இரண்டாம் தந்திரம் - 6. சக்கரப் பேறு


பண் :

பாடல் எண் : 1

மால்போ தகனென்னும் வண்மைக்கிங் காங்காரங்
கால்போதங் கையினோ டந்தரச் சக்கரம்
மேல்போக வெள்ளி மலைஅம ரர்பதி
பார்போக மேழும் படைத்துடை யானே. 

பொழிப்புரை :

`திருமால் அறத்தை அறிவுறுத்தும் ஆசிரியன்` என்னும் சிறப்பு நிலைபெறுதற் பொருட்டு, இவ்வுலகில் கீழோர் தம் அகங்காரத்தை வெளிப்படச் செய்யும்பொழுது, அவனது கையோடே சக்கரப் படையும் அகங்கரித்தவர் மேற்சென்று அழித்து நிலை நிறுத்தும்படி, திருக்கயிலையில் வீற்றிருக்கின்ற தேவர் தலைவனாகிய சிவபெருமான் ஏழுலகத்து இன்பத்தையும் படைத்துள்ளான்.

குறிப்புரை :

`சக்கரம் மேல்போக ஏழும் படைத்துள்ளான்` என்றாரேனும், `ஏழு பார் போகமும் படைத்து அவற்றை நிலை நிறுத்தச் சக்கரம் மேற்போக அளித்துள்ளான்` என்றல் கருத்து என்க. போதகன் - போதிப்பவன். இதற்கு `அறம்` என்னும் செயப் படுபொருள் வருவித்துக்கொள்க. திருமால் அறத்தைப் போதித்தல் சில நூல்களாலும், கொடியோரை அழிக்கும் செயலாலுமாம். கால் போது - வெளிப்படுத்தும்பொழுது: என்றது, `செருக்கினால் அறத்தை அழிவுசெய்து ஒழுகும்பொழுது` என்றதாம். ``அங்கையினோடு`` என்றது, `வறுங்கையால் போர் செய்யாது வலியதொரு கருவி கொண்டு போர் செய்தற்கு` என்றபடி. அம் - அழகு. தரம் - மேன்மை. `மேல் சலந்தராசுரனை அழித்தற் பொருட்டுச் சிவபெருமான் உண்டாக்கியதாகக் கூறிய சக்கரத்தைத் திருமால் பெற விரும்பிச் சிவபெருமானை நாள்தோறும் ஆயிரம் தாமரை மலர்களால் அருச் சித்து வழிபட்டு வர, ஒருநாள் அவற்றுள் ஒரு மலரைச் சிவபெருமான் மறைத்தருளத் திருமால், அம்மலருக்கு ஈடாகத் தமது கண்ணைப் பறித்து அப்பெருமான் திருவடியில் சாத்தினார். அதனால் மகிழ்ச்சி யுற்ற சிவபெருமான் அவருக்கு அக்கண்ணை அளித்து, அவர் விரும்பிய அச் சக்கரப் படையையும் அளித்தருளினார்` என்பதும் கந்த புராணத்துள் அங்குத் தானே கூறப்பட்டது. கண்ணைத் தாமரை மலராகச் சாத்தினமையால், திருமாலுக்குச் சிவபெருமான், `பது மாட்சன்` (தாமரைக் கண்ணன்) என்னும் பெயரையும் அளித்தார் என்பது, காஞ்சிப் புராணத் திருமாற்பேற்றுப் படலத்துட் கூறப்பட்டது.
இவ்வரலாறு,
சலமுடைய சலந்தரன்ற னுடல்தடிந்த நல்லாழி
நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடீ,
நலமுடைய நாரணன்தன் நயனம்இடந் தரனடிக்கீழ்
அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ.
-தி.8 திருச்சாழல், 18
எனவும்,
பங்கயம் ஆயிரம் பூவினில்ஓர் பூக்குறையத்
தங்கண் இடந்தரன் சேவடிமேல் சாத்தலுமே
சங்கரன் எம்பிரான் சக்கரம்மாற் கருளியவா
றெங்கும் பரவிநாம் தோணோக்கம் ஆடாமோ.
-தி.8 திருத்தோணோக்கம், 10
எனவும் திருவாசகத்து எடுத்தோதப்பட்டது.
இதனால், திருமால் தமது காத்தல் தொழிலை இனிது நடத்தற் பொருட்டு அவருக்குச் சிவபெருமான் சக்கரம் அளித்தருளினமை கூறப்பட்டது. இவ்வரலாற்றைக் குறிக்கும் தலங்கள் திருவீழி மிழலையும், திருமாற்பேறுமாம். இதனை ஞானசம்பந்தர், நாவுக்கரசர் தேவாரங்களால் அறிக.

