முதல் தந்திரம் - 25. கல்லாமை


பண் :

பாடல் எண் : 1

கல்லா தவருங் கருத்தறி காட்சியை
வல்லா ரெனில் அருட் கண்ணான் மதித்துளோர்
கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோருங்
கல்லா தவர் இன்பங் காணகி லாரே. 

பொழிப்புரை :

`கல்வி இல்லாதோரும் அறிவினுள்ளே காணும் மெய்ப்பொருட் காட்சியை வல்லவராவர்` என்று கூறுவதாயின் `கற்று வல்லோரும் கல்லாதார் ஒழுகும் உண்மை நெறியைப் பற்றுதலும், கல்லாதார் பெறும் பேரின்பத்தைப் பெறுதலும் மாட்டாதாராவர்` எனவும் கூறுதல் வேண்டும். `கற்றவரே வல்லவராவர்` என்னும் நியதியின்மையின், அவர் மாட்டாராதலுங் கூடுமாகலின்.

குறிப்புரை :

``கற்றல் கேட்டல் உடையார் பெரியார்
கழல் கையால் தொழுதேத்தப்
பெற்றம் ஊர்ந்த பிரமாபுர மேவிய
பெம்மான்`` -தி.1ப.1பா.2
`கல்லா நெஞ்சின் - நில்லான் ஈசன்`` (தி.3 ப.40 பா.3) ``கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி`` (தி.6 ப.32 பா.1) கல்லாதார் காட்சிக் கரியாய் போற்றி`` ``கற்றார் இடும்பை களைவாய் போற்றி`` (தி.6 ப.5 பா.1) ``கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியை`` (தி.9 ப.5 பா.2) ``உளர்என்னும் மாத்திரைய ரல்லால், பயவாக் களரனையர் கல்லாதவர்`` (குறள், 406) என்றாற்போல வரும் மெய்யுரைகள் பலவற்றிற்கும் மாறாமாகலின், அங்ஙனங் கூறுதல், `கையிலான் காட்டக் கண்ணிலான் கண்டான்` என்பதுபோல நகை விளைப்பதொன்றாய்ப் பொருந்தாது` என்பது குறிப்பெச்சம்.
இத்திருமந்திரம், `புலால் மறுத்தல் இன்றியும் அருளாடல் கூடும்` என முரணிக் கூறுவாரை, ``பொருளாட்சி போற்றாதார்க் கில்லை; அருளாட்சி - ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு`` (குறள், 252) என ஓர் உவம அளவையான் மறுத்து, `புலால் மறுத்தல் இன்றி அருளாடல் உண்டாகாது` என புலால் மறுத்தலை வலியுறுத்திய திருக்குறள் போல, `கல்வி இன்றியும் மெய்ப்பொருளை உணர்தல் கூடும்` என முரணிக் கூறுவாரை உரையளவைகள் பலவற்றான் மறுத்து, `கல்வி இன்றி மெய்ப்பொருட் காட்சி உளதாகாது` எனக் கல்வியை வலியுறுத்தியது.
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. -குறள், 356
எனத் திருவள்ளுவரும் மெய்ப்பொருட் காட்சிக்குக் கல்வி கேள்விகள் இன்றியமையாதச் சிறப்பினவாகக் கூறுதல் காண்க. `கண்ணப்பர் முதலாயினார் முற்பிறப்பிற் கற்ற கல்வி உடையார்` என்பது மேலே காட்டப்பட்டது. (தி.10 பா.296 உரை) ``கல்வியாவது இது` என்பதனை நாயனார் `கல்வி` அதிகாரத்துட் கூறினமையை நினைவு கூர்க.
கருத்து - அறிவு. இதன்கண் `உள்` என்னும் பொருள் பட வந்த ஏழாவது விரிக்க. ``கருத்தறி காட்சி`` எனவே மெய்ப்பொருட் காட்சி யாயிற்று. ``அருள்`` என்றது, ஞானம் என்னும் பொருட்டு; இது கலை ஞானம். மதித்துளோர் - பொருள்களின் இயல்பை ஆய்ந்துணர்ந்தவர், `மதித்துளோர் நிற்பவராவர்` எனவும், `கற்றோரும் காணகிலாராவர்` எனவும் இயைத்துரைக்க. ``கற்றோரும்`` என மறித்தும் கூறினார், வலியுறுத்தற்பொருட்டு. `மதித்துளோரும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. ``கல்லாதார் உண்மை`` ``கல்லாதார் இன்பம்`` என்பன காரகப் பொருண்மைக்கண் வந்த ஆறாவதன் தொகை. `பற்றாது` என்பதன் ஈறு குறைந்தது.
இதனால், கல்லாமை எவ்வாற்றானும் கடியப்படும் குற்றமாவ தன்றி, ஒருவாற்றானும் கொள்ளப்படும் குணமாகாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார்
அல்லா தவர்கள் அறிவு பலஎன்பார்
எல்லா இடத்தும் உளன்எங்கள் தம்இறை
கல்லா தவர்கள் கலப்பறி யாரே. 

