இரண்டாம் தந்திரம் - 11. சங்காரம் 


பண் :

பாடல் எண் : 1

அங்கிசெய் தீசன் அகலிடஞ் சுட்டதவ்
வங்கிசெய் தீசன் அலைகடற் சுட்டதவ்
வங்கிசெய் தீசன் அசுரரைச் சுட்டதவ்
வங்கிஅவ் வீசற்குக் கைஅம்பு தானே.

பொழிப்புரை :

சிவபெருமான் உலகம் முழுவதையும் அழித்ததும், கடல்நீரை மிக்கு வாராதவாறு அடங்கியிருக்கச் செய்ததும், முப்புரத் தவர் முதலிய அசுரர்களை அழித்ததும் நெருப்பை உண்டாக்கியே யாம். அதனால், நெருப்பே அவன் கையம்பாய் விளங்குகின்றது.

குறிப்புரை :

கடவுட் கொள்கை இல்லாதவருள் சிலர் (உலகாய தரும், மீமாஞ்சகரும்) `உலகம் தோன்றலும்,அழிதலும் இல்லாது என்றும் உள்ளதேயாகும்` என்பர். கடவுட் கொள்கை உடையவ ருள்ளும் சிலர் (பாஞ்சராத்திரிகள் முதலியோர்) `உலகத்தைக் கடவுள் அழிக்கமாட்டான்` என்பர். `அவரெல்லாரும் `நெருப்பு` என்ற ஒரு பொருள் இருப்பதை உற்று நோக்குவாராயின், தமது மயக்கம் நீங்குவர்` என்றற்கு நெருப்பு இறைவனுக்கு அழித்தற் கருவியாய்ப் பயன்படுமாற்றைக் கூறினார். ``அழிப்பு இளைப்பாற்றல்`` (சிவஞானசித்தி. சூ. 1.37) என்று இதனை முதற்கண் எடுத்துக் கூறியதும் இதுபற்றி என்க. உலகம் அழி பொருளாதலை உணர்வார் எவரும் அது தோற்றம் உடைத்து என்பதையும் உணர்வர் என்க. பூதங்கள் ஐந்தனுள் ஆகாயம் ஒழிந்த, காட்சிப் பொருளாய் நிற்கும் ஏனை நான்கும் படைத்தல் முதலிய மூன்றனையும் செய்யுமாயினும் நிலத்திற்கு உரிமைத் தொழில் படைத்தலும், நீருக்கு உரிமைத் தொழில் காத்தலும், நெருப்பிற்கு உரிமைத் தொழில் அழித்தலும் ஆதல் பற்றி அதனையே இறைவனுக்கு அழித்தற் கருவியாக அருளிச்செய்தார். `நிலம், நீர், தீ` என்ற மூன்றற்கும், `பிரமன், மால், உருத்திரன்` என்பவரை உரிமைக் கடவுளராகக் கூறலின், சிவாகமங்கட்கும் கருத்து இதுவாதல் அறிந்து கொள்ளப்படும்.
இதனால், `இறைவன் உலகத்தைப் படைத்தல் காத்தல் களுடன் அழித்தலும் செய்வன்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

இலயங்கள் மூன்றினுள் ஒன்றுகற் பாந்தம்
நிலையன் றழிந்தமை நின்றுணர்ந்தேனால்
உலைதந்த மெல்லரி போலும் உலகம்
மலைதந்த மாநிலந் தான்வெந் ததுவே. 

பொழிப்புரை :

மூவகைச் சங்காரங்களுள் `கற்ப சங்காரம்` என்பதும் ஒன்று. அதில் எல்லாப் பொருளும் சங்கரிக்கப் பட்டொழிந் தமையை ஏனைய இரண்டு சங்காரங்களில் நிற்குமாற்றால் நான் கருதியுணர்ந்துகொண்டேன். கால வயப்பட்டுநிற்கும் உலகம் உலை யில் இடப்பட்ட அரிசிபோல்வதாம். ஆகவே, என்றும் அழியாதன போல மலைவைத் தந்து நிற்கும் இப்பெரு நிலம் முடிவில் அழிந் தொழிந்தது.

