மயன் மாறொழவ்
வரி வையைப் பிணைந் திணைந் தணைந்ததும் பிரியார்
தண்ணிதழ் முல்லையொடெண் ணிதழ் மௌவன்ம ருங்கலர்
கருங் கழிந் நெருங் குநற் றருமபு ரம்பதியே.

பொழிப்புரை :

வானளாவிய பெரிய மலை போன்ற விடையின்மேல் ஏறி வருபவரும், கங்கையை அணிந்தவரும், விரிந்து சுருண்டு ஒளிதரும் தோடு விளங்கக் கண்ணைக் கவரும் ஒளிதரும் பிறைமதியாகிய கண்ணியை முடியிற் சூடியவரும், முடை நாறும் தலையோட்டை உண்கலனாகக் கொண்டவரும், உமையம்மையைக் கூடிப் பிணைந்து இணைந்து அணைத்துத் தம் திருமேனியில் ஒரு பாதியாகக் கொண்டவரும், தமது உருவத்தை அயனும் மாலும் தொழ நின்றவருமாகிய சிவபிரானாரது இடம், குளிர்ந்த இதழ்களையுடைய முல்லை மலர்களோடு எட்டு இதழ்களையுடைய காட்டு மல்லிகை மலர்கள் மலர்ந்து மணம் வீசுவதும், கரிய உப்பங்கழிகள் நிறைந்ததுமாகிய திருத்தருமபுரம் என்னும் நன்னகராகும்.

குறிப்புரை :

விண்ணளாவிய மலைபோன்ற விடையை ஊர்தியாக ஏறுவர்; கங்கையைச் சூடுவர்; தோடு விளங்க, பிறைக்கண்ணி சூடுவர்; பிரமகபாலத்தை உண் கலனாகக் கொண்டு, பெண் பாதியாக நின்றவர்; தம் வடிவத்தை அயனும் மாலும் தொழ நின்றவர். இவர் பதி தருமபுரம் என்கின்றது. மால்வரை - பெரிய மலை. கண்ணியர் - தலைமாலையையுடையவர். கழிந்தவர் - இறந்தவர். மௌவல் - மல்லிகை. மல்லிகைக்கு எட்டிதழ் உண்மை உணர்த்தப் பெறுகின்றது.

பண் :யாழ்மூரி

பாடல் எண் : 4

வாருறு மென்முலைநன் னுத லேழையொ டாடுவர்
வளங் கிளர் விளங் குதிங் கள்வைகிய சடையர்
காருற நின்றலரும் மலர்க் கொன்றையங் கண்ணியர்
கடுவ் விடை கொடி வெடி கொள்காடுறை பதியர்
பாருற விண்ணுலகம் பர வப்படு வோரவர்
படு தலைப் பலி கொளல் பரிபவந் நினையார்
தாருறு நல்லரவம் மலர் துன்னிய தாதுதிர்
தழை பொழின் மழைந் நுழை தருமபு ரம்பதியே.

பொழிப்புரை :

கச்சணிந்த மென்மையான தனங்களையுடைய உமையம்மையோடு கூடி நடனம் ஆடுபவரும், உலகிற்கு வளம் சேர்க்கும் நிலவொளியைத் தரும் மதிசூடிய சடையினரும், கார் காலத்தே மலரும் கொன்றை மாலையைச் சூடியவரும், விரைந்து செல்லும் விடையைக் கொடியாகக் கொண்டவரும், அச்சந்தரும் சுடுகாட்டைத் தமக்குரிய இடமாகக் கொண்டவரும், மண்ணுலகத்தினர், விண்ணுல கத்தினர்களால் போற்றப்படுபவரும், அவமானம் எனக் கருதாது அழிந்துபட்ட தலையோட்டில் பலிகொள்பவரும், பாம்பை மாலையாக அணிந்தவரும் ஆகிய சிவபிரானார் எழுந்தருளிய பதி, மகரந்தங்களை உதிர்க்கும் மலர்கள் நிறைந்த, தழைகள் செறிந்த, மேகங்கள் தவழும் பொழில்கள் சூழ்ந்த திருத்தருமபுரம் என்னும் நகரமாகும்.

