இரண்டாம் தந்திரம் - 8. அடிமுடி தேடல்


பண் :

பாடல் எண் : 1

பிரமனும் மாலும் பிரானேநான் என்னப்
பிரமன்மால் தங்கள்தம் பேதைமை யாலே
பரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்க
அரனடி தேடி அரற்றிநின் றாரே.

பொழிப்புரை :

பிரமனும், திருமாலும் `நானே கடவுள், நானே கடவுள்` என்று சொல்லிப் போர் புரிய, அவர்களது பேதைமையை நீக்குதற் பொருட்டுச் சிவபெருமான் அனற் பிழம்பாய் ஒளிவீசி நிற்க, அவ்விருவரும் அவனது திருவடியைத் தேடிக் காணாமல் புலம்பினர்.

குறிப்புரை :

இவ்வரலாறு மேலே காட்டப்பட்டது. (தி.10 பா.345) `நானே பிரான்` என மாற்றித் தனித்தனிக் கூட்டி உரைக்க. பின்னும், ``பிரமன் மால்`` என்றது சுட்டுப் பெயரளவாய் நின்றது. தங்கள் தம் பேதைமை - தம் தம் பேதைமை. `பேதைமையாலே நிற்க` என்றது, ``கள்வனால் திரண்டனர் மக்கள்` என்பதுபோல நின்றது. ``அரனடி தேடி`` என, அடியை மட்டுமே குறித்தது, அவ்வரலாற்றைத் தொகுத்துக் கூறியபடி. ``அரற்றுகின்றாரே`` என்பதே பாடமாக ஓது கின்றனர்.
இதனால், சிவபெருமான் பேதைமையாளர்க்கு அறிய ஒண்ணாதவன் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்
படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடி
அடிகண் டிலேன்என் றச்சுதன் சொல்ல
முடிகண்டேன் என்றயன் பொய்மொழிந் தானே.

பொழிப்புரை :

மாலும் பிரமனும் முறையே சிவசோதியின் அடியையும், முடியையும் காண முயன்று அவற்றின் உருவத்தைக் காணமாட்டாதவராய் மீண்டும் முன்பு இருந்த இடத்தில் வந்து கூடிய பின்பு, திருமால், `நான் அடியைக் காணவில்லை` என்று உண்மையைச் சொல்ல, பிரமன், `நான் முடியைக் கண்டேன்` என்று பொய் சொன்னான்.

குறிப்புரை :

`அதனால் அவன் இவ்வுலகில் தனக்குக் கோயில் இலனாயினான்` என்பது குறிப்பெச்சம். `அடி, முடி` என்றவற்றை ``அயன் மால்`` என்பவற்றொடு எதிர்நிரனிறையாக இயைத்தல் வேண்டும் என்பது பின்னிரண்டடிகளில் விளங்கும். இத்திருமந்திரம் பாயிரத்ததாகாது, ஈண்டையதே என்பதுமேலே குறிக்கப்பட்டது.
இதனால், மால், அயன் என்னும் இருவரது தகுதி வேறு பாடுகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 3

ஆனே ழுலகுற நின்றஎம் அண்ணலுந்
தானே ழுலகில் தழற்பிழம் பாய்நிற்கும்
வானே ழுலகுறும் மாமணி கண்டனை
யானே அறிந்தேன் அவன்ஆண்மை யாலே. 

பொழிப்புரை :

விரிந்த பரந்த அனைத்துலகிலும் நுண்ணியனாய் நிறைந்து நிற்கின்ற சிவபெருமான், பிரம விட்டுணுக்களது போர் காரணமாக அவ்விடங்களிலெல்லாம் பெரிய அனற் பிழம்பாய் நின்ற ருளினான். நின்றும் அவனை அவ்விடங்களில் ஓரிடத்தும் ஒருவரும் கண்டிலர். ஆயினும், நான் அவனை எல்லா இடத்திலும் காண் கின்றேன்; அது நான் அவனுக்கு ஆட்செய்கின்ற முறைமையாலாம்.

