முதல் தந்திரம் - 19. அறஞ்செய்வான் திறம்


பண் :

பாடல் எண் : 1

தாமறி வாரண்ணல் தாள்பணி வாரவர்
தாமறி வாரறந் தாங்கிநின் றாரவர்
தாமறி வார்சில தத்துவ ராவர்கள்
தாமறி வார்க்குத் தமன்பர னாமே.

பொழிப்புரை :

`சிவபெருமானது திருவடியை வணங்குதல், பிறர்க்கும் பிற உயிர்க்கும் உதவுதலை மேற்கொண்டு செய்தல், தத்துவ உணர்வு பெறுதல்` என்னும் இவற்றுள் ஒன்றையோ, பலவற்றையோ உடையவரே அறிவுடையோராவர். அவர்க்கே சிவபெருமான் உறுதுணையாவான்.

குறிப்புரை :

``தாள்பணிவார்`` முதலிய மூன்றனையும் எழு வாயாக்கியும், ``தாமறிவார்`` மூன்றனையும் அவற்றிற்குத் தனித்தனிப் பயனிலையாக்கியும் முடிக்க. இவற்றால் இவை மூன்றும் அறத்தின் வகையாதல் இறுதியடியில் பெறப்பட்டது. தொகுக்கப்பட்ட பிரிநிலை ஏகாரத்தை விரித்து, `தாமறிவார்க்கே பரன் தமனாம்` எனக் கூட்டி உரைக்க. `தமர்` எனப் பன்மையாக ஓதுதல் பாடம் அன்று. `அறம் செய்வோரே அறிவுடையோர்` என்பது உணர்த்துவார், ஏனைய வற்றையும் உடன் கூறினார். ``விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு``(குறள், 89) எனத் திருவள்ளுவரும் அறம் செய்யாமையை, `மடமை` எனவும், அதனை உடையாரை, `மடவோர்` எனவும் கூறுதல் காண்க.
இதனால், `அறத்தை விரும்பிச் செய்தல் அறிவுடையோர்க்கே கூடுவது` என்பதும், அறத்தின் வகையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே. 

பொழிப்புரை :

உண்ணப்புகும்பொழுது இறைவனுக்கு ஒரு பச்சிலை சூட்டி வணங்குதலும், பசுவிற்குச் சிறிது உணவு கொடுத் தலும், வறியார்க்குச் சிறிது சோறிடுதலும், அவ்வாறிடும் பொழுது இன்சொல் சொல்லுதலும் எல்லார்க்கும் இயல்வனவே.

குறிப்புரை :

`அதனால், யாம் பொருள் இலம் என்று அறஞ் செய்யாமைக்குக் காரணங் கூறியொழிதல் பொருந்துவதன்று` என்பது குறிப்பெச்சம். ஆம் - கூடும். ``பச்சிலை`` முதலிய நான்கன் பின்னும் முறையே, `சூட்டல், கொடுத்தல், இடுதல், சொல்லல்` என்பன சொல் லெச்சமாய் நின்றன.
இதனால், மக்கள் யாவரும் `அறத்தினைத் தத்தமக்கு ஒல்லும் வகையான் ஓவாதே செல்லும்வாயெல்லாம் செயல் வேண்டும்` (குறள் - 33) என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

அற்றுநின் றாருண்ணும் ஊணே அறனென்னுங்
கற்றன போதங் கமழ்பவர் மானிடர்
உற்றுநின் றாங்கொரு கூவற் குளத்தினிற்
பற்றிவந் துண்ணும் பயன்அறி யாரே. 

பொழிப்புரை :

`பொருள் இல்லாத வறியவர், பொருள் உடை யவர் கொடுக்க உண்ணும் அதுவே பொருள் உடையவர்க்கு அறமாகி நிலை பெறும்` என்பதை நூல்களால் அறிந்த அறிவு செயலில் மணக்கப் பெறுபவரே மக்களாக மதிக்கப் பெறுவர். ஆயினும் அவ்வறிவைப் பெற்றும், சிலர், நீர்வேட்கையுடையார் பலரும், (பெரிய நீர் நிலையாகிய கடலை நோக்கிச் செல்லாது) ஊருணியாகிய சிறிய கிணறு குளங்களைத் தேடிச் சென்று உண்ணும் செயலின் தன்மையை அறிதல் இல்லை.