குறிப்புரை :

`மூவகைச் சங்காரம் இவை` என்பது, வருகின்ற திரு மந்திரங்களுள் கூறப்படும். `நனவு நிலையில் நிற்பவன் அந்நிலையில் ஒருபெற்றியே நிற்கமாட்டாது காலவயத்தால் கனவு முதலியவற்றிற் சென்று அறிவு கெடுதலையும், பிறந்த உயிர் அந்நிலையிலே நிற்க மாட்டாது காலவயத்தால் அவ்வுடலைவிட்டு இறந்தொழி தலையும் உற்றுநோக்கினால், உலகம் முழுதும் இவ்வாறே காலவயப் பட்டு அழிந்து பின்பு தோன்றியதாகும் என்பது விளங்கும்` என்பார், ``கற்பாந்தம் நிலையன்றழிந்தமை நின்றுணர்ந்தேன்`` என்றார். நிலை - நிலைத்தொழிலை உடைய பொருள்கள்; ஆகுபெயர். இது, `நீவிரும் அவ்வாறு உணர்மின்` என்றவாறு. இவ்வாறே திருவள்ளுவரும்,
உறங்கு வதுபோலும் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. -குறள், 339
என்று உடலின் அழிவுதோற்றங்களை அறிவின் அழிவின் தோற்றங் களில் வைத்துத் தெளிவித்தார். முன்பு இருவகை அழிப்பின் வைத்து உலக அழிவை வலியுறுத்தினாராகலின், ``உலை தந்த மெல்லரி போலும் உலகம்`` என அதன் நிலையாமையைப் பின்னர் வலியுறுத்தி, ``மாநிலம் தான் வெந்ததுவே`` என நிலவுலக அழிவை முடிவில் நிறுவினார். அரி - அரிசி. மலை - மலைவு; மயக்கம்; முதனிலைத் தொழிற்பெயர். பிரம கற்பம், விட்டுணு கற்பம் முதலாகக் கற்பங்கள் தாம் பல. அவற்றுள்ளும் அவரவர் உறங்கும் காலம் அவரவர்க்கு நித்திய கற்பமாகவும், இறக்குங் காலம் மகாகற்பமாகவும் சொல்லப் படும். கற்பம் - ஊழி. காணப்பட்ட உலகத்தை ``வெந்தது`` என்றது, முன்னை ஊழியிறுதி நோக்கியாம். எனவே, `பின் தோன்றியது` என்பதும் பெறப்படும். ஆகவே, `வெந்தது` என்பது இறந்தகால வினைப்பெயர்.
இதனால், உலக சங்காரம் இல்லை என மயங்குவார்க்கு, `அது உண்டு என்பத

பண் :

பாடல் எண் : 3

பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும்
உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாங்
குதஞ்செய்யும் அங்கி கொளுவி ஆகாச
விதஞ்செய்யும் நெஞ்சின் வியப்பில்லை தானே. 

பொழிப்புரை :

பல உயிர்கட்கு இடம் அளிக்கின்ற அகன்ற நிலமும், குளிர்ந்த எட்டு உயர்மலைகளும், நீரை மிகத் தருகின்ற எழுகடல் நீர்ப்பரப்பும் முதலாக அனைத்துப் பொருள்களையும் சிவபெருமான் தனது நினைவு மாத்திரத்தால் காய்தலைச் செய்யும் நெருப்பை வைத்து அழித்து உருவில்லனவாகச் செய்துவிடுவான். இதில் வியப்பில்லை.

குறிப்புரை :

`உதகம், குரோதம்` என்பன இடைக் குறைந்து நின்றன. ஐம்பூதங்களுள் ஆகாசம் அருவப் பொருளாதலின், உருவழிந்த நிலையை அதன் வகையாக ஓதினார். விதம் - வகை. `விதமாக` என ஆக்கம் வருவிக்க. `நெஞ்சின் செய்யும்` என மாறுக. கிடந்தவாறே வைத்து, `நெஞ்சின் என, வேண்டா கூறி, வியப்பின்மையை வலியுறுத்தினார்` என்றலுமாம்.
இதனால், நிலமேயன்றிப் பிறவும் அழிதல் கூறுமாற்றால், மகாசங்காரம் உண்மை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடி
அண்டத்துள் ஊறி யிருந்தெண் டிரையாகி
ஒன்றின் பதஞ்செய்ய ஓம்என்ற அப்புறக்
குண்டத்தின் மேல்அங்கி கோலிக்கொண் டானே. 

