இரண்டாம் தந்திரம் - 18. தீர்த்த உண்மை


பண் :

பாடல் எண் : 1

உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
கள்ள மனமுடைக் கல்வியி லோரே.

பொழிப்புரை :

உள்ளத்திற்றானே நற்புண்பகளாகிய பல தீர்த்தங்கள் உள்ளன. வினை நீங்குமாறு அவற்றில் மூழ்குதலை மெல்லப் பயிலாத வஞ்ச மனம் உடைய அறிவிலிகள், புறத்தே பல தீர்த்தங்களைத் தேடிப் பள்ளமும், மேடும் கடந்து நடந்து இளைக்கின்றனர்.

குறிப்புரை :

கல்வி, அத்தீர்த்தத்தில் மூழ்கக் கற்றல்.
இதனால், அகத்தூய்மையின்றிப் புறத்தே தீர்த்தத்தில் மூழ்குதலால் பயனில்லை என்பது கூறப்பட்டது.
கங்கை யாடிலென்! காவிரி யாடிலென்!
கொங்கு தண்கும ரித்துறை யாடிலென்!
ஓங்கு மாகடல் ஓதநீ ராடிலென்!
எங்கும் ஈசன் எனாதவர்க் கில்லையே. -தி.5 ப.99 பா.2
கோடி தீர்த்தம் கலந்து குளித்தவை
ஆடி னாலும் அரனுக்கன் பில்லையேல்
ஓடு நீரினை ஓட்டைக் குடத்தட்டி
மூடி வைத்திட்ட மூர்க்கனோ டொக்குமே.
என அப்பரும் அருளிச்செய்தல் காண்க. -தி.5 ப.99 பா.9

பண் :

பாடல் எண் : 2

தளியறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்
குளியறி வாளர்க்குக் கூடவும் ஒண்ணான்
வளியறி வாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும்
தெளியறி வாளர்தஞ் சிந்தையு ளானே. 

பொழிப்புரை :

தெளிந்த ஞானிகளது உள்ளத்தில் வீற்றிருப் பவனாகிய சிவபெருமான், அன்பினால் கண்ணீர் துளிக்கத் தெரிந் தவர்க்குக் குளிர்ச்சி உடையனாய் விளங்குவான். யோக நெறியில் மூச்சை அடக்க அறிந்தவர்க்கும் அவன் ஒருகால் விளங்குதல் கூடும். ஆயினும், ஞானம், அன்பு, யோகம் என்ற இவற்றுள் ஒன்றும் இன்றித் தீர்த்தத்திலே மட்டும் சென்று முழுகத் தெரிந்தவர்க்கு அவன் அடைதற்கு அரியன்.

குறிப்புரை :

நான்கு, இரண்டாம் அடிகளை ஒன்று நான்காம் அடிகளாக வைத்து உரைக்க. தளி - நீர்த்துளி. ``தண்ணிது`` என்பது பண்புப்பெயராய் நின்றது. குளி - குளித்தல், முதனிலைத் தொழிற் பெயர். ``கூடவும்`` என்ற உம்மை, சிறப்பு. தியான சமாதிகளிற் செல்லாது இயம நியம பிராணாயாமங்களில் நிற்பவர்க்கு எளிதன்மை கூறுவார், ``வளியறி வாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும்`` என்றார்.
இதனால், ஞானமாகிய அன்பும் இல்லாதவர் தீர்த்ததில் சென்று முழுகின் பயன் இல்லை என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனை
கள்ளத்தின் ஆருங் கலந்தறி வாரில்லை
வெள்ளத்தை நாடி விடும்அவர் தீவினைப்
பள்ளத்தில் இட்டதோர் பத்தல்;உள் ளானே. 

