முதல் தந்திரம் - 8. உயிர் நிலையாமை


பண் :

பாடல் எண் : 1

தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்
இழைக்கின்ற தெல்லாம் இறக்கின்ற கண்டும்
பிழைப்பின்றி எம்பெரு மானடி ஏத்தார்
அழைக்கின்ற போதறி யாரவர் தாமே.

பொழிப்புரை :

தண்ணிய பூங்கொம்பில் தளிர், தழை, பூ முதலாக அதனால் தோற்றுவிக்கப்படுகின்ற பலவும் அங்ஙனம் தோற்றுவிக்கப் பட்டவாறே நில்லாது உருமாறி அழிகின்றதைக் கண்டும் அறிவில்லா தவர், ஆசிரியர் உண்மையைச் செவியறிவுறுத்துச் சிவபெருமானது திருவடியை அடைய அழைக்கின்ற பொழுதே அவரது சொற்கடவாது அதனையடைதற்கு முயலாது, `பின்பு முயல்வோம்` என்று புறக்கணித் திருப்பர்.

குறிப்புரை :

`அவ்வாறிருப்பின், அவ்வுணர்வு முறுகி எழாது மெலிந்து, முன்போல உலகியலில் ஆழ்ந்து கெடும்` என உணர்வினது நிலையாமை கூறியவாறு காண்க. ஒன்றே செய்க; நன்றே செய்க; நன்றும் இன்றே செய்க` என, `நல்லன செய்தல் வேண்டும் என்ற உணர்வு உண்டாய வழி அப்பொழுதே செய்தல் வேண்டும்` எனக் கூறுதலும், உணர்வு நிலையாமையை நோக்கியேயாம். இன்னும், `புராண வைராக்கியம், மசான வைராக்கியம்` முதலியவற்றாலும் உணர்வு நிலையாமையைக் கூறுப. ``மலர்தலும் கூம்பலும் இல்ல தறிவு`` (குறள் - 425) என்றாற் போல்வனவற்றாலும் திருவள்ளுவர் உணர்வு நிலையாமையை உணர்த்தினார்.
``நின்னைஎப் போதும் நினையலொட் டாய்; நீ நினையப்புகின்,
பின்னை அப் போதே மறப்பித்துப் பேர்த்தொன்று நாடுவித்தி``
-தி.4 ப.112 பா.4.
என்றதனாலும் இவ்வுணர்வு நிலையாமை நன்கறியப்படும். உயிர் உளதாகவும் உணர்வு இவ்வாறு நிலையாது போதலின், அதற்குக் கொம்பு கேடின்றி நிற்கவும் அதன்கண் உளவாகின்ற தளிர் முதலியன உருமாறிக் கெடுதல் உவம அளவையாயிற்று. தளிர் முதலியன தோன்றுதல் இயல்பாயினும், அதற்குக் கொம்பு முதலாத லின் அதனால் ஆக்கப்படுவனவாகக் கூறினார். இழைத்தலுக்குக் காலத்தை முதலாக வைத்து உரைப்பினும் அமையும். பிழைப்பு - பிழைத்தல்; பிழை செய்தல். அஃதாவது அழைத்தவாறே உடன்பட்டுச் செல்லாதொழிதல்.
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில். -குறள். 833
என்பவற்றில் இது, ``பேணாமை`` என்னும் குற்றமாம்.
``அருபரத் தொருவன் அவனியில் வந்து
குருபர னாகி அருளிய பெருமையைச்
சிறுமையென் றிகழாதே``
-தி.8 போற்றித் திருவகவல் -75-77
என மாணிக்கவாசகரும் அருளிச்செய்தார். எம்பெருமானடியை ஏத்த அழைப்பவர் ஞானாசிரியரேயாதல் அறிக. வேறு தொடராக்காது. `அறியாரவர்தாம், அழைக்கின்றபோது பிழைப்பின்றி எம்பெரு மானடி ஏத்தார்` எனக் கூட்டி உரைக்க.
இதனால், உணர்வு நிலையாமை உவம அளவையின்வைத்து உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஐவர்க் கொருசெய் விளைந்து கிடந்தது
ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள்
ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால்
ஐவரும் அச்செய்யைக் காவல்விட் டாரே. 