பொழிப்புரை :

மேகங்கள் மலைக்கண் தங்குதலால் நிலத்தில் இறங்கிய நீராகிய குலமகள் உலகத்தில் தங்கியும், கடலாகியும் நின்று இனிய உணவுகளை உண்டாக்கிக் கொண்டிருக்கும் பொழுதே இறைவன் `நாதம்` என்னும் அவ்விடத்ததாகிய குண்டத்தில் விளங்கும் மேலான நெருப்பை வளர்த்துவிட்டான். அஃதாவது, `அழித்தல் தொழிலை மேற்கொண்டான்` என்பதாம்.

குறிப்புரை :

`வானின்று உலகம் வழங்கி` வருதல்பற்றி காத்தற் சத்தியை, `மழை` என்றே கூறினார். நீரைப் பெண்ணாகக் கூறுதல் மரபாதல் அறிக. `நிற்ப` என்பது, ``நின்று`` எனத் திரிந்தது. மேகம், மலைமேல் தங்கியே மழை பொழிதல் வெளிப்படை. ``அண்டம்`` என்பது, `உலகம்` என்னும் அளவாய் நின்றது. திரை, ஆகுபெயர். பதம் - உணவு. செய்தல் - உண்டாக்குதல். `செய்ய` என்பது நிகழ்காலத்தின்கண் வந்தது. புறம் - இடம். `உலக நெருப்பன்று; தனது அழித்தற் சத்தியே` என்றற்கு, ``ஓம் என்ற ..... அங்கி`` என்றார்.
இதனால், `நிலைத் தொழில் அதன் கால எல்லையில் முற்றுப் பெறும்` என்பது கூறி, ஒடுக்கம் நிகழ்தல் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

நித்தசங் காரம் உறக்கத்து நீள்மூடம்
வைத்தசங் காரமுஞ் சாக்கிரா தீதமாம்
சுத்தசங் காரந் தொழிலற்ற கேவலம்
உய்த்தசங் காரம் பரன்அருள் உண்மையே.

பொழிப்புரை :

மூவகைச் சங்காரத்துள் நித்திய சங்காரமாவது அன்றாடம் கீழாலவத்தையில் அறிவிழந்திருத்தல். பிறவி எடுத்த எல்லா உயிர்கட்கும் பொதுவாக வைக்கப்பட்ட ஆயுட் சங்காரமாவது விழித்தல் இல்லாத உறக்கமாகிய இறப்பாகும். சருவ சங்காரமாவது ஆன்மா செயலற்று ஆணவத்திலே அழுந்திச் சடம்போலக் கிடத்தல். அதனால், உயிரை நீங்கா இன்பத்தில் செலுத்துதலாகிய திருவருட் சங்காரமாகிய அருளலே இறைவனது உண்மை நிலையைப் பெறுதலாகும்.

குறிப்புரை :

மீளச் சாக்கிரம் எய்தாத நிலையை, ``சாக்கிராதீதம்`` என்றார். எனவே, இது விழியா உறக்கமாயிற்று. ``சுத்தம்`` என்றது, ஒன்றும் இன்மையைக் குறித்தது.

பண் :

பாடல் எண் : 6

நித்தசங் காரம் இரண்டுடல் நீவுதல்
வைத்தசங் காரமும் மாயாசங் காரமாம்
சுத்தசங் காரம் மனாதீதந் தோய்வுறல்
உய்த்தசங் காரஞ் சிவன்அருள் உண்மையே. 

பொழிப்புரை :

இன்னும் வேறொருவகையாற் கூறுமிடத்து, `நித்திய சங்காரம், தூலம், சூக்குமம்` என்னும் இரண்டு உடம்புகள் உள்ளபொழுதும் அவற்றோடு ஒட்டாது நீங்கி நிற்றல்` எனவும், `ஆயுட் சங்காரம் தூல உடம்பு அழிந்தொழிதல்` எனவும், `சருவ சங்காரம் சூக்கும உடல் நீங்குதல்` எனவும் கூறுதற்குரியன. எனவே, திருவருட் சங்காரமாகிய அருளலே சிவப்பேறாகும்.

