இரண்டாம் தந்திரம் - 15. மூவகைச் சீவ வர்க்கம்


பண் :

பாடல் எண் : 1

விஞ்ஞானர் நால்வரும் மெய்ப்பிரள யாகலத்
தஞ்ஞானர் மூவரும் தாங்கு சகலத்தின்
அஞ்ஞானர் மூவரு மாகும் பதின்மராம்
விஞ்ஞான ராதியர் வேற்றுமை தானே. 

பொழிப்புரை :

எல்லா உயிர்களும் `விஞ்ஞானகலர், பிரளயா கலர், சகலர் என்னும் மூவகையுள் அடங்கி நிற்கும். அம்மூவகையினருள் விஞ்ஞானகலர் நான்கு வகையினர்; பிரளயாகலரும், சகலரும் தனித்தனி மும்மூன்று வகையினர்; ஆக அனைவரும் பத்து வகையினராவர்.

குறிப்புரை :

விஞ்ஞானம் - விசேட ஞானம்; மெய்யுணர்வு. `விஞ்ஞானாகலர்` என்பது `விஞ்ஞானகலர்` என மருவி வழங்கும். அகலர் - கலை நீங்கினவர் கலை - மாயாகாரியம் என்றல் முக்குண வடிவாகிய பிரகிருதியை. விஞ்ஞானத்தால் கலை நீங்கியவர் விஞ்ஞானாகலர். விஞ்ஞானமாவது, சிவனால் உணர்த்தப்படும் விசேட ஞானம். இது வருதற்கு ஆணவமலத்தின் சத்தி மெலிதாதல் வேண்டும். அஃது இயல்பாகவே அமையப் பெற்றோர், இயற்கை விஞ்ஞானகலர்; இயற்கையாகவன்றித் தவத்தால் இந்நிலை வாய்க்கப்பெற்றுச் சிவனால் உணர்த்தப்படும் ஞானத்தைப்பெற்றுக் கலை நீங்கினோரும் மேற்கூறியவரோடு ஒப்பர் ஆதலின், அவர் செயற்கை விஞ்ஞானகலராவர்.
பிரளயாகலர் - பிரளயத்தில் (உலகம், யாவும் ஒடுங்கிய காலத்தில்) கலை நீங்கப் பெற்றவர். எனவே, `இவர் உலகம் ஒடுங்கிய காலத்தில் ஆணவ மலத்தின் சத்தி மெலிவடையப் பெற்றவர்` என்பது விளங்கும். இவர் இயற்கைப் பிரளயாகலர்; உலக ஒடுக்கத்திற்கு முன் இந்நிலையைப் பெற்றோர் செயற்கைப் பிரளயாகலர்.
சகலர் - பாசப்பற்று நீங்காதவர்; அஃதாவது ஆணவமல சத்தி வலிதாகப் பற்றப்பட்டவர். இவ்வன்மை மென்மைகளை, `தூலதரம், தூலம், சூக்குமம்` எனப் பகுப்பர். ஆணவமலப் பிணிப்புத் தூல தரமாக (மிகவன்மையாக) உடையவர் சகலர்; தூலமாக (சிறிது வன்மையாக) உடையவர் பிரளயாகலர். சூக்குமமாக (மென்மையாக) உடையவர் விஞ்ஞானகலர். இவருள், `நால்வர்` மூவர், மூவர்` எனப்பட்டோர் இவர் என்பது வருகின்ற திருமந்திரத்தால் விளங்கும்.
தம் ஞானம் - பசுஞானம். அஞ்ஞானம் - பாசஞானம் ஒரு புடை ஒற்றுமைகொண்டு சகலர் பிரளயாகலர் விஞ்ஞானகலரது ஞானத்தைப் பாசஞான பசுஞான பதிஞானங்களாக ஒதினார் என்க. ``விஞ்ஞானராதியர் வேற்றுமை`` என்றது `அனைவரது வகையும்` என்றவாறு.
இதனால், `உயிர்கள் மூவகைப்படும்` என்பதும், `அவற்றின் உள்திறங்கள் பத்தாம்` என்பதும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

விஞ்ஞானர் கேவலத் தாராது விட்டவர்
தஞ்ஞானர் அட்டவித் தேசுரம் சார்ந்துளோர்
எஞ்ஞானர் ஏழ்கோடி மந்திர நாயகர்
மெய்ஞ்ஞானர் ஆணவம் விட்டுநின் றாரே. 