குறிப்புரை :

`ஆம், தாம்` என ஓதுவன பாடம் அல்ல. ஆன் - அவ் விடம். இவ்வாறு சேய்மையாகச் சுட்டியது உலகத்தின் பரப்பு உணர்த் துதற்கு. ``யானே அறிந்தேன்`` என்றமையால், பிறர் அறிந்திலர் என்பது இனிது விளங்கிற்று. அடிமுடி காணாமையேயன்றி, `அது சிவ சோதி` என்பதனையும் அறியாது திகைத்தமையின், `பிறர் அறிந்திலர்` என்றும், எவ்விடத்தும் எப்பொருளையும் நாயனார் சிவமாகக் காணுதலால், ``யானே அறிந்தேன்`` என்றும், `சிவனை அறிதல் அவனுக்குத் தொண்டு புரிந்து நிற்பதனாலேயன்றிப் பிற ஆற்றல்களால் அன்று` என்பதற்கு, `அவன் ஆண்மையாலே` என்றும் கூறினார். இக்கருத்தையே திருநாவுக்கரசு நாயனார் தமது இலிங்கபுராணத் திருக்குறுந்தொகையிலும் (தி.5.100) பலபட வகுத்தோதினார். சேக்கிழாரும் இவ்வரலாற்று உண்மையை,
தொழுவார்க்கே அருளுவது சிவபெருமான் எனத்தொழார்
வழுவான மனத்தாலே மாலாய மாலயனும்
இழிவாய கருவிலங்கும் பறவையுமாய் எய்தாமை
விழுவார்கள் அஞ்செழுத்தும் துதித்துய்ந்த படிவிரித்தார்.
-தி.12 பெ.பு. திருஞான., 78
என விளக்கினார்.
தேடிக் கண்டு கொண்டேன்; - திரு
மாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை என்னுள்ளே
தேடிக் கண்டு கொண்டேன். -தி.4.ப.9.பா.12
என்று அருளிச்செய்ததும் இக்கருத்தினைப் புலப்படுத்துவதாம். ``அவன்`` என்பதில் தொக்குநின்ற ஆறாவது, நான்காவதன் பொருளது. ஆள்மை - ஆளாம்தன்மை.
இதனால், மாலும், அயனும் அடிமுடி காணமாட்டா ராயதற்குக் காரணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஊனாய் உயிராய் உணர்வங்கி யாய்முன்னஞ்
சேணாய்வா னோங்குந் திருவுரு வேஅண்டத்
தாணுவும் ஞாயிறுந் தண்மதி யுங்கடந்
தாண்முழு தண்டமு மாகிநின் றானே.

பொழிப்புரை :

இயல்பாகவே பல உடம்புகளாயும், அவ்வுடம்பில் உள்ள உயிர்களாயும், அவ்வுயிர்களினுள் அறிவொளியாயும் எல்லை யற்ற தனது பேராற்றலால் நிறைந்து நின்ற வடிவமே, பிரம விட்டுணுக்களின்முன் அண்டத்தைத் தாங்குகின்ற தூண்போல்வதாய் நீண்டு, சூரியசந்திர மண்டலங்களைக் கடந்து, தன்னால் ஆளப் படுகின்ற அண்டம் முழுதும் ஊடுருவ நின்றான் அம் மணிகண்டன்.

குறிப்புரை :

`அதனால், அவனது வியாபகத்துள் ஒரு பகுதியிலே அடங்கிக் கிடப்பவராகிய பிரம விட்டுணுக்கள் அவனை அளவிடுதல் எங்ஙனம் கூடும்` என்பது குறிப்பெச்சம். முன்னம் - முன்பே. ``தாணுவும்`` என்புழி, `ஆய்` என்பது விரிக்க.
``பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே``
-தி.8 திருவெம்பாவை, 10
``பாதம் இரண்டும் வினவிற் பாதாளம் ஏழினுக் கப்பால்
சோதி மணிமுடி சொல்லிற் சொல்லிறந்து நின்ற தொன்மை``
-தி.8 குயிற்பத்து, 1
என்றாற்போலும் திருமொழிகளும் சிவபெருமானது அளவிடப்படாத பெருநிலையை விளக்க எழுந்தனவாம். ``ஆகி`` என்றதனை, `ஆக` எனத் திரிக்க. இது முதலாக இவ்வதிகாரத்தில் உள்ள திருமந்திரங்கள், `சாருவோபாதாளம்` என வேறோர் அதிகாரமாகச் சில பிரதிகளில் உள்ளன என்பர். ``திருவுரு`` என்பதில் உரு, நிலை. முன்னை மந்திரத்தில் உள்ள `மணிகண்டன்` என்பதைச் சுட்டுவதாகிய `அவன்` என்பது தோன்றா எழுவாய்.
இதனால், சிவபெருமானது பெருமை கூறும் முகத்தால், பிரம விட்டுணுக்களது சிறுமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