குறிப்புரை :

இரண்டுடலும் உள்ளபொழுதே ஒட்டாதிருத்தல் உறக்கத்திலாம். `சூக்கும சரீரம் முத்தி பெறுங்காறும் நீங்காது நிற்கும்` எனக் கூறுதல், ஆயுட் சங்காரத்தை நோக்கியாம். ``மாயா சங்காரம்`` என்றதில், ``மாயை`` என்றது பிரகிருதியை. சகல வருக்கத்தினருக்குப் பிரகிருதியளவு சங்கரித்தலே சருவ சங்காரமாதல் பற்றி ``சுத்த சங்காரம் மனாதீதம் தோய்வுறல்`` என்றார். ``மனம்`` என்றது பிற அந்தக் கரணங்கட்கும் உபலக்கணம். நீவுதல் - துடைத்தல்.

பண் :

பாடல் எண் : 7

நித்தசங் காரங் கருவிடர் நீக்கினால்
ஒத்தசங் காரம் உடலுயிர் நீவுதல்
சுத்தசங் காரம் அதீதத்துள் தோய்வுறல்
உய்த்தசங் காரம் பரனருள் உண்மையே.

பொழிப்புரை :

இனி, நித்திய சங்காரம் தூல உடம்பொடு நிற்கும் பொழுதே அதனொடு கூடாதிருக்கச் செய்வதென்றால், ஆயுட் சங்காரம் அதனை அடியோடு விடச் செய்வதாகும். சருவ சங்காரம் சூக்கும உடம்பையும் விடப்பண்ணுவது. ஆகவே, திருவருட் சங்கார மாகிய அருளலே சிவனை அடைதல் என்பது கடைப்பிடித்து உணரத்தக்கது.

குறிப்புரை :

``கரு`` என்றது, கருவாய்த் தோன்றி வளரும் தூல உடலை அதன் இடர் நீங்குதல் - அதனால் வரும் அனுபவம் இன்மை. ``நீக்கினால்`` என்னும் எச்சம் தெளிவின் கண் வந்து, பின் வருவதும் அத்தன்மையது என்பதனைத் தெரிதற்கு ஏதுவாய் நின்றது. ``நீரின்றமையா துலகெனின்`` (குறள் - 20) என்றாற்போல.

பண் :

பாடல் எண் : 8

நித்தசங் காரமும் நீடிளைப் பாற்றலின்
வைத்தசங் காரமும் மன்னும் அனாதியில்
சுத்தசங் காரமுந் தோயாப் பரன்அருள்
உய்த்தசங் காரமுன் நாலாம் உதிக்கிலே.

பொழிப்புரை :

நித்திய சங்காரம், அன்று உழைத்த உழைப்பினால் உண்டாகிய இளைப்பினை ஆற்றக் காண்டலால், ஆயுட் சங்காரமும் அப்பிறப்பில் உண்டான இளைப்பை ஆற்றுதற்பொருட்டு என்றும் உளதாய்நிற்கும். `சருவ சங்காரத்தில் எல்லாக் கருவிகளும் முற்ற அழிந் தொழிவதால், அதுவே சிவப்பேறு போலும்` எனின், அன்று; திருவருட் சங்காரம் உண்டாய வழியே `பிறத்தல், வாழ்தல், இறத்தல்` என்னும் மூன்றும் அற்ற நான்காம் நிலையாகி `வீடுபேறு` எனப்படும் சிவப்பேறாம்.