பண் :

பாடல் எண் : 2

சக்கரம் பெற்றுநல் தாமோ தரன்தானும்
சக்கரந் தன்னைத் தரிக்கவொண் ணாமையால்
மிக்கரன் தன்னை விருப்புடன் அற்சிக்கத்
தக்கநற் சத்தியைத் தான்கூறு செய்ததே. 

பொழிப்புரை :

சக்கரத்தைப்பெற்ற திருமால் பின்பு அதனைத் தாங்கும் ஆற்றல் இல்லாமையால் மீளவும் சிவபெருமானை அன்புடன் வழிபட, அவர்க்கு அதனைத் தருதற்பொருட்டு அப்பெருமான் தனது சத்தியைத் கூறிட்டமை வியக்கத்தக்கது.

குறிப்புரை :

இவ்வரலாறு இந்நூலாலே அறிகின்றோம். `மிக்க` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. ``செய்தது`` என்றதன்பின், `வியப்பு` என்பது எஞ்சிநின்றது.
இதனால், சிவபெருமான் திருமாலுக்குச் சக்கரத்தை அளித்ததேயன்றி, அதனைத் தாங்கும் ஆற்றலையும் அளித்தமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

கூறது வாகக் குறித்தநற் சக்கரம்
கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக்
கூறது செய்து கொடுத்தனன் சத்திக்குக்
கூறது செய்து தரித்தனன் கோலமே.

பொழிப்புரை :

சிவபெருமான், சலந்தராசுரன் உடலைப் பிளக்கக் கருதி உண்டாக்கிய சக்கரத்தைத் திருமாலுக்கு உரியதாகக் கொடுத் தான்; அதன்மேலும், அச் சக்கரத்தைத் தாங்குதற்பொருட்டுத் தனது சத்தியைக் கூறிட்டு அவனுக்குக் கொடுத்தான். அச் சத்திக்குத் தனது திருமேனியையே கூறிட்டுக் கொடுத்தான்.

குறிப்புரை :

`அவனது கருணைப்பெருக்கு அளவிடற்கரிது` என்பது குறிப்பெச்சம். `சிவபெருமான்` என்பதுதோன்றா எழுவாயாய் நின்றது. `சத்தி` என்பது மூன்றாம் அடி முதலிலும் சென்று இயைந்தது.
இதனால், இயைபு பற்றி சிவபெருமானது வள்ளன்மையின் பெருமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

தக்கன்றன் வேள்வி தகர்த்தநல் வீரர்பால்
தக்கன்றன் வேள்வியில் தாமோ தரன்தானுஞ்
சக்கரந் தன்னைச் சசிமுடி மேல்விட
வக்கி உமிழ்ந்தது வாயுக் கிரத்திலே. 

பொழிப்புரை :

தக்கன் வேள்வியை அழித்த சிவகுமாரராகிய வீரபத்திரர்மேல் திருமால் போருக்குச் சென்று சந்திரனை அணிந்த அவரது தலையை அறுக்க என்று, முன்பு தான் சிவபெருமானிடம் பெற்ற சக்கரத்தை ஏவ, அஃது அவர் தமது வாயாற் செய்த உங்காரத்தாலே நாணி வலியிழந்தது.

குறிப்புரை :

இவ்வரலாற்றையும் கந்தபுராணத்துட் காண்க. `வட்கி` என்பது திரிந்து நின்றது. உமிழ்தலுக்கு, `வலிமை` என்னும் செயப்படு பொருள் வருவிக்க. வாய் உக்கிரம், உங்காரம்.
இதனால், சிவபெருமானது ஆற்றற் சிறப்பு அவ்வாற்றானே கூறப்பட்டது.
சிற்பி