முதல் தந்திரம் - 5. யாக்கை நிலையாமை


பண் :

பாடல் எண் : 1

மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென் றிருந்தது தீவினை சேர்ந்தது
விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானாற்போல்
எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே.

பொழிப்புரை :

இரண்டு பாண்டங்கள் ஒருவகை மண்ணாலே செய்யப்பட்டனவாயினும், அவற்றுள் ஒன்று தீயிலிட்டுச் சுடப்பட, மற்றொன்று அவ்வாறு சுடப்படாதிருப்பின் அவற்றின்மேல் வானத்தி னின்றும் மழை விழும்போது, சுடப்பட்டது கேடின்றி நிற்க, சுடப் படாதது கெட்டு முன்போல மண்ணாகிவிடும். மக்கள் குறிக்கோள் இல்லாது வாழ்ந்து, பின் இறக்கின்றதும் இதுபோல்வதே.

குறிப்புரை :

`குறிக்கோள்` என்றது மக்கட் பிறப்பின் பயனாகிய மெய்யுணர்வை. அதனை, எடுத்த பிறப்பிலே அடையக் கருதுவார் அதன்பொருட்டு யோகம் முதலியவற்றால் உடம்பை நெடுங்காலம் நிலைப்பெறச் செய்வாராகலின், அத்தகையோரது உடம்பைத் தீயினாற் சுடப்பட்ட பாண்டத்தோடும், அக்கருத்தில்லாதாரது உடம்பைத் தீயினாற் சுடப்படாத பாண்டத்தோடும் உவமித்தார். இதனானே, பின்னர்க் கூறப்படும் காய சித்தி உபாயத்திற்கும் தோற்றுவாய் செய்யப்பட்டதாம்.
``எழிலை ஆழ் செய்கைப் பசுங்கலன் விசும்பின்
இன்துளி படநனைந் துருகி
அழலைஆழ் புருவம் புனலொடும் கிடந்தாங்கு`` -தி.9. ப.17 பா.7
என இவ்வுவமையைப் பிற்றை ஆசிரியர், திருவருள் கைவரப் பெற்றார் பெறாதாரது உணர்வுகட்குக் கூறினார். இனி இங்கும் அவ்வாறே கொண்டு, ``மண்`` என்றது உடம்பையும், `பாத்திரம்`` என்பது அதனை ஏற்று ஒட்டி நிற்கின்ற உயிரது உணர்வையும் குறிப் பனவாக வைத்து உரைத்தலும் ஒன்று. இவ்வுரைக்கு மீண்டும் மண் ணாதல் மீளப் பிறவியில் வீழ்தலும், இறத்தல் பயனின்றி ஒழிதலு மாகும். ஆகவே, `அவ்வாறாகாது, மட்பாண்டத்தை மழைவரும் முன்னே சுட்டுக்கொள்ளுதல் போல, மக்கட் பிறப்பில் அமைந்த உணர்வை அப்பிறப்பிற்கு இறுதிக் காலம் வருதற்கு முன்னே அரு ளுணர்வுடையதாக்கிக் கொள்க. என்பது இதனாற் கூறப்பட்ட பொருளாகும். இரண்டுரைக்கும் விண்ணின்று விழும் வீர் உடம்பை வீழ்த்துகின்ற இறுதிக் காலமேயாம்.
இதனால்,மக்கட் பிறப்பின் பயனை அடையமுயலுதலைப் பின்னர்ச் செய்வோம் என நினையாது, விரைந்து செய்தல் வேண்டும் என்பது கூறப்பட்டது.
``அன்றறிவாம் என்னா தறம்செய்க`` -குறள். 36
எனவும்,
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப்படும். -குறள். 335
எனவும் திருவள்ளுவ நாயனாரும் கூறினார்.

பண் :

பாடல் எண் : 2

பண்டம்பெய் கூரை பழகி விழுந்தக்கால்
உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செல்லார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழிநட வாதே. 

பொழிப்புரை :

பல பண்டங்களை நிரப்பிவைத்துள்ள இல்லம் போல்வதாகிய உடம்பு, உழைத்துத் தளர்ந்து வீழ்ந்தொழியுமாயின், அவ்வுழைப்பால் பயன் கொண்ட மனைவியரும், மக்களும் அவ்வுடம் பினுள் நின்ற உயிராகிய இல்லத் தலைவரைப் பின் தொடர்ந்து செல்லும் வலியிலராவர். இனிச் சுற்றமும் பொருளும் முதலாயினதாம் அவருடன் செல்லுமோ எனின், அவர் மேற்கொண்டு செய்த தவமும், அதன் பயனாக உண்டாகிய ஞானமும் அல்லது பிறிதொன்றும் அவரோடு உடன் செல்லாது.

குறிப்புரை :

`அதனால், பெண்டிர், மக்கள் முதலியோர்க்கு உழைத்தலை விடுத்து, அவ்விரண்டையுமே பெற முயல்க` என்பதாம். `பெண்டிர் மக்களேயன்றிப் பிறவும் செல்லா` என்றற்கு, ``நடவாதே`` எனப் பின்னருங் கூறினார்.
கொல்லத் தான்நம னார்தமர் வந்தக்கால்
இல்லத் தார்செயல் ஆவதென் ஏழைகாள்!
நல்லத் தான் நமை ஆளுடை யான்கழல்
சொல்லத் தான்வல்லி ரேல்துயர் தீருமே. -தி.5 ப.43 பா.1
என்றார் அப்பரும்.

பண் :

பாடல் எண் : 3

ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே. 

பொழிப்புரை :

உடம்பு விழுந்தபின் இல்லத்தளவில் செயற்படு வோராகிய பெண்டிரும், மக்களுமேயன்றி, ஒருங்கு திரண்டு பல வற்றைச் செய்து முடிப்போராகிய ஊரவரேனும் பிரிந்தோருடன் செல்ல வல்லரோ எனின், அல்லர்; அவரும் அப்பெண்டிர் மக்களுடன் ஒருங்கு கூடி முன்னர்ப் பேரொலி உண்டாக அழுது, பின் அது காறும் அவர்க்குக் கூறி அழுத இயற்பெயர் சிறப்புப் பெயர்களை ஒழித்து, `பிணம்` என்னும் பெயரையே சொல்லி எடுத்துக் கொண்டு போய், `சூரை` என்னும் ஒருவகை முட்செடிகள் நிரம்பியுள்ள காட்டில் வைத்து எரித்து விட்டுத் தீட்டுப் போதற்கு நீரினுள் மூழ்கித் தூய்மை பெற்றா ராய்ப் பின்பு அவரைப் பற்றிய நினைவும் இல்லாதவரே ஆவர்.

குறிப்புரை :

`ஆதலால், ஊரவரையும் உறுதி என்று நினையாது, மேற்குறித்தவற்றைப் பெற முயல்க` என்பதாம். ஊர், ஆகுபெயர்.
ஊர், `பிணம்` என்று பேரிட்டு எடுத்தலை,
தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாதே
பெட்டப் பிணமென்று பேரிட்டுக் - கட்டி
எடுங்களத்தா என்னாமுன் ஏழைமட நெஞ்சே
நெடுங்களத்தான் பாதம் நினை. -திருவெண்பா. 8
என ஐயடிகளும் கூறினார்.
இன்னும் அவர்.
இல்லும் பொருளும் இருந்த மனையளவே;
சொல்லும் அயலார் துடிப்பளவே - நல்ல
கிளைகுளத்து நீரளவே; கிற்றியேல் நெஞ்சே
வளைகுளத்துள் ஈசனையே வாழ்த்து. -திருவெண்பா. 14
என அருளிச் செய்தமை அறிக. இல் - மனைவி. துடிப்பு - அடக்கம் செய்ய விரைதல்.

