இரண்டாம் தந்திரம் - 20. அதோமுக தரிசனம்


பண் :

பாடல் எண் : 1

எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்று
வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல
அம்பவழ் மேனி அறுமுகன் போய்அவர்
தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.

பொழிப்புரை :

பிரகிருதி புவனத்தில் நிலவுலகத்தில் வாழ்ந்த சூரபதுமனாகிய அசுரனால் விளைந்த துன்பத்தை இயற்கை மணம் கமழும் மேனியராகிய தேவர்கள் விண்ணப்பித்து, `எம் பெருமானே, இறைவனே, முறையோ` என்று சொல்லி முறையிட, `அழகிய பவழம் போலும் மேனியை உடைய அறுமுகன் சென்று அவர்தம் பகைவனை அழிக்க` என்று திருவுளம் பற்றிய பெருமான் சாதாக்கிய தத்துவத்தில் சதாசிவனாய் நிற்கும் அவனே.

குறிப்புரை :

`ஆகவே, அவன் சுத்தமாயையில் உள்ளார்க்கு மட்டுமின்றி, ஏனை அசுத்தமாயை பிரகிருதி மாயைகளில் உள்ளார்க்கும் அருளி புரிபவனே; அதனால், எவ்விடத்து அவனை வழிபடினும் அவ்விடத்து அவன் ஏற்ற பெற்றியால் நின்று அருள் புரிவன்; எனவே, நிலவுலகத்துத் திருக்கோயில்களில் திருமேனிகளில் அவன் நின்று அருள் புரிதற்கு ஐயமில்லை` என்பது குறிப்பெச்சம்.
``தாபர சங்கமங்கள் எனும்இரண் டுருவில் நின்று
மாபரன் பூசை கொண்டு மன்னுயிர்க் கருளை வைப்பன்`` என்ற சிவஞானசித்தி (சூ. 2,28) இங்குக் காணத்தக்கது.
வம்பு - மணம். ``வலி`` என்றது, அதனால் விளைந்த துன்பத்தைக் குறித்தது. `பவழம்` என்பது கடைக்குறைந்து நின்றது. `பவளம்` என்றேயும் பாடம் ஓதுப. ``பவழத் தன்ன மேனி`` (குறுந்தொகைக் கடவுள் வாழ்த்து) என, வேறிடத்தும் முருகனது மேனிக்கு பவழம் உவமையாகக் கூறப் பட்டது. பகைவனை `பகை` என்றது ஒற்றுமை வழக்கு.
பல்லாற்றானும் தீமையைத் தேய்த்து நன்மையை வளர்த்து நிலவுலகத்து உயிர்களைப் புரந்தருளுதல் கூறுவார், கந்தபுராண வரலாற்றை எடுத்தோதியருளினார். அதோ முகத்தது இயல்பு கூறுகின்றாராதலின், அது வெளிப்பட நின்ற இவ்வரலாற்றையே எடுத்தோதியருளினார்.
இதனால், சிவபெருமான், மேலுலகத்துள்ளார்க்கேயன்றிக் கீழுலகத்துள்ளார்க்கும் அருள்புரிதல் கூறப்பட்டது. இவர்க்கு அருளுதலே `அதோ முகம்` என்பது குறிப்பால் உணர்த்தப் பட்டமை காண்க.

பண் :

பாடல் எண் : 2

அண்டமொ டெண்டிசை தாங்கும் அதோமுகம்
கண்டங் கறுத்த கருத்தறி வாரில்லை
உண்டது நஞ்சென் றுரைப்பர் உணர்விலோர்
வெண்டலை மாலை விரிசடை யோற்கே. 

பொழிப்புரை :

சிவபெருமானது அதோமுகமே நிலவுலகத்தைப் புரப்பது. அதற்கு அறிகுறியாகவே அது கறுத்த கண்டத்தையுடைய வடிவினதாய்த் தோன்றுதலை அறிபவர் ஒருவரும் இல்லை. அதனால், பலரும், `அது நஞ்சுண்டது` என்று மட்டுமே கூறி யொழிகின்றனர். இனி அவ்வடிவாகிய கறைமிடற்றண்ணலுக்கு மார்பில் அணியும் மாலையும் இறந்தாரது வெள்ளிய தலைகளால் ஆயதே. அதனது உண்மையையும் அறிவாறில்லை.