குறிப்புரை :

`அறிந்தாராயின், செல்வத்துப்பயன் ஈதலே` (புறம், 189) என்று உணர்ந்து வறியார்க்கு ஈவர் என்பது கருத்து. ``வறியார்க்கொன் றீவதே ஈகை; மற்றெல்லாம் குறியெதிர்ப்பை நீரதுடைத்து`` (குறள் - 221) ஆதலின், ``அற்று நின்றார் உண்ணும் ஊணே அறன்`` என்றார். ``கூவல் குளத்தினில்`` என்பது, `கூவலிலாதல் குளத்திலாதல்` என்னும் பொருளது. `கடல்நீர் பெரிதாயினும் நீர்வேட்கையுடையார் அதனிடத்துச் செல்லாமை போலப் பெருஞ்செல்வராயினும் ஈயாதார் மாட்டு இரவலர் செல்லார்; அதனால், அப்பெருஞ்செல்வர் அச்செல்வத்தால் சிறிதும் பயன் பெறார் என்பதும், கூவலும், குளமும் சிறியவேயாயினும் நீர்வேட்கை யுடையார் அவற்றிடத்தே சென்று நீருண்டல்போலச் சிறிது செல்வம் உடையாராயினும் ஈபவரிடத்தே இரவலர் சென்று தாம் வேண்டிய பெறுவர்; அதனால் அச்சிறு செல்வரே புகழும், அறமும் ஆகிய செல்வத்துப் பயனைப் பெறுவர் என உணர்ந்து ஈகையுடையராதல் வேண்டும்` என்பது பின்னிரண்டடிகளாலும் உணர்த்தப்பட்டது.
``தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணா ராகுப நீர்வேட் டோரே;
ஆவும் மாவும் சென்றுணக் கலங்கிச்
சேறொடு பட்ட சிறுமைத் தாயினும்
உண்ணீர் மருங்கின் அதர்பல வாகும்``
என்னும் புறப்பாட்டினைக் காண்க (புறம், 204).
இதனால், `அறிவுடை மக்களாயின், செல்வத்தின் பயன் அறம் செய்தலேயாம்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமமுஞ் செய்யீர்
விழித்திருந் தென்செய்வீர்? வெம்மை பரந்து
இழுக்கவன் றென்செய்வீர்? ஏழைநெஞ் சீரே.

பொழிப்புரை :

அறியாமை வழிப்பட்ட மனத்தை உடையவரே! நீவிர், `செல்வத்துப் பயன் ஈதலே` என அறியும் அறிவை மறைத்து நிற்கின்ற அறியாமையை நல்லோர் இணக்கம் முதலியவற்றால் போக்கி அறிவை நிறைத்துக்கொள்ள மாட்டீர்; அதனால், செல்வக் காலத்தில் தருக்கிநின்று அறத்தைச் செய்கிலீர்; நும் செல்வத்தைக் குறிக்கொண்டு காத்து என்ன பயன் அடையப்போகின்றீர்? இறுதிக் காலத்தில் கூற்றுவன் வந்து கோபம் மிகுந்து கண்ணில் தீப்பொறி பரக்க நும்மைக் கட்டி இழுக்கும்பொழுது என்ன செய்ய வல்லீர்?

குறிப்புரை :

`தருக்கிய` என்பது எதுகை நோக்கித் திரிந்தது. `திரியாது ஓதுதலே பாடம்` எனினுமாம். `கூற்றுவன்` என்பது வருகின்ற திருமந்திரத்தினின்றும் கொள்ள வைத்தார்.

பண் :

பாடல் எண் : 5

தன்னை அறியாது தாம்நலர் என்னாதிங்
கின்மை யறியா திளையரென் றோராது
வன்மையில் வந்திடும் கூற்றம் வருமுன்னம்
தன்மமும் நல்ல தவஞ்செய்யும் நீரே.

பொழிப்புரை :

கூற்றுவன், தன்னைப் பிறர் காணாதபடியும், தன்னால் பற்றப்படுவர் நற்பண்பினை உடையர் என்றோ, தம்மை யன்றித் தம் சுற்றத்தார்க்குக் களைகணாவாரை இலர் என்றோ முதியர் என்றோ, இளையர் என்றோ எண்ணாமலும், பிறரால் தடுத்தற்கரிய ஆற்றலோடு வருவன். அவ்வாறு வருமுன்னே நீவிர் அறத்தையும், தவத்தையும் செய்து கொள்ளுங்கள்.