பொழிப்புரை :

கல்வி கேள்விகளில் வல்லவர்கள் மெய்ந்நெறியை ஒன்றாகத் துணிந்து அதன்கண் பொருந்தி உயர்வர். அவ்வன்மை இல்லாதவர்கள் மெய்ந்நெறியைப் பலவாகக்கண்டு தடுமாற்றம் எய்தி ஒன்றினும் நில்லாது தாழ்வார். அதனால் எங்கள் சிவபெருமான் எங்கும் நிறைந்து நிற்பினும்; கல்லாதவர் அவனை அடையும் நெறியை உணரமாட்டார்கள்.

குறிப்புரை :

`வழி, அறிவு` என வேறு வேறு நின்ற இருசொற் களையும் ஏனையிடத்தும் கூட்டி, ஈரிடத்தும் `அறிவு வழி` என உரைக்க. ``பல என்பார், வாழ்கின்றார்`` என்பவற்றால், ஒன்றெனலும், தாழ்தலும் பெறப்பட்டன. ``இறை`` என்பதன் பின் `ஆயினும்` என்பது எஞ்சி நின்றது. ஐய உணர்வு உள்வழியும் மெய்ப்பொருட் காட்சி நிகழாதாகலின், `அவர் கலப்பறியார்` உள்வழி என்றார். ``ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கே வானம் நணித்து`(குறள், 453) என்றார் திருவள்ளுவ நாயனாரும்.
இதனால், கல்வி, கேள்வி இல்லாதார்க்கு ஐயம் நீங்கு மாறின்மை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து
நில்லாக் குரம்பை நிலையென் றுணர்வீர்காள்
எல்லா வுயிர்க்கும் இறைவனே யாயினும்
கல்லாதார் நெஞ்சத்துக் காணவொண் ணாதே. 

பொழிப்புரை :

நிலைபெறாத இயல்பினை உடைய பொருள் களையே நிலைபெற்ற பொருள்களாக நெஞ்சில் நினைத்து, அதனானே, நிலைபெறாத உடம்பையும் நிலைபெற்றதாக நினைக் கின்ற புல்லறிவாளரே, எங்கள் சிவபெருமான் எல்லா உயிர்கட்கும் முதல்வன் என்பது உண்மையேயாயினும், உம்மைப் போலக் கல்லாத புல்லறிவாளர் நெஞ்சில் அவனைக் காண இயலாது.

குறிப்புரை :

`கற்றவர் நெஞ்சில் மட்டுமே காண இயலும்` என்ப தாம். நிலை - இயல்பு; அஃது அதனை உடைய பொருளைக் குறித்தது. ``நெஞ்சத்து`` என்றதன்பின், `நினைத்தலால்` என்பது எஞ்சி நின்றது.
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை. -குறள், 331
என்ப ஆகலான், நில்லாக் குரம்பை நிலையென்றுணர்தல் புல்லறி வாண்மை யாதலும், ``கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயேனை`` (தி.8 கண்டபத்து, 4) என்றமையால், கல்லாதார்க்கு உள்ளது அப் புல்லறிவே என்பதும் பெறப்பட்டன. மேலைத் திருமந்திரத் துள்,``எங்கள்தம் இறை`` என்றது இதனுள்ளும் வந்து இயைந்தது. ``ஒண்ணாதே`` என்னும் ஏகாரம் தேற்றம்.
இதனால், கல்வி கேள்வியில்லாதார்க்கு உளதாவது புல்லறிவே (திரிபுணர்வே) என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

கில்லேன் வினைதுய ரார்க்கும் அயலானேன்
கல்லேன் அரனெறி கல்லாத் தகைமையின்
வல்லேன் வழங்கும் பொருளே மனத்தின்உட்
கல்லேன் கழியநின் றாடவல் லேனே.