நின்றான் நிலமுழு தண்டத்துள் நீளியன்
அன்றே அவன்வடி வஞ்சின ராய்ந்தது
சென்றார் இருவர் திருமுடி மேற்செல
நன்றாங் கழலடி நாடவொண் ணாதே.

பொழிப்புரை :

சிவபெருமான், மண்ணும், விண்ணும் ஆகிய உலகம் முழுதும் நின்றும் வளர்ந்தும் நிற்பவன் அல்லனோ! அதனால், அவனது திருவுருவத்தைக் கண்டு பிரம விட்டுணுக்கள் இருவரும் அஞ்சுதலும், அறியாமையால் அதனை அளந்தறியச் சென்றவழி எய்த்து வருந்துதலும் இயல்பே.

குறிப்புரை :

``அவன்`` என்றதனைத் தாப்பிசையாக முதலிலும் கூட்டி எழுவாயாக்குக. நீளியன் - நீண்டிருப்பவன்; ``திருமுடி மேல் செல, கழலடி நாட ஒண்ணாது`` என்றது, திருமுடியை அறிந்தார் ஒரு வருமிலராயினும், ``திருவடியை அறிந்தார் பலர்; அதுவும் இவர்கட்கு அகப்படாதாயிற்று`` என்றபடி. `கழலடியும்` என்ற உம்மை தொகுத் தலாயிற்று. ஈற்றில் உள்ள ஏகாரமும் தேற்றப் பொருட்டு. திருமுடி முடிவையும், திருவடி தொடக்கத்தையும் குறிப்பனவாதலின், திருவடி சிலராலேனும் காணப்பட்டதாகும். `அவன் வடிவை அஞ்சினராய் அது ஆய்ந்து சென்றார் இருவர் நாட ஒண்ணாதே` என முடிக்க.
இதனால், பிரம விட்டுணுக்களது இயல்பாய சிறுமை, செருக்குக் காரணமாகப் பின்னும் மிகுதிப்பட்டமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

சேவடி ஏத்துஞ் செறிவுடை வானவர்
மூவடி தாவென் றவனும் முனிவரும்
பாவடி யாலே பதஞ்செய் பிரமனும்
தாவடி யிட்டுத் தலைப்பெய்யு மாறே. 

பொழிப்புரை :

சிவபெருமானிடம் எஞ்ஞான்றும் குறையிரத்தற்குக் கூடுபவர்களாகிய தேவர்களுட் சிலராகிய, மாவலியை நேரே பொருது வெல்லமாட்டாது வஞ்சனையால் மூவடி மண் இரந்து வென்ற மாயோனும், தானே அறிந்து படைக்கமாட்டாது வேதப் பாக்களை உருச்செய்து அறிந்து உலகங்களைப் படைக்கின்ற பிரமனும், அவருட் சிலரை நோக்கித் தவம்செய்து சிலவற்றைப் பெறும் முனிவர்களும் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை எதிரிட்டுக் காண வல்லராவரோ!