பொழிப்புரை :

உடையான் ஒருவனால் ஐவர் உழவர்க்கு ஒரு நிலம் விளைவு செய்ய விடப்பட்டது. அவ் ஐவரும் அதனை நன்றாகவே பேணி வந்தமையால், அந்நிலமும் நன்றாகவே விளைவைக் கொடுத் தது. ஆயினும், உடையான் அந்நிலத்தை மாற்றக் கருதி அவர்களை விலகுமாறு ஓலை விடுத்தமையால், அவ் ஐவரும் அந்நிலத்தைக் கைவிட்டனர்.

குறிப்புரை :

`அந்நிலையில் அந்நிலம் விளைவைத் தருதல் எவ்வாறு` என்பது குறிப்பெச்சம். ஐவர், ஐம்பொறிகள், செய், உயிர், விளைதல், உணர்வு நிகழப்பெறுதல். நாயகன், சிவன். ஓலை, ஆணை; நியதி தத்துவத்தின் செயல். ``காவல் விட்டார்`` என்ற அளவே கூறினமையின், `பொறிகள் ஆற்றல் அடங்கின` என்ற அளவே கொள்க. உயிர் உளதாகவும் பொறிகள் அடங்கின் உணர்வு ஒழிதல் காட்சியானே உணரப்படுதலின், ஒரு பொறியன்றி ஐம்பொறியின் வயப்பட்டு நிற்கும் உணர்வு ஒரு நிலையதாதல் எவ்வாறு` என்பது கருத்து. ஓர் உணர்வு ஐம்பொறியின் வயப்பட்டுப் பலவாறாகச் சிதறுண்டலால் வரும் துன்பத்தினை மாணிக்கவாசகர்,
``ஆனைவெம் போரில் குறுந்தூறெனப் புலனால் ஆலைப் புண்டேன்``
எனவும்,
``எறும்பிடை நாங்கூ ழெனப்புல னால் அரிப்புண்டலந்த
வெறுந்தமியேன்`` தி.8 நீத்தல் விண்ணப்பம் - 21,25.
எனவும் விளங்க ஓதினார். இன்னும்,
``அஞ்சினால் இயற்றப் பட்ட ஆக்கைபெற் றதனுள் வாழும்
அஞ்சினால் அடர்க்கப் பட்டிங் குழிதரும் ஆதனேன்``
-தி.4 ப.26 பா.5
என அப்பரும்,
``ஐவர் கொண்டிங் காட்ட ஆடி ஆழ்குழிப்பட்டழுந்து வேனுக்கு
உய்யு மாறொன் றருளிச் செய்யீர் ஓண காந்தன் தளியுளீரே``
-தி.7 ப.5 பா.1
என ஆரூரரும் அருளிச்செய்தலும் காண்க.
பொறியின்றி ஒன்றும் புணராத புந்திக்கு
அறிவென்ற பேர்நன் றற. -திருவருட்பயன் - 15.
என்றதும் உயிர் உணர்வு தன்வயமுடைத்தாய் நிலை நில்லாமை பற்றியேயாம்.
``ஒருபுலன் நுகரும் போதங் கொன்றிலை; ஒன்றன் பாலும்
வருபயன் மாறி மாறி வந்திடும்; எல்லாம் மாறும்
ஒருபொழுது``
என்னும் சிவஞான சித்தி (சூ. 2.94)ச் செய்யுள் இவ்வுணர்வு நிலையாமையை இனிது விளக்குதல் காண்க.
இதனால், உணர்வு நிலையாமை, இறுதிக்கால நிகழ்ச்சியாகிய காட்சியின் வைத்து உணர்த்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

மத்தளி ஒன்றுளே தாளம் இரண்டுள
அத்துள்ளே வாழும் அமைச்சும்அஞ் சுள்ளன
அத்துள்ளே வாழும் அரசனும் அங்குளன்
மத்தளி மண்ணாய் மயங்கிய வாறே. 

பொழிப்புரை :

பெரிய அரண்மனை ஒன்றிலே மேல் கீழ்த் தளங்கள் இரண்டு உள்ளன. அந்த அரண்மனைக்குள்ளே வாழ்கின்ற அமைச்சர் ஐவரும், அரசன் ஒருவனும் உளர். அவர்கள் அதன் உள்ளே இருக்கும் பொழுதே அந்த அரண்மனை கால்சாய்ந்து மண்மேல் விழுந்துவிட, அவர்கள் கலக்கம் எய்தியவாறு வியப்பாகின்றது.