குறிப்புரை :

``அண்டமொடு எண்டிை\\\\u2970?`` என்றது, `உலகம்` என்னும் பொருளது. `உலகம்` என வாளா கூறின், நிலவுலகத்தையே குறித்தல் வழக்கு. `அதோமுகம் தாங்கும்` என மாற்றி உரைக்க. `அதோமுகமே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. அதனால் பிரிக்கப் பட்டன ஈசானம் முதலிய ஏனைத் திருமுகங்கள். ஆகவே, சுத்த மாயையில் ஐந்தொழில் செய்வனவாகச் சொல்லப்படுகின்ற அவை, நிலவுலகத்துள்ளார்க்கு வந்து அருள்புரிதல் யாங்ஙனம்` என்பார்க்கு, `நிலவுலகத்துள்ளார்க்கு வந்து அருள்புரிதல் ஆறாவதாகிய மற்றொரு திருமுகமாம் அதோ முகமே` என மலைவு நீக்கியவாறாயிற்று.
`அதோமுகம்` என்பதற்குப் பொருள், `கீழ்நோக்கி நிற்பது` என்பதேயாகலின், அது கீழ் உலகத்தார்க்கு அருளுதல் குறித்த கருணையே என்பது சொல்லாமே அமைந்தது. ``அது கண்டம் கறுத்த கருத்தறிவார் இல்லை`` என்றதனால், `அத்திருமுகமே நிலவுலகத் தார்க்குக் கறைமிடற்றண்ணல் வடிவினதாய்த் தோன்றும்` என்பது அனுவாத முகத்தாற் பெறப்பட்டது. இதனுள் `அது` என்பது தோன்றா எழுவாய். கருத்து என்றது, `அகலரையன்றிச் சகலரையும் ஏற்றுக் கொள்ளும் கருணையது` என்பதனை.
`அஃது எவ்வாறு பெறப்படும்` எனின், மூவகைச் சீவ வருக்கத்தார்க்கும் ஆணவமலம் உளதேயெனினும், சகல வருக்கத் தார்க்கே அது பெரிதும் உளது எனப்படுவதாலும், ஆணவ மலம், `இருள், மூர்ச்சை, மிருத்து` முதலிய பெயர்கட்கும் உரித்தாய் நிற்ற லானும் இறைவனது கண்டத்தில் உள்ள கறை (இருள் - நஞ்சு) ஆணவ மலத்தை அவன் நீக்கி யருளுதற்குச் சிறந்த அடையாளமாம் என்க. இனி, அக் கறைதானும் மார்பு, வயிறு முதலிய பிற இடங்களில் நில்லாது முகத்திற்குக் கீழ்க் கண்டத்திலே நிற்றல், அஃது ஆறாவதாகிய அதோ முகத்தின் வடிவாதல் குறிக்கும். ஆகவே, `இத்துணை உண்மை களும் உணரற் பாலனவாக, அவற்றைவிடுத்து நஞ்சுண்டதாகிய வரலாற்றை மட்டுமே கூறியொழிதல் கூடாது` என்றற்கு, ``கருத்தறி வார் இல்லை; உண்டது நஞ்சென் றுரைப்பர் உணர்விலோர்`` என்றார்.
``உண்டது`` என்றது முற்று. ``நஞ்சு`` என்றதில் இரண்டாவது இறுதிக்கண் தொக்கது. இறுதிக்கண் வருவித்துரைத்த, `அதனையும் அறிவாரில்லை` என்பது இசையெச்சம். `கறைமிடற்றண்ணல் மார்பில் உள்ள மாலையாக அமைந்த வெண்டலைகள் அமரர் தலைகளே` எனப்படுதலால், `அவரும் ஏனை மக்கள் போலச் சகலரே என உணர்தல் வேண்டும்; அங்ஙனம் உணரவே, அவர் பொருட்டு நஞ்சுண்ட வரலாறு அனைத்துச் சகலர்க்கும் அருள் புரிதலைக் குறித்தல் விளங்கும்` என்றற்கு அதனையும் உடன் கூறினார்.