குறிப்புரை :

தோயா அருள் - அருள் தோயாதது. `உய்த்த சங்காரம் முன் உதிக்கில் நால் ஆம்` எனக் கூட்டுக. நான்கு, `நால்` என நின்றது. இவை நான்கு திருமந்திரங்களாலும், `இலயங்கள் (சங்காரங்கள்) மூன்று (தி.10 பா. 417) இவை` என்பதும் அவற்றின் இயல்புகளும் பலவாற்றால் விளங்கக் கூறி, சங்காரத்தையே வீடுபேறு என மலைவார்க்கு அங்ஙனம் மலையாமைப்பொருட்டு அதனையும் ஒரு சங்காரமாக வைத்து அதன் இயல்பு உணர்த்தப்பட்டது.தத்துவம் முப்பத்தாறனுள் மா பூதம் - 5, ஞானேந்திரியம் - 5, கன்மேந்திரியம் - 5 ஆகப் பதினைந்தும் தூல சரீரம். `அன்னமய கோசம்` என்பதும் இதுவே. தன்மாத்திரை - 5, சித்தம் ஒழிந்த அந்தக் கரணம் - 3 ஆக எட்டும் சூக்கும சரீரம். `பிராணமய கோசம்` என்பதும் இதுவே. எட்டுத் தத்துவம் கூடியதாதல் பற்றி இதனை `புரியட்டச் சரீரம்` எனவும் கூறுவர். இந்த 23 - க்கு மேல் 24 ஆவதாகிய குண தத்துவமே குண சரீரம். `மனோமய கோசம்` என்பதும் இதுவே. `குண தத்துவமே சித்தம்` என்பது மேலே ((தி.10 382ஆம் பாடலின் குறிப்புரை) சொல்லப்பட்டது. குண தத்துவத்திற்குமேல் உள்ள `புருடன்` என்பது ஒரு தனித் தத்துவம் அன்று. காலம், நியதி, கலை, வித்தை, அராகம் - ஐந்தும் கூடியது கஞ்சுக சரீரம். விஞ்ஞானமய கோசம் என்பதும் இதுவே. `மாயை` என்னும் தத்துவமே காரண சரீரம். `ஆனந்தமய கோசம்` என்பதும் இதுவே. சிவ தத்துவங்கள் `நம்மனோர்க்கு உடம்பாய் வந்து பொருந்துதல் இல்லை` என்பது மேலே கூறப்பட்டது. (தி.10 பா. 379)

பண் :

பாடல் எண் : 9

பாழே முதலா எழும்பயிர் அப்பயிர்
பாழாய் அடங்கினும் பண்டைப்பாழ் பாழாகா
வாழாச்சங் காரத்தின் மாலயன் செய்தியாம்
பாழாம் பயிராய் அடங்கும்அப் பாழிலே. 

பொழிப்புரை :

மாயை வித்தாக, அதனினின்றும் முளைக்கின்ற பயிராய் உலகம் தோன்றும். பின்பு அப்பயிராகிய உலகம் வித்தாகிய அம்மாயையினிடத்தே ஒடுங்குவதாம். அவ்வாறு ஒடுங்கினும், என்றும் உளதாகிய மாயை ஒன்றிலும் ஒடுங்குதல் இல்லை. உலகம் மாயையின் ஒடுங்குதலாகிய சருவ சங்காரமின்றிப் பிரகிருதிகாறும் அழிவதாகிய அந்தச் சங்காரகாலத்திற்கு உட்பட்டே மால் அயன் செய்திகளாகிய காத்தல் படைத்தல்கள் நிகழும். ஆகவே, தத்தம் கால எல்லையில் மடிந்து போகின்ற பயிர்போல, உலகம் முழுவதும் ஒடுங்குவது மாயையிலல்லது பிரகிருதியில் அன்று.

குறிப்புரை :

``பாழ்`` என்பது முதற் காரணம் தனது காரியத்தைத் தோற்றுவியாத நிலை. இது பற்றியே பிரகிருதியையும் `பாழ்` என்ப (பரிபாடல் ... ... ``பாழெனக் காலெனப் பாகெனத் தொண்டென``) . இவ்வாறன்றி முதல்வனைப் `பாழ்` என்றல் பொருந்தாமை அறிக. உலகம் மாயையின் ஒடுங்காது பிரகிருதியின் ஒடுங்கிய பொழுது பரசரீரம் உளதாயினும் போகம் நிகழாதாகலின், அதனை, `வாழாச் சங்காரம்` என்றார். இச்சங்காரம் குணிருத்திரனால் செய்யப் படுவதாதல் அறிக. (சிவஞான மாபாடியம் - முதற் சூத்திரக் கருத்துரை விளக்கம்) குண சரீரம், கஞ்சுக சரீரம், காரண சரீரம் இம் மூன்றன் தொகுதியே பர சரீரம் அல்லது அதி சூக்கும சரீரம். ``பயிராய்`` என்பதில் ஆக்கம் உவமை குறித்து நின்றது.
இதனால், `அசுத்தமும், சுத்தமும் ஆய மாயைகளில் அவ்வவ் வுலகம் ஒடுங்குவதே சருவ சங்காரம்` என்பதும், அவற்றிற்குக் கீழ்நடைபெறுவன எல்லாம் அவாந்தர (இடைநிகழ்) சங்காரம் என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 10

