முதல் தந்திரம் - 17. வானச் சிறப்பு


பண் :

பாடல் எண் : 1

அமுதூறு மாமழை நீரத னாலே
அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும்
கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை
அமுதூறும் காஞ்சிரை ஆங்கது வாமே. 

பொழிப்புரை :

வற்றாத அமுத ஊற்றுப்போலச் சுரந்து பொழிகின்ற பெரிய மழைநீராலே பயன் சுரக்கின்ற பல மரங்கள் இயற்கையாக நிலத்தில் தோன்றி வளர்வனவாம். இனி உழவரால் பயிரிடப்படுகின்ற கமுகு, இனிய நீரைத் தருகின்ற தென்னை, கரும்பு, வாழை முதலியனவும் அம்மழையினாலே மக்கட்கு நிரம்பிய உணவைத் தருவனவாம். இனி எட்டி போன்ற நச்சு மரங்களும் அம்மழையினால் உளவாவனவேயாம்.

குறிப்புரை :

முதற்கண், ``அமுதூறும்`` என்பதன் இடையில் `போல` என்னும் உவம உருபு விரிக்க. `நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்` (தி.10 ஆறாம் தந்திரம்) எனப் பின்னர்க் கூறுமாறுபோலவே, இயற்கை விளைவுகளைக் கூறியதேயன்றி, உழவரால் உளவாகும் செயற்கை விளைவுகளையும் கூறினார், சிறப்புடைய மக்களுலகம் அவற்றால் வாழ்தல் கருதி. ``ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும் - வாரி வளங்குன்றிக் கால்`` (குறள் - 14 1) என்றார் திருவள்ளுவரும். இதனானே உழ வாகிய முதற்றொழிலும், ஓரிடத்து விளையும் பொருளைப் பிற விடத்துக்கொண்டு கொடுக்கும் வாணிகம் முதலிய துணைத்தொழிலும் ஆகியவற்றால் பல்வேறு திறத்து மக்களது வாழ்விற்கும் மழை முதலாதல் போந்தது. போதரவே, மேல் கூறாதொழிந்த வணிகர், வேளாளர் என்பாரொடு ஏனைமக்களது ஒழுக்கங்களும் ஓராற்றால் கூறப்பட்டனவாயின. இங்கும் அமுதூறும் மரங்களுடன், நஞ்சூறும் மரங்களும் மழையினால் உளவாதல் கூறினார், ``பார்மிை\\\\u2970?`` எனக் கூறிய இந்நிலவுலகம் நல்வினை தீவினை இரண்டற்கும் இடமாகிய இருவினை உலகமாவதல்லது, சுவர்க்கமும், நரகமும் போல ஒரு வினை உலகமன்று என்பது அறிவித்தற்கு. எனவே, `கன்ம பூமியாகிய இந்நிலவுலகம் நடத்தற்கு மழையே முதல்` என்பது கூறப்பட்டதாம். புல், பூடு முதலிய பலவும் இங்கு, `மரம்` என அடக்கப்பட்டன. ``மரப் பெயர்க் கிளவிக்கு அம்மே சாரியை`` (தொல்-எழுத்து, 415) என்றாற்போல. ``காஞ்சிரை யும்`` என்ற உம்மை தொகுத்தலாயிற்று.

பண் :

பாடல் எண் : 2

வரையிடை நின்றிழி வான்நீர் அருவி
உரையில்லை உள்ளத் தகத்துநின் றூறும்
நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர்
கரையில்லை எந்தை கழுமணி யாறே. 

பொழிப்புரை :

எம்தந்தையாகிய சிவபெருமான் பொழிகின்ற திருவருளாகிய வெள்ளம் அன்பரது நெஞ்சகத்தினின்றும் ஊறுகின்ற சூக்குமமாகிய தெளிநீராம் ஆதலின், அதற்கு உலகில் மழையால் மலையினின்றும் பாய்கின்ற வெள்ளிய அருவி நீர்க்கு உள்ளதுபோல இடமும், காலமும் சுட்டும் சொல்லில்லை; நுரை இல்லை; மேலே மூடுகின்ற பாசியில்லை; கரையில்லை.

குறிப்புரை :

``நுரையில்லை மாசில்லை`` என்பதனை இறுதியடியின் முதலிற் கூட்டுக. ``நுரை இல்லை`` என்றது, `பயன்படா தொழியும் கூறில்லை` எனவும், ``மாசில்லை`` என்றது, `பாசத் தொடர்பு இல்லை` எனவும் கூறியவாறாம். எனவே, `அமுத ஊற்று` என மேல் சிறப்பிக்கப்பெற்ற நீர்மழையினும் இறைவனது கருணைமழை மிகச் சிறந்தது என்பது கூறும் முகத்தால், `இறைவனது கருணையானே மழை உளதாகும்` என்பது உணர்த்தப்பட்டதாம். ``முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே - என்னப் பொழியாய் மழை`` என மாணிக்கவாசகர், மழையை இறைவன் கருணையோடு உவமித்ததும் இதுபற்றி. இக்கருத்தே பற்றித் திருவள்ளுவரும் வான்சிறப்பைக் கடவுள் வாழ்த்தினை அடுத்து வைத்தார். இதனானே மக்களது ஒழுக்க மும், ஒழுக்கம் இன்மையும் மழைக்கும், மழை இன்மைக்கும் நேரே காரணமாகாது, இறைவனது திருவுள்ளத்திற்கு உவகையும் வெகுளி யும் உளவாக்கும் முகத்தால் காரணமாம் என்பது பெறப்பட்டது. சிறந்த ஒளியாதல் பற்றித் திருவருளை, ``கழுமணி`` என்றார்.
இதனால், மழை இறைவனது திருவருள் வடிவாதல் கூறப் பட்டது.
சிற்பி