இனி, பரமசிவன் ஐந்தொழில் செய்யுங்கால் அவற்றைச் சுத்த மாயையில் தானே நேர்நின்று செய்வன்` என்பதும், `அசுத்தமாயையில் அனந்தேசுரர் வாயிலாகச் செய்வன்` என்பதும், `பிரகிருதி மாயையில் அனந்ததேவர் வழிச் சீகண்ட உருத்திரர் வாயிலாகச் செய்வன்` என்பதும் ஆகமங்களின் முடிபு ஆதலால், சுத்த மாயைக்குச் சாதாக்கிய தத்துவத்தில் சதாசிவனாய் நின்று நேராகவும், அசுத்தமாயைக்குச் சுத்த வித்தியா தத்துவத்திலே வித்தியேசுரனாய் நின்று அநந்ததேவர் வாயிலாகவும் ஐந்தொழில் செய்தல் போலப் பிரகிருதி மாயைக்கும் சுத்த வித்தியா தத்துவத்திலேயே சீகண்டனாய் நின்று அனந்த தேவர் வழிச்சீகண்ட உருத்திரர் வாயிலாக ஐந்தொழில் செய்வன் என்பது பெறப்படும்; என்னை? அசுத்த மாயையில் நிகழும் காரியத்திற்கு `அனந்தர்` என்னும் வித்தியேசுரர் கர்த்திருத்துதவம் பெறுதற்குப் பரமசிவன் வித்தியேசுரனாய் நிற்றல் இன்றியமையாதவாறு போல, பிரகிருதி மாயையில் நிகழும் காரியத்திற்குச் சீகண்ட வுருத்திரன் கர்த்திருத்துவம் பெறுதற்கும் பரமசிவன் சீகண்டனாய் நிற்றல் இன்றி யமையாதாகலின். சுத்தமாயையில் போக ( பரிபாலன) மூர்த்தியாய் நிற்கும் பரமசிவனுக்கு உரித்தாய், நிற்றலின், போக தத்துவம் (சாதாக்கிய தத்துவம்) ஒன்றேயாக, அதற்குக்கீழ் அதிகார தத்துவம் அவ்வாறு ஒன்றாகாது, `ஈசுரம், வித்தை` என இரண்டாயினமை, ஒன்றுமேல் நின்று சுத்தமாயையில் அதிகாரம் புரிதற்கும், மற்றொன்று கீழ்நோக்கி நின்று அதிகாரம் புரிவித்தற்குமேயாம். முன்னையதில் கிரியாசத்தி மிக்கு நிற்றல் செயலாற்றுதற் பொருட்டு என்பதும், பின்னையதில் ஞானசத்தி மிக்கு நிற்றல் பிறரை ஏவுதல் மாத்திரையாய் நிற்றற் பொருட்டும் என்பதும் தெரிந்து கொள்ளப் படுமாறு அறிக.
பரமசிவனது `இலயம், போகம், அதிகாரம்` என்னும் மூன்று நிலைகளுள் அதிகாரம் ஒன்றாகாது `சூக்குமம், தூலம்` என இரண்டா யினமை, முறையே செய்தலும், செய்வித்தலும் பற்றியேயாம். அவற்றுள் தூலவதிகாரமாகிய செய்வித்தல் நிலையில் நிற்றற் பொருட்டே `சுத்த வித்தை` என்னும் சுத்த தத்துவம் உளதாயிற்று என உணர்க.