குறிப்புரை :

`மத்தளம் ஒன்றோடு கூடிய தாளம் இரண்டு உள்ளன என்பதொரு நயம்தோன்றுதற் பொருட்டு, `மகத் தளி, தளம்` என்ப வற்றை, இடைக் குறைத்தும், முதல் நீட்டியும் கூறினார். மத்தளத்தை `மத்தளி` என்றலும் பொருந்துவதே; இகரம் பகுதிப்பொருள் விகுதி. மத்தளம் ஒன்றாய் நின்றே ஓசைதர, தாளம் இரண்டாய் நின்றே ஓசை தருவது என்பதும் குறித்தவாறு. இவ்வாறு சொல்லளவால் பிறிது பொருள் தோற்றுதலையும் ஒட்டணியின்பாற் படுத்துவர். மகத்தளி - பெரியகோயில்; அரண்மனை; உடம்பு மேல்கீழ்த்தளம் புருவ நடுவும், மூலாதாரமும். அமைச்சர் ஐவர், ஐம்பொறிகள். `அரசரும்` என்பது பாடம் அன்று. அரசன், உயிர். அது மூலாதாரத்துச் சென்று ஒடுங்கும் நிலையில் எல்லாக் கருவிகளும் செயலற்றுப் போக, உயிர்ப்பும் இல் லையாய், உடல் மண்மேல் சாய்ந்து கிடக்கும். இந்நிலையை `மூர்ச்ை\\\\\\\\u2970?` என்பர். `கேவல துரியா தீதம்` என்பதும் இதுவே. இஃது இறப்பு அன் றாகலின், `அரசனும் அமைச்சரும் உள்ளிருக்கும் பொழுதே அரண் மனை சாய்ந்தது வியப்பு` என்றார். சாக்கிரம் முதலாக இவ் வதீதங்காறும் உள்ள அவத்தைகள் ஐந்தும் வினைவழி உயிர்க்கு உளவாவனவாம். ``மண் ஆய்`` என்பதில் `மண்ணின்கண் ஆகி` என உருபு விரித்து, ``ஆய்`` என்றதை, `ஆக` எனத் திரிக்க. ஆதல், இங்கு, பொருந்துதல். மயங்குதலுக்கு வினைமுதல் அமைச்சரும் அரசனும். `வியப்பு` என்பது சொல்லெச்சம்.
இதனால், உணர்வு நிலையாமை, அதீதநிலை நிகழ்ச்சியாகிய காட்சியின் வைத்து உணர்த்தப்பட்டது. மேற்காட்டிய, ``ஒருபுலன் நுகரும்போது`` என்ற சிவஞானசித்தி (பா.187. உரை)ச் செய்யுளில், ``எல்லாம் மாறும் ஒருபொழுது`` என்றதில், ``ஒருபொழுது`` எனப்பட்டது இவ்வதீத நிலையேயாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 4

வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை
வேங்கடத் துள்ளே விளையாடு நந்தியை
வேங்கடம் என்றே விரகறி யாதவர்
தாங்கவல் லாருயிர் தாமறி யாரே.

பொழிப்புரை :

இங்ஙனம் பல்லாற்றாலும், உடம்பு உள்ள பொழுதும் உணர்வு நிலையாமையை உணர்ந்து, பின், உணர்வுக்குக் கருவியாயுள்ள உடம்பும் அடியோடு நிலையாது போதலை நினைந்து உள் இருந்து நடத்தும் இறைவனை ஞானத்தால் உணரமாட்டாதவர் தம் உயிரைத் தாங்கி நிற்கின்ற அரிய உயிரையும் அறியாதவரே யாவர்.

குறிப்புரை :