குறிப்புரை :

பெண்ணொடு ஆடுவர், பிறை விளங்கு சடையர், கொன்றைமாலை அணிந்தவர். விடைக்கொடியேந்தி இடுகாட்டைப் பதியாக்கொண்டவர். விண்ணும் மண்ணும் துதிக்கப்படுபவர். மண்டையோட்டில் பிச்சையேற்றலை அவமானமாகக் கருதாதவர். இவர் பதி தருமபுரம் என்கின்றது. வார் - கச்சு. பதி - இடம். பரிபவம் - அவமானம்.

பண் :யாழ்மூரி

பாடல் எண் : 5

நேரும வர்க்குணரப் புகி லில்லைநெ டுஞ்சடைக்
கடும் புனல் படர்ந் திடம் படுவ்வதொர் நிலையர்
பேரும வர்க்கெனையா யிர முன்னைப்பி றப்பிறப்
பிலா தவ ருடற் றடர்த் தபெற்றியா ரறிவார்
ஆரம வர்க்கழல்வா யதொர் நாகம ழஃகுறவ்
வெழுஃ கொழும் மலர் கொள்பொன் னிதழிநல் லலங்கல்
தாரம வர்க்கிமவான் மக ளூர்வது போர்விடை
கடிபடு செடி பொழிற் றருமபு ரம்பதியே.

பொழிப்புரை :

ஆராயுமிடத்து அவருக்கு உவமையாகச் சொல்லத் தக்கவர் யாரும் இல்லை. கடிதாக வந்த கங்கைக்குத் தம் நீண்ட சடையை இடமாகக் கொடுத்த நிலையினர் அவர். அவருக்குப் பெயர்களோ பல ஆயிரம். முன்தொட்டு அவருக்குப் பிறப்பு இறப்பு இல்லை. தம்மை எதிர்த்தவர்களோடு சினந்து அவர்களைக் கொன்ற அவரது பெருவலியை யார் அறிவார்? தீயின் தன்மையுடைய நஞ்சினைக் கொண்ட நாகம் அவருக்கு ஆரம். செழுமையான பொன்போன்ற கொன்றை மலர், அவருக்கு மாலையாகும். இமவான் மகளாகிய பார்வதி அவருக்கு மனைவி. அவர் ஊர்ந்து செல்வது போர்ப்பயிற்சி உடைய இடபம். அவர் தங்கியுள்ள இடம் மணம் பொருந்திய ஒளிகளையுடைய பொழில்களால் சூழப்பட்ட தருமபுரம் என்னும் பதியாகும்.

குறிப்புரை :

அவருக்கு ஒப்பு ஆராயப்புகில் யாரும் இல்லை. கங்கை புகுந்தும் இடம்படும் சடையையுடையவர். அவர்க்குப் பேரும் ஆயிரம். பிறப்பு இறப்பு இல்லாதவர். இவரது மாறுபட்ட பகைவரைக் கொல்லும் வெற்றியை அறிவார் யார்? அவர்க்கு ஆரம் பாம்பு. அழகுற எழுந்த கொழுமலராகிய கொன்றையே மாலை. மனைவி மலைமகள். வாகனம் இடபம். தருமபுரம் பதி என்கின்றது. நேர் - ஒப்பு. இதழி - கொன்றை. அலங்கல் - மாலை. தாரம் - மனைவி. கடி - மணம்.

பண் :யாழ்மூரி

பாடல் எண் : 6

கூழையங் கோதைகுலா யவ டம்பிணை புல்கமல்
குமென் முலைப் பொறி கொள்பொற் கொடியிடைத் துவர்வாய்
மாழையொண் கண்மடவா ளையொர் பாகம கிழ்ந்தவர்
வலம் மலிபடை விடை கொடிகொடும் மழுவ்வாள்
யாழையும் மெள்கிடவே ழிசை வண்டுமு ரன்றினந்
துவன் றிமென் சிறஃகறை யுறந்நறவ்வி ரியுந்நல்
தாழையு ஞாழலுந்நீ டிய கானலி னள்ளலி
சைபுள்ளினந் துயில் பயி றருமபு ரம்பதியே.

