முதல் தந்திரம் - 26. நடுவு நிலைமை


பண் :

பாடல் எண் : 1

நடுவுநின் றார்க்கன்றி ஞானமும் இல்லை
நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை
நடுவுநின் றார்நல்ல தேவரு மாவர்
நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே. 

பொழிப்புரை :

நடுவுநிலைமையிற் பிறழாதவர் ஒருபோதும் நரகம் புகார். தேவராய்த் துறக்கம் புகுதலும் செய்வர்; அதுவேயன்றி ஞானமும் பெற்று வீடெய்துவர். அதனால், நானும் அவர் வழியிலே நிற்கின்றேன்.

குறிப்புரை :

ஞானம் பெறுதல் இறுதியிற் கூறற்பாலதாயினும், சிறப்புப்பற்றி முன்னர்க் கூறினார். அதனை எதிர்மறை முகத்தாற் கூறியது, `துறவறத்திற்கு முதலாகிய அருளுடைமைக்கு நடுவு நிலைமை இன்றியமையாச் சிறப்பிற்று` என்பது உணர்த்தற்கு. அது,
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். -குறள் 251
தன்னுயிர்க் கின்னாமை தானறிவான், என்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல். -குறள் 318
என்றாற்போல்வனவற்றால் அறியப்படும். உம்மைகள் எச்ச உம்மைகள்.

பண் :

பாடல் எண் : 2

நடுவுநின் றான்நல்ல கார்முகில் வண்ணன்
நடுவுநின் றான்நல்ல நான்மறை யோதி
நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவார்
நடுவுநின் றார்நல்ல நம்பனு மாமே.


நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவர்
நடுவுநின் றார்சிலர் தேவரு மாவர்
நடுவுநின் றார்சிலர் நம்பனு மாவர்
நடுவுநின் றாரொடு நானும்நின் றேனே.

பொழிப்புரை :

நடுவுநிலைமை பிறழாதவர் மால் அயனாம் நிலைகளைப் பெறுதலேயன்றிச் சிவஞானிகளாய்ச் சிவமாந் தன்மையையும் பெறுவர்.

குறிப்புரை :

``ஓதி`` என்பது பெயர். ``கார் வண்ணன், மறை யோதி`` என்னும் ஈரிடத்தும் `ஆவன்` என்பது எஞ்சி நின்று. அவற்றோடு இயைய, ``நடுவு நின்றான்`` என ஒருமையாற் கூறினாராயினும், ஏனையபோலப் பன்மையாற் கூறுதலே கருத்து என்க. இனி `கார் வண்ணன், மறையோதி` என்பவற்றை எழுவாயாக்கி, அவற்றை `நின்றான்` என்பவற்றோடு முடிப்பாரும் உளர். `நடுவுநின்றார்` என்று ஒழியாது, ``சிலர்`` என்றது, `நடுவுநிற்றல் அரிது` என்பது உணர்த்துதற்கு. `சிவமாதல் ஞானம் இன்றி அமையாது` என்றற்கு அதனை இடையே விதந்தோதினார்.
இவ்விரண்டு திருமந்திரங்களானும் நடுவுநிற்றலின் பயனே கூறப்பட்டது.
பதிப்புக்களில் இதன்பின் காணப்படும் பாடல் இடைச் செருகல்.

பண் :

பாடல் எண் : 3

தோன்றிய எல்லாந் துடைப்பன் அவன்அன்றி
ஏன்றுநின் றாரென்றும் ஈசன் இணையடி
மூன்றுநின் றார்முதல் வன்திரு நாமத்தை
நான்றுநின் றார்நடு வாகிநின் றாரே. 

பொழிப்புரை :

தோன்றிய பொருள்கள் அனைத்தையும் ஒடுக்கு பவன் சிவபெருமானே. அதனால் `அயன், அரி, அரன்` என்னும் பிறர் மூவரும் என்றும் அவனது ஆணையை ஏற்று நிற்பவரே. ஆதலின், அம் மூவர்க்கும் முதல்வனாகிய சிவபெருமானது திருப்பெயராகிய திருவைந்தெழுத்து மந்திரத்தையே, `மற்றுப் பற்றின்றிப்` (தி.7 ப.48 பா.1) பற்றி நிற்பவரே உண்மையாக நடுவு நிற்பவராவர்.