வேம் கட நாதன் - வேகின்ற காட்டில் (சுடுகாட்டில்) ஆடும் கடவுள். இனி, `வேங்கடமலைமேல் உள்ள நாதன்` என வேறொரு பொருளும் தோன்றக் கூறினமை காண்க. ``வேங்கடத்து மேயானை மேவா உயிரெல்லாம் - வேங்கடத்து நோயால் வியந்து`` (தி.11. கபிலர் அந்தாதி 15) என வருதலின், வேங்கடம் சிவதலமாதல் பெறப்படும். வேம் கடத்துள்ளே - வெந்தொழிவதாகிய நம் உடம்பினுள்ளே. இறைவன் நமது புலாலுடம்பினுள்ளும் உளனாதல் மேலே (தி.10 பா.115 - 116) காட்டப்பட்டது. வேம் கடம் என்று - வெந்தொழியும் உடம்பு என்று அறிந்து. விரகு - உபாயம்; உபாயத்தால், என உருபு விரிக்க. `தாங்க வல்லதாகிய ஆருயிர்` என்க. `உயிரை அதற்கு உயிராய் நின்று யாண்டும் காத்தலின்` இறைவனை, ``தாங்க வல்ல ஆருயிர்`` என்றார். ``தன் கடன் அடியேனையும் தாங்குதல்`` (தி. 5. ப.19. பா.9) எனவும், ``எடுத்துச் சுமப்பான்`` (திருவருட்பயன் 55) என்றும் வருவனவும், இறைவன் உயிரைத் தாங்குவோனாதலை விளக்க எழுந்தனவாம். தாங்கவல்ல ஆருயிரை அறியாமையாவது, `அவ்வுயிரே, தாங்கப்படுகின்ற உயிர்க்கு உணர்வைத் தருவது` என அறியாமை. `அறிந்தால், தமது உணர்வு நிலையாமை உடையது என்பது விளங்கும்` என்பது கருத்து. `சிவன் உயிர்க்குயிராய் நின்று உணர்த்தாவிடில், உயிருக்கு உணர்வு நிகழாது` என்பதனை,
அக்கரங்கட் கெல்லாம் அகரஉயிர் நின்றாற்போல்
மிக்க உயிர்க்குயிராய் மேவினோம் - எக்கண்ணும்
நில்லா விடத்துயிர்க்கு நில்லா தறிவென்று
நல்லாகமம் ஓதும் நாடு.
-உண்மை விளக்கம் 30
என்பதனான் அறிக.
``நானேதும் அறியாமே என்னுள் வந்து
நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்`` -தி.6 ப.62 பா.2
என அருளிச்செய்ததும் இதனை.
இதனால், உணர்வு உளதாகுமாறு கூறு முகத்தான், அதனது நிலையாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

சென்றுணர் வான்திசை பத்துந் திவாகரன்
அன்றுணர் வால்அளக் கின்ற தறிகிலர்
நின்றுண ரார்இந் நிலத்தின் மனிதர்கள்
பொன்றுணர் வாரிற் புணர்க்கின்ற மாயமே. 

பொழிப்புரை :

பகலவன் பத்துத் திசைகளையும், ஓடி உழன்று தனது ஒளியினால் காண்கின்றான். ஆனால், சிவபெருமான், அப் பகலவன் உண்டாதற்கு முன்னிருந்தே அனைத்தையும் தனது முற்றுணர்வால் கண்டு நிற்கின்றான். அதனையும், அவன் அனைத்துலகத்தும் உள்ள நிலையாத உணர்வை உடைய உயிர்களிடத்துக் கூட்டுவிக்கின்ற மாயப்பொருள்களின் தன்மையையும் இந்நிலவுலகத்தில் உள்ள மக்கள் ஆராய்ந்துணர்கின்றார்களில்லை.

குறிப்புரை :

ஒளி காரணமாகப் பகலவனை இறைவனோடு உவ மித்தல் வழக்காதல் நோக்கி இறைவன் அவனினும் மிக்கவனாதலை விளக்கினார். இங்ஙனம் அவனது முற்றுணர்வின் பெருமையை எடுத்துக்கூறியது, அவ்வறிவாற்றலால் அவன் அனைத்துயிர்களையும் தன் இச்சைவழி நடாத்துகின்றான் எனக் கூறுதலை நிறுவுதற் பொருட்டாம். ``அன்று`` என்பதன்பின் `முதல்` என வருவிக்க. அளக் கின்றதற்கு வினைமுதலாகிய ``நந்தி`` என்பது மேலைத் திருமந்திரத் தினின்றும் வந்து இயைந்தது. ``அறிகின்றிலர், உணரார்`` என இரு தொடராக வைத்து அருளியது, `அவ்விரண்டும் தனித்தனி ஆய்ந் துணரத் தக்க சிறப்புடையன` எனறற்கு. ``இந்நிலத்தின்`` எனச் சுட்டிக் கூறினமையால், ஏனையிடத்தில் அனைத்துலகமும் கொள்ளப் பட்டன. மூன்றாம் அடியை இறுதியின் வைத்து உரைக்க. பொன்றுதல், இங்கு, நிலையாமை. ``உணர்வார்`` என்பது, `உணர்வு` என்பதன் அடியாகப்பிறந்த பெயர். அனைத்துயிர்களையும் உயர்திணையாக வைத்துக் கூறினார் என்க. மாயம் - அழிவு. சிவன் பெத்தத்தில் கருவிகள் வாயிலாக நிலையாத உணர்வையே உயிர்கட்கு உண்டாக் குகின்றான் என்பதை உணர்வார்க்கு உணர்வினது நிலையாமையும் விளங்கும் என்பது கருத்து.
இதனால், உணர்வு நிலையாமைக்குக் காரணங் கூறுமுகத்தால், அந்நிலையாமை வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