பொழிப்புரை :

மலர்மாலை சூடிய கூந்தலையும், தன் கணவரால் தழுவப்பெறும் மெல்லிய தனங்களையும், தேமல்களோடு கூடிய மேனியினையும், கொடி போன்ற இடையையும், பவளம் போன்ற வாயையும், மாவடு போன்ற ஒளி விளங்கும் கண்களையும் உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டு மகிழ்ந்தவரும், வெற்றியைத்தரும் படைக்கலனாக மழுவாளைக் கொண்டவரும் விடையைக் கொடியாகக் கொண்டவரும் ஆகிய சிவபிரான் உறையும் பதி, யாழிசையையும் வெல்லுமாறு வண்டுகள் ஏழிசை முரன்று மெல்லிய சிறகுகளால் ஒலித்துச் சூழும் தேன்நிறைந்த நல்ல தாழை மரங்களும், புலிநகக் கொன்றையும் நிறைந்த கடற்கரைச் சோலைகளிலுள்ள சேற்று நிலங்களில் இசைபாடும் பறவையினங்கள் துயில்கொள்ளும் தலமாகிய தருமபுரமாகும்.

குறிப்புரை :

உமையாளை ஓர் பாகம் மகிழ்ந்தவர்; அவர்க்குப் படைமழுவும் வாளும்; கொடி விடை; பதி தருமபுரம் என்கின்றது. கூழை - கூந்தல். துவர் வாய் - சிவந்தவாய். மாழை - மாவடு, படை கொடு மழு வாள் எனவும் விடை கொடி எனவும் இயைக்க. எள்கிட - இகழ. நற - மணம். ஞாழல் - புலிநகக் கொன்றை. அள்ளல் - சேறு.

பண் :யாழ்மூரி

பாடல் எண் : 7

தேமரு வார்குழலன் னந டைப்பெடை மான்விழித்
திருந் திழை பொருந் துமே னிசெங்கதிர் விரியத்
தூமரு செஞ்சடையிற் றுதை வெண்மதி துன்றுகொன்
றைதொல்புனல் சிரங் கரந் துரித்ததோ லுடையர்
காமரு தண்கழிநீ டிய கானல கண்டகங்
கடல் லடை கழி யிழி யமுண்டகத் தயலே
தாமரை சேர்குவளைப் படு கிற்கழு நீர்மலர்
வெறி கமழ் செறிவ் வயற் றருமபு ரம்பதியே.

பொழிப்புரை :

இனிமையும், மணமும் பொருந்திய நீண்ட கூந்தல், அன்னம் போன்ற நடை, பெண்மான் போன்ற விழி இவற்றை உடையவளும் திருத்தம் பெற்ற அணிகலன்கள் பூண்டவளும் ஆகிய உமையம்மை ஒருபாலாகப் பொருந்திய மேனியனும், செவ்வொளி விரியும் தூயசெஞ்சடையில் வெண்மையான பிறைமதி, நிறைந்த கொன்றை மலர், பழமையான கங்கை நீர், தலைமாலை ஆகியவற்றை மறைத்துச் சூடி, உரித்து உடுத்த தோல்களை உடையாகக் கொண்டவனும் ஆகிய இறைவனது பதி அழகிய குளிர்ந்த உப்பங்கழிகளை அடுத்துள்ள கடற்கரைச் சோலைகளில் தாழை மரங்களும், கடலினிடத்திருந்து பெருகிவரும் உப்பங்கழிகளிடத்து நீர்முள்ளிகளும், நீர் நிலைகளில் தாமரை, குவளை, செங்கழுநீர் ஆகியவற்றின் மலர்களும் மணம் வீசுவதும், வயல்கள் செறிந்ததுமாகிய தருமபுரமாகும்.