பொழிப்புரை :

மேற்கூறியோருள் விஞ்ஞானகலர் நால்வராவார், `ஆணவமலத்தில் அழுந்தாத அவ்வளவில் நிற்போரும், அட்ட வித்தியேசுரபதவி, சத்தகோடி மகாமந்திரங் கட்குத் தலைவராம் பதவி இவற்றைப் பெற்றோரும், ஞானம் முதிரப் பெற்றோரும், அம்முதிர்ச்சியால் ஆணவமலம் பெரிதும் நீங்கப்பெற்ற முத்தரும்` என இவராவர்.

குறிப்புரை :

மூவகை உயிர் வருக்கத்திலுள்ளாரும் `அபக்குவர், பக்குவர்` என இருதிறத்தினராய் இருப்பர். அபக்குவர், `சிவனைப் பெறவேண்டும் என்னும் ஆர்வம் இன்றித் தாம் உள்ள உலகத்துப்` போகங்களை நுகர்ந்திருப்போர். பக்குவர், சிவனைப்பெறவேண்டும் என்னும் ஆர்வத்தால் அவனை அடைந்திருப்பவர். ஆர்வம் உளதாய வழி அடைதற்கு இடையீடில்லை. இந்த ஆர்வம் சத்திநிபாதத்தால் உண்டாவதாகும். இவருள், ``கேவலத்து ஆராது விட்டவர்`` என்றது அபக்குவரை. கேவலமாவது ஆணவ மலத்தில் மூழ்கி அதுவேயாய்க் கிடத்தல், எனவே, இதுவே, `விஞ்ஞானகலர்` என்பவரது இயல்பாதல் பெறப்பட்டது. அவர் பக்குவம் எய்தியவழி ஞானத்தைப் பெற்று மூவகை நிலையில் நிற்பர். அஃதாவது, ஆணவ மலம் நீங்கிய தாயினும் அதன் வாசனை, `இலயம், போகம், அதிகாரம்` என்னும் மூன்று நிலையினதாய் நீங்காது நிற்கும். இவை ஓன்றின் ஒன்றுமிக்க வன்மையுடையன; அவற்றுள் இலயமல வாசனை உடையவரையே, ``ஆணவம் விட்டு நின்றார்`` என்றார். ``விட்டு`` என்றதனால் மலம் நீங்கப் பெற்றமையும், ``நின்றார்`` என்றதனால், இலய வாசனை யளவாய் நிற்கப்பெற்றமையும் பெறப்பட்டன. இவர் சாந்திய தீத கலையில் சத்தி சிவ தத்துவ புவனங்களில் உள்ள போகங்களை நுகர்ந்திருப்பர். `அபரமுத்தர்` எனப்படுவார் இவரே என்க. ஆணவம் விட்டபின் இவர்போல நில்லாது, சிவனோடு இரண்டறக் கலந்து சிவனது பேரின்பத்தையே நுகர்ந்திருப்பவர் பரமுத்தராவர். அவரை உயிர் வருக்கத்தினருள் வைத்து எண்ணுதல் கூடாமையின், அவரைக் குறித்திலர்.
இனிப் போகமல வாசனை உடையவரையே `ஆணவம் விட்டார்` என்னாது ``மெய்ஞ்ஞானர்`` என்று மட்டும் குறித்தார். இவர் சாந்தி கலையில் சதாசிவ தத்துவத்தில் உள்ள புவனங்களில் அமைந்த போகங்களை நுகர்ந்திருப்பர். ஆகமங்களைக் கேட்டவராகச் சொல்லப்படும் `பிரணவர்` முதலிய பதின்மரும் இந் நிலையினராகவே சொல்லப்படுகின்றனர். உயிர் வருக்கத்தினராய்ச் சதாசிவ புவனத்துள் சாலோகம் முதலிய நிலைகளைப் பெற்று நிற்றலின் இவர்கள், `அணு சதாசிவர்` எனப்படுகின்றனர்.