இனி, இலய தத்துவமும் ஒன்றாகாது இவ்வாறே தூலம், சூக்குமம் என இரண்டாவது, அபர முத்தருள்ளும் அதிகாரமல வாசனை நீங்குங்கால் தூல லயமாயும், சூக்குமலயமாயும் இவ்வாறு படி முறையானன்றி நீங்குதல் கூடாமையின், அவ்வந்திலையினின்று அவரவர்கட்கு அருளுதற்பொருட்டேயாம் என்பதும் உணர்ந்து கொள்க. இலய தத்துவம் இரண்டனுள் `சத்தி தத்துவம் தூல லயம்` என்பதும், `சிவ தத்துவம் சூக்கும லயம்` என்பதும் நன்கறியப் பட்டவை.
இனி அசுத்த மாயையிலும், பிரகிருதி மாயையிலும் பிறர்வழி நிகழ்த்தும் `ஐந்தொழில்களுள் ` அருளல்` என்பது அபர ஞானமாகிய சிவாகமங்களை அறிவுறுத்தலேயாம். பரஞானத்தை அசுத்த மாயையில் உள்ளார்க்கும் வித்தியேசுரனாயும், பிரகிருதி மாயையில் உள்ளார்க்குச் சீகண்டனாயும் நிற்கும் பரமசிவனே ஏற்றபெற்றியால் அருளுவான், என்னை? சீகண்ட உருத்திரனும், அனந்தேசுரனும் மலம் நீங்கப் பெற்ற முத்தரேயாயினும், அதிகார மலம் நீங்கப் பெறாதவரேயாதலின், மலம் முழுவதையும் பற்றறக் கழிக்கும் பரஞானத்தை அவரைப் பற்றி நின்று பரமசிவன் உணர்த்துதல் கூடாமையின், ``சகல ருக்குப் பரமசிவன் ஞானத்தை அருளுதல் சீகண்ட உருத்திரன் வழி`` என்னாது, ``ஆசான் மூர்த்தி வழியேயாம்`` என ஆகமங்கள் கூறுதலும் இது பற்றியே என்க. எனவே, பிரளயா கலருக்குப் பரமசிவன் பர ஞானத்தை அருளுதலும் இவ்வாறு ஏற்ற பெற்றியானேயாம் என்பது உணரப்படும்.
இங்ஙனமாகவே, ``அறுபான் மும்மை நாயன்மார் முதலியோர்க்குப் பற்றற்ற பரஞானத்தை அருளியவன் பரமசிவனே`` என்பதும், ஆகவே, `அவர் அடைந்த பதமுத்தி அபர முத்திகள் அவனுக்கு நேரே இடமாய சுத்த மாயையின்கண் உள்ள புவனங்கள்` என்பதும் தானே பெறப்படும். இவ்வாறு சீகண்டனாய் நிற்கும் பரமசிவனும், அவனது அருளால் அவனோடு ஒத்த உருவமும், பெயரும், பிறவும் பெற்று விளங்கும் சீகண்ட உருத்திரனும் வேறு வேறு என்பது உணரமாட்டாதார், ``அறுபான் மும்மை நாயனார் முதலாகப் பரஞானத்திற்கு உரியராய் நிற்போர்க்கு அருளுபவனும் சீகண்ட உருத்திரனே`` எனவும், ``அவர் அடைந்த முத்திப் பேறும் அவனது இடமே`` எனவும் மயங்கிப் பெறலரும் பேறு பெற்ற உயர் ஞானத்தின ராகிய பலரை ஏனைப் பொதுத் தவத்தாரோடு ஒப்ப வைத்து எண்ணுபவராவர்.