குறிப்புரை :

உமையுடன்கூடிய மேனி ஒளி விரிய, செஞ்சடையில் மதி கொன்றை கங்கை சிரம் இவற்றை மறைத்து, தோலையுடுத்தவரான இறைவன் பதி தருமபுரம் என்கின்றது. தேமரு - மணம் பொருந்திய, குழலையும், நடையையும், விழியையும் உடைய திருந்திழை என்க. துதை - செறிந்த. கரந்து - மறைய அணிந்து. கானல கண்டகம் - கடற்கரைச் சோலையிலுள்ள தாழை. முண்டகம் - கடல் முள்ளி. படுகு - மடு.

பண் :யாழ்மூரி

பாடல் எண் : 8

தூவண நீறகலம் பொலி யவ்விரை புல்கமல்
குமென் மலர் வரை புரை திரள்புயம் மணிவர்
கோவண மும்முழையின் னத ளும்முடை யாடையர்
கொலைம் மலி படை யொர்சூ லமேந்திய குழகர்
பாவண மாவலறத் தலை பத்துடை யவ்வரக்
கனவ் வலி யொர்கவ் வைசெய் தருள்புரி தலைவர்
தாவண வேறுடையெம் மடி கட்கிடம் வன்றடங்
கடல் லிடுந் தடங் கரைத் தருமபு ரம்பதியே.

பொழிப்புரை :

தூய வெண்ணிறம் பொருந்திய திருநீறு மார்பின் கண் விளங்க, மலை போலத்திரண்ட தோள்களில் மணம் நிறைந்து செறிந்த மென்மையான மலர்மாலையை அணிவர். கோவணத்தையும் மான் தோலையும் ஆடைகளாக உடையவர். கொல்லும் தொழிலில் வல்ல ஆயுதமாக ஓர் சூலத்தை ஏந்திய இளையர். பத்துத் தலைகளை உடைய அரக்கனாகிய இராவணன், பாடல்கள் பாடி அலறுமாறு அவனது வலிமையைச் செற்றுப் பின் அருள் புரிந்த தலைவர். தாவிச் செல்லும் இயல்புடைய ஆனேற்றைத் தம் ஊர்தியாகக் கொண்டவர். அவ்அடிகட்கு இடம், வலிய பெரிய கடலின் அலைகள் சேர்ந்த பெரிய மணற்கரையில் விளங்கும் தருமபுரம் என்னும் பதியாகும்.

குறிப்புரை :

வெண்ணிறத் திருநீறு மார்பில் விளங்க, மணம் பொருந்திய மலரைப்புயத்து அணிவர்; கோவணமும், மான் தோலும் உடுப்பவர்; சூலமேந்திய இளையர்; இராவணற்குத் துன்பஞ் செய்து, பின் அருளும்செய் தலைவர்; தாவும் நிறம் பொருந்திய இடபத்தையுடைய எம்மடிகட்கு இடம் தருமபுரம் என்கின்றது. அகலம் - மார்பு, உழை - மான். அதள் - தோல். அரக்கன் வலி ஓர் கவ்வை செய்து (அவன்) பாவண்ணமா அலற அருள்புரி தலைவர் எனக்கூட்டுக. பாவண்ணமா - சாமகீதமாக. கவ்வை - துன்பம். தா வண்ண ஏறு - தாவிச்செல்லும் நிறம் பொருந்திய இடபம்.

பண் :யாழ்மூரி

பாடல் எண் : 9

வார்மலி மென்முலைமா தொரு பாகம தாகுவர்
வளங் கிளர் மதி யர வம்வைகிய சடையர்
கூர்மலி சூலமும்வெண் மழு வும்மவர் வெல்படை
குனி சிலைதனிம் மலை யதேந்திய குழகர்
ஆர்மலி யாழிகொள்செல் வனு மல்லிகொ டாமரைம்
மிசை யவன் னடிம் முடி யளவுதா மறியார்
தார்மலி கொன்றையலங் கலு கந்தவர் தங்கிடந்
தடங் கடல் லிடுந் திரைத் தருமபு ரம்பதியே.