குறிப்புரை :

சிவபெருமானே முதற்கடவுள் என்பது உரை யளவையான் அன்றிப் பொருந்துமாற்றானும் துணியப்படும் என்றற்கு, ``தோன்றிய எல்லாம் துடைப்பன் அவன்`` என்றார். `எல்லா வற்றையும் ஒடுக்கியபின், எஞ்சிநிற்பவன் அவற்றை ஒடுக்கியவனே ஆதலாலும், அவனை ஒடுக்குவார் பிறர் இன்மையாலும், `ஒடுக்கக் காலத்தில் வேறு சிலரும் ஒடுங்காது நிற்பர்` எனின், அதனை, `முற்ற ழிப்புக் காலம்` (சருவ சங்கார காலம்) என்றல் கூடாமையானும் ஒடுங்கிய உலகத்தை மீளத் தோற்றுவிப்பவன் ஒடுக்குபவனேயாதல் தெற்றென விளங்கும்; விளங்கவே, ஒடுக்கத்தைச் செய்பவனே உலகத்தைத் தோற்றி நிறுத்தி ஒடுக்கும் முதற்கடவுள் என்றற்கு ஓர் ஐயமில்லையாம்` என்பது கருத்து.
``வெந்த சாம்பல் விரையெனப் பூசியே
தந்தை யாரொடு தாய் இலர்`` -தி.3 ப.54 பா.3
என்ற திருப்பாசுரத்திற்கும் இதுவே கருத்து என்றார் சேக்கிழார். (தி.12 பெ. பு. திருஞான - 828; 829) எனவே, ``ஈமம்இடு சுடுகாட்டகத்தே - ஆகம் குளிர்ந்தன லாடும் எங்கள் அப்பன்`` (அம்மை மூத்த திருப்பதிகம் 1, 3) என்றாற்போலும் திருமொழிகளில் சிவபெரு மானைச் சுடுகாட்டில் ஆடுவானாகக் கூறுதலின் உண்மையும், முற்றழிப்புக் காலத்தில் அவன் ஒருவனே நின்று, ஒடுங்கிய உலகத்தை மீளத் தோற்றுவிக்கு மாற்றை எண்ணுதலே யாதல் விளங்கும். இவ்வுண்மை உணரமாட்டாதார், ``கோயில் சுடுகாடு`` (தி.8 திருச்சாழல், 3) என்பதற்கு, `திருக்கோயில்கள் பலவும் பெரியாரை அடக்கம் செய்த சமாதிகள்` என்பதே பொருள் எனக் குழறிவழிவாரும், `உருத்திரன் கோயில் மசானபூமி யாதலின், அதனுட் புகலாகாது` எனக் கூறி எரிவாய் நிரயத்திற்கு ஆளாவாரும் ஆவர் என்க. இங்ஙனம் பலவாற்றானும் உண்மை விளங்கி நிற்றல் பற்றியே, மெய்கண்டதேவர்,
``அந்தம் ஆதி என்மனார் புலவர்``
-சிவஞானபோதம், சூ - 1.
என்றும்,
``சங்காரமே முதல்`` -சிவஞானபோதம் அதிகரணம் - 3.
என்றும் அறுதியிட்டுரைத்தார்.
செய்யுளாதலின், ``அவன்`` எனச் சுட்டுப் பெயர் முன் வந்தது. ``அன்றி`` என்பது, `மற்று` என்னும் பொருட்டு. மூன்று நின்றார் - மூன்று என்னும் எண்பெற நின்றார். இதனை முன்னருங் கூட்டுக. `தோன்றிய எல்லாம் துடைப்பன் ஈசன்; அன்றி மூன்று நின்றார், என்றும் அவன் இணையடி ஏன்று நின்றார்; அதனால், அம்மூன்று நின்றார்க்கும் முதல்வன் திருநாமத்தை நான்று நின்றாரே நடுவாகி நின்றார்` என இயைத்துரைக்க.
`பலரது வழக்குகளைக் காய்தல், உவத்தல் இன்றி நடுவு நின்று ஆராய்ந்து உண்மை கண்டு கூறுவார், இச்சமய வழக்கினையும் அவ்வாறு ஆராய்ந்து கண்டு கூறாதொழியின், அவர்க்கு நடுவு நிலைமை நிரம்பாது` என்பதாம்.
இதனால், உண்மை நடுவு நிலைமை இது என்பது கூறப் பட்டது.
சிற்பி