பண் :

பாடல் எண் : 4

காலும் இரண்டு முகட்டலக் கொன்றுள
பாலுள் பருங்கழி முப்பத்தி ரண்டுள
மேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன்
போலுயிர் மீளப் புகஅறி யாதே. 

பொழிப்புரை :

உடம்பாகிய இல்லத்திற்குத் தாங்கும் தூண்களும் (நடக்கின்ற கால்கள்) இரண்டு உள்ளன. மேட்டு உத்தரமும் (முது கெலும்பு) ஒன்று உண்டு. அவ்வுத்தரத்தின் இருபக்கங்களிலும் சார்த்தப் படுகின்ற பருத்த கழிகளும் (விலா எலும்புகளும் - பக்கத்திற்குப் பதினாறாக) முப்பத்திரண்டு உள்ளன. மேலே வேயப்பட்ட கூரை களும் (பலவகையான தோல்கள்) உள்ளன. இருப்பினும். உயிர் இந்த இல்லத்தில் நிலைத்திருப்பதில்லை; என்றாயினும் ஒரு நாள் புறப் பட்டுப் போய்விடும். போய்விட்டால் மீள வந்து முன்போல இதனுட் புகுதல் இல்லை.

குறிப்புரை :

`கால் இரண்டும் முகட்டு அலக்கு ஒன்றும் உள` எனவும், `மேற்கூரையும் உள` எனவும், `உயிர் பிரியும்; பிரிந்தால் முன்போல் மீளப் புக அறியாது` எனவும் கொள்க. `நில்லாது பிரிதலும், பிரிந்தால் மீளப் புகாமையும் உடைமை யாலும், வேறாகச் சென்று புகப்படுவது இத்தன்மைத்தாய மக்களுடம் பேயாய் இருக்கும் என்றல் கூடாமையாலும் அங்ஙனம் பிரியுங்காலம் வருதற்கு முன்பே மேற்குறித்தவற்றைத் தேடிக்கொள்க` என்பதாம்.
என்பினாற் கழிநிரைத் திறைச்சிமண் சுவரெறிந்
திதுநம் இல்லம்
புன்புலால் நாறுதோல் போர்த்துப்பொல் லாமையான்
முகடு கொண்டு
முன்பெலாம் ஒன்பது வாய்தல்ஆர் குரம்பையின்
மூழ்கி டாதே
அன்பன்ஆ ரூர்தொழு துய்யலாம் மையல்கொண்
டஞ்சல் நெஞ்சே.
என(தி.2 ப.79 பா.8)ச் சம்பந்தரும்,
கால்கொடுத் திருகை யேற்றிக் கழிநிரைத் திறைச்சி மேய்ந்து
தோல்படுத் துதிர நீரால் சுவரெடுத் திரண்டுவாசல்
ஏல்வுடைத் தா அமைத்தங் கேழுசா லேகம் பண்ணி
மால்கொடுத் தாவி வைத்தார் மாமறைக் காட னாரே.
(தி.4 ப.83 பா.4) எனவும்,
``இருகாற் குரம்பை இதுநான் உடைய திது பிரிந்தால்
தருவாய் எனக்குன் திருவடிக் கீழொர் தலைமறைவே``
(தி.4 ப.113 பா.2) எனவும், அப்பரும் உடம்பை இல்லமாக உருவகித்தல் காண்க.

பண் :

பாடல் எண் : 5

சீக்கை விளைந்தது செய்வினை மூட்டிற்ற
ஆக்கை பிரிந்த தலகு பழுத்தது
மூக்கினிற் கைவைத்து மூடிட்டுக் கொண்டுபோய்க்
காக்கைக்கு வுண்பலி காட்டிய வாறே. 

பொழிப்புரை :

`சீக்கை என்னும் வாயொலி உண்டாயிற்று; செயற் படுகின்ற உறுப்புக்கள் மடிந்து கிடையாகி விட்டன. உடம்பு உயிர்த் தொடர்பை நீங்கிவிட்டது. எலும்புகள் வீங்கிவிட்டன` என்று பல அறிகுறிகளைச் சொல்லி, மூக்கில் கைவைத்துப் பார்த்து ஐயம் நீங்கி, மூடி எடுத்துக்கொண்டு போய் ஊரார் காக்கைக்குப் பலி ஊட்டிய அளவில் முடிவதாகும் உடம்பின் நிலைமை.

குறிப்புரை :

மேற்காட்டிய ஐயடிகள் வெண்பாவில் ``தொட்டுத் தடவித் துடிப்பொன்றுங் காணாமல்`` என வந்ததனை நோக்குக. `காக்கைக்குப் பலியிடுதல் ஒரு சடங்கு`` என்பர். ``காக்கைக்கே இரை யாகிக் கழிவரே``(தி.5 ப.90 பா.5) என்னும் அப்பர் திருமொழியால் உடல் மண்ணில் இடப்பட்டுப் பின் காக்கைக்கு இரையாதலும் கொள்ளப்படும். ``முது காட்டில் காக்கை உகக்கும் பிணம்`` (மூதுரை) என்ற ஔவையார் திருமொழியும் காணத்தக்கது. இனி, `இன்னோரன்னவை முறைப்படி அடக்கம் செய்யப்படாத உடம்பின் நிலைமையைக் குறித்தன` என்று ஒழிதலுமாம்.

பண் :

பாடல் எண் : 6

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேஇறை நொந்ததிங் கென்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே. 

பொழிப்புரை :

உணவு சமைத்தற்கு வேண்டுவனவற்றை ஈட்டிக் கொணர்ந்து வைத்த தலைவர், சமைத்தாயின பின்பு அவ்வுணவை உண்டார்; பின் தம் இல்லக்கிழத்தியாரொடு தனிமையில் இருந்து சில வற்றை உசாவுதல் செய்தார்; அச்செயலுக்கிடையே, `உடம்பில் இடப் பக்கம் சிறிது நோகின்றது` என்று சொல்லி, அது நீங்குதற் பொருட்டு ஓய்வு கொள்ளுதற்குப் படுத்தார்; படுத்தவர் படுத்துவிட்டவரே யாயினார்; மீள எழுந்திருக்கவில்லை.

குறிப்புரை :

`இவ்வாறாகின்றது சிலரது வாழ்க்கை` என்றவாறு. `நிலையாமை வரும் காலத்தை அறிந்தார் இல்லை; அதனால், செய்யவேண்டுவதை விரைந்து செய்தலே அறிவுடைமை` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 7

மன்றத்தே நம்பிதன் மாடம் எடுத்தது
மன்றத்தே நம்பி சிவிகைபெற் றேறினான்
மன்றத்தே நம்பிமுக் கோடி வழங்கினான்
சென்றத்தா வென்னத் திரிந்திலன் தானே.