பொழிப்புரை :

நான் சிவன்நெறியைக் கல்லாதிருக்கும் தன்மையர் முன் கல்வி இல்லாதவனாய்த் தோன்றுகின்றேன். அதனால், அவர் போல வினையைச் செய்ய வல்லேனல்லேன்; உலகியலில் நின்று துன் புறுவார்க்கும் அயலாகினேன். கிடைத்த பொருளைப் பலர்க்கும் வழங்க வல்லனாயினேன்; அதனால், எதற்கும் மனத்தில் அச்சங் கொள்ளமாட்டேன்; இவற்றால் பற்றுக்கள் பலவும் நீங்கி நின்று களிநடம் புரிய வல்லேனாயினேன்.

குறிப்புரை :

நாயனார் எவ்விடத்தும் தம்மை இழித்துக் கூறாது, தாம் பெற்ற பேற்றின் சிறப்பையே கூறுதலின், இம்மந்திரத்திற்கு அவர் தம்மை இழித்துக் கூறினாராக வைத்து உரைத்தல் பொருந்தாது என்க. இரண்டாம் அடியை முதலில் கொண்டு உரைக்க. தகைமை - தன்மை; தன்மை உடையாரை, `தன்மை` என அஃறிணையாகக் கூறினார்; இழிபு பற்றி. `அறியாத் தன்மையர்முன் கல்லேனாகின்றேன்` என் றதனால், `அறிந்த தன்மையர் முன் கற்றேனாய் விளங்குகின்றேன்` என்பது போந்தது. இதனால், கற்றாரைக் கல்லாதார் `அறிவிலர்` என்று இகழ்தல் பெறப்பட்டது. அதனை,
உருவமும், உணர்வும், செய்தி ஒத்திரா; கன்மம் என்னின்
மருவுகை விரல்கள் தம்மின் வளர்வுடன் குறைவுண்டாகி
வருவதிங் கென்ன கன்மம் செய்துமுன்? மதியி லாதாய்,
பெருகுபூ தங்கள் தம்மின் மிகுகுறைப் பெற்றி யாமே.
-சிவஞானசித்தி பரபக்கம். உலகாயதன் மதம் - 9.
என்பார் போல்பவரிடத்துக் காண்க.
சிறியார் உணர்ச்சியுள் இல்லை, பெரியாரைப்
பேணிக்கொள் வேமென்னும் நோக்கு. -குறள் 976
என்றார் திருவள்ளுவரும். `வினை கில்லேன், தகைமையின் கல்லேன், பொருளே வல்லேன்` என முன்னே கூட்டி முடிக்க. ``தகைமையின்`` என்பதில் சாரியை நிற்க, `முன்` என்னும் பொருட்டாய கண்ணுருபு தொக்கது. ``வழங்கும் பொருளே வல்லேன்`` என்றாராயினும், `பொருள் வழங்கவே வல்லேன்` என்றல் கருத்து என்க. `உட்கலேன்` என்பது விரித்தல் பெற்றது.
இதனால், கல்லாதார் வினை செய்தல், துயர்ப்படல், இவறன்மை, சாக்காடு முதலியவற்றிற்கு அஞ்சுதல் என்னும் குற்றங் களை உடையராதல், எதிர்மறை முகத்தாற் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

நில்லாது சீவன்நிலையன் றெனவெண்ணி
வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார்
கல்லா மனித்தர் கயவர் உலகினில்
பொல்லா வினைத்துயர் போகஞ்செய் வாரே. 