பொழிப்புரை :

கச்சணிந்த மென்மையான தனங்களை உடைய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவர். பிறைமதி, பாம்பு ஆகியவை தங்கும் சடையினர். கூரிய சூலமும், வெண்ணிறமான மழுவும் அவர் வெற்றி கொள்ளுதற்குரிய படைக்கலங்களாகும். ஒப்பற்ற மேரு மலையை வளைத்து வில்லாக ஏந்திய இளைஞர். ஆரக்கால் பொருந்திய சக்கராயுதத்தைக் கொண்ட திருமாலும், அகஇதழ்களை உடைய தாமரை மலரில் உறையும் பிரமனும் தம்முடைய அடிமுடிகளின் அளவுகளைத் தாம் அறியாவாறு அயரும்படி செய்தவர் அவர். கொத்தாகப் பூக்கும் கொன்றை மலரால் தொடுத்த மாலையை விரும்புபவர். அப்பெருமானார் தங்கியுள்ள இடம், பெரிய கடலின் அலைகள் வந்து தழுவிச் செல்லும் தருமபுரம் என்னும் பதியாகும்.

குறிப்புரை :

மென்முலை மாதை ஓர் பாகங்கொண்டவர்; மதியும் அரவும் வைகிய சடையர்; மழுவும் சூலமும் அவர் படை; அவர் வில் மலை; அயனாலும் மாலாலும் அறியமுடியாதவர்; கொன்றை மாலையை விரும்பியவர்; இவர் தங்குமிடம் தருமபுரம் என்கின்றது. தனி மலை - ஒப்பற்ற மேருமலை. ஆர் மலி ஆழி - ஆரக்கால் நிறைந்த சக்கரம். ஆழிகொள் செல்வன் - திருமால். அல்லி - அகவிதழ். தார்மலி கொன்றை - மாலையாகப் பூக்கும் கொன்றை. அலங்கல் - மாலை.

பண் :யாழ்மூரி

பாடல் எண் : 10

புத்தர்க டத்துவர்மொய்த் துறி புல்கிய கையர்பொய்ம்
மொழிந் தழி வில்பெற் றியுற் றநற்றவர் புலவோர்
பத்தர்க ளத்தவமெய்ப் பயனாக வுகந்தவர்
நிகழ்ந் தவர் சிவந் தவர் சுடலைப்பொடி யணிவர்
முத்தன வெண்ணகையொண் மலை மாதுமை பொன்னணி
புணர்ம் முலை யிணை துணை யணைவதும் பிரியார்
தத்தரு வித்திரளுந் திய மால்கட லோதம்வந்
தடர்ந் திடுந் தடம்பொழிற் றருமபு ரம்பதியே.

பொழிப்புரை :

புத்தர்களாகிய தத்துவாதிகளும், உறிகளை ஏந்திய கையினராய்த் திரியும் சமணர்களும் கூறும் பொய் மொழிகளினின்று நீங்கிய நல்ல தவத்தை உடையவர்களும், புலவர்கள் பக்தர்கள் ஆகியோரின் தவத்தை மெய்ப்பயனாக உகந்தவரும், அன்புக்கு நெகிழ்பவரும், வன்புக்குச் சினப்பவரும் சுடலைப் பொடி அணிபவரும், முத்துப் போன்ற வெண்மையான பற்களை உடைய ஒளி பொருந்திய மலை மாதாகிய பார்வதி தேவியாரின் ஒன்றோடு ஒன்று செறிந்த தனங்கள் இரண்டையும் துணையாகக் கொண்டு அவற்றைப் பிரியாதவரும் ஆகிய சிவபிரானாரது பதி, தவழும் அலைகளை உடைய பெரிய கடலின் ஓதநீர் வந்து பொருந்தும் தருமபுரம் ஆகும்.