குறிப்புரை :

`முதியர் என்று ஓராது` என்பது இசையெச்சம். தன்மம் செய்தல் கூறுவார், தவம் செய்தலையும் உடன் கூறினார், அதுவும் அறத்தின் வகையாதல் பற்றி. `தவமும்` என்னும் உம்மை தொகுத்தல்.
இவை இரண்டு திருமந்திரங்களானும், `யாக்கை முதலியவை நிலைத்துள்ளபொழுதே அறத்தைச் செய்துகொள்க` என்பது கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 6

துறந்தான் வழிமுதற் சுற்றமும் இல்லை
இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை
மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்
அறந்தான் அறியும் அளவறி வாரே. 

பொழிப்புரை :

மெய்ம்மையை ஆராய்ந்தறியும் அறிவுடையீரே! முற்றத் துறந்தவனுக்குச் சுற்றத் தொடர்பு இல்லை. அதனால் அவன் இறைவனை மறவான். மறவானாகவே அவனுக்குக் கெடுவது யாதும் இல்லை. அங்ஙனம் முற்றத் துறக்கமாட்டாதவன் சுற்றத்தொடு கூடி வாழும்பொழுது அறஞ் செய்யாதே இறந்தொழிவனாயின், அதன் பின்னர் அவனுக்கு அறமேயன்றி அவன் விரும்பிய இன்பமும் இல்லையாம். அவன் தான் வாழுங்காலத்து இறைவனை மறவா திருத்தல் கூடாமையின் இறைவனும் அவனுக்குத் துணைவாரான்; அதனால் அவன் இருமையும் இழப்பன். ஆகவே, நீவிர், `இல்லறம், துறவறம்` என்னும் இருவகை அறங்களின் தன்மையை அறிந்து அவற்றுள் இயன்றதொன்றில் நில்லுங்கள்.

குறிப்புரை :

வருவித்து உரைத்தன பலவும் இசையெச்சங்கள். ``வந்திலன்`` எனத் துணிவு பற்றி இறந்தகாலமாயிற்று. வழிமுதல் - பிற் காலம். ``அறியும்`` என்றது `அறிந்து நில்லுங்கள்` என்றபடி. அளவு - உண்மை. இதனால், மக்கள் அறிவுடையராயின், இருவகை அறங் களுள் யாதானும் தமக்கு இயன்றதொன்றனைச் செய்தல் வேண்டு மன்றிச் செய்யாதொழிதல் கூடாது என்பது வலியுறுத்தப்பட்டது. ``அறத்தினூஉங் காக்கமும் இல்லை; அதனை - மறத்தலினூஉங் கில்லை கேடு`` (குறள், 32) என்றார் திருவள்ளுவரும்.

பண் :

பாடல் எண் : 7

தான்தவஞ் செய்வதாம் செய்தவத் தவ்வழி
மான்தெய்வ மாக மதிக்கும் மனிதர்கள்
ஊன்தெய்வ மாக உயிர்க்கின்ற பல்லுயிர்
நான்தெய்வம் என்று நமன்வரு வானே. 

பொழிப்புரை :

மக்கட்பிறப்பைப் பெற்றுடையீர், அறிவுடை மகனால் செய்யத்தக்கது தவம் ஒன்றே. தவநெறி சிவபிரானையே பரம் பொருளாக உணர்ந்து ஒழுகுதலாய் இருக்கும். பலர் இந்நெறி நில்லாது உடம்பையே தெய்வம்போலப் பேணி மூச்சு விடுகின்ற பிணங்களாய் நிற்கின்ற உலகாயத நெறியில் உள்ளனர். அவர்க்கு இறுதியில் யமன், `தெய்வம் இல்லை என்ற உங்கட்குக் காட்சியளிக்கின்ற தெய்வம் நான்தான்` என்று சொல்லுவான்போலக் கண்முன் வந்து நிற்பான்.

குறிப்புரை :

`தான் செய்வது தவமாம்` என மாறுக. `தவமே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. தவத்து அவ்வழி - தவத்திற்குரிய அவ்வழி. மான் - பெரியோன். சிவபெருமானை வட மொழி `மகாதேவன்` என்றும், தமிழ்மொழி `பெரியோன்` என்றும் கூறுதலை அறிந்துகொள்க. மதிக்கும் - மதிக்கும் இயல்புடையதாகும். `சிவத்தைப் பேணின் தவத்திற் கழகு` (கொன்றை வேந்தன்) என ஔவையாரும் கூறினார். ``மனிதர்கள்`` என்பது விளி. `மனிதர்காள்` என்பதே பாடம் எனலு மாம். ``உயிர்க்கின்ற`` என்பது முற்று. இழிவு தோன்ற அஃறிணை யாகக் கூறினார். இதனால், இருவகை அறங்களுள் துறவறமே உயர்ந்தது என்பது கூறப்பட்டது. `கூற்றங் குதித்தலும் அதனாலே கை கூடுவ தாகும்` (குறள் - 269) என்பதும் குறிப்பால் புலப்படுத்தப்பட்டது. ``தவம் செய்வார் தங்கருமம் செய்வார்மற்றல்லார் அவம்செய்வார் ஆசையுட் பட்டு`` (குறள் - 266) என்றார் திருவள்ளுவரும்.