பொழிப்புரை :

அகத்தே உயிர்க்குயிராக உணரப்படும் ஒருவ னாகிய சிவபெருமானை அவ்வுள்ளத்துள் அன்பில்லாது ஆரவார மாத்திரையாகச் செய்யும் செயல்களால் ஒருவரும் அடைதல் இயலாது. ஆகவே, அன்புமிகும் வழியை நாடாமலே புறத்தில் தீர்த்தங்கள் பலவற்றை நாடிச்செல்பவர், தீவினையாகிய கிணற்றில் போகடப்பட்ட பத்தலேயாவர். அதனால், அவருள்ளத்தில் அவன் விளங்குவனோ!

குறிப்புரை :

``நாடிவிடும்`` என்பது ஒருசொல். `பத்தலாவர்` எனவும், `அவருள் உள்ளானே` எனவும் இருதொடராகக் கொள்க. பத்தல் - நீர்முகக்கும் கருவி. `அன்பின்றித் தீர்த்தத்தில் முழுகுதலாலே சிவனைப் பெறுதல் கூடுமாயின், நீர்ப்பத்தலும் சிவனை அடையும்` என நகையுண்டாகக் கூறியவாறு.
இதனால், தீர்த்தங்களில் மூழ்குவார் மேற்கூறியவாறு தளியறிவினராதல் வேண்டும் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

அறிவார் அமரர்கள் ஆதிப் பிரானைச்
செறிவான் உறைபதஞ் சென்று வலங்கொள்
மறியார் வளைக்க வருபுனற் கங்கைப்
பொறியார் புனல் மூழ்கப் புண்ணியராமே. 

பொழிப்புரை :

சிவபெருமானை அறிவால் அறிகின்றவரே அமரர் (இறப்பும், பிறப்பும் இல்லாதவர்) ஆவர். அவரே சிவலோகத்தில் சென்று வீறு பெற்று வாழ்ந்து, பின் மீளாநிலையைப் பெறுவர். ஆகவே, சிலர் அவனை அங்ஙனம் அறிவால் அறிதலைச் செய்யாமலே, தன்னிடத்து மூழ்குவாரை ஈர்த்துச் செல்ல வருகின்ற கங்கையாற்றில் மரக்கலம் செல்லத்தக்கவாறு ஆழ்ந்தும் அகன்றும் ஓடும் நீரில் முழுகிய துணையானே அறிவராய் விடுவரோ!

குறிப்புரை :

`ஆதிப்பிரானை அறிவார்` என முன்னே கூட்டுக. செறிவான் - எங்கும் செறிந்தான்; (தி.8 திருவம்மானை, 13) சிவன். அவன் உறைபதம், சிவலோகம். `திருக்கோயில்கள்` என்பாரும் உளர். அவற்றிற்கு இங்கு இயைபின்மை அறிக. வலம் - வெற்றி; வீறு. ``கொள்`` என்னும் முதனிலை, `கொண்டு` என எச்சப்பொருள் தந்தது. ``மறியார்`` என்பதைப் பெயராக்கி, `வலங்கொள் மறியார்` என வினைத்தொகை யாக்கலுமாம். வளைத்தல் - ஈர்த்து ஆழ்த்தல். `வளைக்கைக் கங்கை` எனப்பாடம் ஓதி, உமையம்மையது கைவிரல்களினின்றும் கங்கை தோன்றிய புராண வரலாற்றை அதற்குப் பொருளாக உரைப்பாரும், பிற கூறுவாருமாவார். பொறி - எந்திரம். காற்றால் இயங்குதலின், பாய்மரக் கப்பலையே அக்காலத்தார் எந்திரமாகக் கருதினர். ``புண்ணியர்`` என்றது, `ஞானியர்` என்னும் பொருளது.
இதனால், தீர்த்தங்களில் மூழ்குவார் மேற்கூறியவாறு தெளியறிவினராதல் வேண்டும் என்பது கூறப்பட்டது. சரியை முதலியன இறைவனை அறிவால் அறியும் முறையேயாதல் அறிக.

பண் :

பாடல் எண் : 5

கடலிற் கெடுத்துக் குளத்தினிற் காண்டல்
உடலுற்றுத் தேடுவார் தம்மையொப் பாரிலர்
திடமுற்ற நந்தி திருவரு ளாற்சென்
றுடலிற் புகுந்தமை ஒன்றறி யாரே.

