இரண்டாம் தந்திரம் - 5. பிரளயம்


பண் :

பாடல் எண் : 1

கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்
திருவருங் கோவென் றிகல இறைவன்
ஒருவனும் நீருற ஓங்கொளி யாகி
அருவரை யாய்நின் றருள்புரிந் தானே. 

பொழிப்புரை :

கரிய மலைகள் பலவற்றையும் உள்ளடக்கிக் கொண்டு மேல் எழுந்து பரந்த பிரளய வெள்ளத்திடையே மால், அயன் இருவரும் தாமே தலைவர் எனத் தனித்தனிக் கூறிப் போர்புரியச் சிவபெருமான் ஒருவனும் அந்நீர் வறப்பச் செய்து அவர்க்கிடையே ஓங்கிய ஒளியாகிய, அணுகுதற்கு அரிய நெருப்பு மலையாய் நின்று, பின்னர் அவர்கட்கு அருள் செய்தான்.

குறிப்புரை :

இவ்வரலாறு மேலே (தி.10 பா. 345) காட்டப்பட்டது. கோ - தலைவன். இது பன்மை ஒருமை மயக்கமாயிற்று. `ஆகிய` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று.
இதனால், பிரளய காலத்தில் அயன் மால் இருவரும் இகலினமை இனிது விளங்கக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

அலைகடல் ஊடறுத் தண்டத்து வானோர்
தலைவன் எனும்பெயர் தான்தலை மேற்கொண்
டுலகார் அழற்கண் டுள்விழா தோடி
அலைவாயில் வீழாமல் அஞ்சலென் றானே.

பொழிப்புரை :

சிவபெருமான் பிரளய வெள்ளத்தில் மேற்கூறிய வாறு அனற்பிழம்பாய்த் தோன்றியபொழுது அலைகின்ற கடலை ஊடறுத்துக் கீழ்ப்போகியும், வானத்தை ஊடறுத்து மேற்போகியும் அடி தலை தெரியாவகை நின்று, `தேவர்க்கும் முதல்வன்` என்னும் சிறப் பினைத் தான் உடையவனாய் இருத்தலின், உலகம் தான் கொண்ட தழல் வடிவைக் கண்டு வெருண்டு அதனுள் வீழ்ந்து ஒடுங்காதவாறும், அதனினின்றும் சேய்மையில் ஓடிப் பிரளய வெள்ளத்தில் வீழ்ந்து அழியாதவாறும் அவற்றிற்கு, ``அஞ்சல்`` என்று அபயந்தந்து காத்தருளினான்.

குறிப்புரை :

எனவே, `தெறலும், அளியும் அவ்வவர்க்கு ஏற்ற வாற்றாற் செய்யும் அவனது தலைமைப் பாடு இனிது விளங்கும்` என்றவாறு.
`கொள்ளுதலால்` என்பது `கொண்டு` எனத் திரிந்து நின்றது. தான் தலைவன் எனப்படுதலால் அவனுக்கு உளதாவது ஒரு பயன் இல்லை. அனைத்தையும் உய்விக்கும் சுமையே உளதாவது என்றற்கு, ``தலைவன் எனும் பெயர், தான் தலை மேற்கொண்டு`` என்றார். இதற்குக் காரணம் கைம்மாறு கருதாத கருணையே என்பதாம். ``எடுத்துச் சுமப்பான்`` என்றார் திருவருட்பயனில் (பா.65).
இதனால், சிவபெருமான் தெறலும் அளியும் அக்காலத்துச் செய்து நின்றமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

தண்கடல் விட்ட தமரருந் தேவரும்
எண்கடல் சூழெம் பிரானென் றிறைஞ்சினர்
விண்கடல் செய்தவர் மேலெழுந் தப்புறங்
கண்கடல் செய்யுங் கருத்தறி யாரே. 

பொழிப்புரை :

தண்ணிய கடல் பொங்கி வந்து மலைகளை மூடிய நிலையின் நீங்கி அடங்கிற்று; எனவே, பிரளய வெள்ளம் வற்றிற்று. அதுபொழுது தேவர்கள், `ஏழ்கடலோடு பெரும்புறக் கடலும் தன்னைச் சூழ்ந்து நிற்கத் தான் ஓங்கிய அழலாய் நின்றவன் எங்கள் சிவபெருமானே` என அவனைப் பலவாற்றால் துதித்து வணங்கினர். அதன்பின்பு அவர்கள் விண்ணுலகத்தைக் கடல்போலப் பரக்க அமைத்துக்கொண்டு, அங்குச் சென்று குடிபுகுந்தனர். அதன்பின்பு அவர்கள் தங்கள் சுவர்க்க இன்பத்தில் திளைக்கின்றனரேயன்றிச் சிவபெருமானை நினைந்து காதலாகிக் கசிந்து, கண்ணீரால் கடலை உண்டாக்கும் எண்ணமே இலராயினர்.