பொழிப்புரை :

நம்பி(சிறந்த ஆடவன்) ஒருவன் தன் முயற்சி யாலே பெரும் பொருள் ஈட்டிப் பலரும் வியக்கப் பல மேல் நிலைகளோடு கூடிய மாளிகையைக் கட்டினான். அவன் அதனைக் கட்டியதும் வெற்ற வெளியான இடத்திலேதான். பின் அவ்விடத் திற்றானே நான்குபேர் சுமக்கின்ற ஒரு பல்லக்கைப்பெற்று அதில் ஏறினான். அங்கு அப்பொழுது அவன் தன் மனைவிக்கும், மகனுக்கும், ஊர்த் தோட்டிக்கும் ஒவ்வொரு புத்தாடையை வழங்கினான். ஆயினும், பலர் நின்று, `தலை வனே` என்று கூப்பிட்டுக் கதறவும், திரும்பாமலே போய்விட்டான்.

குறிப்புரை :

`எத்துணைப் பெருஞ் செல்வத்தாராயினும் `இறந்தார்` என்னும் இகழ்ச்சியைப் பெறாதொழிந்தவர் இல்லை. என்றவாறு.
மலைமிசைத் தோன்றும் மதியம் போல் யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத்
துஞ்சினார் என்றெடுத் தூற்றப்பட் டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில். -நாலடியார் 21
என்று அறநூல் கூறுதலும் காண்க. ``சிவிகை`` என்றது. புகழ்வது போலப் பழித்தல். ``முக்கோடி`` என்றது சிலேடை.

பண் :

பாடல் எண் : 8

வாசந்தி பேசி மணம்புணர் தம்பதி
நேசந் தெவிட்டி நினைப்பொழி வார்பின்னை
ஆசந்தி மேல்வைத் தமைய அழுதிட்டுப்
பாசந்தீச் சுட்டுப் பலியட்டி னார்களே.

பொழிப்புரை :

குருக்கத்திக் கொடியின் கீழ்க் களவிற்கலந்து, பின் கற்பு நெறியில் மணம் செய்துகொள்கின்ற தலைவனும், தலைவியும் தலைநாளில் இருந்த காதல், நாள்செல்லச் செல்லத் தெவிட்டுவதாய் விடப் பின்பு ஒருவரை ஒருவர் நினைப்பதையும் விட்டுவிடுவர். இறுதியில் பாடைமேல் வைத்துக் குறைவில்லாமல் அழுது, தங்கள் அன்போடு, அவரையும் நெருப்பினால் எரித்துப் போக்கிவிட்டுத் தெய்வமாக வைத்துப் படையல் இடுவார்கள்.

குறிப்புரை :

`இறவாதிருந்தால் தான் பெறுவது என்னை?` என்றற்கு முன்னிரண்டு அடிகளைக் கூறினார். வாசந்தி - குருக்கத்தி, இது களவிற்குரிய இடமாக இலக்கியங்களில் குறிக்கப்படும். `முதற் கண் மிக்க காதலுடையராய் இருந்தார்` என்பது உணர்த்தற்கு இக்களவு முறையை எடுத்தோதினார். `மணம் புணர்ந்தப் பதி` என்பது பாடம் அன்று. ஆசந்தி- பாடை. ``பாசம்`` என்றது, ``பாசம் பரஞ் சோதிக்கு`` (தி.8 திருவெம்பாவை -2) என்பதிற்போல், `அன்பு` எனப் பொருள் தந்து. `அன்பு`, `நார்` எனப் படுதலும் உணர்க. `பாசமும்` என்னும் எச்ச உம்மை தொகுத்தலாயிற்று. அன்பை அறவே விட்டொழிதலை. அச் சுடுதலோடு ஒன்றாக ஒதினார்.

பண் :

பாடல் எண் : 9

கைவிட்டு நாடிக் கருத்தழிந் தச்சற
நெய்யட்டிச் சோறுண்ணும் ஐவரும் போயினார்
மையிட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே
மெய்விட்டுப் போக விடைகொள்ளு மாறே. 

பொழிப்புரை :

உடல் நிலையை நாடியால் ஆய்ந்துணர்வோர் அவ்வாறு ஆய்ந்து கைவிட்டுவிட, அதன்பின் அறிவு அழிந்து, உட லாகிய தேர்க்கு அச்சாய் இருந்த உயிர் நீங்கிவிட, சோற்றை நெய்கலந்து சுவைபட உண்டு வாழ்பவனவாகிய ஐம்பூதக் கூறுகளும் அழிவன வாயின, அப்பொழுது, முன்பு, உடம்பால் தழுவப்பட்டிருந்த மனை வியும், செல்வமும் முன்போலவே இருக்கவும், அவ்வுடம்பு அவர்களை விட்டு வேறிடத்திற்குப் போக விடைபெறுவதுதான் கண்டது.

குறிப்புரை :

`கண்டது` என்பது சொல்லெச்சம். ``கை விட்டு`` என்பதை `கைவிட` எனத் திரிக்க. உடம்பைத் தாங்கி நடத்துதலின், உயிரை ``அச்சு`` என்றார். இஃது ஏகதேச உருவகம்.
``நல்லச்சிற் றம்பலமே நண்ணாமுன் நன்னெஞ்சே
தில்லைச்சிற் றம்பலமே சேர்`` -திருவெண்பா. 1
என்று அருளினார் ஐயடிகளும், `நெய்யட்டி உண்டும், மையிட்ட கண்ணாளோடு இன்புற்றும், செல்வத்தால் சிறப்பெய்தியும் நிற்பனவெல்லாம் உடம்பு உள்ள துணையுமே; ஆனால், அவ்வுடம்பு நிலைத்தல் இல்லையே` என்றபடி

பண் :

பாடல் எண் : 10

பந்தல் பிரிந்தது பண்டாரங் கட்டற்ற
ஒன்பது வாசலும் ஒக்க அடைத்தன
துன்புறு காலந் துரிசுற மேன்மேல்
அன்புடை யார்கள் அழுதகன் றார்களே. 

பொழிப்புரை :

தீய ஊழ் விரைய வந்தமையால், தங்க நிழல் தரும் பந்தல்போல்வதாகிய உடம்பு நிலைகெட்டு விட்டது. அதனால் அதற்குள் கருவூலம் போல இருந்த உயிர், காவலற்றுக் கொள்ளை போகும் நிலையை (யமதூதுவர் கொண்டு செல்லும் நிலையை) அடைந்து விட்டது. பந்தலில் ஒன்பது வாயில்கள் அமைக்கப் படிருந் தன; அவை அனைத்தும் அடைபட்டு விட்டன. அன்புடைய சுற்றத் தார் என் செயவல்லார்! தொடர்ந்து அழுததோடு போய்விட்டனர்.

குறிப்புரை :

இத்திருமந்திரம் பிசிச்செய்யுள். இவ்வாறு வருவன இந்நூலிற் பல உள. பின்வந்த `சித்தர்` என்போர் இம்முறையைப் பெரிதும் கைக்கொண்டனர். துரிசு, விரைவுப் பொருட்டாகிய, `துரிதம்` என்பதன் சிதைவு. நிலையாக நிற்கும் இடம் அன்மையால், உடம்பை, `வழியிலே தங்கும் பந்தல்` என்றார். திருவள்ளுவரும், `துச்சில்` (திருக்குறள். 340) என்றார். `மனைவி முதலாயினார் உண்மையில் அன்புடையர்களாயினும், அவர்களால் நிலையாமை விலக்க ஒண்ணாது` என்றபடி. `அதனால், இறைவனைத் துணையாகப் பற்றுதலே நன்று` என்பதாம்.