சமய தீக்கை பெற்றுச் சரியையில் நிற்போர்க்குச் சிவநூல்களை ஓதினும் தத்துவ ஞானம் விளங்காமையானும், விசேட தீக்கை பெற்றுக் கிரியையிலும், யோகத்திலும் நிற்பார்க்கு அவை விளங்குதல், ஒரு நாட்டினை நேரே சென்று காணாது அதன் படத்தைக் காண்பார்க்கு அந் நாட்டியல்பு விளங்குதல் போலப் பாவனையானன்றி உண்மையான் அன்றாகலானும் அவ்விருவர்க்கும் பரமசிவன் சீகண்ட உருத்திரர் வழியாகவே அருள் புரிபவன். நிருவாண தீக்கை பெற்றார்க்குத் தத்துவ ஞானம் உண்மையான் விளங்குமாகலின், அவர்க்குப் பரம சிவன் பற்றற்ற பரஞானத்தால் சீவன் முத்தராய் நிற்கும் ஆசான் மூர்த்தி களது சுத்தான்ம சைதன்னியத்தில் விளங்கி அவராய் நின்றே அருள் புரிவன். ஆகவே, சமய தீக்கையின்பின் விசேட தீக்கை பெற்றுக் கிரியை அனுபவமும், யோக அனுபவமும் பெற்றார்க்குச் செய்யப் படும் நிருவாண தீக்கையே உண்மை நிருவாண தீக்கையாம். ஏனை யோர்க்கு அதனைச் செய்தல் நாடக மாத்திரையேயாம். இன்னும் முன்னைப் பிறவியிலே ஆசான் அருள்பெற்று நிட்டைகூட மாட்டாத வராய் அது கூடுதற் பொருட்டு நிலவுலகில் பிறந்தார்க்கும் சீகண்ட னாய் நிற்கும் பரமசிவன் தானே நேர் நின்று அருள்புரிவன் என்க.
மேன்மேல் உள்ள தத்துவங்கள் கீழ்க்கீழ் உள்ள தத்துவங் களினும் வியாபகமாவன வேயன்றி, இயைபின்றி மேலே நிற்பன அல்ல என்பது மேலேயும் (388, 407 பாடல்கள்) காட்டினாம் ஆதலின், இங்குக் கூறப்பட்டன அனைத்தும் பொருந்துவனவாதல் அறிந்து கொள்க.
சமயம் முதலிய மூவகைத் தீக்கைகளைப் பெற்றச் சரியை முதலிய நான்கினும் நிற்போர் திருக்கோயில் வழிபாட்டினைச் செய் தும், செய்வித்தும் நிற்கும் பொழுது பரமசிவனைத் தத்தம் இயல்பிற்கு ஏற்பவே உணர்ந்து நிற்பராகலான், பரமசிவனும் அவர்தம் உணர் விற்கு ஏற்ப மேற்கூறிய முறையானே அங்கு நின்று அருள் புரிவன் என்பது,
``திருக்கோயி லுள்ளிருக்கும் திருமேனி தன்னைச்
சிவன்எனவே கண்டவர்க்குச் சிவன் உறைவன் அங்கே;
`உருக்கோலி மந்திரத்தால்` என நினையும் அவர்க்கும்`
`உளன் எங்கும் இலன் இங்கும் உளன் என்பார்க்கும்`
விருப்பாய வடிவாகி இந்தனத்தின் எரிபோல்
மந்திரத்தில் வந்துதித்தும், மிகும்சுரபிக் கெங்கும் உருக்காண; ஒண்ணாத பால்; முலைப்பால் விம்மி
ஒழுகுவது போல் வெளிப்பட்டருளுவன் [அன்பர்க்கே
எனச் சிவஞான சித்தியுட் (சூ. 12.4) கூறப்படுதல் காண்க.
இதனால். சிவபெருமான் கீழுலகத்துள்ளார்க்கு அதோ முகத்தின் வழியாகவே அருள் புரிதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