மாறு திருத்தி வரம்பிட்ட பட்டிகை
பீறும் அதனைப் பெரிதுணர்ந் தாரிலை
கூறும் கருமயிர் வெண்மயி ராவதும்
ஈறும் பிறப்புமொ ராண்டெனும் நீரே. 

பொழிப்புரை :

பாவும், உண்டையுமாக மாறிக் கூடும் இழைகளை நன்கு செப்பம் செய்து ஆக்கி விலைவரம்பு செய்கின்ற பட்டாடைகள் என்றும் அவ்வாறே இருப்பதில்லை: என்றாயினும் நைந்து கிழிவதை அனைவரும் காண்கின்றனர். அதுவன்றியும் குறிக்கப்படுகின்ற ஒரு நாளை ஓர்யாண்டின் முடிவாகவும், மற்றொரு நாளை அடுத்த ஆண்டின் தொடக்கமாகவும் கொண்டு ஒவ்வொரு வர்க்கும் கழிகின்ற ஆண்டுக் கணக்கே அவர்க்கு `விரைவில்` நரை வரும்` என்பதை அறிவிக்கும். அவையெல்லாம் இருந்தும் மக்கள், `தம் அறிவும் ஆற்றலும் இன்றுள்ளவாறே என்றும் இருக்கும்` என்று மகிழ்ந்திருக் கின்றனர். இன்னதோர் அறியாமை இருந்தவாறு இரங்கத் தக்கது!

குறிப்புரை :

மாறு, முதனிலைத் தொழிற்பெயர். அஃது ஆகு பெயராய், அதனை உடையவற்றைக் குறித்தது. \\\\\\\"கூறும்`` என்பதனை மூன்றாம் அடியின் இறுதியிற் கூட்டி, அவ்வடி முழுவதையும் இறுதியின் வைத்து உரைக்க. `ஈற்றினாலும்` பிறப்பினாலும்` என்னும் உம்மைகள் தொகுத்தலாயின. `ஓர்யாண்டின் இறுதிநாளை அடுத்த மற்றோர் யாண்டின் முதல்நாள் தொடங்கிவிடுகின்றது` என அவற்றின் இடையறாமையை உணர்த்தற்கு ஈற்றினை முன்னர்க்கூறினார். `அதனைப் பெரிதறிவாரில்லை` என்னும் அத்தொடரினைப் பின்னும், \\\\\\\"கூறும்`` என்பதனுடன் கூட்டுக. இளமைக் காலத்துள்ள உணர் வாற்றல் முதுமைக் காலத்துத் தளர்ச்சியுறும் என்றவாறு.
இதனால், உணர்வு நிலையாமை மூப்பினது இழிவுணர்த்து முகத்தால் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

துடுப்பிடைம் பானைக்கும் ஒன்றே அரிசி
அடுப்பிடு மூன்றிற்கும் அஞ்செரி கொள்ளி
அடுத்தெரி யாமற் கொடுமின் அரிசி
விடுத்தன நாள்களும் மேற்சென் றனவே.