பண் :

பாடல் எண் : 11

நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன்
காட்டுச் சிவிகையொன் றேறிக் கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே.

பொழிப்புரை :

ஒருவன் நமது நாட்டிற்கே தலைவன் தான்; `அவன் நம் ஊரவன்` என்பதில் நமக்குப் பெருமைதான்; ஆயினும், நடை முறையில் நிகழ்வது, அவனும் காட்டுக்குப் போதற்குரிய ஒரு பல்லக்கின் மேல் ஏறி, நாட்டில் உள்ளோர் பலர் பின்னே நடந்து செல்ல, முன்னே பறைகள் பல கொட்டச் செல்லுகின்ற முறைமைதான்; வேறில்லை.

குறிப்புரை :

`காட்டுச் சிவிகை` என்பது அடைவேறுபடுத்துப் பொருள்புலப்படுத்தல். இதனை, `வெளிப்படை` (வெளிப்படுத்தல்) என்பர். இங்ஙனங் கூறியது இகழ்ச்சிக் குறிப்பு. `நிகழ்வது` என்பது சொல்லெச்சம். ``நாட்டுக்கு நம்பி`` என்றது, சுட்டளவாய் நின்றது. `நம்பியும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. `அரசராயினும் நிலையாமையைக் கடக்கமாட்டார்` என்றதாம்.

பண் :

பாடல் எண் : 12

முப்பதும் முப்பதும் முப்பத் தறுவரும்
செப்ப மதிளுடைக் கோட்டையுள் வாழ்பவர்
செப்ப மதிளுடைக் கோட்டை சிதைந்தபின்
ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே. 

பொழிப்புரை :

வினையாகிய மதிலால் சூழப்பட்ட உடம்பாகிய உட்கோட்டையில் வாழ்வன் தொண்ணூற்றாறு தத்துவதாத்து விகங்கள். அவை அனைத்தும் அம்மதில் சிதைந்தால் ஒருசேர விைரய நீங்கும்.

குறிப்புரை :

செப்ப மதில் - செம்மையான மதில். மதில் இன்றிக் கோட்டை இன்மையால், மதில் சிதைதலை, `கோட்டை சிதைதல்` என்றார். `தத்துவதாத்துவிகங்களின் காரியமே உடம்பு` என்பதும், காரியம் தோற்றமும், முடிவுமாகிய எல்லைகளை உடையன ஆதலின், உடம்பாகிய காரியம் வினையின் எல்லையையே எல்லையாக உடையது என்பதும், `அதனால், அவ்வினை நீங்கவே, உடம்பு நீங்கும்; அதனால் நாடும், ஊரும் துணையாகா` என்பதும் கூறியவாறு.

பண் :

பாடல் எண் : 13

மதுவூர் குழலியும் மாடும் மனையும்
இதுவூர் ஒழிய இதணம தேற்றிப்
பொதுவூர் புறஞ்சுடு காடது நோக்கி
மதுவூர வாங்கியே வைத்தகன் றார்களே. 

பொழிப்புரை :

எவன் ஒருவனையும் ஊரார் அவன் மனைவியும், செல்வமும், மாளிகையும் ஊரிலே நின்றுவிட, ஒரு நடைப்பரண்மேல் ஏற்றி, ஊர்க்குப் பொதுவாய்ப் புறத்தே உள்ள சுடுகாட்டை நோக்கிச் சுமந்து சென்று, உள்ளத்தில் அன்பு மேம்பட்டு எழ எடுத்து வைத்துவிட்டுப் போவதையே பார்க்கின்றோம்.

குறிப்புரை :

`அதற்குமேல் அவர்களால் என்ன செய்ய இயலும்! ஆகவே, நாட்டுக்கு நாயகனாகியும், ஊருக்குத்தலைமகனாகியும் இருக்க முயல்வதனால் பயன் என்னை` என்பதாம். மது, தேன் போன்ற அன்பு.

பண் :

பாடல் எண் : 14

வைச்சகல் வுற்றது கண்டு மனிதர்கள்
அச்சக லாதென நாடும் அரும்பொருள்
பிச்சது வாய்ப்பின் தொடர்வுறும் மற்றவர்
எய்ச்சக லாநின் றிளைக்கின்ற வாறே.

பொழிப்புரை :

இறந்தவனது உடம்பை ஊரார் கொண்டுபோய்ப் புறங்காட்டில் வைத்து நீங்கியதைக் காணும் பொழுது, என்றும் அச்சுப் போல உடன் இருந்து உதவும் என்று அறிவுடையோர் அறிந்து விரும் புகின்ற அந்த அரிய பொருளாகிய இறைவன் ஒருவனே பேரருள் காரணமாக அவரைப் பின் தொடர்ந்து செல்வான். பிறர் யாவரும் ஒன்றும் செய்யமாட்டாது இளைத்து வருந்துகின்றவர்கள் தாம்.

குறிப்புரை :

`ஆதலின் அவனையே நாடுக` என்பது குறிப் பெச்சம். `பிச்சு, எய்ச்சு` என்பன, `பித்து, எய்த்து` என்பவற்றின் சிதைவு.

பண் :

பாடல் எண் : 15

ஆர்த்தெழு சுற்றமும் பெண்டிரும் மக்களும்
ஊர்த்துறைக் காலே ஒழிவர் ஒழிந்தபின்
வேர்த்தலை போக்கி விறகிட் டெரிமூட்டி
நீர்த்தலை மூழ்குவர் நீதியி லோரே. 

பொழிப்புரை :

கல்லென்று ஆரவாரித்து எழுகின்ற சுற்றத் தாரும், மனைவியரும், மக்களும் ஆகிய எல்லாரும் ஊர் எல்லையைக் கடந்து அப்பால் வரமாட்டாது அவ்வெல்லைக்குள்ளே நின்றொழி வார்கள். அதன்பின் பிறர், மரங்களை, வேரும் முனையும் போகத் தறித்துக் கொணர்ந்த விறகின் மேல் வைத்து நெருப்பை நன்றாக மூட்டி எரியப் பார்த்துவிட்டு, நீரிலே சென்று தலை முழுகுவார்கள்.

குறிப்புரை :

`காலத்தாலும், இடத்தாலும் கட்டுண்டு கிடக்கும் அவர்களைப் பற்றுவதால் பயனில்லை` என்பதாம். ``கால்`` என்றது எல்லை. அயன்மையை `நீதியின்மை` என்றார்.

பண் :

பாடல் எண் : 16

வளத்திடை முற்றத்தோர் மாநிலம் முற்றுங்
குளத்தின்மண் கொண்டு குயவன் வனைந்தான்
குடமுடைந் தால்அவை ஓடென்று வைப்பர்
உடலுடைந் தால்இறைப் போதும் வையாரே. 

பொழிப்புரை :

உலகமெங்கும் குயவர்கள் குளத்திலிருந்து மண்கொணர்ந்து தங்கள் அகத்தினுள்ளே முற்றத்தின்கண் பல குடங்களைப் பண்ணுகின்றார்கள். அக்குடங்கள் ஆளப்பட்டு உடைந்து விடுமானால், வறுக்கும் ஓடாகப் பயன்படும் என்று அகத்திலே சேமித்து வைப்பார்கள். ஆனால் பண்ணப்படும் முறையால் அக் குடத்தோடு ஒப்பனவாகிய உடம்புகள் சிதைந்தால், நொடிநேரமும் மக்கள் வீட்டில் வைத்திருக்க ஒருப்படார்.