செய்தான் அறியுஞ் செழுங்கடல் வட்டத்துப்
பொய்யே யுரைத்துப் புகழும் மனிதர்கள்
மெய்யே யுரைக்கில்அவ் விண்ணோர்தொழச் செய்வன்
மைதாழ்ந் திலங்கு மணிமிடற் றோனே. 

பொழிப்புரை :

படைப்பவனாகிய பிரமதேவனது அண்டம் எனப்படும் நிலவட்டத்தின் கண் நின்றுகொண்டு அறியாமை காரணமாக வேறு வேறு தேவரை, `முதற்கடவுள்` என்று சொல்லிக் கொண்டாடுகின்ற மனிதர்கள், அறியாமை நீங்கிப் பரமசிவன் தமக்குக் கறைமிடற்றண்ணலாய் (சீகண்டனாய்) நின்று அருள் புரிதலை உணர்ந்து புகழவல்லாராயின், அவ்வண்ணல் அவர்களை முன்பு அவரால் புகழப்பட்ட தேவர்களே வந்து வணங்குமாறு உயர் நிலையில் வைத்தருளுவன்.

குறிப்புரை :

எனவே, நிலவுலகத்தார்க்குச் சீகண்ட உருத்திரன், மற்றும் குணிருத்திரன், மால், அயன், இந்திரன் முதலாகப் பலரிடத்தும் நின்று அருள்புரிவது பரமசிவனது அதோமுகமே என்பதாம்.
``யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே
மாதொரு பாக னார்தாம் வருவர்``
என்ற சிவஞானசித்தி (சூ. 2.25) க்கும் இதுவே கருத்தாகக் கொள்க.
இங்கு ``மெய்`` எனப்பட்டது, ``பொருள்சேர் புகழ்`` (குறள், 5) எனத் திருவள்ளுவர் கூறிய புகழையாம்.
மேல், `அதோமுகந்தானே கண்டங் கறுத்து நின்றது` எனக் கூறினமையால், இங்கு ``மைதாழ்ந்திலங்கு மணிமிடற்றோன்`` என்பது அம் முகத்தையே குறித்தல் இனிது விளங்கும்.
``தொழப்படுந் தேவர்தம் மால்தொழுவிக்குந்தன் தொண் டரையே`` (தி.4 ப.112 பா.5) என்ற அப்பர் திருமொழியை இங்கு, ``விண்ணோர் தொழச்செய்வன்`` என்றதனோடு வைத்துக் காண்க.

பண் :

பாடல் எண் : 4

நந்தி எழுந்து நடுவுற ஓங்கிய
செந்திக் கலந்துட் சிவனென நிற்கும்
உந்திக் கலந்தங் குலகம் வலம்வரும்
அந்தி இறைவன் அதோமுக மாமே. 

பொழிப்புரை :

சிவபெருமானது அதோமுகம் வடதிசைத் தீ, (ஆகவநீயம் தென்றிசைத்தீ, (தக்கிணாக்கினி) என்னும் இரண்டற்கும் நடுவிலே இல்லத் தீ, (காருகபத்தியம்) எனப் பெயர்பெற்று வளர்ந்து எரிகின்ற தீயினுள் நின்று அதனைச் சிவாக்கினியாகச் செய்யும். இனி ஏனைய இரண்டு தீயினுள்ளும் சென்று கலந்து உலகம் முழுதும் பரவியும் நிற்கும்.

குறிப்புரை :

எனவே, ``நிலவுலகில் இல்லத்து வைத்துச் செய்யும் வழிபாட்டில் நின்று அருள்புரிவதும், திருக்கோயில்களில் வைத்துச் செய்யும் வழிபாட்டில் நின்று அருள்புரிவதும் சிவபெருமானது அதோ முகமே`` என அத்திருமுகம் நிலவுலகத்தார்க்கு அருள் புரியும் வகைகளைக் கூறியவாறாயிற்று. ``செந்தீ`` என்றே போயினாராயினும், அதன் வடிவாய்ப் பல பொருள்களால் அமைந்த இலிங்கங்களையும் கூறியதேயாம்.
``இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை``
-தி.8 திருவெம்பாவை, 17
``நின் அடியார் பழங்குடில்தொறும் எழுந்தருளிய பரனே``
-தி.8 திருப்பள்ளியெழுச்சி
என்றாற் போலும் திருமொழிகள் இறைவன் தன் அடியவர் இல்லத்துக் கொண்ட குறியினுள் நின்று அருள்புரிதலைக் குறிப்பனவேயாம். அக்குறியை அந்தணரும், ஆசாரியரும் நித்தியாக்கினியாகவும், ஏனையோர் ஆன்மார்த்த லிங்கமாகவும் கொள்வர் என்க. ``செந்தீ`` என்பது குறுகிநின்றது.
இனி, ``நடுவுற ஓங்கிய செந்தீ`` என்றதும், ``உந்திக் கலந்து அங்கு உலகம் வலம்வரும்`` என்றதும் முறையே அகத்தே இருதயத்துள் சுடர்வடிவில் நிற்றலையும், மூலாதாரத்தினின்று, சுவாதிட்டானம், மணிபூரகம் முதலாக மேலோங்கி உடல் முற்றும் பரவும் மூலாக்கினியையும் குறித்துப் பொதுமையில் நிற்பனவேயாம். அதனால், கிரியையாளர் செய்யும் அகவழி பாட்டிலும், யோகியர்கள் செய்யும் யோக பாவனைகளிலும் நின்று அவர்க்கு அருள்புரிவதும் அவ்வதோமுகமே என்பதும் பெறப்பட்டது. ``உலகம் வலம் வரும்`` என்று உடலையும் உலகம் போலவே கூறியொழிந்தது, சிவபெரு மானது அதோ முகத்துடன் தோன்றிய அறுமுகக் கடவுள் ``உலகத்தை யெல்லாம் ஒரு நொடியில் வலம் வந்தான்`` என்ற புராண வரலாறும் இவ்வுண்மையையே விளக்கும் என்பது தோன்றுதற்கு. அந்தி இறைவன் - அந்திச் செவ்வானம் போலும் நிறமுடைய சிவன். ``காலை, நண்பகல், அந்தி`` என்னும் காலங்களில் செய்யும் வழி பாடுகளில் அந்தியில் வழிபடப்படும் இறைவன் என்றலுமாம்.
இதனால், அதோமுகம் நிலவுலகத்தார்க்கு நின்று அருள் புரியுமாறெல்லாம் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 5