பொழிப்புரை :

கற்று வல்லார், இப்பிறப்பின் நிலையாமையை அறிந்து, `இல்லறம், துறவறம்` என்னும் இருவகை அறத்துள் தமக்கு இயைந்த தொன்றில் நிற்பர். இனிக் கல்லா மனிதர், கீழ்மக்கள் ஆதலின் தீவினையால் விளைகின்ற துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருப்பர்.

குறிப்புரை :

சீவன் - உடம்பொடு நிற்கும் உயிர்; என்றது அதன் நிலையை. ``அறம்`` என்றது துறந்தார் முதலியோர்க்குத் துணை செய்தலை `ஆதலின்` என்பது சொல்லெச்சமாய் நின்றது. போகம் செய்தல் - அனுபவித்தல்.
இதனால் கல்லாதார், தம் உயிர்க்கு உறுதி தேடிக்கொள்ளாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி
கண்ணினின் உள்ளே கலந்தங் கிருந்தது
மண்ணினின் உள்ளே மதித்து மதித்துநின்
றெண்ணி எழுதி இளைத்துவிட் டாரே. 

பொழிப்புரை :

நன்கு கனிந்து இனிதாகிய விளாம்பழம், வானளாவ உயர்ந்த கிளையிலே உள்ளது. அதனைக் கண் உடையவர் கண்டு தக்க வாற்றாற் பெற்று உண்டு களிக்கின்றனர். கண் இல்லாதவர் அதனைச் சொல்லளவால் அறிந்து நிலத்திலே கிடப்பதாக நினைத்து, உதிர்ந்து கிடக்கின்ற கருக்காய், வெதும்பிக் காய்ந்த பிஞ்சு முதலியவைகளைக் கையால் தடவி எடுத்து, `இத்துணைய` என்று எண்ணித் தொகையை மனத்துட் பதித்து, உண்டு பார்க்கும்பொழுது இனித்தல் இன்றிக் கைத்தும், புளித்தும் நிற்றலைக் கண்டு துன்புற்றொழிகின்றனர்.

குறிப்புரை :

`இந்நிலை கண் இல்லாமையான் ஆயதன்றோ` என்பது குறிப்பெச்சம். `முப்பத்தாறு தத்துவங்களையும், ஆன்ம போதத்தையும் கடந்து அப்பால் உள்ளது எல்லையில்லாத சிவானந்தமாகிய பேரின்பம்; அதனைக் கல்வி உடையவர் அறிந்து தவ ஞானங்களால் அடைந்து திளைக்கின்றனர்; கல்வி இல்லாதவர், பேரின்பம் ஐம்புலப் பொருள்களில் உள்ளதாக நினைத்து அவற்றைத் தத்தமக்கு இயலுந் திறத்தால் பல தொழில்வழி முயன்று ஈட்டித் தொகைபண்ணி, அத்தொகையை மறவாமைப் பொருட்டு ஏட்டிலும் எழுதிக் காத்து, அவற்றை நுகருமிடத்துப் பேரின்பம் பயவாது பெருந்துன்பத்தையும், சிறிது இன்பத்தையும் பயந்து நிற்றலை அறிந்து தளர்ச்சி எய்துகின் றார்கள்; இந்நிலை கல்லாமையான் ஆயதன்றோ! என்பது இதனாற் பெறுவிக்கப்பட்ட பொருள். இம் மந்திரம் பிசிச் செய்யுள்.
ஐம்புலப் பொருள்களைத் தேடி இளைத்தலால் பயனில்லை; இறைவன் திருவடியை அடைதலே பயன் தருவது என்பதைத் திருநாவுக்கரசர்,
மாடு தேடி மயக்கினில் வீழ்ந்துநீர்
ஓடி எய்த்தும் பயனிலை; ஊமர்காள்,
சேடர் வாழ்சேறைச் செந்நெறி மேவிய
ஆட லான்அடி யேஅடைந் துய்ம் மினே.
-தி. 5 ப.77 பா.4 எனக் கல்லாதாரை நோக்கி இரங்கி அருளிச்செய்தமை காண்க.
``விண்ணினின்`` முதலிய மூன்றிலும் ஓர் இன், விரித்தல் பெற்றது. கண்ணினுள்ளே கலந்திருத்தல், கண்ணால் நன்கு காணப் படுதல். ``மண்ணினுள்ளே`` என்பதன்பின், `உளதாக` என்பது வருவிக்க. அடுக்கு, பலர் மதித்தலைக் குறித்தது. ``எழுதி`` என்பது, உவமைக்கண், ``இம்மை உன்தாள் என்றன் நெஞ்சத்து எழுதிவை`` (தி.4 ப.96 பா.6) என்பதிற்போலப் பதித்தலைக் குறித்தது. விளம்பழம், பழமாக உண்ணப்படுதலேயன்றித் தனியாகவும், கூட்டாகவும் அட்டுண்ணப் படுதல் முதலிய பயன் மிகுதி பற்றி அதனையே கூறினார்.
இதனால், கல்லாதார் பேரின்பம் பெறாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