பொழிப்புரை :

சிவபெருமானை, `எங்குளன்` என்று தீர்த்தங்களில் வருந்தி முழுகிக் காணச் செல்பவரது செயல், கடலில் போகடப்பட்ட பொருளைக் குளத்தில் எடுக்கச் செல்பவரது செயல்போல்வதாம். அவரை ஒத்த அறிவிலிகள் பிறர் இலர். ஏனெனின், என்றும் ஒருபெற்றியனாகிய சிவபெருமான், தனது திருவருள் காரணமாக யாவர் உடலிலும் புகுந்து நிற்றலைச் சிறிதும் உணராமையால்.

குறிப்புரை :

``தேடுவார்`` என்றது ஆகு பெயர். `உடலிலே நிற்பவனை அவ்வுடலைப் பெற்றிருந்தும் பிறவிடத்துக் காண முயன்று வருந்துதல் அறியாமைப்பாலது` என்பதாம். உயிருள் நிற்பவனை உடலில் நிற்பவனாக ஓதியது, அவனை அதனுள் நிற்பவனாக நினைத்து யோகநெறியில் முயல்வார்க்கு அவன் அங்கு வெளிப்படுதல் பற்றி.
இதனால், `தீர்த்தங்களில் முழுகுவார் மேற்கூறியவாறு தளியறிவினராதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

கலந்தது நீர துடம்பிற் கறுக்கும்
கலந்தது நீர துடம்பிற் சிவக்கும்
கலந்தது நீர துடம்பில் வெளுக்கும்
கலந்தது நீர்நிலங் காற்றது வாமே.

பொழிப்புரை :

நீர்தான், `நிலம், காற்று` என்பவற்றில் கலப்பினும் அது அதுவாம் இயல்புடையது. ஆதலின், அஃது எவ்வுடம்பிற் கலந்ததாயினும் அவ்வுடம்பின் தன்மைக்கு ஏற்பக் கறுத்தும், சிவத்தும், வெளுத்தும் நிற்பதாம்.

குறிப்புரை :

`அதனால், சிவஞானமின்றி வாளா தீர்த்தத்தில் மூழ்கு வோர்க்கு அவரவர்க்கு உள்ள குணமே பின்னும் மிகுந்து நிற்கும்` என்றவாறு. நான்கிடத்தும், ``கலந்தது`` என்றதன்பின், `ஆயின்` என்பன சொல்லெச்சமாய் நின்றன. ``கலந்ததேல்`` என்றே பாடம் ஓதுதலும் ஆம். ஈற்றடி நீரின் தன்மையைக் கூறிற்று; நீர் காற்றாதல் ஆவியாய்க் கலந்தபொழுதாம். ஈற்றடியை முதலில் வைத்து, ``நிலம், காற்று`` என்றவற்றிலும் ``உடம்பில்`` என்பனபோல இல்லுருபு விரிக்க. ``நீரது`` நான்கிலும் அது, பகுதிப்பொருள் விகுதிகள். கறுத்தல் முதலிய மூன்றும் தாமத இராசத சாத்துவிக குணங்களை மிகுவித்தலைக் குறித்த குறிப்பு மொழிகள். `கலந்ததன் இயல்பாகும்` என்றதனால், ``உடம்பு`` என வாளா கூறினாரேனும், கறுத்தல் முதலிய மூன்றிலும், `அவ்வக் குணமுடைய உடம்பு` என்பது கொள்ளப்படும்.
இதனால், `தீர்த்தம் தெய்வ நீராதல், உள்ளத்துணர்வாலன்றி இல்லை` என்பது கூறப்பட்டது. அப்பரும், நீராண்ட புரோதாயம் ஆடுங்காலத்து, `மாதேவா மாதேவா என்று வாழ்த்தி ஆடப் பெற்றோம்` (தி.6 ப.93 பா.3) என்று அருளிச்செய்தமை அறியற்பாற்று.
சிற்பி