தீயவைத் தார்மின்கள் சேரும் வினைதனை
மாயவைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டு
காயம்வைத் தான்கலந் தெங்கும் நினைப்பதோர்
ஆயம்வைத் தாய்உணர் வாரவைத் தானே. 

பொழிப்புரை :

நிலையில்லாததாகிய உலகத்தை உண்டாக்கி நிறுத்திய சிவன், அதனையே உயிர்களுக்கு என்றும் வாழிடமாக வையாது அழிய வைத்து, அழிவின்றி வைத்த வாழிடம் ஒன்று உள்ளது. அதனை அறிந்து அடைதற் பொருட்டே உடம்பையும், பல உட்கருவிகளையும், நூல்களையும் தந்தருளினான். அவற்றைக் கொண்டு, தற்போதத்தால் ஈண்டும் வினைகளை ஈண்டாதபடி அழித்து, அந்த வாழிடத்தை அடைந்து இன்பத்தை நுகர்மின்கள்.

குறிப்புரை :

இரண்டாம் அடி முதலாகத் தொடங்கி, `சேரும் வினைகளைத் தீய வைத்து ஆர்மின்கள்` என மாற்றி முடிக்க. வன்மை - அழிவின்றி நிலைபெறுதல். பரமுத்தி நிலையை இவ்வாறு உருவகம் செய்தார் என்க. திருவள்ளுவர் ``புக்கில்`` என்றது காண்க. `ஒன்று உண்டு` என்ற குறிப்பால், பின் வருவன அதனை அடைதற் பொருட்டுக் கொடுக்கப்பட்டனவாதல் போந்தது. காயம், இடத்தால் வரையறை உடைய தூல சரீரம். ``எங்கும் கலந்து நினைப்பது`` என்றதனால், `அஃது அவ்வரையறையைக் கடந்த சூக்கும சரீரம் பர சரீரங்களைச் சுட்டிற்று` என்பதும், ``ஆயம்`` என்றதனால், `அவைதாம் தன்மாத்திரை அந்தக் கரணங்களும் வித்தியா தத்துவங்களும் ஆகியவற்றது தொகுதிகள்` என்பதும் போந்தன. ஆய் உணர்வு ஆர - ஆராய்ச்சி அறிவு நிரம்புதற்கு; என்றதனால் அதன்பொருட்டு வைக்கப்பட்டவை நூல்கள் என்பது இனிது விளங்கிற்று. இதனானே, அந்நூல் நுதலிய பொருளை ஒருசொல்லானும், நூற்பொருளைப் பல சொல்லானும் அறிவுறுத்தும் அருளாசிரியர்களை வைத்தமையும் பெறப்படும். ``நினைப்பது`` எனக் கருவி வினைமுதல் போலக் கூறப்பட்டது. இவ்வொருமை ஆயத்தின் மேல் நிற்றல் அறிக.
இதனால், `மேற்பல இடத்தும், `உய்த்த சங்காரம்` எனப்பட்ட திருவருட் சங்காரத்தையே பயனாக உடையன பிற சங்காரங்கள்` என அதன் சிறப்பு உணர்த்தப்பட்டது. இங்ஙனம் அருளலையும் சங்கார மாக வைத்துக் காட்டியது, இறைவன் செய்யும் தொழில் ஐந்து என்னாது மூன்று எனக் கூறும் வழியும் மறைத்தல் காத்தலுள்ளும், அருளல் அழித்தலுள்ளும் அடங்கி நிற்கும் என்பது உணர்த்துதற்கு என்க.
சிற்பி