அட்ட வித்தியேசுரராவார், அனந்தர், `சூட்சுமர், சிவோத்தமர் ஏகநேத்திரர், ஏகருத்திரர், திரிமூர்த்தி, சீகண்டர்` சிகண்டி என்போர். இவர்கள் சிவாகமங்களைப் பலர்க்கும் உணர்த்துபவராதலின் `வித்தியேசுரர்` எனப் பெயர் பெற்றனர்.
சத்த கோடி மகா மந்திரங்கள், `நம:, ஸ்வாஹா, ஸ்வதா, வஷட், வௌஷட், பட், ஹும் பட்` என்னும் ஏழுமுடிபுகளை உடையன. கோடி - முடிபு. இம் மந்திரங்களைக் கணிப்போருக்கு அவற்றின் பயனைத் தரும் தலைவராய் உள்ளோரே `மந்திர மகேசுரர்` எனப்படுவர். இவ்விருதிறத்தாரும் இப்பதவிகளைப் பெற்றுச் சாந்தி கலையில் ஈசுர தத்துவ புவனங்களில் வாழ்பவராவர். அதனால், இவ்விருவரும் ஒருவகையினரே என்க.
இவருள், அனந்த தேவர் சுத்த வித்தியா தத்துவத்திலும் சென்று அங்குள்ள பிரமனுக்கு வேதத்தையும், சீகண்டவுருத்திரருக்குச் சிவாகமத்தையும் அறிவுறுத்தி அங்குள்ள உருத்திரன், மால், அயன், இந்திரன் முதலியோர் வழியாக வித்தியா கலையுட்பட்ட புவனங் களையும், சீகண்ட உருத்திரர் வாயிலாகப் பிரதிட்டை நிவிர்த்தி கலைகளுட்பட்ட புவனங்களையும் நடத்துவர். இங்ஙனம், விஞ்ஞான கலர் நால்வரது இயல்பு ஒருவாறு கண்டுகொள்க.
எஞ்ஞானர் - எல்லா ஞானமும் உடையோர்; என்றது, `மந்திரம் கணிப்போர் அனைவரது செயலையும் உணர்வர்` என்றபடி. ``விஞ்ஞானர்`` என்றது, `விஞ்ஞான வகையினராவர்` என்றவாறு. இறுதியில் `இந்நால்வருமே` என்னும் தொகை எஞ்சி நின்றது. வித்தியேசுரர்களும் மந்திர மகேசுரர்களும் ஒருவகையினரேயாதல் வெளிப்படை.
இதனால், மேல், ``விஞ்ஞானர் நால்வர்`` எனப்பட்டார் இவர் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

இரண்டா வதில்முத்தி எய்துவர் அத்தனை
இரண்டாவ துள்ளே இருமல பெத்தர்
இரண்டாகு நூற்றெட் டுருத்திரர் என்பர்
முரண்சேர் சகலத்தர் மும்மலத் தாரே. 

பொழிப்புரை :

இனிப் பிரளயாகலர் மூவராவார், `அபக்குவரும், பக்குவரும்` என இருதிறப்படும் நிலையில் பக்குவர், `சுத்தவித்தையில் நின்று அசுத்த மாயா புவனங்களைக் காவல் செய்பவரும், குண தத்துவத்தில் நின்று பிரகிருதி மாயா புவனங்களைக் காவல் செய்பவரும், எனத் தனித்தனி நூற்றெண்மராம் உருத்திரர்களாவர். எனவே, இவ்விருவரோடு, பெத்தராகிய அபக்குவரும் கூடப் பிரளயாகலர் மூவராகின்றனர். இனிச் சகலராவார் ` ஆணவம், கன்மம், மாயை` என்னும் மும் மலமும் உடையவரே.