பண் :

பாடல் எண் : 8

திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு
கிளைக்குந் தனக்கும்அக் கேடில் புகழோன்
விளைக்குந் தவம்அறம் மேற்றுணை யாமே. 

பொழிப்புரை :

அறம் செய்தற்கு `இல்நிலை, துறவு நிலை` என இரண்டு வழிகள் உண்டு. அவற்றுள் அழிதல் இல்லாது நின்று நிலவும் புகழை உடைய துறவோன், தனக்கும், தன் சுற்றத்திற்கும் பயன் விளையு மாறு செய்யும் தவம், உயிர் கரை காணமாட்டாது அழுந்திக் கிடக்கின்ற வினையாகிய கடலை நீந்துதற்கு அமைந்த தோணியாய், பிறந்தும், இறந்தும் உழலும் இளைப்பினை நீக்கும். இல்லறத்தில் நின்று செய்யும் விருந்தோம்பல் முதலிய அறம் மறுமைக்குத் துணையாய் வரும்.

குறிப்புரை :

``திளைக்கும் ... ... ... ... இளைக்கும்`` என்பதனை ``அறம்`` என்பதற்கு முன்னே கூட்டுக. `தோணியாய்` என ஆக்கம் விரிக்க. `ஒருவன் செய்யும் நல்வினை தீவினைகள் அவன் கிளைஞர்க்கும் ஆகும்` என்பது வேத சிவாகமங்களின் துணிவு.
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும். -குறள், 115
கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும். -குறள், 166
என்றாற்போலும் திருக்குறள்களையும் காண்க. இதனால், இருவகை அறத்தின் இயல்புகளும் தெரித்துக் கூறப் பட்டன.

பண் :

பாடல் எண் : 9

பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசை
அற்றம் உரையான் அறநெறிக் கல்லது
உற்றுங்க ளால்ஒன்றும் ஈந்தது வேதுணை
மற்றண்ணல் வைத்த வழிகொள்ளு மாறே.

பொழிப்புரை :

சிவபெருமான் எவ்வுயிர்க்கும் உண்மைப் பற்றாய் உள்ள அறத்தை அஃது அரிய மறைபொருள் (இரகசியம்) என்று, அறநெறியில் நிற்பார்க்கன்றி ஏனையோர்க்கு உணர்த்துதல் இல்லை. அதனை அவன் அருள்வழி நான் பெற்றவாற்றால் உங்கட்குக் கூறுவதாயின், ஒன்றேயாயினும், உங்களால் மனம் பொருந்திப் பிறர்க்கு ஈந்தது உண்டாயின், அதுவே உங்கட்குத் துணையாவது. இன்னும் அப்பெருமான் வகுத்த நன்னெறியை மேற்கொள்ளும் முறைமையும் அதுவேயாம்.

குறிப்புரை :

``பற்று`` இரண்டனுள் பின்னது சுட்டுப் பெயரளவாய் நின்றது. ``அற்றம்`` என்புழி, `என்று` என்பதும், `ஒன்றும்` என்புழி, `ஆயின்` என்பதும், எஞ்சி நின்றன. அறநெறி வேட்கையரை ``அறநெறி`` என்றார். `அறநெறிக்கல்லது உரையான்` என முன்னே கூட்டி முடிக்க. ``அண்ணல்`` எனப் பின்னர் வருகின்றமையின், வாளா, ``உரையான்`` என்றார். `ஒன்றாயினும், உங்களால் உற்று ஈந்ததுவே துணை` என மாறிக் கூட்டுக. `மற்றும்` என்னும் எச்ச உம்மை தொகுத்தலாயிற்று. `கொள்ளுமாறு` என்பதன்பின் எச்ச உம்மையும் `அது` என்னும் பயனிலையும் எஞ்சி நின்றன. இதனால், `அறம் ஒன்றே உயிர் உய்யும் நெறி` என்பது வரையறுத்துக் கூறப்பட்டது.
சிற்பி