குறிப்புரை :

புத்தரும் சமணரும் கூறும் பொய்யினின்றும் நீங்கி, அழிவில்லாத் தன்மைபெற்ற புலவர்கள் பத்தர்கள் தவத்தை மெய்ப்பயனாக உகந்தவரும், சுடலைப்பொடியணிபவரும், உமையைக் கூடி, பிரிதலைச் செய்யாதவரும் ஆகிய இறைவன் பதி தருமபுரம் என்கின்றது. கட துவர் மொய்த்து - கடுவிதையால் உண்டாக்கப் பெற்ற துவர் நெருங்கி. உறி புல்கிய கையர் - உறி தூக்கிய கையையுடைய சமணர். உகந்தவர் - மகிழ்ந்தவர். தத்து அருவி - தாவிக் குதிக்கின்ற அருவி. மால்கடல் - பெரிய கடல். கருங்கடலுமாம்.

பண் :யாழ்மூரி

பாடல் எண் : 11

பொன்னெடு நன்மணிமா ளிகை சூழ்விழ வம்மலீ
பொரூஉம் புன றிரூஉ வமர் புகல்லியென் றுலகில்
தன்னொடு நேர்பிறவில் பதி ஞானசம் பந்தனஃ
துசெந் தமிழ்த் தடங் கடற் றருமபுரம் பதியைப்
பின்னெடு வார்சடையிற் பிறை யும்மர வும்முடை
யவன் பிணை துணை கழல் கள்பேணுத லுரியார்
இன்னெடு நன்னுலகெய் துவ ரெய்திய போகமும்
முறு வர்கள் ளிடர் பிணி துயரணைவ் விலரே.

பொழிப்புரை :

பொன்னால் இயன்ற நெடிய நல்ல மணிகள் இழைத்த மாளிகைகள் சூழ்ந்ததும், திருவிழாக்கள் மலிந்ததும், கரைகளை மோதும் நிறைந்த நீர்வளம் உடையதும், திருமகள் உறைவதுமான புகலி என்னும், தனக்கு உவமை சொல்ல இயலாத பதியின் மன்னனாகிய ஞானசம்பந்தனுடைய பரந்து விரிந்து கடல் போன்ற செந்தமிழாகிய பாமாலைகளால், ஒன்றோடு ஒன்று பின்னி நீண்டுள்ள சடைமுடியில் பிறையையும் பாம்பையும் அணிந்துள்ளவனாகிய சிவபிரானுடைய பிணைந்துள்ள இரண்டு திருவடிகளையும் போற்றி அன்பு செய்பவர், இனிய பெரிய நல்லுலகை எய்துவர், அடையத் தக்கனவாய போகங்களையும் பெறுவர். இடர் செய்யும் பிணி துயர் முதலியன நீங்கி என்றும் இன்பம் உறுவர்.

குறிப்புரை :

ஞானசம்பந்தப் பெருமான் செந்தமிழால் திருத்தருமபுரப் பதியில் எழுந்தருளியிருக்கின்ற இறைவன் கழல்களைப் பேணுதல் உரியார் நல்லுலகம் எய்துவர்; போகம் பெறுவர்; இடரும் பிணியும் எய்தப்பெறார் என்கின்றது. விழவம் மலீ - விழாக்கள் நிறைந்த, பொரூஉ புனல் - கரையை மோதுகின்ற நீர். திரு திரூஉ ஆயிற்றுச் சந்தம் நோக்கி, புகல்லி - புகலி; விரித்தல் விகாரம். தன்னொடு நேர்பிற இல் பதி - தனக்குச் சமம் வேறில்லாத நகரம்; என்றது சீகாழியை, பேணுதல் - தியானித்தல். இப்பதிகத்தைச் சொல்லி இறைவனைத் தியானிப்பவர்கள் நல்லுலகம் எய்துவர்; போகம் பெறுவர்; அவர்களைப் பிணியும் துயரும் பொருந்தா; என்றும் இன்பம் பெறுவர். திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம் முதல் திருமுறை மூலமும் - உரையும் நிறைவுற்றது.
சிற்பி