குறிப்புரை :

`இறைஞ்சுவர்` என்பது பாடம் அன்று.
இதனால், ஊழிதோறும் உயிர்கள் சிவபெருமானது முதன்மையை மறந்து வினையிற் சுழலுதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

சமைக்கவல் லானைச் சயம்புவென் றேத்தி
அமைக்கவல் லாரிவ் வுலகத்து ளாரே
திகைத்ததெண் ணீரிற் கடலொலி ஓசை
மிகைக்கொள அங்கி மிகாமைவைத் தானே. 

பொழிப்புரை :

சிவபெருமான் ஒளிப் பிழம்பாய்த் தோன்றிப் பிரம விட்டுணுக்களது மயக்கத்தை நீக்கித் தெளிவித்தபின், யாவரும் திசை தெரியாது திகைக்கும்படி எழுந்த பிரளய வெள்ளம் குறையச் செய்து, பின்பு கடல் ஒலிக்கின்ற ஓசை மிக, அதனைக் கேட்டு அக்கடல் அடங்கி என்றும் அளவுட்பட்டு நிற்குமாறு அதன் நடுவில் வடவைத் தீயை வைத்தான். இவ்வாறு ஒன்றோடு ஒன்று ஒத்தும், ஒவ்வாதும் நிற்கும் ஆற்றல்களை ஏற்குமாற்றாற் கூட்டி உலகம் நெறிப்பட்டு நடக்குமாறு ஆக்கிக் காத்து நடத்த வல்லவனும், அவ்வாறு தன்னை ஆக்குவார் ஒருவர் இன்றித் தானே என்றும் ஒருபெற்றியனாய் நிற்பவனும் ஆகிய அப்பெருமானை அத்தன்மையன் என்று அறிந்து துதித்து உளத்துள் இருத்த வல்லவர் இவ்வுலகத்து உளரோ! இல்லை.

குறிப்புரை :

பின் இரண்டு அடிகளை முதலிற்கொண்டு உரைக்க. சயம்பு `சுயம்பு` என்பதன் திரிபு. சுயம்பு - தானே தோன்றியவன். `உலகத்து உளாரே` என்னாது, `உலகத்துள் ஆரே` என்றலுமாம். அது மிகாமை அங்கி வைத்தான் என்க. இக்கருத்து முன்னேயும் (தி.10 பா.57) கூறப்பட்டது. இதனுள் ஈரடி எதுகை வந்தது.
இதனால், சிவபெருமான் ஊழி முதல்வனாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

பண்பழி செய்வழி பாடுசென் றப்புறங்
கண்பழி யாத கமலத் திருக்கின்ற
நண்பழி யாளனை நாடிச்சென் றச்சிரம்
விண்பழி யாத விருத்திகொண் டானே.

பொழிப்புரை :

சிவபெருமான் ஒளிவடிவாய்த் தோன்றித் தனது தலைமையைப் பலவாற்றானும் விளக்கியருளியபொழுது, வேதங்கள் அவனை நல்ல இசைகளால் துதித்தன. அப்பால் அப்பெருமான் தாழ் வின்றிச் சிறந்து நிற்கின்ற இடமாகிய தாமரைப் பொகுட்டில் வீற்றிருக் கின்ற பிரமன் முன்னே செல்ல, அவன், `மகனே` என விளித்து இகழ்ந்ததனால் உண்டாகிய குற்றத்தை உடையவனாயினமை பற்றி அவன் மேற் சென்று கிள்ளிக்கொண்ட அவனது ஐந்து தலைகளில் தன்னை இகழ்ந்த நடுத்தலையில் ஏனைத் தேவரும் அவனைப் போலத் தன்னைப் பழித்துக் குற்றத்திற்கு ஆளாகாதவாறு அவரிடத்தெல்லாம் உஞ்ச விருத்தியை (பிச்சை ஏற்றலை) மேற்கொண்டான்.

குறிப்புரை :

``பண் பழி`` என்றதற்கு, `பண்ணாற் பழிச்சுதல்` என உரைக்க. `இப் பழிச்சுதலாகிய வழிபாட்டினைச் செய்தவை வேதங்கள்` என்பது ஆற்றலால் கொள்ளப்பட்டது. இவ்வாறன்றி, ``பண்`` என்றதனை ஆகுபெயராக்கி, `வேதம்` என்று உரைப்பினும் ஆம். முதற்கண் `சென்ற` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தல். கண் - இடம். சென்ற - கழிந்த. பழியாத - இகழப்படாத; என்றது, `புகழத் தக்க` என்றவாறு. இத்தகைய சிறந்த இடத்தில் இருப்பவன் அதற்கேற்ற அறிவுபெற்றிருக்கவில்லை என்பது குறிப்பு. நண்பழி, வினைத் தொகை. ஆளன் - அதனை உடையவன். ``சென்று`` என்றது, சென்று கொய்த தன் காரியம் தோன்ற நின்றது. `சிரத்தின்கண்` என உருபு விரிக்க. பழியாத விருத்தி - இகழாமைக்குக் காரணமான தொழில்.
இதனால், மேல், ``அயன்தலை முன் அற`` (தி.10 பா.337) என ஓதப்பட்ட வரலாறும் இப்பொழுதே நிகழ்ந்தது என்பது கூறப்பட்டது.
சிற்பி