கணக்கறிந் தார்க்கன்றிக் காணவொண் ணாது
கணக்கறிந் தார்க்கன்றிக் கைகூடா காட்சி
கணக்கறிந் துண்மையைக் கண்டண்ட நிற்கும்
கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே.

பொழிப்புரை :

நூல்களைக் கற்றறிந்தவரே அந்நூலறிவால் மெய்ப் பொருளின் இயல்பை உணர்ந்து, பரவெளியில் கலந்து நிற்கும் முறையையும் உணர்கின்றனர். ஆதலின், நூல்களைக் கற்றறியா தவர்க்கு அவை கூடாவாம்.

குறிப்புரை :

பின் இரண்டு அடிகளை முதலிற் கூட்டி, ``கல்வி கற்றறிந்தாரே`` என்பதனை முதலிற் கொண்டு உரைக்க. கணக்கு - நூல். அதனை, கீழ்க்கணக்கு, மேற்கணக்கு, கணக்காயர் முதலிய வழக்குக்களான் அறிக. ``உண்மை, அண்டம்`` என்பன `உண்மையைக் காண ஒண்ணாது, அண்டம் காட்சி கைகூடா` என முன்னரும் சென்று இயைந்தன. உண்மை - மெய்ப்பொருள். அஃது அதன் இயல்பைக் குறித்தது. அண்டம் - பரவெளி. ``கைகூடா`` என்ற பன்மை, பெறுவாரது பன்மை பற்றிவந்தது.
இதனால், கல்லாதார் மெய்ந்நெறியை அறிதலும், அதன் பயனைப் பெறுதலும் இல்லாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன் அன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத்தறி யாரே. 

பொழிப்புரை :

கல்வி இல்லாதவர் மூடரே ஆதலால், அவர் யாதோர் உறுதியினையும் அறியார். அதனால் அவரைக் காணுதலும், அவர் சொல்லைக் கேட்டலும் தகுதியாவன அல்ல. அவர்க்கும், அவர் போலும் கல்லாத மூடரே தக்கவராய்த் தோன்றுதலன்றிக் கற்ற அறிவினர் தக்கவராய்த் தோன்றார்.

குறிப்புரை :

ஈற்றடியை முதலிற்கொண்டு உரைக்க. அதன் இறுதி யில் `ஆதலால்` என்பது எஞ்சி நின்றது. ``காணவும்`` என்ற உம்மை இழிவு சிறப்பு. இழிவு, காட்சியளவில் பெறுவதும் தீமையேயாதல்.
இதனால், கல்லாதாரால் உலகிற்குத் தீங்கு உண்டாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

கற்றுஞ் சிவஞானம் இல்லாக் கலதிகள்
சுற்றமும் வீடார் துரிசறார் மூடர்கள்
மற்றும் பலதிசை காணார் மதியிலோர்
கற்றன்பில் நிற்போர் கணக்கறிந் தார்களே. 