குறிப்புரை :

ஒருப்படாமைக்குக் காரணம், சிதைந்த, உடம்பு பெரிதும் தீ நாற்றம் வீசி, மக்களுக்கு இன்னல் விளைத்துத் தானும் அழுகியொழிவதாய் இருத்தலே. ``அதனால், பின்னர் அத்துணை நெருப்புக்கு முதலாகும் உடலை முன்னரே வெறுத்து உயிர்க்கு உறுதி தேடக் கருதுதலே அறிவுடைமையாம்`` என்றவாறு. ``ஓர் குயவன்`` இனம் பற்றிய ஒருமை, உயிர் நீங்கியபின், உடல் பலராலும் வெறுக்கப்படும் பொருளாம் என்பதனை,
``கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால்
உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே`` -தி.5 ப.90 பா.4
என்று அப்பரும் அருளிச்செய்தார், ``வைப்பர்`` என்றும், ``வையார்`` என்றும் உறழ்ந்து காட்டிய அதனால், பண்ணப்படும் முறையில் இரண்டும் ஒத்தல் பெறப்பட்டது. படவே, `உடல்களும் உலகெங்கும் தந்தையது உடம்பினின்றும் ஒரு கூற்றை எடுத்துத் தாயின் வயிற்றில் வைத்து உருப்பெருமாறு படைப்புக் கடவுளால் ஆக்கப்படும்` என்பது கொள்க. இத் திருமந்திரம் வேற்றுமையணி. பின்னிரண்டடிகள் உயிரெதுகை.

பண் :

பாடல் எண் : 17

ஐந்து தலைப்பறி ஆறு கடையுள
சந்தவை முப்பது சார்வு பதினெட்டுப்
பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து
வெந்து கிடந்தது மேலறி யோமே. 

பொழிப்புரை :

தலைக்கூடைபோல உலகங்களைத் தாங்கி நடத்தும் சிவதத்துவங்கள் ஐந்து; அக்கூடையில் உள்ள பொருள்போல வித்தியா தத்துவம் ஏழும் பிரகிருதி ஒன்றும் ஞானேந்திரியம் ஐந்தும், கன்மேந்திரியம் ஐந்தும் ஆகிய பதினெட்டு: ஒரு வீட்டினுள் அமைந்த பல கட்டுக்கள் போல உடலில் ஆறு ஆதாரங்கள்; அக்கட்டுக்களில் அமைந்த அகன்ற முற்றம்போல வாயுக்கள் பத்தும்; நாடிகள் பத்தும், `காமம் குரோதம் முதலிய குற்றங்கள் ஆறும், நால்வகை வாக்கும் ஆகிய முப்பது; அம்முற்றத்தை மூடிய பந்தல் போல யோனி பேதத்தால் ஒன்பதாகிய மக்கள் உடம்பு, அப்பந்தலில் அமர்ந்து உண்ணும் பந்திபோலச் சத்தாதி ஐந்தும், வசனாதி ஐந்தும், குணம் மூன்றும், இன்ப துன்பங்களாகிய பயன் இரண்டும் ஆகிய பதினைந்து உளவாகி இயங்கின. ஆயினும், உடம்பு வெந்து கிடப்பதையே பார்க்கின்றோம். மற்றவை என்னாயின என்பதை அறியோம்.

குறிப்புரை :

பறி - கூடை. கடை - வாயில்; கட்டு. `ஆறு சடை` என்பது பாடம் அன்று. சந்து - வெளி. வாயுக்கள் முதலியவற்றின் இயக்கமே உயிரின் உணர்வு நிகழ்ச்சிக்கு ஏதுவாகலின் அவற்றை நன்கு உலாவும் முற்றம் என்றார். சார்வு - சார்ந்த பொருள். ``சார்வு பதினெட்டு` என்பதனை ``தலைப் பறி`` என்றதன்பின்னர்க் கூட்டுக. உண்ணப்படும் (நுகரப்படும்) பொருள்களாகிய சத்தம் முதலியவற்றை உண்பன போலக் கூறினார். இதனால், உடலின் ஆக்கப்பாடும், செயற்பாடும் கூறி, அவை அனைத்தும் நிலையாமை உடையவாதல் உணர்த்தியவாறு.

பண் :

பாடல் எண் : 18

அத்திப் பழமும் அறைக்கீரை நல்வித்துங்
கொத்தி உலைப்பெய்து கூழட்டு வைத்தனர்
அத்திப் பழத்தை அறைக்கீரை வித்துண்ணக்
கத்தி எடுத்தவர் காடுபுக் காரே. 

பொழிப்புரை :

அட்டில் தொழில் செய்வார் வறிய குடும்பத் தலைவன் ஒருவனுக்கு அத்திப் பழத்தையும், அறைக் கீரை விதையையுமே திருத்தி உலையில் இட்டு உணவும், கறியுமாக ஆக்கிவைத்தார்கள். அந்த உணவை அக்கறியோடு உண்பதற்கு, வேண்டப்படாத கூரிய கத்தியை எடுத்து அவாவுடன் புகுந்த அத்தலைவன், அதற்குள்ளே சுடுகாட்டை அடைந்தான்.

குறிப்புரை :