குறிப்புரை :

``இரண்டாவதில் முத்தி எய்துவார்`` என்றது, `அடுத்த படைப்பில் முத்தி எய்துபவர்` என்றவாறு. எனவே, இது `பிரளயாகலர்` என்னும் பொருளதாயிற்று. எய்துவார்`` என்றது பெயர். அத்தனை - அத்துணையர், அஃதாவது `இரண்டாவது` என்பதில் அமைந்த `இரண்டு` என்னும் துணையினர். `அத்தனை யராவர் பெத்தரும், உருத்திரரும் என்பர்` என முடிக்க. மீள ``இரண்டாவதுள்ளே`` என்றது, பிரளயாகலர் என்னும் வகையுள்` என்றவாறு. ``உருத்திரர்`` என்பதன்பின் `உளர்` என்னும் பயனிலை எஞ்சி நின்றது. முரண் - (ஆணவமலத்தின்) வலிமை. மேல் ``ஆணவம் விட்டு நின்றார்`` என்றதனால் `விஞ்ஞானகலர் ஆணவம் ஒன்றே உடையார்` என்பதும், `கலை, என்பது மாயையைக் குறிப்பதாகலின், `அகலராகிய பிரளயாகலர்க்கு அஃது இல்லை` என்பதும் போந்தன. ``பெத்தர்`` என்று ஒழியாது, `இருமல பெத்தர்` என்றது, அவரது இயல்பை விதந்தவாறு. ``நூற்றெட்டு`` என்னும் தொகைச் சொல் ஒரு சொல் தன்மைப்பட்டு நிற்க, ``இரண்டாகும்`` என்றது, அத்தொகை முழுவதையும் விசேடித்தது. `சகலராவார் இவர்` என்பதனையும் ஈற்றடியால் ஈண்டே கூறினார்.
இதனால், `பிரளயாகலர் மூவர் இவர்` என்பது கூறப்பட்டது. பன்மை பற்றி இவரையே எடுத்தோதி, சுத்தவித்தையில் நிற்கும் உருத்திரன், மால், அயன், இந்திரன், சீகண்ட உருத்திரர், நந்தி, கணங்கள் என்பவரையும் உபலக்கணத்தால் தழுவிக்கொள்ள வைத்தார் என்க. `பிரளயாகலர் மூவரும் தவத்தால் விஞ்ஞான கலரோடொத்து அவரது நிலைகளில் நிற்றல் உண்டு` என்பதுமேலே குறிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

பெத்தத்த சித்தொடு பேண்முத்தச் சித்தது
ஒத்திட் டிரண்டிடை யூடுற்றார் சித்துமாய்
மத்தத்து மும்மலம் வாட்டுகை மாட்டாதார்
சத்தத் தமிழ்ந்து சகலத்து ளாரே. 

பொழிப்புரை :

சகலரும், `அபக்குவர், பக்குவர்` என இருதிறப் பட்ட நிலையில் பக்குவர், `சாதகரும், சீவன்முத்தரும்` என இரு வகையினர் ஆவர்.

குறிப்புரை :