குறிப்புரை :

``முனிவர்`` என்றது, கருமகாண்டிகளை. அவர் தேவரைத் தெளியாராயினும், அவரை நோக்கிச் செய்யும் கருமங்கள் பயன் தரும் என்னும் தெளிவுடையர். இறுதிக்கண் கூறற்பாலராய அவரைச் செய்யுள்நோக்கி இடையே கூறினார். தா அடி, படைவீரர் போர்க்கு அணிவகுத்து நடக்கும் நடை. அஃது இங்குச் செருக்கினால் எதிரிட்டுக் காண முயலுதலைக் குறித்தது. தலைப்பெய்தல் - சந்தித்தல்; காணுதல். இறுதிக்கண், `கூடுமோ` என்பது சொல்லெச்சம். `வான வரும்` என்னும் உம்மை தொகுத்தல்.
இதனால், அயன், மால் என்பவரோடு இனம்பற்றிப் பிறரது சிறுமைகளும் தோன்றக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 7

தானக் கமலத் திருந்த சதுமுகன்
மானக் கருங் கடல் வாழித் தலைவனும்
ஊனத்தின் உள்ளே உயிர்போல் உணர்கின்ற
தானப் பெரும்பொரு ளண்மைய தாமே. 

பொழிப்புரை :

தாமரை மலரை இடமாகக் கொண்டு இருக்கின்ற பிரமனும், பெரிய கடலில் நீங்காது, கிடக்கின்ற திருமாலும் எஞ்ஞான்றும் தங்கள் உடம்பினுள்ளே உள்ள உயிர் போலக் கருதி உள்கத்தக்க பெரும் பொருளாகிய சிவபெருமான், அவர்தம் புறக்கண்ணிற்கு அகப்படுவானோ!

குறிப்புரை :

`கமலத் தானம்` என மாற்றிக்கொள்க. `சதுமுகனும்` என்னும் உம்மை தொகுத்தல். மானம் - பெருமை. கருமை, இன அடை. `உணர்கின்றதான` என்பதன் பின் பகரமெய் விரித்தல். ``அண்மையதாமே`` என்புழி, ``அவர்க்கு`` என்பது அவாய் நிலையான் வந்தது. ஏகாரம், எதிர்மறை உணர்த்திற்று. ``தானக் கருங் கடல், ஊழித் தலைவன், தன்மையதாம்`` என்பன பாடம் அல்ல.
இதனால், மாலும் பிரமனும் ஆயினும் சிவபெருமானை உள்குவோரன்றி, அவனால் உள்கப்படுவோர் ஆகாமை கூறி, அவர் அடிமுடி அறியமாட்டாமை வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

ஆலிங் கனஞ்செய் தெழுந்த பரஞ்சுடர்
மேலிங்ஙன் வைத்ததோர் மெய்ந்நெறி முன்னங்கண்
டோலிங் கனஞ்செய் துலகம் வலம்வருங்
கோலிங் கமைஞ்சருள் கூடலு மாமே.

பொழிப்புரை :

அண்டங்கள் பலவற்றையும் பொருந்தி நின்ற சிவசோதி, அதன்பின் இவ்வாறு பிரம விட்டுணுக்களால் அடிமுடி அறியப்படாத நிலைமையைக் காட்டி நிலைபெறச் செய்த மேலான சிவநெறியை முன்னர் அறிந்து, உலகம் முழுதும் ஒருங்கே வழி படுகின்ற இலிங்க வடிவை வணங்கித் தம் குறையை எடுத்துக்கூறி முறையிட்டு, மக்கள் இவ்வுலகப் பயனையேயன்றி அவன் அருளைப் பெறுதலாகிய ஞானத்தையும் அடையலாம்.

குறிப்புரை :

மூன்றாம் அடியிலும் முதலில் வந்தசொல் வருதலும், மோனை சிதைதலும் பொருந்தாமையால், அவ்விடத்து `ஆலிங்கனம் செய்து` என ஓதுதல் பாடம் ஆகாமை அறிக. ஓலம், `ஓல்` என வருதல் செய்யுட்கண் ஏற்றதேயாம். ஓலம் செய்தல் - முறையிடுதல். கோல் - தறி; இலிங்கம். `அமைந்து` `அமைஞ்சு` எனப் போலியாயிற்று. அமைதல் - மனம்பற்றி வணங்குதல். `அமைஞ்சு ஓல் இங்ஙனம் செய்து அருள்கூடலும் ஆம்` எனக் கூட்டுக.
இதனால், அடிமுடி தேடிய நிகழ்ச்சியால் விளைந்த பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

வாள்கொடுத் தானை வழிபட்ட தேவர்கள்
ஆள்கொடுத் தெம்போல் அரனை அறிகிலர்
கோள்கொடுத் தின்பங் கொடுத்துக்கோ ளாகத்தன்
தாள்கொடுத் தானடி சாரகி லாரே.
 