பொழிப்புரை :

சிவநூல்களைக் கற்றும், அவற்றை மனம் பற்றி ஒழுகாதவர், அடுத்தாரைக் கெடுக்கும் முகடிகளாவர். அவர் தாமேயும் புறப்பற்றும், அகப்பற்றும் விட அறியார்; அவ்விருவகைப் பற்றும் விட்ட அறிவர் பலர் பலவிடங்களில் இருத்தலைக் கண்டும் அவற்றை விட அறியார். அதனால் அவர் கற்றும் கல்லாத மூடரேயாவர். ஆதலின், கற்றவண்ணம் ஒழுகுபவரே கற்றறிவுடையோராவர்.

குறிப்புரை :

`ஞானம், அன்பு` என்பன அவற்றின்வழி நிகழும் ஒழுக்கத்தின்மேல் நின்றன. கல்லாது ஒழுக்கம் இல்லாதார், தம் தீயொழுக்கத்தை, `நல்லது` என மருட்ட வகையறியார்; கற்று ஒழுக்கம் இல்லாதார் அவ்வகையை நன்கறிவராகலின் அவரை, `மூடர்` என்று மட்டும் கூறியொழியாது, ``கலதிகள்`` என்றும் இகழ்ந்தார். `மேலைத் திருமந்திரத்துள் கூறப்பட்ட கல்லாதாரால் உலகிற்கு உளவாகும் தீங்கினும், இக் கற்றாரால் உலகிற்கு உளவாகும் தீங்கு பெரிது` என்பது கருத்து. `விடார்` என்பது நீண்டு நின்றது. `வீடார்` என்றே கொண்டு, உடைமையது தொழில். உடையார்மேல் ஏற்றப்பட்டது எனலுமாம். துரிசு - மனமாசு. திசை, ஆகுபெயர். ``மூடர்கள், மதியிலோர்`` என இருகாற் கூறியது, தாமே உணர்தலும், பிறரைக் கண்டு உணர்தலும் ஆகிய இரண்டும் இலர் என்றற்கு.
ஓதி உணர்ந்தும் பிறர்க்குத் தானடங்காப்
பேதையிற் பேதையார் இல். -குறள் 834
என்றார் திருவள்ளுவரும். `நிற்போரே கணக்கறிந்தார்கள்` என ஏகாரத்தைப் பிரித்துக்கூட்டி உரைக்க.
இதனால், நூலைக் கற்றும் ஒழுக்கத்தைக் கல்லாதவர் கல்லாதவரே; கற்றவராகார் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

ஆதிப் பிரான்அம ரர்க்கும் பரஞ்சுடர்
சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்
ஓதி உணரவல் லோம்என்பர் உள்நின்ற
சோதி நடத்துந் தொடர்வறி யாரே. 

பொழிப்புரை :

உயிர்க்கு உயிராய் அவற்றது அறிவினுள் நிற்கும் பேரறிவாகிய முதற்பொருள், பெத்தம், முத்தி இருநிலையினும் அவ்வாறு நின்று நடத்தும் அருள் தொடர்பினை அநுபவத்தால் அறிய மாட்டாதார், `யாம் முதல்வனது இயல்பு அனைத்தையும் கல்வி கேள்விகளானே முற்ற உணரவல்லோம்` என்று கூறுவர்.

குறிப்புரை :

`அது நிரம்பாது` என்பது குறிப்பெச்சம். `உள்நின்ற சோதி` என்பது முதலாகத் தொடங்கியுரைக்க. `ஆதிப்பிரான்` முதலிய நான்கும் முதல்வனது இயல்பை வகுத்தோதியவாறு. ஆதிப்பிரான் முதற்கடவுள்; வேறு பலரைத் தொழிற் கடவுளாக நிறுத்தி உலகை நடத்துபவன். அமரர்க்கும் பரஞ்சுடர் - தேவர்க்கும் நெறிகாட்டும் மேலான விளக்கு. சோதி - எல்லையில் பேரொளி. அடியார் தொடரும் பெருந்தெய்வம் - தன்னை அடைந்தவர் விடாது தொடர்தற்குக் காரணமான இன்பப் பெருக்கினை உடையவன். இதன்பின், `அவனை` என்பது எஞ்சி நின்றது.
இதனால், கல்வியின் நிறைவாகிய அனுபவம் இல்லாதாரும் ஓராற்றாற் கல்லாதவரேயாதல் கூறப்பட்டது.
சிற்பி