எனவே, `அபக்குபவர்`, சாதகர், சீவன் முத்தர்` எனச் சகலரும் மூவராகின்றனர்.
பெத்தத்த சித்து, ஆன்மா. முத்தச் சித்து, சிவம். இவ் விரண்டும் ஒருமைப்பட இரண்டிலும் நிற்பவரே, `சீவன்முத்தர்` எனப்படுவர். சித்துமாய் (சிவமாயும்) மலமயக்கத்தை முற்றக் கழிக்கமாட்டாமல் அதனைக் கழித்தற்பொருட்டு முயல்பவரே `சாதகர்` எனப்படுவர். `சித்தாயும்` என உம்மையை மாற்றியுரைக்க. சத்தம் - உலக ஆரவாரம்.
ஈற்றடியினால் சகலருள் அபக்குவரது தன்மையை விளக்கினார். எனவே, அந்நிலையை உடையார் அபக்குவர் என்பது போந்தது. ஊடு, எழனுருபு. மத்தம் - மயக்கம். `சகலத் துளார் ஊடுற்றாரும், மாட்டாரும் ஆவர் என முடிக்க. `ஆவர்` என்பது சொல்லெச்சம்.
இதனால், `சகலர் மூவராவர் இவர்` என்பது கூறப்பட்டது. இவருள்ளும் தவத்தால் பிரளயாகலரோடு ஒப்பவும், விஞ்ஞான கலரோடு ஒப்பவும் அவ்வப்புவனங்களிற் செல்வார் உளர் என்பது மேலே குறிக்கப்பட்டது.
[இதன்பின், பதிப்புக்களில் காணப்படும் மந்திரம் இவ்வதிகாரத்தின் இறுதியதாம்.]

பண் :

பாடல் எண் : 5

விஞ்ஞானர் ஆணவ கேவல மேவுவோர்
தஞ்ஞானர் மாயையில் தங்கும் இருமலர்
அஞ்ஞானர் அச்சக லத்தர் அகலராம்
விஞ்ஞான ராதிகள் ஒன்பான்வே றுயிர்களே. 

பொழிப்புரை :

இயற்கையில் அகலராய் நில்லாது, தவமாகிய செயற்கையால் அகலராய் நிற்பார் ஒன்பது வகைப்படுவர். அவரும், `விஞ்ஞானகலர், பிரளயாகலர்` என்னும் பெயரைப் பெறுவர். அவ்வொன்பதின்மராவர், விஞ்ஞானகலருள் அபக்குவர் ஒழிந்த நால்வரும், பிரளயாகலருள் அபக்குவர் ஒழிந்த, `உருத்திரர், மால், அயன், இந்திரன், பிறகடவுளர்` என்னும் ஐவருமாவர்.

குறிப்புரை :

இங்கு, `வித்தியேசுரர், மகேசுரர்` இருவரையும் வெறெண்ணியும், உருத்திரராவர் அனைவரையும் ஒன்றாக வைத்து ஏனையோரை உடன்வைத்து எண்ணியும் தொகை கூறினார், `சகலரும் இவ்வாறெல்லாம் ஆவர்` என்பது உணர்த்துதற்கு.
மூன்றாம் அடிமுதலாகத் தொடங்கி, `சகலத்தர் அகலராம் ஒன்பானான வேறுயிர்களாவார்` என்று எடுத்துக்கொண்டு, கேவலம் மேவுவோரும், தங்கும் இருமலரும் ஆவர்` என முடிக்க. `விஞ்ஞானராகிய மேவுவோரும்` எனவும், `தஞ்ஞானராகிய இருமலரும்` எனவும் இயையும். `இருமலரும்` என்பதன் பின் `ஆவர்` என்பது எஞ்சிநின்றது. ``வேறுயிர்கள்`` என்றது, `இயற்கையாலன்றிச் செயற்கையால் உயரும் உயிர்கள்`` என்றதாம். சகலரை இவ்வாறு கூறவே, பிரளயாகலரும் விஞ்ஞானகலராதல் சொல்லாமே அமைந்தது.
இதனால், விஞ்ஞானாகலர், பிரளயாகலர்` என்னும் வகையைச் செயற்கையால் பெறுவோரும் உளர்` என்பது கூறப்பட்டது.
`கேவலம்` என்பது, இங்கு `ஒன்று என்னும் பொருள்பட நின்றது. இத்திருமந்திரத்தைப் பாடம் பலபட ஒதுவாரும், `விஞ்ஞானகலர் முதலிய ஒவ்வொரு வகையினருள்ளும் அங்ஙனமே விஞ்ஞானகலர் முதலிய மூவர் உட்பிரிவினராக உளர்` என இயற்கை நிலையினரே வேறோராற்றால் ஒன்பது வகையினராவர் என்பது இதற்குப் பொருளாக உரைப்பாருமாவர். அவ்வுரையால் சிறப்பு ஒன்றும் இல்லாமை அறிக.