பொழிப்புரை :

ஓர் அகப்பையே இடப்பட்ட ஐந்து பானைகள் அடுக்காய் உள்ளன. அவை அனைத்திலும் இட்டு அடப்படுகின்ற அரிசி ஒன்றே உள்ளது. அப்பானைகளை ஏற்றிவைக்கின்ற அடுப்புகள் மூன்று உள. அம்மூன்று அடுப்பிலும் மாட்டி எரிக்கின்ற விறகுகள் ஐந்து உள்ளன. இதனால் அவ்வரிசி நன்முறையில் அடப்படுமோ! படாது. அதனால், அவைகளில் வைத்து அவ்வரிசியை அட நினையாமல், நல்ல அட்டில் தொழிலாளனிடம் கொடுங்கள்; கொடுத்தால் நன்கு அட்டு உண்ணலாம். முன்சொன்ன வகையில் அரிசியை அடலாம் என்று நினைத்துக் கழித்த நாள்களும் பலவாய் முன்னே போய்விட்டன. இனியேனும் அவனிடம் அவ்வரிசியை விரையக் கொடுங்கள்.

குறிப்புரை :

`உயிர் உணர்வு சிவனைச் சார்ந்தால் நிலை பெற்று இன்பந் தருமேயல்லது, மாயாகாரியங்களைச் சார்ந்தால் நிலை பெறாது துன்பத்தையே தரும்` என்பது உணர்த்துதற்கு இவ்வாறு கூறினார். துடுப்பு, உயிர்; அரிசி, அதன் உணர்வு; ஐந்து பானை, ஐந்து உடம்பு; மூன்று அடுப்பு, `இறப்பு, நிகழ்வு, எதிர்வு` என்னும் மூன்று காலங்கள்; ஐந்து விறகு, ஐம்பொறிகள். இவை இங்ஙனம் உருவகிக்கப் பட்டமைக்குரிய இயைபுகளை ஓர்ந்துணர்ந்துகொள்க. இங்குச் சொல்லப்பட்ட பானை முதலியவற்றால் அடுதல் தொழில் நிகழ லாகாமை அறிக. ``எரியாமல்`` என்பது, பிறவினை வினையெச்சம். `விடுத்தனவாகிய நாள்களும்` என்க. `துடுப்பிடு பானைக்கும்` என்பது பாடம் அன்று. நல்ல அட்டில் தொழிலாளன், சிவன். ஐந்துடம் பாவன, `சோற்றுடம்பு, காற்றுடம்பு, உளத்துடம்பு, உணர்வுடம்பு, களிப் புடம்பு` என்பன. இவை முறையே, `அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம்` எனப்படும். இவற்றின் இயல்பு அப்பால் விளங்கும்.
இதனால், மாயா காரியங்களின் வேறுபாட்டால் உணர்வு நிலையாமை உடைத்தாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

இன்புறு வண்டிங் கினமலர் மேற்போய்
உண்பது வாச மதுபோல் உயிர்நிலை
இன்புற நாடி யிளைக்கிலு மூன்றொளி
கண்புறம் நின்ற கருத்துள்நில் லானே. 

பொழிப்புரை :

தேனை விரும்புகின்ற வண்டு அதனை உண்பது மலரிடத்தே சென்று அதன்கண் வீழ்ந்தேயாம். உயிரினுடைய நிலைமையும் அத்தன்மையதே. அஃதாவது, இன்பத்தை விரும்புகின்ற உயிர் அதனைப் பெறுவது சிவனை அடைந்து அவனிடத்து அடங்கி நிற்கும் பொழுதேயாம். வண்டு தேனை உண்ண விரும்பிப் பிற இடங்களில் ஓடியிளைப்பினும் அது கிடையாததுபோல, உயிரும் இன்பம் பெற விரும்பிப் புறக்கண்வழி ஓடி இளைப்பினும் அங்ஙனம் ஓடுகின்ற உயிரில், அன்பின்ஊன்ற உள்ளெழும் சோதியாகிய (தி.12 பெ. பு. திருஞான - 835) சிவன் விளங்கமாட்டான். `எனவே, இன்பம் கிட்டாது` என்பதாம்.

குறிப்புரை :

இங்ஙனமாகவே அகக்கண்ணில் நின்ற உயிர் உணர் விற்கு விளங்குவானாயிற்று. இனமலர் - கூட்டமாய மலர். இஃது ஒரு மைக்குப் பன்மை உவமை. வாசம் - வசித்தல்; `வாசத்தால்` என்னும் உருபு தொகுத்தலாயிற்று. \\\\\\\"போல்`` என்னும் முதனிலை முற்றுப் பொருளது. பொருட்கண். ``இன்புற நாடி நினைக்கிலும் - கண்புறம் நின்ற கருத்துள் நில்லானே`` எனப் பின்னுங்கூறி விரித்தமையால், உவமைக்கண்ணும் அவ்வாறு விரித்துரைக்கப்பட்டது. நினைக்கினும் என்பது பாடம் அன்று. `கட்புறம்` என்பது, எதுகை நோக்கி மெலிந்து நின்றது. இது, `புறக்கண்` என்பதன் நிலைமாற்றம்.
இதனால், உணர்வு நிலையாமை, அதன் மறுதலை முகத்தால் கூறப்பட்டது. கண், ஞானமுமாம்.