பொழிப்புரை :

சிவபெருமான் திருமால் முதலிய தேவர்க்கும், இராவணன் முதலிய அரக்கர்க்கும் படைக்கலங்களை அளித் தருளிய செய்தியை அறிந்து அவ்வாறே தாமும் பலவற்றைப் பெற விரும்பி அவனை வழிபடுகின்ற தேவர்கள், எம்மைப் போல அவனுக்குத் தம்மை ஆளாகக் கொடுத்து அன்பினால் அவனை நினைப்பதில்லை. அதனால், தன் அடியார்களுக்கு முதலில் ஞானத்தைக் கொடுத்து, பின் பேரின்பத்தைத் தந்து, என்றும் புகலிட மாகத் தனது திருவடியை வழங்குகின்ற அவனது திருவடியை அத் தேவர்கள் காண்பதில்லை.

குறிப்புரை :

கோள் - கொள்ளப்படும் பொருள். மூன்றாம் அடியிலும் ``ஆள்கொடுத்து`` என ஓதுதல் பாடம் அன்று.
இதனால், மேல், ``கோலிங்கு அமைஞ்சருள் கூடலுமாமே`` என்றவாறும், ``வானிடத்தவரும் மண்மேல் வந்தரன்றனை அற்சிப்பர்`` (சிவஞானசித்தி சூ. - 2.92) என்றவாறும் இவ்வுலகில் தேவர் பலர் வந்து சிவபெருமானை வழிபட்டமை அறியப்படுகின்ற தாயினும், அவர் தம் வழிபாடு பயன் கருதாத அன்பு வழிபாடாகாமையால், சிவபெருமான் அவர்கட்கு அரியனே ஆகின்றான் என, மால் அயன் என்பவரோடு, இனம்பற்றி ஏனைத் தேவரும் சிவபெருமானை வழிபட்டும் அவனை அறியாரா யினமைக்குக் காரணம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

ஊழி வலஞ்செய்தங் கோரும் ஒருவற்கு
வாழி சதுமுகன் வந்து வெளிப்படும்
வீழித் தலைநீர் விதித்தது காவெனும்
ஊழிக் கதிரோன் ஒளியைவென் றானே. 

பொழிப்புரை :

பிரளய வெள்ளத்தில் ஆலிலைமேல் மிதந்து எங்கும் திரிந்து, `இனி என்ன செய்வது` என்று ஆராய்கின்ற திரு மாலுக்கு மகனாக நான்முகன் தோன்றுவான். அதன்பின், ஊழிக் காலத்தில் எரிகின்ற சூரியனது ஒளியையும் வென்ற திருமேனி யனாகிய சிவபெருமான், `அழிந்த இவ்வுலகத்தை நீவிர் மீளப் படைத்துக் காமின்` என்று பணித்தருளுவான். அவ்வாற்றால் பின்பு படைப்பு முதலிய தொழில்கள் நிகழும்.

குறிப்புரை :

இதனால், வருகின்ற அதிகாரங்கட்குத் தோற்றுவாயும் செய்யப்பட்டது. `காமின்` என்பதன் இறுதிநிலை தொகுத்தலாயிற்று. வாழி, அசைநிலை. `தாவென்` என்பது பாடம் அன்று. ``விதித்துக் காமின் எனும்`` என்றது, `சதுமுகன் விதித்தலையும், மாயோன் காத்தலையும் செய்க` என்பான் என்றவாறு.
இதனால், அடிமுடி தேடிய நிகழ்ச்சியின் பின்விளைவு கூறப் பட்டது.
சிற்பி