பண் :

பாடல் எண் : 6

வெஞ்ஞான கன்மத்தால் மெய்யகங் கூடியே
தஞ்ஞான கன்மத்தி னால்சுவர் யோனிபுக்
கெஞ்ஞான மெய்தீண்டி யேயிடை யிட்டுப்போய்.
மெய்ஞ்ஞான ராகிச் சிவமேவல் உண்மையே. 

பொழிப்புரை :

சகல வருக்கத்தினர் வெவ்விய ஞானமாகிய சீவ போதத்தால் செய்துகொண்ட வினைகளில் சில நல்வினை காரணமாக மக்களுடம்பைப் பெற்றுப் பூலோகத்தில் வாழ்ந்து, அங்கும் அந்தச் சீவபோதத்தால் செய்த கன்மங்களில் சில நல்வினை காரணமாகச் சுவர்க்கலோகத்தில் தேவராய் இன்பந்துய்த்துப் பின் எம் ஞானம் போல்வதாகிய மெய்ஞ்ஞானத்தைத் தலைப்பட்டு, அது முதி ராமையால் இடையீடுபட்டுப் பதமுத்தி அபரமுத்திகளில் நின்று, முடிவில் மெய்ஞ்ஞானம் முதிரப்பெற்றுச் சிவத்தோடு இரண்டறக் கலத்தல் உள்ளதே.

குறிப்புரை :

`அதனால் அவர் பிரளயாகலர் விஞ்ஞானகலராதற்குத் தடையில்லை` என்பது குறிப்பெச்சம். இதனானே, சகல வருக்கத்தினர் மேல் நிலையை எய்துமாறு கூறப்பட்டவாறு அறிக. சகலர்க்குக் கூறிய இம்முறைபற்றி ஏனை இருவகையினர் மேல் நிலை எய்துமாறும் அறியப்படும்.
`கூடி, புக்கு, போய், மேவல்` என்பதற்கு, `சகலத்தார்` என்னும் எழுவாய், மேலைத் திருமந்திரத்தினின்றும் வந்து இயைந்தது. `விஞ்ஞான, அஞ்ஞான` என்பன பாடம் அல்ல.
இதனால், ஏதுக் கூறி மேலது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

ஆணவந் துற்ற அவித்தா நனவற்றோர்
காணிய விந்துவாம் நாத சகலாதி
ஆணவ மாதி யடைந்தோர்க்க வரன்றே
சேணுயர் சத்தி சிவதத்வ மாமே

பொழிப்புரை :

ஆணவத்தால் மிகுவிக்கப்பட்ட அறியாமையில் நிகழும் சாக்கிரம் முதலிய அவத்தைகளைக் கடந்தவர்க்கே, நாதம், விந்து முதலிய எல்லாத் தத்துவங்களும் தெளிவாய் விளங்கும். ஏனெனில், ஆணவமும், அதுவழியாகக் கன்ம மாயைகளும் ஆகிய அவற்றுட் கட்டுண்டு நின்றவர் பொருட்டன்றோ அவ் விந்து நாதம் முதலிய தத்துவங்கள் தோன்றுகின்றன!

குறிப்புரை :