பண் :

பாடல் எண் : 9

ஆம்விதி நாடின் அறஞ்செய்மின் அந்நிலம்
போம்விதி நாடின் புனிதனைப் போற்றுமின்
ஆம்விதி வேண்டும தென்சொலின் மானிடர்
ஆம்விதி பெற்ற அருமைவல் லார்க்கே. 

பொழிப்புரை :

மக்களாய்ப் பிறக்கின்ற ஊழைப் பெற்ற அருமை அறியவல்லார்க்கு மேலும் உயர்வடைகின்ற நெறி இன்றியமை யாதது. அஃது என்ன என்பதைச் சொல்லுமிடத்து, இவ்வுலகில் மீளவும் பிறந்து உயர்ந்து நிற்கின்ற நெறியை விரும்புவீராயின், பசுபுண்ணியத்தைச் செய்யுங்கள். அவ்வாறின்றிச் சிவலோகத்திற் சென்று சிவானந்தத்தை அடைகின்ற நெறியை விரும்புவீராயின், சிவபெருமானை வழிபடுத லாகிய சிவபுண்ணியத்தைச் செய்யுங்கள்.

குறிப்புரை :

`மானிடர் ஆம் விதி பெற்ற அருமை வல்லார்க்கு ஆம் விதி வேண்டும்; அது என் சொலின்` என எடுத்துக்கொண்டு உரைக்க. ஈரிடத்தும் `நாடி` எனவும் பாடம் ஓதுப. `நாம் விதி வேண்டும்` என ஓதுதல் பாடம் ஆகாது, பின்னர் ``அந்நிலம்`` என்றதனால், முன்னர் `இந்நிலம்` என்பது பெறப்பட்டது. ``வல்லார்க்கு வேண்டும்`` என்றது வேறு முடிபாகலின், \\\\\\\"செய்மின், போற்றுமின்`` என்பன இடவழு ஆகாமை அறிக.

பண் :

பாடல் எண் : 10

அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின்
வெவ்விய னாகிப் பிறர்பொருள் வவ்வன்மின்
செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொரு
தவ்விகொ டுமின் தலைப்பட்ட போதே.

பொழிப்புரை :

வாய்ப்பு நேரும்பொழுது அது கிடைத்துவிட்ட தென்று புறங்கூறிப் பாவத்தைத் தேடிக்கொள்ளாதீர்கள். தீக்குணம் உடையாராய்ப் பிறர் பொருளைக் கள்ளாதீர்கள். நற்பண்பு உடையாராய் உயர்ந்து, உண்ணும்போது சிறிதாயினும் பிறருக்குக் கொடுத்து உண்ணுங்கள்.

குறிப்புரை :

`இந்நெறியில் நின்றால் நிலையாமை நீங்கி இன்பம் பெறலாம்` என்பது குறிப்பெச்சம். அவ்வியம் - பெறாமை. அது, \\\\\\\"பேசி`` என்றதனால், அதனால் வரும் புறங்கூற்றைக் குறித்தது. \\\\\\\"வெவ்வியர், செவ்வியர்`` என்பன இடவழுவமைதி. `வெவ்வியன், செவ்வியன்` என்பன பாடமாயின், பன்மை ஒருமை மயக்கமாகவும் கொள்க. தவ்வி - சிறிது. \\\\\\\"யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி`` எனப் பின்னரும் அருளுவார். `செவ்வி தலைப்பட்ட போது` என ஒரு சொல் வருவித்து முதலிற் கூட்டுக. `தவ்விக் கொடுண்மின்` என்பது பாடமன்று.
இவ்விரண்டு திருமந்திரங்களாலும், `உணர்வு நிலை யாமையை உணர்ந்து நிலைபெறுதற்குரிய நெறியில் நிற்றல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.
சிற்பி