`இவ்வாறு விரைய வருகின்றது நிலையாமை` என்பதாம். அத்தி, எலும்பு ஆகலின், அதனிற் பழுத்த பழம் போல்வது பருவுடம்பு (தூல தேகம்). அறைக்கீரை, அறுக்க அறுக்கத் தளிர்த்து வளர்வதாகலின், அதனோடொப்பது, ஒரு பருவுடம்பு நீங்க, வேறு பருவுடம்பைத் தொடர்ந்து தரும் நுண்ணுடம்பு (சூக்கும தேகம்). இதனை, ``காலம் உற்று - நீக்கிட மரம் பின் வேர் ஓர் நீள்மரம் நிகழ்த்துமாபோல்`` (சிவஞானசித்தி. சூ. 2. 48) என்றார் அருள் நந்தி சிவாசாரியரும். `கூழ்` என்னும் பொதுச் சொல்லால் உணவும், கறியும் கொள்ளப்பட்டன. அவ்விருவகை உடம்புகளாலும் உண்டாகும் பயனை அவையேயாகச் சார்த்திக் கூறினார். பருவுடம்பே புறப்பொருளை நுகர்வதாகலின் அதனை உணவாகவும், அதற்குத் துணைசெய்து நிற்பதே நுண்ணுடம் பாகலின் அதனைக் கறியாகவும் உருவகித்தார். கொத்தி உலைப் பெய்து அடுதல் உயிரின் பக்குவத்திற்கேற்ப அமைத்தல். ``உண்ணக் கத்தி எடுத்தவர்`` என்றது மாம்பழம், பலாப்பழம் முதலியவை ஆயின் அவற்றை உண்ணக் கத்தி வேணடும்; அத்திப் பழம்; அது தானும் வேவித்த பழம்; அதை உண்ணக் கத்தி எதற்கு என்னும் குறிப்பினது. ``கத்தி எடுத்தவர்`` என்றது, `இறைவன் திருவருளை நாடியவர்` என்ற தாம். இறைவன் திருவருளைப் பிறவிக் கடலைக் கடத்தற் பொருட்டு நாடுதலே முறை, அதனை விடுத்து, உலகப் பயனைப் பெறுதற்கு நாடுதல் ஏன் என்பது பின்னிரண்டடிகளின் உள்ளுறைப் பொருள்.
``பொற்கொழுக் கொண்டு வரகுக் குழுவதென்
அக்கொழு நீஅறிந் துந்தீபற
அறிந்தறி யாவண்ணம் உந்தீபற`` -மெய். திருவுந்தியார் 38
எனவும்,
``முத்தி முதலுக்கே மோகக் கொடிபடர்ந்
தத்தி பழுத்தென் றுந்தீபற
அப்பழம் உண்ணாதே உந்தீபற`` -மெய். திருவுந்தியார் 41
எனவும் வரும் திருவுந்தியாரையும்
முத்தி முதலுக்கே மோகக் கொடிபடர்ந்
தத்தி பழுத்த தருளென்னும் - கத்தியினால்
மோகக் கொடியறுக்க முத்திப் பழம்பழுக்கும்
ஏகக் கொடிஎழுங்காண் இன்று. -மெய். திருக்களிற்றுப்படியார் 38
என வரும் திருக்களிற்றுப்படியாரையும் காண்க.
இறைவனை உலகப்பயன் கருதி வழிபடுதல் `காமிய வழி பாடு` என்றும், பயன் கருதாது வழிபடுதல் `நிட்காமிய வழிபாடு` என்றும் சொல்லப்படும். அவற்றுள் காமிய வழிபாடு செய்யத் தொடங்கினோர் அது முற்றுப் பெறுதற்குள்ளே வந்து நிலையாமை பற்ற, கருதிய பயனையும் இழந்து மீளப் பிறவிக் கடலுள் மூழ்கலால் அந்நிலையாமையை உணர்ந்து காமிய வழிபாட்டை விடுதல் வேண்டும் என்றபடி ``காமியம் செய்து காலங்கழியாதே`` (தி.5 ப.22 பா.8) என்று அருளிச் செய்தார் அப்பரும். காமிய வழிபாட்டு முயற்சியின் தன்மையை,
பரப்பமைந்து கேண்மின்இது பாற்கலன்மேற் பூஞை
கரப்பருந்த நாடுங் கடன். -திருவருட்பயன், 39
என விளக்குவர் உமாபதி சிவனார். ``வித்துண்ண``என்றதன் இடை யில் அடுக்கிவந்த இரண்டனுருபு தொகுத்தலாயிற்று.

பண் :

பாடல் எண் : 19

மேலும் முகடில்லை கீழும் வடிம்பில்லை
காலும் இரண்டு முகட்டலக் கொன்றுண்டு
ஓலையான் மேய்ந்தவ ரூடு வரியாமை
வேலையான் மேய்ந்ததோர் வெள்ளித் தளியே. 

பொழிப்புரை :

ஓலையால் வேய்ந்த வீட்டை, உடையவர் தாமே செய்யாமல், கூலியாளைக் கொண்டு செய்வித்தமையால் அவனால் செப்பமின்றி வேயப்பட்ட பொத்தற் குடில்போலும் உடம்பிற்கு மேலேயும் கவிப்பில்லை; கீழேயும் அடிநிலை இல்லை. ஒப்பிற்கு வைக்கப்பட்ட இரண்டு கால்களும், ஒரு நடு விட்டமுமே உண்டு.

குறிப்புரை :

`அஃது எவ்வாறு நீடித்து நிற்கும்? விரைவில் வீழ்ந் தொழிந்தது` என்பது குறிப்பெச்சம். பின்னிரண்டடிகளை முன்னர் வைத்து உரைக்க. பின்னர், ``வேலையான்`` என்றலால் முன்னர் ``மேய்ந்தவர்`` என்றது உடையவரையாயிற்று. ``மேய்ந்தவர்`` என்றது, `வேய முயன்றவர்` என்றபடி, ஊடு - அத் தொழிலினுள்; இதன் பின், `புக்கு` என்பது எஞ்சி நின்றது. `வரியாமையால்` என்னும் உருபு தொகுத்தலாயிற்று. வரிதல் - கட்டுதல். வேலையான் - கூலிக்கு வேலை செய்பவன். காலத்தைக் குறிக்கும் `வேலை` என்பது, அதனை முதலாகக் கொண்டு நிகழும் தொழிலைக் குறித்தலின், கருவியாகு பெயர். ``கூலி கொடுத்து என்வேலை கொள்வாருண்டோ`` (திருவிளையாடல் பு. . மண்சுமந்தது . 18) என்பது முதலிய இடங்களிலும் இவ்வாறு வருதல் காணப்படும். `வேலையாள் மேய்ந்த` என்று பாடம் ஓதுதலும் ஆம். ``வெள்ளி`` என்றதில் ளகர வொற்று, விரித்தல். பொத்தலை `வெளி` என்றார். தளி - இல்லம். `வேலையாள் நன்கு வேயாமையால் எடுத்தபொழுதே பொத்தற் கூரையாய்க் கிடந்தது; மற்றும் பல குறைபாடுகளும் உள` என்றதாம். தலையிலும் பிரமந்திரம் (பெருந்துளை) முதலிய புழைகள் இருத்தலின், `மேலும் முகடில்லை` என்றார். கீழே அடிகள் நிலத்தினுள் ஊன்றாமை வெளிப்படை. ``காலும்`` என்ற இழிவு சிறப்பும்மையால், `அது பெயருக்குக் `கால்` அன்றி, உண்மைக் கால் அன்று` என்பது போந்தது. இல்லத்திற்குக் `கால்கள்` எனப்படுவன, நிலத்தினுள் ஊன்றி நிலைத்து நிற்பன வல்லது சகடக் கால் போல உழலுவன ஆகா. ``முகட்டு அலக்கு`` என்றது முதுகெலும்பை. அதுவும் நேர் நிற்றல் அல்லது; மேலே குறுக்கிட்டு நின்றிலது. இதனால் அவை ஒப்பிற்கு வைக்கப்பட்டனவல்லது, உண்மையில் வைக்கப் படவில்லை என்றார். ``உடையவர்`` என்றது சிவபெருமானையும், `வேலையாள்` என்றது பிரமனையும், `உடை யவர் இவ்வில்லத்தை ஓலையால் வேய நினைத்தார்` என்றது `நிலையாக எடாமல், சிறிது காலத்திற்கு நிற்கவே எடுத்தார்` என்பது குறித்தவாறு. முன்பு `பந்தல்` என்றதும் இக்குறிப்புத் தோன்றவேயாம். `சிறிது காலத்திற்கு நிற்க எடுத்ததையும் தாமே செய்யாமல், பிறன் ஒருவனைக் கொண்டு செய்வித்தமையால். குறையுற்றுக் கிடந்தது` என்றவாறு.
இதனால், யாக்கையது இயல்பை உணர வல்லார்க்கு அதனது நிலையாமை எளிதின் விளங்கும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 20

கூடங் கிடந்தது கோலங்கள் இங்கில்லை
ஆடும் இலயமும் அற்ற தறுதலும்
பாடுகின் றார்சிலர் பண்ணில் அழுதிட்டுத்
தேடிய தீயினில் தீயவைத் தார்களே.