துற்ற-செறிவித்த. `அவித்யா` என்னும் ஆரியச்சொல்; `அவித்தா` எனத் திரிந்தது. ``நனவு`, என்றது உபலக்கணம். அஞ்ஞானத்தில் நிகழும் சாக்கிரம் முதலிய ஐந்தவத்தைகள், கேவல சாக்கிராதியும், சகல சாக்கிராதியுமாம். அவற்றை நீங்கினோர் சுத்த சாக்கிரம் முதலியவற்றை எய்துவர். அவர்கட்கே தத்துவங்கள் பலவும், `உருவம் தரிசனம், சுத்தி` என்னும் முறையில் படிப்படியாக விளங்கும். அங்ஙனம் விளங்கவே மாயா காரியங்களாகிய அத்தத்துவங்களும், அவற்றைப் பற்றுக்கோடாகக் கொண்டு நிற்கும் கன்மங்களும் நீங்கும். இவற்றின் நீக்கத்திற்கு, மூலமலமாகிய ஆணவம் நீங்கியதே காரணமாகும். அதனால், ``ஆணவம் துற்ற ... ... சகலாதி`` என்றார்.
காணிய `செய்யிய` என்னும் வினையெச்சம். `காணிய ஆம் விந்து நாத சகலாதி` என மாற்றுக. சகலம் - எல்லாம். ``சகலாதி`` என்றதில் ஆதி, தத்துவம். இது தமிழ் வழக்காய்ப் பன்மை குறித்து நின்றது, ஈற்றடியையும் `சிவதத்துவம் சத்தியாம்` என மாறிக் கூட்டுக. `தத்வம்`, ஆரியமாயே நின்றது. `நாதம், விந்து முதலிய தத்துவங்களும் அவற்றின் காரியமாகிய தாத்துவிகங்களும் ஆணவமாதி அடைந் தோர் பொருட்டு` எனவே, ஆணவமாதி உள்ள துணையும் இவை இனிது காட்சிப்படா என்பது விளங்குதலின், ஆணவ முதலிய அகன்றோர்க்கு அவை காட்சிப்படுதல் அருத்தாபத்தியால் பெறப் படும் என்றவாறு. `அவர் அன்றே` என்பது பாடம் அன்று.
இதனால், `விஞ்ஞானகலரேயாயினும் மெய்ஞ்ஞானமின்றி வீடு அடையார்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

சிவமாகி ஐவகைத் திண்மலஞ் செற்றோர்
அவமாகாச் சித்தர்முத் தாந்தத்து வாழ்வார்
பவமான தீர்வோர் பசுபாசம் அற்றோர்
நவமான தத்துவம் நாடிக்கண் டோரே. 

பொழிப்புரை :

ஐவகை மலங்களையும் முற்றக் கெடுத்துச் சிவமானவரே முடிந்த பயனைப் பெற்ற வல்லுநர். அதனால், அவமே பரமுத்தியாகிய சிவசாயுச்சத்தைப் பெற்று என்றும் இன்புறுவர். இனி வியப்பைத் தருவனவாகிய தத்துவங்களின் இயல்பை ஆராய்ச்சியால் உணர்கின்றவர் பாசஞான பசுஞானங்களின் நீங்கினாராயினும், அதன் பின்னர் அவற்றைத் தெளிய உணருங்காலத்தே பதிஞானம் எய்தி வீடுபெறுவர்.

குறிப்புரை :

நாடிக் காணுதலே, `தத்துவ தரிசனம்` எனப்படும். தெளியக் காணுதலே தத்துவ சுத்தியாம். தத்துவ சுத்தி எய்தினோர் ஆன்மதரிசனமும் சிவரூபமும் உடன் நிகழப்பெற்றுப் பின் சிவதரிசன சிவயோகங்களால் ஆன்மசுத்தி எய்தப் பெறுவராகலின் ``பசுபாசம் அற்றோர்`` என்றாற்போல இறந்த காலத்தாற் கூறாது, ``பவமான தீர்வோர்`` என எதிர்காலத்தாற்கூறினார். `பசு பாசம்` என்பன, அந்த அந்த ஞானத்தைக் குறித்த ஆகுபெயர்கள். `நாடிக்கண்டோர் அற்றோர், தீர்வோர்` எனக் கூட்டுக.
இதனால், `ஞானம் பெறினும் அது முதிராதவழிப் பரமுத்தி கூடாது` என்பது கூறப்பட்டது. இவ்விரு திருமந்திரங்களும், `விஞ்ஞானகலராதலே வீடுபேறு போலும்` என மலையாமைப் பொருட்டு அருளிச்செய்யப்பட்டமையின், இவ்வதிகாரத்தவாயின.
சிற்பி