அதோமுகங் கீழண்ட மான புராணன்
அதோமுகந் தன்னொடும் எங்கும் முயலும்
சதோமுகத் தொண்மலர்க் கண்ணிப் பிரானும்
சதோமுகன் ஊழித் தலைவனு மாமே.

பொழிப்புரை :

அதோ முகத்தால் அதோ மாயையாகிய அசுத்த மாயையின் காரியங்களாகிய அண்டங்களில் நிறைந்து நிற்கும் பழையோனாகிய சிவபெருமான், அவ்வதோ முகத்தோடே எங்கும் பொருந்தி நின்று செயலாற்றுவான். அதனால், தாமரை மலர் மாலையை அணிந்த பிரமதேவனும், பிரம கற்பத்திற்குத் தலைவனும் அவனேயாவன்.

குறிப்புரை :

நூற்றிதழ்த் தாமரை, `சதோமுகம்` எனப் பட்டது. `நிவிர்த்தி கலைக்குத் தலைவன் எனப் படுகின்ற பிரமனாகி நிற்பதும் அதோமுகமே` என்றவாறு.
இதனால், அதோமுகமே கீழுலகத்தார்க்கு அருளுவது என்பது வேறோராற்றால் வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

அதோமுக மாமல ராயது கேளும்
அதோமுகத் தாலொரு நூறாய் விரிந்து
அதோமுக மாகிய அந்தமில் சத்தி
அதோமுக மாகி அமர்ந்திருந் தானே. 

பொழிப்புரை :

சிவபெருமானது அதோமுகம் பெரியதொரு தாமரை மலராய் நிற்கும் முறையினைக் கேண்மின்கள்; சுத்த மாயை யினின்றும் கீழ்நோக்கி வருகின்ற அவனுடைய அளவில்லாத சத்திகள் அதோமுகமாகி நூறிதழ்களை உடையதாய் விரிந்து நிற்க, அம்மலரின் கண்ணே சிவபெருமான் அமர்ந்திருக்கின்றான்.

குறிப்புரை :

``நூறு`` என்றது, பன்மை குறித்தற்கு ஓர் எண் கூறியவாறு. ஒன்றாகிய சிவனது சத்திதானே காரியங்களை நோக்கிப் பலவாய் நிற்குமாதலின், அதனை ஒரு மலரின்கண்ணே உள்ள பல இதழ்களாக உருவகித்தார். `அளவிறந்த காரியங்கள்` என்றவற்றை, `வித்தை, பிரதிட்டை, நிவிர்த்தி` என்னும் கலைகளோடே ஒன்றின் ஒன்று வியாப்பியமாய் நிற்கும் ஏனைத் தத்துவங்களையும் எண்ணாற்கூறி, அவற்றில் நிகழற்பாலனவாகிய காரியங்களின் விரியைக் கருதி உணர்ந்துகொள்க. சத்திமான் இன்றிச் சத்தி செயற் படாதாகலின், அவன் அவற்றோடெல்லாம் இயைந்து நிற்றலையும் உணர்த்தினார். ``ஆகி`` என்றது, `ஆக` என்பதன் திரிபு. மூன்றாம் அடியை இரண்டாம் அடிக்கு முன்னே கூட்டியுரைக்க.
இதனால், `சிவபிரானது அதோமுகம் எனப்படுவது, அசுத்த மாயை பிரகிருதி மாயைகளில் நிறைந்து நின்று காரியங்களைச் செய்யும் அவனது சத்தியே` என்பது கூறப்பட்டது.
சிற்பி