பொழிப்புரை :

கூடம் ஒன்று, முன்பு பல ஒப்பனைகளையும், கூத்துக்களையும் உடையதாய் இருந்தது. இப்பொழுதோ அக்கூடம் மட்டும் உள்ளது; அதில் இருந்த ஒப்பனைகளும், கூத்துக்களும் இல்லாது ஒழிந்தன; ஒழிந்தவுடன் மக்கள் திருப்பாடல்களைப் பண்ணோடு பாடுகின்றவர்களாயும், அழுகின்றவர்களாயும் நின்று, இறுதியில் அக்கூடத்தை, தேடிக்கொணர்ந்த விறகில் மூட்டப்பட்ட நெருப்பில் வேகவைத்துவிட்டார்கள்.

குறிப்புரை :

இதன் உள்ளுறைப் பொருள் வெளிப்படை. காரணத்திற் குரிய தேடப்பட்ட தன்மையைக் காரியத்தின்மேல் ஏற்றிக் கூறினார். இனி, ``தீ`` என்றது காரிய ஆகுபெயராய், விறகினை உணர்த்திற்று எனினும் ஆம். `பண்ணில்பாடுகின்றாராயும், அழுதிட்டும்` என்க.
இதனால், `யாக்கையது நிலையாமை, ஒரு கண்மாயம் போல வந்து நிற்பது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

முட்டை பிறந்தது முந்நூறு நாளினில்
இட்டது தானிலை ஏதேனும் ஏழைகாள்
பட்டது பார்மணம் பன்னிரண் டாண்டினிற்
கெட்ட தெழுபதிற் கேடறி யீரே.

பொழிப்புரை :

அறிவில்லாத மக்களே, தாய் வயிற்றில் முட்டை யாய்த் தோற்றம் எடுத்த உடம்பு, முந்நூறு நாள் காலக் கணக்கில் அங்கே தங்கி வளர்ந்து பின்பு வெளிப்போந்தது. பின் பன்னிரண்டு ஆண்டுக் காலக்கணக்கில் அதற்கு மணவினை என்னும் பேச்சும் உலகத்தில் நிகழ்ந்தது; பின் எழுபது ஆண்டுக் காலக் கணக்கில் செயல் இழந்து கிடந்தது. இவ்வாறு அது ஒவ்வோர் இமையும் அழிவு நெறியிற் சென்று கொண்டிருத்தலை அறிந்திலீர். அதனால் உமக்குத் துணையாக நீவிர் தேடி வைத்துக் கொண்டது யாதும் இல்லை.

குறிப்புரை :

சேமித்தலை ``இட்டது`` என்றார். மணவினையைப் பெண்டிர்க்குப் பன்னிரண்டாண்டு அகவையினும், ஆடவர்க்குப் பதினாறாண்டு அகவையினும் நிகழ்த்துதல் பெரும் பான்மை வழக்க மாதலின், எல்லாம் அடங்க, ``பன்னிரண்டாண்டினில் மணம் பட்டது` என்றார்.
எனவே, ``மணம்` என்றதனை இரட்டுற மொழிந்து பெண்டிர்க்கு `மண வினை` என்றும், ஆடவர்க்கு `மணம் என்ற பேச்சு` என்றும் பொருள் உரைத்துக் கொள்க.
சுற்றத்தார் ஆடவர்க்குப் பன்னிரண்டாண்டிற்றானே. `இவற்கு இன்னாளை வாழ்க்கைத் துணைவி ஆக்கல் வேண்டும்` என வரையறை செய்ய முயலுதல் இயல்பு என்க.
இதனால், உடம்பு, `காலம்` என்னும் வாளின்வாய்ப்பட்டு இடையறாது அறுக்கப்பட்டு வருகின்றது என்பது கூறப்பட்டது.
நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின். -குறள். 334
என்றார் திருவள்ளுவ நாயனாரும்.
வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்;
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்;
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.
என்ற நாலடியார்ச் செய்யுளும் நோக்கத்தக்கது.

பண் :

பாடல் எண் : 22

இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டால்
முடிஞ்ச தறியார் முழங்குவர் மூடர்
விடிஞ்சிரு ளாவ தறியா உலகம்
படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே. 

பொழிப்புரை :

அகல் இருப்பினும், இருளை ஓட்டிப் பொருள் களை விளக்குகின்ற சுடரை அணைத்து விட்டால், அவ்வகலுக்கு உள்ள வாழ்நாள் முடிந்ததாம். (அது போல்வதே உடம்பின் வாழ்நாளும், அஃதாவது, உயிர் உள்ள அளவே வாழ்வும், அது நீங்கிய பொழுதே கேடும் உடம்பிற்கு உளவாகும்.) இதனை அறியாமல் உடம்பையே பொருளாகக் கருதி அறிவில்லாதவர் ஆரவாரிப்பர். பொழுது விடிந்தும் இருளில் கிடத்தலோடு ஒப்ப வழியறியாது தடுமாறும் குருடரைப் போல, மேற்சொல்லிய உடம்பின் இயல்பு கண்கூடாக விளங்கிநிற்கவும் உலகம் அதனை அறியாது உடம்பைப்பற்றிய பற்றில் அழுந்திக் கிடந்து, அதற்கு மேற்குறித்த நிலை வரும்பொழுது துயருறுதல் இரங்கத்தக்கது.

குறிப்புரை :

``விளக்கெரி`` வினைத்தொகை. அணைத்தலை, `கொள்ளுதல்` என்றார். `கொண்டான்` என்பது பாடம் அன்று. ``முடிஞ்சது, விடிஞ்சு, படிஞ்சு`` என்பவற்றில் நகர தகரங்கட்கு ஞகர சகரங்கள் போலியாய்வந்தன. முடிதலுக்கு வினைமுதல் வருவிக்கப் பட்டது. `விடிஞ்சிருளாவது போல`` என உவம உருபு விரிக்க. `குருடர்க்கு` என்பது ஆற்றலால் கொள்ளக் கிடந்தது. `உடம்பின் நிலையாமையை அறிதற்குக் காட்சியே அமைவதாகலின், நூல் வேண்டுவதில்லை` என்பதனை நாவுக்கரசர்,
``நடலை வாழ்வுகொண் டென்செய்தீர் நாணிலீர்,
சுடலை சேர்வது சொற்பிர மாணமே`` (தி.5 ப.90 பா.4)
என்று அருளிச் செய்தார்.
இதனால், `யாக்கை நிலையாமை காட்சியானே விளங்குவது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 23

மடல்விரி கொன்றையன் மாயன் படைத்த
உடலும் உயிரும் உருவம் தொழாமல்
இடர்படர்ந் தேழாம் நரகிற் கிடப்பர்
குடர்பட வெந்தமர் கூப்பிடு மாறே. 

பொழிப்புரை :

விடிந்தும் இருளாவது போலப் பெரிதும் அறி யாமையில் கிடப்பவர், சிவபெருமான் படைத்த உடம்பும், உயிரும் கூடிவாழுங் காலத்தில் அவன் படைத்த குறிப்பின்படி அவனது திரு மேனியை வழிபடாமல், வேறு பலவற்றையே செய்திருந்து, அவை பிரியுங்காலத்து, அச்சத்தால் குடர் குழம்பும்படி யமதூதர் வந்து இரைந்து அழைத்துப் பிடித்துச் செல்லும் வழியிலே மிக்க துயரத்துடன் சென்று, ஏழாகச் சொல்லப்படும் நரகங்களில் அழுந்துவர்.

குறிப்புரை :

மாயன் - கள்வன். தோன்றாது மறைந்து நிற்றலின் இவ்வாறு கூறினார். படைத்தலை உயிர்க்கு ஏற்றுங்கால், புணர்த்தலாக உரைக்க. `இடரொடு` என உருபு விரிக்க. `நரகம் ஏழு` என்பதற்கு, முதல் நரகம் ஒன்றே ஏழு நரகங்களை உடையதாயிருக்கும் என்னும் கருத்தினாலாம் என்பதே ஆகம நெறியாகலின், `ஏழ் நரகம்` என்னாது, ``ஏழாம் நரகு`` என்றார். மேற்கூறியவாற்றால் நோக்க நரகம் எட்டாகும். அவை, `இரௌரவம், துவாந்தம், சீதம், வெப்பம், சந்தாபம், பதுமம், மகாபதுமம், காலசூத்திரம்` என்பன. இவற்றுள் இரௌரவமே முதல் நரகம்; ஏனைய ஏழும் கிளை நரகங்கள். இன்னும், `இவை நரகம்` என்று வைத்து, மற்றும் `மகா நரகம், இராச நரகம், இராச ராச நரகம் என்று மூவெட்டு நரகங்கள் உள்ளன என அவற்றின் பெயர் முதலியவற்றைச் சிவாகமங்கள் விரித்துக்கூறும். எல்லாவற்றிலும் முதலிற் சொல்லப்படுவன ஒழித்து ஏனைய கிளை நரகங்களாம். ``நரகம் ஏழ்புக நாடின ராயினும்`` (தி.3 ப.49 பா.7) என்ற ஞானசம்பந்தர் திருமொழியில் எழுந்த ``நரகம் ஏழ்`` என்பதற்கும் சிவாகமங்களின் வழி இவ்வாறே பொருள் உரைக்கப்படும். `மக்கள் உடம்பை உயிர்கட்குச் சிவபெருமான் படைத்துக் கொடுத்தது, தன்னை வணங்குதற் பொருட்டே` என்பதை,
``மானிடப் பிறவி தானும் வகுத்தது மனவாக் காயம்
ஆனிடத்தைந்தும் ஆடும் அரன்பணிக்காக அன்றோ``
(சிவஞான சித்தி. சூ. 2.92)என்பதனானும் அறிக. `கொடுத்தவனது குறிப்பிற்கு மாறாகக் கொடுக்கப்பட்ட பொருளைப் பயன்படுத்துதல் உய்தியில் குற்றமாம்` என்றபடி. இதனால், `யாக்கை நிலையாமையை உணர்ந்தோர் அஃது உள்ளபொழுதே அதனாலாகும் பயனைப் பெற முயலுதல் வேண்டும்; இல்லாவிடில் இடர் விளையும்` என்பது கூறப்பட்டது,

பண் :

பாடல் எண் : 24

குடையுங் குதிரையுங் கொற்றவா ளுங்கொண்
டிடையுமக் காலம் இருந்து நடுவே
புடையு மனிதரார் போகும்அப் போதே
அடையும் இடம்வலம் ஆருயி ராமே. 

பொழிப்புரை :

வாழ்நாளின் இடையாய காலத்தில் அமைச்சர் முதலிய மாந்தர் புடைசூழ, நடுவே வெண்கொற்றக் குடையும். பட்டத்துக் குதிரையும், வெற்றி வாளும் கொண்டு வீற்றிருந்து, அவர்களை விட்டுப் போகும் கடைமுறைக் காலத்தில் உயிர் சென்று அடையும் இடமே அதற்கு வலிமையைத் தருவது.

குறிப்புரை :

எனவே, `இம்மை வாழ்வைப் பெரிதாக நினையாது மறுமை நோக்கி முயல்க` என்பது கூறப்பட்டதாம். ``இடையும்`` என்றது `இடையதாகின்ற` என்றவாறு, இனி, உம்மையை அசை நிலை யாக்கினும் ஆம், ``புடையும்`` என்பதில் உள்ள உம்மை, `அயலும்` என இறந்தது தழுவிற்று. `ஆர` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தல், `இடையும் அக்காலம்` புடையும் மனிதர் ஆர, நடுவே குடையும், குதிரையும், வாளும் கொண்டு இருந்து போகும் அப்போது ஆருயிர் அடையும் இடமே வலம் ஆம்` எனக் கூட்டுக. `மனிதனார்` என்பது பாடம் அன்று, ``அப்போதே`` என்ற ஏகாரம் பிரித்துக் கூட்டப் பட்டது. வலம் - வலிமை.

பண் :

பாடல் எண் : 25

காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென்
பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென்
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டுங்
கூத்தன் புறப்பட்டுப் போனஇக் கூட்டையே. 

பொழிப்புரை :

தோற்பை போன்றதாகிய இவ்வுடம்புள் இருந்து பல தொழில்களையும் செய்து இதனை உண்பிக்கின்ற கூத்தனாகிய உயிர் புறப்பட்டுப் போனபின் வெறுங்கூடு போல்வதாகிய இவ்வுடம் பினைப் பிறர் வாளாதே புறத்தில் எறிந்தமையால் காக்கைகள் கொத்தித் தின்னலும், கண்ணிற் கண்டவர் அருவருத்து இகழ்ந்து பேசு தலும் நிகழ்ந்தால் அதனால் இழக்கப்படுவது தான் யாது! சுற்றத்தார் ஈமக் கடனை நன்கு முடித்துப் பால் தெளித்து அடக்கம் பண்ணப் பலரும் புகழ்ந்து போற்றினாலும் அதனால் பெறப்படு வதுதான் யாது!

குறிப்புரை :

`பெருமை சிறுமைகளும், பேறிழவுகளும் எஞ் ஞான்றும் உயிர்க்கே யன்றி உடம்பிற்கு இல்லை` என்றவாறு, இவ் வுண்மை உணர்த்தற் பொருட்டே இவ்வாறு கூறினமையால், பின்னர்,
அந்தமில் ஞானிதன் னாகம்வெந் தீயினில்
வெந்திடின் நாடெலாம் வெம்பும்வெந் தீயினில்
நொந்தது நாய்நரி நுங்குறி னுண்செரு
வந்துநாய் நரிக்குண வாம்வை யகமே. -தி.10 ஏழாம் தந்திரம்
என்பதனோடு இது முரணாமை அறிக. அதனானே, உலகியலில் நின்றாரது உடம்பை நல்லடக்கம் செய்தலும் அவரது மறுமை நலன் நோக்கி என்பதும் பெறப்படுவதாம், உடம்பு உயிராகாமை உணர்த் துவார் அதனைக் கூத்தன் புனைந்து கொள்ளும் கோலத்தோடு உவமித் தற்கு, உயிரை, ``கூத்தன்`` என்றார். அதனானே, உடம்பும், அது வாயிலாகச் செய்யப்படும் செயல்களும் உயிர்க்கு என்றும் உள்ளன வாகாது, சிறிது காலம் வந்து நின்று நீங்குவனவாதலும் பெறப்பட்டது. ``புறப்பட்டுப் போன`` என்றதன் பின், `பின்` என்பது வருவிக்க. அவ்வாறு வருவியாதவழி, `இக்கூட்டை` என்றது, உயிர் நீங்கிக் கிடந்த ஓர் உடம்மைச் சுட்டிக் கூறிற்றாக உரைக்க. `இச்சட்டையை` என்�%A
சிற்பி